Monday, September 25, 2006

சில முக்கிய(மற்ற) குறிப்புகள் - பகுதி 2

எம்.ஜி.சுரேஷ் எழுதிய நூலுக்கு "ஏலாதி" விருது

Post-modernism, Magical Realism, Cubism என்று மேற்கிலிருந்து இறக்குமதியான பல இலக்கிய வடிவங்களில் மாதிரிக்கு ஒன்றாக வைத்து புனைவுகள் எழுதியிருப்பவர் எம்.ஜி.சுரேஷ். இவை பரிசோதனை முயற்சிகள் என்ற அளவிலே ஏற்றுக் கொள்ளலாமே ஒழிய இவற்றிற்கான இலக்கிய தகுதிகள் எதுவுமில்லை என்பதுதான் என் அபிப்ராயம். ஆனால் மேற்குறிப்பிட்ட குழப்பமான இலக்கிய வடிவங்களை தமிழ் வாசகர்களுக்கு எளிமையான முறையில் விளக்கி கட்டுரைகள் எழுதியவர். அவர் எழுதிய நூலான "பின்நவீனத்துவம் என்றால் என்ன?" என்கிற முயற்சி எளிமையாகவும் சிறப்பாகவும் அமைந்திருப்பதாக இலக்கிய வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. "பன்முகம்" என்கிற சிற்றிதழையும் இவர் நடத்தி வருகிறார்.

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தால், மேற்குறிப்பிட்ட நூலுக்கு "ஏலாதி" விருது கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் நடந்த விழாவொன்றில் வழங்கப்பட்டது. இந்நூலைப் பற்றி சுந்தர ராமாமி சொன்னது. "இந்த நூல் பத்து வருடங்களுக்கு முன்பு வந்திருக்குமேயானால் தமிழ்ச் சிந்தனைச் சூழலே மாறியிருக்கும்." (நன்றி. இனிய உதயம்: செப்06)

இவர் எழுதிய இன்னொரு நூல் "இஸங்கள் ஆயிரம்". (மருதா பதிப்பகம், ரூ.120/-) "இஸங்களைப் பற்றிய போதிய புரிதல் தமிழ்நாட்டில் இல்லை என்பது வருந்தத்தக்கது. அதற்கான போதிய நூல்கள் தமிழில் வெளிவராததும் ஒரு காரணமாக இருக்கலாம். எனவே தமிழ்ச் சூழலில் இஸங்களைப் பற்றிய சரியான புரிதல் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் இந்நூல் அமைக்கப்பட்டுள்ளது." என்கிறது பதிப்பகத்தாரின் குறிப்பு.


உயிர்மையின் தலையங்கள் மற்றும் கட்டுரைகள்

மனுஷ்ய புத்திரனின் உரைநடையை கையாள்கிற விதத்தின் மீது என்க்கிருக்கிற பிரமிப்பை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன். உயிர்மையில் அவர் எழுதும் தலையங்களைப் படிக்கும் பெரும்பான்மையான சமயங்களில் இது நிரூபணமாகியிருக்கிறது. செப்06 இதழில் இலங்கைப் பிரச்சினை குறித்தும் பன்னாட்டு நிறுவனங்களின் சர்ச்சைக்குரிய குளிர்பானங்கள் குறித்தும் அவர் எழுதியுள்ளார்.

.........'ஈழத் தமிழர்களின் துயரம் தொடர்ந்தால் இங்கு காஷ்மீர் போன்ற நிலை உருவாகும்' 'நாங்களும் துப்பாக்கி ஏந்திப் போராடுவோம்' என்பது போன்ற வெற்றுச் சவடால்களாலான 'காமெடி டிராக்குகள்' ஈழத் தமிழர்களுக்கு பாதகமான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன. எந்த அரசியல் உள்ளீடும் அற்ற இந்தச் சவடால்களை மேடைகளில் முழங்குவதும் உடனே இவர்கள் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் செய்து விட்டார்கள், பிரிவினையை தூண்டுகிறார்கள் என்று சொல்லி கைது செய்யப்படுவதும் ஏதோ திருடன் போலீஸ் விளையாட்டைப் போல் மாறிவிட்டது. ......"

.....ஈழத் தமிழர்களை ஆதரிப்பவர்கள் என்றாலே அது புலிகளை ஆதரிப்பவர்கள் என்கிற நிலை உருவாகிவிட்டது. ஈழ மக்களை ஆதரிப்பதும் பிரபாகரனை ஆதரிப்பது இரண்டு வேறுபட்ட பிரச்சினைகள். ஈழத் தமிழர்கள்பால் நம்முன் இருப்பது உணர்வுபூர்வமான கடமைகள், அரசியல் நாடகங்கள் அல்ல. என்று மிக அறிவுப்பூர்வமாக இந்தப் பிரச்சினை குறித்த தனது கருத்துக்களை முன்வைக்கிறார் மனுஷ்ய புத்திரன்.

உண்மையில் இது குறித்த அக்கறை பெரும்பான்மயான அரசியல்வாதிகளுக்கோ, பொது மக்களுக்கோ இருப்பதாகத் தெரியவில்லை. ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு இலங்கைத் தமிழர்களின் மீதான பார்வை தலைகீழாக திரும்பிவிட்டது துரதிர்ஷ்டவசமானது. உயிரை கையில் பிடித்துக் கொண்டு வரும் அம்மக்கள், துப்பாக்கியைப் பிடித்து வருகிற சந்தேக பார்வையுடனேயே பார்க்கப்படுகிறார்கள். இது குறித்து உணர்ச்சி பொங்க எழுதும் மக்களில் எத்தனை பேர் அவர்களின் துயர் நீக்க களத்தில் இறங்கி போராடியிருக்கிறார்கள் என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். அகதி முகாம்களுக்கு எத்தனை பேர் சென்று பார்த்திருப்பார்கள்? அல்லது ரவிகுமார் போல் ஆக்கப்பூர்வமான அறிக்கை ஒன்றை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பார்கள்?

மேலும் இலங்கைத் தமிழர்களின் மீது அனுதாபம் காட்டுபவன்தான் உண்மையான தமிழன் என்று சில பேர்களால் ஒரு பிம்பம் கட்டப்படுகிறது. மனித நேயத்தின் எல்லையை ஏன் இப்படி எல்லைக் கோடுகளை கொண்டு குறுக்கிக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது. உலகம் முழுக்கவே போரினாலும் வன்முறைகளினாலும் பல அப்பாவிகளும், பெண்களும், குழந்தைகளும் சாகடிக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். சமீபத்திய உதாரணம் இஸ்ரேல்.

.... கோக், பெப்ஸி, போன்ற குளிர்பானங்கள் வெறும் குளிர்பானங்கள் மட்டும் அல்ல. அவை ஒரு மனோபாவத்தின் வெளிப்பாடுகள். இந்த பானங்களை அருந்துகிற ஒருவர் நாகரிக வாழ்வின் பிம்பங்களையும் அதனோடு சேர்ந்து அருந்துகிறார். இந்த பிம்பங்கள் ஊடகங்கள் வழியாகத் தொடர்ந்து பெருக்கப்படுகின்றன. .........

தாராளமயமாக்கலின் மோசமான எதிர்வினை உள்ளூர் தயாரிப்புகள் பன்னாட்டு நிறுவனங்களோடு ராட்சதத்தனங்களோடு மோத முடியாமல் முடங்கியதுதான். கிரிக்கெட் ஆட்டக்காரர்கள், நடிகர்களின் மீது மக்களுக்கு இருக்கும் மோகத்தை பயன்படுத்திக் கொண்டு ப.நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விற்கின்றன. இவர்களின் தயாரிப்புகளுக்கு உள்ளூர் வளங்களும் மனிதசக்தியும் சுரண்டப்படுகின்றன. சுற்றுச்சூழலில் மாசு ஏற்படுத்துதல், குடிநீரை சுரண்டுதல், விளம்பரங்கள் மூலம் மக்களை மூளைச் சலவை செய்தல் போன்ற தீவினைகளில் ஈடுபடுகின்றன. மத்திய அரசு இவ்வாறான பன்னாட்டு நிறுவனங்களின் செயல்களை கட்டுப்படுத்துமாறு சட்ட மசோதா கொண்டு வந்தால் நல்லது. ஆனால் எளிய முறையில் விலைபோகும் நம் அரசியல்வாதிகள் அந்த பண முதலைகளின் கையூட்டுதல்களுக்கு மயங்காமல் இவற்றை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண்செயலே.

()

எழுத்தாளர் திலகவதியை சிறப்பாசிரியராகக் கொண்டு "அம்ருதா" என்றொரு இடைநிலை இதழ் தொடங்கப்பட்டிருக்கிறது. திலகவதியின் படைப்புகள் குறித்து எனக்கு சிறப்பான அபிப்ராயம் ஏதுமில்லையென்றாலும், இந்தியாவின் மற்ற மாநில எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்த்து தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்துவதின் மூலம் அவரின் பணி பாராட்டக்கூடியது. இந்த இதழின் செப்06 எனக்கு காணக்கிடைத்தது. பவித்ரா சீனிவாசனின் (இந்தப் பெயரில் வலைப்பதிபவரும் இவரும் ஒன்றுதான் என நம்புகிறேன்) சிறுகதை ஒன்றுடன் தொடங்கும் இவ்விதழில் பல சுவாரசியமான அம்சங்கள் உள்ளன. இன்றைய பெங்களூரை தன்னுடைய பழைய நாட்களோடு ஒப்பிட்டு வாஸந்தி எழுதியிருக்கும் கட்டுரை சுவை. அஸாமிய இலக்கியவாதியான இந்திரா கோஸ்வாமியன் நேர்காணல் சிறப்பாக பதிவாகியிருக்கிறது. மற்றவற்றை இனிமேல்தான் படிக்க வேண்டும்.

தொடர்பிற்கு: 5, ஐந்தாம் தெரு, சோமசுந்தரம் அவென்யூ, போரூர், சென்னை-600 116. போன்: 22522277. மின்னஞ்சல்: amruthamagazine@yahoo.com

Friday, September 15, 2006

சில முக்கிய(மற்ற) குறிப்புகள்

இந்திய திரைப்பட மேதைகளுள் மிக முக்கியமானவர் சத்யஜித்ரே. வசனத்தைக் குறைத்து காட்சிகளால் ஆக்கப்பட வேண்டியது திரைப்பட ஊடகம் என்கிற அடிப்படையை தனது படைப்புகளின் மூலம் தொடர்ந்து உணர்த்திக் கொண்டிருந்தவர் அவர். பதேர் பாஞ்சாலி, சாருலதா, ஜனசத்ரு, அகாந்துக் போன்ற பல சிறப்பான திரைப்படங்களை உருவாக்கியவர். மனிதனின் நுண்ணிய உணர்வுகளையும், சமூகத்தின் மீதுள்ள விமர்சனங்களையும் மென்மையாக ஆனால் அழுத்தமாக பதிவு செய்தவர். வாழ்நாள் சாதனை விருதுக்காக ஆஸ்கர் விருது பெற்ற ஒரே இந்தியர்.

கலைப்படங்கள் என்றாலே மிக மெதுவான திரைக்கதையமைப்புடையது, பெரிதும் சலிப்பூட்டும் காட்சிகளைக் கொண்டது என்கிற பொதுவான, தவறான ஒரு பிம்பம் சராசரி திரைப்பட பார்வையாளர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரேவின் முதல் படமான "பதேர் பாஞ்சாலி"யை ஒருவர் பார்த்தாலே இந்த குமிழ் உடைந்துவிம்.

சத்யஜித்ரேவைப் பற்றின புதிய இணையத்தளம் ஒன்று அண்மையில் உருவாக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கைக் குறிப்புகள், அரிய புகைப்படங்கள், இயக்கிய படங்களின் பட்டியல் என்று ஒரு முழுமையான தளமாக இது உள்ளது. ரே பிரியர்களுக்கு பிரியமான தளமாக இது இருக்கக்கூடும்.

ரேவைப் பற்றின இன்னொரு இணையத்தளம்

பதேர் பாஞ்சாலியைப் பற்றி நான் எழுதிய கட்டுரை

மரத்தடியில் எழுதின இன்னொரு கட்டுரை

()

சில மாதங்களுக்கு குமுதம் "தீராநதியில்" 'வனம்' என்கிற சிற்றிதழைப் (காலாண்டிதழ்) பற்றின அறிமுகத்தைப் பார்த்தேன். அதில் என்னைக் கவர்ந்த அம்சம், "சிறுகதைகளை பிரதானமாக வைத்து எங்கள் இதழின் உள்ளடக்கம் அமையும்" என்கிற மாதிரியான அறிவிப்புதான். இன்னொன்று, அந்த இதழின் ஆசிரியர் பட்டியலில் ஜீ.முருகன் பெயரை கண்டது. நவீன இலக்கிய படைப்பாளிகளில் குறிப்பிடத்தகுந்தவர் இவர். "கருப்பு நாய்க்குட்டி" என்கிற சிறுகதைத் தொகுப்பு வாசிப்பில் தவற விடக்கூடாதது. சந்தா விபரங்களைப் பற்றி விசாரித்து ஒரு அஞ்சலட்டை அனுப்பியதில் இதுவரை வெளிவந்துள்ள மூன்று இதழ்களையுமே அனுப்பி விட்டனர். உடனேயே சந்தாவை அனுப்பிவிட்டேன்.

சமீபத்திய இதழான (எண் 6) மே-ஜூன் 2006 இதழில் வெளியான ஒரு சிறிய கட்டுரை, உங்கள் பார்வைக்கு.

க.நா.சு கல்லறையிலிருந்து கிளம்பும் 'பட்டியல்' பூதங்கள்

க.நா.சு தொடங்கி வைத்த பட்டியல் சமாச்சாரம் இன்றும் தொடர்கிறது. தங்களுடைய இலக்கிய ஆய்வு (?) கட்டுரைகளிலோ, பேட்டிகளிலோ தரவரிசைப் பட்டியலிடுவதை சிலர் ஆர்வத்துடன் செய்து வருகிறார்கள். பெரும்பாலும் இவை ஆதரவாளர்களின் பட்டியலாகவே இருக்கும். தமிழின் தலைசிறந்த நாவலாசிரியர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், கவிஞர்களின் வரிசைகள் இவை. பெண்களுக்கும், தலித்துகளுக்கும் இதில் உப பிரிவுகளும் உண்டு. தினசரியில் வெளியாகியிருக்கும் தேர்வு முடிவில் எண்களைத் தேடுவது போல ஆர்வத்துடன் ஒவ்வொரு படைப்பாளியும் இந்தப் பட்டியிலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்று தேடும் மன நோய்க் கூறு கொண்டவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் ஒவ்வொருவருக்கும் ஆதரவாளர்களும் அதிருப்தியாளர்களும் இன்று பெருகிப் போயுள்ளார்கள். யாருடையப் பட்டியலிலும் இடம் பெறான துரதிர்ஷ்டசாலிகளுக்காக வனம் தன்னுடைய ஆழ்ந்த அனுபாதத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

()

தொடர்புக்கு:
552, பேஸ்-1, சத்துவாச்சேரி, வேலூர்-632 009. செல்: 98420 52294. vanam_net@yahoo.co.in (ஆண்டு சந்தா ரூ.80/-)

()

.......பழனிவேள் ஒரு தேர்ந்த படைப்பாளி, நல்ல விமர்சன நோக்குடையவர் என்பது எனது அபிப்ராயம். அப்படியிருக்க, புதுப்பேட்டை இந்தியக் கருப்பர்களின் திரைப்படம் எனச் சறுக்கியது ஏனோ? மூன்றாந்தரக் குப்பையான புதுப்பேட்டையைப் பழனிவேள் இந்த வகையில் பகுப்பாய்வு செய்வது வாசகர்களின் நல்ல சினிமா ரசனையை மேம்படுத்த உதவுமா? இது போன்ற திரைப்படங்களைப் பற்றி எழுதுவதை விடுத்து ஜானகி விஸ்வநாதன் போன்றோரது வித்தியாசமான சினிமா முயற்சிகள் பற்றி எழுதுவது பயன்தரக்கூடியது.

காலச்சுவடு ஆகஸ்டு 06 இதழில் வெளியான, பழனிவேள் எழுதின புதுப்பேட்டை திரைப்பட விமர்சனத்தையொட்டி செப்06 இதழில் வெளியான வாசகர் (க.அகிலேஸ்வரன், யாழ்ப்பாணம்) கடிதத்தின் ஒரு பகுதி.

()

சமீபத்தில் படித்த நூல்கள்:

தலைமுறைகள் (நீல.பத்மநாபன்)

வட்டாரவழக்கு நாவல்களின் முன்னோடியான படைப்பு இது. மகத்தான பத்து இந்திய நாவல்களில் இது ஒன்று என்று க.நா.சு. ஆங்கிலப் பத்திரிகையில் இந்நூலைப் பற்றி எழுதயிருக்கிறார். ஆய்வுக் கட்டுரைகளிலும், விமர்சனக் கட்டுரைகளிலும் பல முறை இந்த நாவலின் பெயரைக் கண்டதில் இருந்து படிக்க வேண்டிய ஆவல் அதிகமாகி சமீபத்தில்தான் இது சாத்தியமானது. 1967-ல் எழுதி முடிக்கப்பட்ட இந்த நாவல் 1992-ல்தான் முதல் பதிப்பை கண்டிருக்கிறது. (வானதி பதிப்பகம்).

திரவியம் என்கிறவனின் 15 வயது முதல் 25 வயது வரையிலான காலகட்டத்தில் அவனுடைய பார்வையில் விரிகிற, பயணிக்கிற இந்த நாவலில் குமரி மாவட்டத்து செட்டிமார்களின் வட்டார வழக்குகளும், சடங்கு சம்பிரதாயங்களும், வாழ்க்கை முறையுமாக என நிறையச் சங்கதிகள் இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மிகுந்த நிதானமான நடையில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் சில இடங்களில் சலிப்பூட்டி ஒரு நல்ல எடிட்டரின் தேவையை நினைவுப்படுத்துகிறது. வட்டார வழக்குச் சொற்கள் தாராளமாகவே இந்நாவலில் புழங்கினாலும் வாசகனுக்கு அது ஒன்றும் பெரிய தடையாக இல்லை.

"....... குறைந்தது ஆறு அங்குலமாவது கனமுள்ள அந்த ஒற்றைமரக் கதவு கோட்டை வாசலைப் போலப் பலவிதக் கீரீச்சல்களையும் மடமடவென்று வாந்தியெடுத்தவாறு மிகுந்த கஷ்டத்தோடு திறந்து கொண்டது" போன்ற அபூர்வமான வர்ணணைகள் வாசிப்பவனுத்தை சிறிதேனும் சுவாரசியப்படுத்த உதவுகின்றன.

என்றுமுள தமிழும் இன்று உள்ள தமிழும் (இந்திரா பார்த்தசாரதி)

1991 முதல் 92 வரை தினமணியில் "என் பார்வையில்" என்ற தலைப்பில் இ.பா எழுதிய 21 கட்டுரைகளின் தொகுப்பு இது. (தமிழ்ப் புத்தகாலயம்) அரசியல், கலை, இலக்கியம், ஆன்மிகம், மொழி போன்றவைகளைப் பற்றி அந்த காலகட்டத்தைப் பிரதிபலிக்கிற கட்டுரைகள், இன்றைய சூழ்நிலைக்கும் பொருந்தும்படி உள்ளன.

"திராவிட இயக்கங்கள் தங்களது அரசியல் லாபங்களுக்காக கத்தித்தீர்த்த தமிழ் மொழி குறித்த வெற்றுக்கூச்சல்களை (உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு) அவர்களே கைவிட்டு விட்ட நிலையில் சில "அடிப்படைவாதிகள்" இன்றும் கூட விடாதிருப்பதை பார்க்கும் போது "மொழி உணர்வு" என்கிறதை ஆயுதமாக்கி எப்படி ஒரு இனத்தின் மூளையை மழுங்கடிக்க முடியும் என்பதற்கு உதாரணம். மொழியின் வளர்ச்சி குறித்து அறிவுப்பூர்வமாக சிந்திக்க வேண்டுமேயல்லாமல் உணர்ச்சிப்பூர்வமாக அணுகுவது எந்தவித பயனையும் தராது. இந்த மாதிரியான ஆட்டு மந்தைகளை சற்றே அணுகிப் பார்த்தால் தமிழின் அடிப்படை இலக்கணம் கூட தெரியாமல் பிழையுடன் எழுதுவதை, பேசுவதை காணலாம்."

தமிழ் மொழி பற்றி இ.பா. எழுதியுள்ள கட்டுரைகளைப் படித்ததிலிருந்து எனக்கு தோன்றியதுதான் மேலே குறிப்பிட்டிருப்பது.

Friday, September 08, 2006

வேட்டையாடு விளையாடு - என் பார்வை

இணையமே இந்தப்படத்தை "வேட்டையாடி" முடிந்திருந்த தருணத்தில் நானும் கொஞ்சம் "விளையாடிப்" பார்க்கலாமே என்று தோன்றியதில் இந்தப் பதிவு.

உள்ளடக்கத்திலோ, கதை சொல்லும் உத்திகளிலோ, தொழில்நுட்ப சமாச்சாரங்களிலோ பரிசோதனை முயற்சிகள் மேற்கொண்டு தமிழச்சினிமா தேக்கமடையாமல் ஒரு அடியேனும் முன்னேற்றி அழைத்துச் செல்லக்கூடிய சொற்ப படைப்பாளிகளில் கமல்ஹாசன் பிரதானமானவர். பொதுவாக ஆங்கிலப்படங்கள் Action, Drama, Romance, Thriller என்று ஏதாவது ஒன்றில் வகைப்படுத்தக்கூடியதாக அமைந்திருக்கும். இந்த வகைப் படங்களில் திரைக்கதை அதிகம் அலையாமல் நூல்பிடித்தாற் போல் ஒரே கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும். தமிழ்ப்படங்களை இவ்வாறு வகைப்படுத்துதல் பொதுவாக அரிதான விஷயம். சாதம், சாம்பார், குழம்பு, ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், பாயாசம் என்று குழைத்து அடித்தால்தான் நம்மவர்களுக்கு சாப்பிட்ட திருப்தியே இருக்கும். ஒரு சராசரி தமிழ்த் திரைப்பட பார்வையாளனும் இந்த வகையிலேதான் தனக்கு கேளிக்கையாக அமைகிற திரைப்பட ஊடகத்தின் உள்ளடக்கத்தையும் எதிர்பார்க்கிறான். படத்தின் நடுவே சம்பந்தமில்லாமல் வணிக நோக்கத்திற்காக நுழைக்கப்படுகிற 'ஐட்டம்' பாட்டுக்களின் லாஜிக் பற்றியெல்லாம் அவனுக்கு கவலையில்லை. குதித்தாடும் செழிப்பான மார்பகங்கள் தரும் மனக்கிளர்ச்சியே அவனுக்கு போதுமானதாக இருக்கிறது.

மேற்சொன்ன சம்பிரதாயங்களை பெருமளவிற்கு யோக்கியமாக தவிர்க்க முயன்று எடுக்கப்பட்டிருக்கிற படம் வே.வி. அசட்டுத்தனமான நகைச்சுவைகளோ, காதைக் கிழிக்கும் வசனங்களோ, கேமராவை நோக்கி பேசப்படும் "பஞ்ச்" டயலாக்குகளோ, (எனக்கு இதுதான் நகைச்சுவைக் காட்சிகளாக தோன்றுகிறது) நாயகன் அந்தரத்தில் பறக்கும் நகைச்சுவைகளோ இல்லாமல் குற்றங்களின் புலனாய்வு நோக்கில் திசைமாறாமல் செய்யப்பட்டிருக்கும் திரைக்கதை (சிக்கிமுக்கி நெருப்பே போன்ற அபத்தங்களை தவிர்த்து) 'சபாஷ்' சொல்ல வைக்கிறது.

()

சுஜாதா ஒரு கட்டுரையில் ராணுவ வீரர்கள் களத்தில் போரிடுவதின் அடிப்படையைப் பற்றி எழுதியிருந்தார். நாட்டுப்பற்று, தேசியக்கொடி போன்ற மாய்மாலங்கள் ஒரு புறமிருந்தாலும், தன்னுடன் பழகிய தோழன் எதிரணியினரால் சுடப்பட்டு இறந்ததில் ஏற்படும் கோபமும், ஆவேசமும்தான் அவர்களை போரிட வைப்பதின் ஆதாரமான விஷயமாக விளங்குகிறது என்று. இதிலும் அந்த விஷயம் சுட்டிக் காட்டப்படுகிறது. நண்பர் ஆரோக்கியராஜின் மகள் கற்பழித்து கொலை செய்யப்படும் சோகம் ஆறுவதற்குள் நண்பரும் அவர் மனைவியும் கூட கொலை செய்யப்படுவது ராகவனை இந்த வழக்கில் ஒரு காவல்துறையின் அதிகாரியின் வழக்கமான கடமைகளை மீறி ஆவேசமாக செயல்பட வைக்கிறது எனலாம்.

கமல் இந்தப்படத்தில் இயல்பாக நடிக்க முயன்றிருக்கிறார். என்றாலும் சில வணிக கட்டாயங்களுக்காக சண்டைக் காட்சிகளில் வழக்கமான நாயக வேஷத்தையும் கட்ட வேண்டிதாயிருக்கிறது. படத்தின் முதல் பாடல் (கற்க கற்க) சிறப்பாகவும் பாராட்டத்தக்க உத்தியுடனும் எடுக்கப்பட்டிருக்கிறது. கமலின் கடந்தகால வாழ்வு பிளாஷ்பேக்கில் தவணை முறையில் சொல்லப்பட்டிருந்தாலும் பொருத்தமான இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. திரில்லர் பட திரைக்கதையின் ஆதாரமே அடுத்தது என்ன என்று பார்வையாளளை எப்போதும் இருக்கையின் நுனியில் அமரச் செய்வதுதான். புலனாய்வின் இடையே சொல்லப்படும் அந்த மென்மையான காதல் காட்சிகள் நீளம் திரைக்கதையில் தொய்வை ஏற்படுத்துகிறது.

தமிழ்த் திரைப்படங்களில் பெரும்பான்மையாகவும் பார்வையாளனின் மூளையை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளாத "லாஜிக் மீறல்கள், கிளிஷேக்கள்" இந்தப்படத்திலும் உள்ளது. அமெரிக்க நாய்களின் புலன்களினாலேயே உணரப்படாத பிணங்கள், ராகவன் "உள்ளுணர்வினால்" உணரப்படுவதும், (இறுதிக்காட்சியில் "நீ ஒரு மோப்பம் பிடிக்கிற மோசமான நாய்டா" என்று வில்லன் வேறு இதை உறுதிப்படுத்துகிறான்) வழக்கு விவகாரங்களை பொது தொலைபேசியில் பேசுவதும், காவல்துறை அதிகாரியின் மூக்கருகிலேயே வில்லன் மாறுவேடத்தில் கடந்து செல்வதும் போன்றவையான காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். (வில்லன் என்றாலே தலை நிறைய மயிர் வளர்த்திருக்க வேண்டும் என்கிற கவுதமின் எதிர்பார்ப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்).

()

ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் சில சிறப்பாக அமைந்திருந்ததற்கு ஏற்ப, பாடல்களின் காட்சியமைப்பும் சிறப்பாக அமைக்கபட்டிருக்கிறது. பின்னணி இசையில் ஹாரிஸ் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறாரா என்று தோன்றுகிறது. கமல்-ஜோ காதல் காட்சிகளின் பின்னணியில் பழைய இந்திப்படங்களை போல நூறு வயலின்கள் கதறுகிறது. பின்னணி இசை என்றாலே ஏதாவதொரு வாத்தியம் ஒலித்துக் கொண்டேயிருக்க வேண்டுமென்பதில்லை. அவற்றிற்கு ஓய்வு கொடுக்க வேண்டிய தருணங்களும் உண்டு.

குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருப்பவர்கள் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் எடிட்டர் ஆண்டனியும். இருவரின் கூட்டணியில் பல காட்சிகள் புத்துணர்ச்சியாக இருக்கிறது.

()

முந்தைய படமான 'காக்க காக்க'விலிருந்து முற்றிலும் மாறி எடுக்க தீர்மானித்ததாக இயக்குநர் கவுதம் (மதனுடனான) பேட்டியில் சொல்லியிருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் 'கா.கா' வை நினைவுப்படுத்துவதை தவிர்க்க இயலவில்லை. மேலும் இளமாறன், மாயா என்று முந்தைய படத்தின் பாத்திரங்களையே உபயோகிக்கும் அளவிற்கு என்ன பெயர் பஞ்சம் அல்லது சம்பந்தப்பட்ட பெயர்களின் மேல் இயக்குநருக்கு என்ன பிரேமை என்று புரியவில்லை. மேலும் 'கா.கா'வின் நாயகி ஜோதிகாவையே இதிலும் உபயோகித்ததில் இந்த ஒப்பிடுதல் இன்னும் அதிகமாகிறது. (சம்பந்தப்பட்ட பாத்திரத்திற்கு குறிப்பிட்ட நடிகைதான் பொருத்தமாக இருப்பார் என்று இயக்குநர் தீர்மானிப்பதில் தவறில்லை. ஆனால் பாத்திர குணாதிசயங்களும், காட்சியமைப்புகளும் ஒத்துப் போவதில்தான் இந்த சிக்கல் ஏற்படுகிறது).

An another episode in police officer's life என்பது இந்தப்படத்தின் tag line. ஆனால் The same episode of "Kakka Kakka" has been remade" என்பதுதான் என் கருத்தாக இருக்கும்.

()

படம் பார்க்கச் சென்ற சூழலை எழுதாவிட்டால் சில பேர் கோபித்துக் கொள்ளவும், இந்தப் பதிவின் தனித்தன்மை பாதிக்கப்படும் என்பதினாலும் இது தவிர்க்க முடியவில்லை. ஆரோக்கியமான தொழில்நுட்ப சமாச்சாரங்கள் அமைந்திருக்கும் அரங்கத்தில்தான் இந்த மாதிரியான படங்களின் காணும் அனுபவம் சிறப்பாக இருக்கும். ஆனால் என் வீட்டருகில் உள்ள ஒரு சுமாரான தியேட்டரில் (பிருந்தா) பார்த்ததில் பெரும்பாலான வசனங்கள் காதில் விழவில்லை. ஓயாமல் அழுது கொண்டிருந்த ஒரு கைக்குழந்தையின் கதறலோடும், அது ஓய்ந்த பிறகு அந்த தம்பதியினரின் சச்சரவு ஒலிகளின் பின்னணியோடும்தான் இந்தப் படத்தை பார்க்க நேர்ந்தது. வெளியே போக முயன்ற குழந்தையின் தாயை தடுத்து "பால்குடு, பால்குடு" என்று குழந்தையை இயல்பில்லாத முறையில் சமாதானமடைய வைக்க முயன்ற அந்த தந்தையையும், முலைக்காம்பை நிராகரித்து தொடர்ந்து கதறிய குழந்தையை சமாளிக்க முடியாமல் தவித்த அந்த தாயையும் கோபிக்க முடியாமலும், ஆனால் எழுகிற எரிச்சலை தவிர்க்க முடியாமலும் இந்தப் படத்தை காணும் அனுபவம் நேர்ந்தது.

பொதுவாகவே பொது இடங்களில் எவ்வாறு புழங்குவது என்கிற அடிப்படை நாகரிகம் அறியாத நம்மவர்களின் மேல் எப்போதும் எனக்கு எரிச்சல் உண்டு. "தமிழர்களின் தொன்மை நாகரிகம்" என்று கட்டுரை எழுதுபவர்களை முகத்திலேயே குத்த வேண்டும் என்கிற ஆசையுமுண்டு. மற்றவர்களின் மேல் எச்சில் படக்கூடும் என்கிற அறிவு இல்லாமல் கண்ட இடங்களில் காறித்துப்புபவர்கள், பொது இடங்களில் உரத்த குரலில் உருப்படியில்லாத உரையாடல்களை நிகழத்துபவர்கள், அணுகுண்டு அழிவிலிருந்து தப்பி ஓடுபவர்கள் போல் பதட்டத்துடன் மோதிக் கொண்டு ஓடி பேருந்து இருக்கையில் இடம் பிடிப்பவர்கள், மற்றவர்களுக்கு தொந்தரவாக இருக்கிறோம் என்கிற பிரக்ஞையே இல்லாதவர்கள்; அப்படி இருந்தும் அதை அலட்சியப்படுத்துபவர்கள்.... இந்த மாதிரி பிரகஸ்பதிகளை யாராவது வேட்டையாடினால் நன்றாக இருக்கும்.

Saturday, September 02, 2006

பழைய பேப்பர்

இணையத்தில் எனது இருப்பை புதுப்பித்துக் கொள்ள, எப்பவோ எழுதின குறிப்புகளை இங்கே பதிவு செய்கிறேன்.

சென்னையில் ஒரு கோடைக்காலம்

சென்னையின் கோடை விடைபெறத் தயங்கிக் கொண்டிருக்கிறது. பேருந்தின் ரயிலின் இரும்புக் கம்பிகள் பயணிகள் தங்களை அணுகவொட்டாதவாறு சூட்டில் தகிக்கின்றன. சிவனின் தலையில் கங்கை குடியிருக்கும் ஐதீகம் உண்மையோ அல்லது பொய்யோ தெரியவில்லை. என்னுடைய தலையில் இந்த மாதிரி தேவதை யாராவது குடிகொண்டு விட்டாளா என்று சந்தேகிக்கும் வகையில் வியர்வைத் தண்ணீர் தலைக்குள்ளிலிருந்து ஊற்று போல் பொங்குகிறது. வீட்டிற்குப் போனவுடன் அலுவலக வேடத்தை களைக்கும் வேளையில் உள்ளாடைகள் பிழியப்பட்ட தேனடையை விநோதமாக நினைவுப்படுத்துகின்றன. உடம்பில் வியர்வை ஊற்றுடன் சிரமப்பட்டு பாலத்தின் மேடேறிக் கொண்டிருக்கும் கைவண்டிக்காரரை எரிச்சலுடன் ஒலியால் திட்டி துரத்துகிறது ஒரு திமிர்பிடித்த வெளிநாட்டு கார்.

எங்கு பார்த்தாலும் கூட்டம் கூட்டமாக வரும் சக மனிதர்களைக் காண எரிச்சலாக இருக்கிறது. உலகத்திலேயே இரண்டாவது நீளமானதாக புகழ்பெற்ற மெரீனாவில் தாராளமாக சுவாசிக்கக் கிடைக்கும் மீன்வறுவல் நாற்றம் குமட்டலை ஏற்படுத்துகிறது.

மிகுந்த சப்தத்துடன் தரையில் மோதி மண் வாசனையை எழுப்பும் மழையை கற்பனையில் கண்டு நனைந்தபடி கடந்து போகின்றன நாட்கள்.

()

பழசாகிப் போன பாக்யராஜ்

மகளின் கோரிக்கைகிணங்க, இம்சை அரசனைக் காண சென்று அரங்கம் நிரம்பிவிட்டதால், "பாரிஜாதம்" என்கிற மகா அபத்தக் களஞ்சியத்தை காண நேரிட்டது. படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே தூங்கத் துவங்கிவிட்ட மகளை பொறாமையுடன் பார்த்த படியும் கொடுத்த காசு வீணாகக்கூடாதே என்கிற நடுத்தர வர்க்கத்து மனப்பான்மையில் வெளியே போக முடியாமல் சகித்தபடி கழிந்தது இரண்டரை மணி நேரம். 'இந்தியாவிலேயே மிகச் சிறந்த திரைக்கதை படைப்பாளி' என்று பாக்யராஜைப் பற்றி வெகுஜன பத்திரிகைகள் பல நேரங்களில் சிலாகிப்பதுண்டு. ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்பதற்கு இது ஒர் சிறந்த உதாரணம்.

அசட்டுத்தனமான நகைச்சுவையையும் பாலியல் உணர்வுகளையும் ஏதோவொரு நூதனமான சதவிகிதத்தில் கலந்து தருவதே அவரது பாணி. இதைத் தவிர வேறொன்றுமில்லை. அவரின் சிறப்பம்சமான ஒன்றை வேண்டுமானால் குறிப்பிடலாம். பத்து பேரை அடித்துவீழ்த்துகிற, திடகாத்திரமான, வீரதீர பராக்கிரமசாலிகளே பெரும்பான்மையாக கதாநாயர்களாக உலா வந்து கொண்டிருந்த நேரத்தில், ஒரு சாமான்யனின் குணாதிசயங்களோடு கதாநாயகனாகி தொடர்ந்து வெற்றி பெற்றவர். (இந்த வரிசையில் இன்னொரு நடிகராக மோகனை குறிப்பிடலாம். இரவல் பேனாவிலிருந்து இங்க் திருடும் கதாநாயகனை (பயணங்கள் முடிவதில்லை) மிகவும் அரிதாகத்தான் காண முடியும்.)

()

இன்னும் சில நாட்கள் கழித்து இம்சை அரசனை காண முடிந்தது. அரண்மனை பாத்திரங்களை கட்டம் கட்டி காட்டி விட்டு பல்லியையும் சுட்டும் அட்டகாசமான ஆரம்ப நகைச்சுவை பல இடங்களில் காணாமற் போயிருப்பதுதான் இந்தப் படத்தின் சோகம். பொருத்தமான கதையை தேர்வு செய்து கொண்டு வடிவேலுவை இன்னும் நன்றாக exploit செய்துகொண்டிருக்கலாம். என்னை இந்தப் படத்தில் மிகவும் கவர்ந்தது, அரண்மனை மற்றும் அந்தப்புரங்களின் அரங்க அமைப்புதான். நகைச்சுவைப் படம்தானே என்று compromise செய்து கொள்ளாமல் தீவிரமான உழைப்புடன் பங்களித்த கலை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தியைத்தான் இந்தப்படத்தின் நிஜ கதாநாயகன் என்பேன்.

இயக்குநர் சிம்புதேவன், நகைச்சுவையைக் கொண்டு சரித்திரப்படத்தில் சமகால பிரச்சினைகளை கட்டமைத்தது புத்திசாலித்தனமான காரியம். வீச்சறுவா நாயகர்களின் ரத்தங்களுக்கு நடுவே ஒரு ஆறுதலான படம்.

()

சமீபத்தில் படித்த சில நூல்களைப் பற்றி சில வரிகள்:

(1) கூடு கலைதல் - பொ.கருணாகரமூர்த்தி

சமகால இலங்கை தமிழ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர் பொ.கருணாகரமூர்த்தி. கணையாழி நடத்திய குறுநாவல் போட்டியில் பரிசு பெற்ற இவரின் மிக சுவாரசியமான நாவலான "ஒரு அகதி உருவாகும் நேரம்" மூலம்தான் இவரை கண்டு கொண்டேன். பல்வேறு பிரச்சினைகள், சோகங்களுக்கு நடுவில் மெல்லிய இழை போல் ஊடுருவியிருக்கும் நகைச்சுவையே இவரது எழுத்தின் பலமாக நான் காண்கிறேன்.
இவரின் சமீபத்திய சிறுகதைகளின் தொகுப்பு "கூடுகலைதல்" என்கிற தலைப்பாக வெளிவந்திருக்கிறது. (கனவுப்பட்டறை வெளியீடு)

(2) ஆழி சூழ் உலகு - ஜோ.டி.குரூஸ்

மீனவர்கள் வாழ்க்கைப் போராட்டங்களை மையமாக வைத்து தமிழ் நவீன இலக்கியத்தில் அதிகம் படைக்கப்படவில்லை. வண்ணநிலவனின் "கடற்புரத்தில்" போன்றவைதான் அரிதாக தென்படுகிறது. குரூஸின் இந்த நாவல் மீனவர்களின் (பரதவர்கள்) தமிழக, குறிப்பாக குமரி மாவட்டத்தில் ஆமந்துறை என்ற பகுதியினரின் வாழ்க்கையை மிக நெருக்கமாக ஆய்வு செய்கிறது.

1933-ல் தொடங்கி 1985-ல் நிறையும் இந்த நாவலின் ஊடாக அவர்களின் புவியியல் பிரச்சினைகள், சமூக மாற்றங்களினால் ஏற்படும் விளைவுகள், மதமாற்றங்களினால் ஏற்படும் தடுமாற்றங்கள், அன்றாடம் மரணத்தை எதிர்கொண்டு ஜீவிதம் நடத்த வேண்டிய அவலமான வாழ்க்கை ஆகியவை குறித்து ஆராய்கிறது. இந்த காலகட்டத்தின் மிக முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களையும் (சிதம்பரம் பிள்ளையின் கப்பல் கம்பெனி) நாவல் நெடுக காண முடிகிறது.

மிக முக்கியமான நாவல் (தமிழினி பதிப்பகம்)

(3) சில இலக்கிய ஆளுமைகள் - வெங்கட் சாமிநாதன்.

சுருக்கமாக வெ.சா. என அறியப்படும் வெங்கட் சாமிநாதன், பி.ஆர்.ராஜம் அய்யர் தொடங்கி உ.வே.சா., திரு.வி.க., பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், க.நா.சு., பி.எஸ்.ராமையா, மெளனி, சி.சு.செல்லப்பா, தி.ஜா., ந.முத்துசாமி, தஞ்சை பிரகாஷ், சம்பத், கோமல் சுவாமிநாதன், நாஞ்சிநாடன், தயாபவார், எஸ்.பொ., ஆகிய ஆளுமைகளைப் பற்றி பல்வேறு கால கட்டங்களில், பல்வேறு இதழ்களில் (பெரும்பாலும் யாத்ரா) எழுதப்பட்ட கட்டுரைகள்.

வெ.சா.விற்கு ஒருவரைப் பிடித்து விட்டால் வானுயரப் புகழ்கிறார். (ந.முத்துசாமி பற்றிய கட்டுரை). மாறாக அமைந்து விட்டால் எதிராளி துவம்சம் செய்யப்படுகிறார். க.நா.சு மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தாலும், இருவருக்குமான முரண்கள் பல இடங்களில் வெளிப்படுகிறது. சம்பத் பற்றி எழுதப்பட்டிருந்த எனக்கு பிடித்திருந்தது. (காவ்யா பதிப்பகம்)