Saturday, December 29, 2007

புத்தகங்களும்... கண்காட்சியும்... சுயபுலம்பலும்...

நடைபெறவிருக்கும் புத்தக கண்காட்சியை முன்னிட்டு புதிதாக வெளியிடப்பட்டுள்ள/படவுள்ள புத்தகங்களில் என் கண்ணில் பட்ட/கவனத்தை கவர்ந்த புத்தகங்களை - யாருக்காவது பயன்படும் என்கிற எண்ணத்தில் - இங்கே பகிர்ந்து கொள்ள உத்தேசம்.

1) காந்திஜியின் இறுதி 200 நாட்கள் - (மொழிபெயர்ப்பு நூல்) - பாரதி புத்தகாலயம்
2) பகத்சிங் பற்றிய முழுமையான பதிப்பு - பாரதி புத்தகாலயம்
3) அமெரிக்காவின் உலகளாவிய அரசியலும் அணு ஒப்பந்தமும் - அ.மார்க்ஸ் - எதிர் வெளியீடு
4) அசோகவனம் - நாவல் - ஜெயமோகன் - தமிழினி
5) சூடியபூ சூடற்க - சிறுகதைகள் - நாஞ்சில் நாடன் - தமிழினி
6) உலக சிறுவர் திரைப்படங்கள் - விஸ்வாமித்திரன் - வம்சி புக்ஸ்
7) உயிர்த்தலம் - சிறுகதைகள் - ஆபிதீன் - எனிஇந்தியன்
8) நதியின் கரையில் - கட்டுரைகள் - பாவண்ணன் - எனிஇந்தியன்
9) பேசும் பொற்சித்திரம் - கட்டுரைகள் (திரைப்படம்) - அம்ஷன்குமார் - காலச்சுவடு
10) பேசும் படம் - கட்டுரைகள் (திரைப்படம்) - செழியன் - காலச்சுவடு
11) நினைவோடை: தி.ஜானகிராமன் - சுந்தரராமசாமி - காலச்சுவடு
12) போரின் மறுபக்கம் (ஈழஅகதியின் அனுபவங்கள்) - பத்திநாதன் - காலச்சுவடு
13) நினைவலைகள்: அம்பேத்கர் (தொகுப்பு: அழகிய பெரியவன்) - நியூ செஞ்சுரி
14) உலகமயமாக்கல்: இந்திய இறையாண்மையின் மீது ஒரு தாக்குதல் - அரவிந்த் - விடியல்
15) உலகமயமாக்கல் - மிகச்சுருக்கமான அறிமுகம் - மான்·பிரெட் பி.ஸ்டெகர் - அடையாளம்
16) யாமம் - நாவல் - எஸ்.ராமகிருஷ்ணன் - உயிர்மை
17) மரம் - நாவல் - ஜீ.முருகன் - உயிர்மை
18) காலத்தின் கலைஞன் - மணா - உயிர்மை
19) மணற்கேணி - குறுங்கதைகள் - யுவன் சந்திரசேகர் - உயிர்மை
20) எம்.ஆர்.ராதா: திரைக்கடலில் ஒரு தனிக்கலைஞன் - கிழக்கு
21) நான் வித்யா - ஒரு திருநங்கையின் வலிமிகுந்த வாழ்க்கை - கிழக்கு
22) எல்.டி.டி.ஈ. - விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாறு - கிழக்கு

(புத்தகங்களின் விவரம் பெரும்பான்மையாக கிடைக்கும் பட்சத்தில் இந்தப் பட்டியல் நீளக்கூடும்)

()

ஆனால் நான் எந்தப் புத்தத்தையும் வாங்கப் போவதில்லை. ஏனெனில்:

1) முந்தைய, அதற்கும் முந்தைய, அதற்கும் மு...ந்தைய கண்காட்சிகளில் வாங்கின புத்தகங்களே இன்னும் படிக்கப்படாமல் என்னுள் குற்ற உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருப்பதும்...

2) அதிக விலை கொடுத்து வாங்கின புத்தகம், நூல்நிலையத்தில் கண்ணில் படும் போது .. புத்தகத்திற்குப் பதிலாக மகளின் ஒரு மாத பள்ளிக்கூட கட்டணத்தை செலுத்தியிருக்கலாம் என்றோ அவள் அடம்பிடித்தும் மறுக்கப்பட்ட உடையை வாங்கித் தந்திருக்கலாம் என்றோ, ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்து தகப்பனாக யோசிப்பதும்....

3) பரணையிலும், அலமாரிகளிலும், கட்டில் மீதும், தரையிலும் அகதிகள் மாதிரி பரந்து இறைந்திருக்கிற புத்தகங்கள், ஒரு வேளை நான் தீடீரென்று செத்துப் போய்விட்டால் என்ன ஆகும் என்று அடிக்கடி தோன்றுவதும்...

4) "·பிளைட் எப்படி பறக்குது'ன்னு கேட்டா அதுக்கு விடை தெரில. ஆனா எப்பப் பார்த்தாலும் என்னத்தையோ படிச்சிட்டே இருக்கீங்க. என்கூட கொஞ்ச நேரம் விளையாடமில்லையா?" என்று அடிக்கடி என்னுடைய ஏழு வயது மகள் கேட்க ஆரம்பித்திருப்பதாலும்....

5) மாதா மாதம் வாங்குகிற வார/மாத இதழ்கள், கன்னிமரா/தேவநேய பாவாண நூல்நிலையங்களிலிருந்து கொண்டுவரும் புத்தகங்களை படிப்பதற்கு நேரம் ஒதுக்குவதற்கே பெரும்பாடாய் இருப்பதாலும்....

இனிமேல் புதிதாய் எந்தப் புத்தகத்தையும் வாங்க வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். ஆனால்... போன வருடமும் இதே மாதிரி ஒரு பதிவு எழுதிவிட்டு, கண்காட்சிக்கு போனபிறகு ஆவல் தாங்காமல் சில புத்தகங்களை வாங்கின நினைவிருக்கிறது.

ஆகவே....

Tuesday, December 25, 2007

ஒரு சைக்கிளும் இரண்டு சிறுவர்களும்

Beijing Bicycle (2001)

சுமார் 12 வயதாக இருந்த போது இரண்டு ரூபாய் ஒன்றை ஒரு அந்நியனிடம் திருட்டு கொடுத்ததை உணர்ந்த தருணத்தில் எனக்கு ஏற்பட்ட பதைபதைப்பும், பயமும், ஏமாற்றப்பட்ட கோபமும், திருடியவனை தப்பிக்கவிட்ட ஏமாற்றமும் ஒன்றுசேர்ந்த கலவையான உணர்ச்சி இன்னமும் என் மூளை நரம்புகளில் பத்திரமாக பொதிந்திருக்கிறது. வெற்றிகரமாக திருடுவதில் உள்ள சந்தோஷத்தை விட திருட்டுக் கொடுக்கும் போது ஏற்படும் துயரத்தின் சதவிகிதம் அதிகமாகவே இருக்கிறது. அதிக விலை மதிப்பில்லாததாக இருந்தாலும், மிகவும் ஆசையாக, சென்டிமென்ட்டாக பாதுகாக்கிற பொருள் திருட்டுப் போகிற போது ஏற்படுகிற வலியின் துயரம் பிரத்யேகமானது. இத்திரைப்படத்தில், பதினேழு வயதுச் சிறுவன் Guei-யும் தொலைந்து போன தனது பிரியமான சைக்கிளை மீட்க ஆரம்பத்திலிருந்தே தீவிரமாக போராடுகிறான்.

Photobucket

கிராமப்புறம் ஒன்றிலிருந்து Beijing நகருக்கு பிழைப்பு தேடி வருகிறான் Guei. பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒரு நண்பனுடன் தங்குகிறான். கடிதங்களை டெலிவரி செய்யும் கொரியர் கம்பெனி ஒன்றில் அவனுக்கு வேலை கிடைக்கிறது. பணிபுரிவதின் நிமித்தம் ஒரு புத்தம்புதிய சைக்கிள் ஒன்று வழங்கப்படுவதுடன் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அந்தச் சைக்கிள் அவனுக்கே சொந்தமாகும் வாய்ப்பு உள்ளது என்றும் அறிவுறுத்தப்படுகிறது. சைக்கிளை சொந்மாக்கிக் கொள்வதற்காக தீவிரமாக உழைக்கிறான் Guei. பரபரப்பான Beijing நகரின் வீதிகளில் சைக்கிளில் வேகமாக பயணிப்பது அவனுக்கு உற்சாகமாகவே இருக்கிறது. சைக்கிள் அவனுக்கு சொந்தமாகப் போகும் நாளன்று அது திருட்டுப் போகிறது. சைக்கிள் இல்லாமல் அவனுக்கு தொடர்ந்து பணிபுரிய வாய்ப்பளிக்கப்பட மாட்டாது என்றும் ஒரு வேளை அவன் சைக்கிளை மீட்க நேர்ந்தால் அவனை மறுபடியும் பணி வழங்க தயாராக இருப்பதாக அவனுடைய மேலாளர் தெரிவிக்கிறார். அவ்வளவு பெரிய நகரத்தில் இந்தச் சிறுவனால் எப்படி சைக்கிளை கண்டுபிடிக்க முடியும் என்று அவநம்பிக்கையாக இருக்கிறது அவருக்கு.

Guei சைக்கிளில் கீறல்களின் மூலம் அடையாளத்தை ஏற்படுத்தி வைத்திருப்பதால், அந்தக் குறியீடு இருக்கிற சைக்கிளை தேடி நகர் முழுவதும் அலைகிறான். ஒரு இரவில் சைக்கிளை திருட வந்ததாக தவறாக குற்றஞ்சாட்டப்பட்டு பிறகு அவனுடைய மேலாளரால் கடுமையான வசவுகளுக்குப் பிறகு காவல் துறையினடமிருந்து மீட்கப்படுகிறான். பள்ளிக்கூட மாணவன் ஒருவன், குறிப்பிட்ட அடையாளமுள்ள அந்த சைக்கிளோடு தம்முடைய பெட்டிக்கடைக்கு வந்ததாக அவனுடைய நண்பர் தெரிவிக்கிறார்.

()

Jian என்கிற பள்ளிக்கூட மாணவன் தம்முடைய புதிதான சைக்கிளுடன் சக மாணவர்களுடன் விளையாடுகிறான். சைக்கிளின் மூலம் தனது காதலியையும் அவனால் கவர முடிகிறது. வீட்டை அடைந்ததும் சைக்கிளை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்கிறான். சைக்கிள் அவனுக்கு மிகுந்த தன்னம்பிக்கையை ஊட்டுகிறது. அவன் தன்னுடைய காதலியுடன் தனிமையாக இருக்கும் ஒரு தருணத்தில், அவனைப் பின்தொடரும் Guei தன்னுடைய சைக்கிளை அடையாளம் கண்டுகொண்டு அதை மீட்டெடுத்து ஓடுகிறான். வேகமாக அவனைப் பின்தொடர்ந்து ஒடிவரும் Jian எப்படியோ அவனைப் பிடித்து சைக்கிளை திருப்பி எடுத்துக் கொள்கிறான். சாலையிலிருக்கும் மற்ற இளைஞர்கள் அப்பாவிச் சிறுவன் Guei-ஐ சைக்கிள் திருடன் என்று தீர்மானித்து அடித்து உதைக்கிறார்கள்.

வீட்டிற்குத் திரும்பும் Jian தனது தந்தை காணாமற் போன பணத்தை பரபரப்புடன் தேடிக் கொண்டிருப்பதை பார்க்கிறான். அது அவனுடைய தங்கையின் உயர்படிப்பிற்காக சேமித்து வைக்கப்பட்டது. "பணத்தை எடுத்தாயா" என்று கேட்கும் தந்தையிடம் "இல்லை" என்கிறான் Jian. அவனுக்கு வாங்கித் தருவதாக சொல்லியிருந்த சைக்கிளை அந்த மாதமும் வாங்கித்தர முடியவில்லையென்றும் அடுத்த மாதம் கண்டிப்பாக வாங்கித்தருவதாகவும் கூறும் தந்தையிடம் "எனக்குத் தேவையில்லை" என்று எரிச்சல் அடைகிறான் Jian.

Jian தனது வீட்டில் சைக்கிளை ஒளித்து வைப்பதை, பின்தொடரும் Guei கவனித்து மறுபடியும் எடுத்துக் கொண்டு ஓடி விடுகிறான். தன்னுடைய பணியையும் மிகுந்த பிடிவாதத்திற்குப் பிறகு மீட்டுக் கொள்கிறான். சைக்கிள் இல்லாத காரணத்தால் தன்னுடைய மகிழ்ச்சியை தொலைத்தாக உணரும் Jian நண்பர்களிடமும் காதலியிடமும் எரிச்சலை காண்பித்து அவர்களைப் புறக்கணிக்கிறான். அந்தச் சிறுவனை கண்டுபிடித்து சைக்கிளை மீட்டு விடலாம் என்று அவனுடைய நண்பர்கள் ஆறுதல் சொல்கிறார்கள். Guei பணிபுரியும் கொரியர் நிறுவனத்தை ஊகித்து, அவனை அடித்து உதைத்து சைக்கிளை தம்முடைய நண்பனிடம் மீட்டுக் கொடுக்கிறார்கள்.

காதலியுடன் சுற்றிவிட்டு சைக்கிளுடன் வீட்டுக்கு திரும்பும் Jian-க்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவனுடைய அப்பாவுடன் சைக்கிளின் உரிமையாளனான Guei நிற்கிறான். "சைக்கிள் எப்படி வந்தது" என்று கேட்கும் தந்தையிடம் "நான்தான் பணத்தை திருடி வாங்கினேன். எத்தனை மாதமாக என்னை ஏமாற்றினீர்கள்? தங்கைக்கு மாத்திரம் செலவழிக்க பணம் இருக்கிறதா?" என்று வெடிக்கிறான். அவனை 'பளார்'ரென்று அறையும் அவனுடைய அப்பா, சைக்கிளை அவனிடமிருந்து பிடுங்கி Guei-யிடம் கொடுக்கிறார்.

()

Jian-ன் நண்பர்கள் அவனிடம் "இந்தச் சைக்கிளை திருடினாயா?" என்று கேட்டு கோபப்படுத்துகிறார்கள். அதை தாம் 500 யென்கள் கொடுத்து Second Hand மா¡க்கெட்டில் வாங்கியதாக கூறுகிறான். அத்தோடு இருக்கையை மாற்றியதற்கான ரசீதை காண்பிக்கிறான். "அப்படியென்றால் அந்தப் பையனிடமிருந்து நாம் சைக்கிளை பிடுங்குவதற்காக உரிமை இருக்கிறது. நீ சரியென்றால் செய்யலாம்" என்கின்றனர் நண்பர்கள். அவர்களது ஆலோசனைப் படி Guei-யிடமிருந்து சைக்கிளை பிடுங்க முயற்சிக்கையில் Guei சைக்கிளை மிக இறுக்கமாக பிடித்துக் கொண்டு இயலாமையின் காரணமாக 'ஓ'வென்று கதறுகிறான். "இந்தச் சைக்கிள் என்னுடையது" என்று கூறும் அவனிடம் "இந்தச் சைக்கிளை எங்கள் நண்பன் காசு கொடுத்து மார்க்கெட்டில் வாங்கியிருக்கிறான். வேண்டுமானால் நீ சைக்கிளை திருடியவனை கண்டுபிடித்து மீட்டுக் கொள். இது எங்கள் நண்பனுக்குத்தான் சொந்தம்" என்று விவாதிக்கிறார்கள். ஆனால் Guei சைக்கிளை இறுகப் பற்றின கைகளை விடுவிக்காமல் மெளனமாக அமர்ந்திருக்கிறான்.

இந்த விவாதம் கிட்டத்தட்ட இரவு வரை நீடிக்கிறது. "வேண்டுமானால் எங்கள் நண்பன் செலவழித்த பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டு நீ சைக்கிளை எடுத்துக் கொண்டு போ” என்கிற மாற்று ஆலோசனை¨யும் ஏற்றுக் கொள்ளாமல் கல்லுளிமங்கன் போல் அமர்ந்திருக்கிறான் Guei. சோர்ந்து போகும் நண்பர்கள் இறுதியாக ஒரு யோசனையை முன்வைக்கிறார்கள். இருவருமே சைக்கிளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்கிற யோசனைதான் அது. இருவருமே அதை ஏற்றுக் கொண்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாற்றி மாற்றி உபயோகின்றனர். (Children of heaven நினைவுக்கு வருகின்றதா?). சில நாட்கள் இவ்வாறாக கழிகிறது.

()

சைக்கிள் சாகச விளையாட்டில் சிறந்தவனாக இருக்கும் Da Huan என்பவனை எல்லோரும் வியந்து பாராட்டுகின்றனர். Jian காதலியின் பார்வை இவன் மீது விழுகிறது. இதனால் தன்னைத் தொடர்ந்து வரும் Jian-ஐ புறக்கணிக்கிறாள். பின்தொடரும் அவனை Da Huan அவமானப்படுத்தி விட்டுப் போகிறான். எரிச்சலின் உச்சத்தை அடையும் ஒரு கல்லை எடுத்து Da Huan-ன் மண்டையை உடைக்கிறான்.

மறுமுனையில் சைக்கிளுக்காக காத்துக் கொண்டிருக்கும் Guei-யிடம் சைக்கிளை கொடுத்து விட்டு "இனிமேல் தமக்கு சைக்கிள் தேவைப்படாது. நீயே வைத்துக் கொள்" என்று விரக்தியுடன் கூறுகிறான். அடிபட்ட Da Huan பழிவாங்குவதற்காக தம்முடைய நண்பர்களை அழைத்துக் கொண்டு வரும் போது இருவரும் தென்படுகிறார்கள். துரத்தும் குழு இரண்டாக பிரிந்து இருவரையும் சிரமத்திற்குப் பிடித்து நையப் புடைக்கிறார்கள். அப்பாவியான Guei-யையும் அடித்துப் போடுகிறார்கள். அவர்கள் விலகும் போது ஒருவன் Guei-ன் சைக்கிளை தூக்கிப் போட்டு உடைக்க முயல்கிறான். "சைக்கிளை ஒன்றும் செய்ய வேண்டாம்" என்று கெஞ்சும் அவனின் அழுகைக்குரல் அவன் காதில் விழுவதில்லை. Guei ஒரு கல்லை எடுத்து மண்டையை உடைக்க, அவன் கீழே சாய்கிறான். சேதமடைந்த தன்னுடைய சைக்கிளை தூக்கிக் கொண்டு Beijing நகரின் தெருவில் எல்லோரும் கவனிக்க நடப்பதோடு படம் நிறைகிறது.

()

ஒரு சைக்கிள், இரண்டு சிறுவர்களை வைத்துக் கொண்டு இவ்வளவு சுவாரசியமான திரைக்கதையை அமைக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருந்தது. பொதுவாக சைனா, ஜப்பான்காரர்களில் எனக்கு ஜாக்கிசானைத் தவிர வேறு யாரையும் அடையாளம் தெரியாது. உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகங்கள் கிடையாது அவர்களுக்கு. இதில் Guei-யாக நடிக்கும் சிறுவனும் அப்படித்தான். சில காட்சிகளைத் தவிர பல இடங்களில் அவனுடைய முகபாவம் மொண்ணையாகவே இருக்கிறது. என்றாலும் கதையின் சுவாரசியமான போக்கில் இது பொருட்படுத்தத் தேவையில்லாததாக இருக்கிறது. Guei-யின் கதாபாத்திரம் மிகத் தெளிவாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பொருளாதார சூழ்நிலை காரணமாக கிராமப்புறத்திலிருந்து நகர்ப்புறத்திற்கு நகரும் மக்களின் work performance பொதுவாக சிறப்பாகவே இருக்கும்.

விளம்பர நிறுவனமொன்றில் பணிபுரியும் என்னிடம், எங்கள் வாடிக்கையாளர் ஒருவர் அவருடைய நிறுவனத்திற்காக சென்னையில் தேவைப்படும் பணியாளர்களுக்காக சென்னையைத் தவிர, தமிழ்நாட்டின் இதர நகரங்களில் விளம்பரம் செய்வார். "சென்னை இளைஞர்கள் உல்லாசமான வாழ்க்கைக்கு பழகிப் போனவர்கள். எனவே அவர்களால் முனைப்புடன் வேலை செய்ய இயலாது. ஆனால் கிராமத்திலிருந்து வருபவர்களிடம் ஆங்கில மொழியறிவு முன்னே பின்னே இருந்தாலும், நல்ல சம்பளத்தைப் பெறுவது அவர்களின் பிரதான நோக்கமாக இருப்பதால் சிறப்பாக பணிபுரிவார்கள்" என்பது அவரின் அனுபவ ரீதியான கருத்து.
Guei-யும் சைக்கிளை சொந்தமாக்கிக் கொள்ள ஊக்கமுடன் பணியாற்றுவதிலும், கைவிட்டுப்போன வேலையை மீண்டும் பிடிவாதத்துடன் திரும்பப் பெற்று அவனுடைய மேலாளரை வியக்கச் செய்கிறான்.

படத்தின் திரைக்கதையின் மூலம் Jian சைக்கிளை திருடியிருப்பான் என்பது மாதிரி பார்வையாளர்களுக்கு உணர்த்தப்படுகிறது. மேலும் அவன் வீட்டில் காணாமற் போன பணத்தையும் அவன்தான் எடுத்திருப்பான் என்பதையும் பார்வையாளர்கள் ஊகிப்பதன் காரணமாக அவன் மீது வெறுப்பு படர்கிறது. ஆனால் கதையின் போக்கில் அவன் சைக்கிளை second hand மார்க்கெட்டில் வாங்கியிருப்பது தெரிவதும், காதலியை இழந்து அடிவாங்கி சைக்கிளை திருப்பித்தரும் தருணத்தில் அவன் மீதான கோபம் மறைந்து அனுதாபம் வருகிறது. இரண்டு சிறுவர்களுமே எந்த சினிமா அனுபவமுமில்லாத புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

()

படத்தின் கிளைக்கதையாக, பெட்டிக்கடைக்கார நண்பரும் Guei-யும் அருகிலிருக்கிற பங்களாவில் உள்ள ஒரு பணக்கார பெண்ணின் அழகை ரகசியமாக பார்த்து ரசிக்கின்றனர். அவள் விதவிதமான உடை உடுத்துவதைக் கண்டு ஆச்சரியப்படுகின்றனர். ஆனால் அவள் அந்த வீட்டில் பணிபுரியும் பெண் என்பதும் உரிமையாளர் இல்லாத நேரங்களில் அவர்களுடைய உடைகளை அணிந்து பிடிபட்டு வெளியேற்றப்படுபவள் என்பதும் கதைப் போக்கில் தெரிகிறது.

சைக்களில் வேகமாக வரும் Guei பணக்கார பெண்ணாக கருதப்படும் பெண்ணின் மீது மோதிவிடுகிறான். தனது சைக்கிளை Jian-னிடமிருந்து மீட்டுக் கொள்ளும் பொருட்டு வேகமாக செல்லும் போது இன்னொரு பெரிய வாகனத்தின் மீது மோதி கீழே விழுகிறான். படத்தின் இவ்வாறான மோதல் காட்சிகள் நேரடியாக பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்படுவதில்லை. மோதலுக்கு முன்னதான காட்சியையும் கீழே அலங்கோலமாக விழுந்து கிடக்கும் காட்சியையும் வைத்து பார்வையாளர்கள் யூகித்துக் கொள்ளும் படியான விதத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

()

படத்தின் இயக்குநர் Wang Xiaoshuai. இந்தப்படத்திற்கு முன்னதாக இவர் நான்கு படங்களை இயக்கியிருந்தாலும் Beijing Bicycle வெளியான பின்னர்தான் சர்வதேச அரங்கில் இவர் மீதான பார்வை விழுந்தது. இந்தப்படத்தில் சில திருத்தங்களை செய்ய சைனா திரைப்பட நிர்வாகம் இவரைப் பணித்தது. பெர்லின் திரைப்பட விருதுக்கு காலதாமதமாகிவிடும் என்பதால் நிர்வாகத்தின் அனுமதியில்லாமலேயே படத்தை விழாவிற்கு அனுப்பியது இந்தப்படத்தின் மீது தடை விதிக்கப்பட்டது. பின்னர் இது விலக்கி கொள்ளப்பட்டது.

கிராமப்புற மக்களின் வறுமையையும் கல்வியறிவு பெற முடியாத அவர்களின் சூழ்நிலையை படம் வெளிப்படுத்துவதாக சித்தரித்திருப்பதால் அரசு தடையை ஏற்படுத்தியிருக்கலாம் என்று யூகிக்கிறேன். பெர்லின் திரைப்பட விருது உட்பட பல விருதுளை இந்தப்படம் பெற்றுள்ளது.

()

பின்குறிப்பு: 'பொல்லாதவன்' திரைப்பட பார்வையை எழுதும் போது, அந்தப்படத்தின் சில காட்சிகள் Beijing Bicycle திரைப்படத்தோடு ஒத்ததாக இருப்பதாக, மதி பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறிப்பே இந்தப் படத்தை பார்க்க என்னைத் தூண்டியது. அவருக்கு நன்றி. வாகனத்தின் மீது நாயகனின் தீவிர ஈர்ப்பும், அதற்காக தந்தையிடம் சண்டையிடுவதும், வாகனத்தின் மூலம் தன்னுடைய காதலைப் பெறுவது, வாகனத்திற்காக ரத்தம் சிந்துவது... என பல காட்சிகள் தமிழ்ப்படத்திலும் புத்திசாலித்தனமாக மறுபதிவு செய்யப்பட்டிருக்கின்றன. தமிழ் இயக்குநர்கள் இதற்கான credit-களை வெளிப்படையாக டைட்டிலில் குறிப்பிடுவதுதான் யோக்கியமான செயலாக இருக்கும்.

Image Courtesty: wikipedia

உலக சினிமா ஒன்றை காண வேண்டுமா?

உங்களில் பெரும்பாலோரைப் போல எனக்கும் கலைப்படம் என்றழைக்கப்படும் artfilm மீது ஒவ்வாமை இருந்ததுண்டு. 'ஒரு ஆள் பீடி பிடித்துக் கொண்டிருப்பதை அரை மணி நேரமும் ஒண்ணுக்கு போவதை கால் மணி நேரமும் காட்டிக் கொண்டிருப்பார்கள்' என்று நானும் நண்பர்களுடன் பேசிச் சிரித்திருக்கிறேன், சத்யஜித்ரேவின் படங்களை தொலைக்காட்சியில் - என்னுடைய இருபதாவது வயதில் - காணும்வரை. அதில் 'பதேர் பாஞ்சாலி 'சாருலதா' 'ஜனசத்ரு' போன்ற வங்காளிப் படங்கள் என்னுடைய திரைப்பட ரசனையையே மாற்றியமைத்து விட்டன. இத்தனை நாள் யதார்த்தமேயில்லாத, மக்களின் வாழ்வனுபவங்களை பிரதிபலிக்காத, வெறும் குப்பைத்தனமான பொழுதுபோக்கு படங்களை பார்த்துக் கொண்டிருந்தோம் என்று தோன்றியது.

பொருளாதாரச் சூழ்நிலை காரணமாக இயந்திர வாழ்க்கையோடு போட்டி போட்டுக் கொண்டிருந்ததினால் அதிகத் திரைப்படங்களை காணும் வாய்ப்பு இல்லாமல் போனாலும் சிற்றிதழ்களின் மூலமாக உலகத் திரைப்படங்களின் இயக்குநர்களின் பரிச்சயம் ஏற்பட்டது. சில திரைப்படங்களை குறித்த கட்டுரைகளை வாசிக்கும் போது அந்தப்படங்களை உடனே காண வேண்டும் என்கிற ஆவல் ஏற்படும். ஆனால் அந்தத் திரைப்படங்களின் திரையிடல் குறித்த தகவலின்மையால் அது நிறைவேறாத ஆசையாகவே போய்விடும். இந்தத் தொலைக்காட்சிகள் வணிக நோக்கமுள்ள நிகழ்ச்சிகளின் நடுவே ஒரு இரண்டு மணிநேரத்தையாவது ஒதுக்கி ஏன் நல்ல திரைப்படங்களை ஒளிபரப்பி தங்கள் பாவங்களை ஒரளவிற்காவது கழுவிக் கொள்ளலாமே என்று தோன்றும். ஒரு முறை சத்யஜித்ரேவின் 'அகாந்துக்' (agantuk) திரைப்படத்தை தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்புகிறார்கள் என்று கேள்விப்பட்டு உறவினர் ஒருவரின் இல்லத்திற்கு காணச் சென்றேன். அவரோ படம் துவங்கின ஐந்தே நிமிடத்திலேயே "என்னப்பா படமிது" என்று வேறு சானலுக்கு மாற்றியதில் அவமானமாக திரும்பினேன்.

Photobucket

எதையோ சொல்லப் போய் என்னுடைய சொந்தக்கதையை விவரித்ததற்கு மன்னிக்கவும். உலகத் திரைப்படங்களின் பரிச்சயம் இல்லாதவர்கள் அல்லது பரிச்சயம் இல்லாமலேயே அதன் மீது ஒவ்வாமை கொண்டிருப்பவர்களுக்கு ஓர் வேண்டுகோள். இந்திய நேரப்படி, இன்றிரவு (25.12.2007) 08.00 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் 'Baran' என்கிற இரானியத் திரைப்படம் ஒளிபரப்பாகவிருக்கிறது. சர்வதேச அரங்கில் அந்த குட்டி தேசத்திலிருந்து வரும் திரைப்படங்கள் பெரும்பாலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன. Majid Majidi என்கிற சிறந்த இரானியத் திரைப்பட இயக்குநரின் உருவாக்கத்தில் தயாரிக்கப்பட்ட படமிது.

ஒன்றரை மணி நேரத்தை தியாகம் செய்து இந்தத் திரைப்படத்தை பாருங்கள். தமிழ்த்திரைப்படங்கள் உருவாக்கி வைத்திருக்கும் நச்சுச்சூழலில் - அது தெரியாமலே - நாம் உழன்று கொண்டிருக்கிறோம் என்று தெரியும்.

Baran பற்றிய விக்கிமீடியாவின் அறிமுகம் | Baran பற்றிய ஹரன்பிரசன்னாவின் பதிவு

Friday, December 14, 2007

Nayak (1966) - Satyajit Ray

ஒரு நடிகரின் அக, புறச் சிக்கல்களை இவ்வளவு கூர்மையாக, நெருக்கமாக அவதானித்த திரைப்படத்தை இதுவரை நான் கண்டதில்லை. சத்யஜித்ரே என்கிற திரைப்பட மேதையால் இது சாத்தியமாகியிருக்கிறது. திரைப்பட உலகை, அதன் மாந்தர்களை சித்தரித்து தயாரிக்கப்பட்ட படங்கள் வெகு சொற்பமே. தமிழ்த்திரைப்பட உலகில், இவ்வாறு எடுக்கப்படும் படங்கள் 'சென்டிமென்ட்டுக்கு' எதிரானதாகவே கருதப்படுகிறது, அவை பொதுவாக வணிகரீதியாக வெற்றி அடையாததால். நட்சத்திரம், கல்லுக்குள் ஈரம், ஒரு வீடு, இருவாசல், என்று சில படங்கள் நினைவுக்கு வருகின்றன.

பொதுவாகவே நாம் நடிக, நடிகையர்களை அவர்களது செல்வச் செழிப்பு மற்றும் அளவுக்கதிகமான புகழ் காரணமாக வியப்புடனும், பொறாமையுடனும், வெறுப்புடனும்தாம் நோக்குகிறோம். நாணயத்தின் மறுபக்கத்தை பார்த்தால், அவர்களின் பளபளப்பான முகத்தைத் தாண்டி முட்கீரிடத்தை அணிந்து கொண்டு அவதிப்படும் முகமொன்று இருப்பது பெரும்பாலும் நமக்குத் தெரியாமலே போகிறது. தோல்வியின் கருநிழல் தங்கள் மீது பரவி விடவே கூடாது என்கிற திகிலுடனேயே அவர்களின் வாழ்வு கழிகிறது. ஒவ்வொரு படவெளியீடுகளின் போதும் மூலநோய்க்காரனைப் போலவே அவர்கள் அவஸ்தையோடு திரிகிறார்கள். பரமபத விளையாட்டு போல, எவ்வாறு விரைவில் உயரத்தை அடைந்தார்களோ, அதே போல் ஒரு நீளமான பாம்பின் மூலம் எந்நேரமும் அவர்கள் ஆரம்பப் புள்ளியை அடையக்கூடும் என்கிற insecurity feeling அவர்களை குடைந்து கொண்டே இருக்கிறது.

()

புகழின் உச்சியில் இருக்கிற நடிகனொருவன், முதன் முதலாக தோல்வியின் கசப்பை ருசித்து விடுவோமோ என்று மன உளைச்சலுக்கு ஆளாவதும், நனவோடை உத்தியின் மூலம் அவனுடைய வாழ்க்கையின் முக்கியமான திருப்பங்களும் துரோகங்களும் உள்மன சிக்கல்களும் பார்வையாளனுக்கு உணர்த்தப்படுவதுதான் இந்தப் படைப்பின் (Nayak) முக்கிய அம்சம்.



அரிந்தம் முகர்ஜி (உத்தம் குமார்) என்கிற புகழ்பெற்ற வங்காள நடிகர் விருதொன்றை பெறுவதற்காக ரயில் மூலம் டில்லிக்குச் செல்கிறார். அங்கே பலவிதமான பயணிகளை அவர் சந்திக்க நேர்கிறது. அவருடைய சமீப்த்திய படம் தோல்வியடைப் போவதாக அவர் உணர்வதும், அவரைப்பற்றிய சர்ச்சையான ஒரு விஷயம் அன்றைய நாளிதழ்களில் பிரசுரமாகியிருப்பதும் அவரை ஒருவிதமான மனநெருக்கடிக்கு ஆளாக்குகிறது.

சிறுபத்திரிகை ஒன்றை நடத்தும் அதிதி சென்குப்தா (ஷர்மிளா தாகூர்) தன் தோழியின் ஆலோசனை காரணமாக நடிகரை சந்தித்து ஒரு நேர்காணலுக்காக அணுகுகிறார். சினிமாவின் மீது அவ்வளவாக ஆர்வமில்லாத அவரின் முயற்சி நடிகரின் அலட்சியம் காரணமாக வெற்றிகரமாக அமைவதில்லை.

பணத்தின் புதைகுழியில் மாட்டிக் கொள்வதாக அன்றிரவு நடிகன் காணும் கனவு அவனை முழுவதுமாக கலைத்துப் போடுகிறது. மிகவும் தனிமையாக உணரும் அவன், தன்னுடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்வதற்காக அதிதியை அணுகி தன்னுடைய சினிமா பயணத்தின் முக்கிய நிகழ்வுகளை தன்னிச்சையாக சொல்லத் துவங்குகிறான். அதிதி இதை பதிவு செய்கிறாள்.

(1) நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் அரிந்தமுக்கு சினிமா வாய்ப்பொன்று கிடைக்கிறது. அவரின் நாடக குருவான சங்கருக்கு இது பிடிக்கவில்லை. சினிமா உலகின் மாயைகளையும் மாய்மாலங்களையும் எடுத்துரைத்து போக வேண்டாமென எச்சரிக்கிறார். ("சினிமாவில் நீ இயக்குநரின், எடிட்டரின், ஒப்பனையாளனின் கைப்பொம்மையாகத்தான் இருக்க வேண்டும். There is no art in Cinema"). கட்டிப் போடப்பட்ட நிலையில் இருக்கும் அவனுக்கு சங்கரின் தீடீர் மரணம் விடுதலை உணர்வை அளிக்கிறது.

(2) முதல் நாள் படப்பிடிப்பின் போது முகுந்த் லஹரி என்கிற மூத்த நடிகர் அவனுடைய நடிப்பை குறைசொல்லி அவமானப்படுத்துகிறார். அரிந்தம் சற்றே புகழ் பெற்ற நடிகராகிவிட்ட பிறகு, தோல்வியடைந்து நொடித்துப் போய் உதவி கேட்டு வரும் மூத்த நடிகருக்கு உதவி செய்ய மறுத்து பழிவாங்குகிறான்.

(3) அரிந்தம் நாடக நடிகராக இருக்கும் சமயத்திலிருந்தே நண்பராக இருப்பவர் பைரேஷ். தொழிற்சங்க நடவடிக்கைளில் தீவிரமாக ஈடுபடும் நண்பரின் செயல்களில் இருந்து ஒதுங்கியே இருக்கிறான் அரிந்தம். காலம் அவர்களை பிரிக்கிறது. நான்கு வருடங்கள் கழித்து நடிகனாகியிருக்கும் தன் நண்பனை காண வருகிறார் பைரேஷ். 24 நாட்களாக நீண்டுக் கொண்டிருக்கும் ஒரு தொழிற்சங்க போராட்டத்தில், தோழர்களை உற்சாகப்படுத்துவதற்காக நடிகனை வந்து பேசச் சொல்கிறார். அவ்வாறு செய்வது தன் தொழிலை பாதிக்கும் என்கிற அரிந்தம், நண்பனின் கோரிக்கையை தீவிரமாக மறுத்து விடுகிறான்.

(4) சினிமா வாய்ப்பொன்று தேடி வரும் ஒரு பெண்ணை தன்னுடைய உபயோகத்துக்கு பயன்படுத்திக் கொள்கிறான். அவளுடைய கணவனுடன் ஏற்படும் கைகலப்புதான் நாளிதழ்களில் செய்தியாக வந்து நடிகனை பயண நாளன்று தொந்தரவு செய்கிறது.

()

மேற்கண்ட நிகழ்வுகளை கிட்டத்தட்ட ஒரு சுய வாக்குமூலம் போல் அதிதியிடம் சொல்லும் அரிந்தம், இந்த சுயபரிசோதனையால் தீவிர குற்றவுணர்வுக்கு ஆளாகி உச்சக்கட்ட போதையில் தற்கொலையை யோசிக்கிறான். அதிதி அவனை தடுத்து நிறுத்தி, தான் பதிவு செய்ததையெல்லாம் கிழித்துப் போகிறாள். நடிகனின் நிலையை நினைத்து பரிதாபப்படும் அவள், அவனை ஆற்றுப்படுத்தி எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் அளிக்கிறாள். எல்லா குற்றங்களையும் கொட்டிவிட்ட நடிகன் பயண இறுதியில் ஆசுவாசமாக தன்னுடைய "நடிக" முகமூடிக்கு திரும்புவதுடன் படம் நிறைகிறது.

மேற்சொன்ன நிகழ்வுகளில் நான்காவது மட்டும் பார்வையாளர்களுக்கு நேரடியாக சொல்லப்படாமல் உணர்ந்து கொள்ளப்படும் வகையில் சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வையும் நேரடியாக ஒப்புக் கொள்வதற்காக அதிதியை நடிகன் அணுகும் போது அவள் அவனை தடுத்து நிறுத்துகிறாள்.

()

சிக்கலான இந்தப் படைப்பிற்கு சத்யஜித்ரே அமைத்திருக்கும் நுட்பமான, திறமையான திரைக்கதை என்னை அயர வைக்கிறது. (Best screenplay and story award 1967). படம் முழுவதும் ரயிலிலியே, இரண்டே நாட்களில் அமைகிறது. நடிகனின் மனநெருக்கடி ஆரம்பமாவதும், பயங்கர கனவுகள் மூலம் அது தீவிரமாவதும் தற்கொலை எண்ணத்தை அடையும் உச்சத்தையும் நடிகனின் கனவுகள் மூலமும், நனவோடை உத்தி மூலம் தன் பழைய சம்பவங்களை நினைவு கூர்வதின் மூலமும் சொல்கிறார்.

படத்தின் உப நிகழ்வுகளாக, ஒரு விளம்பர நிறுவன முதலாளி, தன்னுடைய வியாபார லாபங்களுக்காக, ஒரு முக்கிய client-ஐ கவர்வதற்காக தன்னுடைய மனைவியை உபயோகப்படுத்த முயல்வதும், அவளோ சினிமாவில் நடிக்கும் கனவில் இருப்பதும் சுவாரசியமாக சித்திரக்கப்படுகிறது. யாரை கவர்வதற்காக விளம்பர நிறுவனர் படம் முழுவதும் அலைகிறாரோ அவர் உபயோகப்படாமல் போவதும், எதிர் இருக்கையில் பண்டாரம் போல் அமர்ந்திருக்கும் ஒரு நபர் பட இறுதியில் தானே முன்வந்து தன்னுடைய நிறுவனத்திற்காக விளம்பர ஒப்பந்தம் தர தீர்மானிப்பதும் சுவாரசியமான நீதி.

படத்தின் நிறைய காட்சிகளில் உள்ள sub-textகளை நாம் கூர்மையாக கவனிக்க வில்லையெனில் இழக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது. நடிகனின் எதிர் இருக்கையில் இருக்கும் ஒரு குடும்பத்தில் உள்ள, ஒரு மாத காலமாக நோய்வாற்றிருக்கும் 16 வயது மகள் நடிகனை காதலுடன் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கும் அதே சமயத்தில், அவளுடைய தாயும் நடிகன் கவனிக்காத சமயத்தில் தன்னை கண்ணாடியில் சரிபார்த்துக் கொள்வதில் எந்த அசெளகரியமான செய்தியோ மறைந்திருக்கிறது. "அமெரிக்கப் படங்களின் தரம் இங்கே இல்லை" என்று வெளிநாட்டு புகழ் பாடும் தந்தை, விளம்பர நிறுவனரின் மனைவியிடம் அசட்டுத்தனமாக வழிகிறார்.

படத்தில் வரும் சிறுசிறு கதாபாத்திரங்களும் திறமையாக நடிப்பதை நான் ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன். நடிகனின் உதவியாளனிடம் தென்படும் அலட்சியமும், சினிமாவை வெறுத்து கட்டுரை எழுதும் வயதான எழுத்தாளரும், (இவரை நடிகன் அவ்வப்போது சீண்டிக் கொண்டே இருக்கிறான்) அதிதியின் தோழியாக வருபவரும் (நடிகனை பார்த்தவுடன் வெளிப்படையாக உணர்ச்சிவசப்படுவதும் உடனே அதை மறைத்துக் கொள்வதும்) அவரின் கணவரும், ஆரம்பத்தில் மிடுக்காகவும் நொந்து போன சமயத்தில் ஒடுங்கிப் போய் அமர்ந்திருக்கும் மூத்த நடிகரும், தொழிற்சங்க தோழரும், தந்திரமாக இயங்கும் தொழில் சாகசக்காரராக இருக்கும் விளம்பர நிறுவனரும் .............என எல்லோருமே திறமையாக தன் பங்களிப்பை அளித்து இயக்குநரோடு ஒத்துழைத்திருக்கின்றனர்.

()

உத்தம் குமாரின் நடிப்பை இப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறேன். இந்தப்படம் தயாரிக்கப்படும் போது அவர் நிஜமாகவே புகழ் பெற்ற நடிகராக இருந்தார் என அறியும் போது அவரது துணிச்சலை நம்மூர் நடிகர்களுடன் ஒப்பிட்டு பாராட்டவே தோன்றுகிறது. ஒரு நடிகனுக்கேயுரிய உடல்மொழியுடன் அவர் படம் பூராவும் வியாபித்துக் கொண்டிருக்கும் போது பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

தன்னுடைய முதல் படம் வெளிவரப் போவதற்கு முந்திய நாளில், அவர் பீதியுடனும் அதே சமயத்தில் நம்பிக்கையுடனும் தன்னுடைய நண்படனும் நடத்தும் உரையாடல் ஒரு சிறந்த உதாரணம். ஷர்மிளா தாகூரை முதலில் ஒரு சாதாரண ரசிகையாக நினைத்து ஒதுக்குவதும் பின்னர் அவளுடைய நுட்பமான அறிவுக்கூர்மையை வியந்து தன்னை அவளிடம் ஒப்படைப்பதும் என உத்தம் குமார் சிறப்பாக நடித்திருக்கிறார்.

நடிகனின் கனவுக்காட்சிகள் மிகுவும் பொருத்தமான குறியீட்டுத் தன்டையுடனும் திறமையாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது. நனவோடை காட்சிகளின் தொடர்ச்சி நிகழ்கால காட்சியுடன் பொருத்தமாக இணைக்கப்படும் உத்தியை கவனித்த போது ரேவின் திறமை குறித்து மிகுந்த நெகிழ்ச்சி ஏற்படுகிறது.

()

இந்தப்படம் அப்படியே யோக்கியமாக தமிழில் தயாரிக்கப்பட்டால், யார் யார் பிரதான பாத்திரங்களில் நடிக்கக்கூடும், அது எப்படியிருக்கும், தமிழ் கூறும் நல்லுலகம் இந்தப்படத்தை எப்படி அணுகும் என்பதை யோசித்துக் கொண்டிருந்தது எனக்கு சுவாரசியமான விஷயமாக இருந்தது.

Sunday, December 09, 2007

எவனோ ஒருவன் - திரைப்பார்வை

'கல்லூரி' திரைப்படத்திற்கு போவதென்று முடிவாயிற்று. வழக்கமாக நான் திரைப்படங்களை வந்த புதிதில் பார்க்க விரும்புவதில்லை. அதன் ஆரவாரங்கள் அடங்கும் வரை காத்திருப்பேன். குடும்பத்தினரின் வற்புறுத்தல் காரணமாக இது நிகழ்ந்தது. 'அழகிய தமிழ் மகன்'.. போகலாம் என்று தொண தொணத்துக் கொண்டிருந்த மகளை "அந்தப்படம் பார்த்துவிட்டு நூறு பேர் மனநல மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களாம்" என்று நல்ல பொய் சொல்லி அடக்கியாயிற்று. 'காதல்' திரைப்பட இயக்குநரின் அடுத்த படம் மீது எனக்கும் இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பிருந்தது. ஆனால் தேவி திரையரங்கம் எங்களை 'housefull' பலகையுடன் இனிதே வரவேற்றது. சினிமாவுக்கு என்று கிளம்பி வெறுமனே வீடு திரும்புவது நம் கலாச்சாரத்திற்கு ஏற்புடைய விஷயமில்லை அல்லவா? வேறு 'நல்ல' படத்திற்காக தேடியதில் பக்கத்திலிருந்த அரங்கிலிருந்த இந்தப்படம் கண்ணில் பட்டது. அதுவும் நல்லதாய்ப் போயிற்று. இல்லையென்றால் இப்படியொரு சிறந்த படத்தை காண்பது இன்னும் தாமதப்பட்டிருக்கும்.

அப்படி என்ன இந்த படத்தில்..? சொல்கிறேன்.


()

பேருந்தில் ஐம்பது பைசா பாக்கி தராமல் ஏமாற்றுகிற நடத்துநர் மீது ஏற்படுகிற சுயநலக் கோபம் முதல், ஏதோ காசு கொடுத்து கூட்டி வந்த விபச்சாரி மாதிரி ஆட்சிக் கட்டிலை (?) நீ ஆறுமாதம் நான் ஆறுமாதம் என்று பங்கு போட்டுக் கொள்கிற கேடு கெட்ட அரசியல்வாதிகள்... ஒரு படைப்பாளி தன் எண்ணங்களை சுதந்திரமாக சொல்லவிடாமல் மாநிலம் மாநிலமாக துரத்துகிற மதஅடிப்படைவாதிகள் மீது ஏற்படுகிற பொதுநலக் கோபம் வரை.... நம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு வகையில் சில சமூக கோபங்கள் இருக்கும். கீழ்வர்க்கத்தினருக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லாததால் தங்கள் கோபங்களை உடனே வெளிப்படுத்தி விட முடிகிறது. உயர் வர்க்கத்தினர் யார் மூலமாகவாவது தங்கள் கோபங்களை புன்னகை முகத்துடன் தீர்த்துக் கொள்ள முடிகிறது. ஆனால்... இந்த கோழைத்தனமான படித்த நடுத்தர வர்க்கம் ... தங்கள் கோபங்களை தங்களுக்குள்ளேயே மென்று முழுங்கிக் கொள்கிறது. ஆதிமனிதன் இன்னும் உள்ளுக்குள் அமர்ந்திருந்தாலும் இந்த 'எழவெடுத்த படிப்பு' என்கிற சமாச்சாரம் 'நாகரிகம்' என்ற பெயரில் நம்முள் புதைத்திருக்கிற அசட்டுத்தனம், விபத்தில் அடிபட்டிருக்கிறவனுக்கு உதவப் போனால் பின்னால் என்ன பிரச்சினையாகுமோ என்கிற சுயநல எண்ணம், 'நாலு பேர்' நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ" என்கிற தேவையற்ற கவலை, 'யாரோ எப்படியோ போகட்டும். நமக்கு எதற்கு வம்பு' என்று ஒதுங்கிச் செல்கிற மனோபாவம்.. போன்றவைகள் நம்மை இறுக்கமாக கட்டிப் போட்டிருக்கின்றன.

"புளிச்சென்று" சாலையில் துப்புகிற முன்னால் சென்று கொண்டிருக்கும் நபரை, சிக்னல் சிவப்பில் நிற்க பொறுமையில்லாமல் சாலையில் கடக்கும் நம்மை மேலே இடிக்கிறாற் போல் விரையும் கார்காரனை, மார்ச்சுவரியில் பிணத்தை காக்க வைத்து பேரம் பேசும் மருத்துவ ஊழியனை... யார் மீதும் நம்மால் நம்முடைய கோபத்தை நேராக வெளிப்படுத்த முடிவதில்லை. மனசுக்குள் சபிப்பதிலும், வெற்று முணுமுணுப்பிலுமேயே அது நமத்துப் போகிறது. அவ்வாறு அடுக்கி வைக்கப்படும் கோபங்கள் அழுத்தம் தாங்காமல்.. ஒரு நாள் பீறிட்டுக் கொண்டு வந்தால் என்ன ஆகும்?... இதுதான் 'எவனோ ஒருவனின்' மையம்.

ஆனால் இப்படிப்பட்ட கோபங்கள் எதுவுமேயில்லாமல் வாழ்க்கையை அதன் யதார்த்தங்களோடு அசிங்கங்களோடு உள்வாங்கிக் கொண்டு மெளனமாக ஆட்டுமந்தை போல் வாழ்கின்ற கூட்டமும் இருக்கிறது. அது வேறு உலகம். ஆனால் கோபங்களை இப்படி வெற்றுத்தனமாக எழுதிக் கொண்டிருக்கிறேனே, என்னைப் போல் எழுதி, உரக்கப்பேசி சுயமைதுனம் போல் வடிகால் தேடிக் கொள்கிறவர்களும் உண்டு.

Photo Sharing and Video Hosting at Photobucket


ஸ்ரீதர் வாசுதேவனின் இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து படம் துவங்குகிறது. சில அடிப்படையான கொள்கைளோடு வாழ நினைக்கிற அவனை சமூகம் "பைத்தியக்காரன்" என்கிறது. "டியுஷன் போனாத்தான் பாஸாக முடியும்னா, அப்ப எதுக்கு ஸ்கூலுக்கு போகணும். நேரா டியூஷனுக்கே போயிடலாமே?" என்று கேட்கிற பைத்தியக்காரன். டொனேஷன் கேட்டதற்காக தன் குழந்தையை மாநகராட்சி பள்ளிலேயே படிக்க வைக்கலாம் என்கிற பைத்தியக்காரன். சாலையோரம் ஓவியம் வரையும் சிறுவனின் இருமலுக்கு மருந்துக்காக பணம் தருகிற பைத்தியக்காரன். தான் பணியாற்றும் வங்கியில் முறைகேடாக கடன் வாங்க முயலும் தொழிலதிபனை தடுத்து நிறுத்தி பகையை சம்பாதித்துக் கொள்கிற பைத்தியக்காரன். இரண்டு ரூபாய் அதிகமாக கொள்ளையடிக்கும் பெட்டிக் கடைக்காரனை நையப்புடைக்கும் .... ஊருக்காக நீச்சல் குளம் கட்டித்தரும் ஆனால் குடிநீர் வழங்க மறைமுகமாக காசு வசூலிக்கும் ஏரியா கவுன்சிலரை கத்தியால் குத்தும் ..... ஏழைகளுக்கு இலவச மருத்துவம் தருவதாக அரசாங்கத்திடம் சலுகை வாங்கி விட்டு அதைப் பின்பற்றாத மருத்துவனின் முன்னால் துப்பாக்கி நீட்டும் .... போதை மருந்து விற்பனை செய்யும் கும்பலின் குடிசைகளை கொளுத்தும்....... இப்படிப் பல பைத்தியக்காரத்தனங்கள் செய்யும் ஒருவனை ஊரில் உலவ விடலாமா?

எந்தச் சமூகத்திற்காக உண்மையாய் பாடுபடுகின்றனரோ, அவர்கள் அந்தச் சமூகத்தினலாயே கொல்லப்படுவது தொடரும் நிகழ்வு. காந்தி முதல் மார்ட்டின் லூதர் கிங் வரை நம் முன்னாலேயே பல வரலாற்று உண்மைகளை காண முடியும். ஸ்ரீதர் வாசுதேவனும் அப்படித்தான் ஆனானா, இல்லை சாமர்த்தியமாக தப்பித்துக் கொண்டானா என்பதை அறிய இந்தப் படத்தைப் பாருங்கள்.

"தயாரிப்பாளர் நஷ்டமடையக்கூடாது. அதாங்க முக்கியம்" என்கிற மகா தத்துவத்தை உதிர்க்கும் கேடு கெட்ட சூப்பர் ஸ்டார்களும் இளையதளபதிகளும், ஊடகங்களிலேயே மிகச் சக்தி வாய்ந்த திரைப்படம் என்னும் ஊடகத்தில் மார்பகங்களையும் தொப்புள்களையும் மாத்திரமே காட்டி ஒரு பிம்ப்-பை போல பிழைத்துக் கொண்டிருக்கிறோமே என்கிற சொரணையேயில்லாத வணிக இயக்குநர்களும், "இது ஒரு தொழில். இங்கு லாபம்தான் பிரதானம்" என்று பிதற்றும் சமூக பொறுப்பேயில்லாத தயாரிப்பாளர்களும் உலவுகின்ற சினிமா உலகில், வாழ்க்கையை பிரதிபலிக்கும், சமூக பிரச்சினைகளை மையப்படுத்தும், மனித வாழ்க்கையின் அகபுறச் சிக்கல்களை அலசி ஆராயும் சொற்ப அளவு திரைப்படைப்பாளிகளில் ஒருவராக 'மாதவனை' என்னால் பார்க்க முடிகிறது. வணிகப்படங்களிலும் தன்னுடைய தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்துகிறவர், 'அன்பே சிவம்' போன்ற படங்களிலும் 'இமேஜ்' பார்க்காது நடித்து தன்னை நிலை நாட்டிக் கொண்டவர். இந்தப்படத்தை நகரில் அவரே செலவழித்து விநியோகம் செய்திருக்கிறார் என்பதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது.

()

ஸ்ரீதர் வாசுதேவனாக நடிகர் மாதவன். தினமும் போகும் ரயிலில் ஜன்னலோர இருக்கை கிடைப்பதே ஒரு luxury-யான விஷயம் என்னும்படியான வாழ்க்கை நடத்துகிற பாத்திரத்தில் இயல்பாய் கரைந்து போயிருக்கிறார். கண் முன்னே நடக்கின்ற தவறுகளை கண்டு மனம் கொதித்துப் போகிறவர். மேலே குறிப்பிட்டிருக்கிற அத்தனை பைத்தியக்காரத்தனங்களையும் செய்ய, அவர் மனைவி அவர் முன் வைக்கும் ஒரு கேள்வியே அடிப்படையாக அமைகிறது. "அய்யோ திருட்டுப் போயிடுச்சேன்னு கத்திக் கதர்றவன விட, திருடன ஓடிப் போய்ப் பிடிக்கிறவன்தான் ஆம்பளை"

கணவன் டொனேஷன் தர மறுத்ததால் தன் மகளுக்கு ஆங்கில பள்ளியில் சீட் கிடைக்காமல் போய்விட்டதே என்கிற ஆதங்கத்தின் உச்சத்தில் அவர் மனைவி வெடிக்கும் போதுதான் அந்தக் கேள்வி முன்வைக்கப்படுகிறது. அதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்த அத்தனை கோபங்களும் பொங்கியெழ, ஸ்ரீதர் வாசுதேவன், தன் கரைகளை உடைத்து சமூகத்தின் தவறுகளைத் திருத்த முயல்வதுதான் அத்தனை பைத்தியக்காரத்தனங்களும்.

"தொணதொணக்கும்" மனைவியை சகித்துக் கொள்வதிலாகட்டும், பெட்டிக்கடைக்காரனை அடித்துத் துவைத்து 'இரண்டு ரூபாயை" கேட்கும் போதும், தவறு செய்கிற மேலாளருக்கு எதிராக வெடிப்பதிலும், ஒரு பின்னிரவு சாலையோரத்தில் ரோட்டோரச் சிறுவனிடம் பேசுவதாக.. வாழ்க்கையைப் பற்றி அழுத்தமாகவும் கோபமாகவும் அங்கலாய்ப்பதாகட்டும்.. உச்சமாக கடவுளுக்கு கடிதம் எழுதுவதாகட்டும்... வீட்டுக்குத் திரும்பி வந்துவிடுவேன் என்று மனைவிக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறுவதாகட்டும்... தன் மகளை காண அனுமதிக்குமாறு காவல்துறையினரிடம் வேண்டுவதாகட்டும்... தன்னுடைய உச்சபட்ச பங்களிப்பை இந்தப் படத்திற்கு அளித்திருக்கிறார் மாதவன். படத்தின் பெரும்பாலான கனமான காட்சிகளை தன்னுடைய தோள்களில் சுமந்திருக்கிறார். இந்தப்படம் அவருடைய திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாக அமையும் என்பதை - clicheவாக இருந்தாலும்- சொல்ல விரும்புகிறேன்.

()

ஸ்ரீதர் வாசுதேவனின் மனைவியாக சங்கீதா. ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தலைவியை மிக இயல்பாக பிரதிபலித்திருக்கிறார். "கிச்சன விட்டா ஹால்... ஹாலை விட்டா பெட்ரூம் இல்ல பாத்ரூம்.. இல்லன்னா ரெண்டு குடம் தண்ணி பிடிக்க தெருவுக்கு வர்றேன்... ரெண்டு பசங்கள கவனிக்கறது. இதை விட்டா நாள் பூராவும் எனக்கு என்னதான் வேலையிருக்கு?" என்று இவர் பொங்கும் போது பரிதாபமாகத்தானிருக்கிறது. "சும்மாத்தானே வீட்ல இருக்கா" என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிற மனைவிமார்களின் உண்மையான மனநிலை நமக்கு சொரேர் என்று உறைக்கிறது.

காவல் துறை அதிகாரியாக சீமான். குற்றவாளிகளை வெறும் கைதிகளாக பார்க்காமல் தர்க்க ரீதியாக சிந்திக்கும், சமூக அக்கறை கொண்ட அதிகாரி. "வொயிட் காலர்-லாம் கோபம் கொள்ள ஆரம்பிச்சிட்டான்னா ஒரு சமூகத்திற்கு அது ரொம்பவும் அபாயமாயிடும்" என்று இவர் சொல்கிற வசனம் (பகுதி வசனமும் இவரே) மிகவும் முக்கியமானது. "நான் நியாயமா சம்பாதிக்கிற காசை மட்டும் வெச்சுக்கிட்டு குடும்பம் நடத்த முடியுமா" என்று மனைவியிடம் குற்றவுணர்வுடன் கேட்கிற இவர், உயரதிகாரிகளின் அழுத்தம் தாங்காமல் ஸ்ரீதர் வாசுதேவன் மீது நடவடிக்கை எடுக்கப் போவது குறித்து கொள்கிற ஆவேசம் இயல்பானது. இவர் subtle ஆக நடிக்க முயன்றிருந்தாலும், ஒரே மாதிரியிருக்கிற முகபாவம் சற்றே சலிப்பை ஏற்படுத்துகிறது.

()

'டோம்பிலி ·பாஸ்ட்' என்கிற வெற்றி பெற்ற மராத்திய திரைப்படத்தின் தமிழ் வடிவமே 'எவனோ ஒருவன்'. இயக்குநர் ரிஷிகாந்த். படத்தின் துவக்கத்திலேயே, ஸ்ரீதர் வாசுதேவனின் இயந்திரத்தனமான வாழ்க்கையை பார்வையாளர்களிடம் establish செய்ய அலாரம், குளியல், ரயில் பயணம், வங்கி, தயிர்சாதம் என்று திறமையான எடிட்டிங் துணையுடன் துரிதமாக காட்சிகளை மாற்றி மாற்றி அமைத்து வைத்திருப்பது சுவாரசியமானதாக இருந்தது. திரைக்கதையை இன்னும் செப்பனிட்டிருந்து, காட்சிகளின் நம்பகத்தன்மையை கூட்டியிருந்தால் சிறப்பாக இருந்திருந்திருக்குமோ என்று தோன்றினாலும், படத்தின் ஆதார மையமான சமூக கோபங்களை பார்வையாளர்களிடம் சிறப்பாக தூண்டியிருப்பதால் இந்தக் குறைகளை பொருட்படுத்த தேவையில்லை என்றே தோன்றுகிறது.

நல்லவேளையாக இந்தப்படத்தில் பாடல்கள் எதுவுமில்லை. அதே போல் அபத்தமான நகைச்சுவைக்காட்சிகளோ, குலுக்கல் பாடல்களோ இல்லை. சஞ்சய் யாதவ்வின் திறமையான ஒளிப்பதிவு அதிகப்பிரசங்கித்தனமாகயில்லாமல் இயக்குநரோடு ஒத்துப் போயிருக்கிறது. சமீரின் பின்னணி இசை பார்வையாளர்களிடம் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.

'தன் வேலையை மாத்திரமே பார்த்துக் கொண்டு போகிற சமூகத்தில் 'எவனாவது ஒருவன்' தலையை தூக்கி கேள்வி கேட்டால் அவனை மண்ணோடு மண்ணாக இந்தச் சமூகம் அழுத்தி நசுக்கி விடுகிறது. அவ்வாறு போராடுபவனும் நாளடைவில் இந்தச் சமூகத்தால் மறந்து போகப்படுகிறான். சூடு, சொரணையில்லாத, முதுகெலும்பில்லாத இந்தச் சமூகம்... என்கிற சீமானின் சிந்தனை வரிகளோடு படம் நிறைவடைகிறது. நசுங்கிப் போன பெருச்சாளியின் மீது மொய்க்கின்ற ஈக்களோடு படத்தின் நிறைவுக் காட்சி பொருத்தமாக அமைகிறது. தொழில்நுட்பர்களின் பெயர்கள் இறுதியில் விரைகிற போது சமூகத்தின் பல்வேறுவிதமான நபர்களின் முகங்கள் காட்டப்படுவதும் பொருத்தமாகத்தானிருக்கிறது.

நம்மைச் சுற்றியிருக்கும் சமூகத்தை நேசிக்கிற, எல்லாவற்றிற்கும் சமூகத்தையே குறை கூறிக் கொண்டிருக்காமல் தன்னிடம் உள்ள குறைகளையும் திருத்திக் கொள்கிற, சமூக முரண்கள் மீது கோபம் கொள்கிற, இன்னமும் சூடு, சொரணைகளை பாக்கி வைத்திருக்கும் ஒவ்வொரு தனி மனிதனும் பார்க்க வேண்டிய படமிது.

()

எனக்குள் மிகுந்த பாதிப்பினை ஏற்படுத்தின இந்தப் படத்தினை, சக பார்வையாளர்கள் அணுகின விதம் எனக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது.

ஒரு திரைப்படத்தை எப்படி ரசிப்பது, அணுகுவது, மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் நாகரிகமாக இருப்பது என்பதை கல்வித் திட்டத்திலேயே கொண்டு வந்தால் கூட நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. படம் ஆரம்பிக்கும் நேரம் வரை வெளியில் புகைத்துவிட்டு, இருட்டில் அடுத்தவர்களின் கால்களை மிதித்து படத்தின் ஆரம்பக் காட்சிகளை பார்க்க விடாமல் செய்வது, கைபேசியில் பேசி வசனத்தை கேட்க விடாமல் செய்வது, ஏதாவது கமெண்ட்டுகள் சொல்லிக் கொண்டே சிரிப்பது, திரையரங்கிற்குள் அலைமோதிக் கொண்டு நுழைவது, வெளியேறுவது, படத்தின் இறுதிக்காட்சி வரை பொறுமையில்லாமல் எழுந்து அடுத்தவரையும் மறைப்பது, படத்தின் பின்னணியில் பணியாற்றியவர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லாதது என்று எவ்வாறெல்லாம் எரிச்சல்படுத்த முடியுமோ, அத்தனையையும் செய்கின்றனர். இவர்களைக் கூட மன்னிக்கலாம். சினிமா ஆர்வமுள்ளவர்கள் கூடும் சர்வதேச திரையிடல்களின் போது கூட சில "அறிவுஜீவிகளும்" இதே போன்று நடந்து கொள்வதுதான் கேவலம். தான் காணப் போகிற படத்தைப் பற்றின சில அடிப்படைத் தகவல்களை முன்னமே அறிந்து கொண்டு படத்தின் தொனியை தெளிவாக தெரிந்திருக்கிற பார்வையாளன், அரங்கில் ஏன் அப்படி அதிருப்தி குரல்களை எழுப்பிக் கொண்டிருக்கிறான் என்பதுதான் எனக்கு புரியவில்லை.

Friday, December 07, 2007

பொல்லாதவன் - திரைப்பார்வை

முதலில் இயக்குநர் வெற்றி மாறனுக்கு ஒரு பூச்செண்டு.

வணிக வெற்றியையே பிரதான நோக்கமாக கொண்ட படங்கள், "சக்ஸஸ் பார்முலா" என்ற பெயரில் பரிசோதனை முயற்சி செய்யத் துணிவில்லாமல் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கும் இயக்குநர்கள் மத்தியில், வணிகப்படமென்றாலும் சற்றே வித்தியாசமான திரைக்கதையுடனும் இயல்பான காட்சிப் பின்னணிகளுடன் படத்தை இயக்கியிருக்கும் வெற்றி மாறனை தாராளமாகவே வரவேற்கலாம். முதல் படமென்பதால் சில கட்டாயங்களுக்காக வணிக சமரசங்களை செய்ய வேண்டியிருந்திருக்கலாம். வெற்றிப்பட இயக்குநர் ஆகி விட்டதால் அடுத்த படங்களில் தன்னுடைய சுவைக்கேற்ப இயல்பான கதையையும் யதார்த்தமாகவும் படைக்கக்கூடும் என்ற நம்பிக்கையுடனே இவரை அணுகலாம் என்று தோன்றுகிறது.

ஒரு படத்தின் செயலாக்கத்தின் முழுக்கட்டுப்பாடும் இயக்குநரிடம்தான் இருக்க வேண்டும். ஸ்கிரிப்ட் தயாராகி களத்திற்கு சென்று இறங்கிய பிறகு ஹீரோவின் ஒன்று விட்ட சித்தப்பா சொன்னார் என்பதற்காக ஒரு சண்டைக்காட்சியையோ பைனான்ஸியரின் முதலீட்டு நிபந்தனைக்காக 'ஐட்டம்' பாடலையோ இணைப்பது போன்ற அபத்தங்கள் படத்தின் ஜீவனையே அழித்துவிடும். துரதிர்ஷ்டவசமாக இந்தப்படத்திலும் அந்த மாதிரி நிறைய அபத்தங்கள் இருந்தாலும் திறமையான திரைக்கதை இந்த அபத்தங்களை மழுப்பி விடுகிறது.

ஒல்லியாக இருந்தாலும் ஐம்பது பேரை வீழ்த்திவிடும் நாயகர்கள் உலாவும் இந்தச் சமயத்தில் "நான் மொக்கைதானே?" என்று நாயகனை வில்லனிடம் பேச வைத்திருப்பதே இயக்குநரின் வெற்றிதான்.

()

உலகப் புகழ் பெற்ற இத்தாலிய திரைப்படமான 'பைசைக்கிள் தீவ்ஸ்'-ஸின் வாசனை இந்தப்படத்தில் அடித்தாலும் இது வேறு திசையில் பயணிக்கிறது. வெட்டியாக ஊர்சுற்றிக் கொண்டிருக்கும் தனுஷீக்கும் அவனுடைய அப்பாவுக்கும் வழக்கமான "தண்டச்சோறு" குறித்தான சண்டை நடக்கிறது. "ஊர்ல இருக்கற அப்பனெல்லாம் தம் புள்ளங்களுக்கு செலவு செஞ்சு வேலை வாங்கிக் கொடுக்கறான். நீ என்னா செஞ்சே?" என்று எகிறும் மகனிடம் ரூபாய் எழுபதாயிரத்தை எறிந்து "எக்கேடானாலும் கெட்டுப்போ" என்கிறார் தந்தை. தன்னுடைய நெடுநாள் கனவான அதிசக்தி இருசக்கர வாகனத்தை வாங்கும் தனுஷீக்கு, வாகனம் வந்த பிறகு எல்லாமே நேர்மறையாக அமைகிறது. இரண்டு வருடமாக திரும்பிப் பார்க்காத காதலி புன்னகைப்பதும் (?) வீட்டில் சுமூகமான சூழ்நிலையுமாக, நல்ல வேலையுமாக...

ஒரு நாள் பைக் திருடு போகும் போது அத்தனையும் எதிர்மறையாக மாற, தனுஷ் திருடு போன பைக்கை தேடிச் செல்வது அவரை வன்முறையின் வெம்மையான உலகினுள் பயணம் செய்ய வைப்பதும் அதிலிருந்து அவர் வெற்றிகரமாக (வழக்கம் போல்) மீளுவளும்தான் கதையின் அடிப்படை.

()

தனுஷை முதல் படத்தில் பார்த்த போது "தோடா! இவனெல்லாம் நடிக்க வந்துட்டான்' என எண்ண வைத்தவர். ஆனால் 'காதல் கொண்டேன்'-ல் அவர் விஸ்வரூபம் எடுத்த போது சிறந்த இயக்குநரால் கையாளப்பட்டால் இவரின் திறமை நன்றாக வெளிப்படும் என்று தோன்றியது. 'புதுப்பேட்டை'யில் அவர் தனது பங்களிப்பை சிறப்பாக அளித்திருந்த போதும், நம்பகத்தன்மையில்லாத காட்சியமைப்புகளால் அது வெற்றி பெறவில்லை. இந்தப் படத்திலும் அதேதான் நேர்ந்திருக்கிறது. அரிவாளின் கனம் கூட இல்லாத ஒரு சராசரி இளைஞன் நாலைந்து பேரை தாக்குவதாக காட்டும் போது புன்னகைதான் வருகிறது.

என்றாலும் தனுஷ் ஒரு கீழ்நடுத்தர இளைஞனை சிறப்பாகவே பிரதிபலிக்க முயன்றிருக்கிறார். அப்பாவிடம் அடிவாங்கி விட்டு வாதாடும் போது நம் பக்கத்து வீட்டு இளைஞனின் நினைவு வருகிறாற் போல் சிறப்பாக நடித்திருக்கிறார். அப்பாவாக மலையாள நடிகர் முரளி. மகனிடம் உள்ள love & hate உறவை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அம்மாவாக பானுப்பிரியா... அய்யோ பாவம். (புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக ஸ்ரீதேவியை பார்த்து மூக்கை அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னால் எவ்வளவு அழகாக இருப்பார்.. அதுவும் அந்த exclusive கண்கள்...)

நாயகியாக திவ்யா. எப்போதும் தூங்கி எழுந்த முகத்துடனே இருக்கிற இவரை எப்படி தேர்வு செய்தார்கள் என்றே புரியவில்லை. இதைத் தவிர சிம்ரன், சிநேகா, அசின்... என்று தமிழர்களின் ரசனை குறித்தே எனக்கு நகைப்பாக இருக்கிறது, எப்படி ரசிக்கிறார்கள் என்று. சரி ஒழிந்து போகட்டும். இரண்டு வருடங்களாக ஹீரோவை வெறுக்கும் இவர், பைக் வாங்கியவுடன் காதல் வருவதாக காட்டியிருப்பது பெண்களை கொச்சைப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. (அல்லது இதுதான் இன்றைய நிஜமோ).

டேனியல் பாலாஜி. இன்னொரு திறமையான நடிகர் இதில் எதிர்நாயகனாக வருகிறார். வில்லன் என்றவுடன் புஜபராக்கிரமசாலியாக சித்தரிக்கப்படாமல் அவரது மூத்த சகோதரரால் (கிஷோர் குமார்) "சப்பை" என்று விளிக்கப்படும் அளவிற்கு விநோதமான தந்திர கோழையாக இருக்கிறார். கிஷோரும் தன் திறமையான உடல்மொழியாலேயே வன்முறை காட்சிகளை அதிகம் ரத்தம் சிந்தாமல் வெளிக்கொணர்கிறார்.

()

முன்பே சொன்னது போல் திறமையான திரைக்கதைதான் இந்தப்படத்தை தூக்கி நிறுத்துகிறது. நாயகன் பார்வையாளர்களுக்கு தன் கதையை narrate செய்யும் அதே நேரத்தில் வில்லனும் தன்னுடைய பார்வையில் அதை தொடர்கிறான். திருடு போகும் பைக் சட்ட விரோத கும்பலால் எப்படியெல்லாம் கையாளப்படுகிறது என்று தொடர்ச்சியாக காட்டியிருப்பது நாம் இதுவரை கண்டிராதது.

நிகழ்வு களத்தின் பின்புலமாக வடசென்னை. இரண்டு பைக் மாத்திரமே செல்லக்கூடிய சந்துகளும், சுண்ணாம்பை நீண்ட வருடங்களாக கண்டிராத ஹவுசிங் போர்டு கட்டிடங்களும், தண்ணீர் பக்கெட்டும் கையுமாக கக்கூஸிற்கு செல்ல வேண்டிய ஒண்டுக்குடித்தன வீடுகளும், மந்திர உச்சாடனம் போல அந்த மூன்றெழுத்தை உச்சரிக்காமல் ஒரு வாக்கியத்தை ஆரம்பிக்கத் தெரியாத பெரும்பான்மை மக்களுமாக ... ஆஹா.... எங்க ஊர்.

"கூட்னு போ. அட்ச்சி கிட்சி போட்றப் போறன்" என்று தவ்லத்தாக ஒரு ஆசாமி வருவாரே......அவர்தான் வடசென்னையின் அசலான முகம். என்றாலும் வடசென்னையை அதன் முழு வீர்யத்தோடு பயன்படுத்துகிற திரைப்படம் இனிமேல்தான் வரவேண்டும் போலிருக்கிறது.

()

'ரன்' என்கிற திரைப்படத்தை பார்த்தவுடன் எனக்குத் தோன்றியது இதுதான்: ஏன் இந்தப்பட இயக்குநரின் மீது எந்த ஒரு தாதாவும் ரவுடியும் மான நஷ்ட வழக்கு தொடரவில்லை? அந்தளவிற்கு ரவடிகளை ஏதோ தட்டினால் பறக்கும் தூசு போல் காட்டியிருப்பார்கள். இந்தப்படத்திலும் அதே மாதிரிதான் நேர்ந்திருக்கிறது. வன்முறையையே எதிர்கொண்டிராத ஒரு நடுத்தரவர்க்க சராசரி இளைஞன் எப்படி பத்திருபது ஆயுதபாணி ரவுடிகளை அநாயசமாக எதிர்கொள்கிறார் என்பது எனக்கு புரியாத புதிர். நாயகன் marshal arts பயின்றவர் என்று ஒரு காட்சியிலாவது establish செய்தால் கொஞ்சம் மனச்சாந்தியாவது கிடைக்கும். logic.

()

இசை G.V. பிரகாஷ். 'மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்' என்ற பாடலில் வெளிநாட்டு ஆல்பமொன்றின் வாசனை அடித்தாலும் கேட்க இனிமையாகவே இருக்கிறது. 'எங்கேயும் எப்போதும்' ரீமிக்ஸ் பாடலில் திரையரங்கம் அதிர்கிறது. (இந்த மாதிரி ரீமிக்ஸ்களுக்கு ஏதாவது வரையறை இருக்கிறதா என்று தெரியவில்லை. முன்பெல்லாம் ரீமிக்ஸ் என்றால் பின்னணி இசையை மாத்திரம் நவீனப்படுத்துவார்கள் என்று கேள்வி. ஆனால் இப்போதோ அதை செயற்கை திரவங்களுடன் மிக்ஸியில் போட்டு அடித்து மேலே ஏதோ தூவி நட்சத்திர ஓட்டல் பண்டம் போல் கொடுக்கிறார்கள்) இருளும் ஒளியுமாக யதார்த்தமான விகிதத்தில் ஒளிப்பதிவாளர் (R.வேல்ராஜ் ?) சில காட்சிகளில் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.

()

வெற்றிமாறன் தன்னுடைய வணிக கட்டாய தடைகளையெல்லாம் தவிர்த்து தமிழ்ச் சினிமாவின் தரத்தை அங்குலமேனும் முயற்சியில் ஈடுபடுவாரா அல்லது வெற்றியின் ருசியில் அதிலேயே அமிழ்ந்து போவாரா என்பதை அவரின் அடுத்த படத்தைக் கொண்டுதான் தீர்மானிக்க முடியும்.

Monday, December 03, 2007

லா.ச.ரா ஓர் ஆமை...

லா.ச.ரா இறந்து போனதாக அறிந்து கொண்ட போது எனக்கு அதிர்ச்சியாகவெல்லாம் இல்லை. வயதான, நோயின் வாதையில் துயருற்றுக் கொண்டிருந்த "எப்ப வேணா செய்தி வரும்" என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஊரிலிருந்த தாத்தா ஒருவரின் மரணச் செய்தியை அறிந்து கொண்டாற் போல்தான் இருந்தது. வயதானவர்கள் இந்து பத்திரிகையின் sports page-ல் வெளியாகும் சாவு வரி விளம்பரத்தில் தனக்கு அறிமுகமானவரின் பெயரைக் கண்டவுடன் விடும் பெருமூச்சு போல்தான் அது.

எனக்கு முதன் முதலில் வாசிக்க கிடைத்த நூல் சிந்தாநதி. அவருக்கு சாகித்ய அகாடமியைப் காலந்தாழ்ந்தேனும் பெற்றுத்தந்த சுயசரிதையிலான நூல். அவருடைய பிறந்த ஊரான லால்குடியின் மண்ணை நுகரும் பரவசத்தையும் பெருந்திருவின் தரிசனத்தையும் வாசகனும் அடையும் உணர்வை ஏற்படுத்தித் தந்தது. பிறகு அவரின் நூல்களை தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்தேன். "கண்ணாடியில் பிம்பம் விழும் சத்தத்தை" வாசகனும் கேட்கும் அளவிற்கு நுண்ணியமான படைப்பு நாளடைவில் எனக்கு சலிப்பைத்தந்தது. வெறும் அழகியலை மாத்திரம் பிரதானப்படுத்தி எழுதுவதில் எனக்கு இன்றளவும் உடன்பாடு கிடையாது. சமூகப் பிரச்சினைகளை எதிரொலிக்காத எந்தவொரு எழுத்தாளின் படைப்பு தரத்தின் அடிப்படையில் உச்சியில் இருந்தாலும், பிரச்சினைகளை சாதாரண மொழியல் வீர்யமாக எதிரொலிக்கிற ஒரு இளம் படைப்பாளியின் படைப்புதான் என்னளவில் சிறந்தது. ஜெயமோகன் எழுதின "நினைவின் நதியில்" நூலில் சுந்தர ராமசாமி லா.ச.ராவைப் பற்றிக் கூறும் போது "அவர் கதையில் எப்போதும் அம்பாள் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு உலாத்திக் கொண்டிருப்பார்" என்கிற மாதிரியான (சரியான வரிகள் நினைவில் இல்லை) குறிப்பைப் படித்ததும் தொடர்ந்து ஐந்து நிமிடங்களாவது சிரித்துக் கொண்டிருந்தேன்.

தீராநதி (டிசம்பர் 2007) இதழில் ந.முருகேச பாண்டியனின் "லா.ச.ரா என்ற கலைஞனின் உச்சமும் வீழ்ச்சியும்" என்ற கட்டுரையின் பெரும்பான்மையான பகுதிகளுடன் நான் உடன்படுகிறேன்.

... 'சின்ன வயதில்' அவருடைய நடையின் கவர்ச்சியில் பிரமித்துக் கிடந்ததாகவும், பிறகு சலிப்பேற்பட்டு விலகிவிட்டதாகவும், இந்த மாதிரியில், தமது 'வளர்ச்சி' பற்றிய பெருமிதத்தை சொல்வோர் சிலர் உண்டு'. - இது அதே இதழில் கவிஞர் அபி எழுதின அஞ்சலிக் கட்டுரையில் கண்டது.


()

உயிர்மை (டிசம்பர் 2007) இதழில் இந்திரா பார்த்த சாரதி எழுதின அஞ்சலிக் கட்டுரையின் சுவையான ஒரு பகுதியை கீழே குறிப்பிட்டிருக்கிறேன். (நன்றி: உயிர்மை)

.............லா.ச.ராவுக்கு ஆங்கில இலக்கியத்தில் நல்ல தேர்ச்சி இருந்தது. வர்ஜினா வுல்·பைப் பற்றியும், ஜேம்ஸ் ஜாய்ஸைப் பற்றியும் அவரால் மணிக்கணக்கில் பேச முடியும். தமிழ் சித்தர் நூல்களை அவர் நன்கு கற்றறிந்தார் என்பது அவர் பேசுவதினின்றும் விளங்கும். முதலில் ஆங்கிலத்தில்தான் எழுதத் தொடங்கியதாக அவர் என்னிடம் கூறினார். தமிழில் எழுத ஆரம்பித்ததும் அவருக்கு இம்மொழியில் இருந்த லாகவம் அவருக்கே முதலில் ஆச்சரியத்தைத் தந்ததாம். அவர் வாக்கின் உபாசகர். ஒவ்வொரு சொல்லையும் அதன் பொருள் ஆழத்துக்குச் சென்று அதை வெளிக் கொணர்ந்து தம் படைப்பில் அர்ப்பணிக்கும் நிர்வாகம் அவர் இலக்கியத்தின் பலம். படிக்கும் போது, அது பிரவாகமாகப் பெருக்கெடுத்துப் பாய்வது போல் தோன்றினாலும், அது அவரைப் பொருத்த வரையில் பகீரதப்பிரயத்தனம். "நீ, ஜானகிராமன் எல்லோரும் அடுப்பிலிருந்து உடனே இறக்கிச் சுடச்சுட பத்திரிகைகளுக்கு அனுப்ப முடிகிறது. என் சமையல் நேரந்தான் ஆகும். தவம் பண்ணாத்தான் சரியான வார்த்தை வந்து விழும். நான் உங்க மாதிரி முயல் இல்லே. ஆமைதான்!" என்றார் ஒரு சமயம். "கடைசியிலே ஆமைதான் ஜெயிக்கும், அப்படித்தானே?"... என்று நான் சொன்னதும் சிரித்துக் கொண்டே என்னைக் கட்டிக் கொண்டார். ஸ்பரிஸம் அவர் உரையாடலின் முக்கிய அம்சம்.

'லா.ச.ரா ஒரே கதையைத்தான் திரும்பத்திரும்ப வெவ்வேறு வகையாக எழுதுகிறார்' என்று கு.அழகிரிசாமி 'தீபத்தில்' ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். நான் அவரை இதுபற்றிக் கேட்டேன். அவர் சிறிது நேரம் மெளனமாக இருந்து விட்டு பிறகு புன்னகையுடன் சொன்னார்:

"நான் யாருக்கும் கதை சொல்லணும்னு கங்கணம் கட்டிண்டு எழுதலியே! நான் எனக்கு நானே பேசிக்கறேன். ஒட்டுக் கேக்கறதும் கேக்காமெ இருக்கறதும் உங்க இஷ்டம்."

"அப்படின்னா, உங்களுக்கு வாசகனைப் பத்திக் கவலையே கிடையாதா?"

"கொள்வார் இருந்தால் கொள்ளட்டும்"

"வள்ளலார்" என்றேன் நான். ..............

()

Wednesday, November 28, 2007

கால் மீது கால் போட்டதற்காக குஷ்பு மீது வழக்கு

நடிகர் பார்த்திபன் நடிக்கும் 'வல்லமை தாராயோ' என்கிற படத்திற்கான பூஜை சென்னையில் நடந்தது. பூஜைக்காக அருகில் பெரிய அளவில் முப்பெரும் தேவியர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதில் நடிகை குஷ்புவும் கலந்து கொண்டார். அவர் அமர்ந்திருக்கும் போது கால் மீது கால் மீது போட்டு அமர்ந்திருக்கிறார். இந்த காரணம் போதாதா?.... இது கடவுளையும் அதன் மூலம் இந்துக்களையும் அவமதிக்கும் என செயல் எனக்கூறி இந்து முன்னணயினர் குஷ்பு மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

"ஜாக்பாட்டுக்காக" ஜாக்கெட் தேர்வு செய்யும் நேரம் போக...பாவம்... குஷ்புவுக்கு வழக்குகளை சந்திக்கவே நேரம் சரியாயிருக்கிறது.

Photo Sharing and Video Hosting at Photobucket

எப்படி அமர்வது என்பது ஒருவருடைய தனிப்பட்ட உரிமை. கமல்ஹாசன் விழாவொன்றில் கால் மீது கால் போட்டு மேடையில் அமர்ந்திருந்த எழுத்தாளர் ஜெயகாந்தனை, ரசிகர்கள் கத்தி ரகளை செய்த நிகழ்ச்சியும் நினைவுக்கு வருகிறது. உலகமெங்கிலும் பைத்தியங்கள் உண்டு என்பது தெரிந்ததுதான் என்றாலும், இந்தியாவில்தான் இப்படியான விநோதமான பைத்தியங்களை காண முடியும். பொது நல வழக்குகள் மூலம் எத்தனையோ மக்கள் பிரச்சினையை கையில் எடுக்க வேண்டிய வழக்கறிஞர்கள் மத உடையுடன் இப்படியான வழக்குகளை தொடுப்பது துரதிர்ஷ்டவசமானது.

அவமதிக்கும் செயல் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. பெண்கள் தங்கள் கால் தெரிகிறாற் உடையணிந்தால் அது அவமதிக்கும் செயலாக எந்த நாட்டிலோ கருதப்படுவதாக எங்கோ படித்த நினைவு. ஒரு தமிழ் திரைப்படத்தில் கடனை திருப்பித் தராத விவேக்கை நோக்கி இன்னொருவர் காறி உமிழ்வார். "ஏண்டா எங்கேடா கத்துக்கிட்டீங்க இதெல்லாம். எச்ச துப்பினா அவமதிக்கிறதா அர்த்தமா? இப்படி துப்பி துப்பிதாண்டா ஊரையெல்லாம் நாறடிச்சு வெச்சிருக்கீங்க? இதெல்லாம் அப்படியே ராம்நாட் பக்கம் திருப்பி விட்டா நாலு போகம் வெளையுமேடா?" என்பார் விவேக்.

எங்கள் வீட்டு பூஜையறையில் (என் மனைவியால்) வைக்கப்பட்டிருக்கும் படத்தில் உள்ள சாமியார் ஒருவர் கால் மீது கால் போட்டுத்தான் அமாந்திருந்திருக்கிறார். அவர் என்னை அவமதித்து விட்டார் என்று நான் சொன்னால் எப்படியிருக்குமோ, அப்படி அபத்தமாக இருக்கிறது இந்த நிகழ்வு.

photo courtesy: மாலை மலர்

Monday, November 26, 2007

TSOTSI - ஓரு வன்முறையாளனின் குழந்தைமை

சவுத் ஆப்ரிக்கா திரைப்படம் (2005) ஒன்றை சமீபத்தில் காண நேரிட்டது.

எல்லா மனிதர்க்குள்ளும் கடவுளும் சாத்தானும் இருப்பார்கள். சதவிகிதம்தான் வெவ்வேறு அளவில் இருக்கும். நூறு சதவிகித கடவுளையோ சாத்தானையோ காணவே முடியாது என்பது என் நம்பிக்கை. கொடூர வன்முறையாளனுக்குள்ளும் எங்கோ ஒரு ஓரத்தில் ஒளிந்திருக்கும் ஈரம் கசியும் சூழ்நிலையும் ஏற்படலாம். சாந்த சொருபியும் வெறி கொள்ளும் தருணங்களும் உண்டுதான். சூழ்நிலைதான் ஒரு மனிதனை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே என்றாலும் இயற்கையாகவே அதற்குள் பதியப்பட்டிருக்கும் குணாதிசயங்களும் விஞ்ஞானப்படி பரம்பரை பரம்பரையாக சில விஷயங்களும்தான் ஒரு குழந்தையின் நடத்தையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் சிலவாக இருக்கிறது.

Photo Sharing and Video Hosting at Photobucket

புதிய பாதை என்கிற சற்றே தமிழ்படத்தை நினைவுப்படுத்தும் இந்தப் படத்தின் முக்கிய பாத்திரமான tsotsi சிறிதளவு பணத்திற்காக ஒரு உயிரையே கொல்லத் துணிபவன். அவ்வளவாக முதிர்ச்சியுறாத இளைஞன்தான். கல்வியறிவு இல்லாதவன். ரயில் நிலையத்தில் அதிகப்பணம் வைத்திருப்பவர்களை நோட்டமிட்டு, இடையூறு ஏற்படுத்தும் பட்சத்தில் அவர்களை கொன்றும் பணத்தை பறிப்பதை தொழிலாக (mugging) வைத்திருக்கும் இவருக்கு மூன்று நண்பர்கள். Boston ஒரளவிற்கு படித்தவன். decency என்கிற வார்த்தையின் பொருளை அறிந்தவன். ஆசிரியர் பயிற்சிக்காக படிக்க முயல்பவன். Die-ape சுயபுத்தி இல்லாதவன்; tsotsiயின் நிழலை பின்தொடர்பவன். Butcher மகா முரடன். tsotsi-யிடம் உள்ள சிறிதளவு மனிதாபிமானம் கூட இல்லாதவன்.

ரயிலில் ஒரு கிழவரை கொன்று பணத்தை கைப்பற்றி மது அருந்திக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்தில் boston அந்தக் கொலை தவிர்த்திருக்கப்படக்கூடியது என்று கூறுகிறான். decency என்றால் என்னவென்று தெரியுமா என்று மற்றவர்களை வினவுகிறான். tsotsi-யை "உன்னுடைய உண்மையான பெயர் என்ன? யார் உன் பெற்றோர்? என்று கேட்கிறான். ஆத்திரமடையும் tsotsi அவனை நையப்புடைத்து விட்டு எங்கோ ஓடுகிறான். ஒரு பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு காரை திருடிக் கொண்டு போகும் tsotsi சற்று தூரம் போன பிறகுதான் பின்சீட்டில் ஒரு கைக்குழந்தை அழுதுக் கொண்டிருப்பதை கவனிக்கிறான். காரிலிருந்த பொருட்களையும் குழந்தையையும் திருடிக் கொண்டு தன்னுடைய சேரிக்கு செல்கிறான். யாரும் அறியாமல் தன்னுடைய குடிசையில் குழந்தையை வளர்க்க முடிவு செய்கிறான். இதன் காரணமாக தன்னுடைய நண்பர்களைக்கூட புறக்கணிக்க முடிவு செய்கிறான்.

குழந்தை பசியால் அழுவதைக் கண்டு பக்கத்தில் குழந்தை வைத்திருக்கும் ஒரு பெண்ணை (Miriam) மிரட்டி பால் கொடுக்கச் சொல்கிறான். Miriam குழந்தையை தன்னுடைய குழந்தையுடனே இணைத்து பராமரிப்பதாக சொல்கிறாள். "வெளியே சொன்னால் உன்னை கொன்று விடுவேன்" என்று மிரட்டுகிறான் tsotsi. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தையின் தாயும், தந்தையும் குழந்தையை எப்படியாவது மீட்கச் சொல்லி காவல் துறையை வேண்டுகின்றனர். அவனுடைய உருவப்படம் வரையப்பட்டு பத்திரிகைகளில் பிரசுரமாகிறது.

இதற்கிடையில் சிறுவயதிலேயே தாயின் அருகாமையை இழந்த, தந்தையால் வீட்டை விட்டு துரத்தியடிக்கப்பட்ட, தெருவோரச் சிறுவர்களுடன் வளர்ந்த tsotsiயின் கடந்த கால வாழ்க்கை சொற்ப கணங்களில் ஆனால் உணர்ச்சிகரமாக சொல்லப்படுகிறது.

()

குழந்தையை வளர்ப்பதற்காகவும் Boston-ன் மேற்படிப்புச் செலவிற்காகவும் பணம் திருட tsotsiயும் அவனது நண்பர்களும் குழந்தையின் வீட்டிற்கே செல்கிறார்கள். குழந்தையின் தகப்பனை கட்டிப் போட்டு விட்டு Die-ape தின்பதற்கான பொருளையும் Butcher மதிப்புள்ள பொருளையும் தேடும் சூழலில் tsotsi குழந்தைக்கான பால் பவுடர் டப்பாக்களையும், பொம்மைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறான். குழந்தையின் தகப்பன் இடையில் அலாரத்தை அழுத்தி காவல் துறைக்கு சமிக்ஞையை ஏற்படுத்த ஆத்திரமடையும் Butcher அவனை சுடப் போகும் தருணத்தில் tsotsi நண்பனையே சுட்டு வீழ்த்துகிறான். பயந்து போகும் Die-ape இவனை விட்டு பிரிந்து போகிறான்.

திருடின காரை விற்ற பணத்தை குழந்தையை பராமரிக்கும் Miriamத்திடன் தரும் போது வாங்க மறுக்கும் அவள், "பத்திரிகையில் நானும் படித்தேன். நீ சுட்டதால் இந்தக் குழந்தையின் தாய் கால்களை இழந்துவிட்டாள். அதை உன் பணத்தால் திருப்பித்தர முடியுமா?" என்று கேட்கிறாள். tsotsi மனம் மாறி குழந்தையை திருப்பித் தரும் தருணத்தில் காவல்துறை அவனை சூழ்கிறது.

tsotsi என்ன ஆனான்? குழந்தை பத்திரமாக பெற்றோர்களிடம் சேர்ந்ததா? .... விடையை அறிய படத்தைப் பாருங்கள்.

()

Athol Fugard என்பவர் எழுதின நாவலின் அடிப்படையில் Gavid hood இயக்கியிருக்கும் இந்தப்படத்தை தெற்கு ஆப்ரிக்க அரசும் இணைந்து தயாரித்திருக்கிறது. 2005-க்கிற்கான ஆஸ்கார் விருதையும் (சிறந்த வெளிநாட்டுத்திரைப்படம்) இந்தப்படம் பெற்றிருக்கிறது.

குழந்தை பசியால் அழும் போது தன்னிடமுள்ள பால்டின்னை குழந்தைக்கு புகட்டிவிட்டு யாரோ வருவதால் அவசரம் அவசரமாக குழந்தையையும் பால்டின்னையும் ஒரு பைக்குள் வைத்து விட்டுச் சென்று விடியற்காலையில் திரும்பும் போது குழந்தையின் முகம் பூராவும் எறும்புகள் சூழ்ந்திருக்கும் காட்சி நம் மனத்தை பதைக்கவும் நெகிழவும் செய்கிறது. கணவனை இழந்து வறுமையில் வாடும் Miriam, அந்தச் சூழ்நிலையிலும் tsotsi தரும் பணத்தை ஏற்றுக் கொள்ளாதிருக்கும் மனத்திடமும் நம்மை கவர்கிறது. Miriam குழந்தையை குளிப்பாட்டும் போது தன்னுடைய தாயின் நினைவு வர அதை கனிவோடு கவனத்துக் கொண்டிருக்கும் tsotsi, Miriam தன்னைப் பார்ப்பதை கவனித்தவுடன் தன்னுடைய முகபாவத்தை கடுமையாக்கிக் கொள்ளும் காட்சி சிறப்பு. குழந்தையின் வீட்டில் திருடப் போகும் tsotsi, குழந்தையின் அறை விலையுயர்ந்த பொருட்களாலும் பொம்மைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருப்பதை ஏக்கத்துடனும் பிரமிப்புடனும் காண்பதும் நம்மைக் கவர்கிறது.

தான் சிறுவயதில் இழந்த பெற்றோர்களின் அருகாமையையும் அரவணைப்பையும், ஒரு குழந்தைக்கு தர முடிவு செய்யும் tsotsi நடைமுறைச் சிக்கல்களால் அதை தொடர முடியாத சோகம் நம்மையும் சூழ்கிறது.

()

மிகச் சிறந்த படமென்று சொல்ல முடியாவிட்டாலும், மயிலிறகால் நம் மனதை வருடி நெகிழச் செய்து மனிதம் இன்னும் எத்தனை வருடங்களானாலும் உயிர்ப்போடுதான் இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது tsotsi.

Thursday, November 22, 2007

சற்றே திகைக்க வைத்த கொரியன் திரைப்படம்

நண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற்படுத்தின படம் போகப்போக தீவிர வேகமாகி பட இறுதியின் போது அதிர்ச்சியான விஷயத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

என்னதான் நாம் அஹிம்சை, கருணை என்றெல்லாம் தியரிட்டிக்கலாக பேசி சிலாகித்துக் கொண்டாலும் வன்முறை என்பது நம் ரத்தத்திலிலேயே ஊறிப்போன இயற்கையானதொரு அம்சம். வெள்ளைப் பேண்ட்டில் சேற்றுச் சக்கரத்தை இடித்து கறையை ஏற்படுத்தும் பைக் ஓட்டுநரை "குழந்தாய்.. கவனமாக செல்லக்கூடாதா?" என்றெல்லாம் நாம் கேட்பதில்லை. "த்தா.... கண்ணு என்னா பின்னாலயே இருக்கு?" என்று ஆரம்பித்து ஏக வசன கலாட்டாவில் முடியும். எதிராளியின் ஆகிருதியைப் பொறுத்து வசவின் அடர்த்தி கூடியோ குறைந்தோ, அல்லது அடிதடியிலோ வெற்று வசனங்களிலோ முடியக்கூடும். 'நான் அப்படியெல்லாம் இல்லை' என்று விவாதிப்போர் கடவுளால் பிரத்யேகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒரு ஆணின் உயிரணுக்கள் பெண்ணின் கருப்பையினுள் வேகமாக பயணம் செய்யும் போது முந்துகின்ற ஓர் அணுவுக்குத்தான் வாசலை முட்டி மோதி உட்புகுகிற வாய்ப்பு கிடைக்கிறது. அங்கேயே ஆரம்பிக்கின்ற வன்முறையும் போட்டியும் நம் வாழ்நாளின் இறுதி வரை தொடர்வதாக நான் கருதுகிறேன். மேற்சொன்ன படமும் "பழிவாங்குதல்" என்கிற அடிப்படையான தத்துவத்தில் இயங்குகிறது. உடனே இது எம்.ஜி.ஆர் vs நம்பியார் டைப் படம் என பாமரத்தனமாக விளங்கிக் கொள்ளக்கூடாது. திகைக்க வைக்கும் திரைக்கதையும் ட்ரீட்மெண்ட்டும், நடிகர்களின் பங்களிப்பும் இந்தப்படத்தை தரமான உயரத்தில் இயங்க வைக்கின்றன.

()

OLD BOY இயக்குநர் PARK CHAN-WOOK-ன் trilogy-ல் இரண்டாவது பகுதி படம். மற்ற படங்கள் SYMPATHY FOR MR.VENGEANCE & SYMPATHY FOR LADY VENGEANCE. சுமார் 10 படங்களை இயக்கியிருக்கும் தென் கொரிய இயக்குநரான Park-ன் ஏழாவது படமிது. Vertigo என்கிற படத்தின் பாதிப்பினால் திரைத்துறைக்கு வந்த இவர் பல படங்களில் screen writer ஆகவும் பணிபுரிந்தார். சிறந்த சினிமா விமர்சகருமாவார். முதல் இரண்டு படங்களை இயக்கி வெளியிட்ட பின்னரும் கூட இயக்குநர் என்கிற புகழை விடவும் screen writer - என்கிற அளவில்தான் இவர் புகழ் ஒங்கி இருந்தது. Joint Security Area (2000) என்கிற படத்தின் வணிக மற்றும் விமர்சக ரீதியாக வெற்றிக்குப் பின்னரே "இயக்குநர்" என்கிற புகழை அடைய முடிந்தது. கான் (cannes) திரைப்பட விருது (2004)உட்பட பல விருதுகளை OLD BOY பெற்றுள்ளது.

Photo Sharing and Video Hosting at Photobucket

Dae-su குடிபோதை கலாட்டா ரகளையில் காவல் நிலையத்திலிருந்து அவர் நண்பரால் மீட்கப்படுகிறார். பொது தொலைபேசி மூலம் வீட்டிற்கு சீக்கிரம் வந்துவிடுவதாக மனைவியிடமும் மகளிடமும் கூறுகிறார். அவர் நண்பரும் வீட்டாரிடம் தாம் பத்திரமாக அவரை அழைத்து வந்துவிடுவதாக உறுதியளித்து விட்டு, திரும்பிப்பார்த்தால் Dae-su-வைக் காணோம்.

Dae-su தாம் வெளித்தொடர்பு ஏதுமில்லாத ஒரு அறையில் சிறை வைக்கப்பட்டிருப்பதை உணர்கிறார். வேளா வேளைக்கு வறுக்கப்பட்ட பணியாரம் போன்ற உணவு மாத்திரம் சிறு துளை வழியாக வழங்கப்படுகிறது. யார், ஏன் தம்மை கடத்தி வைத்திருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு விடை தெரியாத குழப்பமான உணர்வு. தற்கொலை முயற்சியும் தோல்வியாக, shadow boxing பயிற்சி எடுப்பதின் மூலம் சுதாரித்துக் கொள்கிறார். அறையில் உள்ள தொலைக்காட்சியின் மூலமாக அவரின் மனைவி கொலை செய்யப்பட்டதையும் அதற்கு காரணமாக முதல் குற்றவாளியாக இவரை காவல் துறை சந்தேகப்படுவதையும் அறிந்து அதிர்ந்து போகிறார். இவரின் மகளைப் பற்றிய விவரமும் தெரியவில்லை. கடுமையான தனிமையின் காரணமாக ஹிஸ்டீரியாவும், சற்றே மனநிலை பிறழ்வு சூழலில் விநோதமாக காட்சிகளும் அவருக்கு தோன்றுகிறது. கூடவே ஹிப்னாடிசமும் செய்யப்பட்டு அவருள் சில விஷயங்கள் பதியப்படுகின்றன. இப்படியாக 15 வருடங்கள் கழிந்த பிறகு ஒரு நாள் திடுதிடுப்பென்று விடுதலை செய்யப்படுகிறார்.

தம்மை கடத்தி சிறை வைத்திருந்தவர் யார் என்று கண்டுபிடித்து பழிவாங்க தீவிரப்படும் இவரை ஒரு பிச்சைக்காரர் அணுகி ஒரு கைபேசியையும் பணத்தையும் அளித்து மறைந்து போகிறார். ஒரு உணவகத்தினுள் நுழையும் இவர் அங்கு பணிபுரியும் ஒரு பெண்ணால் (mido) கவரப்பட்டு அன்பு கொள்கிறார். அப்போது கைபேசியில் வரும் அழைப்பின் குரல் "நான்தான் உன்னை 15 வருடங்களாக சிறை வைத்தவன். இயன்றால் என்னை கண்டுபிடி. என்னை கண்டுபிடித்தால் நானே தற்கொலை செய்து கொண்டு சாகிறேன். இல்லையென்றால் mido கொல்லப்படுவாள்" என்று சவால் விடுக்கிறது.
தனக்கு தொடர்ந்து வழங்கப்பட்ட உணவின் மூலம் அதன் பிரத்யேக சுவையை நன்கறிந்த Dae-su ஒவ்வொரு உணவகமாக சென்று எங்கு தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கிறார். டெலிவரி செய்யும் பையனின் மூலம் தாம் சிறைப்பட்ட இடத்தை கண்டுபிடிக்கும் அவர், அங்கு வார்டராக இருந்தவனின் பல்லைப்பிடுங்கி மூலவரைப் (Woo-Jin) பற்றி அறிகிறார். அவர் சிறைப்படுத்தப்பட்ட காரணமாக கூறப்படுவது '"he talks too much". Woo-Jin பற்றி தம் நண்பர்களிடமும் அறிந்தவர்களிடமும் விசாரிக்கும் போது அவர் தம்முடன் பள்ளியில் இணைந்து படித்த பழைய மாணவர் என்று அறிய நேர்கிறது. அவருக்கும் தமக்கும் என்ன மாதிரியான பகை இருக்க முடியும் என்று Dae-su ஆராய்கிறார். இதற்கிடையில் அவருக்கும் midoவிற்குமான உறவு மிகவும் நெருக்கத்தை அடைந்து உடல்ரீதியான தொடர்பிற்கு செல்கிறது.

()

தம்முடைய மாணவப் பருவத்தை நினைவு கூறும் Dae-su, Woo-Jin-ம் அவரது சகோதர உறவு முறையிலான soo-ah என்கிற பெண்ணும் பாலியல் நோக்கத்தில் ஈடுபடும் காட்சியை ஒளிந்திருப்பதை காண நேரிடுகிறது. இவர் பார்ப்பதை அவர்களும் பார்த்து விடுகிறார்கள். பள்ளி முழுவதும் soo-ah பற்றிய செய்திகள் வதந்தி, வம்புகளுடன் இணைந்து ஒலித்து அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் செய்தி பரவுகிறது. இதை தாங்க முடியாத அந்தப் பெண் Woo-Jin எதிரிலேயே தற்கொலை செய்து கொள்கிறாள். இந்தச் செய்திகளை ஆராய்ச்சிகளின் மூலம் அறிந்து கொள்ளும் Dae-su, Woo-Jin-ஐ கண்டுபிடித்து நேருக்கு நேராக சந்திக்கிறார். "உன் சகோதரியின் மரணத்திற்கு நீதான் காரணம்" என்று குற்றஞ்சாட்டுகிறார். தாம் அவனை கண்டுபிடித்து விட்டதால் ஒப்பந்தப்படி அவன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.

பதிலாக Woo-Jin அவருக்கு ஒரு பரிசை அளிக்கிறார். அதைப் பிரிக்கும் Dae-su-விற்கு பூமியே இரண்டாக பிளந்தாற் போன்ற அதிர்ச்சி ஏற்படுகிறது. திகைக்க வைக்கும் அந்த அதிர்ச்சி என்ன என்பதையும் பின்பு இருவருக்கும் என்ன ஆனது என்பதையும் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்வதுதான் இயக்குநரின் உழைப்பிற்கு நியாயமான செயலாக இருக்கும் என்று கருதுகிறேன்.

()

சற்றே நுட்பமான இந்தக்கதைக்கு PARK CHAN-WOOK-ன் திரைக்கதை என்னை அயர வைக்கிறது. Dae-su சிறையில் அடைத்து வைக்கபட்டிருக்கும் போது வருடங்கள் கடந்து செல்வதை தொலைக்காட்சியில் முக்கிய உலக செய்திகள் மூலம் fast cutting உத்தி மூலம் சொல்லும் காட்சியும் மனநிலை பிறழ்கிற Dae-su, தம் உடம்பில் எறும்பு ஒன்று துளையிட்டு வெளிவருவதாக உணரும் காட்சியும் கவர்கிறது. சிறையில் இருந்து வார்டர் மற்றும் அவர்கள் ஆட்களிடம் சண்டையிட்டு தப்பிக்கும் சண்டை காட்சி ஒன்று தொடர்ச்சியாக சுமார் ஐந்து நிமிடத்திற்கு ஒரே கோணத்தில் காட்டப்படுவதும் அருமை. படத்தின் ஒளிப்பதிவு சிறப்பானதாக இருக்கிறது.

Dae-su-வாக நடித்திருக்கும் Choi-Min-sik பல காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். Woo-Jinவின் காலைப்பிடித்து கதறும் போதும் தம்முடைய நாக்கை துண்டித்துக் கொள்ளும் காட்சிகளிலும் அவரின் முகபாவங்கள் மிகுந்த நம்பகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. Woo-Jin-ஆக நடித்திருக்கும் Yu-Ji-tae அலட்டிக் கொள்ளாமல் நம்முடைய வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நான் முன்னமே கூறினது மாதிரி 'பழிவாங்குதல்' என்கிற தத்துவத்தில்தான் இந்தப்படம் இயங்குகிறது. தம்மை சிறைப்படுத்திவனை Dae-su கண்டுபிடித்தவுடன், Mido கூறுகிறாள். "உனக்குத் தேவையானது கிடைத்து விட்டது. இத்தோடு விட்டுவிட்டு நாம் அமைதியாக வாழலாமே". அதற்கு Dae-su "இல்லை. பழிவாங்குதல் என்னுடைய ஒரு பகுதியாக இருக்கிறது".

()

இந்த trilogy-யின் மற்ற இருபடங்களையும் இயக்குநரின் மற்ற படங்களையும் கூட காண வேண்டும் என்கிற ஆவலை இந்தப்படம் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப்படத்தின் சட்டப்படி அல்லாத தழுவலாக zinda என்கிற இந்தித் திரைப்படம் வந்திருப்பதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது.

நன்றி: விக்கிபீடியா

Wednesday, October 31, 2007

கற்றது தமிழ் திரைப்படத்தின் இயக்குநர் ராமின் பேட்டி

எண்பது, தொண்ணூறுகளில் எஸ்.பி.முத்துராமன்களும், ஜெகன்னாதன்களும் வணிகப்படங்களை கொளுத்திப் போட்டுக் கொண்டேயிருக்க,
மகேந்திரன், பாலுமகேந்திரா வகையறாக்களிடமிருந்து வெளிப்படும் கலாபூர்வமான மென்மையான படங்களின் வரவு அபூர்வமாகத்தானிருந்தது. இன்றைய சூழ்நிலையிலும் வணிகப்படங்களின் ஆதிக்கத்தில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லையெனினும் சேரன், பாலா, அமீர், பாலாஜி சக்திவேல், வசந்தபாலன் என்று நம்பிக்கை தரக்கூடிய இயக்குநர்கள் தட்டுப்பட்டு அவர்களின் படைப்புகளும் பொருளாதார ரீதியாக ஒரளவிற்கு வெற்றிகரமாகவே பயணிக்கிறது. அந்த வரிசையில் இன்னொரு இயக்குநராக 'கற்றது தமிழ்' இயக்குநர் ராம்- ஐ சொல்லாம் என்று நினைக்கிறேன். இவரின் படத்தை இன்னும் நான் பா¡க்கவில்லை. பத்திரிகைகளின், நண்பர்களின் விமர்சன ஆரவாரங்கள், பரபரப்புகள் போன்றவைகள் அடங்கிய பின்பே "நல்ல படம்" என்று சுட்டப்படுபவைகளை நான் பார்ப்பது வழக்கம்.

புதியபார்வை (நவம்பர் 1-15) இதழில் இவரின் ஆரோக்கியமான 'திமிருடன்' கூடிய உரையாடல் பதிவை வாசித்த போது மகிழ்வாக இருந்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உத்தேசம். சற்று நேரம் செலவு செய்து படித்து விடுங்கள். (நன்றி: புதிய பார்வை)

()

இயக்குநர் ராம் உடன் புதிய பார்வைக்காக தொலைபேசியில் நடந்த உரையாடல்..........

"ஹலோ ராம்... எப்படியிருக்கீங்க... புதிய பார்வைக்காக கொஞ்ச நேரம் பேசலாமா?"

"பத்து நிமிஷம் போதும் இல்லையா?.. உங்க பேர் என்ன சொன்னீங்க?"

"பரசுராம்"

"ஓ.. பரசுராம்.. கேள்விப்பட்ட மாதிரி இருக்குது. எங்கேயாவது பாத்திருக்கமா?"

"ஆமாம். படம் வெளிவர்றதுக்கு முன்னால, ஒரு ஹோட்டல்ல மதிய சாப்பாட்டுக்குப் பக்கத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்தோம்."

" சரி. கேள்வி கேளுங்க"

"எப்படி இந்தப் படத்தை ஆரம்பிச்சீங்க?"

"எனக்கு வசதியா எந்தப் படம் இருக்குமோ அதைத்தான் என்னால எடுக்க முடியும்."

"எப்படி இருக்கு படத்துக்கு இருக்கற வரவேற்பு"?

"நான் அதைப் பத்தி எல்லாம் கவலைப்படல. படம் எடுத்தாச்சு. அவ்வளவுதான். பாலுமகேந்திரா சார் பாத்துட்டு ஆசியாவிலேயே ஐந்து சிறந்த திரைப்படத்தை வரிசைப்படுத்தினா அதுல கற்றது தமிழ் வரும்னார். அவருக்கு கண் கலங்கிடுச்சு. வண்ணதாசன் இந்த வயசுல என்னைத் தேடி வந்து படத்தைப் பத்தி நிறைய பாராட்டிப் பேசி ஒரு இராத்திரி என்னோடவே தங்கிட்டுப் போனார். சாருநிவேதிதா ஒரு பத்திரிகையில படத்தைப் பத்தி பதினைந்து பக்கம் எழுதியிருக்கிறதா சொன்னார். ஊர் ஊரா கூப்பிட்டுப் பாராட்டறாங்க"

"பத்திரிகை விமர்சனங்களை எல்லாம் பார்த்தீங்களா"

"நீங்க எத்தனை தடவை படம் பார்த்தீங்க?"

"ஒரு தடவை"

"எநதத் தியேட்டர்ல?"

"உதயம்"

"ஒரு நாவலை விமர்சனம் பண்றதுக்கு எத்தனை தடவை படிப்பீங்க?"

"இரண்டு மூன்று தடவை"

"அப்பப் படத்தை மட்டும் ஒரே ஒரு தடவை பாத்திட்டு விமர்சனம் எழுத முடியுமா?"

"கஷ்டம்தான்"

"அதான். பத்திரிகையில வர்றது எல்லாமே வெறும் பதிவுதான். ஒரு தனிநபரால எழுதப்படுகிற பதிவு. என்னை கற்றுக் கொள்ள வைக்கிற விமர்சனம் எதையும் இந்தத் தேதி வரை - இன்னைக்குத் தேதியை குறிச்சுக்கோங்க - வரலை. சில தனிநபர்கள் நேர்ல நான் கத்துக்கற மாதிரி சில விஷயங்கள் சொன்னாங்க. பிரிண்ட்ல இதுவரைக்கும் வந்ததெல்லாம் விமர்சனமே இல்ல."

"ம்.... படம் நீங்க நினைச்சு எடுத்த மாதிரி ரிசீவ் பண்ணப்படுதா?"

"படம் எடுக்கறதுதான் என்னோட வேலை. புரிய வைக்கறதா என்னோட வேலை?"

"எந்த அடிப்படையில் கதாபாத்திரத்தைத் தொடங்க ஆரம்பிக்கிறீங்க?"

"தத்துவத்தின் அடிப்படையில்தான்"

"என்ன தத்துவம்"

"தத்துவத்தை ஒரு வரியில் சொல்ல முடியுமா? சென்னைதான் என் தத்துவம்".

"சென்னையா?"

"ஆமாம். சென்னை என்கிற நகரம்தான். அதற்குள் புறத்திலிருந்து வரும் மாந்தர்கள்தான் என் கதாபாத்திரங்கள். அவர்களின் அக..புறச் சிக்கல்கள், முடிச்சுகள்."

" தமிழ் படிச்சவனோட பிரச்சினையைத்தான் படத்தில் பேசியிருக்கிறதா நிறைய பேச்சு இருக்கு. நீங்க அப்படி நினைச்சு எடுத்தீங்களா?"

"உங்களுக்கு எப்படி தோணுது?"

"எனக்கென்னவோ தமிழ் படிச்சவனோட பிரச்சினையை மட்டுமே பேசற மாதிரி தெரியலை."

"இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொண்ணு தோணுது. படத்தில் நிறைய sub text வச்சிருக்கேன். அவங்க அவங்களுக்கு என்ன தோணுதோ பேசிக்கட்டும்."

"இந்த ஐ.டி. துறை மேல வச்சிருக்கிற விமர்சனத்துக்கு என்ன ரெஸ்பான்ஸ் வருது?"

"உங்க ஆபிஸ்ல நெட் இருக்கா. இருந்தா கற்றது தமிழ்-னு போடுங்க. ஆயிரக்கணக்குல பேசியிருக்காங்க. படிங்க."

"படம் சுயவிவரிப்புல நடக்குது. ஆனா முடியும் போது நீங்க வந்து... ஒரு மூன்றாவது குரல் - பேசுவது எதற்கு?"

"அப்படி வரக்கூடாதுன்னு எந்த சினிமா மேதை எந்தக் கலைக் கோட்பாடுல பேசியிருக்கார். இருந்தா பேர் சொல்லுங்க. இல்ல இது நீங்களே சொல்றதா? சிட்டி ஆ·ப் காட்னு ஒரு படம் பாத்திருக்கீங்களா? அதுல சுயவிவரிப்பும் வரும். மூன்றாவது குரலின் விவரிப்பும் வரும்."

"ஒரு விவாதத்தை இப்படி ஆரம்பிச்சா முடிவு கிடைக்காது"

"எனக்கு எந்தக் கட்டாயமும் கிடையாது. நான் நினைக்கிறததான் எடுப்பேன்"

()

Friday, September 21, 2007

சத்தம் போடாதே - திரைப்பார்வை

ஒரு தமிழ் திரைப்படத்தின் உரையாடலில் 'அசோகமித்திரன், சுந்தரராமசாமி' போன்ற பெயர்கள் அடிபட்டால் (!) அந்தப்படம் என்னமாதிரியான வகை, யாருக்கானது என்பதை உங்களால் எளிதில் யூகித்துவிட முடியும். ஆம். இது, (கிழ) கதாநாயகன் தோன்றியவுடன் அரங்கம் அதிர விசிலடிக்கும் முட்டாள் ரசிகர்களுக்கான படமல்ல. வழக்கமான தமிழ்ச் சினிமாக்களிலிருந்து விலகி நிற்கிற, சற்றே ஆசுவாசத்தைத் தருகிற படங்களை விரும்புகிற ரசிகர்களுக்கானது என்று சொல்லலாம்.

பாலச்சந்தர் பள்ளியிலிருந்து வந்திருந்தாலும் நாடகத்தன்மையை பெருமளவிற்கு விலக்கி தன் தனித்தன்மையினால் ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் வசந்த். (இவரின் 'நேருக்கு நேர்' போன்ற படங்களெல்லாம் ஆட்டத்தில் இல்லை.) இப்படியானப்பட்டவர் எப்படி இப்படி ஒரு படத்தை shhhhhhhhhh..............சரி சொல்கிறேன்.

Warning: Spoilers: இவ்வாறு எழுதுவதே எனக்கு அபத்தமாகத் தோன்றுகிறது. ஒரு சினிமாப்படத்தின் கதையை வெளிப்படுத்திவிட்டால் பிற்பாடு திரைப்படம் பா¡க்கும் போது ரசிக்க முடியாது என்பது பாமரத்தனமான சிந்தனை. ஏனென்றால், என்னைப் பொறுத்தவரை அத்தனை கதை அமைப்புகளும் ஏற்கெனவே சொல்லப்பட்டு விட்டன. பாவனை, மொழி, களம், போக்கு என்று கதை சொல்கிறவர்களின் விதவிதமான திறமைதான் ஒரு பார்வையாளனுக்கு சுவாரசியத்தை அளிக்கின்றன. புதிதான கதை அமைப்பு விஞ்ஞானக்கதைகளில்தான் சாத்தியம் என்பது என் தாழ்மையான கருத்து. வெளிநாட்டு திரைப்பட திரையிடல்களின் போது synopsis-ஐ பிரிண்ட் போட்டே கொடுத்துவிடுகிறார்கள். இதனால் படத்தை இன்னும் ஆழத்துடன் ரசிக்க முடிகிறது. நாம் ஏற்கெனவே பார்த்த பிடித்தமான திரைப்படத்தை மறுபடியும் ஏன் உட்கார்ந்து ஆவலுடன் பார்க்கிறோம் என்பதை யோசித்துப் பாருங்கள்.

()

மேலே குறிப்பிட்டவாறு 'சத்தம் போடாதே' திரைப்படத்தின் கதை அமைப்பையும் ஒரு அசட்டுத் துணிச்சலுடன் ராமாயணக் கதையோடு ஒப்பிட்டால்... நாயகி கடத்தப்படுவதும் நாயகன் அவளை மீட்பதும்தான் என்று சொல்லலாம்.

மிகவும் அழகாக இருக்கின்ற காரணத்திற்காக (!) நண்பன் நிராகரித்து விட்ட பெண்ணின் மீது ஆசை கொண்டு தன்னுடைய ஆண்மையின்மையை மறைத்து அவளை திருமணம் செய்து கொள்கிறான் ரத்னவேல் (நிதின் சத்யா). இதை பின்னர் அறிந்து அதிர்ச்சி கொள்ளும் அவள் (பத்மபிரியா) விவாகரத்திற்குப் பின்னர் தன்னுடைய வாழ்க்கையில் இனிமையான உற்சாகத்துடன் குறுக்கிடும் ரவிச்சந்திரனை (பிருத்விராஜ்) திருமணம் செய்து கொள்கிறாள். தன்னுடைய மனைவியாக இருந்தவள், இன்னனொருவனுடன் சந்தோஷமாக இருப்பதா என்று குரோதத்துடன் யோசிக்கும் சற்றே மனநிலை பிறழ்ந்த முன்னாள் கணவன், அவளை கடத்திச் சென்று விடுவதும், பின்னர் பிருத்விராஜ் ..... blah... blah... blah..

முத்துராமன், சிவகுமார், மோகன் போன்ற இயல்பான கதாநாயர்களின் வெற்றிடத்தை சிறப்பாக நிரப்புகிறார் பிருத்விராஜ். குழந்தைகளுடனான பாடலில் இவரே ஒரு வளர்ந்த குழந்தை போலத்தான் இருக்கிறார். என்றாலும் 'கனா கண்டேன்' திரைப்படம் மாதிரி வித்தியாசமான பாத்திரங்களிலும் மாற்றி நடித்தால் தொடர்ந்து இடம் பிடிக்கலாம். வித்தியாசமாக இல்லை என்றாலும் தன் பங்கை நிறைவாக செய்திருக்கிறார்.

முன்னாள் கணவனால் அறைக்குள் அடைக்கப்பட்ட பின்புதான் பத்மபிரியா நடிக்கத் தொடங்குகிறார் எனலாம். அதுவரை ஒரு எந்தவொரு வித்தியாசமான நடிப்பையும் இவரிடமிருந்து பார்க்க முடியவில்லை என்பதற்கு சரியாக பயன்படுத்திக் கொள்ளாத இயக்குநரைத்தான் குறை சொல்ல வேண்டும். இவரின் பாத்திர அமைப்பு சற்றே குழப்பமானது. இவருக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கும் பாடகி சின்மயி அவர்களின் பங்களிப்பு சிறப்பானது.

நிதின் சத்யா. நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள பாத்திரம் இவருடையது. மனிதர் இயன்றவரை subtle-ஆக நடித்து கரை சேர்ந்திருந்தாலும், பதிலாக பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி போன்ற சிறப்பான நடிகர்களை ஒரு வேளை இயக்குநர் பயன்படுத்தியிருந்தால் இந்தப் பாத்திரத்தின் வீர்யம் கூடியிருக்கும் என்று யூகிக்கிறேன். என்றாலும் பிரதானமாக வருகிற முதல் படத்திலேயே விவகாரமான பாத்திரத்தை தைரியாக ஏற்றிருப்பதற்காக இவருக்கொரு பாராட்டு.

அறிமுக ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் (?) அதிகப்பிரசங்கித்தனம் எதுவும் செய்யாமல், பார்வையாளர்களின் கண்கள் போலவே இயல்பாக படம் பிடித்திருக்கிறார். யுவனின் அற்புதமான பாடல்கள் அனைத்தையும் இயக்குநர் வீணடித்திருக்கிறார் என்றே சொல்வேன். (இந்தப் படத்திற்கு பாடல்களின் தேவையேயில்லை என்பது வேறு விஷயம்) பாடல்களை நான் முன்பே பலமுறை கேட்டிருந்ததால் நான் செய்து வைத்திருந்த கற்பனை அனைத்தும் ஒரு சதவீதம் கூட ஒட்டாமல் ஏமாற்றமளித்தது. பொதுவாக வசந்த்தின் படங்களில் பாடல்கள் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும். இது ஒரு விதிவிலக்கு. ('அழகு குட்டி செல்லம்' என்கிற குழந்தைப் பாடலில் "உன் பின்னழகில் பெளர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்" என்கிற வரிகளின் போது வேகமாக தவழ்கிற குழந்தையின் பின்னால் கேமராவை வைக்காமல், குழந்தையை வெறுமனே தூக்கிப் பிடித்திருப்பது ஸ்பஷ்டமாக தெரியும்படி படமாக்கியிருப்பது ஒரு உதாரணம்). 'காதல் பெரியதா காமம் பெரியதா' 'எந்தக் குதிரையில்' இரு பாடல்களும் ஒரே மாதிரியான பின்னணியில் அடுத்தடுத்து வந்து சலிக்க வைக்கிறது.

இதை உணர்ந்தோ என்னமோ, யுவன் பின்னணி இசையை கொட்டாவியுடன் அமைத்திருக்கிறார்.

()

பாத்திரங்களின் அமைப்பும், திரைக்கதையும் பயங்கர குழப்பங்களுடன் தமிழ்ச்சினிமாவின் வழக்கமாக சம்பிரதாயங்களுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆண்மையற்ற நிதின்சத்யா எப்படி பத்மபிரியா மேல் மையல் கொள்கிறான் என்பதும் பிறகு எதற்காக அவளை கடத்தி தன்னுடன் "வெறுமனே" வைத்துக் கொள்கிறான் என்பதும் அழுத்தமாகவும் தெளிவாகவும் சொல்லப்படவில்லை. அவனுக்கு இருப்பது காமமா அல்லது பொசசிவ்னஸ்ஸா என்பதும் தெளிவாக இல்லை.

ஏற்கெனவே மணமான பெண்ணை எதற்காக பிருத்விராஜ் மணம் முடிக்க அத்தனை பரபரக்கிறார் என்பதும் தெரியவில்லை. இத்தனை அழகான, நல்லவனான நண்பனை வைத்துக் கொண்டு பெண்ணுக்கு அண்ணன் ஏன் மற்ற இடங்களில் வரன் தேடினார் என்பதும் புரியவில்லை.

பிருத்விராஜ் ஏன் இரண்டு பெயர்களில் பத்மபிரியாவிடம் பேசி குறும்பு செய்கிறார் என்பதும் தெளிவாக இல்லை. (இந்த sequence-ஐ வைத்துக் கொண்டு பின்வரும் காட்சிகளில் ஏதாவது அழுத்தமான ஒரு திருப்பத்தை இயக்குநர் தருவார் என்று யூகித்து வைத்திருந்தேன்). காஞ்சிபுரம், பாலவாக்கம், கொச்சின் என்று கதை வேறு பல்வேறு இடங்களில் அலைவதில், களக்குழப்பம் வேறு. கூடவே 1970-களில் வந்த நகைச்சுவை துணுக்குகள் வேறு ஆரம்பக் கட்டங்களில் வந்து நெளிய வைக்கிறது. கெட்டவனான முன்னாள் காதலன் அல்லது கணவனும் நல்லவனான இந்நாள் கணவனும் எப்படியாவது சந்தித்து பேசி பார்வையாளனுக்கு திகைப்பை ஏற்படுத்த முயற்சிக்கிற மாதிரியான திரைக்கதையை தடை செய்யச் சொல்லி யாரேனும் வழக்குப் போடலாம்.

இடைவேளைக்கு பின்னர் ஏற்படுத்தின திரைக்கதையின் இறுக்கத்தை முதற்பாதியிலும் ஏற்படுத்தியிருக்கலாம். பல காட்சிகளை பார்வையாளர்கள் எளிதில் யூகித்துவிடும் படி திரைக்கதையை அமைத்திருப்பது பலவீனம். "ஆசை" படத்தின் சாயல்கள் பெருமளவிற்கு விழுந்திருப்பதை வசந்த் சாமர்த்தியமாக தவிர்க்க முயன்றிருக்கிறார். பெரும்பாலும் இன்டோரிலேயே நகர்கிற திரைக்கதை டெலிபிலிம் பார்ககிற உணர்வை ஏற்படுத்துகிறது.

வசந்திற்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் இதுதான். இதுமாதிரியான, மூளைக்கு அதிகம் வேலை வைக்காத சஸ்பென்ஸ் படங்களையெல்லாம் இயக்க நிறைய இளம் இயக்குநர்கள் இருக்கிறார்கள். உங்களின் பலமே, இயல்பான மனிதர்கள் பல்வேறு உணர்ச்சிகளுடன் உலாவுகிற அழுத்தமான திரைக்கதையுடன் இருக்கிற படங்களே. (சிறந்த உதாரணம்: கேளடி கண்மணி). அந்த நிலைக்கு உங்களை focus செய்து கொள்வது நலம் என்றே நான் கருதுகிறேன். (அதற்காக ஒரு இயக்குநர் ஒரே மாதிரியான படங்களைத்தான் எடுக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை. தன்னுடைய பலம் எதுவென்று உணர்ந்து அதற்கேற்ப இயங்குவது புத்திசாலித்தனமென்று தோன்றுகிறது)

()

"அண்ணாச்சி. ஸ்டாக் இல்லன்னு நெனக்கறேன். நீங்க கொடவுன்ல பாத்தீங்களா.. நான் பொறவு வாறேன்" என்று பின்னிருக்கையில் "தொணதொண"வென்று வியாபாரம் பேசிக் கொண்டிருந்தவரிடம், இந்தப்படத்தின் தலைப்பை சொல்லலாம் என்கிற வகையில் இருக்கிறதே தவிர படத்திற்கும் தலைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. 'காதல்' பட பாதிப்பில், ஆந்திராவில் நடந்த உண்மைக்கதை என்று இறுதியில் காட்டப்படும் டைட்டில் கார்டும் எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை.

மற்ற வணிக குப்பைப் படங்களை பார்க்க தயாராக இருப்பவர்கள், அவற்றை நிராகரித்து விட்டு பதிலாக இந்தப்படத்தை சற்றே வித்தியாச அனுபவத்திற்காக வேண்டுமானால் பா¡க்கலாம். மற்றபடி வழக்கமான வசந்த்தை தேடிப் போகிறவர்கள் மனதை திடப்படுத்திக் கொள்வது நல்லது.

உலக சினிமா பற்றிய போதுமான அறிவுள்ள வசந்த், தன்னுயை பாதையை மாற்றிக் கொண்டு இன்னும் வீர்யமாக வெளிப்பட வேண்டும்' என்பதைத்தான் அன்னை அபிராமி திரையரங்கில் என்னுடன் அமர்ந்து படம் பார்த்த அத்தனை ரசிகர்களும் (அதிகமில்லை சுமார் 50 பேர்தான்) நினைத்திருப்பார்கள் என்று யூகிக்கிறேன். Sorry Vasanth. Better luck next time.

Wednesday, September 12, 2007

குப்பி - திரைப்பார்வை

தூங்கி கண்விழித்த அந்த அதிகாலையில்தான் அதிர்ச்சியான அந்த செய்தி காதில் விழுந்தது. 'ராஜீவ் காந்தி படுகொலை". எங்கோ வடநாட்டில்தான் இது நிகழ்ந்திருக்கக்கூடும் என்று பெரும்பாலோனோரைப் போல நானும் நம்பினேன். மிகவும் பாதுகாப்பான இடமாகக் கருதப்படும், தீவிரவாதத்தின் நிழல் பெரும்பான்மையாக பரவாத தமிழ்நாட்டில், அதுவும் சென்னைக்கு அருகில் இது நிகழ்ந்தது என்று பின்னால் அறிய நேர்ந்த போது ஆச்சரியமாக இருந்தது. நெற்றியில் திறுநீறு மணம் கழம தினமும் காலில் விழுந்து வணங்கி விட்டுப் போகும் மகன், பிராத்தல் கேஸில் மாட்டிக் கொண்டதைக் கேள்விப்பட்ட தகப்பன் போல் பதைபதைத்துப் போனது மனது. புலிகளின் மீதான தமிழகத்தின் பார்வை தலைகீழாக மாறிப் போன அளவிற்கு இச்சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. புலிகளே இந்த அளவு எதிர்ப்பை யூகித்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன். அப்போது நடந்த தேர்தலில் ராஜீவ் காந்தியின் குருதியைக் கொண்டு 'காங்கிரஸ்' வெற்றி என்ற வார்த்தையை பெரிய அளவில் எழுதியது.

இந்திய சார்பில் சென்ற அமைதிப்படை அமைதியை ஏற்படுத்துவதற்கு மாறாக அங்கு செய்த அட்டூழியங்கள் பற்றியும் கொதித்தெழுந்த புலிகள் இதற்கு காரணமான நபரை படுகொலை செய்ய முடிவு செய்தது குறித்த பின்னணிகளையும், காரணங்களையும் பெரும் ஆய்வுக்குட்படுத்தன் மூலம்தான் அணுக வேண்டும். புலிகளின் தலைவர் பிரபாகரனின் மழுப்பலான வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் 'இது ஒரு துன்பியல் சம்பவம்தான்".

Photo Sharing and Video Hosting at Photobucket



மும்பை குண்டுவெடிப்புச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட, விவரணப்பட பாணியில் அமைந்த திரைப்படமான 'Black Friday'-ஐ சமீபத்தில் பா¡க்க நேர்ந்த போது, தமிழில் இம்மாதிரியான பாணியில் எந்தப் படத்தையும் பார்த்த நினைவேயில்லையே என்று அங்கலாய்த்துக் கொண்டது மனது. 'குப்பி'யை ஒருவேளை பார்த்திருந்தால் அது தேவையிருந்திருக்காது. கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற இத்திரைப்படம், தமிழில் ரீமேக் ஆகி வந்த போது (அப்படித்தான் சொல்கிறார் இயக்குநர்) பார்க்க ஆவலைத் தூண்டின படத்தை பார்க்க முடியாமலே போனது. கடந்த சனியன்று, சன் தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பாகப் போகிறது என்பதை அறிந்தவுடனேயே இதற்காக நேரத்தை ஒதுக்கிக் கொண்டேன்.

படுகொலை சம்பவம் பின்ணனி ஒலியுடன் மாத்திரமே பார்வையாளனுக்கு உணர வைக்கப்பட்டு (சென்சாரில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக இந்த உத்தி பயன்படுத்தப்பட்டதாக இயக்குநர் கூறுகிறார்) கொலையாளிகள் கர்நாடகாவிற்கு தப்பிச் செல்வது இந்திய வரைபடம் கொண்டே சொல்லப்படுகிறது. இங்கு தொடங்குகிற படம் அவர்கள் காவல் துறையினரால் round-up செய்யப்பட்டு தற்கொலை செய்து கொள்வது வரை நீடிக்கிறது.

இந்தப்படத்தின் முக்கிய பலமாக இதன் திரைக்கதையையும், ஆன்டனியின் துடிப்பான எடிட்டிங்கையும் சொல்லுவேன். ஏற்கெனவே உலகத்திற்கு தெரிந்த சம்பவங்கள்தான் என்றாலும், அடுத்து என்ன நடைபெறப் போகிறது என்கிற ஆவலை பார்வையாளனுக்கு ஏற்படுத்துவதில் இந்தப்படம் வெற்றி பெற்றிருக்கிறது. ரங்கநாத்தாக வரும் பாத்திரம் ஏற்றிருப்பவர் திறமையாக நடித்து தன் பங்கை சிறப்பாக ஆற்றியிருக்கிறார். அவரின் மனைவியாக வரும் தாராவும் ஒரு அப்பாவி நடுத்தர வர்க்கத்து மனைவியின் சித்திரத்தை நன்றாக நம் முன் வைத்திருக்கிறார். சிவராசனாக நடித்திருக்கும் மராட்டிய நடிகர் ரவி காலே, உருவ ஒற்றுமையுடன் மிகச் சரியாக பொருந்திப் போனாலும் சற்றே அதீதமாக நடித்திருக்கிறாரோ என்று தோன்ற வைத்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.

குறுகிய நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்தி நாசரை வீணடித்திருப்பதை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். "எங்கள் பிரதமரை கொன்றது தப்புத்தானே"? என்று தயக்கத்துடனும் பயத்துடனும் ரங்கநாத் எழுப்பிய வினாவிற்கு "உங்கட நாட்டில் கொன்றது தப்புத்தான்" என்று சிவராசன் சொல்வது பின்னர் நிகழ்நத சம்பவங்களை யூகித்து எழுதப்பட்ட வசனம் போல் செயற்கையாகத் தோன்றுகிறது. சுபாவாக நடித்திருக்கும் மாளவிகா, போராளியென்றாலே விறைப்பான தோற்றத்துடன் இருப்பார்கள் என்கிற cliche-ஐ தூக்கியெறிந்து, அவர்களும் எல்லாவிதமான தனிமனித நிறை, குறைகளுடன் இருப்பார்கள் என்பதை உறுதிப்படுத்தி விதத்தில் நடித்திருக்கிறார். சுரேஷ் மாஸ்டராக வரும் இன்னொரு போராளி, பல தமிழ்ப் படங்களில் நாயகனிடம் உதைவாங்கும் அடியாட்களில் ஒருவர். இதை தவிர்த்திருக்கலாம்.

()

கிளைமாக்ஸ் காட்சியில் எல்லோரும் சயனைடைக் கடித்து சாக, சிவராசன் மாத்திரம் ஏன் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு சாகிறார் என்று தெரியவில்லை. நிஜத்தில் இந்த வழக்கை மிகத்திற¨மாக கையாண்ட, முன்னாள் காவல்துறை அதிகாரி கார்த்திகேயன், இந்தப்படத்தைப் பார்த்திருந்தால் என்ன நினைத்திருப்பார்கள் என்றறிய ஆவலாக இருக்கிறது.

புலிகளையும் இலங்கைத் தமிழர்களையும் சித்தரித்திருக்கின்ற திரைப்படங்களை, அவர்கள் பெருவாரியாக எதிர்மறையாக விமர்சித்திருப்பதை வாசித்திருக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை அவர்களின் பிரதிநிதிகளில் ஒருவராலேயேதான் யதார்த்தமாகவும் உண்மையாகவும் படைக்க முடியும் என்கிற கருத்தின் படி, அங்கே நிலவுகிற சூழ்நிலையை அனுபவர £தியாக அறிந்த, சாய்வுநிலை கொள்ளாத ஒரு படைப்பாளியால்தான் இச்சூழலைப் பற்றின ஒரு சிறந்த படத்தை தர முடியும் என்று தோன்றுகிறது.

suresh kannan

Thursday, September 06, 2007

சஞ்சய்தத், penis, உயிர்மை........

அச்சு ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை குறித்தும், ஒன்றுக்கும் உதவாத செய்திகளை ஊதிப் பெருக்கி தலைப்புச் செய்தியாக்கி (நாம் வலைப்பதிவுகளில் செய்வதைப் போல)தம்முடைய விற்பனையைப் பெருக்கிக் கொள்ளும் வியாபாரத் தந்திரங்கள் குறித்தும் நாம் பொதுவாக அறிந்தததுதான் என்றாலும் பல சமயங்களில் எரிச்சல் உச்சந்தலையை தொடுவதை தவிர்க்க முடிவதில்லை.

சஞ்சய்தத் என்றொரு பிரகஸ்பதி. ஏ.கே.47 துப்பாக்கிகள், குண்டுகள் வைத்திருந்ததாகவும், மும்பை குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்டிருப்பவர்களிடமிருந்து அதை வாங்கியுள்ளதாகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ள இந்த ஆயுதங்களை வைத்திருந்ததாக சஞ்சய்தத் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். (ஏகே 47 வைத்து காப்பாற்றிக் கொள்ளும் அளவிற்கு ரொம்பவும் பெரிய குடும்பம் போலிருக்கிறது.) இது ஒருபுறம் இருக்கட்டும். இதை ஊடகங்கள் கையாண்ட விதம்தான் என்னை ரொம்பவும் கடுப்பேற்றியது. அவர் கைதாகி சிறை செல்லும் வரை பின்னாலேயே வால்பிடித்துச் சென்றது முதல், சஞ்சய்தத் சிறையில் கூடை பின்னினார், காலையில் இட்லி சாப்பிட்டார், மாலையில் சப்பாத்தி சாப்பிட்டார், சிகரெட் பிடிக்க அனுமதியில்லாமல் அவதிப்பட்டார். காலையில் 07.00 மணிக்கு கக்கூஸ் போனார்........ என்கிற ரீதியில் தொடர்ச்சியாக செய்திகளை வெளித்தள்ளிக் கொண்டிருந்தது.

நடிக, நடிகையரைப் பற்றிய செய்தி போட்டால் பரபரப்பாக இருக்கும் என்கிற புராததத் தன்மை கொண்ட நிஜம், இன்றுவரை செல்லுபடியாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் கொடுமை. முனியாண்டி விலாஸ், வேலு மிலிட்டரி ஹோட்டல் போன்றவற்றில் மெனுகார்டில் இல்லாத உயிரினத்தைத் தேடி, சல்மான்கான் என்கிற இன்னொரு பிரகஸ்பதி காட்டிற்குள் சென்று வேட்டையாட, அந்த நடிகரின் பின்னாலும் வீடியோ காமராக்கள் துரத்துகின்றன. பொதுநிறுவனமாக சிறைக்கூடத்திற்குள்ளும் இந்த ஊடகங்களின் கரங்கள் நீளுகின்றன. மோனிகா பேடி குளிப்பதைக் கூட படமெடுத்து ஒரு தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்ப துணிகிறதென்றால், போட்டியில் ஜெயிக்க என்னவென்றாலும் செய்யத்துணிகிற வியாபார குதர்க்கம் வெளிப்படுவது ஒருபுறமென்றால், சிறைக்கூடங்களின் பாதுகாப்பு குறித்த வேள்வியும் கூடவே எழுகின்றது.

இந்தியாவின் மிகப் பெரிய கிரிமினல் கேஸாக கருதப்படும் மும்பை குண்டுவெடிப்புச் சம்பவம் முதல் நக்சலைட் தேடுதல் வேட்டை வரை சம்பந்தப்படுத்தப்பட்டு ஒரு குற்றமும் செய்யாமல் ஆண்டாண்டுகளாக சிறைச்சாலையில் அவதிப்படும் எத்தனையோ அப்பாவிகளைப் பற்றி இந்த ஊடகங்களுக்கு என்ன கவலை?

()

நாம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் நோய்களைத் தாண்டி சில அசாதாரண, விநோதமாக நோய்களைப் பற்றி கேள்விப்படும் போது 'நல்ல வேளை' என்று பெருமூச்சு விடவே தோன்றுகிறது. ஆயிரத்தில் அல்லது லட்சத்தில் ஒருவருக்குத்தான் இம்மாதிரியான நோய்க்கூறுகள் .. என்று வாயில் நுழையாத நோயின் பெயரோடு ஆரம்பிக்கும் மருத்துவரின் அறிக்கைகளை பத்திரிகைகளில் படிக்கும் போது இம்மாதிரி தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை. சென்ற வாரத்தில் நாளிதழொன்றின் பக்கங்களில் விரல்கள் மாத்திரம் அசுரத்தனமாக வளர்ந்திருக்கின்ற நபரின் புகைப்படத்தை பார்த்த போது அதிசயமாகவும் பரிதாபமாகவும் இருந்தது.

டெக்கான் கிரானிக்களில் பிரபல sexologist-ஆன நாராயண ரெட்டி கேள்வி-பதில் தொடரில் சமீபத்தில் பின்வரும் கேள்வியைப் படிக்கும் போது தோன்றியது மேற்சொன்ன பத்தி.


Question: My son is 11 years old. His penis, when erect, almost touches his lower abdomen and points directly to the sky. Sometimes he has a hard time keeping his penis from his face while urinating. What to do?

Answer: Get your son examined by an urologist. Some people may have an abnormal curvature of the penis and this needs to be corrected. Otherwise when he gets married, he may find intercourse difficult.

()

உயிர்மை இலக்கிய இதழ், நகுலன் மறைவு குறித்த வெளியிட்ட சிறப்பு பக்கங்களிலும், அட்டைப் படத்திலும் பிரசுரமான நகுலனின் புகைப்படங்கள் அனுமதியின்றி பிரசுரிக்கப்பட்டிருப்பதாக, புகைப்படங்களின் உரிமையாளர் சீனிவாசன் என்பவர், உயிர்மை மீது வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். "Intellectual property" குறித்த அறிவும், விழிப்புணர்வும் நம்மிடமில்லை என்பதும் இந்த விஷயத்தை அறியாமையோடோ அல்லது அலட்சியத்துடனோதான் நாம் கையாளுகிறோம் என்பதுதான் இது வெளிப்படுத்துகிறது.

Tuesday, September 04, 2007

போலிகளை உடனே ஒழியுங்கள்....

தமிழக அரசியல் களத்திற்கு இணையாக தமிழ் வலைப்பதிவு உலகிலும் சுவாரசியமான காட்சிகள் தினந்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அங்கே போட்டி போட்டுக் கொண்டு குப்பையை வாருகிறார்கள் என்றால், இங்கே போட்டி போட்டுக் கொண்டு குப்பையை கொட்டி வருகிறார்கள். குப்பை கொட்டுபவர்களை விரட்டும் பாவனையாக சிலர் கம்பும் கையுமாக கூக்குரலிட்டுக் கொண்டிருக்க, ... "நான் அப்போதிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன். என் வீட்டு முன்னால தான் நெறைய குப்பை விழுது" என்று சிலர் போலியாக கூவிக் கொண்டு அபத்தமான முறையில் மற்றவர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்க, கவுன்சிலர்கள் மீட்டிங் மாதிரி இதன் மீதே குறைந்தது இதுவரை ஆயிரம் தீர்மானமாவது நிறைவேறியிருக்கும். ஆனால் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

போக்குவரத்து நிறைந்த சாலையில் செல்வதைப் போல, இணையமும் ஒரு திறந்த வெளிதான். போக்குவரத்து விதிகளை கவனமாக நிறைவேற்றுபவர்களும், சிவப்பு விழுவதற்குள் விரைந்துவிட வேண்டி அவசரமாக சென்று சிவப்பாக சிதறுபவர்களும், பின்னால் வருபவர்களைப் பற்றிய பிரக்ஞையேயின்றி "புளிச்'சென்று துப்புபவர்களுமாக...

நாம்தான் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. ஒழுங்கீனமாக நடப்பவர்களை ஒன்று சட்டரீதியாக எதிர்கொள்ள வேண்டும், அல்லது வேண்டுமென்றே சீண்டுபவர்களை நம் மெளனத்தால் புறக்கணித்தாலே போதும். பல பிரச்சினைகள் தீர்ந்து விடும். மாறாக சொறிய சுகமாக இருக்கிறதென்பதற்காக, இதையே செய்து கொண்டிருந்தால் வலைப்பதிவுக் களம் என்பதே ரணகளமான விஷயமாக மாறிவிடும்.........


என்று நண்பர் தொடர்ந்து பேசிக் கொண்டே போக, நான் இடைமறித்து "ஹலோ, இதைப் பற்றிப் பேச இது இடமல்ல. இதற்கென்றே வேறு நிறைய இடங்களும் ரசிகர் மன்றங்களும் இருக்கின்றன. அங்கே செல்லுங்கள். என்று இடை மறிக்க வேண்டிதாயிருந்தது. :-)

()

விஷயத்திற்கு வருவோம். கடந்த பதிவொன்றில் விளையாட்டாக ஒரு இலக்கியப் புதிரை போட்டு வைக்க, தொடரச் சொல்லி வந்த நூற்றுக் கணக்கான மின்னஞ்சல்கள் மூலமாக வெளிப்பட்ட அபரிதமான வரவேற்பு காரணமாக இன்னொன்றை இங்கே போட்டு வைக்கிறேன். அனைத்து சரியான விடைகளையும் முதலில் அளிக்கும் அதிர்ஷ்டசாலிகளுக்கு குலுக்கல் முறையில் அஜீர்ண மருந்து ஷாஷே ஒன்றும் யோகாசனங்கள் (பட விளக்கங்களுடன்) பற்றிய புத்தகம் ஒன்றும் கூரியரில் அனுப்பி வைக்கப்படும். (இரண்டிற்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதீர்கள்). கூகுளிலும் விக்கிபீடியாவிலும் விடையை தேடுபவர்களுக்கு தண்டணைப் பரிசாக "வீராச்சாமி" படத்தின் dvd விரைவுத் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.

()

1) ஆண்டாள் எழுதிய திருப்பாவையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?

2) தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் பிரதாப முதலியார் சரித்திரம். சரி. இரண்டாவது நாவல் எது? எழுதியவர் யார்?

3) 'கல்மரம்' நாவலுக்காக சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர்?

4) 'காக்காய் பார்லிமெண்ட்' எனும் தமிழின் முதல் அரசியல் சிறுகதையை எழுதியவர் யார்?

5) நோபல் பரிசுத் தொகைக்கான காசோலையை வங்கியின் பணமாக்காமல் கடைசிவரை புத்தக அடையாளமாய் பயன்படுத்திய எழுத்தாளர் யார்?

6) பிரபஞ்சனுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றுத் தந்த நாவல் எது?

7) " In Light of India" எனும் பிரபலமான கவிதையை எழுதிய லத்தீன் கவிஞர் யார்?

8) பொருனறாற்றுப் படை, பட்டினப்பாலை ஆகிய இரு பத்துப்பாட்டு நூல்களுக்கிடையேயான ஒற்றுமை என்ன?

9) மக்சீம் கார்க்கியின் "தாய்" நாவலுக்கு தமிழில் கவிதை வடிவம் தந்தவர்?

10) பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருதை இரண்டு முறை பெற்ற தமிழ் எழுத்தாளர் யார்?

(நன்றி: புத்தகம் பேசுது - ஜூலை 2007)

விடைகள் விரைவில்

Thursday, August 30, 2007

நாங்க பிலிம் காட்றம்ல...

"ஒரு படத்தின் விமர்சனம் என்பது எந்த ஊடகங்கள் மூலமாக வெளிப்பட்டாலும் சரி, அது ஒரு தனிமனித எண்ணங்களின் வெளிப்பாடுதான். ஒரு படத்தயாரிப்பாளன் (film maker) அதை பொருட்படுத்த தேவையில்லை" என்கிறார் பிரெஞ்சு நாட்டு திரைப்பட இயக்குநர் ழான் பால் ஷீத்தர். "பொதுப்புத்தியின் ஒட்டு மொத்த கலவையான கூறுகளையும் தன்னகத்தே கொண்டதே ஒரு சிறந்த விமர்சனமாக அமைய முடியும்" என்கிறார் ஜெர்மன் நாட்டின் பிரபல திரைப்பட விமர்சகர் மோர்சன்பிரே. (நான் சொந்தமா யோசித்து சொன்னது அப்படின்னா நீங்க ஒத்துப்பீங்களா? அதனாலதான் இப்படி வெளிநாட்டு ஆசாமிங்களோட பேர்ல கூடு பாயறது).

மேற்கத்திய நாடுகளில் திரைப்படமோ, நாடகமோ விமர்சகர்களின் கருத்துகளுக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்படுகிறது. தனது படைப்பு அரங்கேறின இரவன்று படைப்பாளிகள் நகத்தைக் கடித்துக் கொண்டு மறுநாள் நாளிதழுக்காக காத்திருப்பார்கள் என்று படித்திருக்கிறேன். நமது உள்ளுர் ஊடகங்கள் எப்படி செயல்படுகின்றன என்பதை ஒரு மேம்போக்கான பார்வையில் பார்ப்போமே.

()

செய்திகளை முந்தித்தருவதாக சொல்லிக் கொள்ளும் 'தினத்தந்தி'யின் திரை விமர்சனம் ரொம்பவும் மொண்ணையானது. 'கிச்சா வயது 16' படமானாலும் சரி, 'ஹேராம்' படமானலும் சரி ஒரே மாதிரியான தொனிதான். "ரகசியாவின் நடனம் இளசுகளை கிளுகிளுப்பூட்டக்கூடியது' போன்ற வரிகள் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். 'மொத்தத்தில் பார்க்க வேண்டிய படம்" என்று வெண்ணைத்தனமாக முடிப்பார்கள். இந்த மாதிரி விமர்சனங்களைப் படிப்பதை விட 'ஷகீலா இதுவரை எத்தனை படங்களில் நடித்திருக்கிறார்.. அவைகளில் எத்தனை நூறுநாட்களை தாண்டி ஓடியது? போன்ற புள்ளிவிவரங்களை எடுத்துக் கொண்டிருந்தாலவது போகிற வழிக்கு புண்ணியமாவது கிடைக்கும். 'தினமலர்' எப்பவாவது அபூர்வமாக எழுதும் விமர்சனங்களும் 'வளவளவென்றுதான்' இருக்கும். (வாரமலரில் இப்படி தொடர்ந்து கிண்டலடிக்குமளவிற்கு தமிழ்ச்சினிமாவாசிகளுக்கும் இவர்களுக்கும் அப்படி என்ன ஜென்மப் பகை என்று தெரியவில்லை).

'தி ஹிண்டு'வின் பழைய விமர்சனங்கள் சர்வ ஜாக்கிரதையாக இருக்கும். ஆங்கிலப்படங்களுக்கும் இந்திப்படங்களுக்கும் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை இப்படி தமிழுக்கும் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். (விளம்பரங்கள் செய்யும் வேலையா என்று தெரியவில்லை.) நடிகைகளின் clevage சர்வசாதாரணமாக ஆப்செட் பளபளப்பில் மின்னுகிறது. பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நாங்கள் கொடுத்த ஒரு ஜவுளிக்கடை விளம்பர பெண்ணின் தொப்புள் தெரிகிறது என்று பிரசுரிக்க மறுத்து விட்டார்கள். (இத்தனைக்கும் அது line drawing).

ஆனந்தவிகடன் நீண்ட ஆண்டுகளாக மார்க் போட்டு (வாத்தியாரா இருந்த எவரோ விமர்சகரா ஆரம்பித்து வைத்த பழக்கமோ என்னமோ) தன்னுடைய சேவையை ஆற்றி வருகிறது. இது வரை அதிகபட்சமாக மதிப்பெண் பெற்ற எதுவென்று தெரியவில்லை. {பாரதிராஜாவின் படமொன்றை (16 வயதினிலே (?) மதன் சமீபத்தில் குறிப்பிட்ட ஞாபகம்} சமீப காலங்களில் அதன் மொழி மிகவும் மாறிவிட்டது. (இளமை கலாட்டா).
பெரியார் திரைப்பட விமர்சனத்திற்கு பயபக்தியும் மதிப்பெண் போடாமல் விட்டதை சாருநிவேதிதா சவட்டிக் களைந்ததில் எனக்கு முழு உடன்பாடே. வாழும் காலத்திலேயே தீவிர விமர்சனங்களை நெஞ்சுரத்துடன் எதிர்கொண்ட ஆளுமையை மதிப்பிட பயந்து தாழ்ந்து போனது விகடன். 'பாய்ஸ்' படத்திற்கு 'த்தூ'' என்று பத்தாம்பசலித்தனமாக காறித்துப்பியது போன்ற ஒரு அநியாயம் இருக்க முடியாது. தீமைகளை ஒழிக்கும் அவதார நாயகர்களிடமிருந்து விலகி ஒரு கூடுமானவரை பாசாங்கை விலக்கி யதார்த்தத்தைக் கையாண்டு எடுத்த ஒரே ஷங்கர் படம் என்பதே என் மதிப்பீடு.

"கடைசி வரியில் கவிழ்த்து விடும் குமுதம் கூட" என்று வைரமுத்து ஒரு பிரயோகத்தை தன்னுடைய நாவலொன்றில் உபயோகித்த நினைவு. குமுதம் விமர்சனங்களை அதிகம் படித்ததில்லையென்றாலும் மிகவும் குறும்புத்தனமான விமர்சனங்களை படித்த நினைவிருக்கிறது. ராமராஜன் படத்திற்கு படத்தின் ஸ்டில்லை (still) மட்டும் பிரசுரித்து 'இந்தப்படத்திற்கெல்லாம் விமர்சனம் தேவையா?" என்பதுதான் விமர்சனமே. நாயகியின் கவர்ச்சியோ கவர்ச்சியான படத்தை மட்டும் கவனமாக நடுப்பக்கத்தில் போட்டும் சமூகப் பொறுப்பான பத்திரிகையிது.

பொதுவாக அச்சு ஊடகக்காரர்கள் தயாரிப்பாளர் தரும் கவரின் எடையைப் பொறுத்தே எதிரொலிப்பார்கள் என்று பொதுவாக நம்பப்படுகிறது.

()

சிற்றிதழ்களின் வரலாறு வேறுவகையானது. ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமாவை ஏதோ நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து மாதிரியே அணுகுவார்கள். (நன்றி: சுஜாதா). பின்பு பின்நவீனத்துவம் முன்வாசல் வழியாக வந்த பிறகும் பெர்க்மன், குரசோவா போன்றவர்களுக்கு மட்டுமே அனுமதி. ரே, ஷ்யாம் பெனகலும் எப்பவாவது தென்படுவார்கள். ஆனால் சமீப காலங்களில் இந்த நிலை மாறியுள்ளது. மணிரத்னம், ஷங்கர் போன்றவர்களின் படங்கள் என்றால் கையில் கற்களுடன் குஷியாக காத்திருந்த நிலை பரிணாம வளர்ச்சியடைந்து பாலா, அமீர், பாலாஜி சக்திவேல் வகையறாக்களுக்கும் நீண்டுள்ளது. மிகவும் நுணுக்கமான மொழியில் பல்லைக்கடிக்கும் கட்டுடைத்தலில் கடுமையான கட்டுரை வாசகனை பல சமயங்களில் பழகாதவன் வெங்காயம் அரியச் சென்றவனைப் போல கலங்க வைப்பது. யமுனா ராஜேந்திரன் என்றொரு ஆசாமி இருக்கிறார். பெருக்கல், வகுத்தல் போன்ற கணிதக் குறிகளை உரைநடையிலும் கையாள முடியும் என்று தெரிய வைத்தவர். குறைந்தது 20 பக்கங்களாவது நீளும் இவரது விமர்சனங்களை முழுவதும் படித்து முடிப்பவர்கள், மனைவியின் ஜாக்கெட்டுக்கு ஊக்கு தைக்கும் உருப்படியான வேலை கூட இல்லாத வெட்டி ஆசாமிகளாகத்தானிருக்க முடியும்.

அ.ராமசாமி என்றொரு விமர்சகர், காதல் திரைப்படத்தில் மைக்ரோ செகண்டுகளில் காட்டப்பட்ட பெரியார் சிலையின் கோணத்தை வைத்துக் கொண்டு எழுதிய விமர்சனம் நகைச்சுவையின் உச்சம். படம் ஆரம்பிக்கும் முன்பே தங்களது ஆயுதங்களை தீட்டிக் கொண்டு தீர்மானமாக அமர்ந்திருப்பார்களாயிருக்கும். காலச்சுவடு இதழ் ஒன்றில், மணிரத்னத்தின் இருவர் படத்தின் ஒரு ஷாட்டுக்கு விமர்சகரின் 2 பக்க அரசியல் ரீதியான கோணத்தைப் படித்திருந்தால் இயக்குநரே அயர்ந்து போயிருப்பார்.

()

இது இப்படியென்றால் தொலைக்காட்சிகளின் வேலை இன்னும் காமெடி. கலாநிதி மாறனின் ஒன்று விட்ட மச்சான் மாதிரியான தோரணையும் ஒரு ஆசாமி கால் மேல் கால் போட்டு ஒற்றை வரியில் தன்னுடைய செளகரியத்துக்கேற்ப படங்களை கலாய்த்ததில் திரையுலகத்தினருக்கு ரொம்ப நாட்களாக வயிற்றெரிச்சல். தன்னுடைய சானலுக்கு விற்க சம்மதிக்கும் படங்களை தலைமேல் தூக்கும் இவர்களின் பாணி ரொம்பவுமே அநியாயம். பொதிகை சானலில் பத்தாவது அரியர்ஸ் வைத்திருக்கும் ஒரு சிறுமி, சொல்லிக் கொடுத்த ஸ்கிரிப்டை மனப்பாடமாக சொல்லி விட்டுப் போகும். (குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தக் கூடாது என்று பொதிகைக்கு யாராவது சொன்னால் தேவலை). கஅகாலத்தில் கோட்டு, சூட்டு போட்டுக் கொண்டவரைப் போல் அசெளகரியத்துடன் ஒரு நபர், நடிகர் சிவகுமார் மாடுலேஷனில் ஸ்கிரிப்டை வாசித்து விட்டு போவார் 'ராஜ்டிவி'காரர்.

'விஜய்'யில் மதனின் விமர்சனம் கொஞ்சம் தேவலையாக இருக்கும் என்றாலும், மனிதர் அநியாயத்திற்கு நல்லவராக இருக்கிறார். கடுமையாக விமர்சிக்க மாட்டேன் பேர்வழி என்று விஷால் படத்தைக்கூட 'ரே'படத்தை சர்வஜாக்கிரதையாக விமர்சிப்பதைப் போல, இயக்குநருக்கு கை கொடுப்பார். ஆனால் இது Times Now சானலில் ராஜீவ் வழங்கும் நிகழ்ச்சியின் பிரதி சரியாக விழாத கார்பன் காப்பி என்பது அதையும் பார்ப்பவர்களுக்கு விளங்கும். (ஆனால் ராஜீவ் நீரிழவுக்காரர் கழிவறைக்கு விரைகிற அவசரத்திலேயே பேசுவதை தவிர்த்தால் நன்றாயிருக்கும்) இவரைப் போலவே நிகழ்ச்சியின் இறுதிப்பகுதியாக ஒரு நல்ல திரைப்படத்தின் dvd-ஐ பரிந்துரை செய்வதை நான் ஆர்வத்துடன் கவனிப்பேன்.

சமீப காலமாக சுஹாசினியும் (ஜெயாடி.வி) களத்தில் குதித்திருக்கிறார். ஆனால் இவர் பேசி பேசி ஓய்ந்து போவதில், பார்ப்பது தொலைக்காட்சியா அல்லது வானொலியா என்று சந்தேகம் வந்துவிடும். காட்சி ஊடகத்தை இப்படி பேசியே விமர்சிப்பது மிகவும் அநியாயம். மணிரத்னம் மனைவி என்கிற பந்தாவில் இந்தியாவின் எந்த நடிகரானாலும் தொலைபேசியில் உரையாட முடிவது நிகழ்ச்சியின் பலம். (மணிரத்னம், நிகழ்ச்சயில் எந்தப்படத்தையும் காரசாரமாக விமர்சிக்காதே என்று சொல்லியிருக்கிறாமே).

()

எவ்வித எதிர்பார்ப்புமில்லாமல் படத்தின் விமர்சனத்தை தருபவர்கள், முந்தைய காட்சியிலிருந்து வெளிவருபவர்கள் என்று பொதுவான நம்பிக்கையிருக்கிறது. ஆனால் இவர்களும் கேமராவின் வெளிச்சத்தில் நனையும் குதூகூலத்துடன் "சூப்பரு' என்று ஒரே மாதிரியாக சொல்வது நாடகத்தனமாயிருக்கிறது. இவர்களையும் தாண்டி நமது வலைப்பதிவர்களின் விமர்சனங்களைப் பற்றி சொல்லலாம் என்றால்...

சேம் சைடு கோல் போட நான் தயாராயில்லை. என்றாலும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் வகையில் திரை விமர்சனங்களை இந்தப் பதிவில் வாசிக்க முடியும். :-)

Tuesday, August 28, 2007

Reservoir Dogs (1992) திரைப்பார்வை

விநோதமான, நான்-லீனியர் திரைக்கதையமைப்பை கொண்டிருப்பதே இந்தப்படத்தின் தனித்தன்மை என்று நான் நினைக்கிறேன். ஹீரோவின் காலை முதலில் காட்டியவுடன் விசிலடிக்கும் நம்முர்காரர்களுக்கு இந்தப் படம் இதனாலேயே பிடிக்காமல் போகலாம். ஆறு பேர் அடங்கிய குழு ஒன்று வைரங்களை கொள்ளையடிக்க முயல்வதும் அது குழப்பமும், விவாதமும், சந்தேகமும், ரத்தசகதியோடும் முடிவதே இந்தப்படத்தின் ஒன்லைன்.

Photo Sharing and Video Hosting at Photobucket

முன்பின் அறிமுகமில்லாத அந்தக் குழு ஜோ என்பவரின் தலைமையில் இணைந்து ஒரு ஹோட்டலில் அமர்ந்து மடோன்னாவின் பாடல்களைப் பற்றியும் பரிமாறுபவருக்கு டிப்ஸ் அளிப்பது பற்றியும், 'fuck' என்கிற வார்த்தையை side-dish-ஆக கொண்டு விவாதிப்பதில் படம் ஆரம்பிக்கிறது.

ஒருவர் அடிவயிற்றில் குண்டடி பட்டு சிவப்பாக காரின் பின்சீட்டில் உயிருக்கு போராடுவதோடும் முன்சீட்டில் அவருக்கு நம்பிக்கையூட்டிய படியே காரை ஒட்டுவதாகவும் அடுத்த காட்சி தாவி ஓடுகிறது. இருவரும் பாதுகாப்பான இடத்தை அடைந்ததும் குண்டடி பட்டவர், தன்னை ஏதாவதொரு மருத்துவமனை வாசலில் போட்டுவிடும் படியும் யாரையும் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்றும் கெஞ்சுகிறார். ஆனால் கார் ஓட்டி வந்தவரோ பின்னர் வருகிற இன்னொரு கொள்ளையருடன், திட்டத்தில் எவ்வாறு குழப்பம் நேர்ந்தது என்பது குறித்து நீண்ட விவாதத்துடன் கூடிய சண்டையிடுகிறார். flash back உத்தியில் அவர் காவலர்களிடமிருந்து தப்பி வந்து காட்சி காட்டப்படுகிறது. இருவரும் விவாதத்தின் உச்சத்தில் ஒருவரையொருவர் துப்பாக்கியை நீட்ட, காட்சியில் வந்து இணைகிற இன்னொருவர் இருவரையும் தடுத்து நிறுத்துகிறார். மூவரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி சண்டையிடுகின்றனர். இவர் ஒரு காவலரை தன் காரில் கடத்தி வந்திருக்கிறார். மூவரும் சேர்ந்து உண்மையை தெரிந்து கொள்ளும் பொருட்டு காவலரை நையப் புடைக்கின்றனர். குண்டடி பட்டவர் ஒரு மூலையில் சுயநினைவின்றி படுத்துக் கிடக்கிறார்.

(குழு நபர்கள் ஒவ்வொருவரின் பின்னணி குறித்தும் அவர்களின் சொந்த அடையாளத்தை இனங்காண முடியாமல் எப்படி நிறங்களின் பெயர்கள் சூட்டப்படுகின்றன என்பதும் இடையிடையே பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறது. Mr.Pink, Mr.Orange, Mr.White, Mr.Blonde, Mr.Blue, Mr.Brown)

குழுவின் தலைவனான ஜோவின் மகன் நுழைந்து அனைவரையும் அமைதிப்படுத்தி Mr.Blonde-ஐ காவல் வைத்து விட்டு வைரங்களை கைப்பற்றும் பொருட்டு வெளியே விரைகின்றனர். psychopath-ஆன Blonde கட்டிப் போடப்பட்டிருக்கின்ற காவலரின் காதை அறுத்து, பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைக்கும் வேளையில் அவர் மீது சரமாரியாக குண்டுகள் பாய்கின்றன. சுயநினைவின்றி படுத்திருந்தவரே இந்த காரியத்தைச் செய்து காவலரை காப்பாற்றியவர்.

அவர் யார் என்பதையும் அடுத்து என்ன நிகழ்கிறது என்பதையும் அருகிலிருக்கும் dvd ஸ்டோருக்குச் செல்வதின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

()

Quentin Tarantino இந்தப்படத்தை இயக்கி சிறுவேடத்தையும் ஏற்றிருக்கிறார். படத்தின் பல காட்சிகள் பிரபல படங்களின் (City of Fire) காட்சிகளின் inspiration-களோடு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இதுபற்றி ஒரு நேர்காணலில் குறிப்பிடும் இயக்குநர் "ஆமாய்யா.. மத்த படங்கள்ல இருந்து திருடித்தான் எடுத்தேன். இப்ப என்ன அதுக்கு? ஊர்ல எல்லாம் அப்படித்தாம்ப்பா இருக்காங்க. வேணுமின்னா நீங்க பார்க்காதீங்க" என்றிருக்கிறார் அதிரடியாக. Mr.Blonde-ஆக நடித்திருக்கிற Michael Madsen வின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது.


முன்பே குறிப்பிட்ட மாதிரி, இந்தப்படத்தின் பலமே இதுவரை நான் சந்தித்திராத திரைக்கதையமைப்பு. fuck, fucking.. போன்ற வார்த்தைகள் எத்தனை முறை படத்தில் வருகிறது என்பதற்கு ஒரு போட்டியே வைக்கலாம். (254 முறை என்று விக்கிபீடியா மூலம் பின்னர் அறிந்து கொண்டேன்).

கொஞ்சம் sample

Mr. Brown: Let me tell you what 'Like a Virgin' is about. It's all about a girl who digs a guy with a big dick. The entire song. It's a metaphor for big dicks.

Mr. Blonde: No, no. It's about a girl who is very vulnerable. She's been fucked over a few times. Then she meets some guy who's really sensitive...

Mr. Brown: Whoa, whoa, whoa, whoa, whoa... Time out Greenbay. Tell that fucking bullshit to the tourists.

Joe: Toby... Who the fuck is Toby? Toby...

Mr. Brown: 'Like a Virgin' is not about this nice girl who meets a nice fella. That's what "True Blue" is about, now, granted, no argument about that.

Mr. Orange: Which one is 'True Blue'?

Nice Guy Eddie: 'True Blue' was a big ass hit for Madonna. I don't even follow this Tops In Pops shit, and I've at least heard of "True Blue".

Mr. Orange: Look, asshole, I didn't say I ain't heard of it. All I asked was how does it go? Excuse me for not being the world's biggest Madonna fan.

Mr. Orange: Personally, I can do without her.

Mr. Pink: I like her early stuff. You know, 'Lucky Star', 'Borderline' - but once she got into her 'Papa Don't Preach' phase, I don't know, I tuned out.

Mr. Brown: Hey, you guys are making me lose my... train of thought here. I was saying something, what was it?

Joe: Oh, Toby was this Chinese girl, what was her last name?

Mr. White: What's that?

Joe: I found this old address book in a jacket I ain't worn in a coon's age. What was that name?

Mr. Brown: What the fuck was I talking about?

Mr. Pink: You said 'True Blue' was about a nice girl, a sensitive girl who meets a nice guy, and that 'Like a Virgin' was a metaphor for big dicks.

Mr. Brown: Lemme tell you what 'Like a Virgin' is about. It's all about this cooze who's a regular fuck machine, I'm talking morning, day, night, afternoon, dick, dick, dick, dick, dick, dick, dick, dick, dick.

Mr. Blue: How many dicks is that?

Mr. White: A lot.

Mr. Brown: Then one day she meets this John Holmes motherfucker and it's like, whoa baby, I mean this cat is like Charles Bronson in the 'Great Escape', he's digging tunnels. Now, she's gettin' the serious dick action and she's feeling something she ain't felt since forever. Pain. Pain.

Joe: Chew? Toby Chew?

Mr. Brown: It hurts her. It shouldn't hurt her, you know, her pussy should be Bubble Yum by now, but when this cat fucks her it hurts. It hurts just like it did the first time. You see the pain is reminding a fuck machine what it once was like to be a virgin. Hence, 'Like a Virgin'.

Joe: Wong?

()

வித்தியாசமான திரைப்படங்களின் தேடல்களில் ஈடுபட்டிருப்போர் பார்க்கத் தவற விடக்கூ¡த திரைப்படம்.

Courtesy: IMDB, Wikipedia