Showing posts with label புத்தக கண்காட்சி. Show all posts
Showing posts with label புத்தக கண்காட்சி. Show all posts

Tuesday, January 23, 2018

2018 புத்தக கண்காட்சி - நூல்களின் பட்டியல் (2)

22.01.2018 அன்று, அதாவது புத்தகக் காட்சியின் கடைசி நாளில் மூன்றாக முறையாக  சென்ற போது வாங்கிய நூல்களின் பட்டியல் இது. கண்டதையும் படித்தால் பண்டிதனாகி விடலாம் என்கிற கனவெல்லாம் இல்லாமல், பறக்காவெட்டி போல் கண்டதிற்கும் அலைமோதாமல் வழக்கத்திற்கு மாறாக  என்ன வாங்க வேண்டும் என்பதை கறாராக தீர்மானித்துக் கொண்டு சென்றேன். அப்படியும் தற்செயல் தேர்வில் சிலதை வாங்குவதை தவிர்க்கவே முடியவில்லை. 

ஆனால் வாங்க விரும்பும் நூல்களின் பட்டியல் இன்னமும் முடியவில்லை. தமிழ்ப்பிரபாவின் பேட்டை, தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’, ஜீ.முருகன் சிறுகதைகள், ஞானக்கூத்தனின் ‘கவனம்’ இதழ் தொகுப்பு (விருட்சம்), ‘என் தந்தை பாலைய்யா’ உள்ளிட்ட பல நூல்களை பட்ஜெட் காரணமாக வாங்க முடியவில்லை. பிரான்சிஸ் கிருபாவின் 'கன்னி' அந்தரங்கமாக என்னை மிகவும் பாதித்த புதினம். நூலகத்தில் வாசித்தது. என் தனிப்பட்ட சேகரத்தில் இது நிச்சயம் இருக்க வேண்டும் என்று நினைத்து விட்டேன். ஆனால் அந்தச் சமயத்தில் நினைவிற்கு வரவில்லை. ஜமாலனின் 'கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்' (கடந்த முறையே தவறவிட்டது), மற்றும் மௌனியின் இலக்கியாண்மை ஆகிய நூல்களையும் வாங்க இயலவில்லை.

ஆனால் இவற்றையெல்லாம் வருங்காலத்தில் எப்படியாவது பிடித்து விடுவேன்.

புத்தகங்களின் மீதான தீராத தாகம் ஒருபுறம் இருந்தாலும், ‘ஏற்கெனவே வாங்கி அடுக்கியிருப்பதையும், இப்போது வாங்கியிருப்பதையும் முதலில் வாசித்து முடி’ என்கிற குரல் இன்னொருபுறம் கேட்டுக் கொண்டிருக்கிறது.  அந்த குரலைக் கவனமாக கேட்டு வாசித்த புத்தகங்களைப் பற்றி இந்த வலைப்பதிவில் தொடர்ந்து எழுத உத்தேசித்திருக்கிறேன். அதுதான் இந்த நூல் வாங்க உதவியவர்களுக்கான பதில் நன்றியாக இருக்க முடியும் என்று நம்புகிறேன்.

புத்தக காட்சியில் சந்தித்த நண்பர்கள், எழுத்தாளர்கள், அனுபவங்கள் போன்றவற்றை ஆகியவற்றைப் பற்றி குறிப்புகளாக எழுதும் உத்தேசம் உள்ளது. எழுதுவேன். தம்பட்டத்திற்காக அல்லாமல் எவருக்காவது உதவியாகவோ அல்லது தூண்டுதலாகவோ இருக்கும் என்கிற நம்பிக்கையில்தான் இது போன்ற புத்தக பட்டியலை பொதுவில் இடுவது.

இனி (இரண்டாம்) பட்டியல்.

1)    பிராமண போஜனமும் சட்டிச் சோறும் – ஆ.சிவசுப்பிரமணியன் - NCBH
2)    உப்பிட்டவரை - ஆ.சிவசுப்பிரமணியன் – காலச்சுவடு
3)    தமிழ்க் கிறிஸ்துவம் - ஆ.சிவசுப்பிரமணியன் – காலச்சுவடு
4)    மந்திரமும் சடங்குகளும் - ஆ.சிவசுப்பிரமணியன் – காலச்சுவடு
5)   ஆஷ்கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் - ஆ.சிவசுப்பிரமணியன் –      காலச்சுவடு
6)    ஆதிரை – சயந்தன் - தமிழினி
7)    சுந்தர ராமசாமி நேர்காணல்கள் – காலச்சுவடு
8)    நா.பார்த்தசாரதி – நினைவோடை – காலச்சுவடு
9)    காகங்களின் கதை – அ.கா.பெருமாள் – காலச்சுவடு
10)  பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை – பெருமாள்முருகன் –                 காலச்சுவடு
11)    புனைவு என்னும் புதிர் – விமலாதித்த மாமல்லன் – காலச்சுவடு
12)    சங்கர் முதல் ஷங்கர் வரை – தமிழ்மகன் – உயிர்மை
13)    இடைவெளி – சம்பத் – பரிசல்
14)    சுவடுகள் – வெங்கடேஷ் சக்ரவர்த்தி - பிரக்ஞை
suresh kannan

Tuesday, January 21, 2014

புத்தக கண்காட்சி 2014

ஒருசேர நிறைய புத்தகங்களைப் பார்த்தாலே எப்போதும் நான் திகைத்துப் போய் விடுவேன். தலையெல்லாம் கிறுகிறுத்து வலிக்க ஆரம்பித்து விடும். ஒவ்வொரு புத்தக கண்காட்சியிலும் எனக்கு எப்போதுமே நிகழ்வதுதான் இது. கண்காட்சியில் என்று மாத்திரமல்ல, கன்னிமரா நூல்நிலையத்திற்கு செல்லும் ஒவ்வொரு முறையும் அடுக்குகளில் அத்தனை புத்தகங்களைப் பார்க்கும் போது தலைசுற்றும். அங்கிருந்து ஓடிவிடலாமா என்று தோன்றும். புத்தகங்களின் காதலன் என்று ரகசிய கர்வம் கொண்டிருக்கும் நான் ஆழ்மனதில் புத்தகங்களை தீவிரமாக வெறுக்கிறேனோ என்று கூட தோன்றுகிறது. இம்முறையும் அப்படியே. அத்தனை மக்கள் கூட்டத்தையும் புத்தகங்களின் மலையையும் பார்க்கும் போது திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போன குழந்தை மாதிரி திகைப்பாக இருந்தது. புத்தகங்களை ஒருசேர பார்க்க பிடிக்காதது போல் நெரிசலையும் அறவே பிடிக்காது. எனவேதான் கூட்டமில்லாத இறுதி நாளை தேர்ந்தெடுத்தேன்.

உண்மையில் தனக்கு மிகவும் தேவையான, அத்தியாவசியமான புத்தகங்களை தேர்ந்தெடுப்பது ஒரு கலை. சிலர் எவ்வாறு மிகச் சரியாக தனக்கு வேண்டுமென்கிற புத்தகத்தை மாத்திரம் எடுத்து விட்டு கறாராக அங்கிருந்து நகர்ந்து விடுகிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும்.

அங்கிருக்கும் எல்லாப் புத்தகங்களையும் இல்லாவிட்டாலும் கூட, நான் வாங்க விரும்புகிற அத்தனை புத்தகங்களையும் அங்கிருந்து எடுத்து வர முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று தோன்றிற்று. புத்தகங்களை தேர்ந்தெடுப்பது பற்றி சொன்னேன் அல்லவா? நீங்கள் மிக அதிகமாக நேசிக்கிற புத்தகங்களை உங்களால் வாங்காமல் வரவே முடியாது. ஒவ்வொரு புத்தகமும் தனக்கான உபாசகனை எப்படியாவது அழைத்துக் கொள்ளும் என்று தோன்றுகிறது.

இம்முறை எந்தப்புத்தகமும் வாங்கக் கூடாது என்று வருடா வருடம் தோன்றுகிற பிரசவ வைராக்கியம் தோன்றினாலும் அந்த முடிவை சற்று தளர்த்திக் கொண்டு சினிமா தொடர்பாக தமி்ழில் வந்திருக்கும் முக்கியமான நூற்களை மாத்திரம் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டேன். சிவராமன் குறுஞ்செய்தியில் சில நூல்களை பரிந்துரைத்திருந்தார்.

சினிமா தொடர்பாக தமிழில் வெளிவந்திருக்கும் அனைத்து நூல்களையும் பற்றிய ஒரு பட்டியலை தயாரிக்க வேண்டும் என்கிற எண்ணமும் உண்டு. சினிமா பற்றி தமிழில் எழுதப்படும் புத்தகங்களில்  நிறைய போலி நூல்களும் உண்டு. அசல்களும் உண்டு.  ஒவ்வொரு சினிமாவையும் ஆத்மார்த்தமாக கண்டு அவற்றில் மூழ்கி கவித்துவமான ரசனையுடன் எழுதப்படும் நல்ல புத்தகங்கள் உண்டு. இணையத்திலும் மற்ற நூல்களிலும் கிடைக்கும் தகவல்களையும் பத்திகளையும் கொண்டு எப்படியோ உருவாக்கப்படும் புத்தகங்களும் உண்டு. சற்று மெனக்கிட்டால் இவற்றிலுள்ள வேறுபாட்டை கண்டுபிடித்து விடலாம்.

அப்படியாக இன்று புத்தக கண்காட்சியில் வாங்கின நூற்களின் பட்டியல்.
  • புதிய அலை இயக்குநர்கள் - வெ.ஸ்ரீராம் - க்ரியா
  • திரைப்பட மேதைகள் - எஸ்.ஆனந்த் - தமிழினி
  • திரையில் வரையப்பட்ட தமிழ்நிலம் - பிரேம் - காட்சிப்பிழை
  • சினிமாவும் நானும் - இயக்குநர் மகேந்திரன் - கற்பகம் புத்தகாலயம்
  • மாற்றுப் படங்களும் மாற்று சிந்தனைகளும் - அம்ஷன் குமார் - சொல்ஏர் பதிப்பகம்
  • ஆசை முகங்கள் - (தொகுப்பு) சி,மோகன் - கயல் கவின் பதிப்பகம்
  • சினிமா: சட்டகமும் சாளரமும் - சொர்ணவேல் - நிழல்
  • சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே - தியோடர் பாஸ்கரன் - காலச்சுவடு
  • மேதைகளின் குரல்கள் - ஜா.தீபா - மலைகள்
  • இன்னொருவனின் கனவு - குமரகுருபரன் - அந்திமழை
  • எம்தமிழர் செய்த படம் - தியோடர் பாஸ்கரன் - உயிர்மை
  • பாம்பின் கண் - தியோடர் பாஸ்கரன் - கிழக்கு
  • நிகழ் திரை - அய்யனார் விஸ்வநாத் - வம்சி
  • முகங்களின் திரைப்படம் - செழியன் - உயிர் எழுத்து

கிழக்கு, ஹரன் பிரசன்னாவின் பரிந்துரையின் பேரில்:
  • ஆர்.எஸ்.எஸ் வரலாறு - சஞ்சீவ் கேல்கர் - கிழக்கு
  • லஜ்ஜா - தஸ்லிமா நஸ்ரின் - கிழக்கு

***

சந்தித்து உரையாடிய பிரமுகர்கள் (நினைவிலிருந்து): மனுஷ்யபுத்திரன், கவிஞர் ராஜசுந்தரராஜன், தமிழினி வசந்தகுமார், இளங்கோ கல்லாணை, சுபகுணராஜன், தளவாய் சுந்தரம், சுதீர் செந்தில், வாசுதேவன் (அகநாழிகை), இகாரஸ் பிரகாஷ், என்.சொக்கன், ஹரன் பிரசன்னா, வேடியப்பன்.

காலச்சுவடு அரங்கில் சமகால இலக்கிய வழிகாட்டி கிருஷ்ணபிரபு வருகிறவர்களையெல்லாம், 'பெருமாள்முருகனை படிக்காட்டி நாசமாய்ப் போயிடுவிங்க, பாத்துக்கங்க' என்று மிரட்டிக் கொண்டிருந்தார்.

விழியன் செல்வன், 'அகில உலக குழந்தை எழுத்தாளர்' ஆவதென்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார். பிடித்த பாடல் என்னவென்று கேட்டால் கூட மழலையில் ' நிலா நிலா ஓடிவா' என்று பாட ஆரம்பித்து விடுவாரோ என்று பயமாக இருந்தது. அமிதாப்பச்சன் அளவிற்கு உயர்ந்து வளர்ந்து நிற்கிற ஒருவரை குழந்தை எழுத்தாளர் என்று நம்ப சற்று கஷ்டமாகத்தான் இருக்கிறது.

ஆறு வயது முதல் அறுபது வயதுவரை வாசகர்கள் கூட்டத்தை வைத்துள்ள அதிஷாவையும் சந்திக்கும் பாக்கியம் பெற்றேன். வயதான, நடுத்தர, குழந்தை வயதுள்ள என்று மூன்று நபர்கள் கொண்ட ஒரு குடும்பத்திடம் ஆவலாக உரையாடிக் கொண்டிருந்தார். அந்த ஆறுவயதுக் குழந்தை, குஜிலிகும்பானின் கவிதை ஏதாவதை எழுத்துக் கூட்டியாவது வாசித்திருக்குமோ என்னமோ, அதிஷாவையே திகிலாக பார்த்துக் கொண்டிருந்தது.

***

அரங்கிற்கு வெளியே திருவிழாக்கூட்டம் போலத்தான் இருக்கிறது. பெரிய ராட்டினமும் அப்பளமும்தான் இல்லை. மற்றபடி மக்கள் உற்சாகமாக தின்பண்டங்களை வாங்கியும் சாப்பிட்டும் கொண்டிருக்கிறார்கள். 25 ஊசி பத்து ரூபாயில் இருந்து சுண்டல் வரை என்னெ்னமோ விற்கிறது. மாயவரம் காபி நன்றாக இருக்கிறதென்று மக்கள் சொன்னார்களே என்று, 'சாப்பிட வாங்க' போனேன். பதினைந்து ரூபாய் வாங்கிக் கொண்டு பெரிய அளவு ஸ்பூனில் தரப்பட்ட அந்த திரவம்தான் காஃபி என்றால் மாயவரம் பக்கம் போகவே நான் தயாராக இல்லை.

கனத்த பையுடனும்  காலியான பர்ஸ் உடனும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போதுதான் மனதிலிருந்து சில நூல்களை வாங்காமல் விட்டு விட்டேனே என்று தோன்றியது. தோன்றினாலும் வாங்க முடிந்திருக்காது. சுரண்டுவதற்கு பர்ஸிலும் ஒன்றுமில்லை. க்ரெடிட் கார்ட் பழக்கமுமில்லை. வாங்க முடியாமல் என்னை நானே நொந்து கொண்ட நூற்களில் ஒன்று - எனக்குப் பிடித்த எழுத்தாளரான சுகுமாரனின் 'வெலிங்டன் நாவல்'.

அவ்வளவுதான்.
suresh kannan

Monday, January 17, 2011

2011 புத்தகக் காட்சி அனுபவம் (2)

முந்தைய பதிவின் தொடர்ச்சி

தேகம் நாவல் குறித்து நான் எழுப்பிய கேள்விக்கு மனுஷ்யபுத்திரன் பதிலளிக்கத் துவங்கினார். (நினைவில் தங்கியிருப்பதைக் கொண்டு கோர்வையாக எழுத முயன்றிருக்கிறேன். இதில் மனுஷ்யபுத்திரன் சொல்லாத அல்லது அவர் சொன்னதிலிருந்து விலகியிருக்கும்  கருத்துப் பிழை ஏதேனும் இருக்குமானால் அது என் பிழையாகத்தான் இருக்கும்).

"ஓர் எழுத்தாளன் சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக எழுதி ஒரு தகுதியான இடத்திற்கு வந்து சேர்கிறான். அந்த அனுபவம், அடிப்படையான அறம், தார்மீக உணர்வு, சுயபொறுப்பு  போன்றவற்றை அவனுடைய எழுத்தில் படியச் செய்கிறது. ஒரு பதிப்பாளனாக அந்த எழுத்தாளனின் படைப்பில் தலையிட நான் விரும்புவதில்லை. உதாரணம் சொல்கிறேன். நான் முன்னர் ஆசிரியராக பணிபுரிந்து கொண்டிருந்த பத்திரிகையில் நாஞ்சில் நாடனின் சிறுகதை ஒன்றை பத்திரிகை உரிமையாளர்கள் பிரசுரிக்க மறுத்தார்கள். உண்மையில் நான் அதை வாசிக்காமலேயே பிரசுரத்திற்கு அனுப்பி விட்டேன். 'ஒரு எடிட்டராக இருந்து கொண்டு எப்படி ஒரு படைப்பை வாசிக்காமல் அனுமதிக்கலாம்?' என்ற கேள்வி என் முன் வைக்கப்பட்டது. இலக்கியப்பரப்பில் நாஞ்சில் நாடனின் இடம் என்ன என்று எனக்குத் தெரியும். அவரும் அதை உணர்ந்து அந்தப் பொறுப்போடுதான் எழுதியிருப்பார். படைப்பாளிகளின் மீது இந்த நம்பிக்கையை வைப்பதும் அவர்களின் எழுத்துச் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதும்தான் பதிப்பாளனாக நான் செய்ய விரும்புவது. இதே அளவுகோல்தான் சாருவின் படைப்பிற்கும்.

'தேகம்' புதினம் பெரும்பாலும் அது எழுதப்பட்ட விதத்திலிருந்து அதன் எதிர்திசையிலிருந்தே பெரும்பாலோனாரால் புரிந்து கொள்ளப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். இன்றைய சூழ்நிலையில் வதை என்பது ஏதோ காவல்நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவனின் உடல் மீது நிகழ்த்தப்படுவது மாத்திரமல்ல. அது எல்லாத்தரப்பு மக்களிடமும் எல்லாச் சமயங்களிலும் வெளிப்படுகிறது. இந்தச் சூழல் பீதியூட்டுகிறது. இதில் வரும் தர்மா கையாளும் வதையின் பின்னணி பலவற்றின் தொடர்ச்சியாக பல தளங்களில் இயங்குகிறது"

நான் குறுக்கிட்டு "ஆனால் நாவலின் சில பக்கங்களில் மாத்திரமே நீங்கள் சொல்லும் வதையின் கட்டங்கள் வருகின்றன. ஆனால் ஒட்டுமொத்த நாவல் இந்த மையத்திலிருந்து விலகி திசைமாறியிருக்கின்றனவே' என்கிறேன்.

மனுஷ்யபுத்திரன் மீண்டும் நாவல் இயங்கும் விதத்தைப் பற்றியும் சமூகத்தில் வதையின் பங்கு பற்றியும் அற்புதமாக விளக்கினார்.

உரையாடலின் இறுதியில் எனக்குத் தோன்றியது இதுதான். "பேசாமல் இந்த நாவலை இவரே எழுதியிருக்கலாம்." நாவலின் பின்னட்டையில் படைப்பின் மையம் (?!) குறித்து மனுஷ்யபுத்திரன் எழுதியிருக்கும் ரத்தினச் சுருக்க வாசகங்களும் இதையே நிருபிக்கிறது.

எங்களின் உரையாடலின் இடையில் நடுத்தர வயதுள்ள உயிர்மை வாசகி ஒருவர் குறுக்கிட்டு ம.பு.விடம் உரையாடினார் "அட்டை டூ அட்டை வாசிச்சிடுவேங்க. சாரு எழுதற திரை விமர்னமெல்லாம் ஏங்க இப்படி இருக்கு? ஒண்ணு, எந்திரனை அப்படியே தாழ்த்தி எழுதறாரு. நந்தலாலாவ அப்படி புகழறாரு".

நான் அந்த பெண்மணியிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அதிகப்பிரசங்கித்தனமாக அதில் நுழைந்தேன். 'சாரு எப்படி எழுதணும்றீங்க" "நடுநிலைமையா எழுதலாமே?" "நடுநிலைமைனு ஒரு விஷயம் கெடையாதுங்க மேடம். எல்லாத் தரப்பு வாசகனுக்கும் செளகரியமா எழுதம்ணு நெனச்சா  வெகுஜன பத்திரிகைள்லதான் எழுதப் போகணும்."

மனுஷ்யபுத்திரன் அந்த பெண்மணிக்கு சமாதானமாக ஏதோ சொல்கிறார். "பாத்துக்கங்க. ரெண்டாவது சில ஓவியம்லாம் வல்கரா இருக்குதுங்க" என்றார் அந்த பெண்மணி. அவர் சென்ற பிறகு மனுஷ்யபுத்திரனிடம் உயிர்மையில் வெளிவந்து ஆரம்பக்கட்ட சிறுகதைகள் ( உதா: ஜே.பி.சாணக்கியா) பாலியல் சார்ந்தே வெளிவந்தனவே?" என்று கேட்கிறேன்.

"இப்பவும் உயிர்மைக்கு எழுதணும்னு விரும்பறவங்க எந்த மாதிரி இருக்கணும்னு கேட்கறாங்க. நான் அப்படியெல்லாம் எந்த வரையறையெல்லாம் கட்டுப்பாடும் வைததுக் கொள்ளவில்லை. எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் அது இலக்கியம் என்னும் தகுதியோடு இருந்தால். போதும்."

சுமார் பதினைந்து நிமிடங்கள் நீடித்த எங்களின் இந்த உரையாடலின் இடையில் சில நண்பர்கள் ம.பு.விற்கு முகமன் கூறிச் செல்கின்றனர்; சிலர் நூல்களைப் பற்றி விசாரிக்கின்றனர். அத்தனைக்கும் பதில் சொல்லி விட்டு பொறுமையாக என்னிடம் உரையாடலைத் தொடர்ந்த மனுஷ்யபுத்திரனுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி சொன்னேன். தனது வாசகர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த சாருநிவேதிதாவும் எங்களின் அருகே இரண்டொரு முறை வந்து சென்றார். "நான்தான் சாருநிவேதிதா" என்று என்னிடம் அறிமுகம் செய்து கொள்வார் என்று எதிர்பார்த்தேன். வரலாற்றில் இடம்பிடிக்கும் விருப்பம் அவருக்கு இல்லை போலும், அவ்வாறு விசாரிக்கவில்லை.  :-)

திரும்பும் போது அந்த உயிர்மை வாசகி திரை விமர்சனம் பற்றிச் சொன்ன புகாரை நினைவு கூர்ந்தேன். சாருவின் சில மனச்சாய்வுகளின் எதிரொலிகளைத் தவிர சாரு எழுதும் வடிவத்தில் எனக்கு எந்தப் புகாருமில்லை. உண்மையில் அவர் அவ்வாறு எழுதுவது மிகவும் பிடித்திருந்தது. நான் எழுதும் திரைப்பார்வைகளில் கூட அதன் தடயங்களை நீங்கள் காண முடியும்.

ஒரு சினிமா பற்றிய விமர்சனக் கட்டுரையில் அதை எழுதினவனின் தனித்தன்மை துல்லியமாக வெளிப்பட வேண்டும் என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். உலகத்தில் வேறு எவராலும் அந்தக் கட்டுரை எழுத சாத்தியப்பட்டிருக்கக்கூடாது. அந்தளவிற்கு எழுதினவனின் ஆன்மாவும் பிரத்யேக நுண்ணுணர்வகளும்  அந்தக் கட்டுரையோடு கலந்திருக்க வேண்டும். எல்லா வாசகர்களின் மனநிலையையும் பிரதிபலிப்பது போல் கூலிக்கு மாரடிக்கும் விமர்சனங்களை வணிகப் பத்திரிகைகளில்தான் எதிர்பார்க்க வேண்டும்.

அதே போல் மனுஷ்யபுத்திரன் சொன்னதையும் நினைவு கூர்ந்தேன். எழுத்தாளனின் சுதந்திரத்தில் பதிப்பாளன் தலையிடாமல் இருப்பது ஒருவகையில் சரிதான். (ஆனால் தேகம் நாவலிலியே பதிப்பாளன் எழுத்தாளனுக்கு ஆலோசனை கூறுவது போல் ஒரு இடம் வருகிறது). அதே சமயத்தில் பதிப்பாளனின் கடமையையும் சரிவர நிறைவேற்ற வேண்டும். எப்படி ஓர் எழுத்தாளன் தொடர்ச்சியான தரமான படைப்புகளின் மூலம் வாசகர்களிடம் ஒரு தகுதியான இடத்தை அடைகிறானோ, அவ்வாறே பதிப்பகங்களும் தரமான படைப்புகளை மாத்திரம் வெளியிடுவதன் மூலம் ஓர் இடத்தை அடைகின்றன. அரைகுறையான, தரமற்ற படைப்புகளை வெளியிடுவதன் மூலம் ஒரு பதிப்பகமும் அதன் நம்பகத்தன்மையை இழக்கிறது. நான் சமயங்களில் அறிமுகமமில்லாத எழுத்தாளர் என்றாலும் வெளியிட்ட பதிப்பகத்தின் மீது நம்பிக்கை கொண்டு வாங்குகிறேன். இன்னொன்று. மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலான படைப்புகளின் இறுதி வடிவத்தை அதன் எடிட்டரே தீர்மானிக்கிறார். எழுத்தாளர்களுக்கு இணையான புகழுடன் உள்ள எடிட்டர்கள் உள்ளனர். இதன் மூலம் அந்தப் படைப்பு இன்னும் மெருகேருகிறது. ஒரு வார்த்தையை நீக்கினாலும் சிணுங்கும் இங்குள்ள மனோபாவம் அங்கில்லை. நல்ல எடிட்டர்களை எழுத்தாளர்களே தேடி தம் படைப்புகளை தருகின்றனர். தேவையற்ற பகுதிகளை நீக்குவதால் படைப்பு இன்னும் மேன்மையடைகிறது என்பதை எழுததாளர்கள் புரிந்து வைத்துள்ளனர்.

(வரும்) 
suresh kannan

Thursday, January 13, 2011

2011 புத்தகக் காட்சி அனுபவம் (1)


எனது இந்த வலைப்பதிவு குறித்து நானே பெருமையாயும் ஆச்சரியமாயும் நினைக்குமளவிற்கு புத்தகக்காட்சியில் சில சம்பவங்கள் நடந்தேறின.(?!) 'நீங்கள் புத்தகக்காட்சி அனுபவம் குறித்து ஏன் இன்னும் எழுதவில்லை' என்றும்,  என் பெயரையும் வலைப்பதிவின் பெயரையும் சொன்ன மாத்திரமே "ஓ... நீங்கள்தானா அது? தொடர்ந்து வாசிக்கிறேன்" என்றும் அங்கு சுமார் 2000000 அல்லது 3000000 நபர்கள் விசாரி்த்தனர். (கபில் சிபிலின் ஸ்பெக்ட்ரம் தர்க்கத்தின் படி பூஜ்ஜியத்திற்கு மதிப்பில்லை என்பதால் தாராளமாக போட்டிருக்கிறேன். ஏறத்தாழ கூட்டி கழித்துக் கொண்டு வாசிக்கவும்).

ஒவ்வொரு வருடமும் ஏற்படுவது போல் இம்முறையும் புத்தகக்காட்சிக்கு செல்வதற்கு சில மனத்தடைகள் இருந்தன. நான் எப்போதுமே மந்தையிலிருந்து விலகி ஓட விரும்பும் ஆடு. இப்போது புத்தகக்காட்சிக்கு செல்வதென்பது, கடுமையான விதிகள் பல நீர்த்துப் போனதொரு சமகால சபரிமலை பயணம் போல் ஒரு பேஷனாகி விட்டதோ எனத் தோன்றுகிறது. ஆன்மீகத்திற்கு ஆன்மீகமும் ஆயிற்று, சுற்றுலாவிற்கு சுற்றுலாவும் ஆயிற்று, தான் ஒரு பக்திமான என்று சமூகத்திற்கு நிருபித்தது போலவும் ஆயிற்று என்பது போல் தன்னை வாசிப்பாளனாகவும் காட்டிக் கொண்டு சமையல், ஜோதிடம், போலி ஆன்மீக புத்தகங்களை வாங்கிக் கொண்டு கேண்டீனில் புத்தக பட்ஜெட்டுக்கு அதிகமான செலவில் ஒரு வெட்டு வெட்டி விட்டுத் திரும்பினால் முடிந்தது ஒரு சமூகக் கடமை. சமையலும் ஜோதிடமும் மாத்திரம் புத்தகங்களில்லையா என்ற கேள்வி வாசிப்பவருக்கு எழக்கூடும்.  தவறில்லை. ஆனால் நம்முடைய லெளதீகத் லெளகீகத் தேவைகளை பூர்த்தி செய்யும் விஷயங்கள் தொடர்பான எல்லையோடு நின்றுவிடும் அந்த மேலோட்டமான தேடல்தான் சலிப்பூட்டுகிறது. அதையும் தாண்டி பரந்து கிடக்கிற பல விஷயங்களை தாண்டிச் செல்லும் அந்த அலட்சியமும். இந்தக் கூட்டத்தோடு நாமும் சேர வேண்டுமா என்று உள்ளுக்குள் ஈகோ அதிகபட்ச டிகிரியில் அலறியது.  (இப்படியெல்லாம் இந்தப் பதிவில் எழுதாவிடில் வாசிக்கவரும் பல்ர் ஏமாந்து விடுகிறார்கள் என்பதால் இதை எழுத வேண்டியிருக்கிறது).

கட்டாயம் செல்ல வேண்டும் என்கிற மனஉந்துதல் இல்லாததாலும் ஏற்கெனவே வாங்கி வைத்திருக்கும் புத்தகங்களே 99.9% இன்னும் வாசிக்கப்படாமல் இருப்பதாலும் (வாங்கின புதிதில் புரட்டிப் பார்த்ததால் ஒரு 0.1சதவீதத்தை கழித்து விட்டேன்) முந்தைய வருடங்களைப் போல் எதை வாங்க வேண்டும் என்கிற கறாரான திட்டம் எதுவும் பெரிய அளவில் இல்லாமல் ஒர் அனுபவமாக இருக்கட்டுமே என்று கிளம்பினேன்.

()

புத்தகக்காட்சியின் வெளியே குறைந்த விலையில் இலக்கியச் சேவை செய்து கொண்டிருந்த விளிம்புநிலைக் கடைகளை (நடைபாதைமுனையில் கடைகள்) முதலில் பார்த்தேன். எது எடுத்தாலும் ரூ.20,30,50 என்று காப்பிரைட், ராயல்டி பிரச்சினையில்லாமல் கச்சாமுச்சாவென்று பல புத்தகங்கள். கீழ்கண்ட புத்தகங்களை  வாங்கினேன். 'பத்து பர்சென்ட் டிஸ்கவுண்ட் இருக்குன்னு சொன்னாங்களே' என்று கடைக்காரரை கலாய்க்க முயன்றால் 'தோ...டா' என்றார் அருமையான சென்னை வழக்கில்.

1) STARLIGHT STARBRIGHT - THE EARLY TAMIL CINEMA - RANDOR GUY
2) கநாசு 90 -  தொகுப்பு சா.கந்தசாமி
3) சென்னைச் சிறுகதைகள்


உயிரைக் கூட பொருட்படுத்தாமல் அபாயமாக சாலையைக் கடந்து புத்தகக் காடசிக்கு சென்று கொண்டிருந்த மக்களின் புத்தகார்வத்தை பார்க்க கண்ணீர் மல்கியது. 'எங்கடா தம்பி வந்த?" என்று பிளெக்சில் இருந்து எழுத்தாள பெருந்தகைகள் பெரிய சைஸில் வாசலிலேயே மிரட்டுகிறார்கள். உம்மாச்சியை வேண்டிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு  ஓடிச் சென்று அனுமதிச்சீட்டை வாங்கினேன். (அஞ்சு ரூபா சில்லறையா கொடுங்க' என்று பத்து பேரை நிறுத்தி வைத்திருந்தார்கள்).

இங்கிபிங்கிபாங்கி போட்டு இடது பக்கத்தை தேர்வு செய்து (நான் எப்போதுமே இடது சார்பாக்கும்) சென்றேன் துவக்கத்திலேயே தினத்தந்தி அரங்கம். தினத்தந்தி நாளிதழை வழக்கமாக இடது கையால் புரட்டிப் படிக்கும் நான் பா.ராகவனின் அழுத்தமான பரிந்துரை காரணமாக எந்த யோசிப்புமில்லாமல் 'வரலாற்றுச் சுவடுகள்' நூலை வாங்கினேன். பிரித்துப் பார்க்க முடியாதபடி 'சரோஜாதேவி புக்' பேக்கிங்.

என்னுடைய இரண்டு வயதில் பக்கத்து வீட்டிலிருந்த வெள்ளிக் கரண்டியை எடுத்து விழுங்கி விட்டேனாம். Born with neighbour's silver spoon. இந்த முக்கியமான வரலாற்றுத்தகவல் மாத்திரம் இந்த  நூலில் இல்லாவிட்டால் பாராவிடம்  சண்டை போட்டாவது ரூ.270/- ஐ திரும்ப வாங்க உத்தேசம். பெயர், முகவரி எல்லாம் வாங்கிக் கொண்டு புத்தகத்தை கொடுத்தார்கள். அதிர்ஷ்டமிருந்தால் அடுத்த பதிப்பில் என் வீட்டு முகவரியும் வரக்கூடும் போலிருக்கிறது. ஆனால் இந்தப் புத்தகத்தை வாங்கத் திட்டமிடுபவர்கள் இதை கடைசியாக வைத்துக் கொள்வது உததமம். ஜீன்ஸ் பட காலத்து ஐஸ்வர்யாவை முதுகில் சுமந்துச் செல்வது போல் புத்தகத்தின் எடை இன்பச் சங்கடமாக இருக்கிறது. முன்பெல்லாம் அமெரிக்க நூலகத்தில் இருந்து இப்படிப்பட்ட தடிமனான புத்தகமாக தேடி எல்லோருக்கும் தெரியும்படி பேருந்தில் பெருமையாகச் செல்வேன். கைக்குழந்தை போல் இதைத் தூக்கிக் கொண்டே மற்ற அரங்குப் புத்தகங்களை பார்க்க இம்சை. வில்லன் பொன்னம்பலம் சைஸில் உதவியாள் அழைத்துச் செல்வது இன்னும் உத்தமம்.

ஆனால் வீட்டிற்கு வந்தவுடன் புரட்டிப் பார்த்தது முதலில் இதைத்தான். (மூடி வைத்திருந்தாலே அதீத ஆர்வம் வருவது இயற்கைதானே). அருமையான பைண்டிங்கில் வழவழ மேப்லித்தோ பேப்பரில் 864 பக்கங்களும் வண்ணமயம். இரண்டாம் உலகப் போரில் துவங்கி ரகுமான் இரண்டு ஆஸ்கர் வாங்கினது வரை தேதி வாரியாக. புரட்ட புரட்ட டைம் மெஷினில் பயணம் செய்யும் பரவச அனுபவம். ரூ.270/-க்கு விலை கொள்ளை மலிவு. இதுவே ஆங்கிலப் பதிப்பகங்களாக இருந்தால் ஆயிரத்திற்கு குறையாமல் விலை நிர்ணயித்திருப்பார்கள். இந்த நூலை மிக அழுத்தமாக பரிந்துரை செய்கிறேன். தவறாமல் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

உயிர்மை ஸ்டாலை கண்டவுடன் சந்தாவை புதுப்பித்துக் கொண்டேன். மனுஷ்யபுத்திரன் ஒரு வாசகரிடம் உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்தார். இயல்பிலேயே கூச்ச சுபாவமுடைய நான் (நம்புங்க) சுயஅறிமுகம் செய்து கொண்டு உரையாட விரும்பும் எழுத்தாளர்கள் மிகக் குறைவு. அவர்கள் என்னை ஆத்மார்த்தமாக ஈர்த்திருந்தால் ஒழிய அதைச் செய்ய மாட்டேன். கவிதை எனும் வடிவத்தை காலால் நடக்க ஆரம்பித்த பருவத்திலிருந்தே என்னால் விரும்பமுடியவில்லை என்றாலும் மனுஷயபுத்திரன் உரைநடை எனும் சமாச்சாரத்தை கையாளும் லாவகத்திற்கு ரசிகன் நான். உயிர்மையில் முதலில் நான் வாசிப்பது தலையங்கமே. வாக்கியங்களை அத்தனை கச்சிதமான சொற்களுட்ன் அவர் அமைப்பதை பல முறை வியந்திருக்கிறேன். பொதுவாக கவிஞர்களுக்கு கைவராத சமாச்சாரம் இது. உதாரணமாக வைரமுத்து எழுதும் உரைநடையைப் பார்த்தால் கவிதைக்கும் உரைநடைக்கும் நடந்த திருட்டுக் கல்யாணம் போலிருக்கும். எனவே மனுஷ்யபுத்திரனை அணுகி உரையாடுவதில் எனக்கு பெரிதளவில் தயக்கம் ஏற்படவில்லை. " சார் வணக்கம். நான்... இந்த பெயரில் எழுதுகிறேன்.."  "வாசிச்சிருக்கேன்" என்றார். "உங்க நூல் விழா பற்றியெல்லாம் திட்டி எழுதியிருக்கேங்க" " இருக்கட்டும் அப்படியும் இருந்தால்தானே ஒரு சுவாரசியமிருக்கும்".

முதலில் நான் அவரிடம் வியந்த உரைநடை அம்சம் பற்றியே கேட்டேன். பாரதி, லா.ச.ரா., சு.ரா., சுஜாதா ஆகியோர்களை ஆதர்சமாகக் கொண்டிருப்பதால் இது அமைந்திருக்கலாம் என்றார். "திரும்பத் திரும்ப எடிட் செய்வீர்களா?" என்றேன். " ஒரு விஷயம் உங்களை அதிகஅளவில் பாதித்தால் அதனை எழுதுகிற வடிவம் முழுதும் ஏறத்தாழ மனதிலேயே உருவாகி விடுகிறது. எனவே முதன் முறையிலேயே அதை எழுதி விடுவேன். பெரும்பாலும் மீண்டும் வாசித்து திருத்துவதில்லை" என்கிற ரீதியில் சொன்னார்.

அடுத்த வில்லங்கமான கேள்வியை கேட்டேன். "ஒரு பதிப்பாளராக சாருவின் தேகம் நாவல் உங்களுக்கு திருப்தியை அளித்ததா?. கண்காட்சிக்கு கொண்டு வரவேண்டுமென்றே அவசர கதியில் அரையும் குறையுமாக உருவாக்கப்பட்ட பிரதியென்று நான் கருதுகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

(வரும்)

image courtesy: original uploader

suresh kannan

Wednesday, January 06, 2010

புத்தகக் கண்காட்சி 2010 : அனுபவம் (பகுதி 3)

பகுதி 1 | பகுதி 2

(புத்தக கண்காட்சிக்கு சென்ற ஒரு விஷயத்தை இத்தனை பதிவுகளுக்கு இழுப்பது எனக்கே ஓவராகத்தான் தெரிகிறது. வாசிப்பவர்கள் சற்று பொறுத்தருளவும்).

சிவராமனும் நானும் கண்ராவியான கண்காட்சி கா·பியை அருந்திவிட்டு கிரிவலத்தைத் தொடர்ந்தோம். நான் முதலில் சுற்றி வந்த போது 'வம்சி புக்ஸ்' கடையை கவனிக்கத் தவறிவிட்டேன். 'பெருவெளி சலனங்களில்' என்னுடைய படைப்பு ஒன்றும் (நான் பியர் குடித்து வளர்ந்த கதை) வந்திருப்பதாக நண்பர் மாதவராஜ் தெரிவித்திலிருந்து அதைப் பார்த்துவிட மனம் 'குறுகுறு'வென்றிருந்தது. இணையப் பதிவர்களை அச்சு ஊடக வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் இந்த நல்ல முயற்சியை எடுத்த மாதவராஜிற்கும் வம்சி பதிப்பகத்திற்கும் மனப்பூர்வமானதொரு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

                       

        இடமிருந்து வலமாக (நான், சிவராமன், பிரசன்னா) 
       (புகைப்பட உதவி: ரஜினி  ராம்கி)


சிவராமனும் நானும் ஒருவழியாக வம்சி புக்ஸ் கடையை கண்டுபிடித்துவிட்டோம். நண்பர் அய்யனாரின் புத்தகங்கள் உட்பட அனைத்து சமீபத்திய புத்தகங்களும் மிகுந்த அழகியல் உணர்வுடனும் தரமான வடிவமைப்புடனும் வாங்கத் தூண்டுகிற அச்சுத் தரத்துடனும் அமைந்திருந்தன. புத்தகங்களை சிறப்பாக உருவாக்கும்..க்ரியா, காலச்சுவடு, உயிர்மை.. சமீபத்திய கிழக்கு பதிப்பகங்களின் வரிசையில் வம்சி புக்ஸையும் நிச்சயம் இணைத்துக் கொள்ளலாம்.

என்னுடைய கட்டுரை வெளிவந்த நூலை பரவசத்துடன் புரட்டிப் பார்த்தேன். என்னுடைய முதல் சிறுகதையை அச்சில் கண்ட சந்தோஷ உணர்வை மீண்டும் அடைந்தது போலிருந்தது. மாதவராஜ் இதற்கான ஒப்புதலை என்னிடம் கேட்ட போதே, சம்பந்தப்பட்ட பதிவை இன்னும் மேம்படுத்தி எழுதலாம் என்று தோன்றியது. ஆனால் என்னவோ ஒரு தயக்கத்தில் அதை விட்டுவிட்டேன். அச்சில் பார்த்தவுடன் அதே உணர்வு மீண்டும் எழுந்தது.
(ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் சம்பந்தப்பட்ட பதிவர்களின் இணைய முகவரி இல்லாதது ஒரு சிறிய குறை.)


இது குறித்த இன்னொரு விஷயத்தையும் ஆராய வேண்டும். அச்சு ஊடகத்திற்காக எழுதுகிற போது தரம் மற்றும் குறித்த பிரக்ஞையுடனும் கவனத்துடனும் எழுதுகிற நான், இணையப் பதிவுகளை அம்மாதிரியான உணர்வுகளுடன் ஏன் எழுதுவதில்லை என்று தோன்றியது. அதே போல் படைப்புகள் அச்சில் ஏறும் சந்தர்ப்பம் நிகழும் போது  ஏதோ பிரமோஷன் கிடைத்த சந்தோஷத்துடன் அதை அறிவித்துக் கொள்கிறோம் என்பதும் புரியவில்லை. இந்த மாயையைக் நாம் கடப்பதற்கு இன்னும் சில ஆண்டுகளாகலாம் என்று தோன்றுகிறது. இது குறித்து சில ஆண்டுகளுக்கு முன் நண்பர் 'உருப்படாது' நாராயணன் பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை இங்கு பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

அன்பு நாராயண்,

நம்பினால் நம்புங்கள். நானும் காலையில் - அலுவலகத்திற்கு வரும் வழியில் - இதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஒருவர் 'எழுத்தாளர்' என்கிற தகுதி எப்படி அளக்கப்படுகிறது என்றால் - அதன் உள்ளடக்கம் என்ன கண்ணராவியாக இருந்தாலும் பரவாயில்லை - அவரது எழுத்தில் எத்தனை புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன என்பதைப் பொறுத்துதான் நிர்ணயிக்கப்படுகின்றன. குறைந்த பட்சம் ஒரு புத்தகமாவது எழுதியிருந்தால்தான் உங்களை எழுத்தாளர் என்கிற வட்டத்திற்குள் சேர்த்துக் கொள்கிறார்கள். இந்த அசட்டு concept எனக்குப் புரியவில்லை.

ஒருவன் தன் சிந்தனைகளை எந்த மாதிரியும் தொகுத்து வைக்கலாம். கிராமப் புறங்களில் கல்வி கற்றவனை விட அதிக நுண்ணறிவோடு இருப்பார்கள். மனித உறவுச் சிக்கல்களுக்கு அவர்கள் பாமர மொழியில் சொல்லும் யோசனைகள் ஒரு உளவியல் மருத்துவன் சொல்கின்ற அறிவுரையை விட சிறப்பானதாக இருக்கலாம். ஆனால் நம்மாட்கள் அதை ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தால்தான் அவன் அறிவாளி என்று ஒத்துக் கொள்கிறார்கள். இன்று யாருடையாவது ஒரு புத்தகம் வெளியாகி இருந்தாலே அவன் தலை மேலே ஒரு ஒளிவட்டம் உருவாகிவிடுகிறது. அதன் பளு தாங்காமல் அவன் யாரையும் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. (இதை நான் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டாக சொல்லவில்லை. குறிப்பிட்ட சிலரை மட்டுமே சொல்கிறேன்)

ஆக அச்சில் வந்தால்தான் அல்லது புத்தகமாக வெளிவந்தால்தான் ஒரு விஷயத்திற்கு இலக்கிய அங்கீகாரம் கிடைக்கும் என்கிற மாதிரியான பிரமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த cliche உடைய வேண்டும். வலைப்பதிவில் பதிந்திருந்தாலும் அதன் தர அளவுகோல்களுக்கேற்ப அது இலக்கியம்தான்.

கணியை பயன்படுத்த இல்லாதவர்களுக்கும் நம்முடைய சிந்தனைகள் போய்ச் சேர வேண்டும் என்பது மாதிரியாக சிந்திக்கும் போது நீங்கள் கூறுவது பரிசீலனைக்கு ஏற்றதாக தெரிகிறது.


()

சிவராமனுக்கு புத்தகங்களின் மீது இருக்கிற நேசத்தை முன் பகுதியில் சொன்னேன் அல்லவா? அவரது இன்னொரு சிறப்பான குணாதியத்தையும் பற்றி நிச்சயம் சொல்ல வேண்டும்.

சங்கர் என்கிற பதிவரை (பார்த்ததும் கேட்டதும்) அறிமுகப்படுத்தினார் சிவராமன். அவர் கோணங்கியின் 'மதனிமார்கள் கதை'யை இருநாட்களாக கண்காட்சியில் தேடிக் கொண்டிருக்கிறார் போலிருக்கிறது. சிவராமன் தன்னிடமுள்ள அந்தப் புத்தகத்தை தருவதாகவும் ஆனால் அதைப் பற்றி சங்கர் பதிவிட வேண்டும் என்கிற நிபந்தனையை மாத்திரம் முன் வைத்தார். இதே போல் என்னிடமும் சினிமா குறித்த சில ஆங்கில நூல்களையும் குறுந்தகடுகளையும் தந்து, நிச்சயம் அதைப் பற்றி எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆங்கில நூல் என்பதால் எழுதுவதற்கு குறைந்த பட்ச அவகாசமாக ஒரு வருடத்தை கேட்டுக் கொண்டிருக்கிறேன். பின்னே எழுத்துக்கூட்டி படிப்பதற்கு நேரம் வேண்டாமா?

எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால்... என்னுடைய உயிர் நண்பராக இருந்தாலும் அவருக்கு என் புத்தகத்தை நான் தரமாட்டேன். என்னுடைய சேகரிப்புகளின் மீது அவ்வளவு பொசசிவ்னஸ் எனக்கு. ஆனால் தரமான படைப்புகளைப் பற்றின பதிவுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்க வேண்டும் என்று கருதுகிற சிவராமனின் இலக்கிய நோக்கம் போற்றத்தக்கதாகவே இருக்கிறது. (இவ்வாறெல்லாம் எழுதுவதற்காக சிவராமன் ஒருவேளை சங்கடத்தில் நெளியலாம். ஆனால் பாராட்டத்தக்க விஷயங்களை அந்தக் கணமே செய்தாகி விட வேண்டும் எனக் கருதுகிறேன்).

வழியில் 'காவேரி கணேஷ்' மற்றும் அன்பு (?) ஆகிய பதிவர்களை சிவராமன் அறிமுகப்படுத்தி வைத்தார். கணேஷ் எங்களை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் இணையத்திலும் வெளியிட்டிருக்கிறார். அவருக்கு என் நன்றி.

()

கிளம்புவதற்குள் பா.ரா.வை சந்தித்துவிட வேண்டும் என்று தோன்றியது. 'கிழக்கு' அரங்கில் விசாரித்த போது அவர் எப்போதும் அரங்கங்களுக்கான இடைவெளிகளில் 'தலைமறைவு' வாழ்க்கையை நடத்துகிறார் என்று தெரியவந்தது. தீவிரவாதத்தைப் பற்றி தொடர்ந்து எழுதினதால் வந்த வினையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். பின்பு சிவராமன் வயர்லெஸ்ஸில் சங்கேத பாஷைகளை பரிமாற்றம் செய்தவுடன் அவர் இருக்குமிடம் தெரிந்தது. நல்ல வேளையாக நாங்கள் செல்வதற்குள் 'ஜோதிட மாநாடு' முடிந்து விட்டிருந்தது. பாரா, என்னுடைய தொப்பையையும் அவருடையதையும்  ஒப்பிட்டு  'எது பெரியது' என்கிற போட்டியை அறிவித்தார். பாராவே வென்றதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

நர்சிம், யுவகிருஷ்ணா, ரவிஷங்கர், அதியமான், மருத்துவர் ப்ரூனோ போன்ற சகபதிவர்களுடன் உரையாட முடிந்தது. அஜயன் பாலாவும், பாஸ்கர் சக்தியும் அப்போதுதான் கடந்து சென்றனர். பாஸ்கர் சக்தியிடம் இந்த  மற்றும் இந்தப் பதிவு குறித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். அது ஏனோ நிகழவில்லை.

உருப்படி மற்றும் அல்லாத பல விஷயங்களைப் பற்றி உரையாடின பின்னர் சபை கலைந்தது. (அப்பாடி!).

பொறுங்கள்... இன்னும் முக்கியமானதொரு பகுதி பாக்கி இருக்கிறது.

நானும் சிவராமனும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடின அந்த ஏறத்தாழ அரை மணி நேரம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மனதுக்கு மிக நிறைவை அளித்த அந்தத் தருணங்களைப் பற்றி உங்களிடம் நிச்சயம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது..

(தொடரும்)

image courtesy: www;thaiyal.com

suresh kannan

Tuesday, January 05, 2010

புத்தகக் கண்காட்சி 2010 : அனுபவம் (பகுதி 2)

முந்தைய இடுகையின் தொடர்ச்சி...

'கிழக்கு' அரங்கில் கூட்டம் மொய்த்துக் கொண்டிருந்தது. பதிப்புத் துறையின் சகல சாத்தியங்களையும் பயன்படுத்திக் கொண்டு குறுகிய காலத்திலேயே அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் 'கிழக்கின்' வளர்ச்சி குறித்து மீண்டும் மீண்டும் வியக்க வேண்டியிருக்கிறது. 'எப்படி ஜெயித்தார்கள்' என்கிற தலைப்பில் பதிப்புலக வரலாற்றை அவர்களே பிரசுரிக்கலாம். பல சுமாரான புத்தகங்களை அதனுடைய பிரத்யேக சலிப்பூட்டும் வார்ப்பில் தொடர்ந்து 'கிழக்கு' வெளியிட்டுக் கொண்டிருந்தாலும் ஆங்கில அ-புனைவுகளில் முக்கியமானவற்றை தமிழில் தந்து கொண்டிருக்கும் சமீபத்திய மாற்றம் வரவேற்கத்தக்கதாய் இருக்கிறது.

இப்போதைய டாக் ஆ·ப் டவுன் நிச்சயமாய் 'ராஜீவ் கொலை வழக்கு' நூலாகத்தான் இருக்கும் என யூகிக்கிறேன். எனவே இந்த நூலின் பரபரப்பிற்காகவே அதை வாங்க வேண்டாம் என்று முடிவெடுத்தேன். ஆனால் பிற்பாடு ரகோத்தமனின் தொலைக்காட்சி நேர்காணலையும் ஜெயமோகனின் இந்த மதிப்புரையையும் கண்ட பிறகு வாங்கியிருக்கலாம் என்று தோன்றியது. 

ZEE தொலைக்காட்சியில் இரண்டு பகுதிகளாக ஒளிபரப்பான ரகோத்தமனின் நேர்காணலில்,  தன்னுடைய சிபிஐ பணியில் நிகழ்ந்த பல சுவாரசியமான, திகைப்பான சம்பவங்களை விவரிக்கிறார். லஞ்ச வழக்கு ஒன்றிற்காக ரயில்வே அதிகாரி ஒருவரை விசாரிக்கச் சென்ற போது வழியில் மூடியிருந்த ரயில்வே கேட்டை திறந்துவிட,  கேட் ஊழியர் லஞ்சம் கேட்ட நகைச்சுவையும் நிகழ்ந்திருக்கிறது. (இது போன்ற காட்சி ஒன்றை ஷங்கரின் திரைப்படத்தில் பார்த்திருந்த ஞாபகம்).

ராஜீவ் கொலை வழக்கு விசாரணைக் குழு தலைவராக இருந்த கார்த்திகேயனை நேரடியாகவே குற்றஞ்சாட்டுகிறார் ரகோத்தமன். 'சில தமிழக அரசியல் தலைவர்களை' அவர் விசாரிக்க முடிவு செய்த போது கார்த்திகேயன் தடுத்து விட்டார் என்பது அவரது பிரதான குற்றச்சாட்டுகளில் ஒன்று. (இது குறித்து கார்த்திகேயனுக்கு வேறுவிதமான அரசியல் அழுத்தங்கள் இருந்திருக்கலாம் என்பது என் யூகம்).

ரகோத்தமன் பிரதானமாக அடிக்கோடிட்டு குறிப்பிடும் இன்னொரு விஷயம், உளவுத்துறையின் அலட்சிய மனப்பான்மை மற்றும் திறமைக்குறைவு. இலங்கையிலுள்ள புலிகளுக்கும் தமிழகத்தில் தங்கியிருக்கும் புலிகளுக்கும் இடையே நிகழ்ந்த வயர்லெஸ் பரிமாற்றம் படுகொலைச்சம்பவம் நிகழ்வதற்கு முன்னால் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு அதிகமாயிருக்கிறது. இதை உளவுத்துறையின் கீழ்நிலை அதிகாரி தனது அன்றாட குறிப்பில் எழுதியுள்ளார். இதை உயர்நிலையிலுள்ளவர்கள் உடனே கவனித்து அந்த சங்கேதப் பரிமாற்றங்களை உடனே decrypt செய்திருந்தால் திட்டம் கண்டுபிடிக்கப்பட்டு சம்பவத்தை ஒருவேளை தடுத்திருக்கலாம். அது போல் இன்னொன்று. விசாரணையின் status குறித்து மத்திய அரசிடமிருந்து விசாரிக்கப்படும் போது தமிழக உளவுத்துறையிடமிருந்து பதிலாக தரப்பட்ட அறிக்கையில் 'படுகொலை நிகழ்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறோம்..' என்ற ஒரு குறிப்பு காணப்படுகிறது. ஆனால் பிறகு அந்த வீடியோவைப் பற்றின எந்தவொரு தகவலும் இறுதி சாட்சியங்களில் காணப்படவில்லையென்றும் வீடியோவின் முக்கிய பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டிருக்கலாமென்றும் ரகோத்தமன் சந்தேகிக்கிறார்.

இந்த தொலைக்காட்சி நேர்காணலில் நளினி சம்பந்தப்பட்ட பகுதிகளை சுதாங்கன் கேள்விகளாக முன்வைக்கவில்லை அல்லது எடிட்டிங்கில் குறைக்கப்பட்டிருக்கலாம்.

()

நான் புத்தக கண்காட்சிக்கு செல்லும் பிரதான நோக்கமே 'சிற்றிதழ்'களைத் தேடித்தான். மற்ற நூல்களை கூட பிறகு வாங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரே கூரையின் கீழ் விநோதப் பெயர்களைக் கொண்ட பெரும்பாலான சிற்றிதழ்களை காண்பது கண்காட்சியில்தான் நிகழும். ஆனால் சிற்றிதழ்களின் காலம் முடிந்துவிட்டதோ என்பதைப் போல எந்தவொரு புதிய சிற்றிதழையோ அல்லது புது எழுத்து, சிலேட் போன்ற இயங்கிக் கொண்டிருந்த இதழ்களின் சமீபத்திய இதழ்களோ காணக் கிடைக்கவில்லை. (மந்திரச்சாவி எனும் பெயருடைய புதிய இதழைப் பார்த்தேன். மேலோட்டமாய் ஆராய்ந்ததில் உள்ளடக்கம் திருப்திகரமாக இல்லாததால் வாங்கவில்லை. அதே போல்தான் 'உன்னதம்' 'பன்முகம்' ஆகிய இதழ்களும்). ஆனால் பல இதழ்களை கீற்று இணையத்தளத்தில் வாசிக்க முடிந்துவிட முடிவதில் ஒரு ஆசுவாசம். சினிமா குறித்து வெளிவரும் 'நிழல்' எனும் பத்திரிகையின் எல்லா இதழ்களையும் ஒவ்வொரு கண்காட்சியின் போதும் வாங்கிவிடுவேன். இந்த முறை இரண்டே இதழ்கள்தான் கிடைத்தன.
 


மாற்றுச் சினிமா, குறும்படங்கள், திரைக்கதை, ஒளிப்பதிவுக் கோணங்கள்.. என்று நிறைய சுவாரசியமான கட்டுரைகளை இதில் காண முடியும். குறிப்பாக தமிழ்ச்சினிமாவின் துணை நடிகர்களைப் பற்றின அறியப்படாத பல தகவல்கள் குறித்த கட்டுரைகளையும் வாசிக்க முடியும்.

ஆர்வமுள்ளவர்களுக்காக இதழின் தொடர்பு விவரங்களைத் தருகிறேன். 12/28 (460), இராணி அண்ணாநகர், சென்னை-600 078. கைபேசி: 94444 84868. மின்னஞ்சல்: nizhal_2001@yahoo.co.in

()

பின்பு சிவராமனை 'தமிழனி' அரங்கத்திலிருந்து அழைத்துக் கொண்டு வெளியில் வந்தேன். அப்போது 'காவல் கோட்டம்' வெங்கடேசனை அறிமுகப்படுத்தி வைத்தார் சிவராமன். புத்தகத்தின் தடிமனுக்குச் சம்பந்தமில்லாமல் இளமையான தோற்றத்திலிருந்தார் அவர். சிவராமன் புகை பிடிக்கவும் நான் சிறுநீர் கழிக்கவும் (புத்தகங்களின் மீது அல்ல) கண்காட்சியை விட்டு வெளியே வர வேண்டியிருந்தது.

'காலச்சுவடு' கண்ணன் எதிரே வந்து கொண்டிருந்தார். சிவராமன் திடீரென்று தீர்மானித்து அவரை அணுகி "உங்க கிட்ட ஒரு கோரிக்கை. இப்படி ஒரு புத்தகத்திற்கு இன்னொரு புத்தகம் இலவசம்-னு விளம்பரம் போட்டிருக்கிறீங்களே.. ரொம்பச் சங்கடமா இருக்குது. அதுக்குப் பதில் அதிக கழிவு விலையில கொடுத்திடலாமே. இதை ஒரு கோரிக்கையாவே உங்க கிட்ட வெக்கறேன்" என்றார். புத்தகங்களின் மீது ஆழமான நேசம் கொண்ட, பதிப்புத்துறை நுகர்வுக் கலாச்சாரத்தின் ஆபாசத்தின் எல்லையை பின்பற்றி விடக்கூடாதே என்கிற ஒரு வாசகனின் ஆதங்க குரலாக அந்தக் கோரிக்கை எனக்குப் பட்டது.

கண்ணன் இந்த எதிர்பாராத தருணத்திற்கு சற்று தடுமாறியது போல் தோன்றியது. "இலவசம்-னு ஏன் நீங்க எடுத்துக்கறீங்க. வாசகர்களுக்கு நாங்கள் அளிக்கும் அன்பளிப்பு'ன்னு என்ற ரீதியில்தான் இதை அணுகலாம்" என்கிற மாதிரி ஒரு சமாளிப்பான பதிலை தந்து விட்டு சிவராமனின் கேள்வியை மிகச் சுலபமாக உதறிவிட்டுச் சென்றார்.

காலச்சுவடின் இந்த வணிக ரீதியான அணுகுமுறையில் எனக்கு எந்தவிதமான முரணும் தெரியவில்லை. மாறாக இதன் மூலம் வாசகர்கள் அதிக நூல்களை வாங்குவதற்கான ஒரு வாய்ப்பாகவே இதைப் பார்க்கிறேன். நூற்களின் உள்ளடக்கத்தை வணிக ரீதியில் அமைத்துக் கொள்வதிலும் அதை விற்பனை செய்ய சாதுர்யமான வழிகளை பயன்படுத்துவதில்தான் பிரச்சினை இருப்பதாக எனக்குப்பட்டது. புத்தகங்கள் ஒரு சமூகத்தின் அறிவு, பண்பாட்டு வளர்ச்சிக்கான மேம்பாட்டுச் சாதனங்கள், அதை முற்றிலும் வணிகமயப்படுத்தி விடக்கூடாது என்றாலும் அதை உற்பத்தி செய்கின்ற பதிப்புத்துறை தொடர்ந்து செயல்படுவதற்கான லாபத்தை ஈட்ட அதிகம் பாதகமில்லாத வணிக யுக்திகளை பயன்படுத்தலாம் என்பதுதான் என் நிலைப்பாடு.

பிற்பாடு ஹரன் பிரசன்னாவிடம் இதைப் பற்றி விவாதித்த போது ஏறத்தாழ என்னுடைய கருத்தையே எதிரொலித்தார். "புத்தகங்களுக்கு புத்தகங்களைத்தானே இலவசமாய்த் தருகிறார்கள். தொடர்பேயில்லாமல்  ஒரு குக்கரை இலவசமாக தரும்போதுதான் நோக்கம் குறித்தான சந்தேகம் எழலாம்' என்றார். "ஏன் சமையல் புத்தகங்களுக்கு குக்கரை இலவசமாய்த் தருவதில் தவறென்ன, அது தொடர்புடையதுதானே?" என்று விளையாட்டாய்க் குட்டையைக் குழப்பினேன்.

என்றாலும் சிவராமனின் சார்பாக அவரின் ஆதார எண்ணம் என்னவாக இருக்கக்கூடும் என்று பிரசன்னாவிடம் விளக்க முயன்றேன். "மேலுக்கு ஆபத்தில்லாதது போல் தோன்றும் இந்த வணிகத் திட்டங்கள் காலப்போக்கில் இன்னும் பல்வேறு வடிவங்களில் உருமாறி "குறிப்பிட்ட எழுத்தாளரின் புத்தகங்கள் சிலவற்றை வாங்கினால் அவர் விரும்பி அணியும் விலையுயர்ந்த பிராண்ட் ஜட்டி இலவசமாக அளிக்கப்படும்".. என்கிற அபாயகரமான எல்லைக்கு இது சென்று விடக் கூடும், என்று சிவராமன் நினைத்திருக்கலாம்" என்று அமைதியாக நின்றிருந்த சிவராமனை சீண்டிவிட முயன்றேன். பக்கத்தில் நின்று கொண்டிருந்த ரஜினி ராம்கி "அது உபயோகப்படுத்தப்பட்ட ஜட்டியா?" என்றொரு அடிப்படையான வினாவை எழுப்பி இந்த முக்கியமான விவாதத்தின் பரிமாணத்தை விரிவுப்படுத்தினார்.

பாவம் சிவராமன். எங்களுக்குள் மாட்டிக் கொண்ட திண்டாட்டத்தை வெளிப்படுத்த இயலாமல் சிரித்து மழுப்ப வேண்டியிருந்தது.

(தொடரும்)

suresh kannan

Monday, January 04, 2010

புத்தகக் கண்காட்சி 2010 : அனுபவம் (பகுதி 1)

வழக்கம் போலவே இந்த வருடமும் புத்தகக் கண்காட்சிக்கு செல்லவே கூடாது என்கிற தீர்மானமான முடிவில் இருந்தேன். எல்லாமே பொதுவான காரணங்கள்தான். கடந்த சில வருடங்களில் வாங்கின புத்தகங்களையே இன்னும் வாசிக்காமலிருக்கும் குற்றவுணர்வு, நூலகங்களில் எடுக்கும் புத்தகங்களையே வாசிக்க நேரம் போதாத திணறல், சற்று அதிகவிலையுள்ள உடையை கேட்ட மகளுக்கு சிக்கனத்தின் அருமையை அரைமணி நேரம் 'தாராளமாக' விவரித்து விட்டு, நான் மாத்திரம் விலை அதிகமுள்ள புத்தகங்களை 'இலக்கிய போதையில்' வாங்கி பின்பு யோசிக்கும் அப்பட்டமான மிடில் கிளாஸ் மனப்பான்மை...இப்படியாக சில.

முதல் நாள் திரைப்படம் போல சில புத்தகங்களை அதன் பரபரப்பிற்காகவே நாம் அவசரப்பட்டு வாங்கி விடுகிறோமோ என்று கூட தோன்றுகிறது. அதனுடைய ஆரவாரம் அடங்கி அது குறித்தான நடுநிலை விமர்சனங்கள் எழுந்த பின்பு தீர்மானிப்பதுதான் சிறந்ததாக இருக்கும்.

(ஆனால் இதற்கு இன்னொரு புறமும் இருக்கிறது. இரண்டு ரூபாய் நாளிதழைக்கூட எதிர் இருக்கை பயணியிடமிருந்து இரவல் வாங்கி மாத்திரமே படிக்க விரும்பும் அபத்த மனப்பான்மை. பெரும்பான்மையான எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் அலுத்துக் கொள்கிற படி திரைப்படத்திற்கும் சுவையான உணவிற்கும் எந்தவொரு விலையையும் மனமகிழ்ச்சியுடன் கூட்டத்தில் நீந்தியாவது செலவழிக்கும் நாம் நுண்ணுர்வை மேம்படுத்தக்கூடிய புத்தகங்களுக்கான தொகையை அநாவசியச் செலவு பட்டியலில் சேர்ப்பது அநியாயம்)

என்றாலும் நண்பர் சிவராமன் "நீங்கள் எப்போது கண்காட்சிக்கு செல்வதாக இருக்கிறீர்கள்?" என்று கேட்ட போது 'அந்தச் சடங்கை நான் நிச்சயம் செய்வேன்' என்கிற அவரின் தீர்மானமான நம்பிக்கையை பாழாக்க விரும்பாமலும் "செல்ல மாட்டேன்" என்று கூறுவதால் என்னுடைய 'அறிவுஜீவி' பிம்பத்தின் மீது ஏதேனும் சேதாரம் நிகழலாம் என்கிற காரணத்தினாலும் சனியன்று (02.01.2010) செல்ல தீர்மானமாகியது.

()

முன்ஜாக்கிரதையாக கண்காட்சியின் எதிர்ப்புறமுள்ள நியாய விலைக் கடைகளில் (?!) மேய்ந்தேன். முதுகுவலி இல்லாத அன்பர்கள் பொறுமையாக அமர்ந்து தேடினால் ஷெல்டன், கிறிஸ்டி போன்றவைகளுக்கிடையில் ரத்தினங்கள் கிடைக்கலாம். எனக்குக் கிடைத்தது Fyodor Dostoesvsky-ன் 'The Brothers Karamazov'. சுதேசமித்திரன், கல்கி போன்றவைகளின் 1960-களின் தீபாவளி மலர்களை ஆச்சரியத்துடன் புரட்டிப் பார்த்தேன்.

அரசியல் மாநாடுகளை நினைவுறுத்தும் பிரம்மாண்ட ப்ளெக்ஸ்களை கடந்து சென்று டிக்கெட் கவுண்ட்டரில் நின்றேன். நான் சென்ற நெரிசலான நேரத்தில் ஒரே ஒரு கவுண்ட்டரை மாத்திரம் திறந்து வைத்திருந்து மற்றவற்றை மூடி வைத்திருந்தார்கள். மற்ற இடங்களி¦ல்லாம் க்யூவில் நின்று பழக்கப்பட்டு விட்ட மக்கள், இங்கு வந்து அது நிகழாமல் மனத்தடுமாற்றம் அடையக்கூடாது என்கிற அமைப்பாளர்களின் நல்லெண்ணம் இதற்குக் காரணமாக இருக்கலாம். அப்படியாக நின்று கொண்டிருந்த போது பேட்ஜ் அணிந்த ஒரு இளைஞர் ஓடிவந்து குறிப்பாக என்னைத் தேர்ந்தெடுத்து "அந்தப் பக்கம் கவுண்ட்டர்ல யாருமே இல்ல, அங்க போங்க" என்றார். அவர் கைகாட்டிய தூரத்திற்கு செல்ல ஆட்டோ தேவைப்படும் போலிருந்தது. "அங்கதான் யாருமே இல்லன்னு சொல்றீங்களே, யாரு கிட்ட டிக்கெட் வாங்கறது" என்று மொக்கை போட்டேன். அவருக்குப் புரியவில்லை. வரிசையில் இருந்தவர்கள் சிரித்ததில் சற்று அற்ப திருப்தி. இது போன்ற பல 'பிரகஸ்பதிகளை' அந்த இளைஞர் கடந்த சில நாட்களில் நிறையப் பார்த்திருப்பார் போலிருக்கிறது. ஒன்றும் பேசாமல் சென்று விட்டார்.

உள்ளே நுழைந்தவுடனேயே ஒரு விளம்பரத் தாக்குதலை எதிர்நோக்க வேண்டியிருந்தது. 'புதிய தலைமுறை' என்று ஒருபுறம் அச்சிட்ட பெரிய அளவு பிளாஸ்டிக் பைகளை ஒரு இளைஞர் விநியோகித்துக் கொண்டிருந்தார். வாங்கும் எல்லாப் புத்தகங்களையும் அதிலேயே போட்டுக் கொள்ளலாம் என்கிற அளவுள்ள பை. புத்திசாலித்தனமான அணுகுமுறை.

பொதுவாகவே அதிக மக்கள் கூடும் இடங்களி¦ல்லாம் 'திருவிழா குழந்தை' போலவே ஒரு பாதுகாப்பற்ற உணர்வு தோன்றும். இப்பவும் அப்படித்தான். 'அப்பவே கண்ணைக் கட்டியது'. மெதுவாக ஊர்ந்து சென்ற போது தமிழினி அரங்கில் சிவராமன் கல்லா கட்டிக் கொண்டிருந்தார். என்னை அமரச் சொல்லி தமிழினி வசந்தகுமாரிடம் "நல்லா எழுதறவர்" (?!) என்று சொல்லி அறிமுகப்படுத்தி வைத்தார். வசந்த குமார் ஆளைப் பார்த்த மாத்திரத்திலேயே கண்டுபிடித்து விடுவார் போல. என்னை அவநம்பிக்கையாக பார்த்தது போல் தோன்றியது.

சூத்ரதாரி என்கிற எம்.கோபால கிருஷ்ணணிடம் சற்று நேரம் உரையாடினேன். தமிழினி மாத இதழில் இவரின் பத்தி எழுத்தை தொடர்ந்து வாசிப்பதை சொல்லி வைத்தேன். இணையத்திற்குள் நுழையச் சொல்லி கடந்த ஆண்டுகளில் இவரிடம் பேசிக் கொண்டிருந்தை நினைவு கூர்ந்தேன். கூடிய விரைவில் எழுத ஆரம்பிப்பதாக வாக்களித்திருக்கிறார்.

சிவராமனின் நுரையீரல் புகைக்காக ஏங்கிக் கொண்டிருந்தாலும் அவர் 'யாழிசை' லேகாவிடம் புத்தகப் பையை ஒப்படைப்பதற்காக காத்திருந்தார். நான் ஒரு சுற்று சென்று வருவதற்காகச் சொல்லி வேட்டைக்கு மகா சோம்பலாக கிளம்பினேன். என்¦ன்னவோ விசித்திரமான பதிப்பக பெயர்களில் கடைகள். 'விகடன்' போன்ற சிலதில் கூட்டம் அம்மிக் கொண்டிருக்க சில கடைகளில் ஆளே இல்லாமல் பரிதாபமாக அமர்ந்திருந்தார்கள்.




கிழக்கில் 'பழைய அத்னான் சாமி' போல ஹரன்பிரசன்னா அமர்ந்திருந்தார். பதிப்பகத்தைப் போலவே அவரது வளர்ச்சியும் பிரம்மாண்டமாக இருந்தது. 'இருபத்தெட்டு நாட்களில் மெலிவது எப்படி?' என்று வருகிற பிப்ரவரிக்குள் ஒரு புத்தகத்தை எழுதி முடிக்கச் சொல்லி பத்ரி அவரைத் தண்டிக்கலாம். அவரது பரிந்துரையின் பேரில் 'இலங்கை இறுதி யுத்தமும்' (நல்லாயில்லாம போகட்டும், வெச்சுக்கறேன்), என்னுடைய விருப்பத் தேர்வாக 'இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு'ம் வாங்கினேன். அப்போது காவலர் உடையிலிருந்த ஒருவர் பிரசன்னாவிடம் கிசுகிசுத்துக் கொண்டிருந்தைப் பார்த்த போது, ராஜீவ் கொலை வழக்கின் சொச்சமிச்ச விசாரணையில் பிரசன்னாவும் சம்பந்தப்பட்டிருப்பாரோ என்று நான் வில்லங்கமாக யோசித்துக் கொண்டிருந்தேன். (என்னா வில்லத்தனம்) "ஒண்ணுமில்ல. கம்பெனி டி ஷர்ட்டுக்காக ஒரு பிட்டைப் போட்டுட்டுப் போறாரு" என்று பிரசன்னா என்னை ஆசுவாசப்படுத்தினார்.

(தொடரும்)

image courtesy: kizhaku publishers

suresh kannan