Showing posts with label தமிழ் சினிமா. Show all posts
Showing posts with label தமிழ் சினிமா. Show all posts

Sunday, September 10, 2023

ஜெயிலர் – பாதிக் கிணறு மட்டுமே தாண்டியிருக்கும் பரிதாபம்

 
தனது ஆஸ்தான டைரக்டர்களிடம் இருந்து விலகி சந்தையில் முந்தி நிற்கும் இளம் இயக்குநர்களிடம் கூட்டணி வைக்க ரஜினிகாந்த் எப்போதும் தயங்கியதில்லை. இதைப் போலவே ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு தனது வயதுக்கேற்ற பாத்திரங்களைத் தேர்வு செய்யவும் ஆரம்பித்தார். இளம் நடிகைகளுடன் டூயட் பாடுவதை அவரது ரசிகர்களே விரும்பவில்லை என்கிற நிதர்சனம் ரஜினிக்குப் புரிந்து விட்டிருக்கலாம். இதெல்லாம் அவர் எடுத்த புத்திசாலித்தனமான முடிவுகள். தவிர்க்க முடியாத முடிவுகளும் கூட.

அப்போதைக்கு டிரெண்டிங்கில் இருக்கும் இளம் இயக்குனர்களை நம்பி தன்னை ஒப்படைத்துக் கொள்ளும் ரஜினியின் முடிவு பல சமயங்களில் சரியாகவும் அமைந்திருக்கிறது. சில சமயங்களில் சொதப்பலாகவும் முடிந்திருக்கிறது. ‘தர்பார்’, ‘அண்ணாத்தே’ என்று அவரது சமீபத்திய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இந்த நிலையில் நெல்சனுடன் புதிய கூட்டணி அமைத்திருக்கும் ரஜினியின் ‘ஜெயிலர்’ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா?

*

முத்துவேல் பாண்டியன் தனது ரிடையர்ட் வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். மனைவி, மகன், மருமகள், பேரன் என்று பாசமான குடும்பத்துடன் வாழ்க்கை அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது. அசிஸ்டென்ட் கமிஷனராக இருக்கும் மகன், சர்வதேச நெட்வொர்க்கில் இயங்கும் ஒரு சிலைக்கடத்தல் கும்பலைப் பிடிக்க முயற்சி செய்கிறார். ஒரு கட்டத்தில் மகன் இறந்து விட்ட செய்தி மட்டுமே மழுப்பலாக கிடைக்கிறது. “உங்க நேர்மையும் இந்த மரணத்துக்கு ஒரு காரணம்’ என்று துயரத்தில் இருக்கும் மனைவி குற்றம் சாட்ட, முத்துவேல் பாண்டியனுக்குள் இருக்கும் இன்னொரு பிம்பம் ஆவேசமாக விழிக்கிறது. தனது மகனைக் கொன்றவர்களை வேட்டையாட கிளம்புகிறார். அந்தப் பயணம், பர்மிட் வாங்கிய லாரி மாதிரி இந்தியா முழுக்க எங்கெல்லாம் அவரைக் கொண்டு சேர்க்கிறது என்பதுதான் இந்தப் படம்.

சிவாஜி கணேசன் நடித்த ‘தங்கப்பதக்கம்’ முதல் கமலின் சமீபத்திய ‘விக்ரம்’ வரையான சில திரைப்படங்களை அப்பட்டமாக நினைவுப்படுத்தும் திரைக்கதை. மகனின் மரணத்திற்கு தந்தை பழிவாங்க கிளம்பும் அரதப்பழசான கதை. என்னதான் வழக்கமான மசாலா கதையாக இருந்தாலும் தனித்தன்மையுடன் கையாள்வதின் மூலம் ஓர் இயக்குநரால் அதை வித்தியாசமான திரைப்படமாக்கி விட முடியும். வெற்றியை ஈட்டி விட முடியும். இந்த முயற்சியில் நெல்சன் பாதி கிணறு மட்டுமே தாண்டியிருக்கிறார். முதல் பாதி சுவாரசியமாக அமைந்தாலும் இரண்டாம் பாதியில் திரைக்கதை அநாவசியமாக எங்கெங்கோ அலைந்து பார்வையாளர்களுக்குச் சோர்வையும் சலிப்பையும் அளிக்கிறது.

*

ரஜினியின் ‘ஸ்கீரின் பிரசன்ஸ்’ இன்னமும் சேதமுறாமல் அப்படியே இருக்கிறது என்பதற்கு ஜெயிலர் படமும் ஓர் உதாரணம். வீட்டிற்கு காய்கறி வாங்கி வரும் சமர்த்தான பெரியவர் பாத்திரத்தில் வரும் ரஜினி ஒரு பக்கம் கவர்கிறார் என்றால் சட்டையை மடித்துக் கொண்டு இன்னொரு அவதாரம் எடுக்கும் பரிமாணத்திலும் பட்டையைக் கிளப்புகிறார். ஒரு அறையில் அவரது பாதி உருவம் தெரியும் காட்சிக்கே அரங்கம் அதிர்கிறது. ஆனால் இந்த ஆவேசத்தை மிகையாக்கி விடாமல் ஒரு குறிப்பிட்ட மீட்டரில் துல்லியமாக அடக்கி வாசிக்க வைத்திருப்பதில் இயக்குநர் நெல்சனின் தனித்தன்மை தெரிகிறது.

படம் முழுவதும் வரும் ரஜினியின் பிரத்யேகமான பல மேனரிசங்கள் கவர்கின்றன. பிளாஷ்பேக்கில் திகார் சிறையின் ஜெயிலராக வரும் ‘டைகர்’ அவதாரமும் சிறப்பு என்றாலும் அதில் போதுமான அழுத்தம் இல்லாததால் எடுபடவில்லை. படத்தின் தலைப்பில் மட்டும்தான் ‘ஜெயிலர்’ இருக்கிறாரே தவிர, படத்திற்குள் சம்பந்தப்பட்ட காட்சிகளைக் காணவில்லை.

ஹீரோவின் காலை மட்டும் காட்டுவது, பின்னணி இசை அதிர ஸ்லோ மோஷனில் ஹீரோ நடந்து வருவது போன்றவை ஒரு ‘மாஸ்’ திரைப்படத்தின் தவிர்க்க முடியாத ஃபார்முலா காட்சிகள். ஆனால் இவற்றை மட்டுமே நம்பி ஒரு படத்தை ஒப்பேற்றி விட முடியுமா? ரசிகர்கள் விசிலடிப்பார்கள் என்பதெல்லாம் சரி. ஆனால் பொதுவான பார்வையாளர்களைக் கவர சுவாரசியமான திரைக்கதையும் இருப்பது அவசியம். தனது மகனின் மறைவிற்கு காரணமாக இருந்தவர்களை முத்துவேல் பாண்டியன் துரத்தி வீழ்த்தும் முதல் பகுதியோடு படத்தின் சுவாரசியமும் முடிந்து விடுகிறது. அதன் பிறகு வில்லன் தரும் ‘டார்கெட்டிற்காக’ ஹீரோ நடத்தும் நீண்ட டிராமாவும் அதில் வரும் ‘காவாலா’ போன்ற இடைச்செருகல்களும் கொட்டாவியை வர வைக்கின்றன.

*

ரஜினியைத் தவிர ‘காமியோ’ ரோலில் வரும் பக்கத்து மாநில சூப்பர் ஸ்டார்களான சிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் ஆகிய மூவருக்கான காட்சிகளும் திறமையாக இணைக்கப்பட்டிருக்கின்றன. இதெல்லாம் ஒரு கிம்மிக்ஸ்தான் என்றாலும் படத்தின் சுவாரசியத்திற்கு உபயோகமாகியிருக்கிறது. இதில் சிவ ராஜ்குமார், மோகன்லால் வரும் காட்சிகளில் ரஜினிக்கு நிகரான கைத்தட்டல் கிடைக்கிறது. மெயின் வில்லன் வர்மாவாக நடித்திருக்கும் விநாயகனின் தோற்றமும் நடிப்பும் மிரட்டலாக இருக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் டெரராக வரும் வில்லன் போகப் போக பலவீனமாகி விடுவதால் திரைக்கதையும் கூடவே தொய்ந்து விடுகிறது.

ரம்யா கிருஷ்ணன் ரஜினியின் மனைவியாக நடித்திருக்கிறார். படையப்பாவில் நீலாம்பரியாக கலக்கியவர், இதில் சராசரி மனைவியாக சில காட்சிகளில் மட்டும் வந்து வீணடிக்கப்பட்டிருக்கிறார். மகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி, தனது பாத்திரத்தை தேவைக்கேற்றவாறு கையாண்டிருந்தாலும் ஒரே மாதிரியான முகபாவத்துடன் இருப்பது அசுவாரசியம். பேரனாக வரும் சிறுவன் ரித்விக், சமகாலத்து இளைஞர்களின் ‘இணைய வீடியோ’ மோகத்தையும் அதன் அலப்பறைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறான்.

இது தவிர, மூச்சு திணறுமளவிற்கு ஏராளமான நடிகர்கள். சில காட்சிகளில் புன்னகைக்க வைத்திருக்கும் யோகி பாபு இன்னமும் கூட சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். விடிவி கணேஷின் காமெடி எடுபடவில்லை. ரெடின் கிங்ஸ்லி தன் வழக்கமான மாடுலேஷனையும் எக்ஸ்பிரஷனிலும் வருகிறார். இந்த வண்டி எத்தனை நாளைக்கு ஓடுமோ? ‘இந்தாம்மா ஏய்’ மாரிமுத்துவின் எண்ட்ரி காட்சியில் கூட கைத்தட்டல் வருகிறது. ஆனால் அவருடைய கேரக்ட்டரும் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் கடந்து போகிறது. ‘வர்மா.. உனக்காக உயிரை கொடுக்கற நண்பன்டா நானு’ என்று எக்ஸ்ட்ண்ட்ரிக்தனமாக நடித்திருக்கும் அர்ஷத் தனித்துத் தெரிகிறார். ‘பிளாஸ்ட்’ மோகனாக வரும் சுனில் பாத்திரத்தின் மூலம் ‘டாப் ஸ்டார்’ நடிகர்களின் கோணங்கித்தனங்களை கிண்டலடித்திருக்கிறார்கள்.

பிராய்லர் கோழியாக வந்து தமன்னா ஆடிய ‘காவாலா’ பாடல், ஆடியோவாக ‘ஹி்ட்’ ஆன அளவிற்கு வீடியோவாக எடுபடவில்லை. தமன்னாவின் காதல் டிராமா எல்லாம் படத்திற்கு தொடர்பேயில்லாத, தேவையில்லாத ஆணி. ரஜினியைத் தவிர வேறு எந்த கதாபாத்திரமும் அழுத்தமாக வடிவமைக்கப்படாதது படத்தின் பெரிய பலவீனம். குறைந்தபட்சம் மெயின் வில்லனாவது வலிமையாக சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

*

ஒரு சராசரியான மிடில் கிளாஸ் குடும்பம், மாஃபியா உலகின் பிடியில் சிக்கிக் கொண்டால் என்னவாகும் என்பதுதான் நெல்சன் வழக்கமாக உருவாக்கும் கதையுலகம். ஸ்பானிஷ் முதற்கொண்டு பல வெப்சீரிஸ்களின் தாக்கமும் தழுவலும் அதில் இருக்கும். ஜெயிலர் படமும் இதற்கு விதிவிலக்கல்ல. முதற்பாதியில் ஓரளவிற்கு சீராக ஓடும் முத்துவேல் பாண்டியனின் வண்டி, பிறகு பிரேக் பிடிக்காத புல்டோஸர் மாதிரி எங்கெங்கோ சுற்றியலைவது படத்தின் ஒட்டுமொத்த சுவாரசியத்தை பாழ்படுத்தி விடுகிறது.

ரஜினியின் படம் என்றாலே ரசிகர்களைத் தாண்டி அதுவொரு குடும்பத் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். பெண்களும் குழந்தைகளுமாக கூட்டம் கூட்டமாக தியேட்டருக்குச் செல்வார்கள். ஆனால் ‘ஜெயிலர்’ படத்தில் முகஞ்சுளிக்க வைக்கும் அளவிற்கு வன்முறைக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. சுத்தியலால் மண்டையை உடைப்பது, காதை அறுப்பது போன்ற கொடூரமான காட்சிகளை மழுப்பாமல் அப்படியே நேரடியாக காட்டியிருப்பது மனம் பதைக்க வைக்கிறது. இது போன்ற வன்முறைக்காட்சிகள் இளம் மனங்களில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற பொறுப்புணர்ச்சி இயக்குநருக்கும் ஹீரோவிற்கும் இருக்க வேண்டும். இது தவிர ரஜினி ஸ்டைலாக சுருட்டு பிடிக்கும் காட்சியும் வருகிறது. ‘குடிச்சுக் கெட்டுப் போயிடாதாதீங்க’ என்று இசை வெளியீட்டு விழாவில் கரிசனத்துடன் உபதேசம் சொன்ன ரஜினி, திரைக்கு உள்ளேயும் சில கட்டுப்பாடுகளை பின்பற்றியிருக்கலாம்.

*

அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசையும் ‘உக்கூம்’ பாடலும் படத்தை பெருமளவு தூக்கி நிறுத்தியிருக்கிறது. ஆனால் எத்தனை தடவை ஐயா.. இதைத் தொடர்ந்து கேட்பது?! ஹைடெஸிபலில் வரும் சத்தம் காதுகளை பஞ்சர் ஆக்கியிருக்கும் விபத்தை அனிருத் தவிர்த்திருக்கலாம். விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் வரும் அமைதியான காட்சிகளுக்கும் பிறகு நிகழும் அதிரடி காட்சிகளுக்கும் கணிசமான வித்தியாசம் காட்டியிருக்கிறார். எடிட்டர் ஆர்.நிர்மல் இன்னமும் சுதாரிப்பாக செயல்பட்டு அநாவசிய ஆணிகளைக் கழற்றியிருக்கலாம். ஸ்டன் சிவா வடிவமைத்திருக்கும் ஆக்ஷன் காட்சிகள் மிரட்டலாக இருக்கின்றன. ஆனால், தன் குடும்பத்தை அவமானப்படுத்தும் இரண்டு ரவுடிகளை இருட்டு மூலையில் ரஜினி வீழ்த்துவதில் உள்ள சூடும் விறுவிறுப்பும், ஸ்னைப்பர் ஷாட்களிலும் கன்டெய்னர் லாரிகள் வானத்தில் பறப்பதிலும் ஏற்படவில்லை.

சீரியஸான காட்சிகளின் இடையில் சட்டென்று காமெடியை இணைப்பது, காமெடியான சூழலை தீவிரத்துடன் முடிப்பது போன்றவற்றை ‘டார்க் காமெடி’ என்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஒரளவிற்கு இந்தப் பாணியை சிறப்பாக பயன்படுத்தும் இயக்குநர்களில் நெல்சனும் ஒருவர். ஆனால் அவரது முந்தைய படங்களில் இருந்த நகைச்சுவை கூட ‘ஜெயிலரில் போதுமான அளவிற்கு இல்லை. சீரியஸான சூழலின் பின்னணியில் அதிரடியான பாடலை ஓடவிட்டு ஜாலியாக நடனம் ஆடுவதெல்லாம் ‘டார்க் காமெடியில்’ வராது.

ஒரு மசாலா சினிமாவில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பதெல்லாம் சரிதான். ஆனால் இயன்றவரை காட்சிகளில் நம்பகத்தன்மையைக் கூட்டினால்தான் படத்துடன் பார்வையாளர்களால் ஒன்ற முடியும். ஜெயிலர் திரைப்படத்தில் கன்னாபின்னாவென்று லாஜிக் மீறல்கள். தேசமெங்கும் உள்ள கேங்க்ஸ்டர்கள், ஜெயிலரைப் பற்றி அறிந்திருக்கும் போது 40 வருடங்களாக கடத்தல் தொழிலில் இருக்கும், தன்னை ‘புரொபஷனல்’ என்று சொல்லிக் கொள்ளும் விநாயகன் கேரக்கட்டருக்கு தெரியாமல் இருப்பது விநோதம். தன் அப்பாவைப் பற்றி மிக துல்லியமாக அறிந்திருக்கும் வசந்த் ரவி, தான் செய்யும் மோசடியை அவர் எப்படியும் கண்டுபிடித்து விடுவார் என்று எதிர்பார்க்க முடியாமல் போனதும் விசித்திரம். நேர்மையாக பணியாற்றிய ஜெயிலர், எப்படி கிரிமினல்களுடன் கூட்டணி வைப்பார் என்கிற கேள்வியையும் தவிர்க்க முடியவில்லை.

‘நீங்கள் நடித்ததில் உங்களுக்குப் பிடித்த படம் எது?’ என்றொரு கேள்வி ரஜினியிடம் ஒருமுறை கேட்கப்பட்ட போது ‘முள்ளும் மலரும்’ என்று நேர்மையான பதிலைக் கூறினார். ‘மாஸ்’ சினிமாக்களில் நடித்து ரஜினி தமிழ் சினிமாவின் வணிகத்தைக் காப்பாற்றுவது அவசியம்தான். ஆனால் ‘முள்ளும் மலரும்’ ரஜினி எங்கேயோ, எப்போதோ தொலைந்து விட்டதுதான் பரிதாபம்.

ஜெயிலர் – ஃபெயிலியர் ஆகும் விபத்தை எப்படியோ முட்டி மோதி தவிர்த்திருக்கும் ஒரு சுமாரான முயற்சி.

(குமுதம் இதழில் வெளியானது)  
 
suresh kannan

Sunday, September 12, 2021

வடிவேலு: 'யானையா, குதிரையா?'

 
தமிழ் சினிமா தொடர்பாக சமீபத்தில் வெளியான ஒரு தகவல், ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் தள்ளியிருக்கக்கூடும். ஆம். 'நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் மீது விதிக்கப்பட்ட 'ரெட் கார்ட் தடை' நீங்கியது' என்கிற செய்திதான் அது. 'கெளம்பிட்டான்யா.. கெளம்பிட்டான்யா...' 'தலைவன் is back' என்று ரசிகர்கள் இணைய வெளியில் உற்சாக மீம்ஸ்களை தெறிக்க விடுகிறார்கள். வடிவேலுவின் மீள்வருகை காரணமாக இதர நகைச்சுவை நடிகர்கள் திகைத்து நிற்பதைப் போலவும் வெறித்தனமான 'மீம்ஸ்'கள் கிளம்புகின்றன.

ஒருவர் நடிப்பதை நிறுத்தி இத்தனை ஆண்டுகளைக் கடந்தும் மக்களின் ஆதரவும் நினைவும் சற்றும் குறையாமல் இருப்பதென்பது மிக ஆச்சரியமான விஷயம். அந்த அளவிற்கு வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் தினம் தினம் மீள்நினைவு செய்யப்படுகின்றன. 'என்னை வாழ வைத்த மீம்ஸ் தயாரிப்பாளர்களுக்கு நன்றி' என்று வடிவேலுவே நன்றி சொல்லுமளவிற்கு 'மீம்ஸ்' உலகம் வடிவேலுவால் 99% நிறைந்திருக்கிறது. எந்தவொரு சந்தர்ப்பத்திற்கும் வடிவேலுவின் ஏதோ ஒரு தோற்றமும் அசைவும் வசனமும் கச்சிதமாகப் பொருந்திப் போவதும் ஆச்சரியம்தான்.

வடிவேலுவின் இந்த இரண்டாம் இன்னிங்க்ஸ் அவருக்கு பழைய செல்வாக்கை மீட்டுத் தருமா?

*

தமிழ் சமூகத்தை வடிவேலு பாதித்தது போல் வேறு எந்தவொரு நடிகரும் பாதித்ததில்லை என்று உறுதியாகச் சொல்லி விடலாம். வடிவேலுவின் ஆரம்பக்கால திரைப்படங்களில் இருந்து ஒவ்வொரு வசனமும் இன்று நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இரண்டறக் கலந்து விட்டது.


இந்த அளவிற்கு தமிழ் சமூகத்துடன் இறுக்கமாக பின்னிப் பிணைந்த நடிகர் வேறு எவருமே இல்லை.  வேறு எந்த நடிகராவது நடிப்பில் இத்தனை வருடங்கள் இடைவெளி விட்டிருந்தால் நிச்சயம் தொலைந்து போயிருக்கக்கூடும் ஆனால் மக்கள் மறக்காமல் வடிவேலுவை தினம் தினம் நினைவுகூர்வது மட்டுமல்ல, அவரது மறுவருகையையும் உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். இது மிக மிக அரிதான நிகழ்வு.

*

ஆனால் வடிவேலுவின் இந்த இடைவெளிக்கு யார் காரணம்? இதனுள் பல உள்விவகாரங்கள் இருந்தாலும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது அவரின் இந்த வீழ்ச்சிக்கு பெரும்பாலும் அவரேதான் காரணம் என்று தோன்றுகிறது. ஆம், வடிவேலு என்னும் பிரம்மாண்ட நகைச்சுவை யானை, தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கதை இது.

உச்சியில் இருக்கும் எந்தவொரு பிரபலமான நடிகருக்கும் வீழ்ச்சி ஏற்படுவது இயல்பு. வளர்ச்சி என்று ஒன்றிருந்தால் வீழ்ச்சியும் அதன் கூடவே இணைந்திருக்கும். ஆனால் தன்னம்பிக்கையுள்ள நடிகர்கள்  எப்படியாவது முட்டி மோதி  மீண்டும் உச்சியை அடைந்து விடுவார்கள். ரஜினிகாந்த் நடித்த 'பாபா' திரைப்படம் தோல்வியை அடைந்தவுடன் 'அவ்வளவுதான்.. ரஜினியின் சகாப்தம் முடிந்து விட்டது' என்பது போல் பேச்சுகள் கிளம்பின. ஆனால், அடுத்து அவர் நடித்த சந்திரமுகி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 'நான் யானை இல்லை, குதிரை.  கீழ விழுந்தா டக்குன்னு எழுந்திருப்பேன்' என்று ரஜினி பேசினார். பிறகு அது உண்மையும் ஆயிற்று. (சந்திரமுகியின் வெற்றிக்கு வடிவேலுவின் காமெடியும் ஒரு முக்கிய காரணம் என்பதையும் மறந்து விடக்கூடாது).

ஆனால் வடிவேலுவின் வீழ்ச்சி இயல்பானதல்ல. அவராக வரவழைத்துக் கொண்டது என்றுதான் தோன்றுகிறது.. அதே நகைச்சுவை மொழியில் சொன்னால் 'சொந்த செலவில் சூனியம்'. ஒரு மனிதனுக்கு புகழ் பெருகும் போது அதை சரியானபடி கையாளும் நிதானம்  தேவை. இல்லையென்றால் எந்த புகழ் அவரை உச்சிக்கு கொண்டு செல்கிறதோ, அதுவே கீழேயும் தள்ளி விடும்.

ஒரு முன்னணி நடிகருடன் ஏற்பட்ட தனிப்பட்ட பூசலை அரசியல் பகையாக மாற்றிக் கொண்ட வடிவேலு, எவ்வித தீர்மானமும் இல்லாமல் திடீரென அரசியலில் குதித்து தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பேசினார். அரசியல் மேடையையும் தன் தனிப்பட்ட சண்டையை தீர்த்துக் கொள்ளும் வகையில் பேசியதை மக்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. இப்படி வம்பாக சென்று அரசியல் கோதாவில் குதித்தது அவருக்கு சில 'ஏழரைகளை' கொண்டு வந்திருக்கலாம். இதுவொரு காரணம்.

இன்னொன்று, தனக்கு அதீதமாக கிடைத்த புகழையும் செல்வாக்கையும் தலையில் ஏற்றிக் கொண்ட வடிவேலு, தன்னை வாழ வைக்கும் சினிமாத்துறையில் பல பிரச்சினைகளைச் செய்தார் என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளர்களுக்கு கூடுதல் செலவு வைப்பது, திடீரென சம்பளத்தை உயர்த்துவது, விமானத்தில் பயணிக்கும் நேரத்தைக் கூட கணக்கிட்டு பணம் கேட்பது என்று அவரைப் பற்றிய புகார்கள் பெருகிக் கொண்டேயிருந்தன.

இதன் உச்சம்தான் 'இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகசேி - பகுதி 2' ல் நிகழ்ந்த சர்ச்சைகள். இயக்குநர், தயாரிப்பாளர் என்று ஒருவர் பாக்கியில்லாமல் அத்தனை பேருடனும் சர்ச்சையை ஏற்படுத்தி, நடிக்க வராததால் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவிக்க வடிவேலுவின் மீது 2018-ல் தடை விதிக்கப்பட்டது.

வடிவேலுவின் திரைப்பயணத்தில் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி' மிக முக்கியமானதொரு திரைப்படம். இதை இயக்கிய சிம்பு தேவன் அடிப்படையில் ஒரு கார்ட்டூனிஸ்ட். 'இம்சை அரசன்' என்பது அவரது புகழ்பெற்ற கதாபாத்திரங்களுள் ஒன்று. அதை வைத்து விதம் விதமான கார்ட்டூன்களை உருவாக்கியிருந்த சிம்புதேவனுக்கு, அதை திரைப்படமாக மாற்றுவது என்பது அல்வா சாப்பிடுவது மாதிரியாக இருந்திருக்கும். ஏனெனில் அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் அவரது ரத்தத்தில் ஊறியிருந்தது. அவரது மனதில் இருந்த பாத்திரத்திற்கு வடிவேலு கச்சிதமாக உயிரூட்டினார். 'இம்சை அரசனின்' ஒவ்வொரு காட்சியும் இன்றளவிற்கும் ரசிக்கும் படி இருக்கிறது. அந்த அளவிற்கு பார்த்து பார்த்து செதுக்கியிருந்தார் சிம்புதேவன்.

பொதுவாக நகைச்சுவை நடிகர்கள் ஹீரோவாக வெற்றி பெறுவது அரிது. கவுண்டமணியே முயன்று மண்ணைக் கவ்விய ஏரியா அது. ஆனால் சிம்புதேவனின் திறமையான இயக்கம் காரணமாக 'இம்சை அரசனை' மக்கள் இயல்பாக ஏற்றுக் கொண்டனர். கொண்டாடித் தீர்த்தார்கள்.  இந்தத் திரைப்படத்தின் பிரம்மாண்டான வெற்றி காரணமாக இதே சாயலில் அமைந்த மன்னன் பாத்திரங்களில் சிலவற்றிலும் பிறகு வடிவேலு நடித்தார். ஆனால் அவை வெற்றியை அடையவில்லை. வடிவேலு ஹீரோ போன்று நடித்த 'எலி' திரைப்படத்தையும் மக்கள் நிராகரித்தனர். ஆனால் இதில் இருந்தெல்லாம் வடிவேலு பாடம் கற்றுக் கொண்டது போல் தெரியவில்லை.

தனக்கு மகத்தான வெற்றியைப் பெற்று தந்த சிம்புதேவனின் மீது வடிவேலு நன்றியுணர்ச்சியுடன் இருந்தாரா. இல்லை என்றுதான் தோன்றுகிறது. இம்சை அரசனின் பாகம் இரண்டின் படப்பிடிப்பின் போது திரையில் 'புலிகேசி' செய்த அதே இம்சைகளை வடிவேலுவும் செய்தார் என்று சொல்லப்படுகிறது.  'நான் சொல்லும் காஸ்ட்யூம் டிசைனரைத்தான் உபயோகிக்க வேண்டும்' என்பது துவங்கி பல இடையூறுகளை அவர்  செய்தார் என்கிறார்கள். படம் நின்று போனது.  தன்னுடைய முக்கியமான வெற்றித் திரைப்படத்தை இயக்கியவராயிற்றே என்று சிம்புதேவனுக்கு எவ்வித மரியாதையையும்  வடிவேலு அளிக்கவில்லை.  இயக்குநரையும் தயாரிப்பாளரையும் நேர்காணல்களில் மலினமாக குறிப்பிட்டார்.

தன்னுடைய இந்த வீழ்ச்சிக்கு தானும் ஒரு காரணம் என்பதை வடிவேலு உணரவேயில்லை. மாறாக, ' திரைத்துறையிலிருந்து என்னை ஒதுக்க சதி நடக்கிறது' 'இனிமேல் OTT -ல் நடிப்பேன்' என்றெல்லாம் தொடர் பேட்டிகளாக தந்து கொண்டிருந்தார் . 'அதெல்லாம் இருக்கட்டும்யா.. நீ திரும்பி வந்துருய்யா' என்று மக்கள் ஒருபக்கம் உள்ளூற கதறிக் கொண்டிருந்தார்கள்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஏரியாவில் வடிவேலு ஏற்படுத்திய வெற்றிடம் ஏறத்தாழ அப்படியேதான் இருக்கிறது. இன்னொரு முன்னணி நகைச்சுவை நடிகரான சந்தானம், ஹீரோவாக மாறி விட பரோட்டா சூரி, யோகிபாபு, சதீஷ் போன்றவர்களை வைத்து ஒப்பேற்ற வேண்டியிருந்தது. நடிகர் விவேக் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்ததுதான் இதிலிருந்த பெரிய ஆறுதல். ஆனால் அவரும் சமீபத்தில் மறைந்து விட்டார்.

இந்த நிலையில் வடிவேலுவின் இந்த மறுவருகை எப்படியிருக்கும்?

ஓர் இடைவேளைக்குப் பிறகு அவர் நடித்த 'கத்தி சண்டை' என்கிற திரைப்படம் வெளியான போது, வடிவேலுவை பார்க்க மக்கள் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால் அதில் பழைய வடிவேலுவின் இயல்பான நகைச்சுவை பெரிதும் தொலைந்து போயிருந்தது. கூடவே அவரது தோற்றத்திலும் கணிசமான மாற்றம் இருந்தது. 'வெள்ளந்தியான' தோற்றத்தில் இருந்த பழைய வடிவேலு ஏறத்தாழ காணாமல் போயிருந்தார். எனவே மக்கள் இதற்கு பெரிய வரவேற்பை அளிக்கவில்லை. அதற்குப் பிறகு வெளியான 'சிவலிங்கா', 'மெர்சல்' போன்ற திரைப்படங்களுக்கும் இதுதான் கதி. 'கிணத்தைக் காணோம்யா' என்கிற காமெடி மாதிரி 'எங்க வடிவேலு எங்கய்யா' என்று மக்கள் கதற வேண்டியிருந்தது.

இந்த இரண்டாம் இன்னிங்க்ஸை வடிவேலு புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டால் ஒருவேளை இழந்த செல்வாக்கை அவர் மீண்டும் பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் முன்பிருந்த வடிவேலுவை இப்போது அவராலேயே தர முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால் அது நிகழ்ந்தால் தமிழக மக்களைப் போல் மகிழ்ச்சியடைபவர்கள் வேறு எவரும் இருக்க மாட்டார்கள். ஏனெனில் அவரின் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு அத்தகையது.

ரசிகர்களின் விருப்பம். வடிவேலு குதிரையைப் போல டக்கென்று எழுந்து கொள்வாரா? அல்லது யானையைப் போல் மீண்டும் மண்ணை வாரிப் போட்டுக் கொள்வாரா என்பதை காலம்தான்  சொல்ல வேண்டும்.


suresh kannan

Thursday, June 24, 2021

மண்டேலா: வாக்காளனின் பலங்களும் பலவீனங்களும்



இரானிய திரைப்படங்களின் அழகியல் தனித்துவமானது. உலகம் முழுக்க இதற்கென பிரத்யேகமான பார்வையாளர்கள் உள்ளார்கள். மிக ஆழமான விஷயங்களைக் கூட எளிமையான காட்சியமைப்பு, திரைமொழி, மனிதர்கள், சிறார்கள் போன்றவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் பல உன்னதமான சினிமாக்கள் இரானில் தயாராகின்றன.


தமிழ் சினிமாவிலும் அப்படியொரு சாத்தியம் நேராதா என்று நாம் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த ஏக்கத்தை சற்று தணிக்க வந்த முதல் திரைப்படமாக 'காக்கா முட்டை' திரைப்படத்தைச் சொல்லலாம். விளிம்பு நிலைச் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களின் பார்வையில் பயணிக்கும் இந்தத் திரைப்படமானது, சமூகத்தின் பல்வேறு ஏற்ற இறக்கங்களை ஆழமாகவும் சுவாரசியமாகவும் காட்சிப்படுத்தியது. உயர் மற்றும் நடுத்தர வர்க்க நபர்களுக்கு மிக எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு தின்பண்டம், ஏழை மக்களுக்கு எவ்வாறு எட்டாக்கனியாகவும் வாழ்நாள் லட்சியமாகவும் மாறுகிறது என்கிற அவலத்தைப் பேசிய படைப்பு 'காக்கா முட்டை'.

இந்த வரிசையில் சமீபத்திய சிறந்த வரவு என்று 'மண்டேலா' திரைப்படத்தைச் சொல்லலாம். இரானிய திரைப்படப் பாணியோடு நேரடியாக ஒப்பிட முடியாது என்றாலும் ஏறத்தாழ அதே எளிமையையும் அழகியலையும் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான சிறுமுதலீட்டுத் திரைப்படங்களில் மிகவும் கவனிக்கத்தகுந்த படைப்பு இது எனலாம்.

தேர்தல் காலங்களில், அரசியல்வாதிகளின் பார்வையில் வாக்காளர்கள்  என்பவர்கள் வெறும் வாக்குகளாக, எண்களாக மட்டுமே தெரிவார்கள். இதர நேரங்களில் அவர்களை மனிதர்களாக கூட அவர்கள் மதிக்க மாட்டார்கள். இதைப் போலவே பெரும்பான்மையான வாக்காளர்களும் அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் தரும் இலவசப்பொருட்கள், பணம் போன்வற்றை எதிர்பார்ப்பவர்களாக மாறி விட்டார்கள்.

ஒட்டு மொத்தத்தில் தேர்தல் என்பது வருங்கால தேசத்தின் தலையெழுத்தை மாற்றியமைக்கப் போகும் முக்கியமான விஷயமாக அல்லாமல் இருதரப்பிலும் அவரவர்களின் லாபத்தை எதிர்நோக்கும் வணிகமாக சுருங்கி விட்டது. இப்படிப்பட்ட சூழலில் 'ஒரு வாக்கின்' மதிப்பு எத்தகையது, அதற்கு எத்தனை சக்தி உள்ளது என்பதை அழுத்தமாக விவரிப்பதுதான் 'மண்டேலா' திரைப்படத்தின் மையம். இதன் காட்சிகள் பயணிக்கிற போக்கில் நம் சமூகத்தைக் குறித்த பல்வேறு இயல்பான நையாண்டிகள் விமர்சன நோக்கில் நிரம்பியுள்ளன.

*

இரண்டு சமூகங்களைச் சார்ந்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்டது சூரங்குடி ஊராட்சி. இரண்டு பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி நிகழும் மோதல்களைத் தடுக்க வேண்டும் என்கிற உத்தேசத்துடன் ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார் அந்த ஊரின் தலைவர்.

ஆக .. நம் அரசியல் தலைவர்களில் சிலர் மனைவி, துணைவி என்று இரண்டு திருமணங்களை மேற்கொள்வது அவரவர்களின் செளகரியத்திற்காக அல்ல. சமூக நல்லிணக்கம்தான் அதன் பிரதான குறிக்கோள் என்பதை நாம் உணர வேண்டும். போகட்டும்.  ஆனால் ஊர்ப்பெரியவர் உண்மையிலேயே நல்லவர். இரு பிரிவுகளும் அடித்துக் கொள்ளாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவரின் நல்லியல்புகள் காரணமாக ஊர் அவரை மதிக்கிறது.

ஆனால் அவரது வாரிசுகள் (ஒவ்வொரு மனைவிக்கும் ஒரு மகன்) இரண்டு பிரிவுகளாக கோஷ்டி பிரிந்து மோதிக் கொள்கிறார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் ஊரும் அதே மாதிரி பிரிகிறது. தமிழ்நாட்டில் உள்ள சாதிப்பிரச்சினைகளுக்கு நிகரானது தமிழ் சினிமாவின் சென்சார் பிரச்சினை. எனவே இந்தப் பிரிவினருக்கு 'வடக்கூர், தெக்கூர்' என்று எளிமையாக பெயர் சூட்டி விடுகிறார் இயக்குநர். அவருக்கு வேறு வழியும் இல்லை.

இதுதான் இந்தத்திரைப்படத்தின் ஆரம்ப பின்னணி. இந்த ரத்தபூமியில் ஊராட்சிக்கான தேர்தல் வருகிறது. எண்ணிக்கையில் இரு பிரிவினரும் சமமாக இருக்கிறார்கள். ஊர்ப் பெரியவரின் வாரிசுகள் இருவரும் ஜெயிப்பதற்காக ஒருவரோடு ஒருவர் மல்லுக்கட்டுகிறார்கள்.  ஒரே ஒரு ஓட்டு கிடைத்தால் போதும். ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்று கோடிகளில் புரளலாம்.

இந்தச் சமயத்தில்தான் அந்த ஊரில் யாராலும் மதிக்கப்படாத ஓர் எளிய வாக்காளன் இவர்களின் கண்களில் படுகிறான். பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரசியமும் நகைச்சுவையுமாக சொல்லியிருக்கிறார்கள்.

நாஞ்சில்நாடன் எழுதிய 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்கிற சிறுகதையை அற்புதமாக விரித்து திரைப்படமாக மாற்றியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின்.

*

சூரங்குடி ஆண்களில் சிலர், விடிவதற்கு முந்தைய இருட்டில் மரங்களின் பின்னால் 'ஒதுங்குவதோடு' படம் துவங்குகிறது. வடக்கூர் அரசியல்வாதியின் ஆட்கள் இவர்களை 'அலேக்காக' தூக்கி வண்டியில் அமர்த்தி கொண்டு செல்கின்றனர். "தூய்மை பாரதம்' எழுதப்பட்ட புதிய கழிப்பறையொன்று அதன் திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது.

வடக்கூர் மக்கள் இதைத் திறப்பதற்காக முயலும் போது தெக்கூர் மக்கள் வந்து அவர்களிடம் மல்லுக்கட்டுகிறார்கள். இருதரப்பிற்கும் பயங்கர சண்டை நடக்கிறது. மண்டைகள் உடைகின்றன. இதற்கு நடுவில் புதர்களின் மறைவிலிருந்து எழுப்பி வரப்பட்ட மக்கள் கையில் சொம்புடன் பரிதாபமாக நிற்கிறார்கள். இப்படியாக துவங்கும் இந்தத் திரைப்படத்தில் அவல நகைச்சுவையானது பல காட்சிகளிலும் வசனங்களிலும் அபரிதமாக பெருகி வழிந்து ஓடிய படியே இருக்கிறது.

ஒரு சராசரி இந்திய வாக்காளனைப் போல, தேர்தல் காலத்தில் மட்டும் மரியாதை செய்யப்படும் ஓர் அநாமதேயன் அந்த ஊரில் இருக்கிறான். அவனுக்கென்று சொந்தமாக பெயர் கூட இல்லை. பிள்ளையார் போல மரத்தடிதான் அவனது வசிப்பிடம். பெரும்பாலான கிராமத்து மக்கள் அவனை 'இளிச்சவாயா' என்று கூப்பிடுகிறார்கள். சிகையலங்காரம்தான் அவனது பிரதான தொழில். அது உட்பட பல உதிரித் தொழில்களை செய்யும் அவனுக்கு சரியான கூலியை யாருமே தருவதில்லை. அவனை புறவாசல் வழியாக வரச்சொல்லி பழைய சோறு போட்டு அனுப்பி விடுகிறார்கள். எனவே 'இளிச்சவாயன்' என்கிற பட்டம் அவனுக்கு பொருத்தம்தானே? அது மொழியாக்கம் செய்யப்பட்டு 'ஸ்மைல்' என்கிற பெயராக நிலைத்து விடுகிறது. இந்த லட்சணத்தில் சொந்தமாக ஒரு சலூன் கட்டிடம் அமைக்க வேண்டுமென்பதுதான் 'ஸ்மைலின்' கனவும் லட்சியமும்.

இப்படிப்பட்ட இளிச்சவாயன் என்கிற ஸ்மைல் பாத்திரத்தில் யோகிபாபு மிக இயல்பாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநர் செய்த முக்கியமான சாதனைகளுள் ஒன்றாக யோகிபாபுவின் கதாபாத்திரத்தை கையாண்டதை சொல்ல வேண்டும்.

ஆம். யோகிபாபுவின் பொதுவான நடிப்பு பாணி நமக்குத் தெரியும். தனக்கு எதிரேயுள்ள எவரையும் அநாயசமாக  கிண்டல் செய்வதுதான் அவரது நடிப்பு பாணி. இதை ஏறத்தாழ அவரின் அனைத்துத் திரைப்படங்களிலும் காணலாம். ஆனால் இதில் முற்றிலும் வேறு மாதிரியான யோகிபாபுவை காண முடிகிறது. தனது கதாபாத்திரத்தின் தன்மையை கச்சிதமாக உணர்ந்து அதற்கேற்ப அடக்கமான நடிப்பைத் தந்திருக்கிறார். இவரைத் தூக்கிப் போட்டு மிதிக்கிறார்கள். செருப்பால் அடிக்கிறார்கள். ஒரு முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தாலும் இமேஜ் எதையும் பார்க்காமல் பாத்திரத்திற்குள் தன்னைப் பொருத்திக் கொள்ள முயன்றிருக்கிருக்கும் யோகிபாபுவை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

*

ஒரு கிராத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மக்கள் எவ்வாறெல்லாம் அவமதிக்கப்படுவார்கள், சாதிய நோக்கில் எவ்வாறெல்லாம் மலினமாக நடத்தப்படுவார்கள் என்பது யோகிபாபுவின் பாத்திரம் வழியாக இயல்பாக பல இடங்களில் விவரிக்கப்படுகிறது.

தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை ஊர் மக்களில் ஒருவர் திருடிக் கொள்வதால் மீதமிருக்கும் பணத்தை தபால் அலுவலகத்தில் சேமித்து வைப்பதற்காக செல்கிறான் 'ஸ்மைல்'.  ஆனால் அந்த அரசாங்க கட்டிடத்திற்குள்  செல்வதற்காக 'புறவாசல்' எங்கே இருக்கிறது என்பதை 'ஸ்மைல்' தேடுகிறான். கிராமத்தில் எந்தவொரு வீட்டிற்குள்ளும் முன்வாசலின் வழியே அனுமதிக்கப்படாமல் புறவாசல் வழியாக மட்டுமே அவன் செல்வதால் ஏற்பட்ட பழக்கத்தை அரசாங்க கட்டிடத்திலும் தன்னிச்சையாகப் பின்பற்ற முயல்கிறான். இது ஒரு சிறு காட்சியாக கடந்து விட்டாலும் நம சமூகத்தில் நிலவும் சாதியக் கொடுமையை அவல நகைச்சுவையுடன் முகத்தில் அறைவது போல் பதிவு செய்திருக்கிறது.

"உன்னை யாரு சப்பாணின்னு கூப்பிட்டாலும் அவங்களை 'சப்'புன்னு அறைஞ்சுடு' என்கிற சப்பாணிக்கு ஆதரவு தருகிற பதினாறு வயதினிலே 'மயில்' போல, 'ஸ்மைலுக்கு' ஆதரவு தர முன்வருகிறாள் ஒருத்தி. தபால் அலுவலகத்தில் பணிபுரிகிற அரசு ஊழியை அவள். பணம் போட தபால் அலுவலத்திற்கு வருகிற 'ஸ்மைலின்' இயற்பெயரைக் கேட்கிறாள். அப்போதுதான் தன்னுடைய அசல் பெயர் என்ன என்பதை தேடத் துவங்குகிறான் 'ஸ்மைல்'. அவன் தன்னுடைய  பெயரைத் தேடும் வைபவமும், அது கிடைக்காமல் போகவே தபால் அலுவலக ஊழியை இவனுக்கு புதிதாக பெயர் சூட்டும் சடங்கும் ரகளையான காட்சிகளாக அமைந்துள்ளன.

'ஸ்மைலுக்கு' மண்டேலா என்கிற புதிய பெயர் தபால் அலுவலகப் பெண்ணின் மூலமாக கிடைக்கிறது. தனக்கு கிடைத்த புதிய அடையாளத்தின் மூலம் 'மண்டேலா' மகிழ்ந்தாலும் தன் உதவியாளனிடம் 'ஏண்டா.. இது உயர்சாதிக்காரங்க பெயரா இருந்தா என்னடா பண்றது?" என்று சந்தேகத்துடனும் அச்சத்துடனும் கேட்கிறான். இப்படி பல இடங்களில் அமுங்கிய நகைச்சுவைக் கொடியைஅட்டகாசமாக பறக்க விட்டிருக்கிறார் இயக்குநர் .

*

ஊராட்சி தேர்தலில் இரு சமூகத்தினருக்கும் சமமான எண்ணிக்கையில் வாக்குகள் இருப்பதை அவர்கள் கணக்கு போட்டு அறிகிறார்கள். எனவே ஒரேயொரு வாக்குதான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அம்சமாக மாறுகிறது. அது 'மண்டேலா' கையில் வைத்திருக்கும் வாக்கு. அந்த ஊரில் எவராலும் மதிக்கப்படாத 'மண்டேலா' ஒரே கணத்தில் கதாநாயகனாகிறான். 'உன் வாக்கை எனக்கு தா' என்று இரு பிரிவினரும் அவனிடம் கெஞ்சுகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு சராசரி இந்திய வாக்காளனைப் போலவே மண்டேலாவின் நிலைமை மாறுகிறது.

திருவிழா நாளன்று பலியிடப்படவிருக்கும் ஆட்டின் நிலைமைக்குள் 'மண்டேலா' சிக்கிக் கொள்கிறான். தற்காலிக மாலை, மரியாதைகள் கிடைத்தாலும் அதன் பிறகு அவன் பிரியாணியாகப் போகிறான் என்கிற ஆபத்தை அவன் உணர்வதில்லை. மாறாக அவனுக்கு உதவியாளனாக இருக்கும் சிறுவனும் தபால் அலுவலகப் பெண்ணும் இதைப் புரிந்து கொள்கிறார்கள். அவனை எச்சரிக்கிறார்கள். ஆனால் ஊராரின் திடீர் கருணையால் விதம் விதமான உணவுகளும், உடைகளும், பரிசுப் பொருட்களையும் பெறும் மண்டேலாவிற்கு இவர்களின் அறிவுரை காதில் விழுவதில்லை.

பிறகு நிலைமை ஒரு கட்டத்தில் மண்டேலாவிற்கு எதிராக மாறுகிறது. கதாநாயகனாக தென்பட்ட அவனே இப்போது வில்லனாகத் தோற்றமளிக்கிறான். இரு பிரிவினரும் அவனைத் தூக்கிப் போட்டு மிதிக்கிறார்கள். தன்னிடமுள்ள ஒற்றை வாக்கின் மதிப்பு எத்தகையது என்பதை மண்டேலா அழுத்தமாகப் புரிந்து கொள்ளும் இறுதிக்கட்டத்தை நோக்கி திரைப்படம் பயணிக்கிறது. வாக்காளர்கள் புத்திசாலிகளாக இருந்தால் தேர்தலில் வெற்றி பெறுவது அவர்களே என்பதை கடைசி ஷாட்டின் மூலம் அழுத்தமாகப் புரிய வைத்து விடுகிறார் இயக்குநர்.

*

ஸ்மைல் என்கிற மண்டேலாவாக மிக இயல்பாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கிறார் யோகிபாபு. முன்னரே குறிப்பிட்டபடி அவரது வழக்கமான நக்கல் பாணி நடிப்பை முற்றிலும் கழற்றி விட்டு இந்தப் பாத்திரத்தின் தன்மைக்கேற்ப அவரை கச்சிதமாகப் பொருத்துவதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் மடோன் அஸ்வின். சில காட்சிகள் மட்டுமே வந்தாலும்  தபால் அலுவலக ஊழியையாக ஷீலா ராஜ்குமார் சிறப்பாக நடித்துள்ளார். இவருக்கும் மண்டேலாவிற்கும் உள்ள வெளிக்காட்டப்படாத நேசமும் மெல்லிய காதலும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

நேர்மையான ஊர்த்தலைவராக சங்கிலி முருகன், இரண்டு சமூகத்தைச் சேர்ந்த இளம் தலைவர்களாக ஜி.எம். சுந்தர் மற்றும் கண்ணா ரவி ஆகியோர் தங்களின் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார்கள். இதில் வரும் ஒவ்வொரு சிறு பாத்திரமும் அதனதன் தனித்தன்மையோடு மிக கவனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு எல்லோரிடமும் வேலை வாங்கிக் கொண்டு அவர்கள் 'பணம்?" என்று கேட்கும் போது 'வேண்டாம்' என்று எகத்தாளமாக கூறும் ஒரு பாத்திரம் வருகிறது. ஆனால் கடைசியில் இந்தப் பாத்திரம் அதே காரணத்தை இன்னொரு பொருத்தமான இடத்தில் சொல்லும் விதமானது சிறப்பாக அமைந்துள்ளது. சண்டை வரும் போதெல்லாம் தன் செருப்பை பத்திரமாக எடுத்து வைக்கும் இன்னொரு பாத்திரமும் சுவாரசியம்.

இதைப் போலவே 'மண்டேலாவின்' உதவியாளனாக நடித்திருக்கும் சிறுவன் பட்டையைக் கிளப்பியுள்ளான். யோகிபாபுவின் பிரத்யேக நக்கல் பாணியை, இந்தச் சிறுவன் கையில் எடுத்துக் கொண்டிருப்பது சிறப்பு. பல காட்சிகளில் உத்தரவாதமான சிரிப்பிற்கு காரணமாக உள்ள இந்தச் சிறுவன், தக்க நேரத்தில் யோகிபாபுவிற்கு அறிவுரை கூறும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

*

இயல்பான காட்சிகளோடு இந்தத் திரைப்படத்தில் வரும் இயல்பான நகைச்சுவை வசனங்களும் கவர்கின்றன. இரண்டு சமூகங்கள் மட்டுமே உள்ள அந்தக் கிராமத்தில் கூடுதல் ஒரு வாக்கிற்காக 'வேறு யாராவது இருக்கிறார்களா?' என்று விசாரிக்கப்படும் போது 'அவங்களைத்தான் நாம துரத்தி விட்டுட்டமே' என்று ஒரு வசனம் வருகிறது. தேர்தல் காலத்தில் மட்டுமே தலித் சமூகத்தின் ஓட்டுக்கள் கவனிக்கப்படும் விதத்தை இந்த வசனம் மிக நுட்பமாக சொல்லிச் செல்கிறது.

இரண்டு பிரிவினரும் தரும் இலவசப் பொருட்களை வைத்து ஜாலியாக இருக்கிறான் 'மண்டேலா'. ஆனால் ஒரு கட்டத்தில் அவை நிலையில்லாதவையாக அவனை விட்டுப் போகின்றன. அரசாங்கம் தரும் இலவசங்களை இது தொடர்பான காட்சிகள் கிண்டல் செய்கின்றன என்பது போன்ற விமர்சனங்கள் வெளிவந்தன.

அரசு வெளியிடும் இலவச திட்டங்கள், பொருட்களின் மூலம் எளிய சமூகங்களின் வாழ்க்கையில் உருவாகும் மாறுதல்கள் முக்கியமான விஷயம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.. ஆனால் இது தொடர்பான காட்சிகள் அதைப் பற்றி பேசவில்லை. எளிய சமூகத்திடமிருந்து வாக்குகளைப் பிடுங்குவதற்காக தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தரும் இலவசப் பொருட்களை மட்டுமே விமர்சிப்பதாக தோன்றுகிறது. ஒருவகையில் வாக்காளருக்கு தரப்படும் லஞ்சம் அது. வாக்காளன் அதைப் பெற்றுக் கொண்டால் பிறகு வெற்றி பெறும் வேட்பாளரை கேள்வி கேட்கும் தகுதியை தார்மீகமாக இழந்து விடுகிறான். இந்த ஆதாரமான நீதி படத்தில் அழுத்தமாக உணர்த்தப்படுகிறது.

*

அறிமுக இயக்குநரான மடோன் அஸ்வின் 'மண்டேலா' திரைப்படத்தின் மூலம் முதல் திரைப்படத்திலேயே கவனிக்கத்தகுந்த இயக்குநராக மாறியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் பல சமூக விமர்சனங்கள் போகிற போக்கில் சொல்லப்பட்டாலும் அவை சராசரி பார்வையாளனுக்கும் சென்று சேரும்படி அழுத்தமாக ஒவ்வொரு காட்சியையும் நுட்பமாக உருவாக்கியுள்ளார். அலவ நகைச்சுவையில் தோய்ந்த வசனங்களும் காட்சிகளும் இந்தப் படத்தின் காண்பனுபவத்தைச் சிறப்பாக்கியிருக்கின்றன.

பரத் சங்கரின் எளிமையான பின்னணி இசையும் சிறப்பான பாடல்களும் மிகப் பொருத்தமான இடங்களில் இணைக்கப்பட்டுள்ளன. யுகபாரதி, அறிவு போன்றவர்களின் பாடல் வரிகள் தாங்கள் சொல்ல வரும் கருத்துகளை மிக எளிமையாக பார்வையாளனிடம் கொண்டு சேர்க்கின்றன. விது அய்யன்னாவின் இயல்பான ஒளிப்பதிவு, பிலோமின் ராஜின் சிறப்பான எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப விஷயங்கள் இந்தத் திரைப்படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளன.

ஒரு சராசரியான வாக்காளனுக்கு அவன் அளிக்கும் வாக்கின் மதிப்பும் முக்கியத்துவமும் இன்னமும் கூட தெரியவில்லை. இந்த ஆதாரமான விஷயத்தை மிக வலுவாக பார்வையாளனுக்கு கடத்துவதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது 'மண்டேலா'. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் இந்தச் செய்தி பரவலான பார்வையாளர்களைச் சென்று அடைந்திருக்கும். என்றாலும் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படம் இணைய வழியில் வெளியானது மிகப் பொருத்தமானது.

கருப்பின மக்களின் சமூக மேம்பாட்டிற்கு தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவர் நெல்சன் மண்டேலா. அவரது பெயரை பிரதான பாத்திரத்தின் அடையாளமாகக் கொண்டு வெளிவந்திருக்கும் இந்தத் திரைப்படம் அந்தப் பெயருக்கு நியாயத்தைச் சேர்த்திருப்பது சிறப்பு. அரசியல்வாதிகள் மற்றும் வாக்காளர்கள் ஆகிய இரு தரப்பிற்கும் ஒரே சமயத்தில் எளிமையான பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறார் 'மண்டேலா'. 

 

(பேசும் புதிய சக்தி - ஜூன் 2021 இதழில் வெளியானது) 


suresh kannan

Friday, April 30, 2021

அஞ்சலி: கே.வி.ஆனந்த்


 
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி,ஆனந்த் மாரடைப்பால் இறந்து விட்டதாக அறிகிறேன். நமக்குப் பிடித்தமான பிரபலங்களின் மரணங்களை அறிய நேர்கிற அந்தக் கணங்களில் நாமும் உள்ளே ஒரு துளி இறந்து போகிறோம் என்று தோன்றுகிறது. சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

தொன்னூறுகளில் வெளிவந்த க்ரைம் நாவல்களை வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தவர்களுக்கு கே.வி. ஆனந்த் என்பவர் முன்பே பரிச்சயம் ஆனவர். ஆம். ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்கள் எழுதும் கிரைம் நாவல்களின் அட்டைப்படங்களுக்காக பிரத்யேகமான புகைப்படங்களை எடுத்தவர் ஆனந்த்.

முன்பெல்லாம் கிரைம் நாவல் என்றால் காமா சோமாவென்று ஏதோ ஒரு புகைப்படத்தை முகப்பில் அச்சிடுவதே வழக்கம். ஆனால் நாவலின் உள்ளடகத்திற்கென்று பிரத்யேக புகைப்படங்களை எடுத்து அச்சிடுவது என்பது ஆனந்தின் வருகைக்கு பிறகுதான் என்று நினைக்கிறேன். இதற்காக நிஜ மாடல்களை உபயோகித்து அவர்களின் முதுகில் கத்திக்குத்து இருப்பது போல் ஒப்பனை செய்து.. அதை வசீகரமான கோணத்தில் புகைப்படம் எடுத்து.. இதற்காக நிறைய மெனக்கெடுவார் ஆனந்த். இவரது அட்டைப்படங்களுக்காகவே நாவல்களை வாங்கியவர்கள் அதிகம். சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களும் ஆனந்த்தை விதம் விதமாக உற்சாகப்படுத்துவார்கள்.

இது தவிர முன்னணி வார இதழ்களிலும் பிரபலமான புகைப்படக்கலைஞராக ஆனந்த் இருந்தார்.

*

புகைப்படமும் சினிமாவிற்கான ஒளிப்பதிவும் மிக நெருக்கமான தொடர்புடையது. ஒளியின் ரகசியத்தை அறிந்து கொண்டால் போதும். எனவே சிறந்த புகைப்படக்காரராக இருந்த ஆனந்திற்கு சினிமாவிற்கான ஒளிப்பதிவாளராக முன்னகர்வது என்பது எளிதாகவே இருந்திருக்கும்.

இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவரான பி. சி. ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்த ஆனந்த், அங்கு மிகச்சிறந்த மாணாக்கனாக விளங்கினார். அதற்கு முன்பு ஜீவாவிடமும் சிறிது காலம் உதவியாளராக இருந்திருக்கிறார். தான் பிஸியாக இருந்த காரணத்தினால் தனக்கு வந்த வாய்ப்பை தனது முதன்மைச் சீடனுக்கு அளித்து மகிழ்ந்தார், பி. சி. ஸ்ரீராம்

ஆம். 1994-ல் வெளியான ‘தென்மாவின் கொம்பத்து’ என்கிற மலையாளத் திரைப்படம்தான் ஆனந்த் ஒளிப்பதிவு செய்த முதல் திரைப்படம்.

பின்னர் முதல்வன், பாய்ஸ் போன்ற திரைப்படங்களில் பணிபுரிந்து மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் என்கிற தகுதியை அடைந்து விட்டாலும் அங்கேயே தேங்கி விடாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார்.

*

கே.வி.ஆனந்த் முதலில் இயக்கிய திரைப்படமான ‘கனா கண்டேன்’ 2005-ல் வெளியாகியது. இன்றைக்குப் பார்த்தாலும் வசீகரிக்கக்கூடிய புத்திசாலித்தனமான திரைக்கதை. இன்றைக்கு மலையாளத்தில் பிரபல நாயகனாக இருக்கக்கூடிய பிருத்விராஜை ஒரு சுவாரசியமான வில்லனாக ‘கனா கண்டேனில்’ உபயோகித்திருப்பார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ‘காப்பான்’ தவிர, கே.வி. ஆனந்தின் அனைத்துத் திரைப்படங்களும் சுபா என்கிற எழுத்தாளர்களோடு கூட்டணி சேர்ந்திருந்தது. சுபாவின் எழுத்தும் ஆனந்தின் இயக்கமும் இணைந்து ஒரு வசீகரமான கலவையாக அமைந்தது. போலவே இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், எடிட்டர் ஆன்டனி போன்ற திறமைசாலிகளோடு தொடர்ந்து கூட்டணி அமைத்துக் கொண்டார்.

கே.வி.ஆனந்தின் அனைத்துத் திரைப்படங்களுமே வெகுசனத் திரைப்படங்கள்தான். ஆனால் வழக்கமான மசாலாவில் மாட்டிக் கொள்ளாமல் தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் பல புதிய விஷயங்களை தொடர்ந்து முயன்று கொண்டேயிருப்பார். ‘அநேகன்’ இதற்கொரு நல்ல உதாரணம்.

ஆனந்த் தனது திரைப்படங்களுக்கு தலைப்பைத் தேர்ந்தெடுப்பதே அத்தனை அழகாக இருக்கும். ‘அயன்’, ‘கோ’ ‘மாற்றான்’ என்று புழக்கத்தில் இல்லாத தமிழ்ப்பெயர்களை சூட்டுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

தானே சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்தும் தான் இயக்கிய திரைப்படங்களுக்கு இதர ஒளிப்பதிவாளர்களை அமர்த்தி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

தமிழ் சினிமாவின் சிறந்த வெகுசன இயக்குநர்களில் ஒருவராக இருந்த கே.வி.ஆனந்தின் மறைவிற்கு என் மனமார்ந்த அஞ்சலி.

suresh kannan

Saturday, January 30, 2021

லோகேஷ் என்கிற பரோட்டா மாஸ்டர்




லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ பார்த்தேன். சின்ன சின்ன சுவாரசியங்கள் இருந்தாலும் ஒட்டு மொத்த அனுபவத்தில் ‘ஆகக் கொடுமை’ என்றுதான் சொல்ல வேண்டும்.

*


லோகேஷ் வெகுசன வார்ப்பில் உருவாகி வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவர்தான் என்றாலும் அதில் சற்று தனித்து பிரகாசிக்கக் கூடியவர்களில் ஒருவராக இருந்தார். மாநகரம், கைதி போன்றவை அதற்கு சிறந்த சாட்சியங்களாக இருந்தன. ஆனால் இது போன்ற இயக்குநர்களுக்கு நேரும் விபத்து என்னவெனில், அவர்கள் முன்னணி நாயகர்களிடம் சென்று சரணடையும் போது கூடவே அவர்களின் வீழ்ச்சியும் தன்னிச்சையாக துவங்கி விடுகிறது. துரதிர்ஷ்டமாக லோகேஷிற்கு நேர்ந்ததும் இதுவே.

ரிடையர்ட் ஆன கமர்சியல் இயக்குநர்கள் சக்கையாகி ஓய்ந்த பிறகு அவர்களிடம் எதுவும் பெயராது என்பதைப் புரிந்து கொள்ளும் முன்னணி நடிகர்கள், தடம் மாறி இளம் இயக்குநர்களின் திறமைகளை உறிஞ்ச ஆரம்பிக்கிறார்கள். இந்த வரிசையில் ஒரு சமீபத்திய பலியாடு லோகேஷ்.

முன்னணி நாயகர்களுக்கு படம் செய்யும் போது இது போன்ற இளம் இயக்குநர்கள் எதிர்கொள்ளும் பெருங்குழப்பம் என்னவெனில், அது தன் படமாக இருக்க வேண்டுமா அல்லது சம்பந்தப்பட்ட ஹீரோவின் வணிக பிம்பத்திற்கு இணக்கமாக இருக்க வேண்டுமா என்பதுதான். ஏனெனில் இதன் பின்னால் உள்ள பெரும் வணிகம் அவர்களை குழப்பத்திலும் தடுமாற்றத்திலும் ஆழ்த்துவது இயல்புதான்.

ஏனெனில் ஒரு முன்னணி நடிகரின் படத்தில்  அது தொடர்பான சமாச்சாரங்கள் இல்லாவிடில் அதை உத்தரவாதமாக எதிர்பார்த்து வரும் நடிகரின் ரசிகர்கள் ஏமாந்து விடுவார்கள். இது சார்ந்த அச்சமும் சங்கடமும் இந்த இயக்குநர்களிடம் உள்ளது. 

*

ஆனால், வில்லனிடமிருந்து தன் கற்பைப் காப்பாற்றிக் கொள்ள போராடும் நாயகி போல,  ‘மாஸ்டரில்’ தன் தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ள லோகேஷ் இயன்ற வரை போராடியுள்ளார். அதற்கான உழைப்பும்  தடயமும் மாஸ்டரில் ஆங்காங்கே நிச்சயம் உள்ளது. ஆனால் இவை மட்டுமே போதுமா? ஒட்டு மொத்த அனுபவத்தில் இது ‘வழக்கமான’ விஜய் படமாகவும் இல்லாமல் லோகேஷின் படமாகவும் இல்லாமல் நடுவாந்திரத்தில் பரிதாபமாக தத்தளிக்கிறது.

குடிப்பழக்கமுள்ள ஹீரோ, அதற்கான பின்னணிக்காரணங்களை விளக்காமல் இருப்பது, ஆனால் அந்தக் காரணங்களை ஜாலியாக உருவாக்கியிருப்பது, வழக்கமான டூயட் பாடல்கள் இன்மை போன்றவை குறிப்பிடத்தக்க வித்தியாசமான அம்சங்கள்தான். இப்படியாக சம்பிரதாயமான தடயங்கள் இல்லாமல் தன் திரைக்கதையை உருவாக்க கடும் முயற்சி எடுத்திருக்கிறார் லோகேஷ். விஜய்யும்  இந்த மாற்றங்களை ஏற்றுக் கொண்டிருப்பது ஒரு நல்ல முன்னுதாரணம்.

போலவே வணிகமதிப்பு கொண்ட நாயகனாக இருந்தாலும் திரைக்கதையில் தன் பங்கு சிறப்பாக இருந்தால் அது என்ன வேடமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும் விஜய் சேதுபதியின் ஈடுபாடும் பாராட்டத்தக்கது. இந்த அற்புதமான சந்தர்ப்பத்தையும் கலவையையும் லோகேஷ் பயன்படுத்திக் கொள்ளத் தவறி விட்டாரா அல்லது வணிக நெருக்கடிகளால் தடுமாறி விட்டாரா என்று தெரியவில்லை. படம் ‘பரோட்டா மாஸ்டராகி’ விட்டது. 

*

இளம் சிறார்களை குற்றவாளிகளாக வளர்த்தெடுத்து பயன்படுத்தும் மாஃபியா தொழில் என்பது நெடுங்காலமாகவே உள்ள சமூகக் குற்றம்தான். சமீபத்தில் வெளியான ‘திமிரு பிடிச்சவன்’ திரைப்படம் கூட இந்தப் பின்னணியை வழக்கமான சினிமா பாணியில் பயன்படுத்தியுள்ளது. ஏறத்தாழ லோகேஷூம் அதையே பயன்படுத்தியுள்ளார்.

இன்றைக்கு கொலையாளிகளாக ஊடகச் செய்திகளில் அடிபடுபவர்களின் புகைப்படங்களைப் பார்த்தால் தெரியும். அவர்களின் வயது என்பது ஏறத்தாழ இருபதுக்குள்தான் இருக்கும். இதுவொரு தீவிரமானதொரு சமூகப் பிரச்சினை. 

 

காவல்நிலையங்களும் சிறைக்கூடங்களும்  நீதிமன்றங்களும் குற்றத்தைக் குறைப்பதற்குப் பதிலாக அவற்றைப் பயிற்சி மையங்களாக மாற்றி வைத்திருக்கின்றன. ஏனெனில் சமூகத்தில் நிகழும் குற்றங்கள்தான் அவர்களின் முதலீடு. அவை தொடர்ந்து நிகழ்ந்தால்தான் அவர்கள் லாபம் சம்பாதிக்க முடியும்.

ஆனால் இப்படியொரு தீவிரமான பிரச்சினையை வழக்கமான சினிமா பாணியிலேயே லோகேஷ் கையாண்டிருப்பது துரதிர்ஷ்டமானது. கூர்நோக்கு பள்ளி கூடம் கூட சினிமா செட் என்று நன்றாகத் தெரியுமளவிற்கு அத்தனை போலித்தனமான காட்சிகளால் அவை நிறைந்துள்ளன. ‘மகாநதி’ திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும் சிறை மற்றும் அதன் காட்சிகளின் தீவிரத்தை இதனுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும். ‘மாஸ்டர்’ படத்தின் காட்சிகள் எத்தனை அமெச்சூர் என்று.

*

வணிக சினிமாவின் எல்லைக்குள்ளேயே எவ்வளவோ செய்யலாம். ஆனால் நாயகனை முன்னிறுத்துவதிலேயே லோகேஷ் கவனமாக இருந்துள்ளது துரதிர்ஷ்டம்.

எம்.ஜி.ஆர் நடித்த பல்லாண்டு வாழ்க, கமலின் ‘நம்மவர்’.. ஏன் சமீபத்திய ரஜினியின் ‘பேட்ட’ என்று பல திரைப்படங்கள் நினைவிற்கு வந்து போகின்றன. சிறார் சீர்திருத்த பள்ளியின் பின்னணியில் பாலகுமாரன் ஒரு நாவல் எழுதியுள்ளார். அதில் இருந்த நம்பகத்தன்மையும் விறுவிறுப்பும் கூட இதில் இல்லை.

இதர படங்களில் இருந்து காப்பியடிக்கும் சமாச்சாரத்தை படத்தின் உள்ளேயே நிறைய இடங்களில் கிண்டலடித்திருப்பது ரசிக்க வைத்திருக்கிறது. ஒருவகையில் இயக்குநரின் சுயவாக்குமூலம் என்று கூட இதைச் சொல்லலாம். மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக பேசி விட்டார் போலிருக்கிறது.

அதற்காக விஜய் ஒவ்வொருமுறையும் தன் ‘காதல் கதை’யை – கிளைமாக்ஸ் முடிந்த பின்னரும் கூட – அவிழ்த்து விடுவது ஓவர். அதிலும் அந்த ‘வாடா என் மச்சி’ நடனம் – ஆகக் கொடூரம்.

‘இரும்புக்கை மாயாவி’யாக விஜய்சேதுபதி ஆங்காங்கே ரசிக்க வைக்கிறார். ஆனால் சிமெண்ட் மூட்டையை குத்துவது போல எதற்கெடுத்தாலும் அவர் கையை ஓங்கிக் கொண்டு வருவது காமெடியாக இருக்கிறது. 

*

லோகேஷ் என்கிற இளம் திறமைசாலி, இப்படி ‘கொத்துப் பரோட்டா’ மாஸ்டராக பலியாகியிருப்பது காலத்தின் கோலம்.



suresh kannan

Tuesday, August 11, 2020

கமல்ஹாசன்: ‘தேய்வழக்குகளை உதறியெரியும் பெருங்கலைஞன்’

Image Credit: Original uploader
 
பொதுவாக  முன்னணி சினிமா நாயகர்களின் உண்மையான வயதிற்கும் அவர்கள் ஏற்கும் பாத்திரங்களின் வயதிற்கும் பல சமயங்களில் தொடர்பே இருக்காது. இது சார்ந்த கிண்டல்களும் நமட்டுச்சிரிப்புகளும் ரசிகர்களிடையே நெடுங்காலமாக உண்டு.

நடுத்தர வயதைத் தாண்டியும் ‘கல்லூரி மாணவனாகவே’ முரளி நடித்த திரைப்படங்கள் ஏராளம். இந்த நோக்கில் ரஜினி மீதான கிண்டல்களுக்கு பஞ்சமேயில்லை. தெலுங்கு நடிகர்கள் இந்த விஷயத்தில் செய்ததெல்லாம் மாபெரும் பாதகம் என்றே சொல்லலாம். நடிப்பில் சாதனைகள் புரிந்த சிவாஜி கணேசன் கூட ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு கோட், சூட் அணிந்து ஸ்ரீதேவி போன்ற இளம் நடிகைகளுடன் மூச்சு வாங்க டூயட் பாடிய அநியாயமெல்லாம் நடந்தது.

இந்த வரிசையில் கமலும் விதிவிலக்கல்ல. நடுத்தர வயதைத் தாண்டியும் மரத்தைச் சுற்றி டூயட் பாடி, நாயகியுடன் மறைவில் சென்று உதட்டைத் துடைத்துக் கொண்டே வரும் அபத்தத்தை அவரும் செய்திருக்கிறார். ஆனால் ரஜினி போல தொடர்ந்து அடம்பிடிக்காமல் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை ஏற்க அவர் தயங்கியதில்லை. ‘கடல் மீன்கள்’ ‘ஒரு கைதியின் டைரி’ போன்ற திரைப்படங்களில் வயதான தோற்றத்தில் நடித்த போது அவருடைய வயது முப்பதுக்கும் குறைவாகத்தான் இருந்தது.

தன் வயதுக்கேற்ற பாத்திரங்களை கமல்ஹாசன் ஏற்றாரா என்னும் நோக்கில், 2000-ம் ஆண்டிலிருந்து அவர் நடித்த திரைப்படங்கள், அதிலுள்ள சிறப்பம்சங்கள், தோல்விகள் போன்ற விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். 
 
**
 
சராசரியான திரைப்படங்களைத் தாண்டி கலையம்சமுள்ள படங்களைத் தேடும் ரசிகர்களால் இன்றும் கூட சிலாகிக்கப்படுகிற “ஹேராம்’2000-ம் ஆண்டில் வெளியானது.

உடம்பு சுருங்கி இறுதிப் படுக்கையில் கிடக்கும் கிழவர் பாத்திரம், காதல் பொங்கி வழியும் கணவன், சாமியார் கோலத்தில் குற்றவுணர்வுடன் இரண்டாம் திருமணத்திற்கு அரைமனதுடன் சம்மதிக்கும் ஆசாமி, முறுக்கு மீசையுடன் புது மனைவியுடன் ஐக்கியமாகத் துவங்கும் நபர், அனைத்தையும் துறந்து விட்டு பழிவாங்கப் புறப்படும் கோபக்காரர் என்று ஐந்து விதமான தோற்றங்களில் ‘சாஹேத்ராமனாக’ விதம் விதமாக அவதாரம் எடுத்தார் கமல்.

ஒப்பனை என்கிற சமாச்சாரம் வெறுமனே அழகைக் கூட்டுவதற்காக என்பது அல்லாமல் ஒரு கதாபாத்திரத்தை அதன் மூலம் எப்படியெல்லாம் வேறுபடுத்திக் காட்ட முடியும் என்பதற்கு இந்தத் திரைப்படம் ஒரு கச்சிதமான உதாரணம். அத்தனை தோற்றங்களிலும் கமல் ‘நச்’சென்று பொருந்தினார்.

இதே ஆண்டில்தான் ‘தெனாலி’ திரைப்படம் வெளியானது. போர் சூழல் காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தவராக கமல் நடித்திருந்தார். ஈழத்தமிழ் பேசி அவர் நடித்திருந்தது சிறப்பான அம்சமாக பார்க்கப்பட்டது. ‘எதைக் கண்டாலும் பயம்’ என்பதுதான் இந்தக் கதாபாத்திரத்தின் பலவீனம். ஆனால் அதன் நல்லியல்புகள் காரணமாக இதே பலவீனம்தான் அதன் பலமாகவும் பல காட்சிகளில் வெளிப்படுகிறது. இந்த சுவாரசியமான முரணை அடிப்படையாகக் கொண்ட காட்சிகள் சுவாரசியமாக வெளிப்பட்டிருக்கும். இவற்றைத் தாண்டி இதுவொரு வணிகநோக்குத் திரைப்படமே.

கமலின் சில சிறந்த திரைப்படங்கள், தாமதமாகத்தான் அங்கீகரிக்கப்படும், பாராட்டப்படும் என்றொரு பரவலான கருத்து உண்டு. அதற்கு பொருத்தமான திரைப்படங்களுள் ஒன்றான ‘ஆளவந்தான்’ 2001-ல் வெளியானது.

திடகாத்திரமும் மூர்க்கமும் மொட்டைத் தலையும் கொண்ட ‘நந்து’ பாத்திரம் ரசிகர்களை பெருமளவு ஈர்த்தது. சித்தியின் கொடுமையினால் பாதிக்கப்படும் ஒரு சிறுவன் பிறகு எப்படி மனப்பிறழ்வு கொண்டவனாகவும் பெண் வெறுப்பாளனாகவும் மாறுகிறான் என்பதை தனது மிரட்டலான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார் கமல்.

இதில் வரும் விபரீதமான காட்சியொன்றில், வன்முறையின் தீவிரத்தைக் குறைத்துக் காட்ட அனிமேஷன் வடிவில் படமாக்கப்பட்டது. இந்த உத்தியைப் பார்த்து பிரமித்து தன்னுடைய திரைப்படம் ஒன்றில் பயன்படுத்திக் கொண்டதாக ஹாலிவுட் இயக்குநர் க்வென்டின் டரான்டினோ ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். ஹாலிவுட் படங்களில் இருந்து கமல் நிறைய உருவியிருக்கிறார் என்று கூறப்பட்டிருந்த புகார்களுக்கு மாற்றாக நிகழ்ந்த விஷயம் இது.

பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் போன்ற திரைப்படங்களை சாய்ஸில் விட்டுவிடலாம். அபாரமான நகைச்சுவைத் திரைப்படங்கள் என்பதைத் தாண்டி குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு அவற்றில் எந்த வித்தியாசமும் நிகழ்வில்லை. 
 
 
**

2003-ல் வெளியான ‘அன்பே சிவம்’, கமலின் பயணத்தில் ஒரு முக்கியமான படம். ‘தன் அழகான தோற்றத்தை கோரமாக்கிக் கொண்டு நடிக்க முன்வருபவனே சிறந்த நடிகன்’ என்று சிவாஜி அடிக்கடி கூறுவாராம். அந்த வகையில் ‘குணா’ முதற்கொண்டு பல பரிசோதனை முயற்சிகளை கமல் துணிந்திருக்கிறார். அன்பே சிவமும் அதில் ஒன்று. சோடாபுட்டி கண்ணாடி, தழும்புகளால் நிறைந்திருக்கும் அவலட்சணமான முகம், சார்லி-சாப்ளினை லேசாக நினைவுப்படுத்தும் உடை என்று வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார் கமல். இதன் எதிர்முனையில் தோற்றத்திலும் சிந்தனையிலும் ஒரு நவீன இளைஞனை பிரதிபலிக்கும் பாத்திரத்தில் மாதவன் நடித்திருந்தார். இந்த முரண் படத்தின் சுவாரசியத்திற்கு அடிப்படையாக அமைந்திருந்தது.

படம் முழுக்க ‘வித்தியாசமான தோற்றத்திலேயே’ வந்தால் ரசிகர்கள் விரும்பமாட்டார்களோ என்கிற தயக்கம் எப்போதுமே நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இருக்கும் போல. எனவே பிளாஷ் பேக்கில் முறுக்கு மீசையும் இடதுசாரி சிந்தனையும் கொண்ட தெரு நாடகக் கலைஞனாகவும் வந்து நாயகியுடன் ‘ரொமான்ஸ்’ செய்து இதை சமன் செய்தார் கமல். இந்த உத்தியை பல திரைப்படங்களில் காணலாம்.

2004-ல் வெளியான ‘விருமாண்டி’யும் கமலின் முக்கியமான திரைப்படங்களில் ஒன்று. நெற்றியில் விபூதிப்பட்டை, குங்குமம், முரட்டு மீசை, அலட்சியமாக வாரப்பட்ட தலைமுடி, முன்கோபம் என்று தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தர வயது ஆசாமியை மிக கச்சிதமாக கண் முன்னால் நிறுத்தியிருந்தார் கமல். பல்வேறு கோணங்களில் வெளியாகும் வாக்குமூலங்களைக் கொண்டு ‘உண்மை என்பது எது? என்பதைத் தத்துவார்த்தமாக தேடிய ‘ரஷோமான்’ திரைப்பட உத்தி இதில் பயன்படுத்தப்பட்டிருந்தது. மதுரையின் வழக்கு மொழியை கமல் சிறப்பாக கையாண்டிருந்தார்.

2005-ல் வெளியான ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ வணிகரீதியாக தோல்வியடைந்த படம் என்றாலும் ஒருவிதத்தில் மிக முக்கியமானது. ‘பிளாக் ஹியூமர்’ என்னும் அவல நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்ட முதல் தமிழ் சினிமா என்று இதை அடிக்கோடிட்டு குறிப்பிட வேண்டும்.

‘சூப்பர் ஹீரோக்களுக்கு’ நிகரான ‘அந்தர்பல்டி’ சாகசங்களை இதர நாயகர்கள் செய்து கொண்டிருக்கும் போது, காது கேட்பதில் குறைபாடு உள்ள இயல்பான நடுத்தர வயது ஆசாமியாக இதில் வருவார் கமல். படம் முழுவதும் இம்சைகளை ஏற்படுத்தும் மென்மையான நகைச்சுவைக் காட்சிகள் வந்து கொண்டேயிருக்கும்.

ஒரு காவல்துறை அதிகாரிக்கு வைப்பாட்டியாக இருக்கும் இன்னொரு நடுத்தர வயதுள்ள பாத்திரம்தான் இந்தத் திரைப்படத்தின் நாயகி. பதினெட்டு வயதிற்கு குறையாத இளம் பெண்களுடன் டூயட் பாடிக் கொண்டிருக்கும் இதர நாயகர்களின் திரைப்படங்களுக்கு இடையில் இது வியப்பூட்டும் அம்சம் எனலாம். மூன்று அமெச்சூர் திருடர்கள், தவறுதலாக வேறொரு சிறுவனை கடத்தி வந்து விட்டு படும் பாடுதான் இந்தத் திரைப்படத்தின் மையம். (இதே விஷயம் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாநகரம்’ திரைப்படத்திலும் ஒரு பகுதியாக வரும்).

தனது பிரத்யேக ஸ்டைலில் திரைப்படங்களை உருவாக்குபவர் கெளதம் வாசுதேவ மேனன். ரொமான்ஸ் + ஆக்ஷன் என்பதுதான் இவரது பாணி. இவரும் கமலும் ‘வேட்டையாடு விளையாடு’ (2006) என்கிற திரைப்படத்தில் இணைந்த போது அது புதிய வண்ணத்தில் அமைந்தது. துப்பறியும் அதிகாரியை நாயகனாகக் கொண்டு பல ஹாலிவுட் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. தமிழ் சினிமாவில் அப்படியொரு பாணியில் வந்த முயற்சியாக ‘வேட்டையாடு விளையாடு’ (2006) அமைந்தது.

கணவனால் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் ஒரு பெண்தான் இதில் நாயகி. அந்தச் சூழலில் இருந்து அவரை விடுவித்து நாயகன் மறுமணம் புரிவார். பொதுவாக ஹீரோக்களுக்கு ஒவ்வாத இது போன்ற விஷயங்களையெல்லாம் கமல் இயல்பாகச் செய்து கொண்டிருந்தார்.

சிவாஜியின் ‘நவராத்திரி’யை தாண்டிச் செல்லும் நோக்கும் நோக்கத்திலோ, என்னவோ.. கமல் பத்து வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ (2008) ஒரு முக்கியமான முயற்சி. இதில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் பிரத்யேகமான தோற்றங்களை உருவாக்கி, அதை திரையில் சித்தரிப்பதற்காக கமல் மிகவும் மெனக்கெட்டிருந்தார். ரங்கராஜ நம்பி, பல்ராம் நாயுடு, வின்செட் பூவவராகன் என்று ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒவ்வொரு வழக்கு மொழி, பாணி, பின்னணி என்று ரகளையாக நடித்திருந்தார் கமல். குறிப்பாக கிழவி பாத்திரத்தில் அவரது உடல்மொழியும் வசன உச்சரிப்பும் அபாரம்.

ஆனால் இவற்றை தனித்தனியாக பார்க்கிற போது சுவாரசியமாக இருந்ததே ஒழிய, ஒட்டு மொத்த சித்திரமாகப் பார்க்கிற போது பொழுதுபோக்கு சினிமா என்கிற அளவைத் தாண்டி இதில் விசேஷமாக எதுவும் இல்லை. ‘தன் திரைப்படங்களில் தன்னை மிகவும் முன்நிறுத்திக் கொள்வார்’ என்று கமல் மீது பொதுவாக சொல்லப்படும் விமர்சனத்தை ஆழமாக உறுதிப்படுத்துவதாக ‘தசாவதாரம்’ அமைந்தது. பத்து வேடங்களிலும் கமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு எழுதப்பட்ட திரைக்கதை என்பதால் செயற்கையாகத் தெரிந்தது.
 
 
**

இதர மாநிலங்களில் உருவான சிறந்த திரைப்படம் என்றால் அதை தமிழில் ரீமேக் செய்ய கமல் எப்போதும் தயங்கியதில்லை என்பதற்கு ‘குருதிப்புனல்’ முதற்கொண்டு பல உதாரணங்கள் இருக்கின்றன.  அந்த வகையில் 2009-ல் வெளியான திரைப்படம் ‘உன்னைப் போல் ஒருவன்’. மத தீவிரவாதத்தை அரசு இயந்திரமானது ஆதாய அரசியலோடும் மெத்தனத்தோடும் கையாளும் போது ஒரு சராசரி மனிதனுக்கு எழும் கோபத்தின் வெளிப்பாடுதான் இந்தத் திரைப்படத்தின் மையம். குறுந்தாடியுடன் ஒரு கல்லூரி பேராசிரியரின் நடுத்தரவர்க்க தோற்றத்தில் நடித்திருந்தார் கமல். அசல் வடிவத்தை ஏறத்தாழ சிதைக்காமல் தமிழில் கொண்டு வந்தது பாராட்டுக்குரியது. இதிலும் அவரின் வயதுக்கேற்ற பாத்திரம்தான்.

2015-ல் வெளியான ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தை, ஏறத்தாழ கமலின் Mini Bio-graphical version எனலாம். அந்த அளவிற்கு அவருடைய அசல் வாழ்க்கையின் தடயங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் திரைப்படத்தில் நிறைந்திருந்தன. மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு நடிகன், அபத்தங்களால் நிறைந்திருந்த தன் அதுவரையான வாழ்க்கையை சிறிதாவது அர்த்தபூர்வமானதாக ஆக்க பாடுபடுகிறான். ‘மனோரஞ்சன்’ என்னும் நடிகனாக கமல் நடித்த சில காட்சிகள், அவர் எத்தனை திறமையான நடிகர் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்தன.

‘Spy Thriller’ எனப்படும் வகைமையான அதுவரையான தமிழ் சினிமாவில் மிக அமெச்சூராகத்தான் கையாளப்பட்டது. இதை ஏறத்தாழ ஹாலிவுட் தரத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் ‘விஸ்வரூபம்’ I & II. முதல் பகுதியில் இருந்த இடைவெளிகளுக்கான பதில்கள் இரண்டாம் பகுதியில் இருக்கும் அளவிற்கு அபாரமான திரைக்கதையால் கட்டப்பட்டவை. இந்திய உளவாளி ஒருவன் சர்வதேச தீவிரவாதத்தை எதிர்கொள்வதுதான் இதன் மையம்.

பெண்மையின் சாயல் கொண்ட விஸ்வநாதன், எரிமலையின் ஆற்றலோடு விஸாமாக வெளிப்படும் காட்சி, தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க ஆக்ஷன் காட்சிகளுள் ஒன்றாக இருக்கும். ‘படம் புரியவில்லை’ என்கிற பரவலான கருத்து இதன் மீது எழுந்தது. ஆனால் நிதானமாகப் பார்த்தால் எத்தனை நுட்பமான விஷயங்களை இவற்றில் அடுக்கியிருக்கிறார் என்பது புரியும்.

கமலின் ரீமேக் வரிசையில் இன்னொரு அபாரமான முயற்சி ‘பாபநாசம்’ (2015).  மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ‘திரிஷ்யம்’ தமிழில் திருநெல்வேலியை பின்னணியாகக் கொண்டு வெளியானது. அன்பான மனைவி, இரண்டு மகள்கள் கொண்ட நடுத்தர வயது பாத்திரத்தில் ‘சுயம்புலிங்கமாக’ கமல் நடித்திருந்தார். இதில் அவர் வழக்கம் போல் தன் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தாலும் மலையாளத்தில் மோகன்லால் செய்தததோடு ஒப்பிட்டால் கமல் சற்று பின்தங்கியிருப்பார் என்றுதான் சொல்ல வேண்டும்.

டூயட், காமெடி, ஆக்ஷன் என்று ஒரு தேய்வழக்கு திரைக்கதையுடன் நெடுங்காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் சினிமாவின் நிறத்தை தொடர்ந்து மாற்றிக் கொண்டு வருவதில் கமல்ஹாசனுக்கு பிரதான பங்குண்டு. அந்த வகையில் ‘தூங்காவனம்’ (2015) ஒரு அற்புதமான முயற்சி. பிரெஞ்சு திரில்லர் திரைப்படத்தின் ரீமேக். தமிழ் வடிவத்திற்காக அசட்டு மசாலாக்கள் எதுவும் திணிக்கப்படாமல் யோக்கியமாக உருவாக்கப்பட்டதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒரு முன்னணி நாயகனுக்குரிய தேய்வழக்குகளை கமல் கொண்டிருந்தாலும் ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு இவற்றிலிருந்து அவர் தொடர்ந்து மீற முயற்சித்துக் கொண்டே இருப்பதை கவனிக்க முடியும்.

‘மகாநதி’ திரைப்படத்தில் அவர் இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனாக நடிப்பதைக் கண்ட ஒரு சீனியர் நடிகர் ‘இவ்வாறெல்லாம் நடித்தால் உன் இமேஜ் போய்விடும்’ என்று எச்சரித்தாராம். ஆனால் கமலின் சிறந்த திரைப்படங்களை கணக்கெடுத்தால் ‘மகாநதி’ அதில் உறுதியாக இடம்பெறும் என்பதுதான் வரலாறு. இந்த தொலைநோக்குப் பார்வையும் துணிச்சலும் பாத்திரத்திற்காக தன்னை மாற்றிக் கொள்ளும் மெனக்கெடலும் கமலிடம் எப்போதும் இருந்திருக்கிறது.





suresh kannan

Friday, May 29, 2020

பொன்மகள் வந்தாள் - சினிமா விமர்சனம்




‘சிகை’ ‘ஆர்.கே.நகர்’ போன்ற சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் ஏற்கெனவே OTT-ல் வெளியாகியிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பு, தயாரிப்பாளர்களின் ஆதரவு போன்ற சர்ச்சைகளைத் தாண்டி அமேஸான் பிரைமில் வெளியாகியிருக்கும் முதல் பிரபலமான திரைப்படம் ‘பொன்மகள் வந்தாள்’.

அசலான ஏற்பாட்டின் படி திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டிய இந்தத் திரைப்படம், கொரானோ பிரச்சினை காரணமாக வெளியீடு தள்ளிப் போய், ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படியும் நஷ்டத்தைத் தவிர்க்க வேண்டியும் நேரடி இணைய வெளியீடாக வந்துள்ளது.

தவிர்க்க முடியாத இந்தச் சூழலின் வாயிலாக தமிழ் சினிமாவின் ஒரு புதிய கதவு அதிகாரபூர்வமாக திறந்துள்ளது எனலாம். கொரானோ இடைவெளியில் மக்கள் ஏற்கெனவே அமேஸானிலும் நெட்பிளிக்ஸிலும் குவிந்திருக்கும் போது தமிழ் சினிமாவும் அதிலிருந்து விலகியிருக்க முடியாது. இந்தச் சந்தையின் வழியாக இனி பல்வேறு தமிழ்த் திரைப்படங்கள் OTT-ல் வெளியாகக்கூடும் என்கிற அழுத்தமாக சமிக்ஞையை தந்திருக்கிறது ‘பொன்மகள் வந்தாள்’.

ஆனால் இதன் கூடவே இன்னொரு சோதனையும் இருக்கிறது. பொதுவாக எந்தவொரு தமிழ் திரைப்படம் வந்தாலும் முதலில் அதனுடைய மொக்கையான கள்ள நகல் வெளியாகும். நல்ல பிரிண்ட் வருவதற்கு நான்கைந்து நாட்களாவது ஆகி விடும். ஆனால் ‘பொன்மகள் வந்தாள்’ வெளியான சில மணி நேரங்களுக்குள்ளாகவே பளிங்கு போன்ற பைரஸி பிரிண்ட் வெளிவந்து விட்டது.

வீட்டிற்கே சினிமாவைக் கொண்டு வந்து சேர்க்கும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அனுகூலங்களைப் போலவே அதன் தவிர்க்க முடியாத கசப்பு பக்கங்கள் இவை.

**

சரி. இத்தனை பெருமையுடன் வெளியான ‘பொன்மகள் வந்தாள்’ ஒரு அதிரடி வெளியீடாக, கனகம்பீரமாக உள்ளே நுழைந்திருக்கிறதா என்று பார்த்தால், ஏமாற்றத்துடன் ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

டிரைய்லர் கட்டில் இருந்த குறைந்த சுவாரசியம் கூட படத்தில் இல்லை. ‘கோர்ட் ரூம் டிராமா’ போல அறியப்பட்ட இந்தத் திரைப்படத்தை முழுமையாகப் பார்க்கும் போது ஸ்கூல் டிராமா போல இருக்கிறது.

இந்தத் திரைப்படம் சொல்ல வந்த ஆதாரமான செய்தி அவசியமானது என்றாலும் இழுவையான, அமெச்சூர் டிராமாவின் மூலம் இதன் காண்பனுபவத்தை மிக சலிப்பானதாக ஆக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் J. J. Fredrick.

**

ஊட்டியின் பின்னணியில் ஒரு அமைதியான, அழகான நிலப்பரப்போடு படம் துவங்குகிறது. சில துப்பாக்கித் தோட்டாக்கள் வெடிப்பதில் அந்த அமைதி கலைகிறது. ஜோதி என்கிற பெண், சைக்கோத்தனமாக குழந்தைகளைக் கடத்திக் கொல்வதாகவும், அப்படி அவர் ஒரு குழந்தையைக் கடத்திய போது தடுக்க வந்த இரு இளைஞர்களைச் சுட்டுக் கொன்று விட்டதாகவும் செய்திகள் பரபரப்பாக தெரிவிக்கின்றன. பிறகு நடந்த என்கவுண்ட்டரில் ஜோதியும் செத்து விடுகிறார்.

சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு ‘வெண்பா’ (ஜோதிகா) என்கிற வழக்கறிஞர் இந்த வழக்கைத் தூசு தட்டி எடுக்கிறார். ‘எங்கள் குழந்தைகளைக் கடத்திக் கொன்ற ஒரு பெண்ணுக்காகப் போய் வாதாடுகிறாயே” என்று ஊர் மக்கள் வெண்பாவைத் தூற்றுகிறார்கள்.

வெண்பாவின் முயற்சி வெற்றியடையாதவாறு சில நிழலான முயற்சிகள் நடக்கின்றன. பலவீனமான அரசு தரப்பு வழக்கறிஞர் மாற்றப்பட்டு, புகழ்பெற்ற, ஆனால் கிரிமினல்தனமான வழக்கறிஞரான ராஜரத்தினம் (பார்த்திபன்) வெண்பாவை எதிர்கொள்ள வருகிறார்.

யார் இந்த வெண்பா? எதற்காக அவர் 15 வருடங்கள் கழித்து இந்த வழக்கை நடத்த வேண்டும்? ஏன் அவருக்கு எதிரான முயற்சிகள் நடைபெறுகின்றன.

கோர்ட் டிராமா காட்சிகள் வழியாகவும் அதன் வெளியில் நடைபெறும் சம்பவங்களின் வழியாகவும் இதன் முடிச்சுகள் மெல்ல அவிழ்கின்றன.

**

பெண்மையத் திரைப்படங்களில் ‘ஜோதிகா’ நடிக்கிறார் என்றாலே உள்ளுக்குள் சற்று ‘கெதக்’ என்றுதான் ஆகி விடுகிறது. ராட்சசி போன்ற ஆறுதலான விதிவிலக்குகள் தவிர பலவற்றில் நம்மை பலமாக ஜோதித்திருக்கிறார் ஜோ. இதிலும் அந்த சோதனை தொடர்கிறது. ஆனால் இதற்காக ஜோதிகாவைக் குறை சொல்வதற்குப் பதிலாக அவரைச் சரியாக பயன்படுத்தாத இயக்குநர்களைத் தான் சுட்டிக் காட்ட வேண்டும்.

வெண்பாவாகவும் இன்னொரு பாத்திரத்திலும் நடித்திருக்கும் ஜோதிகா தன் பங்கையும் உழைப்பையும் இயன்ற அளவிற்கு தர முயன்றிருந்தாலும் பலவீனமான திரைக்கதை, நாடகத்தனமான காட்சிகள் போன்றவற்றால் பெரிதாக எந்தக் காட்சியும் சோபிக்கவில்லை.

பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், பிரதாப் போத்தன் என்று அனுபவம் வாய்ந்த இயக்குநர்கள் கம் நடிகர்கள் இதில் இருக்கிறார்கள். ஆனால் எவருமே சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. துணை நடிகர்கள் போலவே வந்து போகிறார்கள். அநியாய விரயம்.

அதிலும் பாண்டியராஜனின் நிலைமை ரொம்பவும் மோசம். அவர் ஒரு காட்சியில் நீதிபதியின் உதவியாளர் போல இருக்கிறார். இன்னொரு காட்சியில் பார்வையாளர்களின் நடுவில் உட்கார்ந்திருக்கிறார்.

செல்வாக்கு மிக்க ஒருவரிடம் நீதிபதி பிரதாப் போத்தன் விலை போவது போல காண்பித்து விட்டு பிறகு மாற்றி விடுகிறார்கள். டிவிஸ்ட்டாம். இப்படி மொக்கைத்தனமான, எளிதில் யூகிக்க முடிகிற டிவிஸ்ட்கள் படம் பூராவும் வந்து நெளிய வைத்துக் கொண்டேயிருக்கின்றன. அதிலும் படம் ஏறத்தாழ முடிந்து நாம் கணினியை ஆஃப் செய்யலாம் என்று முடிவு செய்யும் போது கடைசியிலும் இயக்குநர் ஒரு டிவிஸ்ட் வைத்திருக்கிறார்.. பாருங்கள்.. முடியல.

**

ஒரு திரைப்படத்தில் casting மிக முக்கியம். கோயிஞ்சாமி போல இருக்கிற சுப்பு பஞ்சுவையெல்லாம் ஊழல் செய்கிற காவல் அதிகாரியாக கற்பனை செய்து பார்க்கமுடியவில்லை.

தியாகராஜனின் முகத்தில் பல நூற்றாண்டுகளாக எப்போதுமே எக்ஸ்பிரஷன் வராது. இதிலும் அப்படியே ரோபோத்தனமான வில்லத்தனத்தை செய்து விட்டுப் போகிறார்.

இந்த வரிசையில் ஆறுதலாக இருப்பவர் பார்த்திபன் மட்டுமே. அவருடைய பிரத்யேகமான பாணியில் ‘வெண்பா’ன்னு பேர் வெச்சுக்கிட்டு வெண்பா.. வெண்பா.. வா பேசிக்கிட்டே போறீங்க” என்று அவர் நக்கலடிக்கும் வசனங்கள் மட்டுமே சற்று புன்னகைக்க வைக்கிறது. அது கூட இயக்குநரைத் தாண்டி பார்த்திபனே சொல்லியதாக இருக்கக்கூடும்.

**
ஒளிப்பதிவு ராம்ஜி, எடிட்டிங் ரூபன் போன்று பலமான தொழில்நுட்பக் கலைஞர்களின் வரிசை இருந்தாலும் மொக்கையான திரைக்கதை காரணமாக படத்தைக் காப்பாற்ற முடியவில்லை.

படத்தின் பெரும்பாலான பின்னணி ஊட்டியில் நடப்பது போல் இருந்தாலும் பல காட்சிகளை சென்னையில் படமாக்கி மேட்ச் செய்ய முயன்றிருப்பார்கள் போலிருக்கிறது. ஒரு பாத்திரம் ஸ்வெட்டர் போட்டு வந்தால் அது ஊட்டி என்று நாம் நம்பியாக வேண்டும் போல.

படத்தின் ஆதாரமான கோர்ட் ரூம் காட்சிகளிலும் பெரிதாக எந்வொரு சுவாரசியமும் இல்லை. அதிலும் நீதிமன்றத்திலேயே ஒருவரையொருவர் ஏக வசனத்திலும் ‘நீதான்யா. ஃபிராடு.. நீதாண்டா கிரிமினல்’ என்றெல்லாம் பேசிக் கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. அதிலும் ஒரு பெண் நீதிபதியை ‘இல்ல மாமி.. நான் என்ன சொல்றேன்னா” என்கிறார் பாக்யராஜ். அரசு தரப்பு வழக்கறிஞரை ‘வாங்க நல்லாயிருக்கீங்களா.. காஃ.பியா கூல்டிரிங்ஸா.. என்ன சாப்பிடறீங்க?” என்று கேட்காத குறையாக வரவேற்கிறார் நீதிபதி பிரதாப் போத்தன்.

படத்தின் தயாரிப்பாளர் ஜோதிகாதான். அதற்காக இரண்டு முக்கிய பாத்திரங்களிலும் அவரையே நடிக்க வைத்திருக்க வேண்டுமா என்ன? அதைச் சமாளிப்பதற்காக இறுதியில் தந்திருக்கும் டிவிஸ்ட் சகிக்கவில்லை.



**

பெண் குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறைகளைப் பற்றி பேசுகிற இந்தத் திரைப்படம் சொல்கிற ஆதாரமான செய்தி முக்கியமானதுதான். ஆனால் செயற்கையான பல திருப்பங்களுடன் கொட்டாவி வரும் படி சொல்லியிருப்பதுதான் இந்தத் திரைப்படத்தை மிகச் சுமாரான முயற்சியாக ஆக்கியிருக்கிறது.

“மேடம்.. இந்தப் படத்துல நீங்கதான் சென்ட்டர் ஆஃப் அட்ராக்ஷன். படமே உங்களை வெச்சுதான் ஒடுது” என்று ஜோதிகாவிடம் இனி எந்தவொரு இயக்குநராவது கதை சொல்ல வந்தால் சூர்யாவின் குடும்பம் உஷாராகி விடுவது நல்லது. ஆம். இந்தத் திரைப்படம் ‘சூர்யா –ஜோதிகா’ தயாரிப்பு.

‘பொன்மகள் வந்தாள்’ – ‘வாடி ராசாத்தி’ என்று சொல்லி வரவேற்க வேண்டியதை ‘ஏம்மா வந்து இம்சை பண்றே’ என்று சலிப்போடு சொல்ல வைத்திருக்கிறார்கள்.



suresh kannan

Monday, January 27, 2020

சைக்கோ (2020) – கொடூரத்தின் மீதான ‘ஆன்மீக’ விசாரணை





ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் திரைப்படம் வெளியானால் போதும், ‘பிடித்தது, பிடிக்கவில்லை’ என்று இரு நேரிடை கோஷ்டிகள் தன்னிச்சையாக உருகி சமூகவலைத்தளங்களில் நேரிடையாகவும் மறைமுகமாகவும் ஆவேசமாக மோதிக் கொள்கின்றன.

‘படம் மொக்கை.. உனக்கு எப்படிடா பிடிச்சது.. என்று ஒரு தரப்பும் ‘படம் உன்னதம். உனக்குப் பிடிக்கலைன்னா.. பொத்திட்டு போ..’ என்று அதற்கு இன்னொரு தரப்பு பதில் சொல்வதும் என பல ரகளையான காமெடிகள் அரங்கேறுகின்றன. 'சைக்கோ' திரைப்படத்திற்கும் இது நடந்து கொண்டிருக்கிறது. ‘இயக்குநரே ஒரு சைக்கோதான்’ என்கிற நகைச்சுவையான உளப்பகுப்பாய்வு முதல் ‘சைக்கோங்களுக்கு இந்தப் படம் பிடிக்காதுதான்’ என்பது வரை பல சிறுமைத்தனமான அவதூறுகள் எழுதப்படுகின்றன.

‘சைக்கோ’ என்கிற வார்த்தைக்குப் பின்னுள்ள கனத்தை அறிந்தவர்கள், எளிதாக கல்லெறிவது போல அந்த வார்த்தையைப் பயன்படுத்த மாட்டார்கள். அதன் பின்னுள்ள வாதையும் வேதனையும் சொல்லில் அடங்காதது.

‘அவரவர் ரசனை, புரிதல், அனுபவம் அவரவர்க்கு’ என்கிற முதிர்ச்சியான கலாசாரத்தை நோக்கி நாம் எப்போது நகர்வோம் என்று தெரியவில்லை. ‘ஒரு திரைப்படத்தைப் பற்றிய முதிர்ச்சியான உரையாடல்களை நிகழ்த்துவது என்பது வேறு, என் மதிப்பீடுதான் சிறந்தது’ என்று குடுமிப்பிடி சண்டையிட்டுக் கொள்வது வேறு. இரண்டாவதுதான் அதிகம் நிகழ்கிறது.


**

புத்தரின் வாழ்க்கையில் கடந்து போன அங்குலிமாலா என்பவரைப் பற்றிய ஒரு கதை அல்லது வரலாறு (சமயங்களில் இரண்டும் ஒன்றுதானே?!) உண்டு. இணையத்தில் தேடி வாசித்துக் கொள்ளுங்கள். ‘இதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன்’ என்று ஒரு நேர்காணலில் மிஷ்கின் சொன்னார். படத்தைப் புரிந்து கொள்ள இந்தக் குறிப்பு  மிக அவசியமானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

கதைகளை நேரடியாக அப்படியே புரிந்து கொள்வதைப் போன்ற அபத்தம் இருக்கவே முடியாது. அது குழந்தைகள் தங்களின் அறியாப்பருவத்தில் செய்யும் விஷயம். ‘காக்கா எப்படி குடுவைல கல்லைப் போடும்?” என்று பெரியவர்களான பின்னரும் கேட்டுக் கொண்டிருப்பது அறியாமை.

நுட்பமான புனைவுகளை அப்படியே நடைமுறை இயல்புகளோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. அதுவொரு தனியான உலகம். அதைச் சரியாகப் புரிந்து கொள்ள எழுதியவனுக்கு மட்டுமல்ல, வாசகனுக்கும் நல்ல கற்பனை வளம் வேண்டும். ஒரு நல்ல புனைவு என்பது பல்வேறு உருவகங்கள், குறியீடுகள், புதிர்ப்பாதைகள் என்று பல வழிகளைக் கொண்டிருக்கும். ஆழமானதொரு மையத்தை மறைமுகமாக உணர்த்த விரும்பும். அந்தப் பயணத்தின் வழியே சென்றால் குறிப்பிட்ட புனைவின் ஆன்மாவை அடைய முடியும்.

அங்குலிமாலா கதையின் மையமும் அதுதான். ஒரு ஞானியால் தன் தூய வெளிச்சத்தின் மூலம் கரிய இருளை அகற்ற முடியும். தன் அன்பால், ஞானத்தால், சகிப்புத்தன்மையால் ஒரு கொடூரனை புத்தர் மனம் மாற்றிய கதை அது. இந்த மையத்தையே தன் பிரத்யேக திரைமொழியில் சொல்ல விரும்புகிறார் மிஷ்கின். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டால் இதிலுள்ள தர்க்கப் பிழைகளை அதிகம் நோண்டிக் கொண்டிருக்க மனம் வராது. அது அவசியமுமில்லை என்பதையும் புரிந்து கொள்ள முடியும். 

“கொலை நிகழும் இடங்களில் சிசிடிவி காமிரா இருக்காதா?” என்பது முதற்கொண்டு இத்திரைப்படம் தொடர்பாக எழும் பல கேள்விகள், தர்க்கப்பிழைகள் போன்றவை  இதை இயக்கிய மிஷ்கினுக்குள்ளும் எழாமலா இருந்திருக்கும்? அந்தச் சந்தேகத்தின் பலனை அளிக்க நாம் தயாராகவே இல்லையா?

தன் திரைப்படங்களை தனித்துவமாக உருவாக்க விரும்புகிற ஒரு படைப்பாளி, தன்னுடைய பாணியில் ஒரு பிரத்யேகமான உலகை உருவாக்குகிறார். அதில் அவர் காட்டுகிற சித்திரங்களுக்கு முன்னும் பின்னும் ஆயிரம் விஷயங்கள் நடந்திருக்கக்கூடும். அந்த இடைவெளிகளை ஒரு புத்திசாலியான பார்வையாளன் தன்னிச்சையாக இட்டு நிரப்பிக் கொள்வான் என்கிற துணிச்சலான அனுமானத்தில் அவர் அந்த இடைவெளிகளை விட்டுச் செல்கிறார். ஒரு படைப்பை உருவாக்குகிறவனுக்கும் அதை நுகர்கிறவனுக்கும் உள்ள பரஸ்பர புரிதலும் பகடையாட்டமும்தான் அந்த அனுபவத்தை இன்னமும் உன்னதமாக்குகிறது. 

திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிற சிசிடிவி உதாரணத்தையே எடுத்துக் கொள்வோமே! சமகால கண்காணிப்பு சமூகத்தில் எங்கெங்கு காணினும் காமிராக்கள் இருக்கத்தான் செய்கின்றன?! எனில் நடக்கின்ற குற்றங்கள் அனைத்திலும் சம்பந்தப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு விடுகிறார்களா? இல்லைதானே?

‘நம்மளை விட சைக்கோ அதிக புத்திசாலி சார்’ என்றொரு வசனம் இந்தப் படத்தில் வருகிறது. காவல்துறை அதிகாரியினாலேயே அது சொல்லப்படுகிறது. எனில் தன் புத்திக்கூர்மையை வைத்து அதற்கேற்ப சாதகமான சூழலை அவன் அமைத்துக் கொண்டான் அல்லது தற்செயல் அதிர்ஷ்டங்கள் அவனுக்குத் துணை புரிந்தன என்கிற கற்பனையை ஏன் நம்மால் மேற்கொள்ள முடியவில்லை?

இப்படி தர்க்கப்பிழைகளை நோண்டி கண்டுபிடிக்கும் சமயத்தில் நம் கண் முன்னாலேயே பல உன்னதமான சித்திரங்கள் திரைப்படத்தில் நழுவிக் கொண்டிருக்கும் அபத்தம் நமக்கு உறைக்கவேயில்லையா?

இந்தத் திரைப்படம் குறித்து என் பார்வையிலும் சில போதாமைகளும் சந்தேகங்களும் இருக்கத்தான் செய்தன. இயக்குநரின் நோக்கில் அதற்கு விடைகள் இருக்கலாம். இவற்றிற்குப் பின்னர் வருகிறேன்.

ஆனால் இந்தப் போதாமைகளைக் கொண்டு நிச்சயம் இந்தப் படத்தை நான் 'ஹெஹ்ஹே' என்று கெக்கலி கொட்டி நிராகரிக்க மாட்டேன். ஏனெனில் பெரும்பாலும் குப்பைகள் நிறைந்திருக்கும் தமிழ் சினிமாவில் தனித்துவமாக செயல்படுகிற ஒரு சில படைப்பாளிகளையும் நாம் அவமதித்து, மலினப்படுத்தி நிராகரிப்பதைப் போன்ற அபத்தம் இருக்கவே முடியாது.

**

இந்தத் திரைப்படத்திலுள்ள உன்னதமான விஷயங்களை முதலில் பார்த்து விடுவோம். தொழில் நுட்பங்களை கையாண்டவர்களின் வரிசையில் நான் முதலில் கைகுலுக்க விரும்புவது ஒளிப்பதிவாளரிடம்.

தன்விர் மிர் மிரட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். கொலையாளி தான் கடத்தி வந்த இளம் பெண்ணை பலிபீடத்தில் கிடத்தி வெட்டுவதற்கான முனைப்புகளை செய்கிறான். வேகமான உடல் அசைவுடனும் அதற்கு எதிர்மாறாக நிதானமான முகபாவத்துடனும் அவன் இந்தக் காரியத்தை செய்யும் போது அவனுடன் காமிரா சுழன்றடிக்கும் காட்சி ஒன்றே போதும், தன்விரின் மேதமையைச் சொல்ல. கொலையாளியின் உளக்கொதிப்பை காமிரா மிகத் துல்லியமாக பிரதிபலித்திருக்கிறது என்றே என்னால் கற்பனை செய்ய முடிந்தது.

இது போல் பல காட்சிகளை உதாரணம் சொல்ல முடியும். மெழுகுவர்த்தி வெளிச்சத்தின் பின்னணியில் மேரிமாதாவின் பின்புலத்துடன் வருகிற அந்த பிரத்யேகமான காட்சிக்கோர்வையை உன்னதம் என்றே சொல்ல வேண்டும். எடிட்டிங்கும் பல இடங்களில் மிக அபாரமான தன் பணியைச் செய்திருக்கிறது.

அடுத்ததாக இளையராஜா. எனக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது. “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ ‘குற்றமே தண்டனை’ போன்ற திரைப்படங்களில் இளையராஜாவின் இசை அநாவசியமான இடங்களிலும் மிகையாக ஒலித்துக் கொண்டே இருந்ததாக நான் உணர்ந்தேன். “முன்னணி இசை’ என்று டைட்டில் கார்டில் குறிப்பு போட்டு மிஷ்கின் இதை ‘ரொமான்டிசைஸ்’ செய்ததும் அப்போது எனக்கு நகைப்புக்குரியதாக இருந்தது. (அந்தச் சமயத்தில் இவற்றையெல்லாம் எழுதி பல ராஜா ரசிகர்களின் பகைமையை வேறு சம்பாதித்துக் கொண்டேன்).

ஆனால் இந்தத் திரைப்படத்தில் இளையராஜா ஓர் அற்புதமான மாயத்தை நிகழ்த்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அமைதியாகச் செல்ல வேண்டிய இடங்களில் மெளனத்தை நிரப்பியது ஓர் ஆச்சரியம் என்றால் பரபரப்பான தருணங்களில் ஓர் அருவி போல இசை ஆவேசமாக மேலே எழுந்து அடங்கும் பாணியானது காட்சியின் சுவாரசியத்தைக் கூட்டியதை வியப்புடன் கவனித்துக் கொண்டிருந்தேன். எந்தவொரு இடத்திலும் பின்னணி இசையை நான் இடையூறாக உணரவே இல்லை.

மூன்று பாடல்களுமே அட்டகாசம். ‘உன்னை நெனச்சு..நெனச்சு’ ஏற்கெனவே ஹிட் ஆகி பலரின் இதயத்தை உருக்கிக் கொண்டிருக்கிறது. இது படமான விதம், என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாவிட்டாலும் குறை சொல்ல முடியாத அளவிற்கு இருந்தது. (சிங்கம்புலி எப்போதுமே என்னை எரிச்சலூட்டக்கூடிய ஒரு நகைச்சுவை நடிகர். ஆனால் இந்தப் பாடலின் சில கணங்களில் அவர் தருகிற முகபாவம் அத்தனை அற்புதமாக இருந்தது. கீழேயுள்ள படத்தைக் கவனியுங்கள்.



‘தாய் மடியில்’ பாடலுக்கு கைலேஷ் கேர்’ரின் குரலை உபயோகித்தது நல்ல தேர்வு. அவரின் கரகரப்பான குரல்தான் இந்தப் பாடலின் அடிப்படை வசீகரமே. பாடல்கள் உருவானதில் மிஷ்கினின் பங்களிப்பும் நிச்சயம் இருந்திருக்க வேண்டும். ‘வெளியே போடா’ன்னு பல சமயங்கள்ல என்னை ராஜா துரத்திடுவாரு. இருந்தாலும் கேட்டு கேட்டு இந்த விஷயங்களை வாங்கினேன்” என்று நேர்காணல்களில் சொல்கிறார் மிஷ்கின்.

போலவே இந்தத் திரைப்படத்தின் ‘சவுண்ட் டிசைனிங்கும்’ அட்டகாசம். இதற்காகவே இது நல்ல ஒலியமைப்பு உள்ள அரங்கத்தில் பார்க்க வேண்டிய படமாக இருக்கிறது. இல்லையெனில் இந்த அனுபவத்தை நிச்சயம் இழப்போம்.

**


டிரைய்லரைக் கண்டபிறகு உதய்நிதியின் மீது எனக்கு கூடுதல் அவநம்பிக்கையாக இருந்தது. மிஷ்கின் படத்தின் கனத்தை அவர் தாங்குவாரா என்பது குறித்து. பல காட்சிகளில் குளோசப் இல்லாமல், கூலிங்கிளாஸ் போட்டு  அவர் சமாளித்து விட்டாலும் (அல்லது மிஷ்கினின் உதவியுடன் சமாளிக்க வைக்கப்பட்டாலும்) உதய்நிதியின் நடிப்பில் குறையாக ஏதும் சொல்ல முடியாததே அவரின் சாதனை எனலாம். உதய்நிதியை இப்படி நடிக்க வைத்ததை மிஷ்கினின் சாதனை என்பதையும் இதனுடன் இணைத்துக் கொள்ள வேண்டும்.

ஜலதோஷம் பிடித்த மூக்கு  போன்ற அசட்டுத்தனமான சிகப்புடன் இருக்கும் அதிதி ராவின் முகத்தை என்னால் எப்போதும் அத்தனை ரசிக்க முடியாது. ஆனால் இந்தத் திரைப்படத்திற்கு அவர் அத்தனை கச்சிதமாகப் பொருந்தியிருந்தார். ‘அவன் கொலைகாரன் இல்லை. குழந்தை’ என்று ஒரு தேவதையால்தான் சொல்ல முடியும். அந்தத் தேவதைத்தனம் அவரின் தோற்றத்திலும் உடல்மொழியிலும் இருந்தது. (குறிப்பாக கொலைகாரன் பீடத்தில் கிடத்தி இவரை வெட்ட முனைய போது பளிங்கு போன்ற அந்தக் கழுத்தின் வெண்மை எத்தனை அழகாக இருந்தது?! நாயகி சவால் விடாமல் இருந்திருந்தாலும் அவன் வெட்டாமல் நிறுத்தியிருப்பானோ.. என்னவோ! அத்தனை அழகான கழுத்து).

நித்யா மேனனின் நடிப்பு அட்டகாசமாக இருந்தது என்றாலும் அந்தப் பாத்திரம் ஏன் அத்தனை ‘சினிக்’தனமாக நடந்து கொள்கிறது என்பது புரியவில்லை. ஒரு விபத்து அவருடைய வெற்றிகரமான வாழ்க்கையை முடக்கிப் போட்டது குறித்தான எரிச்சலும் கோபமும் அவரிடம் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால் அம்மாவை ‘வாடி போடி’ என்று அழைப்பதும் (நான் முதலில் ரேணுகாவை வேலைக்கார அம்மணி என்றே நினைத்தேன்). பார்ப்பவர்கள் அனைவரிடமும் எரிந்து விழுவதும் என அவரின் பாத்திர வடிவமைப்பு செயற்கைத்தனமாக இருந்தது. (‘அவள் ஒரு தொடர்கதை’ நாயகி ‘கவிதா’வைப் போல. ஆனால் ‘அஒதொ’வில் அதற்கான பின்னணிக்காரணங்களும் நியாயங்களும் இருந்தன.)

போலவே க்ரைம் சீனை பார்வையிடும் அசந்தர்ப்பமான நேரத்திலும் பாட்டை முணுமுணுத்துக் கொண்டேயிருக்கிற காவல்துறை அதிகாரி. தன் கதாபாத்திரத்திற்கு வித்தியாசமானதொரு மேனரிசத்தை தந்து விட வேண்டும் என்பதற்காக வலிந்து திணிக்கப்பட்டது போல் தெரிகிறது.

"எப்படியாவது தப்பிச்சிடுங்க சார்" என்று அதிதி ராவ் சாத்தியமில்லாத உபதேசத்தைச் சொல்லும் போது "முடியாதும்மா.. டயர்டா இருக்கு" என்று தன் கையறு நிலையை ஏற்றுக் கொள்ளும் காட்சியில் ராம் கவனத்தைக் கவர்கிறார்.


**

இப்போது இந்தத் திரைப்படத்தில் நான் உணர்ந்த போதாமைகளின் விஷயத்திற்கு வருவோம். முன்பே குறிப்பிட்டபடி இயக்குநரின் நோக்கில் இதற்கான விடைகள் இருக்கலாம். ஆனால் இந்த விஷயங்கள் எனக்கு உறுத்தலாக பட்டன. ஆனால் படத்தின் ஒட்டுமொத்த அனுபவத்தில் இவை பெரிதும் குறுக்கீடு செய்யவில்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்.

காவல்துறையினரின் சாகசங்களை பெருமிதப்படுத்தும் விதத்தில் ‘சாமி சிங்கம்’ போன்ற மிகையான திரைப்படங்கள் ஒரு பக்கம் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. சமீபத்திய ‘தர்பாரிலும்’ என்கவுண்ட்டர் என்பது பெருமிதத்தின் கூச்சலாகவே இருந்தது. இப்படிப்பட்ட மிகைகள் ஒருபக்கம் என்றால் இந்தத் திரைப்படத்தில் காவல்துறையின் பங்களிப்பு மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தது.

ஒரு கொடூரமான மனிதனை, கண்பார்வையற்ற இளைஞன் தேடிப் பிடிக்க வேண்டும். இது எப்படி சாத்தியம்? இந்த அசாதாரணமான விஷயமும் முரணும்தான் இந்தப் படத்தின் அடிப்படை சுவாரசியம் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் அதற்காக உதய்நிதி பாத்திரத்தை மட்டும் பிரதானமாக முன்னிறுத்தி காவல்துறை ஆசாமிகளை ‘டம்மி’யாக்கியிருப்பது சற்று ஏமாற்றமாக இருக்கிறது. அதிலும் சிபிசிஐடி அலுவலகத்தில் இருக்கிற ஒருவரே ‘இந்தப்பா.. சம்பந்தப்பட்ட பைல்.. பல வருஷம் ஆகியும் எங்களால பிடிக்க முடியலை. நீயாவது முயற்சி பண்ணு’ என்று கொடுத்து விடுகிறார். நல்ல வேளை, அடுத்த காட்சியில் ஐ.ஜியே தன் தொப்பியைக் கழற்றி உதய்நிதியின் கையில் கொடுத்து விட்டு ‘நான் ரிசைன் பண்ணிட்டேன். நீ அந்தப் போஸ்ட்டுக்கு அப்ளை பண்ணு’ என்பது போல் காட்சி வந்துவிடுமோ என்று பயமாகி விட்டது.

நித்யா மேனன் சிறப்பாக பணிபுரிந்த ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி. அவர் சமகால அதிகாரிகளோடு பேசி வழக்கு தொடர்பான தகவல்களை வாங்க முடியாதா? இதற்காக உதய்நிதியை சிபிசிஐடி அலுவலகத்தில் திருட அனுப்புவது எல்லாம் அசாதரணமான கற்பனையாக இருக்கிறது. உதய்நிதியை ஆரம்பத்தில் ஒரு சராசரி நபர் என்கிற கோணத்தில் ஒதுக்கித் தள்ளினாலும் ஒரு கட்டத்தில் அவருடைய தேடலில் உள்ள சிரத்தையை காவல்துறையினரும் அறிந்து கொள்கிறார்கள். எனில் தங்களின் விசாரணையில் ஏன் அவரையும் இணைத்துக் கொள்ளவில்லை?

அதிதி ராவ் போகிற இடங்களுக்கு எல்லாம் அவரை பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறார் உதய்நிதி. Stalking என்கிற இந்த விஷயம் எத்தனை ஆபத்தானது என்பதைப் பற்றி தொடர்ந்து பேசுகிறோம். ஆனால் மிஷ்கின் படத்திலேயே இது வருகிறது. ‘உங்க வீட்டு வாட்ச்மேன், வேலைக்காரங்களுக்கு காசு கொடுத்துதான் நீ போற இடங்களை தெரிஞ்சுப்பேன்” என்கிறான் நாயகன். இது போன்ற சில்லறைத்தனமான விஷயத்திற்கே நாயகி அவனை வெறுக்க வேண்டும். ஆனால் காதல் போல் ஏதோ ஒன்று அவளுக்குள் வந்து விடுவது அநியாயம்.

“அவன் என்னைக் காப்பாத்த வருவான்’ என்கிற அசாதாரணமான நம்பிக்கை அதிதி ராவிற்கு வர வேண்டுமென்றால் அவர்களின் காதலும் பரஸ்பர புரிதலும் அழுத்தமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பழகத் துவங்கிய கணத்திலேயே அவள் கடத்தப்பட்டு விடும் போது அவளுக்கு எவ்வாறு அப்படியொரு நம்பிக்கை வரும்? இது சம்பந்தப்பட்ட காட்சிகள் அழுத்தமாக பதிவாகாததால் அதிதி ராவின் நம்பிக்கை மிகையாகத் தோன்ற வைக்கிறது.

கார் ஓட்டத் தெரிந்த ஒரு நபர் கூட இருக்கும் போது உதய்நிதியும், நித்யாவும் ஏன் அந்த சாகசப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்? கொலைகாரனின் குணாதிசயத்தைப் பற்றி நன்கு அறிந்த சிங்கம்புலி, ஏன் எந்தவொரு உதவியும் இல்லாமல் அவனைப் பின்தொடர வேண்டும்..


இப்படி பல கேள்விகள் எனக்கும் தோன்றத்தான் செய்கின்றன. ஆனால்?


**

‘அவன் என்னைத் தேடி வருவான்; காப்பாத்துவான்’ என்கிற அதிதி ராவின் சவாலை ஏற்று கொலைகாரன் சில நாட்கள் அவகாசம் தருவது ஒரு கிளிஷேதான் என்றாலும் அதிலொரு வசீகரம் உள்ளது. காவல்துறை அதிகாரி சொல்வது போல ‘சராசரி நபர்களை விடவும் மனப்பிறழ்வு உள்ளவர்கள் கூடுதல் புத்திசாலித்தனத்துடன் இயங்குவார்கள். எனவேதான் அதிதி ராவ் சொல்வது அவனுக்கு ஒரு சுவாரசியமான விளையாட்டாகப் படுகிறது. எனவேதான் உற்சாகமாக இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு அவளை தற்காலிகமாக சாகடிக்காமல் இருக்கிறான்.

அதே சமயத்தில் உதய்நிதி மெல்ல மெல்ல தன்னை நெருங்கி வருவதை அறிந்து தோல்வியின் வாசனையையும் அவனால் உணர முடிகிறது. ‘கெளதம் வந்துட்டு இருக்கான்” என்று தன் வீழ்ச்சியை ஒப்புக் கொள்கிற இடத்திற்கு அவன் வந்து சேர்வது இந்தப் பாத்திரத்தின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது.

**

மனிதனை அவனிடமிருந்து உற்பத்தியாகிற கீழ்மைகளிலிருந்து விலக்கி, நல்லனவற்றின் பக்கம் தள்ளுவதைத்தான் ஏறத்தாழ அனைத்து மதங்களும் செய்ய முயல்கின்றன. ஆனால் காலப்போக்கில் அதில் நுழைக்கப்படுகிற இடைச்செருகல்கள் நஞ்சை கலந்து விடுகின்றன. சில மத நிறுவனங்களில் ‘காமம்’ என்பது பாவமானது என்கிற விஷயம் தொடர்ந்து விதைக்கப்பட்டு அது தொடர்பான குற்றவுணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி பெறுகின்றன. மனிதனின் சில ஆதாரமான இச்சைகள் என்றுமே பாவமாக முடியாது. இது சார்ந்த விசாரணையையும் இந்தத் திரைப்படம் மேற்கொள்கிறது.

பெரும்பாலான மனச்சிக்கல்களின் ஆணிவேருக்கும் காமத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பது உளவியலின் ஆதாரமான கண்டுபிடிப்பு. ‘இயற்கையான உந்துதலால் செய்யப்பட்ட ஓர் இயல்பான காரியம், தவறு என்று கடுமையாக தண்டிக்கப்பட்டதால், அவமானப்படுத்தப்பட்டதால் ஒருவன் மிருகமாக உறுமாறுகிறான். சமூகத்தைப் பழிவாங்கத் துவங்குகிறான்.

கொடூரமான குற்றவாளிகள் வானத்தில் இருந்து குதிப்பதில்லை. இந்தச் சமூகத்தின் உள்ளே இருந்துதான் உருவாகிறார்கள். ஒருவகையில் சமூகம்தான் அவர்களை உருவாக்குகிறது எனலாம். அவர்களின் பங்களிப்பில்லாமல் குற்றவாளிகள் உருவாவதில்லை. குடும்பம், சமூகம், கல்விக்கூடம், அரசு என்று பல நிறுவனங்கள், குற்றவாளிகளின் உருவாக்கத்திற்கு காரணமாக இருக்கின்றன. நீங்கள், நான், அவர்கள் என்று நாம் அனைவருமே இதற்கு அறிந்தோ அறியாமலோ காரணமாக இருக்கிறோம்.

எப்போதோ படித்த ஒரு சிறுகதை நினைவிற்கு வருகிறது. தன்னுடைய மாணவன் ஒருவன் பெரும்பான்மையான சமயங்களில் ஆபாச வசைகளை சக மாணவர்களிடம் இறைப்பதை ஓர் ஆசிரியர் தொடர்ந்து கண்டித்துக் கொண்டேயிருக்கிறார். இத்தனைக்கும் அவன் மூன்றாம் வகுப்பு மாணவன்தான். ஆனால் ஆசிரியரின் கண்டிப்பை அலட்சியப்படுத்துகிறான்.

ஒரு கட்டத்தில் மிகவும் கோபமடையும் அவர், சிறுவனை இழுத்துக் கொண்டு அவனுடைய வீட்டுக்குச் செல்கிறார். அவனுடைய பெற்றோர்களிடம் இவனைப் பற்றி புகார் சொல்லி கண்டிக்கச் சொல்ல வேண்டும் என்பது அவரின் நோக்கம். வீட்டை நெருங்கும் போது உள்ளே இருந்து பயங்கர சத்தம். சிறுவனின் பெற்றோர்கள் கர்ணகடூரமான ஆபாச வசைகளை பரஸ்பரம் இறைத்து சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஒரு கணத்தில் ஆசிரியரின் பார்வை முற்றிலுமாக மாறி விடுகிறது. சிறுவனின் ஆபாச பேச்சிற்கு காரணம் அவனல்ல என்கிற உண்மை புரிகிறது. சிறுவனின் மீதுள்ள கோபம் முற்றிலும் மறைந்து ஆசிரியரின் பார்வையில் அவன் அனுதாபத்திற்குரியவனாக அந்தக் கணத்தில் மாறி விடுகிறான்.

இந்த அடிப்படையான விஷயத்தைத்தான் மிஷ்கின் இந்தத் திரைப்படத்தில் ஒரு நேரடி நீதிக்கதையாக அல்லாமல் ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் வடிவத்தில் நுட்பமாக சொல்ல முனைகிறார்.

“அவனைப் பிடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. தூக்குல போடுங்க சார்” என்று சந்தானத்தின் பாணியில் கூவுவது சராசரிகளின் இயல்பு. ஆனால் அறிவுத்தளம், ஆன்மீகத் தளம் போன்றவற்றின் பின்னணியில் இயங்குபவர்களால் அப்படி எளிதான. செளகரியமான தீர்விற்கு வந்து விட முடியாது. கொடூரமான குற்றவாளிகள் என்றாலும் அவர்களின் இளமைப்பருவ பிரச்சினைகளை, பின்னணிக் காரணங்களை அறிய முற்படும் அனுதாபத்துடன்தான் அவர்களால் இயங்க முடியும். அவர்கள் இந்த மனக்காயங்களுக்கு சிகிச்சையளித்து குற்றவாளிகளை மைய சமூகத்தில் கலக்க வைக்கவே முற்படுவார்கள். ஊரே அச்சத்துடன் வெறுத்து ஒதுக்கிய கொடூரன் அங்குலிமாலாவை புத்தர் தேடிக் குணப்படுத்தியது போல.

இந்தப் புரிதலுக்கும் முதிர்ச்சிக்கும் நாம் வந்தடையாவிட்டால் “ஏம்மா.. ஒரு கொடூரமான கொலைகாரனைப் போய் குழந்தைன்னு சொல்றீங்க?” என்று இந்தத் திரைப்படத்தில் வரும் பத்திரிகையாளர்களைப் போல நாமும் அதிர்ச்சியடைய வேண்டியதுதான்.

சைக்கோவாக நடித்த ராஜ்குமாரின் பங்களிப்பு அபாரம். அவருக்குள் இருக்கும் நல்லியல்பு ஒரு துவக்க காட்சியில் காட்டப்படுவதின் மூலம் ஒரு மனிதனுக்குள் உள்ள மிருகத்தின் அளவின் சதவீதமும் உணர்த்தப்படுகிறது.

மதவெறி பிடித்தவன், ஆணவக்கொலை செய்கிறவன், காதலை மறுத்த பெண்ணின் மீது ஆசிட் அடிக்கிறவன் என்று நம் சமூகத்தில் பல சைக்கோக்கள் உண்டு. உண்மையைச் சொன்னால் நாம் அனைவருமே ஒவ்வொரு வகையில் சைக்கோக்கள்தான். அவற்றின் சதவீதம்தான் மாறுபடுகிறது.

குற்றவாளிகளுக்குத் தரப்பட வேண்டியது தண்டனை அல்ல. மன்னிப்பு. ஏனெனில் அதன் சுமையை அவனால் தாங்கவே முடியாது. மன்னிப்புதான் குற்றங்களின் பங்களிப்பை கணிசமாக குறையச் செய்யும். தண்டனைகள் அல்ல.


suresh kannan

Thursday, January 23, 2020

'ஹீரோ' (2019) - மோசமான திரைக்கதைதான் இதன் வில்லன்




பி.எஸ். மித்ரன் இயக்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘ஹீரோ’ என்கிற திரைப்படத்தைப் பார்த்தேன். படத்தின் தலைப்பு ‘ஹீரோ’வாக இருந்தாலும் திரைக்கதைதான் இதன் வில்லன் என்று சொல்ல வேண்டும்.  இதில் இருந்த அபத்தமான ‘சினிமேட்டிக்’ தனங்களை கழித்து விட்டுப் பார்த்தால் இந்தப் படம் சொல்ல வரும் ஆதாரமான செய்தி சமகாலத்திற்கு அவசியமானதே.

அதற்கு முன் சில விஷயங்கள்.

சில வருடங்களுக்கு முன் சாலையில் சென்று கொண்டிருந்த போது ஒரு விநோதமான சத்தத்தை கேட்டேன். சைக்கிளில் இடியாப்பம் விற்றுக் கொண்டிருந்தவரிடமிருந்து அந்தச் சத்தம் சிறிய ஸ்பீக்கரில் இருந்து ‘இடியோப்பம்… இடியோப்பம்.’ என்று தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. அந்தச் சமயத்தில் எனக்கு எழுந்த மனவெழுச்சி சொல்லில் அடக்க முடியாததாக இருந்தது. வாசிக்கும் சிலருக்கு இது நகைப்பாக, சாதாரணமானதாக கூட தோன்றலாம். ஆனால் எனக்கு அது அவசியமான ‘கண்டுபிடிப்பாக’ தோன்றியது.

சற்று யோசித்துப் பாருங்கள். சாலை வழியாக வீடு வீடாக பொருட்களை விற்றுச் செல்லும் சிறு வணிகர்கள் தங்களின் உரத்த குரலில் தாங்கள் விற்கும் பொருட்களை கூவிக் கொண்டே செல்ல வேண்டும். வீட்டினுள் இருக்கும் இல்லத்தரசிகளின் காதில் விழுமாறு உரக்க கூவினால்தான் அவர்களின் பிழைப்பு நடக்கும். இப்படி தினமும் வருடக்கணக்கில் கூவுபவரின் தொண்டை என்னவாகும்? எத்தனை காலமாக இவர்கள் இப்படி அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள்? ஆனால் ஒரு சிறிய கண்டுபிடிப்பு அவர்களின் பெரும் சுமைகளில் ஒன்றை இறக்கி வைத்திருப்பது எத்தனை மகத்தான விஷயம்?!

எளிய சமூகத்தின் மக்களுக்கு உபயோகமாகும், அன்றாட வாழ்வில் நாம் சிரமப்பட்டு செய்யும் விஷயங்களை எளிதில் கடக்க உதவும் ‘கண்டுபிடிப்புகள்’ உன்னதமானவை என்று எப்போதும் எனக்குத் தோன்றும். ரோபோட்டும் செயற்கைக்கோளும் மட்டும் விஞ்ஞான வளர்ச்சியில்லை. இளநீரை எப்படி எளிதாக துளையிட்டு பயன்படுத்துவது என்பது போன்ற சாதாரண ‘கண்டுபிடிப்புகளும்’ என்னளவில் முக்கியமானவையே.

நாம் பத்திரிகைகளில் அவ்வப்போது வாசித்திருப்போம். ‘+2 படிக்கும் மாணவர் இந்த அரிய விஷயத்தை கண்டுபிடித்தார்’ என்பது போன்று பல செய்திகள்.. அதற்குப் பிறகு அந்தக் கண்டுபிடிப்புகளும் அவர்களும் என்னவானார்கள் என்கிற தகவலே நமக்குத் தெரியாது. அந்தக் கண்டுபிடிப்புகள் நடைமுறைக்கு வந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். ஆனால் வராது.

இந்தத் திரைப்படத்தில் சித்தரிக்கப்படுவது போல சம்பந்தப்பட்ட மாணவர்களை ‘கார்ப்பரேட்’ ஆசாமிகள் கடத்தி கண்ணில் ஊசி போட்டு முடக்கி விடுவார்கள் என்றெல்லாம் ‘சினிமாத்தனமாக’ நம்ப நான் தயாரில்லை. அவர்களின் ஆர்வத்தை வளர்த்தெடுக்கவோ, பொருளுதவி செய்து ஆதரிக்கவோ எவரும் இருந்திருக்க மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தமாக இருந்திருக்கக்கூடும். அவர்கள் அப்படியே முடங்கிப் போய் வேறு திசையில் சென்றிருப்பார்கள்.

**

இந்தத் திரைப்படத்தில் அழுத்தமாகவும் தொடர்ந்தும் சுட்டிக்காட்டப்படுவது போல நமது கல்விமுறையானது, சுயசிந்தனையற்ற, மனப்பாடக்கல்வியில் மூழ்கிய ‘ஆட்டுமந்தைகளைத்தான்’ பெரும்பான்மையாக உருவாக்குகிறது. ‘நான் டாக்டராகி ஊருக்கு சேவை செய்வேன்’ என்று இளமைப்பருவத்தில் மெய்யான ஆவலுடன் சொல்லுகிற சிறுவர்கள், வளர்ந்து சம்பந்தப்பட்ட கல்வியைக் கற்ற பிறகு அதே சேவை மனப்பான்மையுடன் பெரும்பாலும் இருப்பதில்லை. மாறாக தமது கல்வியைப் பயன்படுத்தி எப்படி அதிக பொருள் ஈட்டுவது என்கிற எண்ணம் தோன்றி அது ஒரு கட்டத்தில் அடங்காத வெறியாவும் பேராசையாகவும் மாறி விடுகிறது.

‘எந்தப் படிப்பில் படித்தால் அதிகம் சம்பாதிக்க முடியும்?” என்கிற சூழல்தான் பெரும்பாலான மாணவர்களின் எதிர்காலக்கல்வியை தீர்மானிக்கிறது. பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை அப்படித்தான் வழிநடத்துகிறார்கள். ஏறக்குறைய பங்குச் சந்தை நிலவரத்திற்கு ஒப்பான சூதாட்டம் இது. மாணவர்களின் தனித்தன்மை, திறமை, ஆர்வம் போன்வற்றிற்கு எவ்வித மதிப்பும் இல்லை.

ஒரு மாணவனின் தனித்திறமைகளை ஆரம்பக்கட்டத்திலேயே தொடர்ந்து கவனித்து அது தொடர்பான கல்விக்குள் அவனை வழிநடத்துவது தொடர்பான கல்விமுறை மேலைய நாடுகளில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் அவ்வாறான அணுகுமுறை என்பது இங்கு துளியும் இல்லை.

அரசியல் நீக்கம் செய்யப்பட்ட, துளியும் சமூக அக்கறை இல்லாத, சுயநலத்தில் மூழ்கிய தலைமுறையினர்தான் பெருகி வருகிறார்கள். அபூர்வமாக, தியாகமும் பொதுநலமும் கொண்டு உருவாகி வருகிறவர்கள் எள்ளலாகவும் மலினமாகவும் பார்க்கப்படுகிறார்கள்; தனிமைப் படுத்தப்படுகிறார்கள்.


**

இந்தச் செய்தி ‘ஹீரோ’வில் மிக அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. இவை சில காட்சிகளில் கூர்மையான வசனங்களாகவும் வெளிப்படுகிறது.

ஆனால் இதிலுள்ள மிகையான சினிமாத்தனங்கள், இந்த ஆதாரமான செய்தியை அமுக்கி ஒரு சலிப்பான அனுபவமாக மாற்றி விடுகிறது. இளம் திறமைகள் அடையாளம் காணப்படாததும் வளர்த்தெடுக்கப்படாததும் என்பது ஒரு சமூகப் பிரச்சினை. ஆனால் அதை இயல்பான, நம்பகத்தன்மையுடனான காட்சிகளாக சித்திரிக்காமல் பழைய கால நம்பியார், வீரப்பன் மாதிரி ‘கார்ப்பரேட் வில்லன்’ வழியாக சித்தரித்தது மோசமான கற்பனை.

தங்களின் லாபவெறிக்கு தடையாக உள்ள அனைத்தையும் கார்ப்பரேட்தனம் என்பது விழுங்கி ஏப்பம் விட்டு விடும் என்பது உண்மைதான். ஆனால் அது இந்தத் திரைப்படத்தில் மிகையான வணிகத்தனத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. அதுவே இதை ஒரு முக்கியமான சினிமாவாக ஆகி விடாத விபத்தைச் செய்திருக்கிறது.

பொதுவாக தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு இரண்டாவது படம் என்பது ‘கண்டம்’ என்பார்கள். இதுவொரு கற்பிதம் அல்லது மூடநம்பிக்கை. ஆனால் மித்ரனும் இந்தக் கண்டத்தில் விழுந்து விட்டார் என்றுதான் தோன்றுகிறது.

இன்றைய தொழில்நுட்பம் என்பது எத்தனை மாய வலைகளை, டிஜிட்டல் படுகுழிகளை உருவாக்கி வைத்திருக்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வை, ஜனரஞ்சகமான மொழியில் தன் முதல் திரைப்படத்தில் (இரும்புத்திரை) சொல்லியிருந்தார் மித்ரன். (தோழி சமந்தா நடித்திருந்ததும் ஒரு கூடுதல் சிறப்பம்சம்). 😃 ஆனால் இரண்டாவது திரைப்படத்தில் இந்த ஜனரஞ்சகமான திரைமொழி சரிவர அமையவில்லை.

‘சூப்பர் ஹீரோ’ என்பவன் வானத்தில் இருந்து குதித்து நம்ப முடியாத சாகசங்களைச் செய்பவன் அல்ல. தம்மைச் சுற்றி நிகழும் அநீதியைத் தட்டிக் கேட்டு அதற்காகப் போராட முனையும் எந்தவொரு சாமானியனும் ஹீரோதான்’ என்கிற செய்தியைச் சொல்வதற்காக பல்வேறு நம்பமுடியாத திருப்பங்களையும் வணிக அம்சங்களையும் இயக்குநர் பயன்படுத்தியிருப்பது திகட்ட வைக்கிறது.

“மக்களுக்கு கல்வி தர்றதுக்காக கொள்ளையடிக்க ஆரம்பிச்சேன்” என்று ‘ஜென்டில்மேன்’ கதையை அர்ஜுனின் பிளாஷ்பேக்கில் உபயோகித்தது மட்டுமல்லாமல் அதையும் அவரின் வாயாலேயே வசனமாக சொல்ல வைத்தது நல்ல நகைச்சுவை. உண்மையில் இந்தத் திரைப்படத்தை ஷங்கரின் பாணியில்தான் மித்ரன் நகலெடுக்க முயன்றிருக்கிறார். இறுதியில் பெய்யும் பணமழை (சிவாஜி’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் இது) முதற்கொண்டு பல தடயங்கள் தெரிகின்றன.

இத்தனை தீவிரமான செய்தியை சொல்ல வரும் இந்தத் திரைப்படத்தின் ஆரம்பக் கணங்கள் ஒரு மட்டமான சினிமாவின் பாணியில் இருக்கின்றன. நாயகியோடு (இயக்குநர் பிரியதர்ஷனின் மகளாமே?!. செம க்யூட்!) சிவகார்த்திகேயன் அடிக்கும் ‘ரொமான்ஸ்’ லூட்டிகள் ஆரம்பத்திலேயே சோர்வை ஏற்படுத்துகின்றன. ஒரு கட்டத்தில் துணைநடிகரின் நிலைக்கு சிவகார்த்திகேயன் சென்று விடுகிறார்.

“மிஸ்டர். லோக்கல் திரைப்படத்தின் பயங்கரமான தோல்விக்குப் பிறகு ‘நம்ம வீட்டு பிள்ளை” சிவகார்த்திகேயனுக்கு சற்று கைகொடுத்தது. ஆனால் அவர் ‘ஹீரோ’வில் மீண்டும் சறுக்கியிருப்பது துரதிர்ஷ்டம்.

**

மாணவர்களின் சுயசிந்தனையை வளர்க்காத சமூகச் சூழல்தான் இந்தத் திரைப்படத்தின் அடிப்படை. அப்படி விதிவிலக்காக மீறியெழுகிற இளைஞர்களும் சமூகத்தின் அவலமான சூழலால் காயடிக்கப்படுகிறார்கள். “நான் கண்டுபிடிச்சத மாத்திச் சொல்லி என்னையே திருடி’ன்னு சொல்லிட்டாங்க” என்கிற மனஉளைச்சலில் வருத்தப்பட்டு சாகிறாள் இதில் வருகிற ஓர் இளம்பெண்.

வெளிவந்த பிறகு, இந்தப் படமும் அதே போன்றதொரு சர்ச்சையில் சிக்கித் தவித்ததை அவல நகைச்சுவை என்றுதான் சொல்ல வேண்டும்.




suresh kannan

Sunday, January 19, 2020

சாம்பியன் (2019) சுசீந்திரனின் தொடர் விளையாட்டு



‘கென்னடி கிளப்’ திரைப்படத்தைத் தொடர்ந்து சுசீந்திரனின் சமீபத்திய திரைப்படமான ‘சாம்பியன்’ பார்த்தேன். இதுவும் Sports genre படம்தான். இயக்குநருக்கு இந்த வகைத் திரைப்படங்கள் சற்று நன்றாக இயக்க வருகிறது என்பதற்காக இந்த வகைமையையே தொடர்வது சலிப்பூட்டுகிறது. இந்த ‘விளையாட்டுக்கு’ அவர் சற்று இடைவெளி தரலாம். இது விளையாட்டு சார்ந்த திரைப்படம் என்றாலும் அவை சார்ந்த காட்சிகள் அதிகமில்லை என்பது ஒரு சிறிய வித்தியாசம்.

வெண்ணிலா கபடி குழுவில் சாதிய அரசியல், ஜீவாவில் பிராமண அரசியல், கென்னடி கிளப்பில் வடஇந்திய அரசியல் மற்றும் விளையாட்டுத் துறையில் உள்ள ஊழல் என்கிற வரிசையில் சித்தரித்த இயக்குநர், இந்தத் திரைப்படத்தில் வறுமைப் பின்னணியில் உள்ள சேரி வாழ் இளைஞர்கள், வன்முறையின் பால் எளிதில் விழுந்து வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வதை கையில் எடுத்திருக்கிறார். (இதுவும் பழைய கருத்தாக்கமே என்றாலும்).

தனது முந்தைய திரைப்படங்கள் ஒன்றில் செய்த பிழைக்கான பரிகாரத்தை இதில் இயக்குநர் செய்திருக்கிறார் என்று இதனை எடுத்துக் கொள்ளலாம். ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் சில எளிய சமூகத்து இளைஞர்கள் கொடூரமான வன்முறையில் ஈடுபடுவதைக் காட்டி அதிர்ச்சியளித்திருந்தார். அவர்கள் அப்படி உருவாகி வருவதின் பின்னணி குறித்த கரிசனமோ, சமூகவியல் பார்வையின் அக்கறையோ அதில் இல்லை. இது பற்றிய விமர்சனங்கள் அப்போது வந்திருந்தன. எனவே அது குறித்தான சுயபரிசீலனையுடன் இவ்வாறானதொரு மையத்தை ‘சாம்பியன்’ திரைப்படத்தில் இயக்குநர் கையாண்டிருக்கலாம் என்பதென் யூகம். எதுவாக இருந்தாலும் இயக்குநருக்கு பாராட்டு.

**

கால்பந்து விளையாட்டுக்கும் எளிய சமூகத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு உலகெங்கிலும் உண்டு. அவ்வாறாக கால்பந்து விளையாட்டில் திறமை கொண்ட இளைஞன் ஜோன்ஸ். (விஷ்வா). வடசென்னையில் வசிப்பவன். ஆனால் அவனுடைய அம்மாவோ தன் மகன் விளையாட்டில் செல்லக்கூடாது என்று உறுதியாக தடுக்கிறாள். அதற்கொரு பின்னணிக்காரணம் உண்டு. இப்படியான தடைகள் மற்றும் பொருளாதார ரீதியான சிக்கல்கள் போன்றவற்றைத் தாண்டி தனது கோச் சாந்தா (நரேன்) உதவியுடன் விளையாட்டில் மெல்ல முன்னேறி வருகிறான் ஜோன்ஸ்.

இந்தச் சமயத்தில்தான் தனது தந்தையின் (மனோஜ்) மரணம் தற்செயலானதல்ல, அது ஒரு திட்டமிடப்பட்ட கொலை என்று அறிகிறான். பழிவாங்க அவன் மனம் துடிக்கிறது. தனது ஆதர்சமான கால்பந்திற்கும் பழிவாங்கும் உணர்ச்சிக்கும் இடையே தத்தளிக்கிறான். அவனது கனவு என்னவானது என்பதை மீதமுள்ள காட்சிகள் விவரிக்கின்றன.

**

இந்தத் திரைப்படத்தின் முன்னணி பாத்திரத்திற்காக ஒரு புதுமுகத்தைத் தேர்ந்தெடுத்தற்காகவே இயக்குநரைப் பாராட்டியாக வேண்டும். பொதுவாக முன்னணி நடிகர்களின் படத்தையே நாம் அதிகம் கவனிக்க விரும்புவோம். நல்ல கதையம்சம், இயக்கம் போன்றவற்றைக்  கொண்டிருந்தாலும் கூட அவை அறிமுகமல்லாத புதுமுகங்களால் நிறைந்திருந்தால் நாம் ஓரக்கண்ணால் மட்டுமே அறிய விரும்புவோம் அல்லது முற்றாகவே கூட புறக்கணித்து விடுவோம்.

இந்தச் சூழலில், ஜோன்ஸ் என்கிற பாத்திரத்திற்கு புதுமுகத்தைத் தேர்ந்தெடுத்தது சிறப்பான அம்சம். ஒருவேளை விஷ்வா என்கிற அந்தப் புதுமுகம், கால்பந்து விளையாட்டில் தேர்ந்தவனாக இருந்தது அவர் தேர்வு செய்யப்பட்டதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். எதுவாக இருந்தாலும் இதுவொரு நல்ல விஷயம்.

இந்தி நடிகர் ‘நவாசுதீன் சித்திக்’கின் தோற்றத்தை நினைவுப்படுத்தும் இளைஞனான விஷ்வா, இந்தத் திரைப்படத்தில் தனது பங்களிப்பை அருமையாகத் தந்துள்ளார். அறிமுகம் இல்லாத பிம்பம் என்பதால் துவக்கத்தில் இவரை அசுவாரஸ்யமாக கவனித்தாலும் போகப் போக தனது பாத்திரத்தில் ஒன்றி நடித்து நம்மையும் ஈர்த்து விடுகிறார். “பழிவாங்கும் உணர்ச்சியில் இருந்து என்னால் வெளியே வரமுடியவில்லை சார்..” என்று கோச்சிடம் அழும் காட்சியில் இவரது நடிப்பு சிறப்பாக இருக்கிறது.

இரண்டு இளம்பெண்கள் இதில் வருகிறார்கள். தமிழ் சினிமாவின் சம்பிரதாய நாயகி போல அவர்களின் பாத்திரம் அமைக்கப்படவில்லை என்பதே பெரிய ஆறுதல். பள்ளிக்கூட தோழி மற்றும் காதலியுமாய் வரும் ‘புஷ்டியான’ பெண்.. (கழுக் மொழுக் என்று ‘ஸெரலேக்’ குழந்தை போல அத்தனை அழகு) ஜோன்ஸின் நலவிரும்பியாக இருக்கிறார். சரியான திசையில் நல்வழிப்படுத்துகிறார். கல்லூரித் தோழியாக வரும் பெண்ணும் அத்தனை அழகு. இவர்களின் உறவு காதலா என்பதை இவர்களே அறிவதற்குள் வர்க்க வேறுபாடு காரணமாக தடை ஏற்பட்டு விடுகிறது.

ஜோன்ஸின் தாயார் ‘ஜெயா’வாக நடித்த வாசுகியின் பங்களிப்பைத் தனித்துக் குறிப்பிட வேண்டும். ஏறத்தாழ ‘அசுரன்’ திரைப்படத்தில் வரும் வயதான தனுஷின் பாத்திரம்தான் இதுவும். தன் மகன் வன்முறையின் பாதையில் சென்று விடக்கூடாது என்பதற்காக பல அவமதிப்புகளைப் பொறுத்துச் செல்கிறாள். “அதைச் சொல்ல வேண்டிய நேரம் வந்துடுச்சு. உங்க அப்பாவை கொன்னவன் அவன்தான்” என்று தமிழ் சினிமாவின் வழக்கமான அம்மா போல மகனுக்கு பழிவாங்கும் உணர்ச்சியை வளர்த்தெடுக்காமல் அதை அறிந்திருந்தாலும் அமைதியாக இருப்பது இந்தப் பாத்திரத்தின் இயல்பை மிகையில்லாமல் ஆக்குகிறது.

ஜோன்ஸின் தந்தையாக, பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடித்திருக்கிறார். குறைந்த நேரமே வந்தாலும் அவரது பாத்திரத்தை குறையில்லாமல் செய்திருக்கிறார். ஒரு நல்ல ‘கோச்’சுக்குரிய கண்டிப்பையும் கனிவையும் நரேன் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ‘கைதி’ ‘சாம்பியன்’ என்று குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் நரேன் தொடர்வது நல்ல விஷயம். ‘ஸ்டன்’ சிவா பிரதான வில்லன் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘ராஜிவ்காந்தி’ என்கிற பெயரில் வரும் வினோத் சாகரின் அருமையான நடிப்பு தனித்துத் தெரிகிறது.

‘தந்தையின் மரணத்திற்கு பழிவாங்கும்’ வழக்கமான கதைதான் என்றாலும் சுசீந்திரனின் திரைக்கதையாக்கம் குறை சொல்ல முடியாதபடி சிறப்பாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. சில காட்சிகளில் பாத்திரங்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களை பார்வையாளர்களுக்கும் கடத்தி விடும் தனது வழக்கமான பாணியில் வெற்றி பெறுகிறார் சசீந்திரன். குறிப்பாக கால்பந்திற்கும் வன்முறைக்கும் இடையில் ஜோன்ஸ் தத்தளிக்கும் படத்தின் மையம் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. பிளாஷ்பேக் உத்தி மிகப் பொருத்தமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘அரோல் கரோலி’யின் பின்னணி இசை நன்கு அமைந்துள்ளது.

தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு என்றிருந்த காலக்கட்டத்தில், பல அருமையான தலைப்புகள் வெளிவந்தன. (தலைப்பு மட்டும் நன்றாக இருப்பது வேறு விஷயம்). ஆனால் இப்போது இந்தச் சலுகை நின்றவுடன் மறுபடியும் காமா சோமாவென்று தலைப்பு வைக்கிறார்கள். சுசீந்திரன் இந்தத் திரைப்படத்திற்கு தமிழில் ஒரு நல்ல தலைப்பு வைத்திருக்கலாம்.

நிச்சயம் பார்க்கத் தகுந்த திரைப்படம் – சாம்பியன்.


suresh kannan