Monday, November 30, 2015

கோர்ட் (மராத்தி திரைப்படம்) : நீதியெனும் ஆமை



முயலும் ஆமையும் கலந்து கொண்ட  ஓட்டப் போட்டியொன்றில் ஆமை ஜெயித்ததாக ஒரு பழைய நீதிக்கதையுண்டு. 'ஒருவர் திறமையும் தகுதியும் உள்ளவராய் இருந்தாலும் அவருடைய மிதமிஞ்சிய தன்னம்பிக்கையும் சுயபெருமிதமும் அவரைத் தோல்விக்கு இட்டுச் செல்லக்கூடும்' என்கிற நீதியை வலியுறுத்தும் கதை. ஆனால் யதார்த்தத்தில் ஆமைகள் ஜெயிக்க முடியுமா என்பது ஒரு கேள்விக்குறியே. பொதுவாகவே இந்திய நீதித்துறை இயங்கி வருவதில் உள்ள மெத்தனமும் அலட்சியமும் பற்றி நீண்ட காலமாகவே பல சம்பவங்களும் விமர்சனங்களும் உள்ளன. 'தாத்தா போட்ட வழக்கு பேரன் காலத்தில் கூட முடியுமா என்பது கேள்விக்குறிதான்' என்று இதைப் பற்றி பேச்சுவழக்கில் நகைச்சுவையாக குறிப்பிடப்பட்டாலும் சில வழக்குகள் அவ்வாறே நீடித்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதுதான் நடைமுறை உண்மை. வாரணாசியில் உள்ள தோஷிபுராவில் இரண்டு ஏக்கர் நிலத்திற்காக 1878-ல் தொடரப்பட்ட, இன்னமும் நிலுவையில் இருக்கும் வழக்கே 'இந்தியாவின் மிக நீண்டகால நிலுவையிலுள்ள வழக்காக' கூறப்படுகிறது.

ஒரு நபரின் செல்வாக்கு, புகழ், பணபலம் ஆகியவற்றைப் பொறுத்துதான் சம்பந்தப்பட்ட வழக்குகள் விரைவாகவோ அல்லது நிதானமாகவோ விசாரிக்கப்பட்டு அதற்கேற்ப தீர்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்பதை செய்தித்தாள்களின் மூலம் தினம் தினம் வாசித்து உணர்கிறோம். தனக்கான நீதியை வேண்டிய நிற்கும் ஒருவருக்கு  சமூகத்தின் இன்ன பிற நிறுவனங்கள் கைவிட்டாலும், அந்த சராசரி நபரின் கடைசி புகலிடமாகவும் அடைக்கலமாகவும் நீதித்துறை இருப்பதாக கருதப்படுகிறது. 'ஆமையும் ஒரு நாள் வெல்லக்கூடும் என்கிற நீதிக்கதையைப் போலவே 'நீதியும் என்றாவது ஒருநாள் இறுதியில் வெல்லும்' என்கிற அறம் சார்ந்த இறுதி நம்பிக்கையில்தான் இச்சமூகம் சற்றேனும் ஆசுவாசமாக இயங்குகிறது. அதே சமயத்தில் 'தாமதிக்கப்பட்ட நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியே' என்கிற மேற்கோளையும் இங்கு நினைவில் கூற வேண்டும். இந்திய தேசமெங்கிலும் சுமார் மூன்று கோடி வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.

***

சைத்தன்ய தம்ஹனே இயக்கியிருக்கும் மராத்தி திரைப்படமான 'கோர்ட்', இந்திய நீதித்துறை இயங்குவதில் மெத்தனங்களையும் ஓர் எளிய வழக்கு கூட நீண்ட காலத்திற்கு அநாவசியமான நிதானத்துடன் கையாளப்படுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் அந்த வழக்கை கையாள்பவர்களிடம் அந்த வழக்கோடு உள்ள உளவியல் ரீதியான முரண்களைப் பற்றியும் இந்த நிதானத்தினால் வழக்கில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் காரணமேயின்றி எதிர்கொள்ள வேண்டிய துயரங்களையும் பற்றி உரையாடுகிறது. இந்தியாவில் உருவாகும் வழக்கமான கோர்ட் டிராமா திரைப்படங்களைப் போல ''யுவர் ஆனர்" என்று ஆவேசப்படும்  உரத்த குரலில் அல்லாமலும்  தேய்வழக்கு காட்சிகள், செயற்கையாகத் திணிப்புகள் போன்றவை அல்லாமலும் ஓர் ஆவணப்பட உருவாக்கத்தின் சாயலில் மிக இயல்பான காட்சிகளுடன் இத்திரைப்படம்பதிவாகியுள்ளது. ஆஸ்கர் விருதிற்கான 'சிறந்த வெளிநாட்டுத் திரைப்பட பிரிவில்'  இந்தியாவின் பிரநிதித்துவ திரைப்படமாக இது தேர்வு செய்யப்பட்டிருப்பது இதன் முக்கியத்துவத்தை உணரச் செய்கிறது.

திரைப்படத்தின் துவக்கக் காட்சிகள் இவை. சுமார் 60 வயதுள்ள நாராயண் காம்ப்ளே, குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லித் தந்து முடித்து விட்டு எங்கோ புறப்படுகிறார். பேருந்தில் பயணிக்கும் போது எவரிடமோ 'அங்குதான் வந்து கொண்டிருக்கிறேன்' என்கிறார். தன்னுடைய பென்ஷன் தொடர்பாகவோ அல்லது சமவயது நண்பரைப் பார்ப்பதற்காகவோ அவர் சென்று கொண்டிருக்கிறார் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே பேருந்தில் இருந்து இறங்கி வீதியோரம் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு முற்போக்கு இயக்க செயற்பாட்டு மேடையில் ஏறி உரத்த குரலில் ஆவேசத்தோடு தாழ்த்தப்பட்ட சமூகத்தின் விழிப்புணர்வு தொடர்பான பாடலைப் பாடுகிறார். அவரின் எளிய தோற்றம் சட்டென்று மாறி அவருடைய ஆகிருதி பிரம்மாண்டமடைவதை நம்மால் காண முடிகிறது. பாடலின் இறுதியில் காவல்துறையினர் அவரை சூழ்ந்து கொள்கின்றார்கள். அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பதை அடுத்த காட்சியின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் வழக்கானது இதுதான்.  சாலையிலுள்ள சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்யும் மும்பை மாநகராட்சியின் ஒப்பந்த தொழிலாளியான வாசுதேவ் பவார் என்பவர் பணியின் போது விஷவாயு ஏற்படுத்திய பாதிப்பால் இறந்து விடுகிறார். ஆனால் அவர் இறந்தது விபத்தினால் அல்ல, நாராயண் காம்ப்ளே பாடிய உணர்ச்சிகரமான பாடலின் செல்வாக்கினால்  தற்கொலை செய்து கொண்டார் என்கிற குற்றச்சாட்டு கிளப்பப்படுகிறது.  'கழிவுகளை சுத்தம் செய்யும் தொழிலாளர்களே, உங்களது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள தற்கொலை ஓர் உன்னதமான வழி' என்கிற பொருள் வரும்படியான பாடல் வரி அவர் பாடியதில் இருந்தது. எனவே வாசுதேவ் பவார் தற்கொலைக்கு நாராயணன் காம்ப்ளே காரணமாக இருந்தார் என்பதுதான் வழக்கு.

திரைப்படத்தின் தலைப்பிற்கு ஏற்றபடி  இத்திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அமர்வு நீதிமன்ற சூழலில் நடைபெறும் வழக்கின் விசாரணைக் காட்சிகளாக உள்ளன. அரசாங்க அலுவலகத்தின் சோம்பலான சூழல்,  ஒரு சில சுருக்கமான, சம்பிதாயமான கேள்விகளில் உடனே முடிக்கப்பட்டு அடுத்த விசாரணைக்கு  ஒத்தி வைக்கப்படும் நடைமுறைகள், நீதித்துறையின் பிரத்யேகமான மெத்தனங்கள் போன்றவை ஏறத்தாழ அதே ரியல் டைம் கால அளவோடு  நிதானமாக விவரிக்கப்படுகின்றன. பார்வையாளர்களாகிய நமக்கே இந்த வழக்கு எத்தனை அற்பமானது என்பது எளிதில் விளங்கும் போது  நீதித்துறையானது தனது வழக்கமான நடைமுறைகள் மூலம் இதை நத்தை வேகத்தில் நகர்த்திச் செல்லும் அந்த அபத்தத்தை நம்மால் எளிதில் உணர முடிகிறது.

அரசு வழக்கறிஞர் தம்முடைய தரப்பை நியாயப்படுத்துவதற்காக நாராயண் காம்ப்ளேவை அரசாங்கத்திற்கு எதிரான பயங்கரவாதி போலவும் அவர் வீட்டில் அரசால் தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால் தேச இறையாண்மைக்கே ஆபத்து என்றெல்லாம் வாதாடுகிறார். 'அவை ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாற்றைச் சொல்லும் சாதாரணமான, சென்ற நூற்றாண்டில் தடை செய்யப்பட்ட புத்தகங்கள்' என்று நாராயண் காம்ப்ளேவிற்காக வாதாடும் வழக்கறிஞர் என்று மன்றாடுகிறார். இதன் மூலம் சமகாலத்திற்கு ஒவ்வாத விக்டோரியன் காலத்து சட்டப்பிரிவுகளையும் நடைமுறைகளையும் நீதித்துறை இன்னமும் பிடிவாதமாய் பின்பற்றிக் கொண்டிருக்கும் அபத்தங்கள் காட்சிகளாக விரிவதை நம்மால் உணர முடிகிறது.


நீதிமன்றக் காட்சிகளைத் தவிர்த்து அரசு தரப்பு பெண் வழக்கறிஞர், நாராயணன் காம்ப்ளே தரப்பில் வாதாடும் வழக்கறிஞர், இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஆகியோர்களின் தனிப்பட்ட வாழ்வு தொடர்பான சம்பவங்களும் இடையில் காண்பிக்கப்படுகின்றன. இவை மையப்பிரதிக்கு தொடர்பில்லாததாக உள்ளனவே என்று ஒரு சிலர் நினைக்கக்கூடும். அவ்வாறில்லை. கல்வியறிவு பெற்ற நடுத்தரவர்க்கமானது தங்கள் பாடப்புத்தகங்களையும் பணிபுரியும் துறை சார்ந்த சடங்குகளையும் தாண்டி எவ்வித அரசியல் விழிப்புணர்வோ, சமூக நீதி அவலங்களையோ அறியாத அரசியல் நீக்கம் செய்யப்பட்ட வெற்று நபர்களாக இயங்குகிறார்கள் என்பதை இந்தக் காட்சிகள் உணர்த்துகின்றன.

அரசு தரப்பில் வாதாடும் பெண் வழக்கறிஞர் மற்றும் நீதிபதி ஆகியோரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான காட்சிகள், சராசரியான பாமர நபர்களின் வாழ்வு முறையின் அதே பொதுப்புத்தியோடு எவ்வித வித்தியாசமும் இன்றி இயங்குகின்றன. பெண் வழக்கறிஞர் வீடு திரும்பும் வழியில் சக தோழியிடம் அவருடைய புடவை பற்றி விசாரிக்கிறார். வீடு சென்றதும் இன்னொரு பெண்மணியுடன் தொலைபேசியில் குடும்ப வம்புகள் பேசிக் கொண்டே சமைக்கிறார். பணிகள் முடிந்த இரவு நேரத்தில் மெல்லிய குரலில் ஒரு பாட்டை உல்லாசமாக முனகிய படியே வழக்கின் குறிப்புகளை எழுதுகிறார்.

அந்தக் குடும்பம் உணவருந்தும் ஒரு காட்சியே ஓர் இந்திய குடும்பத்தின் பொதுச்சித்திரத்தை கச்சிதமாக விளக்கி விடுகிறது. அந்த வீட்டின் குடும்பத்தலைவர் நாற்காலியில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்கிறார். மகன் கால் மீது கால் போட்ட படி கட்டிலில் படுத்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆனால் மகளோ தரையில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்கிறாள். சிறுவயதிலிருந்து ஆண் - பெண் பாகுபாட்டோடும் அதன் ஏற்றத் தாழ்வோடும் வளர்க்கப்படும் இந்த தனிநபர்கள் தங்களின் பால் சார்ந்த அடையாளங்களின் எல்லைக்குள் மாத்திரமே உருவாகி சமூகத்திற்குள் வருகிறார்கள். எனவே ஆண்-பெண் தொடர்பான சிக்கல்களும் வன்முறைகளும் ஆண்டாண்டு காலமாக அதன் முரண்களோடு அப்படியே நீடித்து நிலைக்கின்றன.

பெண் வழக்கறிஞரின் குடும்பம் பொழுதுபோக்கிற்காக ஒரு மராத்தி நாடகத்திற்கு செல்கிறது. அது நடுத்தர வர்க்க நபர்களுக்காக உருவாக்கப்பட்ட அசட்டுத்தனமான நகைச்சுவை நாடகம். அந்த நாடகத்தில், சமூகத்தின் அடித்தட்டு நபர் ஒருவரை 'வந்தேறிகள்' என்கிற பொருளில் இனவெறியுடன் கிண்டலடிக்கும் வசனங்கள் உள்ளன. அதைக் கேட்டுஅந்தச் சபை எவ்வித கூச்சமுமின்றி சிரித்து மகிழ்கின்றது. சமூகத்தில் நிலவும் சாதி,மத, வர்க்கம் சார்ந்த ஏற்றத் தாழ்வுகளின் கொடுமைகள், அதன் அவலங்கள், அதன் அரசியல் சரிநிலைகள் பற்றிய எவ்வித விழிப்புணர்வுமின்றி தங்களின் இயந்திரக் கூடுகளுக்குள் இந்த சராசரி நபர்கள் வாழும் பொதுப்புத்தியை இந்தக் காட்சிகள் அடையாளம் காட்டுகின்றன.

நடுத்தர வர்க்கம் கற்கும் கல்வியானது அவர்களது பொருளாதாரத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்திற்காகவும் பொருளியல் நோக்கில் மேலே முன்னரகவும் மட்டும் பயன்படுகிறதேயன்றி அதைத் தாண்டிய சிந்தனைகளுக்கு அவர்கள் செல்வதேயில்லை என்கிற அவலத்தை அந்த பெண் வழக்கறிஞரின் பாத்திரம் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைகிறது. சட்டப் புத்தகங்களில் அச்சாகும் பிரிவுகளையும் விதிகளையும் கிளிப்பிள்ளை போல ஒப்பித்து தன்னுடைய தரப்பை நிறுவுவதற்குத்தான் அவர் முயல்கிறாரே ஒழிய வழக்கிலுள்ள நியாய, அநியாயங்களைப் பற்றி அவர் யோசிப்பதில்லை. சக வழக்கறிஞர்களுடன் நாராயண் காம்ப்ளே வழக்கைப் பற்றி பேசும் போது 'அந்த நபரை அதிக வருடங்கள் சிறையில் அடைக்கலாம், இந்த வழக்கில் இதே முகத்தைப் பார்த்து பார்த்து சலித்துப் போகிறது' என்று அவர் சொல்வதிலிருந்து வழக்கின் தன்மையையும் அதிலுள்ள சமூகபடிநிலை பாகுபாடுகளின் மூலம் நிகழும் கொடுமையையும் பற்றி அவர் பிரக்ஞையில் ஏதும் இருப்பதாகவே தெரியவில்லை. போலவே சட்டத்துறையில் பணியாற்றும் தன்னுடைய பொறுப்புள்ள நிலையைப் பற்றியும்.

இதைப் போலவே நீதிபதியும். ஆங்கிலோ -இந்திய பெண்மணி ஒருவரின் வழக்கை, அவர் அணிந்திருக்கும் ஆடை நீதிமன்ற மரபிற்கு உகந்ததாக இல்லை என்கிற காரணத்தைச் சுட்டி அவர் விசாரிக்க மறுக்கிறார். அந்த நடுத்தர வயதுபெண்மணி அவருடைய சமுகத்து கலாசாரத்தின்படிதான் உடையணிந்திருக்கிறார். அது முகஞ்சுளிக்க வைப்பதாகவும் இல்லை. என்றாலும்  தன்னுடைய ஆசார மனமும் ஆணாதிக்க சிந்தனையும்  இடும் பிற்போக்கு சிந்தனையை நிறைவேற்றுவதற்குத்தான் நீதிபதி தனக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்.

இதற்கு மாறாக பெரியவா் நாராயண் காம்ப்ளே தரப்பில் வாதாடும் வழக்கறிஞர் உயர்நடுத்தர வர்க்கத்து தோரணைகளுடன் இருக்கிறார். ஷாப்பிங் மால்களில் பொருட்கள் வாங்குகிறார்; உயர்ரக விடுதியில் மதுவருந்துகிறார்; கருத்தரங்குகளில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். அவரால் நிறையப் பணம் ஈட்டும்படியான வழக்குளில் நிறைய சம்பாதிக்க முடியும். என்றாலும் அவருக்குள் படிந்திருக்கும் இடதுசாரி சிந்தனைகளின் காரணமாக சமூகப் போராளியான ஏழைப் பெரியவரை ஜாமீனில் எடுக்க தொடர்ந்து மல்லுக் கட்டுகிறார். வெவ்வேறு வர்க்கங்களில் இருக்கும் மனிதர்களிடையே உள்ள எதிர் எதிரான விசித்திர முரணியக்கத்தை இந்தப் பாத்திரங்களின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.

இவர்கள் தங்களின் தனிப்பட்ட வாழ்வுமுறை கொண்டாட்டங்களுடன் இருப்பதில் ஏதும் பிரச்சினையில்லை. ஆனால் அறிவுசார்ந்த துறைகள் மற்றும் சமூகத்தின் மனச்சாட்சியாக நின்று நீதியை நிலைநாட்டும் துறைகளில் உள்ளவர்கள் கூட சமூக அலவங்களைப் பற்றிய சிந்தனையோ, விழிப்புணர்வோ ஏதுமல்லாமல் சுயநலம் மட்டுமே சார்ந்த பாமர இயந்திரங்களாக இயங்கும் போது அவர்களின் மெளடீகத்தனமும்  தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் பிரச்சினைகளைப் பற்றி அக்கறை கொள்ளாத தன்மையும் அவர்கள் சார்ந்த பணிகளிலும் தன்னிச்சையாக எதிரொலிக்கக்கூடிய சாத்தியத்தைப் பற்றிதான் நாம் கவலை கொள்ள வேண்டியிருக்கிறது.

***

நாராயண் காம்ப்ளேவின் வழக்கு விசாரணை பலமுறை ஒத்திப் போடப்பட்ட பிறகு ஒருவழியாக இறுதிக் கட்டத்தை அடைகிறது. அவருடைய தரப்பு வழக்கறிஞர் அதற்கு மிகவும் போராட வேண்டியிருக்கிறது. இறந்த தொழிலாளி வாசுதேவ் பவாரின் பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் அவர் சாக்கடையில் இறங்குவதற்கு முன் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் அணிந்திராததோடு  மதுவருந்தியிருப்பதையும் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது. (இது போன்ற பணிகளை மேற்கொள்கிறவர்கள் ஏன் மதுவருந்துகிறாார்கள் என்பதை விளக்கவே தேவையில்லை). தவிரவும் அவருக்கு மரணம் நிகழ்வதற்கு  முன்பு வரை தற்கொலை நோக்கம் ஏதும் இல்லை என்றும் அது சார்ந்த மனஉளைச்சலோ, அதைப் பற்றிய உரையாடலையோ குடும்பத்தாரிடம் நிகழ்த்தவில்லை என்றும் நிறுவ வேண்டியிருக்கிறது. மேலும் சாட்சி சொல்ல வந்தவர் 'பொய் சாட்சி' என்பதை நிரூபிக்க வேண்டியிருக்கிறது. இத்தனைக் கட்டங்களுக்குப் பிறகே பெரியவருக்கு ஜாமீன் கிடைக்கிறது. அதிலும் குற்றஞ்சாட்டப்பட்டவரின் பொருளாதாரத்திற்கு மீறிய பெரிய தொகையை ஜாமீனாக கட்ட நீதிபதி வலியுறுத்துகிறார். ஏனெனில் அரசாங்கத்தை அசெளகரியப்படுத்தும் விஷயங்களை மீண்டும் மீண்டும் அந்தப் பெரியவர் செய்து கொண்டேயிருக்கிறார் என்கிற காரணத்திற்காக. ஜாமீன் தொகையை நாராயண் காம்ப்ளேவின் சார்பில் அவருக்காக வாதாடும் வழக்கறிஞரே கட்டுகிறார்.

இந்த வழக்கில் இந்த அமர்வு நீதிமன்றமானது, மிகப் பிரதானமாக  கவனித்திருக்க வேண்டிய விஷயம் 'மனிதக் கழிவுகளை அகற்ற மனித சக்தியை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது, இது மனித உரிமைக்கு எதிரானது, பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு கண்டிப்பாக பாதுகாப்பு உபகரணங்களை அளிக்க வேண்டும். இதற்கு மாற்றாக இயந்திரங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்" என்று உச்சநீதிமன்றம் இம்மாதிரியான மரணங்களை தவிர்ப்பதற்கான வழிகாட்டல்களை உறுதியான குரலில் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. இது மனிதஉரிமை சார்ந்த மீறலும் கூட. என்றாலும் நடைமுறையில் அது சாத்தியப்படாததற்கு அதிகார வர்க்கத்தினருக்கு அடிமட்ட சமூகத்திலுள்ள மனித வளத்தின் மீதான அலட்சியமும் ஆதிக்க சாதி  மனப்பான்மையும்தான் காரணமாக இருக்கிறது. ஒருபுறம் வல்லரசாகும் நோக்கில் பல கோடி செலவில் ராக்கெட் தயாரிப்புகள் நிகழ்ந்து கொண்டிருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சமூகம் பல்லாண்டு காலமாக சக மனிதர்களின் கழிவுகளைச் சுத்தம் செய்யவும் சுமந்து செல்வதுமான நடைமுறை அவலம் இன்னமும் நீக்கப்படாமலிருக்கும் துயரத்தையும் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஆனால் அடிப்படையான இந்த விஷயத்தை நீதிமன்றங்களும் அரசு நிறுவனங்களும் கவனிக்காமல் சமூகப் பேராளி பாடிய பாடலால்தான் தூண்டப்பட்டு அந்தத் தொழிலாளி பலியானார் என்று நிறுவ முயல்வது பிரச்சினையை திசை திருப்புவதேயாகும். இரண்டாவதாக ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகமானது தங்களின்  துயரங்களை கலை, இலக்கியங்களின் எளிய மொழியின் வழியாக வெளிப்படுத்துவது இயல்பானது. துயரத்தின் எல்லைக்கே செல்லும் போது மரணம் கூட ஓர் ஆயுதமாக மாறுவது சமூகவியல் நோக்கில் எதிர்பார்க்கக்கூடியதுதான். 'தற்கொலையின் மூலம் சுயமரியாதையைப் பெறுங்கள்' என்பது எதிர்ப்பின் உச்சத்தில் அமையும் ஓர் கலகக்குரல். எத்தனையோ ஆண்டுகளைத் தாண்டியும் நவீன சமூகத்தில் கூட அவர்களுக்கான சமூக நீதி இன்னமும் வழங்கப்படாமலிருக்கும் போது இவ்வாறாக எழும்பும் ஆவேசக் குரல்களை அரசு கவனித்துத்தான் ஆக வேண்டும். அதற்கு மாறாக  இவைகளை சட்டத்தின் துணை கொண்டு அச்சுறுத்தியாவது தடை செய்ய முயல்வது ஓர் இந்திய குடிமகனுக்கு வழங்கப்பட்டிருக்கும் அடிப்படையான கருத்துரிமையை முடக்க முயல்வதற்கு ஈடாகத்தான் அமையும்.

கண்டிப்பான நிபந்தனைகளின் பேரில் பெரியவர் நாராயண் காம்ப்ளேவிற்கு ஜாமீீன் வழங்கப்பட்டாலும் அதிகாரத்தின் அடக்குமுறைகளுக்கு பணிகிற ஆளாகிற அவர் இல்லை. மறுநாளே தெருமுனைக் கூட்டமொன்றில் சமூக நீதி வேண்டி ஆவேசமான குரலில் பாடுகிறார். இந்திய இலக்கியத்தில் 'தலி்த் இலக்கியம்' என்றொரு வகைமை முதன் முதலில் உருவானதே மராத்திய சமூகத்திலிருந்துதான். பிறகுதான் அது மெல்ல மாநிலங்களுக்கும் பரவ ஆரம்பித்தது. எனவே அவ்வாறான பின்புலத்திலிருந்து உருவான ஒரு போராளியை சட்டவிதிகள் கொண்டு முடக்கி விட முடியும் என்று எதிர்பார்க்க முடியாது. காவல்துறை நாராயணன் காம்ப்ளேவை மீண்டும் கைது செய்கிறது. மீண்டும் அதே நீதிமன்ற சூழல். விசாரணை ஒத்தி வைப்புகள்.  கோடை விடுமுறைக்காக நீதிமன்றம் ஒரு மாதம் இயங்காது என்பதை அறிந்தும் கூட பெரியவரின் வயதையும் கருத்தில் கொள்ளாமல் நீதிபதி ஜாமீன் வழங்க மறுக்கிறார். காவல்துறையினர் அந்தளவிற்கான கடுமையான சட்டப்பிரிவுகளில் குற்றத்தை பதிவு செய்திருக்கின்றனர்.

கோடை விடுமுறைக்காக கடைசி நாளின் நீதிமன்றம் கலைந்து செல்வதும் அந்த அறையில் மெல்ல இருள் பரவுவதுமான குறியீட்டுக் காட்சியுடன் படம் ஏறத்தாழ நிறைகிறது. நீதிமன்றங்களுக்கு ஒருமாத கோடை விடுமுறை அளிப்பது என்பது பிரிட்டிஷ் ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட நடைமுறை. அந்தச் சமயத்தில் இந்தியாவில் வெயில் அதிகமாக இருக்கும் என்பதாலும் நீதிபதிகள் இங்கிலாந்திற்கு சென்று தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழிப்பதற்காகவும் அந்த நீண்ட கால விடுமுறை அப்போது ஏற்படுத்தப்பட்டது. ஆனால் சுதந்திர இந்தியாவில் கோடிக்கணக்கிலான வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்கும் போது, அந்த வழக்குகளில் குற்றஞ்சாட்ப்பட்டு விசாரணைக் கைதிகளாய் சிறையில் வாடும் அப்பாவிகளின் துயரங்களை கணக்கில் கொள்ளாமல் நீதிபதிகள் உல்லாசப் பயணம் செல்லும் இந்த பிரிட்டிஷ் கால நடைமுறை இன்னமும் அப்படியே பின்பற்றப்பட வேண்டுமா என்கிற விமர்சனங்களும் எழுகின்றன. இது குறித்த கருத்தை ஓய்வுபெற்ற நீதிபதியான சந்துருவும் வெளியிட்டுள்ளார்.

இந்திய நீதிமன்றங்கள் சமூகநல நோக்கில் சில  அசாதரணமான சமயங்களில்  முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன். கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டபடி சமூகத்தின் இதர நிறுவனங்கள் கைவிட்டாலும் ஒரு சாதாரண நபரின் கடைசிப் புகலிடம் நீதிமன்றம்தான் என்பதில் பொதுச்சமூகம் ஆழமான நம்பிக்கையைக் கொண்டிருக்கிறது. விழுமியங்களை பின்பற்றுவற்கான சதவீதம் குறைந்து கொண்டே வந்தாலும் சமூகத்தின் இன்னமும்  பொதுவான அறவுணர்வு மங்கிப் போகாமலிருக்கும் நம்பிக்கையின் மீதுதான் இச்சமூகம் இயங்கி வருகிறது. நீதித்துறையைச் சார்ந்த பல தனிநபர்கள் இந்த நம்பிக்கையை அவர்களின் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளின் மூலம் பலமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் என்பது வரலாறு. என்றாலும் ஓட்டுமொத்த நீதியமைப்பின் இயங்குமுறையில் உள்ள நடைமுறை மெத்தனங்களையும் செல்வாக்குள்ளவர்கள் சட்டத்தின் இடுக்குகளில் புகுந்து எளிதாக தப்பிக்க இயலும் அதே சமயத்தில் எளிய மக்களின் மீது அது கடுமையாக கருணையின்றி பாயும் அவலங்களையும் நியாயமான கருத்துரிமைக்கு ஆதரவாக அது சார்ந்த செயற்பாட்டாளர்களை பிரத்யேக கவனத்துடன் நீதித்துறை அணுக வேண்டிய அவசியங்களையும் பற்றி 'கோர்ட்' திரைப்படம் பிரச்சாரக் குரல் ஏதுமின்றி ஆனால் அழுத்தமாக நிறுவும் வகையில் முக்கியமான கலை ஆவணமாக மாறி நிற்கிறது.

இயக்குநர் சைத்தன்ய தம்ஹனே இதற்கு முன் சில ஆவணப்படங்களை இயக்கியிருந்தாலும் இதுவே அவரது இயக்கத்தில் வந்த முழு நீள திரைப்படமாகும். தனது முதல் திரைப்படத்தையே மிக அழுத்தமான தடமாக சமூகம் சார்ந்த அக்கறையுடன் பதிவு செய்திருக்கும் வகையில் அவரது பணி பாராட்டப்பட வேண்டியது. நாராயண் காம்ப்ளேவாக நடித்திருக்கும் பெரியவர் Vira Sathidar முதற்கொண்டு அவர் தரப்பில் வாதாடும் வழக்கறிஞராக நடித்திருக்கும் Vivek Gomber (இவர் படத்தின் தயாரிப்பாரும்  கூட) வரை அனைவருமே தங்களின் இயல்பான நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.  நாம் பார்ப்பது ஒரு திரைப்படம் என்கிற உணர்வே வராமல் ஒரு வழக்கின் தொடர் விசாரணையைக் கவனிக்கும் விதத்திலான இயல்புத்தன்மையுடன் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவேதான் இது இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதிற்கு தேர்வு செய்யப்படும் தகுதியைப் பெற்றுள்ளதோடு தேசிய விருது உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது. 

அம்ருதா - நவம்பர் 2015-ல் வெளியான கட்டுரை (நன்றி: அம்ருதா)

suresh kannan

Friday, November 06, 2015

'ஆச்சி' மனோரமா - நகைச்சுவைத் திலகத்தின் வெற்றிடம்


தமிழ்த்திரை போல வேறெந்த திரையுலகிலும் இத்தனை நீண்ட, தொடர்ச்சியான, அதிக எண்ணிக்கையிலான நகைச்சுவை நடிகர்களின் வரிசையில்லை. ஆனால் அதில் பெரும்பான்மையானவர்கள் ஆண் நடிகர்கள்தான் என்பதை கவனிக்க வேண்டும். உலகெங்கிலும் கூட இதுதான் நிலைமை. பெண் நகைச்சுவையாளர்கள் குறைவு. தமிழ்த் திரையில் கூட டி.ஏ மதுரம், சி.டி.ராஜகாந்தம், டி.பி.முத்துலட்சுமி, எம்.சரோஜா, அங்கமுத்து, காந்திமதி, சச்சு, கோவை சரளா போன்று ஒருசில பெயர்களை மட்டுமே சொல்ல முடியும். ஆணாதிக்கம் நிறைந்த உலகில் பெண் சாதனையாளர்கள் அரிதாகவே உருவாகி வர முடியும் என்கிற சமூகவியல் காரணம் ஒன்றுண்டு என்றாலும் பொதுவாக பெண்களுக்கு நகைச்சுவையுணர்வு குறைவு அல்லது இல்லை என்கிற பொதுப்புத்தி சார்ந்த கருத்தை அநாயசமாக உடைத்துப் போட்டவர் நடிகை மனோரமா. இந்த வகையில் இவரின் பங்கு மகத்தானது. பெரும்பாலும் ஆண்மைய சிந்தனையையே சார்ந்து இயங்கும் இந்தச் சமூகத்தில் ஒரு பெண் கலைஞர் தன்னுடைய துறையில் மிக  நீண்ட காலம் இயங்கி நாடகங்களில் துவங்கி பிறகு பல மொழிகளில் சுமார் ஆயிரத்து ஐநூறு திரைப்படங்களுக்கும் மேலாக நடித்து முடித்திருக்கிறார் என்பதில் அவரின் நடிப்பாற்றலையும் தாண்டி சமூகவியல் நோக்கிலும் இது அரிதான ஓர் உலக சாதனை என்பதில் சந்தேகமில்லை.

பொதுவாகவே நகைச்சுவையாளர்களின் தனிப்பட்ட வாழ்வு துயரமும் சோகமும் கொண்டதாக இருக்கும் என்பார்கள். மனோரமாவின் வாழ்வும் இதற்கு விதிவிலக்கல்ல.  சுயநலமான ஆண்களால் வஞ்சிக்கப்பட்ட உலகம் அவருடையது. மனோரமா பத்து மாதக் குழந்தையாக இருந்த போது 'பெண் குழந்தை பிறந்த எரிச்சலில்' அவருடைய தந்தை காசி கிளாக்குடையார் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். மனோரமாவின் தாய் ராமாமிர்தத்தின் தங்கையையே அவர் இரண்டாவதாக மணம் புரிந்தார். தன்னுடைய சொந்த சகோதரியினாலும் கணவனாலும் பல துன்புறுத்தல்களுக்கு ஆளானார் ராமாமிர்தம். தற்கொலை முயற்சியிலிருந்தும் காப்பாற்றப்பட்டார். தாக்குப்பிடிக்க முடியாத அந்தச் சூழலில் குழந்தை மனோரமாவைச் சுமந்து கொண்டு மன்னார்குடியிலிருந்து காரைக்குடியிலுள்ள பள்ளத்தூருக்கு இடம் பெயர்ந்தார். அங்கிருந்த செட்டியார் குடும்பமொன்றில் பணிப்பெண்ணாக பணிபுரிந்தார்.

மிகுந்த வறுமையான சூழ்நிலையில் வளர்ந்தாலும் சிறுவயதிலேயே மனோரமாவிற்குள் இசை குறித்த ஞானம் இயற்கையாக படிந்திருந்தது. ஒரு பாடலைக் கேட்ட மாத்திரத்திலேயே அதை அப்படியே பாடும் திறன் இருந்தது. பள்ளி நிகழ்ச்சியொன்றில் 'பாருக்குள்ளே நல்ல நாடு' எனும் பாரதியின் பாடலை அவரே தன்னிச்சையாக 'காற்றினிலே வரும் கீதம்' எனும் எம்.எஸ் பாடிய பாடலின் மெட்டில் பாடியதை அனைவரும் பாராட்டினர்.  அவருடைய பாட்டுத் திறமை காரணமாக நாடகங்களில் பாடும் வாய்ப்பும் கிடைத்தது. வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை தொடர இயலாத சூழலில் சம்பாத்தியத்திற்காக நாடகங்களில் சிறு வேடங்களில் நடிக்கத் துவங்கினார். அதிலும் அவரும் திறமை வெளிப்பட்டு புகழ் கிடைத்தது. மனோரமாவின் அசாத்தியமான திறமையை அறிந்து கொண்ட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் அவரை தன்னுடைய நாடகக் குழுவில் இணைத்துக் கொண்டார்.

தமிழ் திரையில்  'மாலையிட்ட மங்கை' திரைப்படத்தின் மூலம் நகைச்சுவைப் பாத்திரத்தில் அறிமுகமானார் மனோரமா. கவிஞர் கண்ணதாசனின் மூலம் இந்த அறிமுகம் நிகழ்ந்தது. 'தனக்கு நகைச்சுவை வராது' என்பதற்காகவும் நாயகியாக நடிக்க விரும்பிய காரணத்தினாலும் அவருக்கு நகைச்சுவைப் பாத்திரத்தில்  நடிக்க தயக்கம் இருந்தது. 'நாயகியாக நடித்தால் சில வருடங்கள் மட்டுமே நடிக்க முடியும். நகைச்சுவை நடிகை என்றால் பல ஆண்டுகளுக்கு நடிக்கலாம்' என்கிற கண்ணதாசனின் அறிவுறுத்தலும் வழிகாட்டுதலும் பிற்பாடு உண்மையாகிப் போனது. அதற்குப் பிறகு 'கொஞ்சும் குமரி' உள்ளிட்ட சில படங்களில் மனோரமா நாயகியாக நடித்தாலும் நகைச்சுவை நடிகை என்கிற அடையாளமே அவருக்கு அழுத்தமான அடையாளத்தை உருவாக்கியது.

பல சிரமங்களுக்கிடையில் தன்னை வளர்த்து உருவாக்கிய தாய் ராமாமிர்தம் மீது மனோரமாவிற்கு பெரும் பக்தியே உண்டு. ஆனால் அவருடைய தாயைப் போலவே மனோரமாவின் தனிப்பட்ட வாழ்வும் துயரச் சாயலுடன் அமைந்தது. தன்னுடன் திரைப்படங்களில் நடித்த ராமநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மனோரமா. ஆனால் இந்த இன்ப வாழ்வு குறுகிய காலத்திலேயே முடிவுக்கு வந்து விட்டது. மனோரமாவிற்கு குழந்தை பிறந்த நேரத்தில் ஏற்பட்ட சச்சரவு காரணமாக ராமநாதன் அவரைப் பிரிந்து சென்று விட்டார். வேறு திருமணமும் செய்து கொண்டார். தனக்குப் பிறந்த மகனுடன் அதற்குப் பிறகான தன்னுடைய நீண்ட வாழ்க்கையை தனிமையுடன் எதிர்நீச்சல் போட்டு கடந்து வந்தார் மனோரமா. ராமநாதன் இறந்த சமயத்தில் அவர்களுக்குப் பிள்ளையில்லை என்கிற காரணத்தினால் கணவரின் துரோகத்தையும் மறந்து தன்னுடைய மகனின் மூலம் அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய வைத்ததில் மனோரமாவின் நல்லியல்பை புரிந்து கொள்ள முடிகிறது.

***

கோபிசாந்தா என்கிற இயற்பெயருடைய மனோரமாவின் நீண்ட கலைப்பயணத்தை பொதுவாக இரண்டு பகுதிகளாக காண முடியும்.அறிமுகமான  'மாலையிட்ட மங்கை' துவங்கி மிக நீண்ட காலத்திற்கு விதம் விதமான பல்வேறு பாத்திரங்களில் நகைச்சுவை நடிகையாக நடித்தவர் மனோரமா. ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அல்லது வட்டாரத்தை சேர்ந்த கதாபாத்திரமாக நடிக்க நேர்ந்தால் குறுகிய நேரக் கற்றலிலேயே தன்னுடைய உடல் மொழியையும் மாற்றிக் கொள்வதோடு அந்த வட்டார மொழியையும் கச்சிதமாக உச்சரிக்கும் திறமை இயற்கையாகவே மனோரமாவிற்குள் படிந்திருந்தது. தன்னுடைய இளமைப் பருவத்தின் பெரும்பான்மையையும் காரைக்குடி பகுதியில் கழிக்க நேர்ந்ததால் நகரத்தார்களின் வட்டார வழக்கை இவரால் மிகத்திறமையாக பின்பற்ற முடிந்தது. பல நாடகங்கள் முதற்கொண்டு தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் ( 'ஜில் ஜில் ரமாமணி') உள்ளிட்டு வெளிப்பட்ட இந்த பிரத்யேகமான திறமையை பல திரைப்படங்களில் காண முடியும். இந்தத் திறமையின் மூலமாக அன்பாக வழங்கப்பட்டு இவருடன் ஒட்டிக் கொண்ட 'ஆச்சி' என்கிற அடைமொழி இறுதி வரைக்கும் பயணித்தது.

நாகேஷ், சோ, சந்திரபாபு, விகே ராமசாமி, தேங்காய் சீனிவாசன் போன்ற நகைச்சுவை நடிகர்கள் முதற்கொண்டு அடுத்தடுத்த தலைமுறையைச் சார்ந்த ஏறத்தாழ தமிழின் பெரும்பாலான  நடிகர்களுடன் நடித்த சாதனை மனோரமா ஒருவருக்கே இருக்க முடியும். நகைச்சுவைப் பகுதிதானே என்று அலட்சியமாக அல்லாமல் அதிலும் தன்னுடைய அர்ப்பணிப்பையும் குணச்சித்திரத்தோடு கூடிய நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தும் அரிதான திறமையைக் கொண்டிருந்தார் மனோரமா. 'அன்பே வா' திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு சொந்தமான வீட்டை 'அவர்தான் உரிமையாளர்' என்று அறியாமல் அவரிடமே வாடகைக்கு தருவார் நாகேஷ். இந்த உண்மை மனோரமாவிற்கு மட்டுமே தெரியும். ஆனால் இதைச் சொல்ல விடாமல் தடுத்து விடுவார் எம்.ஜி.ஆர். இந்த விஷயங்களை அறியாத நாகேஷ் தன்னுடைய பிரத்யேகமான நகைச்சுவையோடு எம்.ஜி.ஆரிடம் ஆர்ப்பாட்டமாக அதிகாரம் செய்வார். நாகேஷிடம் உண்மையை சொல்லவும் முடியாமல் சொந்த வீட்டிலேயே தன் முதலாளி எதிர்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களை தாங்கவும் முடியாமல் தத்தளிப்பார் மனோரமா. தன்னுடைய நகைச்சுவை நடிப்பிற்கு இடையில் அதையும் தாண்டி இந்த தத்தளிப்பையும் சங்கடத்தையும்  மிகத் திறமையாக வெளிப்படுத்தும் இயல்பான நடிகையாக விளங்கினார்  மனோரமா. இது போல் பல திரைப்படங்களை உதாரணமாக சொல்ல முடியும். ஏ.பி. நாகராஜன் இயக்கிய கண்காட்சி என்கிற திரைப்படத்தில் ஊமை, ஆங்கிலோ இந்தியன் என ஒன்பது வேடங்களில் நடித்திருக்கிறார்.

மனோரமாவின் இந்த  நீண்ட நகைச்சுவைப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்ததாக 'உன்னால் முடியும் தம்பி' திரைப்படத்தைச் சொல்லலாம். நகைச்சுவை நடிகையான மனோரமாவிற்குள் இருந்த குணச்சித்திர நடிகையின் அபாரமான திறமை வெளிப்படுமாறு அவரது பாத்திரத்தை அத்திரைப்படத்தில் சிறப்பாக வடிமைத்திருந்தார் பாலச்சந்தர். வாய் பேச இயலாத நாதஸ்வர வித்வானின் மனைவியாகவும் கமல்ஹாசனின்  அன்பான அண்ணியாகவும் தன்னுடைய மாமனார் ஜெமினி கணேசனின் பழமைவாத செயற்பாடுகளை பொறுத்துப் பார்த்து ஒரு கணத்தில் வெடித்து தீர்ப்பவராகவும் தன்னுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதுவரை பெரும்பாலும் நகைச்சுவை நடிகராக மட்டுமே அறியப்பட்டிருந்த மனோரமா சிறந்த குணச்சித்திர நடிகையாகவும் தமிழ் சினிமா அறிந்தது, இந்தப் படத்திற்குப் பிறகுதான். இதைப் போலவே வசந்த் இயக்கிய 'நீ பாதி நான் பாதி' திரைப்படத்திலும் வித்தியாசமான நடிப்பை வழங்கிய மனோரமாவைப் பார்க்க முடியும்.

தமிழ் திரையுலகின் ஒரு துரதிர்ஷ்டம் என்னவென்றால் ஒரு பாத்திரம் ஒருவருக்கு பொருத்தமாக அமைந்து விட்டால் அல்லது அது வெற்றி பெற்று விட்டால் அதை ஒரு அழுத்தமான முத்திரையாக  அந்த நடிகரின் மீது குத்தி ஏறத்தாழ அனைத்து இயக்குநர்களுமே அதைப் போன்ற பாத்திரத்தையே தொடர்ந்து தருவார்கள். காவல் துறை நபர், அப்பாவி வேலைக்காரர் என்பது போன்று ஒரே பாத்திரத்திலேயே தங்களின் வாழ்நாள் முழுவதையும் கழித்த துணை நடிகர்கள் உண்டு. இதனாலேயே சிறிய வேடங்களில் நடிக்கத் தயங்கும் நடிகர்கள் உண்டு. எனவே இதற்கு முன் பெரும்பாலான திரைப்படங்களில் நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்த மனோரமாவை 'உன்னால் முடியும் தம்பி' திரைப்படத்திற்குப் பிறகு பெரும்பாலான நாயகர்களின் அம்மா பாத்திரத்தில் பொருத்தி பொங்கி பொங்கி அழ வைத்தனர். 'அம்மா சென்ட்டிமென்ட் காட்சியா, கூப்பிடு மனோரமாவை' என்றாகி விட்டது. படப்பிடிப்புத் தளத்திற்குள் வரும் முன்னரே அவர் மூக்கைச் சிந்திக் கொண்டே வர வேண்டும் என்றாக்கி விட்டனர். இந்தத் தேய்வழக்கு பயன்பாட்டிற்கு இடையிலும் அவருடைய திறமை தன்னிச்சையாக வெளிப்பட்டுக் கொண்டுதான் இருந்தது. வி.சேகர் என்றொரு குடும்பப்பட இயக்குநர். அவர் படங்களில் வருபவர்களில் எல்லோருமே மிகையுணர்ச்சியோடு கத்திக் கொண்டேயிருப்பார்கள். இவர் இயக்கிய திரைப்படங்களில் ஒன்றான 'நான் பெத்த மகனே' வில் தன் ஒரே மகனின் மீது அதீதமான பாசமும் பொசசிவ்னஸ் குணாதிசயமும் உள்ள தாயாக மனோரமா நடித்திருப்பார். அது வெகுசன திரைப்படம்தான் என்றாலும் அந்த மெலோடிராமாவிற்குள்ளேயும் தன்னுடைய இயல்பான நடிப்பை மனோரமா வெளிப்படுத்தினார்.

நடிகர்களில் பொதுவாக இருவிதமுண்டு. இயக்குநரின் படைப்பாற்றலை பெரிதும் நம்பி தம்மை முழுமையாக அவரிடம் ஒப்புக் கொடுத்து விடும் நடிகர்கள். சம்பந்தப்பட்ட இயக்குநர்கள்தான் இவர்களின் நடிப்பாற்றலை உணர்ந்து அதற்கேற்ப பாத்திரங்களை வடிவமைத்து அந்த உணர்வுகளை, உடல்மொழியை இவர்களிடம் விளக்கி விட்டால் போதும். தம்முடைய பகுதியை இந்த நடிகர்கள் சிறப்பாக அசத்தி விடுவார்கள். இவர்கள் இயக்குநர்களின் செயல்களில் பெரும்பாலும் தலையிட மாட்டார்கள். சிவாஜி போன்றோர் இவ்வகையானவர்கள். இன்னொரு வகையான நடிகர்கள் ஒருநிலையைக் கடந்த பின்னால் தங்களின் பாதையை தாங்களே வடிவமைத்துக் கொள்வார்கள். அதற்கேற்ப கதைகளை, இயக்குநர்களை அமைத்துக் கொள்வார்கள். எம்.ஜி.ஆர், கமல் போன்றவர்கள் இந்தவகையினர்.

மனோரமா முதல் வகையைச் சார்ந்தவர். இயக்குநர் தம்மிடம் என்ன விளக்குகிறாரோ, அவற்றை உள்வாங்கி தமிழ் வெகுசன சினிமாவின் வழக்கமான போக்கிற்கு ஏற்ப திறமையாக வெளிப்படுத்துபவர். மனோரமாவின் முற்கால திரைப்படங்களைக் கவனித்தால் துடுக்குத்தனமான பெண்ணாக, சக நகைச்சுவை ஆண் நடிகர்கள் வழிந்து துரத்த உள்ளுக்குள் மறுகினாலும் அவர்களை கண்டிப்புடன் துரத்துபவராக இருப்பார். பெரும்பாலான திரைப்படங்கள் இப்படித்தான். ஏற்கெனவே குறிப்பிட்டபடி 'அம்மா' நடிகையான பிறகு வழிய வழிய கண்ணீர் சிந்தும் பாத்திரங்கள். இவர் 'பொம்பளை சிவாஜி' என்றழைக்கப்பட்டது ஒருவகையில் சரியானதே. ஏனெனில் சில அரிதான விதிவிலக்குகளைத் தவிர்த்து சிவாஜியைப் போலவே வீணடிக்கப்பட்ட கலைஞர்களில் மனோரமாவும் ஒருவர். மனோரமாவின் பன்முகத் திறமையை சரியாக பயன்படுத்திக் கொள்ளாத தமிழ்த்திரை இயக்குநர்களைத்தான் இதற்கு நொந்து கொள்ள வேண்டும். 'திருநங்கை' பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்கிற அவரது நீண்ட கால ஆசை நிறைவேறாமல் நிராசையாகவே முடிந்து விட்டது.

மனோரமா திரையுலகில் புகழ்பெற்ற நடிகையாக நிலைபெற்றுவிட்ட காலத்திலும் நாடகங்களில் நடிப்பதையும் கைவிடாத தொழில்பக்தியைக் கொண்டிருந்தார். பார்வையாளர்களின் உடனடி கைத்தட்டலையும் எதிர்வினையையும் சினிமாவில் சம்பாதிப்பதை விடவும் பெரும் செல்வமாக கருதினார். சில வானொலி, தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தார். முறையான சங்கீதப் பயிற்சி இல்லாவிட்டாலும் துவக்க காலம் முதலே கேள்வி ஞானத்தின் மூலம் பாடல்களை பாடும் திறமையைக் கொண்டிருந்த மனோரமா தன்னுடைய கணீர் குரலால் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப் பாடல்களையும் பாடியுள்ளார். சென்னை வட்டார வழக்கு மொழியில் இவர் பாடிய 'வா வாத்யாரே வூட்டாண்ட..' எனும் பாடல் அது வெளிவந்த காலத்தில்  மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

மேடை நாடக மரபிலிருந்து திரையுலகிற்கு இடம்பெயர்ந்த கலைஞர்களின் வரிசையில் அதன் கடைசிக் கண்ணிகளில் ஒருவராக இருந்தவர் மனோரமா. தங்களுடைய கலையின் மீது பக்தியும் அர்ப்பணிப்பும் உள்ளவர்கள் 'தங்களின் கலைச் செயலாற்றல் வெளிப்படும் போதே உயிர் பிரிய வேண்டும்' என்று நினைப்பார்கள். மனோரமாவும் அது போன்ற எதிர்பார்ப்பை பல சமயங்களில் வெளிப்படுத்தியிருந்தார். தன்னுடைய இறுதிக்காலம் வரை ஏதோவொரு திரைப்படத்தில் நடிக்கும் அயராத உறுதி அவரிடம் இருந்தது. சமூகத்தின் ஏனைய துறைகளைப் போலவே ஆண்மைய சிந்தனையோடு இயங்கும் திரையுலகில் தன் தனிப்பட்ட துயரங்களையும் மீறி நீண்ட காலத்திற்கு பல நூறு திரைப்படங்களில் நடித்து பெண்  நகைச்சுவை நடிகர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடி கலைஞராக விளங்கிய அந்த நகைச்சுவைப் பேரரசி ஏற்படுத்திய வெற்றிடமும் சாதனைகளும்  நிரந்தரமாக இருக்கும். 

- உயிர்மை - நவம்பர் 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)


suresh kannan