Wednesday, December 31, 2008

கற்பிதங்கள் உடைந்த சிரிப்பு

மாறுதலாக, இம்மாதிரியான தருணங்களில் சாருநிவேதிதாவை ரொம்பவே பிடித்துப் போய் விடுகிறது.

()

நேற்று ஒரு வாடிக்கையாளரின் விளம்பர வடிவமைப்பு ஒப்புதலுக்காக நிறையவே களைத்துப் போயிருந்தேன். பொறுமையை இழக்க வேண்டியிருந்த தருணங்களை பல்லைக்கடித்துக் கொண்டு சகிக்க வேண்டியதாயிருந்தது. இறுதிக் கட்ட ஒப்புதலின் போது ஒரு மிகச்சிறிய திருத்தத்திற்காக அரைமணி நேரம் காத்திருக்க வேண்டிய நொந்து போயிருந்த கணத்தில் கிடைத்த இடைவெளியில் இணையத்தில் மேயும் போது சாருவின் வலைத்தளத்தில் அவரின் பத்து புத்தகங்களுக்கான அறிவிப்பில் இருந்த இந்த வரிகளை படித்த போது எல்லா உளைச்சலும் மறைந்து போய் சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வந்தது.

இந்த உலகில் எந்த விஷயத்தையுமே நாம் ஓசியில் வாங்க முடியாது. (அம்மாவின் அன்பு என்றெல்லாம் சொல்லி டார்ச்சர் பண்ணாதீர்கள்).

படித்து முடித்து விட்டு வேறு சில பதிவுகளை படித்த பிறகும் குறிப்பிட்ட வரிகள் நினைவில் வந்து சிரிப்பை வாரியடித்துக் கொண்டே இருந்தன. கணினி முன் அமர்ந்து கொண்டு தனியாக சிரித்துக் கொண்டிருந்தால் அலுவலகத்தில் உள்ளவர்கள் மனநல மருத்துவனைக்கு தொலைபேசும் அபாயம் இருந்ததால் தேநீர் அருந்தும் சாக்கில் வெளியே சென்றேன். கடலலை போல் அப்போதும் சிரிப்பு தேநீருடன் வழிந்து கொண்டே இருந்தது. உறங்கப் போகும் வரை இந்த மனநிலையே நீடித்தது.

மறுநாள் பல் துலக்கிக் கொண்டிருந்த கணத்தில் எங்கிருந்தோ நினைவகத்தில் இருந்து பாய்ந்து வந்த வரிகள் குபீர் சிரிப்பை மூட்டின. பற்பசையை உடனே துப்ப வேண்டியதாயிருந்தது.

()

தேசபக்தி, தாயன்பு, தெய்வீகக் காதல், விழாக்கள், பிறந்த நாட்கள் போன்ற மாதிரியான கற்பிதங்களையும் புனிதமாக கட்டமைக்கப்பட்ட பிம்பங்களையும் வைத்துக் கொண்டு நாம் படும் பாடு இருக்கிறதே, அப்பப்பா! எவ்வளவு போலித்தனமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நல்லவேளையாக செய்தித்தாள்களில் குற்றவியல் சார்ந்த உண்மை நிகழ்வுகள் இந்தக் கற்பிதங்களை நாம் உணராமலேயே அவ்வப்போது சேதப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. நம்முன்னேயே உலவிக் கொண்டிருக்கும் உண்மையின் யதார்த்தத்தின் வெளிச்சத்தை கண்கொண்டு காண முடியாத கூச்சத்துடன் போலி இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெற்றோர்களும், ஆசிரியர்களும், முன்னோர்களும், வரலாற்றாசிரியர்களும், எழுத்தாளர்களும் அமைத்துக் கொடுத்த கடிவாளங்கள் வேறு.

இன்னும் விரித்து எழுத ஆசைதான்... ஆனால்..

சாருவின் பதிவை முழுக்கப்படித்துப் பாருங்கள். பதிவின் இறுதியிலும் சில சிரிப்பு வெடிகள் உள்ளன.

[பின்குறிப்பு: புத்தாண்டு வாழ்த்துகள் என்று சொல்லாமலிருக்கப் போகும் நண்பர்களுக்கு முன்கூட்டிய நன்றிகள். :-) ]

suresh kannan

Monday, December 29, 2008

திமுக: இளவரசருக்கு முடிசூட்டு விழா

தி.மு.க.ராஜ்யத்தில் மகாராஜாவின் பிரியமான இளவரசருக்கு நடந்த முடிசூட்டுவிழா கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகும் பாக்கியத்தைப் பெற்றேன். நான் முன்பே சொல்லியிருப்பதைப் போல 'காமெடி திரை' என்றெல்லாம் தனி சானல் தொடங்காமல் எல்லா கட்சிகளின் அரசியல் கூட்டங்களையும் நேரடியாக ஒளிபரப்புகிறாற் போல் ஒரு சானல் ஆரம்பித்தால் வடிவேலு, விவேக் எல்லாம் எடுபடாமலே போய்விடுவார்கள். அவ்வளவு காமெடியாக இருக்கும். அதை நிரூபிக்கிறாற் போல்தான் இருந்தது இந்த நிகழ்வுகளும்.

சந்தைக்கடை மாதிரி ஒலித்த கூச்சலின் பின்னணியில் கழக உடன்பிறப்புகளின் மத்தியில் பரிதாபமான தோற்றத்தில் அமர்ந்திருந்தார் கருணாநிதி. அவர் விரும்பியோ விரும்பாமலோ மாலைகளும் பொன்னாடைகளும் மேலே விழுந்து கொண்டே இருந்தன. இதே மாதிரியானதொரு காட்சியை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று யோசித்தேன். காஞ்சி மட சீனியரின் நூற்றாண்டு விழாவிலும் இதே போல் அவர் மலங்க மலங்க விழித்து அமர்ந்திருக்க மாலைகளும் தங்க நாணயங்களும் அவர் தலை மேல் கொட்டப்பட்டது நினைவுக்கு வந்தது.

Photobucket

ஸ்டாலினை வாழ்த்த வந்தவர்கள் (அதாவது அட்டெண்டென்ஸ் போட வந்தவர்கள்) தாங்கள் வந்திருக்கிறோம் என்பதை எப்படியாவது நிறுவ முயற்சி செய்தது காமெடியாக இருந்தது. ஸ்டாலினுக்கு மற்ற நிறங்களில் பொன்னாடை போர்த்தியவர்கள் கருணாநிதிக்கு மாத்திரம் ஞாபகமாக மஞ்சள் நிற பொன்னாடைகளை சமர்ப்பித்து காலில் விழுந்து அவரின் ஆசிகளைப் பெற்றனர். நேரம் ஆக ஆக பொன்னாடைகள் போர்த்தப்படுவது தவிர்க்கப்பட்டு செக்யூரிட்டிகளால் பிடுங்கி பின்னால் வீசப்பட்டன. ரோஜாப்பூவாக இருந்தாலும் தொடர்ந்து அடித்தால் வலிக்காதா என்ன?. இலவு காத்த கிளி போல் எழவு காத்த கிளியாக அமர்ந்திருந்த 'அன்பழகனை' பாவம், கண்டு கொள்ள ஆளே இல்லை. மூக்கை நெருடியவாறு அமர்ந்திருந்தார். கருணாநிதியின் நிழல் இருக்கிறதோ இல்லையோ, அதற்கு பதிலாக அமர்ந்து வந்த சண்முகநாதனை காணவில்லை. அதற்குப்பதிலாக ஒருவர் பெரியவாளிடம் பேசும் சிஷ்யகேடிகள் மாதிரி.. மன்னிக்கவும் சிஷ்யகோடி மாதிரி வாயைப் பொத்திக் கொண்டு கருணாநிதியிடம் பேசினார்.

இனி அரசு விழாக்களில் பொன்னாடைகள் போர்த்தப்படுவது தவிர்க்கப்பட்டு அதற்கு பதில் புத்தகங்கள் வழங்கவேண்டும் என்று கருணாநிதி எப்பவோ கூறிய நினைவு. காந்தி சொன்னதை அவர் இருக்கும் போதே பின்பற்றாதது மாதிரி உடன்பிறப்புகளும் கருணாநிதி சொல்லியிருந்ததை ஞாபகமாக பின்பற்ற விரும்பவில்லை. (காந்தியுடன் கருணாநிதியை ஒப்பிட்டது குறித்து திமுக காரர்கள், வீட்டிற்கு ஆட்டோ அனுப்பாமல் என்னை பாராட்ட வேண்டும். காங்கிரஸ்காரர்களுக்கு காந்தியை திட்டினாலும் பரவாயில்லை. சோனியா காந்தியை திட்டக்கூடாது).

ஒரு ஆச்சரியமும் நடந்தது. யாரோ ஒரு கலகவாதி பொன்னாடைக்கு பதில் புத்தகத்தை அளிக்க அதுவரை அசையாமல் அமாந்திருந்த கருணாநிதி சலனமடைந்து அந்தப் பரபரப்பிற்கிடையிலும் 'அது என்ன புத்தகம்?' என்று மெனக்கெட்டு கவனித்ததை புத்தகப்பிரியனான நான் நெகிழ்ச்சியுடன் பார்த்தேன்.

கூச்சலின் இடையே யாரோ ஒருவர் பலத்த சத்தத்துடன் சண்டையிடும் குரல் கேட்டது. கலைஞர் டிவியில் உடனே ஒலியை அமுக்கி பின்னணி இசையை ஓடவிட்டனர். ஆனால் சன்டிவியில் இதை தொடர்ந்து கேட்டு ரசிக்க முடிந்தது.

பத்திரிகையாளர்கள்தான் பாவம். ஒவ்வொரு முக்கியமான தலைவர்கள் பொன்னாடை அணிவிக்கும் போதெல்லாம் இலவச தொலைக்காட்சி பெட்டி வாங்க வந்தவர்கள் போல் முண்டியடித்துக் கொண்டு "அண்ணே, அண்ணே... சார்... சார்.... " என்று புகைப்படம் எடுக்க இறைஞ்சிக் கொண்டிருந்ததைக் காண பரிதாபமாக இருந்தது.

'இந்தப் பதவியை யாரும் என்னிடமிருந்து பிடுங்கவில்லை. நானாகத்தான் முன்வந்து தம்பி ஸ்டாலினை பொருளாளராக ஆக்கும் யோசனையை தலைவருக்கு அளித்தேன்' என்று ஆற்காடு வீராசாமி ஒரு பரிதாப சுயவாக்குமூலம் அளித்துக் கொண்டிருந்தார். 'நான் கைது செய்யப்பட்டால் தொண்டர்கள் பொறுமை காக்க வேண்டும்' என்று திராவிட தலைவர் சொன்னால் அதற்கு என்ன அர்த்தம் என்று ஆக்கப்பூர்வமான தொண்டர்களுக்கு தெரியாதா? அதே போன்ற அர்த்தத்தில்தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது.

எப்படியோ கருணாதிக்குப் பின் ஸ்டாலின் என்று நெடுங்காலமாக உலவிக் கொண்டிருந்த உண்மையான வதந்தி, அதிகாரபூர்வமாக நிறுவப்பட்டு விட்டது.

மன்னராட்சி முறை ஒழிந்து மக்களாட்சி முறை நடப்பதுதான் ஜனநாயகம் என்று ஐந்தாங் கிளாஸ் வரலாற்று பாடப்புத்தகத்தில் படித்த ஞாபகம். அப்போது இந்திராகாந்தி பிரதமர் என்றும் ஞாபகம். என் மகள் படிக்கும் போது ராகுல் காந்தி பிரதமராக இருக்கலாம்.

ஜெய்ஹிந்த்.

சொல்ல மறந்தது: கலைஞர் மற்றும் சன் தொலைக்காட்சிகளின் நேரடி ஒளிபரப்பில் சில மைக்ரோ செகண்டுகள் வித்தியாசத்தில் சன்னே முதலில் ஒளிபரப்பியது. என்ன இருந்தாலும் சீனியரல்லவா! ஜெயா டிவியில் மைனாரிட்டி திமுக அரசு.... என்று லட்சத்தி பன்னிரெண்டாயிரத்தி முந்நூற்று ஐந்தாவது தடவையாக சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்க பரிதாபமாக இருந்தது. 2011-ல் முதல்வராகும் வரிசையில் நிற்கும் விஜய்காந்த்,சரத்குமார் போன்றவர்கள் கதி என்னவாகும் என்று யூகிக்க முடியவில்லை.

ஸ்டாலினின் blog

suresh kannan

Friday, December 26, 2008

காமம் பொங்கி வழியும் புதினம்

பழைய ஆனந்த விகடன் கட்டுரைத் தொடர் ஒன்றில், கிராமத்தில் ஓடும் தகர டப்பா பஸ்ஸைப் பற்றி எழுதும் போது "ஏதோ ஒர் தர்மத்துக்கு கட்டுப்பட்டு அது தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது' என்று எழுதியிருப்பார் பாஸ்கர் சக்தி. ஏறக்குறைய இந்தியாவையும் அந்த பஸ்ஸ¥டன் ஒப்பிட்டால் தேச பக்தர்கள் மேலே விழுந்து பிடுங்குவார்களோ என்னமோ. எங்காவது குண்டு வெடிக்கும் போதும் கிரிக்கெட்டின் போதுதான் இவர்களின் தேசபக்தி பொங்கி வழியும். வல்லபாய் பட்டேல் சாம, பேத, தான, தண்ட.. என அனைத்து முறைகளையும் உபயோகித்து கட்டிப் போட்ட தேசத்தின் கயிறு ஏதோ ஒர் தர்மத்திற்கு கட்டுப்பட்டு பிய்ந்து விடாமல் இருக்கிறது. உயர்நீதி மன்றம் அறிவுறுத்தியும் தனது அண்டை மாநிலத்தின் விவசாய பயன்பாட்டிற்கு நீர் தராத மாநிலங்களை வைத்துக் கொண்டு 'இந்தியா எனது தாய்நாடு; இந்தியர்கள் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள்' (நமீதாவை சகோதரியாக நினைக்க எந்த கேணையன் இருக்கிறான்?) என்று சொல்வதுதான் எவ்வளவு அபத்தமாக இருக்கிறது? சரி அரசியல் வேண்டாம். இலக்கியத்தின் பக்கம் வருவோம். தமிழ்நாட்டிலேயே பல பேருக்கு - தமிழ்த்துறை பேராசிரியர்கள் உட்பட- அது பாரதி, பாரதிதாசனோடு முடிந்து போய் விடுகிறது. இந்த லட்சணத்தில் அண்டை மாநிலத்தின் இலக்கிய வரலாற்றைப் பற்றிக் கேட்டால் அவனை எதால் அடிப்பது?. ஹிப்ரூ மொழியில் எழுதும் படைப்பாளியைக் கூட தெரிந்து வைத்திருக்கும் நவீன இலக்கிய உலகம் பக்கத்து மாநிலத்து எழுத்தாளனைப் பற்றிக் கேட்டால் பேய் முழி முழிக்கிறது. சாகித்ய அகாடமி என்றொரு அமைப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள். அரசியல் சக்திகளின் அருளாசிகளின் வட்டத்தில் இருப்பவர்களுக்குத்தான் சம்பந்தப்பட்ட விருது கிடைக்கும் என்கிறார்கள். அவர்கள் வெளியிட்ட நூல்களில் உருப்படியாக நான் படித்தது சிவராம காரந்தின் 'அழிந்த பிறகு' மட்டும்தான். பத்தாங்கிளாஸ் பாடப்புத்தகம் ஸ்டைலில் இலக்கிய ஆளுமைகளைப் பற்றின நூல்களும் வெளியிடுகிறார்கள். யார் படிக்கிறார்கள் என்று தெரியவில்லை.

Photobucket

'மனிதனின் பெரும்பாலான அகப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக்காரணியாய் இருப்பது காமம்தான்' என்று சொன்ன உளவியலின் தந்தையான சிக்மண்ட் ·பிராய்டின் வாயில் சர்க்கரை மூட்டையையே போடலாம். 'யார் இந்த பிராடு? எப்போது இதை உன்னிடம் டெலிபோனில் சொன்னார்?' என்று கேட்பவர்கள் இணையத்தில் தேடிக் கண்டடையுங்கள். ஸி.வி. பாலகிருஷ்ணனின் மலையாள நாவலான 'ஆயுஸ்ஸிண்டே புத்தகம்' (தமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி) இதைத்தான் புனைவு மொழியில் சொல்கிறது. இந்தப் புனைவெங்கும் காமம் கண்ணுக்குத் தெரியாத ஒரு மலைப்பாம்பைப் போல ஊர்ந்து செல்கிறது. காமத்தை இன்னும் கண்ணாமூச்சி ஆட்டம் போல வைத்திருக்கும் நம் பாசாங்கான சமூகத்தில் அடித்தட்டு மக்கள் இதை மிக எளிதாக கடந்து செல்கிறார்கள்.

மாடு மேய்க்கும் மேரி நைநானுடன் காதல் என்கிற பெயரில் உறவு கொள்கிறாள். அவனோ வேறு பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்கிறான். ஐம்பது வயதாகும் கிழவனை விரும்பியே பிடிவாதம் செய்து திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொல்லும் மேரியிடம் ஆனி கேட்கிறாள். ".. அந்த மனுஷனுக்கு உங்கப்பாவ விட வயசு ஜாஸ்தி, தெரியுமில்ல?".

"அது பரவாயில்ல. அவனுக்குப் பதினேழு வயசிலே ஒரு மகன் இருக்கானே? அவன் அப்பாவுக்குத் தெரியாம நாங்க ரெண்டு பேரும் ஜாலியா இருக்கலாமே!".

()

பெளலோவின் மகன் தோமோ. தோமோவின் மகள் ஆனி, மகன் யோஹன்னான்.

இந்த நாவல் குறிப்பாக காற்றில் பறக்கும் காகிதம் போல் அலைக்கழியும் யோஹன்னானைச் சுற்றியே அலைகிறது.

தாத்தா பெளலோ பக்கத்து வீட்டு பெண்ணான ராஹேலிடம் இறந்து போன தன்னுடைய மனைவியின் ஞாபகம் பொங்கிப் பெருகும் நினைவுகளின் ஒரு கணத்தில் முறைதவறி நடந்து விடுகிறார். தாத்தா தடவலின் வித்தியாசத்தை அறிந்த ராஹேல் அழுது கொண்டே ஓடுவதில் நாவல் துவங்குகிறது. இதைப் பார்த்து விடும் பெளலோவின் மகன் தோமோ தன் தந்தையாரை அடிஅடியென அடிக்கிறான். பின்பு முட்ட முட்டக் குடித்துவிட்டு தன் மனைவியின் கல்லறையை நோக்கி ஓடுகிறான். அவமானத்தில் புழுங்கித் தவிக்கும் பெளலோ தூக்கிட்டுச் சாகிறார். அவரின் பழைய செருப்புகள் வீட்டின் கூரையிலிருந்து அனைத்தையும் கவனிக்கிறது. (மேஜிக்கல் ரியலிசமாம்!).

அந்த ஊரின் அழகியான 'ஸாரா'வின் கணவன் ஸக்ரியா ஒரு நோயாளி. ஸாராவையே நினைத்து ஏங்கும் யாகேப் சுயமாக சாராயம் காய்ச்சிக் குடிக்கிறவன். தன்னுடைய காதலை அவளிடம் சொல்கிறான். ஆனால் அவளின் சம்மதம் கிடைக்காமல் போகவே அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டுச் சாகிறான்.

யோஹன்னானின் சகோதரி ஆனிக்கும் அந்த ஊர் சர்ச்சின் பாதிரி மாத்யூவிற்கும் காதல் ஏற்படுகிறது. தன்னுடைய 'வெள்ளை அங்கி' தடுக்கும் நிலையை நினைத்து பரிதவிக்கும் பாதிரிக்கு 'விழிப்பை' ஏற்படுத்துபவன் குடிகார யாகேப்தான்.

... இந்த உலகத்துல அன்பும் நட்பும் நிலவணும்கறதுதான் என்னோட ஆசை, கையாலாகத்தனம், யாருக்கும் தெரியாம, தனக்குள்ளேயே துக்கப்பட்டு இருக்கிறது, தைரியமில்லாமே, கோழையா வாழறது, பயந்தாங்குளித்தனம். இது ஒண்ணுமே இல்லாம இந்த உலகம் அன்பு நிறைஞ்சதா இருக்கணும்கறதுதான் என்னோட விருப்பம்...

தெளிவடைந்த பாதிரி மாத்யூ இது குறித்து மூத்த பாதிரியுடன் நிகழ்த்தும் விவாதம் இந்த நாவலின் முக்கியமான பகுதி. பாதிரி வாழ்க்கையை தேர்ந்தெடுத்து பிரம்மச்சரியத்துடன் வாழ நேர்பவர்கள் எதிர்கொள்ள நேரும் பிரச்சினைகளைப் பற்றி செய்தித்தாளில் வந்திருக்கும் ஒரு கட்டுரையின் துணையோடு விவாதிக்கிறார் மாத்யூ.

... மாத்யூ தொடர்ந்தார். 'செக்ஸ் வேண்டும் என்றல்ல நான் வாதிப்பது. அதில்லாமல் என்னால் வாழ முடியும். ஆனால் தனிமையை நம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஒரு பெரிய கட்டிடடத்தில் என்னை விட வயதில் மூத்தவர்களுடனும் இளையவர்களுடனும் நான் சேர்ந்து வாழ்கிறேன். ஆனால் மிக அபூர்வமாகவே நாங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறோம். மனம் திறந்து பேச யாராவது இருக்க மாட்டார்களா என்று நான் பல தடவை ஏங்கியிருக்கிறேன். ...

என்பவர், உலகத்தில் நல்வழிகள் ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்தாலும் பிரச்சினைகளும் வன்முறைகளும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. எனவே பிரம்மச்சரியத்தோடு செய்வதை திருமணம் செய்து கொண்டும் செய்யலாம் என்று விவாதிக்கிறார்.

.. சொர்க்கத்தில் செய்யப்படுவதையெல்லாம் நாம் பூமியில் செய்ய நினைப்பது சரியல்ல என்று கருதுகிறேன். பூமியின் சட்ட திட்டங்கள் வித்தியாசமானவை. அதனால்தானே யேசு கிறிஸ்துவே அவருடைய சிஷ்யர்களிடையே பிரம்மச்சரியத்தைக் கட்டாயமாக்கவில்லை.! யோவானையும் பவுலையும் தவிர மற்ற எல்லோரும் திருமணம் செய்து கொண்டவர்கள்தானே?"...

இதற்கு மூத்த பாதிரி சொல்லும் பதில் மிகவும் convince- ஆக எனக்குத் தோன்றியது.

... நாம் திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் நூற்றுக்கணக்கான பிரச்சினைகளைப் பற்றியும் பேச வேண்டும். பாதிரியாகப் பணிபுரியும் கணவன், தன் மனைவியுடன் தினமும் சண்டை பிடித்துக் கொண்டிருந்தால் அது அந்த சர்ச்காரர்களுக்குப் பிடிக்குமா? தனது துக்கத்திலிருந்து விடுதலை பெற விரும்பும் யாராவது அந்தப் புரோகிதனிடம் வருவார்களா?..

என்றாலும் மாத்யூவும் ஆனியும் ஊரை விட்டு ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டு நிறைவான வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆனியைப் பற்றிய தகவல் நாவலில் பிறகு சொற்பமாகவே வருகிறது.

()

யோஹன்னான் தனது நண்பன் ஜோஷியுடன் ஒரினப்புணர்ச்சி கொள்கிறான். ஜோஷி இறையியில் படிப்பிற்காக ஊருக்குச் சென்றவுடன் நாவலின் ஆரம்பத்தில் வரும் ராஹேலுடன் உறவு கொள்கிறான். மறுநாள் அவளை பார்க்கச் சென்ற போது அவள் 'கன்யா மடத்தில்' சேருவதற்காக சென்றிருப்பதை அறிகிறான். தனிமையின் புழுக்கத்தில் அலைந்து திரியும் அவனுக்கு விதவையான ஸாராவுடனும் உறவு ஏற்படுகிறது. இதையறியும் அவனுடைய தந்தை தோமா அவனைக் கண்டிக்கிறான். ஸாராவை தோமோவே திருமணம் செய்துக் கொள்ளலாமே என்கிற நண்பனின் யோசனையை அறிந்தவுடன் தோமோவுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்படுகிறது. அதுவரை இன்னொரு திருமணத்தைப் பற்றியே யோசிக்காமலிருந்தவன் இந்த யோசனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறான். ஆனால் ஸாரா தோமோவை திருமணம் செய்ய மறுத்து விடுகிறாள். தன்னுடைய மகனுடன் அவள் உறவு கொள்வதைக் காண்கிற தோமோ ஆத்திரத்தில் ஸாராவைக் கொன்று விடுகிறான்.

தனிமையில் ராஹேலின் நினைவுகளுடன் நடந்து போகும் யோஹன்னானுக்கு இறந்து போன யாகேப்பும் தாத்தா பெளலோவும் தென்படுவதோடும் அவனின் கூக்குரலுடனும் நாவல் நிறைகிறது.

()

படைப்பு நிகழும் களம் எதுவென தெளிவாகப் புலப்படவில்லை. ஏதோ சாத்தானால் சிருஷ்டிக்கப்பட்ட ஊர் போலிருக்கிறது. நாவலில் வரும் அனைவருமே கிறிஸ்துவர்களாக இருக்கிறார்கள். இடையே ஓடும் பன்றிக்குட்டியின் பெயர் 'ஜேம்ஸ்' என்றால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன். மருந்துக்குக்கூட வேற்று மதத்தவர்கள் அந்த நாவலின் உள்ளே நுழையவில்லை. ஒரு மூன்றாந்தர மோசமான இயக்குநர் படமாக்க நினைத்தால் 'மிகச் சிறந்த பாலியல் காட்சிகளை' கலைப்படம் என்ற போர்வையில் திணிக்கக்கூடிய அனைத்து சாத்தியக் கூறுகளையும் கொண்ட இந்த சிறந்த நாவல் மிக மிக வறட்சியான மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. நிகழ்வை சட்டென்று நிறுத்திவிட்டு அடுத்த அத்தியாயத்தில் வருங்கால நிகழ்வில் 'ரிவர்ஸ் கியர்' போட்டு விவரிப்பதான மொழியில் நாவலின் பல அத்தியாயங்கள் புனையப்பட்டிருக்கின்றன. கிருஷ்ணமூர்த்தி இதை சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

காமம்தான் மனிதனை தொடர்ந்து வாழ வற்புறுத்துகிறது என்பதையே இந்த நாவலின் அடிநாதமாகப் பார்க்கிறேன்.

()

சமையல், ஜோதிடம், வாழ்க்கை வரலாறு என்று பரபரப்பான புத்தகங்கள் பிரசுரித்து பணம் பண்ணிக் கொண்டிருக்கும் இன்றைய பதிப்பகங்களுக்கு மத்தியில் 'கிழக்கு பதிப்பகம்' அண்டை மாநில இலக்கியங்களின் மொழி பெயர்ப்பையும் கவனத்தில் கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. நாவலின் ஆசிரியர் கேரள சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர் என்று பின்னட்டை சொல்கிறது.

'இறைவனை நிந்திக்கவில்லை' என்கிற வார்த்தைகள் 'இறைவனை சிந்திக்கவில்லை' என்று பிரசுரமாகியிருக்கிற (பக்கம் 45) கருத்துப்பிழை மயக்கங்களை ஏற்படுத்தும் சொற்ப தவறுகளை தவிர்த்திருக்கலாம் என்பதைத் தவிர புத்தகம் மிக நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

உயிர்ப் புத்தகம், ஸி.வி. பாலகிருஷ்ணன், தமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு பதிப்பகம், 224 பக்கங்கள், 120 ரூபாய்.
ஆன்லைனில் வாங்க

suresh kannan

Wednesday, December 24, 2008

நிர்வாணமாக நின்ற ஆசிரியர்கள்

மறுபடியும் ஒரு நீயா நானா நிகழ்ச்சியைப் பற்றி எழுத வேண்டுமா என்று தோன்றியது. என்றாலும் அதன் தீவிரம் காரணமாக இதை எழுதித்தான் ஆக வேண்டியிருக்கிறது. கடந்த வார நிகழச்சியில், 'ஆசிரியர்கள் தங்களின் போதிக்கும் திறனை அவ்வப்போது மேம்படுத்திக் கொள்கிறார்களா, அல்லது இருக்கிற குறைந்த பட்ச அறிவை வைத்துக் கொண்டு சமாளிக்கிறார்களா?' என்ற தலைப்பில் விவாதம் நிழந்தது. மாணவர்கள் எப்படி வகுப்பில் நிகழ்ந்து கொள்வார்கள் என்பதை ஆசிரியர்கள் சில நடித்துக் காட்டினர். மாணவர்களும் அவ்வாறே. குறைந்த பட்ச ஆங்கில அறிவு இல்லாமல் கூட சில ஆசிரியர்கள் இருப்பதை மாணவர்களில் சிலர் சுட்டிக்காட்டினர். 'எங்களிடம் இருக்கிற ஞானத்தை மாணவனிடம் வழங்குவதற்கு மொழி பெரிய தடை கிடையாது' என்று ஆசிரியர் சார்பில் ஒருவர் கூறினார்.

ஆனால் என்னை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்த சம்பவம் பிறகுதான் நடந்தது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத், இரண்டு சிறப்பு விருந்தினர்களை சபையில் அமர வைத்து ஆசிரியர் குழுவினரிடம் 'அவர்கள் யார்'? என்று அடையாளம் காட்டச் சொன்னார். நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த நானே வெட்கப்படும்படியாக அங்கிருந்த அனைத்து ஆசிரியர்களும் மெளனம் காத்தனர். இத்தனைக்கும் அந்த இரண்டு சிறப்பு விருந்தினர்களும் கல்வித்துறையை சேர்ந்தவர்கள்தான். இருந்தும் ஒரு ஆசிரியருக்கும் அவர்களைப் பற்றிய அடையாளமோ தகவலோ தெரியவில்லை.

சிறப்பு விருந்தினர்கள் வந்து அமரும் போதே அவர்களைப் பற்றி என் மகளிடம் கூறிக் கொண்டிருந்தேன்.

Photobucket

ஒருவர் ஆ.இரா. வேங்கடாசலபதி.

தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிடத்தகுந்த வரலாற்று ஆய்வாளர்களுள் ஒருவர். 'அந்த காலத்தில் காப்பி இல்லை', 'நாவலும் வாசிப்பும்' 'முச்சந்தி இலக்கியம்' போன்ற சில முக்கிய ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களை எழுதினவர். குறிப்பாக 'புதுமைப்பித்தனின் சிறுகதைகளை' கவனமாக தொகுத்து செம்பதிப்பை தயாரித்தவர். பாரதியின் சில அபூர்வ படைப்புகளை லண்டனிலிருந்து கொண்டு வந்தவர். பாரதியின் கட்டுரைகளை வ.உ.சியின் கடிதங்களை தொகுத்தவர், சு.ராவின் ஜே.ஜே.சில குறிப்புகள்' புதினத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருப்பவர்.

Photobucket

இன்னொருவர் பேராசிரியர் கல்யாணி.

மனித உரிமைப் போராளி. அரசு கல்லூரியில் பேராசிரியராக பல வருடங்கள் பணியாற்றியவர். 'மக்கள் கல்வி இயக்கத்தை நிறுவியவர். பழங்குடிகளுக்காகவும், பத்மினி, அத்தியூர் விஜயா போன்றவர்களின் மீது நிகழத்தப்பட்ட வன்முறைகளுக்காக களத்தில் இறங்கி போராடியவர், வீரப்பனால் ராஜ்குமார் கடத்தப்பட்ட போது மீட்பு தூதுவர் குழுவில் இடம்பெற்றவர்.


இவ்வளவு தகவல்கள் கூட சொல்ல வேண்டாம், அவர்கள் யார் என்பது கூட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்குத் தெரியவில்லை. பிரபலமான முகம் என்கிற வகையில் சலபதியையாவது தெரியாமலிருக்கலாம். பேராசிரியர் கல்யாணியின் முகத்தை வீரப்பன் கடத்தலின் போது பத்திரிகைகளில் நிச்சயம் பார்த்திருக்க வேண்டும்.

இது மாத்திரமல்ல, சமீபத்தில் புக்கர் பரிசு பெற்ற இந்திய நாவலாசிரியரைப் பற்றின கேள்விக்கும் யாரிடமும் பதிலில்லை. தங்கள் துறை சார்ந்த புத்தகங்களையே அதிகம் படிப்பதாக சில ஆசிரியர்கள் சமாளித்தனர். சமீபத்தில் எந்த புத்தகம் படித்தீர்கள்? என்ற கேள்விக்கு ஒருவர் காப்மேயரின் சுயமுன்னேற்ற நூலைப் பற்றிக் கூறினார். ஏழாம் வகுப்பிலேயே இதை தாம் படித்து விட்டதாகக் கூறி கோபிநாத் அவர் மூக்கை உடைத்தார்.

()

ஆசிரியர்களின் தகுதியின் போதாமை குறித்து ஏற்கெனவே சில கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்த சலபதி, 'நான் எதிர்பார்த்ததை விட நிலைமை மோசமாக இருக்கிறது' என்றார்.

பேராசிரியர் கல்யாணி தன்னுடைய மாணவப் பருவத்தில் ஆசிரியரிடம் பெற்ற ஒரு தண்டனையை நினைவு கூர்ந்த போது உணர்ச்சி மேலிட்டு தொடர முடியாமல் அழுதார். ஒரு வயோதிகரின் உருவம் மறைந்து டிரவுசர் போட்டுக் கொண்டிருந்த ஒரு சிறுவனையே அப்போது நான் பார்க்க நேர்ந்தது. இவ்வளவு வருடங்கள் கடந்தும் அதை நினைவு கூர்கிற போது அவர் அழுகிறார் எனும் போது குறிப்பிட்ட சம்பவம் அவரை மிகவும் பாதித்திருக்க வேண்டும். அடுத்த ஜென்மங்களில் நம்பிக்கையில்லை எனினும் 'அப்படியிருந்தால் எல்லா ஜென்மங்களிலும் ஆசிரியர் பணியாற்றவே விரும்புகிறேன்' என்ற போது மிகவும் நெகிழ்வாக இருந்தது.

ஊதியம் தொடர்பான போராட்டங்களில் மாத்திரம் தீவிரமாக இயங்கும் ஆசிரியர் பெருமக்கள், தங்களுடைய தேசத்தின் அடுத்த தலைமுறையை ஞானம் மிக்கவர்களாக மாற்றி சமுதாயத்திற்கு அளிக்க வேண்டும் என்கிற அடிப்படை பொறுப்புணர்ச்சியை மெல்ல மெல்ல இழந்து கொண்டிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்றே நான் கருதுகிறேன்.

suresh kannan

Wednesday, December 17, 2008

கேசவனும் ஜெயமோகனும்

தினமும் உறங்கப் போவதற்கு முன்னால் ஏதாவதொரு முழு அல்லது அரைத் திரைப்படத்தைப் பார்ப்பது வழக்கம். எப்படியும் உறங்கப் போக பின்னிரவு ஒரு மணியாவது ஆகிவிடும். Quentin Tarantinoவின் இயக்கத்தின் பகுதியையும் உள்ளடக்கிய Four Rooms திரைப்படத்தை இயன்ற வரை பார்த்து விட்டு உறங்கப் போக நேற்றிரவு திட்டமிட்டேன். ஆனால் offline-ல் சேமித்து வைத்திருந்த முக்கியமான வலைப்பதிவுகளை வாசிக்காமலிருந்ததும் நினைவுக்கு வந்தது. அதை சிறிது நேரம் வாசித்து விட்டு பின்னர் திரைப்படத்தை காணலாம் என்று முடிவு செய்தேன். ஜெயமோகனின் வலைப்பதிவிலிருந்த 'மத்தகம்' குறுநாவல் கண்ணில்பட்டது. நீள நீளமான ஐந்து அத்தியாயங்கள். ஒரு அத்தியாயத்தை மாத்திரம் இன்று படித்து முடித்து விட்டு பின்னர் திரைப்படத்தை காண்போம் என்று ஆரம்பித்தேன்.

ஆனால்....

கேசவன் தன் துதிக்கையால் என்னை இழுத்து படைப்புக்குள் தள்ளிவிட்டான். ஆவல் தாங்காமல் அடுத்த அத்தியாயத்திற்குள்ளும் நுழைந்தேன். மூன்று... நான்கு... ஐந்து.... ஒரே மூச்சில் முழுவதையும் படித்த முடித்தவுடன்தான் சூழலே புலனாயிற்று. வாசித்துக் கொண்டிருக்கும் போதே உள்ளே ஏதோ ஒன்று தொடர்ந்து வாசிக்காதே.. போதும்.. என்று எச்சரித்துக் கொண்டேயிருந்தது. உடம்பெங்கும் குளிர் படர்ந்து அடங்கியது. படைப்பு முழுவதையும் தியானத்திற்கான மனநிலையுடன் வாசித்திருக்கிறேன் என்று தோன்றியது. வாசிப்பு நிறைந்தவுடன்தான் சுயநினைவிற்கு வந்து நாற்காலியின் பின்னால் ஒய்வாக சாய்ந்தேன். இறுகப்பபற்றிக் கொண்டிருந்த கைகள் தளர்வடைந்தன.

பின்னாலிருந்து யாரோ விட்ட பெருமூச்சு கழுத்தில் முட்டிற்று. யானையோ? திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன். பின்னால் ஒரு யானை நின்றிருந்தால் கூட பெரிய ஆச்சரியமாயிருந்திருக்காது என்று பிற்பாடு தோன்றிற்று. கேசவனின் பிளிறல் எழுத்தாக படரும் போதெல்லாம் அது ஒலியாக மாறி என் காதில் ஒலித்தது. தம்புரானும் கேசவனும் சந்திக்கும் இடங்களிலெல்லாம் மனம் மெல்ல உற்சாகமடைவதை கவனித்தேன். வாசிப்பின் ஊடே அந்தக் கட்டங்களை மனம் ஆவலுடன் எதிர்பார்த்தது.

Photobucket

யானையும் ரயிலும் எந்த வயதிலும் பார்க்கச் பார்க்கச் சலிப்பு ஏற்படுத்தாது என்பது உண்மையோ என்னவோ. வேண்டுதலுக்காக ஒருமுறை சபரிமலை செல்லும் போது இயற்கையாகத் திரியும் காட்டு யானைகள் எங்காவது தூரத்தில் தட்டுப்படுமா என்று மனம் அலைபாய்ந்தது. நாங்கள் கடந்தவொரு இடத்தில் யானையின் சாணத்தை கண்டேன். சாணம் இளஞ்சூடாக இருந்தால் இப்போதுதான் அந்த இடத்தை கடந்திருக்கும் என்று ஒருவர் துப்பறிந்து திகிலுடன் சொன்னார். என்னை விட குருசாமிக்குத்தான் மிக ஆவலாக இருந்தது. இருபத்தைந்து வருடங்களில் அவர் ஒரு முறை கூட யானைகளைப் பார்த்ததில்லை என்றா¡ர். சீசன் சமயங்களில் யானைகள் அங்கு வராது என்றார்கள் கடைக்காரர்கள். ஏதோவொரு வருடத்தின் சீசனின் இறுதிக் கட்டத்தில் மனித நடமாட்டம் குறைந்து போய் பெருத்த பிளிறல் ஒன்று கேட்டதையும் கடைக்காரர்கள் அலறியடித்து ஒன்று கூடி கையிலிருந்த டப்பாக்களை அடித்து ஒலி எழுப்பியதில் அது காணாமற் போனதையுடன் அவர் விவரிக்க சுவாரசியமாய் கேட்டுக் கொண்டிருந்தோம்.

ஜெயமோகனின் முந்ததைய சிறுகதைகளிலும் யானைகளும் பாகன்களும் உலவியிருக்கிறார்கள். 'காடு' நாவலில் ஒரு கொம்பன் புத்தகம் முழுக்க உலவிக் கொண்டிருப்பான். குட்டப்பன் ஒரு முறை சொல்வான். (நினைவிலிருந்து தோராயமாக) "காட்டுக்கு ராஜா என்று சிங்கத்தை தெரியாத்தனமா சொல்லிப் போட்டான்கள். சே..என்ன ஒரு மிருகம் அது. கிண்ணத்தை களவாண்டவன் மாதிரி எப்பவும் ஒரு தாழ்ந்த பார்வை. ராஜ கம்பீரம்னா அது யானையல்லோ"... களவாணி மாதிரி பதுங்கிப் போகும் சிங்கத்தின் பிம்பம் மனதில் வந்து வாசிக்கும் போதெல்லாம் சிரிப்பை வரவழைக்கும் பகுதி அது.

ஆனால் 'மத்தகம்' போன்றதொரு பெருத்த அதிர்வை அவை ஏற்படுத்தினதில்லை. குறுநாவலை வாசித்து முடித்து சில கணங்களுக்கு எதுவும் செய்யத் தோன்றாமல் அமர்ந்திருந்தேன். உறங்கச் செல்வதற்கு முன் பல் துலக்கும் செயலையும் நேற்று தவிர்த்து விட்டிருந்தேன். மனம் முழுக்க கேசவனே நிரம்பியிருந்தான். வழக்கத்திற்கு மாறாக உடனே உறங்க முடியாமல் குறுநாவலின் பல வரிகள் மனதிற்குள் ஓடிக் கொண்டேயிருந்தன. பக்கத்தில் படுத்திருந்த மகள் தூக்கத்தில் காலை தூக்கி என் மீது போட்டாள். யானையின் தும்பிக்கை மேலே விழுந்தாற் போல் தோன்றியது. சிரிப்புடன் எண்ணங்களை வேகமாக கலைத்தபடி உறங்கப் போனேன்.

()

என்னால் இதைப் போன்றதொரு படைப்பை எழுத முடிந்திருக்குமா என்று நப்பாசையுடன் யோசித்துப் பார்த்தேன். மனம் ஒரு கணம் பதறி அடங்கியது. ஒருவேளை முடியலாம்தான். ஆனால் அதற்குப் பின்னால் தேவைப்படும் பிரம்மாண்டமான உழைப்பும் காலமும் மலைக்க வைத்தது. நூறு வருடங்கள் பின்னோக்கிய மலையாள தேசத்தின் கலாச்சாரத்தையும், தம்புரான்களின் சடங்கு, சம்பிரதாயங்களையும் பற்றின தரவுகள் தேவை. யானைகளையும் பாகன்களையும் அருகிலிருந்து குறைந்தது ஒரு வருடத்திற்காவது கூர்ந்து அவதானித்திருக்க வேண்டும். யானையின் சாணத்தை அதன் வெதுவெதுப்புடன் அள்ளி முகர்ந்திருக்க வேண்டும். தமிழின் வார்த்தைகளை அதனுடைய அழகியல் உணர்வுடன் நுட்பமாக பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கும் மேலாக ஏதோ ஒன்று நிச்சயம் இருக்க வேண்டும். அதைக் கண்டுபிடித்துவிட்டால்....

ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' படித்து விட்டு இடிந்து போய் உட்கார்ந்திருந்தது நினைவுக்கு வந்தது. அவர் மற்ற எழுத்துகளின் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு. 'எனது இந்தியா' கட்டுரை குறித்து சொல்ல என்னிடமும் சில வார்த்தைகள் உண்டுதான். ஆனால் இலக்கியம் என்று வருகிற போது அவருக்குள் ஒரு பிரம்ம ராட்சஸம் ஏறி அமர்ந்து கொள்ளும் போல. அவரின் சமீபத்திய பெருங்கதையான 'ஊமைச் செந்நாய்' கூட என்னை பெரிதாக கவரவில்லை. ஆனால் இந்த 'மத்தகம்'தான்...

யானை குறித்த பல நுட்பமான சங்கதிகள் இந்தக் குறுநாவலில் பொதிந்துள்ளன. சில பெருத்த வியப்பை ஏற்படுத்தினாலும் சில விஷயங்கள் அதீதமானதோ என்று எண்ண வைக்கிறது. யானை தன்னுடன் கூடவே உள்ள பாகன்களை விட எப்பவோ ஒரு முறை சந்திக்கிற தம்புரானைத்தான் மேலே அமர வைக்க சம்மதிக்கும் என்பது என் அறிவுக்கெட்டிய வரையில் ஒப்புக் கொள்கிறாற் போல் இல்லை. ஒருவேளை சொல்ல முடியாது. கேசவன் அப்படிப்பட்டவனாக இருக்கக்கூடும். ஜெயமோகன் மிக சுவாரசியமாக கட்டமைத்திருக்கும் கேசவனின் ஆளுமையில் இம்மாதிரியான நெருடல்களை பொருட்படுத்த தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.

இப்போதைக்கு இதை எவற்றையும் ஆராய்வதாய் இல்லை. இன்னும் அந்த வாசிப்பனுபவம் தந்த பிரமிப்பிலிருந்து விலகாமலேயே இருக்க விரும்புகிறேன்.

()

எந்தவொரு சர்வதேச இலக்கியப் படைப்பாளியின் தரத்திற்கு சற்றும் குறைவில்லாமல் நம்முடைய தமிழிலும் படைப்பாளிகள் இருக்கிறார்கள் என்கிற பெருமித உணர்வு சாத்தியப்படுவதற்கு ஜெயமோகன் போன்ற ஆளுமைகள் காரணமாய் இருக்கிறார்கள். 'ஜெயமோகன் என்னுடைய ஆசான்' என்றார் ஜெயகாந்தன் ஒருமுறை. வயதான காலத்தில் ஏன் இப்படி அலட்டிக் கொள்கிறார் என்று அப்போது தோன்றியது. உணர்ந்துதான் சொல்லியிருக்கிறார் என்று இப்போது தோன்றுகிறது.

மத்தகம் - குறுநாவல் - ஜெயமோகன்

அத்தியாயம் 1,2 | அத்தியாயம் 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம் 5

suresh kannan

Friday, December 12, 2008

சாரு வீட்டு கழிவறை

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'நீயா நானா' நிகழ்ச்சியை ஒவ்வொரு ஞாயிறும் தொடர்ந்து பார்ப்பது வழக்கம். கடந்த வார நிகழ்ச்சியில் 'நவீன தீண்டாமை' என்கிற புதிய சொல்லாடலை முன்வைத்து கோபிநாத் நிகழ்ச்சியை நடத்தினார். திரைத்துறையினர், அரவாணிகள், திருமண/நில தரகர்கள், மதுக்கடை பணியாளர்கள், விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள்/ அரசியல்வாதிகள், காவல்துறையினர் போன்றவர்களை நம் சமூகம் எந்தவித காரணங்களுமின்றி கற்பிதங்கள் காரணமாக முன்தீர்மானத்துடன் தேவையற்ற வெறுப்பை/அருவெறுப்பை/ஒதுக்குதலை அவர்கள் மீது காட்டுகிறது. இவ்வாறாக ஒதுக்கப்படுபவர்கள் ஒரு குழுவாக தங்களின் கசப்பான அனுபவங்களை தங்கள் முன் வைத்தனர். சமூகத்தின் பிரதிநிதிகளாக அமர்ந்திருந்த எதிர்க்குழுவினர் எந்த காரணங்களுக்காக தாங்கள் அவர்களை ஒதுக்குகிறோம் அல்லது ஒதுங்குகிறோம் என்பதை கூறினர்.

ஒதுக்கப்படுபவர்களின் குரல்கள் சில:

(1) நான் டாஸ்மாக்கில் சூப்பர்வைசராக பணிபுரிகிறேன். இதனாலேயே என்னை "ஊத்திக்குடுக்கற வேலைய செய்யறவன்" என்கிற அருவெறுப்போடும் கிண்டலோடும் என் பணியை நோக்குகின்றனர்.

(2) நான் ஒரு துணை நடிகை. இதனாலேயே எனக்கு பலர் வாடகைக்கு வீடு தர மறுக்கின்றனர். ஒரு படப்பிடிப்பில் வெயிலாக இருக்கிறதே என்று அருகிலிருந்த வீட்டில் நிழலுக்காக ஒதுங்கப் போகும் போது அந்த வீட்டினர் அருவெறுப்புடன் என்னை துரத்தியடித்தனர். நான் செய்த பாவம் என்ன?

(3) நான் ஒரு அரசியல்வாதி (கவுன்சிலர்). இந்த காரணத்திற்காகவே எனக்கு பெண் தர மறுத்தனர்.

(4) நான் ஒரு விவாகரத்து பெற்ற பெண். இதனால் என் பிறந்த வீட்டிலேயே என்னை துரத்தியடித்தனர். அலுவலகத்தில் சக ஆண் பணியாளர்கள் என்னை பாலியல் நோக்கில் அணுகினர். உறவினர்கள் அவர்கள் வீட்டு விசேசங்களுக்கு என்னை கூப்பிடுவதில்லை.

(5) நான் ஒரு உதவி இயக்குனன். திரைத்துறையை சேர்ந்தவன் என்ற காரணத்தினாலேயே எனக்கு வீடு தர மறுக்கின்றனர்.

(6) நான் ஒரு திருமண அமைப்பாளர். சுமார் 300 திருமணங்களை நடத்தியுள்ளேன். ஆனால் எங்களை புரோக்கர் என்கிற இழிவான நோக்கிலேயே பார்க்கின்றனர்.

(7) நான் gay, lesbian, transgender போன்றவர்களின் உரிமைகளுக்காக போராடுகிறவன். ஆனால் என்னையும் ஒரு gayவாகவே இந்தச் சமூகம் பார்க்கிறது.

பொதுச் சமூகத்தின் குரல்கள் சில:

(1) திரைத்துறையினர் அனைவரையும் நாங்கள் குற்றம் சொல்லவில்லை. ஆனால் அவர்களைப் பற்றி கேள்விப்படுகிற பெரும்பான்மையான செய்திகள் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை. எனவே அவர்களுக்கு வாடகைக்கு வீடு தர மாட்டோம்.

(2) திருமண தரகர் சொன்ன பொய்யால் என் திருமண வாழ்க்கையே பாதித்து மிகவும் சிரமப்பட்டேன்.

(3) பொது இடங்களில் அரவாணிகளின் அடாவடித்தனத்தால் அவர்களைப் பார்த்தாலே எரிச்சலும், கோபமும், அருவெறுப்பும் வருகிறது. ஒருபால் உறவை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அருவெறுப்பாக இருக்கிறது.

(4) போலீஸ்காரர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களுக்கு வாடகைக்கு வீடு தருவதில்லை. பின்னால் அவர்களால் பிரச்சினை வரும் என்று பயப்படுகிறோம்.

(5) அசைவம் சாப்பிடுபவர்களை, மது குடிப்பவர்களை பிடிப்பதில்லை. அவர்களை நாங்கள் ஒதுக்குவதில்லை. நாங்கள் 'ஒதுங்கிப் போகிறோம்'. அவ்வளவுதான் விஷயம்.

()

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எழுத்தாளர் சாருநிவேதிதா இவ்வாறாக சமூகத்தின் சில பிரிவினரை பொதுச் சமூகம் ஒதுக்குவதை cultural fascism என்று வர்ணித்தார்.

.." பெரும்பாலும் விளிம்புநிலையில் உள்ள மக்களே இவ்வாறான புறக்கணிப்பை சந்திக்க நேரிடுகிறது. திரைத்துறையில் இருக்கும் டைரக்டர் ஷங்கரையோ, ரஜினிகாந்த்தையோ இச்சமூகம் ஒதுக்குவதில்லை. ஆனால் துணை நடிகர் என்றால் ஒதுக்குகிறோம். ஒரு அரவாணியை நம்மால் ஒரு நண்பராக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியை நடத்தும் ரோஸ், அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கு முன்பிருந்தே என்னுடைய நண்பர். அவருடன் நண்பராக பல இடங்களுக்கு சென்றிருக்கிறேன். ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்த அவரிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசினோம். ரோஸ் கிளம்பும் போது அவரிடம் 'rest room உபயோகித்து விட்டுப் போங்கள்' என்று நான் சொன்னதற்கு மிகவும் நெகிழ்ந்து போனார். இதுவரை தன்னிடம் யாரும் அவ்வாறு கேட்டதில்லை என்று'

... விவாகரத்திற்குப் பிறகு என்னுடைய எட்டு வயது மகளோடு வாடகைக்கு வீடு தேடி போகும் போது பெரும்பாலோனோர் வீடு தர மறுத்தனர். டெல்லியில் இருந்த போது 'ரவி' என்கிற பெயர் 'ரபி' என்று உச்சரிப்புடன் கேட்டு அதற்காகவே வீடு கிடைக்கவில்லை. அசைவம் சாப்பிடுபவர்களுக்கு வீடு தர மறுக்கின்றனர்.

...இவ்வாறான சில மனத்தடைகள் நம்மிடம் இருக்கின்றன. அவற்றிலிருந்து இந்த சமூகம் வெளிவர வேண்டும்.

()

சமூகக் குரல்களின் சார்பில் சிறப்பு விருந்தினராக வந்திருந்தவர் (பெயரைக் கவனிக்கவில்லை. கோயில் குருக்கள் தோற்றத்தில் இருந்தார்) கூறியது.

.. திரைத்துறையினர் தாங்கள் செய்யும் தொழில் குறித்து அவர்களுக்கே ஒரு பெருமிதமும் பெருமையும் இருக்க வேண்டும். அவர்களே அவர்களின் தொழிலை இழிவாக பார்க்கக்கூடாது. (நான் என் தொழில் குறித்து பெருமையே கொள்கிறேன் என்று துணை நடிகை தொழில் புரிபவர் பதிலளித்தது உரையாடலின் கூச்சலில் பெரும்பாலோரின் கவனத்திற்கு வராமல் போய் விட்டது). மதுக்கடைகளில் பெரும்பாலும் கெட்டவர்களின் நடமாட்டமும் அதிர்வுகளும் இருக்கும். எனவே அவர்களுக்கு வீடு தர மறுப்பதில் தவறில்லை.

ஒதுக்கப்படுபவர்களின் குழுவில் இருந்த அரவாணி ஒருவர் "எங்களை இந்தச் சமூகம் எல்லாவிதத்திலும் ஒதுக்கி வைக்கிறது. வீட்டிலிருந்தும் துரத்துகிறார்கள். இந்தச் சமூகமும் எங்களை அருவெறுப்புடன் பார்க்கிறது. எந்த வேலை வாய்ப்பும் எங்களுக்கு கிடையாது. இப்படி எல்லா இடங்களிலும் ஒதுக்கப்படும் அரவாணிகள் செய்யக்கூடியது பிச்சை எடுப்பதும், பாலியல் தொழில் புரிவதும்தான். சமயங்களில் வன்முறையையும் அடாவடித்தனத்தையும் சில அரவாணிகள் கையில் எடுப்பது தவிர்க்க முடியாமல் போகிறது. அதற்கு இந்தச் சமூகம்தான் காரணம் என்றார்.

நிகழ்வின் உச்சமாக, அரவாணிகளைப் பற்றி வெறுப்பாக பேசிக் கொண்டிருந்த பெண், நல்ல பண்புகளுடன் உள்ள ஒரு அரவாணியை நண்பராக ஏற்றுக் கொள்ள தமக்கு ஏதும் தடையில்லை என்று கூறி எதிர் குழுவில் இருந்த அரவாணியை கட்டித்தழுவிக் கொண்டார். இந்தச் செய்கையால் மிகவும் நெகிழ்ச்சியடைந்த நிகழ்ச்சியின் நடத்துநர் கோபிநாத் அந்தப் பெண்ணுக்கு சபையை standing ovation அளிக்கச் செய்தார்.

()

எல்லா முற்போக்கு பாசாங்கு முகமூடிகளையும் கழற்றி விட்டு இந்தத் தலைப்பினுள் என்னை நான் பொறுத்திப் பார்த்தேன். நிச்சயம் காவல்துறையினர் என்றால் எனக்கு அலர்ஜி. நான் சந்தித்தவர்களில் பெரும்பான்மையோர் தன்னிடமிருந்த அதிகார மமதையோடுதான் இருந்தார்கள். தன் கடமையை உணர்ந்து பொறுப்புடனும் மிருதுவாகவும் அணுகியவர்கள் சொற்பமானவர்களே. நிலத்தரகர்களில் பெரும்பான்மையோர் ஏமாற்றுக்காரர்களாய்த்தான் இருக்கிறார்கள். brokers excuse. திருமண தரகர்கள் பற்றிய அனுபவமில்லை.

குடிப் பழக்கம் உள்ளவர்கள் வேறு; குடிகாரர்கள் வேறு. குடியை ஒரு விடுதலையாக, மிதமோடு நாகரிகமாக அருந்துபவர்களுடன் பிரச்சினையிலலை. ஆனால் அளவுக்கதிகமாக குடித்து விட்டு ரோட்டில் விழுந்து கிடப்பவர்கள், வாந்தியெடுப்பவர்கள், மற்றவர்களுடன் தகராறு செய்பவர்கள் போன்றவர்களைக் கண்டால் நிச்சயம் எரிச்சலாக இருக்கும். அதற்காக மதுக்கடைகளில் பணிபுரிபவர்களையும் குடிகாரர்களாக நினைத்து அருவெறுப்பது முட்டாள்தனம். அதே போல்தான் விவாகரத்து பெற்றவர்களையும், திரைத் துறையில் பணிபுரிபவர்களையும் ஒதுக்குவது.

ஒருபால் உறவு கொள்பவர்கள் குறித்து ஒரு காலத்தில் எனக்கு மிகுந்த வெறுப்பும் அருவெறுப்பும் இருந்தது. ஒருபால் உறவு நாட்டமுடையவர்கள் குறித்து ராயர் காப்பி கிளப் குழுமத்தில் நடந்த விவாதத்தில் என்னுடைய அருவெறுப்பை வெளிப்படுத்திய போது 'அவர்களின் பார்வையில் நீங்கள் அருவெறுப்பாய் தெரியக்கூடும் அல்லவா?' என்று எழுதினார் பத்ரி. விரல்கள் அழுகிக் கிடக்கும் தொழுநோயாளிக்கு ஆரோக்கியமானவனின் விரல்கள் அருவெறுப்பைத்தான் தரும் என்று நாகூர் ரூமி அதற்கு எதிர்வினையாக எழுதியது ஞாபகமிருக்கிறது.

ஆனால் நாளடைவில் ஏற்பட்ட சிந்தனை வளர்ச்சியின் போக்கில் புரிதலின் பேரில் இன்று அது மட்டுப்பட்டிருக்கிறது எனலாம். இடது கை பழக்கம் போல் ஒருபால் உணர்வும் ஒருவகையான இயற்கை உணர்வே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் ஒருபால் உறவு நாட்டமுடையவர்கள் சட்டபூர்வமாக திருமணம் செய்ய வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. என்றாலும் எரிச்சலான பேருந்து பயணங்களில் எப்பவாவது ஆண்குறிகள் மேலே உரசும் போது 'அட நாய்களா, இதில் விருப்பமுள்ளவர்களுடன் கூடித் தொலைங்களேன். ஏன் மற்றவர்களை தொந்தரவு செய்கிறீர்கள்' என்று கத்தத் தோன்றுகிறது.

அரவாணிகள் குறித்து பார்க்கும் போது விளிம்பு நிலையிலும் உள்ள அவர்களிடம் பொதுச்சமூகம் எல்லாக் கதவுகளையும் அடைத்து அவ்வாறு ஒதுக்குவது தவறுதான் என்று தோன்றினாலும் சிந்தனை ரீதியில்சில நடைமுறை அனுபவங்களின் போது நாம் அறிவைத் துறந்து அவற்றை உணர்ச்சியின் வழிதான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. நான் பார்த்தவரை எங்கள் அலுவலகத்தில் வரும் அரவாணிகள் மிகவும் மோசமாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றனர். ஆண்களில் சிலரும் எளியவழியில் காசுபெற பெண் வேடமிட்டு வந்து தகராறு செய்து அரவாணிகளின் மீதான வெறுப்பை அதிகரிக்கச் செய்கின்றனர் என்று அரவாணிகள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டு எழுகிறது. என்றாலும் அவர்களின் உள்ளார்ந்த சமூக கோபத்தின் வெளிப்பாட்டை பொதுச் சமூகம் தன்னை மாற்றிக் கொள்ளும் சூழல் ஏற்படும் வரை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என நினைக்கிறேன்.

(பரபரப்பாக கவனிக்கப்பட வேண்டும் என்கிற உள்நோக்கத்துடனே பதிவின் தலைப்பு அமைக்கப்பட்டது. உள்ளடக்கத்திற்கும் அதற்கும் பெரிதான தொடர்பில்லை).

suresh kannan

Wednesday, December 10, 2008

உருப்படியாக ஒரு தமிழ் சினிமா

எப்போதுமே அது அப்படித்தான் நிகழ்கிறது. வருடம் பூராவும் சேற்றில் இறங்கி வேலை செய்து அரிசியை உற்பத்தி செய்யும் விவசாயக் கூலிகளால் வருடத்திற்கு ஒருமுறைதான் நெல்லுச் சோறு சாப்பிட முடிகிறது. செங்கற்களையும் சிமெண்ட்டையும் மூச்சு வாங்க மேலே சுமந்துச் சென்று அண்ணாந்து பார்க்க வைக்கும் கட்டிடங்களை உருவாக்கும் தொழிலாளர்கள் தங்க ஒழுகும் குடிசைதான் வாய்த்திருக்கிறது. பளபளப்பான வணிக வளாகத்தின் தங்க நகைக் கடையில் வேலை செய்யும் சிறுமியின் காதில் ஆறு ரூபாய்க்கு வாங்கிய ஜிமிக்கிதான் தொங்குகிறது.

மற்றவர்களுக்கெல்லாம் பட்டுச் சேலை நெய்து தரும் நெசவாளர்கள் தங்களுக்கென ஒரு பட்டுச் சேலையை சொந்தமாக்கிக் கொள்வது என்பது எவ்வளவு சாத்தியமற்றதாக இருக்கிறது என்கிற யதார்த்தக் கொடுமையை நம்முன் வைக்கிறது பிரியதர்ஷனின் திரைப்படம் - 'காஞ்சிவரம்' .

1920 - 1948-களின் காலகட்டத்தில் பயணிக்கும் இந்தப் படம் சிறையிலிருந்து இரண்டு நாள் சிறப்பு அனுமதியின் பேரில் செல்லும் வேங்கடத்தின் நினைவலைகளின் மூலம் பார்வையாளர்களுக்கு சொல்லப்படுகிறது.

Photobucket

வேங்கடம் (பிரகாஷ் ராஜ்) ஓர் சிறந்த பட்டு நெசவாளன். நெசவாளியான தன் தந்தையின் மரணத்திற்குக் கூட அவர் மீது போர்த்த பட்டுத்துணி இல்லாத வறுமை. பட்டுப் புடவைகள் மூலம் கிடைக்கும் லாபத்தின் பெரும்பான்மையும் முதலாளிகளுக்கே போகிறது. நெசவாளர்களுக்கு சொற்ப கூலிதான் தரப்படுகிறது. தனக்கு வரப்போகும் மணமகள் பட்டுப்புடவையுடன் வரவேண்டும் என்பது வேங்கடத்தின் கனவு. ஆனால் யதார்த்தமான சூழல் அதற்கும் ஒத்துழைக்கவில்லை.

வேங்கடத்திற்கும் (பட்டுப்புடவை இல்லாத) அன்னத்திற்கும் (ஷ்ரேயா ரெட்டி) நடக்கும் திருமணத்தினால் பெண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய பெண்ணின் திருமணத்தை பட்டுப்புடவையுடன்தான் நடத்துவேன் என்கிற வாக்குறுதியை குழந்தையின் பெயர் வைக்கும் விழாவில் ஊரார் முன்னிலையில் வெளிப்படுத்துகிறான் வேங்கடம். சாத்தியப்படாத வாக்குறுதியாக இருக்கிறதே என்கிற அவநம்பிக்கையை அவன் மனைவி உட்பட மற்றவர்கள் வெளிப்படுத்துகின்றனர். இதற்கென தான் பல வருடங்களாக சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் சில்லறைக் காசுகளை மனைவியிடம் காட்டி அவளை சமாதானப்படுத்துகிறான். ஆனால் அந்தப் பணத்தை ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தனது தங்கைக்காக செலவு செய்ய வேண்டியிருக்கிறது.

தனது மகளுக்கு எப்படியாவது ஒரு பட்டுச் சேலையை சம்பாதித்து விட வேண்டுமென்பது வேங்கடத்தின் ஆசை. வெறி எனக்கூடச் சொல்லலாம். இதற்காகத்தான் அந்தத் தவறைச் செய்கிறான். தன்னுடைய வேலையிடத்தில் இருந்து திரும்பும் போதெல்லாம் பட்டு நூற்கற்றை ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு திருடி வருகிறான். சிறிது சிறிதாக தன் மகளுக்கான கனவுச் சேலையை ரகசியமாக நெய்கிறான். நோய்வாய்ப்படும் மனைவி இடையில் இறந்து போகிறாள். அந்த ஊருக்கு வரும் ஒரு எழுத்தாளனின் மூலம் கம்யூனிசத்தின் அறிமுகம் கிடைக்கிறது. இந்த விழிப்புணர்வின் மூலம் வைக்கப்படும் கோரிக்கைகளினால் முதலாளியுடன் முரண் ஏற்படுகிறது. வேலை நிறுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை. தன்னுடைய நண்பனின் மகனுக்கே தன் மகளை நிச்சயம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. ஏற்கெனவே தீர்மானித்திருந்த படி மகளுக்கு சீதனமாக பட்டுச் சேலை ஒன்றை தருவதாக வாக்களிக்கிறார் வேங்கடம். ஆனால் சேலை முக்கால்வாசிதான் நிறைவடைந்திருக்கிறது.

பிறகு?....

வேங்கடம் தன் மகளுக்கான பட்டுச் சேலையை நெய்து அளித்தாரா? அவர் ஏன் சிறைக்கு செல்ல நேர்கிறது என்பதோடு மனத்தை உலுக்கிப் போடும் அந்த கிளைமாக்சையும் அறிய படத்தை நீங்கள் காணவேண்டும்.

()

வட இந்தியாவில் நானா படேகர், நஸ்ரூதீன் ஷா போன்றவர்கள் இருப்பது போல நமக்கு ஒரு பிரகாஷ் ராஜ் இருப்பது குறித்து நாம் நிச்சயம் பெருமை கொள்ள வேண்டும். ஆனால் திரைப்பட விழாக்களில் சிறந்த படைப்புகளைப் பார்க்கும் நம் இயக்குநர்கள் அதை செயல்படுத்தாமல் இந்த மாதிரியான நடிகர்களை typical பாத்திரங்களில் மாத்திரம் பயன்படுத்தி மாற்றுச் சிந்தனையை, கதைப் போக்கை முழுவதுமாக நிராகரிக்கிறார்கள் என்பது வேதனையை ஏற்படுத்தக் கூடியது. இவ்வளவு சிறந்த நடிகர் ஒரு சோதா கதாநாயகனிடம் வில்லனாக மல்லுக்கட்டும் படங்களைப் பார்க்க சங்கடமாக இருக்கிறது.

இந்தப் படம் முழுவதையும் தன் தோள்களில் சுமந்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். திருமண வயது மகள் கொண்ட தந்தையின் தோற்றத்தையும் உடல் மொழியையும் திருமணமான புதிதில் இருக்கிற இளமையையும் குறிப்பிடத்தக்க அளவில் வித்தியாசப்படுத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் அவரின் நுட்பமான பாவங்கள் நம்மை கலங்கடிக்கிறது. கிழட்டு வயதிலும் தம்மை இளமையான கதாநாயகன்களாக முன்நிறுத்திக் கொள்ளும் காமெடியர்களுக்கு மத்தியில் கதையின் போக்கிற்கு தம்மை ஒப்படைத்துக் கொள்ளும் பிரகாஷ் போன்ற நடிகர்கள் நிறையத் தேவைப்படுகிறார்கள். இயக்குநர்களும் அம்மாதிரியான நடிகர்களை நிறையப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கவர்ச்சி பிம்பமாக ஆரம்பத்தில் அறியப்பட்ட ஷ்ரேயா ரெட்டி சிறந்த பாத்திரங்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து நடிக்க முன்வருவது பாராட்டப்பட வேண்டிய விஷயம். வெயில், பள்ளிக்கூடம் போன்ற படங்களைப் போலவே இதிலும் சிறிது நேரத்திற்கே வந்து போனாலும் தான் தோன்றுகிற காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். வேங்கடத்தின் மகளாக வரும் பெண்ணும் (ஷம்மு) நண்பராக வரும் நடிகரும் (கூத்துப்பட்டறை நடிகர்) தம் பங்களிப்பை சிறப்பாக நிகழ்த்தியிருக்கின்றனர்.

()

சாபு சிரிலின் art direction குறித்து நிச்சயம் சொல்லியேயாக வேண்டும். இதே பிரியதர்ஷனின் கூட்டணியில் உருவான 'சிறைச்சாலை' படத்திலேயே தன்னுடைய முத்திரையை அழுத்தமாக பதித்து விட்டவர் இதிலும் அதைத் தொடர்கிறார். 1900-களில் புழங்கியிருக்கும் பொருட்களை நிறைய உருவாக்கி பயன்படுத்தியிருக்கிறார். அந்த ஊருக்கே முதன் முதலாக வரும் மோட்டார் கார், ஒரு ரூபாய் நோட்டு, பழைய அணா நாணயங்கள், கிணற்று ராட்டினம், சைக்கிள் விளக்கு, கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் பட்சண விற்பனையாளனின் கூடை, பித்தளை பாத்திரங்கள் போன்றவை செயற்கையாக பார்வையாளனின் முன்வைக்கப்படாமல் காட்சிகளின் போகிற போக்கில் கண்ணில் தெரிகின்றன.

இசையைப் பற்றின அடிப்படை ஞானம் எனக்கில்லா விட்டாலும் இளைய ராஜாவின் பின்னணி இசையை என்னால் நுட்பமாக உணர முடியும். சமீபத்தில் பார்த்த 'சேது' படத்தில் சில விநாடிகளே தோன்றும் ஒரு மயிற்தோகைக்கு அவர் அளித்திருக்கும் அந்த இசை அவருக்கு மாத்திரமே சாத்தியம். இந்தப் படத்திற்கு M.G. ஸ்ரீகுமார் இசையமைத்திருக்கிறார். பின்னணி இசை பல காட்சிளுக்கு மிகப் பொருத்தமாக இழையோடியிருக்கிறது. குழந்தை பிறந்திருக்கும் விழாவில் பாடப்படும் அதே பாடலை கிளைமாக்ஸ் காட்சியிலும் பயன்படுத்தியிருப்பது நம்மை கலங்க வைக்கிறது. திருவின் காமிரா 40-களின் காலகட்டத்திற்கு ஒத்திசைவான ஒளியைப் பயன்படுத்தி எந்த வித gimmics-ம் இல்லாமல் இயல்பாக பயணிக்கிறது.

அடிப்படையில் இந்தப்படம் இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய நெசவாளர்களின் வறுமையைப் பற்றியும் தென்னிந்திய உழைப்பாளர்களிடையே கம்யூனிசம் முதன்முதலில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் அதன் வீழ்ச்சி குறித்தும் மெல்லிய குரலில் பேசுகிறது. தங்களின் கோரிக்கைகளுக்காக முதலாளியிடம் விடாப்பிடியாக போராடும் வேங்கடம், தன்னுடைய மகளுடைய திருமண நாள் நெருங்கியவுடன் பட்டுச்சேலை கனவு நிறைவேறி விடாமல் போய்விடுமோ என்ற கலக்கத்தில் குறைந்த பட்ச கோரிக்கைகளை ஏற்று சில தோழர்களின் பகைமையைப் பெறுகிறான். கம்யூனிசம் என்கிற சித்தாந்தத்தை அன்றைய அரசு எவ்வாறு மூர்க்கத்தனமாக எதிர்கொண்டது என்பதையும் இந்தப்படம் பேசுகிறது.

நாள் முழுக்க தறியில் அவர்கள் அவதிப்பட்டு பட்டுச்சேலையை உருவாக்கி மற்றவர்களை மகிழ்வித்தாலும் அவர்களின் வாழ்க்கை பட்டுச்சேலை மாதிரி வழுவழுப்பாக இல்லாமல் மிக்க வறுமையுடன் கரடுமுரடாகத்தான் இருக்கிறது என்பதை இந்தப்படம் எந்தவித பிரச்சாரத்தொனியுமின்றி இயல்பாகச் சொல்கிறது. பிரியதர்ஷன் இந்தப்படத்தை மிகச் சிரத்தையாக உருவாக்கியிருக்கிறார். காலவாக்கில் முன்னும் பின்னுமாக நகரும் திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் இரண்டையும் இணைக்கும் காட்சிகளை மிக நுட்பமாக பயன்படுத்தியிருக்கிறார். வணிக நோக்கத்துக்கோ அல்லது விருது வாங்கும் நோக்கத்கோ அல்லாமல் தன்னுடைய 9 வருட கனவை நிறைவேற்றும் விதமாக தன்னுடைய ஆத்ம திருப்திக்கு இந்தப்படத்தை உருவாக்கியதாக கூறுகிறார்.

IFFI, Toronto உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் இந்தப்படம் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடமிருந்து பெருவாரியான வரவேற்பைப் பெற்றுள்ளது.

()

அடுத்த முறை ஒரு பட்டுப்புடவையை வாங்கும் போதோ அல்லது உடுத்தும் போதோ அதற்காக அழிக்கப்பட்ட பல உயிரினங்களோடு அதை உருவாக்கினவனின் வியர்வையையும் சற்று நினைவு கூர்வது நலம்.

(பண்புடன் குழுமத்தின் ஆண்டுநிறைவையொட்டி அதில் பிரசுரமான இந்தப் பதிவு இங்கே மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. நன்றி: பண்புடன்)

suresh kannan

Wednesday, December 03, 2008

மலத்தின் நாற்றம் வீசும் கதை

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தன்னுடைய சமீபத்திய பதிவில் தமிழ் நவீன இலக்கியத்தில் பரவலாக அறியப்படாத ஆனால் குறிப்பிடத்தக்க படைப்புகளை எழுதியவர்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். நானும் இதே போன்றதொரு முயற்சியை ஜுன் 2006-ல் 'அறியப்படாத எழுத்தாளர்களின் வரிசையில்...' என்றொரு தொடராக எழுத ஆரம்பித்தேன். ஆனால் அதை தொடர இயலவில்லை. எழுத்தாளர்கள் மாத்திரமல்ல, சிறிது காலமே பரிமளித்த திரைப்பாடகர்கள், நடிகர்கள், (குணா படத்தின் நாயகி எங்கே போனார்?), இயக்குநர்கள் (ருத்ரைய்யா) போன்றவர்களைப் பற்றி எழுதும் விருப்பமுண்டு.

ராமகிருஷ்ணன் தன்னுடைய பதிவில் எக்பர்ட் சச்சிதானந்தம் என்கிற சிறுகதை எழுத்தாளரைப் பற்றியும் அவருடைய சிறுகதைகளைப் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். நானும் அந்த சிறுகதைத் தொகுதியைப் பற்றி முன்னர் மரத்தடிக் குழுமத்தில் எழுதியிருக்கிறேன். அதை இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள உத்தேசம். (பாதுகாத்து வைத்திருந்த மரத்தடி.காம்.-க்கு நன்றி.

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
"நுகம்" சிறுகதைகள்- அ.எக்பர்ட் சச்சிதானந்தம்
- தமிழினி பதிப்பகம், சென்னை-14. விலை ரூ.60
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

எக்பர்டின் கதைகள் கிறிஸ்துவர்கள் அல்லாதவர்களுக்கு அவ்வளவு பரிச்சயமல்லாத சர்ச் என்னும் கிறிஸ்துவ தேவாலயங்களைச் சுற்றியே வருகிறது. ஆனால் மதப்பிரசாரக் கதைகள் அல்ல. மாறாக அங்கே நடக்கும் அரசியல்களையும், போதர்களின் சுயநலத்தின் அசிங்கங்களையும், ஆலயப் பணம் வசூலிக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக செலவழிக்கப்படுவதையும், கோயில் ஊழியர்களின் குறைகள் கவனிக்கப்படாமல் நிராகரிக்கப்படுவதையும் எந்தவித பிரசாரக் குரலுமின்றி இயல்பான தொனியில் சொல்லிக் கொண்டு போகிறார் ஆசிரியர்.

மூச்சுத்திணறும் வார்த்தைக் கட்டமைப்புகளால் வாசகனைத் திணற வைக்காமல், ஓடும் பேருந்தில் தன் நண்பனுடன் முந்தாநாள் நடந்த சம்பவத்தைப் பற்றி சுவையாக விவாதித்துக் கொண்டு போகும் சிநேகமான எழுத்து இவருடையது. இவர் ஒர் பள்ளி ஆசிரியராக இருப்பதால், அவர்களுக்குள் இருக்கும் போட்டிப் பொறாமைகளையும் இயல்பாக எழுத முடிகிறது.

சில கதைகளைப் படிக்கும் போது, 'பரலோகத்திருக்கிற எங்கள் பிதாவே' என் நான் ஜெபித்து மறந்து போன என் சிறுவயது பள்ளிக்கூடம் ஞாபகத்திற்கு வருகிறது.

தேவாலயக் கல்லறையில் பணிபுரியும் ஏழை ஊழியரின் மகன் இறந்து போகும் போது அவனே சோகத்துடன் அந்தக் காரியங்களைச் செய்யும் சம்பவங்களை ஆசிரியர் விவாதிக்கும் போது வாசகர்களும் கையாலாகத்தனத்துடன் வேடிக்கை பார்க்க நேரிடுகிறது. இன்னொரு கதையில் தன் மகளுக்காக கிறிஸ்துவப் பள்ளியில் ஆசிரியை வேலைக்காக சேர்க்க அந்தத் தந்தை எல்லா வழிகளையும் முயன்று பார்ப்பதும், இறுதியில் அங்கு நடக்கும் அரசியல் காரணமாக வேறு ஒருவருக்கு அந்த வேலை அளிக்கப்படும் போது, தன் தோழி உதவியுடன் தானே ஒரு சிறிய பள்ளியை ஆரம்பிக்க அந்த மகள் முடிவெடுக்கும் அந்த கணத்தில் இளைய தலைமுறையினரை சோர்வடைய விடாமல் ஒரு புது வழியை காண்பிக்கிறார் ஆசிரியர்.

=o=

இந்தச் சூழலைத் தாண்டியும் சில கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் என்னை கவனிக்க வைத்தது, 'மலம்' என்னும் தலைப்பில் எழுதப்பட்ட கதை.

மலம் அள்ளுபவளாக இருந்தாலும், திடகாத்திரமாக, கவர்ச்சியாக இருப்பதால் அவளுடன் உறவு கொள்ள ஆசைப்படும் அவன், மனைவி ஊருக்குப் போயிருக்கும் இதை அவளிடம் வெளிப்படுத்த, அவள் ஒரு நிபந்தனை விதிக்கிறாள். ஒரு நாள் தனக்குப் பதிலாக அவனை எல்லா வீட்டு மலங்களையும் அள்ளச் சொல்கிறாள். அவள் மீதுள்ள வெறியால் இதற்கு சம்மதிக்கும் அவன் மிகுந்த அருவருப்புடன் மலம் அள்ளுவதும் ஒரு நிலையில் தாக்குபிடிக்க முடியாமல் மூச்சடைத்து, வாந்தியெடுத்து நீரெடுத்து கழுவப் போக எல்லா இடமும் மலமாக அவனுக்குள் தெரிகிறது. 'இப்ப என்னா சொல்ற' என்கிறவளை 'வெளியே போ' என்று அவன் கத்துவதுடன் கதை நிறைகிறது.

அவன் மலம் அள்ளும் போது தமக்குள் பேசிக் கொள்வதை இரக்கமே இல்லாமல் வர்ணிக்கிறார் ஆசிரியர்.

.................. 'கட்டி கட்டியா இருந்தாலும் பரவா இல்ல. களி மாதிரி இப்படியா. எந்த குண்டியோ. பயங்கர நாற்றம். என்ன இது வெள்ளைப்புழுவா தொ¢யுது. ஆஸ்கரிஸ், டீனியா... என்ன எளவோ.. சனியன் பூச்சி மாத்திரை சாப்பிட்டா என்ன? என்னத்தை தின்னாளுகளோ இவ்ளோ கெடக்கு. கடவுளே கைல ஏறிடுச்சே புழு.... தரைல தேய்ச்சா கூட இன்னும் நெளியுது. தலைதான் நசுங்கி கிடக்கு. கட்டை விரல் நகத்துல மஞ்சளா எப்போ ஒட்டிச்சி? நக இடுக்குல வேற.' ...................

படிக்கும் நமக்கே குமட்டுகிற போது இதையே வேலையாய் வைத்துள்ள அந்தத் தொழிலாளர்களை நினைக்கும் போது பரிதாபமாக இருக்கிறது.

=o=

பள்ளி ஆசிரியரரான எக்பர்ட் சச்சிதானந்தம் தற்போது காஞ்சிபுரத்தில் வசிப்பதாகக் குறிப்பு இருக்கிறது


suresh kannan

Monday, December 01, 2008

பா.ராகவனும் காக்டெய்ல் பரோட்டாவும்

தமிழ்ப் புத்தக வாசிப்பாளர்களின் பொற்காலம் என்று இப்போதைய காலகட்டத்தை அழைக்கலாமோ (பதிப்பகங்களுக்கு பொற்காசுகளின் காலம் என்றும்) என்னுமளவிற்கு நவீன அச்சு நுட்பத்தின் உதவியோடு பல்வேறு தலைப்புகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் நான் ஓர் எழுத்தாளரின் குறிப்பிட்ட ஒரு சிறுகதைக்காக எங்கெங்கோ அலைந்து தேடியிருக்கிறேன். புதையல் போன்று காக்கும் நண்பரிடமிருந்து சிரமப்பட்டு அதனுடைய பிரதியை எடுத்து வந்திருக்கிறேன். ஆனால் இன்று அந்த எழுத்தாளரின் அனைத்து சிறுகதைகளும் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு 'உரித்த வாழைப்பழம்' போல் வாசகர்களுக்கு கிடைக்கும் செளகரியம் வாய்த்திருக்கிறது.

மோகன்தாஸ் காந்தி பற்றிய தலைப்பில் தேடினால் குறுக்கும் நெடுக்குமாக முன்பெல்லாம் பல வகைகளில் புத்தகங்கள் கிடைக்கும். ஆனால் கோட்சேவைப் பற்றி? கஷ்டம். காக்கி அரை நிஜார் போட்டுக் கொண்டு RSS முகாம்களில் தேடினால் ஒருவேளை கிடைக்கலாம். ஆனால் சந்தனக் கடத்தல் வீரப்பனும் புனித பிம்பாகி விட்ட இன்றைய நிலைமை வேறு. எதிர்மறையான ஆளுமைகளைப் பற்றிய புத்தகங்களும் சுலபமாக நிறைய கிடைக்கின்றன. அப்படிப்பட்டதோர் எதிர்மறை ஆளுமையான கொலம்பிய போதைக் கடத்தலின் முன்னோடியாக இருந்த Pablo Emilio Escobar Gaviria (1949 - 1993) என்பவரைப் பற்றின புத்தகம் பா.ராகவன் எழுதிய 'என் பெயர் எஸ்கோபர்'. (தில் திகில் திடுக்கிடல்)

Photobucket

ஒரு நாட்டின் அதிபயங்கர குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கிறவரே தான் கைது செய்து நடத்தப்படும் விதம் குறித்து அந்த நாட்டு அரசாங்கத்துடன் ஓர் ஒப்பந்தத்தைப் போட்டு அதை நிறைவேற்றிக் கொண்டிருக்க முடியுமா?

கொலம்பியாவில் இது நடந்திருக்கிறது. பெரிய மனது வைத்து 5 வருடங்கள் மாத்திரமே சிறைப்பட 'விரும்பிய' அவருக்கென்றே நவீன வசதிகளுடன் ஒரு சிறையைக் கட்டி அதில் அவரை 'தங்க' வைத்திருக்கிறது கொலம்பிய அரசு. விருப்பப்பட்ட நேரத்தில் அவர் வெளியே போய் தனக்கு பிடித்தமான கால்பந்து விளையாட்டை ரசித்து திரும்பலாம். (ஒரு முன்னாள் முதல்வரின் மீதுள்ள வழக்குகளை பிரத்யேகமாக விசாரிப்பதற்கென்றே தனி நீதிமன்றங்கள் சென்னையில் கட்டப்பட்டதை இச் சமயத்தில் பெருமையுடன் நினைவு கூரலாம்). கொலம்பியாவின் அப்படிப்பட்ட சிறப்பு வி.ஐ.பி. குடிமகனைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தப் புத்தகத்தினுள் பயணம் செய்வது அவசியம்.

பல வருடங்கள் காலனியாதிக்கத்தின் சுரண்டலில் அவதிப்பட்ட நாடு கொலம்பியா. பல்வேறு புரட்சி இயக்கங்களின் முயற்சி மூலம் சுதந்திரம் அடைந்தாலும் உள்நாட்டு அரசியல் கலவரங்களாலும் போர்களாலும் மக்களுக்கு நிம்மதியில்லை. இரு வல்லரசுகளின் போட்டியில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. ஏற்படுத்தும் குழப்பங்கள் வேறு. இயக்கங்களுக்கு ஆயுதம் வாங்கப் பணம் வேண்டும். என்ன வழியென்று யோசித்தில் கோகெய்ன் என்ற போதைப் பொருளை தயாரிக்க உதவும் கோகோ பயிர் தென்படுகிறது. அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கொலம்பிய சரக்கு என்றால் நிச்சயம் உன்னதமாக இருக்கும் என்றொரு நம்பிக்கை இருந்ததால் பணம் டாலர்களில் கொட்டுகிறது. கொலம்பியாவின் குடிசைத் தொழிலாக இந்த போதைப் பொருள் தயாரிப்பு இருந்ததால் பல்வேறு சிறு குழுக்கள் இந்த சர்வதேச வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

()

சில்லறை கார் திருடராக இருந்த எஸ்கோபர், (அதற்கு முன் கல்லறைகளில் உள்ள நினைவுக்கற்களை திருடி விற்றவர் என்று சொல்லப்படுகிறது) தன்னுடைய பணக்காரக் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள இந்த போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட ஆரம்பிக்கிறார். சாதுர்யத்தாலும் தைரியத்தாலும் குறுகிய காலத்திலேயே தன்னுடைய தொழிலில் முன்னேறுகிறார். ஒரு முறை காவல்துறையினரிடம் மாட்டிக் கொண்டு நீதிபதியை மிரட்டியும் பலனளிக்காமல் சிறிது காலம் சிறையில் இருந்த எரிச்சலில் அவருக்கு தோன்றுவதுதான் 'தன்னைப் போன்ற போதை வியாபாரிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு அமைப்பை ஏற்படுத்துவது (மெடேலின் கார்ட்டல்); அதன் மூலம் இந்த தொழிலை ஒழுங்குபடுத்துவது'; அரசியலில் இணைந்து தனக்கொரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வது.

இதற்கு முன்னால் இதை யாரும் யோசிக்கவோ முயற்சிக்கவோ இல்லாமலிருந்ததால் எஸ்கோபர் போட்டுக் கொடுத்த தார் ரோட்டின் மேலே போதைப் பொருள் வியாபாரம் தள்ளாடாமல் சுகமாக பயணித்தது.

சினிமாப்படங்களின் தலைப்புகளின் கீழொரு tag line போடுவது போல எஸ்கோபரின் வியாபாரத்தின் தாரக மந்திரம் 'செய் அல்லது செத்துமடி'. தன்னுடைய போதைப் பொருள் விற்பனைக்கு உதவுகிற அத்தனை அரசு இயந்திர நட்டு போல்டுகளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தாராளமாக பணம் தரப்படும்; அதே சமயம் தடையாக நிற்கிற எதுவும் உடனே அப்புறப்படுத்தப்படும். பணத்திற்கு ஆசைப்பட்டு உதவியவர்கள் தவிர உயிருக்கு பயந்து உதவியவர்களும் அதிகம். உதவ மறுத்த அனைவருமே எஸ்கோபரின் ஆட்களால் கொல்லப்படுகின்றனர். எனவே எஸ்கோபரின் போதை வியாபாரம் flag கட்டிப் பறந்தது. 1989-ம் ஆண்டில் உலகின் ஏழாவது பெரிய பணக்காரர் என்று forbes பத்திரிகை எஸ்கோபர் குறித்து எழுதுமளவிற்கு பெரிய flag. இந்தப் பணம் அத்தனையையும் சுவிஸ் பேங்கில் போட்டு பதுக்காமல் தன்னுடைய பாதுகாப்பிற்காக தான் வாழும் மெடேலின் நகரின் அடித்தட்டு மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் பெரும்பான்மையை பூர்த்தி செய்ததில் ராபின் ஹ¥ட் இமேஜூம் கிடைத்தது. ஆனால்....

அந்தப் பயணம் இப்படியே சுகமாய் இருக்கவில்லை.

()

எஸ்கோபருக்கு போட்டியாய் தொடங்கப்பட்ட இன்னொரு அமைப்பான காலி கார்ட்டல், கெடுபிடிகளை தாங்க முடியாமல் கொலம்பிய அரசாங்கத்துக்கு எதிராக எஸ்கோபர் அறிவிக்கிற யுத்தம், சட்ட அமைச்சர் படுகொலை, விமான வெடிப்பு, M-19 என்கிற புரட்சிக்குழுவை உபயோகப்படுத்தி நாட்டின் தலைமை நீதிபதிகளை நீதிமன்றத்திலேயே சுட்டுக் கொன்ற பரபரப்பான சம்பவம், அமெரிக்கா தந்த அழுத்தத்தில் மிகவும் கடுப்படைந்த கொலம்பிய அரசாங்கம் கொலை வெறியுடன் தேடியவுடன் சரணடைவதாக சொல்கிற எஸ்கோபரின் நாடகம், பிறகு...

அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நீங்கள் மேற்சொன்ன புத்தகத்தைப் படிப்பதின் மூலம் அதை சாத்தியப்படுத்திக் கொள்ளலாம்.

()

பா.ராகவன் எஸ்கோபரின் ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் வீழ்ச்சியையும் மிகத் தெளிவாக படம் வரைந்து பாகங்களை குறித்திருக்கிறார். க்ரைம் நாவலின் தொடக்கம் போல ஒரு கடத்தல் சம்பவம், கொலம்பியாவின் வரலாறு குறித்த சுருக் அறிமுகம், கொகேய்னின் சுவை, எஸ்கோபரின் ஆரம்ப சாகசங்கள், மெடேலின் கார்ட்டல் உருவான விதம், அதன் அசுரத்தனமான வளர்ச்சி, அரசாங்கத்துடனான யுத்தம் என்று எஸ்கோபரைப் பற்றின ஒரு சித்திரத்தை மிகத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால்..

"இல்ல மச்சான்.. இன்னா மேட்டர்னா"... என்கிற தொனியில் அவரது மொழி வாசகரது தோள் மீது கை போட்டுப் பேசுகிறது. ராணி, குமுதம் படிப்பவர்கள்தான் தன்னுடைய வாசகர்கள் என்பதை பா.ராகவன் முன்னதாக தீர்மானித்துக் கொண்டதைப் போல் எல்லாவற்றையும் மிகவும் எளிமைப்படுத்தி விடுகிறார். இது தவறில்லை என்றாலும் இந்த தொனி அதீதமாகிப் போகும் போது இந்தப் புத்தகம் "பொழுது போக்கு நாவல்' தரத்திற்கு இறங்கிப் போகிற சங்கடம் நேர்கிறது. 'சூப்பர் கில்லாடிய்யா இவன்' என்று எஸ்கோபரின் ஆளுமை மீது வாசகன் பிரமிப்பும் கிளர்ச்சியும் அடைவதோடு இந்தப் புத்தகம் முடிந்து விடுகிறதோ என்று தோன்றுகிறது. சுருங்கக் கூறின் இண்டர்நேஷனல் கொலம்பியா மைதாமாவில் லோக்கல் நாமக்கல் முட்டையை ஊற்றி அடித்து ஒரு காக்கெடயில் பரோட்டாவை தந்திருக்கிறார் ராகவன். உதாரணத்திற்கு சில (பாரா)க்களை பார்ப்போம்.

... எந்த கோயிந்து தன் சொந்தப் பெயரில் ரூம் எடுக்கும்? ஆகவே கொலம்பியப் பெயர்களில் யார் யார் அறை எடுத்திருக்கிறார்கள் என்று பார்த்தார்கள். ம்ஹ¥ம். ஒருத்தர் கூட இல்லை. எஸ்கோபர் படு ப்ரில்லியண்டாக ஈக்வடாரில் அதிகம் புழக்கத்திலுள்ள பெயர் ஒன்றையே அளித்திருந்தான். அவனது ஆள்களும் ஆவடி மருதன், தூத்துக்குடி சிவசுப்பிரமணியன், மாயவரம் முத்துக்குமார், சத்தியமங்கலம் நவநீத கிருஷ்ணன், அம்பத்தூர் சுஜாதா முத்துராமன் என்று எ·ப்.எம். ரேடியாக்களுக்கு நேயர் விருப்பம் கேட்கிறவர்கள் மாதிரியே பெயரளித்தார்கள்... (பக்கம் 40)

.. அது ஒரு ரகசிய ஆலோசனைகளுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் இடம். வெளியே இருந்து பார்த்தால் தரைக்கடியில் அப்படியொரு ரகசியப் பதுங்குதளம் இருப்பதே தெரியாது. மேலுக்கு ஒரு வேலு மிலிட்டரி ஹோட்டல். அந்த ஹோட்டலும் எஸ்கோபரின் அடியாள் ஒருவனுடையதுதான். அவன் தன்னுடைய சகலபாடியை கல்லாவில் உட்கார வைத்துவிட்டு வாசலில் காவலுக்கு நின்றபடி எப்போதும் முட்டை பரோட்டா தட்டிப் போட்டுக் கொண்டிருப்பான். .. (பக்கம் 101).

என்றாலும் ராகவனின் இந்த மொழிக்குப் பழகி விட்டால் மிகச்சுலபமாக புத்தகத்திற்குள் இறங்கி விட முடிகிறது. சுமார் இரண்டு மணி நேரத்தில் இந்த 220 பக்க நாவலை.. மன்னிக்கவும் புத்தகத்தை படித்து முடித்து விட முடிந்தது. ராகவனின் பிரத்யேகமான நகைச்சுவை கலந்த மொழி நம்மை பல இடங்களில் புன்னகைக்கவும் வாய்விட்டுச் சிரிக்கவும் வைக்கிறது. எஸ்கோபர் அரசாங்கத்தின் முன் வைக்கும் ஒப்பந்தத்திற்கு அரசாங்கம் பதில் சொல்வதாக சித்தரிக்கப்பட்டிருப்பதை 'ராகவன்' மொழியில் கவனியுங்கள்.

.. அன்புடையீர் வணக்கம், வந்தனம். சுஸ்வாகதம். நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறோம். இன்னும் பத்து நிபந்தனைகளைப் பின் இணைப்பாக அனுப்ப மறந்திருப்பீர்களானால் அதையும் காலக்ரமத்தில் அனுப்பி வையுங்கள். சேர்த்துக் கேட்கிறோம். ஆனால் கைதாகச் சம்மதம் என்று ஒரு வார்த்தை சொல்லி வயிற்றில் பீர் வார்த்தீர்களே, அது! அந்த அந்த சொல்லுக்காக உங்களுக்குக் கோயிலே கட்டுகிறோம் என்று விழுந்து சேவித்தார்கள்... (பக்கம் 174).

'போய் விட்டான்! (பக்கம் 55)' என்கிற இரண்டு வார்த்தைகளுக்கு முன்னால் இருக்கிற ஒரு அதிரடியான பத்தியை நிச்சயம் நீங்கள் படிக்க வேண்டும்.

()

பொதுவாக உலக வரலாற்றையும், சரித்திரத்தின் முக்கியமான முந்தைய, சமகால நிகழ்வுகளையும் பிற நாட்டுக் கலாசாரங்களையும், உணவுகளையும் அறிந்து கொள்ளும் ஆர்வமும் நேரமும் நம்மில் பெரும்பான்மையவர்க்கு இல்லை. பல பேருக்கு தினத்தந்தியில் ஆரம்பிக்கும் நாளின் தொடக்கம் இரவில் 'அரசி' தொலைக்காட்சி சீரியலோடு முடிந்து போய்விடுகிறது.

.. என்செபொலேடோ என்று ஒருவித கடல் பாசியையும் நாலைந்து ரக மீன்களையும் பட்டாணியையும் சேர்த்துப் போட்டு அண்டாவில் சூப் காய்ச்சி நாளெல்லாம் குடிப்பார்கள். ·ப்ரிட்டாடா என்று ஒரு பதார்த்தம் அங்கே இன்னும் ·பேமஸ். வெண்பன்றிக் கறியுடன் புதினாவைச் சேர்த்து அரைத்து சப்பாத்தி மாவு மாதிரி பதத்துக்குக் கொண்டுவந்து, இரண்டு பன்களுக்கு நடுவே வைத்து மூடி மைக்ரோவேவ் அவனில் கொஞ்சம் போல் வேகவைத்து எடுத்து தேனில் தோய்த்துச் சாப்பிடுவார்கள்.

இங்கே இதெல்லாம் என்னத்துக்கு என்று அந்தராத்மா கேள்வி கேட்டால் அடக்கி வைக்கவும். வேறு எந்த ஜென்மத்தில் நாம் ஈக்வடாரையெல்லாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்? .. (பக்கம் 38)

என்று நூலாசிரியரே இதை ஓரிடத்தில் கிண்டலடிக்கிறார்.

பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் எஸ்கோபரின் ஆளுமை ஒரு கதாபாத்திரமாக குறுக்காக நடந்திருக்கிறது. எஸ்போரைப் பற்றின பிரத்யேக முழுத்திரைப்படம் ஒன்று தயாரிப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. எஸ்கோபரைப் பற்றின பல நூற்கள், வீடியோக்கள் உள்ளன. Mark Bowden-ன் Killing Pablo என்கிற நூல் எஸ்கோபர் கொல்லப்பட்டதை பிரதானமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.
()
..காலி கார்ட்டலின் போதைப் பணத்தை வெளுக்கும் விதம் குறித்த சார்ட் ஒன்று இந்தப் பக்கங்களில் தரப்பட்டிருக்கிறது. பொழுது போகாத நேரத்தில் பூதக் கண்ணாடி வைத்து கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணிப் பாருங்கள். கண்டிப்பாக ராத்திரி தூக்கம் வராது! (பக்கம் 85).

வருங்காலத்தில் ஒருவேளை உதவுமோ என்று இந்த சார்ட்டை முழுப் புத்தகத்திலும் நான் தேடிப் பார்த்தேன். காணோம். வாசகர்கள் ராத்திரிகளில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்கிற பதிப்பகத்தினரின் நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறேன்.

'கொலம்பியாவில் போதை அடிமைகள் கிடையாது' என்று ஒரிடத்தில் எழுதப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கொகேய்ன் அமெரிக்காவிற்குள் கடத்தப்பட்டாலும் போதைப் பொருள் தயாரிப்பின் தாயகத்திலேயே அதற்கு வாடிக்கையாளர்கள் கிடையாது என்பது முரணாக இருக்கிறது. இந்த நூல் எந்த பத்திரிகையிலாவது தொடராக வந்ததா என்பதைப் பற்றின குறிப்பும் புத்தகத்தில் இல்லை. ஒவ்வொரு அத்தியாயமும் ஆர்வமூட்டும் பரபரப்புடன் முடிவதை வைத்து யூகித்துத்தான் இந்தக் கேள்வி எழுகிறது.

()

இந்த நூல் ஜனரஞ்சகமான முறையில் எழுதப்பட்டிருந்தாலும் கொலம்பியாவைப் பற்றியும் அங்குள்ள போதை உலகத்தைப் பற்றியும் ஒரு சுவாரசியமான அறிமுகத்தை தந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் அதன் கலாசாரம் பற்றி மேலும் அறிய ஆர்வம் கொள்கிற வாசகனுக்கு இந்நூல் நிச்சயம் ஒர் ஆரம்பப் புள்ளியாக இருக்கும்.

என் பெயர் எஸ்கோபர் (பா.ராகவன்)
224 பக்கங்கள், விலை ரூ.90/-
கிழக்கு பதிப்பகம், சென்னை-18.
ISBN 978-81-8368-579-5
கிழக்கு பதிப்பகத்தின் சம்பந்தப்பட்ட சுட்டி

suresh kannan

Monday, November 24, 2008

முற்போக்கு பதிவு: சில விளக்கங்கள்

என்னுடைய பதிவுகளின் இயல்பிற்கு மாறாக தமிழ்மண பரிந்துரை பட்டியலில் பரமபதம் மாதிரி மேலும் கீழும் ஏறி இறங்கி பிறகு பெரிய பாம்பு வழியாக ஒரேடியாக கீழே இறங்கிய என்னுடய முந்தைய பதிவின் உள்ளடக்கம் குறித்து சில நண்பர்கள் ஆச்சரியப்பட்டார்கள்; எரிச்சல் பட்டார்கள்; கோபப்பட்டார்கள்; தங்கள் எண்ணங்களை எதிரொலிப்பதாக பாராட்டினார்கள். இணையப் பரப்பில் இந்தப் பதிவு சிறிது பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதாக தோன்றுகிறது. ஆனால் அதுவல்ல என் நோக்கம். இது குறித்து இன்னும் உங்களுடன் நிறைய பேச வேண்டிய சூழலை பின்னூட்டங்களில் உள்ள சில கேள்விகள் எழுப்பியிருக்கின்றன. கோர்வையாகவோ இல்லாமலோ இருக்கும் இந்தப் பதிவை பொறுமையும் சாவகாசமான மனநிலையும் உள்ளவர்கள் மாத்திரம் வாசிக்கத் தொடர வேண்டுகிறேன். இந்தப் பதிவை முழுமையாக வாசிப்பவர்களின் கனவுகளில் நமீதாவும் ஜெயமாலினியும் இணைந்து நடனமாடும் வண்ணக்காட்சிகள் வர வேண்டுமென்று எல்லாம் வல்ல இயற்கையைப் பிரார்த்திக்கிறேன்.

()

நாகரிகத்தின் உச்சியை நாம் அடைந்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்தக் காலகட்டத்திலும் பல விதமான மனித உரிமை மீறல்களும், வன்முறைகளும், கொலைகளும், மனித உயிர் மீதுள்ள அலட்சியத்தின் காரணமாக பல்வேறு விபத்துகளும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் அவற்றை நாம் தினம் தினம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். என்றாலும் அவற்றில் சில நிகழ்வுகள்தான் நம் மனதிற்கு மிக நெருக்கமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதை விளக்க தெளிவான பிரத்யேகமான காரணங்கள் எதையும் கூற முடியாது என்றே நம்புகிறேன். அவ்வாறு என்னுள் மிக அதிகமான பாதிப்பை ஏற்படுத்திய சம்பவமாக சில வருடங்களுக்கு முன் கும்பகோணத்தில் ஒரு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் இறந்து போன கொடூரமான சம்பவத்தைச் சொல்லுவேன். மனித உடல்கள் போலன்றி ஏதோ தீயில் கருக்கப்பட்ட மரக்கட்டைகள் மாதிரி கிடந்த அந்தக் குழந்தைகளின் வண்ணப் புகைப்படங்களை செய்தித் தாள்களில் காண நேர்ந்த போது மனம் 'ஒ'வென்று கதறியது. நம் தோல் பரப்பின் மீது விழும் எரியும் மெழுகுவர்த்தியின் ஒற்றைத் துளியே நம்மை சிறிது விநாடிகளாவது துடிக்க வைக்கும் போது முழு உடலும் நெருப்பினுள் நனையும் கொடூரக் கணங்களை அந்த பிஞ்சுக் குழந்தைகள் எவ்வாறு எதிர்கொண்டிருக்கும் என்பதை கையாலாகத்தனமான கற்பனையுடன் யூகித்துப் பார்த்த போது அழுகைதான் வெடித்துச் சிதறியது.

அதற்கு அடுத்த சம்பவமாக சட்டக்கல்லூரியில் நிகழ்ந்த வன்முறையைச் சொல்லலாம். தொலைக்காட்சியில் மிக அலட்சியமாக பார்க்கத் துவங்கின அந்தக் கணங்கள் என்னுள் மிக பதட்டத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. அந்த வன்முறையின் பின்னணி குறித்தெல்லாம் அப்போது 'அறிவுஜீவித்தனமாக' என்னால் யோசிக்க முடியவில்லை. யாராவது அந்த வன்முறையை உடனடியாக தடுக்க மாட்டார்களா என்ற எண்ணம்தான் என்னை முழுதாக அப்போது ஆக்ரமித்தது. அந்த பதட்டத்தின் வெளிப்பாடுதான் 'சட்டம் பயிலும் மிருகங்கள்' என்றெழுதிய அந்தப் பதிவு. (கண்ணுக்கே தெரியாத சாதி என்கிற ஒரு விஷயத்திற்காக ஒரு சகமனிதனை சாகடிக்கத் துடிக்கும் கேவலமான மனிதர்களோடு இயற்கையின் விதியின் ஒழுங்குப்படி இயங்கும் மிருகங்களை ஒப்பிட்டு மிருகங்களை கேவலப்படுத்தியது தலைப்பிட்டது தவறுதான்).

ஆனால் இணையத்தில் அந்த வன்முறையைச் சம்பவத்தின் சாதிய பின்னணிகளை விளக்கி 'இந்தச் சம்பவம் நிகழ்ந்தது நியாயமானதும் இயல்பானதும் ஆகும்' என்ற தொனியில் வன்முறையை நியாயப்படுத்தும் விதமாக எழுதப்பட்ட சில ' போலி அறிவுஜீவித்தனமான' பதிவுகளை வாசிக்க நேர்ந்த போது மகா எரிச்சல் ஏற்பட்டது. அபத்தமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் நம்முடைய அடுக்கடுக்கான சாதிய அமைப்பு காரணமாக அடுத்தடுத்த அடுக்கில் ஒடுக்கப்பட்ட ஜாதியினர் மீது பல்வேறு விதமான வன்முறைத் தாக்குதல்களும், மனரீதியான வன்முறைகளும், மனித உரிமை மீறல்களும் ஆதிக்கச் சாதியினரால் பல ஆண்டுகளாக நிகழ்ந்து கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அதையெல்லாம் காரணம் சொல்லி இந்த வன்முறையை நியாயப்படுத்தி எழுதுவதை அடிப்படை மனச்சாட்சி உள்ளவர்கள் யாருமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இவ்வாறான உடனடியான எண்ணங்களை வெளிப்படுத்தியவர்களை 'பொதுப்புத்தியினர்' என்று கிண்டலடித்தும் அவர்களை ஆதிக்க சாதியினர் என்ற வட்டத்திற்குள் தள்ள முயன்றும் எழுதப்பட்ட பதிவுகள் முறையற்ற செயலாக எனக்குத் தோன்றியது. 'வெற்று மனிதாபிமானக் கூச்சல்' என்று இந்த உணர்வை இடது கையால் தள்ளின ஒரு பதிவின் வரி எனக்குள் கடுப்பை ஏற்படுத்தியது.

இந்த போலி அறிவுஜீவிகளை நான் கேட்க விரும்புபவதெல்லாம் ஒன்றுதான்: "சம்பந்தப்பட்ட வன்முறைக் காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் போது உங்களின் சாதிய கற்பிதங்கள் கழன்று போய் சக மனிதனின் மீது நிகழ்த்தப்படும் வன்முறையைக் கண்டு ஒரு கணமாவது உங்கள் மனம் பதறவில்லையா?" அப்படி பதறியதாக ஒப்புக்கொண்டால் இன்னும் நாம் இழந்திருக்காத மனிதத்தின் மீது நம்பிக்கை வருகிறது என்று ஆறுதல் கொள்ளலாம்.

()

நவீன அறிவின் குறியீடான கணினி நம்முடைய அன்றாடச் செயல்பாடுகளில் கலந்து விட்டிருந்தாலும் கூடவே ஆதிகால மூடநம்பிக்கைகளும் 'கம்ப்யூட்டர் ஜோசியம்' என்ற பரிணாமத்தில் நம்முடன் தொடர்வது எவ்வாறு அபத்தமானதாக இருக்கிறதோ, அப்படித்தான் இருக்கிறது இணையத்தில் சாதிய/மத/இன உணர்வுடன் மற்ற பிரிவுகளின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் வெளிப்படும் பெரும்பாலான பதிவுகளும் உரையாடல்களும். அரசாங்க கழிவறைகளுக்கு நிகரான வாசனையுடன் பின்னூட்டப் பெட்டிகளில் உமிழப்படும் ஆபாசமான வார்த்தைகளும் தாக்குதல்களும் மிகுந்த அருவருப்பை ஏற்படுத்துகின்றன. நன்றாக கல்வி கற்று சுயசிந்தனைகளை வளர்த்துக் கொண்டு நாகரிக மனிதர்களாக உலவும் நம்மாலேயே இன்னமும் நம்முள் புதைந்திருக்கும் சாதிய உணர்வுகளை கைவிட முடியவில்லையெனில், கல்வியறிவு பெறாத ஒரு வட்டத்திற்கு மேல் சிந்திக்க இயலாமல் அருவாளை தூக்கி ஓடும் ஒரு கிராமத்தானின் செயலை ஆட்சேபிக்க நமக்கு என்ன உரிமை இருக்கிறது?

ஆனால் இவ்வாறான சாதியக் கூச்சல்கள்தான் இணையத்தில் பரபரப்பாகவும் அதிகமாகவும் கவனிக்கப்படுகிறது. இவர்கள்தான் 'முற்போக்காளர்' என்ற அடையாளத்துடன் பலரால் சிலாகிக்கப்படுகின்றனர். இவர்களை ஆதரிக்கும் கும்பலால் எழுதப்படும் பின்னூட்டங்கள் இவர்களை இன்னமும் உற்சாகப்படுத்தி ஆவேசமாக கூச்சலிட வைக்கின்றன. மாறாக ஆக்கப்பூர்வமாக எழுதுகிறவர்களின் - சாதியப்பிரச்சினைகள் உட்பட்ட - பதிவுகள் சொற்பானமானவர்களாலேயே வாசிக்கப்படுகிறது. இவ்வாறான பாசாங்குத்தனமான முற்போக்காளர்களின் கூச்சல்களை வெகுநாட்களாகவே அருவருப்புடன் கவனித்து வருகிறேன். அவ்வாறான அருவருப்பை ஒரு உச்சத்திற்கு கொண்டு சென்றது சட்டக்கல்லூரி வன்முறை தொடர்பான ஒரு பக்கச் சார்பான பதிவுகள்.

மேற் குறிப்பிட்ட வன்முறைச் சம்பவத்தை கண்டிக்கும் போது இந்த 'அறிவுஜீவிகள்' அதை ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களின் மீதான வன்முறைச் சம்பவங்களோடு ஒப்பிட்டு பட்டியலிட்டு "ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவன் தாக்கப்படும் போது மாத்திரம் கூவுகிறார்கள். இதன் மூலம் ஒடுக்கப்பட்ட சாதி மாணவர்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கிறார்கள்' என்றதொரு செயற்கையாக கட்டமைக்கப்பட்ட உணர்ச்சி உருண்டையை மேலே எறிகின்றனர். அய்யா சாமிகளா! ஒடுக்கப்பட்ட சாதியினர் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை மாத்திரம் யார் ஆதரித்தது? வன்முறை எந்த ரூபத்தில் நிகழ்ந்தாலும் யாரால் நிகழ்த்தப்பட்டாலும் அதை எதிர்ப்பதும் கண்டிப்பதும்தான் 'ஒரு மனிதனின்' இயல்பான செயலாக இருக்க முடியும். சட்டக்கல்லூரி வன்முறையில் தலித் மாணவர்கள் தாக்கப்பட்டிருந்தாலும் அதையும் கண்டித்துதான் இணையத்தில் நடுநிலையானவர்களின் பதிவுகள் வெளிப்பட்டிருக்கும். மாறாக இந்த போலி முற்போக்குவாதிகள் முன்வைக்கிற மாதிரி அது கண்டுகொள்ளாமலோ நியாயப்படுத்தப்பட்டோ இருந்திருக்காது.

வன்முறை என்பது இயற்கையானது; அதை நாம் மறுதலிக்க முடியாது என்பதுதான் என்னுடைய தீர்மானமான எண்ணமாக இதுவரை இருந்தது. முன்னர் எழுதிய ஒரு பதிவில் கீழ்கண்டவாறு எழுதியிருந்தேன்.

"...........என்னதான் நாம் அஹிம்சை, கருணை என்றெல்லாம் தியரிட்டிக்கலாக பேசி சிலாகித்துக் கொண்டாலும் வன்முறை என்பது நம் ரத்தத்திலிலேயே ஊறிப்போன இயற்கையானதொரு அம்சம். வெள்ளைப் பேண்ட்டில் சேற்றுச் சக்கரத்தை இடித்து கறையை ஏற்படுத்தும் பைக் ஓட்டுநரை "குழந்தாய்.. கவனமாக செல்லக்கூடாதா?" என்றெல்லாம் நாம் கேட்பதில்லை. "த்தா.... கண்ணு என்னா பின்னாலயே இருக்கு?" என்று ஆரம்பித்து ஏக வசன கலாட்டாவில் முடியும். எதிராளியின் ஆகிருதியைப் பொறுத்து வசவின் அடர்த்தி கூடியோ குறைந்தோ, அல்லது அடிதடியிலோ வெற்று வசனங்களிலோ முடியக்கூடும். 'நான் அப்படியெல்லாம் இல்லை' என்று விவாதிப்போர் கடவுளால் பிரத்யேகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒரு ஆணின் உயிரணுக்கள் பெண்ணின் கருப்பையினுள் வேகமாக பயணம் செய்யும் போது முந்துகின்ற ஓர் அணுவுக்குத்தான் வாசலை முட்டி மோதி உட்புகுகிற வாய்ப்பு கிடைக்கிறது. அங்கேயே ஆரம்பிக்கின்ற வன்முறையும் போட்டியும் நம் வாழ்நாளின் இறுதி வரை தொடர்வதாக நான் கருதுகிறேன்........."


ஆங்கிலேயர்களிடம் போரிட்டுதான் நாம் சுதந்திரம் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது. அந்த காரணத்தினால்தான் சுதந்திரத்தின் அருமை தெரியாமல் எல்லாத் துறைகளிலும் நாம் பொறுப்பின்றியும் நமது தேசத்தின் மீதான பற்றுமின்றி இருக்கிறோமோ என்ற கேள்வி எனக்குண்டு. ஆனால் சட்டக் கல்லூரி சம்பவத்தை பார்த்த கணத்தில் வன்முறை என்கிற அம்சம் மனித நாகரிகத்தின் அடிப்படைக்கு எதிரானதோ என்று தோன்றுமளவிற்கு அந்தச் சம்பவம் என்னை அசைத்துப் போட்டது. நாடகத்தனமாக தோன்றினாலும் அதுதான் உண்மை. அபூர்வமான சமயங்களில் குடும்ப உறுப்பினர்களிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் என்னுடைய பழக்கத்தை நிச்சயம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று இதன் மூலம் தோன்றியிருக்கிறது.

என்றாலும் மிக அவசியமான சந்தர்ப்பங்களில் வன்முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள முடியும் என்பதும் நடைமுறையான உண்மை என்பதை மறுக்க முடியாது.

()

யாருமே தன்னுடைய மதத்தை/ஜாதியைக் கடந்து வரமுடியாது என்பது இவர்களின் தீர்மானமான அபிப்ராயம். சொல்லப்படும் கருத்தை விட அதை யார் சொல்கிறார்கள் என்றுதான் ஆராய்கிறார்கள். இதனால் நடக்கும் விவாதங்கள் கருத்து மோதல்களுடன் நின்றுவிடாமல் தனிப்பட்ட வகையிலும் அதையும் தாண்டி இதைப்பற்றி எதுவுமே அறியாத பதிவருடைய அப்பாவி குடும்ப உறுப்பினர்கள் மீதும் இவர்களின் காழ்ப்புணர்ச்சி பாய்கிறது. கருணாநிதியின் இறப்பைப் பற்றி ஒரு சந்தர்ப்பத்தில் நான் ஒரு பதிவில் எரிச்சலோடு குறிப்பிட்ட போது அதற்கு பழிவாங்கும் விதமாக என்னுடைய குழந்தைகளின் மரணத்தோடு அதை ஒப்பிட்டு ஒரு பின்னூட்டம் வந்தது. அடிப்படை மனித உணர்ச்சியைக் கூட இழக்குமளவிற்கு இவர்களின் மதமும் சாதிய உணர்வும், அரசியல் பக்தியும் கல்வி கற்ற இவர்களை ஆட்டிப் படைக்கிறது என்பதை நினைக்கும் போது ஆச்சரியமும் பரிதாபமுமே வருகிறது.

அரசாங்கக் காகிதங்களில் இயலவில்லையெனினும் நான் மனதளவில் மத/ஜாதிய உணர்வுகளைக் கடந்து வந்துவிட்டேன் என்பதை ஆத்மசுத்தியோடு என்னால் சொல்ல முடியும்.

நகரத்தில் பிறந்த நான் சாதியக் கொடுமைகளை என்னுடைய அனுபவத்தில் துளி கூட அனுபவத்ததில்லை. ஆனால் அது எவ்வளவு கொடுமையானது என்பதை உணர்த்துவதற்கும் அதிலிருந்து வெளியே வருவதற்கும் என்னுடைய தாயார் முக்கியமான ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கிறார். கிராமத்தில் பிறந்த கல்வியறிவு இல்லாத அவருக்கு பார்ப்பனியர்களின் செயல்பாடுகள் குறித்து பிரமிப்பான மயக்கம் இருக்கும். தொலைக்காட்சியில் யாராவது ஒரு சிவப்பான சிறுமி நன்றாகப் பாடிக் கொண்டிருந்தால் " நிச்சயம் அது பாப்பாரப் பொண்ணாத்தான் இருக்கும்" என்பார். வறுமையான பிராமணர்கள் கூட நன்றாக படித்து நல்ல வேலைகளில் சேர்ந்துக் கொண்டிருப்பதை பாராட்டி பேசுவார். ஆனால் தலித்கள் குறித்து அவருக்கு நேர்மாறான அபிப்ராயம் இருந்தது. அவர்களின் சுத்தமில்லாத நடவடிக்கையும் வாழ்வுச் சூழலும் பேச்சும் அவருக்கு அருவருப்பை ஏற்படுத்தும். நான் இதை ஆட்சேபித்து, சமூகத்தின் பெரும்பாலான உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டு ஆண்டாண்டு காலமாக அவர்கள் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த வாழ்வுச் சூழலை விளக்கி, அவர்களுக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் மற்றவர்களை போல் செயல்பட முடியும் என்று விளக்க முற்படும் போதெல்லாம் அவர் சொல்வது 'அட போடா! நாயக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும்'.. என்கிற சொற்றொடரைத்தான். நான் வளர்ந்த வீடு சேரிக்கு அருகே அமர்ந்திருந்ததினால் எனக்கு அப்போது பல தலித் நண்பர்கள் இருந்தார்கள். உண்மையாகவும் பாசாங்கின்றி பழகும் விதத்தில் மற்ற பிரிவு நண்பர்களை விட தலித் நண்பர்களே சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பது என் தனிப்பட்ட அனுபவம். அவை எனக்கு நடைமுறை உண்மையை உணர்த்தியது.

என் தாயார், யாரென்றே தெரியாத ஒரு தொலைக்காட்சி சிறுமியை பாராட்டத் துணிவதும் அதே போல் இன்னொரு பிரிவினரை இகழத் துணிவதற்கும் 'சாதி' என்கிற கண்ணுக்குத் தெரியாத ஒரு நச்சுக்கிருமி காரணமாக இருப்பது குறித்து எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. இதை விளக்கினாலும் அவருக்கு புரியாததற்கு அவர்கள் வளர்க்கப்பட்ட முறையும் கல்வி இல்லாத சூழலும் காரணமாயிருப்பதை கண்டு பரிதாபமாக இருந்தது. ஆனால் முறையாக கல்வி பெற்ற நம் சமகாலத்து மனிதர்களே சாதிய மனோபாவத்திலிருந்து வெளிவராததைக் காணும் போது கல்விக்கும் சிந்தனைக்கும் பெரும்பாலும் சம்பந்தேமேயில்லையோ என்றும் தோன்றுகிறது. கணினி படித்தவர்கள் எல்லாம் தேவலோகத்திலிருந்து இறங்கியவர்கள் என்கிற மனோபாவம் பாமரர்களிடம் இருக்கிறது. ஆனால் கணினி படித்தவர்களும் இணையத்தில் பாமரர்களை விடவும் மோசமாக சாதிய உணர்வோடு மோதிக் கொள்வதை காணும் போது அழுவதா சிரிப்பதா என்றே தோன்றவில்லை.

முற்போக்கான பார்வை என்றாலே அது ஒடுக்கப்பட்ட சாதிக்கு ஆதரவாக பேசுவதுதான் என்றிருக்கும் இவர்களது புரிதல் எரிச்சலை ஏற்படுத்துகிறது. மேலும் ஆதிக்கச் சாதி என்றாலே அது பார்ப்பனர்கள் மாத்திரம்தான் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். சாதி குறித்த எந்தவொரு பதிவுமே பார்ப்பனர்களைச் சாடுவதிலிருந்து ஆரம்பிக்கிறது. அடுக்கடுக்காக அமைந்திருக்கும் நம் சாதிய அமைப்பை மிக வசதியாக அப்போது இவர்கள் மறந்து விடுகிறார்கள். எந்த வன்முறைச் சம்பவம் என்றாலும் அதனை நியாயமாக அணுகுவதை விட்டு விட்டு 'முயலுக்கு மூன்று கால்' என்பது போல தன்னுடைய வசதிக்கேற்ற சார்புப் பார்வையோடு வெளிப்படுத்துகிறார்கள். தலித் பிரிவினர் அனைவருமே அப்பாவிகள் போலவும் தொடர்ச்சியான வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்கிற பிம்பத்தை கட்டமைப்பதில் இவர்கள் காட்டும் அவசரம் நேர்மையானது அல்ல.

ஆதிக்க சாதி என்று குறிப்பிட்டு அந்தப் பிரிவில் உள்ள அனைத்து மனிதர்களையும் காழ்ப்புணர்ச்சியோடு பார்ப்பதும் அணுகுவதும் முறையானதல்ல. தலித் பிரிவிலும் ஆதிக்க மனோபாவத்தோடு செயல்பாடுகிறவர்கள் இருக்கிறார்கள். இதையும் என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தில் சொல்ல முடியும்.

()

எல்லா சாதி மனிதர்களும் புழங்கும் ஒண்டுக்குடித்தனத்தில் அதிலுள்ள சங்கடங்களோடும் சண்டைகளோடும் மகிழ்ச்சிகளுடனும் இடையூறுகளுடன் வாழ்ந்தவன் நான். அப்போதைய உரிமையாளரிடமிருந்து நாங்கள் குடியிருந்த வீட்டை புதிதாக விலைக்கு வாங்கியவர் தலித் பிரிவைச் சார்ந்தவர். அப்போதைய ஆளுங்கட்சியைச் சேர்ந்த அவர் அந்த வட்ட அளவில் அதிகாரம் பொருந்திய பதவியில் இருந்தார். தொழிற்சங்கத்திலும் பெரிய பொறுப்பில் இருந்தார். வீட்டை வாங்கியவுடன் அவர் செய்த முதல் பணி எல்லோரையும் காலி செய்யச் சொல்லி மறைமுகமாகவும் நேரடியாகவும் தந்த கொடுமைகள். இவருடைய மிரட்டலுக்குப் பயந்த சில வீட்டினர் காலி செய்து விட்டனர். ஆனால் மிகுந்த வறுமையில் வாழ்ந்த என்னுடைய குடும்பத்தினரைப் போன்றவர்கள் மாத்திரம் உடனே வேறிடத்திற்கு செல்ல முடியாமல் அந்தக் கொடுமைகளை சகித்துக் கொண்டிருந்தோம். நான் ஒரு முறை அந்த வீட்டுக் கட்டிடத்திற்குள் எதற்கோ அவசரமாய் நுழைந்த போது எதிரே வந்த அவரைக் கவனியாமல் முட்டிக் கொண்டேன். "எதிரே வருகிற என்னைக் கண்டு மரியாதையாக ஒதுங்கி நிற்காமல் இடிக்கிறாற் போல் வருகிறாயே" என்று சொல்லிக் கொண்டே கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அப்போது சுமார் பதினைந்து வயதுச் சிறுவனாக இருந்த எனக்கு 'என்ன தப்பு செய்தேன்' என்று அதிர்ச்சியாக இருந்தது.

பின்னர் ஒரு முறை குடியிருந்தவர்கள் அனைவரையும் எதையும் விளக்காமல் ஏதோ ஒரு பத்திரத்தில் கையெழுத்திடச் சொன்னார். என்னுடைய வீட்டின் சார்பில் நான் ஒரளவிற்கு படித்தவன் என்பதால் என்னை அழைத்து கையெழுத்திடச் சொன்னார்கள். எதற்கென்று நான் தயக்கத்துடன் கேட்க முயன்ற போது கையில் பெரிய கல் ஒன்றை தூக்கி கொலை வெறியுடன் எறிய வந்தார். நான் பயந்து ஓடி வந்துவிட்டேன்.

நிற்க. தலித்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்பதை நிறுவுவதற்காக இதைச் சொல்ல வரவில்லை. என்னுடைய தனிப்பட்ட அனுபவத்தைக் கொண்டு ஒரு பிரிவினரையே அபத்தமாக நான் பொதுமைப்படுத்த மாட்டேன். எல்லாப்பிரிவுகளிலும் மனிதாபிமானம் இல்லாமல் மற்றவர்களை கொடுமைப்படுத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதே நடைமுறை உண்மை. அதிகாரம் கையில் வரும் போது எந்தவொரு மனிதர்களுக்கும் மற்றவர்களை ஆதிக்கம் செய்யும் மனோபாவம் வந்துவிடுவதை குறிப்பிடுவதற்காக இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. எனவே தலித்கள் எல்லோருமே அப்பாவிகள் அல்ல என்பதையும் மற்ற பிரிவுகளில் உள்ள அனைவருமே கொடுமைக்காரர்கள் அல்ல என்பதையும் (அவ்வாறான பிம்பத்தைத்தான் இணையத்தில் காண முடிகிறது) அழுத்திச் சொல்வதற்காகத்தான் என்னுடைய முந்தைய பதிவில் சில விஷயங்களை கிண்டலான தொனியில் சொல்ல வேண்டியிருந்தது.

ஆனால் இந்தப் பதிவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு 'வந்தாயா வழிக்கு' என்ற தொனியில் சிலர் எழுதும் பின்னூட்டமிட்டத்தை நான் ஏற்க மாட்டேன். இது அவர்களின் பிரச்சினைதானே ஒழிய, என்னுடையதில்லை. எவனொருவன் தன்னுடைய சாதிய/மத/இன கற்பிதங்களை பெருமிதமாக சொல்லிக் கொள்கிறானோ, அதன் காரணமாகவே மற்ற பிரிவினரை இகழ்வாக நோக்குகிறானோ அவன் என் கண்ணுக்கு மலத்தில் நெளியும் புழுவாகவே தெரிகிறான். (இது எல்லாப்பிரிவினருக்கும் பொருந்தும்).

()

மற்றபடி....

குறிப்பிட்ட சில பதிவர்களை நான் மறைமுகமாக விமர்சித்திருப்பதாக அவர்களின் பெயர்களை குறிப்பிட்டே சிலர் பின்னூட்டமிட்டிருக்கின்றனர். அதில் ஒரளவிற்குத்தான் உண்மையிருக்கிறது. செயற்கையான ஆவேசத்துடனும் மற்றவர்களை கவனத்தை கவர உபயோகப்படும் இகழ்வான உத்திகளுடன் அவர்களின் பதிவில் குறிப்பிடப்படும் ஆபாச வார்த்தைகளைப் பற்றின எரிச்சல் என்னிடம் நீண்ட நாட்களாக இருந்தது. அதைத்தான் சுட்ட விரும்பினேன். ஆனால் அவர்களைச் சுட்டிக்காட்டி என்னை ஏதோ ஒரு புனிதன் என்று காட்டிக் கொள்வது அல்ல என் நோக்கம். என்னுடைய பதிவிலும் அவ்வாறான வார்த்தைகள் சில சமயங்களில் இடம் பெற்றிருக்க்கூடும். இதைத் தவிர்த்து மற்ற சில விவாதங்களுக்காகவும் மாற்று எழுத்துக்களாகவும் அவர்களின் பதிவை தொடர்ந்து படித்துக் கொண்டுதானிருக்கிறேன். சினிமா பற்றிய வரிகளில் நான் குறிப்பிட்டது போல பிடிக்காவிடில் ஏன் தொடர்ந்து படிக்கிறாய் என்று அவர்களும் கேள்வி எழுப்ப முடியும்தானே?

()

(முந்தைய) பதிவின் ஆரம்பத்தில் கழிசடைகள், பன்றிக்குட்டிகள் என்று சக பதிவர்களைப் பற்றி எழுதியிருந்ததாக அதிஷா உள்ளிட்ட சில நண்பர்கள் பின்னூட்டத்தில் மறைமுகமாக வருத்தப்பட்டிருந்தனர். இந்தப் பதிவு முழுதுமே ஒரு போலி முற்போக்காளனின் குரல். அவன் பார்வையில் மற்ற பதிவர்களின் தோற்றம் பற்றித்தான் எழுத முயன்றிருந்தேன். அதை என்னுடைய பார்வை என்பது போல அவர்கள் புரிந்து கொண்டதற்கு நான் தெளிவற்ற முறையில் எழுதியதும் காரணமாக இருந்திருக்கலாம். பதிவின் இடையில் என்னைப் பற்றிய சுய எள்ளல் சார்ந்த தடங்களையும் அவர்கள் கண்டிருக்கக்கூடும். எந்தவொரு தனி மனிதரையும் நான் தாழ்ச்சியாக நினைப்பதில்லை. இதையும் மீறி அவர்கள் புண்பட்டிருந்தால் அதற்காக என் மன்னிப்பை இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் அந்தப் பதிவு பல பதிவர்களின் நடுநிலை சார்ந்த மனோநிலையை, எண்ணங்களை எதிரொலித்திருக்கின்றது என்பதை பல பின்னூட்டங்களின் மூலம் உணரும் போது 'நான் தனியனல்ல' என்கிற சந்தோஷம் ஏற்படுகிறது.

என்னுடைய அலைவரிசையில் இயங்குகிற நண்பர்களின் தோழமை கிடைக்காமல் நான் பல வருடங்கள் அவஸ்தைப் பட்ட போது அதைத் தீர்த்தது இணையம்தான் என்ற வகையில் இந்த ஊடகத்தின் மீது எனக்கு மிக நன்றியுண்டு. சில விஷயங்களை பகிர்ந்து கொண்டதில் ஏற்படும் சந்தோஷமும் அதனால் கிடைக்கும் பாராட்டின் காரணமாக இன்னும் நிறைய விஷயங்களை தேடிக் கண்டடைந்து பகிர வேண்டும் என்கிற உணர்வை ஊட்டி என்னுடைய தேடல் விரிவாக ஊக்கமளித்தது இணையம்தான்.

என்னுடைய பதிவை சராசரியாக தினமும் குறைந்தது முந்நூறு நபர்களிலிருந்து ஐந்நூறு நபர்களாவது வாசிக்கிறார்கள் என்பதை google analytics மூலம் அறிய முடிகிறது. ஒரு சிற்றிதழோ அல்லது இடைநிலை இதழுக்கோ சாத்தியப்படாத வாசக வட்டமிது. மேலும் எந்தவிதமான அரசியல் தலையீடோ, இடப்பிரச்சினையோ இல்லாமல் மிகச்சுதந்திரமாக என்னுடைய எண்ணங்களை இங்கே பகிர முடிகிறது. இணையத்தின் ஆக மிகப் பெரிய பலம் அது. அதுவே என் பொறுப்புணர்ச்சியை இன்னும் அதிகமாக்குகிறது. என்னுடைய பதிவுகளில் ஒரு சதவீத உருப்படியான விஷயத்தையாவது வாசிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இப்போதைய லட்சியம்.

இந்த சக்தியை சாதிய/மத/இன உணர்வு சார்ந்த மோதல்களுடான சார்பு நிலை சார்ந்த விவாதங்களின்/வாசிப்புகளின் மூலம் வீணாக்க நான் விரும்பவில்லை. அவ்வளவுதான்.

suresh kannan

Friday, November 21, 2008

முற்போக்காளராக பாவனை செய்ய முப்பது வழிகள்

ஒரு கணினியும் இணையத் தொடர்பும் இருந்தால் போதும், கண்ட கழிசடைகள் எல்லாம் (இருங்கள், இந்த ஆரம்பத்திற்கே சங்கடப்படாதீர்கள், இன்னும் நிறைய இருக்கிறது) வலைப்பூ ஆரம்பித்து எழுதித் தள்ளி இணைய எழுத்தாளர்கள் பன்றிக் குட்டிகள் போல் பெருகிவிட்டார்கள். இதன் நடுவிலே நாம் என்னதான் சிறந்த செய்திகளை சொந்தமாகவோ ஊடகங்களிலிருந்து நகல் செய்தோ பிரசுரித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லையே என்றும் என்ன செய்தும் தம்மை ஒரு முற்போக்குவாதி என்று யாரும் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்களே என்றும் கவலைப்படுகிறீர்களா?

கவலையை விடுங்கள். மனச்சாட்சியையும், சூடு சொரணைகளையும் சற்று ஒத்தி வைத்து விட்டு உங்களை முற்போக்குச் சாயத்தில் முக்கியெடுத்த செவ்வாய் கிரகவாசியான பிரகஸ்பதி போன்றதொரு வடிவில் கட்டமைத்துக் கொண்டு அதன் மூலம் இணையப்பரப்பில் பரவலான கவனத்தைப் பெற கீழ்கண்ட வழிகள் ஒருவேளை உங்களுக்கு உதவக்கூடும்.

(1)

முதலில் உங்கள் வலைப்பூவின் பெயரே கலகத்தன்மையுடன் இருத்தல் அடிப்படையானது. பூங்குருவி, தென்றல் காற்று என்றெல்லாம் அழகியல் உணர்ச்சியுடன் பெயர் வைத்திருந்தால் உங்களை ஏதோ வாரமலரின் பின்பக்கத்தில் கவிதை எழுதுகிற தயிர்வடை ஆசாமி என்று புறக்கணித்து விடுவார்கள். இந்த வலைப்பூவின் தலைப்பையே உதாரணத்திற்கு பாருங்கள். பிச்சைப்பாத்திரத்தில் என்ன இருக்கும்? மனிதர்கள் தங்களின் ஜாதிய கற்பிதங்களை கழற்றி வைத்து விட்டு கூடும் ஒரே இடமான பாலியல் தொழிலாளியின் யோனி மாதிரியானது அது. ஜாதிமதமில்லாத ஜீவத்துளிகள் நிறைந்திருப்பது போல பிச்சைப் பாத்திரத்திலும் எல்லோர் வீட்டு மிச்ச, சொச்ச உணவு அடங்கியிருக்கும். அந்த மாதிரியான ஒரு கலேஜியான பிரதேசத்தை குறியீடாகக் கொண்ட வார்த்தையை உங்கள் வலைப்பூவின் பெயர் எதிரொலிக்க வேண்டும். ஆனால் வாசகர்களின் கவனத்தைக் கவர இந்த மிதவாதம் கூட உதவாது. இன்னும் கூட காத்திரமாக கூடவே சற்று இலக்கியச் சாயலுடன் இருப்பது உத்தமம். 'விந்துத்துளியின் பிரபஞ்ச வெளி' என்பது போலவோ 'பெருங்கதையாடலில் விரியுமென் யோனி' என்பது போலவோ அமைந்திருத்தல் நன்று. 'தீப்பொறி ஆறுமுகம்" "வெற்றிகொண்டான்" போன்ற திராவிடப் பேச்சாளர்களின் காத்திரமான உரையாடல்களை தொடர்ந்து கவனித்து குறிப்பெடுத்துக் கொள்வது இதற்கு உதவக்கூடும். சிற்றிதழ் வட்டாரத்தில் கலகவாதிகளாக அறியப்படுகிறவர்கள் தலைமையேற்கும் இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொள்வதும் அதற்கு ஒப்பானது.

(2)

பதிவு ஆரம்பித்தவுடன் நீங்கள் செய்ய வேண்டியது முற்போக்காளர்களுக்குள் நிலவும் பல முகாம்களில் ஏதாவது ஒரு முகாமிற்கு அடைக்கலம் தேடிச் செல்வது. வணிக இதழ்கள் முதற்கொண்டு சிற்றிதழ்கள் வரை இந்த முகாம்களின் எண்ணிக்கை அதிகம். ஏதாவதொரு முகாமோடு உங்களை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் காத்திரமாக செயல்படுவது என்பது பெண்கள் நடிக்காத சீரியல் வெற்றி பெறுவது போல சாத்தியமேயில்லாத ஒரு காரியம். முற்போக்கு எழுத்தாளர்களை எப்படி அடையாளம் கொள்வது என்று குழப்பமா? எந்த பதிவிலாவது ஙோத்தா... லவ்டேகோபால்... என்ற வார்த்தைகள் தென்பட்டால் அவரை தயக்கமின்றி உடனே முற்போக்கு எழுத்தாளராக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அப்படிப்பட்ட எழுத்தாளர்களின் ஏதாவது ஒரு முகாமை தேர்வு செய்தவுடன் அந்த முகாமில் இருப்பவர்களின் பதிவிற்குச் சென்று 'சூப்பர் அண்ணே. &*||*^#! சேர்ந்தவர்களின் முகமுடிகளை கிழித்தெறிந்து அம்மணமாக்கி விட்டீர்கள். இப்படி செருப்பால் அடித்தால்தான் அவர்களுக்கு புத்திவரும்' என்றோ ' பின்னி விட்டீர்கள் &|*^#! நாய்களின் கொட்டம் இதன் மூலமாவது அடங்கும்' என்றோ ஆவேசமான வசவு வார்த்தைகளுடன் இணைத்து பின்னூட்டமிட்டு பதிவெழுதுவர்களையே அசத்தி அவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும். இம்மாதிரியான செயல்களின் மூலம் அவர்களும் உங்களின் பதிவிற்கு வந்து அதே மாதிரியான மொழியில் பின்னூட்டமிட்டு உங்களின் புகழைப் பரப்ப வலிகோலுவார்கள். பிற்காலத்தில் அவர்கள் உங்களை அவர்களின் வாரிசாக அறிவிப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. பின்நவீனத்தின் கோமணத்தையே அவிழ்த்து ஆராய்வதாக சொல்லிக் கொள்ளும் முற்போக்குவாதிகள், பழமைவாதிகள் தங்கள் சமூகத்தை தொடர்ச்சியாக கட்டமைக்க ஏற்படுத்திய வாரிசு முறையை மாத்திரம் ஏன் பின்பற்றுகிறார்கள் என்று யாரும் கேட்க மாட்டார்கள்.


(3)

உங்கள் பதிவின் உள்ளடக்கம் என்பது எப்போதும் பொதுப்புத்தியை செருப்பால் அடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது நீங்கள் எழுதும் பதிவுகள் பொதுப்புத்தி கொண்டு எழுதப்பட்டிருக்கக் கூடாது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் உங்களுக்கு பொதுப்புத்தி (common sense) என்பதே இருக்கக்கூடாது. புரிகிறாற் போலவும் நேர்க்கோட்டிலமைந்த வாக்கியங்களாகவும் எழுதினால் உங்களுக்கு முற்போக்கு எழுத்தாளராக இருக்க அடிப்படைத்தகுதி கூட இல்லையென்று பொருள். ஓசியில் கிடைக்கிறதே என்று பத்து கட்டிங்கை தொடர்ச்சியாக அடித்து விட்டு டாஸ்மாக் வாசலில் விழுந்து கிடப்பவனின் உளறலோடு ஒத்திசைவான ஒரு தாளகதியான மொழியில் எழுதத் தெரிந்திருத்தல் நன்று. புரியும்படி சொன்னால் அல்லது புரியாதபடி சொன்னால் உங்கள் ஆழ்மனதின் ஒப்பனை செய்யப்படாத எண்ணங்களை இலக்கிய மொழியின் சாயலோடு வடிவமைத்து கலக வார்த்தைகளில் பதிவு செய்வதே முற்போக்கு எழுத்தின் பாலபாடம். தமிழில் இருக்கும் அத்தனை வசவு வார்த்தைகளையும் பதிவின் இடையில் உபயோகிப்பது மிக முக்கியம். வாசிக்கிறவர்கள் யாரும் முகஞ்சுளிக்க மாட்டார்களா என்ற கேள்வி உங்களுக்குள் ஒருவேளை எழலாம். இப்படியான வசவு வார்த்தைகளை படிப்பதிலும் சொல்லிப் பார்ப்பதிலும் பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு ரகசிய கிளர்ச்சி இருக்கிறது என்பது அடிப்படை உளவியல் உண்மை. எனவே மேலுக்குள் அதை அருவருத்தாலும் உங்கள் பதிவை மீண்டும் மீண்டும் படித்துப் பார்ப்பார்கள் என்பது எட்டாம் நூற்றாண்டிலிருந்தே நிறுவப்பட்ட ஒரு வரலாற்று ரகசியம்.

(4)

செய்தித்தாள்களையும் தொலைக்காட்சி செய்திகளையும் தொடர்ந்து கவனித்து சிறுபான்மையினர்கள் சம்பந்தப்பட்ட அவர்கள் மீதான தாக்குதல் சம்பந்தப்பட்ட அனைத்துச் செய்திகளை (அதற்குத்தான் இந்தியாவில் பஞ்சம் கிடையாதே) சிவப்பு மையால் குறித்து வைத்துக் கொள்வது முக்கியம். பின்பு புலனாய்வுப் பத்திரிகைளும் சிறப்பு செய்தியாளர்களும் மத அடிப்படையாளர்கள் நடத்தும் பத்திரிகைகளும் ஊதிப் பெருக்கும் தரவுகளை மிகக் கவனமாக குறிப்பெடுத்துக் கொண்டு அவற்றை உங்களின் பார்வை போல கலந்து கட்டி ஆவேசமான தொனியில் மறுபிரசுரம் செய்வது உங்களை முற்போக்காளர்களின் வரிசையின் முன்னணியில் நிற்க வைப்பதற்கு நிச்சயம் உதவும். இதில் தலித்கள் சம்பந்தப்பட்ட செய்தி என்றால் திண்ணியத்தில் மலம் திணிக்கப்பட்ட சம்பவத்தை நிச்சயம் சேர்த்துக் கொள்வது இன்றியமையாதது. அந்த மலம் உலராமல் பார்த்துக் கொள்வது முற்போக்காளராகிய உங்களின் முக்கியமான கடமை. வருங்காலத்தில் தலித்களே இதை மறக்க முயற்சித்தாலும் இதை அவர்களுக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்து அவர்களின் தாழ்வுணர்ச்சியையும் பதட்டத்தையும் இழக்காமல் வைத்திருக்க வேண்டியது நீங்கள் முற்போக்காளராக தொடர்ந்து செயல்படுவதற்கு தேவையான அடிப்படை என்பதை மறக்கக் கூடாது. சுருங்கச் சொன்னால் நீங்கள் முற்போக்காளர் தகுதியை நீட்டித்துக் கொண்டே இருப்பதற்கு ஒடுக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டுக் கொண்டும் அவர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பிரச்சினையை உணர்ச்சிகரமாக எழுதி உங்கள் முற்போக்காளர் இமேஜை நீங்கள் பஸ் பாஸ் போல் renewal செய்து கொண்டே இருக்க முடியும்.

இன்னொரு அடிப்படையையும் மறக்கக்கூடாது. 'ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த அனைவருமே கொடூரமானவர்கள், வன்முறையாளர்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் மீது தொடர்ச்சியாக அடக்குமுறையை தொடுத்து கொண்டிருப்பவர்கள். அவர்களில் சிலர் தங்களின் ஜாதிய கற்பிதங்களை உணர்ந்து அதைக் கடந்து வெளியே வரமுயற்சித்தாலும் அவர்களின் சட்டைக்குள் கயிற்றைத் தேடிப்பார்த்து அடையாளத்தை உணர்ந்து அவர்களை மறுபடியும் ஜாதியக் கூண்டுக்குள் திருப்பித்தள்ளி விடுவது முற்போக்காளனின் கடமை.

எல்லா கருமாந்திர ஜாதிகளிலும் நல்லவர்களும் அயோக்கியர்களும் வன்முறையாளர்களும் மனிதாபிமானம் கொண்டவர்களும் கலந்தேதான் இருப்பார்கள் என்பது கடைந்தெடுக்கப்பட்ட பொய் என்பதை முற்போக்காளர்கள் உணர வேண்டும். ஒரு வன்முறை நிகழ்வை "எவ்வாறு புரிந்து கொள்வது" என்பதற்கு நிறைய பயிற்சிகள் தேவைப்படுகிறது. எங்காவது ஒரு வன்முறைச்சம்பவம் நிகழ்ந்தால் அது ஆதிக்கச் சாதியினராலேயாதான் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும் என்று முன்கூட்டிய தீர்மானத்துடன் நம்புவதுதான் சிறந்த புரிதல்.

(5)

சினிமா விமர்சனம் எழுதுவது ஒரு கூடுதல் தகுதி. தமிழில் வந்த சினிமா எதுவுமே உருப்படியானது அல்ல என்று முப்பாத்தம்மன் கோயிலில் கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக சொல்வது அடிப்படை. உலக சினிமா என்பது இந்திய துணைக்கண்டத்தின் வெளியில் உருவாக்கப்படுவது என்பதை மறந்து விடக்கூடாது. புகழ்பெற்ற, பொதுவாக பரவலாக அறியப்பட்ட உலகத் திரைப்படங்களை பற்றி எழுதுவது உங்களின் தனித்தன்மைக்கு வேட்டு வைக்கும் செயல். பழங்குடிகளின் தொன்மையான மொழியில் வெளிவந்து திரைப்பட விழாக்களில் மொத்தமே பத்து நபர்கள் மாத்திரமே பார்த்திருக்கும் திரைப்படங்களைப் பற்றி எழுதுவதே உன்னதம். இந்தத் திரைப்படங்களின் போக்கு மக்களின் புரட்சி, எழுச்சி ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என்பதை மறந்துவிடக்கூடாது. இம்மாதிரியான விமர்சனங்களின் போது சம்பந்தப்பட்ட படத்தை மாத்திரம் ஒற்றைப் பரிமாண பார்வையோடு எழுதுவது அறிவீனம். சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ பல்வேறு திரைப்பட இயக்குநர்களின் பெயர்களையும் படத்தலைப்புகளையும் (வெறுமனே பெயர்களை தெரிந்து வைத்திருத்தால் போதும்) ஆங்காங்கே உதிர்த்துக் கொண்டே செல்வது கூடுதல் தகுதி. படிக்கும் வாசகன் உங்களை பிரமிப்புடனும் ஆச்சரியத்துடனும் வாயைப் பிளந்து பிரமிக்க இது உதவும்.

உலக சினிமாக்களை காண ஆங்கில மொழியின் போதாமை குறித்து கவலைப்படுகிறீர்களா? பரவாயில்லை, இதை வெளியே காண்பித்துக் கொள்ள வேண்டாம். உள்ளுர்ப் படங்களுக்கு வருவோம். நமது உள்ளுர் சினிமா நாயகர்கள் அரிவாள்களை தலைக்கு உயரே தூக்கும் வணிகப்படங்களை வெளிவந்த முதல் நாளே முண்டியத்துக் கொண்டு வாயைப் பிளந்து கொண்டு பார்த்தாலும் அந்தப் பிரியத்தை உள்ளுக்குள் ஒளித்து அவர்களையும் அந்தப்படங்களையும் கன்னாபின்னாவென்று திட்டி எழுதுதலின் மூலம் முற்போக்குச் சாயத்தை அழுத்தமாக பூசிக் கொள்ளலாம். விமர்சனப் பதிவின் தலைப்பை மிக அழுத்தமாக வைப்பது அதிக வாசகர்களைப் பெறுவதற்கு மிகுதியாக உதவும். "பார்ப்பனிய மலத்தில் தோய்த்தெடுக்கப்பட்ட தூமைத் துணி' 'சீழ்பிடித்த ஆண்குறியில் வழித்தெழிக்கப்பட்ட நாற்றமடிக்கும் விந்துக்குருதி' என்று கலகத்தன்மையுடனோ அல்லது 'பெருங்கதையாடலின் குறுநகை' என்று இலக்கிய வாசனையுடனோ இருத்தல் முக்கியம். பதிவின் உள்ளடக்கத்தில் பட இயக்குநரையோ பிரதான நடிகரையோ "தேவடியாப் பையன்" என்றோ அவர்களின் "ஆண்குறிகளை வெட்டுதல்" குறித்தோ கொண்ட வரிகளை மறக்காமல் சேர்ப்பது வாசகர்கள் கிளர்ச்சியடைந்து "இவ்வாறெல்லாம் கூட பொதுப்பரப்பில் கலக்ததன்மையோடு செயல்பட முடியுமா" என்று உங்களை பிரமிப்புடன் காண உதவும்.

தமிழ்ப்படங்கள்தான் குப்பை என்று தெரிகிறதே, அப்புறம் ஏன் அதை முதல் நாளே பார்த்துவிட்டு வந்து இப்படி இணையப் பரப்பை நீங்கள் எடுக்கும் வாந்தியாலும் அபான வாயுவாலும் நிரப்புகிறீர்கள் என்று யாரும் உங்களை கேள்வி கேட்பார்களோ என்று கவலைப்படாதீர்கள். அவர்கள்தான் கோமியம் தெளிக்கப்பட்டு புனிதமாக்கப்பட்ட உங்களின் கலகவார்த்தைகளில் பிரமிப்படைந்து வாயடைத்து நிற்கிறார்களே.

(6)

திரையரங்கில் படம் வெளிவந்த முதல்காட்சி அனுமதிச் சீட்டுக்காக வரிசையில் முண்டியத்து முன்னால் நிற்கிற இருபது பேரின் கவனத்தை திசைமாற்றி தாண்டிப் போய் சீட்டை வாங்கியதுதான் உங்களின் வாழ்வில் நீங்கள் செய்த ஒரே புரட்சியாக இருந்திருக்கும். பரவாயில்லை. ஆனால் உங்களின் பதிவுகளில் இம்மாதிரியான சில்லறைத்தனமான செயல்களின் தடங்கள் பதியாமல் பார்த்துக் கொள்வது முக்கியம். மார்க்ஸ், சேகுவேரா, பிடல் காஸ்ட்ரோ போன்ற ஆவேசமான புரட்சி சம்பந்தப்பட்ட பெயர்களும் மேற்கோள்களும் உங்கள் பதிவின் இடையில் இருப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். காலையில் தவறாமல் வாக்கிங் சென்று காய்கறி வாங்கித் திரும்பும் மிடில்கிளாஸ் கேணையனாக உங்களை சித்தரித்துக் கொள்வது உங்களின் முற்போக்கு பிம்பத்தை கட்டமைப்பதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். டாஸ்மாக்கில் ஓசியில் குடித்து வாந்தியெடுத்ததைப் பற்றியோ போதையில் எதிரே இருப்பவனுடன் நடந்த கைகலப்பு பற்றியோ புளகாங்கிதத்துடன் அதை விவரித்து எழுதுதல் நலன் பயக்கும். திரையில் தங்கள் நாயகர்களை ஆராதிக்கும் அப்பாவி விசிலடிச்சான் குஞ்சுகள் அதே முறையில் உங்களின் இந்த புரட்சிச் செயல்களில் கிளர்ச்சியடைந்து உங்களை ஆதர்சமாக ஏற்றுக் கொண்டு உங்களின் அல்லக்கைகளாக மாற வாய்ப்புண்டு.

(7)

சர்வதேச அறிவுஜீவிகளின் கட்டுரைகளை இணையத்தில் தேடிக் கண்டெடுத்து சமீபத்தில் அதை வாசித்ததாக போகிற போக்கில் அலட்சியமாக தெரிவிப்பது உடனடி பலனை ஏற்படுத்தக் கூடியது. குருட்டாம் போக்கில் கட்டுரையின் சில வரிகளை அடிக்கோடிட்டு காண்பித்து இந்த வரிகளுடன் தாம் மிகவும் உடன்படுவதாகவோ அல்லது கட்டுரையாளரின் மேதாவித்தனத்தை மறுதலிப்பதாகவோ தெரிவிப்பது 'நம்மாளு இண்டர்நேஷனல் லெவல்ல பைட் பண்றாரே' என்று வாசகனின் மனத்தில் பிரமிப்பை ஏற்படுத்தக்கூடும்.

வேற்று மொழி அறிவுஜீவிகளின் கட்டுரைகளை நேர்காணல்களை சற்று சிரமம் மேற்கொண்டு தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவதும் உதவக்கூடியதுதான். பதிவின் கீழே சிறியதாக தமிழில் ...... என்று உங்கள் பெயரை விரும்பினால் நிரப்பிக் கொள்ளலாம். சாளேஸ்வர வாசகர்கள் இதைக் கவனிக்காமல் முழுக் கட்டுரையும் உங்களாலேயே எழுதப்பட்டது என்று தவறாக (உங்களைப் பொறுத்தவரை சரியாக) புரிந்து கொள்வதற்கு அது உதவக்கூடும். மொழிபெயர்க்கும் கட்டுரையின் தொனி அசல்கட்டுரையின் படியேதான் வரவேண்டுமென்கிற கட்டாயமெல்லாம் ஒன்றில்லை. இடையே உங்களின் கைச்சரக்கையும் கலந்து அடிக்கலாம். இம்மாதிரி பதிவையெல்லாம் யாரும் பிரக்ஞையுடன் வாசிப்பதில்லை என்பதால் யாரும் கண்டுபிடிப்பதற்கு வாய்ப்பே கிடையாது. அரவாணிகள், பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள் போன்ற விளிம்புநிலை மனிதர்களைப் பற்றி நிஜ வாழ்க்கையில் நீங்கள் கிஞ்சித்தும் கவலைப்படாமல் இருக்கலாம். அவர்களுக்காக உங்கள் பிருஷ்டத்தை ஒரு அங்குலம் கூட நகர்த்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் எழுத்து, பொதுவாழ்க்கை என்று வரும் போது அவர்களைப் பற்றியே தொடர்ந்து எழுதுவது, பேசுவது, கவலைப்படுவது போன்ற செயல்கள் உங்களின் முற்போக்கு இமேஜ் வளர்வதற்கு பெரிதும் உதவக்கூடியது.

(8)

பிடித்த எழுத்தாளர்களாக ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், பாலகுமாரன், அனுராதா ரமணன் என்று ஆரம்பித்தீர்கள் என்றால் உங்களை யாரும் சீந்த மாட்டார்கள். சிறுபத்திரிகைகளில் மாத்திரமே ரகசியமாக உலவும் எழுத்தாளர்களை (குறைந்தபட்சம் பெயர்களையாவது) அறிந்து கொள்வது நல்லது. அவர்களின் படைப்புகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டே வந்து அதில் சர்ச்சைக்குள்ளாக்க வேண்டிய சங்கதி இருந்தால் (இல்லையென்றால் நாமே செயற்கையாகவும் அதைக் கட்டமைக்கலாம்) கப்பென்று பிடித்துக் கொண்டு அதை வைத்து 'இது சிறுபான்மையினரை அவமதிக்கும் நோக்கில் எழுதப்பட்டது' என்ற ஆவேசமான தொனியில் பரபரப்பான கட்டுரை ஒன்றை எழுதலாம். (காதலான திரைப்படத்தில் பெரியாரின் சிலைக்கோணத்தை அரசியலாக்கிய கட்டுரையை இங்கு நினைவுப்படுத்திக் கொள்வது நல்லது). பொதுப்புத்திக்கு தெரியாத / உறைக்காத கோணத்தை இந்த முற்போக்காளர் விழிப்புடன் கூர்மையாக அவதானித்து கண்டுபிடித்து விட்டாரே என்று உங்களுக்கு பாராட்டு மழை பொழியும். சாணக்குகியா, அசிங்கபெரியவன் போன்ற எழுத்தாளர்களைப் பற்றி எழுதினால் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். எனவே வெற்றிமோகன், பாரு போன்ற முன்னணி சிற்றிதழ் படைப்பாளிகளை அவ்வப்போது சீண்டிக் கொண்டோ அல்லது அவர்கள் தங்களுக்குள் சீண்டிக் கொள்வதை கண்டித்து காறித்துப்பியோ தொடர்ந்து பதிவெழுதுதலும் நன்று.


()

மேற்கண்ட வழிகளை கவனமாகப் பின்பற்றுவதின் மூலம் 'நீங்களும் ஒரு முற்போக்காளர்' என்ற தகுதியையும் ஆளுமையையும் இணையப் பரப்பில் நீங்கள் உடனடியாகவும் சிறப்பாகவும் பெறுவதற்கு நிச்சயம் உதவும் என்று நம்புகிறேன். "நீங்களும் இதைப் பின்பற்றுகிறீர்களா?" என்று என்னை நோக்கி அபத்தமாக யாரும் கேள்வியெழுப்பக் கூடாது. இது ஒரு சுயவாக்குமூலமோ என்று சந்தேகப்படுபவர்கள் நிச்சயம் நரகத்துக்குத்தான் செல்வார்கள்.

முப்பது வழிகள் என்று குறிப்பிட்டு விட்டு எட்டு வழிகள் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருக்கின்றனவே என்று முணுமுணுப்பவர்கள் முற்போக்கு முகாமிற்குள் நுழைய அடிப்படை தகுதி கூட இல்லாதவர்கள். சொல்லப்பட்டதின் ஒழுங்கை பின்பற்றாததே கலகத்தின் குறியீடு என்று இதற்குள் யூகித்திருந்தவர்களுக்கு பிரகாசமான வாய்ப்புண்டு. (நியுமராலஜிப் படி எட்டாம் எண்தான் எனக்கு ராசியானது என்பதால்தான் எட்டு விதிகளுடன் இந்தப் பதிவு முடிக்கப்பட்டிருக்கிறது என்று காற்றுவாக்கில் வரும் உறுதியில்லாத தகவல்களை நம்பாதீர்கள்).

வாழ்க முற்போக்கு! வளர்க கலகவாதிகள்! ஒழிக பொதுப்புத்தி!


(முக்கியமான பின்குறிப்பு: விளிம்பு நிலை மனிதர்களுக்காகவும் சிறுபான்மையினருக்காகவும் நிஜமான அக்கறையுடன் சாய்வில்லாத மனப்பாங்குடன் இயங்கும் படைப்பாளிகள், களப்பணியாளர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் அவ்வாறான பாவனையில் போலித்தனமாக இயங்கி மற்றவர்களின் கவனத்தில் தம்மை எப்போதும் வைத்துக் கொள்ள நினைக்கும் அற்பர்களை கிண்டலடிக்க முயல்வதே இந்தப் பதிவின் நோக்கம்.)

பதிவு நீண்டுவிட்டதால் பின்னதொரு சாவகாசமான நேரத்தில் இன்னும் சில வழிமுறைகளும் விதிமுறைகளுமாக இந்தப் பதிவு update செய்யப்படலாம்.

தொடர்புடைய பதிவு

புகழ் பெற்ற சாமியாராக சில குறுக்கு வழிகள்

suresh kannan

Saturday, November 15, 2008

மழையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பு

சந்திப்பு முடிந்து உடனே அலுவலகம் வரவேண்டியிருந்ததால் இந்தப் பதிவை எழுதச் சாத்தியமாயிற்று. இல்லையென்றால் திங்கட்கிழமைதான் எழுத முடிந்திருக்கும். முந்தைய பதிவில் கூறியிருந்தபடி சட்டக்கல்லூரி விவகாரம் குறித்து என்னுடைய புரிதலை இன்னும் விரிவாக்கிக் கொள்ளமென விரும்பியதால் அது குறித்து நடக்கவிருந்த வலைப்பதிவர் சந்திப்பிற்குச் சென்றிருந்தேன். யார் யார் வந்திருந்தார்கள், என்னென்ன சாப்பிட்டோம் என்ற சம்பிரதாயமான விஷயங்களை எழுத விரும்பவில்லை; அவகாசமுமில்லை.

நான் சென்ற போது ஏற்கெனவே குழுமியிருந்தவர்கள் (சுமார் 20 பேர்) இது குறித்து பேசிக் கொண்டிருந்தனர். ரவிஷங்கர் மற்றும் இராம.கி அருகில் அமர்ந்தேன். அப்போதே மழை தூறிக் கொண்டிருந்தது. எனவே எல்லோரும் எழுந்து அருகிலிருந்த மரத்தினடியில் கூடினோம். இது அருகிலிருந்த காவலர் துறையினரின் கவனத்தை ஈர்த்திருக்க வேண்டும். "பிரதான சாலையின் அருகே கும்பலாக நிற்காதீர்கள், கலைந்து செல்லுங்கள், அல்லது மணல்பரப்பிற்கு உள்ளே சென்று பேசுங்கள்" என்று அவர்கள் சொல்வதாக பாலபாரதி சொன்னதையடுத்து எல்லோரும் சற்று உள்ளே சென்றோம். அப்போதும் அங்கு வந்த காவல்துறை ஆய்வாளர் ஒருவர் "ஒன்றும் பிரச்சினையில்லையே?" என்று நட்பாக (?) கேட்டு விட்டுச் சென்றார்.

இந்தக் குழப்பத்தினால் பேச வேண்டிய பிரச்சினை குறித்தான இயல்பான தயக்கம் பொதுவாக எழுந்தது. தெளிவான குரலில் வளர்மதி பேசியதை மாத்திரம் சற்று சொல்ல விரும்புகிறேன். (ஏதேனும் கருத்துப்பிழை இருந்தால் வளர்மதியோ இதர நண்பர்களோ திருத்தலாம்). 1988கள் முதல் சட்டக்கல்லூரியில் அவர் இருந்ததையொட்டியும் அப்பிரச்சினையை அப்போதிலிருந்து தொடர்ச்சியாக அவதானித்தது குறித்ததுமான அனுபவத்தில் அவர் சொன்னது:

()

"தலித் மாணவர்களுக்கும் இதர பிரிவினருக்கும் குறிப்பாக தேவர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னரே பிரச்சினை இருந்து கொண்டிருந்தது. தேவர் ஜெயந்தி விழா போஸ்டரில் கல்லூரியின் பெயரை குறிப்பிடும் போது திட்டமிட்டே அம்பேத்கர் பெயரை விடுபடச் செய்ததினால் (இதுவே ஒரு தீண்டாமையின் குறியீடு) தலித் மாணவர்கள் கோபமாக இருந்தார்கள். தேர்வு நாளன்று காலை தேர்வு முடிந்தவுடன் வெளியே வந்த சித்திரைச் செல்வன் (?) என்ற தலித் மாணவரை தேவர் இன மாணவர்கள் கத்தியால் தாக்கியதில் அவர் காது அறுந்து போய் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இந்தச் சம்பவம் எந்த மீடியாவிலும் வெளியே வரவில்லை. அவரைச் சந்திக்க எந்த பத்திரிகையாளரும் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு எதிர்வினையாகத்தான் மாலையன்று தலித் மாணவர்கள் தேவர் இன மாணவர்களை சூழந்து தாக்கினார்கள். எனவே மீடியாக்களிலும் பொதுமக்களாலும் பெரிதும் பேசப்பட்ட இந்த சம்பவம் ஒரு reaction. மூல காரணமான action-ஐ பற்றி யாருக்குமே தெரியாது. எனவே அது குறித்து யாரும் பேசவில்லை. தலித் மாணவர்கள் வன்முறையாளர்கள் என்பதை நிறுவுவதற்காக இந்தச் சம்பவத்தை சில அரசியல் சக்திகள் (குறிப்பாக தேவர் பேரவை, சென்னையிலிருக்கும் தேவர் எம்.எல்.ஏ. ஒருவர்) பயன்படுத்திக் கொள்கின்றன.

பத்திரிகையும், பொதுமக்களும், பெரும்பான்மையான வலைப்பதிவர்களும் இப்பிரச்சினையை ஆழமாக அன்றி மேலோட்டமாக உடனே எதிர்வினையாற்றும் உணர்ச்சிப் பெருக்கோடு எழுதுகின்றனர். இது தவறு. ஒரு பிரச்சினை எழும் போது உடனே எதிர்வினையாற்றாதீர்கள். அது குறித்த பின்னணிகளையும் சற்று கவனித்துப் பாருங்கள்."

()

'கண்ணெதிரே நடந்த வன்முறையை தடுக்காமல் நின்றிருந்த காவல்துறையினரை'ப் பற்றி பதிவர் நர்சிம் கேள்வி எழுப்பினார். ஆனால் காவல்துறையினருக்கும் இருக்கும் சில நடைமுறைச் சிக்கல்கள் குறித்தும் முன்னர் அனுபவங்களில் சட்டக்கல்லூரி பிரச்சினையில் தலையிட்டு அவர்கள் பிரச்சினையை எதிர்கொண்டதைப் பற்றியும் உரையாடல் தொடர்ந்தது.

"தலித் மாணவர்கள் குறித்து நீங்கள் சொன்ன பின்னணி சரி. ஆனால் அதையெல்லாம் சொல்லி இந்த வன்முறையை நீங்கள் நியாயப்படுத்த விரும்புகிறீர்களா? என்று நான் வளர்மதியிடம் கேள்வியெழுப்பிதற்கு "நிச்சயமாக இல்லை. ஆனால் வன்முறையை வன்முறையால்தான் எதிர்கொள்ள நேரிடுகிறது. இது தவிர்க்கவியலாதது" என்று பதில் சொன்னார்.

இந்தச் சம்பவம் குறித்து எழுதப்பட்ட சில பதிவுகளின் தலைப்புகளில் 'மிருகங்கள்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டதை ஒரு நண்பர் ஆட்பேசித்தார்.

பின்னர் மழை சற்று பலமாக செய்ததால் வேறு வழியின்றி உரையாடலை தொடர இயலாமல் போயிற்று.

பின்னர் தனித்தனி குழுவாக உரையாடல் சிறிது நேரம் தொடர்ந்தது. காவல்துறையினருக்கு இருக்கும் சில கட்டுப்பாட்டு பயிற்சி குறித்தும் அதனை மீறினால் அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் எனவே இவ்விஷயத்தில் பெரும்பாலோர் காவல்துறையினரை குறைகூறுவது சரியாகாது என்று பதிவர் கும்கி கூறினார்.

பின்னர் வளர்மதியிடமும் ஜோவ்ராம் சுந்தரிடமும் இன்ன பிற நண்பர்களிடமும் நிகழ்ந்த சொற்ப நேர உரையாடலோடு நான் விடைபெற்றேன்.

வளர்மதி சொன்ன சம்பவம் குறித்து (சித்திரைச் செல்வன் தேவர் இன மாணவர்களால் தாக்கப்பட்டது) ஏன் எந்த பத்திரிகையோ தலித் அமைப்போ இன்னும் வெளிவரச் செய்யவில்லை என்றும் குழப்பத்தோடும் நான் அலுவலகம் வந்தடைந்து இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன். இது குறித்து இன்னும் நிறைய உரையாடவும் சிந்திக்கவும் வேண்டியிருக்கிறது என்பது மாத்திரம் புரிந்தது.

இதர வலைப்பதிவு நண்பர்கள் இந்தச் சந்திப்பை இன்னும் விரிவாகவும் சுவாரசியமாகவும் எழுதுவார்கள் என்று நம்புகிறேன். பதிவர் சந்திப்பு இனிமையாக நிறைவுற்றது என்று சம்பிரதாயமாக சொல்லமுடியாமல் மழை தன் கடமையைச் செய்தது.

(அவசரத்தில் எழுதுவதால் முழுமை பெறாத பதிவிது என்று எனக்கே புரிகிறது. என்றாலும் இந்தச் சந்திப்பைப் பற்றி முதலில் எழுதினேன் என்ற அசட்டுப் பெருமையை பெற விரும்பியதால் இதை தவிர்க்க முடியவில்லை. :-)

suresh kannan

கலவரங்களும் சம்பிரதாயங்களும்

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் தாக்குதல் விவகாரத்தை எதிர்பார்த்த படியே தமிழக அரசு தனது வழக்கமான சம்பிதாயங்களுடன் எதிர்கொண்டிருக்கிறது. காவல்துறை ஆணையர் மாற்றம், அதிகாரிகளின், கல்லூரி முதல்வரின் தற்காலிக பணிநீக்கம், விசாரணை கமிஷன் ஆகிறவற்றுடன் அடிபட்ட மாணவர்களுக்கான மருத்துவ வசதி என்ற தற்காலிக ஏற்பாடுகள். ஆனால் கண்ணுக்கெதிரே நடந்த மனித உரிமை மீறலை ஏன் காவல்துறையினர் தடுக்க முயற்சிக்கவில்லை என்பது பற்றியோ அவர்கள் செயல்படாததற்கு பின்னணயில் உள்ள சக்திகள் பற்றியோ (விசாரணை கமிஷன் அறிக்கை வெளிவந்தாலும் கூட) யாருக்கும் தெரியப்போவதில்லை. மேலும் இவ்வாறான சம்பவங்கள் வருங்காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்காக அரசு இயந்திரம் எடுக்கப்போகும் முன்னேற்பாடுகள், நடவடிக்கைகள், முயற்சிகள் குறித்தும் அரசு யோசிக்குமா அல்லது இவர்களேதான் இதன் பின்னணியில் இருக்கிறார்களா என்றும் தெரியவில்லை. அடுத்ததொரு பரபரப்பான சம்பவத்தில் மக்கள் இதை மறந்து போவார்கள் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும் என்பதால் தற்காலிக நிவாரணங்களை வைத்து மழுப்பியிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு 'இது ஒரு சிறிய சம்பவம்' என்று என்று சட்டசபையில் வருணித்திருக்கிறார் அமைச்சர் துரைமுருகன். குறைந்த பட்சம் இரண்டு பேராவது செத்திருந்தால்தான் அதை கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு விதிகள் ஏதாவது சொல்கிறதா என்பது பற்றி தெரியவில்லை.

Photobucket

இந்தச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிக கவனம் பெற்றதிற்கு தொலைக்காட்சி ஊடகங்கள்தான் பிரதான காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. தாக்குதலின் சலனக்காட்சிகளை தொலைக்காட்சிகளில் பார்த்த அனைவருக்குமே ஏதோவதொரு பாதிப்பை அது ஏற்படுத்தியிருக்கும். இதை விடவும் எத்தனையோ கொடுமையான நிகழ்வுகள், மனித உரிமை மீறல்கள், தாக்குதல்கள், மரணங்கள்... போன்றவை வெளிஉலகத்தின் கவனத்தைப் பெறாமலேயே போயிருக்கும்தான். ஆனாலும் ஜெயா தொலைக்காட்சி குழுமம் இந்தக் காட்சிகளை மக்களிடம் திரும்பத் திரும்ப காட்டி ஊடக வன்புணர்ச்சியை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. தற்போதைய ஆளுங்கட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு அதன் மூலம் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திவிட முடியும் என்ற வருங்கால திட்டத்துடன் இந்த மூளைச்சலவை நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. வன்முறைக் காட்சிகள் மீண்டும் மீண்டும் ஜெயா தொலைக்காட்சியில் காண்பிக்கப்படுவது குறித்து இப்போதைய ஆளுங்கட்சி ஆட்சேபிக்கிறது. ஆனால் கருணாநிதி கைதுக் காட்சிகள் சன்டிவியில் திரும்பத்திரும்ப காண்பிக்கப்படுவதை இப்போதைய எதிர்க்கட்சி அப்போது எதிர்த்தது. தனக்கென்று வரும்போது அறத்தை தலைகீழாக திருப்பிப் பிடித்து பார்ப்பது அரசியல் அநாகரிகங்களுள் ஒன்று.

இந்த மாதிரியான வன்முறை நிகழ்வுகளை கண்டிக்க தமிழகத்தின் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அருகதையோ தகுதியோ இல்லை. வன்முறையின் ஊற்றுக் கண்களே இந்த அரசியல் கட்சிகள்தான். மற்றவர்களை கைநீட்டி குற்றஞ்சாட்டுவதன் மூலம் தன்னை சுத்தமாக காட்டிக் கொள்ளும் யுக்தி இது என்பதை பொதுமக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

()

சட்டக்கல்லூரி மாணவர்கள் மாத்திரமல்ல, சட்டம் படித்து முடித்து வழக்கறிஞர்களாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களே பெரும்பான்மையான சம்பவங்களில் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது ஒரு குற்றத்தில் கைது செய்யப்படும் வழக்கறிஞரை, சக வழக்கறிஞர் குழு வன்முறையில் ஈடுபடுவதின் மூலமும் தங்களுக்குள்ள அரசியல் செல்வாக்கை வைத்து காவல்துறையினரை மிரட்டுவதின் மூலம் மீட்டுக் கொண்டு வருவது தொடர்ந்து நிகழும் விஷயமாகிவிட்டது. தொழில்தர்மம் என்ற அடிப்படையில் பெரும்பாலான ரவுடிகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பை இவர்களே ஏற்படுத்தித் தருகிறார்கள்.

பிஸ்கெட் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றின் உற்பத்திப்பிரிவில் பணியாற்றும் ஒருவர், சாவதானமாக பிஸ்கெட்டுகளை எடுத்து சாப்பிடும் உரிமையை தவறில்லை என்று தன்னிச்சையாக நினைக்கிறாரோ, அவ்வாறே சட்டரீதியான செயல்களில் புழங்கும் வழக்கறிஞர்கள் சட்டத்தை தாம் மதிக்கத் தேவையில்லை, அது மற்றவர்களுக்குத்தான் என்றான ஒரு மனப்பான்மையை தன்னிச்சையாக பெற்றிருக்கிறார்களோ என்ற கேள்வியையும் இம்மாதிரியான நிகழ்வுகள் எழுப்புகின்றன.

இது எல்லாத்துறையிலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. முன்மாதிரியாக இருக்க வேண்டியவர்களே அதை மீறுவது இயல்பான ஒன்றாகிவிட்டது. ஹெல்மேட் அணிய வேண்டும், சாலைவிதிகளை மீறக்கூடாது என்று உபதேசிக்கும், மற்றவர்களை கண்காணிக்கும் பொறுப்பில் உள்ள போக்குவரத்து காவல்துறையினரே அவற்றை மீறுவது நாம் அன்றாட வாழ்வில் பார்க்கும் ஒன்று. இந்த மாதிரியான போக்குகளை தடுக்க பயிற்சிக்காலத்திலேயே அவர்களுக்கு தாம் பங்காற்றும் துறை பற்றின முக்கியத்துவத்தை அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டும். பணிக்காலத்தில் அவர்களின் விதிமீறல்களில் ஈடுபடவொட்டாமல் கடுமையான விதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

()

கல்லூரி மாணவர் மோதல் சம்பவத்தை ஏதோ கல்லூரி மாணவர்களின் தகராறு என்றோ அல்லது போஸ்டரில் அம்பேத்கரின் பெயரை போடாததற்காக ஏற்பட்ட சில்லறைத்தகராறு என்றோ எடுத்துக் கொள்ளக் கூடாது. இதன் பின்னணியில் இயங்கக்கூடிய சாதீயக் கூறுகளையும் நிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட பிரிவினர் தாங்கள் படுகிற அவமானத்தை தாங்குகிற சுயபச்சாதாபத்தை மீறி ஆதிக்க சாதியினர் மீது வன்மமும் வெறுப்புமாக சமூகக் கோபத்தோடு பொங்கி வரக்கூடிய தருணங்களும் அமையும்தான். அது இயற்கைதான். அப்படியானதொரு தருணமாகத்தான் இந்தச்சம்பவத்தை பார்க்க நேரிடுகிறது என்றாலும் அதையே காரணம் காட்டி வன்முறை கலாச்சாரத்தை நியாயப்படுத்த முடியாது. அடிபடுவது ஆதிக்க இனத்தைச் சேர்ந்தவனாலும் இருந்தாலும் சரி; தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவனாலும் சரி இரண்டுமே தவறுதான். அடிபட்ட கதாநாயகன் வில்லனை திருப்பி அடிப்பது போன்ற உணர்ச்சியோடு இதை அணுகக்கூடாது. நாம் இன்று நாகரிகத்தின் உச்சியில் நவீனத்தின் குறியீடான கணனி முன் அமர்ந்திருந்தாலும் நம் ஆழ்மனதில் ஒரு காட்டுமிராண்டி உயிர்ப்போடு அமர்ந்திருக்கிறான் என்பதைத்தான் இம்மாதிரியான சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

சில புத்திஜீவிகள் பொதுப்புத்தியின் மூலம் இப்பிரச்சினையை அணுகுவது குறித்து விமர்சிக்கின்றனர். சரியான பார்வையாக இருந்தாலும் அது பொதுப்புத்தியின் வெளிப்பாடு என்கிற காரணத்தினாலேயே அதிலிருந்து மாறுபட வேண்டும் இந்த புத்திஜீவிகள் செயற்கையான தங்கள் சிந்தனையோட்டத்தை தயாரிக்கின்றனர். "இத்தன நாளா அடிவாங்கிட்டு இருந்தவன், இன்னிக்கு திருப்பி அடிக்கறான். இதுல என்ன தப்பு" என்கிறார் புத்திஜீவி நண்பரொருவர். அவர் ஜாதிக்கலாச்சாரத்தை வெறுப்பவராக இருந்தாலும் பிறப்பால் ஆதிக்கச் சாதியை சேர்ந்தவரான அவருக்கு அந்த ஒரு காரணத்திற்காகவே அவர் மீது வன்முறை தாக்குதல் நேர்ந்தால் அப்போதும் இதே மாதிரியான புத்திஜீவித்தனத்தோடு பார்ப்பாரா என்ற கேள்விக்கு அவரிடம் பதிலில்லை. ஆக.. அரசியல்வாதிகளுக்கும் இம்மாதிரியான புத்திஜீவிகளுக்கும் வித்தியாசமில்லை. மற்றவர்களுக்கு என்றால் ஒருமாதிரியும் தனக்கு என்றால் வேறுமாதிரியும் யோசிப்பார்கள்.

()

நாடகத்தனமாக இருந்தாலும் இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களிடம் என் முன் பிரம்மாண்டமாய் நின்றிருக்கும் இந்தக் கேள்வியை கேட்க விரும்புகிறேன். படிக்காதவர்களை விட்டுத்தள்ளுவோம். (சில சமயம் படிக்காதவர்களே புத்திஜீவிகளை விட முறையாய் யோசிக்கிறார்கள்.) நன்றாகப் படித்த, பல்வேறு சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்ட சான்றோர்களே ஏன் ஜாதி, இனம், தேசம் போன்ற கற்பிதங்களை கடந்து வரமுடியாமல் குறுகிய மனப்பான்மையோடு இருக்கிறார்கள்? எது அவர்களை தடுக்கிறது? அவர்கள் கற்ற கல்வி இவ்வாறான கற்பிதங்களின் அபத்தம் குறித்து சிந்திக்க தூண்டவில்லையா? அல்லது சம்பாதிக்கும் நோக்கங்களுக்காக மட்டும்தான் நாம் கல்வி கற்கிறோரோமா? நம் கல்விமுறையின் அடிப்படையே தவறா?.

ஒரு வங்கியில் உயர்அதிகாரியாக பணியாற்றும் ஒருவரை அலுவலக பணி நிமித்தமாக சந்திக்கச் சென்றிருந்தேன். அவர் கேட்கும் சிடுசிடுப்பான கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதிலளித்தேன். என்னுடைய சார்பில் சொல்ல வேண்டிய விளக்கங்களை தெளிவாக எடுத்துரைத்தேன். என்னிடம் உள்ள எல்லா பொறுமையையும் செலவழித்து விட்ட கணத்தில் அவர் சொல்கிறார். "உங்க பாஸ் பிராமின்றதாலதான் இந்த ஆர்டரை உங்களுக்கு தர்றேன். நீங்களும் பிராமினா?"

அவர் முகத்தில் காறித்துப்பும் இச்சையைக் கட்டுப்படுத்திக் கொண்டு புன்னகையுடன் பதில் சொன்னேன். "இல்ல". நான் சென்றது அலுவலகம் சார்பாக என்பதால் என்னுடைய வழமையான கோபத்தை மிகுந்த சிரமத்தோடு கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. ஆர்டர் பேப்பரை அவர் முகத்திலேயே விட்டெறிந்து வந்து விடலாமா என்று கூட பிற்பாடு தோன்றியது. ஆனால் சாவகாசமாக யோசித்துப் பா¡க்கும் போது 'அவர் சிறுவயதிலேயே தன்னுடைய ஜாதி குறித்த பெருமையோடும் பிற ஜாதிகள் குறித்த வெறுப்போடும் அருவருப்போடும் வளர்க்கப்பட்டிருக்கலாம்.' இன்னும் கூட அந்த குறுகிய மனப்பான்மையை விட்டு வெளியே வராத அல்லது வரவிரும்பாதவரைக் கண்டு பரிதாபமே ஏற்பட்டது. சில கொள்கைகளை நாம் தீர்மானமாக பின்பற்ற விரும்பினாலும் நடைமுறையில் அது அவ்வளவு சாத்தியமில்லை என்பதை உணாத்தியது இந்தச் சம்பவம்.

()

கல்லூரி மாணவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திக் கொண்ட வன்முறையின் மீதான சம்பவம் குறித்து சில புரிதல்களை ஏற்படுத்துவதற்காக இன்று நடக்கவிருக்கும் வலைப்பதிவர் சந்திப்பை பயன்படுத்தப் போவதாக லக்கிலுக் பதிவு மூலம் தெரிகிறது. இது ஒரு வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இணையத்தில் எழுத வந்த புதிதில் இம்மாதிரியான சந்திப்புகளை நானும் ஆவலோடும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் பெரும்பான்மையான சந்திப்புகள் போண்டாவில் ஆரம்பித்து போலி டோண்டு போன்ற அபத்தமான சமாச்சாரங்களைப் பற்றி உரையாடுவதே தங்களின் பிரதான அஜெண்டாவாக வைத்துக் கொண்டு முடிந்து போவதினால் ஏற்பட்ட சலிப்பில் வலைப்பதிவர் சந்திப்பு என்றாலே அலர்ஜி தரும் சமாச்சாரமாகிவிட்டது. சில முக்கியமான ஒத்த அலைவரிசை கொண்ட நண்பர்களை பெற்றதை மாத்திரம் இணையத்தினால் ஏற்பட்ட நன்மையாக சொல்லலாம்.

ஆனால் இதிலிருந்து விடுபட்டு முக்கியமானதொரு topical பிரச்சினை குறித்து இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்படும் என்ற தொனி லக்கியின் பதிவில் காணப்படுவதால் அதில் கலந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

suresh kannan