Tuesday, March 17, 2015

ஆஸ்கர் - நிறைவேறாத இந்தியக் கனவு





87வது வருட ஆஸ்கர் விருதின் முடிவுகள், உயிர்மையின் இந்த இதழ் வெளியாவதற்குள், அதாவது 23.02.2015 அன்றே அறிவிக்கப்பட்டிருக்கும் என்பதால் அவற்றைப் பற்றிய யூகங்களின் நிச்சயமின்மைகளோடு, விருதிற்காக பல்வேறு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்த, பொதுவாக விமர்சகர்களால் அதிகமாக உரையாடப்படாத திரைப்படங்களைப் பற்றிய ஒரு சிறிய அறிமுகத்தினை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ‘புளிக்கும் பழம்’ என்கிற நரிக்கதை போல ‘அமெரிக்கத் தரம்’ என ஆஸ்கர் விருதை வேறு வழியில்லாமல் தமிழ்திரை சூழலில் கமல்ஹாசன் உள்ளிட்ட சிலர் புறக்கணிப்பது போல் பாவனை செய்தாலும் உலகம் முழுவதிலும் அதிகம் கவனிக்கப்படும் திரைப்பட விருது என்பதின் அடிப்படையில் இதன் முக்கியத்துவம் அமைகிறது.

அமெரிக்கத் திரைப்படங்கள்தான் இந்த விருதுகளில் பிரதானமாக கலந்து கொள்ள முடியும் என்கிறதொரு மாயை உலவுகிறது. அப்படியல்ல.  ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்’ என்கிற பிரிவில் உலகின் அனைத்து நாடுகளும் தங்களின் சிறந்த படைப்புகளில் ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தலாம் என்பது தவிர, 40 நிமிடங்களுக்கு மேல் நீளமுள்ளதாக இருக்க வேண்டும், (குறும்பட பிரிவு வேறு) லாஸ்ஏஞ்செல்ஸ் நகரில் குறிப்பிட்ட காலத்திற்கு திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்பது போன்றவை உள்ளிட்டவை தவிர சில தொழில்நுட்ப விதிகளுக்கும் இணங்க உருவாக்கப்படும் எந்தவொரு திரைப்படமும் இந்த விருதுப் போட்டியில் பங்கேற்க முடியும். அகாதமியில் உறுப்பினர்களாக உள்ள 6000 நபர்கள் இறுதி தேர்வினை முடிவு செய்வார்கள்.

இந்த வருட விருதுகளில் BIRDMAN, THE GRAND BUDAPEST HOTEL ஆகிய இரண்டு திரைப்படங்களும் அதிகபட்சமாக தலா 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. மிகவும் கறாரான கட்டுப்பாடுகளுடன் கூடிய விதிகளுடன், அறிவிக்கப்படும்  வரை ரகசியம் காக்கப்படும் விருதாக ஆஸ்கர் அறியப்பட்டாலும் எல்லா விருதுகளையும் போலவே இதிலும் சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. கடந்த வருட விருதுகளில் ‘The Wolf of Wall Street’ திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட, அதுவரை அகாதமி விருதே பெற்றிராத நடிகரான லியோனார்டோ டிகாப்ரியோ அந்த வருடமும் விருதைப் பெற முடியாமல் போன போது ‘F**k the Oscars’ என்று தனது எரிச்சலை டிவிட்டரில் வெளிப்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தினார். அமெரிக்கப் பெருமையை பறைசாற்றும், அதன் இறையாண்மைக்கு சார்பாக இயங்கும் திரைப்படங்களுக்கு நிச்சயம் விருது உண்டு என்பது திரை ஆர்வலர்கள் நமட்டுச் சிரிப்புடன் சொல்லும் ஒரு பொதுவான குற்றச்சாட்டு.

இந்த வருடத்திற்காக ‘சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்தின்’ பிரிவில் இந்தியாவின் சார்பில் நடிகை கீது மோகன்தாஸ் இயக்கிய ‘லயர்ஸ் டைஸ்’ அனுப்பப்பட்டிருந்தாலும் இறுதிப்பட்டியலில் இடம்பிடிக்க முடியவில்லை.



BOYHOOD – Richard Linklater

ஒரு திரைப்படத்தை எத்தனை அர்ப்பணிப்புடனும் தொலைநோக்கு திட்டத்துடனும் உருவாக்க முடியும் என்பதற்கான அரிய உதாரணம் இந்த திரைப்படம்.

ஆறு வயது சிறுவனின் வளர்ச்சி நிலையோடு துவங்கும் இத்திரைப்படம் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு அவனையும் அவனது குடும்ப உறுப்பினர்களையும்  அந்தக் குடும்பத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அதன் தொடர்ச்சியான காலகட்டத்தோடு பதிவு செய்திருக்கிறது. இதற்காக அந்தச்சிறுவன் முதற்கொண்டு பிரதான நடிகர்கள் அனைவருமே 12 வருடங்களின் வெவ்வேறு காலகட்டங்களில் நடித்திருக்கிறார்கள். துணிச்சலான முயற்சி. இடைக்காலத்தில் இதில் ஏதாவது இடையூறு ஏற்பட்டிருந்தால் படத்தின் தொடர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும்.  இதே போன்று நீண்ட வருடங்களுக்கு திட்டமிடப்பட்ட ஒரு டிரையாலஜி திரைப்படங்களையும் இதற்கு முன்பு இயக்குநர்  ரிச்சர்ட் லிங்க்லேட்டர் உருவாக்கியிருக்கிறார்.

இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமல்லாது திரைப்படத்தின் உள்ளடக்கத்திற்காகவும் இத்திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது. குடும்பம் என்கிற அமைப்பு, அதில் ஏற்படும் சிக்கல்கள், சச்சரவுகள், பிரிவுகள், அவை இளைய மனதுகளில் ஏற்படும் உளவியல் பாதிப்புகள் என்று ஒரு சராசரி மேற்குலக குடும்பத்தின்  சித்திரத்தை இத்திரைப்படம் உன்னதமாக பதிவாக்கியிருக்கிறது.  விடலைச் சிறுவன் நிலையிலிருந்து கனிந்து முதிர்ச்சியுற்று இளைஞனின் உலகில் காலடி எடுத்து வைக்கும் பாத்திரத்தில் Ellar Coltrane அற்புதமாக நடித்துள்ளார். சிறந்த திரைப்படம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் பரிந்துரைப் பட்டியலில் இருக்கிறது.


WHIPLASH  - Damien Chazelle

J. K. Simmons –ன் அற்புதமான நடிப்பிற்காகவே இத்திரைப்படத்தை நிச்சயம் பார்க்க வேண்டும். குரு – சிஷ்ய உறவு முறையில் அதன் உன்னதம், முரண், துரோகம், பணிவு என பல கோணங்களில் பல திரைப்படங்கள் இதுவரை உருவாகியுள்ளன. ஆனால் இத்திரைப்படம் வேறு வகை.

தன்னிடம் இசை கற்கும் மாணவர்கள், கலையை அதன் அடிப்படை திறமையோடு மாத்திரம் கற்றுக் கொள்ளாமல் அதன் அதிஉச்சப் புள்ளியை அடைந்தே ஆக வேண்டும் என்கிற கறாரான எதிர்பார்ப்போடு தமது மாணவர்களை மிக கடுமையாக வேலை வாங்கும் இசை நடத்துனர் ப்ளெச்சராக,  சிம்மன்ஸ் நடித்திருக்கிறார். இதற்காக அதீதமாக உணர்ச்சிவசப்படுபவராகவும் ஆபாச வசைகளை இறைப்பவராகவும் தமது மாணவர்களின் முன்னால் ஒரு மூர்க்கமான மிருகத்தைப் போலவே நடந்து கொள்கிறார் இந்த ஆசிரியர்.

இவரிடம் ஜாஸ் இசை பயில விரும்பும் ஆண்ட்ரூ என்கிற மாணவனுக்கு டிரம்ஸ் வாசிப்பதில் பிரபல அமெரிக்க இசைக்கலைஞர் Buddy Rich போன்று பாண்டித்தியம் உள்ளவனாக வரவேண்டுமென்கிற பெரிய விருப்பமிருக்கிறது. அதற்காக கடுமையாக உழைக்கிறான். ஆனால் எத்தனை கடுமையாக உழைத்தாலும் இசை நடத்துனரிடமிருந்து ஒரு நல்ல பாராட்டைக் கூட பெற முடிவதில்லை. மாறாக வசைகளும், அவமதிப்புகளே கிடைக்கின்றன. ஒரு கட்டத்தில் தனது கடும் உழைப்பு தொடர்ந்து  உதாசீனப்படுத்துவதை கண்டு சகிக்க முடியாமல் ஒரு சிக்கலான சந்தர்ப்பத்தில் ஆசிரியரை தாக்கி விடுகிறான் ஆண்ட்ரூ. அதன் பின்னர் இன்னமும் மேலதிக உழைப்பின்  மூலம் நிகழும் ஆவேசமானதொரு இசை நிகழ்ச்சியில் தன்னுடைய ஆசிரியரின் அங்கீகாரத்தைப் பெறும் ஓர் அதியுச்ச தருணத்துடன் இத்திரைப்படம் முடிகிறது. அதுவரை பூடகமானதொரு துரோகியாக சித்தரிக்கப்படும் ஆசிரியரின் பாத்திரம்  அப்படியல்லாமல் கலைத்தூய்மையின் வெறி கொண்டிருக்கும் ஓர் அதிசய கலைஞனின் பிம்பமாக நம்முள் உறையும் அற்புதத்துடன் படம்  நிறைகிறது. சிறந்த திரைப்படம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் பரிந்துரைப் பட்டியலில் இருந்தது. Best Supporting Actor பிரிவில் J. K. Simmons பெயர் இருக்கிறது. விருது பெறுவார் என நம்புவோம்.


TWO DAYS, ONE NIGHT  - Dardenne brothers

பிரெஞ்சு திரைப்படம்.

தனது அபாரமான நடிப்பிற்காக Marion Cotillard 'சிறந்த நடிகை' க்கான பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.  நிச்சயம் விருதை வெல்வார் என நம்பலாம். குடும்பம் என்கிற அமைப்பினுள் சிக்கிக் கொண்டிருக்கும் தனிநபர்கள் தங்களின் இருத்தலை தக்கவைத்துக் கொள்ள எவ்வித கடுமையான போராட்டங்களை நிகழ்த்த வேண்டியிருக்கிறது என்பதை உருக்கமாக விவரிக்கும் திரைப்படம் இது.

தனது பணியை இழக்கும் அதிர்ச்சியான செய்தியுடன் சாண்ட்ராவிற்கு அன்றைய பொழுது விடிகிறது. அவளது உடல்நலக்குறைவு காரணமாக பணியிலிருந்து நிறுத்துகிறது நிர்வாகம். பணியாளர்களுக்கிடையே நிகழும் ஓட்டெடுப்பின் மூலம் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. நீக்கப்படும் சாண்ட்ராவின் பணியை மற்ற பணியாளர்கள் சற்று கூடுதல் நேரத்துடன் உழைப்பதின் மூலம் ஈடுகட்ட முடியும். இதற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ஈரோக்கள் போனஸாக தரப்படும் என்கிறது நிர்வாகம்.

நிறுவனத்திலுள்ள ஒருவரின் மிரட்டல் காரணமாக பணியாளர்கள் தமக்கு எதிராக வாக்களித்திருக்கலாம் என்பதால் மறுவாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று நிர்வாகத்தை வலியுறுத்துகிறார் சாண்ட்ரா. வாரஇறுதி நாளன்று முன்வைக்கப்படும் இந்த வேண்டுகோளை நிர்வாகம் ஒப்புக் கொள்கிறது. திங்கட்கிழமை வாக்கெடுப்பு. இடையில் இரண்டு நாட்கள். அதற்குள் தன்னுடைய 16 சக பணியாளர்களை தமக்கு ஆதரவாக வாக்களிக்கும் படி ஒப்புக் கொள்ளச் செய்ய வேண்டும். ஆனால் இதில் என்னவொரு பிரச்சினை என்றால் சாண்ட்ராவிற்கு ஆதரவாக வாக்களிக்கும் பணியாளர் தனது போனஸ் பணத்தை இழப்பார்.

இந்த இரண்டு நாட்களில் தனது சக பணியாளர்களை சாண்ட்ரா தன்னுடைய உருக்கமான வேண்டுகோளுடன் சந்திக்கச் செல்லும் சம்பவங்களே இத்திரைப்படத்தின் பயணம். பெரும்பாலான பணியாளர்களுக்கு சாண்ட்ராவிற்கு உதவும் உள்ளம் இருந்தாலும் தனது போனஸ் பணத்தை இழந்து விடுவோமே என்பதே பிரதானமாக தோன்றுகிறது. நண்பர்களாக அறியப்பட்டிருந்தாலும் நிதிச்சுமை காரணமாக அவர்களின் வேறு நிஜ முகங்களை சாண்ட்ரா எதிர்கொள்ள நேர்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினைகள். இதை சாண்ட்ராவாலும் உணர முடிகிறது. தனது பதட்டத்தை தணித்துக் கொள்வதற்காக அவ்வப்போது மருந்து எடுத்துக் கொள்பவராகவும், தன்னுடைய பணியை காப்பாற்றிக் கொள்ள இப்படி ஒவ்வொருவரையும் சிரமப்படுத்தி அவர்கள் முன் கூனிக்குறுகி நின்று வேண்டுகோள் வைக்க வேண்டியிருக்கிறதே என்கிற அவமான உணர்வுகளையும் சாண்ட்ராவாக நடித்திருக்கும் மரியோன் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். உலகமெங்கும் தாராளமயமாக்கம் விரிவடைந்துக் கொண்டிருக்கிற போதிலும் 'பைசைக்கிள் தீவ்ஸ்' திரைப்பட காலக்கட்டத்தைப் போலவே பணியிழப்பு என்பது ஒரு தனிநபருக்கு இன்றும் எத்தனை அச்சத்தையும் பாதுகாப்பற்ற உணர்வையும் தருகிறது என்பதை உணர்த்துகிறது இத்திரைப்படம்.


THE IMITATION GAME - Morten Tyldum

இன்று உலகம் முழுக்க பரவலாக உபயோகப்படுத்தப்படும் முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்புகளுள் ஒன்றான கணினியின் துவக்க நிலை உருவாக்கத்திற்கு காரணகர்த்தாவாக அறியப்படும் Alan Turing -ன் வாழ்க்கைச் சம்பவங்களையொட்டி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. கணிதவியலாளர், தர்க்கவியலாளர், சங்கேத மொழி பகுப்பாய்வாளர் ஆகிய துறைகளில் மேதைமைத்தன்மையைக் கொண்டிருந்தவர் ஆலன்.

இரண்டாம் உலகப் போர் நிகழும் சமயத்தில் 1939-ல்  பிரிட்டனுக்கும் ஜெர்மனிக்கும் போர் மூள்கிறது.  ஜெர்மன் பொறியாளரான Arthur Scherbius கண்டுபிடித்திருக்கும் எனிக்மா என்கிற இயந்திரத்தின் மூலம் தனது படை வீரர்களுக்கான செய்திகளையும் ஆணைகளையும் சங்கேத முறையில் பரிமாறிக் கொள்கிறது ஜெர்மனி. இந்த சங்கேத செய்திகளை உடைத்து இடைநுழைந்து அறிந்து கொண்டால் அந்தப் போரில் வெல்வதும் தனது வீரர்களின் உயிரிழப்புகளை தவிர்ப்பதும் பிரிட்டனுக்கு எளிதாக இருக்கும். ஆனால் அந்த இயந்திரத்தின் இயங்குமுறையையும் செய்திகளின் பூடகத்தையும் உடைத்து அறிவதென்பது அத்தனை எளிதான செயல் அல்ல. அத்தனை கச்சிதமான இறுக்கத்துடன் அதனை உருவாக்கியிருக்கிறது ஜெர்மனி.

பிரிட்டனைச் சார்ந்த ஆலன் இதனை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு அந்தப் பணிக்காக பிரிட்டன் ராணுவ அலுவலகத்திற்கு செல்கிறார். ஆனால் அவரது முயற்சி ஊக்குவிக்கப்படுவதில்லை. எனவே சர்ச்சிலுக்கே கடிதமொன்றை எழுதி தனது பணியை உறுதிப்படுத்திக் கொள்கிறார். அவருடன் பணிபுரியும் சக நுட்பர்களும் அவருக்கு உறுதுணையாக இருப்பதில்லை. எனவே குறுக்கெழுத்தில் சிறந்தவராக இருக்கும் ஒரு பெண்ணின் துணையுடன் தனது கண்டுபிடிப்பை தொடர்கிறார். மிகுந்த நிதிச் செலவைக் கோரும் இந்தப் பணியை  குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காவிட்டால் நிறுத்தி விடப்போவதாக மிரட்டுகிறார் ராணுவ அதிகாரி. சிக்கலான இந்த தருணத்தை ஆலன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை மீதமுள்ள சம்பவங்கள் விவரிக்கின்றன.

சமூகத்தின் ஆதார நலன்களுக்காக தொலைநோக்குச் சிந்தனைகளுடன் இயங்கும் விஞ்ஞானிகளை, அவர்களின் சமகால சமூகம் எத்தனை உதாசீனப்படுத்துகிறது என்கிற கசப்பான நிரந்தர உண்மையை இத்திரைப்படம் முன்வைக்கிறது. ஆலன் ஓரினச் சேர்க்கை பழக்கம் உள்ளவர் என்பது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு, அது பிரிட்டனில் சட்டவிரோதமானது என்பதால் கைது செய்யப்படுகிறார். பிறகு அரசு முன்வைக்கும் வலுக்கட்டாயமான தீர்வின் படி ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் ஆலன் தன்னுடைய 41 வயதில் தற்கொலை செய்து கொள்கிறார். மனித உரிமையை மீறும் இந்த பிரிட்டிஷ் சட்டத்தால் 1885-க்கும் 1967-க்கும் இடையே சுமார் 49000 ஓரினச் சேர்க்கை பழக்கம் உள்ள ஆண்கள் தண்டிக்கப்பட்டதாக படத்தின் இறுதிக்குறிப்புகளுள் ஒன்று தெரிவிக்கிறது.

ஆலன் டர்னிங்  பாத்திரத்தில் Benedict Cumberbatch மிகச் சிறப்பாக நடித்துள்ளார்.  இளமையில் இறந்து போன தன் இளம்பருவத்து நண்பனின் நினைவாக எழும் பாலியல் உணர்விற்கும் தன்னுடைய ஆராய்ச்சியில் உதவிகரமாக இருந்து தன்னைக் காதலிக்கும் பெண்ணிற்குமான உணர்விற்கும் இடையில் இவர் தத்தளிக்கும் காட்சிகள் நெகிழ்வை ஏற்படுத்துகின்றன. படத்தின் நாயகனாக சித்தரிக்கப்படும் இவருடைய நோக்கில் எனிக்மா இயந்திரத்தின் ரகசியத்தை நிறைய மெனக்கெடல்களுக்குப் பிறகுதான் இவரால் அறிய முடிகிறது எனும் போது இதை உருவாக்கிய ஜெர்மானிய அறிஞர், இதனினும் உயர்நாயகனாக, திறமைசாலியாக இருப்பார் அல்லவா என்று தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை.


NIGHTCRAWLER - Dan Gilroy


சில திரைப்படங்களில் திரைக்கதையாசிரியராக பணியாற்றிய Dan இயக்குநராக அறிமுகமாகிய திரைப்படம் இது. இதன் அபாரமான திரைக்கதைக்காக 'Best Original Screenplay' பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

செய்தி ஊடகங்கள் அதன் தீராத பசிக்காக அவை தேடியடையும் செய்திகளின் பின்னேயுள்ள துயரங்களைப் பற்றிய கருணை ஏதுமின்றி அவற்றை தங்களின் வணிக ஆதாயத்திற்காகவும், யார் முதலில் செய்தியை தருவது என்கிற போட்டியில் உள்ள நாய் சண்டை தன்மையையும் பற்றி இத்திரைப்படம் உரையாடுகிறது. வணிகப் போட்டியில் உயரவும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ளவும் ஒரு அமைப்பில் உள்ள தனிநபர்கள் எவ்வாறு சுயநலமிகளாக மாறிக் கொண்டே போகின்றனர் என்பதையும் இத்திரைப்படம் நமக்கு உணர்த்துகிறது.

சில்லறைத் திருடனாக இருக்கும் லூயிஸ், சாலையில் நிகழும் விபத்தை ஒருவன் வீடியோவில் பதிவு செய்வதை கவனிக்கிறான். இவ்வாறான செய்திகளை சம்பவ இடத்தில் உடனுக்குடன் பதிவு செய்து  செய்தி நிறுவனங்களுக்கு விற்று பணமாக்க முடியும் என்பதை அதன் மூலம் கண்டுகொள்கிறான். ஒரு செய்தியின் பின்னுள்ள வன்முறை, பரபரப்பு ஆகியவற்றைப் பொறுத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதிக ரத்தம் வழியும் செய்தி என்றால் அதிகப் பணம். செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் இவனைப் பாராட்டி ஊக்கப்படுத்துகிறாள். எதையும் உடனடியாக கிரகித்துக் கொள்ளும் லூயிஸ் இந்த தொழிலின் குறுக்கு வழிகளை எளிதில் கற்று இந்த வணிகத்தில் மெல்ல மெல்ல முன்னேறுகிறான்.

தான் விற்கும் காட்சித் துணுக்குகளினால்தான் அந்த செய்தி நிறுவனத்தின் ரேட்டிங் உயர்கிறது என்பதை உணரும் லூயிஸ்,  தான் பதிவு செய்யும் ஒரு முக்கியமான படுகொலைக் காட்சிகளை அதிக விலைக்கு பேரம் பேசுகிறான். ஒரு நிலையில் தன்னுடைய சக போட்டியாளன், மற்றும் தன்னுடைய உதவியாளன் ஆகியோர் விபத்தில் சிக்கி மரணமடையும் தருணங்களைக் கூட சற்றும் மனச்சாட்சியின்றி பதிவு செய்யுமளவிற்கு அவனுடைய குரூரத்தனம் உயர்ந்து கொண்டே போகிறது.

அவனே இம்மாதிரியான ஒரு விபத்தில் இறந்து போகும் இறுதி முடிவுடன் ஒரு நீதிக்கதையாக இத்திரைப்படம் முடியும் என்று நாம் எதிர்பார்த்தால் அது தவறு. தானே சுயமாக ஒரு செய்தி நிறுவனக்குழுவை அவன் வெற்றிகரமாகத் துவங்குவதுடன் படம் நிறைகிறது. நாம் அன்றாடம் பார்க்கும் செய்திகளின் பின்னே இத்தனை போட்டி நிறைந்த குரூர உலகம் இயங்குகிறது என்பதையும் வன்முறையும் தீமையும் சார்ந்த செய்திகளையே மிகைப்படுத்தி பரபரப்பாக்குவதன் மூலம் செய்தி நிறுவனங்கள் இயங்கும்  பின்னணியிலுள்ள ஊடக அதர்மத்தையும் இத்திரைப்படம் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துகிறது. லூயிஸாக Jake Gyllenhaal மிக அருமையாக நடித்திருந்தார். அசல் திரைக்கதைக்கான பிரிவில் இத்திரைப்படம் விருது வெல்லக்கூடும்.


WILD TALES - Damián Szifrón


ஸ்பானிய திரைப்படம். பிரபல ஸ்பானிய திரைப்பட இயக்குநர் பெட்ரோ அல்மோடோவர் இதன் தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதிலிருந்து இத்திரைப்படத்தின் சிறப்பை உணர முடியும். இருண்மை நகைச்சுவை அடங்கிய ஆறு குறும்படங்களின் இணைப்புதான் இத்திரைப்படம். வன்முறையும் பழிவாங்குதலும்தான் இந்த குறும்படங்களின் மையம்.

பேருந்தில் வேண்டுமென்றே சில்லறை தராத நடத்துநர் மீது கொள்கிற சிறுகோபம் முதல் அதிகாரத்தின் பல்வேறு உதிரி பாகங்களின் மூலம் தொடர்ந்து அலைக்கழிக்கப்படுகிற ஒரு தனி நபர் அந்த அமைப்பு மீது கொள்கிற பெருங்கோபம் வரை நம்முள் எத்தனையோ சமயங்களில் பழிவாங்கும் உணர்ச்சி அதற்குரிய வன்முறையுணர்வுடன் பல சமயங்களில் தோன்றுகிறது. ஆனால் கையாலாகாத கோழைத்தனத்துடன் அந்த வன்முறைச் சம்பவங்களை மனதால் நிகழ்த்திவிட்டு மெளனமாக நகர்ந்து செல்கிறோம். ஆனால் அவைகளை நாம் உண்மையிலேயே செயலாக்கினால் என்ன நிகழும்? கேட்பதற்கு சற்று நெருடலாக இருக்கிறதல்லவா? ஆனால் இந்த உணர்வுகள் அடங்கிய பாத்திரங்களின் சம்பவங்களையும் எதிர்வினைகளையும் இத்திரைப்படத்தில் சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படமும் ஒவ்வொரு வகை. El más fuerte  (The strongest) என்கிற மூன்றாவது குறும்படம்தான் இருப்பதிலேயே ரொம்பவும் ரகளையானது. இதை யோசித்து திரைக்கதையாக எழுதி விடுவது கூட ஒரளவிற்கு சாத்தியம். ஆனால் காட்சியாக எடுக்கும் விதத்தில் அப்படி அசத்தியிருக்கிறார்கள்.

'சிறந்த வெளிநாட்டு திரைப்படத்தின்' பிரிவில் நாமினேஷன் பட்டியலில் இருக்கிறது.

***

இவை தவிர AMERICAN SNIPER, INTERSTELLAR, THE THEORY OF EVERYTHING, SELMA, FOXCATCHER, MR. TURNER, IDA, LEVIATHAN ஆகிய திரைப்படங்களும் விருதுகளை கைப்பற்றுவதில் முன்னிலை வகிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற அயல் சினிமாக்களை பார்க்கும் போது நம்முடைய தமிழ் திரைப்படங்கள் ஏன் இவைகளுக்குத் தொடர்பேயின்றி தங்களின் பிரத்யேக வணிக சகதியில் உழன்று கொண்டிருக்கின்றன என்கிறதொரு ஒப்பீடு தன்னிச்சையாக தோன்றுவதை தவிர்க்க முடிவதில்லை. ஆஸ்கரை 'அமெரிக்கத் தரம்' என்கிற பாவனையுடன் நாம் ஒதுக்கி வைத்து விட்டாலும் கேனஸ் போன்ற மற்ற முக்கியமான சர்வதேச திரைவிழாக்களில் நம்முடைய பங்களிப்பு என்ன, அவற்றை ஐரோப்பிய தரம் என்று ஒதுக்கி வைத்து விடலாமா என்கிற கேள்வி எழுகிறது. சத்யஜித்ரே பெற்ற ஆஸ்கர் விருது திரைப்படத்துறைக்காக அவர் ஆற்றிய சேவை குறித்தது. இந்தியர்கள் பெற்ற மற்ற ஆஸ்கர் விருதுகள் ஆங்கில திரைப்படங்களுடன் தொடர்புள்ளவை.

ஆங்கிலத்திரைப்படங்கள் அதிக பொருட்செலவில் உருவாக்கப்படுபவை, எனவே அவை சிறப்பாக அமைகின்றன என்கிற இன்னொரு மாயையும் உண்டு. உலகமெங்கும் வணிக வாய்ப்புகளையும் சாத்தியங்களையும் கொண்டிருக்கிற ஹாலிவுட்டில் அது போன்ற ஹை-பட்ஜெட் திரைப்படங்களும் உருவாக்கப்படுகின்றன என்றாலும் அவற்றின் ஊடாக அந்தளவிற்கான பொருட்செலவைக் கோராத ஆனால் சிறந்த கதை அமைப்புடைய திரைப்படங்களும் இம்மாதிரியான விழாக்களில் சாதிக்கத் தவறுவதில்லை. உதாரணத்திற்கு NIGHTCRAWLER திரைப்படத்தை குறிப்பிடலாம். தமிழகத்தில் உருவாக்கப்படும் சில பிரம்மாண்ட திரைப்படங்களின் பட்ஜெட்டில் அது போன்று இரண்டு மூன்று திரைப்படங்களையாவது எடுத்து விட முடியும்.

கடுமையான அடக்குமுறை கொண்ட இரான் போன்ற சிறிய தேசங்கள் எல்லாம் சர்வதேச அரங்குகளில் சாதித்துக் கொண்டிருக்கும் போது உலகிலேயே அதிக திரைப்படங்களை உருவாக்கும் தேசங்களில் ஒன்றான இந்தியாவால் 'சிறந்த வெளிநாட்டு திரைப்பட விருது' பிரிவில் ஒருமுறை கூட வெல்ல முடியவில்லை. அவையெல்லாம் அமெரிக்க தரம், ஐரோப்பிய தரம் என்று இன்னமும் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கப் போகிறோமா என்ன?

- உயிர்மை - மார்ச் 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)
 
suresh kannan