Friday, February 27, 2009

எழுது... எழுது...

....வழக்கம் போல் எழுத்தாளர் வாக்கியம். இந்த முறை ஜான் ஹெர்ஸே..

.. எழுத்து என்பது தினம் உட்கார்ந்து கொண்டு தினம் கட்டாயமாக எழுதுவது; மார்புக்குள்ளிருந்து மேதைத்தனம் என்னும் அந்த நீல ஒளிக்குக் காத்திருப்பதல்ல - திரும்பத் திரும்ப எழுதுவது - மகிழ்ச்சியோ, வலியோ எழுதுவது; எழுத்து என்பது நிறைய கிழித்துப் போடுவது, நிறைய எழுதுவது, எழுதியதில் திருப்திப்படாமல் இருப்பது.... மீண்டும் எழுதுவது

*****************************

- சுஜாதா, சின்னச் சின்னக் கட்டுரைகள், 1985


suresh kannan

Thursday, February 26, 2009

காலச்சுவடு கண்ணன் நேர்காணல்

உயிர்எழுத்து ஜனவரி 09 இதழில் வெளிவந்த காலச்சுவடு கண்ணன் நேர்காணலைப் பற்றி இந்தப் பதிவில் எழுதியிருந்தேன். அந்த நேர்காணலை வலையேற்றம் செய்ய முடியுமா என்று நண்பர் பாஸ்டன் பாலா பின்னூட்டத்தில் வேண்டுகோள் ஒன்றை வைத்திருந்தார். அவருக்காக இது.

நேர்காணலை தரவிறக்கம் செய்ய விரும்புவோர் இங்கே சொடுக்கவும்.

file: pdf; size: 4.42 mb

கண்ணனின் நேர்காணல் குறித்து ஜெயமோகன் சொன்னது.

நன்றி: உயிர் எழுத்து

suresh kannan

Wednesday, February 25, 2009

ஒரே அறையில் எடுக்கப்பட்ட முழுத் திரைப்படம்

12 ANGRY MEN

1957-ல் உருவாக்கப்பட்ட இந்தத் திரைப்படம், அமெரிக்க பிலிம் இன்ஸ்டிடூட்டால் நூற்றாண்டு 'கிளாசிக்' திரைப்படங்களின் டாப் டென் வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதை 'கட்டாயம் பார்க்க வேண்டிய' (Must see) திரைப்படம் என்கிற வகையில் உங்களுக்கு பரிந்துரை செய்ய விரும்புகிறேன். ஆனால் இவ்வாறு நான் பரிந்துரை செய்வதே இந்தத் திரைப்படத்தின் மையக் கருத்துக்கு முரணானது.

ஏன்? சொல்கிறேன்.

()

'நீதி' என்கிற உருவமற்ற விஷயம் நடைமுறையில் எப்படி உருவாகிறது என்பதை நாம் பொதுவாக அறிவோம். ஏதாவதொரு குற்றம் நிகழும் போது குற்றத்தில் சம்பந்தப்பட்டவராக கருதப்படுபவர் புகாரின் பேரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார். வாதப் பிரதிவாதங்கள் நடைபெறும். நீதிபதியால் தீர்ப்பு வழங்கப்படும் வரை சம்பந்தப்பட்ட நபர் "குற்றஞ்சாட்டப்பட்டவர்' என்றே கருதப்படுவார். இந்த தொடர் சம்பிதாயங்களில் குற்றத்தை விசாரிப்போர்கள் அனைவருமே திறந்த மனத்துடன் செயல்பட்டால்தான் குற்றஞ்சாட்டப்பட்டவர் ஒருவேளை நிரபராதியாக இருந்துவிட்டால் அவர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க இயலும். ஆனால் விசாரிப்பவர்கள் தங்களின் 'முன்முடிவுகளுடன்' வழக்கை அணுகினால் அது ஒரு பக்கச் சார்புடன் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு பாதகமாக அமையக்கூடும்.

உதாரணமாக ஒரு ஆட்டோ டிரைவர் மீது ஒரு கொலை வழக்கு விசாரணைக்கு வருகிறது என்றும் சம்பந்தப்பட்ட வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு சில 'மோசமான முன் அனுபவங்களால்' ஆட்டோ டிரைவர்கள் மீது நல்ல அபிப்ராயம் கிடையாது என்றும் வைத்துக் கொள்வோம். இந்த வழக்கு விசாரணையை அவர் கவனிக்கும் போது முன்னரே அவருக்குள் படிந்திருக்கிற இந்த எண்ணம், ஒருவேளை நிரபராதியாயிருக்கக்கூடிய அந்த ஆட்டோ டிரைவருக்கு எதிரான தீர்ப்பை வழங்குவதற்கு காரணமாக அமையக்கூடும். [இவ்வாறு ஒரு உதாரணத்திற்காக ஆட்டோ டிரைவரை நான் தேர்ந்தெடுத்திருப்பதே அவர்களுடன் எனக்கிருக்கும் முன்அனுபவங்கள் கூட காரணமாக இருக்கலாம். :-)].

இந்த மாதிரியான முன்தீர்மானங்கள் நியாமான நீதி கிடைப்பதற்கு தடையாகவும் நிரபராதி தண்டிக்கப்படுவதற்கு காரணமாகவும் அமையலாம் என்பதைத்தான் இத்திரைப்படம் வலுவாகச் சுட்டிக் காட்டுகிறது.

Photobucket

ஒரு வழக்கு விசாரணையின் இறுதிப்பகுதியோடு இத்திரைப்படம் நமக்கு அறிமுகமாகிறது. தன் தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டதாக சேரியில் வசிக்கும் இளைஞன் ஒருவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அமெரிக்கச் சட்ட நடைமுறைப்படி, நீதிபதி இந்த வழக்கு விசாரணையை முழுவதுமாக கவனித்துக் கொண்டிருக்கும் 12 ஜூரிகளிடம் இதைப் பற்றி விவாதித்து வழக்கைப் பற்றி 'ஒருமனதான' முடிவொன்றை எடுக்கச் சொல்லி கேட்டுக் கொள்கிறார். தமக்குள் முன் அறிமுகமில்லாத அந்த 12 நபர்களும் இணைந்து இளைஞரை 'குற்றவாளி' என்று முன்மொழிந்தால் அதன்படி அவருக்கு மரண தண்டனை அளிக்கப்படலாம். ஆனால் இதில் ஒருவர் முரண்பட்டாலும் விசாரணை மீண்டும் நிகழ்த்தப்படும்.

கோடைக்காலமான அந்தப்பருவத்தில் மூடப்பட்ட அறையில் 12 நபர்களும் கூடிப் பேச அமர்வதற்கே அவரவர்களுக்கான நேரத்தை எடுத்துக் கொள்கின்றனர். பெரும்பாலோனோர் தங்களின் வழக்கமான அலுவல்களுக்கான அவசரங்களில் இருக்கிறார்கள். 'இதை விரைவில் முடித்துவிட்டு கிளம்பி விட வேண்டும்' என்கிற தொனி அவர்களின் உடல் மொழியில் வெளிப்படுகிறது.

முதல் வாக்கெடுப்பில் 11 நபர்கள் வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் இளைஞரை 'குற்றவாளி' என்று தீர்மானிக்கின்றனர். ஆனால் ஒருவர் மாத்திரம் இந்த முடிவிலிருந்து முரண்படுகிறார். அந்த இளைஞர் 'குற்றவாளியல்ல' என்பது கூட அவர் எண்ணமில்லை. ஆனால் வழக்கு விசாரணையில் ஏதோவொரு குறைபாடு இருப்பதாக அவர் நினைப்பதை அவசரத்திலிருக்கும் மற்ற பெரும்பாலோனோர் எரிச்சலுடன் எதிர்கொள்கின்றனர். தாங்கள் எடுக்கப்போகும் முடிவினால் ஒரு உயிர் சட்டத்தால் பறிக்கப்படுவது குறித்தான எந்த தீவிர உணர்வும் அவர்களிடம் இருப்பதாக தெரியவில்லை. அந்த இளைஞர் குற்றவாளிதான் என்று பெரும்பாலோனோர் தீர்மானமாக கருதுகின்றனர்.

ஆட்பேசத்தை முதலில் எழுப்பிய நபர் பொறுமையாக தம்முடைய சந்தேகங்களையும் 'எப்படி அந்த இளைஞர் நிரபராதியாக இருக்கக்கூடும்' என்கிற வாதங்களையும் சபையின் முன் வைக்கின்றார். இந்த உரையாடல் நீடிக்க நீடிக்க மற்ற ஒவ்வொருவரும் மெல்ல மெல்ல தங்களின் முடிவுகளிலிருந்து மாறுகின்றனர். பல்வேறு உணர்ச்சிகரமான நிகழ்வுகளுக்குப் பிறகும் கூர்மையான தர்க்கங்களுக்குப் பிறகும் தெளிவடைந்து இறுதியில் அனைத்து 12 நபர்களுமே தொடக்கப்புள்ளியில் எடுக்கப்பட்ட முடிவிலிருந்து எதிர்நிலையான முடிவுக்கு வருகிறார்கள். இத்துடன் இத்திரைப்படம் நிறைவுறுகிறது. சம்பந்தப்பட்ட இளைஞனுக்கு தண்டனை கிடைத்ததா, அல்லது விடுதலையடைந்தாரா என்பது பற்றியெல்லாம் இத்திரைப்படம் பேசவில்லை.

முன்னரே குறிப்பிட்டது போல 'முன்தீர்மானங்களுடன்' எடுக்கப்படும் முடிவுகளைத்தான் இத்திரைப்படம் விமர்சனம் செய்கிறது.

()

சில சொற்ப காட்சிகளைத் தவிர இத்திரைப்படம் முழுவதும் 'ஒரே அறையில்' எடுக்கப்பட்டிருப்பதே இதன் பிரதான சிறப்பம்சமாக குறிப்பிடலாம். மிகத் திறமையான திரைக்கதையின் மூலம் இது சுவாரசியமானதொரு திரைப்படமாக சாத்தியமாகியிருக்கிறது. இந்த வழக்கை எல்லோருமே தங்களுக்கான முன்முடிவுகளுடன் கூடிய எண்ணங்களுடன் அணுகுகிறார்கள் என்பது குறியீட்டு மற்றும் மறைபொருளான காட்சிகளினால் சொல்லப்படுகிறது.

Photobucket

குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிற அந்த இளைஞன் சேரியைச் சேர்ந்தவன் என்பதால் நிச்சயம் குற்றவாளியாகத்தான் இருக்க முடியும் என்பதான வாதம் முன்வைக்கப்படுகிறது. 'சேரி ஆட்களைப் பற்றி நாம் அறியாததா?" என்கிறார் ஒருவர். ஆனால் இளமைக்காலத்தில் சேரியில் வளர்ந்து இன்று உயர்நிலைக்கு வந்திருக்கும் குழுவிலிருக்கும் ஒருவரால் இந்தக் குறிப்பிட்ட காரணம் ஆட்சேபிக்கப்படுகிறது.. பிற்போக்கான இந்தச் சிந்தனையை பெரும்பாலோனோர் ஒப்புக் கொள்வதில்லை. 'They even don't speak good English' என்று ஆவேசமாக சொல்கிறார் ஒருவர். 'They doesn't' என்று அந்த வாக்கியத்திலிருக்கும் இலக்கணப் பிழையை நகைச்சுவையாக சுட்டிக் காட்டுகிறார் இன்னொருவர்.

கோடைப்பருவமான சூழ்நிலையில், மூடப்பட்டிருக்கும் அந்த அறையில் மின்விசிறி இயங்காதனின் காரணமாக புழுக்கம் அதிகமாக இருப்பதனால் ஒவ்வொருவருக்கும ஏற்படும் எரிச்சலை ஆரம்பக்காட்சிகள் தெரிவிக்கின்றன. அங்கிருக்கும் மின்விசிறியை இயக்க முயன்று தொடர்ந்து தோல்வியடைகிறார் ஒருவர். இறுதிக் காட்சிகளில் கோடை மழை ஆரம்பித்து அறை சற்று இருளடைகிறது. எனவே அங்கிருக்கும் விளக்கு இயக்கப்படும் போது கூடவே மின்விசிறியும் இயங்க ஆரம்பிக்கிறது. இரண்டு மின் சாதனங்களுக்கும் ஒரே சுவிட்ச். இந்த சிறுவிஷயத்தை கூட கவனிக்காதவர்கள் எப்படி வழக்கு விசாரணையை கூர்ந்து கவனத்திருப்பார்கள் என்கிற கேள்வி பார்வையாளனுக்கு தோன்றும் வகையில் இது ஒரு பகடியாக வெளிப்படுகிறது. மேலும் ஆரம்பக்காட்சிகளின் உஷ்ணமான சூழ்நிலையும் நபர்களின் குழப்பமான விவாதமுமான நிலை மெல்ல மாறி இறுதிக் காட்சிகளுக்கு வரும் போது பெய்யும் மழை காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலையும் உரையாடல்களின் மூலம் அவர்கள் தெளிவடைந்திருப்பதும் மிக நல்லதொரு குறியீட்டுக் காட்சிகளாக அமைந்திருக்கின்றன.

அந்த அறையில் உள்ள 12 நபர்களுடன் இணைந்து கேமிராவும் 13வது நபராக செயல்படுகிறது. ஆரம்பக் காட்சிகளில் சற்றுத் தொலைவில் காட்டப்படும் 12 நபர்களும் விவாதம் சூடேற சூடேற மெல்ல மெல்ல நெருக்கமாக அவர்களின் முகபாவங்களின் குழப்பங்களும் தெளிவும் பார்வையாளனுக்கு உணர்த்தப்படும் நோக்கத்தில் செயல்படுகிறது.

()

இந்தப்படத்தின் ஸ்கிரிப்ட்டை எழுதிய Reginald Rose, Henry Fonda-ன் இணைந்து இத்திரைப்படத்தை தயாரித்திருக்கிறார். படத்தின் இயக்குநர் Sidney Lumet. 12 நபர்களில் முதலாவதாக தனது ஆட்சேபத்தை முன்வைக்கும் நபராக Henry Fonda மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். அவர் மாத்திரமல்லாமல் மற்ற அனைவருமே தங்களின் தனித்தன்மையான நடிப்பை குறிப்பிடத்தகுந்த அளவிற்கு வழங்கியிருக்கிறார்கள்.

1954-ல் தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட இந்தப்படம், அதன் வெற்றியின் காரணமாக பிறகு 1957-ல் திரைப்படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. 1997-ல் தொலைக்காட்சிக்காக மீண்டும் படமாக்கப்பட்டிருக்கிறது. ரஷ்ய மொழியிலும் ரீமேக் செய்யபட்டிருக்கும் இத்திரைப்படம், இந்தியாவில் பாசு சட்டர்ஜியால் 1986-ல் Ek Ruka Hua Faisla என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.

சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை என்ற பிரிவுகளில் அகாதமி விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்ட இத்திரைப்படம், அதே ஆண்டில் வந்த இன்னொரு கிளாசிக் திரைப்படமான The Bridge of the River Kwai-ன் பிரம்மாண்ட வெற்றியின் காரணமாக விருதுகளைப் பெறத் தவறியது. என்றாலும் பெர்லின் திரைப்படவிழாவில் தங்க விருதைப் பெற்றது. அமெரிக்காவின் 'தேசிய திரைப்படக் காப்பகத்தில்' வைப்பதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் இத்திரைப்படம் அமெரிக்கத் திரைப்பட வரலாற்றில் மிக முக்கியமான மற்றும் முன்னோடியான திரைப்படமாக மதிக்கப்படுகிறது.

()

எனவேதான் இத்திரைப்படத்தை உங்களுக்கு பதிவின் ஆரம்பத்தில் மிகத்தீவிரமாக பரிந்துரைத்திருந்தேன். ஆனால் இந்தப் பரிந்துரையே இத்திரைப்படத்தை நீங்கள் ஒரு 'முன்தீர்மானத்துடன்' அணுக ஒரு பாதகமான காரணியாக அமைந்துவிடலாம். அதுவே நான் உங்களுக்கு செய்யும் அநீதியாகவும் அமைந்துவிடக்கூடும். எனவே திறந்த மனத்துடன் இத்திரைப்படத்தைப் பார்த்தபிறகு உங்கள் எண்ணங்களை எனக்கு எழுதுங்கள்.


suresh kannan

Monday, February 23, 2009

81வது வருட ஆஸ்கர் விருதில் இந்தியர்கள்

இந்தியர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய தருணமிது. தங்களின் சமீபத்திய எதிர்பார்ப்பு நிறைவேறிய மகிழ்ச்சியில் பலர் ஆனந்தப் பெருமூச்சினை விட்டிருப்பார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு ஆஸ்கர் விருதுகளும் (Original music score & Original Song) மற்றும் ராசுல் பூக்குட்டி ஒரு ஆஸ்கர் விருதும் (Sound Mixing) இந்தியச் சிறுமியை வைத்து உருவாக்கப்பட்ட smile pinky விவரணப்படத்திற்கு ஒரு ஆஸ்கர் விருதும் கிடைத்துள்ளது. கடந்த வருடங்களை விட இந்த வருட விருதுகள் அதிக பரபரப்பை ஏற்படுத்தியதற்கு முக்கிய காரணம் ஏ.ஆர். ரஹ்மான். நாமினேஷன் பட்டியலில் மூன்று இடங்களில் ரஹ்மானின் பெயர் இருந்ததால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அது பொய்க்கவில்லை. ஏற்கேனவே ரஹ்மான் மீடியாக்களின் செல்லக்குழந்தை. இப்போது கேட்கவே வேண்டாம். இந்த சந்தோஷங்களின் மகிழ்ச்சியில் ஒரு சிறிய நெருடலும் இருக்கிறது. விருது பெற்ற இந்தியர்கள் பிறநாட்டு இயக்குநர்களின் ஆங்கிலத் திரைப்படங்களில் பணிபுரிந்தவர்கள்தான். நேரடியான ஒரு இந்திய திரைப்படத்திற்கு Best Foreign Language film பிரிவில் இந்த விருது கிடைத்திருந்தால் கூடுதல் சந்தோஷம் கிடைத்திருக்கும். ஸ்லம்டாக் மில்லியனர் ஒரு பிரிட்டிஷ்காரர் உருவாக்கினது; Smile pinky-யை உருவாக்கின Megan Mylan ஒர் அமெரிக்கப் பெண்மணி.

ஏதோ இதுதான் இந்தியர்கள் ஆஸ்கர் பெறும் முதல் தருணம் என்கிற மாதிரியான மாயை நம்மிடையே இருக்கிறது. அது உண்மையல்ல. இதற்கு முன்னால் இரண்டு இந்தியர்கள் இதை சாதித்திருக்கிறார்கள். காந்தி திரைப்படத்தின் சிறந்த ஆடை வடிவமைப்பிற்காக பானு அதைய்யாவும், திரைப்படங்களுக்கு ஆற்றிய சாதனைகளுக்காக சத்யஜித்ரேவும் இந்த விருதைப் பெற்றிருக்கிறார்கள். ராசுல் பூக்குட்டி மூன்றாவது இந்தியர்.

ஸ்லம்டாக் மில்லியனர் படம் குறித்தான என்னுடைய பதிவில்
"விகாஸ் ஸ்வரூப் எழுதிய நாவலின் மையத்தை ஒரு நூல் அளவு எடுத்துக் கொண்டு Simon Beaufoy எழுதியிருக்கும் மிகத் திறமையான திரைக்கதை இந்தப்படத்தின் மிகப் பெரிய பலம். (திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது இந்தப்படத்திற்கு கிடைக்கலாமென எதிர்பார்க்கிறேன்)."
என்று எழுதியிருந்தேன். அதன்படியே Best Adapted Screenplay பிரிவில் Simon Beaufoy விற்கு விருது கிடைத்திருப்பது குறித்து சந்தோஷம்.

()

ரஹ்மானின் கடும் உழைப்புதான் இந்த உச்சத்திற்கு அவரைக் கொண்டு போய்ச் சேர்த்திருக்கிறது. விளம்பரங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த ஓர் இளைஞன் 'மணிரத்னம்' மூலம் வெளிப்பட்ட போது தமிழ்த் திரைப்பட இசையுலகில் ஏதோ ஓரு புதிய காற்று உள்ளே நுழைந்தது போலிருந்தது. இப்பவும் எனக்கு ஞாபகமிருக்கிறது. அப்போதெல்லாம் புதிய திரைப்பாடல்களை ஒலி நாடாக்களில் பதிவு செய்து கொடுப்பதெற்கென்றே பல சிறு நிலையங்கள் இருந்தன. நான் ஏற்கெனவே கொடுத்திருந்த பட்டியல் போக இன்னும் இடமிருந்த போது கடைக்காரர் சொன்னார். ''ரோஜான்னு ஒரு படம். புதுசா ஒருத்தன் ம்யூசிக் போட்டிருக்கான். ருக்குமணின்னு ஒரு பாட்டு. என்னமா அடிச்சிருக்கான் தெரியுமா? ரெக்கார்ட் செய்யவா?" என்றார் பரவசத்துடன். ஆனால் எனக்கு மற்ற பாடல்களை விட எஸ்.பி.பியின் குரலில் இருந்த 'காதல் ரோஜாவே' பாட்டுதான் மிகவும் பிடித்திருந்தது. ஒரு பாட்டிற்குள் இவ்வளவு காதல் பிரிவையும் தனிமையையும் சோகத்தையும் பிழிந்து ஊற்ற முடியுமா? என்று ஆச்சரியமாயிருந்தது. பிறகு நான் ரஹ்மானின் தீவிர விசிறியாகிவிட்டேன். ஒரிஜனல் கேசட்டுக்களில் கேட்கிற ஒலித்துல்லியமும் கேட்பனுபவமும் மோசமாக பிரதியெடுக்கப்பட்ட நகல்களில் இல்லாதிருப்பதை கவனித்தேன். எனவே ரஹ்மானின் திரைப்பாடல்கள் வெளியானவுடன் முதல் நாளே ஒரிஜினல் கேசட்டுக்களை வாங்குவது வழக்கமாயிற்று. பெரும்பாலான நேரங்களில் ரஹ்மான் என்னை ஏமாற்றவில்லை. தந்தையின் மூலமாக இசை என்பது ஊறிப்போயிருந்தாலும் அவர் இசையமைப்பாளாரான பிறகு இசைத்துறை சார்ந்த நவீன நுட்பங்களை திறமையாக பயன்படுத்திக் கொண்டதுதான் ரஹ்மானின் மிகப் பெரிய பலம் என்று கருதுகிறேன். எனவேதான் நாகார்ஜூனன் பற்றிய சினிமா பதிவில்
"உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?"
என்ற கேள்விக்கு
"ஏ.ஆர். ரகுமானின் வருகையைச் சொல்லாம். மேம்படுத்தப்பட்ட நுட்பங்களின் மூலம் பாடல்களின் கேட்பனுபவத்தை இன்னும் உன்னதமாக்கியது."
என்று கூறியிருந்தேன்.


()

ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக Best Sound Mixing-க்கான ஆஸ்கர் விருது பெற்ற ராசுல் பூக்குட்டியின் நேர்காணலை சில நாட்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் படித்த போது "ஒரு திரைப்படம் என்பது பல்வேறு நுட்பக் கலைஞர்களின் கூட்டால் உருவாக்கப்படுகிறது. ஆனால் திரைக்குப் பின்னால் உள்ள பல கலைஞர்களின் உழைப்பிற்கு வெளிச்சமும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை" என்று வருத்தப்பட்டார். "ஸ்லம்டாக் மில்லியனரை விட நான் அதிகம் உழைத்தது 'Gandhi My Father' திரைப்படத்திற்கு. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசவில்லை"

ஆக.. ரஹ்மான் காரணமாக ஏற்பட்ட பரபரப்பு நிகழாமல் போயிருப்பின் ராசுல் ஆஸ்கர் விருது பெற்றிருந்தால் கூட அது பரலவான கவனத்தைப் பெற்றிருக்காது என்றே தோன்றுகிறது.

()

ஏதோ ஆஸ்கர் விருதுதான் திரைப்பட அங்கீகாரத்திற்கான உச்சம் என்பதான மாயை பொதுவாக இருக்கிறது. உலகத்தின் பல்வேறு நாடுகளின் அமைப்புகள் பல்வேறு சர்வதேச விருதுகளை Cannes, BAFTA, FIAFF, Toronto .... என்று வழங்கிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் ரஹ்மான் பெற்ற golden globe award கூட அதிகளவில் பேசப்படவில்லை. அமீரின் 'பருத்தி வீரன்' Berlin award பெற்றதற்கு கூட இங்கே ஏதும் பெரிதான வரவேற்பில்லை.

என்றாலும் இந்தியத் திரைப்படைப்பாளிகள் விழித்துக் கொள்ள வேண்டிய தருணமிது. இந்தியர்களது நீண்ட நாள் கனவான ஆஸ்கரை தமது அசாத்திய திறமை காரணமாக பெற்றதன் மூலம் சர்வதேச விருதுகள் பெறுவதற்கான வாசலை அகலமாக திறந்து வைத்திருக்கிறார். ரஹ்மான். கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டு திரைப்படத் துறையின் மீது சற்றும் மரியாதையில்லாமல் வெறும் குப்பைத் திரைப்படங்களாக மாத்திரமே உருவாக்கும் நடிகர்களின் பின்னால் மாத்திரம் ரேஸ் குதிரைகளின் மீது பணம் கட்டும் ஆர்வத்துடன் தயாரிப்பாளர்கள் ஓடாமல் ஆர்வமுள்ள திறமையான இளைஞர்களை சுதந்திரமாக இயங்க அனுமதித்து சர்வதேச தரத்தில் திரைப்படங்களையும் தயாரிப்பதின் மூலம் இந்தியத் திரைப்படங்களின் மீதான சர்வதேச பார்வையாளர்களின் கவனத்தை அதிகளவில் பெறச் செய்ய முடியும்.

மதர் இந்தியா (1957), சலாம் பாம்பே (1988), லகான் (2001) ஆகிய இந்தியத் திரைப்படங்கள் மாத்திரமே இதுவரை ஆஸ்கர் விருதுகளின் பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன. இதிலுள்ள அரசியல் களையப்பட்டு நிஜமாகவே தகுதி உள்ள திரைப்படங்கள் மாத்திரமே தேர்வு செய்யப்பட வேண்டும். ஆஸ்கருக்காக இந்தியா சார்பில் ஷங்கரின் 'ஜீன்ஸ்' தேர்வு செய்யப்பட்ட கொடுமையெல்லாம் நிகழ்ந்திருக்கிறது.

தமிழத் திரைப்படங்களைப் பொறுத்தவரை சர்வதேச தரத்தில் திரைப்படம் எடுக்கக்கூடியவர்களாக நான் கருதுவது (அவர்களின் வணிகத் திரைப்படங்களை தவிர்த்து) மகேந்திரன் மற்றும் பாலுமகேந்திரா ஆகியோர்களை மாத்திரமே. ஆனால் அவர்கள் ரிடையர் ஆகிற நிலையில் இருப்பதால் அமீரை அந்தப் பட்டியலில் சேர்க்கலாமா என்று யோசிக்கிறேன்.

suresh kannan

Friday, February 20, 2009

SEVEN POUNDS

நம் இந்திய தேசத்தில் நிகழும் விபத்துக்களைப் பற்றி மாநில வாரியாக அந்தந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் ஆய்வறிக்கையில் காட்டப்படும் எண்ணிக்கைகளை காணும் போது அவற்றின் சதவீதம் இன்னும் அதிகரிக்காமல் போவதற்கு அதிர்ஷ்டம் என்கிற சமாச்சாரம்தான் காரணமோ என்னுமளவிற்கு பல விபத்துக்கள் நுண்ணிய இடைவேளைகளில் தப்பி விடுவதே சாலைகளில் கண்டிருப்பது நினைவுக்கு வரும். விபத்துக்கும் அது நிகழாமல் போவதற்கும் உள்ள வித்தியாசம் சில நொடிகள் மாத்திரமே. அந்தளவிற்கு சாலையில் பல வாகனங்கள், குறிப்பாக இளைஞர்களின் இருசக்கர வாகனங்கள் கிடைத்த இடைவெளிகளில் நுழைந்து அசுர வேகத்தில் பறப்பதை காணும் போதெல்லாம் நெஞ்சம் பதறுகிறது. இவ்வாறு செல்பவர்கள் தாம் மாத்திரம் விபத்துகளில் சிக்கிக் கொள்வதோடு அல்லாமல் சாலை விதிகளை ஒழுங்காக கடைப்பிடித்து செல்பவர்களையும் விபத்துக்குள்ளாக்குகின்றனர்.

ஒட்டுநர் உரிமம் வழங்கப்படுவதின் நடைமுறைகளில் ஒன்றாக, உரிமத்திற்கு விண்ணப்பிப்பவர்களை ஒரு நாள் முழுக்க மருத்துவமனைகளின் விபத்துப் பிரிவிலும் எலும்பு மற்றும் நரம்பு சிகிச்சைப் பிரிவிலும் பார்வையிடச் செய்தால் நன்றாக இருக்குமோ என்று கூட எனக்குத் தோன்றுவதுண்டு.

Photobucket

தன்னுடைய கவனக்குறைவு காரணமாக ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்கள் குறித்த குற்றவுணர்ச்சியோடு திரிந்து அதிலிருந்து மீளுவதற்காக தன்னையே இழக்கத் துணியும் இளைஞனைக் குறித்த திரைப்படம் Seven Pounds. வணிகப்படங்களில் துள்ளலான, குறும்பான இளைஞனாக வரும் வில் ஸ்மித் மாற்றுத் திரைப்படங்களுக்காகவும் தன்னுடைய பங்களிப்பை வழங்குவது ஆரோக்கியமானதொன்று. The Pursuit of Happiness-ல் பொறுப்பான தந்தை பாத்திரத்தை ஏற்ற ஸ்மித், இந்தத் திரைப்படம் முழுக்க தன்னுடைய தவற்றின் குற்றவுணர்ச்சியில் மன உளைச்சல் அடையும் ஒரு இளைஞனாக வருகிறார். இதற்காக தன்னுடைய தோற்றத்தையே மாற்றிக் கொண்டாரோ என்னுமளவிற்கு ஒடுங்கிய கன்னங்களும் குழிவிழுந்த கண்களுமாய் முகத்தில் எப்போதும் ஒரு அவஸ்தையை வைத்துக் கொண்டு படம் முழுதும் இயங்கியிருக்கிறார்.

உதவி தேவைப்படும் குறிப்பிட்ட சிலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்காக தன்னுடைய உடமைகள் அனைத்தையும் துறந்து மருத்துவ உதவி தேவைப்படுவோருக்கு தன்னுடைய உறுப்புகளையே தானம் செய்து உச்சக்கட்டமாக அதற்காக தன்னையே மாய்த்துக் கொள்ளும் இந்தத் திரைப்படத்தின் ஆதாரமாக நான் கருதுவது ஒரு தனிநபரின் அலட்சியத்தால் ஏற்படும் விபத்து எத்தனை தனிநபர்களின் கனவும் வாழ்க்கையும் முடிந்து போவதற்கு காரணமாக அமைகிறது என்பதும் தானமாக தரப்படும் நம்முடைய உடல் உறுப்புகள் எத்தனை பேரின் கனவை மீட்டெடுக்கிறது என்பதும்தான். இருதயக் கோளாறு உள்ளதால் மரண அபாயத்தை எதிர்கொண்டிருக்கும் எமிலியுடன் பழக நேரும் போது இருவருக்கும் ஏற்படும் காதலும் அப்போது இருவருமே மரணத்தை தவிர்க்க முயன்றால் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்குவது குறித்த காட்சிகள் நெகிழ்ச்சியாக உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தத் திரைப்படத்தில் குறிப்பாக வில் ஸ்மித்தின் நடிப்பும் உடல் மொழியும் தவிப்பும் மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் படத்தின் மெதுவான திரைக்கதை பார்வையாளனுக்கு சோர்வையளிப்பது தவிர்க்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். The Pursuit of Happiness படத்தை இயக்கிய Gabriele Muccino-தான் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார்.

திரைப்படம் என்ற அளவில் மட்டுமல்லாது கண நேரக் கவனக்குறைவால் நிகழும் மனித வாழ்வின் மரணம் குறித்த சிந்தனைக்காகவும் இந்தப்படத்தை நிச்சயம் பார்க்கலாம்.

suresh kannan

Thursday, February 19, 2009

அம்பையின் சிறுகதைகள்

வற்றும் ஏரியின் மீன்கள் - அம்பை - சிறுகதைகள்
காலச்சுவடு பதிப்பகம் - பக் 184 - ரூ.140/-

ஒரு காலத்தில் பெண் எழுத்தாளர்களின் மீது நான் வைத்திருந்த அவநம்பிக்கையை தகர்த்தெறிந்தவர்களில் அம்பை என்கிற சி.எஸ்.லஷ்மியை பிரதானமாக சொல்ல வேண்டும். 'அம்மா ஒரு கொலை செய்தாள்' என்கிற அவரின் முக்கியமான சிறுகதையோடு அவரின் அறிமுகம் எனக்கு நிகழ்ந்தது. 'அபூர்வ சகோதரர்கள்' திரைப்படத்தில் உயரம் குறைவான கமலைப் பற்றி அவருடைய அம்மாவே அவரது குறையைச் சுட்டிக் காட்டும் பேசிவிடும் போது அதிர்ச்சியும் சுயபச்சாதாபமும் அழுகையும் கலந்த முகபாவனையோடு அம்மாவின் முகத்தையே கூர்ந்து பார்க்கும் போது காமிரா கமலின் முகத்தையே பிரதானமாக நோக்கி சுற்றியலையும். இந்தக்காட்சியின் சாரம்தான் 'அம்மா ஒரு கொலை செய்தாள்'- சிறுகதை.

Photobucket

சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, காட்டில் ஒரு மான் ஆகிய சிறுகதைத் தொகுதிகளைத் தொடர்ந்து அம்பையின் நான்காவது சிறுகதைத் தொகுதியிது. பெண்ணிய நோக்கில் எழுதும் எழுத்தாளர்களின் அம்பை முன்னோடியானவர். ஆனால் அதில் பிரச்சார தொனியும் ஆண்களை அவமதித்து எழுதுவதுதான் பெண்ணியம் என்கிற அபத்தமான புரிதலோ இருக்காது என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும்.

எழுத்தாளர்களை பால் வேறுபாடு கொண்டு நோக்குவதில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் கலாச்சார காவலர்கள் அதிகம் புழங்கும் நம்முடைய ஆச்சாரமான இலக்கியப் பரப்பில் ஆண் எழுத்தாளர்களும் எழுதத் தயங்கும் விஷயங்களை அம்பையின் பேனா இயல்பான துணிவோடு எழுதியிருப்பது ஓர் ஆச்சரியமே. அவர் தமிழக நிலப்பரப்பிலிருந்து வெளியேயிருப்பதே இதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆண் பாலியல் தொழிலாளியை கருணையோடு அணுகும் ஒரு பெண்மணியின் சிறுகதையை சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். (பொதுப் புத்தியின் பார்வையில் பாலியல் தொழிலாளி என்றாலே அது பெண்ணாகத்தான் இருக்க முடியும்). தான் பயணிக்கிற நேரங்களில் எதிர்கொள்ளும் அனுபவங்களை 'பயணம்' என்கிற தலைப்பில் வரிசைப்படுத்தி சிறுகதைகளாக உருமாற்றியிருக்கிறார்.

அதில் ஒரே ஒரு சிறுகதையை மாத்திரம் சற்று நெருங்கிப் பார்ப்போம்.

பேருந்து நிலையம். கர்ப்பிணியான தன் மனைவியை வழியனுப்ப வந்திருக்கும் கணவன், பிரிவின் துயர் தாங்காமல் பொது இடமென்றும் பாராமல் அழுதுத் தீர்க்கிறான். மனைவி ஆறுதல் சொல்கிறாள். "பச்சப் புள்ளையாட்டம் அது" என்று தன் தாயிடம் பேருந்து கிளம்பிய பின் சொல்லிப் புலம்புகிறாள். கதை சொல்லி அந்த கர்ப்பிணிப் பெண்ணை பிற்பாடு கடற்கரையில் சந்தித்து உரையாட நேர்கிறது. வரதட்சணைக் கொடுமையின் கசப்பான அனுபவத்தில் நின்று போன திருமண நாளில் 'தீடீர்' கணவனான அவனுக்கு குழந்தைகள் என்றால் உயிர். ஆனால் சிறுவயதில் வந்த 'பொன்னுக்கு வீங்கி' நோயால் அவனின் ஆண்மை செயலிழந்திருக்கிறது. ஆனால் அது அவனுக்கே தெரியாது.

... சற்று நேரம் பயணித்ததால் தன்னையே பிட்டுக்காட்டும் அவளுடைய சற்றே மேடிட்ட வயிற்றைப் பார்த்த போது, "இது அவங்க வீட்டுதுதான்".. என்றாள்....

குண்டாந்தடியுடன் கலாச்சாரக் காவலர்கள் உலவுகின்ற சூழலில் ஒரு பெண் எழுத்தாளரிடமிருந்து இப்படியொரு சிறுகதை வெளிவந்திருப்பதைக் குறித்துத்தான் ஆச்சரியம். இந்தத் தொகுப்பில் உள்ள ஏனைய கதைகள், பெண்ணியக் களப் போராளிகள் தங்களின் அந்திம காலத்தில் எதிர்கொள்ள நேர்கிற சமூகவியல் சார்ந்த சிக்கல்களின் அலுப்பைச் சொல்லிச் செல்கிறது. சில கதைகள் மதக் கலவரங்களினால் ஏற்படும் வன்முறையையும் அவற்றின் அபத்தத்தையும் பற்றிப் பேசுகிறது.

மொத்தத்தில் நல்லதொரு சிறுகதைத் தொகுப்பு.


suresh kannan

Wednesday, February 18, 2009

சுந்தர ராமசாமி, கண்ணதாசன் நூல்கள் நாட்டுடைமை

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, மு.ராகவையங்கார், பம்மல் சம்பந்தனார், டாக்டர் மு.வரதராசனார், கவியரசு கண்ணதாசன் உள்ளிட்ட 28 தமிழ்ச் சான்றோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டு, அவர்கள் மரபுரிமையர்களுக்கு பரிவுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டுள்ளது. தமிழக நிதியமைச்சர் அன்பழகன் வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பு: இதுவரை 95 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளன.


இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா, கவியரசு கண்ணதாசன், பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார், மு.ராகவையங்கார், பம்மல் சம்பந்தனார், அ.சிதம்பரநாதன் செட்டியார், மு.சு.பூரணலிங்கம் பிள்ளை, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், பாலூர் கண்ணப்ப முதலியார், இராய.சொக்கலிங்கனார், டாக்டர் மு.வரதராசனார், முனைவர் ச.அகத்தியலிங்கம், பாவலர் நாரா.நாச்சியப்பன், புலியூர் கேசிகன், எழுத்தாளர் சாண்டில்யன், கோதை நாயகி, சின்ன அண்ணாமலை, பூவை எஸ்.ஆறுமுகம், என்.வி.கலைமணி, கவிஞர் முருகு சுந்தரம், புலைவர் த.கோவேந்தன், எழுத் தாளர் சுந்தர ராமசாமி, திருக்குறள் மணி நவநீத கிருஷ்ணன், லட்சுமி, வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜமதக்னி மற்றும் ஜே.ஆர்.ரங்கராஜு ஆகிய 28 தமிழ் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும். மேலும், அவர்கள் உருவாக்கிய நூல்களின் எண்ணிக்கை, அவை சமுதாயத்தில் ஏற்படுத்திய தாக்கம், அவற்றின் பெருமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்தம் மரபுரிமையர்களுக்கு பரிவுத் தொகை வழங்கப்படும்.

()

சுந்தர ராமசாமி நூல்கள் நாட்டுடைமை குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு

"எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளை நாட்டுடைமையாக்க அவரது குடும்பத்தினரின் அனுமதி பெறாமல் அறிவிப்பு வெளியிடுவது சட்டவிரோதமானது' என, காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.காலச்சுவடு பதிப்பக பதிப்பாளர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:


எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதாக தமிழக அரசு இன்று பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. சுந்தர ராமசாமியின் படைப்புகளின் காப்புரிமையை அரசு பெறுவது பற்றி அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெறாமல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அனுமதி பெறாமல் அரசு அறிவிப்பது சட்ட விரோதமானது.சுந்தர ராமசாமியின் படைப்புகளை வெளியிடும் உரிமை தற்போது காலச்சுவடு பதிப்பகத்திற்கு மட்டுமே உள்ளது.


சட்டவிரோதமான அரசு அறிவிப்பின் அடிப்படையில் அவர் படைப்புகளை வெளியிட்டு காப்புரிமை சட்டத்தை மீற வேண்டாமென தமிழ் பதிப்பாளர்களை காலச்சுவடு பதிப்பகம் கேட்டுக்கொள்கிறது.அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழுக்கு பங்களித்து வந்த சுந்தர ராமசாமியை எந்த கட்டத்திலும் அங்கீகரிக்காத தமிழக அரசு இப்போது அவர் மறைந்து மூன்று ஆண்டுகளிலேயே அவசரமாக நாட்டுடைமையாக்கத்தை அனுமதி பெறாமல் அறிவித்திருப்பது அரசின் உள்நோக்கம் பற்றிய சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது.


"காலச்சுவடு' இதழுக்கு நூலகத்தில் தடை விதித்திருக்கும் தமிழக அரசு சுந்தர ராமசாமியின் காப்புரிமையை அபகரித்து "காலச்சுவடு' பதிப்பகத்தின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நோக்கத்துடனேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது.இவ்வாறு கண்ணன் கூறியுள்ளார்.


கண்ணதாசன் பதிப்பக நிர்வாகி காந்தி கண்ணதாசன் அறிக்கை:தமிழக அரசின் பட்ஜெட் அறிக்கையில் 28 தமிழ் அறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவது தொடர்பான பட்டியலில் கவிஞர் கண்ணதாசன் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. கண்ணதாசன் நூல்களை எக்காலத்திற்கும் நாட்டுடைமையாக்குவதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புக்கொண்டது இல்லை; ஒப்புக்கொள்ளப் போவதும் இல்லை.


இந்த பட்டியலில் கண்ணதாசன் பெயர் சேர்ப்பது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை எங்கள் குடும்பத்தினரை கலந்து ஆலோசிக்காமல், குறைந்தபட்சம் அவரது குடும்பத்தினருக்கு கூட தெரிவிக்காமல் இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.கண்ணதாசன் நூல்களை கண்ணதாசன் பதிப்பகமும், வானதி பதிப்பகமும் மிகக் குறைந்த விலையில் வெளியிட்டு மிகப் பரவலாக மக்களிடையே எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது.


கண்ணதாசனின் குடும்பத்தினர் நூல்களை நாட்டுடைமையாக்க வேண்டிய நிலையிலும் இல்லை. தமிழ் வளர்ச்சித் துறையின் இந்த தன்னிச்சையான போக்கு தமிழக அரசிற்கு களங்கத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.கண்ணதாசன் புத்தகங்களை எங்களது சொத்தாக வைத்துப் பாதுகாத்து வருகிறோம். இதை தேசியமயமாக்கும் எண்ணம் துளியும் இல்லை. கண்ணதாசன் குடும்பத்தினருக்கு அவரது எழுத்துகளை பாதுகாப்பது எப்படி என்பது தெரியும்; காப்பற்றவும் எங்களால் முடியும். இது தொடர்பாக முதல்வரிடம் மனு அளிக்கவுள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி்: தினமலர்

()

குறிப்பிட்ட தமிழறிஞர்களின் வாரிசுகளிடம் சட்டரீதியான அனுமதி பெறாமலேயே அவர்களின் நூற்களை நாட்டுடைமையாக்கும் முடிவை அரசு எப்படி எடுத்தது, அதுவும் அதை சட்டசபையிலேயே பட்ஜெட்டில் அறிவித்தது எப்படி என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மற்ற நூற்களின் நிலையும் இவ்வாறுதான் இருக்கும் போலிருக்கிறது. இது நிச்சயம் முறையற்ற செயல்.

ஆனால் மற்ற அறிஞர்களைப் போலல்லாமல் சு.ரா.விற்கும் கண்ணதாசனிற்கும் இன்னமும் வணிக மதிப்பு இருப்பதனாலேயே அவர்களின் வாரிசுகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. தங்களிடம் கலந்து ஆலோசிக்கவில்லை என்பது அவர்களின் குற்றச்சாட்டுகளில் ஒன்றாக இருப்பினும் அவ்வாறு கலந்து ஆலோசிக்கப்பட்டிருந்தாலும் அவர்களிடமிருந்து மறுப்புதான் கிடைத்திருக்கும் என்பதை அவர்களே தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆனால் பொதுமக்கள் எல்லோருக்கும் சென்று சேரவேண்டிய படைப்புகளை அனைவரும் எளிதில் எடுத்து பயன்படுத்த ஏதுவாக அரசு நாட்டுடமையாக்க முன் வந்திருப்பதை அவற்றின் வணிக லாபம் கருதி அவர்களின் வாரிசுகள் தங்களுக்குள்ளேயே முடக்கி வைக்க நினைப்பது, தார்மீக ரீதியான நோக்கில் சரியானதா என்பது விவாதத்திற்கு உரியது.

இதனிடையே பெரியாரின் படைப்புகளை நாட்டுடமையாக்க வேண்டும் என்ற மக்களின் நீண்ட கால கோரிக்கையை அரசு ஏன் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும் அதனின் அரசியல் காரணங்களை தாண்டி விளக்க வேண்டியதும் அரசின் கடமை. பெரியார் திடலில் இருந்து பெரியாரையே விடுதலை செய்யக் கோரும் நிலை இருப்பது திராவிடக் கலாச்சார அரசியலுக்கு மாபெரும் இழுக்கு.

NEWS UPDATE AT 05.40 PM.

தமிழக அரசு விளக்கம்:

மரபுரிமையாளர்கள் ஒப்புதல் தராவிட்டால் தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடமை ஆகாது.
=================================================

இன்றைய தலைமுறையினரும், எதிர்காலத் தலைமுறையினரும் எந்தவித சிரமமின்றி எளிய முறையில் பயன்பெற வேண்டும் என்பதற்காகத் தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடமையாக்கும் திட்டம் தமிழக அரசால் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இது அரசின் விருப்புரிமை அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. எந்தவிதக் கட்டாயமும் கிடையாது.

நாட்டுடமையாக்கப்படுவதற்கு சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள், அவர்களுக்கு கிடைத்து வரும் 'ராயல்டி' தொகை கிடைக்காமல் போய் வரும் என்பதற்காக ஒப்புதல் தரவில்லையெனில் தொடர் நடவடிக்கை எடுக்காமல் கைவிட்டு விடுவதை அரசு வழக்கமாய் பின்பற்றி வருகிறது.

உதாரணமாக மூதறிஞர் ராஜாஜி, உ.வே.சா., அகிலன், கவியோகி சுத்தானந்த பாரதியார், ஆகியோரது நூல்களை நாட்டுடமையாக்கிட கடந்த காலத்தில் அரசினால் அறிவிக்கப்பட்டு பின்னர் சம்பந்தப்பட்ட மரபுரிமையாளர்கள் நாட்டுடமையாக்கிட ஒப்புதல் தரவில்லை என்பதால் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டது.

எனவே தற்போது நிதிநிலை அறிக்கையில் நாட்டுடைமையாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள பட்டியலிலே உள்ள சில நூலாசிரியர்களின் மரபுரிமையாளர், அவர்களின் நூல்களை நாட்டுடமையாக்க ஒப்புதல் தரவில்லை என்பதால் கடந்த காலத்தில் பின்பற்றப்பட்ட நடைமுறை இப்போதும் பொருந்தும்.

நன்றி: மாலை மலர்



suresh kannan

Friday, February 13, 2009

உபயோகமற்ற குறிப்புகள்

பொம்மலாட்டம் என்றொரு படம் பார்த்தேன். 'சிவப்பு ரோஜாக்கள்' என்கிற அற்புதமான psychological thriller தந்த பாரதிராஜாவின் படமா இது? படத்தின் இறுதிக்காட்சியில் பார்வையாளர்களுக்காக காத்திருந்த அந்த இத்தினியூண்டு சஸ்பென்ஸ¥க்காக இரண்டு மணி நேர இழுவையை பா.ரா. தந்திருப்பது அநியாயம். நானா படேகர் ஏதோ அதிசயம் புரிந்திருக்கிறார் என்று பாரதிராஜாவின் பேட்டிகளில் படித்திருந்ததை வைத்து ஆர்வத்தோடு பார்த்தால்... நானா, நடிப்பது நானா என்கிற மாதிரி மந்திரித்து விட்டவர் போல் உலவுகிறார். பாவம். அர்ஜூன். Intellectual Menopause என்றொரு வார்த்தையை எங்கேயோ படித்தேன். பாரதிராஜாக்களுக்கும் பாலச்சந்தர்களுக்குமாக கண்டுபிடிக்கப்பட்ட வார்த்தை போலிருக்கிறது.

*

ஜன.09 உயிர்எழுத்து இதழில் காலச்சுவடு கண்ணனின் பேட்டியை படித்தேன். ஏதோ 49வது வட்ட செயலாளர் அரசியல் கூட்டத்தில் எதிர்க்கட்சிக்காரர்களை வரிசையாக திட்டுவதை கேட்பது போல் ஓர் உணர்வு. கண்ணனைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் இரண்டு பிரிவினர்தாம் இருக்கிறார்கள் போலிருக்கிறது. ஒரு பிரிவினர் காலச்சுவடிற்கு ஆதரவாக செயல்படுபவர்கள்.

*

தமிழ்நாட்டை முழுவதுமாக உருப்படியில்லாமல் ஆக்குவதற்கு சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியினர் தீர்மானமானதொரு ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. தான் தயாரிக்கும் குப்பைத் திரைப்படங்களை எல்லாம் காசாக்குவதற்காக நிமிடத்திற்கு ஒரு முறை பார்வையாளர்கள் மேல் அவற்றின் காட்சித் துணுக்குகளை எறியும் சன், இப்போது முழு நேர நகைச்சுவை சானல் ஒன்றை ஆரம்பித்திருக்கிறது. டோரா புஜ்ஜியைக் கூட சற்று ஒத்தி வைத்து விட்டு குழந்தைகள் இதில் ஆழ்ந்திருக்கின்றன. சற்று நேரம் நான் பார்த்தவரை முழுக்க முழுக்க விவேக்கும் வடிவேலுவும் மாத்திரமே காட்சியளிக்கிறார்கள். போனால் போகிறதென்று கவுண்டமணியும். நாகேஷ், தங்கவேலு, சந்திரபாபு போன்ற கருப்பு-வெள்ளைக் காலத்தினரும் நகைச்சுவை நடிகர்கள்தான் என்பதை இவர்களுக்கு யாராவது சொன்னால் தேவலை.

Photobucket

சிவமணியின் 'மகா லீலா' ஆல்பம் கேட்டேன். ஒவ்வொரு இசைத்துணுக்கும் ஒவ்வொரு அலைவரிசையில் வித்தியாசமாக இருக்கிறது. தன்னுடைய பிறந்த குப்பமான Basin Bridge-ஐ கூட மறக்காமல் அதற்கென்று ஒரு பகுதியை ஒதுக்கியிருக்கிறார். அதகளம். ரஹ்மானின் பல பாடல்களின் தாளஇசை பிரமாதமாக அமைந்ததற்கு சிவமணி பிரதான காரணியாய் அமைந்திருப்பார் என்பது இந்த தனி ஆல்பத்திலிருந்து உணர முடிகிறது. இதை வார்த்தைகளில் எழுதி நேரத்தில் வீணடித்துக் கொண்டிருப்பதை கேட்டு அனுபவிப்பது மேல்.

*

என்னைக் கவர்ந்த சமீபத்திய sms ஜோக்:

அமெரிக்க பேராசிரியரும் இந்திய பேராசிரியரும் தங்களுடைய மாணவர்களின் வீரம் குறித்து உரையாடிக் கொண்டிருந்த உச்சத்தில் மோதலாகி அமெரிக்க பேராசிரியர் தன்னுடைய மாணவர்கள் இருவரை அழைத்து சுறாக்கள் நீந்தும் கடலில் குதிக்கச் சொல்கிறார். இரண்டு மாணவர்களும் மறுபேச்சில்லாமல் 'டொடாய்ங் என்று குதித்துவிடுகிறார்கள். அ.பே. பெருமையாக பார்க்கிறார்.

இந்திய பேராசிரியரும் தன்னுடைய இரண்டு மாணவர்களை அழைத்து அதே போல் குதிக்கச் சொல்கிறார். இருவரும் கோரஸாக "முடியாது போடா" என்று சொல்லி விட்டு பின்னிணைப்பாக *(*&$#*(@|)*^ என்கின்றனர்.

இ.பே., அ.பே. வை நோக்கி "பார்த்தீர்களா, எங்களுடைய மாணவர்களின் வீரத்தை?"

*

ஜெயமோகனின் இணைய தளத்தில் ஒரு அன்பர் 'நான் கடவுள்' தொடர்பாக வலைப்பதிவர்கள் எழுதின பதிவுகளையெல்லாம் தொகுத்து ஜெ.மோ. முன் சமர்ப்பித்து விட்டு எழுதுகிறார்.

'நான் பத்தாண்டுகளாக சினிமாவில் வேலைபார்ப்பவன் என்பதனால் இந்த இணைய விமரிசனங்களில் பலர் சினிமாவை எடுப்பவரின் கோணத்தில் ஷாட், பிஜிஎம் , லைட்டிங் எல்லாம் தெரிந்ததுபோல பேசியிருப்பது அபத்தமாக இருக்கிறது என்று தோன்றியது. டிவிடி பார்த்து சினிமாவின் டெக்னிக் தெரிந்தது போல சொல்லிக்கொள்கிறார்கள். ரசிகர்கள் தங்களை ரசிகர்களாக மட்டுமே எண்ணிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.'


சம்பந்தப்பட்ட அன்பருக்கு நான் சொல்ல விரும்புவது: ஒரு காலத்தில் தமிழ்த் திரைப்படங்கள் ரசிகர்களால் எம்.ஜி.ஆர் படம், சிவாஜி படம்' என்ற வகையிலேதான் அடையாளங் காணப்பட்டன. அதே நிலை இன்றும் நீடிக்க வேண்டும் என்றுதான் நீங்கள் விரும்புகிறீர்களா? அந்தக்காலத்தில் சினிமா படப்பிடிப்புகளை குறிப்பாக சண்டைக்காட்சிகள் சம்பந்தமானவற்றை ஸ்டூடியோவிற்கு வெளியே எடுக்க தயங்குவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். சினிமா பற்றிய மயக்கங்கள் பார்வையாளரிடமிருந்து நீங்கிவிடக்கூடாது என்பதற்காக. சங்கப்பாடல்களிலும் சித்தர் பாடல்களிலும் பண்டிதர்கள் தமிழை ஒளித்து வைத்த நிலைமை மாறிவிட்டது. கதாநாயகன் பத்தடி மேலே பறந்து வில்லனின் தோளில் பறவை போல் வந்து அமரும் போது தியேட்டரில் சிரிப்பை கட்டுப்படுத்த சிரமப்படுகிறார்கள்.

திரைக்கு பின்னால் உள்ளவர்களைப் பற்றி அறியும் ஆர்வம் இப்போது அதிகரித்திருக்கிறது. நடிகர்களுக்கென்று திரிந்த ரசிகர் கூட்டத்தின் ஒரு பகுதி ஸ்ரீதருக்கும் பாலச்சந்தருக்குமாக முன்னேற்றம் பெற்றது. திரையில் தோன்றும் பாலா, இளையராஜா பெயருக்கு பார்வையாளர்களிடமிருந்து கைத்தட்டல்கள் கிடைக்கின்றன். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுக்கும் மதுஅம்பாட்டுக்கும் கூட இந்த மரியாதை கிடைத்திருப்பதை பார்த்திருக்கிறேன். சினிமாவின் 'கதை சொல்லல்' என்கிற ஆதாரமான சமாச்சாரத்தைத் தாண்டி அதனுடைய நுட்பங்ககளை அறிவதற்கான, உரையாடுவதற்கான ஆவலும் பார்வையாளர்களிடையே எழுந்திருக்கிறது. அபத்தமாக இருந்தாலும் பரவாயில்லை, அவற்றைப் பற்றி அவர்களும் உரையாடட்டும். அந்த அபத்தமான ஆரம்பப் புள்ளியிலிருந்து நகர்ந்து அவர்களிடமிருந்து கூட நாளைய இயக்குநர்கள் உருவாகி இதுவரை நீங்கள் உருவாக்கி வைத்திருக்கும் குப்பைக் கோபுரங்களை தரை மட்டமாக்கலாம்.

எப்போதும் கண்ணாடிக்குப் பின்புறமிருந்தே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

*

கையில் இரும்பு வளையம் அணிவது மாதிரி, காதில் கடுக்கன் போட்டுக் கொள்வது மாதிரி புரட்சி செய்ய விரும்புபவர்கள் செய்ய வேண்டிய பட்டியலில் பிரதானமானது 'பார்ப்பனிய எதிர்ப்பு'. ஆதிக்க சாதி என்னும் போது அதன் பல்வேறு அடுக்குகளை செளகரியமாக மறந்து அதன் உச்சத்தில் இருக்கிற பார்ப்பனர்களின் ஞாபகம் மாத்திரமே வருவது என்ன மாதிரியான அரசியல் என்று தெரியவில்லை. ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராட வேண்டியதுதான்; எழுத வேண்டியதுதான். ஆனால் மின்சாரம் தடை ஏற்பட்டால் கூட 'இது பார்ப்பனிய சதி' என்று கூக்குரலிடுவது அபத்தமாக இருக்கிறது.

கவிதாசரண் பிப்-மார்ச் 09 இதழில் "பகுத்தறிவை மூடநம்பிக்கையாக்கும் புதிய பார்ப்பனர்கள்' என்ற கட்டுரையின் ஒரு பகுதி:

...இன்று மதம் ஒரு செலாவணிப் பண்டம் போலவும் அரசியல் களத்தில் செல்லுபடியாகிறது. கிழக்குப் பதிப்பகம், மருதன் எழுதிய 'விடுதலைப் புலிகள்'என்னும் புத்தகத்தை வெளியிட்டு விற்றுப் பணம் பண்ணுகிறது. கிழக்குப் பதிப்பகத்துக்கும், மருதனுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் என்ன சம்பந்தம், வெறும் லாப வணிகத்தைத் தவிர? அதே போலத்தான் மதமும் இன்று வணிகப் பண்டமாக விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறது. 'நாங்கள் பெரும்பான்மையானவர்கள்' என்னும் தெனாவெட்டில் இந்து மதவாதிகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். ...


கி.ப., விமர்சிக்கப்பட வேண்டியது இந்த அடிப்படையில் அல்ல.

*

சுஜாதாவின் நினைவு நாள் இந்த மாத இறுதியிலோ என்னவோ வரப்போவதை நினைத்தால் இப்போதே கிலியாக இருக்கிறது. .. நீங்கள் மறைந்து ஓராண்டு உருண்டோடி விட்டாலும் எங்கள் நெஞ்சங்களில் நீங்காமல் வாழ்ந்து... blah.. blah... என்று எழுதப்படப் போகும் அபத்தமான 'தெவசப்' பதிவுகளை நினைத்தால் இப்போதே வயிற்றைப் பிசைகிறது. இம்மாதிரியான சடங்குகளையெல்லாம் தம் வாழ்நாள் முழுக்க கிண்டலடித்துக் கொண்டேயிருந்தவர் சுஜாதா. பெரியாருக்கு சிலை அமைத்து மாலையிடுகிற அரசியல் கோணங்கித்தனம் போல் சுஜாதா குறித்த அழுகைக் கட்டுரைகளையெல்லாம் தயவு செய்து எழுதாதீர்கள் என்று முன் எச்சரிக்கையாக இப்போதே வேண்டுகிறேன். சுஜாதாவின் படைப்புகளை முக்கியமாக non-fictionகளை அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு சிறப்பாக அறிமுகப்படுத்துவதுதான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும் என்று கருதுகிறேன்.

*

குறிப்புகள் தொடரலாம்.

suresh kannan

Saturday, February 07, 2009

நான் கடவுள் (அல்ல)

ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' புதினத்தை படித்து முடிக்கும் போது பின்னிரவு இரண்டு மணியிருக்கும். சற்று நேரம் மூச்சு பேச்சற்று தொட்டால் உடைந்துவிடக்கூடிய நிலையிலிருந்தேன். நவீன இலக்கியத்தில் விளிம்பு நிலை மனிதர்களின் உலகத்தை ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன் போன்றவர்கள் ஏற்கெனவே தொட்டிருந்தாலும் அதை மிக உக்கிரமாக அறிமுகப்படுத்திய அந்தப் புதினத்தின் தாக்கத்திலிருந்து வெளிவர சற்று நேரம் பிடித்தது. அப்போது ஒரு சதவீதம் கூட நான் நினைக்கவில்லை, இதை யாராவது ஒரு திரைப்படமாக்க யோசிப்பார்கள் என்று. அதுவும் தமிழ் சினிமாவில்.

ஆனால் இயக்குநர் பாலா இதை யோசித்திருக்கிறார். அவருக்கு பிடித்தமான சப்ஜெக்ட் என்பதால் இருக்கலாம். பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள் சந்தோஷமான தருணங்களோடு ஆரம்பித்து இடையில் நிறைய பிரச்சினைகளை சந்தித்து பின்பு அதிலிருந்து மீண்டு திரும்பவும் எல்லோரும் சந்தோஷமாக புன்னகைக்கிறதோடு நிறையும். வாழ்வின் இருண்மையான பகுதிகளை யதார்த்தத்தோடு காட்ட எந்தவொரு படைப்பாளியும் முன்வருவதில்லை. பொதுவாக பார்வையாளர்களும் அதைக் காண விரும்புவதில்லை. தினவாழ்வில் பார்த்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகளைப் போய் 'பகற்கனவுகளை' உருவாக்கித்தரும் சினிமாவில் அவர்கள் எதிர்பார்ப்பதில்லை. சினிமாவை தேங்க விடாமல் நகர்த்திச் செல்கிற சில இயக்குநர்களே இந்த மாயையை கலைக்க விரும்புகிறார்கள். இந்த வரிசையில் பாலாவையும் நிச்சயமாக சேர்த்துக் கொள்ளலாம். ஆனால்...

பாலா தனது திரைப்படங்களை தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பில் அடைத்துக் கொள்ள விரும்புகிறார். ஒருவன் இருப்பான். மிக வலிமையானவன்; முர்க்கன். பஞ்ச பூதங்களைத் தவிர யாராலும் அவனைக் கட்டுப்படுத்த இயலாது. சட்டமும் நீதியும் கூட அவனை ஒன்றும் செய்ய முடியாது. சமூகத்தின் தீயசக்தியை வன்முறையின் உக்கிரத்தோடு அழித்து விடுவான். அமைதியாக இருக்கும் அவனை அதற்கு யாராவது உசுப்பிவிட வேண்டும். மிகக் கொடூரமான பூடகமான சூழலில் உருவாக்கப்படும் அவன் சமூகத்தின் நீரோட்டத்தில் கலக்க முற்படும் போது அதற்கான மோதல்கள் நிகழும்.

பாலாவின் நாயகர்கள் தொடர்ந்து இப்படித்தான் இருக்கிறார்கள். இப்போது ருத்ரனாக ஆர்யா. அருவாளை தூக்கிக் கொண்டு எதிர்நாயகனை நோக்கி வீர வசனம் பேசும் வழக்கமான வெகுஜனப்பட நாயகர்களின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகத்தான் பாலாவின் நாயகர்களைப் பார்க்க முடிகிறது. இதுவே பார்வையாளனுக்கு ஒரு சலிப்பைத் தரக்கூடும்.

சாட்டையால் தன்னை அடித்துக் கொண்டு குருதி வழிய பிச்சை கேட்பவனை நாம் பயங்கலந்த விசித்திரத்தோடு பார்ப்போம் அல்லவா? அதே மாதிரியான உணர்வை தமது பார்வையாளர்களுக்கும் தர விரும்புகிறார் பாலா. காசியில் 15 வருடங்கள் வளரும் ருத்ரன் ஒரு பிச்சைக்காரனாக வளரலாம்; பிணங்களை எரிக்கும் தொழிலை மேற்கொண்டிருக்கலாம்; போலிப் புரோகிதராகி தெவச மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கலாம். அவ்வாறெல்லாம் ஆகியிருந்தால் அவன் பாலாவின் வழக்கமான 'நாயகனாகி' இருக்கமாட்டான். எனவே அவன் ஒரு 'அசாதாரண' அகோரியாக பாலாவால் 'உருவாக்கப்பட்டிருக்கிறார்'. சுடுகாட்டில் வளரும் ஒரு சிறுவன் ஏன் அப்படி ஒரு விசித்திர டார்ஜான் மாதிரியாக வெளிவருகிறான் என்று 'பிதாமகனில்' விக்ரம் பாத்திரம் குறித்து நாம் யோசித்தோமே, அவ்வாறே இதற்கும் யோசிக்க வேண்டியிருக்கிறது. பாத்திரங்கள் எந்தவித நெருடலுமின்றி மிக அழுத்தமாக வடிவமைக்கப்படும் போதுதான் பார்வையாளன் அந்தச் சித்திரத்தோடு ஒன்ற முடிகிறது.

Photobucket

பிச்சைக்காரர்களை தினமும் சாலையில் சந்தித்துக் கொண்டிருந்தாலும் அவர்களின் இன்னொரு உலகத்தைப் பற்றி அறியாத நான் எப்படி ஜெயமோகனின் நாவலைப் படித்தவுடன் அதிர்ந்து போனேனோ அவ்வாறே வெகுஜனப் படங்களின் நச்சுப் புகையில் மூச்சு முட்டிக் கொண்டிருக்கும் தமிழ்த்திரைப்பட பார்வையாளர்களுக்கு இந்தப்படம் நிச்சயம் ஒரு புதிய விசித்திரமான அனுபவமாக அமையக்கூடும். ஆனால் அவ்வாறு அடையவிடாமல் பாலாவே சில தடைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். பிச்சைக்காரச் சிறுவர்களின் உலகத்தை நாடகத்தனமாக செயற்கையான உருவாக்காமல் அவர்களுக்கிடையே பரிமாறப்படும் நகைச்சுவையையும் கொண்டாட்டத்தையும் காட்டியிருப்பது ரசிக்கத்தக்கதுதான் என்றாலும் அதுவே சற்று அதீதமாகவும் காவல்நிலையத்தில் நடிகர்களின் பாவனையுடன் கூடிய நடனங்கள், அம்சவல்லி (பூஜா) பின்னணி இசையுடன் பாடும் திரைப்படப் பாடல்கள்.... போன்ற காட்சிகள் படம் ஏற்படுத்த வேண்டிய அழுத்தத்தை நீர்த்துப் போகச் செய்திருக்கின்றன. (பிதாமகனில் தேவையற்ற இடைச்செருகலாக வரும் சிம்ரனின் நடனத்தை நினைவுப்படுத்திக் கொள்ளவும்).

()

ஆர்யா பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் காட்சிகள் எந்தவொரு வெகுஜனப்பட நாயகனின் அறிமுகத்திற்கும் குறைவில்லாமல் செயற்கையான ஆக்ரோஷத்துடனும் பார்வையாளன் வாயைப் பிளக்க வேண்டும் என்கிற முன்தீர்மானத்துடனும் அமைக்கப்பட்டிருக்கிறது.

'உனக்கென்று யாரும் கிடையாது. எல்லா உறவுகளையும் அறுத்துவிட்டு வா' என்று வழியனுப்பி வைக்கிறார் ருத்ரனின் குருஜி. அப்படியானால் அவருக்கும் ருத்ரனுக்கும் உள்ள உறவு என்ன? ஏன் அவன் திரும்பி வர வேண்டும்?

'வாழ இயலாதவர்களுக்கு நீ தரும் வரம் மரணம்' என்று குரு உபதேசித்திருப்பதனால் படத்தின் இறுதியில் அந்தக் குரூரத்தை நிகழத்துகிறான் ருத்ரன். ஆனால் அதே வரத்தை மனச்சாட்சியற்ற வியாபாரக் கொடூரர்களுக்கும் அளிக்கிறான். அப்படியானால் இரண்டு வரங்களுக்கும் என்ன வித்தியாசம்? மறுபிறவியற்ற மோட்ச நிலை ஒன்றுதானா? மற்ற பிச்சைக்காரக் குழந்தைகளும் வாழ இயலாத சூழல் ஏற்பட்டால் அதற்கு தீர்வு ருத்ரனின் தரும் 'வரம்'தானா?

கேள்விகள்... கேள்விகள்...

பல வருடங்களுக்கு முன்பு ஒரு க்ரைம் நாவல் படித்தேன். அந்த ஊரில் உள்ள ஆதரவற்ற வயதான சாலையிலிருக்கும் பிச்சைக்காரர்கள் தொடர்ந்து கொல்லப்படுவார்கள். இறுதியில் பிடிபடும் கொலையாளி கூறும் காரணம் "இவர்களால் சமூகத்திற்கு எந்தப்பயனுமில்லை. இவர்களால் மிச்சப்படும் உணவு மற்றவர்களுக்காவது உதவும். எனவே இவர்களை கொல்வதில் எந்த தயக்கமும் ஏற்படவில்லை. சமூகத்தின் நலனுக்குக்காகத்தான் இதைச் செய்தேன்". அந்த மனநோயாளிக்கும் ருத்ரனுக்கும் அதிக வித்தியாசமில்லை என்றுதான் தோன்றுகிறது.

()

ராஜாவின் பின்னணி இசை மிகைப்படாமல் படத்தின் நிகழ்வுகளோடு இயைந்துப் போகிறது. . 'முதலாளி' தோன்றும் ஆரம்பக்காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் விசித்திரமான ஒலியை குறிப்பிட்டுச் சொல்லலாம்.. 'ஓம் சிவ ஓம்' என்கிற ஆக்ரோஷமான பாடல் மாத்திரமே இந்தப்படத்தின் சூழலுடன் மிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

படத்தின் இறுதிப்பகுதியில் அம்சவல்லி பேசுவது, காவல் நிலையத்தில் நடிகர்களின் காமெடிக் காட்சிகள் தவிர ஜெயமோகனின் வசனம் மற்ற இடங்களில் எந்த வித நெருடல்களுமின்றி யதார்த்தமாக அமைந்திருக்கிறது. (அம்பானி). முழுப்படத்தையும் காசியில் எடுத்திருக்கலாமோ என்னுமளவிற்கு காசி நகரத்தை அத்தனை அழகாக காட்டியிருக்கும் ஆர்தர் வில்சனின் காமிராவில் சுடுகாட்டு நெருப்பு கூட ஒரு சர்ரியலிச ஓவியம் போல் ஜொலிக்கிறது.

'அண்ணாச்சி' கவிஞர் விக்கிரமாதித்யன் ஒரு வயதான பிச்சைக்காரராக நடித்திருக்கிறார். அவருக்கு பொருத்தமான வேடம். நன்றாகவே செய்திருக்கிறார். பார்வையற்ற பெண்ணாக பூஜா சிறப்பாகவே தன் பங்களிப்பை அளித்திருக்கிறார். வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் வரும் நடிகரொருவரும் அவர் கூடவே வரும் திருநங்கையும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முன்னமே சொன்ன மாதிரிஉடற்குறையுள்ள குழந்தைகளை உருக்கத்துடன் சித்தரிக்காமல் அவர்களின் குழந்தைமையோடே காட்டியிருப்பது ரசிக்கத்தக்கதாயிருக்கிறது. விக்ரமாதித்யனின் மடியிலேயே எப்போதும் அமர்ந்திருக்கும் குழந்தை, தங்களின் சோகத்தையெல்லாம் இயல்பான நகைச்சுவையோடு எதிர்கொள்ளும் இரண்டு "பார்ட்னர்கள்", சிவன், பார்வதி, சாமியார் வேடமிட்டவர்கள், குள்ளச்சாமியார், ருத்ரனின் குருவின் கனிந்த முகம், ஆசிர்வாதம் வாங்கும் கான்ஸ்டபிள்.. என்று அத்தனை முகங்களும் நம் மனதில் ஆழமாகப் பதியுமளிவிற்கு அவர்களைச் சுற்றியே காட்சிகளை அமைத்திருக்கிறார் பாலா. ஹீரோயினின் தொப்புளுக்கு குளோசப் வைக்கும் பெரும்பாலான இயக்குநர்கள் மத்தியில் சாலைகளில் நாம் கவனிக்க விரும்பாத முகங்களுக்கு 'குளோசப்' வைக்கும் இப்படியொரு 'பிழைக்கத் தெரியாத' இயக்குநர்.

படத்தில் வரும் பெரும்பாலான இந்துச் சாமியார்கள் பித்தலாட்டக்காரர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். இந்துக்கடவுள்களிடமிருந்து அம்சவல்லிக்கு கிடைக்காத ஆறுதல் 'தேவலாயத்திலும் விவிலிய வார்த்தைகளிலும்தான் கிடைக்கிறது. இயக்குநர் என்ன சொல்ல வருகிறாரோ?

காவல் துறையினரால் அன்றாட வாழ்வில் நாம் தொடர்ந்து கட்டு்ப்படுத்தப்படும் போது அவர்களின் மீது ஏற்படும் ஆழ்மன வெறுப்பு, திரையில் அவர்கள் பழிவாங்கப்படும் போது உற்சாகமாக உருமாறுகிறது. இந்த உணர்ச்சியை பெரும்பாலான காட்சிகளில் பாலா பயன்படுத்திக் கொள்கிறார்.

பிறவிலேயே ஊனமாக பிறப்பவர்களையும், அவ்வாறு அல்லாதவர்களை சிதைத்து ஊனமாக்கியும் பிச்சையெடுக்க வைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மனச்சாட்சியற்ற சமூக விரோதிகளை தண்டிக்க வேண்டிய காவல் துறை மாறாக அவர்களுக்கே கைகட்டி சேவகம் புரிகிறது. அந்த அப்பாவிகளை காப்பாற்ற யதார்த்த வாழ்வில் எந்த 'அகோரியும்' வரமாட்டார் என்பதுதான் உச்சபட்ச சோகம்.

ஆர்யாவைப் பற்றி என்ன சொல்வது? அவரை உசுப்பேற்றி உசுப்பேற்றி உடம்பை ரணகளமாக்கியிருக்கிறார்கள். இந்தப்படம் வந்தவுடன் விக்ரம், சூர்யாவின் வரிசையில் நிற்கும் கனவில் இருக்கும் அவரின் விருப்பம் நிறைவேற நமச்சிவாயம் அருள் புரியட்டும். சிவ ஓம்.

()

இந்தப்படத்தை எந்த வகையில் சேர்ப்பது என்று எனக்கு குழப்பமாக இருக்கிறது. தீர்மானமாக சொல்ல நான் ஒன்றும் கடவுள் அல்ல. (அப்பாடி!). எழுத்தாளர் சுஜாதாவை வெகுஜன எழுத்தாளராகவோ இலக்கியவாதியாகவோ தீர்மானமாக வகைப்படுத்த முடியாத குழப்பம். ஒன்று மட்டும் தீர்மானமாகச் சொல்ல முடியும்.

பெரும்பாலான தமிழ்த்திரைப்பட இயக்குநர்களால் தொடர்ந்து கொட்டப்பட்டிருக்கும் குப்பையான திரைப்படங்களிலிருந்து விலகி பார்வையாளர்களுக்கு வித்தியாசமானதொரு அனுபவத்தை தரவேண்டுமென்று பாலா மிகவும் மெனக்கெட்டிருக்கிறார். அதற்கு மரியாதை செலுத்தும் விதமாகவாவது இந்தத் திரைப்படத்தை ஒருமுறை பார்த்துவிடுதல் நலம்.

அடுத்த படைப்பிலாவது பாலா தனது 'பிரத்யேக' உலகிலிருந்து வெளிவந்து இன்னொரு வகை மாதிரியை முயற்சிக்க, உருவாக்க வேண்டுமென்பது என் விருப்பம். இதுவே ஒரு கிளிஷேவாக மாறி அதிலேயே சிறைப்படக்கூடாது.

இதையும் சொல்ல வேண்டும். ஆர்யாவின் தாடி, காசியின் பின்னணி, அகோரிகளின் பூச்சாண்டி, ராஜாவின் இசை, நான்கு வருட இழுபறி, பொருட்செலவு போன்ற சமாச்சாரங்களை வைத்துக் கொண்டு பாலா தந்த தாக்கத்தை விடவும் இது எதுவும் இல்லாமல் வெறும் காகிதங்களிலேயே இதை விட வலிமையான தாக்கத்தை தனது புதினத்தின் மூலம் ஏற்கெனவே உருவாக்கி விட்டதின் மூலம் பாலாவை கடந்து நிற்கிறார் ஜெயமோகன்.

suresh kannan