Thursday, June 24, 2010

தருக்கப் பிழைகள் இல்லாமல் ஒரு திரைப்படம்

நான் எந்தவொரு திரைப்படத்தைப் பார்த்தாலும் அதில் கூடுமான அளவிற்கு தருக்கம் ஒழுங்காக அமைந்திருக்கிறதா என்பதை கவனிப்பது இயல்பானதொன்றாகி விட்டது. சினிமா என்பதே செயற்கையாக கட்டமைக்கப்பட்ட முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு என்றாலும் கூட அதில் ஏற்படும் எந்தவொரு தருக்கப் பிழைகளும் நெருடலை ஏற்படுத்தி காட்சியின் நம்பகத்தன்மையை குலைத்து விடும். நம்பியாரால் துன்புறுத்தப்படும் சரோஜாதேவி சைதாப்பேட்டையில் 'வீலென்று' கூக்குரலிட்ட மறுகணமே அரக்கோண்த்தில் இருக்கும் எம்.ஜி.ஆர், குதிரையிலோ எலெக்ட்ரிக் டிரெயின் மீதோ மரக்கிளைகளை பிடித்தபடியோ எப்படியோ அங்கு வந்து மிகச்சரியாக நாயகியின் கற்பு பறிபோகாமல் காப்பாற்றும், (இதே பணியை 'பிட் படக் காட்சியில் செய்வாராயின் பார்வையாளர்கள் கொலைவெறியின் உச்சத்திற்கே போய்விடுவார்கள்) 'லாஜிக்'  மாத்திரைக்குக்கூட இல்லாத அதீதமான காட்சிகளை பார்த்துப் பழகி வளர்ந்த சூழலைச் சேர்ந்தவன் என்றாலும் கூட இந்த கெட்ட வழக்கம் எப்படியோ படிந்து விட்டது.


 அப்படியாக நான் சமீபத்தில் பார்த்த எந்தவிதமான தருக்கப் பிழைகளும் இல்லாத திரைப்படம் என்று நான் கருதும் ஒன்றைப் பற்றி இங்கே பகிர உத்தேசம்.  TULPAN (2008).கஜகஸ்தான் நாட்டுத் திரைப்படம்.

பாலைவனப் புயல் அவ்வப்போது வீசிக் கொண்டிருக்கும் மிக வறண்ட நிலப்பரப்பு.  ஆட்களே அபூர்வமாக நடமாடும் உள்ளார்ந்த கிராமப்பகுதியில் ஆட்டு மந்தையை கூலிக்காக மேய்த்துப் பிழைக்கும் ஒரு குடும்பம். அந்த குடும்பத்தைச் சார்ந்து நிற்கும் ஒரு இளைஞன். திருமணமாகியிருந்தால்தான் அவனுக்கென்று  தனியாக ஒர் ஆட்டு மந்தையை தரமுடியும் என்று உரிமையாளர் கூறிவிடுகிறார். அந்தக் கடுமையான நிலப்பரப்பின் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஒரே மணவயதுப் பெண் TULPAN. தான் முன்பு பணிபுரிந்து கொண்டிருந்த ராணுவ சாகசங்களை இளைஞன் கூறி அந்தக் குடும்பத்தை கவர முயன்றாலும், மிகப் பெரிய காதுகளையுடைய அவனை பெண்ணுக்கு பிடிக்காமல் போகிறது.

அந்த மந்தையின் ஆடுகள் பிரசவங்களின் போது மர்மமாக இறந்து போகின்றன. உரிமையாளர் கடிந்து கொள்வதால் மன உளைச்சலில் இருக்கும் குடும்பத்தலைவன், வீட்டின் கூடுதல் சுமையாக இருக்கும் தனது மச்சானை அவ்வப் போது கடிந்து கொள்கிறான். இருவருக்குமிடையில் ஏற்படும் மனக்கச்ப்பின் காரணமாக  இளைஞனின் சகோதரியான குடும்பத்தலைவி வருத்தமடைகிறாள். ஒரு உச்ச வாக்குவாதத்தில் இளைஞன் மனமுடைந்து நகரத்தை நோக்கி புறப்படுகிறான்.

()

தங்கள் வீட்டுப் பெண் மணமாகியிருக்கிற இடத்தில் தங்க நேர்வதைப் போன்ற சங்கடமான விஷயம் வேறு எதுவுமேயில்லை. கணவனைச் சார்ந்திருக்கிற பெண் தன்னுடைய சகோதரனின் சங்கடத்தைக் காணச் சகியாமலும் அதற்காக கணவனிடம் அதிகம் போராட முடியாமலிருக்கும்  சூழலும்  அதையும் விட கொடுமையானது. கடுமையான பணிக்குப் பிறகு திரும்பியிருக்கும்  கணவனை ஆற்றுப்படுத்த மனைவி இயல்பாக உடல்உறவிற்கு ஆயுத்தமாவதும், அந்தச் சமயத்தில் இளைஞன் வீட்டிற்குள் நுழைவதால் இருவரும் விலகுவதும், கூட்டுக்குடித்தனத்தில் வசித்த ஒவ்வொருவரும் இந்தச் சங்கடமான அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள்.

இந்தப் படத்தின் மிகச்சிறப்பானதாக நான் கருதுவது, அந்த வறண்ட நிலப்பரப்பின் உஷ்ணமு்ம் குளிரும் புழுதியும் பார்வையாளன் நெருக்கமாக உணருமளவிற்கு சிறப்பாக படமாக்கப்பட்டிருப்பது. ஆட்டுக்குட்டியொன்று பிரசவத்தில் இறந்து போவதும், பின்னர் ஒரு சூழ்நிலையில் இளைஞன் தன்னந்தனியாக ஒரு ஆட்டின் பிரசவத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவதும் மிக சாவகாசமாக நேரடி ஒளிபரப்பு போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தன்னுடைய நீண்ட காதுகளின் காரணமாக திருமணமாகவில்லையே என்று அந்த இளைஞன் வருத்தமடைவதும் ஆனால் சற்றும் மனம் தளராமல் மணப்பெண்ணை எப்படியாவது கவர முயல்வதும் சுவாரசியமான காட்சிகள். நகரத்தில் செட்டிலாகி விடுவதையே தன்னுடைய வாழ்க்கை லட்சியமாக கொண்டிருக்கும் இளைஞனின் நண்பன், பெரிய மார்புகள் கொண்ட நடிகைகளின் படங்களின் துணையுடன் அதற்கான கனவில் எப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறான். நகரத்தின் கவாச்சி தரும் பிரமிப்பை எப்படியாவது சுகிக்க வேண்டும் என்று கனவு காணும் பெரும்பாலான கிராமத்து இளைஞர்களை அவனது பாத்திரம் எதிரொலிக்கிறது.ஒட்டகக் கடியினால் துன்புறும் மருத்துவரின் காட்சிகள் சொற்ப நேரமே என்றாலும் நகைச்சுவையாக இருக்கிறது.

இறுதிக் காட்சி மிக நெகிழ்ச்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எத்தனை பெரிதான மனக்கசப்புகளையும் குடும்பம் என்கிற நிறுவனமும் உறவுகள் எனும் கட்டமைப்பும் போக்கிவிடுகிறது என்பதை இத்திரைப்படம் வலுவாகச் சுட்டிக் காட்டுகிறது.

இதில் வரும் குழந்தைகள் அதிகப்பிரசங்கத்தனமாக இல்லாமல் அவர்களுக்கேயுரிய பிரத்யேக அப்பாவித்தனங்களுடன் சித்தரிக்கப் பட்டுள்ளார்கள். 'பசங்க' திரைப்படத்தின ஒரு குறிப்பிடத்தக்க காட்சி (மாத்திரம்) நினைவுக்கு வருகிறது.  அந்த வீட்டுச் சிறுவன் ஏதோ பேசிக் கொண்டிருக்க,  மிக குறைந்த வயதுடைய அவனின் தம்பி, சிறுவனின் தலையில் அட்டை ஒன்றினால் விளையாட்டாக அடித்துக் கொண்டேயிருப்பான். செயற்கைத்தனமாக இயங்காமல் காட்சியை யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக கொண்டு செல்ல இந்த மாதிரியான உத்திகளை இயக்குநர் கையாள்வது நல்லது. இத்திரைப்படத்தில் அது போல் பல காட்சிகளை உணர்ந்தேன்.  படத்தின் துவக்கத்திலேயே நிகழும் அந்த நீளமான காட்சியமைப்பின் மூலம் ஒளிப்பதிவாளரை நாம் சிலாகிக்கலாம்.

குடும்பத்தலைவியின் பாத்திரத்தை தவிர மற்ற அனைவருமே முன்அனுபவம் இல்லாத நடிகர்கள் என்பதை அறிய ஆச்சரியமாக இருக்கிறது. 2009 அகாதமி விருதுக்காக அந்த நாட்டின் சார்பாக தேர்வு செய்யப்பட்ட இத்திரைப்படத்தை மிக அழுத்தமாக பரிந்துரைக்கிறேன்.

 suresh kannan

Wednesday, June 23, 2010

ஹாலிவுட் 'வியட்நாம் வீடு'

சில திரைப்படங்களைப் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து பிறகு அது இயலாமலேயே போய் விடுகிறது.  எனவே 'நல்ல படங்கள்' என நான் கருதுபவற்றைப் பற்றி சில வரிகளாவது எழுதி வைக்கப் போகிறேன். 'நீங்கள் பரிந்துரைக்கும் திரைப்படங்கள் உபயோகமாக உள்ளது' என பின்னூட்டத்திலும் தனி மடலிலும் நேர் உரையாடலிலும் தெரிவிக்கும் நண்பர்களுக்கு (உண்மையாகத்தான்) இது உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன். அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் திரைப்படங்களைப் பற்றி வழக்கமான முறையில் எழுதுவேன். 



EVERYBODY'S FINE (2009) பார்த்தேன். சிவாஜியின் 'வியட்நாம் வீடு' திரைப்படத்தை நினைவுப் படுத்தியது. புரிந்திருக்கும். வயதான காலத்தில் வாரிசுகளின் புறக்கணிப்பை வலியுடன் தனிமையில் உணரும் 'அழுகாச்சி' படம்.

தன்னுடைய மகன்/ள் (கள்) வருகைக்காக வீ்ட்டை ஒழுங்குபடுத்தி காத்திருக்கிறார் பிராங்க். நாம் எதிர்பார்த்தது போலவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி வராமலிருந்து விடுகிறார்கள். 'அட நாதாரிகளா, சரி.  நானே உங்களைப் பார்க்க வரேன்' என்று ஆச்சரிய வருகையை அவர்களுக்கு  அளிக்க புற்ப்பட்டு விடுகிறார். அவரவர்களின பிரச்சினையில் இவரை எல்லோருமே தவிர்க்க முயல்கின்றனர் என்பது புரிகிறது. ஆயாசத்துடன் திரும்பும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு எல்லோருமே வந்து சேர விக்ரமன் பட பின்னணி இசையுடன்  கிறிஸ்துமஸ் விருந்தை அனைவரும் உண்ண படம் ஜூம் அவுட் கோணத்துடன் நிறைகிறது.

இத்தனை SUBTLE  ஆக ராபர்ட டி நீரோ நடிப்பதை இப்போதுதான் பார்க்கிறேன். தன் மனைவியிடம் மிக இயல்பாக பழகிய மக்கள்ஸ் தன்னிடமிருந்து ஏன் விலகிப் போகிறார்கள் என்று ஒவ்வொரு தகப்பனும் நெருடலான வலியாக உணர்கிற சமாச்சாரத்தை யதார்த்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ரயில் பயண்த்தில் எதிர் குண்டு பெண்  பயணியிடம் வம்படியாக தான் செய்து கொண்டிருடிருந்த பணியை நினைவு கூர்வது சுவாரசியமான காட்சி. சமகாலத்து வயதான தோற்றத்துடன் உள்ள தந்தை, குழந்தைகளுடன் உரையாடும் அந்த விசாரணைக் காட்சியும் நன்று.

வயதான தகப்பனை புனிதப்பசுவாகவும், வாரிசுகளை வில்லர்களாகவும் கருப்பு வெள்ளையாக சித்தரிக்காமல், அவரவர்கள் வாழ்க்கைகளை பிரச்சினைகளுடன எதிர்கொண்டிருக்கும் யதார்த்தத்தை பெற்றோர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற செய்தியையும் இந்தப்படம் முன்வைக்கிறது.

சிறந்த படம் என்று சொல்ல முடியாவிட்டாலும் ராபர்ட்  டி நீரோவின் அற்புதமான நடிப்பிற்காக பார்க்கலாம்.

தொடர்புடைய பதிவு : ஸ்மித்தைப் பற்றி

suresh kannan

Saturday, June 19, 2010

ராவணன் - அபத்தமான இதிகாச 'ரீமிக்ஸ்'

சத்தியவான் சாவித்திரியை 'ரோஜா'வாகவும் மகாபாரதத்தை 'தளபதி'யாகவும் ரீமிக்ஸ் செய்த மணிரத்னத்திற்கு இராமாயணத்தை மாத்திரம் ஏன் விட்டுவைப்பானேன் என்று ஒர் அகால நேரத்தில் தோன்றியிருக்க வேண்டும். விளைவு ராவணன்.

நல்ல குணாதிசயங்கள் கொண்டிருக்கிறவரை ஹீரோவாக சித்தரிப்பதெல்லாம் எம்.ஜி.ஆர் காலத்திலேயே வழக்கொழிந்து போய் விட்டதால்,  நவீன நடைமுறைக்கேற்ப காலங்காலமாக நாட்டார் கதைகள் முதற்கொண்டு கதாகாலட்சேபங்கள் வரை நமக்கு 'கெட்டவனாவே' சித்தரிக்கப்படும் ராவணனை 'நாயகனாக' சித்தரிக்க முயன்றிருக்கிறார். ஆனால் இந்த காரியத்தை பல வருடங்களுக்கு முன்பே ஆர்.எஸ்.மனோகர் அவரது புராண நாடகத்தில் நிகழ்த்தி விட்டார். ராவணன் ஒரு சிறந்த இசைகலைஞன் என்பதும் கடுமையான தவவலிமை மூலமாக ஈஸ்வரனுக்கு நிகராக 'இராவணேஸ்வரனாக' விளங்கினான் என்பதுமாக அந்த ஆளுமையின் பல நல்ல விஷயங்கள் அந்த நாடகத்தின் மூலமாகவே எனக்கு தெரிய வந்தது.

மணிரத்னம் தனது 'காவிய வில்லனை' எப்படி சித்தரித்திருக்கிறார் என்று ஆவலோடு சென்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது. மணிரத்னத்தின் அடிப்படை பிரச்சினையே எந்தவொரு தீவிரமான சமூகப்பிரச்சினையையும் மேலோட்டமான பாவனையோடு அதீத அழகுணர்ச்சியோடு அணுகி அதை ரொமாண்டிசைஸ் செய்து அதன் மையத்தின் கூர்மையை மழுங்கச் செய்வது. ஏனெனில் அவரின் பெரும்பாலான மேட்டுக்குடி பார்வையாளர்களிடம் இந்த வகையான சாக்லெட்தான் செல்லுபடியாகும் என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார். ரோஜா படத்தின் மூலம் அவர் தேசிய நீரோட்டத்தில் கலந்த பிறகு 'தனது படங்களை எப்படி வெற்றிகரமாக மார்க்கெட் செய்வது' என்பதிலேயே அவர் கவனம் முழுவதும் மையம் கொண்டிருக்கிறது. எனவேதான் முதலாளித்துவத்தின் அழுத்தமான பிம்பமான திருபாய் அம்பானியை நாயக ஆராதனை செய்ததும் அதில் வரும் ஒரு கம்யூனிஸ பாத்திரத்தை 'கையாலாகதவனாய்' கிண்டலடித்ததும்.


சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாசனையுடன் கூடிய இந்தப் படத்தின் பிரதான பாத்திரமான 'வீரய்யா' பழங்குடி கிராம மக்களின் பிரதிநிதியாகயும் அதிகார மையத்தை எதிர்த்து புரட்சி செய்பவனாகவும் சித்தரிக்கப்படுகிறான். ஆனால் அதற்கான எந்தவிதமான தடயங்களோ அழுத்தமான காட்சிகளோ படத்தில் இல்லவே இல்லை. மொத்தப்படமுமே ஏதோ லயோலா கல்லூரியின் பணக்கார மாணவர்கள் பழங்குடி மக்களாக வேடமிட்டு ஆடும் 'கல்ச்சுரல் டிராமா' போலவே இருக்கிறது. ('கோடு போட்டா' என்கிற பாடல் இதற்கான மிகச் சிறந்த உதாரணம்)  முன்பே சொன்னது போல பழங்குடி மக்களின் பிரச்சினைகளைத் தொடாமல் அவர்களின் நிலப்பரப்பை பார்ம் ஹவுஸ் போல் மிகை அழகுணர்ச்சியுடன் சித்தரித்து பார்வையாளனுக்கு எந்த அசெளகரியத்தையும் தர விரும்பாமல் கிளுகிளுப்பாக அமர வைத்திருக்கிறார். ஒருவேளை மும்பை தாராவி மக்களின் பின்புலத்தில் ஒரு சமீப படத்தை உருவாக்கினாரெனில் குழந்தைகள் வீட்டின் முன்னாலேயே மலம் கழிப்பதை 'லாங் ஷாட்டிலும்' மலத்தின் மீது மொய்க்கும் ஈயின் இறக்கைகளை 'டைட் குளோசப்' ஷாட்டிலும் அழகுணர்ச்சியுடன் காட்டுவாராக இருக்கும்.

ஓர் உண்மையான கலைஞனுக்கு சமூகப் பிரச்சினைகள் குறித்த இருக்க வேண்டிய அடிப்படை கோபமும் அறவுணர்ச்சியும் பொறுப்புணர்வும் மணிரத்னத்திடம் இல்லை. ஷங்கர் போன்று வணிகரீதியாக வெற்றி பெறுகிற, தொழில் நுட்பத்தை சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொள்கிற இயக்குநர்களின் பட்டியலில் அவர் பெயரைச் சேர்க்கலாமே ஒழிய ஒரு படைப்பாளியாக, கலைஞனாக அவரின் பெயர் இடம் பெறுவது சந்தேகமே.

மணிரத்னத்தின் படங்களிலிருக்கும் இந்த  பிரச்சினை குறித்த,  மேற்சொன்னவாறான விமர்சனங்கள் இருந்தாலும் அவரின் திரைக்கதை எனக்கு எப்போதுமே திருப்தியையும் பிரமிப்பையும் இதுவரை ஏற்படுத்தியிருந்தது.  சிறந்த இந்திய திரைக்கதையாசிரியர்களின் பட்டியலில் பிரதான இடத்தையே அவருக்குத் தர நான் விரும்புவேன். திரைப்பட ஊடகத்தின் அடிப்படை வடிவத்திற்கு முரணாக, நாடகத்தின் செல்லூயாயிட் வடிவமாக சலிக்காமல் நீள நீளமாக உரையாடிக் கொண்டிருந்த சினிமாவை காட்சிகளால் நகர்த்திச் செல்ல முயன்ற முதன்மையான இயக்குநர்களில் மணிரத்னத்தின் பங்களிப்பு தனித்துவமானது. ஆனால் 'ராவணனில்' அந்தத் தகுதியையும் இழந்து பரிதாபமாக நின்றிருக்கிறார் இயக்குநர்.

'முதல் வரியிலிலேயே கதையைச் சொல்ல ஆரம்பித்து விடு' என்கிற சுஜாதாவின் வழிகாட்டுதலுக்கேற்ப படம் ஐஸ்வர்யா ராய் கடத்தப்படும் ஆரம்பக் காட்சியிலேயே  விறுவிறுப்பாக துவங்குகிறது. 'அட' என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் படம் அந்த இடத்திலிருந்து இடைவேளை எனும் கற்பிதம் வரை துளிக்கூட நகரவில்லை. அதற்குப்  பின்பு ஐஸ்வர்யா ஏன் கடத்தப்பட்டார் என்பது பார்வையாளனுக்கு விளங்க வைக்கப்பட்ட பிறகுதான் அந்த சம்பவத்தின் அழுத்தமும் நியாயமும் அவனுக்கு புரிகிறது. அதுவரை ராவணன் சீதையை நோக்கி 'எச்சில் தெறித்து விடாமல்' கற்போடு ஜொள் விட்டுக் கொண்டிருப்பதை திரும்ப திரும்ப சலிக்கும் வரை நாம் பார்க்க நேர்கிறது. ஒரு காட்சியில் கை மேலே பட்டு விடாமல் அரை அடி உயர்த்தி ஐஸ்வர்யாவின் மார்புகள் உட்பட உடம்பு முழுவதும் தடவுகிறார் விக்ரம். இதற்கும் காதலர்கள் முத்தமிட்டுக் கொள்ளும் போது பூ வந்து மறைக்கும் காட்சிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை.

காட்சிகளை உருவாக்கும் விதத்தில் பழைய மணிரத்ன படங்களில் இருக்கும் மெனக்கெடலும் நம்பகத்தன்மையும் இல்லை. பழங்குடி மக்களும் ஐஸ்வர்யாவை மீட்க வந்திருக்கும் அதிரடிப்படையும் மோதும் வெடிகுண்டு காட்சிகள் மிக அமெச்சூராக இருக்கிறது. இதை விட ரோஜா'வின் ஆரம்பக் காட்சிகள் பல மடங்கு தரத்தில்  சிறப்பாக உருவாக்கப்பட்டிரு்நதன. தருக்க ரீதியாகவும் நிறைய சருக்கல்கள். தன் தங்கையை கற்பழித்த மரணத்திற்கு காரணமான காவல் அதிகாரியை வீரய்யா அப்படியா வெறுமனே நிர்வாணப்படுத்தி உயிரோடு விட்டு விடுவான்' என்பது பாத்திர வடிவமைப்பின் நம்பகத்தன்மையைக் கேலி செய்கிறது.

இந்த 'திரைக்கதை' விஷயத்தில் முதன்முறையாக மணிரத்னத்தின் படத்திலிருந்து அதிருப்தியாக வெளியே வந்தேன். என்றாலும் ஐஸ்வர்யா விக்ரம் மீது அதுவரை கொண்டிருக்கிற வெறுப்பிலிருந்து விடுபட்டு மெல்லிய நேசம் ஏற்படுத்திக் கொள்கிற அந்த பரிணாமத்தின் பயணத்தை சிறப்பாகவே கொண்டு வந்திருக்கிறார்.

()

ஒரு கதாபாத்திரத்திற்காக இப்படியா ஒருவன் உயிரைக் கொடுத்து நடிப்பான்? பாலா மாத்திரம் இந்த வைரத்தை கண்டுபிடிக்காமலிருந்தால் இன்னும் எத்தனை வருடத்திற்கு நிலக்கரியாக அல்லல்பட்டிருப்பாரோ? படத்தின் மிகப்பெரிய ஆறுதல் விக்ரம்தான். ஆனால் பிதாமகனில் சித்தரிக்கப் பட்டிருக்கிற அதே மாதிரியான ஆக்ரோஷ பாத்திரத்தை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் சீக்கிரம் சலித்துப் போய்விடும் அபாயத்தை அவர் உணர வேண்டும். மணிரத்னமாவது இவரின் பாத்திரத்தை வேறுவிதமாக வடிவமைத்திருக்கலாம். இந்தி வடிவத்தில் இவர் பிருத்விராஜின் காவல் அதிகாரி பாத்திரத்தில் நடித்திருப்பதாக கேள்விப்பட்டேன். இதற்காகவாவது இந்தி வடிவத்தை பார்க்க வேண்டும். ஒரே நேரத்தில் இருமொழி படப்பிடிப்புகளும் நிகழ்ந்த நிலையில்,  இரண்டு முரண்பட்ட பாத்திரங்களுக்கு அடுத்தடுத்த கணங்களில் தாவிக் குதிப்பது மிகச் சிரமமான காரியம். ஒரு பாத்திரத்தின் தாக்கத்திலிருந்து விடுபட்டு உடனே இன்னொரு பாத்திரத்தின் வடிவமைப்பிற்கு மாறுவது அத்தனை எளிதான காரியமல்ல.

ஐஸ்வர்யா சில பிரேம்களில் தற்செயலாக  அழகாய் இருக்கிறார்தான். இல்லையென்று  சொல்லவில்லை. ஆனால் உலக அழகி பட்டம் பெற்று ஒரு மாமாங்கம் ஆகிறதே? ஏன் இதை மணிரத்னம் உணரவில்லை. மணிமணியாக எத்தனை திறமையான இளம் நடிகைகள் இருக்கிறார்கள்? அவர் 'எந்திரனில்' ரஜினிக்கு நாயகியாக நடிக்கிறார் என்பதிலாவது அதில் ஒரு தருக்கரீதியான பொருத்தமும் நியாயமும் இருக்கிறது. :-) இதில் ஏன்? 14 நாட்கள் தொடர்ந்து காட்டில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர் பல காட்சிகளில் அநியாய புத்துணர்ச்சியுடனும் ஒப்பனையுடனும் இருப்பது பொருத்தமாக இல்லை. கிளைமாக்சில் விக்ரமுடன் உரையாடும் அந்த காட்சிகளில் மாத்திரம் அவரின் முகபாவங்களும் நடிப்பும் சிறப்பாக இருந்தது.

ஓர் ஆக்ரோஷமான காவல் அதிகாரி பாத்திரம் பிருத்விராஜிற்கு. பாவம் அமுல் பேபி மாதிரியான முகத்தை கூடுமானவரைக்கும் கடுமையாக வைத்துக் கொண்டு அவர் நியாயம் செய்திருக்க முயன்றாலும் எடுபடவில்லை. ஒரு பாத்திரத்தின் சிறந்த வெளிப்பாட்டிற்கு casting எத்தனை முக்கியம் என்பதற்கு மிகச் சிறந்த எதிர்உதாரணம் பிருத்விராஜ். ராவணன் ஒரு வேளை 'ஹோமோ'வாக இருந்திருந்தால் ஐஸ்வர்யாவை விட்டு விட்டு இவரைத்தான் கடத்தியிருப்பான். அத்தனை மென்மையாக மொழுமொழு வென்றிருக்கிறார்.'ஏன் உங்க கை இத்தனை முரடு' என்று வசனம் வைத்து இந்தக் குறையை சமன் செய்ய முயன்றிருக்கிறார் இயக்குநர்.

பிரபு கார்த்திக். 'அய்யோ ராமா'வென்று ஓவென்று கத்த வேண்டும் போலிருக்கிறது. பிரபுவையாவது ஒழிந்து போகிறதென்று சகித்துக் கொண்டு தொலைக்கலாம். கார்த்திக்கின் அக்கிரமம் தாங்கவேயில்லை. அக்னிநட்சத்திரம், மெளனராகம்... என்று ஒரு காலத்தில் இளைஞர்களுக்கு ஆதர்சமாக இருந்த கார்த்திக், 'வெத்தலை போட்ட ஷோக்கில்' இருந்து கொழகொழவென்று பேச ஆரம்பித்ததிலிருந்தே அவர் மவுசு போய்விட்டது. நீண்ட இடைவேளைக்குப் பின்பு திரையில் வந்து அதேமாதிரியே வெறுப்பேற்றியிருக்கிறார்.

ரஞ்சிதா வரும் மிக மிகச் சொற்ப காட்சிகளில் பார்வையாளர்கள் காரணமேயின்றி கொலைவெறியுடன் திரையரங்கில் கத்துகிறார்கள். எல்லோருக்குமே அதன் காரணம் புரிந்திருக்கிறது. ஒட்டுமொத்த சமூகத்தின் மனோபாவ அடிப்படையிலான கூட்டுப் புணர்ச்சிக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார் ரஞ்சிதா. பாவம் அந்தப் பெண். இனிமேல் பொதுவெளியில் குறைந்தபட்சம் தமிழகத்தில் அவர் உலவவே முடியாது போலிருக்கிறது. தமிழப்பண்பாட்டை ஒருபுறமும் பாலியல் வறட்சியின் விகாரத்தை மறுபுறமும் சுமக்கும் தமிழர்களுக்கு அவரையும் சாமியாரின் ஆண்குறியையும் இணைக்காமல் இனி யோசிக்கவே முடியாது. காமிராவை ஒளித்து வைப்பவர்கள் இனி மேலாவது சற்று தார்மீக ரீதியாக சிந்தித்துப் பார்க்கலாம்.

சில காட்சிகளிலே என்றாலும் சத்தமேயில்லாமல் மிக இயல்பாக திருநங்கையின் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் வையாபுரி.

ரஹ்மான் 'உசுரைப் போக்கி'க் கொண்டு உருவாக்கின பாடல்கள் பெரும்பாலானவற்றை வழக்கம் போலவே சொற்பமாக நசுக்கி நசுக்கி பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். 'உயிரே' படத்திலிருந்தே இந்த அராஜகம்தான். அப்படியெனில் மிகத் தைரியமாக பாடல்களே இல்லாமலே படத்தை வடிவமைத்திருக்கலாமே? ஆனால் அதற்காக ஆடியோ வருமானத்தையும் ரஹ்மானின் பிம்பம் வணிகத்திற்கு உபயோகப்படுவதையும் விட முடியாது. கஷ்டம்தான். கூழுக்கும் மீசைக்கும் ஆசை. கூடவே பலியாயிருப்பது வைரமுத்துவும்.

வசனம் சுஹாசினியாம். 'மணிரத்ன' வாசனையுடன் எழுதியிருக்கிறார். பல இடங்களில் என்ன பேசுகிறார்கள் என்றே புரியவில்லை. ஐஸ்வர்யா கடத்தப்படும் ஆரம்பக் காட்சியிலேயே துளி பயமின்றி கடத்துகிறவனை நோக்கி 'செம்மொழி'யில் ஏதோ கூறுகிறார். 'ரோஜா' திரைப்படத்தில் அரவிந்த்சாமி, எரியும் தேசியக்கொடியின் மீது விழுந்து அணைப்பது போன்று இதுவும் லாஜிக்கை தூக்கிப் போட்டு மிதிக்கிற காமெடியாக இருக்கிறது. 

()

இந்தப்படத்தை காண்பதற்கு ஒரே ஒரு மிகப் பெரிய நியாயமான காரணமிருக்கிறது என்றால் அது படத்தின் ஒளிப்பதிவாளர்களுக்காகத்தான் (சந்தோஷ் சிவன் மற்றும் மணிகண்டன்).

ஏறக்குறைய முழுத்திரைப்படமும் வனத்தின் பின்னணியில் நிகழ்கிறது. அருவியின் குளிர்ச்சியையும் இலைகளின் பச்சை வாசனையையும் அவர்களின் அற்புதமான ஒளிப்பதிவு நம்மிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. குறிப்பாக ஐஸ்வர்யா மேலிருந்து விழும் காட்சியிலும் விக்ரம் விழும் இறுதிக் காட்சியிலும் மரப்பாலத்தின் மீது நிகழும் சண்டைக் காட்சிகளிலும் ஒளிப்பதிவு மிகச் சிறப்பாக பங்காற்றியிருக்கிறது. கான்கீரிட் பொந்துகளில் வாழும் நாம் இயற்கையின் எத்தனை அற்புதமான விஷயங்களை தவறவிட்டுக் கொண்டிருக்கிறோம் என்கிற குற்றவுணர்ச்சியை இந்தக் காட்சிகள் ஏற்படுத்துகின்றன. ஒரு காட்சியில் அருவியின் நீர்ப்பரப்பின் மீது விக்ரமும் சில குழந்தைகளும் ஆட்டம் போடும் போது தினமும் முக்கால் பக்கெட் நீரில் குளிக்க வாய்த்த எனக்கு ஏறக்குறைய எனக்கு அழுகையே வந்துவிட்டது.

காலங்காலமாக அவர்கள் வாழும் இம்மாதிரியானஅருமையான வாழ்க்கையையும நிலப்பரப்பையும், வணிக முதலாளிகளும் அரசாங்கமும் கூட்டுச்சதியுடன் கேட்கும் போது எல்லாவற்றையும் உதறி விட்டு நகரத்திற்கு ஓடிப் போய் அங்கே பிச்சையெடுத்தோ கூலி வேலை செய்தோ, 'நகரமயமாகி' விட வேண்டுமாம். அப்படி செய்யவில்லையெனில் அவர்கள் உடனே 'பயங்கரவாதி'களாகி விடுகிறார்கள். தங்களின் உரிமையை வேறுவழியின்றி ஆயுதங்களின் துணையுடன் கேட்டால் அரசு தன்னுடைய முழு பலத்தையும் உபயோகித்து அவர்களை நசுக்கி அப்புறப்படுத்துகிறது. இந்த கசப்பான உண்மையை இயக்குநர் ஓரமாக ஒரு காட்சியில் கூட வைக்கவில்லை. 'ஒடுக்கப்பட்டவன்' என்று விக்ரம் சில சமயம் சொல்வதெல்லாம் சம்பிரதாயமான பாவனையில் இருக்கிறது.

ப்ரியாமணியின் திருமணக்காட்சிகளின் போது அமைந்திருக்கிற பின்னணிக் காட்சிகள் அந்தச் சூழலுக்கு முரணாக இருந்தாலும் கலை இயக்குநரின் உழைப்பைத் தெரிவிக்கிறது.

()

இயக்குநரிடம் இறுதியாக ஓரு வேண்டுகோள்.

தன்னுடைய வணிக மாய்மாலங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மிக அர்ப்பணிப்புடன் ஒரு படத்தையாவது வரும் காலங்களில் மணிரத்னம் இயக்க வேண்டும்.

நினைத்துப் பார்க்கிறேன். அவரின் 'நாயகன்' திரைப்படம் வந்த சமயத்தில் குறைந்தது பத்துமுறைக்கும் மேலாக பார்த்திருக்கிறேன். வீட்டுக்குத் திரும்பும் ஒவ்வொரு முறையும்  என்னை 'வேலு நாயக்கராக' உருவகம் செய்து கொண்டு 'கெத்தாக' நடந்து வருவேன். சோற்றுக்காக அப்போது செய்து கொண்டிருந்த பணியை உதறிவிட்டு, குறைந்தது ராமநாராயணனிடமாவது உதவியாளராக எப்படியாவது 'சினிமா'வில் சேர்ந்து விட வேண்டும் என்று யோசிக்க அளவிற்கு உத்வேகத்தை கொடுத்த படம் அது.

தமிழச்சினிமாவில் ஒரு சத்யஜித்ராயோ, ரித்விக் கடக்கோ, அகிரா குரசாவாவோ இனியாவது வருவார்களா அல்லது அது மெல்ல வெறும் பகற்கனவாகவே முடிந்துவிடுமா என்பது தெரியவில்லை. 

suresh kannan

Friday, June 18, 2010

சூப்பர் சிங்கர் ஜூனியர் - அல்கா தேர்வு


முந்தைய  இரண்டு போட்டித் தொடர்களைப் போல் (நிகில் மேத்யூ மற்றும் கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்ற நிகழ்ச்சிகள்) இந்த ஜூனியர் தொடரை தொடர்ந்து காண இயலவில்லையென்றாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காணத்தவற மாட்டேன். இளம் வயதிலேயே எத்தனை விதமான திறமை என்று ஆச்சரியமாக இருக்கும். பல வருடங்களாக சங்கீதம் கற்றுக் கொண்டிருந்த குழந்தைகள் முதல் சமீபத்தில்தான் பயிற்சியை துவங்கியவர்கள், வெறும் கேள்வி ஞானத்தையே  கொண்டு பாடியவர்களை வரை பெரும்பாலோனோர் தொழில்முறை பின்னணி பாடகர்ளுக்கு ஈடாக பாடியது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருந்தது.

தொலைக்காட்சிகளின் எரி்ச்சலூட்டும் வழக்கமான  வணிக உத்திகள் இதிலும் பிரதானமாக இடம் பெற்றிருந்தன. தோல்வியில் அழும் குழந்தைகளை காமிரா பிரதானமாக துரத்தியது. இந்தப் போட்டியில் தோற்பதை குழந்தைகளை விடவும் அவர்களின் பெற்றோர் மிகுந்த கவுரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டனர் என்றே கருதுகிறேன். வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் இருக்கிறோம் என்கிற பாவனையே பெரும்பாலான முடிவுகளில் வெளிப்பட்டன. சில குழந்தைகள் தோல்வியை யதார்த்தமாக எடுத்துக் கொண்டாலும் அவர்களின் பெற்றோர் கண்ணீர் கம்பலையாக அழுதுத்தீர்த்தனர். எல்லாவற்றையும் தொலைக்காட்சி காமிரா தங்களுக்கான வணிக நிமிடங்களுக்கான தீனியாக நிரப்பிக் கொண்டது.

இந்தக் காரணங்களினாலேயே இந்த நிகழ்ச்சியை பல சமயங்களில் பார்ப்பதற்கு ஆர்வம் தோன்றவில்லை. நான் கவனித்தவரை இறுதிப் போட்டியில் இருந்தவர்களைத்தவிர பிரியங்கா, ஸ்ரீநிஷா போன்றவர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது. கிராமத்து வெள்ளந்தி தோற்றத்திலிருந்த ஒரு கருப்பு நிறச் சிறுவனும் (பெயர் ஞாபகமில்லை) சற்று குண்டாக இருந்த ஒரு பெண்ணும்  தேர்வுச் சுற்றுகளில் சிறப்பாக பாடினார்கள்.  எந்த நிலையில் அவர்கள் நீக்கப்பட்டார்கள்  என்று தெரியவில்லை. இறுதியாக வெற்றி பெறுபவர் கவாச்சி தோற்றத்திலிருக்க வேண்டும் என்பதும் வணிகயுகக் கட்டாயங்களில் ஒன்று போலும்.

நான் கவனித்த வரை ஸ்ரீகாந்த் என்கிற துறுதுறுச் சிறுவன் பாடுவது முன்னே பின்னே இருந்தாலும் அவனின் குறும்புத்தனங்கள் பெரும்பாலோரை கவர்ந்ததனால் எஸ்எம்எஸ் ஓட்டுக்கள் மூலம் மறுபடியும் இறுதிச் சுற்று வரை வந்திருக்கிறான். ஒரு திறமைசசாலியை இப்படி எஸ்எம்எஸ் ஓட்டுக்கள் மூலம் தேர்ந்தெடுப்பது சரியா என்று தோன்றுகிறது. ஒரு சிறுவனோ அல்லது சிறுமியோ நன்றாக பாடுகிறான்/ள் என்பதை சாதாரணர்களை விட அதில் பாண்டித்தியம் பெற்றவர்கள்தான் சிறப்பாக கணிக்க முடியும். இந்த நுட்பமான சமாச்சாரத்தை ஏதோ கவுன்சில்ர் எலெக்ஷன் போல் ஓட்டுக்கள் மூலம் தேர்ந்தெடுக்கும் முறையே அபத்தமாக இருக்கிறது. இதற்காக சம்பந்தப்பட்ட போட்டியாளர்களின் பெற்றோர் நடத்தும் ஓட்டு வேட்டை அதை விட அபத்தம்.


எஸ்.பி.பி  இளம் பாடகராக இருந்த போது கலந்து கொண்ட ஒரு பாட்டுப் போட்டியில் இரண்டாம் பரிசையே அவருக்கு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தந்தனர். ஆனால் நடுவராக இருந்த எஸ்.ஜானகி மேடையிலேயே இதை தடுத்து நிறுத்தி 'முதல் பரிசுக்காக தோந்தெடுக்கப்பட்டவரை விட இந்த இளைஞரே திறமையாக பாடியதால் இவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தி முதல் பரிசை எஸ்.பி.பிக்கு வாங்கித்தந்தார். அந்த மாதிரியான எவ்வித எதிர்பார்ப்புமில்லாத நேர்மையை இப்போது பார்க்க முடியாது போலிருக்கிறது.

மலையாளிகளையே குறிப்பாக தேர்ந்தெடுத்து இறுதிப் போட்டிக்கு அனுப்புகின்றனர் என்றும் குறிப்பாக ஸ்ரீநிஷா எனும் தமிழ் சிறுமி  வஞ்சிக்கப்பட்டு விட்டாள்' எனும்  ஓலங்களை சில பதிவுகளில்  காண முடிந்தது. இவ்வாறான இனவாதத்தை தூண்டும் பதிவுகளைக் கண்டாலே எரிச்சலாக இருக்கிறது. திறமையுள்ளவருக்கு மறுக்கப்படுகிற வாய்ப்பை மையமாக குறித்தே இந்தப் பதிவுகள் உரையாட வேண்டும்.

 கால்பந்து போட்டிக்காக காத்துக் கொண்டிருந்தவன், இறுதி முடிவு அறிவிக்கப்படுகிறது என்பதால் இடையில் இந்த நிகழ்ச்சியையும் காண முடிந்தது. நிறைய விளம்பரங்கள் மற்றும் பில்டப்பிற்குப் பின்னர் முடிவுகளை அறிவித்தனர்.

  • ரோஷன் மற்றும் நித்யஸ்ரீ ஆறுதல் பரிசு. 
  • ஸ்ரீகாந்த் மூன்றாவது பரிச
  • ஷ்ரவன் இரண்டாவது பரிசு
  • அல்கா  அஜீத் - வெற்றியாளர் - முதல் பரிசு
அனைவருக்கும் வாழ்த்துகள்.

கடந்த போட்டி முடிவு அறிவிப்பு குறித்து எழுதியது.

விஜய் டிவி சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றவர்

image courtesy: original uploader

suresh kannan

Thursday, June 17, 2010

கெளதம் மேனனின் காதல்

கொஞ்சம் லேட்தான். அதற்காக, 'என்னது! காந்தி செத்துட்டாரா, எலிசபத் டெய்லர் வயசுக்கு வந்துட்டாங்களா?'- என்றெல்லாம் கேட்கக்கூடாது.

எனக்கு தற்போது வயது முப்பதிற்கும் கூடுதலாக இருக்கக்கூடும் என்கிற தகவலை மாத்திரம் சொல்லி விட்டு மேலே நகர்கிறேன்.

பொதுவாக எல்லா பதின்மர்களையும் போலவே எனக்கு அந்த பதின்ம வயதில் ஒரு காதலை சம்பாதித்து விட வேண்டுமென்பதுதான் உயர்ந்த லட்சியமாக இருந்தது. கார்த்திகை மாதத்து நாய் போல் அலைந்து திரிந்து சம்மர்சால்ட் எல்லாம் அடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் சற்று நிதானத்திற்கு வந்தவுடன்தான் புரிந்தது. 'எல்லாச் சாலைகளும் ரோமை நோக்கி' என்கிற புகழ்பெற்ற வாக்கியத்தைப் போல 'எல்லாக் காதல்களும் யோனியை (அல்லது vice versa) நோக்கி' என்பதுதான் அது. வாத்தியார் சுஜாதாவும் ஒரு மங்கலமான காதலர் தினத்தில் கட்டுரையொன்றை எழுதி 'இது முழுக்க ஹார்மோன்களின் கபடி விளையாட்டுதான். 'காதல் என்கிற வஸ்து பூமிப்பந்தின் எந்த மூலையிலும் கிடையாது' என்று என் எண்ணத்திற்கு வலுச் சேர்த்தார். சில தினங்களுக்கு முன்புவரை கூட இந்த நிலைப்பாட்டிலிருந்து நான் சிறிது கூட மாறவில்லை. ஆனால் 'வி.தா.வ.' திரைப்படம் பார்த்தவுடன் அந்த எண்ணம் சற்று தகர்ந்து போனது நிஜம்.

காமத்தைத் தாண்டி காதல் என்கிறதொரு சமாச்சாரம் மறைபொருளாக ஆழ உறைந்திருக்குமோ?

'காதலும் காதலைச் சார்ந்த இடமும்' என்று தமிழ்சினிமாவை வகைப்படுத்தலாமென்பது போல் பெரும்பாலான படைப்புகளின் கச்சாப்பொருள் என்னவென்று பார்த்தால் காதலே. ஒரு கட்டுரையில் செழியன் சொல்லியிருந்ததைப் போல இதையாவது ஒழுங்காக எடுத்துத் தொலைத்தார்களா என்று பார்த்தால் இல்லை. இருவரின் புத்தகங்களும் கீழே விழுந்து எடுக்க குனிந்து நிமிர்வதற்குள் இருவரின் தலையும் இடித்துக் கொள்ள நிமிர்ந்து பார்த்தால்.. நம்தனநம்தனநம்தன.. என்று ராஜாவின் ரெடிமேட் பின்னணி இசையோடு காதல் மலர்ந்துவிடும். அல்லது இருவரும் முதலில் பூனைகள் போல் பிராண்டிக் கொண்டேயிருந்தால் இரண்டாவது ரீலில் அவர்கள் உத்தரவாதமாக காதலிக்கப் போகிறார்கள் என்பதை காண்டமலிருந்து தப்பிப்பிறக்கும் நாளைய குழந்தை கூட சொல்லிவிடும். பின்பு அவர்கள் மரத்தைச் சுற்றி.. முத்தமிடும் போது சரியாக வந்து மறைத்து நிற்கிற பூக்களில் தொடர்ந்து அப்பன்களிடமிருந்தோ, வில்லன்களிடமிருந்தோ.. தங்கள் காதலை பிய்த்துக் கொண்டு ஓடும் போது சில்அவுட்டில் இயக்குநரின் தத்துப்பித்து மெசேஜோடு படம் முடியும்.

லெளதீக வாழ்வில் பிற்பாடு அவர்கள் லோல் படப்போவதையும் காமம் களைத்து அவர்களின் நிஜமான ஆளுமைகளை இருவருமே காணச் சகியாமல் சண்டைக் கோழிகளாக மாறுவதையும்... சொற்பமான படங்களே முன் வைத்திருக்கின்றன. இதுவொரு வெறும் இனக்கவர்ச்சிதான் என்று இந்த பிரம்மாண்டச் சுவரை முதன்முதலாக இடிக்க முயன்றது சந்தானபாரதியும் பி.வாசுவும் இணைந்து இயக்கிய 'பன்னீர் புஷ்பங்கள்' என்று நினைக்கிறேன். தற்போது பாலாஜி சக்திவேலின் 'காதல்'வரை இது நீண்டிருந்தாலும் இவற்றின் எண்ணிக்கை குறைவே. 


காதல் என்பது காமத்தின் நாசூக்கான வெளிப்பாடுதான் என்கிற என்னுடைய இத்தனை வருட புரிதலில், வி.தா.வ சற்று சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படைப்பையும் படைப்பாளியையும் இணைத்து யோசிக்கக்கூடாது' என்கிற அரதப்பழசான தருக்கத்திற்கு உட்படாத விமர்சனக் கோட்பாடுகளை தூக்கியெறிந்துப் பார்த்தால் கெளதம் நிச்சயமாக யாரையோ முதல் பார்வையிலேயே கண்டு விழுந்து விழுந்து காதலித்திருக்கிறார்; தோல்வியடைந்திருக்கிறார்; அதிலிருந்து மீண்டிருக்கிறார் என்பதை அவருடைய முதல் படத்திலிருந்து அவதானிக்கும் போது தெரிகிறது. 'மின்னலே'யில் மாதவனின் அந்த துடிப்பு நிஜமாக இருக்கிறது. குற்ற பின்ணணிகளில் நிகழ்ந்தாலும் 'காக்ககாக்கவிலும்' .வேட்டையாடு விளையாடு'விலும் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் பிரத்யேகமாக தனித்தன்மையுடன் சித்தரிக்கப்பட்டன.

சமகாலநிகழ்வையும் திரைப்படத்தினுள்ளே வரும் ஒரு திரைப்படத்தையும் நான்-லீனியர் கலவையில் பிசைந்திருந்த விதாவி-ன் திரைக்கதை உத்தி எனக்குப் பிடித்திருந்தது. சிம்பு-திரிஷாவின் காதலை நெடுகச் சொல்லிக் கொண்டு செல்லும் திரைக்கதை சடக்கென்று தண்டவாளம் மாறி அதே பாவனையில் சிம்பு இயக்கும் படத்தின் காட்சிகளாக தொடர்வதும் இறுதியில்தான் அது பார்வையாளர்களுக்கு வெளிப்படுவதும் நல்ல உத்தி. சற்று zoom out செய்து பார்த்தால் கெளதமின் காதலே திரையில் விரிவடைந்தாகவும் இதனைக் கொள்ளலாம். ஒரே படத்தில் மூன்று காதல் கதைகள்.

ரொம்ப வருடங்களாக நம் கண்ணே முன்னேயே மார்க்கெட்டிலும் நிழல் சந்துகளிலும் ரவுடியாக திரிந்து கொண்டிருந்த ஓர் இளைஞன், திடீரென்று வெள்ளை சட்டையும் டக்இன்னுமாக பச்சை சவர வாசனையுடன் நம் வீட்டிற்கு வந்து "சார், நான் சாப்ட்வேர் கம்பெனில சேர்ந்திருக்கேன். ஸ்வீட் எடுத்துக்குங்க"... என்றால் எப்படி நமக்கு மகா ஆச்சரியமாய் இருக்குமோ, அப்படியிருக்கிறது சிம்புவைப் பார்த்து. (சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிவதுதான் சமூகத்தின் உயர்ந்த பணியா, அப்படியெனில்.. என்று யாரும் நுண்ணரசியலை தேட வேண்டாம்; சட்டென்று தோன்றின உதாரணமிது). அவரின் வழக்கமான எரிச்சலூட்டும் உடல்மொழிகள் இதில் இல்லாமலிருப்பது ஒர் ஆறுதல்.

ஒரு சமகால காதல் அவதி இளைஞனை யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக திரையில் பிரதிபலித்திருந்தார் சிம்பு. காதல் ஏற்றுக் கொள்ளப்படும் வரைக்குமான இவரின் தவிப்பும் பின்பான நிராகரிப்பின் வேதனையும் எதிர்ப்புகள் தரும் சோர்வையும் தனக்காக திருமணத்தை நிறுத்தி விட்டாள் என்பதை அறியும் போது மகிழ்ச்சியும்.. என நிஜமான ஒரு பாத்திரம். இப்படி இவர் அருவி மாதிரி பொங்கிக் கொண்டிருக்க மறுமுனையில் திரிஷா பக்கெட் நீர் மாதிரி மொண்ணைத்தனத்தோடு இருந்தது எரிச்சலாக இருந்தது. அந்த நடுஇரவில் வீட்டிற்கு வெளியே, "ஏன் தன்னை அவன் திருமணம் செய்து கொள்ள முடியாது?' என்று விளக்குகிற (பின்பு சிம்பு கைபேசியை தூக்கியெறிந்து உடைக்கிற) காட்சியில் மாத்திரமே அவர் நடிப்பு சிறப்பாக இருந்தது. சிம்புவின் நண்பராக வரும் கணேஷின் (தயாரிப்பாளர்களில் ஒருவர்) யதார்த்தமான நடிப்பும் பேச்சுமொழியும் சுவாரசியமானதாக இருந்தது.

ரஹ்மானின் 'ஷாம்பெயின்' வழியும் பாடல்கள் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலம். குறிப்பாக 'ஹோசன்னா' பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் பின்னணி நிலப்பரப்புகளும் மிக அருமை. தமிழத்திரைக்கு புதிய பாணி வரவான 'ஆரோமலே' பாடலும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருந்தது. அரதப்பழசான கருப்பொருளாக இருந்தாலும் ஒரு இயக்குநரால் நுண்ணுனர்வுகள் நிரம்பிய காட்சிகளோடு அதை ஒரு உன்னத அனுபவமாக்க முடியும் என்பதற்கு இந்தப்படம் மிக கச்சிதமானதொரு உதாரணம்.

மேலே எனது வயதைக் குறிப்பிட்டிருந்தேன் இல்லையா? இதுவரை அழகான, திடகாத்திரமானதொரு பெண் எதிரே வந்தால், உடனே உலக சினிமாவின் சப்-டைட்டிலை வாசிப்பது போல் (நன்றி பேயோன், டிவிட்டர்) முகத்திலிருந்து சற்று இறங்குமுகமாகவே நோக்கத்தெரிந்த எனக்கு, எல்லாவற்றையும் உதறிவிட்டு யாரையாவது துரத்தி துரத்தி புனிதமாக காதலிக்க வேண்டும் போலிருந்தது. அந்தளவிற்கான மனவெழுச்சியை ஏற்படுத்தியது விதாவ. 

suresh kannan

Wednesday, June 16, 2010

எல்.கே.ஜி. முதல் நாள்


எங்களின் இரண்டாவது மகளும் பொதுவாழ்க்கையில் தன்னை வேண்டாவெறுப்பாக பிணைத்துக் கொண்ட நாள் இன்று.  ஆம். தன்னுடைய எல்,கே.ஜி. யின் முதல் நாளை, முதல் பள்ளி அனுபவத்தை இன்று சந்திக்கிறாள்.

எங்களின் முதல் மகளைப் போல் அல்லாமல் தாத்தா - பாட்டி அனுபவங்களும் அதிகமில்லாமல் தன்னுடைய அம்மாவுடனே பெரும்பாலான நாட்களை கழித்ததில் ஒரு  TYPICAL  அம்மா 'கோண்டுவாக' ஆகியிருந்தாள். அவளுடைய அம்மா குளியலறைக்குச் செல்லும் அந்த சொற்ப நிமிடங்களைக் கூட அவள் தனியாக கழிக்க சம்மதித்தில்லை. எனவே எவ்வாறு இந்த 'திகில்' அனுபவத்தை அவள் எதிர்கொள்ளப் போகிறாள் என்று எங்களுக்கு பதட்டமாகவே இருந்தது.

எல்.கே.ஜி. என்பதால் நேரடியாகவே வகுப்பில் அமர வைத்து விட்டனர். ஆசுவாசப்படுத்திக் கொள்ள எல்லா குழந்தைகளுக்கும் லாலிபப்பை ஆசிரியையே தந்தார். 'ராமன் ஆண்டாலென்ன...' என்று சில குழந்தைகள் தத்துவார்த்தச் சிக்கல் இல்லாமல் விச்ராந்தியாக அமர்ந்திருக்க, சிலது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்கிற நிலையில் அமர்ந்திருந்தன. மூன்றடிக்கும்  மேலாக துள்ளிக் குதித்து அழுது ஆகாத்தியம் செய்த ஒரு சிறுவனை அடக்குவதற்கு டிஸ்கொதே பார்களில் இருக்கும் பவுன்சர்கள் வந்தால்தான் முடியும் போலிருந்தது. எவரோ ஒரு குழந்தையின் அம்மா ஜன்னலில் எட்டி எட்டிப்  பார்த்து கலங்கிக் கொண்டிருந்தார்.

எங்களின் மகள், அவளுடைய அம்மா அருகில் நின்றிருந்த வரை, ஒரளவு சமாளித்துக் கொண்டிருந்தவள், அவர் வெளியே வந்தவுடன் எல்லாவற்றையும் எறிந்து விட்டு பின்னாலேயே ஓடிவர முயன்றாள். பின்பு அவளிடமிருந்த வெடித்த வன்முறையை ஒப்பிடும் போது மேற்குறிப்பிட்ட சிறுவனை இவள் வென்றுவிடக்கூடிய சாத்தியம் அதிகமிருந்தது.

அசட்டுத்தனமான, மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துகிற, பணம் சம்பாதிப்பதையே தன்னுடைய பிரதான எதிர்கால திட்டமாக ஆக்கும் நிலையில் பயணிக்கிற  நம்முடைய  இந்தியக் கல்விமுறையை திடமாக அவள் எதிர்கொள்வதற்கான  எல்லாவிதமான துணிவையும் அவளுக்கு வழங்க இயற்கையை பிரார்த்திக்கிறேன்.

()

எங்களின் முதல மகளை பள்ளியில் சேர்த்த அனுபவத்தை மரத்தடி குழுமத்தில் ஜூன் 16, 2004 அன்று எழுதியிருந்தேன். அது இங்கே.

எங்கள் மூன்றரை வயது மகளை எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்தனின் தொடர்ச்சியாக இன்று முதன் முதலாக பள்ளிக்கு செல்லும் அவளை உற்சாகப்படுத்தும் விதமாக நாங்கள் இருவருமே உடன் சென்றிருந்தோம். (இதைவிட முக்கியமான வேலை இன்று என்னவாக இருக்க முடியும்?). இதுவரை நேரம், கடிகாரம் இந்த விஷயங்களில் எல்லாம் பாதிக்கப்படாமல் இஷ்டப்பட்ட நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டு, விளையாடிக் கொண்டிருந்தவளின் வாழ்க்கையில் இன்று முதல் டென்ஷன ஆரம்பமானது. ('எட்டரை மணிக்கெல்லாம் ஸ்கூல்ல இருக்கணும். சீக்கிரம் முழுங்கித் தொலைடி!')

இயல்பிலேயே ¨தைரிய குணமுடைய எங்கள் மகள் எந்தவித கலக்கமுமின்றி மிக உற்சாகமாக எங்களுடன் வந்தாள். பள்ளியின் உள்ளே 'குழந்தைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்' என்று கலவையாக குழந்தைகளை காண முடிந்தது. சிலது 'உம்'மென்று அமர்ந்து கொண்டிருந்தன. சிலது முதல் நாளிலேயே உயரமான இடத்திலிருந்து குதித்து தம்முடைய ராஜாங்கத்தை நடத்தி கொண்டிருந்தன. சில கண்ணை கசக்கிக் கொண்டும் பராக்கு பார்த்தபடியும் இருந்தது ஒரு சுவாரசியமான கொலாஜ் சித்திரத்தை பார்த்த மாதிரி இருந்தது.

அது ஒரு கிருத்துவப் பள்ளி என்பதால் பைபிள் வாசிப்புடன் மீட்டிங் தொடங்கியது. புது மாணவர்களை உற்சாகப்படுத்தி வரவேற்கும் விதமாக சீனியர் மாணவர்கள் கோமாளி போல் வேடமிட்டும், இனிப்புகள் வழங்கியும், சிறிய அளவில் கலை நிகழ்ச்சிகள் வழங்கியும் சிறப்பித்தனர். வீட்டில் POGO சேனலையே பார்த்து காலம் கழிக்கும் எங்கள் மகள், இங்கே படிப்பில் மிகுந்த அக்கறையுள்ளவள் போல், "எப்பம்மா படிக்க போறது,இந்த மாதிரி டான்ஸ் எல்லாம் ஆடிட்டு இருந்தா டயமாவுதில்ல?" என்று கேட்டு எங்களை வியப்பிலாழ்த்தினாள். "ஏம்ப்பா நீங்க ஆபிஸ் போகலே?" என்று கேட்டு என்னை துரத்தினாள்.

அவரவர் வகுப்புகளை அறிவித்து அமர வைத்தபின், பெற்றோர்கள் விடைபெற ஆரம்பித்த உடன்தான் ஆரம்பித்தது கச்சேரி. ஏறக்குறைய பாதி எண்ணிக்கை குழந்தைகள் வீறிட்டு அழத் துவங்கின. கூட்டிலிருந்து அலறி அடித்துக் கொண்டு வரும் கோழியை போல் அழுதுக் கொண்டு ஓடிவந்த சிறுவனை வகுப்பு ஆசிரியை கதாநாயகியை வில்லன் தூக்கிக் கொண்டு போகும் கண்க்காக தூக்கி சென்றார். ஜனனல் வழியாக ஒரு சிறுமி அவளுடைய அம்மாவை "போகாதீங்கம்மா" என்று கதறி தீர்த்தது, எல்லா சென்டிமென்ட் படங்களையும் தூக்கி சாப்பிடும் போலிருந்தது.

எங்கள் மகள் அவ்வப்போது பாட்டி வீட்டில் எங்களை பிரிந்து பழகி இருந்த அனுபவம் இருந்தமையால் எங்களை கவனியாமல் பக்கத்திலிருந்த ஒரு மாணவன் வைத்திருந்த ஒரு பேருந்து பொம்மையை பிடுங்குவதிலேயே கவனமாக இருந்தாள். கொஞ்சம் அழுவாளோ என்று பயந்திருந்த எனக்கு, என் மனைவிதான் கண்கலங்கி அந்தக் குறையை தீர்த்தாள்.

பெற்றோராக எங்கள் கடமையில் இன்னொரு தொடர்ச்சியான விஷயத்தை செய்து முடித்த திருப்தியில் நாங்கள் அவளிடமிருந்து விடைபெற்றோம். அடுத்த வேளை சோற்றுக்கான உத்தரவாமில்லாமல் எத்தனையோ குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க முடியாமலிருக்கிற இந்த தேசத்தில் அந்தக் குறை நேராவண்ணம் ஒரளவு பொருளாதர வசதியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிற இறைவனுக்கு மனமார நன்றி சொன்னேன்.

suresh kannan

Monday, June 14, 2010

சுஜாதாவும் பாலுமகேந்திராவும்

எச்சரிக்கை:  மீள் பதிவு

சுஜாதாவின் 'பரிசு' என்கிற சிறுகதையை உங்களில் பலபேர் படித்திருக்கக்கூடும்.

ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவருக்கு ஏதோ ஒரு போட்டியில் கலந்து கொண்டு, டெல்லி,  ஆக்ரா சென்று குடும்பத்துடன் தங்கிவரும் முதற்பரிசு கிடைக்கிறது. குடும்பமே சந்தோஷத்தோடு அதற்கான முஸ்தீபுகளில் இறங்க,  அக்கம்பக்கத்தினரும் தங்கள் பங்குக்கு சில பொருட்களை வாங்கிவரச் சொல்கின்றனர். நிதிப்போதாமை காரணமாக, கணவன் எங்குமே வெளியில் அழைத்துச் செல்லவில்லையே என்று மறுகிக் கொண்டிருக்கும் அந்த அப்பாவி மனைவிக்கு இது பெருத்த அதிர்ஷ்டமாக தோன்றுகிறது.

இறுதியில் அந்தக் கணவனின் பல்வேறு பொருளாதார பிரச்சினைக்கு ஈடுகட்ட அந்த பிரயாணத்திற்குப் பதில் பணம் வாங்கி விட்டு, மனைவியையும் உருக்கத்துடன் சம்மதிக்கச் செய்கிறான்.

நடுத்தர குடும்பத்தினருக்கே உரிய எலலா பிரத்யேக அம்சங்களுடன் தன் வழக்கமான பாணியில் இந்தச் சிறுகதையை சிறப்பாக எழுதியிருப்பார் சுஜாதா.


நேற்று இரவு இந்திய நேரம் 8.30 மணிக்கு பொதிகை தொலைக்காட்சியில் மேற்குறிப்பிட்ட சிறுகதை இயக்குநர் பாலுமகேந்திராவால் குறும்படமாக இயக்கப்பட்டு  ஒளிபரப்பப்பட்டது. முன்னுரையில் சுஜாதா தோன்றி,  'வாசகனின் பங்கில்லாமல் எந்தவொரு படைப்பும் முழுமையடைவதில்லை' என்றார் மென்மையாக.

பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவு திறமையை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை. ஆனால் ஒரு சிறுகதையை எவ்வாறு திரைக்கதையாக சொல்வது என்பது அவருக்கு தெளிவாக தெரிந்திருக்கிறது. வேறு யாராவது என்றால் நாலு பேரை ஒரு பிரேமிற்குள் நிற்க வைத்து பக்கம் பக்கமாக வசனம் பேசி இதை ஒரு அசட்டுநாடகமாக்கி இருப்பார்கள். ஆனால் பாலுமகேந்திரா இந்தச் சிறுகதையின் தேவையான பகுதிகளை மட்டும் வெட்டி எடுத்துக் கொண்டு, தன் திரைக்கதையில் திறமையாக பிசைந்திருக்கிறார். வசனங்களையும் மிகக்குறைந்த அளவே பயன்படுத்திக் கொண்டு, தன்னுடைய வசனங்களில் சமீபத்திய நிகழ்வுகளையும் செருகியுள்ளார்.

இந்தக் குறும்படத்தின் முதற்காட்சியே அந்தக் குடும்பத்தலைவி குடிநீர் லாரியில் கூட்டத்தில் மிகுந்த சிரமப்பட்டு தண்ணீர் பிடிக்கிற ஒரு மிட் ஷாட்டில் ஆரம்பிக்கிறது. அந்த நடுத்தரக் குடும்பத்தின் பின்னணி காட்சிகள்,  எங்கிருந்தோ கேட்கும் ஒரு ரேடியோவின் பாடல் ஒலிகளினாலும்,  குழந்தை அழுகிற சத்தங்களினாலும் மிகத்திறமையாக சொல்லப்படுகிறது.

#

ஆனால் சிறுகதையில் இல்லாத சம்பவங்களையும் இணைத்து அதனை சலிப்படைகிற வகையில் சொல்லியிருப்பதை தவிர்த்திருக்கலாம். உதாரணமாக அந்தப் போட்டியில் வென்ற தம்பதிகளை தங்களுடைய விளம்பரங்களில் உபயோகித்துக் கொள்ள மறுநாள் வந்து புகைப்படம் எடுக்க அழைத்துச் செல்வதாக கூறுகிறார் அந்தப் போட்டி நடத்திய விளம்பரக் கம்பெனியின் அதிகாரி. ஆனால் அடுத்த நாளில்,  தங்களுடைய பிராண்டை அந்த குடும்பத்தலைவி உபயோகிப்பதாக சொல்லச் சொல்லி விளம்பரப்படம் எடுக்கப்படுகிற படப்பிடிப்புக் காட்சிகள் காண்பிக்கப்படுகிறது. இதுவரை கேமராவையே பார்த்திராத அந்தக் குடும்பத்தலைவி வசனங்களை தாறுமாறாக சொல்லி இயக்குநரின் எரிச்சலால் அழ ஆரம்பிப்பதை நகைச்சுவையாக சொல்ல முயன்றிருக்கிறார். நடிகை மெளனிகா இந்தக்காட்சியை மிக சிறப்பாக செய்திருந்தாலும், கதைக்கு சம்பந்தமில்லாமல் ஒரு திணிப்பாகவே இது தெரிகிறது.

#

நடுத்தர குடும்பங்களுக்கே உரிய அந்த அசட்டுத்தனங்களை நடிகர் மோகன்ராம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். உதாரணமாக இந்தக் காட்சியை பாருங்கள்.

மனைவி: ஏங்க பிளைட்லயா போறோம். அப்ப வரும் போது.......?

கணவன்: வரும் போது மாட்டுவண்டியிலயா அழைச்சிட்டு வருவாங்க. பிளைட்லதான் வருவோம்.

ஆனால் இதை எல்லாந்தெரிந்த ஏகாம்பரம் போல் சொல்லி விட்டு,  பின்பு அவருக்கே நம்பிக்கையில்லாமல்,  விளம்பரக்கம்பெனி நிர்வாகியை பார்த்து சந்தேகமாக கேட்கிறார்.

சார்,  அப்படித்தானே?.....


இன்னொரு காட்சியில் மனைவி,  ஏ.ஸி. காரில் பயணிக்கும் போது

"எப்படிங்க இவ்வளவு குளிரா இருக்குது?"

என்று ஏ.ஸியைப் பற்றி கேள்வி கேட்க,  இவர்,

"ஏ.ஸின்னா........ என்று பதில் சொல்கிறாற் போல் உயர்ந்த குரலில் ஆரம்பித்து விட்டு "ஏ.ஸி.தான்" என்று அவசரமாக சொல்லிவிட்டு ஜன்னலில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்.

#

இந்த குறும்படத்தை பார்த்தவுடனே,  அந்த ஒரிஜினல் கதையையும் படித்து இரண்டையும் ஒப்பிட்டுப்பார்க்க ஆர்வமேற்பட்டது. ஆனால் என் வீட்டில் இருந்த புத்தகக்குவியலில் சம்பந்தப்பட்ட கதை அடங்கிய புத்தகத்தை தேடியெடுக்க முடியாமல் ஏமாற்றமடைந்தேன்.

"நைட்டு பத்து மணிக்கு செல்ப் மேலே ஏறி என்னத்த குடையறீங்க,  தூங்கவிடாம" என்று ஆரம்பித்த என் மனைவியின் முணுமுணுப்பினால் இந்த முயற்சியை கைவிடவேண்டியதாயிருந்தது.

என்றாலும் ஞாபகமிருந்த வரை,  நடுத்தர குடும்பங்களுக்கேயுரிய குணாசியங்களுடன் எழுதப்பட்ட அந்தக் கதையின் ஜீவன் இந்த குறும்படத்தில் வந்திருக்கிறதா என்றால்....

இல்லை.

#

குலுங்குகிற கதாநாயகிகளின் மார்புகளை கண்களை உறுத்துகிறாற் போல் குளோசப்பில் காட்டும் பாட்டுக்களையும்,  வெங்காயம் அரியும் போது கூட கண்கலங்காத குடும்பத்தலைவிகளை கலங்க வைக்கும் அழுவாச்சி தொடர்களையும் தொடர்ச்சியாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் தனியார் தொலைக்காட்சிகளும் இந்த மாதிரியான முயற்சிகளுக்கு ஒரு அரைமணிநேரம் ஒதுக்கலாம். முன்பு சன் தொலைக்காட்சியில் பாலுமகேந்திராவின் கதை நேரம் என்கிற நிகழ்ச்சியில் பல தரமான சிறுகதைகள் படமாகின. அந்த மாதிரியான முயற்சிகள் தொடர்ந்து செய்யப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

#

பொதுவாகவே திரைக்கலைஞர்களுக்கு பாடி லாங்வேஜ் ரொம்ப முக்கியம்.

வசனங்களில் சொல்ல முடியாத அல்லது சொல்லக்கூடாத விஷயத்தை இந்த உடல் மொழிகளினாலே சிறந்த கலைஞர்களினால் வெளிப்படுத்த முடியும்.

உதாரணமாக இந்த குறும்படத்தில் மெளனிகா அவ்வாறு சிறப்பாக தன் உடல்மொழியை வெளிப்படுத்திய காட்சியை விவரிக்க முயல்கிறேன்.

#

கணவன் எழுதிய அந்த ஸ்லோகனுக்கு பரிசு வந்திருப்பதாக விளம்பரக் கம்பெனி அதிகாரி சொன்னவுடன், அந்தக் கணவன் தன் மனைவியிடம் உடனே இதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறான். தன் 10 வயது மகனிடம் விசாரிக்க,  அவள் பக்கத்துவீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருப்பதாக தகவல் வருகிறது. உடனே அழைத்து வரச் சொல்கிறான். அந்தச் சிறுவன் விஷயத்தை கூறாமலே வரச் சொல்லியிருப்பான் போலும். மனைவி,  எதற்கோ வரச் சொல்லுகிறார் என்று மிக இயல்பாக வீட்டினுள்  நுழைந்தவள்,  கூடத்தில் அமர்ந்திருக்கும் அந்த அன்னியனை (விளம்பரக் கம்பெனி அதிகாரியை) எதிர்பாராமல் அதிர்ந்து போய் பார்த்து,  விழிவிரிய,  மிரட்சியுடன் ஒரு அடி பின்னோக்கி நகர்கிறாள்,

#

இந்தக் காட்சியைப் பார்த்து நான் பிரமித்துப் போனேன். அந்த நகர்வை இயக்குநரே சொல்லித் தந்தாரா, அல்லது மெளனிகாவே இயல்பாக செய்தாரா என்று தெரியவில்லை. ஆனால் அவர் காட்டிய முகபாவமும், பின்னோக்கி நகர்ந்த விதமும் சிறப்பானவை.

#

நாடகக்கலைஞர்களுக்கு மிக அவசியமாக சொல்லித்தரப்படுவது இந்த உடல்மொழி பற்றிய பயிற்சி. உதாரணமாக நிறைய பேருக்கு மேடையில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாது. தொங்க விடுவதா,  மடித்துக் கொள்வதா என்று குழப்பமாக இருக்கும். அனுபவித்தர்களுக்குத்தான் நான் சொல்வது புரியும். பேருந்து நிலையங்களில் நிற்கும் மனிதர்களை உற்றுக் கவனித்திருக்கிறேன். நிற்பவர்கள் அனைவரும் கைகளை மடக்கிக் கொண்டோ,  சுவற்றில் சாற்றி வைத்துக் கொண்டோ,  இரு கைகளினாலும் பையை இறுக்கி பிடித்துக் கொண்டோதானிருப்பார்கள். இயல்பாக இரண்டு கைகளையும் தொங்கவிட்டிருப்பவர்களை காண்பது அரிது.

அடுத்த முறை கவனித்துப் பாருங்கள்.

(சில வருடங்களுக்கு முன்னால் பாலுவின் 'கதை நேரம்' தொடர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த சமயத்தில் எழுதினது)

suresh kannan

Friday, June 11, 2010

வளையோசை கலகலவென...

உண்மையிலேயே சொல்கிறேன். இந்தப் பாடலை குறைந்தது ஆயிரம் முறையாவது இதுவரை கேட்டிருப்பேன். கேட்கும் ஒவ்வொரு முறையும் சின்ந்தால் சோப்பின் உறையை பிரிப்பது போல் அத்தனை புத்துணர்ச்சியைத் தருகிறது.  கோடைக்காலத்தில் கேட்டால் கூட 'இதோ, அடுத்த கணத்தில் மழை பெய்யப் போகிறது' என்கிற உற்சாக பிரமையை பெரும்பாலான தருணங்களில் தரத் தவறுவதில்லை.  ராஜா தன்னுடைய படைப்பூக்கத்தின் உச்சியிலிருந்து மெல்ல தளர்கிற நேரத்தில் உருவாக்கினதொரு மாஸ்டர்பீஸ். பாவத்தில் வலுவாக வெளிப்படும் பாலு வழக்கம் போல் இந்தப் பாடலைக் கொண்டாடியிருக்கிறார். லதாவின் தமிழ் நெருடலாக இருந்தாலும் குரலில் வழிந்தோடும் மதுரத்திற்காக அவரை மன்னிக்கலாம்.



ஒரு குழந்தை வீட்டிற்குள் கள்ளத்தனமாக எட்டிப்பார்ப்பது போல் ஆரம்பிக்கிறது குழலின் இசை. பின்பு அது குடுகுடுவென்று நெளிந்தாடிக் கொண்டே வீட்டிற்குள் ஓடி வந்து பிறகு அடிக்கிற கும்மாளம்... அதகளம்.

முதல் சரணத்திற்குப் பின்னான லதாவின் ஹம்மிங்.. பின்பு இணைந்து கொள்கிற பாலு. அதற்குப்பிறகு எங்கோ மலையுச்சியை எட்டி விடும் நோக்கத்துடன் பாயும் வயலின்(கள்).. இந்தப் பாடலின் கேட்பனுபவத்தை உன்னதமாக்குகிறது.

சிறப்பாக அமைந்திருக்கும் இசை உருவாக்க பாடல்களை வீடியோவாக மாற்றும் போது சிதைத்து கொத்து பரோட்டோ போடுவது பொதுவான தமிழ்சினிமா மரபு. ஆனால் இந்தப்பாடலுக்கான குறைந்த பட்ச நியாயத்தை செய்திருக்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.

காந்திமதியுடன் டூயட் பாடினால் கூட அதில் ஒரு ரொமாண்டிக் தன்மையைக் கொண்டு வருவதில் கமல் சமர்த்தர். சலிப்பூட்டும் வழக்கமான இவ்வகைப் பாட்டுக்களில் சிறு சிறு குறும்புகளைச் செய்து அதை அவர் சுவாரசியமாக்க முயல்வதை நாம் கவனித்திருக்க முடியும். இதிலும் அவ்வாறானதொரு தருணம்.

கமலின் டையைக் கட்டிக் கொண்டு ஓர் ஆணின் பாவனையுடன் அமலா புஜத்தை மடக்கிக் காட்டுவதும்  ஆணாதிக்கத்தனத்தோடு (?) கமல் அதன் மேல் முத்தமிடுவதும் அவரின் மொட்டை மண்டையின் மேல் அமலா ஒரு செல்லக் கொட்டு  வைப்பதும்...what a romantic scene. கமல் சித்தப்பா தோற்றத்திலிருந்தாலும் அமலாவின் கண்களில் பொங்கி வழியும் அந்தக் காதலும் காமமும்... பாவனைதான் என்றாலும் நான் ஒரு மலையாளியாக பிறக்கவில்லையே என்று ஏங்க வைக்கும் தருணங்களில் இதுவுமொன்று. (இந்தப்படத்தில் அமலா மலையாளப் பெண்ணாக நடித்திருப்பார்).

இதோ.. இன்று காலையிலிருந்து நாற்பத்தெட்டாவது முறையாக இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். சென்னையின் மழைக்காலம் இந்த அனுபவத்தை இன்னும் சுவாரசியமாக்குகிறது.

இறந்து போவதற்கு மிக உன்னதமான தருணமிது.


suresh kannan

Monday, June 07, 2010

சினிமா பற்றினதொரு சிறந்த வலைப்பக்கம்

இணையத்தில் சினிமா பற்றி பல வலைப்பதிவுகள் எழுதப்பட்டுக் கொண்டிருந்தாலும் அந்த ஊடகத்தை  மிக நெருக்கமாவும் நுணுக்கமாகவும் அணுகுவது சில வலைப்பக்கங்களே. அவ்வாறாக எழுதப்படும் ஒரு தளத்தை சமீபத்தில் அறிந்து கொண்டது குறித்து மிக்க மகிழ்ச்சி. அதை உங்களுக்கு அறிமுகப்படுத்தவும் விருப்பம்



திரைப்பட இயக்குநர் சார்லஸின் வலைப்பக்கம்தான் அது. அவர் தற்போது 'நஞ்சுபுரம்' என்கிறதொரு திரைப்படத்தை இயக்கி வருவதாக தெரிகிறது. மாத்திரமல்லாமல் பல்வேறு உலக திரைப்படங்களின் உருவாக்கங்களைப் பற்றியும் இயக்குநர்களையும் பற்றி எழுதப்பட்டிருக்கும் பதிவுகள் சுவாரசியமாகவும் உபயோகமாகவும் இருக்கின்றன. ஹிட்ச்காக் பற்றி எழுதப்பட்டிருந்த பதிவு என்னை மிகவும் கவர்ந்தது.

“கதாசிரியரும் நானும் சேர்ந்து திரைக்கதையின் மிகச் சிறிய விவரங்கள் உட்பட எல்லாவற்றையும் திட்டமிட்டுவிடுவோம், அதன்பிறகு மிச்சமிருப்பது படம்பிடிக்க வேண்டியது மட்டும்தான். உண்மையில் ஒருவர் படப்பிடிப்பு தளத்துக்குள் நுழையும்போதுதான் சமரசத்துக்குள் நுழைகிறார். நிஜமாகவே ஒரு கதாபாத்திர வார்ப்பை (casting) நாவலாசிரியர் மட்டுமே முழுமையாகச் செய்யமுடியும் ஏனெனில் அவருக்கு நடிகர்களையும் மற்றவைகளையும் சமாளிக்கவேண்டிய அவசியமில்லை.”

“என்னை ஒரு வகைப்படுத்தப்பட்ட இயக்குனராக ஆக்கிவிட்டார்கள். நான் ‘சிண்ட்ரல்லா’ கதையை எடுத்தால் கூட, ரசிகர்கள் உடனே, அந்தக் கூண்டு வண்டிக்குள் ஏதேனும் பிணம் இருக்கிறதா என்றுதான் தேடுவார்கள்”
போன்ற மேற்கோள்கள் சிறப்பு. ராம்கோபால் வர்மாவின் இந்த நேர்காணல், நாம் அறிந்து கொள்ள முடியாத சினிமா வணிகத்தைப் பற்றின நுணுக்கத்தைப் பற்றின கோட்டுச் சித்திரத்தை தெளிவாக விளக்குகிறது.



LONG TAKE  என்கிற ஒளிப்பதிவு தொடர்பான நுட்பத்தைப் பற்றி அவர் எழுதி வரும் தொடரை வாசித்த போது 'சத்யஜித்ரே'வின் 'சாருலதா'வில் வரும் அந்த ஊஞ்சல் ஷாட்டைப் பற்றி என் மனதில் நீண்ட நாட்களாக உறைந்து கிடந்த சந்தேகத்தை முன் வைக்க வேண்டுமென்று  தோன்றியது. வைத்தேன்.

அந்த ஷாட் உருவாக்கத்தைப் பற்றின பல்வேறு சாத்தியக் கூறுகளை அவர் சுவாரசியமாக விளக்கியிருக்கிறார். அவருக்கு என் நன்றி.

நீங்களும் அதை வாசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். சார்லஸ் அவர்கள் இன்னும் பல உபயோகமான இடுகைகளை இட வேண்டுமென்கிற என் விருப்பத்தையும் இதன் மூலம் அவர் முன் வைக்கிறேன்.

தொடர்புடைய பதிவு: சாரு

suresh kannan

Wednesday, June 02, 2010

சாரு என்கிற சமூக வியாதி (1)


 கருத்து ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட வகையிலோ ஒருவரிடம் என்னதான் பகைமை இருந்தாலும் இப்படியா ஒருவர் தன்னுடைய வன்மத்தை நீர்த்துப் போகாமல் தொடர்ச்சியாக பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும் என்று திகைப்பாக இருக்கிறது.

சாரு தன்னுடைய இணையப்பக்கத்தில் ஜெயமோகன் குறித்து மிகக் குரோதமாக எழுதப்பட்ட ஒரு வலைப்பதிவை தன்னுடைய வாசகர்களுக்கு பரிந்துரை செய்து அகமகிழ்ந்திருக்கிறார். (அந்த வலைப்பக்கத்தில் உள்ள நபரின் புகைப்படமும் சுயக்குறிப்பும் வாசிப்பவரை மிரட்டுவது போலவே அமைந்திருப்பது திட்டமிட்ட ஏற்பாடா என தெரியவில்லை). சாருவிற்கும் ஜெயமோகனிற்கும் இதுவரை நிகழ்ந்திருக்கும் தனிமனித குரோத விளையாட்டுக்கள் நாம் அறிந்ததே. ஒரளவிற்கான நாகரிக எல்லைக்குள் எழுதும் வாழைப்பழ ஊசி நடையில் ஜெமோ விற்பன்னர் என்றால் தன்னை வெள்ளந்தி, அப்பாவி என சந்தர்ப்பத்திற்கேற்றாற் போல் சொல்லிக் கொள்ளும் சாருவின் மொழியோ ஜெமோ என்று வந்துவிட்டால் தனிமனித காழ்ப்புணர்ச்சியும் வன்மமும் நிறைந்ததாக மாறுகிறது. இந்தச் சகதியிலிருந்து தற்சமயம் ஜெமோ ஒதுங்கி நின்றாலும் சாருவின் வன்மம் அடங்குவதாயில்லை.

அவர் தனது வாசகர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் இடுகை, ஜெயமோகனை மாத்திரமல்லாது அவரது குடும்ப உறுப்பினர்களையும் தனிப்பட்ட விஷயங்களையும் கூட குரோதமான மொழியில் தொட்டுச் செல்கிறது. இதைப் பரிந்துரைத்திருப்பவர், தன்னை தமிழில் எழுதும் உலக எழுத்தாளர் எனவும் அதற்கான சர்வதேச அங்கீகாரம் இல்லையே என்று தொடர்ந்து புலம்புபவர். அடக் கஷ்டகாலமே! எழுத்தாளனாகக் கூட வேண்டாம், ஒர் அடிப்படை மனிதனாகக் கூட இல்லாதவரா தமிழ் கலாசாரத்தின், பண்பாட்டின் பிரதிநிதி?

இரண்டு தனிநபர்களுக்குள் (எழுத்தாளர்களுக்குள்) நிகழும் குரோத விளையாட்டில் சம்பந்தமேயில்லாத ஒருபாவமும் அறியாத அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் (குழந்தைகளையும் விட்டு வைக்கில்லை) இழுப்பது எந்தவகையான அறம் என தெரியவில்லை. கருத்து ரீதியாக மோதியும் ஈகோக்களால் சண்டையிட்டும் அரிப்பு தீரவில்லையென்றால் இரண்டு நபர்களும் (எழுத்தாளர்களும்) குத்துச் சண்டையிட்டாவது தங்களின் வெற்றியை நிர்ணியித்துக் கொண்டு தொலையலாம். அதை விட்டு எங்கு அடித்தால் நன்கு வலிக்கும் என்று தெரிந்து கொண்டு  சக எழுத்தாளனின் குழந்தையைக் கூட இடுப்பின் கீழ் தாக்குவது எந்தவகையான போர் நியாயம் என்றும் தெரியவில்லை.

‘ஜெயமோகனின் தனிப்பட்ட விஷயத்தை எழுதிவிட்டீர்கள் என்று சில அசடுகள் கத்தும்’ பொருட்படுத்தாதீர்கள் என்று ‘பெரியாரியவாதியான’ தன்னுடைய வாசகரை முன்யூகமாக ஊக்கப்படுத்துகிறார் சாரு. இதுவல்லவா ஒர் எழுத்தாளனின் தார்மீக கடமை. முன்பொரு முறை பதிவர் சிவராமன் தன்னுடைய பதிவொன்றில் ‘சாரு தன்னுடைய மகளை வன்புணர்ச்சி செய்துவிட்டார்’ என்கிற பாவனையுடன் எழுதிய வாக்கியங்களுக்கே ‘நாசமாப் போயிடுவே’ என்று மண்ணைத் தூற்றி சாபம் விட்டவரும் வழக்கு போடுவேன் என்று மிரட்டியவருமான சாருவும் இந்த வகையில் அசடா அல்லது காரியக்கார அசடா என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

()


என்னுடைய கடந்த பதிவொன்றில்,  ‘சாரு’வை சர்வதேச விருதுடன் சம்பந்தப்படுத்தி எழுதியிருந்த போது 'ஏன் அவ்வாறு செய்தீர்கள்" என சில நண்பர்கள் ஆதங்கப்பட்டிருந்தார்கள். அது ஒருவகையான பகடி என்பதை சில பேர்களாலேயே உணர முடிந்தது. “கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாதவன், வானம் ஏறி வைகுண்டத்துக்கு போறேன்னானாம்’ என்பது ஒரு சொலவடை. அதுபோல் உள்ளூரிலேயே எந்த விருதும் வாங்கத் தகுதியில்லாதவர், வாங்கினால் சர்வதேச விருதைத்தான் வாங்குவேன் என்று சவடால் அடிப்பது அபத்தமான நகைச்சுவை. மேலும் ஒரு காலத்தில் ஏதோ எழுதி இன்று காலி பெருங்காய டப்பாவாக இருக்கும் சாரு, வெளியே மழை பெய்வது தெரியாமலும் மூத்திரத்தை அடக்கிக் கொண்டும்.. அப்படி என்னதான் எழுதி வருகிறார் என்று பார்த்தால் முக்கி முக்கி உயிர்மைக்கு மாதத்திற்கு ஒரு சினிமா கட்டுரையை கடைசி நேரத்தில் எழுதி கொடுக்கிறாராம். இதை விட ஆழமான சினிமா கட்டுரைகளை இன்று வலைப்பதிவர்களே எழுத ஆரம்பித்து விட்டார்கள்.

மற்றபடி மெரினாவிற்கு வாக்கிங் சென்றதையும்.. வஞ்சிரமீன் வாங்கின மொக்கைகளையும் எழுதுவதற்கே இத்தனை பில்டப் கொடுப்பது ஒருபுறமிருக்கட்டும். (இந்த அழகில் ஒரு காவல் அதிகாரி ‘தினமும் எழுதிவில்லையென்றால் முட்டிக்கு முட்டி தட்டுவேன்’ என்றாராம். இதுவும் வழக்கமான கற்பனைக் கடிதங்களில் ஒன்று என்று யூகிக்க முடிந்தாலும் அது நிஜமாகவே இருக்கும் பட்சத்தில் அந்த காவல் அதிகாரி 'இனிமே ஏதாவது எழுதினே, முட்டிக்கு முட்டி தட்டுவேன்' என்றுதான்  சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது).

இப்போது திடீர் பரவசத்தில் கவிதை வேறு எழுதுகிறாராம். என்னடா இது தமிழிற்கு வந்த சோதனை? இப்படியே போய்க் கொண்டிருந்தால் சாகித்ய அகாதமி அல்ல,  கண்ணம்மா பேட்டை குடியிருப்போர் (?) நலசங்க விருது கூடக் கிடைக்காது.

சக எழுத்தாளர்களை எப்படி திட்டலாம் என்பதை யோசித்துக் கொண்டிருப்பதை நிறுத்தி விட்டு தன்னுடைய பலமான புனைவிலும் பத்தி கட்டுரைகளிலும் இன்னும் நிறைய புதிய விஷயங்களை சாரு தந்தால் அல்லக்கைகள் அல்லாத உருப்படியான வாசகர்களைப் பெறலாம்.

(தொடரும்)

பிற்சேர்க்கை 1: இந்த இடுகை எழுதப்படும் முன்பு வரை சாருவின் தளத்தில் இருந்த அந்த பரிந்துரைப் பதிவு தற்போது எதனாலோ நீக்கப்பட்டிருக்கிறது. சாரு திருந்தியிருக்கிறாரா அல்லது பதுங்கியிருக்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

பிற்சேர்க்கை 2: சாரு பரிந்துரைத்த வலைப்பக்கத்தின் புரொபைலில் இருந்த புகைப்படமும் மாற்றப்பட்டுள்ளது. (முன்பிருந்த , உடற்பயிற்சி செய்யும் ஒரு திடகாத்திரரின் புகைப்படத்திற்கு பதிலாக (இது சாருவின் பதிவிலும் இருந்தது) சிங்கத்தின் புகைப்படம் தற்சமயம் உள்ளது).

 suresh kannan

Tuesday, June 01, 2010

ஜெயலலிதாவின் திகிலான நேர்காணல்

எச்சரிக்கை:  பழைய (மீள்) பதிவு 

கடந்த வாரம் பி.பி.சி. தொலைக்காட்சியில் தமிழக முதலைமைச்சர் ஜெயலலிதாவின் நேர்காணல் (?!) ஒன்றை காண நேரிட்டது. இந்தியாவின் மோசமான முதல்வர்களில் ஜெ. முதலில் வந்தாலும், மோசமாக பேட்டி கொடுப்பவர் என்கிற சர்வே எடுத்தாலும் இவர்தான் முதலில் வருவார் என்று நினைக்கிறேன். இந்த நிகழ்ச்சியின் தலைப்பான HARD TALK என்பதை ரொம்பவும் கடுமையாகத்தான் பேச வேண்டும் என்று தவறாய் புரிந்து கொண்டிருப்பார் போலிருக்கிறது. கிட்டத்தட்ட படையப்பா படத்தின் நீலாம்பரி கேரக்டரை இன்னொரு முறை பி.பி.சியில் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. கேமராக்காரர் வேறு டைட் க்ளோசப்பில் கேமரா கோணத்தை வைத்து ஜெ. நறநறவென்று பல்லைக் கடிக்க நினைத்தாலும் தெளிவாக தொ¢யுமாறு  வைத்திருந்தார்.

இரண்டு முறையும் ஆரம்ப காட்சிகளை தவறவிட்டேன் என்றாலும் கரண் தாப்பருடன் கைகுலுக்க மறுத்துவிட்ட அந்த கண்ணியமான கிளைமாக்சை கண்டு ரசிக்க முடிந்தது.

பழைய தமிழ்ச் சினிமாப் படங்களில் இந்த மாதிரியான காட்சிகளை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். நாயகி தமிழ்ப் பண்பாட்டில் ஊறித்திளைத்தவள், கற்புமிக்கவள் என்பதற்கு இந்த காட்சிகளை உதாரணமாய் காட்டுவர். வெளிநாட்டில் இருந்து வந்த வில்லனோ, கதாநாயகனோ மேனாட்டு பாணியில் பேசிவிட்டு கைகுலுக்கப் போக, இந்த கலாசாரத்தின் அடையாளப் பெண்ணோ, அதை மறுத்து கை கூப்பி விடைகொடுப்பாள். ஜெ.வுக்கு இந்த பழைய சினிமா ஞாபகம் வந்து இந்த மாதிரி செய்தாரா என்று தெரியவில்லை.





ஜெ.வின் மிரட்டலான பார்வையை சட்டை செய்யாமல் கரண் தாப்பரும் அதற்கிணையான பார்வையில் கேள்விகளை அடுக்க, இவ்ளோ தில்லா ஒரு ஆளா என்று பிரமிக்க நோ¢ட்டது. அவருக்கு நம் ஊரின் ஆட்டோ அடியாட்களைப் பற்றியும், அதிமுக மகரணியின், பார்க்க கண்கோடி வேண்டிய கலைநிகழ்ச்சிகளைப் பற்றியும்  தெரியுமா என்று தெரியவில்லை.

ஓரு நிலையில், எங்கே முதல்வன் திரைப்படம் போல், 'நீ ஒரு நாள் முதல்வராக இருந்து பாரேன். அப்போ இந்த முள் கீரிடம் உனக்கு புரியும்' என்று ஜெ. கேட்டுவிடுவாரோ என்று எனக்கு பயமாக இருந்தது. அதே சமயம் நல்ல முதல்வராக தமிழ்நாட்டுக்கு கிடைக்கக் கூடாதா என்று ஏங்குகிற நம் நப்பாசையும் நனவாகுமோ என்று சந்தோஷமாக இருந்தது. இருந்தாலும் நம் ஆட்கள் உஷாராக அரசாங்க விடுமுறை நாளைத்தான் முதல்ராக இருக்க வேண்டிய நாளை கொடுப்பார்கள் என்றும் தோன்றியது.

ஏதோ ஒரு பதிலிற்கு குறிப்புகளை பார்த்து படித்த ஜெ.வை கரண் ஆட்சேபிக்க, 'நான் உங்கள் கண்கள் பார்த்துத்தான் பேசுகிறேன்' என்று ஆக்ரோஷித்த ஜெ, இன்னொரு முறை கரண் ஏதோவொரு குறிப்பை பார்த்து கேள்வி கேடக, 'நீங்கள் (நீ - ?!) மட்டும் குறிப்புகளை பார்த்து கேள்வி கேட்கலாமா என்று கேள்வி கேட்டு என்ன கிள்ளினியா, உன்னையும் நான் கிள்ளுவேன் என்கிற மாதிரி பழி தீர்த்துக் கொண்டார். ஒரு பள்ளிக்கூடச் சிறுமியின் மனப்பான்மை உள்ள ஒருவரா நமக்கு முதல்வர் என்று நமக்குத்தான் திகிலாக இருந்தது.

2006-ல் ஆட்சிக்கு வர முடியும் என்று நம்பிக்கை இருக்கிறதா என்ற கேள்விக்கு, பொதுமக்கள் என்று சிலபேர் இருக்கிறார்கள், அவர்கள் தேர்தலில் ஒட்டுப் போட்டால்தான் தான் ஆட்சிக்கு வர முடியும் என்ற நினைப்பில் இல்லாதவர் போல், என்னமோ நீலாங்கரையில் அடுத்த வருடத்திற்குள் வீடு வாங்கி விடுவேன் என்பவர் போல் 'பொறுத்திருந்து பாருங்கள்.' என்று அழுத்தமான குரலில் சொன்னதைப் பார்த்தவுடன் தேர்தலின் போது 'எனக்கு எதிராக ஒட்டளிப்பவர்கள் உயிரோடு இருக்கமாட்டார்கள்' என்று நமக்கு மிரட்டல் அறிக்கை கொடுப்பாரோ என்று பயமாக இருந்தது.

மறந்தும் எம்.ஜி.ஆரைப்பற்றி பேசாதவர், தான் அரசியலில் சுயமுயற்சியில்தான் வெற்றி பெற்றதாக கூறினார். ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்தால்தான் குழந்தை பிறக்கும் என்கிற அடிப்படை அறிவியல் உண்மை நல்லவேளையாக எல்லோருக்கும் தெரிந்திருந்தது. இல்லையென்றால் தான் வானத்திலிருந்து நேரடியாக பூமிக்கு குதித்திருப்பேன் என்று கூட சொல்லியிருப்பாரோ என்று தோன்றியது.

தான் மூடநம்பிக்கை இல்லாதவர் என்றும் திராவிட இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான அண்ணாவே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லியிருப்பதாக கூறியவர், 'அப்போது ஏன் ஒரு கோயில் விடாமல் எல்லா தெய்வங்களின் பின்னாலும் சுற்றுகிறீர்கள்?' என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தால், தான் தானமாக கொடுத்த யானையை விட்டு கரணின் தலையை மிதிக்க சொல்லியிருப்பாரோ என்றும் தோன்றியது.

பேட்டி எடுப்பது மாதிரி பேட்டி கொடுப்பதும் ஒரு கலை. இந்த கலை ஜெ.வுக்கு சுத்தமாக தெரியாது என்று தோன்றுகிறது. ஒரு சன் டி.வியில் ரபி பெர்னார்ட் வைரமுத்துவை, "ரஜினியை ஏதோ ஒரு நாட்டின் பேரரசர் போல் புகழ்ந்து எழுதுகிறீர்களே?" என்று காய்ச்சி எடுக்கிற கேள்வியை கேட்டார்.

வைரமுத்து கண்களை உருட்டி பார்க்கவில்லை. பற்களை நறநறவென்று கடிக்க வில்லை. சிரித்துக் கொண்டே "நீங்கள் எந்தக் கல்லூரியில் படித்தீர்கள்? இந்த இளவயதில் இவ்வளவு புத்தியா?" என்கிற மாதிரி பேட்டி எடுத்தவருக்கே ஒரு ஜஸ்பாரை போட்டு அந்தக் கேள்வியை சாமர்த்தியமாக திசைதிருப்பி விட்டார்.

மொத்தத்தில் இந்த பி.பி.சி பேட்டி திகிலுடன் கூடிய காமெடிப் படத்தை பார்த்தது போலிருந்தது.

நேர்காணலை அசு்சு வடிவில் வாசிக்க

suresh kannan