Tuesday, August 11, 2020

கமல்ஹாசன்: ‘தேய்வழக்குகளை உதறியெரியும் பெருங்கலைஞன்’

Image Credit: Original uploader
 
பொதுவாக  முன்னணி சினிமா நாயகர்களின் உண்மையான வயதிற்கும் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களின் வயதிற்கும் பல சமயங்களில் தொடர்பே இருக்காது. இது சார்ந்த கிண்டல்களும் நமட்டுச்சிரிப்புகளும் ரசிகர்களிடையே நெடுங்காலமாக உண்டு.

நடுத்தர வயதைத் தாண்டியும் ‘கல்லூரி மாணவனாகவே’ முரளி நடித்த திரைப்படங்கள் ஏராளம். இந்த நோக்கில் ரஜினி மீதான கிண்டல்களுக்கு பஞ்சமேயில்லை. தெலுங்கு நடிகர்கள் இந்த விஷயத்தில் செய்ததெல்லாம் மாபெரும் பாதகம் என்றே சொல்லலாம். நடிப்பில் சாதனைகள் புரிந்த சிவாஜி கணேசன் கூட ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு கோட், சூட் அணிந்து ஸ்ரீதேவி போன்ற இளம் நடிகைகளுடன் மூச்சு வாங்க டூயட் பாடிய அநியாயமெல்லாம் நடந்தது.

இந்த வரிசையில் கமலும் விதிவிலக்கல்ல. நடுத்தர வயதைத் தாண்டியும் மரத்தைச் சுற்றி டூயட் பாடி, நாயகியுடன் மறைவில் சென்று உதட்டைத் துடைத்துக் கொண்டே வரும் அபத்தத்தை அவரும் செய்திருக்கிறார். ஆனால் ரஜினி போல தொடர்ந்து அடம்பிடிக்காமல் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்க அவர் தயங்கியதில்லை. ‘கடல் மீன்கள்’ ‘ஒரு கைதியின் டைரி’ போன்ற திரைப்படங்களில் வயதான தோற்றத்தில் நடித்த போது அவருடைய வயது முப்பதுக்கும் குறைவாகத்தான் இருந்தது.

தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை கமல்ஹாசன் ஏற்றாரா என்னும் நோக்கில், 2000-ம் ஆண்டிலிருந்து அவர் நடித்த திரைப்படங்கள், அதிலுள்ள சிறப்பம்சங்கள், தோல்விகள் போன்ற விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 
 
**
 
சராசரியான திரைப்படங்களைத் தாண்டி கலையம்சமுள்ள படங்களைத் தேடும் ரசிகர்களால் இன்றும் கூட சிலாகிக்கப்படுகிற “ஹேராம்’2000-ம் ஆண்டில் வெளியானது.

உடம்பு சுருங்கி இறுதிப் படுக்கையில் கிடக்கும் கிழவர் பாத்திரம், காதல் பொங்கி வழியும் கணவன், சாமியார் கோலத்தில் குற்றவுணர்வுடன் இரண்டாம் திருமணத்திற்கு அரைமனதுடன் சம்மதிக்கும் ஆசாமி, முறுக்கு மீசையுடன் புது மனைவியுடன் ஐக்கியமாகத் துவங்கும் நபர், அனைத்தையும் துறந்து விட்டு பழிவாங்கப் புறப்படும் கோபக்காரர் என்று ஐந்து விதமான தோற்றங்களில் ‘சாஹேத்ராமனாக’ விதம் விதமாக அவதாரம் எடுத்தார் கமல்.

ஒப்பனை என்கிற சமாச்சாரம் வெறுமனே அழகைக் கூட்டுவதற்காக என்பது அல்லாமல் ஒரு கதாபாத்திரத்தை அதன் மூலம் எப்படியெல்லாம் வேறுபடுத்திக் காட்ட முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு கச்சிதமான உதாரணம். அத்தனை தோற்றங்களிலும் கமல் ‘நச்’சென்று பொருந்தினார்.

இதே ஆண்டில்தான் ‘தெனாலி’ திரைப்படம் வெளியானது. போர் சூழல் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தவராக கமல் நடித்திருந்தார். ஈழத்தமிழ் பேசி அவர் நடித்திருந்தது சிறப்பான அம்சமாக பார்க்கப்பட்டது. ‘எதைக் கண்டாலும் பயம்’ என்பதுதான் இந்தக் கதாபாத்திரத்தின் பலவீனம். ஆனால் அதன் நல்லியல்புகள் காரணமாக இதே பலவீனம்தான் அதன் பலமாகவும் பல காட்சிகளில் வெளிப்படுகிறது. இந்த சுவாரசியமான முரணை அடிப்படையாகக் கொண்ட காட்சிகள் சுவாரசியமாக வெளிப்பட்டிருக்கும். இவற்றைத் தாண்டி இதுவொரு வணிகநோக்குத் திரைப்படமே.

கமலின் சில சிறந்த திரைப்படங்கள், தாமதமாகத்தான் அங்கீகரிக்கப்படும், பாராட்டப்படும் என்றொரு பரவலான கருத்து உண்டு. அதற்கு பொருத்தமான திரைப்படங்களுள் ஒன்றான ‘ஆளவந்தான்’ 2001-ல் வெளியானது.

திடகாத்திரமும் மூர்க்கமும் மொட்டைத் தலையும் கொண்ட ‘நந்து’ பாத்திரம் ரசிகர்களை பெருமளவு ஈர்த்தது. சித்தியின் கொடுமையினால் பாதிக்கப்படும் ஒரு சிறுவன் பிறகு எப்படி மனப்பிறழ்வு கொண்டவனாகவும் பெண் வெறுப்பாளனாகவும் மாறுகிறான் என்பதை தனது மிரட்டலான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார் கமல்.

இதில் வரும் விபரீதமான காட்சியொன்றில், வன்முறையின் தீவிரத்தைக் குறைத்துக் காட்ட அனிமேஷன் வடிவில் படமாக்கப்பட்டது. இந்த உத்தியைப் பார்த்து பிரமித்து தன்னுடைய திரைப்படம் ஒன்றில் பயன்படுத்திக் கொண்டதாக ஹாலிவுட் இயக்குநர் க்வென்டின் டரான்டினோ ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். ஹாலிவுட் படங்களில் இருந்து கமல் நிறைய உருவியிருக்கிறார் என்று கூறப்பட்டிருந்த புகார்களுக்கு மாற்றாக நிகழ்ந்த விஷயம் இது.

பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் போன்ற திரைப்படங்களை சாய்ஸில் விட்டுவிடலாம். அபாரமான நகைச்சுவைத் திரைப்படங்கள் என்பதைத் தாண்டி குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு அவற்றில் எந்த வித்தியாசமும் நிகழ்வில்லை. 
 
 
**

2003-ல் வெளியான ‘அன்பே சிவம்’, கமலின் பயணத்தில் ஒரு முக்கியமான படம். ‘தன் அழகான தோற்றத்தை கோரமாக்கிக் கொண்டு நடிக்க முன்வருபவனே சிறந்த நடிகன்’ என்று சிவாஜி அடிக்கடி கூறுவாராம். அந்த வகையில் ‘குணா’ முதற்கொண்டு பல பரிசோதனை முயற்சிகளை கமல் துணிந்திருக்கிறார். அன்பே சிவமும் அதில் ஒன்று. சோடாபுட்டி கண்ணாடி, தழும்புகளால் நிறைந்திருக்கும் அவலட்சணமான முகம், சார்லி-சாப்ளினை லேசாக நினைவுப்படுத்தும் உடை என்று வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார் கமல். இதன் எதிர்முனையில் தோற்றத்திலும் சிந்தனையிலும் ஒரு நவீன இளைஞனை பிரதிபலிக்கும் பாத்திரத்தில் மாதவன் நடித்திருந்தார். இந்த முரண் படத்தின் சுவாரசியத்திற்கு அடிப்படையாக அமைந்திருந்தது.

படம் முழுக்க ‘வித்தியாசமான தோற்றத்திலேயே’ வந்தால் ரசிகர்கள் விரும்பமாட்டார்களோ என்கிற தயக்கம் எப்போதுமே நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இருக்கும் போல. எனவே பிளாஷ் பேக்கில் முறுக்கு மீசையும் இடதுசாரி சிந்தனையும் கொண்ட தெரு நாடகக் கலைஞனாகவும் வந்து நாயகியுடன் ‘ரொமான்ஸ்’ செய்து இதை சமன் செய்தார் கமல். இந்த உத்தியை பல திரைப்படங்களில் காணலாம்.

2004-ல் வெளியான ‘விருமாண்டி’யும் கமலின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. நெற்றியில் விபூதிப்பட்டை, குங்குமம், முரட்டு மீசை, அலட்சியமாக வாரப்பட்ட தலைமுடி, முன்கோபம் என்று தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது ஆசாமியை மிக கச்சிதமாக கண் முன்னால் நிறுத்தியிருந்தார் கமல். பல்வேறு கோணங்களில் வெளியாகும் வாக்குமூலங்களைக் கொண்டு ‘உண்மை என்பது எது? என்பதைத் தத்துவார்த்தமாக தேடிய ‘ரஷோமான்’ திரைப்பட உத்தி இதில் பயன்படுத்தப்பட்டிருந்தது. மதுரையின் வழக்கு மொழியை கமல் சிறப்பாக கையாண்டிருந்தார்.

2005-ல் வெளியான ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ வணிகரீதியாக தோல்வியடைந்த படம் என்றாலும் ஒருவிதத்தில் மிக முக்கியமானது. ‘பிளாக் ஹியூமர்’ என்னும் அவல நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்ட முதல் தமிழ் சினிமா என்று இதை அடிக்கோடிட்டு குறிப்பிட வேண்டும்.

‘சூப்பர் ஹீரோக்களுக்கு’ நிகரான ‘அந்தர்பல்டி’ சாகசங்களை இதர நாயகர்கள் செய்து கொண்டிருக்கும் போது, காது கேட்பதில் குறைபாடு உள்ள இயல்பான நடுத்தர வயது ஆசாமியாக இதில் வருவார் கமல். படம் முழுவதும் இம்சைகளை ஏற்படுத்தும் மென்மையான நகைச்சுவைக் காட்சிகள் வந்து கொண்டேயிருக்கும்.

ஒரு காவல்துறை அதிகாரிக்கு வைப்பாட்டியாக இருக்கும் இன்னொரு நடுத்தர வயதுள்ள பாத்திரம்தான் இந்தத் திரைப்படத்தின் நாயகி. பதினெட்டு வயதிற்கு குறையாத இளம் பெண்களுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கும் இதர நாயகர்களின் திரைப்படங்களுக்கு இடையில் இது வியப்பூட்டும் அம்சம் எனலாம். மூன்று அமெச்சூர் திருடர்கள், தவறுதலாக வேறொரு சிறுவனை கடத்தி வந்து விட்டு படும் பாடுதான் இந்தத் திரைப்படத்தின் மையம். (இதே விஷயம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ திரைப்படத்திலும் ஒரு பகுதியாக வரும்).

தனது பிரத்யேக ஸ்டைலில் திரைப்படங்களை உருவாக்குபவர் கெளதம் வாசுதேவ மேனன். ரொமான்ஸ் + ஆக்ஷன் என்பதுதான் இவரது பாணி. இவரும் கமலும் ‘வேட்டையாடு விளையாடு’ (2006) என்கிற திரைப்படத்தில் இணைந்த போது அது புதிய வண்ணத்தில் அமைந்தது. துப்பறியும் அதிகாரியை நாயகனாகக் கொண்டு பல ஹாலிவுட் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் அப்படியொரு பாணியில் வந்த முயற்சியாக ‘வேட்டையாடு விளையாடு’ (2006) அமைந்தது.

கணவனால் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் ஒரு பெண்தான் இதில் நாயகி. அந்தச் சூழலில் இருந்து அவரை விடுவித்து நாயகன் மறுமணம் புரிவார். பொதுவாக ஹீரோக்களுக்கு ஒவ்வாத இது போன்ற விஷயங்களையெல்லாம் கமல் இயல்பாகச் செய்து கொண்டிருந்தார்.

சிவாஜியின் ‘நவராத்திரி’யை தாண்டிச் செல்லும் நோக்கும் நோக்கத்திலோ, என்னவோ.. கமல் பத்து வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ (2008) ஒரு முக்கியமான முயற்சி. இதில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பிரத்யேகமான தோற்றங்களை உருவாக்கி, அதை திரையில் சித்தரிப்பதற்காக கமல் மிகவும் மெனக்கெட்டிருந்தார். ரங்கராஜ நம்பி, பல்ராம் நாயுடு, வின்செட் பூவவராகன் என்று ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒவ்வொரு வழக்கு மொழி, பாணி, பின்னணி என்று ரகளையாக நடித்திருந்தார் கமல். குறிப்பாக கிழவி பாத்திரத்தில் அவரது உடல்மொழியும் வசன உச்சரிப்பும் அபாரம்.

ஆனால் இவற்றை தனித்தனியாக பார்க்கிற போது சுவாரசியமாக இருந்ததே ஒழிய, ஒட்டு மொத்த சித்திரமாகப் பார்க்கிற போது பொழுதுபோக்கு சினிமா என்கிற அளவைத் தாண்டி இதில் விசேஷமாக எதுவும் இல்லை. ‘தன் திரைப்படங்களில் தன்னை மிகவும் முன்நிறுத்திக் கொள்வார்’ என்று கமல் மீது பொதுவாக சொல்லப்படும் விமர்சனத்தை ஆழமாக உறுதிப்படுத்துவதாக ‘தசாவதாரம்’ அமைந்தது. பத்து வேடங்களிலும் கமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு எழுதப்பட்ட திரைக்கதை என்பதால் செயற்கையாகத் தெரிந்தது.
 
 
**

இதர மாநிலங்களில் உருவான சிறந்த திரைப்படம் என்றால் அதை தமிழில் ரீமேக் செய்ய கமல் எப்போதும் தயங்கியதில்லை என்பதற்கு ‘குருதிப்புனல்’ முதற்கொண்டு பல உதாரணங்கள் இருக்கின்றன.  அந்த வகையில் 2009-ல் வெளியான திரைப்படம் ‘உன்னைப் போல் ஒருவன்’. மத தீவிரவாதத்தை அரசு இயந்திரமானது ஆதாய அரசியலோடும் மெத்தனத்தோடும் கையாளும் போது ஒரு சராசரி மனிதனுக்கு எழும் கோபத்தின் வெளிப்பாடுதான் இந்தத் திரைப்படத்தின் மையம். குறுந்தாடியுடன் ஒரு கல்லூரி பேராசிரியரின் நடுத்தரவர்க்க தோற்றத்தில் நடித்திருந்தார் கமல். அசல் வடிவத்தை ஏறத்தாழ சிதைக்காமல் தமிழில் கொண்டு வந்தது பாராட்டுக்குரியது. இதிலும் அவரின் வயதுக்கேற்ற பாத்திரம்தான்.

2015-ல் வெளியான ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தை, ஏறத்தாழ கமலின் Mini Bio-graphical version எனலாம். அந்த அளவிற்கு அவருடைய அசல் வாழ்க்கையின் தடயங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் திரைப்படத்தில் நிறைந்திருந்தன. மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு நடிகன், அபத்தங்களால் நிறைந்திருந்த தன் அதுவரையான வாழ்க்கையை சிறிதாவது அர்த்தபூர்வமானதாக ஆக்க பாடுபடுகிறான். ‘மனோரஞ்சன்’ என்னும் நடிகனாக கமல் நடித்த சில காட்சிகள், அவர் எத்தனை திறமையான நடிகர் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்தன.

‘Spy Thriller’ எனப்படும் வகைமையான அதுவரையான தமிழ் சினிமாவில் மிக அமெச்சூராகத்தான் கையாளப்பட்டது. இதை ஏறத்தாழ ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் ‘விஸ்வரூபம்’ I & II. முதல் பகுதியில் இருந்த இடைவெளிகளுக்கான பதில்கள் இரண்டாம் பகுதியில் இருக்கும் அளவிற்கு அபாரமான திரைக்கதையால் கட்டப்பட்டவை. இந்திய உளவாளி ஒருவன் சர்வதேச தீவிரவாதத்தை எதிர்கொள்வதுதான் இதன் மையம்.

பெண்மையின் சாயல் கொண்ட விஸ்வநாதன், எரிமலையின் ஆற்றலோடு விஸாமாக வெளிப்படும் காட்சி, தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க ஆக்ஷன் காட்சிகளுள் ஒன்றாக இருக்கும். ‘படம் புரியவில்லை’ என்கிற பரவலான கருத்து இதன் மீது எழுந்தது. ஆனால் நிதானமாகப் பார்த்தால் எத்தனை நுட்பமான விஷயங்களை இவற்றில் அடுக்கியிருக்கிறார் என்பது புரியும்.

கமலின் ரீமேக் வரிசையில் இன்னொரு அபாரமான முயற்சி ‘பாபநாசம்’ (2015).  மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ தமிழில் திருநெல்வேலியை பின்னணியாகக் கொண்டு வெளியானது. அன்பான மனைவி, இரண்டு மகள்கள் கொண்ட நடுத்தர வயது பாத்திரத்தில் ‘சுயம்புலிங்கமாக’ கமல் நடித்திருந்தார். இதில் அவர் வழக்கம் போல் தன் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தாலும் மலையாளத்தில் மோகன்லால் செய்தததோடு ஒப்பிட்டால் கமல் சற்று பின்தங்கியிருப்பார் என்றுதான் சொல்ல வேண்டும்.

டூயட், காமெடி, ஆக்ஷன் என்று ஒரு தேய்வழக்கு திரைக்கதையுடன் நெடுங்காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் நிறத்தை தொடர்ந்து மாற்றிக் கொண்டு வருவதில் கமல்ஹாசனுக்கு பிரதான பங்குண்டு. அந்த வகையில் ‘தூங்காவனம்’ (2015) ஒரு அற்புதமான முயற்சி. பிரெஞ்சு திரில்லர் திரைப்படத்தின் ரீமேக். தமிழ் வடிவத்திற்காக அசட்டு மசாலாக்கள் எதுவும் திணிக்கப்படாமல் யோக்கியமாக உருவாக்கப்பட்டதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒரு முன்னணி நாயகனுக்குரிய தேய்வழக்குகளை கமல் கொண்டிருந்தாலும் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு இவற்றிலிருந்து அவர் தொடர்ந்து மீற முயற்சித்துக் கொண்டே இருப்பதை கவனிக்க முடியும்.

‘மகாநதி’ திரைப்படத்தில் அவர் இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனாக நடிப்பதைக் கண்ட ஒரு சீனியர் நடிகர் ‘இவ்வாறெல்லாம் நடித்தால் உன் இமேஜ் போய்விடும்’ என்று எச்சரித்தாராம். ஆனால் கமலின் சிறந்த திரைப்படங்களை கணக்கெடுத்தால் ‘மகாநதி’ அதில் உறுதியாக இடம்பெறும் என்பதுதான் வரலாறு. இந்த தொலைநோக்குப் பார்வையும் துணிச்சலும் பாத்திரத்திற்காக தன்னை மாற்றிக் கொள்ளும் மெனக்கெடலும் கமலிடம் எப்போதும் இருந்திருக்கிறது.





suresh kannan

Sunday, August 02, 2020

American Made (2017) - ‘ஆகாயக் கோட்டை'




Barry Seal என்கிற விமானியின் வாழ்க்கைச் சம்பவங்களையொட்டி உருவான அமெரிக்கத் திரைப்படம் இது. மிகச்சிறந்த விமானியாக துவங்கும் பேரி சீலின் வாழ்க்கை, சர்வதேச கடத்தல்களில் ஈடுபட்டு வீழ்வதை திகிலும் பரபரப்புமாக விவரிக்கிறது.  சர்ரென்று உயரே பறந்து உற்சாகமாக பயணித்து தடாலென்று கீழே விழும் ஒரு விமானத்தைப் போலவே அவருடைய வாழ்க்கையும் அமைந்தது பரிதாபமான தற்செயல்.

**

வருடம் 1970. பேரி சீல் ஒரு திறமையான விமானி. குறைந்த வயதிலேயே கமாண்ட் பைலட் ஆன அளவிற்கான திறமை. விமான நிறுவனம் தரும் சம்பளம் அவனுக்கு போதுமானதாக இல்லை. எனவே பயணத்தின் இடையே சிகரெட் பெட்டிகளை கடத்தும் சிறிய குற்றத்தோடு துவங்குகிறது அவனுடைய சாகச வாழ்க்கை.

CIA அதிகாரி ஒருவர் அவனை அணுகுகிறார். “சின்ன விஷயங்களுக்காக உன் திறமையை வீணாக்காதே. நான் சொல்கிறபடி செய். நிறைய பணம்” என்கிறார். “என்ன வேலை?”.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் பனிப்போர் உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது. மத்திய அமெரிக்காவின் சில பகுதிகளில் கம்னியூஸ்ட் படைகளுக்கு ரஷ்யா உதவி செய்து கொண்டிருந்தது. அமெரிக்கா இதை தடுக்க விரும்பியது. பேரி சீல் ஒரு சிறிய விமானத்தின் மூலம் அந்தப் பகுதிகளில் தாழ்வாக பறந்து புகைப்படங்கள் எடுக்க வேண்டும். இன்னொரு வகையில் அதற்குப் பெயர் உளவு பார்த்தல்.

கிடைக்கப் போகும் ஆதாயங்களுக்காக மிக ஆபத்தான இந்தப் பணியை பேரி ஒப்புக் கொள்கிறான். விமான நிறுவன பணியை தூக்கிப் போட்டு விட்டு இதில் இறங்குகிறான். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்கிற விஷயத்தை அநாயசமாக கையாள்கிறான். இவனது திறமையான பணியைக் கண்டு CIA உற்சாகமாகிறது. அடுத்த பணியைத் தருகிறது. எதிரிப் பிரதேசங்களில் உள்ள ராணுவ அதிகாரிகளிடம் பணத்தைத் தந்து விட்டு ரகசியங்களைப் பெற்று வருவது. கூரியர் வேலை.

இந்தச் சமயத்தில்தான் இன்னொரு அதிர்ஷ்டம் அல்லது ஆபத்து பேரியைத் தேடி வருகிறது. கொலம்பியாவில் உள்ள மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் குழு இவனைத் தொடர்பு கொள்கிறது. “தோ… பாருப்பா.. ப்ளைட்ல சும்மாதானே திரும்பிப் போறே..  நாங்க தர்ற பாக்கெட்டுக்களை அமெரிக்காவிற்கு எடுத்துட்டுப் போ”. (இந்தக் குழுவின் தலைவனான பாப்லோ எஸ்கோபர் பற்றி தனியான திரைப்படமே இருக்கிறது).

முதலாளிக்குத் தெரியாமல் ரிடர்ன் டிரிப்பில் தக்காளி மூட்டைகளை ஏற்றிக் கொள்ளும் லாரி டிரைவர் மாதிரி, இதற்கும் பாரி சந்தோஷமாக ஒப்புக் கொள்கிறான். அவனே எதிர்பாராத அளவிற்கு பணம் கொட்டுகிறது. CIA இதைக் கண்டும் காணாமலும் இருந்தாலும் போதைமருந்து கடத்தலை கண்காணிக்கும் அதிகாரிகள் மோப்பம் பிடித்து விடுகிறார்கள். CIA அதிகாரியே இந்த தகவலைத் தருகிறார். “நான் சொல்கிற இடத்திற்கு குடும்பத்தோடு தப்பி ஓடு”.

தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியையும் குழந்தைகளையும் எழுப்பி பொருட்களை மூட்டை கட்டிக் கொண்டு ‘மேனா’ என்கிற சிறிய மாகாணத்திற்கு விரைகிறான் பாரி. அங்குள்ள ஏர்போர்ட்டையே அவனுக்குத் தரும் CIA அடுத்து வேறு ஒரு பணியைத் தருகிறது. இந்த முறை துப்பாக்கிகள். கம்யூனிஸ்ட்களை எதிர்க்கும் வலதுசாரி குழுவொன்றிற்கு சப்ளை செய்ய வேண்டும். செய்கிறான். அடுத்து ஆட்கள். அதையும் உற்சாகமாக செய்கிறான் பேரி.

ஒரு புறம் CIA, மறுபுறம் போதையுலகம் என்று இருபுறமும் பணம் கொட்டுகிறது. வீட்டில் புதைத்து வைக்க இடமில்லாத அளவிற்கு பணம். வங்கியில் கொண்டு போய்க் கொட்டுகிறான். இவனுடைய பணத்தை வைப்பதற்காகவே தனி காப்பறை அமைக்கிறார்கள். அந்தளவிற்கு பணம்.

ஏறத்தாழ பணத்தில் குளித்துக் கொண்டிருக்கும் பேரியின் வாழ்க்கையில் மச்சானின் உருவில் ஆபத்து வருகிறது. “எனது தம்பிக்கு வேலை போட்டுக் கொடுங்கள்” என்கிறாள் மனைவி. உச்சநீதிமன்ற உத்தரவை மறுக்க முடியுமா? சும்மா வெட்டியாக ஒரு வேலையைத் தருகிறான். பேரி ஒளித்து வைத்திருக்கும் சூட்கேஸ்களில் ஒன்றை திருடிக் கொண்டு உற்சாகமாக ஷாப்பிங் கிளம்புகிறான் ஊதாரி மச்சான்.

காவல்துறை இதைக் கவனித்து மச்சானைக் கைது செய்கிறது. பேரி அப்போது புதிய டீல் ஒன்றிற்காக கடத்தல் குழுவுடன் கொலம்பியாவில் இருக்கிறான். “காப்பாத்துங்க” என்று மச்சான் கதறுகிறான். “அதை நாங்க பார்த்துக்கறோம். எங்க வேலையை முதல்ல முடி” என்கிறது கடத்தல்குழு. மச்சான் தப்பிப்பதற்காக பேரி உதவி செய்கிறான். ஆனால் அவன் திமிராகப் பேசி விட்டு கிளம்பும் போது கார் வெடித்து சிதறுகிறது. ‘நாங்க பார்த்துக்கறோம்” என்று கடத்தல் குழு சொன்னதின் அர்த்தம் இதுதான் போல.

பேரி ஆகாயத்தில் கட்டிய கோட்டை ஒருவழியாக வீழ்ச்சியடையத் துவங்குகிறது.  FBI அவனுடைய வீட்டைச் சோதனையிட்டு எல்லா பணத்தையும் கைப்பற்றுகிறது. CIA அவனை கைகழுவுகிறது. வசமாக சிக்குகிறான் பேரி. ஆனால் அவன் தப்பிக்க இன்னொரு வாய்ப்பு இருக்கிறது. தனது அரசியல் எதிரிகளுக்கு போதை மருந்து கடத்தல் உலகத்துடன் தொடர்பிருக்கிறது என்பதை அமெரிக்கா நிரூபிக்க பேரியைப் பயன்படுத்துகிறது. தனது கூட்டாளிகளையே ரகசியமாகப் படம் எடுக்கிறான் பேரி. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது பத்திரிகைகளில் வெளியாகி விடுகிறது. கடத்தல் குழு தன்னை உயிருடன் விடாது என்பது பேரிக்கு தெளிவாக தெரிந்து விடுகிறது. ஒவ்வொரு நாளும் தன் மரணத்தை எதிர்பார்க்கிறான்.

அரசியல் காரணங்களால் நீதிமன்றத்திலிருந்து எளிதாக அவன் தப்பித்து விட்டாலும் கடத்தல் குழுவின் பழிவாங்கலில் இருந்து அவனால் தப்பிக்க முடியவில்லை. சுடப்படுகிறான்.

**
எழுபதுகளின் காலக்கட்ட பின்னணியில், பேரி சீல் ஆக டாம் குரூஸ் அட்டகாசமாக நடித்திருக்கிறார். பணம் சேர சேர, ‘’மங்காத்தா’ அஜித் போல ‘மணி.. மணி..’ என்ற இவர் உற்சாகமாக சிரிப்பது கலக்கல். “கெட்டவங்களுக்கு ஆண்டவன் அள்ளித் தருவான். ஆனா கைவிட்டுடுவான்” என்கிற பாட்சா நீதியை சொல்லும் இந்தத் திரைப்படம், எதிரி நாடுகளில் அமெரிக்கா செய்யும் கலகங்களையும் குழப்பங்களையும் அம்பலப்படுத்துகிறது. ‘The Bourne Identity’ வரிசை திரைப்படங்களை இயக்கிய Doug Liman இத்திரைப்படத்தையும் அற்புதமாக உருவாக்கியுள்ளார்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

Saturday, August 01, 2020

Adam's Apples (2005) - ‘நம்பிக்கையின் சம்பளம்'



நன்மைக்கும் தீமைக்குமான போராட்டத்திற்கு அழிவேயில்லை. இந்தப் பிரபஞ்சம் உருவான முதல் கணத்திலிருந்தே இந்த தர்மயுத்தம் துவங்கியிருக்கக்கூடும். தேவனின் கருணைக்கும் சாத்தானின் வசீகரத்திற்கும் இடையில் தத்தளிக்கும் மனிதர்களைப் பற்றிய திரைப்படம் இது. அறம் ஒருபோதும் தோற்பதில்லை என்கிற நீதியை வலுவாக சித்தரிக்கும் படைப்பு. மிக நுட்பமான திரைக்கதையைக் கொண்டது.

**

அதுவொரு புனர்வாழ்வு மையம். சிறையில் இருந்து பரோலில் வரும் கொடூரமான குற்றவாளிகளை நல்வழிப்படுத்துவது அதன் நோக்கம். அந்த மையத்தின் தலைவரும் மதகுருவுமான இவான், இறைவனிடத்தில் முழுமையான நம்பிக்கையைக் கொண்டவர். ‘சாத்தானின் சோதனையால்தான் நமக்கு தீமைகள் நேர்கின்றன. அவற்றை பொறுமையுடன் எதிர்கொண்டால் இறைவனின் அன்பை பெறலாம்’ என்பதில் தீவிரமான நம்பிக்கையுடையவர்.

நவ – நாஜி குழுவைச் சேர்ந்தவனான ஆதாம், சிறையில் இருந்து பரோலில் வெளியாகி அந்த இடத்திற்கு வருகிறான். சக மனிதர்கள் மீது இவான் காட்டும் அன்பும் பொறுமையும் ஆதாமை குழப்பத்தில் ஆழத்துகின்றன. ‘இம்பூட்டு நல்லவனா ஒருத்தன் இருக்கவே முடியாதே’ என்று சந்தேகப்படுகிறான். இவானின் நற்பண்புகள் அவனைக் குற்றவுணர்வில் ஆழ்த்துகின்றன. எனவே இவானின் மீது கடுமையான கோபம் கொள்கிறான்.

முன்னாள் குற்றவாளிகளான காலித்தும், குன்னாரும் இவானின் பேச்சைக் கேட்டு கட்டின பசுமாடு மாதிரி இருப்பது ஆதாமை மேலும் குழம்ப வைக்கிறது. “இங்கு வந்ததற்காக நீ ஏதாவது உருப்படியான வேலையைச் செய்ய வேண்டும்” என்கிறார் இவான். ‘சர்ச் வாசலில் இருக்கும் ஆப்பிள் மரத்திலுள்ள பழங்களை வைத்து கேக் செய்கிறேன்” என்று பதிலளிக்கிறான் ஆதாம். இந்தப் போட்டியில் வென்று இவானின் முகத்தில் கரி்யைப் பூச வேண்டும் என்கிற வெறி எழுகிறது ஆதாமிற்கு.

ஆனால் ஆப்பிள் மரத்தை பாதுகாப்பது அத்தனை எளிமையான வேலையாக இல்லை. பறவைகள் கூட்டமாக வந்து கொத்தித் தின்று பழங்களை சேதப்படுத்துகின்றன. என்ன முயன்றும் அவற்றைத் துரத்த முடியவில்லை. ‘சாத்தானின் சோதனை இது” என்கிறார் இவான். ஆதாம் அதை ஏற்கவில்லை. தன் கூட்டாளிகளின் மூலம் துப்பாக்கியைக் கொண்டு வருகிறான். ஆனால் அதற்குள் காலித் பறவைகளைச் சுட்டுக் கொல்கிறான்.

இவானின் அன்பான நடவடிக்கைகள் ஆதாமை எரிச்சல்பட வைக்கின்றன. அவருடைய நம்பிக்கையை எப்படியாவது உடைக்க வேண்டும் என்கிற வெறி ஏற்படுகிறது. ஒரு விவாதத்தின் போது இவானை கடுமையாகத் தாக்குகிறான் ஆதாம். ஆனால் சிறிது நேரம் கழித்து ரத்தக் களறியாக எழுந்து வரும் இவான், எதுவுமே நடக்காதது போல ஆதாம் உள்ளிட்ட மற்றவர்களிடம் உரையாடுகிறார். இதைக் கண்டு ஆதாமிற்கு வெறுப்பும் எரிச்சலும் அதிகமாகிறது.

இவானுடைய பின்னணித் தகவல்களை அருகிலுள்ள ஒரு மருத்துவரின் மூலம் ஆதாம் அறிகிறான். மருத்துவருக்கும் இவானின் மீது இதே மாதிரியான எரிச்சல் உள்ளதால் ஆதாமைத் தூண்டி விடுவது போல தகவல்களைச் சொல்கிறார்.  இவானுடைய இளமைப்பருவம் இன்பகரமானதாக இல்லை. மனைவி ஒரு விபத்தில் இறந்து விட்டார். அவருடைய மாற்றுத்திறனாளி மகன் சக்கர நாற்காலியில் உறைந்து கிடக்கிறான்.

இவானால் இத்தனை துன்பங்களையும் தாங்கிக் கொண்டு எப்படி இயல்பாகவும் அன்பாகவும் இருக்க முடிகிறது என்கிற கேள்வி ஆதாமைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. உடல்ரீதியாக சித்திரவதை செய்தாலும் இவானை எதுவுமே செய்ய முடியவில்லை என்பதால் உளரீதியான தாக்குதலைத் துவங்குகிறான் ஆதாம். “கடவுள் உன் மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதெல்லாம் பொய். அவர் உன்னை பயங்கரமாக வெறுக்கிறார். அதனால்தான் உனக்கு இத்தனை துன்பங்கள் ஏற்படுகின்றன” என்று தொடர்ந்து கூறுகிறான்.

ஒரு கட்டத்தில் இவான் இதை நம்ப ஆரம்பிக்கிறார். அவருடைய காதில் இருந்து ரத்தம் வந்து கொண்டேயிருக்கிறது. அப்போதும் மனம் இளகாத ஆதாம் அவரை கடுமையாக தாக்குகிறான். இவானின் மனம் கலைவது சக குற்றவாளிகளையும் பாதிக்கிறது. அதுவரை இயல்பாக இருந்த அவர்கள் தங்களின் குற்றவுலகிற்கு மறுபடியும் திரும்புகிறார்கள். காலித் ஒரு பெட்ரோல் பங்க்கை கொள்ளையடிக்க ஆவேசமாக கிளம்புகிறான். அதுவரை இவனிடம் பேசிக் கொண்டிருந்த குன்னார் மெளனமாகிறான்.

இந்த மாற்றங்கள் ஆதாமைக் குழப்புகின்றன. இவானின் அன்பும் கருணையும் உண்மையாகவே மனிதர்களிடம் மாற்றங்களை ஏற்படுத்துகிறதோ என்கிற எண்ணம் தோன்றுகிறது. இவானின் மீது மெல்ல இரக்கம் சுரக்கிறது. அவரைத் தூக்கிப் போய் மருத்துவமனையில் சேர்க்கிறான். ஆனால் மருத்துவர் அதிர்ச்சிகரமான தகவலைத் தருகிறார். ‘இவானுக்கு பெரிய அளவில் மூளைக்கட்டி இருக்கிறது. அதனால்தான் காதில் ரத்தம் வருகிறது. இன்னமும் சில நாட்களில் அவர் இறந்து விடுவார்”.

காலித்திற்கும் ஆதாமின் கூட்டாளிகளுக்கும் தகராறு ஏற்படுகிறது. அவர்களை துப்பாக்கியால் காயப்படுத்துகிறான் காலித். எனவே அவர்கள் ஆயுதங்களுடனும் ஆட்களுடனும் திரும்ப வருகிறார்கள். ஆதாம் அவர்களைச் சமாதானப்படுத்த முயல்கிறான். தலையில் கட்டோடு அங்கு வரும் இவான் அவர்களைத் தடுக்க முயல, குண்டு அவர் தலையில் பாய்கிறது. ரத்த வெள்ளத்தில் கீழே சரிகிறார் இவான்.

இவான் இறப்பதற்குள் ஆப்பிள் கேக்கை செய்து அவருடைய அன்பைப் பெற வேண்டும் என்கிற காரணத்திற்காக சேதமடைந்தது போக மீதமிருக்கும் ஒரேயொரு ஆப்பிளில் கேக் செய்து மருத்துவனைக்கு எடுத்துச் செல்கிறான் ஆதாம். இவானின் படுக்கை காலியாக இருக்கிறது. மருத்துவர் ஆச்சரியமான தகவலைச் சொல்கிறார். “குண்டு பாய்ந்ததில் தலையில் இருந்த புற்றுநோய் குணமாகி விட்டது. மருத்துவ அதிசயம் இது”

மருத்துவனையின் வெளியே அமர்ந்திருக்கும் இவானுடன் இணைந்து கேக்கை உண்கிறான் ஆதாம். சில மாதங்கள் கடக்கின்றன. பரோலில் இருந்து இரண்டு புதிய குற்றவாளிகள் அங்கு வருகிறார்கள். கோபத்துடன் இவானைத் தாக்குகிறார்கள். இவானைப் போலவே ஆதாமும் அவர்களைப் பொறுமையாக கையாள்வதோடு படம் நிறைகிறது. ஆம். இவான், ஆதாமை தன்னைப் போலவே மாற்றி விட்டார்.

இவான், ஆதாம், ஆப்பிள், கிறித்துவ தேவாலயம், Book of job எனும் பழைய ஏற்பாட்டு நூல்.. என்று படம் முழுவதும் விவிலிய உருவகங்கள் நிறைந்திருக்கின்றன. தேவாலயத்தின் மணி அடிக்கும் போதெல்லாம் அதன் அதிர்வு காரணமாக ஆதாமின் அறையில் மாட்டப்பட்டிருக்கும் ஹிட்லரின் படம் நழுவி விழுவது நல்ல குறியீடு.

இவானாக Mads Mikkelsen-ம் ஆதாமாக Ulrich Thomsen-ம் அருமையாக நடித்திருக்கிறார்கள். டென்மார்க் தேசத்தைச் சேர்ந்த இந்த திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருப்பவர் Anders Thomas Jensen.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan