பொம்மலாட்டம் என்றொரு படம் பார்த்தேன். 'சிவப்பு ரோஜாக்கள்' என்கிற அற்புதமான psychological thriller தந்த பாரதிராஜாவின் படமா இது? படத்தின் இறுதிக்காட்சியில் பார்வையாளர்களுக்காக காத்திருந்த அந்த இத்தினியூண்டு சஸ்பென்ஸ¥க்காக இரண்டு மணி நேர இழுவையை பா.ரா. தந்திருப்பது அநியாயம். நானா படேகர் ஏதோ அதிசயம் புரிந்திருக்கிறார் என்று பாரதிராஜாவின் பேட்டிகளில் படித்திருந்ததை வைத்து ஆர்வத்தோடு பார்த்தால்... நானா, நடிப்பது நானா என்கிற மாதிரி மந்திரித்து விட்டவர் போல் உலவுகிறார். பாவம். அர்ஜூன். Intellectual Menopause என்றொரு வார்த்தையை எங்கேயோ படித்தேன். பாரதிராஜாக்களுக்கும் பாலச்சந்தர்களுக்குமாக கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தை போலிருக்கிறது.
*
ஜன.09 உயிர்எழுத்து இதழில் காலச்சுவடு கண்ணனின் பேட்டியை படித்தேன். ஏதோ 49வது வட்ட செயலாளர் அரசியல் கூட்டத்தில் எதிர்க்கட்சிக்காரர்களை வரிசையாக திட்டுவதை கேட்பது போல் ஓர் உணர்வு. கண்ணனைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் இரண்டு பிரிவினர்தாம் இருக்கிறார்கள் போலிருக்கிறது. ஒரு பிரிவினர் காலச்சுவடிற்கு ஆதரவாக செயல்படுபவர்கள்.
*
தமிழ்நாட்டை முழுவதுமாக உருப்படியில்லாமல் ஆக்குவதற்கு சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியினர் தீர்மானமானதொரு ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. தான் தயாரிக்கும் குப்பைத் திரைப்படங்களை எல்லாம் காசாக்குவதற்காக நிமிடத்திற்கு ஒரு முறை பார்வையாளர்கள் மேல் அவற்றின் காட்சித் துணுக்குகளை எறியும் சன், இப்போது முழு நேர நகைச்சுவை சானல் ஒன்றை ஆரம்பித்திருக்கிறது. டோரா புஜ்ஜியைக் கூட சற்று ஒத்தி வைத்து விட்டு குழந்தைகள் இதில் ஆழ்ந்திருக்கின்றன. சற்று நேரம் நான் பார்த்தவரை முழுக்க முழுக்க விவேக்கும் வடிவேலுவும் மாத்திரமே காட்சியளிக்கிறார்கள். போனால் போகிறதென்று கவுண்டமணியும். நாகேஷ், தங்கவேலு, சந்திரபாபு போன்ற கருப்பு-வெள்ளைக் காலத்தினரும் நகைச்சுவை நடிகர்கள்தான் என்பதை இவர்களுக்கு யாராவது சொன்னால் தேவலை.
சிவமணியின் 'மகா லீலா' ஆல்பம் கேட்டேன். ஒவ்வொரு இசைத்துணுக்கும் ஒவ்வொரு அலைவரிசையில் வித்தியாசமாக இருக்கிறது. தன்னுடைய பிறந்த குப்பமான Basin Bridge-ஐ கூட மறக்காமல் அதற்கென்று ஒரு பகுதியை ஒதுக்கியிருக்கிறார். அதகளம். ரஹ்மானின் பல பாடல்களின் தாளஇசை பிரமாதமாக அமைந்ததற்கு சிவமணி பிரதான காரணியாய் அமைந்திருப்பார் என்பது இந்த தனி ஆல்பத்திலிருந்து உணர முடிகிறது. இதை வார்த்தைகளில் எழுதி நேரத்தில் வீணடித்துக் கொண்டிருப்பதை கேட்டு அனுபவிப்பது மேல்.
*
என்னைக் கவர்ந்த சமீபத்திய sms ஜோக்:
அமெரிக்க பேராசிரியரும் இந்திய பேராசிரியரும் தங்களுடைய மாணவர்களின் வீரம் குறித்து உரையாடிக் கொண்டிருந்த உச்சத்தில் மோதலாகி அமெரிக்க பேராசிரியர் தன்னுடைய மாணவர்கள் இருவரை அழைத்து சுறாக்கள் நீந்தும் கடலில் குதிக்கச் சொல்கிறார். இரண்டு மாணவர்களும் மறுபேச்சில்லாமல் 'டொடாய்ங் என்று குதித்துவிடுகிறார்கள். அ.பே. பெருமையாக பார்க்கிறார்.
இந்திய பேராசிரியரும் தன்னுடைய இரண்டு மாணவர்களை அழைத்து அதே போல் குதிக்கச் சொல்கிறார். இருவரும் கோரஸாக "முடியாது போடா" என்று சொல்லி விட்டு பின்னிணைப்பாக *(*&$#*(@|)*^ என்கின்றனர்.
இ.பே., அ.பே. வை நோக்கி "பார்த்தீர்களா, எங்களுடைய மாணவர்களின் வீரத்தை?"
*
ஜெயமோகனின் இணைய தளத்தில் ஒரு அன்பர் 'நான் கடவுள்' தொடர்பாக வலைப்பதிவர்கள் எழுதின பதிவுகளையெல்லாம் தொகுத்து ஜெ.மோ. முன் சமர்ப்பித்து விட்டு எழுதுகிறார்.
'நான் பத்தாண்டுகளாக சினிமாவில் வேலைபார்ப்பவன் என்பதனால் இந்த இணைய விமரிசனங்களில் பலர் சினிமாவை எடுப்பவரின் கோணத்தில் ஷாட், பிஜிஎம் , லைட்டிங் எல்லாம் தெரிந்ததுபோல பேசியிருப்பது அபத்தமாக இருக்கிறது என்று தோன்றியது. டிவிடி பார்த்து சினிமாவின் டெக்னிக் தெரிந்தது போல சொல்லிக்கொள்கிறார்கள். ரசிகர்கள் தங்களை ரசிகர்களாக மட்டுமே எண்ணிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.'
சம்பந்தப்பட்ட அன்பருக்கு நான் சொல்ல விரும்புவது: ஒரு காலத்தில் தமிழ்த் திரைப்படங்கள் ரசிகர்களால் எம்.ஜி.ஆர் படம், சிவாஜி படம்' என்ற வகையிலேதான் அடையாளங் காணப்பட்டன. அதே நிலை இன்றும் நீடிக்க வேண்டும் என்றுதான் நீங்கள் விரும்புகிறீர்களா? அந்தக்காலத்தில் சினிமா படப்பிடிப்புகளை குறிப்பாக சண்டைக்காட்சிகள் சம்பந்தமானவற்றை ஸ்டூடியோவிற்கு வெளியே எடுக்க தயங்குவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சினிமா பற்றிய மயக்கங்கள் பார்வையாளரிடமிருந்து நீங்கிவிடக்கூடாது என்பதற்காக. சங்கப்பாடல்களிலும் சித்தர் பாடல்களிலும் பண்டிதர்கள் தமிழை ஒளித்து வைத்த நிலைமை மாறிவிட்டது. கதாநாயகன் பத்தடி மேலே பறந்து வில்லனின் தோளில் பறவை போல் வந்து அமரும் போது தியேட்டரில் சிரிப்பை கட்டுப்படுத்த சிரமப்படுகிறார்கள்.
திரைக்கு பின்னால் உள்ளவர்களைப் பற்றி அறியும் ஆர்வம் இப்போது அதிகரித்திருக்கிறது. நடிகர்களுக்கென்று திரிந்த ரசிகர் கூட்டத்தின் ஒரு பகுதி ஸ்ரீதருக்கும் பாலச்சந்தருக்குமாக முன்னேற்றம் பெற்றது. திரையில் தோன்றும் பாலா, இளையராஜா பெயருக்கு பார்வையாளர்களிடமிருந்து கைத்தட்டல்கள் கிடைக்கின்றன். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுக்கும் மதுஅம்பாட்டுக்கும் கூட இந்த மரியாதை கிடைத்திருப்பதை பார்த்திருக்கிறேன். சினிமாவின் 'கதை சொல்லல்' என்கிற ஆதாரமான சமாச்சாரத்தைத் தாண்டி அதனுடைய நுட்பங்ககளை அறிவதற்கான, உரையாடுவதற்கான ஆவலும் பார்வையாளர்களிடையே எழுந்திருக்கிறது. அபத்தமாக இருந்தாலும் பரவாயில்லை, அவற்றைப் பற்றி அவர்களும் உரையாடட்டும். அந்த அபத்தமான ஆரம்பப் புள்ளியிலிருந்து நகர்ந்து அவர்களிடமிருந்து கூட நாளைய இயக்குநர்கள் உருவாகி இதுவரை நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் குப்பைக் கோபுரங்களை தரை மட்டமாக்கலாம்.
எப்போதும் கண்ணாடிக்குப் பின்புறமிருந்தே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.
*
கையில் இரும்பு வளையம் அணிவது மாதிரி, காதில் கடுக்கன் போட்டுக் கொள்வது மாதிரி புரட்சி செய்ய விரும்புபவர்கள் செய்ய வேண்டிய பட்டியலில் பிரதானமானது 'பார்ப்பனிய எதிர்ப்பு'. ஆதிக்க சாதி என்னும் போது அதன் பல்வேறு அடுக்குகளை செளகரியமாக மறந்து அதன் உச்சத்தில் இருக்கிற பார்ப்பனர்களின் ஞாபகம் மாத்திரமே வருவது என்ன மாதிரியான அரசியல் என்று தெரியவில்லை. ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராட வேண்டியதுதான்; எழுத வேண்டியதுதான். ஆனால் மின்சாரம் தடை ஏற்பட்டால் கூட 'இது பார்ப்பனிய சதி' என்று கூக்குரலிடுவது அபத்தமாக இருக்கிறது.
கவிதாசரண் பிப்-மார்ச் 09 இதழில் "பகுத்தறிவை மூடநம்பிக்கையாக்கும் புதிய பார்ப்பனர்கள்' என்ற கட்டுரையின் ஒரு பகுதி:
...இன்று மதம் ஒரு செலாவணிப் பண்டம் போலவும் அரசியல் களத்தில் செல்லுபடியாகிறது. கிழக்குப் பதிப்பகம், மருதன் எழுதிய 'விடுதலைப் புலிகள்'என்னும் புத்தகத்தை வெளியிட்டு விற்றுப் பணம் பண்ணுகிறது. கிழக்குப் பதிப்பகத்துக்கும், மருதனுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் என்ன சம்பந்தம், வெறும் லாப வணிகத்தைத் தவிர? அதே போலத்தான் மதமும் இன்று வணிகப் பண்டமாக விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறது. 'நாங்கள் பெரும்பான்மையானவர்கள்' என்னும் தெனாவெட்டில் இந்து மதவாதிகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ...
கி.ப., விமர்சிக்கப்பட வேண்டியது இந்த அடிப்படையில் அல்ல.
*
சுஜாதாவின் நினைவு நாள் இந்த மாத இறுதியிலோ என்னவோ வரப்போவதை நினைத்தால் இப்போதே கிலியாக இருக்கிறது. .. நீங்கள் மறைந்து ஓராண்டு உருண்டோடி விட்டாலும் எங்கள் நெஞ்சங்களில் நீங்காமல் வாழ்ந்து... blah.. blah... என்று எழுதப்படப் போகும் அபத்தமான 'தெவசப்' பதிவுகளை நினைத்தால் இப்போதே வயிற்றைப் பிசைகிறது. இம்மாதிரியான சடங்குகளையெல்லாம் தம் வாழ்நாள் முழுக்க கிண்டலடித்துக் கொண்டேயிருந்தவர் சுஜாதா. பெரியாருக்கு சிலை அமைத்து மாலையிடுகிற அரசியல் கோணங்கித்தனம் போல் சுஜாதா குறித்த அழுகைக் கட்டுரைகளையெல்லாம் தயவு செய்து எழுதாதீர்கள் என்று முன் எச்சரிக்கையாக இப்போதே வேண்டுகிறேன். சுஜாதாவின் படைப்புகளை முக்கியமாக non-fictionகளை அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு சிறப்பாக அறிமுகப்படுத்துவதுதான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும் என்று கருதுகிறேன்.
*
குறிப்புகள் தொடரலாம்.
suresh kannan