Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, May 03, 2021

இபிஎஸ் என்னும் கப்பல் கேப்டன்

 

எனக்கு எடப்பாடி பழனிச்சாமியை நினைத்தால் ஆச்சரியமாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது. அமைதிப்படை ‘அமாவாசை’யின் கச்சிதமான பிம்பம் என்பது அவருக்குத்தான் பொருந்தும்.

“உங்களுக்குப் பிறகு அதிமுகவின் நிலைமை என்ன?” என்று எம்.ஜி.ஆரிடம் அவரின் இறுதிக் காலத்தில் கேட்கப்பட்ட போது அது குறித்து அவர் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ‘ப்ச்’ என்று உதட்டைப் பிதுக்கி கண் சிமிட்டியிருக்கிறார். தனக்குப் பிறகு கட்சி உடைந்து அழிந்து போகும் என்றுதான் அவர் உள்ளுக்குள் கருதியிருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. தனக்குப் பிறகான அரசியல் வாரிசு யார் என்பதை அவர் துல்லியமாக அடையாளம் காட்டவில்லை.

எனவேதான் எம்.ஜி.ஆரின் மரணத்தின் போது ஜானகி அணி  vs ஜெ அணி என்னும் தற்காலிக குடுமிப்பிடிச்சண்டை நடந்தது. ஆனால் ஜெவின் பலத்தை உணர்ந்து கொண்ட ஜானகி விரைவிலேயே தன் தோல்வியை ஒப்புக் கொண்டு ஓய்ந்து விட்டார். தன் கவர்ச்சியாலும் போராட்டக்குணத்தாலும் அதிமுகவின் தலைமையை நோக்கி வெற்றிகரமாக நடந்தார் ஜெ. ஆனால் அந்தப் பயணம் எளிதானதாக இல்லை. ஆர்.எம்.வீரப்பன் போன்ற கடும் போட்டிகளையும் எதிரிகளையும் தாண்ட வேண்டியிருந்தது.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு அதிமுக என்னவாகும் என்கிற கேள்வி எழுந்த போது அதற்கு தக்க பதிலாக நின்றார் ஜெ. எம்.ஜி.ஆர் என்னும் பெரிய சக்தியை எதிர்த்து நிற்பதிலேயே நெடுங்காலத்திற்கு தன் ஆற்றலை பெரிதும் செலவிட்ட கருணாநிதிக்கு அதன் பிறகும் ஓய்வில்லை. மறுபடியும் ஜெவுடன் அவர் தன் அரசியல் போரைத் தொடர வேண்டியதாக இருந்தது. அந்த அளவிற்கு எம்.ஜி.ஆருக்குப் பின்னரான நிலையை உறுதிப்படுத்திக் கொண்டார் ஜெ. 

*

மறுபடியும் அதேதான். ஜெவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக என்னவாகும் என்கிற கேள்வியும் சந்தேகமும் எழுந்தது. சசிகலா – தினகரன் கும்பல் கைப்பற்றுமா? அல்லது உட்கட்சிப்பூசலில் அழிந்து உடையுமா என்கிற ஐயங்கள் எழுந்தன.

இந்த நிலையில் கூட்டத்தில் நின்றிருந்தவனுக்கு யானை மாலையிட்டு தேர்ந்தெடுத்த அதிர்ஷ்டத்தைப் போல அதிகாரத்தின் உச்சிக்கு வந்தார் பழனிச்சாமி. ‘இதெல்லாம் எங்கே நீடிக்கப்போவுது.. அவ்ளதான்” என்று அதிமுகவில் இருந்தவர்களே அவநம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த எண்ணங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி கட்சியையும் அதிகாரத்தையும் காப்பாற்றினார்.

அதிமுகவின் வீழ்ச்சியை திமுகவே கூட ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சூழலில் அதைப் பொய்யாக்கினார். ஒரு பக்கம் சசிகலா – தினகரன், இன்னொரு பக்கம் ஓபிஎஸ், எல்லாப் பக்கமும் உட்கட்சிப்பூசல், தமிழகத்தில் காலூன்றுவதற்காக பாஜக செய்யும் இடையூறுகள், ஸ்டாலினின் போராட்டங்கள் போன்ற பல விஷயங்களை ராஜதந்திரங்களுடன் எதிர்கொண்டார். குறிப்பாக சசிகலாவை அரசியலில் இருந்து ஓரங்கட்டியதை மாஸ்டர் ஸ்ட்ரோக் எனலாம்.

இதில் முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். தன்னுடைய ஆட்சிக்காலத்தின் துவக்கத்தில் தன்னை அவர் பெரிதும் முன்னிறுத்திக் கொள்ளவேயில்லை. ‘அம்மாவின் ஆசிப்படி’ என்று ஜெவின் புகைப்படத்தையே பெரிதாக எல்லா இடத்திலும் முன்னிறுத்தினார். ஒரு கட்டத்தில் ஜெவின் புகைப்படம் சிறிதாக குறைந்து கொண்டு வந்தாலும் கூட ஜெவின் பிம்பத்தைக் கொண்டே மக்களின் எதிர்ப்புணர்ச்சி, அதிருப்தி போன்றவற்றை சமாளித்தார். தான் முதலமைச்சராக இருந்தாலும் ஜெவின் ஆட்சிதான் தொடர்கிறது என்பதைப் போன்ற பிம்பத்தை வெற்றிகரமாக ஏற்படுததினார். இதுவொரு அபாரமான உளவியல் தந்திரம்.

தமிழக மக்களுக்கே ஒரு கட்டத்தில் ‘பரவால்லேயே. ஆளு தேவலாம்டே’ என்று தோன்றியிருக்கும். அந்த அளவிற்கு களத்தில் இறங்கி வேலை செய்தார். 

*

என்றாலும் மக்களுக்கு ஏதோவொரு வகையில் பழனிச்சாமி அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கை ஒட்டிக் கொண்டிருந்தது. இது நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை அல்ல என்பதும் குறிப்பாக மத்திய அரசுடன் பல்வேறு வழிகளில் இணங்கிச் சென்று மாநில உரிமைகளை தாரை வார்த்தது என்பதும் என.. பல அதிருப்திகள் பெருகின.

இந்தச் சூழலில் சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மொத்தமாக மண்ணைக் கவ்வி விடக்கூடும் என்றிருந்த நிலையை பெரும்பாலும் தடுத்து நிறுத்தியது பழனிச்சாமியின் உழைப்பும் முன்கூட்டிய திட்டங்களும்தான். அதுதான் அதிமுக கூட்டணிக்கு 76 இடங்களைப் பெற்றுத் தந்திருக்கிறது.

ஏறத்தாழ ஸ்டாலினுக்கு நிகரான உழைப்பை அவர் தந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. ஸ்டாலினுக்காவது பிரபல அரசியல் தலைவரின் வாரிசு என்கிற பின்னணி இருக்கிறது. ஆனால்  அது கூட இல்லாமல் ஓர் அரசியல் கட்சியை காப்பாற்றியதை பழனிச்சாமியின் ராஜதந்திர வெற்றி என்றே சொல்லலாம்.

ஏறத்தாழ மூழ்கிப் போகவிருந்த அதிமுக என்னும் கப்பலை காப்பாற்றியது பழனிச்சாமி என்னும் திறமையான கேப்டன்தான். இதற்குள் பல்வேறு விதமான அரசியல் கணக்குகள், சுயஆதாயங்கள், சாதி அரசியல்கள், மத்திய அரசை நோக்கிய கூழைக்கும்பிடுகள் என பல்வேறு விஷயங்கள் இருக்கலாம். ஏறத்தாழ இவையல்லாமல் எந்தவொரு அரசியல் கட்சியும் இயங்க முடியாது என்பதுதான் உண்மை.  

ஆனால் எம்.ஜி.ஆர் போலவோ ஜெவைப் போலவே எந்தவொரு கவர்ச்சிகரமான பின்னணியும் இல்லாமல் இதைச் சாதித்த பழனிச்சாமியை ஒருவகையில் பாராட்டியே தீர வேண்டும். வருங்காலத்தில் அவர் ஓர் ஆரோக்கியமான எதிர்க்கட்சியாக நின்று மக்களின் பிரச்சினைகளை சட்டசபையில் பேசினால் மக்களின் ஆதரவு இன்னமும் கூடும் என்று தோன்றுகிறது.

 

suresh kannan

Tuesday, January 22, 2019

ரஜினி என்கிற மாயமான்







தங்களின் துயரங்களிலிருந்து மீட்பதற்காக எந்த ரட்சகனாவது வர மாட்டானா என்பது பொதுசமூகத்தின், குறிப்பாக அடித்தட்டு மக்களின் ஆதாரமான ஏக்கங்களுள் ஒன்று. எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இந்த எதிர்பார்ப்பு ஓயாது. மதம் போன்ற நிறுவனங்கள் இந்த ஏக்கத்தை வலுவாகப் பற்றிக் கொண்டு ,அவரவர்களின் பிம்பங்களை முன்நிறுத்தி அசைக்க முடியாத அமைப்புகளாகி விட்டன. அரசர்கள் கடவுளுக்கு நிகராக கருதப்பட்ட, அப்படி கருதப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட காலங்களும் முன்பு இருந்தன. ஜனநாயகம் மலர்ந்து மக்கள் அதிகாரத்திற்கு நகர முடியும் என்கிற மறுமலர்ச்சிக் காலக்கட்டத்தில் அரசியல்வாதிகள் இந்த இடத்தை அபகரித்துக் கொண்டார்கள். ஒரு சராசரி நபர் சாம, பேத, தான, தண்டம் என்று பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி சட்டமன்ற உறுப்பினர் ஆகிவிட்டால் ஒரு குறுநில மன்னருக்கான அதிகாரத்தையும் செளகரியங்களையும் பெற்று விட முடிகிறது.

பொதுமக்களுக்கு உண்மையாகவே சேவை செய்வதின் மூலமாகவோ அல்லது அப்படியான பாவனைகளின் மூலமாகவோ அதிகார அரசியலுக்குள் வருவது ஒருவழி. இதற்கு நீண்ட காலமாகும். ஆனால் இதற்கான குறுக்கு வழியும் ஒன்று இருக்கிறது. அது சினிமா. கச்சிதமாக திட்டமிடப்பட்ட காட்சிகளின் மூலம் தன்னை அவதார நாயகராகவும் அடித்தட்டு மக்களின் மீட்பராகவும் காட்டிக் கொண்டால், நிழல் பிம்பங்களை நிஜம் என்று நம்பும் சமூகம் அதிகாரத்தை இந்த நடிகர்களிடம் ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். இந்த வழிமுறையில் வெற்றிகரமாக பயணித்த அரிதான உதாரணம் எம்.ஜி.ஆர்.

இன்றைய விளம்பர நிபுணர்கள் கூட அதிசயப்படக்கூடிய விஷயமாக எம்.ஜி.ஆரின் திட்டங்களும் முன்தயாரிப்புகளும் இருந்தன.  ஏறத்தாழ அனைத்து திரைப்படங்களிலும் ஏழைப் பங்காளனாக தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டதோடு அரசியல் அடையாளங்களையும் அவற்றில் மிக நுட்பமாக திணித்து மக்களின் அபாரமான நம்பிக்கையைப் பெற்றார். இன்றும் கூட அடித்தட்டு மக்களிடையே இவரது பிம்பம் செல்வாக்குடன் இருக்கிறது. ‘நான் ஆணையிட்டால், அது நடந்து விட்டால்…’ என்கிற பாடலின் மூலம் அவர் வைத்த கோரிக்கையை மக்கள் நிஜமாக்கிக் காட்டினார்கள். இவரின் அரசியல் எதிரியாக கருதப்பட்ட கருணாநிதியை முழுதாக ஓரங்கட்டி, ஏறத்தாழ 13 வருடங்கள் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த பெருமை எம்.ஜி.ஆருக்கு வாய்த்தது.

ஆனால் எம்.ஜி.ஆரின் ஆட்சி நடைமுறையில் இருந்த காலக்கட்டங்களில் அடித்தட்டு மக்கள் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தார்களா? அவர்களின் பெரும்பாலான துயரங்கள் தீர்க்கப்பட்டனவா? இது தொடர்பாக எம்.எஸ்.எஸ். பாண்டியன் எழுதிய ‘பிம்பச்சிறை’ என்கிற நூலை வாசித்துப் பார்க்கலாம். எம்.ஜி.ஆர் என்கிற பிம்பம் படிப்படியாக திட்டமிட்டு வளர்ந்ததையும், அதிகாரத்தில் அமர்ந்த பிறகு நிகழ்ந்த குளறுபடிகளும் நிர்வாக சீர்கேடுகளும் புள்ளிவிவரங்களோடு அந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. நிழலை நிஜமாக நம்பினதற்காக தமிழக மக்கள் தந்த விலை இது. 

எம்.ஜி.ஆர் என்கிற புலியைப் பார்த்து சூடு போட்டுக் கொண்ட பல பூனைகள் பின்னர் கிளம்பின. சிவாஜி கணேசன், பாக்யராஜ், டி.ராஜேந்தர் என்று இந்தப் பட்டியல் மிக நீண்டது. எம்.ஜி.ஆர் தந்த ஆதரவின் பின்புலத்தில் இதில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா மட்டுமே. அவருக்கு என ஓர் இரும்பு ஆளுமையையும் பல அடாவடிகளின் மூலம் வளர்த்துக் கொண்டார். ஆனால் மற்றவர்கள் எல்லாம் சூடான பாலில் வாய் வைத்த பூனையைப் போல மறுபடியும் சினிமாத் துறைக்கே அலறியடித்துக் கொண்டு திரும்பி ஓடினார்கள். விஜய்காந்த் போன்றவர்கள் திரிசங்கு சொர்க்கம் போல இடையில் மாட்டிக் கொண்டு விழிக்கிறார்கள். என்றாலும் இந்த வரிசை ஓய்வதாக இல்லை. அரசியல் அதிகாரத்திற்குள் நகர சினிமா என்கிற குறுக்கு வழி எளிதாக இருக்கும் என்கிற கற்பனையில் நேற்று நடிக்கத் துவங்கிய இளம்நடிகர் கூட காமிராவை நோக்கி வீர வசனங்கள் பேசும் நகைச்சுவைகளும் பெருகத் துவங்கி விட்டன.

ஆனால் நிழலுக்கும் நிஜத்திற்குமான வித்தியாசத்தை பொதுமக்கள் இன்று உணர ஆரம்பித்து விட்டார்கள். முன்பெல்லாம் சண்டைக்காட்சிகள் என்றால் அது தொடர்பான படப்பிடிப்பை ஸ்டூடியோவிற்கு உள்ளே ரகசியமாகத்தான் வைத்துக் கொள்வார்களாம். ஹீரோ தாவுவதையும் பறப்பதையும் உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கும் பார்வையாளர்களுக்கு இது சார்ந்த ரகசியங்கள் புலப்பட்டு, சினிமா மீதும் சம்பந்தப்பட்ட நடிகர்கள் மீதும் அவர்களுக்கு இருக்கும் கவர்ச்சி குறையக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. ஆனால் பெரும்பாலான படப்பிடிப்புகள் இன்று வெளிப்புற இடங்களில்தான் நடைபெறுகின்றன. கிராஃபிக்ஸ் முதற்கொண்டு சினிமாவின் பல நுணுக்கங்களை, அதிலுள்ள பிழைகளை பார்வையாளர்களே அலசத் துவங்கியிருக்கிறார்கள். இவற்றில் சித்தரிக்கப்படும் சாகசங்கள் பெரும்பாலும் போலியானவை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. நாயக நடிகர்களின் மீதான கவர்ச்சி குறைவதற்கு இது போன்ற காரணங்கள் முக்கியமானதாக அமைந்திருக்கின்றன. இந்தச் சூழலில் இன்னொரு எம்.ஜி.ஆர் உருவாவது இனி சாத்தியமேயில்லை என்றுதான் தோன்றுகிறது.

**

சமீப காலத்திய தமிழக அரசியல் சூழலில் ஜெயலலிதா விட்டுச் சென்ற வெற்றிடத்தை குறிவைத்து மறுபடியும் சில நடிகர்கள் அரசியல் களத்திற்குள் குதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவற்றில் பிரதானமானவர் ரஜினிகாந்த். ‘வருவேன், ஆனா வர மாட்டேன்’ என்கிற மதில் மேல் பூனை கதையாக, அரசியலுக்குள் நுழைவதாக ரஜினிகாந்த் கூறிக் கொண்டிருக்கும் புனைவிற்கான வயது ஏறத்தாழ 25 ஆண்டுகள். மாறி மாறி அரசாண்ட இரண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியால் சலிப்பும் வெறுப்பும் கொண்டிருக்கும் தமிழக மக்கள், மாற்றத்திற்காக அல்லாடிக் கொண்டிருக்கும் போது இந்த ‘வருவேன், வரமாட்டேன்’ விளையாட்டை இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக அவர் நிகழ்த்திக் கொண்டிருப்பது நிச்சயம் முறையல்ல. தன்னுடைய நிலைப்பாட்டை பட்டவர்த்தனமாக தெரியப்படுத்தாமல் சூழ்நிலைக்கு ஏற்ப ஜாக்கிரதையாக விளையாடிக் கொண்டிருப்பதும் ஒருவகையில் மக்களுக்கு செய்கின்ற துரோகம்தான். இது மட்டுமல்லாமல், இந்த ‘மதில் மேல் பூனை’ கதையாடலை தன்னுடைய திரைப்படக்காட்சிகளுக்கான முதலீடாகவும் மாற்றிக் கொண்ட சாமர்த்தியசாலிதான் ரஜினிகாந்த். ‘நான் பாட்டுக்கு என் வழியில் போயிட்டிருக்கேன்.. என்னை சீண்டாதீங்க’ என்று புனைவுப் பாத்திரங்களிடம் வீராவேசமாக பேச, மக்கள் அந்தப் பாவனையைப் புரிந்து கொண்டு பலமாக கைத்தட்டி மகிழ்ந்தார்கள். இப்படி சில வருடங்கள் அவரது சினிமா வண்டி ஓடிக் கொண்டிருந்தது.

எம்.ஜி.ஆரைப் போல தன் திரைவாழ்க்கையை ரஜினி திட்டமிட்டு அமைத்துக் கொள்ளவில்லை. அவ்வாறு தீர்மானிக்கும் செல்வாக்கு துவக்க காலக்கட்டங்களில் அவரிடம் இல்லாமலிருந்தது. வில்லன் பாத்திரங்களின் மூலம் வெற்றியடைந்து நாயகராக பதவி உயர்வு பெற்றாலும் கூட, குடிப்பது உள்ளிட்ட காட்சிகளில் அவர் நடிக்கத் தயங்கவில்லை. எம்.ஜி.ஆரைப் போல தன்னை ஒழுக்கவாதியாகவும், நேர்மறை பிம்பமாகவும் சித்தரித்துக் கொள்ள ரஜினி அதிகம் மெனக்கெடவில்லை. திரைக்கு வெளியிலும் தன்னுடைய பிம்பம் குறித்தான கவலை அவருக்கு இல்லை. ஒருவகையில் அவருடைய சிறப்பு அம்சங்களில் ஒன்றாக இதுவே பேசப்பட்டது.

வருங்காலத்தில் தானொரு ‘சூப்பர் ஸ்டார்’ ஆவோம் என்கிற கற்பனையோ எதிர்பார்ப்போ ரஜினிக்கு இல்லை. இதை வெளிப்படையாகவே பல நேர்காணலில் அவர் கூறியிருக்கிறார். என்றாலும் காலம் இந்த தங்க கீரிடத்தை அவர் தலையில் வைத்தது. ரஜினியின் கடுமையான உழைப்பும் இதற்கு காரணமாக இருந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை. ‘தானுண்டு தன் நடிப்புண்டு’ என்றிருந்த ரஜினியை அரசியல் உள்ளே இழுக்கும் என்று கற்பனை செய்திருப்பாரா என்று தெரியவில்லை என்றாலும் இது எல்லா பிரபலங்களுக்கும் நேரக்கூடிய விபத்துதான்.

ஒரு சராசரி நபருக்கு, அரசியல் மீது இருக்கக்கூடிய பொதுவான கோபங்களையும் கிண்டல்களையுமே அவர் திரைப்படத்தின் பாடல்களும் காட்சிகளும் ஒரு காலக்கட்டத்தில் பிரதிபலித்தன. குரு சிஷயன் திரைப்படத்தில் வரும் ‘நாற்காலிக்கு சண்டை போடும்’ பாடல் ஓர் உதாரணம். ‘எனக்கு கட்சியும் வேண்டாம், கொடியும் வேண்டாம்’ என்றெல்லாம் கூட தன் அரசியல் ஒவ்வாமையை வெளிப்படையாக பதிவு செய்தவர். மக்களிடம் பிரபலமும் செல்வாக்கும் கொண்டவர்களின் மீது அரசியல்வாதிகளுக்கு ஒருபுறம் ஈர்ப்பும் இன்னொரு புறம்எரிச்சலும் வருவது இயற்கை. ஒன்று அவர்களை வளைக்கப் பார்ப்பார்கள் அல்லது உடைக்கப் பார்ப்பார்கள்.

அந்த வகையில் அப்போது ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவிற்கும் ரஜினிகாந்த்திற்கும் உரசல்கள் ஆரம்பித்தன. காவல்துறையினர் ரஜினியின் காரை போயஸ் கார்டனின் வெளியில் நிறுத்தி விசாரணை செய்தார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ரஜினி தன் திரைப்படங்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசிய அரசியல் விமர்சனங்கள், வசனங்கள் ஆளுங்கட்சியை எரிச்சலூட்டியதாகவும் கூறப்படுகிறது. ‘அண்ணாமலை’ திரைப்படத்தில் துவங்கிய இந்த உரசல், பாட்சா திரைப்படத்தின் வெற்றிவிழாவில் பெரிய சர்ச்சையாக மாறியது. மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டதையொட்டி விழா மேடையில் இதை ரஜினி காரமாக விமர்சிக்க, படத்தின் தயாரிப்பாளரான ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதாவின் கோபத்திற்கு ஆளாகி பதவியை இழந்தார். இதன் இடையில் பாமக கட்சியோடு ஏற்பட்ட உரசலில் அந்தக் கட்சிக்காரர்கள் ‘பாபா’ திரைப்படத்தின் படப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிய நகைச்சுவையும் நிகழ்ந்தது.

இதனால் பல்வேறு வகையில் எரிச்சலுக்கு உள்ளான ரஜினி, 1996-ல் நிகழ்ந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக – தாமக கூட்டணிக்கு ஆதரவாக குரல் தந்தார். ‘ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது’ என்று அவர் ஆவேசமாக கூறியதை, தொலைக்காட்சிகளில்  மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொண்டது திமுக.  இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு, அப்போதைய ஆளுங்கட்சியின் மீது பொதுமக்கள் சலிப்பும் கோபமும் கொண்டது பிரதான காரணம் என்றால், ரஜினியின் ஆதரவும் ஒரு குறிப்பிடத்தக்க பங்காக அமைந்தது என்பதை மறுக்க முடியாது. ஆனால் பிறகு நிகழ்ந்த தேர்தல்களில் ரஜினியின் ‘வாய்ஸ்’ பெரிதும் எடுபடவில்லை. இதை உணர்ந்த ரஜினியும் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நேரடி ஆதரவு தராமல் ‘கழுவிய நீரில் நழுவிய மீனாக’ இருந்தார். மறுபடியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது ஒரு விழா மேடையில் அவரை ‘தைரியலட்சுமி’ என்று புகழவும் ரஜினி தயங்கவில்லை.

தமிழக அரசியலுக்கும் ரஜினிக்கும் இடையில் நிகழ்ந்த இந்தச் சம்பவங்களை விவரமாக எழுதுவற்கான காரணம் இருக்கிறது. ரஜினி அரசியல் பாதைக்குள் தற்செயலாக வந்து விழுந்ததற்கான தடயங்கள் இவை. மற்றபடி பொதுமக்களின் பிரச்சினைகளைப் பற்றிய பிரத்யேகமான கருத்தோ, பார்வையோ, அக்கறையோ அவரிடம் எப்போதும் இருந்ததில்லை. திரைத்துறையினர் நிகழ்த்தும் போராட்டங்களில் மட்டும் கட்டாயத்திற்காக கலந்து கொள்வார். காவிரி நீர் பிரச்சினைக்காக நிகழ்ந்த ஒரு போராட்டத்தில் நடிகர் சங்கத்தோடு இணையாமல் தனியாக உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினார். ‘என் வழி, தனி வழி’ என்கிற அவருடைய ‘பஞ்ச்’ வசனத்தை இப்படித்தான் நடைமுறையில் நிரூபிக்க வேண்டுமா?

‘நதிநீர் இணைப்பிற்காக ரூ.ஒரு கோடி தருகிறேன்’ என்று அவர் அறிவித்ததும் பரபரப்பானது. இந்தியாவின் நதிகளை இணைப்பதென்பது பல நூறு கோடிகளை கோரி நிற்கும் திட்டம் என்பதால் எளிதில் சாத்தியமில்லாதது என்பது ஒருபுறம் இருக்க, இயற்கையான முறையில் பாயும் நதிகளை வலுக்கட்டாயமாக இணைப்பது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பல லட்சம் மக்கள் தங்களின் வாழ்விடங்களை இழக்க வேண்டியிருக்கும் என்றும் சொல்கிறார்கள். இவற்றையெல்லாம் ஆராயாமல் ரஜினி அறிவித்தது ஒரு ‘ஸ்டண்ட்’ ஆகவே படுகிறது. அவருடைய குரல் பலரால் கவனிக்கப்படும் போது அதுபற்றிய பொறுப்பில்லாமலும் ஒரு பிரச்சினையின் ஆழத்தை அறியாமலும் சினிமாவில் பேசும் ‘பஞ்ச்’ வசனங்களைப் போன்று நிஜ வாழ்விலும் சொல்லுபவரால் என்ன மாதிரியான திட்டங்களை மக்களுக்கு சாத்தியப்படுத்த முடியும்?

நேரடி அரசியலுக்குள் வருவதற்கான எண்ணம் ரஜினிக்கு இப்போது கூட இல்லை என்றே தோன்றுகிறது. ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் ஆடிய நாடகத்தையே சமகாலத்திலும் வெவ்வேறு வடிவங்களில் தொடர்கிறார். அரசியல் கட்சியை துவங்குவதற்கான ஏற்பாடுகளை அவர் தெரிவித்த போது வழக்கம் போல் ஊடகத்தில் அந்தச் செய்தி தீ போல பற்றிக் கொண்டது. ஒரு செய்தியாளர் ‘உங்கள் கட்சியின் கொள்கை என்ன?’ என்கிற ஆதாரமான கேள்வியை முன்வைக்கும் போது கூட அவரால் தெளிவாக பதிலளிக்க முடியவில்லை. இந்தச் சம்பவத்தைப் பற்றி ‘தலையே சுத்திடுச்சு’ என்று வேறு இடத்தில் சொல்லி சிரித்துக் கொள்கிறார். இதற்காக மக்களும் அவரைப் பார்த்து சிரிக்கிறார்கள் என்பதை அவர் அறிகிறாரா இல்லையா என்று தெரியவில்லை.

‘இன்னமும் கட்சியே துவங்கவில்லை, அதற்குள் கொள்கையைப் பற்றி என்ன சொல்ல முடியும்?” என்று அவர் வெள்ளந்தியாக பேசுவதிலிருந்து கதையே இல்லாமல் சினிமா படப்பிடிப்பிற்கான பூஜையைப் போட்டு விடுவது போல, கட்சியின் கொள்கைகள், தொலைநோக்குத் திட்டங்கள், வாக்குறுதிகள் என்கிற எந்தவொரு அடிப்படையான விஷயங்களும் இல்லாமல் விளையாட்டு போல கட்சியைத் துவங்கவிருக்கிறாரா என்று தோன்றுகிறது. தனது ஒவ்வொரு புதிய சினிமா வெளியாவதற்கு முன்பும் படம் ஓடுவதற்காக செயற்கையாக ஒரு பரபரப்பைக் கிளப்பி விட்டு விடுகிறார் என்று பெரும்பாலோனார் கருதுகிறார்கள் இதற்கான முகாந்திரங்கள் அவருடைய தொடர்ச்சியான செய்கைகளில் தெரிகின்றன. ‘போர் வரும் போது பார்க்கலாம்’ என்று ரசிகர்களை உசுப்பி விட்டு விட்டு அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள சென்று விடுபவரை மக்களின் பிரதிநதி என்று கூட அல்ல, ஒரு கட்சியின் தலைவர் என்று கூட சொல்ல முடியவில்லை.

காவிர் நீர் விவகாரத்திற்காக, ஐபிஎல் போட்டியை எதிர்த்து நிகழ்ந்த போராட்டத்தின் போதும் சரி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு  விவகாரத்தின் போதும் சரி, ரஜினியின் அசலான ‘வலதுசாரி’ முகம் கொடூரமாக வெளிப்பட்டது. ‘சீருடை அணிந்த காவலர்களை அடிப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்’ என்று காவல்துறையினருக்கு பரிந்து பேசினார். இது ஒருவகையில் ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்தான். ஆனால் காவல்துறையால், போராட்டக்காரர்கள் மீதும், காவல்நிலையத்தில் புகார் தர வருகிறவர்கள் மீதும், ஏன் அன்றாடம் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள், ஊழல், லஞ்சம், பொய் வழக்குகள் என்று நீளும் பல மோசடிகளைப் பற்றி அவர் எப்போதாவது பொதுமக்களின் குரலாக நின்று பேசியிருக்கிறாரா?

ஸ்டெர்லெட் ஆலையை மூடுவதற்காக நிகழ்ந்த மக்கள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதற்கு ‘சமூக விரோதிகள்’தான் காரணம் என்று ஆவேசமாக பேட்டியளித்தார் ரஜினிகாந்த். காவல்துறையினர் தாக்கப்பட்டதற்காக இந்த இடத்திலும் கண்டனம் தெரிவித்தார். ஏறத்தாழ நூறு நாட்கள் அமைதியாக நிகழ்ந்த போராட்டத்தை திசை திருப்ப அல்லது கறை படிய வைக்க, அரசு மற்றும் கார்ப்பரேட் கூட்டணியின் சதியில் சில கைக்கூலிகள் போராட்டத்தில் ஊடுருவி வன்முறையை நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் பல அப்பாவி மனிதர்களின் உயிர் பறி போயிருக்கும் நேரத்தில் அதைப் பற்றி பிரதானமாக பேசாமல் ‘சமூக விரோதிகள்’ என்று அசந்தர்ப்பமாக பேசியிருப்பதின் மூலம் மக்களின் உணர்வுகளையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துகிறோம் என்கிற பிரக்ஞை கூட அவருக்கு இல்லை.

அடித்தட்டு மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு எவ்வகையிலும் உதவாத ‘ஆன்மீக அரசியல்’ என்றொரு கொள்கையை முன்வைப்பது, முன்னாளில் ‘சோ’வும் இன்னாளில் ‘குருமூர்த்தியும்’ ரஜினியின் அரசியல் ஆலோசகர்களாக இருந்தார்கள் என்று சொல்லப்படுவது, ஸ்டெர்லைட் போராட்ட விவகாரத்தில் ஆளுங்கட்சிக்கு சாதகமாகப் பேசுவது … ரஜினியின் இந்த நிலைப்பாடுகளையெல்லாம் கூட்டி கழித்துப் பார்த்தால், பாஜகவின் செல்வாக்கை தமிழகத்தில் வளர்ப்பதற்காக உபயோகிக்கப்படும் மறைமுக பிம்பம் ரஜினிகாந்த் என்று சொல்லப்படுவதில் உண்மையிருக்குமோ என்று தோன்றுகிறது.

ஒரு திரைப்படத்தை மூன்று மணி நேரம் பார்க்கும் ஒரு சராசரி ரசிகன் கூட அதில் அழுத்தமாக சித்தரிக்கப்பட்டிருக்கும் அரசியல் உணர்வின் பால் கவரப்படுவான். அது குறித்து சிந்திக்கத் துவங்குவான். அடித்தட்டு மக்களின் ‘நில உரிமைக்கான போராட்டத்தை’ அடிப்படையாகக் கொண்ட ‘காலா’ திரைப்படத்தில் பல நாட்கள் நடித்திருந்தும் அதில் பேசப்பட்டிருக்கும் அரசியலால் ரஜினி துளி கூட ஈர்க்கப்படவில்லை என்றே தெரிகிறது. ‘எல்லாத்துக்கும் போராட்டம்னா தமிழ்நாடு சுடுகாடாயிடும்’ என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் எரிச்சல்பட்டது அவருடைய ‘வலதுசாரி’யின் முகத்தை அம்பலப்படுத்துகிறது.. அவர் நடித்த திரைப்படத்தின் கருத்தாக்கத்திற்கு அவரே முரணாக நிற்கிறார். திரைக்குள் ஒரு ரஜினியும், திரைக்கு வெளியே வேறு ஒரு ரஜினியுமாக விலகி நிற்கும் ‘டபுள் ஆக்ஷனை’ அவரால் சிறப்பாக செய்ய முடிகிறது.

ரஜினிகாந்த் தனிப்பட்ட வகையில் சில நற்பண்புகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் அரசியல் தளத்தில் இயங்குவதற்கான துளி தகுதி கூட அவரிடம் தென்படவில்லை. அரசியலில் நுழைவதையே இருபத்தைந்து ஆண்டுகளாக மேலாக குழப்பிக் கொண்டிருப்பவரிடம், துரதிர்ஷ்டவசமாக அரசியல் அதிகாரம் கிடைத்து விட்டால் மக்களுக்கான திட்டங்கள் எல்லாம் இந்தக் குழப்பத்திலேயே தள்ளாடி நின்று விடும். ‘எப்போது அவர் அரசியலுக்கு வருவார்?’ என்று கொலைவெறியுடன் காத்திருக்கும் ரசிகர் படையிடம் அதிகாரப் பங்கீடு கிடைத்தால் முன்னாள் அரசியல்வாதிகள் அடித்த கொள்ளையையே தொடர்வதற்கான சாத்தியங்கள் அதிகம். இந்த வாய்ப்பிற்காகத்தான் ரஜினியின் அரசியல் சூதாட்டத்தை பல வருடங்களாக அவர்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திரைத்துறையில் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக இருக்கலாம். ஆனால் அரசியலைப் பொறுத்தவரையில் அவர் ஒரு மாயமான். அவரை நம்பி பின்தொடர்ந்து சென்றால் இழப்பு தமிழக மக்களுக்குத்தான். இதை பெரும்பாலான சதவீதத்தினர் அறிந்தே வைத்திருக்கிறார்கள். என்றாலும் தங்களுக்கான மீட்பரை எதிலும் எங்கும் தேடும் அப்பாவிகள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. 

('பேசும் புதிய சக்தி - ஜூலை 2018 இதழில் பிரசுரமானது)

suresh kannan

Sunday, January 07, 2018

பா.ரஞ்சித் - THE CASTELESS COLLECTIVE - இசை

இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘நீலம்’ அமைப்பு, ‘THE CASTELESS COLLECTIVE’ என்றொரு இசை நிகழ்ச்சியை சென்னையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சிக்கு செல்ல பெரிதும் விரும்பியிருந்தேன். ஆனால் அலுவலகப் பணியில் சிக்கிக் கொண்ட காரணத்தால் துரதி்ர்ஷ்டமாக செல்ல இயலவில்லை.

யூ-ட்யூபில் இந்நிகழ்ச்சியின் காணொளிகள் இப்போது காணக் கிடைக்கின்றன. ராக், ராப் மற்றும் சென்னையின் பிரத்யேக இசைவடிவமான கானா ஆகியவற்றின் கலவையில் இந்தப் பாடல்கள் அமைந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்த இளம்தலைமுறை இளைஞர்களின் சுயாதீன இசை முயற்சிகள் இந்த மேடையில் அருமையாக வெளிப்பட்டதை காண முடிந்தது. இந்த இசைப்பாடல்களின் அடிநாதம், சமத்துவ சமூகம், சமூகநீதி போன்றவற்றின் அடிப்படையில் இருக்கும். ஜாஸ் இசையின் மூலம் கருப்பின சமூகத்தின் இசைப்புலமையும் அடக்கி வைக்கப்பட்டிருந்த ஓலமும் வெளிப்பட்டது. அதைப் போலவே சென்னையின் பிரத்யேகமான அடையாளங்களுள் ஒன்றான, கானா ஒரு குறிப்பிட்ட வெளியைத் தாண்டி மைய சமுகத்தை நோக்கி நகர வைக்கும் இம்மாதிரியான முயற்சிகள் அவசியமானவை.

சினிமா என்பதைத் தாண்டி ஓவியம், ஆவணப்படம், இசை என்று பல்வேறு வழிகளில் தன்னுடைய அரசியல் குரலை ஒலிக்க வைக்கும் பா.ரஞ்சித்திற்கு மனம் உவந்த பாராட்டும் நன்றியும்.

இடஒதுக்கீடு குறித்தான பாடல் ஒன்றிற்கான சுட்டி தரப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து சென்றால் இதர பாடல்களையும் கண்டு, கேட்டு மகிழலாம்.  


suresh kannan


Thursday, February 20, 2014

'அம்மா' குடிநீர்' 'அம்மா உணவகம்' 'அம்மா நீதிமன்றம்'

 சாதுர்யமாக காய் நகர்த்துவதன் மூலம், ராஜீவ் கொலை வழக்குத் தீர்ப்பு தொடர்பான பெரும்பான்மையான அரசியல் பலனை, மக்கள் ஆதரவை  ஜெயலலிதா பெற்று விட்டார் என்று தோன்றுகிறது. அம்மா குடிநீர், அம்மா உணவகம் மாதிரி 'அம்மா தீர்ப்பு'  

வைகோ, கருணாநிதி, ராமதாஸ், நெடுமாறன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், அரசியலுக்காகவோ அல்லது உண்மையான தன்னார்வத்தினாலோ இந்த விவகாரத்தில்  இத்தனை ஆண்டுகள் நிகழ்த்திய போராட்டத்தின் விளைவாக விழுந்த கனியின் ருசியை பெரும்பாலும் ஜெயலலிதாவே சுவைக்க நேர்ந்தது அவருடைய அதிர்ஷ்டத்தையும் சாதுர்யத்தையும் காட்டுவதோடு மற்றவர்களின் துரதிர்ஷ்டமாகவும் அமைந்திருக்கிறது. எதிர்பார்த்தது போலவே தமிழ் உணர்வாளர்களிடையே பாரபட்சமின்றி ஜெயலலிதாவிற்கு கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பும் பாராட்டும், எந்த நோக்கத்திற்காக இந்த முடிவை அவர் எடுத்தாரோ அதை சாதித்து விடுவார் என்கிற யூகத்தையே ஏற்படுத்துகிறது. இந்த அலையை மீறி மற்ற கட்சிகளுக்கான அரசியல் லாபம் என்பது எதுவுமே மிச்சமிருப்பதாக தோன்றவில்லை.

விடுதலைப்புலிகள் தொடர்புள்ள எந்தவொரு விஷயத்திலும் பாதகமான கண்ணோட்டத்திலேயே இதுசெயல்பட்டு வந்த ஜெ, இந்தச் சூழ்நிலையை 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்பதற்கேற்ப சாதகமாக உபயோகித்துக் கொண்டதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகவோ விமர்சித்ததாகவோ தெரியவில்லை. உற்சாகமும் மிகையுணர்ச்சியுமான  கூச்சல்களின் இடையே இந்தக் குரல்களின் ஓசை அதிகம் எழவில்லை. 'தேர்தலுக்காகவோ அல்லது அரசியல் தந்திரமோ அல்லது எதுவாக வேண்டுமானலும் இருந்து விட்டுப் போகட்டும்' - ஜெவின் இந்த முடிவு பாராட்டத்தக்கது' என்பதே பெரும்பான்மையான குரல்களின் எதிரொலியாக இருக்கிறது. ஒருவேளை கருணாநிதி ஆட்சியில் இருந்து இந்த முடிவை ஒருவேளை எடுத்திருந்தால் 'வாக்கு வங்கிக்காகத்தான் இந்த சந்தர்ப்பவாத முடிவை எடுத்திருக்கிறார்' என்று இதே குரல்களே ஒலித்திருக்கலாம். குருட்டுத்தனமாகவோ அசட்டு தைரியத்துடனோ, வீம்புக்காகவோ ஜெ எடுக்கும் முடிவுகள் அவரை 'வீராங்கனை, இரும்புப் பெண்மணி' என்றெல்லாம் கருதப்படக்கூடிய எண்ண அலைகளை பொதுவெளியில் ஏற்படுத்தும் அதிர்ஷ்டம் அவருக்கு எப்போதும் அடிக்கிறது.

இதற்கு இன்னொரு கோணமும் இருக்கிறது. ஒருவேளை கருணாநிதியே இப்போது ஆட்சியில் அமர்ந்திருந்து இந்தச் சூழலை சந்தித்திருந்தால் ஜெ போல அதே உறுதியுடன் இந்த முடிவை எடுத்திருப்பாரா என்பது சந்தேகம்தான். தன்னுடைய அரசியல் லாபத்திற்காகவும், ஊழல் வழக்குகளிலிருந்து தங்களின் சுற்றத்தை பாதுகாத்துக் கொள்ளவும் மத்திய அரசை பகைத்துக் கொள்ள அவர் தயாராக இருந்ததில்லை என்பதே கடந்த கால அரசியல் நிகழ்வுகள் நமக்கு தரும் செய்தி. 'மத்திய அரசிற்கு இது குறித்து கடிதம் எழுதியிருக்கிறேன்' என்பதோ அல்லது 'ஒரு நாள் உண்ணாவிரதம்' அல்லது பந்த் என்னும் பாவனைகளோடு இந்தப் பிரச்சினையை அவர் திசை திருப்பியிருப்பதோடு முடித்திருப்பார். ஜெ-விற்கு கிடைத்திருக்கும் இந்த பெரும் ஆதரவு, ஏற்கெனவே அழகிரி பிரச்சினையால் துவண்டிருக்கும் திமுகவிற்கு இன்னும் பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம்.

அரசியல் எனும் வியாபாரத்தை நடத்துவதென்பது எத்தனை சிக்கலான ஆனால் சுவாரசியமான திரில்லர் நாடகம் என்பதே இந்தத் தீர்ப்பிற்கு பின்னான நிகழ்வுகளின் மூலம் நாம் வழக்கம் போல் அறியும் செய்தி. மாநில அரசின் இந்த முடிவை, மத்திய அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதும் அதைத் தொடரப் போகும் நிகழ்வுகளும் இந்த நீண்ட நாடகத்தின் கிளைமாக்ஸ். இந்த அரசியல் சதுரங்கத்தில் பகடைக்காய்களாக 'வாழ்வா, சாவா' என்று அல்லல்படும் மனித உயிர்களின் நிலைதான் உண்மையிலேயே துன்பியல் சமாச்சாரம். இந்தத் தீர்ப்பும் இதன் தொடர்பான நிகழ்வுகளும் முழுக்க அரசியல் சமாச்சாரமாக முடிந்து விடாமல் மரண தண்டனைக்கு எதிரான திசையில் பயணிக்கத் துவங்குவதில்தான் நம்முடைய முதிர்ச்சி அடங்கியிருக்கிறது. உயிர்களில்  'தமிழ் உயிர்' 'இந்தி உயிர்' 'ஆங்கில் உயிர்' என்று எவ்வித கற்பித உணர்ச்சிப் பாகுபாடுமில்லை.

suresh kannan

Friday, February 01, 2013

அம்மா நேர்காணல் - அனந்த கோடி அர்த்தங்கள்

இந்தப் பதிவு ஒரு திரைப்படத்தின் சர்ச்சை தொடர்பான எதிர்வினையாக ஓர் அரசியல் தலைவரின் சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணல் பற்றியது. தமிழ்நாட்டுடன் தொடர்புடையது என்று தவறாக எண்ணிக் கொள்ள வேண்டாம். வசதிக்காக கசகஸ்தான், பிலேரியா என்று கற்பனையான பிரசேத்தை கற்பனை செய்து கொளளவும். "துபாய் எங்க இருக்கு - அது தூத்துக்குடியிலோ, திருநெல்வேலி பக்கத்துலயோ' என்கிற ரீதியில் வாசிக்கவும். (ஏபிசிடி சட்டங்களின் கீழ் களி தின்ன எனக்கு விருப்பமும் எண்ணமும் இல்லை என்கிற காரணத்திற்காக).

()

முதல்வரின் நேர்காணல் திறமையான திரைக்கதையைக் கொண்ட ஒரு திரைப்படத்தைப் போல சுவாரசியமாக இருந்தது. ஒரு அம்மா குழந்தைக்கு சோறூட்டிக் கொண்டே கதை சொல்வதைப் போன்ற கனிவுடனும் பொறுமையுடனும் தெளிவுடனும் இந்த நேர்காணல் அமைந்திருந்த போதும், ஒரு  கோயிஞ்சாமி நண்பர் சில விஷயங்கள் சரியாகப் புரியவில்லை என்னிடம் குறைபட்டுக் கொண்டார். 'அம்மாவின் பேச்சு புரியவில்லை' என்று கூறுகிற இந்த மாபாதகத்திற்கே அவரை 144-ல் எத்தியோப்பியாவிற்கு பார்சல் செய்து அனுப்ப சட்டத்தில் இடமுள்ளது என்றாலும் அம்மாவின் அதே கருணையுள்ளத்தோடு அந்த நேர்காணலை கட்டுடைத்து அவருக்கு சில விஷயங்களை விளக்க வேண்டியதாயிற்று.

()

'பிரச்சினை உருவான துவக்கத்திலேயே ஏன் அந்த நடிகர் அரசிடம் முறையிடவில்லை?'

"இப்ப நமக்கு அடிபட்டாலோ, கீழே விழுந்தாலோ உடனே என்ன செய்யறோம்?"  என்னய்யா செய்யறோம்? 'அம்மா -ன்னு கத்தறதில்லையா?. ஏன்யா அந்த நடிகர் மாத்திரம் 'ஐகோர்ட்டு' -ன்னு கத்தியிருக்காரு. சென்ஸ் வேணாம். 'உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே இடுக்கண் களைவதாம் அம்மா' ன்னு திருவள்ளுவர் எவ்ளோ தெளிவா சொல்லியிருக்காரு. புரியவேணாம் அந்த ஆளுக்கு.

()


'சட்டம் ஒழுங்கு கெடும் என்கிற காரணத்தினால் படம் தடை செய்யப்பட்டது'

'அந்த படப் பிரச்சினையைத் தவிர மற்றபடி தமிழ்நாடு ஒரு அமைதிப்பூங்காவாக இருக்கிறது என்கிற உண்மை கூடவா நமக்குத் தெரியாது. எங்க வீட்டு பாப்பா, பக்கத்து சீட் பொண்ணு கிள்ளினதுக்கு கூட  பதிலுக்கு சப் -னு அறையாம வீட்டுக்கு வந்து சாதுவா சொல்லுது. அந்தளவிற்கு சட்டம் ஒழுங்கு தமிழ்நாட்டில் மிகத் தெளிவா இருக்கு -ன்றதுக்காக இதைச் சொல்றேன். இந்தச் சூழலை ஒரு திரைப்படம் கெடுக்குமென்றால் அதை தடை செய்வதில் என்னய்யா குற்றம்?'

()

'காவலர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லாததால் பாதுகாப்பு தருவது சிரமம்'

இந்தளவிற்கு விவரமா புள்ளிவிவரம் சொல்றதை அந்த அம்மா திரைப்படத்துல நடிக்கற காலத்துலயே செஞ்சிருந்தாங்கன்னா..பசயகாந்த்தை எப்பவோ ஓட ஓட விரட்டியிருக்கலாம். போலீஸ்ல ஆள் பத்தாக்குறை -ன்றதைக் கேக்க கேக்க என் கண்ணுல இருந்து தண்ணியே வந்துடுச்சு.

அரசியல் மீட்டிங் நடக்கறப்ப வரிசையா டியூப்லைட் கட்டியிருப்பாங்கல்ல. அது போல சிஎம் ரூட்ல வரிசையா நிக்க வெச்சிருக்கற போலீஸ்கார் போக மீதமிருக்கிற கொஞ்ஞூண்டு போலீஸ்கார் வெச்சே இத்தனை திறமையா லா அண்ட் ஆர்ட்ரை மெயிண்ட்டெயிண் பண்றாங்கன்னா... எவ்ளோ டேலண்ட் லேடி.

காவலர் பற்றாக்குறையைப் பற்றி அம்மா சொன்னப்ப, நான் கூட போலீசுக்கு அப்ளை செஞ்சிடலாமான்னு கூட ஒரு நிமிஷம் தோணி கண்ணு கலங்கிப் போச்சு. இன்னும் கொஞ்சம் தொப்பையை வளர்க்க வேண்டியிருக்குமேன்கிற ஒரே காரணத்திற்காக வேணாம்னு முடிவு செஞ்சேன்.

()


'பயா டிவி்க்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை'

இந்த வசனத்தை வேற எங்கயோ ஏற்கெனவே கேட்டிருக்கோமே -ன்னு ஒரு நெனப்பு வரலாம். அதை மறந்துடுங்க. மேட்டர் என்னன்னா...

'நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது...  -----------   டிவி -ன்னு கர்ணகடூரமா ஒரு குரலை நீங்க டெய்லி உங்க வீட்டு டிவில ஒருவாட்டியாவது கேட்டிருக்கலாம். "யோவ் அது ரூ.744 இஎம்ஐ -ல கட்டி நான் வாங்கின டிவிய்யா -ன்னு" டிவி முன்னாடி போய் கத்தவா செய்வீங்க? இல்லல்ல. அது போலத்தான் இதுவும். மேலும் இது தத்துவார்த்தமான ஒரு விஷயமும் கூட. எதைக் கொண்டு வந்தாய் எதை இழக்கப் போகிறாய், எது உன்னுடையதோ -ன்ற மாதிரியான விஷயம். உள்ளொளி, தேடல் மாதிரி மேட்டர் இருக்கறவங்களுக்குத்தான் புரியும்.

.. மைசூர் போண்டால மைசூரா இருக்கு?" புரிஞ்சுக்கோங்க..

()

'திரைப்பட ஒழுங்குமுறைச் சட்டத்தைக் கொண்டு படத்தை முழுக்கவே தடை செய்திருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை.'

பாருங்கய்யா.. பாருங்கய்யா. அம்மாவோட கருணையை. ஒரு தப்பு செஞ்சா நம்ம அம்மா என்ன செய்வாங்க, லேசா ஒரு தட்டு தட்டி 'இனி இப்படி செய்யாதேன்னு' சொல்லுவாங்கள்ல. அதேதான்தான்யா நம்ம அம்மாவும் செஞ்சிருக்காங்க. கோழி மிதிச்சு குஞ்சு செத்திருக்கா..

()

"பிரதமரை பிமல் என்கிற தனிநபர் தீர்மானிக்க முடியாது"

பொலிட்டிக்கல் சயன்ஸ் வகுப்புல பத்து வருஷம் உக்காந்து படிச்சாக்கூட இத்தனை தெளிவா புரிய வெக்க முடியாது. வாக்காளனோட கடமை வாக்களிக்கறது மட்டும்தான். அதோட போயிடணும். யாரு முதல்வர், யாரு பிரதமர் -னு தேவையி்ல்லாததையெல்லாம் நோண்டி நோண்டி பார்க்கக்கூடாது. இப்ப ஒருத்தரு பிரதமரா இருக்காரு. நாம விரும்பியா அவரு வந்தாரு. க்ளாஸல எந்தப் பிள்ள நல்லாப் படிச்சு சாதுவா இருக்கோ அதை லீடரா போடுவாங்களல. அந்த மாதிரிதான்.

அது மாத்திரமல்ல. அடுத்து வேட்டி கட்டியவர்தான் அடுத்த பிரதமரா வரணும்னு அந்த நடிகர் ஒரு மீட்டிங்ல சொல்லியிருக்கார். அப்பட்டமான ஆணாதிக்கம். ஏன் பெண்கள் வேட்டிக்கட்டக்கூடாதா? அல்லது பிரதமரா வரக்கூடாதா, இப்ப (மறைமுகமா) பிரதமரா இருக்கறவரும் ஒரு பெண்தானே? (மாட்டிக்கறா மாதிரி ரொம்ப உளர்றனோ).

()

ஐநூறு திரையரங்களுக்கும் பாதுகாப்பு செய்து தர முடியாது'

இதன் மூலமா அம்மா பல விஷயங்களை புரிய வெச்சிருக்காங்க. அதாவது அத்தனை திரையரங்குகளிலும் நிச்சயம் கலவரம் நடைபெறும். ஏன்னா... பாருங்க... அவங்க ரொம்ப மோசமானவங்க..தெரியாம காலை மிதிச்சிட்டாக்கூட பாமை எடுத்து மேல போட்டுறுவாங்க...ஒண்ணு..

அப்படியே சில ஏரியாவுல அவங்க தூங்கிட்டாக்கூட தலைல குல்லா போட்டுட்டு எங்க கட்சியாளுங்க கலவரத்தை செஞ்சே தீருவாங்க. பின்ன நாங்க சொன்னது உண்மையாகனும்ல.."

இவ்ளொ பிரச்சினை தேவைதானா?

()

'நான் சில ஆண்டுகளாக திரைப்படங்களே பார்ப்பதில்லை'

தமிழக மக்களின் நலன்களுக்காக இரவும் பகலும் ஒரே சிந்தனையாக இருக்கிற அம்மா அவர்கள், திரைப்படம் பார்க்கிற நேரத்தைக் கூட தனக்காக வீண் செய்வதில்லை என்பதை அறியும் போது....

(கடந்த கால முதல்வர், பாராட்டு விழா, குத்துப்பாட்டு கண்காட்சி, ப்ரீமியர் ஷோ.. இன்னமும் வெளிவந்ததா இல்லையான்னு தெரியாத படங்களுக்கு வசனம் எழுதறது -ன்னு கொண்டாட்டமா இருந்ததை அம்மா எத்தனை சூசகமாக சொல்லியிருக்காங்க -ன்னு பாத்துக்கங்க)


()

கோயிஞ்சாமி நண்பரிடம் இந்த நேர்காணலைப் பற்றி இன்னும் கூட பல விஷயங்களை புரிய வைத்தேன். அம்மா அளவிற்கு எனக்கு பொறுமையில்லையென்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். அம்மாவின் நல்ல குணங்கள் பற்றி அறியாத அற்பப்பதர்களுக்காக இதை பொதுவிலும் பதிவு செய்திருக்கிறேன்.

அம்மா நாமம் வாழ்க.


suresh kannan

Wednesday, January 19, 2011

நாளைய சினிமா - கருத்தரங்கம் - தமிழ்ச் சங்கமம்


'நாளைய சினிமா' எனும் தலைப்பில் 'தமிழ்ச்சங்கமம்' ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கம் ஒன்று தேவநேய பாவாணர் நூலக கட்டிடத்தில் நடந்தேறியது. தமிழின் ஆகச்சிறந்த இயக்குநர்களுள் இருவரில் ஒருவரான பாலுமகேந்திரா முதல் (இன்னொருவர் மகேந்திரன்) 'தென்மேற்குப் பருவக்காற்று' இயக்கிய சமீபத்திய சீனுராமசாமி வரை உரையாற்றினர். முன்னும் பின்னும் முரணும் புதிருமாக பல கருத்துக்கள் மேடையில் வெளிப்பட்டன. அவைகளிலிருந்து நான் புரிந்து கொண்டது.

'இன்னும் ஆறு அல்லது ஏழு வருடங்களுக்கு (ரவுண்டாக பத்து வருடங்கள் என்று கூட வைத்துக் கொள்ளலாம்) தமிழ் சினிமா உருப்படுவதற்கான அடையாளமோ நம்பிக்கையோ இல்லை'

இது தெரிந்ததுதானே, இதற்காக எதற்கு கருத்தரங்கம்? என்று யாராவது கேட்டால் அது நியாயம்தான். மறுக்க முடியாது. பேசியவர்களில் பெரும்பான்மையானவர்கள், 'நாளைய சினிமா' என்ற தலைப்பிற்குள்ளேயே வரவில்லை. சமகால விஷயங்களையும் நேற்றைய விஷயங்களையும் பற்றி பேசி நாளையைப் பற்றி சங்கடமாக தவிர்த்தார்கள். பேசுவதற்கு அதில் விஷயம் இரு்நதால்தானே?

நான் இந்த நிகழ்ச்சிக்கு சென்றதே, அழைப்பிதழில் இருந்த ருத்ரைய்யா என்ற பெயருக்காகத்தான். அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்றே சென்றேன். வீடு, ச்நதியா ராகம் ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு தமிழில் நான் மிக மதிக்கும் முக்கியமானதொரு திரைப்படம் 'அவள் அப்படித்தான்'. அதில் பாடல்கள் இருப்பதனால்தான் அதை மூன்றாமிடத்தில் வைக்கிறேன். பாத்திரங்களை அதனதன் தனித்தன்மைகளோடு இத்தனை துல்லியமாயும் வலுவாகவும் சித்தரித்த தமிழ்த் திரைப்படத்தை இனிதான் காணப் போகிறேன். துரதிர்ஷ்டமாக ருத்ரைய்யா ஏனோ இந்த நிகழ்விற்கு வரவில்லை. சேரன், வெற்றிமாறன் உள்ளிட்ட சிலரும் வரவில்லை.

தமிழ்ச்சங்கமத்தின் பின்புலத்தில் அரசின் கை இருந்தாலும், இந்த கருத்தரங்கில் பேசியவர்கள் பெரும்பாலும் உணமையாகவும் நேர்மையாகவும் பாசாங்குகளைக் களைந்தும் பேசினார்கள். அதுவே இந்த நிகழ்வை சிறப்புறச் செய்தது. கருத்தரங்க அறை நிரம்பி நின்று கொண்டிருந்த பார்வையாளர்களே நூற்றுக்கும் மேல் இருப்பார்கள். ஆறு மணிக்கு துவங்கின நிகழ்வு முடிவடைய இரவு 10.30 மணி ஆகினாலும் பெரும்பாலான கூட்டம் கலையாமலிருந்தது நல்ல சினிமா மீது ஆர்வமுள்ளவர்களின் ஆரோக்கியமான எண்ணிக்கையைக் காட்டுகிறது.  சிறப்பாகப் பேசியவர்கள் என்று சீனு ராமசாமி, எடிட்டர் லெனின, ஜே.பி. கிருஷ்ணா, ஞானராஜசேகரன் பாலுமகேந்திரா ஆகியோர்களைச் சொல்லலாம். ஆனால் நிகழ்விலேயே ஆகச் சிறப்பாகப் பேசியவர் எஸ்.ராமகிருஷ்ணன்.

தமிழ்ச்சினிமாவில் திருமணச் சடங்கு தொடர்பான காட்சி என்றால் அதில் புரோகிதராக நடிப்பதற்கு ஒருவர் இருப்பார். பழைய படங்கள் முதற்கொண்டு அவரின் இளமைக்காலம் முதல் சமீபத்திய படங்கள் வரை அவரையே புரோகிதர் வேடத்தில் பார்க்கிறேன். ஏதோ ஒரு ரஜினி படத்தில் ரஜினி சிவன் வேடத்தில் வர அவரை வைத்துக் கொண்டு ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு வருவாரே, அவர்தான். எஸ.ராவும் கிட்டத்தட்ட அந்த புரோகிதர் மாதிரி ஆகிவிட்டார்.

கிண்டலுக்காகச் சொல்லவில்லை. இலக்கிய மேடைகளில் விஷய கனத்தோடும், தலைப்பிலிருந்து விலகாமலும், ஆத்மார்த்தமாகவும், உண்மையான தேடல்களோடும் பேசுவதற்கு தமிழ்ச்சூழலில் எஸ்.ரா போன்ற நபர்கள் அரிதாக உள்ளனர் என்கிற யதார்த்த உண்மையே இதிலிருந்து வெளிப்படுகிறது. பட்டிமன்ற  பேச்சாளர்கள் போல், பலர் நகைச்சுவையாக எதையோ உளறிக் கொட்டி பார்வையாளர்களிடமிருந்து கைத்தட்டல்களை வாங்கிய பிறகு திருப்தியாக அமர்ந்துவிடுவதில் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். தாம் பேசவிருக்கும் தலைப்பிற்கும் சூழலுக்கும் தொடர்பிருக்கிறதா என்பதையே பலர் யோசிப்பதில்லை. எனவேதான் எஸ்.ரா போன்றவர்களால்தான் அரிதாக சில மேடைகள் நிறைவு பெறுகின்றன.

எஸ்.ரா பேசினதை குறிப்பிடுவதற்கு முன்னால் இயக்குநர்கள் மிஷ்கினும் லிங்குசாமியும் பேசியதை குறிப்பிட வேண்டும். .

தனது வழக்கமாக 'ந்ந்தலாலா' தோல்வி புராணப் புலம்பலை இன்னும் கைவிடாத மிஷ்கின், 'ஒரு நல்ல சினிமா வெற்றியடைவதற்கு பார்வையாளர்கள் மனது வைத்தால்தான் முடியும். சினிமா எடுப்பது அத்தனை சுலபமான விஷயமல்ல. இதற்காக நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். நான் இன்றைக்கு நடுத்தெருவில் இருக்கிறேன். அதை விமர்சகர்கள் உணர வேண்டும். நெட்டில் எதை வேண்டுமானாலும் உடனே டைப்படித்து விடுகிறார்கள். அதற்காக கவலை கொள்ளவில்லை. மறுபடியும் லேண்ட்மார்க்கில் சேல்ஸ்மேனாக பணியாற்றி பிழைத்துக் கொள்ள முடியும். நல்ல சினிமாவை சக நண்பர்களிடம் வாய் மொழியாக சொல்லிப் பரப்புவதை ஒரு கடமையாகவே அனைவரும் கொள்ள வேண்டும்' என்றார்.

லிங்குசாமி பேசும் போது 'மக்கள் ரசனையைக் குறை சொல்லக்கூடாது. அவர்கள் புத்திசாலிகள்தான். வணிக சினிமாவை செய்து பழகின எனக்கு நல்ல சினிமா எடுப்பதில் ஆர்வம் உள்ளது. எவராவது நல்ல கதை வைத்திரு்நதால் வாருங்கள். அவர்களுக்காக என் அலுவலகம் திறந்தே இருக்கும். வேண்டுமெனில் அவர்களைத் தேடி நானே கூட செல்வேன்' என்று மேடை நாடக பாசாங்குடன் சவடாலாக பேசி விட்டு கிளம்பிச் சென்றார்.

லிங்குசாமி பேசிய முதல் விஷயம் தொடர்பாக நான் கருதுவது, கைத்தட்டல்களுக்காக மேடையில் அநேகர் பேசுகிற விஷயம். அது பொதுமக்களை புத்திசாலிகள் என்று செயற்கையாக புகழ்வது. (இந்த விஷயத்தில் மிஷ்கின் தேவலை. பார்வையாளர்களை நேரடியாகவே குற்றஞ்சாட்டினார்.)  பொதுச் சமூகத்தை பகைத்துக் கொள்ள, அவர்களுடன் நேர்மையுடன் உரையாட, அவர்களின் சுரணையின்மையை நேர்மையாகச் சுட்டிக் காட்ட ஒரு தைரியம் வேண்டும். பெரும்பாலோனோர்க்கு அது இல்லை. மக்களின் ரசனை மாறாமல் அல்லது அதில் உயர்ச்சியடையாமல், நல்ல சினிமா மாத்திரமல்ல, எந்தவொரு தரமான கலைப்படைப்போ, அரசியல் சூழலோ வர வாய்ப்பேயில்லை. பொதுச் சமூகம் இவ்வாறு ஆட்டு மந்தைகளாக அப்படியே இருப்பதில்தான் பலருக்கு விருப்பமும் நோக்கமும் இருக்கிறது. எனவே லிங்குசாமி அப்படி பேசியதில் வியப்பில்லை.

இன்னொன்று, நல்ல கதையை தேடுவதாக அவர் சொன்னது. அப்படி அவர் சொன்ன போது நான் நினைத்துக் கொண்டேன். 'அடப்பாவி! இந்த நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டிடத்தின் கீழேயே மிகப் பெரிய நூலகம் இருக்கிறது. வால்யூம் வால்யூமாக தமிழ் இலக்கியங்களு்ம கதைகளும் கொட்டிக் கிடக்கின்றன. அதையெல்லாம் வி்ட்டு விட்டு 'நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள்' என்பது அறியாமைத் திமிர்தானே?

எஸ்.ரா பேசும் போது, லிங்குசாமியின் பேச்சுக்கு சரியான பதிலடி தந்தார். "மிகச் சிற்நத திரைப்படங்களாக உருவாக்கக்கூடிய ஐம்பது தமிழ் நாவல்களை என்னால் இந்த மேடையில் சொல்ல முடியும். (ஜெயகாந்தனின் ஒரு மனிதன். ஒரு வீடு, ஒரு உலகம் முதற்கொண்டு சில நாவல்களின் பெயர்களைச் சொல்கிறார்). இதையெல்லாம் விட்டு விட்டு எங்கே கதையைத் தேடுகிறீர்கள்? தமிழ் வரலாற்று ஆளுமைகள் பற்றி எத்தனை திரைப்படங்கள் தமிழில் வந்திருக்கின்றன? கணித மேஜை ராமானுஜம் பற்றி ஒரெ ஒரு ஆவணப்படம்தான் உண்டு. ஏன் அவரைப் பற்றி யாரும் திரைப்படம் எடுக்கவில்லை. சென்னையை முதலில் ஆண்ட ராபர்ட் கிளைவ் பற்றி எந்த திரைப்படத்திலாவது பேசியிருக்கிறோமா? ஊமைத்துரை பற்றி? தமிழகத்தில்தான் காந்தி எளிமையான உடையில் தன் உருவத்தை மாற்றியமைத்தார். இது எந்த திரைப்படத்தில் பதிவாகியிருககிறது?

அடுத்தது மிஷ்கினுக்கு:

'நான் உலகத்தின் மிகச் சிறந்த இயக்குநர்களின் நேர்காணல்களைப் பார்த்திருக்கிறேன். அதில் எவர் ஒருவருமே தான படம் உருவாக்கின போது பட்ட சிரமங்களைப் பற்றி பேசவில்லை. மாறாக படைப்புகளைப் பற்றி மாத்திரமே பேசுகிறார்கள். காசு கொடுத்து படம் பார்க்க வரும் பார்வையாளனுக்கு அதை அதைப் பற்றி கேட்க எல்லாவித உரிமையும் இருக்கிறது. எழுத்தாளனாக என் படைப்புகளை எந்தவொரு வாசகனும் என்னை வழியில் நிறுத்தி விமர்சிக்கலாம். திரைத்துறையில் பல்வேறு துறைகளில் பதினைந்து வருடங்களுக்கு மேலாக இயங்குபவன் என்கிற முறையில் அதன் சிரமங்களை அறிவேன். அதையெல்லாம் மீறித்தான் ஒரு சினிமாவை உருவாக்க வேண்டியிருக்கிறது. லூயி புனுவலின் Viridiana என்கிற திரைப்படம் அரசியல் காரணமாக அதிகார வர்க்கத்தினரால கடுமையாக எதிர்க்கப்பட்டது. அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டது. திரைப்படப்பிரதியை கல்லறையில் புதைத்து விட்டு தப்பியோடினார். பிறகு அது தோண்டி எடுக்கப்பட்டு பல விருதுகளை வென்றது. அவ்வாறான உயிராபத்தை அனுபவித்த இயக்குநர்கள் கூட தம்முடைய சிரமங்கள் குறித்து பொதுவில் புலம்புவதில்லை.

நேரம் கருதி 'நாளைய சினிமா' பற்றி இன்னொரு சமயத்தில் பேசுவோம். ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் கலாசாரம், அடையாளம், கலை, அரசியல் பிரதிபலிக்கக்கூடிய திரைப்படங்களை குறைந்த சமரசங்களுடன் நேர்மையான உருவாக்க முயன்றாலே போதும். அது உலகத்தரத்தில் மதிக்கப்படும் சினிமாவிற்கான முயற்சியாக இருக்கும். அதுதான் நாளைய சினிமாவிற்கான நம் கனவாக இருக்க முடியும். (நாளைய சினிமா பற்றி எஸ்.ரா பேச விரும்பியதை அவரது தளததில் வெளியிடுவார் / வெளியிட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.)

பாலுமகேந்திரா, நேற்றைய சினிமா பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்ட பிறகு, (இன்றைய சினிமா பற்றி உங்களுக்கே தெரியும், நான் சொல்ல வேண்டியதில்லை) கருத்தரங்கின் தலைப்பான 'நாளைய சினிமா' -விற்கு வந்தார். அதுதான் இந்த நிகழ்வின் ஹைலைட்டாகத் தோன்றுகிறது.

'நாளைய சினிமா' பற்றி நான் எதுவும் பேசப்போவதில்லை. செய்துகாட்டப் போகிறேன். ஒரு படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். ஜூலை மாதத்தில் வெளிவரலாம். அதுவே 'நாளைய சினிமா' பற்றிய எனது செய்தி.

'சினிமா ரசனை' என்னும் விஷயத்தை 11வது,12வது வகுப்பு கல்வித்திட்டத்தில் வாரத்திற்கு ஒர வகுப்பு வருமளவிற்காவது இணைக்கலாம். எவ்வாறு படம் எடுப்பது என்பதை விடவும், ஒரு சினிமாவை எவ்வாறு பார்ப்பது என்பது முக்கியமானது. சினிமா ரசனை வளர்ந்தால்தான் நல்ல சினிமா உருவாகும் சூழல் உருவாகும். இதை சில ஆண்டுகளுக்கு முன்பே திரையுலகம் கலைஞருக்கு எடுத்த பாராட்டு விழாவில் சொன்னேன். இதுவரை செயல்படுத்தப்படவில்லை.

'ஓர் ஓவியமோ, நாடகமோ, நாவலோ, சினிமாவோ.. எந்தவொரு கலைப்படைப்பாக இருந்தாலும், இதற்கு முன்னால் அது ஆயிரம் முறை செய்யப்பட்டிருந்தாலும் சரி, அதற்காக சோர்வடையாமலும் அதற்காக அதிலிருந்து ஒதுங்கிப் போகாமலும். நீ மீண்டும் அதை செய்ய வேண்டும். உன்னால் எப்படி அதை செய்ய முடிகிறது என்பதில்தான் விஷயம் இருக்கிறது.

இன்ஸ்பிரேஷன், காப்பி என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் சத்யஜித்ரே, அகிரா படங்களை பார்த்து வளர்ந்தவன். அவர்களின் நுட்பம் என் ஜீனிலேயே உள்ளது. என் படைப்பிலும் அது வெளிவரும். அதைத் தவறாக புரிந்து கொள்கிறவர்களைப் பற்றி நான் கவலை கொள்வதில்லை.

நல்ல இலக்கியங்களைத் தேடி வாசியுங்கள். நான் எனது பயிற்சி கல்லூரியில் மாணவர்கள் நவீன இலக்கியத்திலிருந்து தினமும் ஒரு சிறுகதையை வாசிப்பதை கட்டாயமாக்கியுள்ளேன். வாசித்த பின்பு புத்தகததை ஓரமாக வைத்து விட்டு 'உன் மொழியில் அந்தச் சிறுகதையை எழுது' என்பேன்.

உலக சினிமா நிறைய பாருங்கள். ஷாப்பிங் கட்டிடங்களில் காய்கறி வாங்கும் போது கூடவே உலக சினிமா டிவிடியையும் வாங்குமளவிற்கான சூழல் நிலவுகிறது. ரூ.30/-க்கு உலக சினிமா கிடைக்கிறது. அதற்காக நான் பைரசியை ஆதரிப்பதாக இதைத் திரிக்கக்கூடாது. அப்படியே இதற்காக என்னை சிறையில் அடைத்தாலும் எனக்கு கவலையில்லை.

எடிட்டர் லெனின் திரைத்துறையில் அதிகார வர்க்கம் ஏற்படுத்தி வைத்திருக்கும் அபத்தமான விதிகளைப்பற்றி விளாசித்தள்ளினார். "நல்ல சினிமா வருவதற்கு பெரும் தடையாக இருப்பது ஸ்டார் நடிகர்களே. அவங்களை முதல்ல ஒழிக்கணும். மன்றங்களை ஒழிக்கணும். ஒரு படத்துக்கு எட்டு பிரிண்ட் போட்டதான் உள்ளே வர முடியும்னு சொல்றத விட்டு ஒரு பிரிண்ட் போட்டாக்கூட வரணும்னு விதி ஏற்படுத்தணும். சினிமா பற்றி தெரியாதவன்லாம் கமிட்டில ஒக்காந்திருக்கான். அதையெல்லாம் ஒழிச்சுக்கட்டிட்டு சினிமா பத்தி தெரிஞ்சவன போடணும். அப்பத்தான் நாளைய சினிமா உருப்படும.

பாரதி திரைப்படத்தின் இயக்குநர் ஞானராஜசேகரன் பேசியது ரொம்பவும் தர்க்கரீதியாக இருந்தது.

"நன்றாக உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தை எல்லாத் தரப்பு மக்களும் பார்த்து அது பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாகணும்னு ஏன் எதிர்பார்க்கறீங்க? மேற்கத்திய நாடுகள்ல தன் படத்தோட ஆடியன்ஸ் யாருன்னு அவன் நல்லாப் புரிஞ்சு வெச்சிருக்கான் அவங்க பார்த்தா அவனுக்குப் போதும்.

இன்னொன்னு்: ஸ்கிரிப்ட்டுக்கு எவ்ள பட்ஜெட் தேவைன்றதை அந்த ஸ்கிரிப்ட்தான் தீர்மானிக்கணும். வெஸ்டர்ன்ல அப்படித்தான் செய்யறாங்க. இந்த ஸ்கிரிப்ட்டுக்கு இவ்ளதான் செலவு செய்யணும்னு கறாரா தீர்மானிக்கிறாங்க. ஒரு தயாரிப்பாளர் என் கிட்ட வந்தார். நான் வெச்சிருந்த கதையை சொல்லி 'மூணு கோடி பட்ஜெட்' செலவாகும்ணேன். அவர் ' நான் ஏழு கோடிக்கு குறைஞ்சு படம் புரொடியூஸ் பண்றதில்லை'ன்கிறார். எந்திரன் போன்ற உருப்படியில்லாத திரைப்படங்களுக்கு 200 கோடி செலவு செய்ய தயாரா இருக்காங்க. நான் பெரியார் படம் செஞ்சப்ப மூணு கோடி ரூபாக்காக சிரமப்பட்டேன். அந்தக்காலத்தோட சூழல படத்துல கொண்டு வரணும்னா அந்தந்த பிராப்பர்ட்டிகளை கொண்டு வரணும். அது தயாரிப்பாளர்களுக்கு புரியலை.'.

தென்மேற்கு பருவக்காற்று இயக்குநர் சீனுராமசாமியும் படம் உருவாக்குவதில் தம்முடைய சிரமங்களைப் பற்றி பேசினார். 'சிறு விவசாயிகள் போலத்தான் குறைந்த பட்ஜெட்டில் நல்ல படம் உருவாக்கவறங்க நெலமையும் இருக்கு. தாயை மையப்படுத்தி என் ஸ்கிரிப்ட் இருந்ததால  நெறைய தயாரிப்பாளர்கள் ஒத்துக்கலை. ஸகிரிபட்டை மாத்துங்கன்றாங்க. சில ஏமாற்று வேலைகள் செஞ்சுதான் ஒரு நல்ல சினிமாவை உருவாக்க வேண்டிய துரதிர்ஷ்டமான சூழல் இங்க இருக்கு.70 தியேட்டர்களை கைல வெச்சிருக்கறவங்கதான் இன்னிக்கு சினிமாவோட தலைவிதியை தீர்மானிக்காறங்க'.

ஜேபி கிருஷ்ணா சினிமாவில் ஒளிப்பதிவு என்கிற விஷயம் தொடர்பாக பல சுவாரசியமான விஷயங்களை பொறுமையாக சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அப்போதே நேரமாகியதால் பொறுமையிழந்த பார்வையாளர்கள் தங்களின் அசெளகரியத்தை வெளிப்படுத்த முடித்துக் கொண்டார். இதன் காரணமாகவே சமுத்திரக்கனி, பிரபுசாலமன் போன்றோர் அதிகம் பேசவில்லை. டிராஸ்கி மருது ஒளிப்பதிவாளர்களை முதன்மைப்படுத்தி பேசினார். 'அவர்தான் உருவாகிற சினிமாவை முதலில் பார்க்கிறார்'. (லிங்குசாமி பேசும் போது சினிமாவை முதலில் பார்ப்பது இயக்குநர்தான் என்றார். எஸ்.ரா பேசும் போது ஸ்கிரிப்ட் ரைட்டர்தான் என்றார்). இதுவரை உருவாக்கப்பட்ட தமிழச்சினிமாக்களில் 'தேவர் மகன்'தான் ஆகச்சிறந்த, முழுமயான படம். அதை உருவாக்கின பரதன் ஏன் இங்கு வெற்றி பெற முடியவில்லை?'

()

ஆரமபத்தில் சொன்னதுதான். தமிழ் சினிமா உருப்பட இன்னும் பத்தாண்டுகளுக்கு வழியில்லை. ஏதாவது அதிசய அலை அடித்தால்தான் உண்டு. பாலுமகேந்திரா குறிப்பிட்டதைப் பற்றி மாணவப்பருவத்திலிருந்து சினிமா ரசனையை வளர்த்தெடுக்க வேண்டும். மக்களின் ரசனை மாறினால் அது நல்ல சினிமா உருவாக வழிசெய்யும். தயாரிப்பாளர்கள் எவரும் மோசமான சினிமாவைத்தான் உருவாக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கவில்லை. லாபம்தான் அவனுடைய குறிக்கோள். நல்ல சினிமா மூலம் அது நிகழுமென்றால் அதைததான் அவன் செய்வான். அந்த சூழ்நிலையை பார்வையாளர்களால்தான் உருவாக்க முடியும். மறுமறுபடியும் ஒரே வார்ப்பில் எடுக்கப்படும் லாபநோக்குத் திரைப்படங்களை - சினிமா மீது அடிப்படை ஆர்வமுள்ளவர்களாவது - புறக்கணித்து அவற்றைத் தோற்கடிக்க வேண்டும். ஆரோக்கியமான பொழுதுபோக்குத் திரைப்படங்கள் உருவாகும் அதே வேளையில் இணைக்கோடாக மாற்றுத்திரைப்படங்களு்ம் ஒருபுறம் உருவாகும் சூழல்தான் 'நாளைய சினிமா'விற்கான அடையாளமாக இருக்க முடியும் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம்.


 suresh kannan

Monday, December 20, 2010

நாஞ்சில் நாடனுக்கு சாகித்ய அகாதமி விருது


தமிழிற்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்படும் பெரும்பாலான சமயங்களில் அது ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தேர்வுகளின் பின்னேயுள்ள அரசியலை நினைத்து கசப்பையுமே தரும். இங்குள்ள பட்டியலை ஒரு முறை பார்த்து நீங்களும் அதை உணரலாம்.

ஆனால் இந்த முறை அது மகிழ்விற்கான தருணம். அசலானதொரு இலக்கியப் படைப்பாளியான நாஞ்சில் நாடனுக்கு  இந்த வருட சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துகள்.


நாஞ்சில் நாடன் இணையத் தளம்


suresh kannan

Wednesday, November 10, 2010

என்கவுண்ட்டர் கொலைகள்: ஒளிந்திருக்கும் அரசியல்


கோவையில் குழந்தைகளை கடத்திக் கொன்றதாக சந்தேகிக்கப்பட்ட, குற்றம் நீதித்துறையால் இன்னும் ஊர்ஜிதமாகாத நிலையில், வேன்டிரைவர் மோகன்ராஜ், காவல் துறையினரால்  'கொலை' செய்யப்பட்டதைத் தொடர்ந்து என்கவுண்ட்டர் மீதான விவாதங்கள் மறுபடியும் துவங்கியிருக்கின்றன. மோகன்ராஜின் மரணம் முன்னமே கச்சிதமாக திட்டமிட்டப்பட்டது என்பது 'ஊரறிந்த ரகசியமாக' அனைவருக்குமே தெரிந்திருக்கிறது.

தங்கள் மீது பல குற்ற வழக்குகளை பாக்கி வைத்துள்ள ரவுடிகளும் அவர்களின் பின்னணயில் உள்ள அரசியல்வாதிகளுமே கம்பீரமாக உலா வரும் போது வழக்கு விசாரணையின் துவக்கத்திலேயே ஒரு வேன் டிரைவரை காவல் துறையினர் சுட்டுக் கொல்வதற்கு ஏன் இத்தனை அவசரம் காட்டியிருக்கின்றனர்? பதில் வெளிப்படையானது.

1) 'மைனாரிட்டி அரசை' தொடர்ந்து குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் சமீபத்திய குற்றச்சாட்டு, 'குழந்தைகள் கடத்தல் வழக்கில் காவல் துறையினர் மென்மையான போக்கை கடைப்பிடிக்கின்றனர். கையலாகாத மைனாரிட்டி அரசும் இதை வேடிக்கை பார்க்கிறது. சமீபத்தில் கடத்தப்பட்ட பள்ளிச் சிறுவனொருவன் பணம் தரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது, காவல்துறையின் திறமைக்கு ஒரு பின்னடைவு' என்பது போல் ஜெ-வின் விமர்சனங்கள் அமைந்தன. (பணம் தர அனுமதிக்கப்பட்டு பின்னர் கடத்தல்காரர்களை பிடித்த விஷயத்தில் காவல்துறையினர் சாமர்த்தியமாக இயங்கியதாகவே நான் நினைக்கிறேன்). ஜெவின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளுங்கட்சியின் அதிரடியான பதிலடியாகவே இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும்.

2) சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், மக்களின் அதிருப்தியிலிருந்து தப்பிக்கவும், திசை திருப்பவும், குழந்தைகளைக் கொன்றதாக சந்தேகிக்கப்படுபவர்களின் மீது மக்களிருக்கும் ஒட்டுமொத்த வெறுப்பை ஓட்டுக்களாக மாற்றி அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ளவும், மேலே சொன்னது போல் எதிர்க்கட்சியினர் வாயை அடைக்கவும்.. என ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்க திட்டமிட்டிருக்கிறது ஆளுங்கட்சி.

சரி. இந்த என்கவுண்ட்டர் கொலைகள் மிக அரிதான சமயங்களில் அவசியமா, அல்லது முற்றிலுமே தவிர்க்கப்பட வேண்டியதா?. மோகன்ராஜ் மரணத்தை மாத்திரமே முன்னிட்டு 'என்கவுண்ட்டர் கொலை' எனும் விஷயத்தை ஒட்டுமொத்தமாக விவாதிப்பது சரியாகாது.

என்கவுண்ட்டர் கொலைகள் சரியே என பொதுமக்களில் பலரும், அப்பட்டமான மனித உரிமை மீறல் என மனித உரிமை ஆர்வலர்களும், காவல்துறையே தண்டனை தர முடிவு செய்து விட்டால் நீதித்துறை எதற்கு என்ற கேள்விகளும் புறப்படுகின்றன. இதுதான் சமயமென்று முற்போக்குச் சாயத்தை முகத்தில் அப்பிக் கொண்டு 'என்கவுண்ட்டர் கொலைகளுக்கு' எதிரான போக்கில் ஆவேசமாக எழுதப்படும் சில இணையப் பதிவுகளையும் காண்கிறேன். கொலைகாரனின் (?!) அழிவை இனிப்புடன் கொண்டாடின பொதுப்புத்தியை சாடின பதிவுகளையும் இந்தக் கொலையை ஆவேசமாக வரவேற்ற பின்னூட்டங்களையும் காண்கிறேன்.

இதில் எது சரி, எது நியாயம்? எது தவறு, எது அநியாயம். என்னுடைய இரண்டு நயா பைசாக்கள்.

கெளதம் மேனனின் 'காக்க காக்க' திரைப்படத்தின் துவக்கக் காட்சிளுள் ஒன்று. இளம் சிறுமிகளை குரூரமாகக் கற்பழித்து குதறிப் போடுவதை வழக்கமாகக் கொண்ட ஒரு ரவுடியை மறைந்திருந்து ஒரே ஒரு துப்பாக்கிக் குண்டால் வீழ்த்துவார் காவல்துறை அதிகாரியான ஹீரோ சூர்யா. 'இவனையெல்லாம் கைது பண்ணி பெட்ரோல் போட்டு ஜீப்ல கூட்டிக்கிட்டு போயி, கோர்ட்ல நிறுத்தி, சாப்பாட்டு போட்டு... அரசாங்கத்துக்கு எவ்ள செலவு. இப்பப்பாரு அம்பது ரூபால ஒரே புல்லட்ல வேலை முடிஞ்சது".

இதை நிச்சயம் நம்மில் பெரும்பாலோனோர் அப்போது கைத்தட்டி ரசித்திருப்போம். கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு. சாமி.. என்று  பெரும்பாலான போலீஸ் ஹீரோ படங்களில் வரும் என்கவுண்ட்டர் கொலைகளை அதற்கேயுரிய உணர்ச்சிகரமான மனநிலைகளில் நாம் கொண்டாடி ஆதரித்து வந்திருக்கிறோம். ஏன், புராணக் கதாபாத்திரங்களில் தீமையை செய்யும் அரக்கர்களின் அழிவை பண்டிகையாக கொண்டாடுவதிலிருந்து இந்த மனநிலை நம்முள் காலம் காலமாக ஊறிப் போயிருப்பது வெளிப்படை.

இதுதான் கோவை உள்ளிட்ட பெரும்பாலான தமிழக மக்களின் கொண்டாட்ட மனநிலையாக வெளிப்பட்டிருக்கிறது. வேறெங்கோ விபத்தில் இறந்து போகும் குழந்தைக்காக ஒரு உச்சுக்கொட்டலில் முடிந்து போகும் நம் அனுதாபம், நம் பக்கத்திலேயே விளையாடி நாம் பெளதீகமாக தொட்டு மகிழ்ந்த குழந்தையெனில் அழுகையாகவும், ஆத்திரமாகவும் குற்றவாளி தண்டனை பெற்ற போது ஆசுவாசமாகவும் நீட்சி கொள்ளுமல்லவா? அந்த நிலையில்தான் கோவை மக்களின் பட்டாசு வெடித்தல்களையும், இனிப்பு பரிமாறல்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹீரோ - வில்லன், என்று எல்லாவற்றையுமே கறுப்பு - வெள்ளைப் பிரச்சினைகளாகவே புரிந்து கொள்ளும் பொதுப்புத்தி சமூகம், நாணயங்களுக்கு இரண்டு பக்கங்கள் மாத்திரமல்ல பல பக்கங்களும் இருக்கலாம் என்கிற தெளிவை அடைவதற்கு அறிவுசார் சமூகம் அவர்களுடன் தொடர்ந்து உரையாடுவது அவசியமானது. மோகன்ராஜின் மீதான குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், அவரை 'கொலையாளி சுட்டுக் கொலை' என்று ஊடகங்கள் தலைப்புச் செய்தியுடன் அதை நிச்சயப்படுத்தி தீர்ப்பெழுதுவதும் பொதுமக்களும் இந்தப்பிரதிகளை மேலோட்டமாகவாகவே அணுகி மகிழ்வதும் நிச்சயம் சரியானதல்ல. காவல்துறையால் கொல்லப்பட்ட நபர், ஒர் அப்பாவி என்று பின்னதான விசாரணையில் -ஒருவேளை நியாயமான விசாரணையில் அப்படி நிகழ்ந்தால் - ஆனால் அப்படி நிகழ வாய்ப்பில்லை என்றே நம்புகிறேன் - தெரியவந்தால் இந்தக் கொலையை கொண்டாடின நாம் நம் முகத்தை எங்கே வைத்துக் கொள்வோம்? 'யாரைக் கொல்லலாம், பராபாஸ் திருடனையா, அல்லது தன்னை தேவகுமாரன் என அழைத்துக் கொள்ளும் இவனையா? என்ற கேள்விக்கு ஜெருசலேத்து மக்கள் 'இயேசுவே கொல்லப்பட வேண்டும்' என்று மதவெறியுடன் கூக்குரலிட்டனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் பொதுச் சமூகத்தில் நீடிக்கும் இந்த mob psychology -ல் இருந்து நாம் ஒவ்வொருவரும் விடுபட வேண்டியது அவசியம். பல சமயங்களில் ஆயுதங்கள் மாத்திரமே நம் கண்ணுக்கு வெளிப்படையாய் தெரிகின்றன. ஆயுதங்களுக்கு பின்னாலுள்ள கைகளைப் பற்றி நாம் உரையாடுவதில்லை.

இது ஒருபுறம். ஆனால் இன்னொரு புறத்தில் மிக அரிதான சமயங்களில் தவிர்க்கவே முடியாத சூழலில் இந்த மாதிரியான என்கவுண்ட்டர் கொலைகள் அவசியமானவையே என்று நான் நினைக்கிறேன்.

ஊரே அறிந்த ஒரு ரவுடி இருக்கிறான். அவன்தான் பல அப்பாவிகளை துன்புறுத்துகிறான், கொலை செய்கிறான். மிரட்டுகிறான், கற்பழிக்கிறான் என்று பொதுமக்கள், காவல்துறை உள்ளிட்ட பலருக்கும் தெரிந்தேயிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன ஆகிறது? கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும் தன்னுடைய அரசியல் பலத்தின் மூலம் சில நாட்களிலேயே வெளியே வந்து விடப் போகிறான். அட! சிறையிலேயேதான் இருக்கட்டுமே. சிறை என்பது குற்றவாளிகளுக்கான தண்டனைக்கூடம் என்பது அபூர்வமாக குற்றம் செய்து சிறைக்குப் போகிறவர்களுக்குத்தான். இதிலேயே ஊறிப்போனவர்கள், அரசாங்கத்தின் செலவில் சாப்பிட்டுக் கொண்டு, பாதுகாப்பாக இருந்து கொண்டு அங்கிருந்தே தம்முடைய சாம்ராஜயத்தின் நிழலான சமாச்சாரங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். கைது செய்ப்படும் ஒவ்வொரு முறையும் காவல்துறையே இவன் மீதான குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபித்தாக வேண்டும். பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் பல ஆண்டுகளாக தீராத தலைவலியாக இருக்கும் இவனை சாகடித்தால்தான் என்ன? காவல்துறையால் ஒன்றும் செய்ய முடியாமலிருக்கும் நிலையில், பாதிக்கப்படும் பொதுமக்களே கூட ஒன்று கூடி அவனை கொன்று போட நினைப்போமா, மாட்டோமா?.

குற்றவாளிகளை சாகடிப்பதை விட அதற்கான சமூகக் காரணங்களை ஆய்வது, அவர்களை  அதிலிருந்து மீட்டு அவர்களின் வாழ்க்கையை புனரமைப்பது, குற்றவாளிகளின் பின்னணயில் இயங்குபவர்களை அடையாளம் காண்பது...போன்ற இதனுடன் தொடர்பான கேள்விகள் எல்லாம் சரிதான். (பல சமயங்களில் இம்மாதிரியான முற்போக்கு சிந்தனைகள் வெறும் பாவனைகளாகவே அமைந்துவிடுவது துரதிர்ஷ்டம்). அவைகளுக்கான முதிர்ச்சியை அடைய இன்னும் நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. பயிரின் முளையிலிருந்தே இந்தப் பிரச்சினையை ஆராய வேண்டும். இதற்கு இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும் பட்சத்தில் தற்காலிகமான தீர்வாக, வேறு வழியில்லாத சூழலில் என்கவுண்ட்டர் கொலை நிகழ்வுகள் அவசியமென்றே நான் கருதுகிறேன். அரிதிலும் அரிதான வழக்குகளுக்கு நீதித்துறையால் மரணத்தண்டனை வழங்குவது போல. 

இந்த மாதிரியான ரவுடிகள், அரசியல்வாதிகளின் ஆயுதங்கள் மாத்திரம்தானே? என்று சிலர் விவாதிக்கலாம். சமயங்களில் சமூகத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய அபாயமான ஆயுதங்களை மக்கள் நலன் கருதி நாம் அழிப்பதில்லையா?

இவர்கள் குற்றவாளிகளா, அல்லவா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீதித்துறையே, காவல்துறையோ, அரசியல்வாதிகளோ அல்ல என்பது சிலரின் வாதம். சரிதான். ஆனால் நம்முடைய தேசத்தின் சமகால நீதித்துறையின் லட்சணம் பற்றி நமக்கே தெரியும். ரயிலில் முறையான பயணச்சீட்டு இல்லாதவர்களிலிருந்து தேர்வில் காப்பியடித்து பிடிபடுபவர்கள் வரையான குற்றங்களில் ஈடுபடுபவர்களில் நீதிபதிகளும் அடக்கம் என்பதை அதிர்ச்சியுடன் நாம் செய்தித்தாள்களில் வாசித்துக் கொண்டுதானேயிருக்கிறோம். 'என்னால் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாத அளவிற்கு மனஉளைச்சலை ஏற்படுத்துகிற மிரட்டல்களை சந்திக்கிறேன்' என்று ஒரு நீதிபதியே வெளிப்படையாக புலம்புமளவிற்கு நிலைமை அழுகிக் கிடக்கிறது. கிட்டத்தட்ட தகரடப்பா போல உள்ள அரசு பஸ், எவ்வாறு ஒரு தர்மநியாயத்திற்கு கட்டுப்பட்டு நம்முடைய ஊருக்கு நிச்சயம் சென்று சேர்ந்து விடும் என்கிற நம்பிக்கையில் ஏறி அமர்கிறோமோ, அவ்வாறே இந்தியாவின் நீதித்துறையும். நேர்மையுடன் செயல்படும் சில நீதிபதிகளினாலேயே அந்தத் துறையின் மீதான நம்பிக்கை இன்னும் நமக்கு ஒட்டிக் கொண்டிருக்கிறது.

என்கவுண்ட்டர் கொலைகளை எதிர்த்து எழுதும் சில பதிவர்கள், நீதித்துறையினரிடம் முடிவை விட்டுவிடாமல் காவல் துறையினரே தண்டனையை கையில் எடுத்துக் கொள்வதில் உள்ள அநியாயத்தை ஆவேசமாக குறிப்பிட்டுள்ளனர். குழந்தைகள் கொலை செய்யப்பட்டனர் என்பதால்தான் பொதுப்புத்தி இத்தனை ஆவேசமாக என்கவுண்ட்டரை ஆதரிக்கிறதாம். இந்தக் கொடுமைகள் இவர்கள் வீட்டில் நிகழ்ந்தாலும் கூட இவர்கள் என்கவுண்ட்டர் மனித உரிமை மீறல்களை ஆதரிக்க மாட்டார்களாம்.

அடடே!  உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.

யாராவது தம்மை லேசாக திட்டி பின்னூட்டமிட்டால் கூட கொலைவெறித் தாக்குதல்களுடன் நீட்டி முழக்கி பதிவிட்டு ஒன்றுக்கு நூறாக பதிலுக்கு திட்டிய பிறகே ஆசுவாசமடையும் இந்த முற்போக்கு போலிகள், இந்தச் சமயங்களில் மாத்திரம் ஒழுங்கு பிள்ளை கிழங்குத் தோலாக, 'நீதித்துறையின்' மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுவது சுத்த அயோக்கியத்தனமாக உள்ளதா, இல்லையா என்பதை அவர்களது மனச்சாட்சியிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும். நம் வீட்டில் இதெல்லாம் நிகழாது என்கிற பொதுவான குருட்டுத் தைரியமே இப்படி அவர்களை எழுத வைக்கிறது.

இந்த என்கவுண்ட்டர் கொலைகள் நாளைக்கு நமக்கே நிகழலாமாம். உள்ளுக்குள் தயிர்வடைகளாக இருந்து கொண்டு வெளியில் தம்மை புரட்சி வீரர்களாகக் கருதி வெளிப்படுத்திக் கொள்கிறவர்களின் கற்பனை அபாரமானதுதான். பெரும்பான்மையான சமயங்களில் அதிகாரத்தின் வேட்டை நாய்களாக உள்ள காவல்துறையினரின் மனித உரிமை மீறல்களையும், காவல் நிலையத்திற்குச் செல்ல நேரும் அப்பாவி பொதுஜனம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிற அவமரியாதைகளையும் அசெளகரியங்களையும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம்தான் என்றாலும், என்கவுண்ட்டர் என்பதெல்லாம் பெரிய வார்த்தை பாஸூ. அவை தயிர்வடை தேசிகன்களுக்கெல்லாம் நிகழும் என்று பூச்சாண்டி காட்டுவதெல்லாம் அதீதம். அதிகாரத்தின் ஒப்புதலும் தலையசைப்புமில்லாமல் என்கவுண்ட்டர் போன்ற சமாச்சாரங்களை காவல்துறையினர் கையில் எடுக்க முடியாது. அவ்வகையில் இம்மாதிரியான பயமுறுத்தல்கள் அநாவசியம் என்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

அப்பாவிகளின் மீதும், குற்றம் நிருபீக்கப்படாத அல்லது நிருபீக்கப்பட்ட நபர்களின் மீது அரசியல் காரணங்களுக்காக நிகழ்த்தப்படும் (சமீபத்திய உதாரணமான மோகன்ராஜ் போன்றவர்கள்) என்கவுண்ட்டர் கொலைகளை நான் ஆதரிக்கவில்லை, மாறாக பல ஆண்டுகளாக சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் குண்டர்களை வேறு வழியில்லாத சூழலில் - பெரும்பாலான முதிர்ச்சியான நாகரிகமான சமூகம் அமையும் வரையாவது - கொல்லப்படுவது அவசியம் என்பதே இப்பதிவின் மூலம் நான் சொல்ல வருவது.

இம்மாதிரியான வன்முறையில் ஊறிப்போன ரவுடிகளை ஒரு புல்லட்டில் சாய்த்துவிடலாம். சரி. ஆனால் இவர்களின் பின்னணியில் இதற்கு மூளையாகச் செயல்படும் வெள்ளைச் சட்டை ரவுடிகளை யார் தண்டிப்பது. நியாயமாக இவர்கள்தான் முதலில் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தையும் அதிகாரத்தையும் கையில் வைத்திருப்பவர்களை யார் தண்டிப்பது. அவர்களிடம் அதிகாரத்தை தந்தவர்கள் என்ற முறையில் ஒருவகையில் நாமும் குற்றவாளிகளே. இவர்களை என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ள நம்மிடம் ஒரே ஒரு ஆயுதமே உண்டு.

வாக்குச் சீட்டு.

suresh kannan

Thursday, October 14, 2010

இரண்டு எதிர்வினைகள்

ஏன் இணையததிற்கு எழுத வந்தோம் என்று யோசிக்கிற அளவிற்கு முன்னெப்போதுமில்லாத மனஉளைச்சலை சந்திக்கிற தருணததில் இதை எழுதுகிறேன். அன்றாட வாழ்வின் இயந்திரத்தனங்களும் அழுத்தங்களும் சலிப்பூட்டுவதுமான சமயங்களிலிருந்து இளைப்பாறுவதற்காகவும் நண்பர்களுடன் மகிழ்வாக உரையாடுவதற்காகவும்  என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவும்  இணையத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்திக் கொள்வதுதான் என்னுடைய பிரதான நோக்கமாக இருந்தது. ஒத்த அலைவரிசை ரசனையுள்ள  நண்பர்களையும் இனிமையாகப் பழகக்கூடிய பல நண்பர்களையும் தந்ததே இணையத்தின் என் ஒரே சம்பாத்தியம். எஸ்.ராவின் பாதிப்பில் உலக சினிமா மீது ஆர்வமேற்பட்டு அதைக் குறித்து தொடர்ந்து எழுதி அது குறித்தானதொரு பிரத்யேக அடையாளம் என் மீது ஏற்பட்டதே நிறைவானதாக இருக்கிறது. இதற்கு உச்சமாக எழுத்தாளர் ஜெயமோகன் என் வலைப்பதிவையும் (என் வலைப்பதிவை மாத்திரம் அல்ல) அவர் கவனித்து வாசிக்கும் சினிமா பதிவுகளில் ஒன்றாக குறிப்பிட்ட போதுதான் நான் எழுதி வருவதின் சீரியஸ்னஸே எனக்கு அழுத்தமாகப் புரிந்தது. (ஆனால் இதுவே சிலருக்கு காண்டை ஏற்படுத்தியிருக்கிறது என்பது பிறகுதான் புரிந்தது. ஜெயமோகனின் பிரம்மாண்ட ஆளுமையின் காரணமாகவே அவரை மூர்க்கமாக வெறுப்பவர்கள் அந்த பட்டியலில் என்னையும் இணைத்துக் கொண்டார்கள் போலிருக்கிறது.) இனியாவது இன்னும் அதிக அக்கறையுடனும் பொறுப்புடனும் எழுத வேண்டுமென்கிற உந்துதலை ஜெயமோகனின் குறிப்பு ஏற்படுத்தியது.

ஆனால் கல்லெறிந்து விட்டு ஓடிப்போகும், காரணமேயின்றி காழ்ப்பை வெளிப்படுத்தும் ஆசாமிகளால் பல சமயங்களில் நான் காயப்பட்டிருக்கிறேன். கூடிக் கும்மியடிக்கும், யாரையாவது நோண்டிக் கொண்டேயிருக்கும் இந்த ஈனப்பிறவிகளிடமிருந்து விலகிப் போனாலும் துரத்திக் கடிக்கும் இவர்களின் தொந்தரவு தாங்க முடியாததாக இருக்கிறது. சரி. நம்முடைய உழைப்பைச் செலுத்தி மேற்குறிப்பிட்ட நற்பெயரை சம்பாதித்து விட்ட ஒரே காரணத்திற்காக இவர்களுடன் மல்லுக்கட்டாமலேயே ஒதுங்கியிருந்து பார்த்துவிட்டேன்.

 சரி. அதையெல்லாம் பார்த்தால் முடியாது. இணையத்தில் இல்லையெனினும் சமூகத்திலும் இவ்வாறான மனிதர்களையும் நிகழ்வுகளையும் எதிர்கொண்டாகத்தான் வேண்டும். என்னை நுண்ணுணர்வு உள்ளவனாகவும் சமூகம் கட்டியமைத்தபடியான நாகரிகமானவாக அடையாளம் காட்டிக் கொள்ளவும் நடந்து கொள்ளவும்தான்  விரும்புகிறேன் என்றாலும் எனினும் ஒருவன் வேண்டுமென்றே மூர்க்கமாக வந்து மோதும் போது ஒதுங்கிப் போவதற்கு நான் மகான் அல்ல.

சமீபத்தில் எனக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை சில நண்பர்கள் அறியக்கூடும். அறியாதவர்களுக்காக சுருக்கமாக.

ரோசா வசந்த் என்கிற 'மல' ஆராய்ச்சியாளரும் (அதாவது தன்னைப் பற்றி ஆராய்கிறவர்) சிந்தனையாளரும் என்னுடைய இணையப் பயணத்தின் ஆரம்பம் முதலே பதிவுகளிலும் சமீபத்தில்  டிவிட்டரிலும்  என்னைச் சீண்டிக் கொண்டிருந்தனின் விளைவாக ஒரு மனநெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஆவேசமாகி சிறுகுறிப்பொன்றை எழுதினேன். (நான் திமிர்த்தனமாக எழுதிய டிவிட்களுக்கான பதிலது  என்று ரோசாவே ஒப்புக் கொண்டிருக்கிறார். திமிருக்கு திமிரைத்தான் பதிலாக அளிக்க முடியும்). அப்படி எழுதியதற்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 'அக்கப் போர் மனநிலையில் இல்லை. இரண்டொரு நாட்களில் எழுதுவேன்' என்றேன். உடனே டிவிட்டரில் நண்பர்களுடன் என்னுடைய உரையாடலைத் தொடர்ந்தேன். இவருக்கு பதிலளிக்கக்கூடிய உன்னதப் பணியில் ஈடுபடாமல் (உண்மையில் அது எனக்கு மனஉளைச்சலைத்தருகிற காரியம்) டிவிட்டரில் உரையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் இவருக்குக் கோபம் வந்துவிட்டது போலிருக்கிறது. எது அக்கப்போர், எது இளைப்பாறுவதற்கான உரையாடல்  என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் பல ஆண்டுகள் தொடர்பான விஷயங்களை மீள்நினைவு செய்து எழுத வேண்டுமென்றால் அதற்கான அவகாசமும் தேவை.

இதற்கு சற்றும் வாய்ப்பே தராமல், நாராயணன் இதுகுறித்து பஞ்சாயத்து பதிவொன்றை எழுதினார். ஒரு சமயத்தில் இணையத்தில் நான் பொறாமைப்படும் எழுத்துக்குச் சொந்தக்காரர் நாராயணன்தான் என்பதை அவரிடமே பொதுவில் முந்தைய சமயங்களில் தெரிவித்திருக்கிறேன். ஒரளவிற்கு நடுநிலைமையான நேர்மையான மனிதர் என்பது போல்தான் நாராயணன் குறித்த பிம்பம் என்னுள் இருந்தது. சுந்தர்-வசந்த் தாக்குதல் தொடர்பான சமயத்தில் இருபக்கமும் என்ன நடந்ததென்று தெரியாமல் அமைதி காத்ததாக சொன்னவர், என்னுடைய விஷயத்தில் மாத்திரம் உடனே எதிர்வினை பதிவு எழுதியது ஏன் என்பது புரியவில்லை.

'இத்தனை வருடங்களாக பெரும்பாலும் இலக்கியம், சினிமா குறித்து  மாத்திரமே எழுதி வருகிற ஒருவன், இணையத்தில் இதுவரை யாரையும் கடுமையாக எழுதாத ஒருவன், திடீரென்று ஏன் இப்படி ஒருவரைப் பற்றி கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறான்' என்று நாராயணன் சிறிது நேரமாவது யோசித்திருக்கலாம். அல்லது என்னையே தொடர்பு கொண்டு பேசியிருக்கலாம். ஆனால் 'சிந்தனையாளரின்' சகவாசமும் நட்பும்  கண்ணை மறைத்துவிட்டது போலிருக்கிறது.

சரி. அதுவும் ஒருவகையில் எனக்கு நன்மையே புரிந்தது. டிவிட்டர் சமூகத்தில் மாத்திரம் முணுமுணுக்கப்பட்டுக் கொண்டிருந்த இந்த சமாச்சாரம் பிளாக்கர் பரப்பிற்கு வெளியே வந்து பலரும் அறியக் காரணமாயிற்று. ஆனால் ஒருவகையில் நாராயணனின்  ஒருதலைபட்சமான பார்வையும் ரோசாவை ஏதோ திருவுரு ஆக்குகிற முயற்சியில் எழுதினதும்  எனக்குள் ஆயாசத்தை ஏற்படுத்தியது. இப்போது இது எந்த திசையில் போகும் என்பதைக் கூட என்னால் யூகிக்க முடிந்தது. உண்மையில் ரோசாவுடனான பூசலை நான் விளக்கி எழுதுவதாகச் சொல்லியிருந்த பதிவின் மூலம் முடித்துக் கொள்வதுதான் என் நோக்கமாக இருந்தது. ஆனால் நாராயணன் பதிவு தந்த ஆயாசத்தில் என் தற்போதைய நிலையை சுருக்கமாக எழுதி முடித்துக் கொண்டேன்.

உண்மையில் நான் கடுமையாக எழுதியதற்காக ரோசாவிடம் மன்னிப்பு கேட்கும் முடிவில் கூட இருந்தேன். இனியதற்கு வாய்ப்பேயில்லை. ரோசாவிற்கு டிவிட்டரில் எழுதிய குறிப்பில் கடுமையாக எழுதியதும் பஞ்ச் டயலாக் பேசியதும் அந்தச் சமயத்தின் தீவிரமான மனநிலையில், ரோசாவின் திமிரான பதிலுக்கு எதிர்வினையாக எழுதியது. அதற்கு பின்னணயில் ரோசா இத்தனை ஆண்டுகளாக என்னுள் ஏற்படுத்தியிருந்த மனஅழுத்த அடுக்குகளும் காரணம்.

ரோசாவிற்கு பதிலெழுவதாக நான் எழுதியிருந்ததை வாசித்த பல நண்பர்கள் அதைத் தொடராமலிருக்க என்னைக் கேட்டுக் கொண்டார்கள். 'ரோசா ஒரு வகையில் எதையும் தீவிரமான எல்லையில் குரோதத்துடன் அணுகுவார் என்றும் அவருக்கு ஒருவகையான உளப்பிரச்சினை உள்ளது என்றும் பொதுவெளியிலோ தனியான சந்தர்ப்பத்திலோ எவ்வித அவகாசமும் தராமல் தாக்கக்கூடியவர் என்றும் எச்சரித்தார்கள்.

இந்த மாதிரியான நிகழ்வுகளில் தொடர்புப்படுத்தி என் பெயர் இணையத்தில் அடையாளம் காட்டப்படுவதை நான் விரும்பவில்லை என்பதால் - சற்று மிகையாக சவடால் அளித்தாலும் - என் வழக்கப்படி மீண்டும் ஒதுங்கிப் போகவே விரும்பினேன்.

ஆனால்...

ரோசா அவருடைய வழக்கமான குரோத மொழிகளுடன்  என்னைப் பற்றி இன்று எழுதியிருக்கிறார். என் வாயிலிருந்து இன்னும் மேலதிக வார்த்தைகளைப் பிடுங்கி அதை தனக்கு சாதகமானதாக உபயோகப்படுத்திக் கொள்ளும் சூழலுக்காக அவர் காத்துக் கொண்டிருந்தார். இதனால்தான் என்னை 'ஆதாரம் ஆதாரம்' என்று துளைத்து எடுத்துக் கொண்டிருந்தார்.  (என்னுடன் தொடர்புடைய சம்பவங்களுக்கு பின்னால் வருகிறேன். ஆனால் ஒருவரை திட்டமிட்டு மூக்கில் குத்தி தாக்கி விட்டு அதற்கு தார்மீக ரீதியாக மன்னிப்பு கூட கேட்காமல் ஏதோ கிரிமினல் வக்கீல் போல் எதிர்வினையாற்றிய ரோசா ஒர்  அநாகரிக பேர்வழி என்று அதை இணையத்தில் அவதானித்த பலருக்கே தெரியும். இதுக்கு எதுக்கய்யா புண்ணாக்கு ஆதாரம்) அதிலிருந்து நான் தப்பித்துக் கொண்டவுடன். அவருக்கு கோபம் தலைக்கேறி விட்டிருக்கிறது. எனவே ஒரு குரோதமான பதிவின் மூலம் அதை  தீர்த்துக் கொள்ள முயன்றிருக்கிறார்.

ரோசாவை சைக்கோ என உணாச்சி வேகத்தில் நான் திட்டியதற்கு பஞ்சாயத்து செய்தவர்களும் கேள்வி கேட்டவர்களும் நடுநிலையான நண்பர்களும் மனச்சாட்சியோடு ரோசாவின் பதிவிற்கு எதிர்வினை புரிவார்கள் என நம்புகிறேன /  எதிர்பார்க்கிறேன்.

இனி என் முறை.  ரோசாவின் தொடர்ந்து அழுத்தம் தந்து கேட்டுக் கொண்டிருந்த படி அதற்கான விளக்கத்தை எழுதப் போகிறேன். இந்த மனநெருக்கடிக்கு எப்படியோ என்னைத் தள்ளிய ரோசாவின் சாமர்த்தியத்தைப் பாராட்டுகிறேன். இதில் அவருக்கு வெற்றிதான். வாழ்த்துகள். ரோசாவிற்கான விளக்கப்பதிவை எழுதுவதின் மூலம் எனக்கும் சற்று மனஅழுத்தம் குறையக்கூடும் என்பதையும் வெளிப்படையாகவே நேர்மையாக ஒப்புக் கொள்கிறேன்.  அந்தச் சூழலையும் சமத்காரமாக ஏற்படுத்தித் தந்ததற்காக அவருக்கு நன்றி.


அடுத்ததாக லக்கிலுக் என்கிற யுவகிருஷ்ணாவின் பதிவு.

இந்தக் கருமத்தையெல்லாம் புறக்கணித்து விட்டுச் செல்வதுதான் என்னுடைய முடிவாக இருந்தது.

நான் ஒருவரை எதிர்க்க வேண்டுமென்றால் அவருக்கு இருக்கக்கூடிய குறைந்தபட்ச தகுதி கூட இந்த ஆசாமியிடமில்லை. என் மீது இத்தனை வெறுப்பை உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு நேரில சந்திக்கும் சமயங்களில் எப்படி இந்த ஆசாமியால் ஹிஹி என இளிக்க முடிந்தது  என தெரியவில்லை. இதுதான் உண்மையில் இரட்டையான மனநிலை.

ஒர் அநாகரிக ஆசாமியை எனக்கு பிடிக்கவில்லை என்றால் அதற்குரிய இயல்பான முக வெளிப்பாட்டோடு அவரை மறுத்து ஒதுங்கி நடந்து கொள்வதுதான் முறையான, நோமையான செயல். அதைவிட்டு பல ஆதாயங்களுக்காக வெறுக்கும் நண்பர்களிடம் குழைவது, பிடிக்காத நபரோடு கலவி கொள்ள வேண்டியிருக்கிற பாலியல் தொழிலாளியின் நிலைக்கு ஒப்பானது. பாவம். அவர்களுக்காவது அதை மறுக்கக்கூடிய வாய்ப்பும் சந்தர்ப்பமும் இல்லை.

திராவிட மேடைகளில் பிரியாணிக்காகவும் காசுக்காகவும் மதுக்காகவும் ஆபாச மொழியில் எதை வேண்டுமானாலும் உளறக்கூடிய பேச்சாளர்களின் இணையவடிவம் இந்த ஆசாமி. ரோசாவி்ன் இன்னொரு வகையான குளோனிங் இவர். இந்த ஆசாமியிடமிருந்தும் நான் வெளிப்படையாக அறிவித்து ஒதுங்கிக் கொண்டாலும் அடிப்படை நாகரிகமேயின்றி தொடர்ந்து எதையோ உளறிக் கொண்டேயிருந்தார். இது போன்ற சில ஆசாமிகள் இதே வேலையாக உருப்படியாக எழுதுபவர்களையும் சீண்டி சீண்டி அவர்களின் சமநிலையைக் குலைப்பதை வேலையாகக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நானும் இந்தப் பதிவுமே ஓர் உதாரணம். அந்த வகையில் அவர்கள் வெற்றியடைந்திருக்கிறார்கள் என்பது துரதிர்ஷ்டவசமானதுதான்.

தமிழ் இணையம் / பதிவுகள் என்பது கீழ்த்தரமான வசவுகளால் பின்னூட்டங்களால் ஆனது என்பது போன்ற பொதுப் பிம்பத்திற்கு இம்மாதிரியான ஆசாமிகள்தான் காரணம். இணையத்தின் இந்த மோசமான அடையாளம் மாறுவதற்கு மற்ற பதிவர்களால் இவர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட வேண்டும் அல்லது திருத்தப்பட வேண்டும் என்பதையும் மற்ற நண்பர்களுக்கும் பொதுவானவர்களுக்கும்  ஒரு வேண்டுகோளாகவே முன்வைக்கிறேன். ஆனால் இம்மாதிரியான ஆசாமிகள்தான் இணையத்தின் பிரதிநிதிகள் என்பது மாதிரி தங்களின் செல்வாக்கைக் கொண்டு ஊடகங்களில் வெளிப்படும் போது அவமானமாக இருக்கிறது.

இந்த ஆசாமியைப் பொருட்படுத்தி இத்தனை எழுதியதே அதிகம். நண்பர் ஆசிஃப் பற்றி நான் கூகுள் பஸ்ஸில் எழுதியதையும் இந்த ஆசாமி குறிப்பிட்டிருக்கிறார். மரத்தடி குழும காலத்திலேயே ஆசிஃப் என் நண்பர் என்பதையும் அவருக்கும் எனக்குமான இந்த உரசல் வழக்கமானதுதான் என்பதையும் பஸ்ஸிலேயே விளக்கியிருக்கிறேன். ஆசிஃபும் இதை புரிந்து கொண்டு பெருந்தன்மையாக பதிலளித்திருந்தார். ஆனால் அதையும் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு இந்த நபர் உளறியிருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. எனக்கு நண்பர்களே கிடையாதாம். அடக்கஷ்டமே. தன்னுடைய ரசனைக்கு அலைவரிசைக்கு ஈடாக உள்ளவர்களை தேர்வு செய்து ஒரு சிறிய வட்டத்திற்குள் புழங்குவதும் ஆதாயங்களுக்காக எல்லோரிடம் பல்லை இளிப்பதும் ஒன்றா? நான் எழுதிய பதிவின்ஒட்டுமொத்த கான்டெக்ஸ்ட்டை புரிந்து கொள்ள முடியாமல் அல்லது புரிந்து கொள்ளாத பாவனையுடன்  இறுதிப் பகுதியில் தன் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டதின் காரணமாகவே நான் எழுதியதையெல்லாம் இம்மாதிரி வழக்கமாக எழுதுபவர்கள் போலவே திரி்த்து திரித்து எழுதுவதை என்னவென்பது. நான் விமாசனங்களை எதிர்கொள்வதேயில்லையாம். நேர்மையான விமர்சனமென்றால் உடனே அதை ஏற்றுக் கொண்டு பெரும்பாலான சமயங்களில் பதிலளித்திருக்கிறேன். இல்லையெனில் அது மேலதிக சர்ச்சையை வளர்க்குமென்றால் அதை அங்கேயே முறித்துவிட்டு ஒதுஙகிப் போவதுதான் என் வழக்கம்.இதனாலேயே என் பதிவின் பின்னூட்டங்களுக்கு கூட நான் பதிலளிப்பதில்லை. மெனக்கெட்டு என் பதிவை வாசிக்கும் நல்ல வாசகர்கள் கூட இதனால் வருத்தமடைந்திருக்கலாம்.

நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள்.

'எதற்குங்க இதுக்கெல்லாம் நேரம் வேஸ்ட் செய்துக்கிட்டு' 'இவங்களையெல்லாம் புறக்கணிப்பதுதாங்க நல்லது" 'அவங்க இப்படித்தான்' 'எதற்கு வம்பு' என்றெல்லாம் தயவுசெய்து பின்னூட்டங்களில் எழுதாதீர்கள். நான் மேலே குறிப்பிட்ட சில ஆசாமிகள் மாத்திரமில்லை. இது போல் இன்னும் பலர் இருக்கிறார்கள். அவ்வாறானவர்கள் சீண்டும் போது இயன்றவர்கள் உடனே வெளிப்படையாக அதைக் கண்டியுங்கள். நாம் நாகரிகமாக ஒதுங்கி ஒதுங்கிப் போகத்தான் இவர்களுக்கு குஷி கிளம்பி விடுகிறது. துரத்தி துரத்திக் கடிக்கிறார்கள். நான் இப்படி அமைதியாக இருந்ததனால்தான் இன்று 'மலப்புழு'வாகியிருக்கும் அவல நிலைக்கு ஆளாகியிருக்கிறேன். உடனேயே தக்க பதிலடி கொடுப்பவர்களிடம் இவர்கள் வாலை ஆட்டுவதில்லை என்பதையும் கவனியுங்கள்.

இனி ரோசாவிற்கான என் பதிலை போதுமான சாவகாசம் எடுத்துக் கொண்டு எழுதுவேன். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? வருகிறேன். இதன் மூலம் என் மீதும் சேறும் சகதியும் அவதூறும் வன்மமும் பட்டாலும் சரி.இதன் மூலம் இந்த நபருக்கு உளப்பிரச்சினைக்கு மேலதிக பாதிப்பேதும் ஏற்பட்டால் அதற்கு மூலக்காரணம் நானல்ல என்பதையும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். குரோதமான மொழியில் எழுதப்பட்டவைகளுக்கு அவரே அதிகம் விரும்பியபடி பதிலளிப்பதுதான் என் நோக்கமேயன்றி வேறொன்றுமில்லை.

இப்படி எழுதுவதில் எனக்கே ஒப்புதலில்லை என்றாலும் ஒரு முன்ஜாக்கிரதைக்காக இதைப் பதிவு செய்கிறேன். பொதுவெளிகளில், பதிவர் சந்திப்புகளில், நூல் வெளியீட்டு விழாக்களில் எங்காவது ஒருவேளை நான் தாக்கப்பட்டால் அதற்கு மேற்குறிப்பிட்ட ஆசாமிகளில் எவராவது நேரடி அல்லது மறைமுகக் காரணமாகயிருக்க்கூடும் என்பதையும் அந்தச் சமயத்தில் அதை காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்வேன என்பதையும் இங்கு குறிப்பிடுகிறேன். இதையும் சொல்லித் தொலைத்து விடுகிறேன். இதை ஒரு வேளை தவறான முறையில் பயன்படுத்துவேனோ என்கிற சந்தேகமெல்லாம் எவருக்கும் எழத் தேவையில்லை. அது நிச்சயம் நேர்மையானதாகவே இருக்கும்.

இன்னொன்று: இணையத்தின் பின்னூட்டங்களிலும் டிவிட்டர் சந்துகளிலும் என் பெயரை நேரடியாகவோ மறைமுகமாகவோ குறிப்பிட்டு  எழுதப்படும் தனிமனித தாக்குதல்களுக்கும் அதீத அவதூறுகளுக்கும் சைபர் கிரைமின் உதவியையும் நான் நாடக்கூடும. ஒருவகையில் ரோசா, யுவகிருஷ்ணா போல நேரடியாக மோதுபவர்களைக் கூட நான் மதிக்கிறேன். அதை விட்டு கோழைகள் போல் மறைவாக முணுமுணுத்துக் கொண்டிருப்பவர்களின் அரசியல் அசிங்கமாக இருக்கிறது.அவர்கள் அதை நிறுத்தி விட்டு எதுவென்றாலும் என்னிடமே உரையாடலாம்.சில நண்பர்கள் நகைச்சுவைக்காக என் பதிவுகளை கலாய்ப்பதை அதே நகைச்சுவையுடன்தான் அணுகியிருக்கிறேன் என்பதை பல நண்பர்கள் அறிவார்கள். சீரியஸான கேள்விகளுக்கும் அதே தீவிரத்தனத்தோடு சமயங்களில் அதன் கடுமையைக் குறைக்கும் பொருட்டு நகைச்சுவையாகவும் எதிர்வினை புரிந்திருக்கிறேன். விமர்சனத்தையே எதிர்கொள்ள மாட்டேன் என்பதெல்லாம் திரிபுவாதம்.

என் மின்னஞ்சல்: sureshkannan2005@gmail.com


தொடர்புடைய பதிவுகள்

வார்த்தைகளின் வன்புணர்ச்சி

கொட்டையெடுத்த கீபோர்ட் புளி!

காகிதக் கத்திச் சண்டைகளும் ஆயாசங்களும்


சுரேஷ் கன்ணன் என்கிற மலப்புழு

suresh kannan

Tuesday, October 05, 2010

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!

நன்றி தினமணி

ஏறத்தாழ 5 ஆண்டுகள் உழைப்பில் - 6 மில்லியன் டாலரில் (இன்றைய மதிப்பில் ரூ. 140 கோடி) "ஜெமினி பிலிம்ஸ்' உருவாக்கிய இந்தியாவின் பிரம்மாண்டமான படமான "சந்திரலேகா' 1948-ல் தமிழிலும் தொடர்ந்து ஹிந்தியிலும் வெளியானது. இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டது. படிப்படியாக 609 பிரதிகள் போடப்பட்டன. அமெரிக்காவிலும் திரையிடப்பட்டது, இடையிடையே ஆங்கிலத்தில் கதைச் சுருக்கத்துடன். இந்தியத் திரை வரலாற்றில் இவை எல்லாமே அப்போதுதான் முதல் முறை.

 தஞ்சாவூரில் "சந்திரலேகா' வெளியானபோது கூடுதலாக தன்னுடைய திரையரங்கிலும் வெளியிட விரும்பினார் மற்றொரு திரையரங்கின் அதிபர். தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர் என்ற உரிமையில் வாசனை நேரடியாகவே அவர் அணுகினார். வாசனோ மறுத்துவிட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம்: ""ஒரு சின்ன நகரத்தில் பல திரையரங்குகளில் படம் வெளியிடுவது நல்லதல்ல. யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது. நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. எல்லோரும் பிழைக்க வேண்டும் அல்லவா?''

 படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. படத்தின் வெற்றியில் எல்லோருக்கும் பங்கு தரப்பட வேண்டும் என நினைத்தார் வாசன். படத் தயாரிப்புக் குழு மேலாளரிலிருந்து படம் ஓடிய திரையரங்குகளில் டிக்கெட் கிழித்த தொழிலாளிகள் வரை எல்லோருக்கும் சிறப்பு ஊக்கப் பரிசு அளித்தது "ஜெமினி ஸ்டுடியோ'. "சந்திரலேகா' வரலாறானது. தொழில் தர்மத்துக்காக இன்றளவும் வாசன் நினைவுகூரப்படுகிறார்!

 ஏறத்தாழ ரூ.160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,200 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக "சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...

 வரலாறுதானா "சன் பிக்சர்'ஸின் "எந்திரன்'?

 நிச்சயமாக "எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

 மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள்; 4 காட்சிகள்; டிக்கெட் விலை ரூ. 250 எனக் கொண்டால்கூட முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. "சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான "கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை "எந்திரன்' உருவாக்கி இருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

 ஒரு தொழில் நிறுவனம் தன் புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்தி இப்படிச் சம்பாதிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீங்கள் கேள்வி கேட்கலாம். நியாயம்தான். தொழில் நிறுவனம்தான், புத்திசாலித்தனமாகத்தான் சம்பாதிக்கிறார்கள்; "வால்மார்ட்'டுக்கும் "கோகோ கோலா'வுக்கும் "ரிலையன்ஸ் ஃப்ர'ஷுக்கும்கூட இந்த நியாயம் பொருந்தும். ஆனால், நாம் அவர்களை ஆதரிக்கவில்லையே, ஏன்? அவர்களை எந்தக் காரணங்கள் எதிர்க்க வைக்கின்றனவோ அதே காரணங்கள்தான் "எந்திர'னையும் எதிர்க்கவைக்கின்றன.

 சென்னையில் 30-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் "எந்திரன்' வெளியாகி இருக்கிறது. ஆனால், ஆச்சர்யம் இது இல்லை. தமிழகத்தின் மிக சாதாரண நகரங்களில் ஒன்றான (தமிழகத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் தங்கிய மாவட்டத்தின் தலைநகரமும்கூட) புதுக்கோட்டையில்கூட 4 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இதுதான் நிலை.

 இந்தச் சூழல் இதுவரை ஒருபோதும் இல்லாதது. இந்தியத் திரையுலகம் முன்னெப்போதும் எதிர்கொண்டிராதது. ரசிகனுக்கு "எந்திரன்' படத்தைத் தவிர, வேறு எந்தப் படத்தையுமே பார்க்க முடியாத சூழலை ஏற்படுத்தி, தங்களது பணபலத்தாலும், அரசியல் செல்வாக்காலும் பெருவாரியான திரையரங்குகளில் தங்களது படத்தை மட்டுமே திரையிட வைத்திருக்கும் ஏகபோக மனோபாவம்.

 படம் வந்த சில நாள்களுக்குள் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வமே பரந்துபட்ட "எந்திரன்' பட வெளியீட்டுக்கான வியாபார சூட்சமமாக மாறியிருக்கிறது. பொதுவாக, எந்த ஒரு வெற்றித் திரைப்படத்துக்கும் அதிகபட்சம் 10 நாள்களுக்குத்தான் கூடுதல் விலையில் டிக்கெட்டை விற்க முடியும். நூறு நாட்கள் ஓடக்கூடிய ஒரு வெற்றிப் படம் ஓர் ஊரில் ஒரேயொரு திரையரங்கில் திரையிடப்பட்டால், முதல் 10 நாட்களில் பார்க்கும் ரசிகர்கள்தான் கூடுதல் கட்டணத்தில் படம் பார்க்க நேரிடும். எஞ்சிய 90 நாட்களில் படம் பார்க்கும் ரசிகர்கள் சாதாரண கட்டணத்திலேயே படம் பார்த்துவிடலாம். ஆனால், ஒரு திரையரங்குக்குப் பதில் ஊரிலுள்ள 10 திரையரங்குகளிலும் படத்தை வெளியிட்டால், 100 நாள்களும் படத்தைக் கூடுதல் கட்டணத்திலேயே ஓட்டியதற்குச் சமம். இதுதான் "எந்திரன்' அறிமுகப்படுத்தி இருக்கும் "ஏகபோக' (மோனாப்பலி) வியாபார சூட்சமம்.

 தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிப்பாளர்களைப் பாதுகாப்பதற்காக ஒரு எழுதப்படாத விதியை அறிவித்தது. அதன்படி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் போன்ற ஆரம்ப எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதாநாயகர்கள் நடித்த திரைப்படத்தை தீபாவளி, பொங்கல், சித்திரைப் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களில் மட்டுமே திரையிட வேண்டும். ஏனைய நாள்களில் சிறிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு அவை குறைந்தது இரண்டு வாரங்களாவது ஓடி விநியோகஸ்தர்களுக்கு குறைந்தபட்ச லாபத்தையாவது ஏற்படுத்திக் கொடுக்கும். மற்றவர்களுக்கு நியாயம் சொல்லும் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர்கள் சங்கமோ, "எந்திரன்' விஷயத்தில் வாயைத் திறக்கவே இல்லையே, ஏன்? பயமா இல்லை ஆட்சியாளர்களின் பாததூளிகளுக்கு சாமரம் வீசும் அடிமைத்தன மனோபாவமா!

 "எந்திரன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்டிருந்தால் திரையிடக் காத்திருக்கும் பல சிறிய திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இரண்டு, மூன்று வாரங்கள் ஓடியிருக்கும். "எந்திரன்' வெற்றிப்படமாகவும் அமைந்துவிட்டால், பாவம் சிறிய படங்களைத் தயாரித்து வைத்திருக்கும் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை வெளியிட மேலும் இரண்டு மாதங்கள் காத்திருக்க வேண்டும். அதுவரை திரையரங்குகள் கிடைக்காது. கிடைத்தாலும் "எந்திரன்' படத்தின் வெற்றி ஜுரத்தில் அந்தப் படங்கள் ஓடாது. போட்ட முதலும், அதிகரித்த வட்டியும், அந்தத் தயாரிப்பாளர்களை திவாலாக்கி நடுத்தெருவில் நிறுத்தும். ஏகபோகத்தின் கோர முகம் இதுதான்!

தினமணி சுட்டி: http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Editorial%20Articles&artid=313354&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D!

suresh kannan