Tuesday, November 30, 2010

நந்தலாலா: மிஷ்கினின் கூழாங்கற்கள்



எழுத்தாளர் மாலனின் நாவல் ஒன்று உண்டு. நந்தலாலா. தாயின் பாசமே பெரிதும் பிரதானமாக இன்றும் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு தந்தையின் பாசத்தை,மகனை இழக்க முடியாமல் தன் தந்தைமையை நிறுவ முயலும் ஒரு மனிதனின் உணர்வுப் போராட்டங்களைப் பற்றின நாவல். பாரதி மீதான அபிமானத்தால் மாலன் இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கலாம். மிஷ்கினும் இந்தக் காரணத்தையே முன்வைக்கிறார். சித்திரம் பேசுதடி, அஞ்சாதே (அச்சம் தவிர்), நந்தலாலா, யுத்தம் செய் என்று அவரின் படத்தலைப்புகள் அனைத்தும் பாரதியின் படைப்புகளோடு தொடர்புடையவை.

தமிழ்ச் சினிமாவில் குறிப்பிட்ட இடைவெளிகளில் அதன் போக்கை தற்காலிகமாவது புரட்டிப் போடுமளவிற்கு சில டிரெண்ட் செட்டர்கள் உருவார்கள். மிஷ்கின் தனது நந்தலாவின் மூலம் அந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் என்றே நான் நம்புகிறேன். நிச்சயம் தமிழ்ச் சினிமாவில் இதுவொரு மைல்கல்லான படம்தான். ஆனால் அதை முழுமையான பெருமையுடன் தலைநிமிர்ந்து சொல்ல முடியாதபடி  நெருடலொன்று இடறுகிறது. சரி. அதைப் பின்பகுதியில் பார்ப்போம்.

உலக சினிமாக்களில் திரைமொழியின் சில நுட்பமான குறியீடுகள் தேர்ந்த இயக்குநர்களால் முன்வைக்கப்படும். காட்சியின் போக்கை பார்வையாளர்கள் பூடகமாக உணர்ந்து கொள்ளும் குறியீட்டுக் காட்சிகள் அவை. முதன் முறையாக ஒரு தமிழ் சினிமாவில் அது அர்த்தபூர்வமாக உபயோகப்படுத்தப் படுவதைக் கண்டேன். படத்தின் இறுதிப் பகுதியில் சிறுவன், தன்னுடைய பயணத் தோழனின் (மாமாவின்) காலணிகளை சரியாக அணியுமாறு மாற்றி வைப்பான். அதுவரை அது வலது இடமாக மாற்றியே அணியப்பட்டிருக்கும். பாஸ்கர் மணி என்கிற மனிதனை அகி என்கிற சிறுவன் தன்னுடைய முழுமையான நண்பனாக ஏற்றுக் கொண்டு விட்டான் என்பதற்கும் 'போடா மெண்ட்டல்' என்று அவரைத் திட்டிய தன்னுடைய தவற்றுக்கு மன்னிப்பு கேட்கும் விதமாகவும்  இதுவரை நேர்மாறாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிகழ்வுகள், இனி சரியாக நடக்கும் .. என்று இத்தனை விதங்களாக அதைப் புரிந்து கொள்ளலாம்.

நந்தலாவில் இது போன்று பல குறியீட்டுக் காட்சிகள் உண்டு. அன்னவாசல், தாய்வாசல் என்கிற கருவறையைக் குறிக்கும் பெயர்கள், மிஷ்கின் சுவற்றுடன் விரலால் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டே செல்வது, சாலையைக் கடந்துச் செல்லும் மரவட்டை, மலைப்பாம்பு, பாலியல் தொழிலாளி மிஷ்கினின் கால்சட்டையை மழையில் இறுக்கிக் கட்டுவது, வெள்ளை நிறத்தை தாங்கி நிற்கும் வீடுகள், தாயின் வீட்டை சுட்டிக் காட்டும் போது பயன்படுத்தப்படும் நிழல், தமக்கு உதவும் சிறுமியிடமும், தன்னுடைய தோழனான சிறுவனுக்கும் மிஷ்கின் கையளிக்கும் கூழாங்கற்கள்.

இவற்றை அகவுணர்வு சார்ந்து அவரவர்களின் அனுபவங்களுக்கேற்ப புரிந்து கொள்ளலாம். அவை ஒன்றாகவோ அல்லது சரியாகத்தான் இருக்க வேண்டும் என்கிற கட்டாயமோ கிடையாது.

தன்னை மனநல காப்பகத்தில் நிராதரவாக விட்டு விட்ட தாயைச் சந்திக்க கோபத்துடன் கிளம்பும் ஓர் இளைஞனும் தான் இதுவரை பார்த்தேயறியாத தாயைச் சந்திக்க அன்புடன் கிளம்பும் ஒரு சிறுவனும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்கிறார்கள். அவர்களின் பயண அனுபவங்களையும் அதன் முடிவையும் பற்றி விவரிக்கிறது நந்தலாலா. இறுதியில் கோப இளைஞன் தாயைக் கண்டு கண்ணீர் உகுப்பதும், தான் தருவதற்கென்று முத்தங்களைச் சேமித்து வைத்திருந்த சிறுவன் ஏமாற்றமடைவதும் என எதிரெதிர் நிலையை அடைகிறார்கள்.

இந்தப் படத்தின் ஹீரோ என்று ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமியைச் சொல்வேன். ஏமாற்றத்தைத் தருமளவிற்கு மிகச் சாதாரணமாக துவங்கும் காட்சிகள், நகரத்தைத் தாண்டியவுடன் இயற்கை சூழலில் மிகுந்த அழகியல் உணர்வுடன் பிரமிப்பேற்படுத்துகிறது. நடிகர்களை பிரதானமாக பதிவு செய்யாமல் அவர்களை பரந்த நிலவெளியோடு  பதிவு செய்திருக்கும் வைட் ஆங்கிள் ஷாட்களும் லாங் ஷாட்களும் இதுவரை பார்த்தறியா தமிழ் சினிமா அனுபவத்தைத் தருகின்றன.

இத்திரைப்படத்தின் மிகப் பெரிய குறைபாடு இதன் ஒலிப்பதிவு. படம் பெரும்பான்மையும் திறந்த வெளியில் இயங்கும் போது  அதற்கு முரணாக பாத்திரங்களின் வசனங்கள் - குறிப்பான சிறுவனின் குரல் - டப்பிங்கில் பதிவான டிஜிட்டல் துல்லியத்துடன் ஒலிக்கின்றன. ஒழுங்கின்மையோடு அலையும் காட்சிகளின் பின்னணியில் இந்த ஒழுங்குத் தன்மை துருத்திக் கொண்டு முரணாக நிற்கிறது. மாறாக 'லைவ் சவுண்ட்' நுட்பம் பயன்படுததப்பட்டிருந்தால் காட்சிப் பின்னணிகளின் பொருத்தமான ஒலிகளை கேட்டிருக்க முடியும்.

பிரதான பாத்திரத்திற்கு விக்ரம் உட்பட பல 'ஹீரோக்களின' பெயர் உத்தேசிக்கப்பட்டதாக அறிந்தேன். அபத்தம். மிக மோசமான படைப்பாக ஆகி விட்டிருக்கும். ஒரு திறமையான புதுமுகம் பயன்படுத்தப்பட்டிருந்தால்தான் அந்த வலிமையான பாத்திரத்தோடு பார்வையாளன் பிம்ப தொந்தரவுகளின்றி இயைய முடியும். மிஷ்கினே தம்மை இதைத் தேர்ந்தெடுத்திருப்பது நல்ல முடிவு. கூடுமானவரை அதற்கான நியாயத்தைத் தந்திருக்கிறார்.  ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவன் என்றாலே அவன் மூர்க்கமானவனாகத்தான் இருக்க வேண்டும் என்கிற கிளிஷேக்களை கைவிட்டிருக்கலாம். மேலும் இம்மாதிரியான பாத்திரங்களின் மூலம் இயல்பாகவே பார்வையாளனிடமிருந்து அனுதாபத்தையும் கட்டற்ற உடல் மொழியினால் பெற முடியும் ; அதிர்ச்சியையும் தர முடியும். ஏனெனில் யதார்த்த வாழ்க்கையில் பொது சமூகம் இம்மாதிரியான மனிதர்களை கண நேரத்திற்கு மேலாக பார்க்க விரும்புவதில்லை. சில இடங்களில் அவரின் உடல்மொழி கவனத்தைக் கோரும்  நோக்கத்துடன் அதீதமாக அமைந்திருக்கிறது. பிதாமகன் மற்றும் சேது படங்களில் நடித்த விக்ரமின் உடல்மொழியையும் சமயங்களில் நினைவுப்படுத்துகிறது. உடன் பயணிக்கும் சிறுவன் அவன் வயதுக்கேற்ற இயல்போடு அமைதியாக நடித்திருக்கிறான்.

லாரி டிரைவர், இளநீர் வியாபாரி. ஐஸ்கீரிம் விற்பவர், மாற்றுத் திறனாளி, என்று அன்றாட வாழ்வின் பல இயல்பான முகங்கள் பொருத்தமாக தேர்வு செய்யப்பட்டு முறையாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆட்டோ டிரைவராக நடித்திருந்தவரின் உடல்மொழி மோசமாக அமைந்திருந்ததை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். கொலைவெறியுடன் ஒருவன் துரத்தும் போது அதை எதிர்பார்க்கின்ற பாவனையுடன் அவர் மெதுவாக நகர்வது செயற்கையாக அமைந்துவிட்டது. பதிவர் லிவிங் ஸ்மைல் பெயரை டைடடில் கார்டில் உதவி இயக்குநர்களின் வரிசையில் காண மகிழ்ச்சி.

பாடல்களே தேவைப்பட்டிருக்காத இந்தப் படத்திற்கு ஆறு பாடல்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் சில உபயோகப்படுத்திருக்கின்றன. மாறாக சரோஜா அம்மாள் பாடின அந்த ஜிப்சி பாட்டை மாத்திரம் உபயோகப்படுத்தியிருந்தாலாவது தமிழ் சினிமா பார்வையாளனுக்கு வித்தியாசமான அனுபவம் கிட்டியிருக்கும். இளையராஜா பின்னணி இசையை ஒரு பாத்திரமாக உபயோகிக்கும் உன்னதங்களைப் பற்றி நாம் நிறையவே அறிந்திருக்கிறோம்.  இதிலும் அந்த மாதிரியான தருணங்கள் பலவுண்டு. குறிப்பாக காவல் அதிகாரியிடமிருந்து தப்பிக்கும் நோக்கத்துடன் இளைஞனும் சிறுவனும் மலம் கழிக்கும் சாக்கில் ஓடுவதும் கான்ஸ்டபிள் அவர்களை புல்வெளியில் பின்செல்வதுமான காட்சியில் பின்னணியிசை உயர்ந்த தரத்துடன் அமைந்திருந்தது.

அடிபட்ட பள்ளி மாணவியின் காயத்தைப் பார்க்க இளைஞன் பாவாடையை விலக்கிப் பார்க்க இயல்பான தன்னுணர்வில் அவள் இளைஞனை அறைகிறாள். தொடர்ந்து அறைகளை வாங்கிக் கொண்டே காயத்தைப் பார்க்கும் இளைஞன் 'வலிக்குதாம்மா?' என்கிறான். அங்கே புறப்படும் ஒரு நரம்பு வாத்தியத்தின் இசை நிச்சயம் என் ஆன்மாவை தொட்டிருக்கக்கூடும். இயல்பாக மனம் கலங்கியது. என்னுடைய மனிதம் உயிர்த்தெழுந்த கணங்களில் ஒன்றாக அதைச் சொல்வேன்.

ஆனால் ராஜா மெளனத்தை இன்னும் மேலதிகமாக பயன்படுத்தியிருக்கலாமோ என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. சில காட்சிகளில் தேவையேயின்றி ஓர் ஆழமான ஃபேஸ் வயலின் தொடர்ந்த உரக்க அலறுகின்றது.

பின்னணி இசையை ஒரு தொகுப்பாக இங்கே கேட்க முடியும். சம்பந்தப்பட்டவருக்கு நன்றியுடன் இங்கு அதைப் பகிர்கிறேன்.

()

முன்னரே குறிப்பிட்டது போல இத்திரைப்படத்தின் பல காட்சிகளை மிகு நுண்ணுணர்வுடன் இயக்குநர் அமைத்திருக்கிறார். இளைஞனும் சிறுவனும் இருளான ஒரு பகுதியைக் கடக்க வேண்டியிருக்கிறது. தான் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த யேசு சிலையின் கீழிருக்கும் விளக்குகளை இளைஞன் கையில் எடுத்துக் கொள்கிறான். இருளில் இரண்டு விளக்குகளின் ஒளிப்பொட்டுகள் மாத்திரம் தெரிய கடவுளின் சிலை இருளில் மூழ்குகிறது. ஜென் கதை அனுபவங்களுக்கு நிகரான காட்சி இது

எவ்விதப் பயனுமின்றி தான் நொண்டியாக இருப்பதற்கான தாழ்வுணர்வில் மிகுந்த மனவேதனையில் உழலும் ஒர் இளைஞனுக்கு சிகிச்சையளிக்கும் பெண் மருத்துவர் காலைத் தாங்கி நடந்து செல்லும் காட்சி அவுட் போகஸில் காட்டப்படுகிறது. என்னை மிகவும் நெகிழ வைத்த காட்சியிது.

வழக்க்மான வணிகத் திரைப்படங்களின் மசாலா கச்சடாக்களைத் தவிர்த்து படம் எடுக்க முன்வந்த மிஷ்கினை எத்தனை பாராட்டினாலும் தகும். 'வித்தியாசமான படங்கள்' என்று அறியப்பட்ட தமிழ் திரைப்படங்களிலும் வணிகநோக்குச் சினிமாக்களின் தடங்களும் இணைப்புகளும் உண்டு. (பிதாமகனில் சிம்ரனின் நடனத்தை நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள்).  இதில் பாடல்களைத் தவிர்த்து அவ்வாறான எவ்வித அசிங்கங்களுமில்லை. இப்போதைய இளம் இயக்குநர்கள் மிகுந்த நம்பிக்கையளிக்கும் முயற்சிகளை மேற்கொள்வது மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

நந்தலாலா உணமையாகவே தமிழ் சினிமாவின் ஒரு முக்கியமான மைல்கல்தான். ஆனால் அது தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு மட்டும் என்று திருத்திச் சொல்ல விரும்புகிறென். முழுமையாக இதைக் கொண்டாட முடியாதபடியான தடைக்கல்லை மிஷ்கினே ஏற்படுத்தி வைத்திருப்பது துரதிர்ஷ்டம்.


துவக்கத்திலேயே இது, டகேஷி கிடானோவின் 'கிகுஜிரோவின்' நகல் என்ற பேச்சு எழுந்தது. மிஷ்கின் இதை அப்போது இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. படத்தின் புகைப்படங்கள் கிகுஜிரோவின் புகைப்படங்களோடு பெரும்பான்மையாக ஒத்துப் போகும் போது கூட இந்தப் பொய்யை அவர் சாதித்துக் கொண்டிருந்தார். பல சிக்கல்களுக்குப் பிறகு படம் வெளிவந்த சூழலில் இந்தப் பேச்சு பலமாக எழுந்த பிறகு வேறுவழியின்றி, ஏதோ தாமே முன்வந்து சொல்வது போல 'கிடானோ'விற்கான என் மரியாதை என மழுப்புவது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்.

படத்தின் கதையிலிருந்து காடசிக் கோர்வைகளிலிருந்து கோணங்களிலிருந்து பெரும்பாலும் இது மூலத்திலிருந்து அப்படியே நகல் செய்யப்பட்டிருக்கிறது. கிகுஜிரோவைப் பார்த்தவர்கள் எவரும் இந்த எளிய உண்மையை தெளிவாக உணர முடியும்.

மிக மென்மையான நகைச்சுவையுடன் ஆர்ப்பாட்டமில்லாமாத இயல்புடன் உருவாக்கப்பட்டிருந்த மூலப்படத்தை, தமிழக மனங்களுக்கு தேவைப்படும் தாய் சென்டிமெண்ட், மனநல பாதிப்பு பாத்திரம், ராஜாவின் இசை போன்ற உறைப்பான சமாச்சாரங்களை உள்ளுர் கலவைகளுடன் இணைத்து தந்திருப்பது மாத்திரமே மிஷ்கினின் பணி. 'கிகுஜிரோவில் இல்லாத பல உன்னதமான தருணங்கள் நந்தலாவில் இருக்கிறதுதான். மறுக்கவில்லை. அதற்கான மிஷ்கினின் உழைப்பு அங்கீகரிக்கப்படவேண்டியதுதான். அதையும் மறுக்கவில்லை. ஆனால் பெரும்பான்மையான சமாச்சாரங்கள் வேறு படத்திலிருந்து கையாளப்பட்டிருக்கும் காரணத்தினால் இந்த உழைப்பு பின்தள்ளப்படுவது துரதிர்ஷ்டமே. பொதுமக்களுக்குச் சேர வேண்டிய கோடிக் கணக்கான ரூபாயை ஊழல் செய்து கொள்ளையடிக்கும் ஒர் அரசியல்வாதி, 'என் சொந்தப் பணத்திலிருந்து சில சமூக நன்கொடைகளை செய்திருக்கிறேன்' என்று தன் தவறை மழுப்ப முனைந்தால் அந்த தருக்க நியாயததை நாம் ஒப்புக் கொள்வோமா?

குறைந்த பட்ச நேர்மையாக டைட்டில் கார்டிலாவது இதை மிஷ்கின் ஒப்புக் கொண்டிருககலாம். கிடானா மீது அவர் உண்மையாக மரியாதை வைத்திருப்பதின் அடையாளமாகவாவது அது ஆகியிருக்கும். பூ சசி, பேராண்மை ஜனநாதன், பச்சைக்கிளி முத்துச்சரம் கெளதம்மேனன் என்று  இதற்கு முன் உதாரணங்கள் உண்டு. ஆனால் தமக்கு விருது கிடைப்பதற்கு இந்தக் குறிப்பு தடையாக அமையலாம் என்ற நோக்கத்திலோ, வெளிப்படையாக ஒப்புக் கொண்டால் இதற்கு பணம் தரவேண்டியிருக்குமோ, நமக்கு கிடைக்க வேண்டிய பாராட்டை பங்கு போட நேருமோ.. என்ற காரணத்தினாலோ  எப்படி செய்திருந்தாலும் இதுவோர் அறிவுசார் சொத்து திருட்டே. இதில் 'கிடானாவோடு' இத்திரைப்படத்தை அமர்ந்து காண விரும்புகிறேன் என்று பேட்டியளிக்க எத்தனை நெஞ்சுரம் வேண்டும்? உதவி இயக்குநர்களை குறைசொல்லும் மிஷ்கின் தாம் அதற்கு முன்னுதாரணமாய் இருக்க வேண்டாமா? சேரன் போன்ற இயக்குநர்களும் இந்த திருட்டிற்கு உடன்படுவது பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது. (நாளைக்கு நீ எனக்கு சொறிஞ்சு விடு, என்ன?) 'நான் உலக சினிமாக்களை பார்ப்பதில்லை ; எந்த நூலையும் வாசிப்பதில்லை' என்று இதனால்தான் முன்னெச்சரிக்கையாக சில இயக்குநர்கள் பொதுவில் சொல்கிறார்கள் போலிருக்கிறது.

குப்பையான தமிழ்ச் சினிமாவில் ஒரு நல்ல படம் வருவதை ஏன் முழு மனதுடன் பாராட்ட மாட்டேன்கிறீர்கள், இயக்குநர் இதை வெளிக்கொணர எத்தனை நிதிச் சிக்கல்களை சமாளித்திருக்கிறார் போன்ற காரணங்கள் எல்லாம் இந்தத் தவற்றை மழுப்பி விட முடியாது. இவை தற்காலிக சூழ்நிலைகளே. பல வருடங்களுக்குப் பின்னும் இன்றும் ரேவின் பதேர் பாஞ்சாலியையும் சாருலதாவையும் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஏன்? அவையெல்லாம் இலக்கியப் படைப்புகளிலிருந்து முறையாக அனுமதிப் பெற்று உருவாகப்பட்டவை. மேலும் மூலப் படைப்பை ஒரு வரைபடமாக வைத்துக் கொண்டு தன்னுடைய நுண்ணுணர்வுகளாலும் கற்பனைத் திறமையாலும் சமயங்களில் மூலத்தையே தாண்டிச் சென்று காவியமாக்கிய உதாரணங்கள். இன்ஸ்பிரேஷனாக இருந்தது என்று அவற்றைத்தான் சொல்ல முடியம். புதுமைப்பித்தனின் 'சிற்றன்னை' குறுநாவல்தான் 'உதிரிப்பூக்களுக்கு' இன்ஸ்பிரெஷனாக இருந்தது மகேந்திரனே முன்வந்து சொன்னபிறகுதான் நமக்குத் தெரியவந்தது. அவர் சொல்லியிராவிட்டால் நமக்குத் தெரியாமல் போயிருக்கும் அளவிற்கு புதுமைப்பித்தனின் படைப்பிற்கும் உதிரிப்பூக்களிற்கும் எவ்வித சம்பந்தத்தையும் நம்மால் உணர முடியாது.

ஒருவேளை இது முக்கிய சர்வதேச விருதுகளுக்கு அனுப்பப்படுமாயின் நமட்டுச் சிரிப்புடன் அவர்கள் இதைப் புறக்கணிக்க மாட்டார்களா?, தன் மகன் திருடிவிடடான் என்றாலும் தாயுள்ளத்துடன் நாம் அதை மறைக்க முயன்றாலும் காவல்துறையிலும் நீதித்துறையிலும் நோண்டி நுங்கெடுத்து விடுவார்களே?

தமிழகத்தின் இலக்கியவாதிகளும் மிஷ்கினின் இந்தத் தவறிற்கு உடன்படுவது துரதிர்ஷ்டமே. ஆப்ரிக்க கலாச்சாரத்தின் தடயங்களை அப்படியே கண்மூடித்தனமாக தன் படத்தில் காப்பிடியத்த அமீரை (யோகி) சவட்டியெடுத்த சாருநிவேதிதா மிஷ்கினின் படத்தை மாத்திரம் கண்ணீர் மல்க பாராட்டும் அபத்தம் ஏன்? எதற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என்று நேர்மையாக முழங்குவதான பாவனை செய்யும் அவா, இதை மாத்திரம் தூக்கி வைத்துக் கொண்டாடும் மர்மம் என்ன? மூலப்படத்தை இன்னும் பார்க்கவில்லை என்றெல்லாம் காமெடி செய்யக்கூடாது. ஆரம்பத்திலிருந்தே இது ஜப்பானியப்படத்தின் தழுவல் என்கிற பேச்சு இருந்தது. கிகுஜிரோவின் படத்தில் வரும் சில பாத்திரங்களின் உடைகளை (பைக் இளைஞர்கள்) வாகனத்தையும் பனையோலை செருகிச் செல்வதையும் அப்படியே கண்மூடித்தனமாக நகலெடுத்திருக்கிறார் மிஷ்கின்.

கிகுஜிரோவில் காட்டப்படும் மனநலம் குன்றிய தாய்க்கும் அதற்கு அவரது மகன் வெளிப்படுத்தும் மென்மையான ஆனால் நம்மால் அழுத்தமாக புரிந்து கொள்கிற உடலமொழிக்கும், நந்தலாலாவில் உணர்ச்சிக் காவியமாகிய மிஷ்கின் அழுது புரண்டு காண்பிக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும்தான் எத்தனை வித்தியாசம். இங்குதான் மாஸ்டர்களும் சீடர்களும் வித்தியாசப்பட்டு நிற்கிறார்கள்.

ஏன் நம்மிடம் இலக்கியப்படைப்புகளோ, சமூகப் பிரச்சினைகளோ, நம்மைச் சுற்றி நிகழும் ஆயிரம் கதைகளோ இல்லாமலா போயின? அதிலொன்றை மிஷ்கின் கையாண்டிருந்தால் அவரைத் தூக்கி வைத்துக் கொண்டாடியிருக்கலாம். தம்முடைய சிலுவையை தாமேதான் மிஷ்கின் தோந்தெடுத்துக் கொண்டார். மெய்வருத்தக் கூலி தரும். அவருக்கு என் பாராட்டுக்களும் அனுதாபங்களும். குற்றவுணர்வோடு கொண்டாடப்படும் மகிழச்சியை விட தவற்றின் ஒப்புதல் தரும் ஆசுவாசமான கண்ணீரே உன்னதமானது.

suresh kannan

Monday, November 29, 2010

கிகுஜிரோ - நகைச்சுவையின் துயரம்

மிஷ்கினின் 'நந்தலாலா' உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது ஜப்பானிய திரைப்படமான 'கிகுஜிரோவின்' தழுவல் என்பதான பேச்சு எழுந்தது. ஆனால் அதை மிஷ்கின் அப்போது ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. நந்தலாலா வந்தபின் இதை பார்த்துவிட்டு உறுதி செய்வோம் எனக் காத்திருந்தேன். 'வரும்.. ஆனா வராது.. என்கிற நிலையில் வணிகச் சிக்கல்களினால் படம் திணறி, வரவே வராதோ என்ற ஏமாற்றத்தை அடையும் நேரத்தில் ஒருவழியாக படம் வெளிவந்து விட்டது. எனவே இதை பார்ப்பதற்கு தயாரான மனநிலையை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாக, (ஒரு வார்ம்-அப்பிற்காக) முன்னர் பார்த்திருந்த 'கிகுஜிரோவை' மறுபடியும் நேற்று பார்த்தேன். அதற்கு முன்பாக என் மகளிடம் இதைப் பற்றி உரையாடிக் கொண்டிருந்த போது அவள் சில காட்சிகளை மிகத் துல்லியமாக நினைவு கூர்ந்தது (அந்த அங்கிள் பையனை ஊருக்கு கூட்டிட்டுப் போவாம ரேஸூக்கு போவாங்களே) எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சிறுவன் சம்பந்தப்பட்ட படம் என்பதால் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பு அவளையும் அமர வைத்து இதை பார்த்திருந்தேன்.

நந்தலாலாவிற்காக பார்க்க நேர்ந்த 'கிகுஜிரோவை'ப் பற்றி எழுத வேண்டிய உந்துதலை அந்தப்படமே தந்நது. மேலும் நந்தலாவைப் பார்த்து கிகுஜிரோவை இதுவரை பார்க்காதிருப்பவர்களுக்கு ஓர் ஒப்பிட்டளவில் இந்தப் பதிவு உதவலாம்


   
மாசோ என்கிற பள்ளிச் சிறுவன் தன்னுடைய கடந்த கோடை விடுமுறையில் கழிந்த நெகிழ்ச்சிகரமான தருணங்களை புகைப்பட ஆல்பத்தின் மூலம் நினைவு கூர்வது போல் அத்தியாயம் அத்தியாயமாக விரிகிறது இத் திரைப்படம்.

இது வரை தன்னுடைய பெற்றோரையே கண்டிராமல் பாட்டியின் நிழலில் வளரும் இச்சிறுவன் கோடை விடுமுறையில் தன்னுடைய தாயைக் காணும் உந்துதலுடன் பக்கத்து வீட்டு 'வீண் ஜம்ப' மாமாவுடன் நெடுந்தொலைவு பயணமாவதும் அந்தப் பயணத்தில் நிகழும் அனுபவங்களுமே இத்திரைப்படத்தின் காட்சிகளாக நீ்ள்கின்றன. 

இதில் சிறுவனுக்கு துணையாகச் செல்லும் மனிதரின் பெயர்தான் 'கிகுஜிரோ'. (இயக்குநர் டகேஷி கிடானோவே இந்தப் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்). படம் பூராவும் அந்தச் சிறுவன் இவரை 'மிஸ்டர்' என்றே கூப்பிட்டுக் கொண்டிருக்கிறான். படத்தின் இறுதியில்தான் அவருடன் ஏற்பட்ட நெருக்கத்தில்  'உங்க பேர் என்ன?' என்கிறான்.

கிகுஜிரோ என்கிற அந்த மனிதரின் பாத்திரம் மிகக் கச்சிதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. எந்த நிலையிலும் தன் இயல்பின் குணாதியங்களை அது மீறுவதேயில்லை. இவ்வகையான மனிதர்களை நாமும் கூட கண்டிருப்போம். பெரியவர்களானாலும்  தம்முடைய குழந்தை மனோநிலையிலேயே பெரும்பர்லும் தேங்கி விட்டிருப்பவர்கள்.லெளதீக வாழ்வின் பொறுப்புகள் எதையும் ஏற்காதவர்கள். சுவாரசியமான பொய்களை உருவாக்குபவர்கள். அந்தந்த நேர மனநிலைகளில் வாழ்பவர்கள். அவசரத் தேவை பணத்தை அற்பமாக செலவு செய்து விட்டு வந்து நிற்பவர்கள். வெட்டி பந்தா செய்பவர்கள். இவர்கள் மீது சமயங்களில் கோபம் வந்தாலும் சிரிப்பும் வரும்.

ச.தமிழ்ச்செல்வனின் 'கருப்பசாமியின் அய்யா' என்கிற சிறுகதையை வாசித்துப் பாருங்கள். இந்த மனிதர்களின் சரியான பிரதிநிதி அந்த பாத்திரம்.

உளவியலின் தந்தையான சிக்மண்ட் ஃபிராய்ட், மனதின் செயற்பாடுகளை, இட், ஈகோ, சூப்பர் ஈகோ என்று மூன்று விதங்களாக பிரிக்கிறார். இதில் இட் என்பது குழந்தையின் மனோநிலையைக் கொண்டது. ஒரு பொருள் வேண்டும் என்றால் அது அந்தக் கணமே கிடைக்க வேண்டும் என்கிற விருப்பத்தை முன்வைப்பது. பகுத்தறிவு நிலைகளான ஈகோவும் சூப்பர் ஈகோவும் அது தற்சமயம் கிடைக்கக்கூடிய சாத்தியமுள்ளதுதானா, கிடைத்தால் என்ன நிகழும், கிடைக்காவிட்டால் என்ன ஆகும் என்கிற பல்வேறு சூழ்நிலைகளையும சாத்தியங்களையும் ஆராய்ந்து 'இட்'டை கட்டுப்படுத்துகிறது.

கிட்டத்தட்ட கிகுஜிரோ 'இட்' மனநிலையிலேயே வாழ்கிறார். பக்கத்து வீட்டுப் பையனை அவன் தாயைக் காண ஊருக்கு அழைத்துச் செல்வதற்காக மனைவி தரும் பணத்தை வாங்கிக் கொண்டு நேரடியாக சைக்கிள் ரேஸ் சூதாட்ட அரங்கிற்கு நடக்கிறார். அங்கு பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து சிறுவனிடம் அதிர்ஷ்ட எண்களைப் பற்றி ஆலோசனை கேட்டு அவனைப் படுத்தியெடுக்கிறார்.

பணமில்லாமல் நெடுந்தொலைவு செல்லவிருக்கும் சூழலில் வாகன லிஃப்ட் கேட்க நாம் எத்தனை பவ்யமாய் நடந்து கொள்வோம்.

இவரோ, "டேய் பன்னி மண்டையா. அந்த ஊர்ல எங்களை இறக்கி விடு' என்கிறார் மொட்டை அதிகாரமாய். அவனுடன் சண்டை போட்டு வேறு காரில் லிஃப்ட் கேட்டு கிளம்பும் போது அவன் வண்டியின் கண்ணாடியை உடைத்து விட்டு குறும்புச் சிறுவன் போல் ஓடி வருகிறார். சொற்ப பணத்தில் விலையுயர்ந்த ஹோட்டலில் தங்குகிறார். அங்கு நீச்சல் குளத்தில் இவர் செய்யும் அழும்புகள் சுவாரசியமானவை.  இன்னொரு இடத்தில் லிஃப்ட் கேட்பதற்காக குருடன் போல் இவர் செய்யும் பாவனைகள் விழுந்து விழுந்து சிரி்க்க வைப்பவை.

ஏற்கெனவே சொன்னது போல படத்தின் பெரும்பான்மையில் இந்த மனோநிலையிலிருந்து அவர் எங்கும் வெளியே வருவதேயில்லை. மனம் பிறழ்ந்தவராக இருந்தாலும் திறமையாக கார் ஓட்டும் விசித்திரம் கொண்ட தமிழ் சினிமாவில், இவர் ஒரு காரை கிளப்பிக் கொண்டு போய் ஓட்டத் தெரியாமல் புல்வெளியில் இறக்குகிறார். இன்னொரு இடத்தில் ஏதாவதொரு வாகனத்தை பஞ்சராக்கி பின்பு அவர்களுக்கு உதவி செய்து பின்பு காரில் தொற்றிக் கொள்ளும் அதிபயங்கர திட்டத்தோடு செயல்பட, ஒரு காரின் டயர் வெடித்து... அது அபாயகரமாக பாலத்தில் மேலிருந்து சரிந்து விழ, இரண்டு பேரும் ஓட்டம் எடுக்கிறார்கள்.

படத்தின் இன்னொரு முக்கியமான நகைச்சுவைக் காட்சி என நான் கருதுவது:

சிறுவனை வெளியில் அமர வைத்து விட்டு ஹோட்டலில் கோழிக்கறியை அசுவாரசியமாக மெல்லுகிறார் கிகுஜிரோ.

"என்னய்யா இது கறி இது. மெத்துன்னே இல்லே. நாய்..இல்லாட்டி.. பூனையைப் போட்டுட்டியா என்ன?"

"யோவ். இத விட அது விலை அதிகம்யா"

"நல்லா வெவரமாத்தான்யா இருக்கீங்க"


வெளியே வந்து சிறுவனைக் காணாமல் தேடுகிறவர், யாரோ அவனை பூங்கா பக்கம் அழைத்துச் செல்வதை விசாரித்து தெரிந்து கொள்கிறார். ஒரு pedophile கிழவன், சிறுவனை பாலியல் நோக்கததோடு வம்பு செய்துக் கொண்டிருப்பதை காண்கிறார். அங்கிருந்து சிறுவனை மீட்டுத் திரும்புவது அடுத்த ஷாட்டில் காண்பிக்கப்படுகிறது. அதற்கும் அடுத்த ஷாட்டில் கிழவன் முகத்தில் ரத்தத்துடன் விழுந்து கிடப்பது காண்பிக்கப்படுகிறது.

ஆச்சா..

மீண்டும் கிகுஜிரோ சிறுவனுடன் வரும் ஷாட். அவனை ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு மீண்டும் அந்தக் கிழவனிடமே செல்கிறார். தன்னுடைய பேண்ட்டை இறக்கி விட்டு ஜட்டியுடன் அவன் முன் நின்று ' தைரியம் இருந்தா என் கிட்ட செய்டா பார்க்கலாம்' என்று அவனை மேலும் பழிவாங்க முயல்கிறார்.

அப்புறம் நிகழ்வதுதான் பயங்கர காமெடி. அந்தக் கிழவன் அடிபட்டிருந்தாலும், மீதமிருக்கும் சபலத்துடன் கிகுஜிரோவின் ஜட்டியை ஆசையுடன் கழற்ற முயல... இவர் 'அய்யா சாமி விட்டால் போதும்' என ஓடி வருகிறார்.

படம் முழுவதும் இவ்வாறான மெலிதான நகைச்சுவை வழிந்து கொண்டேயிருந்தாலும் சிறுவன் தாயைக் காண தாமதப்படும் கணங்களின் துயரம் கூட நமக்கு உறுத்திக் கொண்டேயிருக்கிறது.

பல்வேறு சேட்டைகளுக்குப் பிறகு ஒருவழியாக சிறுவனின் தாய் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விடும் போது, அவர் அங்கு இன்னொரு குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதை மெலிதான அதிர்ச்சியுடன் பார்க்கிறார் கிகுஜிரோ. இருந்தாலும் இதை சிறுவனிடமிருந்து மறைக்க விரும்பி 'அவங்க இங்கருந்து வேற இடத்துக்கு போயிட்டாங்களாம்' என்கிறார். தன் தாயை வேற்றுக் குடும்பத்துடன் பார்த்துவிடும் சிறுவன் சூழலைப் புரிந்து கொண்டு மெளனமாக அழுகிறான்.

ஒரு சாதாரண இயக்குநராக இருந்தால் படத்தை இந்தச் சோகத்தோடு முடித்து விட்டு பார்வையாளர்களை அதே மனநிலையில் விட்டுவிடுவார். டகேஷி கிடானோ இங்குதான் வேறுபடுகிறார். சிறுவனின் மனநிலையை உற்சாகமாக மாற்ற முயலும் நோக்கத்தோடு பின்வரும் காட்சிகள் நீள்கின்றன. பல்வேறு நகரங்களுக்கு பயணம் செய்யும் ஓர் இளைஞனும் இரண்டு பைக் இளைஞர்களும் வழித்துணை நண்பர்களாக கிடைக்க, அவர்கள் தமக்குத் தெரிந்த விளையாட்டுக்களின் மூலம் சிறுவனை மகிழச்சியடைய வைக்கின்றனர்.

எத்தனை துயரமான அனுபவங்கள் நேர்ந்தாலும், அதிலிருந்து நம்மை மீட்டெடுத்துக் கொள்ள இதே உலகில் வேறு விஷயங்களும் இருக்கின்றன என்பதை உணர்த்துகிறது இந்தக் காட்சிக் கோர்வை.


புதுமைப்பித்தனின் தவளைப் பாய்ச்சல் நடையைப் போல கச்சிதமான ஷாட்கள் இந்தப் படத்தை அதிசுவாரசியமாக்குகின்றன. படத்தின் துவக்கத்தில் விளையாட்டுத் துணை நண்பர்களில்லாத அந்தச் சிறுவனின் தனிமையும் பெற்றோருக்கான ஏக்கமும் குறைவான காட்சிகளில் அழுத்தமாக சொல்லப்படுகின்றன. (அத்தனை பெரிய கால்பந்து மைதானத்தில் சிறுவன் மாத்திரம் தனித்து நிற்பது ஒரு ஏரியல் ஷாட்டில் காட்டப்படுகிறது.)

ஒரு குடும்பம் இருளில் மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் ஒரு ஷாட்.விடிகாலை வெளிச்சத்தில் வெடித்துப் போடப்பட்டிருக்கும் கருகின பட்டாசுகளின்  இன்னொரு ஷாட். இதற்குப் பிறகு தன்னுடைய பெற்றோரைப் பற்றி பாட்டியிடம் விசாரிக்கிறான் சிறுவன். மனிதர்கள் நகர்ந்த பின்பும் அந்த வெற்று நிலவெளியை காமிரா வெறித்துப் பார்ப்பது, லாங் ஷாட்கள், இயற்கையின் அதிகுளோசப் ஷாட்கள் என்று மிகச் சிறந்த ஒளிப்பதிவு இந்தப்படத்தை உன்னத அனுபவத்திற்கு இட்டு்ச செல்கிறது. மென்மையான பியானோ இசை பின்னணியாக தேவையான இடங்களில் மாத்திரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இயக்குநர் டகேஷி கிடானோ வழக்கமாக தன் படங்களில் உபயோகப்படுத்தும் சில பிரத்யேக குறியீடுகள் (கனவுக்காட்சி, ஏஞ்சல் பெல்) போன்றவை இதிலும் உண்டு.

சிறுவனின் மற்ற பள்ளி நண்பர்கள், உறவினர் வீடுகளிலும், கோடை விடுமுறைக் கொண்டாட்டங்களிலும் மகி்ழ்ச்சியாக இருந்திருந்தாலும், இச்சிறுவனைப் போல வாழ்க்கையிலேயே மறக்க முடியாத அனுபவங்கள் அவர்களுக்குக் கிடைத்திருக்காது என்பது மாத்திரம் நிச்சயம். அவர்களின் பயணம் நிறைவடைந்தாலும் கிகுஜிரோ மாத்திரம் பார்வையாளர்களின் மனங்களில் மேலும் சில நாட்கள் பயணிப்பார் என்பதும் நிச்சயம்.

கேனஸ் திரைப்பட விழாவில் (1999) போட்டிக்காக நாமினேஷில் நுழைந்த  இத்திரைப்படம், ஜப்பானின் தனிமைப்படுத்தப்பட்ட கலாச்சாரத்தைப் பற்றி உரையாடுகிறது. சிறுவனுக்கு துணையாக, கிளம்பிய கிகுஜிரோ, வழியில் மனநல காப்பகத்தில் இருக்கும் தன் தாயைச் சந்திக்க விரும்பிச் சென்று பின்பு நெருங்கி உரையாடாமலேயே திரும்பி வந்து விடுகிறார். சிறுவனைப் போலவே இவரும் தாயின் அருகாமையை இழந்தவர் என்பது நமக்குத் தெரியவருகிறது. இதற்குப் பின்னதான காட்சிகளில் இவருடைய வழக்கமான விளையாட்டுப் பிள்ளை முகபாவங்கள் மட்டுப்பட்டு ஏதோ யோசனையிலிருக்கும் தீவிர முகபாவங்களின் நுட்பமான வித்தியாசம் ஆச்சரியமளிக்க்கூடியது.

இனி மிஷ்கின், கிகுஜிரோ திரைப்படத்தை தன் பாணியில் எவ்வாறு உருமாற்றம் செய்திருக்கிறார் என்பதை அடுத்து காண வேண்டும்.

suresh kannan

Saturday, November 20, 2010

சிடுமூஞ்சி நூலகர்களும் விதிவிலக்குகளும்



 'வருங்காலத்தில் என்னவாகப் போகிறேன்?' என்று பதின்ம வயதுகளில் தோன்றும் கேள்விக்கு சினிமா, பத்திரிகையாளன் எனும் பதில்களோடு இன்னொன்றும் உண்டு. 'நூலகர்'.

புத்தக வாசிப்பிலும் சேகரிப்பிலும் பித்துப் பிடித்து திரிந்த காலம். நூலகராய் பணிபுரிய நேர்ந்தால்  எப்போது வேண்டுமானாலும் எந்த நூலை வேண்டுமானாலும் ஆசை தீர வாசித்துக் கொண்டேயிருக்கலாம் என்பதே அந்த இளவயதுக் கனவுக்கு அடிப்படையாய் இருந்தது. என் தனிப்பட்ட அனுபவத்தைப் பொறுத்தவரை சிடுமூஞ்சித்தனத்திற்கும் நூலகப் பணிக்கும் பல ஜென்ம பந்தம் இருப்பதை உணர முடிகிறது. இது ஏனென்று தெரியவில்லை.

பள்ளிக் கூட சமயங்களில், ஆண்டுக்கொரு முறை நூலகக் கட்டணம் வசூலித்தாலும் நூலகத்தின் பக்கம் மாணவர்களை அனுமதிக்கக்கூடாது என்பது பொதுவிதியாக இருந்தது.  இன்று என் மகள் படிக்கும் காலத்திலும் அதே நிலை நீடிப்பது துரதிர்ஷ்டம்தான். நான் படித்த சமயத்தில் 'அரும்பு' என்கிற கிருத்துவ வாசனையடிக்கும் மாத இதழை மாதாமாதம் வாசிக்கத் தருவார்கள். அவ்வளவுதான். அதைத்தவிர நூலகத்தின் பக்கம் சென்றால், நூலகர் மிளகாய்த்தூள் விழுந்த ஆணுறையை தவறுதலாக உபயோகப்படுத்தி விட்டவர் போல பதறி எரிச்சலுடன் எங்களை துரத்தி விடுவார். ஒன்பது இடங்களும் குளிர்ந்திருக்கும் சமயத்தில் நைந்து போயிருக்கும் 'நன்னெறிக் கதைகளை' அரை மனதுடன் தருவார். தடித்தடியாக கைபடாத அகலிகையாய் கண்ணாடி அறைகளில் அமர்ந்திருக்கும் புத்தகங்களை ஏக்கத்துடன் பார்த்து விட்டு திரும்புவேன். நூலகர் பணி என்றால் புத்தகங்களை யார் கையும் படாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே இவர்களின் புரிதலாக இருக்குமோ என்று தோன்றும்.

பெரும்பாலான அரசு நூலகங்களில் இருப்பவர்களுக்கு அங்கிருக்கும் நூற்களைப் பற்றிய விவரங்களோ, அறிவோ, வாசிப்போ இருக்காது. ஆனால் நூலகத்திற்கான பட்டப் படிப்பு படிக்காமலேயே, பழைய புத்தகக் கடைக்காரர்கள் நுட்பமான துறை சம்பந்தமான புத்தகங்களைக் கூட தெளிவாக அறிந்திருப்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தினால் ஏற்படும் தேடலுக்கும் கடமையே என கூலிக்கு மாரடிக்கும் சலிப்பிற்கும் உள்ள இடைவெளியை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

சென்னையின் பல அரசு நூலகங்களில் நான் கசப்பான அனுபவங்களையே சந்தித்திருக்கிறேன். குமுதம், ஆனந்த விகடன் போன்ற பிரபலமான வணிக இதழ்கள் கண்ணில் பட்டால் அன்று உங்கள் அதிர்ஷ்ட தினம். பெரும்பாலும் அவை பழைய இதழ்களாகவே இருக்கும். புதிய இதழ்கள் நூலகரின் வீட்டில் அல்லது அவர்களது நெருங்கிய நண்பர்களின் வீட்டில் இருக்கும். 'யுனெஸ்கோ கூரியர்' போன்ற கனமான சமாச்சாரங்களை அடங்கிய இதழ்கள் யாராலும் சீந்தப்படாமல் இருக்கும். காலத்தை கலைத்துப் போடும் பின்நவீனத்துவ மாயம் போல நேற்றைய இன்றைய செய்தித்தாள்கள் சிதறி பக்கங்கள் மூலைக்கொன்றாக இருக்கும்.

புத்தகங்களை இரவல் வாங்குவதற்கான அனுமதிச் சீட்டை நூலகரிடமிருந்து பெறுவது அத்தனை சுலபமல்ல. நாம் ஏதோ புத்தகங்களை செவ்வாய் கிரகத்திற்கு எடுத்துச் செல்வது போன்ற தோரணையுடனே அவர் நம்மை கடுகடுவென்று அணுகுவார். எடுத்துச் செல்லப்படும் புத்தகங்களைப் பற்றிய விவரங்களையும் திரும்பி வரும் புத்தகங்களையும் பேரேட்டில் பதிவது குறித்தான பணிச்சுமை கருதியே அந்தச் சலிப்பு. நூல் தாமததிற்கான அபராதத் தொகை ஏதேனும் வந்தால் அதை தலைமை நூலக அலுவலகத்தில் போய் கட்டி விட்டு வர வேண்டும். இதற்காகவே அபராதத் தொகையை வசூலிக்காத நூலகர்களும் உண்டு. புதிய அனுமதிச் சீட்டுக்காக நூலகர் பெரும்பாலும் நமமை தவிர்க்கவே விரும்புவார். ஏரியா விட்டு ஏரியா வந்த நாயே சமயங்களில் ஒற்றுமையாகப் போய் விடுகிற நிலையில் "ஏன் அந்த ஏரியாவுல இருந்து இங்க வந்து புத்தகம் எடுக்கறீங்க' என்பார். ஒரு நபரே இரண்டு மூன்று நூலகங்களை கட்டியழும் நூலகர்களும் உண்டு.

இது ஒருபுறமென்றால் வருபவர்களின் வாசிப்பு ரசனையும் அபாரமானது. லஷமிகளும், ரமணிசந்திரன்களும், பாலகுமாரன்களுமே ஓய்வு ஒழிச்சலின்றி சுழற்சியில் இருப்பார்கள். அசோகமித்திரன்களும், புதுமைப்பித்தன்களும், ஜெயமோகன்களும் தூசு படிந்து கேட்பாரின்றி மூலையில் பரிதாபமாக அமர்ந்திருப்பார்கள். பல அரிய நல்ல நூல்கள் மாதவிலக்குப் பெண்கள் போல புழக்கடைகளில் மறைவாக போடப்பட்டிருக்கும்.

அதியமான் சார்பாக தொண்டைமானிடம் தூது சென்ற ஒளவை வஞ்சப் புகழ்ச்சி அணியாக (சொளையா 10 மார்க்) பாடிய ஏழாம் வகுப்பில் வாசித்த பாடல்தான் நினைவுக்கு வரும்.
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்யணிந்து,
கடியுடை வியன்நகர் அவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல் எம்கோமான் வைந்நுதி வேலே

(புறநானூறு, 95)
 (இப்படியெல்லாம் பழம் பாடல்களை எடுத்துப் போட்டால் பதிவின் வெயிட் கூடுமா என பார்க்கிறேன்).

மேலும் புத்தகங்களும் அந்தந்த வகைமைகளில் ஒழுங்காக அடுக்கப்பட்டிருக்காது. நகைச்சுவை என்கிற தலைப்பில் விரைவீக்கத்திற்கான மருத்துவக் குறிப்புகளும் அறிவியல் என்னும் அடுக்கில் அப்புசாமி சீதாப்பாட்டியும் இருப்பார்கள். தம்முடைய வருங்கால தேவைக்காக சம்பந்தமில்லாத அடுக்குகளில் நூற்களை ஒளித்து வைக்கும் குதர்க்கமான வாசகர்களும் உண்டு. தமக்குத் தேவையான பகுதியை புத்தகத்திலிருந்து அப்படியே கிழித்து எடுத்துக் கொள்ளும் வன்முறையாளர்களையும் அறிவேன். 'இந்த நாவலை எழுதின இருகூரானை இரு கூறாக பிளக்க வேண்டும்' என்று நூலட்டையில் தம்முடைய கறாரான விமர்சனத்தை முன்வைக்கும் குதர்க்கவாதிகளின் குறிப்புகளையும் கண்டிருக்கிறேன்.

இப்படியாக நூலகர்களுக்கும் நூலகங்களுக்கும் குறைந்த பட்சம் எனக்கும் தொடர்நது ராசியில்லாத நிலையில் இந்தக் கட்டுரையை வாசித்ததும் இயல்பாக கண்ணீர் மல்கியது. கட்டுரையா, அல்லது புனைவா என்று ஒரு முறை நிச்சயப்படுத்திக் கொள்ளத் தோன்றியது. மற்றவர்களும் வாசிக்கும் பொருட்டு இங்கே அதை பகிர விழைகிறேன்.

இதற்காகவே என் இல்லத்தை சாந்தோம் பகுதிககு மாற்றிக் கொள்ளலாமா என்று கூட தோன்றுவது சற்று அதீதம்தான்.

தொடர்புடைய பதிவுகள்:

சரோஜாதேவி புத்தகமாவது வேண்டும்...   

நூலகங்கள்... பதிப்பகங்கள்... அரசு... 

கன்னிமையை இழக்காத நூலகம்


suresh kannan

Wednesday, November 10, 2010

என்கவுண்ட்டர் கொலைகள்: ஒளிந்திருக்கும் அரசியல்


கோவையில் குழந்தைகளை கடத்திக் கொன்றதாக சந்தேகிக்கப்பட்ட, குற்றம் நீதித்துறையால் இன்னும் ஊர்ஜிதமாகாத நிலையில், வேன்டிரைவர் மோகன்ராஜ், காவல் துறையினரால்  'கொலை' செய்யப்பட்டதைத் தொடர்ந்து என்கவுண்ட்டர் மீதான விவாதங்கள் மறுபடியும் துவங்கியிருக்கின்றன. மோகன்ராஜின் மரணம் முன்னமே கச்சிதமாக திட்டமிட்டப்பட்டது என்பது 'ஊரறிந்த ரகசியமாக' அனைவருக்குமே தெரிந்திருக்கிறது.

தங்கள் மீது பல குற்ற வழக்குகளை பாக்கி வைத்துள்ள ரவுடிகளும் அவர்களின் பின்னணயில் உள்ள அரசியல்வாதிகளுமே கம்பீரமாக உலா வரும் போது வழக்கு விசாரணையின் துவக்கத்திலேயே ஒரு வேன் டிரைவரை காவல் துறையினர் சுட்டுக் கொல்வதற்கு ஏன் இத்தனை அவசரம் காட்டியிருக்கின்றனர்? பதில் வெளிப்படையானது.

1) 'மைனாரிட்டி அரசை' தொடர்ந்து குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கும் ஜெயலலிதாவின் சமீபத்திய குற்றச்சாட்டு, 'குழந்தைகள் கடத்தல் வழக்கில் காவல் துறையினர் மென்மையான போக்கை கடைப்பிடிக்கின்றனர். கையலாகாத மைனாரிட்டி அரசும் இதை வேடிக்கை பார்க்கிறது. சமீபத்தில் கடத்தப்பட்ட பள்ளிச் சிறுவனொருவன் பணம் தரப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டது, காவல்துறையின் திறமைக்கு ஒரு பின்னடைவு' என்பது போல் ஜெ-வின் விமர்சனங்கள் அமைந்தன. (பணம் தர அனுமதிக்கப்பட்டு பின்னர் கடத்தல்காரர்களை பிடித்த விஷயத்தில் காவல்துறையினர் சாமர்த்தியமாக இயங்கியதாகவே நான் நினைக்கிறேன்). ஜெவின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளுங்கட்சியின் அதிரடியான பதிலடியாகவே இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும்.

2) சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், மக்களின் அதிருப்தியிலிருந்து தப்பிக்கவும், திசை திருப்பவும், குழந்தைகளைக் கொன்றதாக சந்தேகிக்கப்படுபவர்களின் மீது மக்களிருக்கும் ஒட்டுமொத்த வெறுப்பை ஓட்டுக்களாக மாற்றி அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ளவும், மேலே சொன்னது போல் எதிர்க்கட்சியினர் வாயை அடைக்கவும்.. என ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்க திட்டமிட்டிருக்கிறது ஆளுங்கட்சி.

சரி. இந்த என்கவுண்ட்டர் கொலைகள் மிக அரிதான சமயங்களில் அவசியமா, அல்லது முற்றிலுமே தவிர்க்கப்பட வேண்டியதா?. மோகன்ராஜ் மரணத்தை மாத்திரமே முன்னிட்டு 'என்கவுண்ட்டர் கொலை' எனும் விஷயத்தை ஒட்டுமொத்தமாக விவாதிப்பது சரியாகாது.

என்கவுண்ட்டர் கொலைகள் சரியே என பொதுமக்களில் பலரும், அப்பட்டமான மனித உரிமை மீறல் என மனித உரிமை ஆர்வலர்களும், காவல்துறையே தண்டனை தர முடிவு செய்து விட்டால் நீதித்துறை எதற்கு என்ற கேள்விகளும் புறப்படுகின்றன. இதுதான் சமயமென்று முற்போக்குச் சாயத்தை முகத்தில் அப்பிக் கொண்டு 'என்கவுண்ட்டர் கொலைகளுக்கு' எதிரான போக்கில் ஆவேசமாக எழுதப்படும் சில இணையப் பதிவுகளையும் காண்கிறேன். கொலைகாரனின் (?!) அழிவை இனிப்புடன் கொண்டாடின பொதுப்புத்தியை சாடின பதிவுகளையும் இந்தக் கொலையை ஆவேசமாக வரவேற்ற பின்னூட்டங்களையும் காண்கிறேன்.

இதில் எது சரி, எது நியாயம்? எது தவறு, எது அநியாயம். என்னுடைய இரண்டு நயா பைசாக்கள்.

கெளதம் மேனனின் 'காக்க காக்க' திரைப்படத்தின் துவக்கக் காட்சிளுள் ஒன்று. இளம் சிறுமிகளை குரூரமாகக் கற்பழித்து குதறிப் போடுவதை வழக்கமாகக் கொண்ட ஒரு ரவுடியை மறைந்திருந்து ஒரே ஒரு துப்பாக்கிக் குண்டால் வீழ்த்துவார் காவல்துறை அதிகாரியான ஹீரோ சூர்யா. 'இவனையெல்லாம் கைது பண்ணி பெட்ரோல் போட்டு ஜீப்ல கூட்டிக்கிட்டு போயி, கோர்ட்ல நிறுத்தி, சாப்பாட்டு போட்டு... அரசாங்கத்துக்கு எவ்ள செலவு. இப்பப்பாரு அம்பது ரூபால ஒரே புல்லட்ல வேலை முடிஞ்சது".

இதை நிச்சயம் நம்மில் பெரும்பாலோனோர் அப்போது கைத்தட்டி ரசித்திருப்போம். கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு. சாமி.. என்று  பெரும்பாலான போலீஸ் ஹீரோ படங்களில் வரும் என்கவுண்ட்டர் கொலைகளை அதற்கேயுரிய உணர்ச்சிகரமான மனநிலைகளில் நாம் கொண்டாடி ஆதரித்து வந்திருக்கிறோம். ஏன், புராணக் கதாபாத்திரங்களில் தீமையை செய்யும் அரக்கர்களின் அழிவை பண்டிகையாக கொண்டாடுவதிலிருந்து இந்த மனநிலை நம்முள் காலம் காலமாக ஊறிப் போயிருப்பது வெளிப்படை.

இதுதான் கோவை உள்ளிட்ட பெரும்பாலான தமிழக மக்களின் கொண்டாட்ட மனநிலையாக வெளிப்பட்டிருக்கிறது. வேறெங்கோ விபத்தில் இறந்து போகும் குழந்தைக்காக ஒரு உச்சுக்கொட்டலில் முடிந்து போகும் நம் அனுதாபம், நம் பக்கத்திலேயே விளையாடி நாம் பெளதீகமாக தொட்டு மகிழ்ந்த குழந்தையெனில் அழுகையாகவும், ஆத்திரமாகவும் குற்றவாளி தண்டனை பெற்ற போது ஆசுவாசமாகவும் நீட்சி கொள்ளுமல்லவா? அந்த நிலையில்தான் கோவை மக்களின் பட்டாசு வெடித்தல்களையும், இனிப்பு பரிமாறல்களையும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹீரோ - வில்லன், என்று எல்லாவற்றையுமே கறுப்பு - வெள்ளைப் பிரச்சினைகளாகவே புரிந்து கொள்ளும் பொதுப்புத்தி சமூகம், நாணயங்களுக்கு இரண்டு பக்கங்கள் மாத்திரமல்ல பல பக்கங்களும் இருக்கலாம் என்கிற தெளிவை அடைவதற்கு அறிவுசார் சமூகம் அவர்களுடன் தொடர்ந்து உரையாடுவது அவசியமானது. மோகன்ராஜின் மீதான குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில், அவரை 'கொலையாளி சுட்டுக் கொலை' என்று ஊடகங்கள் தலைப்புச் செய்தியுடன் அதை நிச்சயப்படுத்தி தீர்ப்பெழுதுவதும் பொதுமக்களும் இந்தப்பிரதிகளை மேலோட்டமாகவாகவே அணுகி மகிழ்வதும் நிச்சயம் சரியானதல்ல. காவல்துறையால் கொல்லப்பட்ட நபர், ஒர் அப்பாவி என்று பின்னதான விசாரணையில் -ஒருவேளை நியாயமான விசாரணையில் அப்படி நிகழ்ந்தால் - ஆனால் அப்படி நிகழ வாய்ப்பில்லை என்றே நம்புகிறேன் - தெரியவந்தால் இந்தக் கொலையை கொண்டாடின நாம் நம் முகத்தை எங்கே வைத்துக் கொள்வோம்? 'யாரைக் கொல்லலாம், பராபாஸ் திருடனையா, அல்லது தன்னை தேவகுமாரன் என அழைத்துக் கொள்ளும் இவனையா? என்ற கேள்விக்கு ஜெருசலேத்து மக்கள் 'இயேசுவே கொல்லப்பட வேண்டும்' என்று மதவெறியுடன் கூக்குரலிட்டனர். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் பொதுச் சமூகத்தில் நீடிக்கும் இந்த mob psychology -ல் இருந்து நாம் ஒவ்வொருவரும் விடுபட வேண்டியது அவசியம். பல சமயங்களில் ஆயுதங்கள் மாத்திரமே நம் கண்ணுக்கு வெளிப்படையாய் தெரிகின்றன. ஆயுதங்களுக்கு பின்னாலுள்ள கைகளைப் பற்றி நாம் உரையாடுவதில்லை.

இது ஒருபுறம். ஆனால் இன்னொரு புறத்தில் மிக அரிதான சமயங்களில் தவிர்க்கவே முடியாத சூழலில் இந்த மாதிரியான என்கவுண்ட்டர் கொலைகள் அவசியமானவையே என்று நான் நினைக்கிறேன்.

ஊரே அறிந்த ஒரு ரவுடி இருக்கிறான். அவன்தான் பல அப்பாவிகளை துன்புறுத்துகிறான், கொலை செய்கிறான். மிரட்டுகிறான், கற்பழிக்கிறான் என்று பொதுமக்கள், காவல்துறை உள்ளிட்ட பலருக்கும் தெரிந்தேயிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன ஆகிறது? கைது செய்யப்படும் ஒவ்வொரு முறையும் தன்னுடைய அரசியல் பலத்தின் மூலம் சில நாட்களிலேயே வெளியே வந்து விடப் போகிறான். அட! சிறையிலேயேதான் இருக்கட்டுமே. சிறை என்பது குற்றவாளிகளுக்கான தண்டனைக்கூடம் என்பது அபூர்வமாக குற்றம் செய்து சிறைக்குப் போகிறவர்களுக்குத்தான். இதிலேயே ஊறிப்போனவர்கள், அரசாங்கத்தின் செலவில் சாப்பிட்டுக் கொண்டு, பாதுகாப்பாக இருந்து கொண்டு அங்கிருந்தே தம்முடைய சாம்ராஜயத்தின் நிழலான சமாச்சாரங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். கைது செய்ப்படும் ஒவ்வொரு முறையும் காவல்துறையே இவன் மீதான குற்றங்களை நீதிமன்றத்தில் நிரூபித்தாக வேண்டும். பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் பல ஆண்டுகளாக தீராத தலைவலியாக இருக்கும் இவனை சாகடித்தால்தான் என்ன? காவல்துறையால் ஒன்றும் செய்ய முடியாமலிருக்கும் நிலையில், பாதிக்கப்படும் பொதுமக்களே கூட ஒன்று கூடி அவனை கொன்று போட நினைப்போமா, மாட்டோமா?.

குற்றவாளிகளை சாகடிப்பதை விட அதற்கான சமூகக் காரணங்களை ஆய்வது, அவர்களை  அதிலிருந்து மீட்டு அவர்களின் வாழ்க்கையை புனரமைப்பது, குற்றவாளிகளின் பின்னணயில் இயங்குபவர்களை அடையாளம் காண்பது...போன்ற இதனுடன் தொடர்பான கேள்விகள் எல்லாம் சரிதான். (பல சமயங்களில் இம்மாதிரியான முற்போக்கு சிந்தனைகள் வெறும் பாவனைகளாகவே அமைந்துவிடுவது துரதிர்ஷ்டம்). அவைகளுக்கான முதிர்ச்சியை அடைய இன்னும் நாம் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. பயிரின் முளையிலிருந்தே இந்தப் பிரச்சினையை ஆராய வேண்டும். இதற்கு இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும் பட்சத்தில் தற்காலிகமான தீர்வாக, வேறு வழியில்லாத சூழலில் என்கவுண்ட்டர் கொலை நிகழ்வுகள் அவசியமென்றே நான் கருதுகிறேன். அரிதிலும் அரிதான வழக்குகளுக்கு நீதித்துறையால் மரணத்தண்டனை வழங்குவது போல. 

இந்த மாதிரியான ரவுடிகள், அரசியல்வாதிகளின் ஆயுதங்கள் மாத்திரம்தானே? என்று சிலர் விவாதிக்கலாம். சமயங்களில் சமூகத்திற்கு கேடு விளைவிக்கக்கூடிய அபாயமான ஆயுதங்களை மக்கள் நலன் கருதி நாம் அழிப்பதில்லையா?

இவர்கள் குற்றவாளிகளா, அல்லவா என்பதை முடிவு செய்ய வேண்டியது நீதித்துறையே, காவல்துறையோ, அரசியல்வாதிகளோ அல்ல என்பது சிலரின் வாதம். சரிதான். ஆனால் நம்முடைய தேசத்தின் சமகால நீதித்துறையின் லட்சணம் பற்றி நமக்கே தெரியும். ரயிலில் முறையான பயணச்சீட்டு இல்லாதவர்களிலிருந்து தேர்வில் காப்பியடித்து பிடிபடுபவர்கள் வரையான குற்றங்களில் ஈடுபடுபவர்களில் நீதிபதிகளும் அடக்கம் என்பதை அதிர்ச்சியுடன் நாம் செய்தித்தாள்களில் வாசித்துக் கொண்டுதானேயிருக்கிறோம். 'என்னால் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாத அளவிற்கு மனஉளைச்சலை ஏற்படுத்துகிற மிரட்டல்களை சந்திக்கிறேன்' என்று ஒரு நீதிபதியே வெளிப்படையாக புலம்புமளவிற்கு நிலைமை அழுகிக் கிடக்கிறது. கிட்டத்தட்ட தகரடப்பா போல உள்ள அரசு பஸ், எவ்வாறு ஒரு தர்மநியாயத்திற்கு கட்டுப்பட்டு நம்முடைய ஊருக்கு நிச்சயம் சென்று சேர்ந்து விடும் என்கிற நம்பிக்கையில் ஏறி அமர்கிறோமோ, அவ்வாறே இந்தியாவின் நீதித்துறையும். நேர்மையுடன் செயல்படும் சில நீதிபதிகளினாலேயே அந்தத் துறையின் மீதான நம்பிக்கை இன்னும் நமக்கு ஒட்டிக் கொண்டிருக்கிறது.

என்கவுண்ட்டர் கொலைகளை எதிர்த்து எழுதும் சில பதிவர்கள், நீதித்துறையினரிடம் முடிவை விட்டுவிடாமல் காவல் துறையினரே தண்டனையை கையில் எடுத்துக் கொள்வதில் உள்ள அநியாயத்தை ஆவேசமாக குறிப்பிட்டுள்ளனர். குழந்தைகள் கொலை செய்யப்பட்டனர் என்பதால்தான் பொதுப்புத்தி இத்தனை ஆவேசமாக என்கவுண்ட்டரை ஆதரிக்கிறதாம். இந்தக் கொடுமைகள் இவர்கள் வீட்டில் நிகழ்ந்தாலும் கூட இவர்கள் என்கவுண்ட்டர் மனித உரிமை மீறல்களை ஆதரிக்க மாட்டார்களாம்.

அடடே!  உடம்பெல்லாம் புல்லரிக்கிறது.

யாராவது தம்மை லேசாக திட்டி பின்னூட்டமிட்டால் கூட கொலைவெறித் தாக்குதல்களுடன் நீட்டி முழக்கி பதிவிட்டு ஒன்றுக்கு நூறாக பதிலுக்கு திட்டிய பிறகே ஆசுவாசமடையும் இந்த முற்போக்கு போலிகள், இந்தச் சமயங்களில் மாத்திரம் ஒழுங்கு பிள்ளை கிழங்குத் தோலாக, 'நீதித்துறையின்' மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிக்காட்டுவது சுத்த அயோக்கியத்தனமாக உள்ளதா, இல்லையா என்பதை அவர்களது மனச்சாட்சியிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும். நம் வீட்டில் இதெல்லாம் நிகழாது என்கிற பொதுவான குருட்டுத் தைரியமே இப்படி அவர்களை எழுத வைக்கிறது.

இந்த என்கவுண்ட்டர் கொலைகள் நாளைக்கு நமக்கே நிகழலாமாம். உள்ளுக்குள் தயிர்வடைகளாக இருந்து கொண்டு வெளியில் தம்மை புரட்சி வீரர்களாகக் கருதி வெளிப்படுத்திக் கொள்கிறவர்களின் கற்பனை அபாரமானதுதான். பெரும்பான்மையான சமயங்களில் அதிகாரத்தின் வேட்டை நாய்களாக உள்ள காவல்துறையினரின் மனித உரிமை மீறல்களையும், காவல் நிலையத்திற்குச் செல்ல நேரும் அப்பாவி பொதுஜனம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிற அவமரியாதைகளையும் அசெளகரியங்களையும் நாம் அறிந்து வைத்திருக்கிறோம்தான் என்றாலும், என்கவுண்ட்டர் என்பதெல்லாம் பெரிய வார்த்தை பாஸூ. அவை தயிர்வடை தேசிகன்களுக்கெல்லாம் நிகழும் என்று பூச்சாண்டி காட்டுவதெல்லாம் அதீதம். அதிகாரத்தின் ஒப்புதலும் தலையசைப்புமில்லாமல் என்கவுண்ட்டர் போன்ற சமாச்சாரங்களை காவல்துறையினர் கையில் எடுக்க முடியாது. அவ்வகையில் இம்மாதிரியான பயமுறுத்தல்கள் அநாவசியம் என்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.

அப்பாவிகளின் மீதும், குற்றம் நிருபீக்கப்படாத அல்லது நிருபீக்கப்பட்ட நபர்களின் மீது அரசியல் காரணங்களுக்காக நிகழ்த்தப்படும் (சமீபத்திய உதாரணமான மோகன்ராஜ் போன்றவர்கள்) என்கவுண்ட்டர் கொலைகளை நான் ஆதரிக்கவில்லை, மாறாக பல ஆண்டுகளாக சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் குண்டர்களை வேறு வழியில்லாத சூழலில் - பெரும்பாலான முதிர்ச்சியான நாகரிகமான சமூகம் அமையும் வரையாவது - கொல்லப்படுவது அவசியம் என்பதே இப்பதிவின் மூலம் நான் சொல்ல வருவது.

இம்மாதிரியான வன்முறையில் ஊறிப்போன ரவுடிகளை ஒரு புல்லட்டில் சாய்த்துவிடலாம். சரி. ஆனால் இவர்களின் பின்னணியில் இதற்கு மூளையாகச் செயல்படும் வெள்ளைச் சட்டை ரவுடிகளை யார் தண்டிப்பது. நியாயமாக இவர்கள்தான் முதலில் தண்டிக்கப்பட வேண்டும். சட்டத்தையும் அதிகாரத்தையும் கையில் வைத்திருப்பவர்களை யார் தண்டிப்பது. அவர்களிடம் அதிகாரத்தை தந்தவர்கள் என்ற முறையில் ஒருவகையில் நாமும் குற்றவாளிகளே. இவர்களை என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ள நம்மிடம் ஒரே ஒரு ஆயுதமே உண்டு.

வாக்குச் சீட்டு.

suresh kannan

Sunday, November 07, 2010

அமெரிக்க அதிபருடன் ஒரு கைகுலுக்கல்

(ஒபாமாவின் இந்திய வருகையையொட்டி எழுதப்பட்ட பிரத்யேக திரைப்பார்வையிது) :-)

பங்குச் சந்தை வர்த்தகன், நாவலாசிரியை, ஆங்கில மொழி பயிற்சியாளன், சமூக ஆர்வலன், மென்பொருள் பொறியாளன், இளம்பெண் தொழிலதிபர் ... என்றொரு விநோதமான கூட்டணி.

யார் இவர்கள்?

அமெரிக்க அதிபர் புஷ் வருகையையொட்டி (2006-ல்) இந்தியாவின் வருங்காலத்தை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லக்கூடிய இளைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்க அதிபருடன் கைகுலுக்குவதற்கான ஒரு வாய்ப்பு நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்படுகிறது. அதிபருடன் கைகுலுக்கக்கூடிய இளம் தலைமுறை அதிர்ஷ்டசாலியை தேர்ந்தெடுக்கக்கூடிய பணியை ஒரு PR நிறுவனம் மேற்கொள்கிறது. இந்தத் தேர்வின் போது நிகழும் அபத்தங்களையும் கூத்துக்களையும் கூர்மையான சுவாரசியமான அங்கதச்சுவைக் காட்சிகளுடன் விவரிக்கும் திரைப்படம் THE PRESIDENT  IS COMING (2009).


ஜார்ஜ் W புஷ்ஷைப் பற்றி இணையத்தில் உள்ள பல நகைச்சுவைகளில் ஒன்று 'என்' மொழியில்.

இறந்த பின் சொர்க்கம் அல்லது நரகம் செல்வதற்கான வரிசை. ஐன்ஸ்டைன், பிக்காஸோ, ஜார்ஜ் புஷ் ஆகியோரும் நிற்கிறார்கள். அவர்களின் பிரத்யேக அடையாளங்களை விசாரித்து உள்ளே அனுமதிக்கிறார் கடவுள்.

'நீர்தான் ஐன்ஸ்டைன்' என்பதற்கு என்ன ஆதாரம்?

கரும்பலகையும் சாக்பீஸூம் கேட்கிறார் ஐன்ஸ்டைன். கடவுள் தன்னுடைய மாயத்தின் மூலம் அந்தரத்திலிருந்து அதை வரவழைக்கிறார். மிகச் சிக்கலான இயல்பியல் சூத்திரம் ஒன்றை மளமளவென்று எழுதிக் காண்பிக்கிறார். கடவுளுக்கு சந்தேகம் தீர்ந்து அவரை உள்ளே அனுமதிக்கிறார்.

அடுத்து பிக்காஸோ. அவரும் அதே கரும்பலகையி்ல் அவருடைய பிரத்யேக க்யூபிச பாணில் ஒவியம் ஒன்றை வரைந்துக் காட்ட அவரும் அடையாளம் காணப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகிறார்.

அடுத்தது நம்ம ஆள் புஷ்.

கடவுள் சொல்கிறார். "ஐன்ஸ்டைனும் பிக்காஸோவும் அவங்க அடையாளத்த நிருபீச்சிட்டு உள்ளே போயிட்டாங்க. நீ யாரு. நிருபீ" என்கிறார்.

"ஐன்ஸ்டைனும் பிக்காஸோவுமா?. யார் அவங்கல்லாம்?"

"அட நீதான் புஷ்ஷா. உள்ள வாய்யா"என்கிறார் கடவுள்.

புஷ்ஷைப் பற்றியே இத்தனை நகைச்சுவை இருக்கும் போது அவர் சம்பந்தப்பட்ட திரைப்படமெனில் அதற்கு சற்றும் குறைவில்லாமல் நகைச்சுவை இருக்கும்தானே? ஆரம்பம் முதல் இறுதி வரை ரீங்கரித்துக் கொண்டேயிருக்கும மாண்டலின் போல மெலிதான பாசாங்கற்ற நகைச்சுவை இத்திரைப்படம் முழுவதும் வழிந்து கொண்டேயிருக்கிறது.

எல்லா பாத்திரங்களும் தங்களின் வார்ப்பிற்கேற்றவாறான பின்னணியிலிருந்து தங்களின் அழுக்குகளையும் வெகுளித்தனங்களையும் வெளிப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

PR நிறுவனத்தின் தலைவி, தன்னுடைய உதவியாளினியை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மட்டம் தட்டிக் கொண்டே இருக்கிறாள். மேலும் புஷ்ஷூடன் காலையுணவு அருந்த உதவியாளினிக்கு கிடைக்கும் வாய்ப்பையும் சமத்காரமாக தட்டிப் பறிக்க முயல்கிறாள்.

நாவலாசிரியை மிக சாமர்த்தியமாக தன்னுடைய போட்டியாளர்களை ஒவ்வொருவராக கழற்றி விடுகிறாள். இதற்காக தன்னுடைய உடலைக் கூட ஓர் ஆயுதமாக அவள் பயன்படுத்த தயங்குவதில்லை. பங்குச் சந்தை வணிகன் எல்லாவற்றையுமே பணம் கொடுத்து வாங்க முடியும் என நம்புகிறான், புஷ் உட்பட. சமூக ஆர்வலன், ஆணாக்கவாதியாகவும் இனவாதியாகவும் எத்தனை கல்வி கற்றிருந்தாலும் தன்னுடைய பிற்போக்குத்தனங்களை விட முடியாதவனாக இருக்கிறான். ஆனால் இதை அவன் போலித்தனமில்லாமல் வெளிப்படையாகவே செய்கிறான். ஆங்கில உச்சரிப்பு பயிற்சியாளனும் இளம் பெண் தொழிலதிபரும் தங்களின் பிம்பம் குறித்த உயர்வு மனப்பான்மையோடு இயங்குகின்றனர். அவர்களின் கலவி வீடியோகவாக இணையத்தில் ஏற்கெனவே வெளிப்பட்டிருக்கிறது. அதை முன்னிட்டு இருவரும் சண்டையிடுகின்றன. இறுதியில் தங்களின் அசலான நிலையை உணர்ந்து திருமணம் செய்து கொள்ளும் முடிவுடன் போட்டியிலிருந்து விலகி விடுகின்றனர்.

வட மாநிலத்தவர்களை தென்னிந்திய சினிமாக்களில் எத்தனை கொச்சையாக சித்தரிக்கிறார்களோ, அவ்வாறே அவர்களும் இங்குள்ளவர்களை பழிவாங்காமல் விடுவதில்லை. மென்பொருள் பொறியாளனாக வரும் தென்னிந்தியன், அசடாகவும் ஹோமோவாகவும் எப்போதும் பாலிச்சை குறித்தே சிந்தித்துக் கொண்டிருப்பவனாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறான். இவனின் பழைய ஹோமோ உறவு தெரியவந்து போட்டியிலிருந்து விலக்கப்படுகிறான்.

ஆனால் இறுதியில் அமெரிக்க அதிபருக்கு யார்தான் கைகுலுக்குகிறார்கள் என்பது சுவாரசியமான சஸ்பென்ஸ்.



மத நம்பிக்கையாளர்களுக்கு இறப்பிற்குப் பின் 'சொர்க்கம்' என்பது எப்படி ஒரு கனவாகவும் லட்சியமாகவும் இருக்கிறதோ, அவ்வாறே நீண்ட வருடங்களாக உயர் மற்றும் நடுத்தரவர்க்க இந்தியர்களுக்கு 'அமெரிக்கா' என்பது தங்களது கனவெல்லையின் உச்சமாக இருக்கிறது.

தன்னுடைய உறவினர் ஒருவரைப் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம் 'அமெரிக்காவிற்கு போய் வந்தவ' என்றே தொடர்ந்து குறிப்பிடுவார் என் அம்மா. அமெரிக்காவிற்கு போய் வந்ததே ஒரு சிறப்புத் தகுதியாக அவரைப் பொறுத்தவரை ஆகி விட்டிருக்கிறது. தங்களுடைய மகனோ, மகளோ அமெரிக்காவிலிருப்பதை பெருமையான அந்தஸ்துடன் உரையாடல்களில் பலரும் குறிப்பிடுவதை கவனிக்கலாம். நாம் படித்து வளர்வதே அமெரிக்க வாழ்க்கைக்குத்தான் என்று இளவயதிலேயே அந்தக் கற்பனையுடன் தங்கள் பயணத்தைத் தொடரும் மாணவர்களும் அதை அவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே புகட்டி வளர்த்த பெற்றோர்களையும் கண்கூடாகவே இச் சமூகத்தில் காண்கிறோம்.

(இங்கே சுயபுலம்பலுடன் ஓர் இடைச் செருகல். ஏன் இப்படியான காட்டுமிராண்டிகளின்  நிலப்பிரதேசத்தில் -கவனிக்க தேசம் அல்ல- பிறந்தோம் என்று என்னைப் பற்றி நானே பல முறை சலித்துக் கொண்டிருக்கிறேன். என் கனவு அமெரிக்கா அல்ல. தனி மனிதனின் நுண்ணுணர்வுகளுக்கும் விருப்பத்திற்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் எங்கே அதிகபட்ச மரியாதையும் அனுமதியும் அளிக்கப்படுகிறதோ அடிப்படையான நாகரிகத்துடன் நேயத்துடன் மனிதர்கள் எங்கே புழங்குகிறார்களோ அதுவே நான் வாழ விரும்புகிற நிலப்பிரதேசமாக இருக்கும். அந்த மாதிரியான மனிதர்களின் இடையில்தான் இருக்க விரும்புகிறேன். அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி. பிரான்சாக இருந்தாலும் சரி. பைத்தியக்காரர்களின் கூடாரத்தில் தங்கி அனுபவிக்கிற மன சித்திரவதை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டுதானிருக்கிறது).

உயர்நடுத்தர வர்க்கத்தினரின் இந்தப் போக்கு படத்தின் பல காட்சிகளில் சூசகமாக கிண்டலடிக்கப்பட்டிருக்கின்றன. 'புஷ்ஷை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொள்ளக்கூடாது' என்பது தேர்வுக்கான வழிகாட்டுதலில் ஒரு விதியாக சொல்லப்படுகிறது. அமெரிக்கர்களின் வசதிக்காக நம்முடைய நேரத்தையும், அடையாளத்தையும், உச்சரிப்பையும், பெயரையும் பொருளாதாரக் காரணங்களுக்காக மாற்றிக் கொண்டிய அவலம் இந்தத் திரைப்படத்தில் கிண்டலடிக்கப்படுகிறது. இந்த அவலத்தை உணராமல் அதை ஓர் அந்தஸ்தாகவே பாவித்துக் கொள்கிற படித்த முட்டாள்களை காணும் போது சுயத்தை வளர்க்காமல் ஆட்டு மந்தைகளை உருவாக்குகிற நம் கல்வித்துறையின் போக்கையும நம் மலட்டுத்தனமான சமூக வார்ப்பையும்தான் குறை சொல்லத் தோன்றுகிறது.

படத்தின் சில சுவாரசியமான காட்சிகள்:

தூதரகத்தில் பழைய அமெரிக்க அதிபர்களின் புகைப்படங்களுக்கு இடையில் நடிகர் தர்மேந்திராவின் படமும் தொங்குகிறது. அதன் பிரேம் சேதமடைந்து பழுது பார்ப்பதற்காக சென்ற போது எப்படியோ இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது. ஆனால் அதற்கு மாற்றாக அங்கிருக்க வேண்டிய புகைப்படம் பற்றிய (சீனியர் புஷ்) தகவல் ஒருவருக்கும் தெரியவி்ல்லை. கடைசியில் தூதரக அதிகாரி, கூகுளில் இதைப் பற்றி தேடுமாறு உததரவிடுகிறார்.

பங்குச் சந்தை வணிகன் பணத்தாசையின் மூலம் PR நிறுவன உதவியாளினியை மடக்கி விடுகிறான். (ஆனால் அவளோ தன் பெண் உயரதிகாரியின் குறிப்பின்படி அவனைச் சிக்க வைக்க இந்த நாடகத்திற்கு உடன்படுகிறாள்). நிறுவன தலைவி, அந்த அறைக்குள் செல்ல வணிகன் நின்று கொண்டும் உதவியாளினி  அவனுக்கு ப்ளோ - ஜாப் செய்யும் நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறாள். வணிகன் இவளைக் கண்டு அதிர்ச்சியுடன் 'நீங்கள் நினைப்பது போல இல்லை' என்று திரும்புகிறான். பணக்கற்றையொன்று அவனின் ஆண் குறி போலவே நீண்டு தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆண் தன் குறியின் மூலம் செலுத்தும் அதிகாரம் போல பணமும் ஓர் அதிகாரமாக திகழ்கிறது என்பதை (உண்மையாகவே) ஒரு குறியீட்டுக் காட்சியாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர்.

அனுபவ் பால் எழுதின நாடகத்தை குணால் ராய் கபூர் வெற்றிகரமான நாடகமாக பல முறை இயக்கியிருக்கிறார். அதுவே அவரின் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்திருக்கிறது. இதைத் தவிர இவர் வேறெந்த திரைப்படத்தையும் உருவாக்கியதாகத தெரியவில்லை. இருந்தால் அதை காண விரும்புகிறேன். நாவலாசிரியையாக கொன்கனா சென் நடித்திருக்கிறார். புஷ் சம்பந்தப்பட்ட நிஜ வீடியோ காட்சிகள் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டிருக்கின்றன. நகைச்சுவைப் படம் என்பதற்காக தரத்தில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் பின்னணி களங்கள் அதிநம்பகத்தன்மையுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரே கட்டிடத்தினுள் படம் இயங்குவதால் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான பின்னணியும் காட்சிகளும் வருவது சற்று சலிப்பை ஏற்படுத்தினாலும் திரைக்தையின் சுவாரசியம் அக்குறையைப் போக்குகிறது. மேலும் இது ஏற்கெனவே பல முறை மேடை கண்ட நாடகத்தின் நீட்சி என்பதால் இதை உணர்ந்து கொள்ள முடிகிறது. நிஜ சம்பவங்களை கற்பனை பாத்திரங்களுடன் இணைத்து உண்மையானது போலவே நிகழ்த்தும் Mockumentary வகையைச் சார்ந்தது இத்திரைப்படம்.

அமெரிக்க கனவுடன் இயங்கிக் கொண்டிருப்பவர்களும் கனவை நிறைவேற்றிக் கொண்ட ஆனால் அதிலுள்ள வெற்றிடத்தின் போதாமையை விரக்தியுடன் அனுபவித்துக் கொண்டு வெளிப்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களும் குறிப்பாக காண வேண்டிய திரைப்படமிது.

suresh kannan

Friday, November 05, 2010

கு.ப.ரா - விடியுமா - நான்


முதலில் இந்தச் சிறுகதையை வாசித்து விட்டு பின்னர் இந்தப் பதிவை தொடர்வதுதான் சரியாக இருக்கும்.

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது இது. ஏதோ ஒரு நாவலை வாசித்துக் கொண்டிருந்தேன். மனதுக்கு இதமான சூடான தேநீர் கிடைத்தால் கூட புத்தகத்திலிருந்து கண்ணை விலக்க முடியாமல் அருந்திக் கொண்டே வாசிப்போம் அல்லவா, அப்படியான சுவாரசியம். வெளியே சென்றிருந்த என் அப்பா இன்னும் திரும்பவில்லை என்று இடையில்தான் லேசாக உறைத்தது.

அதற்கு சில நாட்களுக்கு முன்புதான் ஒரு கைரிக்ஷாக்காரர், கவனக்குறைவாக என் அப்பாவை இடித்து தள்ளி அவர் கீழே விழுந்து தலையில் அடிபட்டு ரத்தம் வந்து சாலையில் போவோர் ஓரமாக அமர வைத்து முதலுதவி மாதிரி செய்து அனுப்பியிருந்தார்கள். நாங்கள் ஏதோ ஒரு சிறு காயம் என்பது மாதிரி நினைத்துக் கொண்டிருந்தோம். அந்தக் காயம்தான் சில நாட்களுக்குப் பின்னர் நிகழ்ந்த அவரது மரணத்திற்கு காரணமாயிருக்கப் போகிறது என்பது எங்களுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. தலையில் அடிபட்ட காரணத்தினால் மூளை நரம்பில் ரத்தம் உறைந்து கடைசியில் சுயநினைவிற்கு வர முடியாமலே இறந்து போனார்.

சரி. இப்போது நான் நாவல் வாசித்துக் கொண்டிருந்த கணத்திற்கு திரும்புவோம். சில நாட்களுக்கு முன்புதான் அவர் தலையில் அடிபட்டுக் கொண்டு திரும்பியதால் நாங்கள் அவர் வெளியில் செல்வதற்கு தடை விதித்திருந்தோம். 'என்ன வேண்டுமோ சொல்லுங்கள். நாங்கள் கொண்டு வந்து சேர்ப்பிக்கிறோம்'. ஆனால் எல்லாவற்றையும் அப்படி கொண்டு வந்து சேர்க்க முடியாததோடு வயதானவர்களின் சில பிரத்யேக பழக்கங்களை நிறுத்துவது அத்தனை சுலபமல்ல.

ஆனால் வீட்டில் நான் மாத்திரமே இருந்த சமயத்தில் 'இதோ 10 நிமிடத்தில் வந்து விடுகிறேன்' என்று சொல்லிச் சென்றவர், இன்னும் திரும்பவில்லையே என்பது என் நினைவின் ஓரத்தில் நெருடிக் கொண்டேயிருந்தது. ஆனால் நாவல் வாசிக்கும் சுவாரசியத்திலிருந்தும் நான் விலக விரும்பவில்லை. சிறிது வாசிப்பேன். 'ஏன் இன்னும் இவர் வரவில்லை' என்று சில விநாடிகள் யோசிப்பேன். திரும்பவும் எரிச்சலுடன் வாசிப்பிற்குத் திரும்புவேன். நேரம் ஆக ஆக ஒருபுறம் மன அழுத்தம் கூடிக் கொண்டிருந்தேயிருந்தது. ஒரு நாவலை நிம்மதியாக வாசிக்க முடியவில்லையே என்கிற கோபமும். "ஏன் இப்படி உயிரை வாங்குகிறார்' என்று சலிப்பும் ஒரு சேர எழுந்தது.

தெருமுனை வரை சென்று பார்த்து வரலாம்தான். ஆனால் அவர் எந்தக் கணமும் திரும்பிவிடலாம். எனில் நான் சென்று பார்ப்பது வீண்தானே' என்கிற எண்ணமும். நாவலின் சுவாரசியமும் என்னை தடுத்துக் கொண்டிருந்தன. ஒருநிலையில் அதைத் தொடர முடியாமல் புத்தகத்தை மூடி வைத்து விட்டேன். அவருக்கு ஏதாவது நிகழ்ந்திருக்குமோ என்கிற அச்சம் மெல்ல உள்ளுக்குள் படரத் துவங்கியது. அதையும் விட 'ஏன் அவரை வெளியே போக விட்டாய்' என்று மற்றவர்கள் கேட்கப் போகும் கேள்விகள் கற்பனை பிரம்மாண்டத்துடன் என்னுள் நின்றன். மற்றொரு புறம் 'இதோ சற்று நேரத்தில் திரும்பி வந்துவிடப் போகிறார்'. அதற்கு ஏன் இத்தனை பதட்டப்படுகிறாய்' என்று மனதின் இன்னொரு புறம் ஆறுதல்படுத்தியது. இரண்டு முனைகளுக்கு இடையில் நின்று தவித்துக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான் குரூரமான அந்த சிந்தனை உள்ளுக்குள் ஓடியது. யாராவது வந்து 'ஏம்ப்பா..உங்க அப்பா கீழே விழுந்து மூச்சு பேச்சில்லாம கிடக்கறாரு' என்று சொன்னால் கூட அந்த நேரத்தின் மன அவஸ்தை ஒரு முடிவுக்கு வந்து அதன் மூலம் ஓர் ஆசுவாசம் ஏற்படும் போல் தோன்றியது. இப்படி குருரமாக நினைத்துக் கொண்டதற்காக என்னையே நான் கடிந்து கொண்டாலும் பெரும்பாலான சமயங்களில் நம் மனம் கெடுதல் நிகழ்வற்றையே பெரிதும் விரும்புகிறது என்பதை உணர்கிறேன்.

வேகமாக வரும் ஒரு வாகனத்தையும் எதிரே பைக்கில் வரும் ஹீரோவையும் மாற்றி மாற்றி காட்டும் ஒரு  காட்சியில் நிச்சயம் அந்த விபத்து நிகழும் / நிகழ வேண்டும் என்று உள்ளுக்குள் நாம் விரும்புகிறோம். மேலுக்குள் நாம் 'உச்' கொட்டினாலும் குருதியில் நனைந்து சிதைந்த உடலை வேடிக்கை பார்க்கவே நம் குரூர மனம் அப்போது விரும்புகிறது.

ஆகவே.. அப்படியே என் அப்பாவிற்கும் ஏதேனும் நிகழ்ந்து தகவல் வந்தால் கூட அப்போதைய என் மனதவிப்பு ஒரு முடிவுக்கு வருவதுதான் அந்தக் கணத்தில் எனக்கு பெரிய விஷயமாய் தெரிந்தது.

என் மனைவி அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த நாட்களில் கூட அவள் வழக்கமாக வரும் நேரத்திற்கு சில நிமிடங்கள் தாண்டினால் கூட 'டிராபிக் ஜாம். அதனால்தான் தாமதம்' என்று ஒரு எண்ணமும் லாரி மோதி அவள் குருதிக்கறைகளுடன் சாலையில் விழுந்து,  சூழ்ந்து நின்று பதட்டம் மாத்திரமே அடைந்து கொண்டிருக்கிற ஜனங்களுமான காட்சி மற்றொரு புறமும் விரியும். இப்படியே தொடர்ந்து கொண்டிருக்கும் மன அழுத்தம், அவளின் பிரத்யேக செருப்புச் சத்தத்தை கேட்டவுடன் சட்டென்று இறங்கி உள்ளுக்குள் ஏற்படும் ஆசுவாசத்தை வார்த்தைகளில் வைக்க முடியாது. ஆனால் இத்தனை நேரமும் அவளுக்காய் கவலைப்பட்டுக் கொண்டிருந்தவன், அவள் உள்ளே நுழைந்தவுடன் பரிவாய் விசாரிக்காமல் இதுவரை எனக்கு பதட்டத்தை தந்ததின் காரணமாகவே, அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மனமில்லாமல், வேறு ஏதாவது காரணத்திற்காக சண்டை போட்ட விசித்திரத்தை என்னாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. .

ஒரு வழியாக என் தந்தை சாவகாசமாக திரும்பி வந்தார். மகா எரிச்சலுடன் 'எங்கப்பா போயிருந்தே' என்றேன். வயதானவர்களுக்குரிய பிரத்யேக குழந்தைச் சிரிப்போடு உப்புப் பெறாத ஒரு காரணத்தைச் சொன்னார். அப்போதைக்கு அது என் எரிச்சலை அதிகப்படுத்தினாலும் சிறிது நேரம் கழித்து எனக்குமே அது சிரிப்பை ஏற்படுத்தியது.

சில நாட்கள் கழித்து  இந்த நிகழ்வைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த போது, நான் அடைந்த பதட்டத்தைப் பற்றியும் அதன் தொடர்ச்சியாக எழுந்த குருர எண்ணத்தையும் அது தந்த ஆசுவாசத்தையும் வைத்து ஒரு சிறுகதை எழுதினால் என்ன தோன்றிற்று. 'எதைக் கண்டாலும் யாரைக் கண்டாலும்' அதில் சிறுகதையைத் தேடிக் கொண்டு திரிந்த பித்துப் பிடித்திருந்த நாட்கள் அவை. சிறிது சிறிதாக மனத்திலேயே அதை எழுதிப் பார்த்துக் கொண்டிருந்தேன். வரிகளை மாற்றியும் அடித்தும் திருத்தியும் கணினியில் கூட செய்ய முடியாத அற்புதம் அது.

அதற்குப் பிறகுதான் இன்னொரு சந்தர்ப்பத்தில் கு.ப.ரா - வின் இந்தச் சிறுகதையை வாசிக்க நேர்ந்தது. அப்படியே தூக்கி வாரிப் போட்டது. கிட்டத்தட்ட நான் கைப்பற்ற முயன்றிருந்த அந்த உணர்வை அதிலாவகத்துடன் ஒருவன் ஏற்கெனவே எழுதி வைத்திருக்கிறானே என்கிற ஆச்சரியமும், இனிமேலும் என்னால் எப்படி இதை எழுத முடியும் என்கிற ஏமாற்றமு்ம் ஒருசேர எழுந்தன. மனதில் உருவாகிக் கொண்டிருந்த கதையை அப்படியே அழித்து வீசினேன்.

அப்படி செய்திருக்கக்கூடாது என்று இப்போது தோன்றினாலும் அப்போதைக்கு 'நான் செய்தது சரி' என்பதாகத்தான் இருந்தது. ஒருவேளை நான் எழுதியிருந்தாலும் அதை கு.ப.ராவின் கதையோடு தொடர்புப்படுத்தி 'அங்கேயிருந்து உருவிட்டாம்பா' என்று யாராவது சொல்லி விடுவார்களோ என்கிற கற்பனை அச்சம்தான் பிரதானமாக இருந்தது.

இன்றும் கூட எந்தவொரு உருவாக்கமும் நான் முன்னர் வாசித்திருந்த /கண்டிருந்த உருவாக்கத்தை நினைவுப்படுத்தினால் உடனே வாய் கூசாமல் 'காப்பியடிச்சுடாங்கடோய்' என்று கூவ விரும்புவதை சிரமத்துடன் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு மேற்சொன்ன சுயஅனுபவமே காரணமாய் அமைகிறது.


suresh kannan

Wednesday, November 03, 2010

சப்தங்களின் வன்புணர்ச்சி


'கடைசியாக எப்போது மெளனத்தை நீங்கள் கேட்டீர்கள்?' என்றொரு ஆங்கிலக் கட்டுரையை சமீபத்தில் வாசித்தேன். யோசித்துப் பார்க்கிறேன். ஆம். நாம் சப்தங்களின் இடையில்தான் தொடர்ந்து ஆனால் அது குறித்த பிரக்ஞையே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

காலையில் எழுந்தவுடனேயே வானொலியில் பண்பலை தொணதொணா. அல்லது தொலைக்காட்சியில் பொய்களுக்கும் உண்மைகளுக்கும் இடையில் ஊசலாடும் செய்திகள். அலுவலகத்திற்கு கிளம்பும் போது திரையிசைப்பாடல்கள். வெளியில் வந்தவுடன் மனிதர்கள் இணைந்து எழுப்பும் நாராச சப்தங்கள். அலுவலத்தில் தொலைபேசியில் ஓயாத பொய்கள். கைபேசி மாய்மாலங்கள். விதவித ரிங்டோன்கள். மாலை வீடு திரும்பும் போதும் ஹெட்போன் சனியன்கள். சர்க்கரை நோய், பி.எப் கடன் வட்டி, ஹவுசிங் லோன், லெளதீக கவலைகள், பிரபுதேவா -நயனதாரா வம்புகள், இலக்கில்லாத அபத்த உரையாடல்கள், மறுபடியும் கைபேசி. வீட்டுக்குள் நுழைந்தவுடன் சீரியல் அழுகைகள், குழந்தைகளின் வீறிடல்கள், அக்கம் பக்க அல்லது சொந்த வீட்டு சண்டைகள், எரிச்சலில் வெளிப்படும் வன்மங்கள், வார்த்தைகள். உப்புப் பெறாத அல்லது ரசத்தில் உப்புப் போடாத விஷயங்களுக்காக மீண்டும் சண்டை. அந்த எரிச்சலிலேயே குப்புறப்படுத்து பண்பலை தொணாதொணா. தூக்கம்...

மீண்டும் காலையில் செல்போன் அலாரத்தின் ஒலியோடு விழிப்பு...

எப்போது நாம் சில நிமிடங்களையாவது பரிபூர்ண அமைதியுடன் கழித்திருக்கிறோம்?

இருந்திருக்கவே இருந்திருக்காது. மின்தடையினால் ஏற்படும் தற்காலிக அமைதி கூட நம்முள் பதட்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. குறைந்த பட்சம் பாட்டரி ரேடியோ கொண்டாவது சப்தத்தை ஏற்படுத்தி அந்தப் பதட்டத்தை தணித்துக் கொள்ளும் முயற்சியில்தான் நாம் ஈடுபடுகிறோம்.

இதோ தீபாவளி வரப்போகிறது. ஊரே பட்டாசும் தித்திப்புமாக மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் போது நான் மாத்திரம் கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பண்டிகையை கலக்கத்துடன் கடந்து கொண்டிருக்கிறேன். விநோதமாக இருக்கிறதல்லவா?

சிறுவயதிலிருந்தே எனக்கு அதிகம் பிடித்த விஷயங்களுள் பிரதானமானது. தனிமை. "பூனை மாதிரிடா நீ' என்று அடிக்கடி சொல்வாள் என் அம்மா. வீட்டுக்கு வரும் உறவினர் கூட எப்போது கிளம்பிப் போவார்கள் என்றே சங்கடத்துடன் காத்திருப்பேன். தனிமையில்தான் நான் நானாக, யதார்த்த வாழ்வின் போலித்தனங்களின் கட்டாயங்கள் அற்ற அகவயமான நிர்வாணத்துடன் இயங்க முடிகிறது.

மறுபுறம், பிடிக்காத விஷயங்களில் தலையாயது சப்தம். ஆடி மாத 'செல்லாத்தாக்களின்" மெகா ஸ்பீக்கர் அலறல்கள், தாலாட்டு போல் மிருதுவாக ஒலித்துக் கொண்டிருந்த ஆனால் சமீபங்களில் பீதியை கிளப்புகிற மசூதியின் பாங்கொலி, யாரையோ உரக்க காறித்துப்புகிற தொனியில் ஒலிக்கிற 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' என்று அலட்டும் தொலைக்காட்சிகள், ஓலைப்பாய் ஒண்ணுக்கு பாணியில் மூச்சுவிடாமல் பேசி உயிரை வாங்குகிற பண்பலை வானொலி்க்கள், இரண்டு அடி தள்ளி அமர்ந்திருக்கிற மகனிடம் பழங்காலத்தில் எஸ்டிடி பேசுகிற டெசிபலில் ஹோம்ஒர்க் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்துகிற அம்மாக்களின் அலறல்கள், 'மார் மேல கை வெய்டா' என்பதை வேறு வேறு மறைமுக வார்த்தைகளில் அலறும் குத்துப்பாடல்கள்,  செல்பேசி தேவையே அன்றி இங்கிருந்து பேசினாலே எதிர்முனையிலிருப்பவருக்கு ஒருவேளை கேட்கலாம் என்கிற ரீதியில் உரக்க கத்தி உயிரை வாங்கும்  கனவான்கள்,

இது போதாதென்று 'இங்கே வாங்களேன். உங்க காதுல ஒரு ரகசியம் சொல்லணும்' என்று அன்பொழுக கூப்பிட்டு காதருகில் ரயில் இன்ஜின் போல 'கூ.... வென்று' கத்தி விட்டு பின்பு சிரிக்கும் வாண்டுகள்.

சற்று மிகைப்படுத்துகிறேனோ என்று கூட உங்களுக்குத் தோன்றலாம். சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் இந்த 'உரத்த சிந்தனையை' (?!) நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்.

சரி. தீபாவளி மேட்டருக்கு திரும்புகிறேன்.

நான் வசிக்கும் அபார்ட்மெண்ட் கட்டிடம், சுவர்கள் இருப்பது போன்ற பாவனையில் உருவாக்கப்பட்டது. கீழ்தளத்தில் இருப்பவர் மனைவி மீதிருக்கிற கோபத்தில் வீட்டுக் கதவை டமால் என்று சாத்தி விட்டு வெளியே கிளம்பும் போது அதன் எதிரொலியாக மூன்றாவது மாடியில் இருக்கும் என்னுடைய மேஜை அதிர்ந்து நான் அருந்த காத்திருக்கும் காப்பி டம்ளர் சலனமடைந்து புவியீர்ப்பை இச்சையுடன் காதலிக்கும். இதனாலேயே கீழ்வீட்டுக்காரர் போன்ற நிலைமை எனக்கும் ஏற்பட்டு 'காலைல எத்தனை தடவை காஃபி போடறது?" என்று மனைவி என்னிடமும் சண்டை போடலாம். கேயாஸ் தியரி.

கீழே பார்க்கிங்கில் எவரோ இருவர் சாதாரணமாக உரையாடிக் கொண்டிருப்பதை 'டால்ஃபி' எபெக்டில் மேலே என் வீட்டில் தெளிவாக கேட்க முடியும். ரகசியம் என்கிற சமாச்சாரத்தை யாரும் பேணிக்காக்கவே முடியாது. வீக்கிலீக்ஸ் தேவையெல்லாம் இல்லாமல் அந்தக்  கணமே விஷயம் லீக்காகி விடும். இந்த நிலையில் தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே வெடிக்க ஆரம்பித்து விடும் வெடிகள், ஏதோ இரண்டாம் உலகப் போர்ச்சூழலின் இடையே பதுங்குதளத்தில் படுத்துக் கிடக்கிற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது.

முன்பெல்லாம் எங்களுக்கு தீபாவளிக்கு 'பொட்டுப் பட்டாசு' மட்டுமே வாங்கித் தருவார்கள். ரசத்திற்கு இஞ்சி,பூண்டு நசுக்குகிற ரேஞ்சில் அதை தரையில் வைத்து ஒவ்வொன்றாக வெடிக்கும் அற்ப சப்தங்களோடு எங்கள் தீபாவளி கழிந்து விடும். அப்போதைய உயர்பட்ச சப்தமே 'லஷ்மி வெடிதான்'.

ஆனால் இப்போதோ ஆண்டுக்கு ஆண்டு சூழலை மாசுபடுத்துவதோடு காதுகளையும் காயப்படுத்தும் வெடிகளின் டெசிபல் அளவுகள் உயர்ந்து கொண்டே போகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசோ, சுற்றுச்சூழல் துறையோ, பட்டாசுகளுக்கு அனுமதி தருகிற அரசு அதிகாரிகளோ கவனிப்பதாய்த் தெரியவில்லை. ஒவ்வொரு அதிர்விற்கும் உயிர் போய்த் திரும்புகிறது. தொடர்ந்து இதைக் கேட்பதில் பைத்தியம் கூட பிடித்து விடலாம் என்கிற நிலைமையில் தவி்க்கிறேன். மற்றவர்கள் எவரும் இந்த பிரக்ஞைகளின் தொல்லைகள் இல்லாமல் இயல்பாய் இயங்குவதை ஆச்சரியத்துடன் கவனிக்கும் போது 'நான்தான் ரொம்பவும் அலட்டிக் கொள்கிறேனோ' என்று என் மீதே கோபமாய் வருகிறது.

இத்தனைக்கும் இந்த வெடிகளுக்காக சிறுவயதுகளில் நாயாய் பேயாய் அலைந்திருக்கிறேன். முன்னரே சொன்னது போல் 'பொட்டுப் பட்டாசை' தவிர வேறெதுவும் வீட்டில் வாங்கித்தர மாட்டார்கள். போதாமை. மற்றவர்கள் உற்சாகமாய் சரவெடிப்பதை ஆற்றாமையுடன் பார்த்துக் கொண்டிருப்போம். என் வயதையொத்த சிறுவர்கள் மறுநாள் விடிகாலையிலேயே கிளம்பி தெருவெங்கும் கிடக்கிற வெடிக்காத வெடிகளை தேடி பொறுக்கிக் கொண்டு வருவோம். திரியில்லாத வெடிகளை பிய்த்துப் போட்டு உள்ளேயிருக்கும் கருமருந்துகளை மொத்தமாக சேகரித்து கொளுத்தி அது நெருப்பாய் பொங்கி வருவதைக் காண ஓர் ஆனந்தம்.

ஆனால் இப்போது பத்தாயிரம் சரவெடியை வெடிப்பதற்கான வசதியிருந்தும் சுத்தமாக அதன் மீது ஆர்வமே போய் மாறாக ஓர் ஒவ்வாமையே ஏற்பட்டுவிட்டது. குழந்தைகளுக்காக வாங்கித் தரும் வெடிகளையும் அவர்களின் பயம் காரணமாக நாமே வெடிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு வெடியையும் வெடித்து முடித்தவுடன் அதில் ஏற்படும் சப்தம் மூர்க்கமான வன்முறையாக நம்முள் தொற்றிக் கொண்டு 'இன்னும் இன்னும்' என தீனி கேட்பதை கவனித்திருக்கிறேன். யாரையாவது நாம் தாக்கும் போது இன்னும் இன்னும் என நம்முள்ளிருக்கிற மூர்க்கம் உற்சாகத்துடன் குரல் கொடுப்பதற்கு இணையானதாக பட்டாசு வெடிப்பதும் அமைந்திருக்கிறது. எனவேதான் பல ஆயிரங்களுக்குக் கூட ஒரு குடும்பம் பட்டாசிற்கு செலவழிப்பது நிகழ்கிறதா என்பது ஆய்வுக்குரியது.

இந்தக் கொடுமைகளிலிருந்து தப்பிக்க தீபாவளி நாட்களில் வேறு எங்காவது சென்று விடலாம் என்று திட்டமிட்டாலும் 'நல்ல நாள்ல கூட வீடு தங்க மாட்டீங்களா' என்று இல்லாள் எறிகிற அணுகுண்டுவிற்கு இவையே தேவலாம் என்றாகி விடும். இந்த தீபாவளிக்கு ஒரே ஒரு நாள்தான் அலுவலக விடுமுறை என்பதே வழக்கமாக விடுமுறைகளை உற்சாகத்துடன் எதிர்பார்க்கும் எனக்கு ஆறுதலளிப்பதாக இருக்கிறது.

காதில் பஞ்சை அடைத்துக் கொள்ளலாம் என்கிற தத்துப்பித்து ஆலோசனைகளைத் தவிர இந்த தீபாவளியை ஒலி ஆபத்திலிருந்து எவ்வாறு தப்பித்து கடப்பது என்பதற்கான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. இந்த பிரபஞ்சத்தில் என்னைப் போன்றே இதே மாதிரியான விநோதப்பிரச்சினையில் அவதிப்படும் சக ஜீவிகளும் இருக்கலாம். அவர்களின் தோழமையான குரல்கள் என்னை ஆறுதல்படுத்தும் என்கிற நம்பிக்கையில் இந்தப் பதிவை உங்கள் முன் வைக்கிறேன்.

நினைவு தெரிந்த நாளிலிருந்தே சம்பிதாயமான கணங்களைத் தவிர யாருக்கும் தீபாவளி வாழ்த்தெல்லாம் சொல்லி வழக்கமில்லை. எனவே...

ஒளிரட்டும் ஒலியில்லா தீபாவளி  :-)

suresh kannan

Tuesday, November 02, 2010

ராஜாவின் பரிசோதனைப் பாடல்

கடந்த சில நாட்களாக இளையராஜாவின் தேர்ந்தெடுத்த பாடல்களை மாத்திரமே கேட்டுக் கொண்டிருக்கிறேன். கவனிக்கவும், தேர்ந்தெடுத்த பாடல்கள். ஏனெனில் ராஜாவின் பாடல்களிலேயே பல மொக்கையான பாடல்களும் உள்ளன. உதாரணம் தரவேண்டுமெனில் மறுபடியும் அவைகளை கேட்கும் தொந்தரவிற்கு ஆளாக வேண்டும். ஆனால் அப்படியும் தீர்மானமாக சொல்லி விட முடியாது. ஹிட் ஆகாத காரணத்தினாலேயே நான் சரியாக கவனிக்காத பல ரத்தினங்களும் உண்டு. சமீபத்தில் மறைந்த திரையிசைப்பாடகி சுவர்ணலதா குறித்து சொல்வனத்தில் நண்பர் சுகா எழுதியிருக்கும் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் பல பாடல்களில் குரு சிஷ்யனில் வரும் 'உத்தமபுத்திரி நானு'-ம் ஒன்று. எப்படி இந்த அற்புதத்தை தவறவிட்டேன் என்று தெரியவில்லை.

மற்ற மொழிகளில் சிறப்பாக உபயோகித்த மெட்டுக்களை ராஜா தமிழில் சிதைத்ததற்கான உதாரணங்களும் உண்டு. பாலுமகேந்திராவின் மலையாளத்திரைப்படான 'ஓலங்கள்' -ல் 'தும்பே வா' என்றொரு அருமையான பாடல் உண்டு. நான் எந்தவொரு மன உளைச்சலிலும் எரிச்சலிலும் இருந்தாலும் இந்தப் பாடலை கேட்கும் போதே, யாரோ என் ஆன்மாவை ஆதரவாகத் தடவிக் கொடுக்கும் உணர்வில் அத்தனையும் வடிந்து விடும். ஆனால் இதையே தமிழில் கொண்டு வரும் போது  சங்கத்தில் பாடாத கவிதை (ஆட்டோ ராஜா) என்று ரோஜா பூவை பிய்த்துப் போட்டது போல் போட்டார்.

சரி. விஷயத்திற்கு வருவோம்.

ராஜா தன் திரையிசை உருவாக்கங்களில் பல பரிசோதனை முயற்சிகள் செய்து பார்த்ததை நாமறிவோம். ராஜாவின் தீவிரமான ரசிகர்களும் இசை ஆர்வலர்களும் இதைப் பற்றி பக்கம் பக்கமாக இணையத்தில் எழுதியிருக்கிறார்கள்; எழுதிக் கொண்டிருக்கிறார்கள் ; எழுதுவார்கள்.

இசை பற்றிய எந்தவிதமான பயிற்சியற்ற நான், சிலவற்றை தொடர்ச்சியாக கேட்ட போது இந்தப் பாடலிலிருந்த வித்தியாசத்தை கண்டேன். இதை எத்தனையோ முறை முன்பு கேட்டிருந்த போதும் இதிலுள்ள வித்தியாசம் இப்போதுதான் எனக்கு உறைத்தது. இயக்குநர் பாசில் உருவாக்கத்தில் பிரபு,ரேவதி நடித்து வெளிவந்த 'அரங்கேற்ற வேளை'. ஏதோவொரு மலையாளத் திரைப்படத்தின் ரீமேக் என்று நினைக்கிறேன். படம் நெடுக வரும் மெலிதான ஹ்யூமருக்காகவே இதை பல முறை பார்த்துள்ளேன். (சமயங்களில் இந்த மொக்கைப் படத்தை இத்தனை ரசிக்கிறோமே என்று எனக்கே நெருடலாக இருக்கும்). ரேவதியின் சிறப்பான நடிப்பில் இந்தப்படம் அவருக்கொரு மைல்கல் என்று கூட சொல்லலாம்.

இந்தப் படத்தின் ஆகச்சிறந்ததாக கருதப்பட்டு புகழ்பெற்றது 'ஆகாய வெண்ணிலாவே'. அருமையான மெலடி. விகேராமசாமி வைத்திருக்கும் பழைய நாடக செட்டு பிரார்ப்பட்டிகளின் பி்ன்னணியில் பிரபு -ரேவதியின் டூயட். இதில் பிரபுவின் நடன அசைவுகள் சற்றே விநோதமாகவும் ஸ்டைலிஷாகவும் தெரிவது எனக்கு மாத்திரம்தானா?

 

சரி. நான் எழுத வந்தது இந்தப் பாடலை பற்றி அல்ல.

தாயறியாத தாமரையே
தந்தையின் நிழலில் வாழ்ந்தாயே

யார் பறித்தாரோ, யார் அறிவாரோ
எடுத்தவர் மீண்டும் கொடுப்பாரோ


குழலின் வருடலோடு மனோவின் குரலில் மிக அருமையாக மெல்லிசையுடன் துவங்கும் இந்தப் பாடல், பல்லவிக்குப் பிறகு சட்டென்று தடம் மாறி வேகமான தாளயிசைக்கு மாறும். மீண்டும் பல்லவியில் மெல்லிசைக்கு திரும்பும். இப்படி பல்லவியிலும் சரணத்திலும் வெவ்வேறு தாளஇசையைக் கொண்ட பாடல் தமிழ்த் திரையில் எதுவும் இருக்கிறதா என்று தெரியவில்லை. வேறெதுவும் சட்டென்று நினைவுக்கும் வரவில்லை. அவ்வகையில் இதுவொரு தனித்தன்மையுடன் கொண்ட பொதுவாக அதிக கவனத்திற்கு வராத பாடல் என்று நினைக்கிறேன்.

பொதுவாக வேகமான தாளயிசையைக் கொண்டு பாடலை உருவாக்க விரும்பும் இசையமைப்பாளர்கள் அதற்கு முரணாக முதலில் மிக மெதுவான மிருதுவான இசையைத் துவங்குவார்கள். அப்போதுதான் சில நொடிகள் கழித்து வரப்போகும் வேகமான தாளயிசை அதிக அழுத்தத்துடன் கேட்பவர்களைக் கவரும். ஆனால் இப்படி பல்லவியிலும் சரணத்திலுமாக வித்தியாசப்பட்டதில்லை.

கதையின் போக்கிற்கு ஏற்ப இயக்குநர் பாசிலின் விவரிப்பின் படி ராஜா இதை உருவாக்கியிருப்பார் என்று யூகிக்கிறேன். ஏனேனில் காட்சிச் சூழலுடன் அத்தனை அருமையாக இந்தப் பாடல் பொருந்திப் போகும்.

அருமையான பாடல். கேட்டுப் பாருங்கள்.

suresh kannan

Monday, November 01, 2010

புதிய பாதை


சேகரிப்புகளின் அடுக்குகளில் வேறு எதையோ எதையோ தேடிக் கொண்டிருந்த போது, ராஜ் வீடியோ விஷனில் வாங்கின திரைப்படமொன்று நீண்ட நாட்களாக பிரிக்கப்படாமலேயே இருந்ததை கண்டேன். (ராஜ் வீடியோ விஷனில் பாலுமகேந்திராவின் வீடு, ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்" போன்ற திரைப்படங்கள் கிடைக்கின்றன என்பது ஒரு தகவலுக்காக இங்கே). குறைந்த பட்சம் பிரித்து்க்கூட பார்க்கப்படாமலேயே வைத்துக் கொண்டிருக்கப்படும் புத்தகம், என்னைப் பொறுத்தவரை கொலைக்குற்றத்திற்குச் சமம். பிரிக்கப்படாமல் வைத்திருந்த அந்த திரைப்படம் பார்த்திபனின் இயக்கத்தில் முதல் திரைப்படமான 'புதிய பாதை'.

அரங்கத்திலும் தொலைக்காட்சிகளிலும் இதை சிலபல முறை ஏற்கெனவே பார்த்திருந்தாலும், இம்மாதிரியான படங்களை ஒர் அவதானிப்பிற்காக என்னுடைய சேகரங்களில் இணைத்துக் கொள்வது வழக்கம். தமிழ் சினிமாவின் பொதுவான வணிக நோக்கையொட்டி, இத்திரைப்படத்தின் திரைக்கதை மிகக் கச்சிதமான வடிவத்தில் அமைந்திருக்கிறது என்பது என் அவதானிப்பு. 1989-ல் வெளிவந்த இத்திரைப்படம், மாநில அளவில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது.

ஏதோவொரு பண்டிகை நாளில் இத்திரைப்படம் வெளியான முதல் நாளன்றே திரையரங்கில் (சென்னை தண்டையார் பேட்டையிலுள்ள பாண்டியன் திரையரங்கம்) இதைப் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. உண்மையில் அப்போது நான் பார்க்கத் திட்டமிட்டிருந்தது வேறொரு படத்திற்கு. அதற்கு அனுமதிச்சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காக சுமாரான கூட்டமேயிருந்த இத்திரைப்படத்திற்கு எவ்வித முன்தீர்மானமும் இல்லாமல் சென்றேன். பார்த்திபன் என்ற நடிகர், இயக்குநரைப் பற்றி யாருக்குமே தெரிந்திருக்காத நிலை. ஆனால் எவ்வித அறிமுகமே அல்லாத இத்திரைப்படத்தை பார்வையாளர்கள் - பெண்கள் உட்பட-  காட்சிக்கு காட்சி கைத்தட்டி  ரசித்தார்கள் என்பதை நினைக்க இப்போதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நானும் அவ்வாறே ரசித்தேன். பார்த்திபன் பெண் கதாபாத்திரங்களை கொச்சையாக, ஆபாசமாக திட்டுவதை பெண் பார்வையாளர்கள் விரும்பவில்லை என்றொரு பேச்சு பின்னால் எழுந்தது. ஆனால் அதில் உண்மையில்லை என்றே நினைக்கிறேன். அந்த ரடிவு பாத்திரத்திற்கும் பின்னால் திருந்தி வாழ்கிற, மனைவியை மிகவும் நேசிக்கிறவனவாகவுமான பாத்திரத்திற்கும் பார்த்திபன் மிகச் சரியாக பொருந்தியிருந்தார். குறிப்பாக அவருடைய வசன ஏற்ற இறக்கங்களுக்கு (மாடுலேஷன்) நல்ல வரவேற்பிருந்தது. பார்த்திபன் இந்த அபாரமான முதல் வரவேற்பை பின்வருடங்களில் சரியான முறையில் தக்க வைத்துக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்.

அவருடைய அடுத்த படமான 'பொண்டாட்டி தேவை' கூட எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பெண்களுக்கு ஏற்படும் மிக அரிதான உடற்குறைபாடான பருவமடைய முடியாத அதன் தொடர்ச்சியாக தாயாக முடியாத காரணத்தினால் உள்ள பெண்ணுடன் ஏற்படும் காதலை அத்திரைப்படத்தில் கையாண்டிருப்பார். தமிழ் சினிமா அதுவரை கையாண்டிருக்காத பிரச்சினை அது என நினைக்கிறேன். ஆனால் அதிலும் முதற்படத்தின் தொடர்ச்சியாக அதே போன்றதொரு அடாவடியான பாத்திரத்தை ஏற்படுத்திக் கொண்டது ஒரு பின்னடைவே. (பருத்தி வீரன் 'கார்த்தியும்' இதே போன்றதொரு அபாயக் கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்). மிகக் கவனமாக தன் பாத்திரங்களை உருவமைத்துக் கொண்டு இயக்குநர் -கம் - நடிகர் பணியை மாத்திரம் செய்திருந்தால், வித்தியாசமாக பேசுகிறேன் பேர்வழியென்று அசட்டுத்தனமாக பேசிக் கொண்டு இசை வெளியீட்டு விழாக்களில் மாத்திரமே பார்த்திபனை காணக்கூடிய இன்றைய நிலை ஏற்பட்டிருக்காது. பின்னாட்களில் அவர் 'ஹவுஸ்புல்' போன்ற off-beat படங்களை தயாரித்தாலும் பிரதான பாத்திரத்தில் தானே நடிக்க வேண்டும் என்கிற உந்துதலாலும் அதிலுள்ள அதீதத்தன்மை காரணமாகவே எடுபடாமற் போய்விட்டது.

()

இப்போது 'புதிய பாதைக்கு' வருவோம். முன்பே சொன்னது போல் வணிகச் சினிமாவின் மிக கச்சிதமான வடிவம். "ஏன்? எதற்கு?,எப்படி?' போன்ற ஆவலைத் தூண்டும் கொக்கிகளை முதலிலேயே பார்வையாளனின் மூளையில் மாட்டிவிடுவது திரைக்கதையின் பாலபாடம்.

பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவன் என்கிற பாத்திர வடிவமைப்பை ஆரம்பக் காட்சிகளிலேயே அழுத்தமாக பார்வையாளர்களிடம் பதித்து விடுகிறார் பார்த்திபன். பின்பு சீதாவின் எண்ட்ரி. அவர் யார் என்பது மனோரமாவின் பிளாஷ்பேக் மூலம் தெரிகிறது. (அந்த பிளாஷ்பேக் உள்ளேயே சீதாவின் இன்னொரு பிளாஷ்பேக்கும் அடங்கியுள்ளது). ஆனால் அவர் எதற்காக பார்த்திபனைச் சுற்றி வர வேண்டும் என்கிற கேள்வி அப்படியே உள்ளது.

இன்னொரு கதாபாத்திரத்தின் மூலம் அதற்கான முடிச்சை (இதுவும் பிளாஷ்பேக்கே!) அவிழ்க்கிறார் இயக்குநர். பின்பு அவர்களுக்குள் நிகழும் திருமணத்தோடு நிறுத்தியிருந்தால் இது ஒரு சாதாரணமான படமாகக் கூட போயிருக்கலாம். ஆனால் அதை இன்னும் வளர்த்தி, தான் ஒரு அநாதையாக பிறந்த காரணத்தினாலேயே சமூகத்தின் கோபமுள்ள அவன், தன்னால் இன்னொரு குழந்தை அநாதையாகி விடக்கூடாது என்பதற்காக கடைசியில் வன்முறையை கைவிடுவதன் மூலம் படத்திற்கு நல்லதொரு அழுத்தமான முடிவு கிடைக்கிறது.

இந்தப் படத்தின் மிகப் பெரிய பலவீனம் அல்லது பிற்போக்குத்தனமான கருத்து 'தன்னைக் கற்பழித்தவனையே ஒரு பெண் தேடிச் சென்று திருமணம் செய்து கொள்வது'. இந்தக் குறைபாட்டை இயக்குநரே சரியாக உணர்ந்திருக்கிறார் என்பது மனோரமாவிற்கும் சீதாவிற்கும் நிகழும் ஓர் உரையாடலில் நமக்குத் தெரிகிறது. என்றாலும் சாமர்த்தியமான வசனங்களின் மூலம் அதை மழுப்ப முயன்றிருக்கிறார். (இந்தக் காரணத்தினாலேயே இதற்கு எப்படி தேசியவிருது கொடுத்தார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது. அரசு இயந்திரங்களின் அசிரத்தைகளில் இதுவுமொன்று.) என்றாலும் ஒருமுறை கற்பழிக்கப்பட்டவுடனே மிகச்சரியாக கருவுற்றுவிடும் வழக்கமான தமிழ் சினிமாவின் பெண் பாத்திரங்களுக்கான விபத்து இதில் நிகழவில்லை என்பது ஓர் ஆறுதல். இந்தப் புள்ளியை ஒரு சமயத்தில் தன்னுடைய துருப்புச் சீட்டாக பயன்படுத்திக் கொண்டு தன் நோக்கத்தை அடைகிறாள் நாயகி.

இந்தப் படத்தின் இன்னொரு பெரிய பலம் வசனங்கள். மேலும் பார்த்திபன் அதை தன்னுடைய பிரத்யேக பாணியில் பேசும் போது அந்தக் கதாபாத்திரத்தின் மீது இயல்பாக ஏற்பட வேண்டிய வெறுப்பையும் மீறி  நமக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது. இதில் வரும் ஒரு வசனம் எனக்கு நீண்ட ஆண்டுகள் நினைவில் நிற்கும்.

சில்லறை ரவுடியான பார்த்திபனுக்கு வேலை தரும் அரசியல்வாதியாக நாசர். அவருக்கு முன்பாக கால்மீது கால் வைத்து அமர்வார் பார்த்திபன். நாசருக்கு அருகிலிருக்கும் விகேராமசாமி சொல்வார். "தொகுதி என்னை விட சின்னபையன்தான். இருந்தாலும் நானே மரியாதையா உக்காந்திருக்கேன். இவன் என்னமோ மரியாதையில்லாம கால் மேலே கால் போட்டிருக்கானே?"

பதிலுக்கு நெத்தியடியாக பார்த்திபன் சொல்வார்.

'அவருக்கு நான் சம்பாரிச்சுக் கொடுக்க வந்திருக்கேன். மரியாதை கொடுக்க வரலே'

முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் பணிநடைபெறும் பொருட்டு எற்படுத்திக் கொள்வது ஓர் ஒப்பந்தமே. இதற்காக முறையே முதலாளி லாபமும் தொழிலாளி சம்பளமும் பெறுகிறார்கள். இரு ஒப்பந்தக்காரர்களிடையே எவ்வித போலி சம்பிதாயங்களும் மரியாதைகளும் இருப்பதற்கு வியாபாரத்தைத் தாண்டி எவ்வித நியாயமுமில்லை. ஆனால் வேலை தருகிற முதலாளி என்கிற காரணத்திற்காகவே அவரை கண்டவுடன் எழுந்து நிற்க வேண்டும், சலாம் போட வேண்டும், பணிவாக நடந்து கொள்ள வேண்டும், சரிசமமாக அமரக்கூடாது என்பதெல்லாம் நம் சமுகத்தின் பொதுப்புத்தியிலேயே உறைந்து போயுள்ளது. ஆண்டைகளும் முதலாளிகளும், தொழிலாளிகள் நம்மிடம் இவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஒரு தொழிலாளி தனக்கு நியமிக்கப்பட்ட பணியை முறையாக செய்து முடித்தாலே போதுமானது, மற்றெந்த சம்பிரதாயமும் தேவையில்லை என்பது நடைமுறையில் இல்லை. இதனை இக்காட்சி மிகச் சுருக்கமாக ஆனால் அழுத்தமாக வெளிப்படுத்தி விடடது.

'வாடி-ன்னு வேணா சொல்வேன். 'போடி-ன்னு சொல்ல மாட்டேன்' போன்ற நெகிழ்வை ஏற்படுத்தும் வசனங்களும் பார்த்திபனின் நையாண்டித்தனமான வசனங்களும் இத்திரைப்படத்தை அதிசுவாரசியமாக்குகின்றன.

இத்திரைப்படத்தின் போதுதான் பார்த்திபனுக்கும் சீதாவிற்கும் உண்மையாகவே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர் என்று ஞாபகம். மீடியாக்களிலும் இது அதிபுனிதப்படுத்தப்பட்டு இருவருக்குமான அன்னியோனங்கள் சற்று மிகையாகவே பகிரப்பட்டன. அதனாலேயே இவர்களின் விவாகரத்து நிகழ்ந்த போது அது எனக்கு சற்று அதிர்ச்சியாகவே இருந்தது. அது பற்றி எழுதின பழைய பதிவு இது.


பார்த்திபன், நீங்க இப்படி செஞ்சிருக்க வேண்டாம்.....

image courtesy: original uploader

suresh kannan