Showing posts with label ஷகிலா. Show all posts
Showing posts with label ஷகிலா. Show all posts

Thursday, September 25, 2008

ரஜினி vs ஷகிலா - ஓர் ஆளுமை ஒப்பீடு

இரவு உணவு முடித்து நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது உரையாடல் இயல்பாக சினிமா பக்கம் திரும்பியது. இரண்டு தமிழர்கள் பேசினால் அதில் பிரதான விஷயம் சினிமாவைப் பற்றியதாகத்தான் இருக்கும் என்பதை யூகிக்க பில்கேட்ஸ் அளவிற்கு மூளை தேவையில்லை. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினியைப் பற்றியும் அவருக்கு இருக்கும் வணிகமதிப்பைப் பற்றியும் நண்பர் விஸ்தாரமாக பேசினார். பேச்சின் நடுவில் அவர் சொன்ன விஷயம் என்னை திடுக்கிட வைத்தது. "வணிக நோக்கில் பார்த்தீர்கள் என்றால் ரஜினியையும் "மலையாளப் பட புகழ்" ஷகிலாவையும் ஒரே அளவுகோலினால் அளந்துவிட முடியும்" என்றார் நண்பர். "என்ன சொல்கிறீர்கள்.. இதை வெளியே சொன்னால் உங்கள் வீட்டுக்கு ஆட்டோ வரும் வாய்ப்பு இருக்கிறது, தெரியுமா" என்றேன். "அதனால்தான் யோசிக்கிறேன். இருவருக்குமான சில ஒற்றுமையைப் பட்டியலிடுகிறேன். அப்புறம் நீங்கள் சொல்லுங்கள், நான் சொன்னது சரியா, தவறா என்று".

எனக்கும் சுவாரசியம் தட்டியது. "சரி சொல்லுங்கள்" என்றேன்.அவர் சொன்னதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள கொஞ்சம் சென்சாருடன் இங்கே பட்டியிலிட்டிருக்கிறேன்.

Photobucket

(1) ரஜினி படங்களில் "கதை" என்கிற சமாச்சாரத்திற்கு அவ்வளவு முக்கியம் கிடையாது. ரஜினி இருக்கிறார் என்பதே முக்கியம். படம் வியாபாரமாகி விடும். ரசிகர்களும் தியேட்டருக்கு வருவார்கள். ஷகிலாவிற்கும் அப்படியே. அவர் பட வெளியீடுகளின் போது பரங்கிமலை பக்கம் டிராபிக் ஜாம் ஆகிவிடுவதை போக்குவரத்து காவலர்களே உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

(2) ரஜினி படங்களில் மிக முக்கியமானது, சண்டைக்காட்சிகள், அவர் பஞ்ச் வசனம் சொல்லும் காட்சிகள், போன்றவை. இது இல்லாவிட்டால் ரசிகர்கள் திருப்தியடைய மாட்டார்கள். படமும் ஓடாது. ஷகிலாவின் படங்களுக்கும் அப்படியே. ரசிகர்கள்
முக்கியமாக எதிர்பார்த்து வருவது "அந்த மாதிரியான" சண்டைக் காட்சிகளை. அது இல்லாவிட்டால் பெஞ்சுகளை உடைத்து தங்கள் எதிர்ப்பை கண்ணியமாக வெளிப்படுத்துவார்கள்.

(3) ஒரு வெற்றிகரமான படத்திற்கு 'ரஜினி' என்கிற ஒற்றைச் சொல்லே போதும். சக நடிகர்கள் யார், இயக்குநர் யார், என்பது பற்றியெல்லாம் ரசிகர்களுக்கு கவலையில்லை. அவர்களை தியேட்டருக்க வரவழைக்க அவர் பெயரே போதும். அம்மணியின் படங்களுக்கும் அப்படியே. "கூட நடிக்கும்" ஆண்களைப் பற்றியெல்லாம் அம்மணியின் ரசிகர்களுக்கு கவலையில்லை. தங்கள் தலைவியின் "முக தரிசனம்" (?) கிடைத்தால் போதும் என்ற அளவில் திருப்தியடைவார்கள்.

(4) பொதுவாக ரஜினி படங்கள் நிச்சய வெற்றி என்பதால் பட பூஜை அன்றே எல்லா ஏரியாவும் விற்பனையாகிவிடும். விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிவிடுவார்கள். செல்வி ஷகிலாவின் படங்களும் அப்படியே. தென்னிந்தியாவைத் தவிர
வட இந்தியாவிலும் அம்மணியின் படங்களுக்கு மிகுந்த கிராக்கியுண்டு. விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்குவார்கள்.

(5) ரஜினி படங்கள் வெளியாகிறது என்றால் அதனுடன் போட்டி போட அஞ்சி தங்கள் பட வெளியீட்டை தள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் அதிகம். ஷகிலாவின் படங்களும் அப்படியே. ஒரு சமயத்தில் கேரளத்தில் மம்முட்டி, மோகன்லால் போன்றவர்களின் பட வசூலை விட ஷகிலாவின் பட வசூல் அதிகமாகிப் போக, பீதியடைந்து சேட்டன்கள் ஒன்று சேர்ந்து ஷகிலாவை தமிழ்நாட்டிற்கே துரத்தி விட்டனர்.

(6) ஆரம்பக் காலங்களில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ரஜினி மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார். தன் தனித்தன்மையை வெளிப்படுத்த சிகரெட்டை தூக்கிப்போட்டு வாயில் கவ்வுவது, தலைமுடியை ஒதுக்கிக் கொள்வது போன்ற சேஷ்டைகளை செய்திருக்கிறார். ஷகிலாவும் அப்படியே. தன்னுடைய "திறமையை" ரசிகர்களுக்கு வெளிப்படுத்த மேலாடை இல்லாமல் கூட நடித்திருக்கிறார். பிற்பாடு அம்மணி இதை நிறுத்திக் கொண்டாலும் ரஜினி இன்னும் நிறுத்தவில்லை என்பது ஒரு சிறு வேற்றுமை.

(7) விநியோகஸ்தர்களின் வட்டாரத்தில் ரஜினியை 'தங்க முட்டையிடும் வாத்து' என்றே கருதுகிறார்கள். பட வெளியீட்டின் போது மட்டுமல்லாமல் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆன பின்னரும், தொலைக்காட்சிகளில் அடிக்கடி போட்டு தேய்த்த பின்னரும் கூட, மறுவெளியீடுகளின் போது ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து ஆதரவு தர மறப்பதில்லை. பொதுவாக மற்ற நடிகர்களுக்கு இந்த வணிக மதிப்பு இல்லை. புதுப்படங்களை வாங்கி வெளியிட வசதியில்லாத சில திரைப்பட உரிமையாளர்கள் இவ்வாறான மறுவெளியீடுகளிலேயே தங்கள் பிழைப்பை நடத்துகின்றனர். ஷகிலாவின் படங்களும் இவ்வாறான அதே வணிக மதிப்பை கொண்டதுதான். ஷகிலா தன்னுடைய திறமையை "அதிகமாக" வெளிப்படுத்துவதை நிறுத்திய பின்னரும் அவரின் பழைய படங்களுக்கு கூட்டம் அலைமோதுகிறது.

(8) ரஜினி படங்கள் மொழி, இன, பிராந்திய, கலாச்சார எல்லைகளைக் கடந்தது. தமிழ்ப்படமென்றாலும் கூட அது ஆந்திரா, கர்நாடகா,கேரளா என்று தென்னிந்தியாவிலும் சில வட மாநிலங்களிலும், சர்வதேச நாடுகளில் குறிப்பாக ஜப்பானிலும் புகழ்பெற்றது. மொழி புரியாவிட்டாலும் கூட ரஜினியின் தோற்றத்திற்காகவும் ஸ்டைலுக்காகவும் சர்வதேச ரசிகர்கள் பார்த்து மகிழ்கின்றனர். ஷகிலாவின் படங்களும் அப்படியே. சர்வதேச அளவில் ரசிகர்கள் உண்டு. பின்னணயில் ஒலிக்கும் மொழி பற்றி அவரின் ரசிகர்களுக்கு கவலையில்லை. தங்களுடைய தலைவியின் "ஆக்ஷன் காட்சிகளை" ரசிக்க மொழி அவர்களுக்கு ஓர் தடையாய் இருப்பதில்லை.

(9) ரஜினி பட விளம்பரங்களில் (பத்திரிகைகளிலும், போஸ்டர்களிலும்) ரஜினிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அது 25 சதவீதம் நடிக்கும் குசேலனாயிருந்தாலும் சரி அவர்தான் பிரதானமாய் தெரிவார். ரசிகர்களின் "வாங்கும் சக்தியை" இந்த பிம்பமே தீர்மானிக்கிறது. எனவே வணிக நோக்கில் இது தவறில்லை. அன்னார் ஷகிலா படங்களுக்கும் அவ்வாறே. பிரதான காட்சிகளில் அவரின் சக நடிகர்களான மரியா, ரேஷ்மா போன்றவர்கள் இருந்தால் கூட விளம்பரங்களில் இவருக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவர் "ஆக்ஷன் படங்களில்" நடிப்பதை நிறுத்திய இன்றும் கூட பத்திரிகை விளம்பரங்களில் அவர் புகைப்படங்களே பெரிதாக அமைக்கப்படுகிறது. (அவர் படத்தை சிறிதாக வடிமைக்க முடியாது என்பது வேறு விஷயம்).

(10) ரஜினி பட ரசிகர்களின் வயதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் பதின்ம வயது இளைஞர்களிலிருந்து அறுபது வயதான கிழவர்கள் வரை காணலாம். ரஜினி படங்களைக் காண விரும்பாதவர்கள் போல் பாவனை செய்பவர்கள் கூட உள்ளூர பார்க்கவே விரும்புவர். செல்வியின் படங்களும் அவ்வாறே. பரங்கிமலை தியேட்டர்களில் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஈடாக முதியவர்களின் எண்ணிக்கையையும் பார்க்க முடியும்.

()

இன்னும் கூட நண்பர் சொல்லிக் கொண்டே போனார். சில பகுதிகள் மிகுந்த ஆட்சேபகரமானது என்பதால் அவற்றை வெளியிடாமல் தவிர்க்கிறேன்.

அவர் சொன்னவற்றை கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது கணக்கு சரியாகவே வந்தது. (நன்றி: அண்ணாமலை) இவற்றை என்னுடைய வலைப்பதிவில் வெளியிடலாமா என்று அவரின் அனுமதியைக் கேட்டேன். முதலில் தயங்கியவர் " இந்தத் தலைப்பில்யாராவது பிஎச்டி ஆராய்ச்சி செய்ய முனைந்தால் அவர்களுக்கு இந்தக் குறிப்புகள் உதவிகரமாக இருக்கக்கூடுமே" என்று நான் கன்வினஸ் செய்தவுடன் 'என் பெயரை வெளியிடக்கூடாது' என்ற நிபந்தனையுடன் ஒத்துக் கொண்டார்.

"நான் சொன்னது சொற்பமே. இணையத்தில் வெளியிட்டவுடன் மற்றவர்கள் இதற்கும் மேலாக பல ஆதாரபூர்வமான, சுவாரஸ்யமான குறிப்புகளை வழங்க முடியும் பார்" என்றும் பின்குறிப்பாக சொன்னார்.

suresh kannan