Showing posts with label உலகத் திரைப்பட விழா. Show all posts
Showing posts with label உலகத் திரைப்பட விழா. Show all posts

Wednesday, December 20, 2017

A Man of Integrity - ஈரான் - சென்னை சர்வதேச திரைவிழா 2017


சென்னை சர்வதேச திரைவிழாவில் 19.12.2017 அன்று  மாலை பார்த்த ஈரானிய திரைப்படம் இது. 'இந்த சமூகத்தில் வாழ இரண்டு தேர்வுகள்தான் உள்ளன. ஒன்று ஒடுக்கப்பட்டவனாக இருக்க முடியும் அல்லது ஒடுக்குகிறவனாக. - என்பதுதான் இத்திரைப்படத்தின் மையம். 'அறத்திற்கும் கீழ்மைக்கும் இடையில் தத்தளிக்கும் ஒரு மனிதனைப் பற்றிய சித்திரம் இது. 

**

ஓர் ஈரானிய கிராமம். ரேஸா சிறிய அளவிலான மீன்பண்ணை தொழில் செய்கிறான். அவனுடைய மனைவி பள்ளியில் தலைமை ஆசிரியை. ரேஸா அடிப்படையில் நேர்மைக்குணம் படைத்தவன். 'கொஞ்சம் பணம் செலவு செஞ்சா உன் கடனை லேட்டா கட்ற மாதிரி மாத்தி தர்றேன்' என்று வங்கி அதிகாரி லஞ்சம் கேட்கும் போது முதலில் சற்று சஞ்சலப்பட்டு பிறகு உறுதியுடன் அதிக வட்டி செலுத்தினாலும் பரவாயில்லை என்று ஒழுங்கான வழியில் செல்கிறான்.

அவனுடைய நிலத்தை அபகரிப்பதற்காக அருகில் உள்ள தொழிற்சாலை நிறுவனம் ஒன்று பல்வேறு வழிகளில் இடைஞ்சல் செய்கிறது. ரேஸா நேர்மையாளனாக இருந்தாலும் அடிப்படையில் கோபக்காரன். தொழிற்சாலை ஊழியர் ஒருவருடன் நிகழும் கைகலப்பில் சிறைக்குச் செல்கிறான். பலமுள்ள எதிர் தரப்பு நிறைய பொய் சாட்சியங்களை வைத்திருக்கிறது. லஞ்சம் தர விரும்பாத ரேஸா நெருக்கடிகளை சந்திக்கிறான்.

அவனுடைய மனைவி உலக நடைமுறைகளை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டுள்ளவள். எனவே தன் சகோதரனின் உதவியால் கணவனை வெளியே அழைத்து வருகிறாள். புற அழுத்தங்கள் வீட்டின் உள்ளேயும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குடும்ப உறவில் சில சிக்கல்களும்.

தொழிற்சாலை மறைமுகமாக தன் மீது நிகழ்த்தும் அநீதிகளை சட்டத்தின் வழியாக எதிர்கொள்ள எல்லா வழிகளையும் முயல்கிறான் ரேஸா. ஆனால் ஊழலும் லஞ்சமும் நிறைந்திருக்கிற அமைப்பின் கதவுகள் ரேஸாவிற்கு திறக்க மறுக்கின்றன. ஒரு கட்டத்தில் எதிராளியைப் பழிவாங்கும்  எண்ணம் இவனுக்குள் பெருகிக் கொண்டே போக, அறத்திற்குப் புறம்பான செய்கையில் ஈடுபடுகிறான். இவனுக்கு வெற்றி கிடைப்பது மட்டுமல்லாமல் அங்கீகாரமும் தேடி வருகிறது. ஆனால் அதை சுவைக்க முடியாமல் குற்றவுணர்வுடன் ரேஸா அழுவதுடன் படம் நிறைகிறது. 


**

படம் முழுவதும், இறுக்கமும் கோபமும் பொங்கி வழியும் முகமாக நடித்திருக்கும் Reza Akhlaghirad-ன் பங்களிப்பு அபாரமானது. இவரது மனைவியாக நடித்திருக்கும் Soudabeh Beizaee-ன் நடிப்பும் அற்புதம். ரேஜஸாவின் மனைவியும் நேர்மையானவர்தான். ஆனால் சூழல் அவரையும் தீமையின் பக்கம் நகரச் செய்கிறது. தன்னுடைய தலைமையாசிரியை பதவியைப் பயன்படுத்தி, கணவனின் எதிராளி மகளை அழைத்து மறைமுகமாக மிரட்டுகிறாள். அப்போது அவர் சொல்லும் வசனம் ஒன்று அபாரமானது. "ஆண்கள் தங்களின் பெருமிதம் காரணமாக நிகழ்த்தும் சச்சரவுகளையெல்லாம் பெண்கள்தான் தங்களின் நுண்ணறிவு கொண்டு போக்க முயல வேண்டும்"

பிடிவாத  நேர்மையுடன் இருக்கும் ரேஸா, மனம் மாறும் கட்டமும் நுட்பமானது. ஆட்சிக்கு எதிராக செயல்படும் அவனுடைய நண்பன் சில வருடங்களாக சிறையில் இருக்கிறான். அவனுடைய மனைவி சாலையில் உணவுப் பொருட்கள் விற்கும் பரிதாப நிலையைப் பார்க்கிறான் ரேஸா. 'என் கனவுகள் முழுவதும் கலைந்து விட்டன' என்று அழுகிறாள் அவள். ஆனால் தன் கணவனின் தியாகம் குறித்தான பெருமையும் அவளிடம் இருக்கிறது. 

கான் திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்றிருக்கும் இத்திரைப்படம் மிக நிதானமாக ஆனால் அழுத்தத்துடன் தன்னுடைய மையத்தை நோக்கி நகர்கிறது. நேராக சித்தரிக்காமல் குறிப்பால் உணர்த்தும் பல நுட்பமான காட்சிகள் நிறைந்துள்ளன. எந்தப் பக்கம் திரும்பினாலும் லஞ்சத்தின் பக்கம் முட்டிக் கொள்ளுமளவிற்கு சமூக அமைப்பு கெட்டிருப்பது உலகளாவிய பிரச்சினைதான் போல.  இயக்கம்: Mohammad Rasoulof.

suresh kannan

Monday, December 18, 2017

Daybreak (அல்பேனியா) – சென்னை சர்வதேச திரைவிழா 2017


சில பல காரணங்களால் இவ்வருட விழாவிற்கு செல்ல வேண்டாம் என்று முன்பே முடிவெடுத்தேன். எனவே அது தொடர்பான செய்திகளை பார்ப்பதை கூடுமானவரை தவிர்த்தேன். என்றாலும் மனதின் ஒரு பகுதி தன்னிச்சையாக அதன் பக்கம் குவிந்து கிடந்தது. அலுவலகத்திலும் சற்று புலம்பிக் கொண்டேயிருந்தேன்.

ஒரு விஷயத்தின் மீது உங்களுக்கு ஆத்மார்த்தமான ஈடுபாடு இருந்தால் அதுவாக உங்களைத் தேடி வரும் என்றொரு விதியும் பழமொழியும் இருக்கிறது. விழா துவங்கி நாலைந்து நாள் கழித்து நண்பர் கே.என்..சிவராமன் அழைத்தார். “ஏன் இவ்வருடம் செல்லவில்லையா? முன்பே சொல்லியிருக்கலாமே” என்று உரிமையாக கடிந்து கொண்டு அதற்குரிய ஏற்பாட்டைச் செய்து தந்தார்.

அதுவரை சோம்பியிருந்த மனமும் உடலும் மினஇணைப்பு தரப்பட்ட இயந்திரம் போல ‘விர்ரென்றாகியது. அலுவலகப் பணிகளை விரைவிரைவாக செய்து முடித்தேன். அதற்கு இடையில், மாலையில் திரையிடப்படவிருக்கிற படங்களைப் பற்றிய விவரங்களை தேடினேன். அவசரத்திற்கு IMDB-ஐ நம்பலாம்.

‘KATHIE SAYS GOODBYE’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் முன்னணியில் நின்றது. அதன் பிறகு ‘DAYBREAK’ என்கிற அல்பேனிய திரைப்படம். கதைச் சுருக்கங்களை வாசித்துப் பார்த்தேன்.  அல்பேனியா மெல்லுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ‘அழுகாச்சி’ டிராமாவாக இருக்குமோ என்று தோன்றியது. எனவே அமெரிக்காவை தேர்ந்தெடுத்தென்.

அலுவலகத்தில் உள்ளவர்களை நச்சரித்து சில வேலைகளை மற்றவர்களின் தலையில் தள்ளி விட்டு பாய்ந்து வெளியே வந்தேன். நேரம் சுருக்கமாக இருந்தது. அமெரிக்காவிற்கு சற்று சாவகாசமாகவும் அல்பேனியாவிற்கு உடனடியாகவும். முதல் நொடியிலிருந்து ஒரு திரைப்படத்தை பார்க்காவிட்டால் எனக்கு ‘என்னவோ’ போலிருக்கும்.

எனவே தீர்மானித்ததையொட்டி அமெரிக்காவை நோக்கி நகர்ந்தேன். ஆனால் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சரியான போக்குவரத்து நெரிசல். ‘அமெரிக்காவா, அல்பேனியாவா’ என்று இரண்டிற்கும் இடையில் மனம் ஊசலாடிக் கொண்டேயிருந்தது. அனைத்து வாகனங்களும் உறைந்தது போல அப்படியே நிற்க, என் மனம் மட்டும் முன்னே விரைந்து கொண்டிருந்தது. பதட்டம் சற்று அதிகமாக “இது தேவையா’ என்றெழுந்த கேள்வியை புறந்தள்ளினேன்.

திடீரென ஓர் அசட்டு தர்க்கம். அமெரிக்கத் திரைப்படம் என்றால் இணையத்தில், டிவிடியில் என்ற பிற்பாடு எப்படியாவது பிடித்து விடலாம். அல்பேனியா என்றால் கிடைப்பது சிரமமாகி விடும் என்று தோன்ற சட்டென்று கட்சி மாறினேன். மனம் ஒரு monkey என்பது மற்றொருமுறை நிரூபணமாயிற்று. ஆனால் இந்த சங்கடமெல்லாம் முன்னே நின்றிருந்த கிங்கரர்களுக்கு தெரியவில்லை. கல்லுளி மங்கன்களாக நின்றிருந்தார்கள்.

ஏதோ ஒர் அதிர்ஷ்ட கணத்தில் மூக்கடைப்பு விலகியது போல நெரிசல் சற்று குறைந்து பேருந்து விரைந்த போதுதான் எனக்கும் மூச்சு வந்தது. திட்டமிட்ட படி சரியான நேரத்திற்கு முன்னதாகவே காஸினோ திரையரங்கத்திற்கு வந்து சேர்ந்தேன். வாசலில் அனுமதிச்சீட்டை எவரும் கோரவில்லை என்பது ஏமாற்றமாகவே இருந்தது.

சரி, இன்று பார்த்த அல்பேனிய தேசத்து திரைப்படத்திற்கு வருவோம்.

**

DAYBREAK – இதுவொரு துயரச்சுவை கொண்ட நாடகம். Leta  என்கிற நடுத்தரவயதுப் பெண். கையில் சுமார் இரண்டு வயதுள்ள ஆண் குழந்தை. வீட்டு வாடகை தர முடியாமல் சிரமப்படுகிறாள். அவளது பொருளியல் துயரம் நிதானமாக, ஆனால் அழுத்தமாக சொல்லப்பட்டு விடுகிறது. செவிலியர் பணியில் இருந்தவள். ஆதரிக்க உற்றார்கள் இல்லாத சூழல்.

நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் கிடக்கும் ஒரு கிழவியைப் பார்த்துக் கொள்ளும் சலிப்பான பணி. என்றாலும் மிக பொறுப்பாய் அனைத்து பணிகளையும் கவனித்துக் கொள்கிறாள். சில சொந்த காரணங்களுக்காக கிழவியின் மகள், இவளிடம் சற்று பணம் தந்து விட்டு பிரான்ஸ் கிளம்பி விடுகிறாள்.

வீட்டின் உரிமையாளர் துரத்தியதும். வேறு வழியின்றி தன்னுடைய பணியிடத்திலேயே குழந்தையுடன் தங்கிக் கொள்கிறாள்.  கிழவிக்கு ஒவ்வொரு மாதமும் பென்ஷன் வருகிறது. எடுத்து வரும் தபால்காரன் 'அவள் உயிரோடு இருக்கிறாளா' என்று சோதித்து விட்டு பணத்தைத் தருகிறான். அதை வைத்துதான் செலவுகளை சமாளிக்க வேண்டிய நிலைமை.

ஊருக்குச் சென்ற மகள் திரும்பத் தாமதம் ஆக, இவளுக்கு நெருக்கடி அதிகமாகிறது. ஒரு கட்டத்தில் கிழவியின் மகளும் மருமகனும் விபத்தில் இறந்து விட்டதாக தகவல் வர இடிந்து போகிறாள். தங்க இடமும் இல்லாமல், செலவிற்கு பணமும் இல்லாத நிலையில் பென்ஷன் பணம் மட்டுமே அவளுடைய ஆதாரம்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய இருப்பிற்காக அவள் எத்தனை கடினமானதொரு முடிவை எடுக்கிறாள் என்பதை பரபரப்பான இறுதிக்கட்ட காட்சிகள்  விவரிக்கின்றன. Survival Instinct-ம் வறுமையும் ஒருவரை எத்தனை நெருக்கடியை நோக்கி தள்ளிச் செல்லும் என்கிற ஆதாரமான செய்தி உறுத்தாமல் மிக மிக நிதானமாக சொல்லப்படுகிறது.

உதிரிப்பூக்கள் ‘அஸ்வினி’யை நினைவுப்படுத்துவது போல சோகம் ததும்பும் முகம் Ornela Kapetani –க்கு.  முழு திரைப்படத்திலும் இவளது முகம் ஒரேயொரு முறைதான் புன்னகைக்கிறது. பென்ஷன் பணம் எடுத்து வரும் தபால்காரனை வழிக்கு கொண்டு வருவதற்காக.

மிக நிதானமாக நகரும் திரைப்படத்தில் ஒரு மெல்லிய நகைச்சுவை வெளிப்பட்டாலும் மிகையாக சிரித்து வைப்பது ‘பிலிம் பெஸ்டிவல்’ மரபு. இன்றும் அப்படியே ஆயிற்று. படுக்கை கிழவியாக நடித்திருந்தவரின் பங்களிப்பு அபாரம். வெளியே சென்று விட்டு கதவைத் திறந்து வருபவள், படுக்கையில் கிழவியைக் காணவில்லை என்பதும் பதறி விடுகிறாள். நமக்கும் அந்தப் பதட்டம் தொற்றுகிறது. ஆனால் கிழவி, இவளுடைய குழந்தையை வைத்துக் கொண்டு ஜம்மென்று உட்கார்ந்திருக்கிறாள்.

நிலவு நட்சத்திரங்களைப் பற்றி கிழவி பேசுவதும், ‘என்னைப் பற்றி ஒருமுறை கூட விசாரிக்கவில்லையா?” என்று தொலைபேசியில் மகள் விசாரிப்பதும் என படத்திற்குள் சில நுட்பமான விஷயங்கள் ஒளிந்துள்ளன.

அகாதமி விருதிற்காக அல்பேனியா தேசத்தின் சார்பில் தேர்வாகி அனுப்பப்பட்டிருக்கிற திரைப்படம்.  டிராமா பிரியர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

**

மிச்சமிருக்கிற நாட்களில் நேரத்தை பிழிந்து எப்படியாவது சில திரைப்படங்களை பார்க்கலாம் என உத்தேசம். இந்த முறை அண்ணாசாலையில், அருகருகிலேயே அரங்கங்கள் அமைந்திருப்பது ஒரு நல்ல விஷயம். ஆனால் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கென்று கட்டப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த கலைவாணர் அரங்கம் தயாராகியும் அது ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தெரியவில்லை. என்ன அரசியலோ?

suresh kannan

Friday, February 19, 2016

சென்னையில் திரைப்பட திருவிழா - 2016

13-வது வருட  சென்னை சர்வதேச திரைவிழா, கடந்த ஜனவரி 6 முதல் 13 ந் தேதி வரை நடைபெற்றது. இதில் சுமார் 180 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

உலக சினிமா வரிசையில் 120 திரைப்படங்கள், 50 வெவ்வேறு தேசங்களின் பங்களிப்புகள், வெனின்சுலா மற்றும் சைனா வின் மீதான 'Country Focus' திரைப்படங்கள், ஜெர்மனி இயக்குநர் Fassbinder மற்றும் டென்மார்க் இயக்குநர் Nils Malmros ஆகியோர்களின் Retrospective, சார்லி சாப்ளின்-க்கு இணையாக கொண்டாடப்பட வேண்டிய பஸ்டர் கீட்டனின் 120வது வருடத்தை நினைவு கூரும் வகையில் 6 திரைப்படங்கள், இயக்குநர் பாலச்சந்தர் மற்றும் ஆச்சி மனோரமா ஆகியோர்களின் நினைவாக 8 திரைப்படங்கள். இது தவிர இந்தியன் பனோரமா வரிசையில் 10 மற்றும் தமிழ் திரைப்படங்களின் போட்டி வரிசையில் 12 திரைப்படங்களும் இடம் பெற்றன.

பல்வேறு தேசங்களிலிருந்து 'ஆஸ்கருக்காக'  நாமினேட் ஆன திரைப்படங்கள், பெர்லின் மற்றும் கான் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட மற்றும் விருது வாங்கிய திரைப்படங்கள் இந்த வரிசையில் அடங்கும். உலக சினிமா ஆர்வலர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இந்த விழா ஒரு கொண்டாட்டமாகவே விளங்கியது.

இந்த விழாவில் என்னால் காண இயன்ற திரைப்படங்களில் முக்கியமான மற்றும் சுவாரசியமான திரைப்படங்களைப் பற்றி சுருக்கமான அறிமுகமாக இந்தக் கட்டுரைகளில் பகிரப் போகிறேன். ஒவ்வொரு திரைப்படமுமே அதனதன் அளவில் முக்கியமானது; மிக விரிவாக அறிமுகம் செய்யப்பட வேண்டியது.
 
 


Taxi  | 2015 | Iran | Dir: Jafar Panahi


இந்த விழாவில் ஏறத்தாழ அனைத்து திரை ரசிகர்களினாலும் மிக ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக இதுவே இருக்க முடியும். இதற்கான பிரத்யேக காரணங்கள் உள்ளன. ஈரான் போன்ற தேசங்களில் கருத்துரிமை சார்ந்த கடுமையான கட்டுப்பாடுகளும் தணிக்கைகளும் இருப்பது நமக்குத் தெரியும். ஜாபர் பனாஹியின் திரைப்படங்கள் அந்நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் அதன் மதம் சார்ந்த கொள்கைகளின் மீது எதிர்பரப்புரை செய்யும் வகையில் அமைந்திருப்பதாகவும் கருதி அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. பல்வேறு சமயங்களில் அவர் கைது செய்யப்பட்டு பின்பு சக படைப்பாளிகளின் மூலமாான பல போராட்டங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் திரைப்படங்கள் உருவாக்குவதின் மீது 20 வருட தடை ஏற்படுத்தப்பட்டு 2010-ல் அவர் வீட்டுச் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இது தளர்த்தப்பட்டு ஈரானை விட்டு வெளியேறக் கூடாது என்கிற நிலையுள்ளது. அவருடைய திரைப்படங்கள் சர்வதேச விழாக்களில் பங்கேற்கப்பட்டு விருதுகள் வாங்கினாலும்  ஈரானில் திரையிடப்படாத நிலைமையே இன்னமும் உள்ளது.

என்றாலும் தடையுத்தரவுக் காலங்களிலும் அவர் திரைப்படங்களை உருவாக்கும் உத்வேகத்தை எவராலும் தடுக்க முடியவீல்லை. தன் மீதான தடையுத்தரவு அனுபவங்களை வைத்து வீட்டின் உள்ளேயே அவர் 2011-ல் உருவாக்கிய  This Is Not a Film என்கிற ஆவணப்படம் மிக ரகசியமாக ஒரு கேக்கினுள் மறைத்து வைக்கப்பட்டு கான் திரைப்பட விழாவில் பிரத்யேகமான அனுமதியுடன் திரையிடப்பட்டது.

கடுமையான அடக்குமுறைகளைத் தாண்டியும்  பனாஹியின் திரைப்படங்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. '’நான் திரைப்படங்கள் உருவாக்குவதை எவராலும் தடுக்க இயலாது; என்னை முடக்குவதற்கான ஒவ்வொரு முயற்சியின் போதும், திரைப்படங்களை உருவாக்கும் வெறி அதிகமாக எனக்குள் கிளர்ந்தெழுகிறது’ என்பது அவருடைய சமீபத்திய அறிக்கையின் ஒரு பகுதி.

இந்தச் சூழலில் 2015-ல் அவர் உருவாக்கியிருக்கும் docufiction பாணியிலான அவருடைய படைப்பே Taxi. பெர்லின் திரைப்பட விழாவில் பங்கேற்று விருது பெற்றதோடு  FIPRESC விருதையும் பெற்றுள்ளது.

இயக்குநர் பனாஹி ஓட்டும் ஒரு காரில் டெஹ்ரானின் பல்வேறு தரப்பிலான மக்கள் பயணம் செய்கின்றனர். அவர்களின் உரையாடல்களின் மூலமும் காட்சிகளின் மூலமும் அந்த  தேசத்து மக்களின் வாழ்வியல் அனுபவங்களும் அரசியல் அடக்குமுறைகளும் மதம் சார்ந்த எண்ணங்களும் வெளிப்படுகின்றன. காரின் உள்ளேயே அமைக்கப்பட்டிருக்கும் கேமராக்களின் மூலம் முழு திரைப்படமும் உருவாகியுள்ளது. மக்களின் மீதான கண்காணிப்பு அரசியலைப் பற்றியே இத்திரைப்படம் பல்வேறு குறியீட்டுக்காட்சிகளின் மூலமாக உரையாடுகிறது.

ஒரேயொரு உதாரணக் காட்சியை சொல்ல வேண்டுமென்றால், பனாஹி,  தன்னுடைய உறவினரான ஒரு பள்ளிச் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். ஒரு சிறிய ஆவணப்படத்தை எடுக்க வேண்டுமென்பது அவளுடைய ஆசிரியை தந்திருக்கும் குறிப்பு. அதை உருவாக்குவதற்கான விதிகளையும் நிபந்தனைகளையும் பனாஹிக்கு வாசித்துக் காட்டுகிறாள் சிறுமி. அது சார்ந்து அவளுக்கு பல குழப்பங்கள் உள்ளன. இந்த உரையாடலின் மூலம் படைப்பாளிகளின் மீது அந்த தேசம் வைக்கும் கருத்துரிமை சார்ந்த தடைகளில் உள்ள அபத்தங்களை இயக்குநர் மறைமுகமாக உணர்த்தி அந்த உரையாடலை அற்புதமானதொரு பகடியாக்குகிறார். உலக சினிமா தொடர்பான திருட்டு டிவிடிகளை விற்கும் ஒருவரும் பனாஹியின் வாகனத்தில் பயணிக்கிறார். இவ்வாறு பல சுவாரசியமான அனுபவங்கள் இத்திரைப்படத்தில் பதிவாகியுள்ளன. இவைகளின் ஊடே அடக்குமுறையின் அரசியலின் வலியும் மிக அழுத்தமாக வெளிப்படுகிறது.



Rams  | 2015 |  Iceland | Dir: Grímur Hákonarson


பொருளாதாரக் காரணங்களையும் தாண்டி விலங்கின் மீது மனிதன் கொள்ளும் நேசத்தை நெகிழ்வான காட்சிகளுடன் உரையாடும் திரைப்படம் இது. பகைவர்களாக இருந்தாலும் நெருக்கடியான சமயத்தில் சக மனிதனின் மீதான நேசமும் அக்கறையும் பட்டுப் போகாது என்கிற செய்தியும் இணைக்கோடாக பயணிக்கிறது.

குடும்பத் தகராறு காரணமாக சுமார் 40 வருடங்களாக ஒருவரோடு ஒருவர் பேசாமல் அருகருகேயான வீட்டில் வாழ்பவர்கள் ராம்ஸ் சகோதரர்கள். ஆடு வளர்ப்பு அவர்களின் பரம்பரைத் தொழில். இதற்கான விருதுகளை மாறி மாறி வாங்குகிறார்கள். இது தொடர்பாக அவர்களுக்குள் போட்டியும் பகையும் கசப்பும் உண்டு. அண்ணனின் ஆடு ஒன்று இறந்து கிடப்பதைக் காணும் இளையவருக்கு அது அரியவகை தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்குமோ என்கிற சந்தேகம் வருகிறது. பல வருடங்களுக்கு முன்பு இருந்த அந்த நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாக  அரசு கருதிக் கொண்டிருக்கிறது.

அது உண்மையானால் இழப்பு அவருக்கும்தான். ஏனெனில் அந்த நோய் மேலும் பரவாமல் இருக்க அந்தப் பகுதியில் உள்ள அனைத்து ஆடுகளையும் அரசு அழித்து விடும். இதை அறிந்தும் இளையவர் தொடர்புள்ள துறைக்கு தகவல் தெரிவித்து விடுகிறார். இவர்தான் தகவல் தெரிவித்திருப்பார் என்று யூகிக்கும் மூத்தவர் இவரைக் கொல்ல துப்பாக்கியுடன் வர களேபரமாகிறது. சோதனையின் முடிவில் அந்த நோய் பரவியிருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு சகோதரர்கள் உட்பட அனைத்து ஆடு வளர்ப்பாளர்களும் சோகமாகின்றனர். அனைத்து ஆடுகளும் வலுக்கட்டாயமாக கைப்பற்றப்பட்டு அது  தொடர்பான அனைத்து சாதனங்களும் அழிக்கப்படுகின்றன. பொருளாதார நஷ்டத்தால் இந்த தொழிலையே விட்டு பலர் விலகி விடுகின்றனர்.

ஆனால் இளைய சகோதரர் யாருக்கும் தெரியாமல் தன்னுடைய வீட்டின் அடித்தளத்தில் சில ஆடுகளை ஒளித்து வைத்து ரகசியமாக வளர்க்கிறார். அவற்றை வைத்து  இனப்பெருக்கம் செய்ய திட்டமிடுகிறார். இந்த ரகசியம் ஒரு சமயத்தில் அவரது நிரந்தரப் பகையாளரான அண்ணனுக்கு தெரிய வருகிறது. பிறகு என்ன ஆகிறது என்பதை பதட்டமும் நெகிழ்வுமான காட்சிகளுடன் படம் விவரிக்கிறது. உயிர் போகும் அபாயத்தில் இரண்டு சகோதரர்களும்  பரஸ்பரம் இணைவது  ஒரு கவிதையான காட்சி. மிக  சுவாரசியமான திரைப்படம்.



Embrace of the Serpent  | 2015 | Colombia | Dir: Ciro Guerra



இத்திரைப்படம் ஓர் அற்புதமான அனுபவம். கொலம்பியா நாட்டுத் திரைப்படம். ஆஸ்கர் விருதிற்காக அந்த நாட்டின் சார்பில் அனுப்பப்பட்டு இறுதிச் சுற்றிலும் இடம் பிடித்திருக்கிறது.

சமகாலத்திலிருந்து உங்களை முற்றிலும் துண்டித்து பழகிய அனுபவங்களிலிருந்து விலக்கி முற்றிலும் ஒரு புதிய உலகத்தையும் மனிதர்களையும் காட்சிகளையும் அறிமுகப்படுத்துவரை சிறந்த 'படைப்பாளர்' எனலாம். அந்த வகையில் இத்திரைப்படத்தின் இயக்குநர் Ciro Guerra -வை சிறந்த படைப்பாளி எனலாம். இரண்டு மணி நேரத்தில் அமேசான் காட்டினுள் பழங்குடியுடன் உலவிய நல்ல அனுபவம்.

அமேசான் வனத்தின் பழங்குடிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஜெர்மனிய ஆய்வாளரான தியோடரின் உடல்நிலை குன்றுகிறது. ஓர் இனக்குழுவில் மிஞ்சியிருக்கும் ஒரே நபரான Karamakate வை அணுகுகிறார்கள். அவனுடைய உதவியுடன் yakruna என்கிற அரிய தாவரத்தைக் கண்டுபிடித்தால் ஆய்வாளரைக் குணப்படுத்தி விட முடியும்.

மேற்குறிப்பிட்ட தியோடரின் ஆய்வுகளைப் படித்த அமெரிக்க ஆய்வாளரான ரிச்சாட் இவான்ஸ் ஏறத்தாழ முப்பத்தோரு ஆண்டுகள் கழித்து அந்த தாவரத்தை தேடி வருகிறார். வயதான Karamakate வை அணுகுகிறார். அவர் தேடி வந்தது தாவரத்தைத்தானா?

1909, 1940 என்று இந்த இரண்டுக் காலக்கட்டத்தின் அனுபவங்களும் துண்டு துண்டாக அடுத்தடுத்து சொல்லப்படும் திரைக்கதையின் மூலம் பழங்குடிகளின் துயரம் விரிகிறது. காலனியாதிக்க நாடுகள் இயற்கை வளங்களைச் சுரண்டும் நோக்கில் வனங்களில் புகுந்து பழங்குடிகள் மீது செலுத்தும் வன்முறை, மனிதர்கள் புக சிரமமான இடங்களில் கூட கிறிஸ்துவ மிஷினரிகள் செய்யும் மத ஆதிக்கம், வணிகம், சிறுவர்களின்உழைப்புச் சுரண்டல், நாகரிக உலகின் ஆதிக்கத்தை தார்மீக கோபத்தோடும் பகடியோடும் அணுகும் Karamakate -ன் சிறப்பான வசனங்கள் என்று இரண்டு காலக் கட்டங்களும் அபாரமான நோக்கில் விரிகின்றன.

ரப்பர் மரம் இயற்கையமைப்பின் மீது செலுத்தப்படும் வன்முறை என்பது பழங்குடிக்கு தெரிகிறது. ஆனால் பணத்தாசை பிடித்த முதலாளித்துவ உலகத்திற்கு அது தெரிவதில்லை. இயற்கையை விட்டு விலகவே விரும்பாத அதன் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் பொருள் பொதிந்த அர்த்தம் உள்ளது என்று மனமார நம்புகிற பழங்குடிகளின் மனநிலை இத்திரைப்படத்தில் சிறப்பாகப் பதிவாகியுள்ளது.

அமேசான் காட்டின் பின்னணி என்பதால் அற்புதமான இயற்கையை வண்ணத்தில் பதிவு செய்யும் அபத்தத்தை படம் செய்வதில்லை. மாறாக காலத்தின் குறியீட்டு அர்த்தமாக கருப்பு -வெள்ளையிலேயே முழுத் திரைப்படமும் பதிவாகியிருக்கிறது. ஆய்வாளர்களின் குறிப்புகளின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.


Heneral Luna  | 2015 | Philippines | Dir: Jerrold Tarog

பிலிப்பைன்ஸ் நாட்டு  தயாரிப்பு. சமகால வரலாற்றால் புரிந்து கொள்ளப்படாத, ஏற்றுக் கொள்ளப்படாத, பாடப்படாத ஒரு நாயகனின் சரிதம்.

ஸ்பெயினிடம் காலனி நாடாக இருக்கும் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவின் வருகையால் கைமாறப்போகும் தருணம். வருடம் 1898. நாட்டின் தலைவரும் அரசியல் பெருச்சாளிகளும் ஊழல் வியாபாரிகளும் தங்களின் சுயநலம் காரணமாக அமெரிக்காவிடம் சரணடைந்து உயிரையும் தொழிலையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று விவாதிக்கும் போது ராணுவ ஜெனரல் லூனா மாத்திரம் 'அடிமையாக இருப்பதை விட போரிட்டு உயிரை விடுவோம்' என்று ஆவேசப்படுகிறார். அவர் நாட்டுக்கு விசுவாசமானவராக இருந்தாலும் முரட்டுத்தனமானவராகவும் பிடிவாதக்காரராகவும் இருப்பதால் ஊழல்வாதிகளால் வெறுக்கப்படுகிறார்.

உயிரைப் பணயம் வைத்து இருக்கும் சொற்ப வீரர்களையும் உற்சாகப்படுத்தி அமெரிக்கப் படைகளிடம் ஆவேசமாகப் போரிடும் லூனாவிற்கு உள்நாட்டு அரசியல் காரணமாகவே தன் சொந்த நாட்டின் மூலமாகவே தடைகளும் எதிர்ப்புகளும் ஏற்படுகின்றன. சில பிரிவினர் அவருடன் ஒத்துழைக்க மறுக்கின்றனர். அவ்வாறானவர்களை தம்முடைய அதிகாரத்தின் மூலம் பணிய வைக்கிறார் லூனா. அமெரிக்கா என்கிற பொது எதிரியை ஒழிக்க இணைந்து பணிபுரிய வேண்டும் என்கிற அவருடைய நேர்மையான ஆவேசம் யாருக்கும் புரிவதில்லை. இறுதியில் தம்முடைய நாட்டு துரோகிகளாலேயே முதுகில் குத்தப்பட்டு இறக்கிறாார் லூனா. (இந்தக் காட்சி அபாரமாக பதிவாகியுள்ளது).

Antonio Luna என்கிற பிலிப்பைன்ஸின் புரட்சிப்படை தளபதியின் சுயசரிதத்தை ஒட்டியும் உண்மையான வரலாற்றுத் தகவல்களின் மீதும் இதன் திரைக்கதை (சற்று கற்பனை கலந்து) அமைக்கப்பட்டுள்ளது. லூனாவாக John Arcilla அபாரமாக நடித்துள்ளார். ஆவேசமும் பிடிவாதமும் கடினமான தருணங்களில் நகைச்சுவையுமாக அமைந்த இவரின் நடிப்பு அற்புதம். மேக்கிங் சற்று சுமார்தான் என்றாலும் பிலிப்பைன்ஸ் திரைவரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் உருவான படம் என்கிறார்கள். அதற்கேற்ப வசூலையும் பெற்றுள்ளது.




Enclave   | 2015 | Germany -Serbia | Dir: Goran Radovanović


செர்பியன் திரைப்படம். Enclave. போர் மற்றும் மதப்பகை காரணமாக பெரும்பான்மையினரின் இடையே வாழநேரும் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்வின் சிக்கல்கள் ஒரு குடும்பத்தின் மூலமாக குறிப்பாக சிறுவர்களின் மூலமாக சொல்லப்படுகிறது. அந்தப் பகை இளநெஞ்சங்களிடமும் எப்படியொரு வன்மமாக பரவி பிறகு எப்படி தெளிகிறது என்பதை நெகிழ வைக்கும் காட்சிகளால் சொல்லியிருக்கிறார்கள்.

போருக்குப் பிறகான செர்பியாவின்  ஒரு சர்சைக்குள்ள பகுதிப் பிரதேசம். அல்பேனியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வசிக்கும் ஓரிரு செர்பியக் குடும்பங்கள். சிறுவன் Nenad மூடப்பட்ட பீரங்கியின் உள்ளே அமர்ந்துதான் பள்ளிக்கு செல்ல வேண்டியிருக்கிறது.அல்பேனிய சிறுவர்கள் பீரங்கியின் மீது கல்லெறிவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தாயை  இழந்த Nenad கண்டிப்பான தந்தையிடம் வளர்கிறான். நோய்வாய்ப்பட்டிருக்கும் தாத்தாதான் அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

அங்குள்ள சில அலபேனிய சிறுவர்கள் இவனிடம் பழகத் துவங்குகிறார்கள். அவர்களில் ஒருவனுக்கு  Nenad-ன் மீது உள்ளுக்குள் பகைமையும் கசப்பும் ஊறிக்  கிடக்கிறது. அவனுடைய தந்தையின் சாவிற்கு Nenad-ன் தந்தைதான் காரணம் என நம்புகிறான். இவர்கள் விளையாடும் போது ஒரு சமயத்தில் Nenad தன்னிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்துகிறான். Nenad அதற்கு மறுத்து விட ஒரு பிரம்மாண்டமான தேவாலய மணியின் உள்ளே Nenad சிக்கிக் கொள்வதை யாருக்கும் சொல்லாமல் மறைத்து விடுகிறான். Nenad-ன் தாத்தா இறந்து விட இவனைத் தேடும் அவனது தந்தை  இவனைக் காணாமல் அங்குள்ள பகைமையை சகிக்க முடியாமல் ஊரை விட்டு விலகுகிறார். பிறகு நிகழ்கிற காட்சிகளை பதைபதைப்பும் நெகிழ்வுமாக மீதிப்படம் விவரிக்கிறது.

மதம் சார்ந்தோ இனம் சார்ந்தோ எத்தனை வரலாற்றுப் பகை இருந்தாலும் சக மனிதனின் மீதான அன்பை அதுவெல்ல முடியாது என்பதை சிறுவர்களின் பார்வையில் அற்புதமான பதிவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
 
 


Death of the Fish  | 2015 |  Iran| Dir: Rouhollah Hejazi
 
ஒரு குடும்பத்தின் தாயார் இறந்து போகிறார். அவருடன் பணிப்பெண் மாத்திரம் இருந்திருக்கிறார்.

'நான் இறந்து போனால் என்னுடைய சடலத்தை மூன்று நாட்கள் வீட்டில் வைத்திருந்து பிறகுதான் புதைக்க வேண்டும். அதுவரை உறவினர்களுக்கும் சொல்லக்கூடாது. என்பது இறந்தவரின் கடைசி விருப்பம். பணிப்பெண் சொல்லித்தான் குடும்ப உறுப்பினர்களுக்கு இது தெரிகிறது. மரபிற்கு எதிரான இந்த விருப்பம் அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சர்ச்சையும் விவாதமும் வெடிக்கின்றன. பணிப்பெண் மீது ஐயப்படுகிறார்கள்.

ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதமான பிரச்சினைகளிலும் உறவுச் சிக்கல்களிலும் இருப்பது மெல்ல மெல்ல புலனாகிறது. வீட்டின் தரைத்தளத்தில் சடலத்தை வைக்கிறார்கள். இதற்கிடையில் ஊருக்குச் செல்லும் பணிப்பெண் திரும்ப வருவதில்லை. இறந்து போனவர் பாதி சொத்தை பணிப்பெண்ணின் பெயரில் எழுதி வைத்திருக்கிறார். மீண்டும் குழப்பம், சர்ச்சை. விவாதம்.

தாய் இறக்கும் போது இத்தனை அழுது துயரப்படும் அவர்கள் உயிருடன் இருந்த போதுஅவரை மிக அரிதாகத்தான் வந்து பார்த்திருக்கிறார்கள் என்பதும் பணிப்பெண்தான் இறந்தவரின் உறுதுணையாக இருந்திருக்கிறார் என்பதும் மெல்ல புலனாகிறது.

கடைசி மூன்று நாட்களாகாவது குடும்ப உறுப்பினர்கள் தாயின் நினைவிலும் அவரின் அருகாமையிலும் இருக்க வேண்டுமென்பதற்காகத்தான் இறந்தவர் அப்படியொரு கடைசி விருப்பத்தை தெரிவித்திருக்கலாம் என யூகிக்க முடிகிறது.படம் சாவகாசமாக நகர்ந்தாலும் இறுதி வரைக்கும் பார்க்க வைக்கும் சிறிய கொக்கியை இயக்குநர் நுட்பமாக செருகி வைத்திருந்தார்.

பொதுவாக இரானிய திரைப்படங்கள் குடும்ப உறவுச்சிக்கல்களை, குடும்ப வன்முறைகளை மிக நுட்பமாகவும் நிதானமான அழகியலுடனும் காட்சிப்படுத்துகின்றன. இத்திரைப்படமும் அதிலொன்று.



***

இங்கு அறிமுகப்படுத்திருக்கும் திரைப்படங்கள் இந்த விழாவின் ஒரு துளி அறிமுகமே. இதைத் தவிரவும் பல உன்னதமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. பல்வேறு தேசங்களின் கலாச்சாரத்தையும் அவற்றின் சமீபத்திய சிறந்த திரைப்படங்களின் உள்ளடக்கத்தையும் உருவாக்கத்தையும் அறிந்து கொள்ள இந்த திரைவிழா பெரிதும் உதவியது. நம்முடைய கலை சார்ந்த ரசனையையும் கலாசார மேம்பாட்டையும் உயர்த்திக் கொள்ள இது போன்ற திரைப்படங்கள் உதவுகின்றன. கடுமையான தணிக்கையும் அடக்குமுறையும் கொண்ட ஈரான் போன்ற தேசங்களில் இருந்து கூட எளிமையான ஆனால் அழுத்தமான அரசியல் விமர்சன திரைப்படங்கள் வெளியாகும் துணிவு பிரமிக்க வைக்கிறது.

இங்குள்ள திரையுலக சூழலோடு  ஒப்பிடும் போது நாம் கடக்க வேண்டிய தூரம் பிரம்மாண்டமாக இருக்கிறது என்பதையே இந்தப் படைப்புகள் உணர்த்துகின்றன.
 
அம்ருதா - பிப்ரவரி 2016-ல் வெளியான கட்டுரை (நன்றி: அம்ருதா)


suresh kannan


Friday, December 13, 2013

11வது சென்னை சர்வதேச திரைவிழா - இரண்டாம் நாள்



அடித்துப்பிடித்து இன்றைய நாளின் கடைசி படத்திற்குத்தான் செல்ல முடிந்தது. உண்மையில் முதலில் நான் செல்லத் திட்டமிட்டிருந்தது அபிராமி திரையரங்கில்  Jeune & Jolie (2013)  என்கிற திரைப்படத்திற்குதான்.  மேட்டருக்கு மேட்டரும் ஆச்சு. நல்லபடம் என்று வேறு நண்பர்கள் சொல்லியிருந்தார்கள் ஆனால் விதி வலியது. சரியாக திட்டமிடாததாலும் அனுமதிச் சீட்டை அதுவரை வாங்காததாலும் அது என்னை வுட்லண்ட்ஸ் தியேட்டரின் முன் நிறுத்தியது. அவசரமாக ரிஜிஸ்டிரேஷனை முடித்து நேரமில்லாததால் அங்கேயே படம் பார்க்கத் தீர்மானித்தேன். நண்பர் சந்திரமோகனிடம் எந்தத் திரைப்படம் போகலாம் என்றதற்கு 'நீங்களே முடிவு செய்யுங்கள்' என்றார். 

இங்கி பிங்கி பாங்கி போட்டு வுட்லண்ட்ஸில் பார்க்கத் தீர்மானித்தோம். மிக மொக்கையான ஸ்கீரினும் இருக்கைகளும் இருக்கும் வுட்லண்ட்ஸ் சிம்பொனியை விட வுட்லண்ட்ஸ் சற்று தேவலையாக இருக்கும் எனவே இந்த முடிவு. வாழ்வோ சாவோ என்று தீர்மானித்ததில் வந்தது 'சால்வோ'



தன் முதலாளியைக் கொல்ல வரும் நபர்களை தாக்கும் பாடிகார்ட் ஒருவன், அதில் தப்பியோடும் ஒருவனை துரத்திச் சென்று 'இதற்கு யார் ஏற்பாடு செய்தது?' எனக்கேட்கிறான். யார் அது எனத் தெரிந்தவுடன் அவன் வீட்டிற்குள் நுழைந்து அவனைக் கொன்று விட்டு அவனுடைய, குறைந்த பார்வையையுடைய தங்கையை தூக்கி வந்து பாழடைந்த தொழிற்சாலை ஒன்றில் தன் பாதுகாப்பில் வைத்துக் கொள்கிறான். எதற்காக எனத் தெரியாது.

முதலில் அவனிடம் முரண்டு பிடிக்கும் அவள், மகா சோம்பேறித்தனமாக நிகழும் பல காட்சிகளுக்குப் பிறகு ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் காரணமாகவோ என்னவோ அவனுடன் பிரியம் கொள்கிறாள். நிமிர வைக்கும் ஸ்டண்ட் காட்சியுடன் சுவாரசியமாகத் துவங்கும் இத்திரைப்படம், premature ejaculation போல விரைவில் தலைசாய்ந்து பிறகு வரும் பல காட்சிகள் மிக மிக நிதானமாக நகர்வதாலேயே அசுவாரசியத்தன்மையைக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒளிப்பதிவும் காட்சிகளின் கோண்ங்களும் இருளும் வெளிச்சங்களுமான கலவையும் ஒலிப்பதிவும் கூட அபாரமாய் இருக்கின்றன.

'தி இந்துவில்' இதற்கான முன்னோட்டக் குறிப்புகளை எழுதினவர் ஒன்று குறும்புக்காரராய் இருந்திருக்க வேண்டும். அல்லது 'தாளி சாவுங்கடா' என்கிற பழிவாங்கும் தன்மையைக் கொண்டவராக இருந்திருக்க வேண்டும். இல்லையெனில்... "விறுவிறுப்பாக நகரும் இத்தாலிய மொழிப் படம்." என்று எழுதியிருக்க முடியாது.

பசியுடன் வீட்டிற்குத் திரும்பி மனைவி தந்த சரியாக வேகாத அரிசி உப்புமாவை 'விதியே' என்று தின்று கொண்டிருக்கும் போதா, அந்தக் கேள்வி விழ வேண்டும்? "இன்னிக்கு பார்த்த படம் எப்படி இருந்துச்சு?"... வாயில் சனி பகவான் சம்மணமிட்டு அமர்ந்திருந்ததால் அதன் எதிர்வினை இல்லாமலா இருக்கும்..? 'இதோ இந்த அரிசி உப்புமா மாதிரியே மொக்கையா இருந்துச்சு." என்றேன்..

'அப்படியா சேதி' என்று உக்கிரமாக பார்த்தவளைத் தணிக்கவும்... நாளைய உப்புமாவின் முன்னேற்பாட்டிற்காகவும் "ஆக்சுவலி... அந்தப் படம் நெறைய அவார்டு வாங்கியிருக்கு"

suresh kannan

Saturday, December 24, 2011

சென்னை - சர்வதேச திரைவிழா - 21 டிசம்பர்


இன்று இரண்டு அழகான திரைப்படங்களைக் காண முடிந்தது. 

முதலில் LAS ACACIAS என்கிற அர்ஜென்டினா திரைப்படம். 85 நிமிடங்கள் ஓடினாலும் இதை குறும்படம் என்றுதான் சொல்ல வேண்டும். மூன்றே மூன்று கதாபாத்திரங்கள். அதில் ஒன்று கைக்குழந்தை வேறு. படம் முழுக்க சலிப்பான வாகனப்பயணம். A Road Movie.

இருபது வருடங்களுக்கும் மேலாக டிரக் டிரைவராக இருக்கும் ரூபன் அதிகம் பேசாத ஒரு தனிமைவாதி. பராகுவேயிலி்ருந்து Buenos Aires-க்கு சரக்கு ஏற்றிச் செல்லும் போது ஒரு பெண்ணையும் அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவனுடைய முதலாளியால் பணிக்கப்படுகிறான். அவள் ஒரு கைக்குழந்தையுடன் வருகிறாள். இந்தப் பயணக் காட்சிகளால் முழுத்திரைப்படமு்ம இயங்குகிறது.

படத்தின் நீளம் இன்னும் சற்று எடிட் செய்யப்பட்டிருக்கலாமோ என்று நினைக்கும் படி வாகனத்தில் பயணிக்கும் காட்சிகள் நீண்டிருந்தாலும் பார்வையாளனும் அந்த பயணச் சலிப்பை அடைய வேண்டும் என்று இயக்குநர் செயல்பட்டிருக்கலாம் என்று யூகிக்கிறேன். முசுடான டிரைவருக்கும் அந்தப் பெண் மற்றும் குழந்தைக்கும் சிறிது சிறிதாக வளரும் நேசமும் அன்பும் மிக நுட்பமாகவும் அமைதியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. டிரைவர் கொட்டாவி விடுவதைப் பார்த்து அந்த அழகான குழந்தையும் கொட்டாவி விடும் போன்றதான காட்சிகள் அற்புதமானவை. இருவரும் ஒருவரையொருவரைப் பற்றி மெலிதாக விசாரித்துக் கொண்டாலும் அவர்களுடைய இருவரின் பின்னணியும் மிகப் பூடகமாகவே பார்வையாளர்களுக்குச் சொல்லப்படுகிறது.

சற்று நிதானமாக நகர்ந்தாலும் மிக அழகானதொரு முடிவை நோக்கி நிறைந்திருக்கிறது இத்திரைப்படம். 




அடுத்தது HASTA LA VISTA என்கிற பெல்ஜியம் திரைப்படம். இப்படியொரு ஸ்கிரிப்ட்டை யோசித்தற்காகவே இயக்குநரின் கையில் முத்தமிட விரும்புகிறேன்.

மூன்று மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தாங்கள் இதுவரை அனுபவித்தறியாத பாலியல் இன்பத்தை துய்ப்பதற்காக அவர்களைப் போன்றவர்களுக்கென்று பிரத்யேகமாகவுள்ள 'பாலியல் விடுதி்க்கு'  பெற்றோர் அறியாமல் பயணம் மேற்கொள்ள நினைக்கிறார்கள். எதிர்பாராத விதமாக இவர்களுடன் ஒரு குண்டுப் பெண்ணும் டிரைவராக இணைகிறாள். மிக ஜாலியான பயணம்.

மாற்றுத்திறனாளிகளின் பிடிவாதமும் நிராசையும் இயலாமையும் நகைச்சுவையுடன் திறமையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. நிமிடத்திற்கொரு முறை சிரிக்க வைக்கும் தரமான நகைச்சுவையும் காட்சியும். சமயங்களில் சினிக்கலாகவும். மூவரின் பாத்திரமு்ம் பிரத்யேக தனித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

மெல்லிய நகைச்சுவைத் திரைப்படங்களை ரசிப்பவர்கள் தவறவிடக்கூடாத படைப்பு. 

தமிழ் பேப்பரில் பிரசுரமானது. 


suresh kannan

Thursday, December 22, 2011

சென்னை - சர்வதேச திரைவிழா - 20 டிசம்பர்

இன்று எல்லாமே தூக்க தினமாகிப் போனதால் துக்க தினமாகவும் போனது. 



முதலில் பார்க்க கறாராக திட்டமிட்டது, Confessions என்கிற ஜப்பானிய திரைப்படத்திற்கு. தன் மகளைக் கொன்ற சிறுவர்களை பழிவாங்கும் ஒரு டீச்சரைப் பற்றியது. மூளையை உரசிப் பார்க்கும் சற்று சிக்கலான திரைக்கதை. வெவ்வேறு பிரேம்களில் சட்சட்டென்று மாறி சில பல வாக்குமூலங்களின் மூலம் நகர்கிறது. ஆனால் அதற்கேற்ற மனநிலை இல்லாததால் கனவிலேயே பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் இயலாமல் வெளியேறி விட்டேன். 'பிட் படத்திற்கு ஆவலுடன் சென்ற பதின்ம சிறுவர்கள் அது கிடைக்காத ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு ' 'வக்காலி, காட்டுக்குள்ள என்னமா சூப்பரா படமெடுத்திருக்கான்' என்று இரா.முருகனின் ஒரு சிறுகதையில் வருபவன் தன்னை மறைத்துக் கொள்ள முயல்வது போல 'ஒளிப்பதிவு மிக அற்புதமாக இருந்தது' என்று வேண்டுமானாலும் இந்த ஏமாற்றத்தை மறைத்துக் கொள்ளலாம். மற்றபடி நிதானமானதெர்ரு மனநிலையில் இதைப் பார்த்திரு்நதால் சுவாரசியமாகத்தான் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.


அங்கிருந்து விறுவிறுவென்று சத்யம் (Studio 5) தியேட்டருக்கு சென்றது, Nothing's All Bad என்கிற டென்மார்க் திரைப்படத்திற்காக. ஆனால் குறைந்த எண்ணிக்கையிலேயே இருக்கைகள் உள்ளன என்கிற காரணத்திற்காக கால்மணி நேரம் வரிசையில் நின்றும் அனுமதி மறுத்து விட்டார்கள். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. 


ஏமாற்றத்தை விழுங்கிக் கொண்டு அங்கிருந்து பிலிம்சேம்பருக்கு ஓடியது 'The Prize' என்னும் பிரெஞ்சு திரைப்படத்திற்காக. ஆனால் அரங்கில் நுழைந்த போது தமிழ் வசனம் கேட்டுக் கொண்டிருந்தது. அடடா! பிரெஞ்சு திரைப்படத்தில் தமிழ் கதாபாத்திரங்களா? என்று ஆனந்த அதிர்ச்சி அடைந்த போதுதான் தெரிந்தது, அது ஜெயபாரதியின் 'புத்ரன்' என்கிற திரைப்படம். ஏதோ டெலிவிஷன் சீரியல் போன்றே இருந்தது. கடந்த சில நாட்களாக நல்ல உருவாக்கங்களைப் பார்த்து விட்டு இப்படி பார்க்கும் போது படு ஏமாற்றமாக இருக்கிறது. எரிச்சலுடன் வெளியே வந்த போது உள்ளே திரையில் அழுது வடிந்து கொண்டிருந்த ஒய்.ஜி. மகேந்திரன் மலர்ச்சியாக நின்று கொண்டிருந்தார். பல ரிடையர்டு நடிகைகளையும் படம் முடிந்து வந்த கூட்டத்தில் பார்க்க முடிந்தது.

ஒருவழியாக அரைமணி நேர தாமதத்தி்ல் துவங்கியது பிரெஞ்சு.

கடற்கரைக்கு மிக அருகிலிருக்கும் வீட்டில் தனிமையில் வாழ்கிறார்கள் ஒரு தாயும் மகளும். தந்தை எங்கோ மறைந்து வாழ்கிறார். இருவரும் உயிருக்கு தப்பி இங்கு வந்திருக்கிறார்கள் என்பது மாத்திரம் புரிகிறது. மற்றபடி படு நிதானமான எரிச்சலடைய வைக்கும் திரைக்கதை. இரண்டு சிறுமிகளின் விளையாட்டு உலகம் மிகத் திறமையாக வெளிக் கொண்ரப்பட்டிருக்கிறது. ரொம்பவும் போரடித்ததால் வெளியே வந்து விட்டேன்.

நாளையாவது சிறப்பான நாளாக அமைய வேண்டும். வெறும் புகைப்படங்களை வைத்துக் கொண்டு சினிமா பதிவு எழுதுவது எப்படி என்று இதைப் பார்த்தாவது யாராவது கற்றுக் கொள்ளுங்கள். 

தமிழ் பேப்பரில் பிரசுரமானது.

suresh kannan

Wednesday, December 21, 2011

சென்னை - சர்வதேச திரைவிழா - 18 டிசம்பர்



முன்தினம் தவற விட்ட இரானிய திரைப்படத்தை இன்று பிடித்து விட்டதில் ரொம்பவும்  திருப்தி. A Seperation. ஒரு ஹைவோல்டேஜ் குடும்ப டிராமா.

உலகத் திரைப்படங்களில் இரானியத் திரைப்படங்களுக்கென்று ஒரு தனி மரியாதையும் தகுதியும் உண்டு. 'உணர்வு வெளிப்படுத்தும் சுதந்திரம்' பெரிதுமுள்ள மேற்கத்திய நாடுகளில் அதிகார, மத நிறுவனங்களை விமர்சிக்கும் கிண்டலடிக்கும் படைப்புகளை உருவாக்குதில் கூட பெரிய ஆச்சரியமொன்றுமில்லை.  ஆனால் கடுமையான அடக்குமுறை, தண்டனைகள் கொண்ட இரான் போன்ற நாடுகளின் அடிப்படைவாத சூழலின் உள்ளே இருந்து கொண்டே சர்ச்சைக்குரிய படைப்புகளை உருவாக்குவதில் உள்ள அபாயமும் பிடிவாதமும் பிரத்யேகமானவை. 

சமகால இரானிய சினிமாவான இந்தத் திரைப்படத்திலிருந்தே ஓர் உதாரணம் கூறுகிறேன். தான் பணிபுரியும் வீட்டின் கிழவர் (அல்ஜைமர் வியாதியுள்ளவர்) உடையிலேயே சிறுநீர் கழித்து விடுவதைக் காணும் அந்த நடுத்தர வயது பணிப்பெண்ணுக்கு கிழவருக்கு உதவ உள்ளூர விருப்பமும் கருணையும் இருந்தாலும் அவளுக்கு புகட்டப்பட்ட மதநெறிமுறைகள் காரணமாக தயங்குகிறாள். பிறகு தாங்க முடியாமல் தொலைபேசியில் யாரிடமோ "கிழவருக்கு உதவுவதன் மூலம் நான் ஏதும் பாவம் செய்துவிடவில்லையே?" என்று விசாரிக்கிறாள்.  கணவனுக்கு இது தெரியக்கூடாதே என்பதும் அவளுடைய கவலைகளுள் ஒன்றாக இருக்கிறது. 'கவலைப்படாதே, அப்பாவிடம் சொல்ல மாட்டேன்" என்கிறாள் அவளுடைய சிறுவயது மகள்.

ஒரு வயதான நபருக்கு அடிப்படை மனித நேயத்துடன் உதவுவதில் கூட அவர் ஆண் என்பதால் இத்தனை தயக்கங்களையும் சந்தேகங்களையும் புகட்டி வைத்திருக்கின்றன மத நிறுவனங்கள். நாகரிகத்தின் உச்சியில் இருப்பதாக கருதப்படும் இந்தச் சமகாலத்திலும் இப்படியாகவும் சில இனக்குழுக்கள் இயங்குவது துரதிர்ஷ்டவசமானது.  

ஒரு நடுத்தர வயது தம்பதியினர் நீதியமைப்பிடம் விவாகரத்து கோருவதில் துவங்குகிறது திரைப்படம். மனைவிக்கு வெளிநாட்டில் சென்று வாழ விருப்பம். அல்ஜைமர் நோய் கொண்ட தந்தையை விட்டு வர விருப்பமில்லை கணவனுக்கு. "நீங்கள் அவருடைய மகன் என்று உணரக்கூடிய நிலையில் கூட அவர் இல்லை" என்கிறாள் மனைவி. "அவர் என் தந்தை என்று உணரக்கூடிய நிலையில் நான் இருக்கிறேன் அல்லவா? அது போதும்" என்கிறான் கணவன். 


தீபாவளி சரவெடி போன்று இம்மாதிரியான கூர்மையான வசனங்களாலும் உணர்ச்சிகரமான விவாதங்களினாலும் வன்மங்களாலும் கருணைகளாலும் இத்திரைப்படம் நிரம்பி வழிகிறது. இதன் அபாரமான திரைக்கதை பார்வையாளனை இறுதி வரை ஒரு பதட்டத்திலேயே அமர வைக்கிறது.  ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வேயே ஏற்படுத்தாமல் அச்சு அசலாக சிலர் வாழ்க்கைப் பகுதியின் துண்டுகளை கண்டு கொண்டிருக்கிறோம் என்கிற candid camera நம்பகத்தன்மையை ஏற்படுத்தி படைப்பை யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக கொண்டு செல்வதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர். 

குழந்தைகள் முதற்கொண்டு ஒவ்வொருவரின் நடிப்பும் அத்தனை அற்புதமாக இருக்கிறது. பணிப்பெண்ணாக நடித்திருக்கும் Sareh Bayat, மகேந்திரன் திரைப்படங்களில் வரும் அஸ்வினியை நினைவுப்படுத்தும் சோகச் சித்திரமாக இருக்கிறார். பிரதான பாத்திரங்களில் ஒன்றை ஏற்றிருக்கும் peyman moaadi-ன் பங்களிப்பும் அபாரமானது. அல்ஜைமர் கிழவராக வருபவரின் பங்களிப்பு அத்தனை அபாரமானதாக இருக்கிறது.

இந்தத் திரைவிழாவின் முக்கியமான திரைப்படங்களுள் இது ஒன்று என்பதில் எந்த ஐயமுமில்லை. பெர்லின் திரைவிழாவில் 'தங்க கரடி'விருது முதற்கொண்டு பல விருதுகளைப் பெற்றிருக்கிறது. 


உட்லண்ட்ஸிலிருந்து பரபரவென்று பிலிம் சேம்பருக்கு நடந்து சென்றது - இன்னொரு இரானிய திரைப்படமான Ashk-E Sarma -க்காக. ஆனால் விதி தேய்ந்து போன டிவிடி வடிவத்தில் காத்திருக்கும் என்பதை யூகிக்க முடியாமலே போனது. படத்தை அறிமுகப்படுத்தியவர் முன்பே இது குறித்த எச்சரிக்கையை வழங்கினாலும் திரைப்படம் அவ்வப்போது நின்று நின்று எரி்ச்சலை ஏற்படுத்தியது. "போய்த் தொலைங்கடா" என்று ஒரு கட்டத்தில் நின்றே போனது. அதன் பேச்சை மறுக்க முடியாமல் கிளம்பி விட்டேன். சர்வதேச திரைவிழா என்கிற அலட்டலான பிராண்டின் கீழ் இம்மாதிரியான அலட்சியங்கள் நிகழ்வது மிக துரதிர்ஷ்டவசமானது.

மோசமான பிரிண்ட் என்றாலும் கூட சுவாரசியமான உருவாக்கத்தின் காரணமாக அதுவொரு குறையாகத் தோன்றவில்லை. கண்ணி வெடியை கண்டுபிடிக்கும் ஒரு ராணுவ வீரருக்கும் அங்கு ஆடு மேய்க்கும், கொரிலாக்களுக்கு உதவும் ஒரு பெண்ணுக்கும் இடையிலுள்ள நேசத்தைப் பற்றி சொல்லிச் சென்ற (முடிவு என்னவென்று அறிய முடியாமற் போன) அற்புதமான திரைப்படம். ஆகவே இதை ஒரு அரைகுறை விமர்சனம் என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

டெஸ்க்டாப் வால்பேப்பரை உடனே மாற்றுமளவிற்கு, ஆடு மேய்க்கும் பெண்ணாக வரும் Golshifteh Farahani-ன் அழகிற்கு உடனே ரசிகனாகி விட்டேன் என்பது இந்தத் திரைப்படத்திற்கு சென்றதில் உள்ள எளிய ஆறுதல்.


suresh kannan

Thursday, December 15, 2011

சென்னை – சர்வதேச திரைவிழா – 14 டிசம்பர் 2011

இந்த துவக்க நாளில் இரண்டு திரைப்படங்களை மாத்திரமே என்னால் காண முடிந்தது. சினிமாவில் மாத்திரம் ஆர்வமுள்ளவர்கள் துவக்க விழா அபத்தங்களை தவிர்த்து விட வேண்டும் என்பதுதான் அன்று எனக்கு கிடைத்த நீதி. அதைப் பற்றி பின்னால்.


பிலிம் சேம்பரில் மழைக்கு ஒதுங்கிய சோகையான கூட்டத்துடன் முதலில் பார்த்தது Varjoja paratiisissa என்கிற 1986 பின்லாந்து திரைப்படம். குப்பை அள்ளும் தொழிலாளியின் அகச்சிக்கலயும் காதலையும் பற்றியது. பின்லாந்தில் மருந்திற்குக் கூட யாரும் சிரிக்க மாட்டார்கள் என்பதை அன்றுதான்  அறிந்து கொண்டேன். 'போய் வருகிறேன்' என்பதைக் கூட 'தொலைஞ்சு போ நாயே' என்கிற தீவிர முக பாவத்துடன் படம் முழுவதும் இறுக்கமாகத்தான் சொல்கிறார்கள். இதை  பிளாக் காமெடி என்று எப்படி வகைப்படுத்துகிறார்கள் என்கிற வழக்கமாக எனக்கு ஏற்படுகிற சந்தேகம் அன்றும் ஏற்பட்டது. 'இந்த ஆபிஸ்ல எத்தனை வருஷமா குப்பை கொட்டறீங்க?' என்று கேட்கப்படக்கூடிய அந்தத் தொழிலாளியின் தனிமையில் வாழ்வில் இனிமையாக குறுக்கிடுகிறாள் சூப்பர் மார்க்கெட் பணிப்பெண் ஒருத்தி. இருவருக்கும் பரஸ்பர ஈர்ப்பு இருந்தாலும் ஈகோவினால் தவிர்த்துக் கொள்ள முனைகிறார்கள். தமிழ்ச்சினிமா போலவே இறுதியில் காதல் வெல்கிறது. போகிறார்கள், வருகிறார்கள், வருகிறார்கள், போகிறார்கள். படம் முழுக்க இதுவே. இயக்குநர் Aki Kaurismäki-ன் வழக்கமான பாணி இது என்கிறார் கூட வந்திருந்த நண்பர் அக்னிபார்வை. படம் குப்பை என்று சொல்ல விடாமல் ஏதோ தடுக்கிறது. மீண்டும் நிதானமாக பார்க்க வேண்டும். 

இரண்டாவது பார்த்த பிரெஞ்சு படம் - The Kid with a Bike  இதற்கு நேர்மாறாக திருப்தியான அனுபவத்தைத் தந்தது. அற்புதமான, நிச்சயம் தவறவிடக்கூடாத படம். அன்பு என்பது சாஸ்வதமானது என்பதை மீண்டும் நிரூபிக்கும் படைப்பு. முட்களினால் உருவான ஒரு பூவைப் போன்ற ஓர் இளம் சிறுவனைச் சுற்றி இயங்குகிறது திரைப்படம். தன்னை நிராகரித்துச் சென்ற தந்தையை அது அறியாமல் தீவிரமாகத் தேடுகிறான் அந்தச் சிறுவன். இந்த முரட்டுத்தனமான தேடலில் தன்னை நேசிக்கும் சிகைத் தொழிலாளி பெண்ணொருத்தியின்  அன்பை அவனால் புரிந்து கொள்ள இயலவில்லை. இறுதியில் சுபம்.  

ஆரம்பித்த கணத்திலேயே கதைக்குள் நுழைந்து விடுகிறது படம். தந்தை ஏன் அந்தச் சிறுவனை நிராகரித்துச் சென்றான்? தாய் என்ன ஆனாள்? சிகைத் தொழிலாளி பெண் ஏன் அந்தச் சிறுவனை அப்படி நேசிக்கிறாள்... என்று அதற்கு முந்தைய தருணங்கள், நினைவோட்டங்கள் என்று எதுவுமே படத்தில் சொல்லப்படவேயில்லை. ஆனால் அழுத்தமான காட்சிகளின் மூலம் எதுவும் சொல்லாமலேயே நமக்கு எல்லாமே புரிகிறது. அபாரமான திரைக்கதை. அந்தச் சிறுவனுக்கு என்னாகுமோ என்று நமக்குள் பதைபதைப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியாமல் செய்வது இயக்குநரின் திறமையைக் காட்டுகிறது. மிக மிக அவசியமான இடங்களில் மாத்திரமே பின்னணி இசை ஒலிக்கிறது. ஒரு சில நிமிடங்களுக்கு முன்பே திரைப்படம் முடிந்திருக்கலாம் என்பது என் அபிப்ராயம்.

ஒரு சிறந்த டிராமா திரைப்படத்தை எப்படி உருவாக்கலாம் என்பதற்கான அடிப்படை பால பாடங்கள் இதிலுள்ளது. இதையும் மீண்டுமொரு முறை நிதானமாக பார்க்க வேண்டும்.

()

இனி துவக்க விழா நிகழ்ச்சிகள் பற்றி..

வந்திருந்த அமைச்சர் முதல் அரங்கத்தின் வாட்ச்மேன் வரை முதலமைச்சர் தந்த 25 லட்சம் ரூக்கு பவ்யமாக நன்றி கூறிக் கொண்டேயிருந்தனர். அது என்னவாகப் போகிறது என்பதைப் பற்றி ஞாபகமாக யாரும் கூறவேயில்லை. லோக்கல் தமிழில் பார்த்திபன் பேசியதுதான் கூட்டத்திற்குப் பிடித்திருந்தது. 80 வருட தமிழ் சினி்மாவைப் பற்றி ஏதோ சொல்லப் போகிறோம் என்று பிலிம் காட்டி விட்டு... பெரும்பாலான கு்த்துப் பாடல்களின் பின்னணியில் ரெக்கார்டு டான்ஸ் போட்டதெலெலாம் ஓவர். (நான் பால்கனியில் அமர்ந்திருந்ததால் 'உன்னிப்பாக' ரசிக்க முடியாமற் போனது வேறு விஷயம்). தமிழ் சினிமாவில் மிருதுவான இசை வாத்தியங்களையே உபயோகிக்க மாட்டார்கள் என்பதுதான் அதன் வெளிப்பட்ட நீதி என்று வெளிநாட்டு பார்வையாளர்கள் ஒருவேளை நினைத்திருக்கக்கூடும்.

"ஊடகச்சுதந்திரத்தின் கழுத்தை அதிகார அமைப்பு நெறிக்கக்கூடாது' என்று இந்து ராம் பேசியமர்ந்த கணமே அதற்கு பொருத்தமாக 'செங்கடல்' திரைப்படம் இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்படாததை எதிர்த்து லீனா மணிமேகலை குழுவினர் எழுந்து நின்று ஆர்ப்பாட்டம் செய்ய அரங்கத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. நாட்டாமை சரத்குமார் மிகத் திறமையாக இங்கும் "பசுபதி எட்றா வண்டியை" ரேஞ்சிற்கு சமாதானப்படுத்தினார். மேடையில் அமர்ந்திருந்த விஐபி பிரகஸ்பதிகள் ஒவ்வொருவராக பேசிக் கொண்டே போக நேரம் ஆகிக் கொண்டிருந்த டென்ஷன் எகிறியது. கலையாளுமை பவர் ஸ்டார் சீனிவாசன்தரிசனம் தந்ததுதான் இடையில் ஆறுதலளித்த ஒரே காமெடி.

தமிழ்த்திரைப்படங்கள் வரிசையில் "ஆரண்ய காண்டம்' போன்ற சிறந்த திரைப்படங்கள் இல்லாமல் 'கோ' "தூங்காநகரம்" போன்ற குப்பைகள் இடம் பெற்றிருந்தனின் மர்மம் என்னவென்று தெரியவில்லை. வீட்டுத்தனிமையில் திரைப்படம் பார்ப்பது ஒரு ருசி என்றால், இப்படியாக அபத்தங்களுக்கிடையில் திரைப்படம் பார்ப்பது இன்னொரு வகையான ருசியாகத்தான் இருக்கிறது.




suresh kannan