Showing posts with label கொரிய சினிமா. Show all posts
Showing posts with label கொரிய சினிமா. Show all posts

Friday, January 02, 2015

பாலுமகேந்திராவின் 'தலைமுறைகள்'




படவெளியீட்டின் போது பார்க்க முடியாமல் போன, நீண்ட நாட்களாக பார்க்க நினைத்திருந்த, பாலுமகேந்திரா இயக்கிய கடைசி திரைப்படமும் அவர் தன்னுடைய நிரந்தர அடையாளத்தை கழற்றி வைத்து நடித்திருந்த முதல் திரைப்படமுமான 'தலைமுறைகள்' திரைப்படத்தை இன்று ஜெயா டிவியில் பார்த்தேன். ஒரு கலைஞனின் பரிணாம வளர்ச்சியின் படி சரியான இடத்திற்குத்தான் பாலுமகேந்திரா வந்து சோ்ந்திருப்பதாகத் தோன்றுகிறது.

எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை இவ்வாறு எழுதின நினைவு: 'அந்த இளைஞனை இறுகக் கட்டிக் கொண்டு வண்டியில் பயணிக்கும் இளம் பெண்ணை பார்க்கிறேன். கவலையாக இருக்கிறது. இளைஞனின் கண்களில் இருக்கும் நோக்கம் அத்தனை ஆரோக்கியமானதாக இல்லை. ஒரு காலத்தில் இளம்பெண்களின் அனாட்டமிகளை மாய்ந்து மாய்ந்து வர்ணித்தவன், இப்போது இந்தப் பெண்ணுக்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.'

'வீடு' 'சந்தியா ராகம்' தவிர்த்து பெரும்பாலும் தனிநபர்களின் அகச்சிக்கல்களையும் துயரங்களையும் மகிழ்ச்சிகளையும் மையப்படுத்தி பதிவு செய்து வந்திருந்த பாலுமகேந்திரா, தான் சார்ந்திருக்கும் சமூகம் குறித்த சமகால பிரச்சினையை மையப்படுத்திய படம் 'தலைமுறைகள்' தங்களது முந்தைய கலாசாரங்களோடு முற்றிலும் துண்டித்துக் கொண்டு இறக்குமதி நாகரிகங்களோடு வேறு வகையில் விநோதமாக வளரும் இளையதலைமுறையினர் குறித்த ஆதாரமான கவலையையும் அதற்கான மென்மையான தீர்வையும் பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம். மொழியையும் இயற்கையையும் விட்டு விலகி நிற்கும் அபத்தங்களையும்.

பாலுமகேந்திரா சுதந்திரமாக இயங்க விரும்பும் திரைப்படங்களின் படி மிக நிதானமாக நகரும் காட்சிகளும் திரைக்கதையும் சிறு சிறு மினிமலிச கதைகளாக பல நெகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டிருந்தாலும் சற்று சலிப்பையும் ஏற்படுத்துகிறது. இத்திரைப்படத்தின் மையமும் ஆதாரமான நோக்கமும் உயர்வானதாக இருந்தாலும் அதை கலையுணர்வுடன் அழுத்தமாக பார்வையாளர்களுக்கு கடத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறதா என்றால் சற்று தயக்கத்துடன் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தினமும் தவறாது திருவாசகம் படிக்கும் சைவப்பிள்ளையாகவும் சாதிய இறுக்கத்தின் மனோபாவமுள்ள பழமைவாத மனம் கொண்டவராகவும் கறாரான பிடிவாதக்காரராகவும் தன்னுடைய பாத்திரத்தை வடிவமைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் பாலுமகேந்திரா. தள்ளாமையின் கையறு நிலையில் தன்னுடைய பிடிவாதங்களை தளர்த்தி கைவிட்ட உறவுகளை சுயநலக்காரணங்களோடு அரவணைப்பதாக பழமைவாத மனநிலை சற்று இளகியிருப்பதாக அந்தப் பாத்திரத்தின் மாற்றங்களில் ஏற்படும் பயணத்தை நுட்பமான காட்சித் தொடர்ச்சிகளில் பதிவு செய்திருந்தாலும் இம்மாதிரியான ஒரு நபர் ஒரே காட்சியில் சாதியைத் துறக்கும் நாடகத்தனமான காட்சியமைப்புகளையெல்லாம் பாலுமகேந்திரா போன்ற மாஸ்டர்கள் செய்யக்கூடாது. (தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் படைப்பாக இந்த திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பதை இந்த சமயத்தில் நினைவு கொள்வது நல்லது).

பாலுமகேந்திராவின் சில அற்புதமான முகபாவங்களை கவனிக்கும் போது இவர் முன்பே நடிக்க வந்திருக்கலாமே என்கிற உணர்வு தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இது ஏதோ அவர் இறந்து விட்டாரே என்கிற நெகிழ்ச்சியுடன் மீது அமைந்த உணர்வல்ல. உண்மையாகவே சில காட்சிகளில் மனிதர் அசத்தியிருக்கிறார். (பாலச்சந்தர், பாரதிராஜா போன்று இவரின் நடிப்பு எரிச்சலை மூட்டாதிருந்ததே நல்ல விஷயம்).

இளம்தலைமுறையைச் சார்ந்த சிறுவனொருவன் தம்முடைய முன்னோர்களின்  பண்பாடு மற்றும் கலாசாரங்களிலிருந்து விலகிய பிரதிநிதியாக நிற்கிறான் என்பது இயக்குநர் சொல்ல விரும்பியிருக்கிற விஷயம். ஆனால் சென்னையில் வளர்ந்து வரும் சிறுவன், ஏதோ லண்டனில் பிறந்து வளர்ந்தவன் போல ஒருவரி தமிழ் கூட அறியாமலும் பிள்ளையார் சிலையைக் கூட அறியாதவனாகவும் சித்தரித்திருக்கும் விதம் நெருடலை ஏற்படுத்துகிறது. போலவே  சென்னையில் இருக்கும் அவனது பெற்றோர்களும் ஆங்கிலத்திலேயே - அந்தப் பெண் பின்னர் தமிழ் கற்ற போதிருந்த போதிலும் - உரையாடிக் கொள்வது பொருந்தாமல் இருக்கிறது.  படத்தின் துவக்கத்தில் காட்டப்படும் மகள் வயிற்று மூன்று பேரப் பிள்ளைகள் பிறகு எங்குமே தென்படாமலிருப்பதும் அவர்கள் மீதும் சுப்பு அன்பு செலுத்தினாரா என்பதெல்லாம் தெளிவாக இல்லை.

திரைக்கதையில் இது போன்ற சிறு சிறு மைக்ரோ விஷயங்களில் செலுத்தப்படும் கவனங்கள்தான் தொடர்புள்ள திரைப்படத்தின், காட்சிகளின் மீதான நம்பகத்தன்மையைக் கூட்டுகின்றன என்பதை மறக்கக்கூடாது. சசிகுமாரின் தங்கையாக விநோதினி நடித்திருந்தாலும் casting இந்த விஷயத்தில் பொருத்தமாக இல்லை. சுப்பு தமிழ் மீது பிடிப்புள்ளவராக இருந்தாலும் பேரன் சொல்லித்தரும் ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதில் உள்ள உற்சாகத்தில் மொழி வெறியர்களுக்கு ஒரு செய்தி உள்ளது. ஆனால் மருமகளும் பேரனும் அந்த ஊரிலேயே தங்குவது, அதற்கான காரணங்கள், எவ்வித சிணுங்கலும் இல்லாமல்  பேரன் தமிழ் கற்றுக் கொள்வது, ஸ்பஷ்டமாக திருக்குறள் சொல்வது  எல்லாம் சரியாக சித்தரிக்கப்படாமல் யதார்த்தமற்ற  நாடகத்தனங்களாக உள்ளன.

இத்திரைப்படத்திலேயே என்னை அதிகம் நெளிய வைத்தது. இதன் sound editing தான். பாலு மகேந்திரா உருவாக்கும் பெரும்பாலான டெலி பிலிம்களில் அவுட்டோர் காட்சிகளில் பறவைகளின் சப்தம் தொடர்ந்து ஒலிப்பதைக் கவனித்திருக்கலாம். இண்டோர் காட்சி என்றாலும் கூட வெளியிலிருந்து கத்தும் காக்கையின் சப்தம் அவர் டெலிவிஷனுக்காக உருவாக்கிய 'கதை நேரத்தில்' எபிஸோட்களில் வழக்கமான விஷயமாக இருக்கும். இதில் அவுட்டோர் காட்சிகளில் அவ்வாறு இணைக்கப்பட்டிருக்கும் பறவைகளின் ஒலிகள் மிக செயற்கையாக பொருத்தமற்று அமைந்திருந்தன. பாலுமகேந்திரா பறவைகளின் காதலனாக இருந்திருக்கலாம். (இதில்கூட பேரன் வாங்கி வரும் கூண்டுப் பறவையை சுதந்திரமாக பறக்க திறந்து விடுவது போல் ஒரு காட்சி உள்ளது). ஆனால் அதற்கான ஒலிகள் மிக கவனமாகவும் இயல்பாகவும் இணைவது நல்லது. எனில் லைவ் சவுண்ட் உத்தியை பயன்படுத்தியிருக்கலாம்.

குறிப்பிட்டு குறிப்பிட்டு சலித்து போன விஷயம்தான். அதுவரை நாம் கோபமாகவே பார்த்துப் பழகிய பள்ளி ஆசிரியரை அபூர்வமாக அவரது வீட்டில் சந்திக்க நேரும் போது அவர் வாய்விட்டு சிரிப்பதை ஆச்சரியமாக கவனிப்பது போல  சில குறிப்பிட்ட இயக்குநர்களின் படத்தில் மாத்திரம் ராஜாவின் இசை பிரத்யேக உன்னதங்களுடன் அமைவது வாடிக்கையான விஷயம்தான். படத்தின் டைட்டில் காட்சி முதற்கொண்டு சில நெகிழ்ச்சிகரமான தருணங்களில் ராஜாவின் இசை அந்தக் காட்சிகளை மேலதிக உயரத்திற்கு அழைத்துச் செல்கிறது. சில சமயங்களில் ஆர்வக்கோளாறாக தேவையற்று ஒலித்து எரிச்சலையும் உண்டாக்குகிறது. இன்னும் சில இடங்களில் மெளனமே இசையாக அமைந்ததில் இயக்குநரின் பங்கும் வலியுறுத்தலும் இருந்திருக்கலாம்.

ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தபடி இத்திரைப்படத்தின் மையமும் நோக்கமும் உன்னதமான காரணங்களோடு அமைந்திருந்தாலும் திரைக்கதையும் காட்சிக் கோர்வைகளும் தூர்தர்ஷனில் உருவாக்கப்பட்ட டெலிபிலிம்களின் தரத்தில்தான் உள்ளன. கலை சார்ந்த திரைப்படமென்றாலும் ஒரு திரைப்படத்தின் மேக்கிங் தற்போது எவ்வளவு தூரத்திற்கு நகர்ந்திருக்கிறது என்பதை சமகால உலக சினிமாக்களையாவது - அல்லது குறைந்த பட்சம் அவர்களது சிஷ்யர்களின் திரைப்படங்களையாவது - பார்த்து ஆசான் சற்று சுதாரித்திருந்திருக்கலாம். பாலுமகேந்திரா இப்போது மறைந்து விட்டார் என்பதற்காக அதன் மீது எழும் நெகிழ்வுணர்ச்சிகளின் காரணமாக  இத்திரைப்படத்தின் குறைகளை மழுப்பி  ஆஹா ஓஹோ என்று புகழலாம். (இயக்குநர் உயிரோடு இருந்த போதே இத்திரைப்படம் குறித்து எழுதிய சாருநிவேதிதா அதைத்தான் செய்திருந்தார்). ஆனால் அந்தப் பொய்களின் மீது எழுப்பப்படும் வெற்றுப் புகழுரைகள் இயக்குநரின் ஆன்மாவை துன்புறுத்துவதாகத்தான் அமையும். தலைமுறை இடைவெளிகளோடு அமைந்த உருவாக்கத்துடன் அமைந்திருப்பதுதான் இத்திரைப்படத்தின் பின்னடைவு.

ஏறத்தாழ இதே மாதிரியான திரைக்கதையுடன் ஆனால் மிகுந்த நுண்ணுணர்வுடனும் கலையமைதியுடனும் உருவான The Way Home என்கிற கொரிய திரைப்படத்தைப் பார்த்திருநதால் நான் சொல்ல வருவது புரியும்.

Monday, January 18, 2010

பாட்டிமார்களுக்குச் சமர்ப்பணம்

இரண்டே பிரதான பாத்திரங்கள், 10 KB அளவேயுள்ள சொற்ப வசனம், அதிகம் சுவாரசியமூட்டாத லொக்கேஷன் ஆகியவற்றை வைத்துக் கொண்டு உணர்வுப்பூர்வமானதொரு சர்வதேச தரமுள்ள திரைப்படத்தை தந்துவிட முடியுமா?. முடியும் என்று நிருபித்திருக்கிறார் Lee Jeong-hyang. ஆறு வயதுள்ள ஓர் அடாவடிச் சிறுவன், நிபந்தனையில்லா அன்பை கொட்டும் ஓர் ஊமைக் கிழவி ஆகிய இருவரைச் சுற்றியே இயங்குகிறது கொரியத் திரைப்படமான The Way Home.



சிறுவனின் தாய்க்கு பணிச் சூழல் காரணமாக தன் மகனை கிராமத்திலிருக்கும் அவனுடைய பாட்டியின் பாதுகாப்பில் சிறிது காலத்திற்கு விட்டு வைத்திருக்க வேண்டியதொரு சூழ்நிலை. அதுவரை நகரத்தின் நவீன நிழலிலேயே வளர்ந்திருக்கிற சிறுவன் கிராமத்து ஊமைக் கிழவியை உலக அளவிற்கு வெறுக்கிறான். அவளுடைய செருப்புகளை ஒளித்து வைக்கிறான். கொண்டை ஊசியைத் திருடி விளையாட்டுக் கருவி பேட்டரிகளை வாங்க முடியுமா என்று சோதிக்கிறான். வறுத்த கோழி வேண்டுமென்று கிழவியை வறுத்தெடுக்கிறான். பிறகு சிறிது சிறிதாக அவளின் மெளனமான அன்பைப் புரிந்து கொள்வதை அடிப்படையாகக் கொண்டு பிறகான காட்சிகள் பயணிக்கின்றன.

நகர்ப்புற பின்னணியில் வளர்கிற இன்றைய குழந்தைகளின் பிரதிநிதியை அந்தச் சிறுவனின் மூலம் காண முடிகிறது. கூடவே நகரமயமாக்கலின் அபத்தத்தையும். கிழவியிடம் ஒரு வார்த்தை கூடப் பேச விரும்பாமல் தன்னுடைய வீடியோ கேம்முடனே பொழுதைக் கழிக்கிறான்; விளையாட்டுச் சீட்டுகளிடம் உரையாடுகிறான்; பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருக்கிற உணவை மாத்திரமே விரும்புகிறான்.

சிறுவன் கிராமத்து மனிதர்களை வெறுப்பதை படம் ஆரம்பிக்கிற சில நிமிடங்களிலேயே பார்வையாளர்களுக்கு இயக்குநர் உணர்த்தி விடுகிறார். கிராமத்து பேருந்தில் பயணிக்கும் அவன், சுற்றி அமர்ந்திருக்கும் மனிதர்களின் உரத்த சிரிப்பையும் தன்னருகே அமர்ந்திருப்பவள் மேலே சாய்ந்து கொண்டே வருவதையும் விரும்புவதில்லை. கிழவியின் எளிமையான வீட்டுச் சூழலையும் அருவெறுப்புடனே பார்க்கிறான்.

கிழவியின் மீது சிறுவனின் அன்பு மெல்ல வெளிப்படும் காட்சி கவிதையான ஒரு தருணத்தில் வெளிப்படுகிறது. கொடியில் காயப் போடப்பட்டிருக்கும் துணிகள் மழையில் நனைய ஆரம்பிக்கும் போது தன்னுடைய உடைகளை மாத்திரம் எடுத்துக் கொண்டு திரும்புகிறவன், சற்று யோசித்து பிறகு பாட்டியின் உடைகளையும் எடுத்து வருகிறான்.

பாட்டியின் சைகை மொழி அவனுக்கு முதலில் எரிச்சலை ஏற்படுத்தினாலும் பிறகு இயல்பாக அது அவனுக்குள்ளும் ஒட்டிக் கொள்கிறது. 'மன்னித்துவிடு' என்பதை கையை மார்பின் மீது வட்டமிட்டுக் காட்டுகிறாள் கிழவி. தன்னை விட பெரிய சிறுவன் ஒருவனை விளையாட்டாக கீழே விழ வைத்துவிட்டு பிறகு பயந்து போய் அவனிடம் மார்பின் மீது வட்டமிட்டு காட்டி விட்டு ஓடிவந்து விடுகிறான். படம் நிறைவடையும் காட்சியிலும் தாயுடன் திரும்பிப் போகும் போது அதுவரை தான் செய்த அத்தனை தவறுகளுக்கும் மன்னிப்பு கேட்கும் விதமாக அழுகையுடன் அதே சைகையை ஜன்னலின் வழியின் பாட்டிக்குக் காட்டுகிறான்.

()

தாத்தா-பாட்டி-பேரன்-பேத்தி உறவு மிக அலாதியானது. தமக்குப் பிறந்தவர்களைக் காட்டிலும் அவர்களுக்குப் பிறந்தவர்களிடம் அதிக அன்பு செலுத்தும் மனித உறவின் உளவியல் பின்னணி என்னவென்று புரியவில்லை. இயற்கையின் ஆதார சுருதியும் நோக்கமும் உயிர்களின் சுழற்சியே. ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாரிசுகளை தம்முடைய நீட்சியின் அடையாளமாகவே கண்டு மகிழ்கிறான். நீட்சியின் தொடர்ச்சி இன்னும் அவனுக்கு அதிக மகிழ்வை ஏற்படுத்துகிறது என்று இதைப் புரிந்துக் கொள்கிறேன்.

சிறுவனின் அத்தனை அழிச்சாட்டியங்களையும் அந்தக் கிழவி தன்னுடைய மெளனமான அன்பால் கடந்து செல்கிறாள். உலகத்தின் அத்தனை சோகங்களையும் தாங்கி நிற்கிற மாதிரியான அவளது முகம் நமக்குள் மிகுந்த நெகிழ்வை ஏற்படுத்துகிறது. இத்தனைக்கும் அவளது முகபாவங்கள் அத்தனை எளிதில் வெளிப்படுவதில்லை. ஜப்பான், சைனா, கொரியா போன்ற நாட்டு மக்களின் முகத்திற்கு பொதுவான அம்சமிது. என்றாலும் உடல் மொழியிலேயே அவளது அத்தனை அன்பும் வெளிப்படுகிறது.

இரண்டு கிழவிகள் உரையாடிக் கொள்ளும் ஒரு காட்சி மிக முக்கியமானது. சொற்ப நேரமே இது நிகழ்ந்தாலும் மரணத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிற கசப்பையும் தங்களின் உடல் உபாதைகளின் வேதனையை பரிமாறிக் கொள்வதின் மூலம் அதற்கான ஆசுவாசம் கிடைப்பதையும் இந்தக் காட்சிகள் மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன.

சிறுவன் வாங்கி வரச் சொன்ன சாக்லெட்டுக்காக கடைக்கு ஊர்ந்து செல்கிறாள் கிழவி. கடைக்காரி அவளுடைய தோழிதான். இவள் ஊமை என்றாலும் கூட இவளுக்கும் சேர்த்து கடைக்காரியே பேசுகிறாள் ஊமைக்கிழவி தன்னுடைய உடல் மொழியின் மூலமே அவளை ஆமோதிக்கிறாள். சாக்லேட்டுக்கு காசு வாங்கிக் கொள்ள மறுக்கும் கடைக்காரியிடம் அன்பளிப்பாக தன்னுடமிருந்த பூசணிக்காயை வழங்குகிறாள் ஊமைக்கிழவி.

என்னுடைய அனுபவத்திலேயே இதே போன்றதொரு அனுபவத்தை பார்க்க நேர்ந்திருப்பதால் எனக்குள் மிகுந்த நெகிழ்ச்சியை இந்தக் காட்சிகள் ஏற்படுத்தின. கிழவியை பிரிவதற்கு முன்னிரவு அவளுடைய வசதிக்காக இருக்கும் எல்லா ஊசிகளிலும் சிறுவன் நூலைக் கோர்த்து வைக்கும் காட்சியையும் சொல்லாம். இந்தச் செயலை முன்பெல்லாம் எரிச்சலுடனேயே செய்து தருவான் அவன்.





பார்வையாளர்களிடம் சற்று வெறுப்பை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு அவனது குறும்பு அமைந்திருந்தாலும், அவனது குழந்தைமை வெளிப்படும் இயல்பான காட்சியையும் இணைத்து இதை சமன் செய்திருக்கிறார் இயக்குநர். தான் மலம் கழிப்பதை கிழவி காண்பதை விரும்பாத சிறுவன், நள்ளிரவில் மலம் கழிக்க நேரும் போது பயத்தில் கிழவியை அருகாமையில் அமரச் சொல்கிறான். அவனுடைய விடலைப் பருவத்தின் தொடக்கத்தை, வீட்டின் அருகே சிறுமி ஒருத்தியின் கவனத்தைக் கவர முயல்வதும், அசிங்கமாக முடிவெட்டிவிடும் பாட்டியைக் கோபித்துக் கொள்வதின் மூலமாக இயக்குநர் அற்புதமாக சித்தரித்திருக்கிறார். 

()

பொதுவாக ஆசியத் திரைப்படங்களைக் காணும் போது அவற்றை மனதிற்கு மிக நெருக்கமானதாக என்னால் உணர முடிகிறது. கொரியக் கிராமத்து கிழவி மற்றும் தமிழகக் கிராமத்து கிழவி ஆகியோர்களின் இடையில் என்னால் அதிக வித்தியாசத்தை காண முடியவில்லை. படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் வசனங்களின் துணையின்றியே நகர்கிறது. பின்னணி இசையைச் சற்றுக் கூர்ந்து கவனித்தேன். தேவையான இடங்களில் மாத்திரமே மிகச் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பார்வையாளர்களை நெகிழ வைக்கும் நோக்கத்துடன் சில காட்சிகள் மிகைப்படுத்தப்பட்டிருந்த செயற்கைத்தனத்துடன் இருந்தாலும் அவை பார்வையாளனின் முழுமையான அனுபவத்தைத் தடை செய்வதில்லை.

இந்தத் திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போதே இடையிடையே எனக்கு இன்னொரு திரைப்படமும் நினைவில் வந்துக் கொண்டேயிருந்தது. Central Station. அதுவும் இதே போன்றதொரு கிழவி- சிறுவனைப் பற்றின திரைப்படம்தான். ஆனால் அதில் வரும் கிழவி சிறுவனின் குறும்புகளுக்கு எரிச்சலுடன் பதிலடி தந்து கொண்டேயிருப்பாள். பிறகுதான் இருவருக்குமான நேசம் படரும்.

'உலகெங்கிலுமுள்ள பாட்டிகளுக்குச் சமர்ப்பணம்' என்ற குறிப்புடன் நிறைவடையும் இம்மாதிரியான திரைப்படங்களின் தேவை முதியோர் இல்லங்கள் பெருகிக் கொண்டிருக்கும் சமகால சூழ்நிலையில் மிகுந்த அவசியத்தை உணரச் செய்கின்றன.

()

'உரையாடல்' அமைப்பின் சார்பில் சிவராமன் ஏற்பாடு செய்திருந்த திரையிடல் நிகழ்வில் சக இணையப் பதிவர்ளோடு இத் திரைப்படத்தைக் கண்டேன். ஏற்கெனவே பார்த்திருந்த திரைப்படம்தான் என்றாலும் மீண்டும் காண்பதில் எந்தவித சலிப்பும் ஏற்படவில்லை என்பது திரைக்கதையின் பலத்தை சுட்டிக் காட்டுகிறது. திரையிடலுக்குப் பின்னால் ஏற்கெனவே அறிமுகமான பதிவர்களோடு புதிதாக அறிமுகமான தண்டோரா, எவனோ ஒருவன், கேபிள் சங்கர், வெண்பூ, பட்டர்பிளை சூர்யா...  போன்ற பதிவர்களோடு உரையாட முடிந்தது.

ஒவ்வொரு திரையிடலின் இறுதியிலும் பார்வையாளர்களிடையே திரைப்படத்தைப் பற்றின கலந்துரையாடலை கட்டாயமாகவாவது சேர்ப்பது ஒரு பொருத்தமான சூழ்நிலையை ஏற்படுத்துவதோடு ஒவ்வொருவரும் சம்பந்தப்பட்ட படத்தை எவ்விதம் உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிவதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். சிவராமன் இது குறித்து யோசிக்க வேண்டுகிறேன். இந்தத் தொடர்ச்சியான திரையிடலுக்கு உறுதுணையாக இருக்கும் 'கிழக்கு பதிப்பகம்' நன்றியோடு நினைவு கூரப்பட வேண்டியது. 

suresh kannan