Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, September 10, 2023

ஜெயிலர் – பாதிக் கிணறு மட்டுமே தாண்டியிருக்கும் பரிதாபம்

 
தனது ஆஸ்தான டைரக்டர்களிடம் இருந்து விலகி சந்தையில் முந்தி நிற்கும் இளம் இயக்குநர்களிடம் கூட்டணி வைக்க ரஜினிகாந்த் எப்போதும் தயங்கியதில்லை. இதைப் போலவே ஒரு காலக்கட்டத்திற்குப் பிறகு தனது வயதுக்கேற்ற பாத்திரங்களைத் தேர்வு செய்யவும் ஆரம்பித்தார். இளம் நடிகைகளுடன் டூயட் பாடுவதை அவரது ரசிகர்களே விரும்பவில்லை என்கிற நிதர்சனம் ரஜினிக்குப் புரிந்து விட்டிருக்கலாம். இதெல்லாம் அவர் எடுத்த புத்திசாலித்தனமான முடிவுகள். தவிர்க்க முடியாத முடிவுகளும் கூட.

அப்போதைக்கு டிரெண்டிங்கில் இருக்கும் இளம் இயக்குனர்களை நம்பி தன்னை ஒப்படைத்துக் கொள்ளும் ரஜினியின் முடிவு பல சமயங்களில் சரியாகவும் அமைந்திருக்கிறது. சில சமயங்களில் சொதப்பலாகவும் முடிந்திருக்கிறது. ‘தர்பார்’, ‘அண்ணாத்தே’ என்று அவரது சமீபத்திய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இந்த நிலையில் நெல்சனுடன் புதிய கூட்டணி அமைத்திருக்கும் ரஜினியின் ‘ஜெயிலர்’ எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா?

*

முத்துவேல் பாண்டியன் தனது ரிடையர்ட் வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். மனைவி, மகன், மருமகள், பேரன் என்று பாசமான குடும்பத்துடன் வாழ்க்கை அமைதியாக போய்க் கொண்டிருக்கிறது. அசிஸ்டென்ட் கமிஷனராக இருக்கும் மகன், சர்வதேச நெட்வொர்க்கில் இயங்கும் ஒரு சிலைக்கடத்தல் கும்பலைப் பிடிக்க முயற்சி செய்கிறார். ஒரு கட்டத்தில் மகன் இறந்து விட்ட செய்தி மட்டுமே மழுப்பலாக கிடைக்கிறது. “உங்க நேர்மையும் இந்த மரணத்துக்கு ஒரு காரணம்’ என்று துயரத்தில் இருக்கும் மனைவி குற்றம் சாட்ட, முத்துவேல் பாண்டியனுக்குள் இருக்கும் இன்னொரு பிம்பம் ஆவேசமாக விழிக்கிறது. தனது மகனைக் கொன்றவர்களை வேட்டையாட கிளம்புகிறார். அந்தப் பயணம், பர்மிட் வாங்கிய லாரி மாதிரி இந்தியா முழுக்க எங்கெல்லாம் அவரைக் கொண்டு சேர்க்கிறது என்பதுதான் இந்தப் படம்.

சிவாஜி கணேசன் நடித்த ‘தங்கப்பதக்கம்’ முதல் கமலின் சமீபத்திய ‘விக்ரம்’ வரையான சில திரைப்படங்களை அப்பட்டமாக நினைவுப்படுத்தும் திரைக்கதை. மகனின் மரணத்திற்கு தந்தை பழிவாங்க கிளம்பும் அரதப்பழசான கதை. என்னதான் வழக்கமான மசாலா கதையாக இருந்தாலும் தனித்தன்மையுடன் கையாள்வதின் மூலம் ஓர் இயக்குநரால் அதை வித்தியாசமான திரைப்படமாக்கி விட முடியும். வெற்றியை ஈட்டி விட முடியும். இந்த முயற்சியில் நெல்சன் பாதி கிணறு மட்டுமே தாண்டியிருக்கிறார். முதல் பாதி சுவாரசியமாக அமைந்தாலும் இரண்டாம் பாதியில் திரைக்கதை அநாவசியமாக எங்கெங்கோ அலைந்து பார்வையாளர்களுக்குச் சோர்வையும் சலிப்பையும் அளிக்கிறது.

*

ரஜினியின் ‘ஸ்கீரின் பிரசன்ஸ்’ இன்னமும் சேதமுறாமல் அப்படியே இருக்கிறது என்பதற்கு ஜெயிலர் படமும் ஓர் உதாரணம். வீட்டிற்கு காய்கறி வாங்கி வரும் சமர்த்தான பெரியவர் பாத்திரத்தில் வரும் ரஜினி ஒரு பக்கம் கவர்கிறார் என்றால் சட்டையை மடித்துக் கொண்டு இன்னொரு அவதாரம் எடுக்கும் பரிமாணத்திலும் பட்டையைக் கிளப்புகிறார். ஒரு அறையில் அவரது பாதி உருவம் தெரியும் காட்சிக்கே அரங்கம் அதிர்கிறது. ஆனால் இந்த ஆவேசத்தை மிகையாக்கி விடாமல் ஒரு குறிப்பிட்ட மீட்டரில் துல்லியமாக அடக்கி வாசிக்க வைத்திருப்பதில் இயக்குநர் நெல்சனின் தனித்தன்மை தெரிகிறது.

படம் முழுவதும் வரும் ரஜினியின் பிரத்யேகமான பல மேனரிசங்கள் கவர்கின்றன. பிளாஷ்பேக்கில் திகார் சிறையின் ஜெயிலராக வரும் ‘டைகர்’ அவதாரமும் சிறப்பு என்றாலும் அதில் போதுமான அழுத்தம் இல்லாததால் எடுபடவில்லை. படத்தின் தலைப்பில் மட்டும்தான் ‘ஜெயிலர்’ இருக்கிறாரே தவிர, படத்திற்குள் சம்பந்தப்பட்ட காட்சிகளைக் காணவில்லை.

ஹீரோவின் காலை மட்டும் காட்டுவது, பின்னணி இசை அதிர ஸ்லோ மோஷனில் ஹீரோ நடந்து வருவது போன்றவை ஒரு ‘மாஸ்’ திரைப்படத்தின் தவிர்க்க முடியாத ஃபார்முலா காட்சிகள். ஆனால் இவற்றை மட்டுமே நம்பி ஒரு படத்தை ஒப்பேற்றி விட முடியுமா? ரசிகர்கள் விசிலடிப்பார்கள் என்பதெல்லாம் சரி. ஆனால் பொதுவான பார்வையாளர்களைக் கவர சுவாரசியமான திரைக்கதையும் இருப்பது அவசியம். தனது மகனின் மறைவிற்கு காரணமாக இருந்தவர்களை முத்துவேல் பாண்டியன் துரத்தி வீழ்த்தும் முதல் பகுதியோடு படத்தின் சுவாரசியமும் முடிந்து விடுகிறது. அதன் பிறகு வில்லன் தரும் ‘டார்கெட்டிற்காக’ ஹீரோ நடத்தும் நீண்ட டிராமாவும் அதில் வரும் ‘காவாலா’ போன்ற இடைச்செருகல்களும் கொட்டாவியை வர வைக்கின்றன.

*

ரஜினியைத் தவிர ‘காமியோ’ ரோலில் வரும் பக்கத்து மாநில சூப்பர் ஸ்டார்களான சிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் ஆகிய மூவருக்கான காட்சிகளும் திறமையாக இணைக்கப்பட்டிருக்கின்றன. இதெல்லாம் ஒரு கிம்மிக்ஸ்தான் என்றாலும் படத்தின் சுவாரசியத்திற்கு உபயோகமாகியிருக்கிறது. இதில் சிவ ராஜ்குமார், மோகன்லால் வரும் காட்சிகளில் ரஜினிக்கு நிகரான கைத்தட்டல் கிடைக்கிறது. மெயின் வில்லன் வர்மாவாக நடித்திருக்கும் விநாயகனின் தோற்றமும் நடிப்பும் மிரட்டலாக இருக்கிறது. ஆனால் ஆரம்பத்தில் டெரராக வரும் வில்லன் போகப் போக பலவீனமாகி விடுவதால் திரைக்கதையும் கூடவே தொய்ந்து விடுகிறது.

ரம்யா கிருஷ்ணன் ரஜினியின் மனைவியாக நடித்திருக்கிறார். படையப்பாவில் நீலாம்பரியாக கலக்கியவர், இதில் சராசரி மனைவியாக சில காட்சிகளில் மட்டும் வந்து வீணடிக்கப்பட்டிருக்கிறார். மகனாக நடித்திருக்கும் வசந்த் ரவி, தனது பாத்திரத்தை தேவைக்கேற்றவாறு கையாண்டிருந்தாலும் ஒரே மாதிரியான முகபாவத்துடன் இருப்பது அசுவாரசியம். பேரனாக வரும் சிறுவன் ரித்விக், சமகாலத்து இளைஞர்களின் ‘இணைய வீடியோ’ மோகத்தையும் அதன் அலப்பறைகளையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறான்.

இது தவிர, மூச்சு திணறுமளவிற்கு ஏராளமான நடிகர்கள். சில காட்சிகளில் புன்னகைக்க வைத்திருக்கும் யோகி பாபு இன்னமும் கூட சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். விடிவி கணேஷின் காமெடி எடுபடவில்லை. ரெடின் கிங்ஸ்லி தன் வழக்கமான மாடுலேஷனையும் எக்ஸ்பிரஷனிலும் வருகிறார். இந்த வண்டி எத்தனை நாளைக்கு ஓடுமோ? ‘இந்தாம்மா ஏய்’ மாரிமுத்துவின் எண்ட்ரி காட்சியில் கூட கைத்தட்டல் வருகிறது. ஆனால் அவருடைய கேரக்ட்டரும் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாமல் கடந்து போகிறது. ‘வர்மா.. உனக்காக உயிரை கொடுக்கற நண்பன்டா நானு’ என்று எக்ஸ்ட்ண்ட்ரிக்தனமாக நடித்திருக்கும் அர்ஷத் தனித்துத் தெரிகிறார். ‘பிளாஸ்ட்’ மோகனாக வரும் சுனில் பாத்திரத்தின் மூலம் ‘டாப் ஸ்டார்’ நடிகர்களின் கோணங்கித்தனங்களை கிண்டலடித்திருக்கிறார்கள்.

பிராய்லர் கோழியாக வந்து தமன்னா ஆடிய ‘காவாலா’ பாடல், ஆடியோவாக ‘ஹி்ட்’ ஆன அளவிற்கு வீடியோவாக எடுபடவில்லை. தமன்னாவின் காதல் டிராமா எல்லாம் படத்திற்கு தொடர்பேயில்லாத, தேவையில்லாத ஆணி. ரஜினியைத் தவிர வேறு எந்த கதாபாத்திரமும் அழுத்தமாக வடிவமைக்கப்படாதது படத்தின் பெரிய பலவீனம். குறைந்தபட்சம் மெயின் வில்லனாவது வலிமையாக சித்தரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

*

ஒரு சராசரியான மிடில் கிளாஸ் குடும்பம், மாஃபியா உலகின் பிடியில் சிக்கிக் கொண்டால் என்னவாகும் என்பதுதான் நெல்சன் வழக்கமாக உருவாக்கும் கதையுலகம். ஸ்பானிஷ் முதற்கொண்டு பல வெப்சீரிஸ்களின் தாக்கமும் தழுவலும் அதில் இருக்கும். ஜெயிலர் படமும் இதற்கு விதிவிலக்கல்ல. முதற்பாதியில் ஓரளவிற்கு சீராக ஓடும் முத்துவேல் பாண்டியனின் வண்டி, பிறகு பிரேக் பிடிக்காத புல்டோஸர் மாதிரி எங்கெங்கோ சுற்றியலைவது படத்தின் ஒட்டுமொத்த சுவாரசியத்தை பாழ்படுத்தி விடுகிறது.

ரஜினியின் படம் என்றாலே ரசிகர்களைத் தாண்டி அதுவொரு குடும்பத் திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். பெண்களும் குழந்தைகளுமாக கூட்டம் கூட்டமாக தியேட்டருக்குச் செல்வார்கள். ஆனால் ‘ஜெயிலர்’ படத்தில் முகஞ்சுளிக்க வைக்கும் அளவிற்கு வன்முறைக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. சுத்தியலால் மண்டையை உடைப்பது, காதை அறுப்பது போன்ற கொடூரமான காட்சிகளை மழுப்பாமல் அப்படியே நேரடியாக காட்டியிருப்பது மனம் பதைக்க வைக்கிறது. இது போன்ற வன்முறைக்காட்சிகள் இளம் மனங்களில் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற பொறுப்புணர்ச்சி இயக்குநருக்கும் ஹீரோவிற்கும் இருக்க வேண்டும். இது தவிர ரஜினி ஸ்டைலாக சுருட்டு பிடிக்கும் காட்சியும் வருகிறது. ‘குடிச்சுக் கெட்டுப் போயிடாதாதீங்க’ என்று இசை வெளியீட்டு விழாவில் கரிசனத்துடன் உபதேசம் சொன்ன ரஜினி, திரைக்கு உள்ளேயும் சில கட்டுப்பாடுகளை பின்பற்றியிருக்கலாம்.

*

அனிருத்தின் அட்டகாசமான பின்னணி இசையும் ‘உக்கூம்’ பாடலும் படத்தை பெருமளவு தூக்கி நிறுத்தியிருக்கிறது. ஆனால் எத்தனை தடவை ஐயா.. இதைத் தொடர்ந்து கேட்பது?! ஹைடெஸிபலில் வரும் சத்தம் காதுகளை பஞ்சர் ஆக்கியிருக்கும் விபத்தை அனிருத் தவிர்த்திருக்கலாம். விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில் வரும் அமைதியான காட்சிகளுக்கும் பிறகு நிகழும் அதிரடி காட்சிகளுக்கும் கணிசமான வித்தியாசம் காட்டியிருக்கிறார். எடிட்டர் ஆர்.நிர்மல் இன்னமும் சுதாரிப்பாக செயல்பட்டு அநாவசிய ஆணிகளைக் கழற்றியிருக்கலாம். ஸ்டன் சிவா வடிவமைத்திருக்கும் ஆக்ஷன் காட்சிகள் மிரட்டலாக இருக்கின்றன. ஆனால், தன் குடும்பத்தை அவமானப்படுத்தும் இரண்டு ரவுடிகளை இருட்டு மூலையில் ரஜினி வீழ்த்துவதில் உள்ள சூடும் விறுவிறுப்பும், ஸ்னைப்பர் ஷாட்களிலும் கன்டெய்னர் லாரிகள் வானத்தில் பறப்பதிலும் ஏற்படவில்லை.

சீரியஸான காட்சிகளின் இடையில் சட்டென்று காமெடியை இணைப்பது, காமெடியான சூழலை தீவிரத்துடன் முடிப்பது போன்றவற்றை ‘டார்க் காமெடி’ என்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஒரளவிற்கு இந்தப் பாணியை சிறப்பாக பயன்படுத்தும் இயக்குநர்களில் நெல்சனும் ஒருவர். ஆனால் அவரது முந்தைய படங்களில் இருந்த நகைச்சுவை கூட ‘ஜெயிலரில் போதுமான அளவிற்கு இல்லை. சீரியஸான சூழலின் பின்னணியில் அதிரடியான பாடலை ஓடவிட்டு ஜாலியாக நடனம் ஆடுவதெல்லாம் ‘டார்க் காமெடியில்’ வராது.

ஒரு மசாலா சினிமாவில் லாஜிக் பார்க்கக்கூடாது என்பதெல்லாம் சரிதான். ஆனால் இயன்றவரை காட்சிகளில் நம்பகத்தன்மையைக் கூட்டினால்தான் படத்துடன் பார்வையாளர்களால் ஒன்ற முடியும். ஜெயிலர் திரைப்படத்தில் கன்னாபின்னாவென்று லாஜிக் மீறல்கள். தேசமெங்கும் உள்ள கேங்க்ஸ்டர்கள், ஜெயிலரைப் பற்றி அறிந்திருக்கும் போது 40 வருடங்களாக கடத்தல் தொழிலில் இருக்கும், தன்னை ‘புரொபஷனல்’ என்று சொல்லிக் கொள்ளும் விநாயகன் கேரக்கட்டருக்கு தெரியாமல் இருப்பது விநோதம். தன் அப்பாவைப் பற்றி மிக துல்லியமாக அறிந்திருக்கும் வசந்த் ரவி, தான் செய்யும் மோசடியை அவர் எப்படியும் கண்டுபிடித்து விடுவார் என்று எதிர்பார்க்க முடியாமல் போனதும் விசித்திரம். நேர்மையாக பணியாற்றிய ஜெயிலர், எப்படி கிரிமினல்களுடன் கூட்டணி வைப்பார் என்கிற கேள்வியையும் தவிர்க்க முடியவில்லை.

‘நீங்கள் நடித்ததில் உங்களுக்குப் பிடித்த படம் எது?’ என்றொரு கேள்வி ரஜினியிடம் ஒருமுறை கேட்கப்பட்ட போது ‘முள்ளும் மலரும்’ என்று நேர்மையான பதிலைக் கூறினார். ‘மாஸ்’ சினிமாக்களில் நடித்து ரஜினி தமிழ் சினிமாவின் வணிகத்தைக் காப்பாற்றுவது அவசியம்தான். ஆனால் ‘முள்ளும் மலரும்’ ரஜினி எங்கேயோ, எப்போதோ தொலைந்து விட்டதுதான் பரிதாபம்.

ஜெயிலர் – ஃபெயிலியர் ஆகும் விபத்தை எப்படியோ முட்டி மோதி தவிர்த்திருக்கும் ஒரு சுமாரான முயற்சி.

(குமுதம் இதழில் வெளியானது)  
 
suresh kannan

Tuesday, July 26, 2022

குமுதம் - உலக சினிமா கட்டுரைகள் - பாகம் ஒன்று

 

சுவாசம் பதிப்பகம் மூலம் சமீபத்தில் வெளியான 'சர்வதேசத் திரைப்படங்கள்' - பாகம் ஒன்று நூலிற்காக எழுதப்பட்ட முன்னுரை.

 

oOo 



அலுவலக மதிய உணவிற்குப் பிறகு சிறுநடை செல்வது என் வழக்கம். அவ்வாறாக ஒரு நாள் நான் சென்று கொண்டிருக்கையில் கைபேசி ஒலித்தது. “நான்.. குமுதம் எடிட்டர்.. பிரியா கல்யாணராமன் பேசறேன்”.

என்னுடைய இளம் வயதிலிருந்தே பரிச்சயப்பட்ட அந்த எழுத்தாளரின் பெயரை திடீரென்று போனில் கேட்டவுடன் எனக்குள் ரொமான்ஸூம் கோயில் விபூதி வாசனையும் கலந்த விநோத நினைவுகள் எழுந்தன. அவருடைய எழுத்துப் பாணி அத்தகையது. ஒருபக்கம் ‘ஜாக்கிரதை வயது 16’ போன்ற இளமை ததும்பும் சிறுகதைகளையும் எழுதுவார். இன்னொரு பக்கம் கோயில், ஆன்மீக கட்டுரைகளும் எழுதுவார். வெகுசன பாணியின் அத்தனை வகைமைகளையும் முயன்று பார்த்த எழுத்து அவருடையது.

‘ஒரு முன்னணி வார இதழின் ஆசிரியர் என்னை ஏன் அழைக்க வேண்டும்.. யாராவது அந்தப் பெயரை வைத்து விளையாடுகிறார்களா?’ என்று பல்வேறு எண்ணங்கள் எனக்குள் ஓடின. என்னுடைய திகைப்பை உணர்ந்தாரோ, என்னவோ.. அவரே தொடர்ந்தார். “கிழக்குப் பதிப்பகத்துல வெளிவந்த உங்க நூலைப் படிச்சேன். ‘உலக சினிமா சில அறிமுகங்கள்’. இன்ட்ரஸ்ட்டிங்.. நல்லா எழுதியிருக்கீங்க. ஒவ்வொரு கட்டுரையும் சுவாரசியமா, க்ரிஸ்ப்பா இருந்தது. குமுதத்திற்கும் அதே போல வாரா வாரம் வர்ற மாதிரி ஒரு கட்டுரைத் தொடர் எழுத முடியுமா?” என்றொரு கேள்வியை முன்வைத்தார். சட்டென்று எனக்குள் ஒரு பெரும் தயக்கம் எழுந்தது. ஏன்?

oOo

வெகுசன இதழ்களின் வழியாக என் வாசிப்பு துவங்கி வளர்ந்திருந்தாலும் ஒரு கட்டத்தில் சிறுபத்திரிகை இலக்கியமே என்னை ஆக்ரமித்தது. அப்போது நான் இடைநிலை இதழ்களில் சினிமா பற்றிய ஆவேசமான கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தேன். வெகுசன ஊடகங்கள், திரைப்படங்கள் செய்யும் கலாசாரச் சீரழிவுகள் குறித்து நானே காரசாரமாக எழுதியிருக்கிறேன். எனவேதான் அந்தத் தயக்கம்.  வழக்கம் போல் இந்தச் சமயத்தில் எனக்கு மானசீகமாக உதவி செய்ய வந்தவர் எழுத்தாளர் சுஜாதா. பல வகைகளில் இவரையே நான் என்னுடைய முன்னோடியாக கருதுவேன்.

வெகுசன வாசகப் பரப்பு என்பது மிகப் பெரியது. அந்த மேடையைப் பயன்படுத்திக் கொண்டு உன்னதமான விஷயங்களை சராசரியான வாசகர்களுக்கு கடத்திச் செல்லலாம் என்பது அவர் ஏற்கெனவே போட்டு வைத்த பாதை. வெகுசன எழுத்துக்கும் இலக்கியத்திற்கும் இடையில் ஒரு பாலமாக இருந்தவர் சுஜாதா. அவரின் மூலம் சிலபல நல்ல எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்து இலக்கிய வாசிப்பின் பக்கம் நகர்ந்த எண்ணற்ற வாசகர்களில் நானும் ஒருவன்.

உலக சினிமா பற்றிய அறிமுகத் தகவல்களையும் கட்டுரைகளையும் வெகுசன இதழ்களில் இன்று கூட காண்பது மிகக் குறைவுதான். 4G இணைய வேகமும், OTT பிளாட்பாரங்களும் வெப் சீரிஸ்களும் இன்று பரவலாக காணக் கிடைப்பதால் அவற்றைப் பற்றி இன்றைய தேதியில் எழுதியாக வேண்டியாக கட்டாயம் வெகுசன ஊடகங்களுக்கு இருக்கிறது.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பான நிலைமை அப்படியல்ல. உலக சினிமா பற்றிய கட்டுரைகளை இடைநிலை இதழ்கள் மற்றும் சிறு பத்திரிகைகளில் மட்டுமே வாசிக்க முடியும். ஆனால் அதுவும் கூட ஒரு சராசரி வாசகன் எளிதில் அணுக முடியாதபடியான தீவிரமான முரட்டு மொழியில் இருக்கும்.

எனில் உலக சினிமா பற்றி ஒரு வெகுசன வாசகன் அறிவதற்கு என்னதான் வழி?! இதைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே யோசித்தவர் பிரியா கல்யாணராமன். குமுதம் போன்ற லட்சக்கணக்கான சர்க்குலேஷன் கொண்ட ஒரு முன்னணி இதழில் உலக சினிமாக்கள் பற்றிய சுருக்கமான அறிமுகத்தைத் தருவதற்கு ஒரு வாய்ப்பை அவர் தரும் போது அதை ஏன் நான் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது?

இத்தனை எண்ணவோட்டமும் சில நொடிகளுக்குள் என் மூளைக்குள் நடந்து முடிய, உடனே உடனே ‘ஓகே’ சொன்னேன்.

oOo


ஜூன் 2016-ல் இந்தக் கட்டுரைத் தொடர் குமுதம் வார இதழில் வெளிவரத் துவங்கியது. தொடர்ந்து 60 வாரங்களுக்கு வெளிவந்தது. தொடர் ஆரம்பித்து மூன்று வாரங்களுக்குப் பின்பு என்னை அழைத்தார் பிரியா கல்யாணராமன். “படத்தோட முடிவு என்னன்னு சொல்லாமலேயே கட்டுரையை முடிச்சுடறீங்களே.. சார்.. அதையும் கூடவே எழுதிடுங்க. ஒரு சிறுகதை ஃபார்மட்ல வந்துடும். அதைத்தான் வாசகர்களும் விரும்புவாங்க” என்றார்.

Spoiler எனப்படும் சமாச்சாரம் பற்றி எனக்கும் மாற்றுக்கருத்துகள் இருக்கின்றன. ஏன், அதில் உடன்பாடு இல்லை என்று கூட சொல்லி விடலாம். ஆனால் ஒரு திரைப்படத்தில் முக்கியமான திருப்பங்களை, முடிவுகளை வெளிப்படுத்தி, படம் பார்க்கவிருக்கிறவரின் ஆவலைக் கெடுத்து விடக்கூடாது என்று பொதுவான கருத்து இருக்கிறது. சிலர் எரிச்சலுடன் பதறி ஆட்சேபம் கூட செய்வார்கள். ஒருவகையில் அதுவும் நியாயமே.

ஆனால் என்னைப் பொறுத்தவரை, முழுக்கதையும் தெரிந்தாலும் கூட ஓர் இயக்குநர் எவ்விதமான திரைமொழியினால், திரைக்கதையினால், நுட்பங்களால் தனது சினிமாவை உருவாக்குகிறார் என்பதைத்தான் ஆதாரமான அளவுகோலாக பார்ப்பேன். ஆனால் என் தனிப்பட்ட அபிப்ராயத்தை பொது வாசகனுக்கும் பொருத்திப் பார்க்க முடியாதே?!

“அப்படி முடிவு சொல்லிட்டா தப்பு சார்..” என்றேன் தயக்கமாக. “அந்தத் தப்பையும் செஞ்சு பார்த்துடுவோம். என்ன இப்ப?” என்கிற பலத்த சிரிப்பொலி எதிர்முனையில் கேட்டது. அதுதான் வெகுசன இதழ்களின் வெற்றியின் அடையாளம். சிறு தயக்கத்துடன் சம்மதித்தேன். இந்த ஒரு விஷயம் தவிர, எவ்வித குறுக்கீடும் செய்யாமல் சுதந்திரமான மொழியில் என்னை எழுத அனுமதித்தார் குமுதம் ஆசிரியர்.

ஒவ்வொரு வாரமும் என்னுடன் தொடர்பில் இருந்து நினைவுப்படுத்தி, வழிநடத்தி, கட்டுரைகளை வாங்கி ஒருங்கிணைத்த நண்பர் அருண் சுவாமிநாதனை இந்தச் சமயத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் போஸ்டர்களை தேடியெடுத்து வசீகரமான லேஅவுட் உடன் சிறப்பாக பிரசுரம் செய்த குமுதம் பணியாளத் தோழர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். 
 
பிரியா கல்யாணராமன்

 
இந்தத் தொடர் வெளிவந்த முதல் வாரத்திலிருந்து எனக்கு கிடைத்த எதிர்வினைகளும் பாராட்டுக்களும் நம்ப முடியாத அளவில் இருந்தன. இந்த உற்சாகம் வாசகர்கள் கடிதங்களில் எதிரொலித்தன. இணையத்திலும் ஃபேஸ்புக்கிலும் கூட நல்ல வரவேற்பு. நீண்ட காலமாக தொடர்பில் இல்லாத, என்னை எப்போதும் கண்டு கொள்ளாத ஓர் உறவினர் கூட கைபேசியில் அழைத்து “உன் போட்டோ பார்த்தேன்.. நீதான் எழுதறியா?” என்று விசாரித்த போதுதான், வெகுசன பரப்பின் வீச்சு விளங்கியது. “இந்தக் கொரியன் படத்தை பற்றி நல்லா எழுதியிருந்தீங்க. இதை எப்படி பார்க்கறது?” என்று வாட்சப்பில் கேட்ட ஒரு முன்னணி படத்தயாரிப்பாளர் முதல் “நீங்க சொல்லித்தான் இந்தப் படத்தை பார்த்தேன். மிக்க நன்றி” என்று சொன்ன நண்பர்கள் வரை விதம் விதமான எதிர்வினைகள் வந்தன.

இந்தத் தொடர் முடிந்தவுடன், “குமுதம் தீராநதி இதழில் உங்க ஆசைப்படி விரிவான கட்டுரைகள் எழுதுங்க” என்று பச்சைக்கொடி காட்டினார் பிரியா கல்யாணராமன். ‘குமுதம் உலக சினிமா கட்டுரைகள் நூலாக வந்தால் நன்றாக இருக்கும்” என்கிற விருப்பத்தை பல நண்பர்கள் அப்போது தெரிவித்தார்கள். எனக்கும் கூட விருப்பம்தான். ஆனால் அதற்கேற்ற சூழல் அமையவில்லை. நானும் இதற்கு பெரிதாக மெனக்கெடவில்லை.

ஆனால் ஒரு நல்ல விஷயம் என்றேனும் நடந்தே தீரும் என்பார்கள். என்னுடைய முந்தைய நான்கு நூல்கள் வெளிவருவதற்கு அடிப்படையான காரணமாக இருந்த நண்பர் ஹரன் பிரசன்னாவே, இந்த நூல் வருவதற்கும் முக்கிய காரணமாக இருக்கிறார். இந்த வகையில் அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அவருடைய புதிய பதிப்பக முயற்சியின் மூலம் ‘குமுதம் சினிமா கட்டுரைகள்’ ஒரு தொகுப்பாக வெளிவருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே!.

இந்த நூலை குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமனுக்கு சமர்ப்பிப்பதற்காக ஏற்கெனவே திட்டமிட்டிருந்தேன். ஆனால் இந்த முன்னுரையை நான் எழுதிக் கொண்டும் நேரத்தில் அவர் நம்முடன் இல்லை என்கிற செய்தி துயர் கொள்ள வைக்கிறது. ஆம், 22-06-2022 அன்று இயற்கையில் கலந்து விட்டார் பிரியா கல்யாணராமன்.

oOo

‘சர்வதேசத் திரைப்படங்கள் – பாகம் ஒன்று’ என்கிற இந்த நூலை வாசிக்க முடிவெடுத்த உங்களுக்கு நன்றி. 2010-க்கு பிறகு, பல்வேறு ஆண்டுகளில் வெளியான சர்வதேச திரைப்படங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை இந்த நூல் உங்களுக்குத் தரும். சம்பந்தப்பட்ட திரைப்படத்தை தேடிப் பார்த்தேயாக வேண்டும் என்கிற ஆவலை இந்தக் கட்டுரைகள் நிச்சயம் உங்களுக்குள் எழுப்பும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு. இந்தத் தொடர் எழுதப்பட்டதின் நோக்கமே அதுதான். இதன் மூலம் நல்ல சினிமாக்களைப் பார்க்கும் ரசனை மேலதிகமாக பெருகும். இந்த ரசனை மாற்றம் நல்ல சினிமாக்கள் வெளிவருவதற்கும் காரணமாக இருக்கக்கூடும் என்பது என் நம்பிக்கை. அந்த மாற்றத்திற்கு ஒரு துளியாக இருக்கப் போகும் உங்களுக்கும் என் பாராட்டும் நன்றியும்.

வாருங்கள்! சிறந்த சினிமாக்களைக் கொண்டாடுவோம்!


சென்னையின் ஒரு சோம்பலான மதியம்
29-06-2022                                                                                        சுரேஷ் கண்ணன்






Thursday, June 24, 2021

மண்டேலா: வாக்காளனின் பலங்களும் பலவீனங்களும்



இரானிய திரைப்படங்களின் அழகியல் தனித்துவமானது. உலகம் முழுக்க இதற்கென பிரத்யேகமான பார்வையாளர்கள் உள்ளார்கள். மிக ஆழமான விஷயங்களைக் கூட எளிமையான காட்சியமைப்பு, திரைமொழி, மனிதர்கள், சிறார்கள் போன்றவற்றைக் கொண்டு உருவாக்கப்படும் பல உன்னதமான சினிமாக்கள் இரானில் தயாராகின்றன.


தமிழ் சினிமாவிலும் அப்படியொரு சாத்தியம் நேராதா என்று நாம் ஏங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அந்த ஏக்கத்தை சற்று தணிக்க வந்த முதல் திரைப்படமாக 'காக்கா முட்டை' திரைப்படத்தைச் சொல்லலாம். விளிம்பு நிலைச் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களின் பார்வையில் பயணிக்கும் இந்தத் திரைப்படமானது, சமூகத்தின் பல்வேறு ஏற்ற இறக்கங்களை ஆழமாகவும் சுவாரசியமாகவும் காட்சிப்படுத்தியது. உயர் மற்றும் நடுத்தர வர்க்க நபர்களுக்கு மிக எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு தின்பண்டம், ஏழை மக்களுக்கு எவ்வாறு எட்டாக்கனியாகவும் வாழ்நாள் லட்சியமாகவும் மாறுகிறது என்கிற அவலத்தைப் பேசிய படைப்பு 'காக்கா முட்டை'.

இந்த வரிசையில் சமீபத்திய சிறந்த வரவு என்று 'மண்டேலா' திரைப்படத்தைச் சொல்லலாம். இரானிய திரைப்படப் பாணியோடு நேரடியாக ஒப்பிட முடியாது என்றாலும் ஏறத்தாழ அதே எளிமையையும் அழகியலையும் கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான சிறுமுதலீட்டுத் திரைப்படங்களில் மிகவும் கவனிக்கத்தகுந்த படைப்பு இது எனலாம்.

தேர்தல் காலங்களில், அரசியல்வாதிகளின் பார்வையில் வாக்காளர்கள்  என்பவர்கள் வெறும் வாக்குகளாக, எண்களாக மட்டுமே தெரிவார்கள். இதர நேரங்களில் அவர்களை மனிதர்களாக கூட அவர்கள் மதிக்க மாட்டார்கள். இதைப் போலவே பெரும்பான்மையான வாக்காளர்களும் அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் தரும் இலவசப்பொருட்கள், பணம் போன்வற்றை எதிர்பார்ப்பவர்களாக மாறி விட்டார்கள்.

ஒட்டு மொத்தத்தில் தேர்தல் என்பது வருங்கால தேசத்தின் தலையெழுத்தை மாற்றியமைக்கப் போகும் முக்கியமான விஷயமாக அல்லாமல் இருதரப்பிலும் அவரவர்களின் லாபத்தை எதிர்நோக்கும் வணிகமாக சுருங்கி விட்டது. இப்படிப்பட்ட சூழலில் 'ஒரு வாக்கின்' மதிப்பு எத்தகையது, அதற்கு எத்தனை சக்தி உள்ளது என்பதை அழுத்தமாக விவரிப்பதுதான் 'மண்டேலா' திரைப்படத்தின் மையம். இதன் காட்சிகள் பயணிக்கிற போக்கில் நம் சமூகத்தைக் குறித்த பல்வேறு இயல்பான நையாண்டிகள் விமர்சன நோக்கில் நிரம்பியுள்ளன.

*

இரண்டு சமூகங்களைச் சார்ந்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்டது சூரங்குடி ஊராட்சி. இரண்டு பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி நிகழும் மோதல்களைத் தடுக்க வேண்டும் என்கிற உத்தேசத்துடன் ஒவ்வொரு சமூகத்திலிருந்தும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார் அந்த ஊரின் தலைவர்.

ஆக .. நம் அரசியல் தலைவர்களில் சிலர் மனைவி, துணைவி என்று இரண்டு திருமணங்களை மேற்கொள்வது அவரவர்களின் செளகரியத்திற்காக அல்ல. சமூக நல்லிணக்கம்தான் அதன் பிரதான குறிக்கோள் என்பதை நாம் உணர வேண்டும். போகட்டும்.  ஆனால் ஊர்ப்பெரியவர் உண்மையிலேயே நல்லவர். இரு பிரிவுகளும் அடித்துக் கொள்ளாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவரின் நல்லியல்புகள் காரணமாக ஊர் அவரை மதிக்கிறது.

ஆனால் அவரது வாரிசுகள் (ஒவ்வொரு மனைவிக்கும் ஒரு மகன்) இரண்டு பிரிவுகளாக கோஷ்டி பிரிந்து மோதிக் கொள்கிறார்கள். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் ஊரும் அதே மாதிரி பிரிகிறது. தமிழ்நாட்டில் உள்ள சாதிப்பிரச்சினைகளுக்கு நிகரானது தமிழ் சினிமாவின் சென்சார் பிரச்சினை. எனவே இந்தப் பிரிவினருக்கு 'வடக்கூர், தெக்கூர்' என்று எளிமையாக பெயர் சூட்டி விடுகிறார் இயக்குநர். அவருக்கு வேறு வழியும் இல்லை.

இதுதான் இந்தத்திரைப்படத்தின் ஆரம்ப பின்னணி. இந்த ரத்தபூமியில் ஊராட்சிக்கான தேர்தல் வருகிறது. எண்ணிக்கையில் இரு பிரிவினரும் சமமாக இருக்கிறார்கள். ஊர்ப் பெரியவரின் வாரிசுகள் இருவரும் ஜெயிப்பதற்காக ஒருவரோடு ஒருவர் மல்லுக்கட்டுகிறார்கள்.  ஒரே ஒரு ஓட்டு கிடைத்தால் போதும். ஒருவர் தேர்தலில் வெற்றி பெற்று கோடிகளில் புரளலாம்.

இந்தச் சமயத்தில்தான் அந்த ஊரில் யாராலும் மதிக்கப்படாத ஓர் எளிய வாக்காளன் இவர்களின் கண்களில் படுகிறான். பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரசியமும் நகைச்சுவையுமாக சொல்லியிருக்கிறார்கள்.

நாஞ்சில்நாடன் எழுதிய 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்கிற சிறுகதையை அற்புதமாக விரித்து திரைப்படமாக மாற்றியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மடோன் அஸ்வின்.

*

சூரங்குடி ஆண்களில் சிலர், விடிவதற்கு முந்தைய இருட்டில் மரங்களின் பின்னால் 'ஒதுங்குவதோடு' படம் துவங்குகிறது. வடக்கூர் அரசியல்வாதியின் ஆட்கள் இவர்களை 'அலேக்காக' தூக்கி வண்டியில் அமர்த்தி கொண்டு செல்கின்றனர். "தூய்மை பாரதம்' எழுதப்பட்ட புதிய கழிப்பறையொன்று அதன் திறப்பு விழாவிற்காக காத்துக் கொண்டிருக்கிறது.

வடக்கூர் மக்கள் இதைத் திறப்பதற்காக முயலும் போது தெக்கூர் மக்கள் வந்து அவர்களிடம் மல்லுக்கட்டுகிறார்கள். இருதரப்பிற்கும் பயங்கர சண்டை நடக்கிறது. மண்டைகள் உடைகின்றன. இதற்கு நடுவில் புதர்களின் மறைவிலிருந்து எழுப்பி வரப்பட்ட மக்கள் கையில் சொம்புடன் பரிதாபமாக நிற்கிறார்கள். இப்படியாக துவங்கும் இந்தத் திரைப்படத்தில் அவல நகைச்சுவையானது பல காட்சிகளிலும் வசனங்களிலும் அபரிதமாக பெருகி வழிந்து ஓடிய படியே இருக்கிறது.

ஒரு சராசரி இந்திய வாக்காளனைப் போல, தேர்தல் காலத்தில் மட்டும் மரியாதை செய்யப்படும் ஓர் அநாமதேயன் அந்த ஊரில் இருக்கிறான். அவனுக்கென்று சொந்தமாக பெயர் கூட இல்லை. பிள்ளையார் போல மரத்தடிதான் அவனது வசிப்பிடம். பெரும்பாலான கிராமத்து மக்கள் அவனை 'இளிச்சவாயா' என்று கூப்பிடுகிறார்கள். சிகையலங்காரம்தான் அவனது பிரதான தொழில். அது உட்பட பல உதிரித் தொழில்களை செய்யும் அவனுக்கு சரியான கூலியை யாருமே தருவதில்லை. அவனை புறவாசல் வழியாக வரச்சொல்லி பழைய சோறு போட்டு அனுப்பி விடுகிறார்கள். எனவே 'இளிச்சவாயன்' என்கிற பட்டம் அவனுக்கு பொருத்தம்தானே? அது மொழியாக்கம் செய்யப்பட்டு 'ஸ்மைல்' என்கிற பெயராக நிலைத்து விடுகிறது. இந்த லட்சணத்தில் சொந்தமாக ஒரு சலூன் கட்டிடம் அமைக்க வேண்டுமென்பதுதான் 'ஸ்மைலின்' கனவும் லட்சியமும்.

இப்படிப்பட்ட இளிச்சவாயன் என்கிற ஸ்மைல் பாத்திரத்தில் யோகிபாபு மிக இயல்பாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநர் செய்த முக்கியமான சாதனைகளுள் ஒன்றாக யோகிபாபுவின் கதாபாத்திரத்தை கையாண்டதை சொல்ல வேண்டும்.

ஆம். யோகிபாபுவின் பொதுவான நடிப்பு பாணி நமக்குத் தெரியும். தனக்கு எதிரேயுள்ள எவரையும் அநாயசமாக  கிண்டல் செய்வதுதான் அவரது நடிப்பு பாணி. இதை ஏறத்தாழ அவரின் அனைத்துத் திரைப்படங்களிலும் காணலாம். ஆனால் இதில் முற்றிலும் வேறு மாதிரியான யோகிபாபுவை காண முடிகிறது. தனது கதாபாத்திரத்தின் தன்மையை கச்சிதமாக உணர்ந்து அதற்கேற்ப அடக்கமான நடிப்பைத் தந்திருக்கிறார். இவரைத் தூக்கிப் போட்டு மிதிக்கிறார்கள். செருப்பால் அடிக்கிறார்கள். ஒரு முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தாலும் இமேஜ் எதையும் பார்க்காமல் பாத்திரத்திற்குள் தன்னைப் பொருத்திக் கொள்ள முயன்றிருக்கிருக்கும் யோகிபாபுவை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

*

ஒரு கிராத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் மக்கள் எவ்வாறெல்லாம் அவமதிக்கப்படுவார்கள், சாதிய நோக்கில் எவ்வாறெல்லாம் மலினமாக நடத்தப்படுவார்கள் என்பது யோகிபாபுவின் பாத்திரம் வழியாக இயல்பாக பல இடங்களில் விவரிக்கப்படுகிறது.

தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை ஊர் மக்களில் ஒருவர் திருடிக் கொள்வதால் மீதமிருக்கும் பணத்தை தபால் அலுவலகத்தில் சேமித்து வைப்பதற்காக செல்கிறான் 'ஸ்மைல்'.  ஆனால் அந்த அரசாங்க கட்டிடத்திற்குள்  செல்வதற்காக 'புறவாசல்' எங்கே இருக்கிறது என்பதை 'ஸ்மைல்' தேடுகிறான். கிராமத்தில் எந்தவொரு வீட்டிற்குள்ளும் முன்வாசலின் வழியே அனுமதிக்கப்படாமல் புறவாசல் வழியாக மட்டுமே அவன் செல்வதால் ஏற்பட்ட பழக்கத்தை அரசாங்க கட்டிடத்திலும் தன்னிச்சையாகப் பின்பற்ற முயல்கிறான். இது ஒரு சிறு காட்சியாக கடந்து விட்டாலும் நம சமூகத்தில் நிலவும் சாதியக் கொடுமையை அவல நகைச்சுவையுடன் முகத்தில் அறைவது போல் பதிவு செய்திருக்கிறது.

"உன்னை யாரு சப்பாணின்னு கூப்பிட்டாலும் அவங்களை 'சப்'புன்னு அறைஞ்சுடு' என்கிற சப்பாணிக்கு ஆதரவு தருகிற பதினாறு வயதினிலே 'மயில்' போல, 'ஸ்மைலுக்கு' ஆதரவு தர முன்வருகிறாள் ஒருத்தி. தபால் அலுவலகத்தில் பணிபுரிகிற அரசு ஊழியை அவள். பணம் போட தபால் அலுவலத்திற்கு வருகிற 'ஸ்மைலின்' இயற்பெயரைக் கேட்கிறாள். அப்போதுதான் தன்னுடைய அசல் பெயர் என்ன என்பதை தேடத் துவங்குகிறான் 'ஸ்மைல்'. அவன் தன்னுடைய  பெயரைத் தேடும் வைபவமும், அது கிடைக்காமல் போகவே தபால் அலுவலக ஊழியை இவனுக்கு புதிதாக பெயர் சூட்டும் சடங்கும் ரகளையான காட்சிகளாக அமைந்துள்ளன.

'ஸ்மைலுக்கு' மண்டேலா என்கிற புதிய பெயர் தபால் அலுவலகப் பெண்ணின் மூலமாக கிடைக்கிறது. தனக்கு கிடைத்த புதிய அடையாளத்தின் மூலம் 'மண்டேலா' மகிழ்ந்தாலும் தன் உதவியாளனிடம் 'ஏண்டா.. இது உயர்சாதிக்காரங்க பெயரா இருந்தா என்னடா பண்றது?" என்று சந்தேகத்துடனும் அச்சத்துடனும் கேட்கிறான். இப்படி பல இடங்களில் அமுங்கிய நகைச்சுவைக் கொடியைஅட்டகாசமாக பறக்க விட்டிருக்கிறார் இயக்குநர் .

*

ஊராட்சி தேர்தலில் இரு சமூகத்தினருக்கும் சமமான எண்ணிக்கையில் வாக்குகள் இருப்பதை அவர்கள் கணக்கு போட்டு அறிகிறார்கள். எனவே ஒரேயொரு வாக்குதான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அம்சமாக மாறுகிறது. அது 'மண்டேலா' கையில் வைத்திருக்கும் வாக்கு. அந்த ஊரில் எவராலும் மதிக்கப்படாத 'மண்டேலா' ஒரே கணத்தில் கதாநாயகனாகிறான். 'உன் வாக்கை எனக்கு தா' என்று இரு பிரிவினரும் அவனிடம் கெஞ்சுகிறார்கள். கிட்டத்தட்ட ஒரு சராசரி இந்திய வாக்காளனைப் போலவே மண்டேலாவின் நிலைமை மாறுகிறது.

திருவிழா நாளன்று பலியிடப்படவிருக்கும் ஆட்டின் நிலைமைக்குள் 'மண்டேலா' சிக்கிக் கொள்கிறான். தற்காலிக மாலை, மரியாதைகள் கிடைத்தாலும் அதன் பிறகு அவன் பிரியாணியாகப் போகிறான் என்கிற ஆபத்தை அவன் உணர்வதில்லை. மாறாக அவனுக்கு உதவியாளனாக இருக்கும் சிறுவனும் தபால் அலுவலகப் பெண்ணும் இதைப் புரிந்து கொள்கிறார்கள். அவனை எச்சரிக்கிறார்கள். ஆனால் ஊராரின் திடீர் கருணையால் விதம் விதமான உணவுகளும், உடைகளும், பரிசுப் பொருட்களையும் பெறும் மண்டேலாவிற்கு இவர்களின் அறிவுரை காதில் விழுவதில்லை.

பிறகு நிலைமை ஒரு கட்டத்தில் மண்டேலாவிற்கு எதிராக மாறுகிறது. கதாநாயகனாக தென்பட்ட அவனே இப்போது வில்லனாகத் தோற்றமளிக்கிறான். இரு பிரிவினரும் அவனைத் தூக்கிப் போட்டு மிதிக்கிறார்கள். தன்னிடமுள்ள ஒற்றை வாக்கின் மதிப்பு எத்தகையது என்பதை மண்டேலா அழுத்தமாகப் புரிந்து கொள்ளும் இறுதிக்கட்டத்தை நோக்கி திரைப்படம் பயணிக்கிறது. வாக்காளர்கள் புத்திசாலிகளாக இருந்தால் தேர்தலில் வெற்றி பெறுவது அவர்களே என்பதை கடைசி ஷாட்டின் மூலம் அழுத்தமாகப் புரிய வைத்து விடுகிறார் இயக்குநர்.

*

ஸ்மைல் என்கிற மண்டேலாவாக மிக இயல்பாகவும் சிறப்பாகவும் நடித்திருக்கிறார் யோகிபாபு. முன்னரே குறிப்பிட்டபடி அவரது வழக்கமான நக்கல் பாணி நடிப்பை முற்றிலும் கழற்றி விட்டு இந்தப் பாத்திரத்தின் தன்மைக்கேற்ப அவரை கச்சிதமாகப் பொருத்துவதில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குநர் மடோன் அஸ்வின். சில காட்சிகள் மட்டுமே வந்தாலும்  தபால் அலுவலக ஊழியையாக ஷீலா ராஜ்குமார் சிறப்பாக நடித்துள்ளார். இவருக்கும் மண்டேலாவிற்கும் உள்ள வெளிக்காட்டப்படாத நேசமும் மெல்லிய காதலும் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

நேர்மையான ஊர்த்தலைவராக சங்கிலி முருகன், இரண்டு சமூகத்தைச் சேர்ந்த இளம் தலைவர்களாக ஜி.எம். சுந்தர் மற்றும் கண்ணா ரவி ஆகியோர் தங்களின் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார்கள். இதில் வரும் ஒவ்வொரு சிறு பாத்திரமும் அதனதன் தனித்தன்மையோடு மிக கவனமாக உருவாக்கப்பட்டுள்ளது.

உதாரணத்திற்கு எல்லோரிடமும் வேலை வாங்கிக் கொண்டு அவர்கள் 'பணம்?" என்று கேட்கும் போது 'வேண்டாம்' என்று எகத்தாளமாக கூறும் ஒரு பாத்திரம் வருகிறது. ஆனால் கடைசியில் இந்தப் பாத்திரம் அதே காரணத்தை இன்னொரு பொருத்தமான இடத்தில் சொல்லும் விதமானது சிறப்பாக அமைந்துள்ளது. சண்டை வரும் போதெல்லாம் தன் செருப்பை பத்திரமாக எடுத்து வைக்கும் இன்னொரு பாத்திரமும் சுவாரசியம்.

இதைப் போலவே 'மண்டேலாவின்' உதவியாளனாக நடித்திருக்கும் சிறுவன் பட்டையைக் கிளப்பியுள்ளான். யோகிபாபுவின் பிரத்யேக நக்கல் பாணியை, இந்தச் சிறுவன் கையில் எடுத்துக் கொண்டிருப்பது சிறப்பு. பல காட்சிகளில் உத்தரவாதமான சிரிப்பிற்கு காரணமாக உள்ள இந்தச் சிறுவன், தக்க நேரத்தில் யோகிபாபுவிற்கு அறிவுரை கூறும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

*

இயல்பான காட்சிகளோடு இந்தத் திரைப்படத்தில் வரும் இயல்பான நகைச்சுவை வசனங்களும் கவர்கின்றன. இரண்டு சமூகங்கள் மட்டுமே உள்ள அந்தக் கிராமத்தில் கூடுதல் ஒரு வாக்கிற்காக 'வேறு யாராவது இருக்கிறார்களா?' என்று விசாரிக்கப்படும் போது 'அவங்களைத்தான் நாம துரத்தி விட்டுட்டமே' என்று ஒரு வசனம் வருகிறது. தேர்தல் காலத்தில் மட்டுமே தலித் சமூகத்தின் ஓட்டுக்கள் கவனிக்கப்படும் விதத்தை இந்த வசனம் மிக நுட்பமாக சொல்லிச் செல்கிறது.

இரண்டு பிரிவினரும் தரும் இலவசப் பொருட்களை வைத்து ஜாலியாக இருக்கிறான் 'மண்டேலா'. ஆனால் ஒரு கட்டத்தில் அவை நிலையில்லாதவையாக அவனை விட்டுப் போகின்றன. அரசாங்கம் தரும் இலவசங்களை இது தொடர்பான காட்சிகள் கிண்டல் செய்கின்றன என்பது போன்ற விமர்சனங்கள் வெளிவந்தன.

அரசு வெளியிடும் இலவச திட்டங்கள், பொருட்களின் மூலம் எளிய சமூகங்களின் வாழ்க்கையில் உருவாகும் மாறுதல்கள் முக்கியமான விஷயம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.. ஆனால் இது தொடர்பான காட்சிகள் அதைப் பற்றி பேசவில்லை. எளிய சமூகத்திடமிருந்து வாக்குகளைப் பிடுங்குவதற்காக தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தரும் இலவசப் பொருட்களை மட்டுமே விமர்சிப்பதாக தோன்றுகிறது. ஒருவகையில் வாக்காளருக்கு தரப்படும் லஞ்சம் அது. வாக்காளன் அதைப் பெற்றுக் கொண்டால் பிறகு வெற்றி பெறும் வேட்பாளரை கேள்வி கேட்கும் தகுதியை தார்மீகமாக இழந்து விடுகிறான். இந்த ஆதாரமான நீதி படத்தில் அழுத்தமாக உணர்த்தப்படுகிறது.

*

அறிமுக இயக்குநரான மடோன் அஸ்வின் 'மண்டேலா' திரைப்படத்தின் மூலம் முதல் திரைப்படத்திலேயே கவனிக்கத்தகுந்த இயக்குநராக மாறியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் பல சமூக விமர்சனங்கள் போகிற போக்கில் சொல்லப்பட்டாலும் அவை சராசரி பார்வையாளனுக்கும் சென்று சேரும்படி அழுத்தமாக ஒவ்வொரு காட்சியையும் நுட்பமாக உருவாக்கியுள்ளார். அலவ நகைச்சுவையில் தோய்ந்த வசனங்களும் காட்சிகளும் இந்தப் படத்தின் காண்பனுபவத்தைச் சிறப்பாக்கியிருக்கின்றன.

பரத் சங்கரின் எளிமையான பின்னணி இசையும் சிறப்பான பாடல்களும் மிகப் பொருத்தமான இடங்களில் இணைக்கப்பட்டுள்ளன. யுகபாரதி, அறிவு போன்றவர்களின் பாடல் வரிகள் தாங்கள் சொல்ல வரும் கருத்துகளை மிக எளிமையாக பார்வையாளனிடம் கொண்டு சேர்க்கின்றன. விது அய்யன்னாவின் இயல்பான ஒளிப்பதிவு, பிலோமின் ராஜின் சிறப்பான எடிட்டிங் போன்ற தொழில்நுட்ப விஷயங்கள் இந்தத் திரைப்படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளன.

ஒரு சராசரியான வாக்காளனுக்கு அவன் அளிக்கும் வாக்கின் மதிப்பும் முக்கியத்துவமும் இன்னமும் கூட தெரியவில்லை. இந்த ஆதாரமான விஷயத்தை மிக வலுவாக பார்வையாளனுக்கு கடத்துவதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது 'மண்டேலா'. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தால் இந்தச் செய்தி பரவலான பார்வையாளர்களைச் சென்று அடைந்திருக்கும். என்றாலும் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படம் இணைய வழியில் வெளியானது மிகப் பொருத்தமானது.

கருப்பின மக்களின் சமூக மேம்பாட்டிற்கு தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவர் நெல்சன் மண்டேலா. அவரது பெயரை பிரதான பாத்திரத்தின் அடையாளமாகக் கொண்டு வெளிவந்திருக்கும் இந்தத் திரைப்படம் அந்தப் பெயருக்கு நியாயத்தைச் சேர்த்திருப்பது சிறப்பு. அரசியல்வாதிகள் மற்றும் வாக்காளர்கள் ஆகிய இரு தரப்பிற்கும் ஒரே சமயத்தில் எளிமையான பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கிறார் 'மண்டேலா'. 

 

(பேசும் புதிய சக்தி - ஜூன் 2021 இதழில் வெளியானது) 


suresh kannan

Thursday, May 20, 2021

The Great Indian Kitchen (2021) - சமையலறை என்னும் ஆயுள் தண்டனை

 
கடந்த ஜனவரி மாதத்தில் வெளியான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' என்னும் மலையாளத் திரைப்படம் பரவலான கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. 'பெண் விடுதலை' என்னும் கருத்தாக்கம்தான் இதன் மையம். சமையல் அறையில் அடைபட்டுள்ள பெண்களின் நூற்றாண்டுத் துயரத்தை மிக கச்சிதமாக பதிவு செய்துள்ளது இந்தத் திரைப்படம். மிகையோ, ஆர்ப்பாட்டமோ இல்லாமல் மிக இயல்பான திரைமொழியில் உருவாக்கப்பட்டிருப்பதுதான் இதன் விசேஷமான அம்சம்.


நமது ஆதி சமூக அமைப்பானது 'தாய் வழிச்சமூகமாகவே' இருந்தது. பெண்தான் ஒரு மனிதக் கூட்டத்தை தலைமையேற்று வழிநடத்தினாள். ஆனால் ஒரு கட்டத்தில் நிலைமை மாறிப் போனது.  ஆண் பொருள் தேடி வருபவனாகவும் பெண் வீட்டின் பொறுப்பேற்று குழந்தை வளர்ப்பிற்கும், சமையல் உள்ளிட்ட வீட்டுப் பணிகளை செய்பவளாகவும் மாறினாள். பெண்கள் கல்வி கற்று பணிக்குச் செல்லத் துவங்கி விட்ட இந்த நவீன யுகத்திலும் இந்த அமைப்பு முறையில் பெரிதும் மாற்றம் இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டமானது.

குழந்தைகளுக்கான பாடப்புத்தகங்களில் 'குடும்பம்' என்பதைக் குறிக்கும் படத்தைக்  கவனித்தால் 'தந்தை' என்பவர் வரவேற்பறையில் அமர்ந்து நாளிதழ் வாசித்துக் கொண்டிருப்பார். மனைவி என்பவர் சமையல் அறையில் பணி செய்து கொண்டிருப்பார். குழந்தைகள் தரையில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும். சமையல் என்றால் அது பெண் மட்டுமே செய்ய வேண்டியது என்பது நமது ஆழ்மனதில் அழுத்தமாகப் படிந்திருப்பதின் விளைவு இது. கணவன், மனைவி ஆகிய இருவருமே பணிக்குச் செல்லும் சமகால சூழலில் கூட சமையல் பணி பெண்களின் தலையில் மட்டுமே கூடுதலாக சுமத்தப்பட்டுள்ளது.

கவிஞர் ஜெயபாஸ்கரனின் 'மரபு' என்னும் தலைப்பிட்ட கவிதையை இங்கு நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.

வியர்க்க விறுவிறுக்க
எனக்கு நானே புலம்பியபடி

எதையாவது தேடிக் கொண்டிருப்பதை
சமையலறையின் ஜன்னல் வழிப்பார்த்து
பரிகாசம் செய்கிறாள் என் மனைவி.

அவள் சொல்கிறாள்...

சமையலறையில் என் கண்களை கட்டி
விட்டால் கூட
எந்த பொருள் மீதும் விரல் படாமல்
கேட்டப் பொருளை
கேட்ட மாத்திரத்தில்
எடுத்துத் தருவேன் என்று
சவால் விடவும் செய்கிறாள்
அங்கிருந்து.

அவளிடம் சொல்லிக் கொள்வதில்லை
நான்
நீ மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக
அங்கேயே இருக்கிறாய் என்பதை...’



இந்தக் கவிதையின் கடைசிப்பகுதி இருக்கிறதல்லவா.. அதுதான் இந்தத் திரைப்படத்தின் சாரம். உலகம் முழுக்க சமையல் அறையில் நெடுங்காலமாக அடைபட்டிருக்கும் பெண்களின் உள்ளார்ந்த அவஸ்தைகளையும் மெளனக் கோபங்களையும் உண்மைக்கு மிக நெருக்கமான தொனியில் நின்று காட்சிப்படுத்தியிருக்கிறது இந்தத் திரைப்படம்.

*

இதில் வரும் பிரதான பாத்திரங்களுக்கு பெயர்கள் இல்லை. 'அவள்' 'அவன்' என்று பெயரிடப்படாமல் காட்சிகளின் வழியாக நகர்வதே இதை அனைவருக்கும் பொதுமையாக அடையாளப்படுத்தி பார்க்கத் தோன்றுகிறது. அந்த 'அவள்' நடனத்தில் ஆர்வம் உள்ளவள். நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் மூலம் தன் வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்திற்கு நகர்கிறாள்.

பெண் பார்க்கும் படலத்தின் போது அவனும் அவளும் சங்கோஜத்துடன் ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொள்வதற்குள் காட்சி சட்டென்று வெட்டப்பட்டு அடுத்ததாக திருமணக்காட்சி காட்டப்படுகிறது. இதன் மூலம் நிச்சயிக்கப்பட்ட திருமணங்களின் நடைமுறை குரூரம் பளிச்சென உணர்த்தப்படுகிறது. ஒருவரையொருவர் அறிந்து புரிந்து கொள்ளும் குறைந்தபட்ச அவகாசம் கூட தரப்படுவதில்லை.

பாரம்பரிய பெருமை வாய்ந்த ஒரு 'பெரிய' குடும்பத்தில் வாழ்க்கைப்படுகிறாள் ‘அவள்’. புது மணப்பெண் என்பதற்கான ஆரம்பக்கட்ட சலுகைகள் துவக்க நாட்களில் தரப்படுகின்றன. ஆனால், வெளிநாட்டில் வசிக்கும் தன் மகளை கவனித்துக் கொள்வதற்காக கிளம்பி விடுகிறாள் அந்த வீட்டின் தலைவி. எனவே வீட்டின் மொத்த பணிச்சுமையும் புது மணப்பெண்ணின் தலை மீது விழுகிறது. அப்போது ஆரம்பிக்கிறது அவளின் அன்றாட தினங்களின் போராட்டம். சமையல் அறையில் உள்ள பாத்திரங்களோடும் இயந்திரங்களோடும் இணைந்து அவளும் ஓர் அஃறிணைப் பொருளாக மாறுகிறாள். மனப்புழுக்கத்தின் உச்சத்தில் அவளின் மெளனக்கோபம்  ஒரு நாள் ரெளத்திரமாக வெடிப்பதுதான் இதன் கிளைமாக்ஸ்.

*

சமையல் போட்டி தொடர்பான ரியாலிட்டி ஷோவோ என்று நினைக்கும்படி, படத்தின் பெரும்பாலான பகுதியானது உணவு தயாரிக்கப்படும் காட்சிகளின் வழியாகவே கடக்கின்றன. குக்கர் சீறும் சத்தம், காய்கறிகள் நறுக்கப்படும் க்ளோசப் காட்சிகள்,  டாப் ஆங்கிளில் காட்டப்படும் அடுப்பு மேடை, வற்றல் பொறிக்கப்படும் ஒலி, உணவு பரிமாறப்படுவது என்று குறிப்பிட்ட காட்சிகளே திரும்பத் திரும்ப  வருகின்றன. ஒரு திரைப்படத்தின் தொனியை சரியாக உள்வாங்கிக் கொள்ள இயலாதவர்களுக்கு ஒருவேளை இந்தக் காட்சிகள் சலிப்பை ஊட்டக்கூடும்.

ஆனால் சற்று யோசித்துப் பாருங்கள். நடைமுறையில் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை சமையல் அறை தொடர்பான விஷயங்களுக்கே செலவிடும் பெண்களின் நிலைமை என்ன? கனவில் கூட அவர்களுக்கு உணவு தயாரிக்கும் சலிப்பான காட்சிகளே திரும்பத் திரும்ப வரும். இந்த பரிதாபமான நடைமுறை அவஸ்தையைத்தான் இயக்குநர் பார்வையாளர்களுக்கு கடத்த முயல்கிறார். ஒன்றரை மணி நேரத் திரைப்படத்திலேயே இவற்றை நம்மால் சகிக்க முடியவில்லையென்றால் வருடக்கணக்கில் இதையே செய்பவர்களின் நிலையை நாம் யோசித்துப் பார்க்க வேண்டாமா?

அந்த வீட்டில் இரண்டு ஆண்கள் இருக்கிறார்கள். ஒன்று 'அவளின்' கணவன். இரண்டாவது 'அவளின்' மாமனார். பொதுவாக இது போன்ற பெண்ணின் சிரமங்களைச் சொல்லும் திரைப்படங்களில் ஆண் பாத்திரங்கள் கொடூரமானவர்களாகவும் ஆணாதிக்கத்தனம் மிகுந்தவர்களாகவும் சித்தரிக்கப்படுவார்கள்.  அவர்களின் அப்பட்டமான வில்லத்தனம் வெளிப்படையாக பெருகி வழியும். இதன் மூலம் பெண் பாத்திரத்தின் மீதான அனுதாபமும் ஆணின் மீதான கோபமும் பார்வையாளர்களுக்கு கூடுதலாக ஏற்படச் செய்வதற்கான உத்தி இது.

ஆனால் இதில் வரும் ஆண்கள் மிக ‘இயல்பானவர்களாக’ இருக்கிறார்கள். அதாவது தங்களிடம் தன்னிச்சையாக பெருகியோடும் ஆணாதிக்க மனோபாவம் பற்றிய பிரக்ஞையோ கவனமோ அவர்களிடம் துளியும் இல்லை. முருங்கைக்காயை மென்று மேஜையில் அப்படியே துப்புகிறார்கள். சாப்பிட்ட தட்டை கழுவுவதில்லை.

‘அவளின்’ மாமனார், ‘மகளே’ என்றுதான் அன்புடன் ‘அவளை’ அழைக்கிறார். ஆனால் மருமகளின் பணிச்சுமையைப் பற்றி ஏதும் கவலை கொள்ளாதவராக இருக்கிறார். ‘விறகு அடுப்பில் சோறு பொங்கினால்தான் தனக்குப் பிடிக்கும்’ என்பதை மருமகளிடம் நயமுடன் சொல்கிறார். ஆக அவள் இரட்டை சமையல் செய்ய வேண்டியிருக்கிறது. டூத் பிரஷில் பேஸ்ட் வைத்து தருவதில் இருந்து அவர் வெளியில் செல்லும் போது செருப்பு எடுத்து வைப்பது வரையான பணிகளை வீட்டுப் பெண்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஈஸி சேரில் சாய்ந்து கொண்டு மனமுருக சாமி கும்பிடுவதுதான் அவரின் வேலை. இத்தனை ‘நல்லவராகவே’ அவர் இருக்கிறார்.

‘அவளின்’ கணவனும் அப்படியே. தனது தந்தைக்கு பாசத்துடன் பரிமாறும் அனபான மகன்தான். ஆனால் ஒருமுறை கூட தன் மனைவியை அழைத்து ‘நீயும் அமர்ந்து சாப்பிடு’ என்று சொல்வதில்லை. ஒருமுறை கணவனும் மனைவியும் சாப்பிட வெளியில் செல்கிறார்கள். உணவகத்தில் சாப்பிடும் போது ஒரு சிறிய கோப்பையில் எலும்புகளை கடித்து ஜாக்கிரதையாக போடுகிறான் கணவன்.. ‘இந்த மேனர்ஸை வீட்டிலும் பின்பற்றலாமே?” என்று மனைவி தயங்கிய படி சுட்டிக் காட்டியவுடன் அவனுக்கு கோபம் வந்து விடுகிறது. முகம் மாற எழுந்து போய் விடுகிறான்.

*

சமையல் என்னும் பணியோடு அதைப் பரிமாறுதல் என்னும் கூடுதல் சுமையையும் பெண்கள் சுமக்க வேண்டியிருக்கிறது. இதில் வரும் பெண்கள், சமையல் அறைக்கும் சாப்பாட்டு மேஜைக்கும் இடையே பதட்டத்துடன் ஓடிய படியே இருக்கிறார்கள். ‘ஏவ்’ என்கிற ஏப்பத்துடன் உணவைச் சுவைத்து விட்டு எழும் பெரும்பாலான ஆண்கள் அதைப் பாராட்டி ஒரு வார்த்தை மனைவியிடம் சொல்வதில்லை. இதைப் போன்ற பல விஷயங்கள் இந்தத் திரைப்படத்தின் உள்ளே மெளனமான காட்சிகளாக விரிந்து செல்கின்றன.

ஆண்கள் துப்பி வைத்து விட்டுப் போகும் கழிவுகளை முகச்சுளிப்புடன் தினமும் எடுத்துப் போடுகிறாள் ‘அவள்’. இப்படி தினமும் முகத்தைச் சுளித்து சுளித்து அந்த சுளிப்பே அவளது முகத்தில் நிரந்தர பாவமாக தங்கி விடுகிறது. சமையல் மேடையில் மலை போல் குவிந்து கிடக்கும் பாத்திரங்களை திகைப்புடன் பார்த்து நிற்பதே ‘அவளுக்கு’ தினசரி வேலையாகி விடுகிறது. முகச்சுளிப்புடன் எச்சில் பாத்திரங்களை கழுவி விட்டு கையை நன்கு கழுவுகிறாள். ஆனால் தாம்பத்திய உறவின் போது கூட அந்த நாற்றம் துரத்திக் கொண்டே வருகிறது. அப்போதும் கையை முகச்சுளிப்புடன் முகர்ந்து பார்த்துக் கொள்கிறாள்.

இந்தத் திரைப்படத்தின் கிளைமாக்ஸை சமையல் அறை கழிவு நீரில் வைத்திருக்கிறார் இயக்குநர். பாத்திரம் கழுவும் நீர் செல்லாமல் அடைத்துக் கொள்கிறது. மறுபடியும் முகச்சுளிப்புடன் நாற்றமடிக்கும் கழிவு நீருக்காக ஒரு பக்கெட்டை தினமும் வைக்கிறாள். இது தொடர்பான காட்சிகள் அவ்வப்போது காட்டப்படுகின்றன.

“யாராவது பிளம்பரை கூட்டி வரக்கூடாதா?” என்று தினமும் கணவனிடம் கேட்கிறாள். அவனோ அது தனது பணியல்ல என்கிற முகபாவத்துடன் ‘பார்க்கலாம்’ என்று விட்டேற்றியாக கிளம்பி விடுகிறான். ஆனால் பிரச்சினை தீர்க்கப்படுவதேயில்லை. ஒரு தொழிற்சாலை இயந்திரத்தில் உள்ள குறையை ஒரு தொழிலாளி சுட்டிக் காட்டினால் அது உடனே சரியாக்கப்பட்டு விடுகிறது. உற்பத்தி பாதிக்கப்படக்கூடாதே என்கிற அச்சத்தினால். ஆனால் வருடம் பூராவும் சமையல் அறையில் பணிபுரியும் பெண்களுக்கு ஒரு சிறிய வசதி கூட செய்து தரப்படுவதில்லை என்கிற நடைமுறை கசப்பை இந்தக் காட்சிகள் இயல்பாக பதிவு செய்திருக்கின்றன.

இது சார்ந்த மெளனக்கோபம்தான் ஒரு கட்டத்தில் அவளை வெடிக்க வைக்கிறது. பல்வேறு அழுத்தங்கள் இணைந்து வெடிக்கும் அந்தத் தருணத்தில் அவள் என்ன செய்கிறாள் என்பதை நீங்கள் படத்தைப் பார்த்துதான் அறிந்து கொள்ள வேண்டும்.

*

இந்தத் திரைப்படத்தில் பின்னணி இசை என்பதே இல்லை. சமையல் அறையில் உணவு தயாரிக்கப்படும் சத்தங்கள், சாப்பிடும் ஒலிகள் போன்றவைகளால் மட்டுமே முழுத் திரைப்படமும் நிறைந்திருக்கிறது. படத்தின் துவக்கத்திலும் இறுதியிலும் பொருட்பொதிந்த இரண்டு பாடல்கள் வருகின்றன.

‘அவளாக’ நிமிஷா சஜயன் அற்புதமாக நடித்திருக்கிறார். ஏறத்தாழ இந்தத் திரைப்படத்தைத் தூக்கிச் சுமப்பவராக இவரைத்தான் சொல்ல வேண்டும். பொதுவாக நடிகைகளுக்கு இருக்கும்  மிகையாக ஒப்பனையோ, செயற்கையான பொலிவோ இல்லாமல் இயல்பான தோற்றத்துடன் இருப்பதுதான் நிமிஷா சஜயனின் பலம் எனலாம். எனவே சராசரிப் பெண்களின் துயரத்தைப் பேசும் இந்தப் பாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். இந்த வருடத்திற்கான தேசிய விருதிற்கு தகுதியானவர் என்று கணிக்கும் அளவிற்கு தனது சிறந்த நடிப்பைத் தந்திருக்கிறார்.

கணவராக சூரஜ் வெஞ்சரமூடு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அடிப்படையில் இவர் ஒரு நகைச்சுவை நடிகர். மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட். பிற்பாடு குணச்சித்திர வேடங்களில் பிரகாசிக்கத் துவங்கினார். இந்தத் திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் அருமையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சராசரி ஆணின் மனோபாவத்தை இயல்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

இத்திரைப்படத்தின் பாத்திரத்தின்படி இவர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியர். கல்வி நிலையத்தில் ‘குடும்பம்’ என்றால் என்ன? என்பதை மாணவர்களுக்கு இவர் விளக்கும் ஒரு காட்சி வருகிறது. ஆனால் நடைமுறையில் அதைப் பற்றிய அறிவே இவருக்கு இல்லை. நாம் கற்கும் கல்வியை பொருளீட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம்; அதை நம் சிந்தனையின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதேயில்லை என்பது போன்ற மிக முக்கியமான விஷயங்கள் போகிற போக்கில் காட்சியாகிக் கடக்கின்றன.

முன்பே குறிப்பிட்டபடி இதில் வரும் ஆண்கள் வெளிப்படையான வில்லன்களாக சித்தரிக்கப்படவில்லை. தன்னிச்சையாகவே அவர்களிடம் ஆணாதிக்க மனோபாவம் பெருகியோடுகிறது. ஆனால் அதைப் பற்றிய உணர்வோ பிரக்ஞையோ அவர்களிடம் சுத்தமாக இல்லை.

சமூகத்தில் தொடர்ந்து நிலவும் இம்மாதிரியான ஆணாதிக்க மனோபாவத்திற்கு ஒருவகையில் பெண்களும் காரணமாக இருக்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை. குழந்தைகளை சிறுவயதில் பாலின பேதத்துடன் வளர்ப்பதுதான் அடிப்படையான காரணம். பெண் குழந்தை என்றால் அவள் சமையல் கற்றுக் கொள்வது அவசியம் என்று சிறுவயதிலேயே மூளைச் சலவை செய்யப்படும் போது ஆண் குழந்தைக்கு மட்டும் பல்வேறு சலுகைகள் தரப்படுகின்றன. எனவே தான் அதிகாரம் செய்யப்பிறந்தவன், சமையல் பணி என்பது தனக்கு இழுக்கு தரக்கூடியது என்று ஒவ்வொரு ஆணும் உயர்வுமனப்பான்மையுடன் கருதத் துவங்கி விடுகிறான்.

போலவே பெண்களுக்கு இழைக்கப்படும் துயரங்களுக்கு சமயங்களில் பெண்களே காரணமாக இருக்கிறார்கள். இது தொடர்பான காட்சிகளும் இந்தத் திரைப்படத்தில் இயல்பாக வந்து போகின்றன. ‘மாதவிலக்கு நாட்கள்’ என்பது எத்தனை உடல் அவஸ்தையைத் தரக்கூடியது என்பது ஒவ்வொரு பெண்ணுக்குமே நன்கு தெரியும். ஆனால் ‘தீட்டு’ என்கிற பெயரில் அந்த நாட்களில் வீட்டின் பின்புறத்தில் ஒதுக்கி அமர வைப்பது, தாமதமாக உணவு தருவது உள்ளிட்ட பல துன்பங்களை பெண்களே சக பெண்களுக்குத் தருகிறார்கள்.

‘சமையல் அறையை’ ஓர் அதிகார மையமாக கருதிக் கொள்வதால் வரும் பிரச்சினையிது. புதிய மருமகள் சமையல் அறையில் மெல்ல ஆக்கிரமிப்பு செய்வதை எந்தவொரு மாமியாரும் நாத்தனாரும் அத்தனை எளிதில் அனுமதிப்பதில்லை. தங்களால் இயன்ற அத்தனை தடைகளையும் செய்கிறார்கள். அவளுக்கு எதிராக தங்களின் கணவரை, மகனைத் தூண்டி விடுகிறார்கள். பெரும்பாலான வரதட்சணைக் கொடுமைகளின் பின்னணியில் பெண்களே இருக்கிறார்கள் என்பதுதான் நடைமுறை. அடிமைகளாக இருப்பவர்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு சாவதைப் போன்ற அவல நகைச்சுவை இது. ‘சமையல் அறை என்பது அதிகாரம் அல்ல, ஆணாதிக்க உலகம் தந்திரமாக அமைத்திருக்கும் சிறை’  என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

*

மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையுள்ள நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது என்றாலும் பாலியல் பற்றிய அடிப்படையான விழிப்புணர்வு இங்கு பெரும்பாலான ஆண்களிடம் இல்லை. சொற்ப நிமிடங்களுக்குள் தங்களின் பாலியல் வேகத்தை தணித்துக் கொள்ளும் வடிகால்களாகவே பெண்ணின் உடலைக் கையாள்கிறார்கள். பெண்களின் உடல் பற்றிய அறிவு, அவர்களின் உணர்வுகள், விருப்பங்கள் ஆகியவவை பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு கவலையில்லை. அவற்றைப் பற்றிய பாலியல் அறிவு பெரும்பாலோனார்களிடம் இல்லை என்பதே உண்மை.

“நீங்கள் கொள்ளும் பாலுறவு எனக்கு வலியைத் தருவதாக இருக்கிறது. Foreplay என்பதைப் பற்றி நீங்கள் அறிய மாட்டீர்களா?” என்று தயக்கத்துடன் கணவனை ஒருமுறை கேட்டு விடுகிறாள் ‘அவள்’. என்ன இருந்தாலும் படித்தவள் அல்லவா? ஆனால் கணவனுக்கு கோபம் வந்து விடுகிறது. ‘ஓஹோ.. அதைப் பற்றியெல்லாம் உனக்குத் தெரியுமா?’ என்று மலினமாக கிண்டல் செய்கிறான். இதன் மூலம் அவன் கேள்விக்குட்படுத்த முற்படுவது அவளின் கற்பை. தன் கையாலாகதனத்தை மறைத்துக் கொள்ள அவளை அவமதிப்பதின் மூலம் திருப்தி கொள்கிறான் ‘அவன்’.

தினம் தினம் சமையல் அறையில் அல்லாடும் அவளுக்கு சில நொடிகள் ஆசுவாசம் தருபவளாக இருப்பவள், பால் பாட்டில் எடுத்து வரும் சிறுமி மட்டுமே. ‘இவளுக்காக’ சிறிய அன்பளிப்புகளை எடுத்து வருகிறாள். மூச்சுத் திணறும் அந்தச் சூழலில் சிறிதாவது அவளுக்கு ஆசுவாசம் தருவது இந்தச் சிறுமியின் ‘வருகை’ மட்டுமே.

இவள் மாதவிலக்கான சமயங்களில் சமையல் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ‘ஆச்சாரம்’ என்கிற பெயரில் இவளுக்கு கிடைக்கும் விடுதலையை அதிர்ஷ்ட விடுமுறை என்றே கொள்ளலாம். என்றாலும் அந்தச் சமயத்திலும் மனிதாபிமானத்தோடு பணிப்பெண்ணுக்கு உதவுகிறாள். பணிப்பெண்ணும் இவளும் வீட்டைச் சுத்தம் செய்யும் காட்சிகள் திரும்பத் திரும்ப காட்டப்படுகின்றன. பாரம்பரிய வீட்டின் மருமகளும், பணிப்பெண்ணும் ஏறத்தாழ ஒரே நிலையில்தான் இருக்கிறார்கள் என்பது நமக்கு நுட்பமாக உணர்த்தப்படும் காட்சிகள் இவை. பணிப்பெண்ணின் நிலைமை இன்னமும் மோசமானது என்பது சொல்லாமலேயே நாம் புரிந்து கொள்ளக்கூடிய விஷயம்.

*

ஜோ பேபி இயக்கியிருக்கும் நான்காவது திரைப்படம் இது. ஆர்ப்பாட்டமில்லாத திரைமொழியின் வழியாக தான் சொல்ல வந்ததை மிக அழுத்தமாகவும் ஆழமாகவும் பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கிறார். உண்மையில் இது ஆண்களுக்கான படம். அறிந்தோ அல்லது அறியாமலோ ஆண்களின் பல எதிர்வினைகளில், உடல்மொழிகளில், அசைவுகளில் ஆணாதிக்க மனோபாவம் பெருகி வழிந்தபடியே இருப்பதை அவர்களுக்கே உறுத்தும்படியாக உருவாக்கியிருப்பதை இயக்குநரின் வெற்றி எனலாம்.

பொருளாதாரச் சுதந்திரம் என்பது பெண் விடுதலையின் ஒரு பிரதான வாசல் என்பதையும் படம் இறுதியில் உணர்த்துகிறது. இதில் ஒரு காட்சி வருகிறது. புகுந்த வீட்டின் அழுத்தங்களைத் தாங்க முடியாத ‘அவள்’, ஒரு கட்டத்தில் வெடித்து பிறந்த வீட்டிற்கு வந்து விடுகிறாள். அப்போது வீட்டிற்குள் நுழையும் அவளது இளைய சகோதரன், தனது தங்கையிடம் ‘குடிக்கத் தண்ணீர் கொண்டு வா’ என்று கேட்கிறான். “ஏன் உனக்கு கை இல்லையா..நீயே போய் எடுத்து குடிக்க முடியாதா?” என்று ‘அவள்’ வெடிக்கிறாள். ஆணாதிக்கச் சிந்தனையானது சமூகத்தில் இன்னமும் மட்டுப்படாமல் இருப்பதற்கு குழந்தைகளின் வளர்ப்பு முறை ஒரு முக்கியமான காரணியாக இருப்பதை இந்தக் காட்சி அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது.

குறிப்பிட்ட வயதுகளில் இருக்கும் பெண்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நுழைவது தடை செய்யப்பட்ட விவகாரமானது கேரளத்தில் பெரும் சர்ச்சைகளையும் பெண்ணியம் சார்ந்த விவாதங்களையும் எதிர்ப்புகளையும் எழுப்பியது. அதுவும் இந்தப் படத்தில் நுட்பமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்ணியக் கருத்துகளுக்கு ஆதரவான ஒரு வீடியோவை ஃபேஸ்புக்கில் பகிர்கிறாள் ‘அவள்’. பழமைவாதத்தில் ஊறியுள்ள சில கலாசார காவலர்களின் மிரட்டல் காரணமாக அந்த வீடியோவை நீக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறான் ‘கணவன்’. கருத்துச் சுதந்திரம் என்பது பெண்களுக்கு எப்படி முற்றிலுமாக மறுக்கப்படுகிறது என்பதை விளக்கும் இந்தக் காட்சிக் கோர்வையின் ஊடே இந்துத்துவ அரசியலின் கோர முகங்களும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

அப்பட்டமான வெகுசன சினிமாவின் பாணியிலிருந்து விலகி மாற்று சினிமாக்களை உருவாக்குவதில் மலையாளத் திரையுலகம் எப்போதுமே தொடர்ந்து சாதித்து வருகிறது. இந்த நோக்கில் ஒரு மிகச் சிறந்த உருவாக்கமாக ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படத்தைச் சொல்லலாம். பல நூற்றாண்டுகளாக சமையல் அறையில் சிறைப்பட்டிருக்கும் பெண்களுக்கு ஒரு சிறிய ஜன்னலைத் திறந்து அவர்களை ஆசுவாசப்படுத்தியிருக்கிறது இந்தத் திரைப்படம்.


(பேசும் புதிய சக்தி - மே 2021 இதழில் வெளியானது)


 

suresh kannan

Monday, May 17, 2021

Operation Java (2021) - தற்காலிக பணியாளர் என்னும் பரிதாப சமூகம்

 

அறிமுக இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கி, சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘ஆபரேஷன் ஜாவா’ என்கிற மலையாளத் திரைப்படம் பரவலான வரவேற்பையும் கவனத்தையும் பெற்றுள்ளது. கேரள காவல் துறையின் சைபர் கிரைமில் தற்காலிக பணியை மேற்கொள்ளும் இரண்டு இளைஞர்களின் வழியாக இந்தத் திரைப்படம் விரிகிறது. பிடெக் படித்துள்ள அந்த இளைஞர்கள் சரியான பணி கிடைக்காமல் சமூக அங்கீகாரத்திற்காக தம்முடைய கணினி அறிவை காவல்துறைக்கு தாரை வார்க்கின்றனர்.

கேரள மாநிலத்தில் 2015 - 2017-ம் ஆண்டுகளின் இடையில் நிகழ்ந்த உண்மையான இணையக் குற்றங்கள், அவை சார்ந்த வழக்கு விசாரணைகளின் வழியாக இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த துண்டு துண்டு சம்பவங்களை இயக்குநரும் எடிட்டரும் திறமையாக ஒட்ட வைத்திருந்தாலும் இதுவே ஒரு வகையில் இந்தப் படத்தின் சிறுபலவீனமாக தெரிகிறது.

*

1990-ல் Close-Up என்கிற இரானிய திரைப்படம் வெளியானது. இரானிய இயக்குநர் Mohsen Makhmalbaf-ன் பெயரை உபயோகித்து மோசடி செய்தார் ஓர் ஆசாமி. அதைச் செய்தவர் உண்மையில் ஓர் அப்பாவி. சுய அடையாளம் இல்லாத சராசரி நபரான அவருக்கு, பிரபல இயக்குநரின் அடையாளத்தை திருடி இரவல் வாங்குவதுதான் முக்கிய நோக்கம். மற்றபடி அவர் உபத்திரவமல்லாத ஆசாமி. இதை அப்படியே உண்மைக்கு நெருக்கமான திரைக்கதையாக மாற்றி படமாகவும் ஆக்கியதில் வெற்றி பெற்றுள்ளார் Abbas Kiarostami.

‘ஆப்பரேஷன் ஜாவா’ திரைப்படத்தின் முதல் அரை மணி நேரம் மேற்குறிப்பிட்ட திரைப்படத்தை நினைவுப்படுத்தும் வகையில் உண்மைக்கு நெருக்கமான காட்சிகளால் பரபரப்பாக நகர்கிறது. மலையாளத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘பிரேமம்’ திரைப்படமானது வெளியாவதற்கு முந்தைய தினமே இணையத்தில் கசிந்தது. இந்த வழக்கு விசாரணையை கேரள சைபர் கிரைம் பிரிவு எவ்வாறு கண்டுபிடிக்கிறது என்பதை இந்தப் பகுதியில் சுவாரசியமாக விவரித்துள்ளனர். புனைவும் உண்மையும் இணைந்து கதகளி ஆடும் அட்டகாசமான பகுதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

இது போல் கேரளத்தில் நிகழும் வேறு சில இணையக் குற்றங்களின் விசாரணைக்காட்சிகளும் பகுதி பகுதியாக வருகின்றன. நன்கு படித்தும் வேலை கிடைக்காத இரு இளைஞர்கள், சைபர் கிரைமிற்கு உதவுகின்றனர். அனைத்து வழக்குகளிலும் தங்களின் அறிவைச் சிறப்பாக பயன்படுத்தி விடையக் கண்டுபிடிப்பதில் பெரும் பங்காற்றும் அவர்கள், இறுதியில் சக்கையாகப் பயன்படுத்தப்பட்ட கறிவேப்பிலை போல வெளியேற்றப்படுகிறார்கள்.

நம் சமூக அமைப்பும் அரசு இயந்திரங்களும் தற்காலிக, ஒப்பந்த, தினக்கூலி பணியாளர்களை எப்படியெல்லாம் உபயோகப்படுத்திக் கொண்டு பிறகு தூக்கி எறிகிறது என்கிற சமகால யதார்த்தத்தை இந்தத் திரைப்படம் சிறப்பாக சித்தரித்திருக்கிறது.

இன்றைய தேதியில் அரசு வேலை என்பது எந்தவொரு சராசரி இளைஞனுக்கும் அடையவே முடியாத கனவு. நிரந்தர ஊழியர்களை அமர்த்துவது என்பது பெரும் நிதிச்சுமை என்பதால் அரசும் சரி, தனியார் அலுவலகங்களும் சரி, ஒப்பந்த, தற்காலிக பணியாளர்களையே பெரும்பாலும் நியமிக்கின்றனர். எனவே என்னதான் திறமையாக உழைத்தாலும் பணி நிரந்தரமின்மை என்னும் கத்தி அவர்களின் தலைக்கு மேல் நின்றபடியே இருக்கிறது. இதுவே அவர்களுக்கு பெரும் மனஉளைச்சலைத் தருகிறது. சமூக பாதுகாப்பில்லாத இந்த உணர்வை படம் மிக கச்சிதமாக இறுதியில் வெளிப்படுத்தியிருக்கிறது.

*

ஆன்டனி ஜார்ஜ்,
வினயதாசன் என்னும் இரு இளைஞர்களாக பாலு வர்கீஸூம் லக்மனும் சிறப்பாக நடித்துள்ளனர். தற்காலிக பணிதான் என்றாலும் காவல்துறையின் ஓர் அங்கமாக அவர்கள் மாறும் போது ஏற்படுகிற மனமகிழ்ச்சியும் ஆசுவாசமும் சம்பந்தப்பட்ட காட்சியில் சிறப்பாக பதிவாகியுள்ளது. போலவே இறுதியில் அவர்கள் பணியை இழந்து வெளியேறும் காட்சியும் உருக்கமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்காலிக பணியாளர்களை, நிரந்தர பணியாளர்கள் ஈகோ காரணமாக அவமதிக்கும், புண்படுத்தும் யதார்த்தமான காட்சிகளும் உள்ளன. இவை ஒவ்வொரு தற்காலிக பணியாளரும் உத்தரவாதமாக எதிர்கொண்டிருக்கும் அனுபவமே.

காவல்துறை அதிகாரிகளாக நடித்திருக்கும் ஒவ்வொருவருமே தங்களின் பங்களிப்பைச் சிறப்பாக தந்திருக்கிறார்கள். மனம் உடையும் இளைஞர்களை அரவணைத்துச் செல்லும் அதிகாரியாக பினு பப்பு அற்புதமாக நடித்துள்ளார். பணி நிரந்தரமின்மை காரணமாக தன் காதலை இழந்து தவிக்கும் ஆன்டனிக்கு தன் சுயவாழ்க்கையைச் சொல்லி அவர் ஆற்றுப்படுத்தும் காட்சி அருமையானது.

தன் மனைவி தொடர்பான போலி ஆபாச வீடியோ இணையத்தில் வெளியான விஷயம், தன் குடும்பத்தில் எத்தனை பெரிய பிணக்குகளை, கசப்புகளை  ஏற்படுத்தியிருக்கிறது என்பதை காவல் அதிகாரியிடம் வெடிக்கும் சிறு காட்சியில் விநாயகன் அசத்தியுள்ளார்.

நம் சமூகத்தில் இணையம் தொடர்பாக எத்தனை குற்றங்கள் சமீபத்தில் பெருகியுள்ளன என்பதை தீவிரமும் நகைச்சுவையும் கலந்த காட்சிகளாக சொல்லிச் செல்கின்றனர். ஒரு வங்கியின் அதிகாரியே இந்த மோசடிக்கு பலியாவது அவல நகைச்சுவை.

*

மலையாளத் திரைப்படங்களில் தமிழர்களை குற்றவாளிகளாகவும் மலினமாகவும் சித்தரிக்கும் போக்கு குறித்த புகார்களும் விமர்சனங்களும் நெடுங்காலமாக உள்ளன. இந்தத் திரைப்படமும் அந்தப் போக்கை பின்பற்றியுள்ளது. ஜமாத்ரா போல இணையக் குற்றங்கள் நிகழும் ஒரு முக்கியமான மையமாக தமிழ்நாட்டின் ஒரு பகுதியை சித்தரித்துள்ளனர். 

 


இன்னொரு சுவாரசியமான விஷயமும் உண்டு. இந்த இளைஞர்கள் பயன்படுத்தும் ஒரு லேப்டாப்பில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் படம் உள்ளது. அது அரசால் பள்ளி மாணவர்களுக்கு தரப்பட்ட மடிக்கணினி. அது கள்ளச்சந்தையில் விற்கப்பட்டு கேரளா வரைக்கும் பரவியிருக்கிறது. இவ்வாறாக தமிழகத்தின் புகழ், மலையாளத் திரைப்படம் வரை எட்டியிருக்கிறது.

*

ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒலிப்பதிவு, சவுண்ட் மிக்ஸிங் என்று பல தொழில்நுட்ப விஷயங்கள் இந்தப் படத்திற்கு பலமாக நிற்கின்றன. வழக்குகளின் விசாரணைக் காட்சிகளும் அது சார்ந்த சங்கிலிகளும் கண்ணிகளும் சுவாரசியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் இயக்குநரான தருண் மூர்த்தி அடிப்படையில் கணினி தொடர்பான படிப்பை முடித்தவர். ஆனால் திரைப்படத்தின் மீதான ஆர்வத்தால் குறும்படம், விளம்பரப்படங்களை இயக்கி அதன் மூலம் ஓர் அடையாளத்தைப் பெற்று பிறகு திரைப்பட இயக்குநராக முன்னேறி வெற்றி பெற்றுள்ளார். இயக்குநராக மாறுவதற்கு இவர் பட்டிருக்கும் கஷ்டங்கள், அவமதிப்புகள், தடைகள் போன்றவை, அந்த இளைஞர்களின் கஷ்டங்களில் உண்மைகளாக கலந்திருக்கும் என்று தோன்றுகிறது.

மலையாளத்தின் புதிய அலை இயக்குநர்கள் தங்களின் வித்தியாசமான கதை, திரைக்கதைகளின் மூலம் பெரும் கவனத்தைப் பெற்று வருகிறார்கள். தருண் மூர்த்தியும் ‘ஆபரேஷன் ஜாவா’வின் மூலம் அந்த வரிசையில் இணைகிறார். மலையாளத்தின் புதிய அலை திரைப்படங்களில் இதுவும் முக்கியமானதொன்றாக அமையும்.


 

suresh kannan

Tuesday, May 11, 2021

Nayattu (2021) - வேட்டையாடப்படும் காவல்துறை

Nayattu (The Hunt)  என்கிற மலையாளத் திரைப்படம் பார்த்தேன். ஒரு நல்ல அரசியல் திரில்லர். தமிழில் வெற்றிமாறன் இயக்கிய படம் போல் இருந்தது.


சார்லி, உதாஹரணம் சுஜாதா போன்ற திரைப்படங்களை இயக்கிய மார்ட்டின் பிராக்கட்டின் திரைப்படம்.

*

போலீஸ் அதிகாரிகள் தொடர்பாக பெரும்பாலும் இரண்டு விதமான திரைப்படங்களை நாம் பார்த்திருப்போம். ஒன்று, காவல்துறையின் பெருமிதங்களை கதறக் கதற பேசும் திரைப்படங்கள் (உதா: சாமி)

இரண்டு, மோசமான காவல்துறை அதிகாரியால் சராசரி நபர் ஒருவர் வேட்டையாடப்படும் படங்கள். (உதா: தில்)

‘நாயாட்டு’ காவல்துறையைச் சேர்ந்த மூவர், காவல் துறையினராலேயே வேட்டையாடப்படும் பின்னணியைப் பேசுகிற திரைப்படம். மிகச் சாதாரணமாக ஆரம்பிக்கும் திரைப்படம் ஒரு கட்டத்தில் ராக்கெட் வேகத்தில் பயணிக்கிறது. அதன் திகிலுக்கு கூடுதல் சுவாரசியத்தைச் சேர்க்கிறது பதைபதைப்பான பின்னணி இசை.

*
ஓர் எதிர்பாராத விபத்து, காவல்துறையைச் சேர்ந்த மூன்று நபர்களை சிக்கல்களுக்குள் இட்டுச் செல்கிறது. அரசு என்னும் பிரம்மாண்ட இயந்திரத்திற்கு முன்னால் காவல்துறையைச் சேர்ந்த கீழ்நிலை நபர்களும் கூட ஒரு புழுவைப் போல் சாதாரணமாகி விடுகிற யதார்த்தத்தை இந்தத் திரைப்படம் அற்புதமாக சித்தரித்திருக்கிறது.

இது தலித் விரோத படம் என்பது போல் சில விமர்சனங்களைப் பார்த்தேன். இதில் பாதிக்கப்படுபவர்கள் இரு தரப்பிலுமே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். (காவல்துறையில் ஒருவர் மட்டும் கிறிஸ்துவர்).

அது ஆதிக்க சமூகமோ, அல்லது தாழ்த்தப்பட்ட சமூகமோ எந்தவொரு சமூகத்திலும் சமூக விரோதிகள் இருப்பார்கள். கீழ்மைவாதிகள் இருப்பார்கள். இதை மறுத்து நாம் ரொமாண்டிசைஸ் செய்ய முடியாது. அவர்களையும் இணைத்து ஒரு திரைப்படம் சித்தரிக்கும் போது அதை சம்பந்தப்பட்ட ஒட்டுமொத்த சமூகத்திற்காக பொருத்திப் பார்ப்பது சரியல்ல.

உண்மையில் இந்தத் திரைப்படம், தலித் பிரச்சினையை அரசு என்னும் இயந்திரம்  அதன் செளகரியத்திற்காக வெவ்வேறு விதங்களில் கையாளும் முறையைப் பற்றித்தான் பேசுகிறது.

இந்தச் சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போது அந்தப் பிரதேசத்தில் இடைத் தேர்தல் வரப்போகிறது. விபத்தில் இறந்தவன் தலித் இளைஞன் என்பதால் ஆளுங்கட்சிக்கு அது தலைவலியாகிறது. அந்தத் தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அம்சமாக அந்த மரணம் மாறுகிறது. எனவே ஆளும் அரசாங்கம் இந்தப் பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. போலீஸ்காரர்களை பலி போட்டாவது பிரச்சினையை வெற்றிகரமாக கடக்க நினைக்கிறது.  அல்லாவிட்டால் இது இன்னொரு சாதாரண மரணமாக மாறியிருக்கும்.

*

மண்டேலா திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். இரண்டு சமூகங்களைச் சேர்நதவர்கள் மட்டுமே சரிசமமான எண்ணிக்கையில் அந்த ஊரில் இருக்கையில் ‘வேறு யாரும் இல்லையா?” என்று ஒருவர் கேட்க “அவங்களைத்தான் நாம துரத்தி விட்டுட்டமே’ என்று ஒருவர் சொல்வார்.

ஆக.. தேர்தல் காலங்களில் மட்டுமே தலித் சமூகத்திற்கும் அது தொடர்பான பிரச்சினைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதர காலங்களில் அவை சமயத்திற்கு ஏற்ப ஊறுகாயாகவோ அல்லது அவசியப்பட்டால் ஊதிப் பெருக்கப்பட்டதாகவோ மாறுகிறது. இதைத்தான் இந்தத் திரைப்படம் அழுத்தமாக உணர்த்துகிறது.

*

'இத்தனை வருட அனுபவம் வாய்ந்த ஓர் போலீஸ்காரரால் இந்தப் பிரச்சினையை முறைப்படி சமாளித்திருக்கத் தெரியாதா?' என்னும் கேள்வி படம் பூராவும் எழுந்து கொண்டேயிருந்தாலும் திரைக்கதையை பல்வேறு விதமான நெருக்கடிக்குள் தள்ளி இந்த ஆதாரமான கேள்வியை பார்வையாளன் எழுப்புவதை மழுப்புவதில் இயக்குநர் வெற்றி பெற்றிருக்கிறார் எனலாம்.

இதன் முடிவு ஒருவித நிறைவின்மையைத் தந்தாலும், கடைசியில் இருவரும் என்ன முடிவெடுக்கிறார்கள் என்கிற எதிர்பார்ப்பையும் கூடவே தந்திருக்கிறது. அதுவே இதன் கிளைமாக்ஸிற்கு ஒருவகையான சுவாரசியத்தைத் தருகிறது.

குஞ்ஞாக்கோ போபன், ஜோஜூ ஜார்ஜ், நிமிஷா சஜயன் ஆகிய மூவருமே கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.

அவசியம் காண வேண்டிய திரைப்படம். சேட்டன்மார்கள் நம்மை விடவும் அசுர வேகத்தில் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ‘நயாட்டு’வும் நிரூபிக்கிறது.


suresh kannan

Monday, May 10, 2021

One (2021) மம்முட்டி நடித்த வேட்டி விளம்பரம்


 
மம்முட்டி நடித்த ‘One’ என்கிற மலையாளத் திரைப்படம் பார்த்தேன். படம் பேச முயன்றிருக்கும் மையப்பொருள் முக்கியமானது. ஆனால் பேசிய விதம் சலிப்பூட்டும் மசாலா.

நம்மூர் ஷங்கர் எடுத்த ‘முதல்வன்’ திரைப்படமானது, மலையாளத்தில் லோ –பட்ஜெட்டில் ரீமேக் செய்யப்பட்டது போன்று ஒரு ஃபீல். என்னவொன்று, முதல்வர் பாத்திரம், அர்ஜூன் மாதிரி ரோட்டில் இறங்கி சண்டை போடவில்லை. அதுவரைக்கும் தப்பித்தோம்.

ஆனால் ஒரு தொலைபேசியில் முடிக்க வேண்டிய விஷயத்திற்கு தானே போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார் முதல்வரான மம்முட்டி. இது போன்ற பரபரப்பான சென்ட்டிமென்ட் காட்சிகள் நிறைய உண்டு.

மற்றபடி ராம்ராஜ் வேட்டி விளம்பரம் மாதிரி மம்முட்டி ஸ்டைலாக நடக்கிறார்.. நடக்கிறார்.. நடந்து கொண்டே இருக்கிறார். நம்மூர் அஜித்திற்குப் போட்டி போல. நடந்து நடந்து தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி இங்கே வந்து விடுவாரோ என்று பயமாக இருந்தது.

*

படம் பேசும் விஷயம் என்ன?

ஒரு சாதாரண வணிகப் பொருளை வாங்கினால் கூட அதற்கு குறைந்தது ஒரு வருஷம் கியாரண்டி தருகிறார்கள்.

ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் எம்.எல்.ஏக்களுக்கு அவ்வாறான கியாரண்டி எதுவும் இல்லை. (இந்தப் பொருட்கள் பெரும்பாலும் வேலைக்கு ஆகாது என்பது நமக்கு முன்பே தெரியும் என்பது வேறு விஷயம்).

நாம் தேர்ந்தெடுக்கும் எம்.எல்.ஏவை ஐந்து வருடத்திற்கு வேறுவழியின்றி சகித்துக் கொள்ள வேண்டியதுதான். இப்படியொரு ஜனநாயக வழிமுறையைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல்வாதிகள் செய்யும் அராஜகங்கள் ஏராளம்.

இதை மாற்றி Right To Recall என்னும் முறையை தனது மாநிலத்தில் கொண்டு வர போராடுகிறார் ஓர் ஆளுங்கட்சி முதல்வர்.

ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர்களில் ஐம்பது சதவீதத்தினருக்கு அந்த தொகுதி எம்.எல்.ஏவின் செயற்பாடுகளில் திருப்தியில்லையென்றால் அவரின் பதவியைப் பறிக்க முடியும்.

ஆனால் முதல்வரின் கட்சியில் இருக்கும் எம்.எல்.ஏக்களில் பெரும்பாலோனோரே இதை ஆதரிப்பதில்லை. பின்னே.. அவர்கள் என்ன லூசா?

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பு எதிர்ப்புகளுக்கிடையே தனது நேர்மையான முயற்சியை முதல்வர் எப்படி சாதிக்கிறார் என்பதை நோக்கி கடைசிப்பகுதி நகர்கிறது.

*

இப்படியொரு கற்பனாவாத (ஆம். கற்பனாவாதம்தான். சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளும் இந்த முறையை நம் நாட்டு அரசியல்வாதிகள் நிச்சயம் பாராளுமன்றத்தில் ஆதரிக்க மாட்டார்கள்) திரைப்படத்தை நீங்கள் பார்த்தேயாக வேண்டும் என்றால் அதற்கு ஒரே காரணம்தான்.

அது மம்முட்டி. நிச்சயம் சில இடங்களில் அவரது நடிப்பும் கம்பீரமும் நெகிழ்ச்சியும் நம்மைக் கவரத்தான் செய்கிறது. 'கடக்கல் சந்திரன்' என்கிற முதல்வர் பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார்.

திரையிலாவது ஒரு நேர்மையான முதல்வரைக் கண்டு சற்று நேரம் சந்தோஷப்படலாம் என்று விரும்பினால் இந்தப் படத்தைப் பார்த்து வைக்கலாம்.


suresh kannan

Sunday, May 02, 2021

எழுத்தாளனின் திருட்டு - Can you ever forgive me?

 

இது தவற விடக்கூடாத அற்புதமான டிராமா. 

வீழ்ச்சியடைந்த ஓர் எழுத்தாளரைப் பற்றியது. எனவே நீங்கள் ஒரு எழுத்தாளர் / வாசகர் என்றால் இந்தப் படம் உங்களை மேலதிகமாக கவரக்கூடும் என்கிற உத்திரவாதத்தை அளிக்கிறேன். 

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.
 

**
 

Lee Israel ஓர் அமெரிக்க எழுத்தாளர். பிரபலங்களின் வாழ்க்கை சரித நூல்களை எழுதுவதில் புகழ்பெற்றவர். இவர் எழுதிய நூல் ஒன்று ‘நியூயார்க் பெஸ்ட் செல்லர் பட்டியலில்’ இடம் பெற்றது. 

ஆனால் அவையெல்லாம் பழைய கதை. லீ இப்போது ஒரு காலி பெருங்காய் டப்பா. அவள் சமீபத்தில் எழுதிய புத்தகம் சரியாக விற்பனையாகவில்லை. 

குடிப்பழக்கம், சினிக் மனோபாவம், Writers block போன்வற்றால் அவஸ்தைப்படுகிறாள். வீட்டு வாடகையை கூடத் தர முடிவதில்லை. வளர்ப்பு பூனைக்கு உணவோ மருந்தோ வாங்குவது கூட சிரமமானதாக இருக்கிறது. 

(இந்த இடத்தில் உங்களுக்கு வேறு எவரின் நினைவும் வரக்கூடாது என்று கடவுளை பிரார்த்திக்கிறேன்).

“நீ எழுதும் புத்தகத்தை வைத்துக் கொண்டு பத்து டாலர் கூட உனக்கு அட்வான்ஸ் தர முடியாது” என்று இவளுடைய ஏஜெண்ட் எரிந்து விழுகிறாள்.
 

**

ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதுவதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறாள் லீ. நூலகத்தில் சம்பந்தப்பட்ட நூல்களைத் தேடும் போது ஒரு புத்தகத்தின் நடுவே அந்த எழுத்தாளரே கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைக்கிறது. இம்மாதிரியான பழைய கடிதங்களை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கென்று துட்டு வசதி படைத்த சிலர் இருக்கிறார்கள். 

எனவே அந்தக் கடிதத்தின் மூலம் லீக்கு சிறிய வருமானம் கிடைக்கிறது. அதுவே அவளுக்கொரு புதிய யோசனையைத் தருகிறது. ஆனால் அதுவொரு விபரீதமான யோசனை. 

புகழ்பெற்ற படைப்பாளர்கள் எழுதியது போன்ற போர்ஜரி கடிதங்களை உருவாக்கி ஏஜெண்ட்கள் மூலம் விற்பனை செய்யத் துவங்குகிறாள் லீ. மெல்ல மெல்ல அவளின் வருமானம் பெருகுகிறது. போதைப் பொருள் விற்கும் ஒரு கிழவன் இவளுடைய கூட்டாளியாகிறான்.

பிறகு என்னவானது? லீயின் குட்டு அம்பலப்படவில்லையா..? ஆம். அம்பலப்பட்டது. இது வரை மெல்லிய சஸ்பென்ஸ்ஸாக சென்று கொண்டிருந்த இந்தத் திரைப்படம் மெல்ல அவல நகைச்சுவை நிறைந்த காட்சிகளாக மாறுகிறது. லீயின் மீது பரிதாபம் ஏற்படுகிறது. 

சில காலம் கழித்து தான் செய்த போர்ஜரி அனுபவங்களை ‘Can You Ever Forgive Me?’ என்கிற தலைப்பில் நூலாக எழுதினார் லீ. அது அவர் உண்மையாக எழுதிய படைப்பு. 

படைப்பாளர்களின் போர்ஜரி கடிதங்களை உருவாக்கும் போது, அவர்களே எழுதியது போன்று தோற்றமளிக்கும் வகையில் தன் திறமையை அபாரமாக பயன்படுத்துகிறாள் லீ. இந்தத் திறமையை நேர்மையாக பயன்படுத்தி தன் நூலை எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றுகிறது. 


**
எழுத்தாளர் லீ இஸரேலாக Melissa McCarthy தன் வாழ்நாள் நடிப்பைத் தந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அத்தனை கச்சிதம். தனது மனத்தத்தளிப்புகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். கூட வரும் திருட்டுக் கிழவனாக நடித்திருக்கும் Jeff Whitty-ன் பங்களிப்பும் சுவாரசியம். 

இந்தத் திரைப்படம் பல விருதுகளைப் பெற்றுள்ளது. 

ஒருவகையில் இந்தத் திரைப்படம் ‘திருவிளையாடல் தருமி’யை எனக்கு ஞாபகப்படுத்தியது. ‘ஏதோ. கொஞ்சம் சுமாரா எழுதறதால.. என்னை புலவன்-னு ஒப்புத்துக்கிட்டிருக்காங்க’ என்று சொல்கிற தருமி  பிறகு ‘மண்டபத்தில் எவரோ எழுதித் தந்ததை’ எடுத்துச் சென்றவுடன் மாட்டிக் கொண்டு அம்பலப்படுகிறான். 

அது மிகச்சிறிய கவனத்தை ஈட்டித்தந்தாலும் சரி, அல்லது தராவிட்டாலும் சரி, அது உங்களின் சொந்தச் சரக்காக இருக்க வேண்டும் என்கிற ஆதார நீதியை இந்தத் திரைப்படம் சொல்வதாக கருதுகிறேன். 


தவறவிடக்கூடாத திரைப்படம். 

 

suresh kannan

பதினெட்டு வயதில் பார்த்த நள்ளிரவுப் படம்

எனக்கு அப்போது 18 வயதிருக்கலாம். (நோ.. நோ.. இது அந்த மாதிரியான ‘அனுபவக் குறிப்பு அல்ல). 'கமலா, ரஜினியா?' என்று நண்பர்களிடம் குடுமிப்பிடிச் சண்டையிட்டுக் கொண்டிருந்த விடலை வயதின் காலக்கட்டம். (நான் கமல் கட்சி. இங்கு கட்சி என்பதை சம்பிரதாய வழக்கில் மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன்.)

வணிக எழுத்தின் வழியாக சுஜாதா அப்போது நன்கு பரிச்சயமாகியிருந்தார். அந்த ஏணியைப் பற்றிக் கொண்டு ‘கணையாழி’யையும் வாசிக்கும் பெரிய மனிதனாகியிருந்தேன். தனது பத்தி எழுத்தில் உலகின் சிறந்த படைப்புகளையும் எழுத்தாளர்களையும் அப்படியே ‘அசாலட்டாகவும்’ ஆழமாகவும் கடத்தி விடுவதில்தான் ‘வாத்தியார்’ மன்னராயிற்றே?

அந்த வகையில் ஓர் இந்திய இயக்குநரைப் பற்றி மிகவும் சிலாகித்து எழுதி ‘இவரின் படங்களைப் பார்க்கவில்லையெனில் நீங்கள் உயிர் வாழ்வதில் அர்த்தமேயில்லை’ என்கிற வகையில் எழுதி உசுப்பி விட்டார்.

‘என்ன.. இந்தாள் இப்படி ஏற்றி விடுகிறாரே.. அப்படி என்ன.. அவரின் படம் உசத்தி..?! பார்த்து விடுவோம்’ என்று காத்துக் கொண்டிருந்தேன். அதற்கான நேரமும் வந்தது. சம்பந்தப்பட்ட இயக்குநர் மருத்துவனையில் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த நேரம். வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது கூட அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது திரைப்படங்களை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு ஒளிபரப்பியது ‘தூர்தர்ஷன்’.

இப்படியொரு அசந்தர்ப்பமான நேரமா அமைய வேண்டும்?

இரவு பதினோரு மணி வரை காத்திருந்து பார்க்கத் துவங்கினேன். ("நைட்டு கண்ணு முழிச்சிருந்து என்ன கருமத்த பார்க்கறே?" – என் அம்மா. "சும்மாயிரும்மா. .இது வேற”)

படம் ஓடத் துவங்கியது. நான் மெல்ல மெல்ல அதில் அமிழத் துவங்கினேன். மனம் அதிரத் துவங்கியது.  நான் அதுவரை பார்த்திருந்த தமிழ் சினிமாக்கள் எல்லாம் எத்தனை குப்பையானது.. போலியானது.. என்பதை அந்தத் திரைப்படம் தோலுரித்துக் காட்டியது. ஒரு குடும்பத்தின் வாழ்க்கையை இத்தனை ரத்தமும் சதையுமாக காட்ட முடியுமா என்று வியந்தும் பிரமித்தும் போனேன். அதில் சித்தரிக்கப்பட்ட ஒவ்வொரு காட்சியும் எனக்கு மிக நெருக்கமாக இருந்தது. அதில் உலாத்தும் கிழவி.. எங்கள் வீட்டுக் கிழவியேதான்.

அதுவரையில்லாத புது அனுபவமாக என் மனம் மிகவும் நெகிழ்ந்தது. கண்ணில் இருந்து நீர் ஆறாக கொட்டியது. படம் முடியும் சமயத்தில் என்னால் மூச்சு விடவே முடியவில்லை. என் ரசனையின் கால்வாயில் ஒரு புதிய வழியை வெட்டி பெரிய வழியை ஏற்படுத்தியிருந்தார் அந்த இயக்குநர். அதன் வழியாக தேங்கியிருந்த சாக்கடை நீர் பெரும்பாலும் வெளியே ஓடியது.

‘உலகத்தீரே.. நான் ஒரு நல்ல திரைப்படத்தைப் பார்த்தேன். நீங்களும் அதைப் பற்றி கேளுங்கள்’ என்று நள்ளிரவிற்கும் மேலான அந்தச் சமயத்தில் ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி சொல்ல வேண்டும் போலிருந்தது. குறைந்தபட்சம் என் அம்மாவையாவது எழுப்பி சொல்ல வேண்டும். ஆனால் உன்மத்தம் பிடித்தவன் போலிருந்த என்னை அப்போது அவள் பார்த்திருந்தால் அவளே திகிலால் மூச்சடைத்துப் போயிருக்கலாம். அல்லது விபூதியை நெற்றியில் பூசி விட்டு விடிந்தவுடன் என்னை மந்திரிக்க அழைத்துச் சென்றிருக்கலாம்.

எனவே அவற்றை கைவிட்டு விட்டு எழுதாமல் வைத்திருந்த ஓர் ஓசி டயரியை எடுத்து மளமளவென்று அந்தத் திரைப்படத்தைப் பற்றிய என் எண்ணங்களையெல்லாம் மனம் கசிய எழுதிக் கொண்டிருந்தேன். பாமர எழுத்தென்றாலும் என்னளவில் அந்த டைரி ஒரு பொக்கிஷம். பிறகு எப்படியோ அது காணாமல் போயிற்று. அப்படி அதில் என்னதான் எழுதியிருப்பேன் என்று இன்று வரை பல்வேறு வகையில் நினைவு கூர்கிறேன். ஒன்றும் பிடிபடவில்லை.

பிறகு ஒவ்வொரு நாளும் அந்த இயக்குநரின் திரைப்படங்களை பார்த்து பார்த்து இன்பமடைந்தேன்.

*

விடலை வயதுள்ள பையன் ஒருவன் எப்போது முதிர்ச்சியுள்ள இளைஞன் ஆகிறான்..? அந்தக் கணம் எப்போது நிகழ்கிறது..? 

இதை அறிவது அத்தனை சாத்தியமில்லை. ஏதோவொரு நொடியில் அந்த மாயம் நிகழ்கிறது.. என்கிற விஷயத்தை மையமாக வைத்து ‘நிலா நிழல்’ என்கிற நாவலை சுஜாதா எழுதியிருப்பார்.

அந்த நாவலின் மையம் போல விடலை வயதிலிருந்து நான் இளைஞனான கணம் இந்தச் சமயத்தில்தான் நிகழ்ந்தது என்று நம்ப விரும்புகிறேன்.

*

இத்தனை விஸ்தாரமாக எழுதி விட்டு அந்த இயக்குநரின் பெயரைச் சொல்லாமல் இருப்பேனா? அந்த கலை மேதையின் பெயர் சத்யஜித்ரே. அப்படி நான் பார்த்த முதல் திரைப்படம் ‘பதேர் பாஞ்சாலி

வாத்தியார் சொன்னதையேதான் நானும் உங்களுக்குச் சொல்லுவேன்.

“அந்த மேதையின் திரைப்படங்களை இன்னமும் பார்க்காதிருப்பீர்கள் என்றால் உயிர் வாழ்வதில் பொருளில்லை” 😀

 


 

நான் பொதுவாக எவருக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்வதில்லை. ஆனால் சில அரிதான விதிவிலக்குகள் இருக்கும். அந்த வகையில் என் மனதினுள் வீற்றிருக்கும் பல ஆசான்களில் முக்கியமானவரான சத்யஜித்ரேக்கு இன்று பிறந்தநாள். அவருக்கு இந்த எளிய ரசிகனின் வணக்கமும் வாழ்த்தும்.

பிறந்த நாள் வாழ்த்துகள் மாஸ்டர்!

 


suresh kannan

Saturday, May 01, 2021

The Kill Team (2019)





கும்பல் மனோபாவம்தான் வன்முறையின் ஆதார எரிபொருள் எனலாம். தனியாக இருக்கும் போது ஆதாரமான நல்லியல்புகளுடன் இருக்கும் ஒருவன், வெறி பிடித்த கும்பலில் இணையும் போது அவனும் அந்த மூர்கத்த்தின் தன்னிச்சையான உறுப்பாகி விடுகிறான். 

ஏறத்தாழ போரும் ஒருவகையில் கும்பல் மனோபாவத்தின் வெளிப்பாடுதான். 

எங்கோ சில தலைவர்கள் எடுக்கும் முடிவிற்காக பல தனிநபர்கள் கும்பலாக ஒன்றுகூடி அந்நியமான தனிநபர்களைக் கொன்று குவிக்கிறார்கள். இதன் எரிபொருளாக தேசபக்தி, பாதுகாப்பு என்று பல கற்பிதங்கள் அவர்களுக்குள் விதைக்கப்படுகின்றன. 

இப்படிப்பட்ட கும்பல் மனோபாவத்தில் இணைய நேரும் ஒருவன், தன் அடிப்படை மனச்சாட்சியை இழக்காமல் இருந்தால் என்னவாகும்.. என்பதை இந்தத் திரைப்படம் மிக இயல்பாக விவரிக்கிறது. 

**


அடிப்படையில் இது ஒரு War film என்றாலும் போர் வன்முறையை அதன் சாகசங்களை வணிகமாக்கி  கொண்டாடவில்லை. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. 

Andrew Briggman அமெரிக்க  ராணுவத்தில் பணிபுரிபவன். ஆப்கானிஸ்தானிற்கு பயணப்பட வேண்டிய முதல் நாளன்று ‘நான் அதுக்குச் சரிப்பட்டு வருவேனா?” என்று தந்தையிடம் கேட்கிறான். ‘நல்லா வருவே’ என்று மையமாக ஆசிர்வாதம் செய்து அனுப்புகிறார் தந்தை.

தீவிரவாத வேட்டை என்கிற பெயரில் இதர நாடுகளின் மீது போர் தொடுக்கும்  வல்லரசு ராணுவங்கள், அங்குள்ள பொதுமக்களிடம் நல்லெண்ணத்தைப் பெறுவது வெற்றியின் ஒரு அடிப்படை. அதே சமயத்தில் பொதுமக்களிடையே கலந்திருக்கும் தீவிரவாதிகள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும்.  ஒரு சிறிய பையன் கூட மூளைச் சலவை செய்யப்பட்டு தற்கொலைப்  படையாக மாற்றப்பட்டிருக்கும் ஆபத்து உண்டு.  

ஆண்ட்ரூ இருக்கும் குழுவின் தலைவன் அவ்வாறானதொரு கண்ணி வெடியில் சிக்கி உயிரை விடுகிறான். அவனுடைய இடத்தில் டீக்ஸ் என்கிற கறாரான அதிகாரி வருகிறான். 

‘இனிமேலும் ஒரு அமெரிக்கனின் உயிர் கூட இந்தக் கண்ணி வெடியால் பறிபோகக்கூடாது” என்கிற எச்சரிக்கையுடன் அங்குள்ள குடிமக்களை சோதனையிடச் சொல்கிறான். 

ஆனால் டீக்ஸ் செய்யும் ஒரு நயவஞ்சகமான செயலை ஆண்ட்ரூ மெல்ல மெல்ல அறிந்து முடிகிறான். 

அடிப்படையில் மனச்சாட்சியும் நல்லியல்பும் உள்ள ஆண்ட்ரூவால் அப்பாவிகள் மீதான வன்முறையை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதனால் சக வீரர்கள் செய்யும் அவமானத்திற்கு இடையில் தவிக்க வேண்டியதாக இருக்கிறது. 

இதற்கிடையில் டீக்ஸ் செய்யும் நயவஞ்சகமான செயல் அவனை மனஉளைச்சலாக்குகிறது. அதை பொதுவில் துணிச்சலாக வெளிப்படுத்துவதா வேண்டாமா என்கிற அச்சம் அவனுக்குள் சூழ்கிறது. 

சிறப்பாக பணிபுரிந்து தான் ஒரு ராணுவ வீரன் என்பதை மெய்ப்பிப்பதா.. அதற்காக இவர்கள் செய்யும் அட்டூழியத்திற்கு துணைபோவதா.. என்கிற தத்தளிப்பில் மிகவும் தவிக்கிறான். 

இறுதியில் என்னவானது என்பதை ஆர்வம் குலையாமல் சொல்லியிருக்கிறார்கள். 


**

பொதுவாக அமெரிக்கா தான் செய்யும் எந்தவொரு அநீதியையும் பல்வேறு நியாய முலாம்கள் பூசி மறைப்பதே வழக்கம். ஆனால் இந்தத் திரைப்படம், அப்படிப்பட்ட ஒரு பொய்யை உடைத்து உண்மையை பதிவு செய்திருக்கிறது. 

இயக்குநர் Dan Krauss, இதே கருத்தாக்கத்தின் அடிப்படையில் ஓர் ஆவணப்படத்தை உருவாக்கியிருக்கிறார். ஆண்ட்ரூவாக Nat Wolff மிக அற்புதமாக நடித்திருக்கிறார். போலவே கறாரான அதிகாரியாக Alexander Skarsgård-ன் நடிப்பும் நன்றாக உள்ளது. 

காதலிலும் போரிலும் எவ்வித விதியும் கடைப்பிடிக்கப்பட வேண்டியதில்லை என்பார்கள். ஆனால் போர் தர்மம் என்ற ஒன்றும் மிக அவசியமானது என்கிற ஆதாரமான உண்மையை இந்தத் திரைப்படம் இயல்பாகவும் அழுத்தமாகவும் வெளிப்படுத்துகிறது. 

 

suresh kannan

Friday, April 30, 2021

அஞ்சலி: கே.வி.ஆனந்த்


 
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி,ஆனந்த் மாரடைப்பால் இறந்து விட்டதாக அறிகிறேன். நமக்குப் பிடித்தமான பிரபலங்களின் மரணங்களை அறிய நேர்கிற அந்தக் கணங்களில் நாமும் உள்ளே ஒரு துளி இறந்து போகிறோம் என்று தோன்றுகிறது. சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

தொன்னூறுகளில் வெளிவந்த க்ரைம் நாவல்களை வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தவர்களுக்கு கே.வி. ஆனந்த் என்பவர் முன்பே பரிச்சயம் ஆனவர். ஆம். ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்கள் எழுதும் கிரைம் நாவல்களின் அட்டைப்படங்களுக்காக பிரத்யேகமான புகைப்படங்களை எடுத்தவர் ஆனந்த்.

முன்பெல்லாம் கிரைம் நாவல் என்றால் காமா சோமாவென்று ஏதோ ஒரு புகைப்படத்தை முகப்பில் அச்சிடுவதே வழக்கம். ஆனால் நாவலின் உள்ளடகத்திற்கென்று பிரத்யேக புகைப்படங்களை எடுத்து அச்சிடுவது என்பது ஆனந்தின் வருகைக்கு பிறகுதான் என்று நினைக்கிறேன். இதற்காக நிஜ மாடல்களை உபயோகித்து அவர்களின் முதுகில் கத்திக்குத்து இருப்பது போல் ஒப்பனை செய்து.. அதை வசீகரமான கோணத்தில் புகைப்படம் எடுத்து.. இதற்காக நிறைய மெனக்கெடுவார் ஆனந்த். இவரது அட்டைப்படங்களுக்காகவே நாவல்களை வாங்கியவர்கள் அதிகம். சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களும் ஆனந்த்தை விதம் விதமாக உற்சாகப்படுத்துவார்கள்.

இது தவிர முன்னணி வார இதழ்களிலும் பிரபலமான புகைப்படக்கலைஞராக ஆனந்த் இருந்தார்.

*

புகைப்படமும் சினிமாவிற்கான ஒளிப்பதிவும் மிக நெருக்கமான தொடர்புடையது. ஒளியின் ரகசியத்தை அறிந்து கொண்டால் போதும். எனவே சிறந்த புகைப்படக்காரராக இருந்த ஆனந்திற்கு சினிமாவிற்கான ஒளிப்பதிவாளராக முன்னகர்வது என்பது எளிதாகவே இருந்திருக்கும்.

இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவரான பி. சி. ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்த ஆனந்த், அங்கு மிகச்சிறந்த மாணாக்கனாக விளங்கினார். அதற்கு முன்பு ஜீவாவிடமும் சிறிது காலம் உதவியாளராக இருந்திருக்கிறார். தான் பிஸியாக இருந்த காரணத்தினால் தனக்கு வந்த வாய்ப்பை தனது முதன்மைச் சீடனுக்கு அளித்து மகிழ்ந்தார், பி. சி. ஸ்ரீராம்

ஆம். 1994-ல் வெளியான ‘தென்மாவின் கொம்பத்து’ என்கிற மலையாளத் திரைப்படம்தான் ஆனந்த் ஒளிப்பதிவு செய்த முதல் திரைப்படம்.

பின்னர் முதல்வன், பாய்ஸ் போன்ற திரைப்படங்களில் பணிபுரிந்து மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் என்கிற தகுதியை அடைந்து விட்டாலும் அங்கேயே தேங்கி விடாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார்.

*

கே.வி.ஆனந்த் முதலில் இயக்கிய திரைப்படமான ‘கனா கண்டேன்’ 2005-ல் வெளியாகியது. இன்றைக்குப் பார்த்தாலும் வசீகரிக்கக்கூடிய புத்திசாலித்தனமான திரைக்கதை. இன்றைக்கு மலையாளத்தில் பிரபல நாயகனாக இருக்கக்கூடிய பிருத்விராஜை ஒரு சுவாரசியமான வில்லனாக ‘கனா கண்டேனில்’ உபயோகித்திருப்பார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ‘காப்பான்’ தவிர, கே.வி. ஆனந்தின் அனைத்துத் திரைப்படங்களும் சுபா என்கிற எழுத்தாளர்களோடு கூட்டணி சேர்ந்திருந்தது. சுபாவின் எழுத்தும் ஆனந்தின் இயக்கமும் இணைந்து ஒரு வசீகரமான கலவையாக அமைந்தது. போலவே இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், எடிட்டர் ஆன்டனி போன்ற திறமைசாலிகளோடு தொடர்ந்து கூட்டணி அமைத்துக் கொண்டார்.

கே.வி.ஆனந்தின் அனைத்துத் திரைப்படங்களுமே வெகுசனத் திரைப்படங்கள்தான். ஆனால் வழக்கமான மசாலாவில் மாட்டிக் கொள்ளாமல் தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் பல புதிய விஷயங்களை தொடர்ந்து முயன்று கொண்டேயிருப்பார். ‘அநேகன்’ இதற்கொரு நல்ல உதாரணம்.

ஆனந்த் தனது திரைப்படங்களுக்கு தலைப்பைத் தேர்ந்தெடுப்பதே அத்தனை அழகாக இருக்கும். ‘அயன்’, ‘கோ’ ‘மாற்றான்’ என்று புழக்கத்தில் இல்லாத தமிழ்ப்பெயர்களை சூட்டுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

தானே சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்தும் தான் இயக்கிய திரைப்படங்களுக்கு இதர ஒளிப்பதிவாளர்களை அமர்த்தி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

தமிழ் சினிமாவின் சிறந்த வெகுசன இயக்குநர்களில் ஒருவராக இருந்த கே.வி.ஆனந்தின் மறைவிற்கு என் மனமார்ந்த அஞ்சலி.

suresh kannan

Wednesday, April 28, 2021

Irakal (1985) - பாவத்தின் சம்பளம்


 
 
சமீபத்தில் ஜோஜி என்கிற மலையாளத் திரைப்படம் பார்த்தேன். மகேஷிண்டே பிரதிகாரம், தொண்டிமுதலும் திரிக்ஷாட்சியும் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கிய திலீஷ் போத்தனின் சமீபத்திய திரைப்படம்.

ஒரு முதியவரின் மரணத்திற்காக அவரது வீட்டிலுள்ள உறவினர்கள் வெவ்வேறு வெறுப்புகளுடன் காத்திருக்கும் மனத்தத்தளிப்புகளையும் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அவர்களின் மனவிகாரங்களையும் நுட்பமான முறையில் காட்சிப்படுத்தியிருந்தது ‘ஜோஜி. ஒளிப்பதிவு, பின்னணி இசை, குறிப்பாக ஃபகத் பாசிலின் நடிப்பு போன்ற விஷயங்கள் சிறப்பாக அமைந்திருந்தன.

இந்தச் சமயத்தில்தான் கே.ஜி.ஜார்ஜ் இயக்கிய ‘இரகள்’ படத்தை சில நண்பர்கள் கவனப்படுத்தினார்கள். பார்த்தேன். (யூட்யூபில் ஆங்கில சப்டைட்டிலுடன் கிடைக்கிறது) ஜோஜியை விடவும் பல மடங்கு உயர்ந்த படம் என்று ‘இரகள்’ திரைப்படத்தைச் சொல்லலாம். ஜார்ஜ் இதை எண்பத்தைந்தாம் வருடத்திலேயே இயக்கியிருக்கிறார் என்பது ஆச்சரியம் தருகிறது.

ஜோஜியைப் போலவே ‘இரகளும்’ ஜெயமோகன் எழுதிய ‘ரப்பர்’ என்கிற குறுநாவலை மெலிதாக நினைவுப்படுத்துகிறது.  பணக்கார முதியவர், அவரை உள்ளூற வெறுக்கும் இளைய மகன்கள், ரப்பர் தோட்டம் போன்ற சில பின்னணிகள் மட்டும் பொருந்திப் போகின்றன.

*

‘இரகள்’ திரைப்படத்தை மலையாளத்தின் முதல் ‘டார்க் மூவி’ என்கிறார்கள் இருக்கலாம். மனதின் இருண்மைகளை, அதன் சிக்கலான பக்கங்களை,  அகவிகாரங்களை அதிகம் மெனக்கிடாமல் இயல்பான காட்சியமைப்புகளைக் கொண்டு அதே சமயத்தில் மிக ஆழமாக பார்வையாளனுக்கு கடத்திய விதத்தை ஜார்ஜின் மேதைமையாக பார்க்கலாம்.

மாத்யூஸ் என்கிற ரப்பர் தோட்ட முதலாளிக்கு மூன்று மகன்கள். மூத்தவன் முரடன். தகப்பனைப் போலவே சட்ட விரோதமான வழிகளில் பணம் சம்பாதிக்கும் வெறியில் இருப்பவன். தகப்பன் எட்டடி பாய்ந்தால் இவன் பதினாறு அடி பாய்கிறான். தந்தைக்கு இதைக் கண்டு உள்ளூற பெருமை.

அடுத்த மகன் குடிகாரன். அவனுக்கு ரப்பர் தோட்ட சூழலில் வாழவே பிடிக்கவில்லை. மனைவியின் உபதேசப்படி அங்கிருந்து இடம் பெயர்ந்து நகரத்தில் வாழ நினைக்கிறான். ஆனால் முரட்டுத் தந்தை அதற்கு இடம் தருவதில்லை. ‘வெளியே போனா சல்லிக்காசு கிடையாது’ என்று மிரட்டுகிறார். வேறு வழியில்லாமல் அதற்குப் பணிந்திருக்கிறான்.

மூன்றாவது மகன்தான் இந்தத் திரைப்படத்தின் உத்தேசமான ஆன்டி ஹீரோ எனலாம். கல்லூரி மாணவன். ஆனால் படிப்பதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் செய்கிறான். கொலைகள் உட்பட. ஆம். கொலைகள்.

கல்லூரி ராகிங்கில் சக மாணவனை கடுமையாக காயப்படுத்தி விட்டு அதைப் பற்றி வீட்டில் எதையுமே பேசாமல் முடங்கிக் கிடக்கிறான். காவல்துறை வந்து விசாரிக்கும் போது கூட அலட்சியமாக பதில் சொல்கிறான். வழக்கம் போல் காசையும் தன் செல்வாக்கையும் விசிறியடித்து வழக்கை மூடி மறைக்கிறார் தந்தை. (திலகன்).

சொல்ல மறந்து போனேன். மாத்யூஸிற்கு ஒரு மகளும் உண்டு. (ஸ்ரீவித்யா) Spoiled child-க்கிற்கு சரியான உதாரணம். வீட்டிற்குள் நுழையும் போதே ‘யப்பா..’ என்கிற ஒப்பாரியுடன் வரும் இவள், தன் கணவனைப் பற்றி கண்டபடி பொய் சொல்லி புலம்புவது வழக்கம்.

தன்னுடைய பிள்ளைகளின் கீழ்மைகளை கண்டிக்காமல் அதை ஊக்கப்படுத்துவது போலவே செயல்படுகிறார் மாத்யூஸ். தன்னிடமுள்ள பணம், செல்வாக்கு, அதிகாரம் போன்றவற்றைக் கொண்டு எதையும் கீழே போட்டு மிதிக்க முடியும் என்கிற அகங்காரத்தைக் கொண்டிருக்கிறார்.

மாத்யூஸின் மனைவி ஓர் அப்பிராணி. கடவுள் பக்தி மிக்கவர். ‘நீங்க செய்யறது ஒண்ணும் நல்லால்ல’ என்று கணவருக்கு எதிராக சற்று முனகி பிறகு அவருக்கு அஞ்சி அடங்கிப் போவதோடு அவரது இருப்பு முடங்கிப் போகிறது. இந்த நல்ல பெண்மணியின் சகோதரர் சர்ச்சில் பாதிரியாராக இருக்கிறார். (பரத் கோபி) மிதமிஞ்சிய செல்வமும் அதிகாரமும் இருக்கும் மிதப்பில் இந்தக் குடும்பம் உள்ளூற புரையோடுவதைக் கண்டு மனம் வருந்துகிறார் பாதிரியார். சிக்கலான நேரங்களில் வந்து மாத்யூஸிற்கு புத்தி சொல்கிறார். ஆனால் எவையும் இவர்கள் செவி மடுப்பதில்லை.

*

‘இரகள்’ என்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்று பொருள். பணம், அதிகாரம், புகழ் போன்வற்றைக் கொண்டிருந்தாலும் அந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவரையொருவர் மனதார வெறுக்கிறார்கள். குறிப்பாக அதன் தலைமையின் மீது. ஆனால் அதை வெளிப்படுத்த அஞ்சுகிறார்கள். தன்னுடைய ஆளுமையின் கீழேதான் ஒட்டுமொத்த குடும்பமும் அடங்கியிருக்க வேண்டும் என்கிற கண்டிப்பை ஒவ்வொரு காட்சியிலும் நிலைநிறுத்துகிறார் மாத்யூஸ். (இந்தத் திரைப்படத்தை இந்திரா காந்தி – சஞ்சய் காந்தி என்கிற நோக்கிலும் சில விமர்சகர்கள் காண்கிறார்கள்).

மூன்றாம் மகனான பேபி மாத்யூஸ் மட்டுமே அங்கு கலகக்காரனாக இருக்கிறான். தனது எதிர்ப்புணர்ச்சியை துணிச்சலுடன் வெளிப்படுத்துகிறான். தனது தந்தை லாப வெறி கொண்டு பல்வேறு வணிக கீழ்மைகளில் ஈடுபதை அவன் மனதார வெறுக்கிறான். அந்தக் குடும்பத்தில் உள்ள போலித்தனமும் பாசாங்கும் அவனை பித்துப் பிடிக்க வைக்கிறது.

தன் கழுத்தில் தானே கயிற்றை மாட்டிக் கொண்டு தற்கொலை பாவனைகளை மேற்கொள்ளும் அவன் ஊசியால் விரலில் காயம் ஏற்படுத்திக் கொள்வது உள்ளிட்ட சுயவதைகளையும் மேற்கொள்கிறான். ஒரு கட்டத்தில் இவனது மனப்பித்து பெருகி இவனை ஒரு சீரியல் கில்லர் ஆக்குகிறது.

கணவனிடம் சண்டையிட்டுக் கொண்டு அடிக்கடி பிறந்து வீட்டிற்கு வரும் இவனது சகோதரி, வேலைக்காரனுடன் கள்ள உறவு கொள்வதை ரகசியமாகப் பார்க்கும் பேபி, முதலில் வேலைக்காரனைக் கொல்கிறான். பிறகு தன்னுடைய காதலிக்கு நிச்சயம் செய்யப்படும் மாப்பிள்ளை, நெருங்கிய நண்பன் என்று இவனது மரண வேட்டை தொடர்ந்தபடியே இருக்கிறது. 
 
 

 
‘குடும்பம்தான் இருப்பதிலேயே ஆகப்பெரிய வன்முறை நிறுவனம்’ என்கிற நிர்வாண உண்மையை பல காட்சிகளில் நமக்கு உணர்த்தியபடியே இருக்கிறார் இயக்குநர் ஜார்ஜ். சமூகம் கூட பிறகுதான். முதலில் குடும்பம்தான் குற்றவாளிகளை உற்பத்தி செய்கிறது. குற்றத்தின் ஊற்றுக்கண்களாக இருக்கிறது. இதன் சிறந்த உதாரணம் பேபி.

பேபி எதிர்கொள்ளும் மனச்சிக்கல்களும், மனவிகாரங்களும், சுயஅவஸ்தைகளும், உயிர்களை வேட்டையாடும் வேட்கையும் மிக நுட்பமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

பல்வேறு பாவங்களின் மூலம் அந்தக் குடும்பம் சேர்க்கும் செல்வம்தான் பேபியின் தலையில் வந்து விடிகிறது எனலாம். அவன் கொலைகளைச் செய்யும் ஆபத்தான பேர்வழியாக இருந்தாலும் இன்னொரு நோக்கில் அனுதாபத்துக்குரியவனாகவே தெரிகிறான்.

தனது தந்தை மேத்யூஸ் அதிகாரச் செருக்கில் முழங்கும் போதெல்லாம் பேபிக்கு மனம் கூசுகிறது. மற்ற எல்லோரையும் விட அதிகமாக அவரை உள்ளூற வெறுக்கிறான். அந்த அலைக்கழிப்பே அவனை கொலைகாரனாக்குகிறது. இதர சமயங்களில் தனது தாத்தாவை பாசத்துடன் போஷிக்கும் நல்ல பேரனாகவே இருக்கிறான். இது சார்ந்த காட்சிகளும் வருகின்றன.

அந்தக் குடும்பம் செய்யும் பாவமானது எப்படி அடுத்தடுத்த பரிணாமங்களில் வளர்கிறது என்பது ஒரு காட்சியில் நுட்பமாக சொல்லப்படுகிறது. அந்த வீட்டின் மூலையில் மரணப்படுக்கையில் கிடத்தப்பட்டிருக்கும் மாத்யூஸின் தந்தை ‘மாதாவே.. மாதாவே’ என்று பெரும்பாலான நேரங்களில் முனகியபடியே இருக்கிறார்.

அவர் ஒருமுறை பேபியை அழைத்து பேசும் போது சொல்கிறார். “நான் இங்க இருக்க காட்டை அழிச்சிருக்கேன். ஆனா மிருகங்களை கொன்னதில்லை. ஆனா உங்கப்பன் எல்லா மிருகத்தையும் சாகடிச்சிருக்கான்”

அடிப்படை உணவு உற்பத்திக்கான விவசாயம் என்பது மெல்ல மெல்ல குறைந்து மிகையான லாபம் சம்பாதிக்க உதவும் ரப்பர் போன்ற பணப்பயிர்கள் பெருகி நம் மண்ணையும் விவசாயத்தையும் எப்படி சூறையாடுகிறது என்பது நேரடியாக அல்லாமல் பல காட்சிகளில் உணர்த்தப்படுகிறது. 



இந்தக் குடும்பத்தின் ஆணவ மிக்க தலைவராக திலகன் அற்புதமாக நடித்திருக்கிறார். சந்தனக்கலர் வேட்டி ஜிப்பாவும், தங்க பிரேம் கண்ணாடியும் கையில் ஒரு சூட்கேஸூமாக பெரும்பாலான காட்சிகளில் தோன்றும் திலகன், உலகத்திலுள்ள எதையும் வாங்கி விடும் தன்னம்பிக்கையுடன் பேசும் காட்சிகள் சிறப்பாக பதிவாகியுள்ளன.

கல்லூரி மாணவன் பேபியாக கே.பி.கணேஷ்குமார் நடித்துள்ளார். இவருக்கு இதுதான் முதல் படம். ஆனால் அதன் சுவடே தெரியாமல் இவரின் பங்களிப்பு நிறைவாக அமைந்துள்ளது. உறைந்து போன மென்சோக முகபாவத்துடன் இவர் செய்யும் காரியங்களை திகிலைக் கிளப்புகின்றன.

மாத்யூஸின் கணக்குப் பிள்ளையாக வரும் இன்னொசென்ட், ஒரு விசுவாசமான வேலைக்காரனை துல்லியமாக பிரதிபலித்துள்ளார். தொழிலாளர்கள் பிரச்சினை உள்பட பலவற்றை எப்படி அணுக வேண்டும் என்பதை அறிந்தவராக உள்ளார் இன்னொசென்ட்.  ஆனால் ஒரு நல்ல முதலாளியின் லட்சணமாக, கணக்குப்பிள்ளையை எங்கே நிறுத்த வேண்டும் என்பது திலகனுக்குத் தெரிந்திருக்கிறது.

பணக்காரக் குடும்பத்தின் செல்லத்தால் சீரழிந்த ஒரு பெண்ணை தத்ரூபமாக சித்தரித்துள்ளார் ஸ்ரீவித்யா. தமிழ்த் திரைப்படங்களில் நாம் காணக்கூடிய ‘குடும்ப குத்துவிளக்கு’ வித்யா இல்லை. இவர் வேறு. சற்று வில்லங்கமான பாத்திரத்தை துணிச்சலாக ஏற்றுள்ளார். வீட்டுக்குள் நுழையும் போது ‘யப்பே’ என்று புலம்பியபடி கணவரைப் பற்றிய புகார்களை அடுக்கும் காட்சி துவங்கி வீட்டிற்குள் நுழைந்து உணவுப் பதார்த்தங்களை தின்று தீர்ப்பது வரை பல காட்சிகளில் இவரது நடிப்பு சுவாரசியமாக அமைந்துள்ளது.

ஸ்ரீவித்யாவின் கணவராக நெடுமுடிவேணு சில காட்சிகளில் வந்து போகிறார். சொற்ப காட்சிகளில் வந்தாலும் ஓர் அடங்காப்பிடாரியை மனைவியாக கட்டிக் கொண்ட துயரத்தை சிறப்பாக காட்டி விடுகிறார். மாமனரால் அடித்து விரட்டப்பட்டு இவர் கலங்கியபடி வீட்டை விட்டு வெளியே வரும் பரிதாப காட்சியானது நெடுநாள் மனதில் நிற்கும். (தங்கர் பச்சான் இயக்கத்தில் சேரன் நடித்து வெளியான ‘சொல்ல மறந்த கதை’ திரைப்படத்தின் காட்சியும் கூடவே நினைவிற்கு வந்து போனது).

இரண்டாவது மகனாக சுகுமாரன் நடித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளரும் இவரே. பேபி மாத்யூஸை காதலிக்கும் பெண்ணாக ராதா சில காட்சிகளில் வந்து போகிறார். சிறு சிறு பாத்திரங்களையும் எப்படி அவசியத்திற்கேற்ப உபயோகிக்க வேண்டும் என்பது இயக்குநர் ஜார்ஜிற்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது.

சிதறிக் கொண்டிருக்கும் மனதின் சிறுசிறு துண்டுகளை மிக கவனமாகப் பொறுக்கி காட்சியாக்குகிறார் ஜார்ஜ்.

திலகனின் குடும்பம் செல்வத்திலும் செல்வாக்கிலும் மிதமிஞ்சிய அளவைக் கொண்டிருந்தாலும் அந்தக் குடும்பத்தில் ஒருவருமே நிம்மதியாக இல்லை. பணத்தை ஈட்டுவதே வாழ்க்கையின் வெற்றி என்கிற மிதப்பிலும் ஆவணத்திலும் இறுமாந்திருக்கும் திலகனும் கடைசியில் ஓய்ந்து விடுகிறார். ‘பாதிக்கப்பட்டவர்கள்’ என்கிற வார்த்தையுடன் படம் நிறைகிறது.

‘வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி.. பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமடி’ என்கிற பாடல் வரிதான் இந்தத் திரைப்படம் முழுக்க எனக்குள் ஓடிக் கொண்டேயிருந்தது. பல பேர்களின் வாழ்க்கையை அழித்து கட்டப்படும் மாளிகையானது வெளியில் இருந்து பார்க்க பளபளப்பாகவும் பிரம்மாண்டாகவும் இருந்தாலும் அது உள்ளுக்குள் மெல்ல மெல்ல அழுகி புரையோடிக் கொண்டிருக்கும் யதார்த்தத்தை ஜார்ஜ் மிக திறமையாகச் சித்தரித்திருக்கிறார்.

அதுதான் இந்தத் திரைப்படம் சொல்ல வரும் நீதியா என்பது எனக்குத் தெரியாது. நான் அப்படித்தான் எடுத்துக் கொண்டேன்.

தனது சகோதரனான சர்ச் பாதிரியாரிடம், திலகனின் மனைவி துயரத்துடன் புலம்புகிறார். ‘தெய்வம் ஏன் எங்களுக்கு இத்தனை சோதனைகளைத் தருகிறது?”

அதற்கு பாதிரியார் சொல்லும் பதில்: “தெய்வம் எந்தச் சோதனையையும் தருவதில்லை. அனைத்துமே மனிதர்கள் உருவாக்கிக் கொள்வதுதான்”.

suresh kannan