Showing posts with label கெளதம் வாசுதேவ மேனன். Show all posts
Showing posts with label கெளதம் வாசுதேவ மேனன். Show all posts

Saturday, May 22, 2021

கார்த்திக் டயல் செய்த எண் - கெளதம் மேனன் (குறும்படம்)





லாக்டவுன் சமயத்தில் தன் ஐபோனிலேயே கெளதம் மேனன் இயக்கிய குறும்படம். இது குறித்த கிண்டல்களை இணையத்தில் கண்டபின் நானும் அத்தகைய எண்ணத்தோடுதான் இந்தக் குறும்படத்தைப் பார்க்கப் போனேன்.


ஆனால் – இதில் வெளிப்பட்ட அசலான உணர்வுகளும் வசனங்களும் என்னை உலுக்கி விட்டன. VTV-ன் அற்புதமான ஒரு சிறிய extension இது.


‘Gautham is such a sweet rascal’ என்பதுதான் குறும்படம் முடிந்தவுடன் தோன்றியது. அவருக்குள் இருக்கும் காதலன் இன்னமும் இளமையாகவும் பிரிவுத்துயரின் வலியுடனும் இருக்கிறான் என்று அழுத்தமாக யூகிக்கத் தோன்றியது. 

**


ஒரு திரைப்பட இயக்குநன் தன் அடுத்த படைப்பிற்கான ஸ்கிரிப்டை எழுதத் துவங்குகிறான். ஆனால் இயலவில்லை. Writers block என்பது மட்டும் காரணமல்ல. பிரிவின் வலி அவனை வதைக்கிறது. ஒரு காலத்தில் அவனுக்குள் ஆழமாக பாதிப்பைச் செலுத்திய ஒரு பெண், நினைக்கும் போதெல்லாம் அவனுடைய இதயத் துடிப்பை அதிகரித்து மூச்சடைக்கச் செய்த பெண், அண்டை மாநிலத்திற்கு வந்திருக்கும் செய்தியை சமூகவலைத்தளத்தின் மூலமாக அறிகிறான். 


அவளுடன் பேசினால்தான் மனபாரம் சற்றாவது குறையும் என்று தோன்றுகிறது. ‘உன் குரலை கேட்கணும் போல இருந்துச்சு” என்று கார்த்திக் சொல்லும் வசனமானது, வாழ்நாள் முழுக்க பிரிவுத்துயரால் இருப்பவர்களின் வேத வாக்கியம் எனலாம். அதைச் சொல்லாத ஒரு காதலனே இருக்க மாட்டான். 


இருவருக்குள்ளும் நிகழும் அந்த அழகான உரையாடல், யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக பயணிக்கிறது. 


‘I love you karthick’ன்னு மட்டும் சொல்லு.. போதும்.. நான் எல்லாப் பிரச்சினையையும் தாண்டிடுவேன்’ என்று கார்த்திக் சொல்வது, ஆண்கள் எப்போதுமே செய்யும் ஒரு விஷயம். காலம் கடந்து போனாலும் கூட அவள் தன் மேல் கொண்டிருக்கிற காதல் உறுதியானதுதானா என்பதை மறுபடி மறுபடி கேட்டுக் கொள்வதில், அவளுடைய வார்த்தைகளில் அது உறுதிப்படுவதில் ஒரு வித சந்தோஷம் அவர்களுக்கு கிட்டிக் கொண்டே இருக்கும். 


அதே சமயத்தில் அது சம்பிதாயமானதா என்கிற சந்தேகமும் இன்னொரு புறம் எழுந்து கொண்டே இருக்கும். ‘you didn’t mean’ல’ என்று கார்த்திக் கேட்பதும் இதுதான்.

 
அவனுடைய மனஇறுக்கத்தை குறைக்கும் நோக்கத்துடன் ‘ஐ லவ் யூ கார்த்திக்’ என்று சொல்லும் ஜெஸ்ஸியின் பெருந்தன்மை பிரமிக்கவும் நெகிழவும் வைக்கிறது. உண்மையான காதல் குறைந்தபட்சம் செய்யும் மரியாதை அது. அதே சமயத்தில் தான் ஐக்கியமாகி விட்ட நடைமுறை வாழ்க்கையையும் மறைக்காமல் சொல்கிறாள். 


“நான் என் பிள்ளையாகத்தான் உன்னைப் பார்க்கிறேன்” என்று ஜெஸ்ஸி அந்த உரையாடலைத் தொடர்வது இந்தக் குறும்படத்தை  இன்னமும் உன்னதமாக்குகிறது. ஒரு பெண் காதலியாகவும் தாயாகவும் இருக்க முடிவது உலக அதிசயமல்ல. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் தன் தாயைத்தான் ஓர் ஆண் தேடுகிறான் என்பதும் இயற்கையானதுதான். 


**


‘சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டுவது போல’ இந்தக் குறும்படத்தின் இடையே கொரானோ சமயத்தில் திரையுலகம் எதிர்கொள்ளும் பிரச்சினை, தன் பொருளாதார பிரச்சினை’ ஆகியவற்றையும் கெளதம் இணைத்திருப்பது சிறப்பு. 


ஒருவரையொருவர் நேரில் சந்திக்க முடியாத நெருக்கடியான சூழலில் இருக்கிற குறைந்தபட்ச தொழில்நுட்ப வசதியைக் கொண்டு ஓர் அட்டகாசமான குறும்படத்தை கெளதம் உருவாக்கியிருப்பது சிறப்பு. கலைஞர்களுக்கு எதுவும் தடையில்லை; எல்லையும் இல்லை.


**
சிம்பு ஒரு நல்ல நடிகர். ஒரு நல்ல இயக்குநரிடம் மாட்டினால் மிக அற்புதமாக பிரகாசிப்பார் என்பதை இந்தக் குறும்படமும் உறுதிப்படுத்துகிறது. இதில் அசலுக்கு மிக நெருக்கமான உணர்வு மற்றும் உடல்மொழியை வெளிப்படுத்துகிறார். உடல் எடை விஷயத்தில் கவனம் செலுத்தினால் நன்று. சமயங்களில் குறளரசனைப் பார்ப்பது போலவே இருக்கிறது. 


த்ரிஷாவும் க்யூட்டான ஃபெர்பாமன்ஸைத் தந்திருக்கிறார். 


நான் எப்போதுமே சொல்வதுதான். கெளதமால், விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் மாதிரி இன்னொரு க்யூட்டான ரொமான்ஸ் திரைப்படத்தை தர முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறது இந்தக் குறும்படம்.
 

**
வழக்கம் போல் மெல்லுணர்வுகளைக் கிண்டலடிக்க ஏராளமான பேர் இருப்பார்கள். அவர்கள் இதைக் கிண்டலடிப்பார்கள். தங்களின் வலிகளை ஒளித்துக் கொண்டு இந்த ஜோதியில் கலந்து கும்மியடிப்பவர்களும் இருப்பார்கள். 


ஆனால் அசலான ஒரு காதலில் விழுந்து பிறகு வாழ்நாள் பிரிவுத் துயரின் வலியுடன் இருப்பவர்களால் இந்தக் குறும்படத்தை மனதிற்கு மிக நெருக்கமாக உணர முடியும். தன்னுடைய வாழ்க்கையை திரையில் இருவர் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டு மனம் கசிய முடியும். சில நொடிகள் அதை வாழ முடியும்.
 

**
இந்த அபாரமான குறும்படத்தைத் தாண்டி என்னை பொறாமை கொள்ளச் செய்த விஷயம், சிம்புவின் வீட்டிலிருந்த ஹோம் தியேட்டர். அது என் வாழ்நாள் கற்பனை. நிறைவேறவே முடியாத கற்பனையாகவும் முடிந்து போகலாம்.

 

குறும்படத்தைக் காண

suresh kannan

Monday, December 02, 2019

இயக்குநர் கெளதம் வாசுதேவ்- பகற்கனவுகளின் நாயகன்






'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தை பற்றி பிரத்யேகமானதாக இல்லாமல் அந்தப் படத்தை முன்னிட்டு இயக்குநர் கெளதமின் படைப்புலகைப் பற்றி சிறிது ஆராயலாம் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

பொதுவாக தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் உருவாக்கும் திரைக்கதைகள் எதன் மீது அமைந்திருக்கும்? அவர்கள் சினிமாவிற்காக பிரத்யேகமாக உருவாக்கிய கதைகள், எழுத்தாளர்களால் முன்பே எழுதப்பட்ட புனைவுகள்,  கேள்விப்பட்ட அனுபவங்கள், பத்திரிகை செய்திகள்  போன்றவை அடிப்படையாக, கலவையாக இருக்கும். இந்த கச்சாப் பொருளை ஆதாரமாக வைத்துக் கொண்டு சினிமாவிற்கேற்ற பண்டமாக உருமாற்றுவது வழக்கம். இந்த உருமாற்றத்தில் இயக்குநரின் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள அந்தரங்கமான அடையாளங்கள், சாயல்கள், ஆழ்மன இச்சைகள் போன்றவைகள் தன்னிச்சையாக வெளிப்படக்கூடும். இது அந்தளவிற்கு அந்த திரைக்கதையுடன் அவரது அகம் நெருக்கமாக இருக்கிறது என்பதைச் சுட்டுகிறது.

உதாரணத்திற்கு, ஓர் ஆணின் வாழ்வில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களின் காதல் குறுக்கிட்டால்  என்னென்ன சிக்கல்கள் உருவாகலாம் என்பதை  தமிழ் சினிமாவின் சில இயக்குநர்கள் தொடர்ச்சியான இடைவெளியில் படமாக உருவாக்கியுள்ளனர். அதில் ஒரு குறிப்பிட்ட இயக்குநரின்  தனிப்பட்ட வாழ்க்கையை கவனித்தால் நிறைய பெண்கள் இருந்திருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது. இதைப் பற்றிய வம்புகளை உரையாடுவது இந்தக் கட்டுரையின் நோக்கமில்லை என்பதால் அவர்களின் பெயர்கள் தேவையற்றது.

இந்தப் பாணிக்கு  எதிர்முனையொன்றும் இருக்கிறது. வணிக நோக்கு சினிமாவிற்கென்றே செயற்கையான கதைகளை அடிப்படையாக  கொண்டு உருவாக்கப்படும் திரைக்கதைகள் அதற்கான மசாலாக்களுடன் யதார்த்த உலகத்துடன் தொடர்பேயில்லாமல் மிகையான நாடகமாக, அந்தரத்தில்  தொங்குபவையாக இருக்கும். அதிலுள்ள செயற்கைத்தனம் காரணமாகவே அது போன்ற திரைப்படங்கள்  நுட்பமான பார்வையாளர்களின் மனதில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாது. படம் முடிந்ததும் அந்த சுவாரசியத்தை அரங்கிலேயே கழற்றி வைத்து விட்டு  மறந்து விடும் தன்மையைக் கொண்டதாக இருக்கும்.

இதற்கு மாறாக தாம் உருவாக்கும் திரைக்கதைகளை தம்முடைய மனதுடன், அந்தரங்கமான அனுபவங்களுடன், கற்பனைகளுடன் இணைத்து   உருவாக்கும் இயக்குநர்களின் படைப்புகள் யதார்த்தத்திற்கு நெருக்கமாக இருக்கும். நுண்ணுணர்வுகள் நிரம்பியதாக இருக்கும். அது போன்ற திரைப்படங்களை பார்வையாளன் தன் வாழ்நாள் முழுக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அசை போடுவான்.

இந்த நோக்கில் கெளதமின் திரைப்படங்களைப் பற்றி பார்க்கலாம்.


***


கெளதமைப் பற்றிய தனிப்பட்ட, உபத்திரவமில்லாத விவரங்கள் ஒருவகையில் அவரது திரைப்படங்களைப் புரிந்து கொள்ள உதவக்கூடும்.

அவருடைய தந்தை மலையாளி, தாய் தமிழர். இந்தக் கலப்புக் கலாச்சார பின்னணியோடு பிறந்தவராக இருந்தாலும் கெளதம்  வளர்ந்ததெல்லாம் தமிழ் நாடுதான். திருச்சியில் பொறியியல் படிப்பு. என்றாலும் சினிமா மீதான ஆசை அவருக்குள் ஒரு தீயாக கனன்று கொண்டேயிருந்தது. அதை ஊதிப் பெருக்கியதில் 'நாயகன்' திரைப்படத்திற்கு பெரிய பங்குண்டு. தமிழ் சினிமாவின் திரைமொழியை, கதைகூறலை, பார்வையாளர் ரசனையை பெரிதும் பாதித்த அந்த திரைப்படம் இளைஞரான கெளதமையும் பாதித்ததில் ஆச்சரியமில்லை. அத்திரைப்படம் தமக்குள் ஏற்படுத்திய செல்வாக்கைப் பற்றி பல நேர்காணல்களில் குறிப்பிடுகிறார். (காட்பாதர் திரைப்படத்தின் ஒரு தருணம், அச்சம்  என்பது மடமையடா-வை உருவாக்க காரணமாக இருந்தது என்கிற குறிப்பு அதன் டைட்டில் கார்டில் வருவதை இங்கு நினைவுகூரலாம்). விளம்பரப் படங்களில் இருந்து ராஜீவ் மேனன் வழியாக திரைத்துறையின் நுழைவு அமைகிறது.

கெளதம் என்கிற தனிநபரின் ஆளுமை சார்ந்த விஷயங்கள் அவரது திரைக்கதைகளிலும் நாயகப் பாத்திரங்களின் வடிவமைப்புகளிலும் புறத் தோற்றங்களிலும் கூட வெளிப்படுவதை கவனிக்கலாம். உயர்நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பொறியியல் படித்த மாணவன், திரைத்துறையில் நுழைவதற்கான  கனவுகளுடன் இருக்கும் இளைஞன், முதற்பார்வையிலேயே காதல் பித்தில் விழுபவன், காதலுக்காக உருகி உருகி வழிபவன், தந்தை மீது அதிக பாசமுள்ளவன், நாணயமான  காவல்துறை அதிகாரி, கண்ணியமான காதலன் போன்ற சித்திரங்கள் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் வந்து கொண்டேயிருக்கின்றன. போலவே கெளதமின் தனிப்பட்ட விருப்பத் தேர்வான நீலச்சட்டை, கைவளையம் போன்ற விஷயங்கள் அவருடைய திரைப்படங்களின் நாயகர்களிடமும் இருப்பதை கவனிக்கலாம்.

கெளதம் அடிப்படையில் காதல் உணர்வுகள்  பொங்கி வழியும் மனம் கொண்டவராக இருக்கக்கூடும். எனவே அவரது திரைப்படங்களின் நாயகர்கள் உருகி உருகி காதலிக்கிறார்கள். கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள்.  கெளதம் இது சார்ந்த நிறைய பகற்கனவுகளை தம்முடைய திரைப்படங்களில் உருவாக்குகிறார். தம்மைக் காதலிக்காத பெண்களை வெறுப்பும் வன்முறையுமாக எதிர்கொள்ளும் இளைஞர்கள் நடைமுறையில் நிறைந்திருக்கும் தமிழ் சமூகத்தில் அதற்கு மாறாக கண்ணியமான காதலன்களை அவர் சித்தரிப்பது ஒருவகையில் வரவேற்புக்குரியது.

'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தில் நாயகிக்கு நாயகன் மீது எந்த தருணத்தில் நட்பு, காதலாக மாறியது என்பது குறித்தான உரையாடல் அவர்களுக்குள் பிற்பாடு நடக்கும். அவர்கள் மேற்கொள்ளும் சாலைத் தொடர் பயணத்தில் கண்ணியமாக நடந்து கொள்வான் நாயகன். ஒரே அறையில் தங்குவார்கள். அவள் உடைமாற்றுவதற்கான சூழல் வரும் போது தாமாகப் புரிந்து கொண்டு வெளியேறுவான். 'அந்தக் கணம்தானே"? என்று கேட்பான் நாயகன். அதை ஆமோதிப்பாள் நாயகி.

ஒரு நேர்காணலில் கெளதம் பகிர்ந்த விஷயம் இது. "என்னைச் சந்திக்கும் சில இளம் பெண்கள் கேட்கிறார்கள். உங்கள் திரைப்படங்களில் கண்ணியமான காதலனை தொடர்ந்து சித்தரிக்கிறீர்கள். ஆனால் நடைமுறையில் அது போன்ற ஆண்கள் எங்கேயிருக்கிறார்கள்?". அந்த வகையில் தாம் உருவாக்கும் ஆண் சித்திரங்கள் ஃபேண்டசி தன்மை கொண்டவை என்பது ஒருவகையில் நிரூபணமாகிறது என்று ஒப்புக் கொள்கிறார் கெளதம்.

ஆனால் அவ்வாறான கண்ணியமான காதலன்கள் சமூகத்தில் இல்லவே இல்லை என்றும் சொல்லி விட முடியாது. ஆண்மைய சிந்தனையுடன் இயங்கும் சமூகமாகவே இது பெரும்பாலும்  இருந்தாலும் ஒருதலையான, நிறைவேறாத காதல் உணர்வோடு தோன்றும் வெறுப்பில் பெண்களின் மீது வன்முறைகளை நிகழ்த்தும் சம்பவங்களின் சதவீதத்தையும், காதலின் மூலம் நிறைவேறிய திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியோடு தங்களின் வாழ்வின் இனிமையைத் தொடரும்  நபர்களின் சதவீதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். 'உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருந்தாலும் நான் ஏன் ஜெஸ்ஸியை லவ் பண்ணணும்' என்று தம்முடைய அகக்குரல்களின் வழியாக காதலை, பெண்மையை ஆராதிக்கும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

***

ஒரு நல்ல காதலனின் சித்திரத்தைப் போலவே நாணயமான காவல்துறை அதிகாரிகளையும் தம் திரைப்படங்களில் தொடர்ந்து உருவாக்குகிறார் கெளதம். இதுவும் பகற்கனவின் கூறுதான். தேசியம் எனும் அமைப்பு உருவானது பாரபட்சமில்லாத சமூகம் அமைவதற்கான ஓர் ஏற்பாடு. அரசு, சட்டம், நீதி, காவல் போன்ற துணை நிறுவனங்களின் அத்தியாவசியமான பணி என்பது இந்த சமத்துவத்தை சமூகத்தில் நிறுவுவதும், பேணுவதும், கண்காணிப்பதும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இருக்கிறதா? சமூகத்தில் நிகழும் பல முறைகேடுகளுக்கு இந்த நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பவர்கள் உடந்தையாக இருக்கிறார்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.

தீயவர்களை அழித்து நல்லவர்களை காக்கும் அவதாரங்களைப் போன்ற காவல்துறை அதிகாரிகளை தம் திரைப்படங்களில் உருவாக்குகிறார் கெளதம். அவர் அடிப்படையில் காதலுணர்வு மேலோங்கிய ஒரு நபராக இருக்கக்கூடிய சாத்தியத்தைப் போலவே காவல்துறை அதிகாரியாக ஆக விரும்பி அந்த நிறைவேறாத ஏக்கம்தான் பலவிதங்களில் அவரது திரைப்படங்களில் எதிரொலிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அது சார்ந்த பகற்கனவுகள் காவல் அதிகாரியின் சாகசங்களாக அவரது திரைப்படங்களில் வெளிப்படுகின்றன. தங்களை எந்த அவதார புருஷராவது வந்து காப்பாற்ற மாட்டாரா என்று ஏங்குவது எளிய சமூகத்தின் பல காலமாகத் தொடரும் ஏக்கம். எனவே அது சார்ந்த பகற்கனவுகளை உருவாக்கும் திரைப்படங்களை அவர்களும் விரும்புவார்கள். இது போன்ற எம்.ஜி.ஆர் ஃபார்முலா படங்கள் வெற்றி பெறுவதன் அடிப்படையான உத்தி இதுவே.

எனவே கெளதம் உருவாக்கும் 'நல்ல' காவல்துறை அதிகாரிகள் பொதுச்சமூகத்திடம் வெற்றி பெறுவதில் ஆச்சரியமில்லை. இயக்குநர் ஹரி உருவாக்கும் திரைப்படங்களின் காவலர்களும் இதைப் போன்றவர்கள்தான் என்றாலும் அவர்கள் மிகையான ஆவேசத்துடன் இயங்கும் போது கெளதமின் நாயகர்கள் ஆங்கிலப் படங்களின் நகல் போல நளினமாக இருக்கிறார்கள். இந்த ஒப்பீட்டைப் போலவே கெளதமின் காதல் திரைப்பட பாணியையும் செல்வராகவனின் பாணியையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். கெளதமின் பாத்திரங்களின் காதலை கண்ணாடி பூ போல பத்திரமாக கையாண்டு ஆராதிக்கும் போது அதை உடைத்துக் காட்டுவது போல அதன் இருண்மையையும் செல்வராகன் சித்தரிக்கிறார். காமமும் காதலின் ஒரு பகுதி என்று நிறுவுவதில் செல்வராகவனுக்கு ஆர்வம் அதிகம்.

கெளதமின் திரைப்படங்கள் ஒன்று, காதல், அன்பு, பாசம் போன்ற மெல்லுணர்வுகளைக் குறித்த பிரத்யேகமான திரைப்படமாக இருக்கும். விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம், வாரணம் ஆயிரம் போன்றவை இந்த வகையைச் சார்ந்தவை. இன்னொரு வகை, காதலும் ஆக்ஷனும் கலந்து இயங்கும் திரைப்படங்களாக இருக்கும். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்றவை.

'அச்சம் என்பது மடமையடா' இந்த தொடர்ச்சியான வகைமையில் உருவானதுதான் என்றாலும் இதில் தம்முடைய வழக்கத்தை மாற்ற முயல்கிறார் கெளதம். 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படத்தின் பல கூறுகளை நினைவுப்படுத்துவது போன்ற காட்சிகளோடு முதற்பாதி திரைப்படம் காதலுணர்வோடு இயங்கும் போது பிற்பாதி காட்சிகள் அதன் எதிர்முனையில் ஆக்ஷன் காட்சிகளோடு இயங்குகிறது. சரிபாதியாக கிழிக்கப்பட்ட காகிதம் போல இதன் திரைக்கதையை இரண்டு வகைமையாக பிரித்திருக்கிறார். இதன் மூலம் தனது ரசிகர்களுக்கு ஒரு புதுமையான சுவையைத் தர வேண்டும்  என்பது அவருடைய திட்டமாக இருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த விஷயம் சரியாக உருவாகி வரவில்லை. முதற்பாதி கெளதமின் பாணியில் அற்புதமானதாக இருக்கும் போது பிற்பாதியின் ஆக்ஷன் காட்சிகளில் நம்பகத்தன்மை என்பதேயில்லை. போதாக்குறைக்கு மிக அபத்தமான கிளைமாக்ஸ் வேறு.

அதுவரை நல்ல காவல்துறை அதிகாரிகளையே சித்தரித்துக் கொண்டிருந்த கெளதமின் திரைப்படங்களில் முதன்முறையாக வில்லனாக ஒரு கெட்ட போலீஸ் அதிகாரி வருகிறார். அதை சமன் செய்வதற்காகவோ அல்லது கெளதமின் வழக்கமான பாணியை கைவிடக்கூடாது என்பதற்காகவோ நாயகனும் ஐபிஎஸ் படித்து நல்ல காவல்துறை அதிகாரியாக வந்து தம் பழிவாங்கலை நிகழ்த்துகிறான். இதுதான் அந்த அபத்தமான கிளைமாக்ஸ்.  நல்லவேளை, பழிவாங்கப்பட வேண்டியது நீதிபதியின் பாத்திரமாக இருந்திருந்தால், திரைப்படம் இயங்கும் காலம் இன்னமும் கூடி நம்மை வேதனைக்குள்ளாகியிருக்கும்.

***

'உங்களின் திரைப்படங்கள் ஏன் ஒரே பாணியில் சுற்றிக் கொண்டிருக்கின்றன?' என்று சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் கெளதமிடம் கேட்கிறார். 'எனக்கு வசதியான விஷயங்களைப் பற்றிய படங்களையே நான் உருவாக்க விரும்புகிறேன்' என்று பதில் சொல்கிறார் கெளதம். மேலே குறிப்பிட்ட இரண்டாவது வகை இயக்குநர்களைப் போல சினிமாவிற்காக வெளியிலிருந்து எடுக்கப்பட்ட கதைகளை திரைப்படமாக்க கெளதம் விரும்பவில்லை. மாறாக தன்னுடைய தனிப்பட்ட, அந்தரங்கமான, ஆழ்மன விருப்பங்களை உணர்வுகளைச் சுற்றியே தன் படைப்புலகத்தை உருவாக்க விரும்புகிறார். இது ஒருவகையில் புரிந்து கொள்ளக்கூடியது. இயக்குநரின் தனிப்பட்டயுலகையும் அவரது திரைப்படங்களையும் பிரித்து நோக்க முடியாது எனும் பொருள் கொண்டது. ஆனால் மேற்குறிப்பிட்ட பத்திரிகையாளரின் கேள்வியைப் போல இந்த தேய்வழக்கு வரிசையை சலிப்பாக உணரும் பார்வையாளர்களும் இருப்பார்கள்.

கெளதமின் திரைப்படங்களில், இவ்வாறாக புரிந்து கொள்ளப்படாமல் தோல்வியடைந்த திரைப்படமாக 'நீதானே என் பொன் வசந்தம்' திரைப்படத்தைக் குறிப்பிடுவேன். பொதுவான தமிழ்  சினிமாவின் கதைகூறல் முறையிலிருந்து  பெரிதும் விலகியிருந்த திரைப்படம் அது. சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே அதில் இருக்கும். டைட்டில் கார்டிலேயே இதை தெளிவாக சொல்லி விடுவார் இயக்குநர். எனவே  காதல் ஜோடியின் ஊடல் மற்றும் கூடல் தொடர்பான சம்பவங்களே தொகுப்பாக திரும்பத் திரும்ப  வந்ததை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. 'என்னய்யா. இது படம் இது' என்று சலித்துக் கொண்டார்கள். மாறாக அந்த உணர்வுகளை நடைமுறையில் அனுபவித்த காதலர்களால் அது சரியாக புரிந்து கொள்ளப்பட்டது. இன்றும் கூட அத்திரைப்படத்தைக் கொண்டாடும் காதலர்கள் இருக்கிறார்கள்.

இது போல 'நடுநிசி நாய்கள்' என்கிற திரைப்படமும் தோற்றது. அந்த மாதிரியான psychological thriller வகைமையை கெளதமிடம் இருந்து பார்வையாளர்கள் எதிர்பார்க்கவில்லை என யூகிக்கிறேன். ஒரு கலாசார அதிர்ச்சியுடன் அதைப் புறக்கணித்தார்கள். இந்த நிலையில் 'கிராமப்புறப் பின்னணியை வைத்து ஒரு திரைப்படம் உருவாக்குவதற்கான ஆர்வம் இருக்கிறது' என்று கெளதம் நேர்காணல்களில் சொல்லி வருவது எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.

**

காதலும் வீரமும் தமிழர் பெருமை என்கிற மரபையொட்டி, அந்த இரண்டு விஷயங்களை பிரத்யேகமாகவும் கலந்தும் தம் திரைப்படங்களை இதுவரை உருவாக்கிய கெளதம், அதை முற்பாதி, பிற்பாதியாக இரண்டாகப் பிரித்து உருவாக்கிய 'அச்சம் என்பது மடமையடா'வின் கலவை சரியாக உருவாகி வரவில்லை. முதற்பாதி 'விதாவி'ன் முன்தீர்மானிக்கப்பட்ட சாயல்களோடு அற்புதமாக உருவாகியிருந்தாலும், அதன் எதிர்முரணாக பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி தர வேண்டும் என்று திட்டமிடப்பட்ட இரண்டாம் பாதி சொதப்பலாக அமைந்து விட்டதே இத்திரைப்படத்தின் தோல்விக்கு காரணம்.

இரண்டாம் பகுதியின் இறுதிக்காட்சி வரையில் அதுவரை சிக்கல்களுக்கான காரணத்தை பார்வையாளர்களுக்கு தெரிவிக்காமல் படம் நிறைவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஓர் அவசர இணைப்பாக அதை விளக்கியது ஒரு புதுமையான உத்தி. ஆனால் மற்ற சொதப்பல்களில் இந்தப் புதுமை அமுங்கிப் போனது. 'Big Bad Wolves' என்கிற இஸ்ரேல் திரைப்படத்தில் படத்தின் கட்டக் கடேசி ஷாட்டில்தான்  அதுவரையான சிக்கலுக்கான விடையிருக்கும். பார்வையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சியது.  அதுவரைக்கும் பார்வையாளர்களை வேறு ஒரு திசையை நோக்கி போக்கு காட்டிக் கொண்டிருப்பார் இயக்குநர்.

கெளதம் தனது செளகரியமான அச்சில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தாலும் நுட்பத்தை நவீன தோரணையில் அமைந்த உருவாக்கத்துடன் திறமையான கதைசொல்லியாக இருப்பதால் அவருக்கான சந்தைக்கும் பார்வையாளர்களுக்கும் அடுத்த சில வருடங்களுக்காவது இழப்பிருக்காது என்று தோன்றுகிறது.



 (அம்ருதா DECEMBER 2016 இதழில் பிரசுரமானது) 


suresh kannan

Thursday, January 31, 2019

இயக்குநர் கெளதம் வாசுதேவ்- பகற்கனவுகளின் நாயகன்





'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தை பற்றி பிரத்யேகமானதாக இல்லாமல் அந்தப் படத்தை முன்னிட்டு இயக்குநர் கெளதமின் படைப்புலகைப் பற்றி சிறிது ஆராயலாம் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

பொதுவாக தமிழ் சினிமாவின் இயக்குநர்கள் உருவாக்கும் திரைக்கதைகள் எதன் மீது அமைந்திருக்கும்? அவர்கள் சினிமாவிற்காக பிரத்யேகமாக உருவாக்கிய கதைகள், எழுத்தாளர்களால் முன்பே எழுதப்பட்ட புனைவுகள்,  கேள்விப்பட்ட அனுபவங்கள், பத்திரிகை செய்திகள்  போன்றவை அடிப்படையாக, கலவையாக இருக்கும். இந்த கச்சாப் பொருளை ஆதாரமாக வைத்துக் கொண்டு சினிமாவிற்கேற்ற பண்டமாக உருமாற்றுவது வழக்கம். இந்த உருமாற்றத்தில் இயக்குநரின் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள அந்தரங்கமான அடையாளங்கள், சாயல்கள், ஆழ்மன இச்சைகள் போன்றவைகள் தன்னிச்சையாக வெளிப்படக்கூடும். இது அந்தளவிற்கு அந்த திரைக்கதையுடன் அவரது அகம் நெருக்கமாக இருக்கிறது என்பதைச் சுட்டுகிறது.

உதாரணத்திற்கு, ஓர் ஆணின் வாழ்வில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களின் காதல் குறுக்கிட்டால்  என்னென்ன சிக்கல்கள் உருவாகலாம் என்பதை  தமிழ் சினிமாவின் சில இயக்குநர்கள் தொடர்ச்சியான இடைவெளியில் படமாக உருவாக்கியுள்ளனர். அதில் ஒரு குறிப்பிட்ட இயக்குநரின்  தனிப்பட்ட வாழ்க்கையை கவனித்தால் நிறைய பெண்கள் இருந்திருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது. இதைப் பற்றிய வம்புகளை உரையாடுவது இந்தக் கட்டுரையின் நோக்கமில்லை என்பதால் அவர்களின் பெயர்கள் தேவையற்றது.

இந்தப் பாணிக்கு  எதிர்முனையொன்றும் இருக்கிறது. வணிக நோக்கு சினிமாவிற்கென்றே செயற்கையான கதைகளை அடிப்படையாக  கொண்டு உருவாக்கப்படும் திரைக்கதைகள் அதற்கான மசாலாக்களுடன் யதார்த்த உலகத்துடன் தொடர்பேயில்லாமல் மிகையான நாடகமாக, அந்தரத்தில்  தொங்குபவையாக இருக்கும். அதிலுள்ள செயற்கைத்தனம் காரணமாகவே அது போன்ற திரைப்படங்கள்  நுட்பமான பார்வையாளர்களின் மனதில் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தாது. படம் முடிந்ததும் அந்த சுவாரசியத்தை அரங்கிலேயே கழற்றி வைத்து விட்டு  மறந்து விடும் தன்மையைக் கொண்டதாக இருக்கும்.

இதற்கு மாறாக தாம் உருவாக்கும் திரைக்கதைகளை தம்முடைய மனதுடன், அந்தரங்கமான அனுபவங்களுடன், கற்பனைகளுடன் இணைத்து   உருவாக்கும் இயக்குநர்களின் படைப்புகள் யதார்த்தத்திற்கு நெருக்கமாக இருக்கும். நுண்ணுணர்வுகள் நிரம்பியதாக இருக்கும். அது போன்ற திரைப்படங்களை பார்வையாளன் தன் வாழ்நாள் முழுக்க சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அசை போடுவான்.

இந்த நோக்கில் கெளதமின் திரைப்படங்களைப் பற்றி பார்க்கலாம்.


***


கெளதமைப் பற்றிய தனிப்பட்ட, உபத்திரவமில்லாத விவரங்கள் ஒருவகையில் அவரது திரைப்படங்களைப் புரிந்து கொள்ள உதவக்கூடும்.

அவருடைய தந்தை மலையாளி, தாய் தமிழர். இந்தக் கலப்புக் கலாச்சார பின்னணியோடு பிறந்தவராக இருந்தாலும் கெளதம்  வளர்ந்ததெல்லாம் தமிழ் நாடுதான். திருச்சியில் பொறியியல் படிப்பு. என்றாலும் சினிமா மீதான ஆசை அவருக்குள் ஒரு தீயாக கனன்று கொண்டேயிருந்தது. அதை ஊதிப் பெருக்கியதில் 'நாயகன்' திரைப்படத்திற்கு பெரிய பங்குண்டு. தமிழ் சினிமாவின் திரைமொழியை, கதைகூறலை, பார்வையாளர் ரசனையை பெரிதும் பாதித்த அந்த திரைப்படம் இளைஞரான கெளதமையும் பாதித்ததில் ஆச்சரியமில்லை. அத்திரைப்படம் தமக்குள் ஏற்படுத்திய செல்வாக்கைப் பற்றி பல நேர்காணல்களில் குறிப்பிடுகிறார். (காட்பாதர் திரைப்படத்தின் ஒரு தருணம், அச்சம்  என்பது மடமையடா-வை உருவாக்க காரணமாக இருந்தது என்கிற குறிப்பு அதன் டைட்டில் கார்டில் வருவதை இங்கு நினைவுகூரலாம்). விளம்பரப் படங்களில் இருந்து ராஜீவ் மேனன் வழியாக திரைத்துறையின் நுழைவு அமைகிறது.

கெளதம் என்கிற தனிநபரின் ஆளுமை சார்ந்த விஷயங்கள் அவரது திரைக்கதைகளிலும் நாயகப் பாத்திரங்களின் வடிவமைப்புகளிலும் புறத் தோற்றங்களிலும் கூட வெளிப்படுவதை கவனிக்கலாம். உயர்நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பொறியியல் படித்த மாணவன், திரைத்துறையில் நுழைவதற்கான  கனவுகளுடன் இருக்கும் இளைஞன், முதற்பார்வையிலேயே காதல் பித்தில் விழுபவன், காதலுக்காக உருகி உருகி வழிபவன், தந்தை மீது அதிக பாசமுள்ளவன், நாணயமான  காவல்துறை அதிகாரி, கண்ணியமான காதலன் போன்ற சித்திரங்கள் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் வந்து கொண்டேயிருக்கின்றன. போலவே கெளதமின் தனிப்பட்ட விருப்பத் தேர்வான நீலச்சட்டை, கைவளையம் போன்ற விஷயங்கள் அவருடைய திரைப்படங்களின் நாயகர்களிடமும் இருப்பதை கவனிக்கலாம்.

கெளதம் அடிப்படையில் காதல் உணர்வுகள்  பொங்கி வழியும் மனம் கொண்டவராக இருக்கக்கூடும். எனவே அவரது திரைப்படங்களின் நாயகர்கள் உருகி உருகி காதலிக்கிறார்கள். கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள்.  கெளதம் இது சார்ந்த நிறைய பகற்கனவுகளை தம்முடைய திரைப்படங்களில் உருவாக்குகிறார். தம்மைக் காதலிக்காத பெண்களை வெறுப்பும் வன்முறையுமாக எதிர்கொள்ளும் இளைஞர்கள் நடைமுறையில் நிறைந்திருக்கும் தமிழ் சமூகத்தில் அதற்கு மாறாக கண்ணியமான காதலன்களை அவர் சித்தரிப்பது ஒருவகையில் வரவேற்புக்குரியது.

'அச்சம் என்பது மடமையடா' திரைப்படத்தில் நாயகிக்கு நாயகன் மீது எந்த தருணத்தில் நட்பு, காதலாக மாறியது என்பது குறித்தான உரையாடல் அவர்களுக்குள் பிற்பாடு நடக்கும். அவர்கள் மேற்கொள்ளும் சாலைத் தொடர் பயணத்தில் கண்ணியமாக நடந்து கொள்வான் நாயகன். ஒரே அறையில் தங்குவார்கள். அவள் உடைமாற்றுவதற்கான சூழல் வரும் போது தாமாகப் புரிந்து கொண்டு வெளியேறுவான். 'அந்தக் கணம்தானே"? என்று கேட்பான் நாயகன். அதை ஆமோதிப்பாள் நாயகி.

ஒரு நேர்காணலில் கெளதம் பகிர்ந்த விஷயம் இது. "என்னைச் சந்திக்கும் சில இளம் பெண்கள் கேட்கிறார்கள். உங்கள் திரைப்படங்களில் கண்ணியமான காதலனை தொடர்ந்து சித்தரிக்கிறீர்கள். ஆனால் நடைமுறையில் அது போன்ற ஆண்கள் எங்கேயிருக்கிறார்கள்?". அந்த வகையில் தாம் உருவாக்கும் ஆண் சித்திரங்கள் ஃபேண்டசி தன்மை கொண்டவை என்பது ஒருவகையில் நிரூபணமாகிறது என்று ஒப்புக் கொள்கிறார் கெளதம்.

ஆனால் அவ்வாறான கண்ணியமான காதலன்கள் சமூகத்தில் இல்லவே இல்லை என்றும் சொல்லி விட முடியாது. ஆண்மைய சிந்தனையுடன் இயங்கும் சமூகமாகவே இது பெரும்பாலும்  இருந்தாலும் ஒருதலையான, நிறைவேறாத காதல் உணர்வோடு தோன்றும் வெறுப்பில் பெண்களின் மீது வன்முறைகளை நிகழ்த்தும் சம்பவங்களின் சதவீதத்தையும், காதலின் மூலம் நிறைவேறிய திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியோடு தங்களின் வாழ்வின் இனிமையைத் தொடரும்  நபர்களின் சதவீதத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். 'உலகத்துல எத்தனையோ பொண்ணுங்க இருந்தாலும் நான் ஏன் ஜெஸ்ஸியை லவ் பண்ணணும்' என்று தம்முடைய அகக்குரல்களின் வழியாக காதலை, பெண்மையை ஆராதிக்கும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

***

ஒரு நல்ல காதலனின் சித்திரத்தைப் போலவே நாணயமான காவல்துறை அதிகாரிகளையும் தம் திரைப்படங்களில் தொடர்ந்து உருவாக்குகிறார் கெளதம். இதுவும் பகற்கனவின் கூறுதான். தேசியம் எனும் அமைப்பு உருவானது பாரபட்சமில்லாத சமூகம் அமைவதற்கான ஓர் ஏற்பாடு. அரசு, சட்டம், நீதி, காவல் போன்ற துணை நிறுவனங்களின் அத்தியாவசியமான பணி என்பது இந்த சமத்துவத்தை சமூகத்தில் நிறுவுவதும், பேணுவதும், கண்காணிப்பதும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இருக்கிறதா? சமூகத்தில் நிகழும் பல முறைகேடுகளுக்கு இந்த நிறுவனங்களின் பொறுப்பில் இருப்பவர்கள் உடந்தையாக இருக்கிறார்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.

தீயவர்களை அழித்து நல்லவர்களை காக்கும் அவதாரங்களைப் போன்ற காவல்துறை அதிகாரிகளை தம் திரைப்படங்களில் உருவாக்குகிறார் கெளதம். அவர் அடிப்படையில் காதலுணர்வு மேலோங்கிய ஒரு நபராக இருக்கக்கூடிய சாத்தியத்தைப் போலவே காவல்துறை அதிகாரியாக ஆக விரும்பி அந்த நிறைவேறாத ஏக்கம்தான் பலவிதங்களில் அவரது திரைப்படங்களில் எதிரொலிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. அது சார்ந்த பகற்கனவுகள் காவல் அதிகாரியின் சாகசங்களாக அவரது திரைப்படங்களில் வெளிப்படுகின்றன. தங்களை எந்த அவதார புருஷராவது வந்து காப்பாற்ற மாட்டாரா என்று ஏங்குவது எளிய சமூகத்தின் பல காலமாகத் தொடரும் ஏக்கம். எனவே அது சார்ந்த பகற்கனவுகளை உருவாக்கும் திரைப்படங்களை அவர்களும் விரும்புவார்கள். இது போன்ற எம்.ஜி.ஆர் ஃபார்முலா படங்கள் வெற்றி பெறுவதன் அடிப்படையான உத்தி இதுவே.

எனவே கெளதம் உருவாக்கும் 'நல்ல' காவல்துறை அதிகாரிகள் பொதுச்சமூகத்திடம் வெற்றி பெறுவதில் ஆச்சரியமில்லை. இயக்குநர் ஹரி உருவாக்கும் திரைப்படங்களின் காவலர்களும் இதைப் போன்றவர்கள்தான் என்றாலும் அவர்கள் மிகையான ஆவேசத்துடன் இயங்கும் போது கெளதமின் நாயகர்கள் ஆங்கிலப் படங்களின் நகல் போல நளினமாக இருக்கிறார்கள். இந்த ஒப்பீட்டைப் போலவே கெளதமின் காதல் திரைப்பட பாணியையும் செல்வராகவனின் பாணியையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். கெளதமின் பாத்திரங்களின் காதலை கண்ணாடி பூ போல பத்திரமாக கையாண்டு ஆராதிக்கும் போது அதை உடைத்துக் காட்டுவது போல அதன் இருண்மையையும் செல்வராகன் சித்தரிக்கிறார். காமமும் காதலின் ஒரு பகுதி என்று நிறுவுவதில் செல்வராகவனுக்கு ஆர்வம் அதிகம்.

கெளதமின் திரைப்படங்கள் ஒன்று, காதல், அன்பு, பாசம் போன்ற மெல்லுணர்வுகளைக் குறித்த பிரத்யேகமான திரைப்படமாக இருக்கும். விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே என் பொன் வசந்தம், வாரணம் ஆயிரம் போன்றவை இந்த வகையைச் சார்ந்தவை. இன்னொரு வகை, காதலும் ஆக்ஷனும் கலந்து இயங்கும் திரைப்படங்களாக இருக்கும். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்றவை.

'அச்சம் என்பது மடமையடா' இந்த தொடர்ச்சியான வகைமையில் உருவானதுதான் என்றாலும் இதில் தம்முடைய வழக்கத்தை மாற்ற முயல்கிறார் கெளதம். 'விண்ணைத் தாண்டி வருவாயா' திரைப்படத்தின் பல கூறுகளை நினைவுப்படுத்துவது போன்ற காட்சிகளோடு முதற்பாதி திரைப்படம் காதலுணர்வோடு இயங்கும் போது பிற்பாதி காட்சிகள் அதன் எதிர்முனையில் ஆக்ஷன் காட்சிகளோடு இயங்குகிறது. சரிபாதியாக கிழிக்கப்பட்ட காகிதம் போல இதன் திரைக்கதையை இரண்டு வகைமையாக பிரித்திருக்கிறார். இதன் மூலம் தனது ரசிகர்களுக்கு ஒரு புதுமையான சுவையைத் தர வேண்டும்  என்பது அவருடைய திட்டமாக இருக்கலாம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த விஷயம் சரியாக உருவாகி வரவில்லை. முதற்பாதி கெளதமின் பாணியில் அற்புதமானதாக இருக்கும் போது பிற்பாதியின் ஆக்ஷன் காட்சிகளில் நம்பகத்தன்மை என்பதேயில்லை. போதாக்குறைக்கு மிக அபத்தமான கிளைமாக்ஸ் வேறு.

அதுவரை நல்ல காவல்துறை அதிகாரிகளையே சித்தரித்துக் கொண்டிருந்த கெளதமின் திரைப்படங்களில் முதன்முறையாக வில்லனாக ஒரு கெட்ட போலீஸ் அதிகாரி வருகிறார். அதை சமன் செய்வதற்காகவோ அல்லது கெளதமின் வழக்கமான பாணியை கைவிடக்கூடாது என்பதற்காகவோ நாயகனும் ஐபிஎஸ் படித்து நல்ல காவல்துறை அதிகாரியாக வந்து தம் பழிவாங்கலை நிகழ்த்துகிறான். இதுதான் அந்த அபத்தமான கிளைமாக்ஸ்.  நல்லவேளை, பழிவாங்கப்பட வேண்டியது நீதிபதியின் பாத்திரமாக இருந்திருந்தால், திரைப்படம் இயங்கும் காலம் இன்னமும் கூடி நம்மை வேதனைக்குள்ளாகியிருக்கும்.

***

'உங்களின் திரைப்படங்கள் ஏன் ஒரே பாணியில் சுற்றிக் கொண்டிருக்கின்றன?' என்று சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர் கெளதமிடம் கேட்கிறார். 'எனக்கு வசதியான விஷயங்களைப் பற்றிய படங்களையே நான் உருவாக்க விரும்புகிறேன்' என்று பதில் சொல்கிறார் கெளதம். மேலே குறிப்பிட்ட இரண்டாவது வகை இயக்குநர்களைப் போல சினிமாவிற்காக வெளியிலிருந்து எடுக்கப்பட்ட கதைகளை திரைப்படமாக்க கெளதம் விரும்பவில்லை. மாறாக தன்னுடைய தனிப்பட்ட, அந்தரங்கமான, ஆழ்மன விருப்பங்களை உணர்வுகளைச் சுற்றியே தன் படைப்புலகத்தை உருவாக்க விரும்புகிறார். இது ஒருவகையில் புரிந்து கொள்ளக்கூடியது. இயக்குநரின் தனிப்பட்டயுலகையும் அவரது திரைப்படங்களையும் பிரித்து நோக்க முடியாது எனும் பொருள் கொண்டது. ஆனால் மேற்குறிப்பிட்ட பத்திரிகையாளரின் கேள்வியைப் போல இந்த தேய்வழக்கு வரிசையை சலிப்பாக உணரும் பார்வையாளர்களும் இருப்பார்கள்.

கெளதமின் திரைப்படங்களில், இவ்வாறாக புரிந்து கொள்ளப்படாமல் தோல்வியடைந்த திரைப்படமாக 'நீதானே என் பொன் வசந்தம்' திரைப்படத்தைக் குறிப்பிடுவேன். பொதுவான தமிழ்  சினிமாவின் கதைகூறல் முறையிலிருந்து  பெரிதும் விலகியிருந்த திரைப்படம் அது. சம்பவங்களின் தொகுப்பு மட்டுமே அதில் இருக்கும். டைட்டில் கார்டிலேயே இதை தெளிவாக சொல்லி விடுவார் இயக்குநர். எனவே  காதல் ஜோடியின் ஊடல் மற்றும் கூடல் தொடர்பான சம்பவங்களே தொகுப்பாக திரும்பத் திரும்ப  வந்ததை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை. 'என்னய்யா. இது படம் இது' என்று சலித்துக் கொண்டார்கள். மாறாக அந்த உணர்வுகளை நடைமுறையில் அனுபவித்த காதலர்களால் அது சரியாக புரிந்து கொள்ளப்பட்டது. இன்றும் கூட அத்திரைப்படத்தைக் கொண்டாடும் காதலர்கள் இருக்கிறார்கள்.

இது போல 'நடுநிசி நாய்கள்' என்கிற திரைப்படமும் தோற்றது. அந்த மாதிரியான psychological thriller வகைமையை கெளதமிடம் இருந்து பார்வையாளர்கள் எதிர்பார்க்கவில்லை என யூகிக்கிறேன். ஒரு கலாசார அதிர்ச்சியுடன் அதைப் புறக்கணித்தார்கள். இந்த நிலையில் 'கிராமப்புறப் பின்னணியை வைத்து ஒரு திரைப்படம் உருவாக்குவதற்கான ஆர்வம் இருக்கிறது' என்று கெளதம் நேர்காணல்களில் சொல்லி வருவது எதிர்பார்ப்பைக் கூட்டுகிறது.

**

காதலும் வீரமும் தமிழர் பெருமை என்கிற மரபையொட்டி, அந்த இரண்டு விஷயங்களை பிரத்யேகமாகவும் கலந்தும் தம் திரைப்படங்களை இதுவரை உருவாக்கிய கெளதம், அதை முற்பாதி, பிற்பாதியாக இரண்டாகப் பிரித்து உருவாக்கிய 'அச்சம் என்பது மடமையடா'வின் கலவை சரியாக உருவாகி வரவில்லை. முதற்பாதி 'விதாவி'ன் முன்தீர்மானிக்கப்பட்ட சாயல்களோடு அற்புதமாக உருவாகியிருந்தாலும், அதன் எதிர்முரணாக பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி தர வேண்டும் என்று திட்டமிடப்பட்ட இரண்டாம் பாதி சொதப்பலாக அமைந்து விட்டதே இத்திரைப்படத்தின் தோல்விக்கு காரணம்.

இரண்டாம் பகுதியின் இறுதிக்காட்சி வரையில் அதுவரை சிக்கல்களுக்கான காரணத்தை பார்வையாளர்களுக்கு தெரிவிக்காமல் படம் நிறைவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஓர் அவசர இணைப்பாக அதை விளக்கியது ஒரு புதுமையான உத்தி. ஆனால் மற்ற சொதப்பல்களில் இந்தப் புதுமை அமுங்கிப் போனது. 'Big Bad Wolves' என்கிற இஸ்ரேல் திரைப்படத்தில் படத்தின் கட்டக் கடேசி ஷாட்டில்தான்  அதுவரையான சிக்கலுக்கான விடையிருக்கும். பார்வையாளர்களுக்கு ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சியது.  அதுவரைக்கும் பார்வையாளர்களை வேறு ஒரு திசையை நோக்கி போக்கு காட்டிக் கொண்டிருப்பார் இயக்குநர்.

கெளதம் தனது செளகரியமான அச்சில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தாலும் நுட்பத்தை நவீன தோரணையில் அமைந்த உருவாக்கத்துடன் திறமையான கதைசொல்லியாக இருப்பதால் அவருக்கான சந்தைக்கும் பார்வையாளர்களுக்கும் அடுத்த சில வருடங்களுக்காவது இழப்பிருக்காது என்று தோன்றுகிறது.

(காட்சிப்பிழை -டிசம்பர் 2016 இதழில் பிரசுரமானது)


suresh kannan