நண்பர் ஒருவரின் தீவிர பரிந்துரையின் பேரில்தான் OLD BOY (2003) என்கிற கொரியன் திரைப்படத்தை காண நேரிட்டது. ஆரம்ப கணங்களில் சற்றே சுணக்கத்தை ஏற்படுத்தின படம் போகப்போக தீவிர வேகமாகி பட இறுதியின் போது அதிர்ச்சியான விஷயத்தை எதிர்கொள்ள நேரிட்டது.
என்னதான் நாம் அஹிம்சை, கருணை என்றெல்லாம் தியரிட்டிக்கலாக பேசி சிலாகித்துக் கொண்டாலும் வன்முறை என்பது நம் ரத்தத்திலிலேயே ஊறிப்போன இயற்கையானதொரு அம்சம். வெள்ளைப் பேண்ட்டில் சேற்றுச் சக்கரத்தை இடித்து கறையை ஏற்படுத்தும் பைக் ஓட்டுநரை "குழந்தாய்.. கவனமாக செல்லக்கூடாதா?" என்றெல்லாம் நாம் கேட்பதில்லை. "த்தா.... கண்ணு என்னா பின்னாலயே இருக்கு?" என்று ஆரம்பித்து ஏக வசன கலாட்டாவில் முடியும். எதிராளியின் ஆகிருதியைப் பொறுத்து வசவின் அடர்த்தி கூடியோ குறைந்தோ, அல்லது அடிதடியிலோ வெற்று வசனங்களிலோ முடியக்கூடும். 'நான் அப்படியெல்லாம் இல்லை' என்று விவாதிப்போர் கடவுளால் பிரத்யேகமாக ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒரு ஆணின் உயிரணுக்கள் பெண்ணின் கருப்பையினுள் வேகமாக பயணம் செய்யும் போது முந்துகின்ற ஓர் அணுவுக்குத்தான் வாசலை முட்டி மோதி உட்புகுகிற வாய்ப்பு கிடைக்கிறது. அங்கேயே ஆரம்பிக்கின்ற வன்முறையும் போட்டியும் நம் வாழ்நாளின் இறுதி வரை தொடர்வதாக நான் கருதுகிறேன். மேற்சொன்ன படமும் "பழிவாங்குதல்" என்கிற அடிப்படையான தத்துவத்தில் இயங்குகிறது. உடனே இது எம்.ஜி.ஆர் vs நம்பியார் டைப் படம் என பாமரத்தனமாக விளங்கிக் கொள்ளக்கூடாது. திகைக்க வைக்கும் திரைக்கதையும் ட்ரீட்மெண்ட்டும், நடிகர்களின் பங்களிப்பும் இந்தப்படத்தை தரமான உயரத்தில் இயங்க வைக்கின்றன.
()
OLD BOY இயக்குநர் PARK CHAN-WOOK-ன் trilogy-ல் இரண்டாவது பகுதி படம். மற்ற படங்கள் SYMPATHY FOR MR.VENGEANCE & SYMPATHY FOR LADY VENGEANCE. சுமார் 10 படங்களை இயக்கியிருக்கும் தென் கொரிய இயக்குநரான Park-ன் ஏழாவது படமிது. Vertigo என்கிற படத்தின் பாதிப்பினால் திரைத்துறைக்கு வந்த இவர் பல படங்களில் screen writer ஆகவும் பணிபுரிந்தார். சிறந்த சினிமா விமர்சகருமாவார். முதல் இரண்டு படங்களை இயக்கி வெளியிட்ட பின்னரும் கூட இயக்குநர் என்கிற புகழை விடவும் screen writer - என்கிற அளவில்தான் இவர் புகழ் ஒங்கி இருந்தது. Joint Security Area (2000) என்கிற படத்தின் வணிக மற்றும் விமர்சக ரீதியாக வெற்றிக்குப் பின்னரே "இயக்குநர்" என்கிற புகழை அடைய முடிந்தது. கான் (cannes) திரைப்பட விருது (2004)உட்பட பல விருதுகளை OLD BOY பெற்றுள்ளது.

Dae-su குடிபோதை கலாட்டா ரகளையில் காவல் நிலையத்திலிருந்து அவர் நண்பரால் மீட்கப்படுகிறார். பொது தொலைபேசி மூலம் வீட்டிற்கு சீக்கிரம் வந்துவிடுவதாக மனைவியிடமும் மகளிடமும் கூறுகிறார். அவர் நண்பரும் வீட்டாரிடம் தாம் பத்திரமாக அவரை அழைத்து வந்துவிடுவதாக உறுதியளித்து விட்டு, திரும்பிப்பார்த்தால் Dae-su-வைக் காணோம்.
Dae-su தாம் வெளித்தொடர்பு ஏதுமில்லாத ஒரு அறையில் சிறை வைக்கப்பட்டிருப்பதை உணர்கிறார். வேளா வேளைக்கு வறுக்கப்பட்ட பணியாரம் போன்ற உணவு மாத்திரம் சிறு துளை வழியாக வழங்கப்படுகிறது. யார், ஏன் தம்மை கடத்தி வைத்திருக்கிறார்கள் என்கிற கேள்விக்கு விடை தெரியாத குழப்பமான உணர்வு. தற்கொலை முயற்சியும் தோல்வியாக, shadow boxing பயிற்சி எடுப்பதின் மூலம் சுதாரித்துக் கொள்கிறார். அறையில் உள்ள தொலைக்காட்சியின் மூலமாக அவரின் மனைவி கொலை செய்யப்பட்டதையும் அதற்கு காரணமாக முதல் குற்றவாளியாக இவரை காவல் துறை சந்தேகப்படுவதையும் அறிந்து அதிர்ந்து போகிறார். இவரின் மகளைப் பற்றிய விவரமும் தெரியவில்லை. கடுமையான தனிமையின் காரணமாக ஹிஸ்டீரியாவும், சற்றே மனநிலை பிறழ்வு சூழலில் விநோதமாக காட்சிகளும் அவருக்கு தோன்றுகிறது. கூடவே ஹிப்னாடிசமும் செய்யப்பட்டு அவருள் சில விஷயங்கள் பதியப்படுகின்றன. இப்படியாக 15 வருடங்கள் கழிந்த பிறகு ஒரு நாள் திடுதிடுப்பென்று விடுதலை செய்யப்படுகிறார்.
தம்மை கடத்தி சிறை வைத்திருந்தவர் யார் என்று கண்டுபிடித்து பழிவாங்க தீவிரப்படும் இவரை ஒரு பிச்சைக்காரர் அணுகி ஒரு கைபேசியையும் பணத்தையும் அளித்து மறைந்து போகிறார். ஒரு உணவகத்தினுள் நுழையும் இவர் அங்கு பணிபுரியும் ஒரு பெண்ணால் (mido) கவரப்பட்டு அன்பு கொள்கிறார். அப்போது கைபேசியில் வரும் அழைப்பின் குரல் "நான்தான் உன்னை 15 வருடங்களாக சிறை வைத்தவன். இயன்றால் என்னை கண்டுபிடி. என்னை கண்டுபிடித்தால் நானே தற்கொலை செய்து கொண்டு சாகிறேன். இல்லையென்றால் mido கொல்லப்படுவாள்" என்று சவால் விடுக்கிறது.
தனக்கு தொடர்ந்து வழங்கப்பட்ட உணவின் மூலம் அதன் பிரத்யேக சுவையை நன்கறிந்த Dae-su ஒவ்வொரு உணவகமாக சென்று எங்கு தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கிறார். டெலிவரி செய்யும் பையனின் மூலம் தாம் சிறைப்பட்ட இடத்தை கண்டுபிடிக்கும் அவர், அங்கு வார்டராக இருந்தவனின் பல்லைப்பிடுங்கி மூலவரைப் (Woo-Jin) பற்றி அறிகிறார். அவர் சிறைப்படுத்தப்பட்ட காரணமாக கூறப்படுவது '"he talks too much". Woo-Jin பற்றி தம் நண்பர்களிடமும் அறிந்தவர்களிடமும் விசாரிக்கும் போது அவர் தம்முடன் பள்ளியில் இணைந்து படித்த பழைய மாணவர் என்று அறிய நேர்கிறது. அவருக்கும் தமக்கும் என்ன மாதிரியான பகை இருக்க முடியும் என்று Dae-su ஆராய்கிறார். இதற்கிடையில் அவருக்கும் midoவிற்குமான உறவு மிகவும் நெருக்கத்தை அடைந்து உடல்ரீதியான தொடர்பிற்கு செல்கிறது.
()
தம்முடைய மாணவப் பருவத்தை நினைவு கூறும் Dae-su, Woo-Jin-ம் அவரது சகோதர உறவு முறையிலான soo-ah என்கிற பெண்ணும் பாலியல் நோக்கத்தில் ஈடுபடும் காட்சியை ஒளிந்திருப்பதை காண நேரிடுகிறது. இவர் பார்ப்பதை அவர்களும் பார்த்து விடுகிறார்கள். பள்ளி முழுவதும் soo-ah பற்றிய செய்திகள் வதந்தி, வம்புகளுடன் இணைந்து ஒலித்து அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் செய்தி பரவுகிறது. இதை தாங்க முடியாத அந்தப் பெண் Woo-Jin எதிரிலேயே தற்கொலை செய்து கொள்கிறாள். இந்தச் செய்திகளை ஆராய்ச்சிகளின் மூலம் அறிந்து கொள்ளும் Dae-su, Woo-Jin-ஐ கண்டுபிடித்து நேருக்கு நேராக சந்திக்கிறார். "உன் சகோதரியின் மரணத்திற்கு நீதான் காரணம்" என்று குற்றஞ்சாட்டுகிறார். தாம் அவனை கண்டுபிடித்து விட்டதால் ஒப்பந்தப்படி அவன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறார்.
பதிலாக Woo-Jin அவருக்கு ஒரு பரிசை அளிக்கிறார். அதைப் பிரிக்கும் Dae-su-விற்கு பூமியே இரண்டாக பிளந்தாற் போன்ற அதிர்ச்சி ஏற்படுகிறது. திகைக்க வைக்கும் அந்த அதிர்ச்சி என்ன என்பதையும் பின்பு இருவருக்கும் என்ன ஆனது என்பதையும் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்வதுதான் இயக்குநரின் உழைப்பிற்கு நியாயமான செயலாக இருக்கும் என்று கருதுகிறேன்.
()
சற்றே நுட்பமான இந்தக்கதைக்கு PARK CHAN-WOOK-ன் திரைக்கதை என்னை அயர வைக்கிறது. Dae-su சிறையில் அடைத்து வைக்கபட்டிருக்கும் போது வருடங்கள் கடந்து செல்வதை தொலைக்காட்சியில் முக்கிய உலக செய்திகள் மூலம் fast cutting உத்தி மூலம் சொல்லும் காட்சியும் மனநிலை பிறழ்கிற Dae-su, தம் உடம்பில் எறும்பு ஒன்று துளையிட்டு வெளிவருவதாக உணரும் காட்சியும் கவர்கிறது. சிறையில் இருந்து வார்டர் மற்றும் அவர்கள் ஆட்களிடம் சண்டையிட்டு தப்பிக்கும் சண்டை காட்சி ஒன்று தொடர்ச்சியாக சுமார் ஐந்து நிமிடத்திற்கு ஒரே கோணத்தில் காட்டப்படுவதும் அருமை. படத்தின் ஒளிப்பதிவு சிறப்பானதாக இருக்கிறது.
Dae-su-வாக நடித்திருக்கும் Choi-Min-sik பல காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். Woo-Jinவின் காலைப்பிடித்து கதறும் போதும் தம்முடைய நாக்கை துண்டித்துக் கொள்ளும் காட்சிகளிலும் அவரின் முகபாவங்கள் மிகுந்த நம்பகத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. Woo-Jin-ஆக நடித்திருக்கும் Yu-Ji-tae அலட்டிக் கொள்ளாமல் நம்முடைய வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
நான் முன்னமே கூறினது மாதிரி 'பழிவாங்குதல்' என்கிற தத்துவத்தில்தான் இந்தப்படம் இயங்குகிறது. தம்மை சிறைப்படுத்திவனை Dae-su கண்டுபிடித்தவுடன், Mido கூறுகிறாள். "உனக்குத் தேவையானது கிடைத்து விட்டது. இத்தோடு விட்டுவிட்டு நாம் அமைதியாக வாழலாமே". அதற்கு Dae-su "இல்லை. பழிவாங்குதல் என்னுடைய ஒரு பகுதியாக இருக்கிறது".
()
இந்த trilogy-யின் மற்ற இருபடங்களையும் இயக்குநரின் மற்ற படங்களையும் கூட காண வேண்டும் என்கிற ஆவலை இந்தப்படம் எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப்படத்தின் சட்டப்படி அல்லாத தழுவலாக zinda என்கிற இந்தித் திரைப்படம் வந்திருப்பதாக விக்கிபீடியா தெரிவிக்கிறது.
நன்றி: விக்கிபீடியா