Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

Monday, April 29, 2013

கடவுள் வந்திருந்தார் – சுஜாதா – பாரதி மணி



சென்னையிலுள்ள கன்னிமரா நூலகத்திற்கு எத்தனையோ முறை போயிருக்கிறேன். ஆனால் அதே வளாகத்திலுள்ள மியூசியம் அரங்கிற்கு இதுவரை ஒருமுறை கூட சென்றதில்லை. பகல் நேரங்களில் வெயிலில் மொட்டைகள் பளபளக்க சுந்தரத் தெலுங்கில் மாட்லாடிக் கொண்டு 'செத்த காலேஜ், உயிர் காலேஜை' வேடிக்கை பார்க்கும் உத்தேசத்துடன் கூட்டம் கூட்டமாக இறங்கும் அண்டை பிரதேசத்து பிரஜைகளை வேடிக்கை பார்த்தது போக மாலை வேளைகளில் அடர்த்தியான வண்ணங்களில் உயர்ரக வாசனைத் திரவியங்கள் மணக்க பளபள கார்களில் வந்திறங்கி 'மியூசியம் தியேட்டரில்' ஆங்கில நாடகம் பார்க்கச் செல்லும் உயர் வர்ககத்தினரையும் வேடிக்கை பார்க்கத் தோன்றியதே ஒழிய ஒருமுறை கூட அங்கு உள்ளே செல்ல வேண்டும் என்று தோன்றியதேயில்லை. 'யாருப்பா, என்ன வேணும்?' என்று துல்லியமான ஆங்கிலத்தில் யாராவது கேட்டால் என்ன செய்வது என்று பயந்தேனோ என்னவோ தெரியவில்லை. பாரதி மணி ஸாரின் புண்ணியத்தில் முதன்முறையாக இந்த அரங்கிற்குள் செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது.

இன்னமும் உறுதியாக நின்று கொண்டிருக்கும் அந்த பிரிட்டிஷ் கால கட்டிடத்திற்குள் நுழையும் போது பீரியட் பிலி்ம் ஒன்றின் காட்சிக்குள் நுழையும் விநோத அனுபவம். புராதன கட்டிடங்களை முறையாக பராமரிக்காத நம் அலட்சிய மனப்பான்மை குறித்த கசப்புணர்வும் கூடவே. (இங்குதானே 'கோபுர வாசலிலே' திரைப்பட பானுப்பிரியா நடனக்காட்சி சூட்டிங் நடைபெற்றது?) பார்வையாளர்கள் அனைவருமே மேடையை நெருக்கமாக கவனிக்க ஏதுவாக வட்டவடிமான அரங்கு. உள்ளே நுழைந்த போது ஒன்றிரண்டு உற்சாக இளைஞர்கள், விண்வெளிக் கப்பல் வந்திறங்கும் வீடியோவை ஆடியோவுடன் சோதித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு எழுத்தாளனுக்கு இது  மிக பரவசமாக தருணமாக இருக்கலாம். ஏதோ ஒரு மனநிலையில் நோக்கத்தில் நேரத்தில் எழுதப்பட்ட எழுத்து இன்னொரு வடிவத்திற்காக தயாராவதற்காக பல நூறு நபர்கள் உழைப்பதை கவனிப்பது. எழுத்தாளர் சுஜாதா இதையும் பதிவு செய்திருக்கிறார். கமல் தயாரித்த சயன்ஸ் பிக்ஷன் என்று நினைத்து எடுக்கப்பட்ட விக்ரம் படமாவதற்கு முன் குமுதம் இதழில் தொடராக வெளிவந்தது. ஒரு பறவை வந்து காரின் பானெட்டில் உட்காருவதான, தான் எழுதிய ஒரு வரியை சலனக்காட்சியாக உருமாற்றுவதற்கு எத்தனை பிரயத்தனப்பட்டார்கள் என்பதை அது தொடர்பான அனுபவக் கட்டுரையில் எழுதியிருக்கிறார். கட்டுரையின் இறுதியில் 'எழுத்தில் தான் எழுதிய பறவை இதுவல்ல' என்பதை தயக்கத்தோடு குறி்ப்பிட்ட போது அத்தனை பேரும் கொலைவெறியுடன் தன்னை நோக்கினார்கள்' என்பதையும்.

***

சுஜாதாவின் 'கடவுள் வந்திருந்தார்' 80-களில் எழுதப்பட்டதாக நினைவு. இதை அவர் முழுக்க முழுக்க பூர்ணம் விஸ்வநாதனை மனதில் இருத்தி எழுதியிருக்க வேண்டும். அவரின் 'வந்தவன்' என்கிற சிறுகதை மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டு பூர்ணத்தால் சிறப்பாக நடிக்கப்பட்டு பரவலாக கவனிக்கப்பட்டதின் உற்சாகம் காரணமாக இந்த நாடக முயற்சிகளை தொடர்ந்திருக்கலாம். 'டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு' இன்னொரு உதாரணம். நடுத்தர வர்க்க மற்றும் வயதுள்ள அசட்டுத்தனமான கோழைத்தனமான பிராமண நபர்தான் பெரும்பாலும் இந்த நாடகங்களின் நாயகன். அது சுஜாதாவின் அசலான அல்லது ஆல்டர் ஈகோவாகவாக கூட இருக்கக்கூடும்.

நாடகத்தின் இறுதியிலான ஏற்புரையில் பாரதி மணி பேசும் போது தன்னை ஒரு 'சுஜாதா பைத்தியம்' என்று வர்ணணை செய்து கொண்டார். அவரைப் போன்ற பல்லாயிரக்கணக்கான பைத்தியங்கள்  - நான் உட்பட – இன்னமும் இருப்பதுதான் சுஜாதாவின் இளமையான எழுத்திற்கு கிடைத்த வெற்றி என்று தோன்றுகிறது. ஒரு வாசகனாக தன்னுடைய ஆதர்ச எழுத்தாளனின் மீது பிரேமையுடன் இருப்பது கூட இயல்பு. ஆனால் அந்த எழுத்தாளனை நெருங்கிப் பழக பழக சில பல பிம்பங்கள் உடைந்து அந்த பிரமிப்பும் பிரேமையும் மெல்ல கரைந்து விடுவதுதான் யதார்த்தம். ஆனால் பாரதி மணி சுஜாதாவுடன் நெருங்கிப் பழகியிருக்கிறார். ஒவ்வொரு நாடகம் எழுதப்பட்ட பின்பு அது டெல்லிக்கு அனுப்பப்படும் அளவிற்கு நெருக்கம். என்றாலும் சுஜாதாவின் மீதுள்ள பிரேமையையும் பிரமிப்பையும் இன்னமும் அவர் கவனமுடன் பாதுகாத்துக் கொண்டிருப்பதைக் காண பொறாமையாக இருக்கிறது.

இந்த நாடகத்தை தயாரித்து வழங்கிய 'சென்னை அரங்கம்', தம்மை வழக்கமான சபா நாடகங்களுக்கும் 'நவீன நாடகங்களுக்கும்' இடையில் எவ்வித பாசாங்களுகளுமற்ற முயற்சிகளை நிகழ்த்துவதாக பிரகடனப்படுத்துகிறது. ஆனால் சுஜாதாவின் 'கடவுள் வந்திருந்தார்' அசட்டுத்தனமான நகைச்சுவையை உள்ளடக்கமாகவும் பிரதானமாகவும் கொண்டிருக்கும் சபா நாடகங்களின் தொனியை பொதுவாக கொண்டிருந்தாலும் இதை வித்தியாசப்படுத்திக் காட்டுவது சுஜாதாவின் உறுத்தாத நகைச்சுவையும் அறிவார்ந்த தேடலும்தான். ஏற்கெனவே குறிப்பிட்டபடி ஒரு சராசரி நடுத்தர வாக்க நபர்தான் நாடகத்தின் பிரதான பாத்திரம். தங்களின் வழக்கமான சலிப்பூட்டும் அலுப்பூட்டும் லெளகீக வாழ்க்கையிலிருந்து 'எவராவது தம்மை விடுவிக்க மாட்டார்களா" 'பெருமூச்சு விடுவதற்கான இடைவெளி கிடைக்காதா' என்கிற தேடலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தின் மனநிலையை வெளிப்படுத்துவதே. ஆர்.கே.லஷ்மணனின் 'காமன் மேன்' கார்ட்டூன் பாத்திரம் போல. அதுவரை இயந்திரம் போல் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு நடுத்தர வர்க்க நபர் ஓய்வு பெற்றதும் என்னவென்று செய்வதெல்லாமல் திகைத்துப் போய் தாம் புறக்கணிக்கப்பட்டு விடுவோமோ என்கிற பயத்தில் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க சொல்லும் பொய்களில் ஒன்றாக இந்த நாடகத்தின் அடிப்படையாக பார்க்கலாம். அது அயல்கிரக மனிதன் என்கிற மகா பொய்யாக அமைவதால் எழும் நகைச்சுவையுடன் அமைந்திருக்கிறது.

அல்லது இந்த நாடகம் 'உண்மை என்றால் என்ன?' என்பதை தத்துவ நோக்கில் ஆராய்கிறது என்றும் சொல்லலாம். எனவேதான் 'யாரும் பார்க்காவிட்டாலும் ஆகாயம் நீலமாக இருக்குமா? என்கிற ஆதிசங்கரரின் தத்துவக் கேள்வியோடு துவங்குகிறது. வருங்காலத்தி்ன் அயல்கிரக மனிதன் நடுத்தரவர்க்க மனிதனின் வாழ்க்கையில் குறுக்கிட்டு சில பல குழப்பங்களை ஏற்படுத்துவது என்பதே ஒரு சுவாரசியமான பொய். ஆனால் சுஜாதா தனது அசாத்தியமான எழுத்தால் இதை உண்மை என்று நம்ப வைக்கிறார். ஆன்மீகம் என்கிற ஒப்பனையில் மேஜிக் தந்திரங்களை செய்து மக்களை நம்ப வைக்கும் போலிச் சாமியார்களையும் கிண்டலடிக்கிறார். ஆனால் அந்த சாமியார் மனம் திரும்பி உண்மை பேச முயலும் போது எவருமே அதை நம்பவில்லை. நம்ப விரும்பவில்லை என்பதே உண்மை. ஏனெனில் எல்லோருக்குமே தங்களை விடுவிக்க ஒரு சக்தி இருந்து கொண்டிருப்பதின் அவசியம் தேவையாயிருக்கிறது.

***

சில பல வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு நேரடியான நாடகத்தைப் பார்த்ததே புத்துணர்வை ஏற்படுத்தும் ஒரு அனுபவமாக இருந்தது. இப்படி கடைசியாக பார்த்தது நண்பர் ஆனந்த் ராகவின் சுருதி பேதம். காட்சி ஊடகம் எல்லாவற்றையுமே விதவிதமான காமிரா கோணங்களிலும் வேக வேகமான எடிட்டிங்கிலும் நாராசமான பின்னணி இசையிலுமே பார்த்துப் பழகிய இளைய தலைமுறைக்கு இம்மாதிரியான நாடகங்கள் நிச்சயம் புது விதமான அனுபவத்தை ஏற்படுத்தும்.

இந்த நாடகத்தின் பிரதான் பலம் சந்தேகமில்லாமல் பாரதி மணிதான். திரை ஊடகத்தில் எப்போதுமே முதலமைச்சராய் வாழ்ந்து வந்தவர், பெரிய மனதுடன் நடுத்தர வர்க்க மனிதராய் நடிக்க முன்வந்த அந்த பெருந்தன்மைக்காகவே அவரை பிரதானமாய் பாராட்டியாக வேண்டும். எத்தனை விதவிதமான முகபாவங்கள். அருகிலிருந்து நேரடியாக பார்க்கவே அத்தனை அற்புதமாய் இருந்தது. ஒரு வேளை திரை ஊடகத்திற்காக குளோசப் கோணத்தில் அவற்றை பதிவு செய்து கொண்டிருந்தால் 'கட்' சொல்லவே மனது வராது. இது போன்ற மென்மையான நகைச்சுவை நாடகத்தை பார்வையாளர் சலிப்புறாதபடி நிகழ்த்தவே தனித்திறமை வேண்டும்.

விளம்பர இடைவேளையாக என் சுயபுராணத்தின் ஒரு துண்டையும் இங்கு பதிய விரும்புகிறேன். நண்பரொருவனின் கல்லூரி ஆண்டு விழாவிற்காக ஒரு நகைச்சுவை நாடகத்தை எழுதிக் கொடுத்தேன். சேகர், மோகன் போன்றவர்களை உதாரணமாகக் கொண்டு நகைச்சுவைத் துணுக்குகளை தோரணமாக்கி கூடவே இலவச இணைப்பாக 'நியுமரலாஜி என்பது மூடநம்பிக்கை' என்கிற மெஸேஜூம். எல்லாமே சற்று அசட்டுத்தனமான மெல்லிய நகைச்சுவைகள். ("இந்த ஞாபக மறதி எத்தனை நாளா இருக்கு?" – "ஞாபகமில்லீங்க"). மாணவர்களால் நிச்சயம் இது ரசிக்கப்படும் என்கிற நம்பிக்கையுடன் அந்த விழாவிற்குச் சென்றிருந்தேன். அது பொய்த்துப் போனது.

ஏனெனில் நாடகத்தில் நடித்தவர்கள் அனைவருமே டைமிங் சென்ஸ் ஏதுமில்லாமல் மனப்பாடப் பகுதியை ஒப்பிப்பது போலவே செயற்கையாக நடித்து சொதப்பினார்கள். பார்வையாளர்களிடமிருந்து பெரிதாக ரியாக்ஷனே இல்லை. அடுத்ததாக வந்த மாணவர் குழு எவ்வித திட்டமிடலும் இல்லாமற் போல் தோன்றின, இன்றைய சந்தானம் அடிக்கும் கவுண்ட்டர் டயலாக்குள் போல் வாயக்கு வந்தததை டைமிங்காகச் சொல்லி கூட்டத்தினரின் கரகோஷத்தைப் பெற்றார்கள். எதற்கு இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் அழுகாச்சி நாடகங்களை மூலம் பார்வையாளர்களை கவர்வது கூட எளிது. (இதிலும் பார்வையாளர்கள் பயங்கரமாக சிரிக்கின்ற அபாயம் ஏற்படலாம்). ஆனால் நகைச்சுவையின் மூலம் சிரிக்க வைப்பது ஆகக் கடினமான காரியம் என்கிற விஷயத்தை என்னையும் சேர்த்து இதுவரை இரண்டு கோடியே மூன்றாயிரம் பேர் சொல்லி விட்டனர்.

'கடவுள் வந்திருந்தார்' – நாடகத்தை மிக சுவாரசியமாக்கினதற்கு காரணம் அதன் நடிகர்களே. 80-களில் எழுதப்பட்ட நாடகம் என்பதால் சற்று பழமையான நெடி. எக்ஸார்ஸிட், உல்லி உல்லி, ஜார்ஜெட், டுட்டி ப்ரூட்டி, கல்யாண பரிசு போன்ற 80-களின் கலாச்சார சொற்கள் புழங்கினாலும் இன்றும் இதை ரசிக்க முடிந்ததற்குக் காரணம் சுஜாதாவின் இளமையான எழுத்து. ஒரேயொரு உதாரணம் சொல்கிறேன். சமகாலத்தில் கூட இப்படி எழுத முடியுமா என்று தெரியவில்லை. சென்சாரில் வெட்டி விடுவார்கள். வாத்தியார் பூடகமாக கலக்கியிருக்கிறார்.

இந்தச் சூழலை கவனியுங்கள்....

மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவனுக்கு கீழேயிருக்கும் வீட்டின் உரிமையாளரின் மகளின் மீது காதல். ஆனால் அவளோ இவனை சட்டை செய்வதில்லை. ஒரு சிக்கலான இரவில் அவளின் அப்பாவிற்கு உதவி செய்யும் போது மாத்திரம் சற்று சிரித்துப் பேசுகிறாள். ஆனால் மறுநாள் காலையில் வழக்கம் போல் சிடுமூஞ்சு..

அப்போது அந்த இளைஞன் சற்று கோபமாக ஒரு ப்ளோவில் பேசும் வசனம் இது...

"வசு... அப்ப ராத்திரிக்கு மாத்திரம் நான் உனக்கு தேவையாயிருக்கேன்ல.... (சற்று நிதானித்து – தனக்குள்..) என்ன .. நான் உளர்றேன்...

சற்று விரசமானதொரு ஆனால் யதார்த்தமாக வந்து விழும் நகைச்சுவையை செருகி விட்டு..அதை கலாச்சார காவலர்களுக்காக அழகாக சமன் செய்திருக்கும் சாமர்த்தியம் வாத்தியாருக்கே வரும்..
மொத்த நாடகத்தையும் பாரதி மணி தன் தோளில் சுமந்திருக்கிறார் என்றால் அது மிகையாகாது. விதவிதமான முகபாவங்கள். டைமிங் சென்ஸ். அனுபவம் பேசுகிறது.. இந்த வயதில் தினம் ஆறு வேளை சிட்டுக்குருவி லேகியம் சாப்பிடுபவர் போல் அத்தனை எனர்ஜி. தனது வாழ்த்துரையில் மு.ராமசாமி குறிப்பிட்டதைப் போல சாதாரணமாகவே உட்கார்ந்து எழ சிரமமாயிருக்கும் ஈஸி சேரில் மனிதர் பாலே டான்ஸே ஆடியிருப்பதைக் காண நமக்குத்தான் பிரமிப்பாயும் பயமாயும் இருக்கிறது. ஒரு காட்சியில் பூசாரியிடம் உண்மையாகவே வேப்பிலையில் காட்டடி வாங்குகிறார். பாலாவின் பரதேசி டீசர் எல்லாம் நினைவுக்கு வந்து முதுகுத்தண்டு சில்லிட்டுப் போகிறது. மணி ஸார் பாலாவின் படங்களில் நடிக்க முயற்சிக்கலாம். ஆனால் அடுத்த சில நொடிகளில் ஒரு பெரிய உருட்டுக் கட்டையைக் கொண்டு அவர் பூசாரியை துரத்துவதைப் பார்க்கும் போது இயக்குநராகவும் ஆகி விடலாம் என்று தோன்றுகிறது.

அயல் கிரகத்து மனிதராக நடித்திருக்கும் (ஜோ) சீதரின் நடிப்பை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பாத்திரத்திற்கு மிக அவசியமான மையமான மர்மப் புன்னகையோடு குறும்புத்தனத்தோடும் நடித்திருக்கிறார். சீனிவாசனின் மனைவியாக நடித்திருக்கும் பத்மஜா நாராயணன், 'வியட்நாம் வீடு' பத்மினியை ஞாபகப்படுத்துவது போல அந்தப் பாத்திரத்திற்கு அத்தனை பாந்தமாய் பொருந்தியிருக்கிறார். சுந்தராக நடித்திருக்கும் ராம்குமாரும் சிறப்பாகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறார். (இவர் பங்களிப்பில் நான் கண்ட சிறிய குறை – மாடிப்படி ஓரமாக நின்று வீட்டில் நிகழ்பவற்றை கவனிப்பது போன்ற காட்சிகளில் அவர் நிற்கும் கோணத்தை, அந்த அரங்கின் பாதி பார்வையாளர்களே கவனித்திருக்க முடியும். மற்றவர்கள் கவனித்திருக்க முடியாது. இதை கவனத்தில் கொண்டிருக்கலாம்). பதிவர் தினேஷ் (குட்டி டின்) மாப்பிள்ளையாக வசீகரமான தோற்றத்தில் வந்து கலக்கியிருக்கிறார். பெண் பார்க்கும் காட்சியில் இரு வீட்டு குடும்பத்தினரின் எதிரேயே பெண்ணை தள்ளிக் கொண்டு வந்து வசனம் பேசும் காட்சியில் அரங்கில் விசில் பறக்கிறது. இனி மாப்பிள்ளை ரோல் என்றால் யோசிக்கத் தேவையில்லாமல் இவரைக் கூப்பிடலாம். (இந்த நாடகத்தில் இவர் நடித்திருக்கும் நேரம் 180 விநாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது).

எந்த ஸ்பான்ஸர்களின் நிதியுதவியும் இல்லாமல் கைக்காசை செலவழித்து இந்த நாடகத்தைப் போட்டிருக்கும் (தயாரிப்பு: அமிஜித் மணி மேகலை) சென்னை அரங்கத்தின் முயற்சி பாராட்டத்தக்கது என்றாலும் இலவசமாக பார்க்கும் நமக்குத்தான் குற்றவுணர்வு பிடுங்குகிறது. வரும் காலங்களில் நல்ல ஸ்பான்சர்களை பிடிக்கலாம் அல்லது நுழைவுக் கட்டணம் வசூலிக்கலாம். (அப்படி வசூலித்திருந்தால் பாரதிமணியைத் தவிர வேறு யாரும் இருந்திருப்பார்களா என்பதும் சந்தேகமே). இந்த நாடகக்குழுவின் அடுத்த படைப்பை அவர்களைப் போலவே நானும் மிக ஆவலாக எதிர்பார்க்கிறேன்.

image courtesy:https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-ash4/3625_567588263273770_389823822_n.jpg
 
suresh kannan

Saturday, February 27, 2010

எழுத்தாளர் சுஜாதாவுடன் ஒரு சந்திப்பு

சுஜாதா என்கிற எழுபது வயது இளைஞர்

சுஜாதா, கணையாழியின் கடைசிப் பக்கங்களில் எழுதும் போது, தன்னை வந்து சந்திக்கும் வாசகர்களைப் பற்றி குறிப்பிட்டு விட்டு இவ்வாறு எழுதினார்: 'எனது உண்மையான வாசகர்கள் என்னை வந்து சந்திப்பதில்லை'.

எனக்கு இதில் உடனே உடனே உடன்பாடு ஏற்பட்டது. ஏனெனில், ஒரு சிறந்த படைப்பாளி தன்னுடைய படைப்புகளிலேயே தாம் தீவிரமாக நம்புகிற கருத்துக்களையும், எண்ணங்களையும் முழுமையாக எந்த வித உபகேள்விகளுக்கும் இடமில்லாமல் மிக நேர்மையாக எழுதி விடுகிறார். ஆக அந்தப் படைப்பாளி எழுதியதையே நாம் முழுவதையும் உள்வாங்கிக் கொண்டால் அது போதுமானதாக இருக்கும். அதை விட்டு, அந்தப் படைப்பாளியை சந்தித்து அபத்தமாக உரையாடுவது, ஆட்டோகிராப் வாங்குவது போன்றவை, 'நான் அந்த எழுத்தாளரை சந்தித்தேன்' என்று ஜம்பமடிப்பதற்கு உதவுமே தவிர வேறொன்றிற்குமில்லை. ஆனால் படைப்பாளி எழுதின வட்டத்தையும் தாண்டி சிந்தித்து தனது ஐயங்களை அவரிடம் தெளிவுபடுத்திக் கொள்ள முயலும் வாசகர்கள் அரிதானவர்கள்; இந்த நிலையிலிருந்து விதிவிலக்கானவர்கள்.

இந்த காரணத்திற்காகவே, நான் பொதுவாக எந்த எழுத்தாளரையும் சந்திக்க முயல்வதில்லை, என் வாசகப் பயணத்தை நல்லதொரு திசையில் மாற்றியமைத்த மற்றும் என் மிகுந்த அபிமானத்திற்குரிய சுஜாதா உட்பட.


 ஆனால் கடந்த வாரத்தில் ஒரு நாள் பிரசன்னா தொலைபேசியில் "நண்பர் தேசிகன் மூலமாக எழுத்தாளர் சுஜாதாவை சந்திக்கலாமென்றிருக்கிறோம். நீங்கள் சுஜாதாவின் படைப்புகளில் மிகுந்த பிரேமை கொண்டிருக்கிறவர் என்று நான் அறிவேன். நீங்களும் வருகிறீர்களா?" என்று அழைத்த போது வந்த சந்தர்ப்பத்தை தவற விட வேண்டாமே என்று உடனே ஆர்வத்துடன் ஒப்புக் கொண்டேன்.

28.05.2005. மாலை ஆறு மணி. உட்லண்ட்ஸ் டிரைவ்-இன் ரெஸ்டாரண்ட்.

இதுவரை புகைப்படங்களிலும், நூல் வெளியீட்டு விழாக்களில் தூரமாக நின்று மட்டுமே பார்த்திருந்த சுஜாதா, தனது அசாதாரணமான உயரம் காரணமாக சற்று குறுகினாற் போல் தளர்ச்சியாக நடந்து வர, 'இவரிடம் என்ன கேள்வி கேட்டு, என்னத்த பதில் சொல்லப் போகிறார்' என்று ஆயாசமாக இருந்தது. கற்றுக் கொடுத்தவர்கள் அனைவரும் ஆசான்கள் எனில் சுஜாதா எனக்கு முக்கியமானதொரு ஆசான். எழுத்துலகில் துரோணரைப் போல் திகழும் அவரின் பல்லாயிரக்கணக்கான ஏகலைவன்களில் நானுமொருவன். பதிலுக்கு சுஜாதா, நல்ல வேளையாக கட்டை விரலையெல்லாம் கேட்காமல், தன்னுடைய மெத்து மெத்தான ஐந்து விரல்களையும் மென்மையான புன்னகையுடன் என்னிடம் நீட்டினார். "நான் சுரேஷ் கண்ணன்" என்று சந்தோஷத்துடன் அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

உணவகத்தின் குளிர்பதனம் செய்யப்பட்ட அறையில் ஆரம்பித்தது எங்கள் அரட்டைக் கச்சேரி. நாங்கள் ஐந்து பேர். நான், பிரசன்னா, ராஜ்குமார், ரஜினிராம்கி, ராமச்சந்திரன் உஷா. எங்களை உரையாடவிட்டு பக்கத்தில் அமைதியாக அமர்ந்திருந்த தேசிகன். (இகாரஸ் பிரகாஷ், சுவடுகள் ஷங்கர், ஷங்கர் கிருபா, பிரதீப் போன்றோர் பிற்பாடு வந்து இணைந்து கொண்டனர்)

ஒரு சிறிய ராணுவ பட்டாலியன் போல் சுஜாதாவை நோக்கி கேள்விக் குண்டுகளை சரமாரியாக நாங்கள் எறிய, நிறைய பேசுவாரோ மாட்டாரோ என்கிற என் தவறான அனுமானத்தையெல்லாம் தூள்தூளாக்கும் வகையில் அனுபவம் மிகுந்த ராணுவ தளபதி போல் எங்கள் கேள்விகளை அனாயாசமாகவும், உற்சாகமாகவும் புன்னகையுடனும் எதிர்கொண்டார் சுஜாதா என்கிற அந்த 70 வயது இளைஞர். ஒரு திட்டமிட்ட உரையாடலாக இல்லாமல், நட்புடன் கூடிய கலந்துரையாடலாக இருந்தது அது. எங்களில் பெரும்பாலானோர் அவரை முதன் முறையாகப் பார்ப்பதினால் ஆர்வத்துடன் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு பல கேள்விகளை முன்வைத்தோம். பல்வேறு ரசனை கொண்ட குடும்ப உறுப்பினர்கள், தொலைக்காட்சியில் தங்களுக்குப்பிடித்த சேனல்களை மாற்றி மாற்றி அமைப்பது போல் இருந்தது அது.

இதில் நான் கேட்ட கேள்விகளை மட்டும் தொகுத்தளித்துள்ளேன். சுஜாதா பேச்சு மொழியில் கூறிய பதில்களை நான் உரைநடைத்தமிழில் இடங்களில் மாற்றியமைத்துள்ளேன். இதில் ஏதேனும் கருத்துப் பிழைகளிருந்தால், அது என் தவறாக இருக்கக்கூடும்.

"இந்த போண்டா ரொம்ப புஷ்டியாயிருக்கிறதே" என்கிற சுஜாதா பிராண்ட் நகைச்சுவையுடன் ஆரம்பித்த அந்த உரையாடலில் இருந்து சில முக்கியமான பகுதிகள்.

()

உரையாடல் இயல்பாக இன்றைய கல்வித்துறையின் போக்குகளில் இருந்து ஆரம்பித்ததால், என் முதல் கேள்வி:

சுரேஷ் கண்ணன்: "இன்றைக்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ரேஸ் குதிரைகள் போல் வளர்க்கின்றார்கள். இன்றைய தேதியில் கல்வி என்பது அடித்தட்டு மக்கள் நுழைய முடியாதது போல், வாங்க முடியாத luxury பொருள் போல் ஆகி விட்டதே? இதனால் கிராமப் புறங்களில் உள்ள மாணவர்கள், அவர்கள் விரும்பிய படிப்புக்களை படிக்க முடியாமல், ஏதோவொரு கிடைத்த துறைப் படிப்பை படிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகியிருக்கின்றார்களே?"

சுஜாதா: "இடஒதுக்கீட்டின் மூலம் பின்தங்கிய மக்களும் விரும்பிய படிப்பை படிக்கிற வாய்ப்பு இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாகவும், சில மேல்தட்டு மக்கள் முறையற்ற வழிமுறையில் அந்த வாய்ப்பை குறுக்கு வழிகளில் பயன்படுத்துவதாலும் இந்த நிலை ஏற்படுகிறது."

சுரேஷ் கண்ணன்: "பாலகுமாரன் தன் முன்கதைச் சுருக்கத்தில் 'சுஜாதா தனக்கு சிறுகதை எழுதுவதற்கான வழிமுறைகளை சொல்லித் தந்தார்' என்று குறிப்பிட்டிருக்கிறார். எழுதுவதில் ஆர்வமுள்ள நாங்களும் அதே கேள்வியை இப்போது உங்கள் முன்வைத்தால் உங்கள் பதில் என்னவாக இருக்கும். அதேதானா? அல்லது updated-ஆன விஷயங்கள் ஏதேனும் உள்ளதா?"

சுஜாதா: "கதையை முதல் வரியிலேயே ஆரம்பித்து விடுங்கள். இதுதான் நான் அவருக்கு சொன்னது. வேறொன்றுமில்லை"

சுரேஷ் கண்ணன்: "உங்கள் சிறுகதையில் எனக்கு பிடித்தது 'பிலிமோத்ஸவ்' "

சுஜாதா: "அப்படியா?

சுரேஷ் கண்ணன்: நீங்கள் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் பெரும்பான்மையினர் தங்களுக்கு பிடித்ததாக கூறும் சிறுகதை 'நகரம்'. அதை நிதானமாக திட்டமிட்டு எழுதினீர்களா? அல்லது பத்திரிகைகளின் துரத்தல்களுக்கேற்ப அவசரமான மனநிலையில் எழுதினீர்களா?"

சுஜாதா: "மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரை பார்க்கச் சென்றிருந்த போது, அங்கு பார்க்க நேர்ந்த காட்சிகளின் தாக்கத்தில் உடனடியாக எழுதப்பட்ட கதை அது."

சுரேஷ் கண்ணன்: "இப்போது இணையத்தில் ஏறக்குறைய 500 பேர் வலைப்பதிகிறார்கள். பொதுவாக வலைப்பதிவுகளைப் படிக்கிறீர்களா? வலைப்பதிவுகளின் போக்கு எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்?"

சுஜாதா: நிறைய வலைப்பதிவுகளப் படிக்கிறேன். சில பேர்களின் வலைப்பதிவை எழுத்துரு பிரச்சினை காரணமாக படிக்க இயலவில்லை. பத்ரி, தேசிகன் போன்றோர்களின் பதிவுகள் படிக்கமுடிகிறது. பொதுவாக வலைப்பதிவுகள் அனுமார் வால் போல் நீண்டு கிடக்கிறது. அரிதாக கிடைக்கிற தகவல்களை உள்ளடக்கியதுதான் ஒரு சிறந்த பதிவாக இருக்க முடியும்.

சுரேஷ் கண்ணன்: "நீங்கள் உங்கள் சிறுவயதில் எழுதிக் கொண்டிருந்த கையெழுத்துப் பத்திரிகைகளின் நவீனவடிவம்தானா இந்த வலைப்பதிவுகள்?"

சுஜாதா: "ஆம். நாங்கள் நடத்திய கையெழுத்துப் பத்திரிகையில் நாங்களே படம் வரைவோம். இதெல்லாம் எழுதுகிற ஆர்வமிருக்கிறவர்களுக்கு ஒரு outlet மாதிரித்தான்.

சுரேஷ் கண்ணன்: "ஆனால்... இப்போது வலைப்பதிவு எழுதுகிறவர்களில் சிலர், இதை outlet-ஆக பயன்படுத்தாமல் toilet-ஆக பயன்படுத்துவதுதான் பிரச்சினை."

(உரையாடல் இப்போது தமிழர்களின் ஆதார விஷயமாகிய சினிமாவின் பக்கம் திரும்புகிறது)

சுரேஷ் கண்ணன்: "பாய்ஸ் படத்திற்கு ஏன் அவ்வளவு எதிர்ப்பு? ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் நடத்திய, எதிர்கொண்ட விஷயங்கள்தானே அதில் இருந்தது?"

சுஜாதா: "அவர்கள் அதை திரையில் பார்க்க விரும்பவில்லை"

சுரேஷ் கண்ணன்: "ஒரு படத்தின் வசனங்கள் ஆட்சேபத்திற்குரியதாக இருக்கும் பட்சத்தில், யாரை நாம் திட்ட வேண்டும்? இயக்குநரையா? வசனகர்த்தாவையா?"

சுஜாதா: "ஒரு இயக்குநர்தான் படத்தின் எல்லாத்துறைகளுக்கும் பொறுப்பு. அவர் தீர்மானித்த பின்தான் அவை காட்சிகளில் இடம் பெறுகின்றன. மேலும் வசனகர்த்தா எழுதிய வசனங்கள் அப்படியே இடம் பெறும் என்கிறது கிடையாது. சம்பந்தப்பட்ட நடிகர்களும் தங்கள் சொந்த வசனங்களை பயன்படுத்துவார்கள். 'பாய்ஸ்' படத்தில் சில காட்சிகளில் விவேக் அதை செய்தார்"

சுரேஷ் கண்ணன்: உங்கள் சிஷ்யர்களில் ஒருவரான, பெங்களூர் இரவிச்சந்திரன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். அவர் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?

சுஜாதா: அவர் இறந்து விட்டார். அவருக்கு நேர்ந்த சில அந்தரங்கப் பிரச்சினை காரணமாக தொடர்ந்து மதுவருந்தியதின் காரணமாக இறந்து போனார். நல்ல எழுத்தாளர்.

(நான் இதைக் கேட்டு திகைப்பும், அதிர்ச்சியும் அடைகிறேன். இந்தச் செய்தியை ஊர்ஜிதப்படாமல் இணைய நண்பர்கள் மூலம் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தாலும், சுஜாதா மூலமாக மிக உறுதியாக இந்தச் செய்தியை கேடக நேரும் போது வருத்தமாகவே இருந்தது. இந்த வருத்தம் சுஜாதா குரலிலும் எதிரொலித்தது)

சுரேஷ் கண்ணன்: "இன்றைக்கு மரபு தெரியாமலே பலர் கவிதை எழுத வந்து விடுகின்றனர். எனக்கு கவிதை என்கிற வடிவமே தொடர்ந்து பிடிக்காமலே இருக்கிறது. இதற்கு என்ன காரணமாக இருக்கும்? எனது முன்னோர்களின் ஜீன்களில் ஏற்பட்டிருக்கிற ஏதாவது குறைபாடா?" (சிரிப்பு)

சுஜாதா: "You may not come across several good poems" அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.".

சுரேஷ் கண்ணன்: "இவ்வளவு பழைய விஷயங்களை ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிற நீங்கள் ரம்யா கிருஷ்ணன் பெயரை மறந்து விட்டீர்களே?" (சிரிப்பு)

சுஜாதா: (சிரிப்பு)

சுரேஷ் கண்ணன்: "நீங்கள் ஆனந்த விகடனில் 70 ஆண்டு நிறைவையொட்டி எழுதியிருந்த கட்டுரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது"

()

நண்பர்களின் பல கேள்விகளுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் பதிலளித்த சுஜாதா 7.30 மணிக்கு தனது உரையாடலை முடித்துக் கொண்டார். மனமில்லாமல் நாங்கள் எழுந்து கொள்கிறோம். 'உங்களை ரொம்பவும் சிரமப்படுத்தி விட்டோமா' என்பதற்கு 'அதெல்லாம் இல்லை' என்கிறார். தேசிகனை அவர் 'என் சிஷ்யன்' என்று குறிப்பிட்ட போது, தேசிகன் மீது சற்று பொறாமையாக இருந்தது. நண்பர்கள் புகைப்படம் எடுத்துக் கொள்வதும், கையெழுத்து வாங்குவதுமாக இருக்கின்றனர். வழக்கம் போல் நான் ஒதுங்கி நிற்கிறேன்.

"இவ்ள நேரம் எங்களுக்கு பத்தலைங்க. என்சைக்ளோபீடியாவ ரெண்டு பக்கம் புரட்டிப் பாத்தா மாதிரிதான் இருக்குது. இன்னும் கூட நெறைய பேச வேண்டியிருக்கு. வந்ததுக்கு ரொம்ப நன்றிங்க" என்கிற எங்களுக்கு புன்னகையுடன் கையசைத்து விடைபெற்று காரில் ஏறிக் கொள்கிறார்.

()

இன்னும் சில விமரிசனப்பூர்வமான கேள்விகளை கேட்கலாமா, வேண்டாமா என்று தயங்கிக் கொண்டிருந்த நான், மகிழ்ச்சியும், சிரிப்பும் பொங்கி வழிந்த அந்த உற்சாகமான சூழ்நிலையை கெடுக்க விரும்பாமல் எனக்குள்ளேயே அந்த கேள்விகளை மூழ்கடித்துக் கொண்டேன். இன்னொரு வேளையில் பார்க்கலாம். நாங்கள் தயாரான கேள்விகளோடு மிகவும் முன்னேற்பாடோடு வந்திருந்தால் இந்தக் கலந்துரையாடல் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்று நம்புகிறேன். இந்தக் கலந்துரையாடல் எனக்கு அவ்வளவு திருப்திகரமாக இல்லை. சுஜாதா என்கிற அந்த பன்முக ஆளுமையிடமிருந்து இன்னும் நிறைய விஷயங்களை கேட்டிருக்கலாம்.

பாலச்சந்தர், பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் என்று பல சினிமா ஜாம்பவான்களிடமும், பல துறையிலுமுள்ள அறிஞர்களோடும் புழங்கிய சுஜாதா, அவரோடு ஒப்பு நோக்கும் போது குஞ்சுகுளுவான்களாகிய எங்களோடு சரிக்கு சமமாக பேசுவாரா என்கிற தயக்கத்தையெல்லாம் உடைத்தெறிந்து விட்டார். சுஜாதா என்கிற அந்த எழுத்தாளரிடம்..... எழுத்தாளரை விடுங்கள்.... ரங்கராஜன் என்கிற அந்த எளிய மனிதரிடம் ஒன்றரை மணிநேரம் உரையாடிக் கொண்டிருந்தது ஒரு நிறைவான அனுபவமாக இருந்தது.

இந்த நிகழ்வை சாத்தியமாக்கிய நண்பர் தேசிகனுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள். (மனிதருக்கு அபரிதமான நகைச்சுவை உணர்ச்சியிருக்கிறது. நண்பர் ராஜ்குமார், தாம் பெரம்பூர், திரு.வி.க.நகரில் இருந்து வருவதாக கூறியவுடன் இவர் "நான் பெங்களூர்ல இருந்து வர்ற வழில பார்த்த ஊர் மாதிரியிருக்கே" என்று கிண்டலடிக்கிறார்)

இந்த மாதிரியான எழுத்தாளர்களுடன் கூடிய நிறைவான சந்திப்புக்கள் அடிக்கடி நிகழ நான் வணங்கும் இயற்கையை பிரார்த்திக்கிறேன்.

(இது ஒரு மீள் பதிவு) image courtesy : Bharat KV's photostream

நன்றி: சுஜாதா தேசிகன்.

மற்ற நண்பர்களின் அனுபவங்களை வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்:


 சுஜாதாவைப் பற்றி ஒரு எளிய வாசகனின் சில குறிப்புகள்

எழுது... எழுது...

 suresh kannan

Friday, February 27, 2009

எழுது... எழுது...

....வழக்கம் போல் எழுத்தாளர் வாக்கியம். இந்த முறை ஜான் ஹெர்ஸே..

.. எழுத்து என்பது தினம் உட்கார்ந்து கொண்டு தினம் கட்டாயமாக எழுதுவது; மார்புக்குள்ளிருந்து மேதைத்தனம் என்னும் அந்த நீல ஒளிக்குக் காத்திருப்பதல்ல - திரும்பத் திரும்ப எழுதுவது - மகிழ்ச்சியோ, வலியோ எழுதுவது; எழுத்து என்பது நிறைய கிழித்துப் போடுவது, நிறைய எழுதுவது, எழுதியதில் திருப்திப்படாமல் இருப்பது.... மீண்டும் எழுதுவது

*****************************

- சுஜாதா, சின்னச் சின்னக் கட்டுரைகள், 1985


suresh kannan

Tuesday, October 21, 2008

மனுஷ்யபுத்திரனால் ரூ.50/- பிழைத்தது

ஒரு கால கட்டத்தில் ஆர்வமாக சேர்த்த தீபாவளி மலர்கள் நாளடைவில் (அதாவது வருடடைவில்) இதனுடைய ஒரேமாதிரியான template-களின் காரணமாக சலிப்பை ஏற்படுத்தின. மேப்லித்தோ பேப்பரில் பளபளவென்ற வண்ணங்களில் அம்மன், முருகன், பாபா படங்கள், காஞ்சி சாமியார் வகையறாக்களின் அருளுரைகள், தீபாவளி சம்பந்தப்பட்ட அசட்டு ஜோக்குகள் (மாமனார் வீட்டிற்கு வரும் மருமகன்), தீபாவளியை எப்படி கொண்டாடுவேன் என்று நடிகர், நடிகையர்களின் வழவழா பேட்டிகள், வழக்கமான கழிசடை எழுத்தாளர்களோடு இடைநிலை இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் மாத்திரமே புழங்கும் எழுத்தாளர்களின் சிறுகதைகள் (தெவச சாப்பாடு போல இவர்களை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அழைப்பார்கள். அதிலும் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி ரேஞ்ச் மட்டும்தான். கோணங்கி போன்றவர்களெல்லாம் யாரென்று பத்திரிகை ஆசிரியர்களுக்கே தெரியுமோ, என்னவோ), இன்னும் பல அசட்டுத்தனங்களுடன் தலையணை சைஸிலும் பேசாமல் ஒரு குவார்ட்டரும் சைட்டிஷ்-ம் வாங்கியிருக்கலாமோ என்று எண்ண வைக்கும் விலையிலும் வரும். எனவே வெடிச் சத்தத்தைப் போலவே தீபாவளி மலர்களும் அலர்ஜியை ஏற்படுத்தும் லிஸ்டில் எப்பவோ சேர்ந்து விட்டது.

என்றாலும் டைம்ஸ் ஆ·ப் இந்தியா பத்திரிகை ஒரு சிறப்பு இதழை ஜனவரி 08-ல் வெளியிட்ட போது அதை வாங்க எனக்கு ஒரே காரணம்தான் இருந்தது. தொகுப்பாசிரியர்: சுஜாதா. அவரின் இலக்கிய மதிப்பு அல்லாத எழுத்துக்களைக் கூட அதனுடைய சுவாரசியம் கருதியும் அவ்வாறு எழுதுவதின் கற்றல் கருதியும் தவறாமல் வாசிப்பதுண்டு. நான் எழுதுவதில் ஒரு சதவீத சுவாரசியமும் உபயோகமும் இருந்தாலும் அதற்கு காரணம் அந்த ஆசான்தான்.

அந்த இதழ் பெரும்பாலும் வெவ்வேறு இலக்கிய படைப்பாளிகளைக் கொண்டு மனுஷ்யபுத்திரனின் உதவியோடு சுவாரசியமாக அமைந்திருந்தது. அதைப் பற்றி எழுதின பதிவு இங்கே.

Photobucket

இந்த வருடம் டைம்ஸ் ஆ·ப் இந்தியாவும் தீபாவளி மலரை வெளியிட்டிருக்கிறது. மேலோட்டமாக சுஜாதா, மனுஷ்யபுத்திரன் பெயர்களை பார்த்தவுடன் என்ன ஏதென்று விசாரிக்காமல் வாங்கிவிட்டேன். பிறகு சாவகாசமாக வீட்டில் புரட்டிப் பார்க்கும் போது "தீபாவளி கொண்டாட்டம்" பற்றி த்ரிஷா வகையறா நடிகைகளின் பேட்டிகளையும் புகைப்படங்களை பார்த்த மாத்திரத்தில் திடுக்கிட்டு உள்ளடக்கத்தை அவசரமாக மேய்ந்தேன்.

இந்த இதழின் சிறப்பாசிரியராக 'ஆய்' மதனை டைம்ஸ் அழைத்திருக்கிறது. மேலட்டையிலேயே பிரசுரமாகியிருந்த இதை கவனிக்கத் தவறிவிட்டேன். இதழின் தரம் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் - 'அனுராதா ரமணனின் சிறுகதை ஒன்று பிரசுரமாகியிருக்கிறது'. இது போதுமென்று நினைக்கிறேன்.

ஜெயமோகன், சா.கந்தசாமி என்று சில ரத்தினங்களும் உள்ளன. சமீபத்தில் மேற்கொண்ட பயணத்தில் காசியில் ஏற்பட்ட அனுபவத்தை பிய்த்து சுத்தியலால் ஆங்காங்கே தட்டி தந்துள்ளார் ஜெயமோகன். ஏற்கெனவே வாசித்த இணைய வாசகர்கள் அல்லாதவர்களுக்கு நிச்சயம் இது நல்ல வாசிப்பனுபவத்தை தரும்.

'தமிழ் வலைப்பூக்கள் பற்றி' இளங்கோவன் எழுதிய கட்டுரையை பார்த்தவுடனே 'அட நம்ம ஏரியாவாச்சே' என்று ஆவலாக பாய்ந்தேன். வலைப்பூ எழுதினால் போலீஸ் புடிச்சுக்கும் என்று பயங்காட்டியிருந்தவர், சர்வீஸ் கமிஷன் பரிட்சை மாதிரியான ஒரு கேள்வித்தாளையும் பிற்பகுதியில் போட்டு எரிச்சலடைய வைத்திருந்தார்.

என்னடா இது, ரூ.50/-க்கு ஒரு பியராவது அடித்து குப்புறப்படுத்து தூங்கியிருக்கலாமே என்றெழுந்த எண்ணத்தை மாற்றியமைத்தது மனுஷ்யபுத்திரன் 'சுஜாதா' பற்றி தொகுத்திருந்த இணைப்பு. சுஜாதா என்கிற ஆளுமையின் பல்வேறு பக்கங்களிலிருந்து துறை வாரியாக சாம்பிள் தந்திருக்கிறார். கணையாழியின் கடைசிப்பக்கங்கள், கமலுடன் ஒரு சந்திப்பு, தமிழில் போர்னோ, சுஜாதாவின் பேவரைட் ஸ்ரீரங்கம், தேவன் வருகை சிறுகதை, பெங்களுர், சத்யஜித்ரே சினிமா.... என்று சுஜாதா பல்வேறு காலகட்டத்தில் எழுதின படைப்புகளிலிருந்து சிறந்த மாதிரிகளை தேர்ந்தெடுத்து தொகுத்திருக்கிறார் ம.பு.

சுஜாதாவின் தீவிர வாசகர்கள் இவைகளை ஏற்கெனவே படித்திருப்பார்கள் என்றாலும் என்னுடைய அனுபவம் போல் சிறந்ததொரு nostalgia-வை அவர்களுக்கு இவை வழங்கும் என நம்புகிறேன். சுஜாதாவை ஒரளவே அறிந்திருக்கிற இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு. அவர் தமிழ் உரைநடையில் ஏற்படுத்தியிருக்கிற அபாரமான பாதிப்பு பற்றி இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

இந்த ஒரு காரணத்திற்காகவே இந்த மலரை உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். இந்த மலரின் பெரும்பகுதியை ஏற்கெனவே குறிப்பிட்ட தீபாவளி மலர்களின் template-களின் சம்பிரதாயம் கெடாமல் தொகுத்திருக்கிற சிறப்பாசிரியர் மதனின் பங்களிப்பு பற்றி சுஜாதாவின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமெனில் 'அவரைப் பசித்த புலி தின்னட்டும்"

suresh kannan

Thursday, February 28, 2008

சுஜாதாவைப் பற்றி ஒரு எளிய வாசகனின் சில குறிப்புகள்

இதை கட்டுரை என்று சொல்ல எனக்குத் தயக்கமாக இருக்கிறது. ரங்கராஜன் என்கிற எளிய எழுத்தாளரை நான் கடந்து சென்ற தருணங்களைப் பற்றி என்னுடனேயே நான் நிகழ்த்திக் கொண்ட ஒரு அந்தரங்கமான உரையாடலின் பூர்த்தியடையாத பிரதியிது. நிச்சயம் கோர்வையாக இருக்காது. என்றாலும் எந்தவித ஒப்பனையும் பாசாங்குமின்றி பதிய முயன்றிருக்கிறேன். நான் வலைப்பக்கத்தில் எழுதி எனக்கே மறந்து போன சில வரிகளை இணைய நண்பர்கள் ஞாபகப்படுத்தி பேசும் போதெல்லாம் எனக்கு எழுதக் கற்றுக் கொடுத்த சுஜாதாவை சில முறை நன்றியோடு நினைத்துக் கொள்வேன். இப்போதும் அப்படியே.

ரங்கராஜன் என்கிற சுஜாதா 1935-ல் பிறந்தார். என்று அரசின் இயந்திரக்குரலில் அல்லாமல் "மச்சான்.. கேள்விப்பட்டவுடனே மனசே ரொம்ப கஷ்டமாயிடுச்சுடா".. என்கிற இயல்பான மொழியுடன்தான் இதை எழுத விருப்பம். பார்க்கலாம்.

()

'சுஜாதா' என்கிற அந்தப் பெயரை எப்போது முழுப் பிரக்ஞையுடன் தெரிந்து கொண்டேன் என்பதை ஞாபகச் சிடுக்குகளில் தேடினேன். கூலித் தொழிலாளி ஒருவரிடமிருந்து. மத்திய அரசின் நீர்வளத்துறை அலுவலகம் ஒன்றில் 'இடம் பிடித்து விடும்' நோக்கத்தில் நானும் ஒரு கூலியாக தற்காலிகப்பணி புரிந்து கொண்டிருந்தேன். சினிமா, நடிகைகள், பெண்களின் உடல் என்று உணவு இடைவேளைகளில் பேசிக் கொண்டிருந்த தொழிலாளர்களின் இடையில் மைக்டைசனின் தோற்றத்தை நினைவுப்படுத்தும் ஒரு இளைஞர்தான் என்னிடம் "சுஜாதா படிச்சிருக்கியா?" என்றார். நான் அப்போது ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர் என்று பொழுதுபோக்குப் புத்தகங்களை மாத்திரமே தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தேன். பெண் எழுத்தாளர்கள் என்றாலே ஒவ்வாமையான ஒரு எண்ணம், அம்பை, சூடாமணி போன்றவர்களைப் படிப்பதற்கு முன்னால் இருந்தது. அதனால் "பொம்பளைங்க எழுதறதுன்னா எனக்கு அலர்ஜி. எப்பவும் மாமியார் கொடுமைகளைப் பத்தி எழுதுவாங்க" என்றேன் தட்டையாக. "இல்ல. இவரு ஆம்பளை. நாளக்கு ஒரு புக்கு தர்றேன். படிச்சுப்பாரு" என்றார்.

இன்றளவும் பேசப்பட்டிருக்கும் 'நகரம்' என்ற அந்த மகத்தான சிறுகதையை படித்தது அந்தத் தொகுதியில்தான். இதுவரை படித்துக் கொண்டிருந்ததெல்லாம் கேலிச் சித்திரங்களாக மாறி விட வாழ்க்கையின் ஆதாரமான ஒரு அனுபவத்தின் சாயலின் துளியை சுவைக்க நேர்ந்தது அந்தத் தருணத்தில்தான். என்னை முதலில் கவர்ந்தது, மொழியை மிக லாவகமாகவும் எளிமையான ஆடம்பரத்துடனும் கையாளும் அவரின் திறமைதான். பத்துவரிகளில் ஒரு தேர்ச்சியில்லாத எழுத்தாளன் விவரிப்பதை, கிட்டத்தட்ட ஒன்றரை வரியில் உள்ளடக்கத்தின் சேதாரமில்லாமல் எழுதுவது. படித்துக் கொண்டிருக்கும் போதே சம்பவங்கள் visual-ஆக நம்முன் விரிவதைக் காணும் பரவசத்தை அடைவது. உரைநடையில் விளக்காமல் உரையாடல்களின் மூலமாகவே கதையையும் காட்சியையும் நகர்த்துவது. கதை மாந்தர்களின் உணர்வுகளை அப்படியே நம் மூளைக்குள் செங்குத்தாக இறக்குவது.

பின்பு அவரின் எழுத்துக்களை தேடித் தேடி படிக்க ஆரம்பித்தேன். எத்தனை விதமான எழுத்து. கணையாழியில் எழுதும் போது வேறு விதமாயும் குமுதத்தில் எழுதும் போது இன்னொரு விதமாயும் ராணியில் தொடர்கதை எழுதும் போது down-to-earth ஆகவும், கடினமான விஞ்ஞான சமாச்சாரங்களை எளிமையான மொழியில் விளக்குவது, தமிழில் அதிகம் பேரால் இன்னும் கூட தொடப்படாத விஞ்ஞானக்கதைகளை பல்வேறு சாத்தியங்களில் எழுதிப் பார்த்தது, .. எத்தனை பரிமாணங்கள்.

தனிமை கொண்டு, சில வித்தியாசங்கள், முரண், ரேணுகா, கால்கள், அரிசி, ·பில்மோத்ஸவ்... என்று எத்தனை சிறப்பான சிறுகதைகள்..

பல சிறுகதைகளில் அதன் உச்சத்தைத் தொட்ட சுஜாதாவால் நாவல் என்கிற வடிவத்தில் சாதனை படைக்க இயலவில்லை. சிறுகதைகளைப் போல் அல்லாமல் அவரின் நாவல்கள் படித்து முடித்தவுடனேயே எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் மூளையிலிருந்து உதிர்ந்து போகிறது. ஏன் அவரால் நாவல் வடிவத்தை சிறப்பாக கையாக முடியவில்லை என்கிற கேள்வி எழுந்தது. சுபமங்களா பேட்டியில் இதைப் பற்றி சுஜாதாவே பேசுகிறார்.

.. முக்கியமான காரணம் தொடர்கதையினுடைய வடிவம். அதனுடைய வடிவத்தில் மாட்டிக்கிட்டா அப்படித்தான் ஆகும். 'புளிய மரத்தின் கதை' போலவோ 'ரப்பர்' போலவோ ஒரு நாவலை மனசுல உருவாக்கி ஒரு இடத்துல போய் ஒரு மாசம் உட்கார்ந்து முழு நாவலையும் எழுதும்படியான சந்தர்ப்பமே எனக்கு வரல்லே. தொடர்கதை என்பது வேறு ஜாதி. அது நாவல் அல்ல. செயற்கையான உச்சக்கட்டங்கள், 'தீபாவளிக்கு ஆரம்பிச்சு பொங்கலுக்கு முடிச்சுடுங்க' என்கிற நிர்ப்பந்தம் - இது மாதிரி இலக்கிய சம்பந்தமில்லாத பல பந்தங்கள் எல்லாம் இருக்குது. அதை எழுதக்கூடாது, இதை எழுதக்கூடாது, இன்னார் படம் போடணும், அதுக்குத் தகுந்த மாதிரி விதிகள்.....

"அப்ப ஏன் தொடர்கதை எழுதுறீங்க?"

"தொடர்கதை எழுதும் போது ஒரு கதையை பல விதமான உரைநடையில் சொல்லக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கிறதாக நான் நெனக்கிறேன். முழு நாவலாக நான் எழுதினது என்று சொல்லப் போனால் 'குருப்ரசாத்தின் கடைசி நாட்கள்' 'காகிதச் சங்கிலிகள்' இவைகளைச் சொல்லாம்."

" சுஜாதா என்கிற பெயர் காலம் காலமாக நிலைச்சு நிற்கும்படி சமுதாயப் பிரச்சினையை வச்சு ஒரு பிரம்மாண்டமான நாவல் - Magnum Opus எழுதணும்கிற ஆர்வம் உங்களுக்கு இருக்கா...?

"எழுத மாட்டேன். ஏன்னா பிரும்மாண்டமா எழுதறது என்பது முன்னால தீர்மானிக்கப்படறதில்லே. அதோட எனக்கு அந்த மாதிரியான ஒரு நாவலில் வாழந்து பார்த்த அனுபவம் கிடையாது. என் வாழ்க்கை ரொம்ப மகிழ்ச்சியா இருந்திருக்கு. என் வாழ்க்கையில் போராட்டங்களே இல்லே. ஏழ்மையை நான் அதிகம் பார்த்ததில்லே. வேலை தேடி அலைஞ்சதில்லே. மத்தவங்க உணர்ச்சிகளில்தான் நான் வாழ முடியுமே தவிர, அதை ஒட்டித்தான் கதை எழுத முடியுமே தவிர என் அனுபவத்தைப் பிரதிபலிக்க முடிவதில்லை. அதோட நான் ஒரு விஞ்ஞானியாக இருப்பதனால எழுதுவதே முன்ன சொன்னாப்பல எனக்கு க்ரா·ப்ட் ஆகத்தான் படுது.... (சுபமங்களா பேட்டி)

என்றாலும்.... கனவுத் தொழிற்சாலை, நிலா நிழல், எதையும் ஒரு முறை, பதவிக்காக, நில்லுங்கள் ராஜாவே போன்ற நாவல்கள் என் பார்வையில் உன்னதமானவை.

()

ஆரம்ப காலத்தில் (1963) எஸ்.ஆர்.ராஜன், எஸ்.ரங்கராஜன் என்கிற பெயர்களில் எழுதினார். குமுதத்தில் சில சிறுகதைகள் வெளிவந்த போது அப்போது அங்கிருந்த ரா.கி.ரங்கராஜன் என்ற பெயருக்கும் இவர் பெயருக்கும் குழப்பம் நேர்ந்தது. எனவே ஒரு செளகரியத்துக்காக தன் மனைவியின் பெயரான 'சுஜாதா' வில் எழுத ஆரம்பித்து அதுவே நிலைத்துப் போனது. கணையாழியில் கடைசிப் பக்கங்களில் எழுதும் போது இன்னொரு பெயரும் உண்டு. இவர்தான் எனக்கு மிகவும் பிடித்தமானவர். இவரின் மூலமாகத்தான் தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய எழுத்தாளர்களை மாத்திரமல்லாமல், மற்ற மாநில, நாட்டு எழுத்தாளர்களின் / பீட்டில்ஸ் போன்ற இசைக்கலைஞர்கள், இதழ்கள் போன்றவைகளின் அறிமுகம் கிடைத்தது.

........ துவக்கத்தில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பெயரில் நீர்க்குமிழ்கள் என்று (கஸ்தூரி ரங்கன் கொடுத்த) தலைப்பில் இந்தப் பகுதியை எழுத ஆரம்பித்தேன். இடைக்காலத்தில் 'பெட்டி' என்றும், இறுதியில் கடைசிப்பக்கம். முன்னூறு இதழ்களில் சுமார் நூற்றம்பதாவது எழுதியிருப்பேன். 'சுஜாதா' என்கிற popular அடையாளத்திலிருந்து விலகி தன்னிச்சையாக சுதந்திரமாக பலப்பல விஷயங்களைப் பற்றி carbon dating-லிருந்து நம்பிள்ளை வரை என்னால் கஸ்தூரி ரங்கன் தந்த சலுகையால் எழுத முடிந்தது. என் அனுபவத்தின்படி சற்றே நகைச்சுவை கலந்து ஒரு விஷயத்தை சொல்லும் போதெல்லாம் எதிர்ப்புக் கடிதங்கள் வந்தன. 'தாமரை' இதழ், கிறித்துவ இயக்கம், ராயப்பேட்டை பாலு (பாலகுமாரன்) என்று பல பேர் கோபத்துக்கு ஆளானேன். எதிர்பாராத மூலைகளிலிருந்து பாராட்டுக்களும் வந்தன. கணையாழி இரண்டாயிரம் காப்பிதான் விற்றாலும் பல பெரிய மனிதர்கள் படிக்கிறார்கள் என்பது தெரிந்தது. .....

இந்தப் பக்கங்கள் நிறைய எழுத்தாளர்களின் ஆதரவையும், எதிர்ப்பையும், விமர்சனத்தையும் சந்தித்தன. கறாரான விமர்சனங்களை பதிவதை பொதுவாக தவிர்க்கும் சுஜாதா, இந்தப் பக்கங்களில் இயல்பான எழுதின வரிகளுக்காகவும் தீவிர இலக்கிய உலகிலிருந்து நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டார்.

......... சாகித்ய அகாடமி அவார்டு திரு.சு.சமுத்திரத்துக்கு கிடைத்ததில் சந்தோஷம். எழுத்துடன் சம்பந்தப்படாத துணைவேந்தர்களுக்கும், துணி வியாபாரிகளுக்கும் போகாமல் பரிசு ஒரு எழுத்தாளருக்கு கிடைத்திருப்பது வரவேற்கப்பட வேண்டியதே. ஆனால் இந்தப் பரிசுகள் கிடைத்ததுமே எழுத்தாளர்களுக்கு ஒரு மெஸ்ஸையா பாசாங்கு வந்துவிடுகிறது. அது கருத்தட்டாக்குடி ஜமீன் அறக்கட்டளை பரிசாக இருந்தாலும் சரி, பரிசு பெற்ற உடனே தமிழ் இலக்கியத்தை உஜ்ஜீவிக்கிற வேகம் வந்து கொஞ்சம்போலும் உளற ஆரம்பிக்கிறார்கள். அண்மையில் அகிலன் நினைவு நாவல் பரிசு பெற்ற ஒரு இளம் எழுத்தாளர் ஏற்புரையில், தமிழில் ஒரே ஒரு நாவல்தான் எழுதப்பட்டிருக்கிறது. அது 'ஜேஜே சில குறிப்புகள்'. அதற்கு மேல் படிக்க தமிழில் வேறு ஏதும் கிடையாது, மலையாளத்தில்தான் உள்ளது என்றாராம். இந்தமாதிரி ஆசாமிகளையெல்லாம் கூட்டிவந்து டிபன் காபி பரிசு எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

சமுத்திரம் கூட பத்திரிகைப் பேட்டியில் கணையாழி போன்ற பத்திரிகைகளில் வருவது இலக்கியமல்ல என்கிற ரீதியில் சொல்லியிருக்கிறார். பரிசு கிடைத்தவுடன் அதிர்ச்சியாக ஏதாவது சொல்ல வேண்டும் என்று கட்டாயமில்லை......

()

"தமிழின் சிறந்த எழுத்தாக இருக்க வேண்டுமென்றால் அது நாகர்கோவிலில் இருந்து வட்டார மொழியில் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும் போலிருக்கிறது' என்று சொல்லப் போய் சர்ச்சையானது. காலச்சுவடு சிறப்பிதழில் (1993) உள்ள கட்டுரை ஒன்றின் கடினத்தன்மையை விமர்சிக்கப் போய் (தன்னிலையை கரைத்தழிப்பதில் முடிவான நிலையைக் கொண்டு வந்தது தெரியா தூய அனுபவக்களம் என்பது உறவுகளின் மெல்லிய ஜவ்வாகி விடுகிறது. - இந்தக் கட்டுரை யாருக்காக) "சுஜாதாவின் நாகரிகக்குடை" (என்று ஞாபகம்) காலச்சுவடில் இருந்து பதிலடி வந்தது.

இலக்கியத்தில் சுஜாதாவின் பெயர் தவிர்க்க முடியாததுதான் என்றாலும் தீவிர இலக்கிய உலகில் தம்மைப் புறக்கணிப்பது குறித்து அவருக்கு வருத்தம் இருந்திருப்பதாகத்தான் படுகிறது. இது பற்றி சுஜாதா சுபமங்களா பேட்டியில் கூறுவது:

....சுஜாதா என்கிற படிமம் நிறுவனத்தின் அம்சமாகி விட்டது. (Sujatha's image has become a form of establishment) சுஜாதாவைக் கண்டு கொள்ளாமல் விடுவது கூட இப்போது விமர்சனத்தில் ஒரு உத்தியாகி விட்டது. தனிமையில் பேசும் போது அந்த விமர்சகர்கள் என் கதையெல்லாம் படிக்கறாங்கன்னு தெரியுது. பல கதைகளை புகழறாங்க. அதை வெளியிடுவதில் அவுங்க தயங்கறாங்க. எது ஜனரஞ்சகமாக இருக்குதோ அது இலக்கியமாக இருக்க முடியாது என்ற அசைக்க முடியாத கோட்பாடு அவுங்க கிட்ட இருக்கு.... (சுபமங்களா பேட்டி).

இதனாலேயே பிற்காலத்தில் அவர் விமர்சனங்களை பெரும்பாலும் குறைத்துக் கொண்டாரோ என்று தோன்றுகிறது. சங்ககால கவிதைகளை ஆங்கிலத்தில் பரவச்செய்த ராமானுஜன் முதற்கொண்டு புறநானூற்றுக்கவிதைகளின் எளிய அனுபவம், திவ்வியப்பிரபந்தம், திரைப்படம், வைணவம், மருத்துவம் என்று அனைத்து சாத்திய தலைப்புகளிலும் எழுதிய அவரைக் கண்டு பிரமிக்கவே தோன்றுகிறது.

()

இடையில் புதிதாக எழுத வருகின்றவர்களின் தயக்கங்களை விலக்கி சில ஆதாரமான வழிமுறைகளைச் சொல்லி உற்சாகப்படுத்துவதிலும் சளைக்காதவர்.


* தினம் பத்து நிமிஷமாவது படியுங்கள். தினம் படிக்க வேண்டியது முக்கியம்
* மனசுக்குள் படியுங்கள்
* ஒரே சமயத்தில் நான்கைந்து புத்தகம் வைத்துக் கொண்டு படிக்கலாம்
* எல்லோருடைய முதல் புத்தகங்களை படியுங்கள். இருபது விழுக்காடு ·பிக்ஷன், எண்பது நான்-·பிக்ஷன்
* படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை வைத்திருங்கள்
* வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் க்யூ வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. அப்போதெல்லாம் புத்தகங்களை எடுத்துச் செல்லுங்கள்
* நூலகங்களுக்கு குழந்தைகளையும் அழைத்துச் செல்லுங்கள்.

(கணையாழி 1994)

()

அவரைக் கண்டு பிரமிக்கும் அதே வேளையில் சில விமர்சனங்களும் உண்டுதான்.

(1) பொதுவாக பல விஷயங்களில் முற்போக்காக சிந்திக்கும் அவர், ஜாதி விஷயத்தை மாத்திரம் ஏன் கடக்க முடியவில்லை என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. தான் ஒரு வைணவன் என்பதை அடிக்கடி அடிக்கோடிட்டு எழுதும் கட்டுரைகள் எனக்கு எரிச்சலையே ஏற்படுத்தின. ஒருவன் தன் அடையாளங்களைத் துறப்பது சுலபமல்ல என்றாலும், குழுக்கள் என்கிற விஷயத்தை தாண்ட முடியாமல் மனிதக்கூட்டம் ஜீவிக்க இயலாது என்பது சமூகவியல் உண்மை என்றாலும், பல்வேறு உணர்ச்சிகளில் கூடுபாயும் ஒரு எழுத்தாளன், சமூகத்தில் வெறுக்கப்பட்ட ஒரு விஷயத்தை புற்க்கணிக்க முடியாமல் திரும்பத் திரும்ப நினைவு கூர்வதையும் அதன் மூலம் பெருமை கொள்வதையும் காண ஒவ்வாமையாகவே இருந்தது. (இது தலித் எழுத்தாளர்கள் முதற்கொண்டு எல்லோருக்குமே பொருந்தும்.)

(2) உலக இலக்கியங்களின் பரிச்சயமிருந்தும், எழுதக்கூடிய சாத்தியமும் திறமையும் இருந்தும் ஏன் இந்த மனிதரால் வெகுஜன பத்திரிகைகளிடம் பிரதானமாக தன்னை ஒப்படைத்துக் கொண்டதை தவிர்த்து சிறந்த படைப்புகளைத் தர இயலவில்லை. பொருளாதார நிர்ப்பந்தமா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. பின்பு ஏன்?

(3) நல்ல சினிமாக்களை சிலாகித்தும், மோசமான சினிமாக்களை கோபமாக கிண்டலடித்தும் கட்டுரை எழுதினவர் பிற்பாடு வணிக இயக்குநர்களோடு மாத்திரமே பணிபுரிந்தது ஏன்? மீடியா டீரீம்ஸ் மூலம் பாரதி, குட்டி போன்ற சில முயற்சிகளைத் தவிர நல்ல சினிமாக்களை உருவாக்குவதில் ஏன் தீவிரமாக பங்கு கொள்ளவில்லை.

()

வெகுஜன பத்திரிகைகளுக்கும் சிறுபத்திரிகைகளும் இடையில் ஒரு பாலமாக ஒரே உதாரணமாக இருந்த (அவரின் மொழியில் "இலக்கியக் கடத்தல்") சுஜாதா ஏற்படுத்தின வெற்றிடத்தை இனிமேல்தான் யாராவது நிரப்ப வேண்டும்.

suresh kannan

Wednesday, February 27, 2008

ஆசான் சுஜாதாவிற்கு அஞ்சலி

பொதுவாக மரணச் செய்திகளை இயல்பு குலையாத நிலையுடனேயே எதிர்கொள்ளும் மனத்திறம் என்னுடைய பதின்ம வயதிலிருந்தே ஏனோ எனக்கு வாய்த்திருந்தது. யாருடைய மரணமும் என்னை முற்றிலுமாக தடுமாறவைக்கவில்லை, என் தந்தையின் மரணம் உட்பட. ஏற்கெனவே எதிர்பார்த்திருந்ததுதான் என்றாலும் எழுத்தாளர் சுஜாதாவின் மரணம் குறித்த பிரசன்னாவின் குறுஞ்செய்தி வந்த போது பாசாங்கின்றி உண்மையிலேயே வருத்தமாக இருந்தது.

Photobucket

வெகுஜன பத்திரிகைகளிலேயே வெகுகாலம் முதிர்ச்சியின்றி உழன்று கொண்டு நேரத்தில் உன்னத இலக்கியத்தின் பால் என்னைத் திருப்பி விட்ட அவரது இலக்கிய அறிமுகக் கட்டுரைகளை நன்றியோடு இந்தச் சமயத்தில் நினைவு கூர்கிறேன். எழுதுவதற்கான ஆர்வமிருந்தும் தயக்கம் காரணமாக தள்ளி நின்ற நேரத்தில் அவரின் பல கட்டுரைகள் எனக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளித்தன. என்னைப் போலவே பல நண்பர்களும் இதே திசையில் பயணித்தார்கள் என்று அறிந்த போது நெகிழ்ச்சி ஏற்பட்டது. பிற்பாடு எனக்கு அவரின் மீதான பல்வேறு விமர்சனங்களைத் தாண்டியும் மரியாதையும் அன்பும் நீடித்தது. தேசிகனின் முயற்சியில் அவரை நேரில் சந்தித்த தருணம் இந்தச் சமயத்தில் நிறைவை தருகிறது. அது நிகழாமல் போயிருந்தால் ஒரு குறையாக இருந்திருக்கும்.

"மரணம் உனது இடது கைக்கு அருகிலேயே இருக்கிறது" என்று யாருடைய மேற்கோளையோ குறிப்பிட்டு கணையாழியில் அவர் எழுதிய கட்டுரைதான் நினைவுக்கு வருகிறது.

'கண்கள் பனித்தன' 'நா தழுதழுத்தது' என்றெல்லாம் cliche-வான வாக்கியங்களை எழுதினால் அவரின் ஆன்மா கூட மன்னிக்காது என்பதால்.....

Good-bye ஆசானே.

suresh kannan