Showing posts with label நூல். Show all posts
Showing posts with label நூல். Show all posts

Tuesday, July 26, 2022

குமுதம் - உலக சினிமா கட்டுரைகள் - பாகம் ஒன்று

 

சுவாசம் பதிப்பகம் மூலம் சமீபத்தில் வெளியான 'சர்வதேசத் திரைப்படங்கள்' - பாகம் ஒன்று நூலிற்காக எழுதப்பட்ட முன்னுரை.

 

oOo 



அலுவலக மதிய உணவிற்குப் பிறகு சிறுநடை செல்வது என் வழக்கம். அவ்வாறாக ஒரு நாள் நான் சென்று கொண்டிருக்கையில் கைபேசி ஒலித்தது. “நான்.. குமுதம் எடிட்டர்.. பிரியா கல்யாணராமன் பேசறேன்”.

என்னுடைய இளம் வயதிலிருந்தே பரிச்சயப்பட்ட அந்த எழுத்தாளரின் பெயரை திடீரென்று போனில் கேட்டவுடன் எனக்குள் ரொமான்ஸூம் கோயில் விபூதி வாசனையும் கலந்த விநோத நினைவுகள் எழுந்தன. அவருடைய எழுத்துப் பாணி அத்தகையது. ஒருபக்கம் ‘ஜாக்கிரதை வயது 16’ போன்ற இளமை ததும்பும் சிறுகதைகளையும் எழுதுவார். இன்னொரு பக்கம் கோயில், ஆன்மீக கட்டுரைகளும் எழுதுவார். வெகுசன பாணியின் அத்தனை வகைமைகளையும் முயன்று பார்த்த எழுத்து அவருடையது.

‘ஒரு முன்னணி வார இதழின் ஆசிரியர் என்னை ஏன் அழைக்க வேண்டும்.. யாராவது அந்தப் பெயரை வைத்து விளையாடுகிறார்களா?’ என்று பல்வேறு எண்ணங்கள் எனக்குள் ஓடின. என்னுடைய திகைப்பை உணர்ந்தாரோ, என்னவோ.. அவரே தொடர்ந்தார். “கிழக்குப் பதிப்பகத்துல வெளிவந்த உங்க நூலைப் படிச்சேன். ‘உலக சினிமா சில அறிமுகங்கள்’. இன்ட்ரஸ்ட்டிங்.. நல்லா எழுதியிருக்கீங்க. ஒவ்வொரு கட்டுரையும் சுவாரசியமா, க்ரிஸ்ப்பா இருந்தது. குமுதத்திற்கும் அதே போல வாரா வாரம் வர்ற மாதிரி ஒரு கட்டுரைத் தொடர் எழுத முடியுமா?” என்றொரு கேள்வியை முன்வைத்தார். சட்டென்று எனக்குள் ஒரு பெரும் தயக்கம் எழுந்தது. ஏன்?

oOo

வெகுசன இதழ்களின் வழியாக என் வாசிப்பு துவங்கி வளர்ந்திருந்தாலும் ஒரு கட்டத்தில் சிறுபத்திரிகை இலக்கியமே என்னை ஆக்ரமித்தது. அப்போது நான் இடைநிலை இதழ்களில் சினிமா பற்றிய ஆவேசமான கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தேன். வெகுசன ஊடகங்கள், திரைப்படங்கள் செய்யும் கலாசாரச் சீரழிவுகள் குறித்து நானே காரசாரமாக எழுதியிருக்கிறேன். எனவேதான் அந்தத் தயக்கம்.  வழக்கம் போல் இந்தச் சமயத்தில் எனக்கு மானசீகமாக உதவி செய்ய வந்தவர் எழுத்தாளர் சுஜாதா. பல வகைகளில் இவரையே நான் என்னுடைய முன்னோடியாக கருதுவேன்.

வெகுசன வாசகப் பரப்பு என்பது மிகப் பெரியது. அந்த மேடையைப் பயன்படுத்திக் கொண்டு உன்னதமான விஷயங்களை சராசரியான வாசகர்களுக்கு கடத்திச் செல்லலாம் என்பது அவர் ஏற்கெனவே போட்டு வைத்த பாதை. வெகுசன எழுத்துக்கும் இலக்கியத்திற்கும் இடையில் ஒரு பாலமாக இருந்தவர் சுஜாதா. அவரின் மூலம் சிலபல நல்ல எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்து இலக்கிய வாசிப்பின் பக்கம் நகர்ந்த எண்ணற்ற வாசகர்களில் நானும் ஒருவன்.

உலக சினிமா பற்றிய அறிமுகத் தகவல்களையும் கட்டுரைகளையும் வெகுசன இதழ்களில் இன்று கூட காண்பது மிகக் குறைவுதான். 4G இணைய வேகமும், OTT பிளாட்பாரங்களும் வெப் சீரிஸ்களும் இன்று பரவலாக காணக் கிடைப்பதால் அவற்றைப் பற்றி இன்றைய தேதியில் எழுதியாக வேண்டியாக கட்டாயம் வெகுசன ஊடகங்களுக்கு இருக்கிறது.

ஆனால் சில வருடங்களுக்கு முன்பான நிலைமை அப்படியல்ல. உலக சினிமா பற்றிய கட்டுரைகளை இடைநிலை இதழ்கள் மற்றும் சிறு பத்திரிகைகளில் மட்டுமே வாசிக்க முடியும். ஆனால் அதுவும் கூட ஒரு சராசரி வாசகன் எளிதில் அணுக முடியாதபடியான தீவிரமான முரட்டு மொழியில் இருக்கும்.

எனில் உலக சினிமா பற்றி ஒரு வெகுசன வாசகன் அறிவதற்கு என்னதான் வழி?! இதைப் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே யோசித்தவர் பிரியா கல்யாணராமன். குமுதம் போன்ற லட்சக்கணக்கான சர்க்குலேஷன் கொண்ட ஒரு முன்னணி இதழில் உலக சினிமாக்கள் பற்றிய சுருக்கமான அறிமுகத்தைத் தருவதற்கு ஒரு வாய்ப்பை அவர் தரும் போது அதை ஏன் நான் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது?

இத்தனை எண்ணவோட்டமும் சில நொடிகளுக்குள் என் மூளைக்குள் நடந்து முடிய, உடனே உடனே ‘ஓகே’ சொன்னேன்.

oOo


ஜூன் 2016-ல் இந்தக் கட்டுரைத் தொடர் குமுதம் வார இதழில் வெளிவரத் துவங்கியது. தொடர்ந்து 60 வாரங்களுக்கு வெளிவந்தது. தொடர் ஆரம்பித்து மூன்று வாரங்களுக்குப் பின்பு என்னை அழைத்தார் பிரியா கல்யாணராமன். “படத்தோட முடிவு என்னன்னு சொல்லாமலேயே கட்டுரையை முடிச்சுடறீங்களே.. சார்.. அதையும் கூடவே எழுதிடுங்க. ஒரு சிறுகதை ஃபார்மட்ல வந்துடும். அதைத்தான் வாசகர்களும் விரும்புவாங்க” என்றார்.

Spoiler எனப்படும் சமாச்சாரம் பற்றி எனக்கும் மாற்றுக்கருத்துகள் இருக்கின்றன. ஏன், அதில் உடன்பாடு இல்லை என்று கூட சொல்லி விடலாம். ஆனால் ஒரு திரைப்படத்தில் முக்கியமான திருப்பங்களை, முடிவுகளை வெளிப்படுத்தி, படம் பார்க்கவிருக்கிறவரின் ஆவலைக் கெடுத்து விடக்கூடாது என்று பொதுவான கருத்து இருக்கிறது. சிலர் எரிச்சலுடன் பதறி ஆட்சேபம் கூட செய்வார்கள். ஒருவகையில் அதுவும் நியாயமே.

ஆனால் என்னைப் பொறுத்தவரை, முழுக்கதையும் தெரிந்தாலும் கூட ஓர் இயக்குநர் எவ்விதமான திரைமொழியினால், திரைக்கதையினால், நுட்பங்களால் தனது சினிமாவை உருவாக்குகிறார் என்பதைத்தான் ஆதாரமான அளவுகோலாக பார்ப்பேன். ஆனால் என் தனிப்பட்ட அபிப்ராயத்தை பொது வாசகனுக்கும் பொருத்திப் பார்க்க முடியாதே?!

“அப்படி முடிவு சொல்லிட்டா தப்பு சார்..” என்றேன் தயக்கமாக. “அந்தத் தப்பையும் செஞ்சு பார்த்துடுவோம். என்ன இப்ப?” என்கிற பலத்த சிரிப்பொலி எதிர்முனையில் கேட்டது. அதுதான் வெகுசன இதழ்களின் வெற்றியின் அடையாளம். சிறு தயக்கத்துடன் சம்மதித்தேன். இந்த ஒரு விஷயம் தவிர, எவ்வித குறுக்கீடும் செய்யாமல் சுதந்திரமான மொழியில் என்னை எழுத அனுமதித்தார் குமுதம் ஆசிரியர்.

ஒவ்வொரு வாரமும் என்னுடன் தொடர்பில் இருந்து நினைவுப்படுத்தி, வழிநடத்தி, கட்டுரைகளை வாங்கி ஒருங்கிணைத்த நண்பர் அருண் சுவாமிநாதனை இந்தச் சமயத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறேன். சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் போஸ்டர்களை தேடியெடுத்து வசீகரமான லேஅவுட் உடன் சிறப்பாக பிரசுரம் செய்த குமுதம் பணியாளத் தோழர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். 
 
பிரியா கல்யாணராமன்

 
இந்தத் தொடர் வெளிவந்த முதல் வாரத்திலிருந்து எனக்கு கிடைத்த எதிர்வினைகளும் பாராட்டுக்களும் நம்ப முடியாத அளவில் இருந்தன. இந்த உற்சாகம் வாசகர்கள் கடிதங்களில் எதிரொலித்தன. இணையத்திலும் ஃபேஸ்புக்கிலும் கூட நல்ல வரவேற்பு. நீண்ட காலமாக தொடர்பில் இல்லாத, என்னை எப்போதும் கண்டு கொள்ளாத ஓர் உறவினர் கூட கைபேசியில் அழைத்து “உன் போட்டோ பார்த்தேன்.. நீதான் எழுதறியா?” என்று விசாரித்த போதுதான், வெகுசன பரப்பின் வீச்சு விளங்கியது. “இந்தக் கொரியன் படத்தை பற்றி நல்லா எழுதியிருந்தீங்க. இதை எப்படி பார்க்கறது?” என்று வாட்சப்பில் கேட்ட ஒரு முன்னணி படத்தயாரிப்பாளர் முதல் “நீங்க சொல்லித்தான் இந்தப் படத்தை பார்த்தேன். மிக்க நன்றி” என்று சொன்ன நண்பர்கள் வரை விதம் விதமான எதிர்வினைகள் வந்தன.

இந்தத் தொடர் முடிந்தவுடன், “குமுதம் தீராநதி இதழில் உங்க ஆசைப்படி விரிவான கட்டுரைகள் எழுதுங்க” என்று பச்சைக்கொடி காட்டினார் பிரியா கல்யாணராமன். ‘குமுதம் உலக சினிமா கட்டுரைகள் நூலாக வந்தால் நன்றாக இருக்கும்” என்கிற விருப்பத்தை பல நண்பர்கள் அப்போது தெரிவித்தார்கள். எனக்கும் கூட விருப்பம்தான். ஆனால் அதற்கேற்ற சூழல் அமையவில்லை. நானும் இதற்கு பெரிதாக மெனக்கெடவில்லை.

ஆனால் ஒரு நல்ல விஷயம் என்றேனும் நடந்தே தீரும் என்பார்கள். என்னுடைய முந்தைய நான்கு நூல்கள் வெளிவருவதற்கு அடிப்படையான காரணமாக இருந்த நண்பர் ஹரன் பிரசன்னாவே, இந்த நூல் வருவதற்கும் முக்கிய காரணமாக இருக்கிறார். இந்த வகையில் அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அவருடைய புதிய பதிப்பக முயற்சியின் மூலம் ‘குமுதம் சினிமா கட்டுரைகள்’ ஒரு தொகுப்பாக வெளிவருவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே!.

இந்த நூலை குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமனுக்கு சமர்ப்பிப்பதற்காக ஏற்கெனவே திட்டமிட்டிருந்தேன். ஆனால் இந்த முன்னுரையை நான் எழுதிக் கொண்டும் நேரத்தில் அவர் நம்முடன் இல்லை என்கிற செய்தி துயர் கொள்ள வைக்கிறது. ஆம், 22-06-2022 அன்று இயற்கையில் கலந்து விட்டார் பிரியா கல்யாணராமன்.

oOo

‘சர்வதேசத் திரைப்படங்கள் – பாகம் ஒன்று’ என்கிற இந்த நூலை வாசிக்க முடிவெடுத்த உங்களுக்கு நன்றி. 2010-க்கு பிறகு, பல்வேறு ஆண்டுகளில் வெளியான சர்வதேச திரைப்படங்களைப் பற்றிய சுருக்கமான அறிமுகத்தை இந்த நூல் உங்களுக்குத் தரும். சம்பந்தப்பட்ட திரைப்படத்தை தேடிப் பார்த்தேயாக வேண்டும் என்கிற ஆவலை இந்தக் கட்டுரைகள் நிச்சயம் உங்களுக்குள் எழுப்பும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு. இந்தத் தொடர் எழுதப்பட்டதின் நோக்கமே அதுதான். இதன் மூலம் நல்ல சினிமாக்களைப் பார்க்கும் ரசனை மேலதிகமாக பெருகும். இந்த ரசனை மாற்றம் நல்ல சினிமாக்கள் வெளிவருவதற்கும் காரணமாக இருக்கக்கூடும் என்பது என் நம்பிக்கை. அந்த மாற்றத்திற்கு ஒரு துளியாக இருக்கப் போகும் உங்களுக்கும் என் பாராட்டும் நன்றியும்.

வாருங்கள்! சிறந்த சினிமாக்களைக் கொண்டாடுவோம்!


சென்னையின் ஒரு சோம்பலான மதியம்
29-06-2022                                                                                        சுரேஷ் கண்ணன்






Thursday, June 23, 2022

பெங்களூர் இரவிச்சந்திரன் சிறுகதைகள் - மீள்பிரசுரம் - முன்னுரை


பெங்களூர் இரவிச்சந்திரனின் சிறுகதைகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு தொகுக்ககப்பட்டு ஒரு புதிய பதிப்பாக வெளிவந்திருக்கிறது. அந்த நூலுக்கு நான் எழுதிய முன்னுரை இது.

oOo


நண்பர்களே….

எழுத்தாளர் இரவிச்சந்திரனை அறிந்து கொள்ளுங்கள். பெங்களூர் இரவிச்சந்திரன் என்றால், எண்பதுகளில் இலக்கியம் வாசித்த அன்பர்கள் சிலருக்கு சட்டென்று ஞாபகம் வரக்கூடும். அவர்களின் நினைவுகளில் இரவிச்சந்திரனின் பெயர் இன்னமும் கூட மங்காமல் பசுமையாக இருக்கக்கூடும்.

மற்றபடி தமிழ் நவீன இலக்கிய எழுத்தாளர்களின் வரிசையில், காலத்தில் புதைந்து போன, அவசியம் மீட்டெடுத்தே ஆக வேண்டிய, சமகால வாசகர்களால் அறிந்து கொள்ளப்பட வேண்டிய ஏராளமான நல்ல எழுத்தாளர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் இரவிச்சந்திரன் முக்கியமானவர். ‘மிடில் சினிமா’ மாதிரி, வெகுசன எழுத்தின் சுவாரசியமும் இலக்கியத்தின் மெல்லிய ஆர்வமும் கொண்ட வசீகரமான கலவைதான் இரவிச்சந்திரனின் எழுத்து

எழுத்தாளர் சுஜாதாவின் பாதிப்பால் எழுத வந்த இளம் எழுத்தாளர்கள், தமிழ்நாட்டில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேராவது இருப்பார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோனோர், சுஜாதாவின் எழுத்துப் பாணியை தேசலாக நகலெடுக்க முயன்று அந்த ஸ்டைலில் சிக்கி தேங்கி மறைந்து போயிருப்பார்கள். தனக்குப் பிடித்த ஆதர்சமான எழுத்தாளனை பின்பற்றுவது வேறு; அவனை நகலெடுக்க முயன்று தொலைந்து போவது வேறு. இந்த நோக்கில் பார்த்தால் சுஜாதாவின் பாதிப்பால் எழுத வந்தாலும் தனக்கென்று ஒரு பிரத்யேகமான பாதையை கண்டுபிடித்து அமைத்துக் கொண்டவர் இரவிச்சந்திரன். சுஜாதாவின் ஏறத்தாழ அதே துள்ளலான நடையும், பாய்ச்சலும், வேகமும், சுவாரசியமும் இருந்தாலும் இரவிச்சந்திரனின் எழுத்து வேறு விதமான ருசியைத் தரக்கூடியது.

சுஜாதாவின் நாவல்களில் வரும் ‘கணேஷ் மற்றும் வசந்த்’ பாத்திரங்களைப் பற்றி நமக்குத் தெரியும். சுஜாதாவிற்குள் ஒளிந்துள்ள இரண்டு எதிர்முனை ஆளுமைகளின் பிரதிபலிப்பு அது. கணேஷ் புத்திசாலி; விவேகமானவர். கணேஷிற்கு நிகராக வசந்த்தும் புத்திசாலிதான். ஆனால் தனக்கேயுரிய குறும்புகளைக் கொண்டவன். “டேய் சும்மா இர்ரா’ என்று கணேஷால் அவ்வப்போது அதட்டப்படும் அளவிற்கு பெண்களைக் கிண்டலடிப்பவன்; பின்தொடர்பவன். வசந்த் என்கிற இந்தப் புனைவுப்பாத்திரம் ஒருவேளை சிறுகதை எழுத வந்தால் அது இரவிச்சந்திரனைப் போல் இருக்குமோ என்று எனக்குள் தோன்றுவதுண்டு. அந்த அளவிற்கு துள்ளலான நகைச்சுவை இவரது எழுத்தில் உத்தரவாதமாக இருக்கும்.

oOo

இரவிச்சந்திரனின் ஊர் மல்லேஸ்வரம். தாய்மொழி தெலுங்கு. என்றாலும் பல தமிழர்களே வெட்கப்படும் அளவிற்கு இந்த மொழியை அத்தனை லாகவமாகப் பயன்படுத்தியவர். ‘தமிழை கற்றுத் தந்தது கவிஞர் புவியரசு’ என்று தன்னை கவிஞரின் மாணவனாக சொல்லிக் கொள்ளும் இரவிச்சந்திரன், ‘தமிழைப் பழக்கியது சுஜாதா’ என்கிறார். ‘இந்தத் தொகுப்பு மட்டுமல்ல, இனி வரவிருக்கும் அனைத்துத் தொகுப்புகளும் சுஜாதாவிற்கு சமர்ப்பணம்” என்று ஒரு முன்னுரையில் விசுவாசமாக எழுதுகிறார். அத்தனை உயர்வான நட்பையும் மரியாதையையும் சுஜாதா மீது வைத்திருக்கிறார்.

நானறிந்த வரை, இதுவரை வெளிவந்திருக்கும் இரவிச்சந்திரனின் சிறுகதைத் தொகுப்புகள் நான்கு. இந்திராகாந்தியின் இரண்டாவது முகம், சிந்து சமவெளி நாகரிகம், இந்திய பாஸ்போர்ட், இனி ஒரு விதி செய்வோம். இதில் முதல் இரண்டு தொகுப்புகளின் அனைத்துக் கதைகளையும் இந்த நூலில் நீங்கள் வாசிக்க முடியும். இது தவிர, ‘இன்று கொலை நாளை விலை’ என்றொரு நாவலையும் இரவிச்சந்திரன் எழுதியிருப்பதாக சொல்லப்படுகிறது.

‘பிரபலம் தரும் போதைக்காகத்தான் எழுதுகிறேன். தமிழில் சிறுகதைகள், நாவல்கள் இன்னமும் குப்பையாகத்தான் இருக்கின்றன. அதற்கு என் எழுத்தே சாட்சி’ என்று தன்னைப் பற்றி இரவிச்சந்திரன் சுயபரிசீல நேர்மையுடன் சொல்லிக் கொள்கிறார். இன்னொரு பக்கம் அவரே ‘எதுவெல்லாம் இரண்டாம் முறை வாசிக்கத் தூண்டுகிறதோ, அவையெல்லாம் இலக்கியம்’ என்றும் சொல்கிறார். பிந்தைய அளவுகோலின்படி இரவிச்சந்திரனின் சில சிறுகதைகள் உன்னதமானவை என்று சொல்ல முடியும். எண்பதுகளில் எழுதப்பட்ட இந்தச் சிறுகதைகளை இன்றைய தேதியில் வாசித்தாலும் அத்தனை இளமையாகவும் புத்துணர்ச்சி தருவதாகவும் இருக்கிறது. வாசித்த பிறகு நீங்களும் என்னுடன் உடன்படுவீர்கள் என்கிற நம்பிக்கையுண்டு.

oOo

‘மத்தியதர வாழ்க்கையின் பிரச்சினைகளைப் பற்றி விதம் விதமாக எழுதிப் பார்க்கிறேன்’ என்று ஆசிரியர் சொல்லிக் கொண்டாலும், இந்த நூலில் உள்ள இரவிச்சந்திரனின் கதைகள் வெவ்வேறு வண்ணங்களில், விதங்களில், பாணிகளில் இருப்பது சுவாரசியமூட்டுவதாக இருக்கிறது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் பற்றிய பல்வேறு பிம்பங்களை நாம் அறிந்திருந்தாலும் சட்டென்று நினைவுக்கு வருவது ‘எமர்ஜென்சி’ என்கிற கசப்பான காலக்கட்டம்தான்.  என்றாலும் அந்த இரும்புப் பெண்மணிக்குள் பூ மாதிரி இருக்கிற இன்னொரு பிம்பம், ‘இந்திரா காந்தியின் இரண்டாவது முகம்’ என்கிற சிறுகதையில் சிறப்பாக பதிவாகியிருக்கிறது. கணவரை இழந்த ஒரு பெண், நாட்டின்  பிரதமரை சந்திக்கச் செல்லும் சூழலை மிகுந்த நம்பகத்தன்மையுடன் உருவாக்கியிருக்கிறார் இரவிச்சந்திரன். கதையின் இறுதி வரியை வாசிக்கும் போது உங்கள் மனதில் தன்னிச்சையான சலனமும் நெகிழ்வும் ஏற்படக்கூடும்.

ஒரு வளரிளம் சிறுவனின் சாகசங்கள், விடலைக் காதல்கள் என்கிற வகையில் சில சிறுகதைகள் சுமாராக பயணிக்கும் போது அதன் எதிர்முனையில் ‘சிந்து வெளி நாகரிகம்’ என்கிற கதை முற்றிலும் வேறு வகையிலான பின்னணியில் இயங்கி ஆச்சரியமூட்டுகிறது. ‘கோதை பிறந்த ஊர்’ என்பது இன்னொரு வசீகரமான கதை. ‘சந்திரலேகா’ நிச்சயம் பெண்ணியவாதிகளுக்கு ஆட்சேபம் ஏற்படுத்தக்கூடிய விவகாரமான கதை. அப்துல்ரகுமானின் புதுக்கவிதையுடன் துவங்கும் ‘சுயம்வரம்’ கதையில் நிச்சயம் ஒரு அட்டகாசமான மின்சாரம் இருக்கிறது.

தமிழ் ஈழப் பிரச்சினை என்பது எண்பதுகளில் கொதிநிலையுடன் இருந்த ஒரு துயரம். அந்தத் துயர ஆவேசத்தில் தமிழகத் தமிழர்களும் உணர்வுபூர்வமாக இணைந்திருந்தார்கள். இதன் ஆத்மார்த்தமான பிரதிபலிப்பை ‘காத்திருந்தார்கள்’ என்று ஒற்றை வார்த்தையுடன் துவங்கும் ‘சொந்தச் சகோதரர்கள்’ என்கிற கதையில் காண முடியும். ‘முற்றிலும் இந்திய அரசுக்குச் சொந்தமானது’ என்கிற கதையில் நாம் பலமுறை பழகியிருக்கும் ஒரு அழகான துரோகம் வெளிப்படுகிறது.

சுஜாதா சொன்னது மாதிரி இரவிச்சந்திரனிடம் அடுத்த வார்த்தையில் அனைத்தையும் சொல்லி விட வேண்டும் என்கிற துடிப்பும் பாய்ச்சலும் இருக்கிறது. இந்த மாயத்தை அவரது எழுத்தால் அநாயசமாக நிகழ்த்தி விட முடிகிறது. இதுவே இரவிச்சந்திரனின் ஆதாரமான பலம். இளம் எழுத்தாளர்களுக்கு அவசியப்படுவதும் கூட.

oOo

எனக்கு இரவிச்சந்திரன் அறிமுகம் ஆகியது, சுஜாதாவின் வாசகர் ஒருவரின் மூலம். சுஜாதாவைப் பற்றி அவரிடம் சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்கும் போது ‘எனில் இரவிச்சந்திரனை வாசித்திருக்கிறீர்களா? உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்’ என்று இந்திய பாஸ்போர்ட் தொகுப்பை கையில் திணித்தார். வாசித்தேன். எனக்கு உடனே உடனே பிடித்து விட்டது. (இப்படி இரண்டு ‘உடனே’வை போடுவது இரவிச்சந்திரனின் ஸ்டைல்).  ‘இந்தப் பையனிடம் ஒரு ஸ்பார்க் இருக்கு’ என்று எங்கோ சுஜாதா குறிப்பிட்ட நினைவும் இருக்கிறது. சுஜாதா அடையாளம் காட்டிய பெரும்பாலோனோர் சோடை போனதில்லை. அதற்கான தடயத்தை இரவிச்சந்திரனிடம் அழுத்தமாக காண முடிகிறது.

2006-ம் ஆண்டு என் வலைப்பதிவில் இரவிச்சந்திரனைப் பற்றிய ஒரு சுருக்கமான அறிமுகத்தை எழுதி, அவருடைய அற்புதமான சிறுகதையான ‘சமூகம் என்பது கலகக்காரர்கள் மட்டுமே’ என்கிற படைப்பை மெனக்கெட்டு தட்டச்சி இட்டேன். அதை அப்போது நூறு பேர் கவனித்திருந்தால் என் அதிர்ஷ்டம். (கவனிக்க, வாசித்திருந்தால் என்று எழுதவில்லை). பிறகு நினைவு வரும் போதெல்லாம் இவரைப் பற்றி இணையத்தில் எழுதிக் கொண்டிருப்பேன்.

இன்றைக்கும் கூட இணையத்தில் இவரைப் பற்றி தேடிப் பார்த்தால் சொற்பமான குறிப்புகளே கிடைக்கும். ஜீவானந்தன், ஆர்.பி.ராஜநாயஹம் உள்ளிட்ட சிலர்தான் இரவிச்சந்திரனைப் பற்றிய குறிப்புகளை ஆங்காங்கே எழுதி வைத்திருக்கிறார்கள். மற்றபடி தமிழ் கூறும் நல்லுலகம் இவரை ஒட்டுமொத்தமாக மறந்து போனதாகவே தோன்றுகிறது.  

க்ளப்ஹவுஸ் என்கிற App-ல் ‘சிறுகதை நேரம்’ என்கிற அறையில், செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான ஃபாத்திமா பாபு, தினமும் ஒரு சிறுகதையை வாசித்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக இந்த இலக்கியப் பணியை அவர் செய்து வருகிறார்.  அந்த அறையில் ‘சமூகம் என்பது கலகக்காரர்கள் மட்டுமே’ சிறுகதையை பரிந்துரை செய்து வாசிக்க வைத்தேன். அதைப் பற்றிய கலந்துரையாடலும் பிறகு நடைபெற்றது. இப்படியாக இரவிச்சந்திரனை மீண்டும் சமீபத்தில் உயிர்பெற வைத்தேன்.

அதைத் தொடர்ந்து, ‘இரவிச்சந்திரனின் சிறுகதைகள் தொகுப்பாக வந்தால் நன்றாக இருக்கும்’ என்று சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ஒரு குறிப்பு எழுதி வைத்தேன். அது பதிப்பாளர் அசோக் சாய் ரமணா தம்புராஜின் கண்களில் பட்டது என்னுடைய அதிர்ஷ்டம். மளமளவென வேலைகள் ஆரம்பமாகின. என்ன செய்தாரோ, தெரியாது. மின்னல் வேகத்தில் செயல்பட்டு இரவிச்சந்திரனின் இரண்டு தொகுப்புகளை மீள்பிரசுரம் காண்பதற்கு ஏற்பாடு செய்து விட்டார். புதைந்து போயிருக்கும் நல்ல எழுத்துக்களை வெளிக்கொணர வேண்டும் என்கிற அவரின் தீராத ஆர்வம்தான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். அதற்காக அவருக்கு நன்றி. சிறப்பாக வடிவமைத்திருக்கும் நண்பர் பொன்.வாசுதேவனுக்கும் நன்றி.

oOo

‘என் புத்தகங்கள் நூறு வருஷம் வரை முக்கி முனகி தாக்குப் பிடிக்கும் என்பது என் கணிப்பு’ என்று ஒரு முன்னுரையில் எழுதியிருக்கிறார் இரவிச்சந்திரன். ஆனால் முப்பது வருடங்களை கடப்பதற்கு முன்பாகவே அவை மங்கிப் போய் விட்டன. சினிமாவை சுவாசிக்கும் தமிழ்நாடு போன்ற பிரதேசங்களில் இப்படி நடக்காவிட்டால்தான் அது ஆச்சரியம். இப்படி காலத்தில் புதைந்து போன எத்தனையோ நல்ல எழுத்தாளர்கள் தமிழில் உள்ளார்கள். இரவிச்சந்திரனுக்கு அத்தகைய விபத்து நடக்காமல் ஜெய்ரிகி பதிப்பகம் காப்பாற்றியிருக்கிறது.

இந்தக் கதைகளை வாசியுங்கள். இரவிச்சந்திரனின் இதர எழுத்துக்களையும் தேடி வாசிக்க வேண்டும் என்கிற ஆவல் உங்களுக்குள் ஏற்படும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு. இந்தத் தொகுதியை வாசிக்கப் போகும் உங்களுக்கு என் நன்றியும் அன்பும்.

 
வெப்பம் தகிக்கும் சென்னையின் ஒரு மாலை

28 மே 2022                                                                                  

 சுரேஷ் கண்ணன்                





Sunday, April 12, 2020

வணக்கம் - வலம்புரிஜான்





வலம்புரிஜான் எழுதிய ‘வணக்கம்’ என்றொரு நூலை மிகச் சிரமப்பட்டு வாசித்து முடித்தேன். நக்கீரன் இதழில் தொடராக வந்தததின் தொகுப்பு இது. நக்கீரனில் வந்தது.. என்பதில் இருந்தே இந்த நூலின் உள்ளடக்க தரத்தை அறிந்து கொள்ள முடியும்.

கலை, எழுத்து, அறிவியக்கம் போன்வற்றுடன் சிறிதாவது தொடர்புள்ளவர்கள்,  அதிகார வேட்டை அரசியலுக்குள் சென்று வீழ்ந்தால் எத்தனை கேவலங்களுக்கு உள்ளாவார்கள்.. அவர்களுக்குள் இருக்கும் கலைத்தன்மையும் அவரது அடையாளமும் எத்தனை சிதைந்து போகும் என்பதை உறுதிப்படுத்தும் நூல் இது.

வலம்புரிஜான் அடிப்படையில் சிறந்த வாசிப்பாளர். நிறைய அறிய முற்பட்டிருந்தவர். ஆனால் அதிகார அரசியல் என்னும் நெருப்பில் குளிர்காய முனைந்து நிறைய காயங்களுடன் பெற்றும் இழந்தும் செயல்பட்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரண்டு பிம்பங்களுக்கும் அணுக்கமானவராக இருக்க ஜான் மிகவும் முயற்சித்திருக்கிறார். அவர்களுக்கு இடையேயான பந்தாட்டத்தில் மிகவும் அல்லல்பட்டிருக்கிறார். மிக குறிப்பாக ஜெயலலிதாவால் மிகவும் அவமதிக்கப்பட்டிருக்கிறார். ஒரு நீண்ட கால கட்டத்திற்குப் பிறகு அவருக்குள் இருந்த தன்மான உணர்வு விழித்தெழிந்திருக்கிறது. எனவே இந்த நூல்.

அரசாங்க அலுவலகத்தில் தன் பணிக்காலம் பூராவும் லஞ்ச சூழலில் மாட்டிக் கொண்டு, சந்தர்ப்பம் கிடைத்தால் அவனும் வாங்கிக் கொண்டு… பிறகு ஓய்வுக் காலத்தில் மிக செளகரியமான உணர்வில் ‘எல்லாம் பிராடு பசங்க சார்..’ என்று ஒரு அதிகாரி ‘பிறரை குற்றம்சாட்டி’ புலம்புவார் அல்லவா. அப்படியொரு சந்தர்ப்பவாத புலம்பல்தான் இந்த நூல். 

மிக குறிப்பாக ஜெயலலிதாவின் சில ஆதாரமான எதிர்மறை குணாதிசயங்களை துணிச்சலுடன் அம்பலப்படுத்துகிறார் ஜான். அதே துணிச்சலுடன் எம்.ஜி.ஆரை அம்பலப்படுத்துவதில் ஜானுக்கு தயக்கம் இருந்ததைப் போல உணர முடிகிறது. எம்.ஜி.ஆர் மீதுள்ள உள்ளார்ந்த மதிப்பு மனத்தடையை ஏற்படுத்தியதோ என்னமோ. ஆர்.எம். வீரப்பன், நடராசன், சசிகலா, திருநாவுக்கரசு போன்ற பல சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள், தரகர்கள் போன்றவர்கள் இடையிடையே வந்து போகிறார்கள்.

**

நல்ல தமிழ் கொண்ட எழுத்தை கேட்க, வாசிக்க எனக்கு எப்போதும் பிடிக்கும். ஆனால் அதுவே மிகையான அலங்காரமாக, செயற்கையான ஜோடனைகளுடன் வெளி வரும் போது குமட்டி விடுகிறது. திராவிட கலாசாரத்தின் சில நல்ல பண்புகளைத் தாண்டி, அவர்களிடம் வெறுக்கக்கூடிய அம்சங்களுள் ஒன்றாக இருந்தது அவர்கள் மொழியை மிகையாக ஜோடனை செய்த விளையாட்டுத்தான்.

வலம்புரி ஜானின் மொழி நடையும் இவ்வாறே இருக்கிறது. ‘கருவாடு மீனாகாது.. கறந்த பால் மடிபுகாது’ என்று அமைச்சர் காளிமுத்து பேசினார் அல்லவா.. அப்படியொரு செயற்கையான நெடி கொண்ட மொழி நூல் பூராவும் வீசிக் கொண்டிருக்கிறது. அதுவே ஓர் ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. சொல்ல வரும் விஷயத்தை இப்படி இழுத்து இழுத்து எழுதி சலிப்பூட்டுகிறார் ஜான்.

இந்த நூலை கிசுகிசு வரலாறு என்று மதிப்பிடுகிறார் ஜெயமோகன். இது தொடர்பாக ஒரு நீண்ட கட்டுரையை தன் தளத்தில் ஏற்கெனவே எழுதியிருக்கிறார். ஒருவகையில் இந்த நூலை நான் வாசிக்க முற்பட அந்தக் கட்டுரையே காரணம்.

இது போன்ற கிசுகிசு வரலாற்றின் ஏராளமான வரிகளுக்கிடையே சிந்திக் கிடக்கும் உண்மையான வரலாற்றின் துளிகளை தொகுத்தெடுத்துக் கொள்ள முடியும் என்கிறார் ஜெயமோகன்.

உண்மைதான். ஆனால் கல்லில் இருந்து அரிசியைப் பொறுக்கும் சலிப்பான உணர்வைத் தந்தது இந்த நூல்.

எவராவது விரும்பினால் தேடிப் படிக்கலாம். ஆனால் நான் பரிந்துரை செய்ய மாட்டேன்.


suresh kannan

Saturday, February 01, 2020

தரையில் இறங்கும் விமானங்கள் - இந்துமதி




எழுத்தாளர் இந்துமதியின் ‘தரையில் இறங்கும் விமானங்கள்’ நாவலை சமீபத்திய தற்செயல் தேர்வில் வாசித்து முடித்தேன். எத்தனையோ வருடங்களுக்கு முன்பு வாசித்த நூல் இது. அப்போது மிகவும் பிடித்திருந்தது. ஆனால், சமீபத்திய வாசிப்பில் அத்தனை உன்னதமாகத் தெரியாவிட்டாலும் தமிழில் எழுதப்பட்ட ஒரு குறிப்பிடத்தகுந்த வெகுசன நாவல் என்றே சொல்வேன்.

ஒரு காலக்கட்டத்தின்  பின்னணி இதில் உள்ளது. அதே சமயத்தில் எப்போதும் பொருந்திப் பார்க்க முடிகிற நிரந்தரத்தன்மையையும் கொண்டுள்ளது. பாலகுமாரன், ஆதவன் போன்றோரின் வாசனை ஆங்காங்கே வருகிறது.

இந்துமதியின் படைப்புகளில் சிலதை பதின்மங்களில் நான் வாசித்திருக்கக்கூடும். ஆனால் அவை எதுவுமே இப்போது நினைவில் இல்லை. மாறாக இந்த நாவல் மட்டும் நினைவில் மங்கலாகவும் அதே சமயத்தில் இதன் சில விவரணைகள் அழுத்தமாகவும் மனதில் பதிந்துள்ளது. குறிப்பாக நாவலில் விவரிக்கப்படும் ஓரிடம் எப்போதுமே நினைவில் வந்து கொண்டிருக்கும். இந்த நாவலின் ஒரு புள்ளி என்னுள் உறைந்து போன இடம் அது எனலாம்.

மேகங்கள் நகரும் போது நமக்குத் தெரியும் விநோதமான உருவங்களைப் போல,  சுண்ணாம்புச் சுவரில் காரை உதிரும் அது போன்ற உருவங்களை ஏற்படுத்தியிருப்பதை நடைமுறையில் நாம் பார்த்திருப்போம்.  இந்த நாவலிலும் அப்படியொரு சித்தரிப்பு.

சமையல் அறைச் சுவற்றில் இருக்கும் அப்படியொரு உருவம், நடனமாடும் ஒரு பெண்மணியைப் போலவே விஸ்வம் என்கிற கதாபாத்திரத்திற்குத் தோன்றும். ‘போடா கிறுக்குப்பயலே’ என்பது போல அவனுடைய தாயார், இவனின் கற்பனையை சிரிப்புடன் புறந்தள்ளி விடுவார்.

ஆனால் பிறகு இவர்களின் குடும்பத்தில் வந்து இணைகிற விஸ்வத்தின் அண்ணி (பிராமண வழக்கில் மன்னி), இதே கற்பனையை விஸ்வத்திடம் பகிரும் போது அதிலுள்ள ஒற்றுமையைக் கண்டு அவன் திகைத்துப் போய் விடுவான். இருவரின் ரசனையும் ஒரே மாதிரியாக அமைந்துள்ளதை மிக சுவாரசியமாக சுட்டிக்காட்டும் இடம் அது.

இப்போதைய மீள் வாசிப்பில் இந்த இடம் எப்போது வரும் என்று காத்திருந்து அது வந்தவுடன் புன்னகைத்துக் கொண்டேன்.

**

இந்த நாவல் எதைப் பற்றியது?

ஒருவனின் இளம் வயது என்பது லட்சியங்களும் கனவுகளும் நிரம்பி பெருகி வளரும் காலக்கட்டம். அந்தக் கனவுகளை நோக்கி பயணப்பட்டு விட முடியும் என்கிற நம்பிக்கை நிறைந்திருக்கிற வயது. ஆனால் கூடவே சந்தேகமும் நிராசையும் இணைந்திருக்கும் பருவம்.

அந்தக் கனவுகளை நோக்கி பயணப்பட விடாமல் யதார்த்தம் என்பது அவனை வேறெங்கோ திசை திருப்பி அலைக்கழிக்கும். வேறு வழியின்றி ஒரு கட்டத்தில் அந்த நிதர்சனத்தை அவன் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். இதுதான் இந்த நாவலின் மையம். இதை எந்தவொரு வளரிளம் இளைஞனின் அனுபவத்துடனும் பொருத்திப் பார்க்கலாம். அதனால்தான் காலத்தின் நிரந்தரத்தன்மை இதில் இருக்கிறது என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

பரசு என்கிற இளைஞன் மேலே படிக்க விரும்பி, ஆனால் குடும்பத்தின் சூழல் காரணமாகவும் தந்தையின் வற்புறுத்தல் காரணமாகவும் அந்தக் கனவை கைவிட்டு பணியில் சேர்கிறான்.

அவனுடைய தம்பி விஸ்வம். இவன்தான் இந்தப் புனைவின் நாயகன் எனலாம். அண்ணனைப் போலவே தானும் ஓர் இயந்திரம் ஆகி விடுவோமோ என்கிற பயமும், அப்படி ஆகி விடக்கூடாது என்கிற பிடிவாதமும் கொண்டிருக்கிறவன். ஆனால் சூழல் அவனைச் சுழற்றியடிக்கும் போது பரசுவின் தொடர்ச்சியாக அவனும் ஓர் இயந்திரமாகத்தான் ஆக வேண்டியிருக்கிறது.

விஸ்வத்தின் பாத்திரம் மிகக் கச்சிதமாகவும் சுவாரசியமாகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது. எண்பது, தொன்னூறுகளில் சிறுபத்திரிகை உலகில் இயங்கும் ஒரு நவீன இளைஞனின் சித்திரம் விஸ்வத்தினுடையது.

அன்றாட லெளகீக விஷயங்களின் மீது வெறுப்பும் எரிச்சலும் கொண்டிருக்கிறவன். இந்த மரபை மீறத் துடிக்கிறவன். இதிலிருந்து தப்பித்து விட முடியாதா என்கிற ஏக்கமும் நிராசையும் கொண்டிருக்கிறவன். பிலிம் சொசைட்டி, சார்த்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி என்கிற அறிவார்த்தமான தேடலைக் கொண்டிருப்பவன். சிறுபத்திரிகை நடத்த முயல்கிறவன். இயந்திரமாக மாறி விட்டிருக்கிற அண்ணன் பரசுவின் மீது வெறுப்பும் பரிதாபமும் ஒருசேர கொண்டிருக்கிறவன்.

வேண்டா வெறுப்பாக அவன் செல்லும் ஒரு நேர்காணலுக்காக ஓர் அலுவகத்தின் வாசலில் நின்று கொண்டிருக்கிற போது அங்குள்ள இயற்கைச் சூழலை வியக்கிற விஸ்வத்தின் மனநிலையின் மூலம் அவனுடைய பாத்திரம், நாவலின் துவக்கத்திலேயே மிகச் சரியாக வாசகனுக்குள் கடத்தப்பட்டு விடுகிறது.

**

அண்ணி ருக்மணிக்கும் விஸ்வத்திற்கும் இடையில் ஏற்படும் நேசமும் ரசனை ஒற்றுமையும் மெல்ல திரண்டு எழுவதை இந்த நாவலின் சுவாரசியமான அம்சங்களுள் ஒன்றாகச் சொல்லலாம்.

வழமைகளினால் இருண்டு கிடக்கும் அந்த வீட்டினுள் ஓர் அகல் வெளிச்சம் போல நுழைகிறாள் ருக்மணி. அவளின் செய்கை ஒவ்வொன்றிலும் அவளுடைய ரசனையும் நேர்த்தியும் வெளிப்படுகிறது. ‘இத்தனை அழகு கொண்டவள். தனக்கு மனைவியா?” என்று துவக்கத்திலிருந்தே பிரமிக்கிற பரசு, அந்தப் பேரழகை நெருங்க முடியாமல் தாழ்வுணர்ச்சியுடன் விலகியே நிற்கிறான். எந்நேரமும் சிரித்துக் கொண்டே வளைய வருகிற ருக்மணியைப் பார்த்து விஸ்வத்திற்கு ஆச்சரியமாக இருக்கிறது. அண்ணன் பரசுவின் மீது கோபமாகவும் வருகிறது.

தன் துணிகளை அண்ணி துவைக்கும் போது சங்கடத்துடன் ஆட்சேபிக்கும் விஸ்வம், அவளுள் ஒளிந்திருக்கிற இலக்கிய வாசனையை அறியும் சமயத்தில் அவளுடன் ஒன்றிப் போகிறான். அவர்களுக்குள் ஒரு நாகரிகமான நட்பு உருவாவதற்கு இலக்கிய ரசனையும், அது தொடர்பான உரையாடலும் காரணமாக இருக்கின்றன.

விஸ்வத்தின் தந்தை பாத்திரமும் சரியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார சூழல் காரணமாக தன் மகன்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறான சூழலில் தள்ளிக் கொண்டிருக்கிறோமே என்கிற உள்ளார்ந்த வேதனையும் ஆனால் அதனை தவிர்க்க முடியாத கட்டாயத்திலும் அவர் தத்தளிக்கிறார். தந்தையின் கையாலாகாததன்மை குறித்து விஸ்வத்திற்கு அவ்வப்போது எரிச்சல் வந்தாலும் அவருடைய நோக்கில் நின்று பார்க்கும் போது அவனுக்கு நிதர்சனம் புரிகிறது. எரிச்சல் பரிதாபமாகவும் அன்பாகவும் மாறுகிறது.

**

இந்த நாவல், துரை இயக்கி அஜித் நடித்த திரைப்படமான ‘முகவரி’யை எனக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தது. இசைத்துறையில் ஆர்வமும் திறமையும் கொண்ட ஓர் இளைஞன் சினிமாவில் முட்டி மோதி தோற்றுப் போய் குடும்பச் சூழல் காரணமாக இறுதியில் பணிக்குச் செல்லும் கதை. இந்துமதியின் நாவலில் இருந்து துரை தூண்டுதல் பெற்றிருந்தாலும் ஆச்சரியமில்லை. அண்ணன், அண்ணி பாத்திரம் உட்பட திரைப்படத்திற்கும் நாவலுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன.

இதில் இன்னொரு தற்செயல் ஒற்றுமையும் உள்ளது. இந்த நாவல், தொலைக்காட்சி தொடராக படமாக்கப்பட்ட போது விஸ்வம் பாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தார் என்று நினைவு. ஆனால் ‘முகவரி’யில் நாயகனுக்கு அண்ணனாக, அதாவது பரசு பாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார்.

நாவலை வாசித்து முடித்தவுடன் எப்போதோ பார்த்த தொடரின் சில காட்சிகளை பார்க்க முடியுமா என்று ஆசைப்பட்டேன். ஆனால் இணையத்தில் எத்தனை தேடியும் கிடைக்கவில்லை. (யாராவது கண்டெடுத்தால் சொல்லுங்கள்). 

இந்துமதி

இந்த நாவலில் மிக முக்கியமானதொரு அம்சத்தைக் கண்டேன்.

அதாவது பொதுவாக பெண் எழுத்தாளர்கள் என்றால் மாமியார் – மருமகள் பிரச்சினை, ஆணாதிக்க கணவனின் பிடியில் பல்வேறு கொடுமைகளை அனுபவிக்கும் ‘அபலை’ மனைவியின் பாத்திரம் என்று சமையல் அறையில் மூக்கைச் சிந்திக் கொண்டே எழுதியிருப்பார்கள் அல்லது இவற்றிலிருந்து மீறியெழுந்து ‘ஓ.. ஒரு தென்றல் புயலாகி வருதே’ என்று ஆவேசமான பெண்ணியக் குரலில், ஆண் குலத்தையே எரித்துச் சாம்பலாக்குகிற மிகையுடன் பொங்கியெழுந்து புரட்சி செய்வார்கள்.

ஆனால், இந்த நாவல் பெண் எழுத்தாளரால் எழுதப்பட்டிருந்தாலும் “ஆண் வாசனை’ மிகுந்த படைப்பாக இருப்பதை ஆச்சரியத்துடன் கவனித்தேன். எந்த இடத்திலுமே விஸ்வத்தின் பாத்திரம் தடம் மாறவில்லை. ஓர் ஆணின் மனதில் கூடு பாய்ந்த அதிசயத்தை இந்துமதி நிகழ்த்தியிருக்கிறார் எனலாம்.

விஸ்வத்தின் காதலி ஜமுனா ஒரு சராசரிப் பெண். ஆனால் தன்னை ‘இன்டலெக்சுவலாக’ உணரும் விஸ்வத்தால் அவளுடைய சராசரித்தனத்தை ஏற்க முடிவதில்லை. எரிச்சலுடன் அவ்வப்போது விலகி விடுகிறான். ஆனால் இவனுடைய அண்ணி ருக்மணியால் அறிவார்ந்த சூழலிலும் சரி, சராசரிகளின் உலகிலும் சரி, இரண்டிலுமே சகஜமாகப் புழங்க முடிகிறது. அவளுடைய இந்தக் குணாதிசயம் விஸ்வத்தின் அக உலகில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்துவதோடு இந்த நாவல் நிறைவுறுகிறது.

இந்துமதியை கணிசமாக படித்தவர்கள், அவர் எழுதியதில் இந்த நாவல் மட்டுமே குறிப்பிடத்தக்க படைப்பு என்கிறார்கள். கனவுலகில் மிதந்து திரியும் விஸ்வம், அங்கிருந்து சரிந்து யதார்த்தத்தின் படிகளில் நடந்து செல்லும் வீழ்ச்சியைத்தான் தலைப்பு குறிக்கிறது.

நிச்சயம் ஒருமுறை வாசிக்கத்தகுந்த நாவல்.




suresh kannan

Friday, December 20, 2019

மம்முட்டி என்கிற மனிதன்




மம்முட்டி எனக்குப் பிடித்த நடிகர்தான் என்றாலும் ஒரு நடிகரின் வாழ்வனுபவங்களில் என்ன இருக்கப் போகிறது, அப்படியே இருந்தாலும் அது பொய்யும் புனைவுமாய் திரையைப் போலவே மிகை ஒப்பனையுடன்தானே பதிவாகியிருக்கப் போகிறது என்கிற அசுவாரஸ்யத்துடனும் தவறான முன்முடிவுடனும்தான் அந்த நூலை வாசிக்க ஆரம்பித்தேன்.


அது, மூன்றாம் பிறை –  வாழ்வனுபவங்கள்.


மம்முட்டி என்கிற நடிகரைப் பற்றிய நூலாக அல்லாமல் பெரும்பாலும் ஒரு தனிநபரின் முகமாக  அமைந்திருப்பதே இந்த நூலின் சிறப்பு. தனது திரையுலக அனுபவங்களைத் தாண்டி தம் சொந்த வாழ்வின் அனுபவங்கள் பலவற்றையும் ஒப்பனையின்றி ஆத்மார்த்தமாக பகிர்ந்திருக்கிறார் மம்முட்டி. தமிழில் இப்படி எந்தவொரு நடிகராவது உண்மையாகவும் ஆத்மார்த்தமாகவும் எழுதுவாரா என்று சற்று நேரம் யூகித்துப் பார்த்தேன். தம் சுயநிறங்களை ஒரு வாக்குமூலம் போல ஒப்புக் கொள்ளும் மம்முட்டி தான் சறுக்கிய தருணங்களையும் பிறகு அதை உணர்ந்த பக்குவத்தையும் பாவ மன்னிப்பின் நெகிழ்ச்சியோடு எழுதியுள்ளார்.


***

முகம்மது குட்டி என்கிற இயற்பெயர் கொண்ட அந்த இளைஞன் ஓமர் ஷெரீப் போன்று ஒரு நடிகனாகும் விருப்பத்தில் அதையே தன் பெயராக வைத்துக் கொள்கிறான்.கல்லூரி நண்பர்களால் அந்தப் பெயராலேயே அறியப்படுகிறான். ஒருநாள்  சக நண்பனொருவனால் இயற்பெயர் கண்டுபிடிக்கப்பட்டு அவன் 'மம்முட்டி' என வேடிக்கையாக அழைக்க, பிடிக்காமலிருந்த அந்தப் பெயரே தன் அடையாளமாகி வாழ்நாள் முழுவதும் தன் பின்னாலேயே துரத்திக் கொண்டு வரும் சுவாரசியமான கட்டுரையோடு துவங்குகிறது இந்த நூல். (பிடிக்காமலிருந்த என் பெயர்)

தான் வழக்கறிஞராக பணிபுரிந்த போது, தன்னை தினமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன் ‘சார்.. நீங்க ஏன் சினிமா நடிகராகக்கூடாது. அதற்கான முகவெட்டு உங்களுக்கு இருக்கிறது’ என்கிறான். சினிமா ஆசை உள்ளுக்குள் கனன்று கொண்டிருக்கும் அந்த வழக்கறிஞருக்கு உள்ளுக்குள் ஜிலீர் என்கிறிருக்கிறது.

பிறகு புகழ்பெற்ற நடிகராகின பிறகு தன்னை வேடிக்கை பார்க்க முண்டியடிக்கும் கூட்டத்தில் போலீஸ்காரரால் அடிபட்டு ரத்தம் ஒழுகிய அந்த இளைஞனின் முகத்தை, பிரியத்துடன் தன்னை அழைத்த அந்தக் குரலை எங்கேயோ பார்த்த ஞாபகமிருக்கிறதே என்று யோசித்துப் பார்த்திருக்கிறார். பிறகுதான் அந்தச் சிறுவனின் நினைவு வருகிறது. தனக்குள் இருக்கும் நடிகனைக் கண்டுபிடித்த முதல் ரசிகனை பிறகு காண முடியவில்லை என்கிற துயரத்தை உண்மையாக பதிவு செய்கிறார். எப்படியாவது தேடிக் கண்டுபிடித்திருக்கலாமே என்று நமக்கே ஆதங்கம் பெருகுமளவிற்கு அந்த அனுபவம் அமைகிறது. (முதல் ரசிகனின் ரத்தம் தோய்ந்த முகம்).

பழங்குடி கதாபாத்திரமாக ஒரு திரைப்படத்தில்  மம்முட்டி நடிக்கிற போது துணை நடிகர்களாக உண்மையான பழங்குடி மனிதர்களே வரவழைக்கப்பட்டிருந்தார்கள்.  கும்பலாக அமர்ந்து உணவருந்துவது போன்ற காட்சி. கேமராவின் பொய்களுக்கு ஏற்ப நிறுத்தி நிறுத்தி உணவருந்த அவர்களுக்குத் தெரியவில்லை. சோறு கொட்டக் கொட்ட சாப்பிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். மம்முட்டியின் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மனிதருக்கு மம்முட்டி யாரென்று தெரிவதில்லை. அறிமுகமில்லாவிட்டாலும் எவரோ ஒரு நாடோடி போல என நினைத்து, மம்முட்டியின் இலையில் அவியல் தீர்ந்து போன போது தன்னிச்சையாக தன் இலையில் இருந்து அவியலை வாரி வைத்திருக்கிறார்.

முன்பின் அறிமுகமில்லா ஒருவனின் இலையில் உணவு தீர்ந்த போது எவ்வித தயக்கமுமில்லாமல் தன்னிடமிருந்து பகிர்ந்தளிக்கும் பழங்குடி மனோபாவத்தை மம்முட்டி நெகிழ்வுடன் வியக்கிறார். அவர்களைத்தான் நாகரிகம் அறியாதவர்கள் என்று உணவைப் பதுக்கும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். (கற்றுணர்தல்)

பிரசவ வலியுடன் சாலையில் காத்திருந்த பெண்ணுக்கு உதவியதில் அவர் தந்தை தந்த இரண்டு ரூபாய், படப்பிடிப்பு நடந்த வீட்டின் உரிமையாளர் மகனை வெளியேறச் சொன்ன கோபம், சக நடிகை பகிர்ந்து கொண்ட அந்தரங்கமான துயரம், ஏமாற்றிய தயாரிப்பாளரிடமிருந்து வசூலிக்காமல் போன பணம், ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாக நினைக்கும் மலையாளிகளை கண்டிக்கும் நேர்மை,  பெண்களை மதிப்பதை அமிதாப்பச்சனிடமிருந்து கற்றுக் கொண்ட சம்பவம் என்று ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளை ஏற்படுத்துகிறது.

மம்முட்டிக்குள் ஓர் அபாரமான எழுத்தாளன் ஒளிந்திருக்கிறான் என்பதை அடையாளப்படுத்தும் வகையான எழுத்து. மலையாளத்தில் இதன் மொழி எப்படி இருந்திருக்கும் என்கிற யூகத்தை தனது இலகுவான  தமிழ் மொழிபெயர்ப்பின் மூலம் உணர்த்தியிருக்கிறார் ஷைலஜா.

மிகவும் சுவாரசியமான நூல். வம்சி வெளியீடு


suresh kannan

Saturday, November 16, 2019

இரா.முருகன் என்கிற மாயக் கதைசொல்லி






மேற்கிலிருந்து இங்கு இறக்குமதியான இலக்கிய வடிவங்களுள் ஒன்று  குறுநாவல். வெகுசன இதழ்களின் உபகாரத்தில் சிறுகதை என்பது மெல்ல மெல்ல சுருங்கி ஸ்டாம்ப் அளவிற்கு மாறி விட்ட அவல சூழலில் சிற்றிதழ்கள், இடைநிலை இதழ்களின் தயவால்தான் அந்த வடிவம் இன்னமும் சற்றாவது மூச்சு விட்டுக் கொண்டிருக்கிறது. நாவலின் வளர்ச்சி இதற்கு நேர் மாறானது. தலையணை அளவிற்கு எழுதினால்தான் அது நாவல் என்று தொன்னூறுகளில் எவரோ அவசர சட்டத் திருத்தம் கொண்டு வந்தது போல  கனமான புத்தகங்கள் நிறைய உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு நாவலின் நூறு பக்கங்களை புரட்டி வாசித்து முடிப்பதற்குள் அந்த ஆசிரியரின் அடுத்த புத்தகம் வெளிவந்து விட்டதாக திகைப்பூட்டும் தகவல் வந்து சேருகிறது.

வாசிப்பவர்களை விட எழுதுபவர்கள் பெருகி விட்டார்கள் என்று நகைச்சுவையாக ஒரு காலத்தில் சொல்லப்பட்டவையெல்லாம் உண்மையாகிக் கொண்டு வருகிறது. எவை இலக்கியம், எவை அது அல்லாதது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்பட எவருக்கும் நேரமும் இல்லை; விருப்பமும் இல்லை. கவிதை நூல்களுக்கு மட்டும் என்றும் அழிவில்லை. விற்பனையாவதில்லை என்கிற புகார் தொடர்ந்து இருந்தாலும் கூட தமிழகத்தில் ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு கவிதையும் பத்து மணி நேரத்திற்கு ஒரு கவிதை நூலும் பிறப்பதாக ஓர் அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இந்தச் சூழலில் குறுநாவல் என்கிற வடிவம் யாராலும் போஷிக்கப்படாமல் அநாதையாக நின்று கொண்டிருக்கிறது. வளவளவென்று நீண்டு விட்ட சிறுகதையையும் குறைப்பிரசவமாக முடிந்து விட்ட நாவலையும் குறுநாவல் என்று நம்பிக் கொண்டிருந்த கெட்ட வழக்கமும் நம்மிடம் இருந்தது. அது அவ்வாறல்ல. குறுநாவலுக்கென்று ஒரு பிரத்யேகமான வடிவமும் துல்லியமான வரையறையும் இருப்பதாகச் சொல்கிறார்கள். டெக்கமரான் கதைகள் இந்த வகைமைக்கான முன்னோடி. 'குறுநாவல் தன் விரிவால் ஒரு முழு வாழ்க்கையைச் சொல்லக்கூடியது, தன் குறுக்கத்தால் கூர்மையாகத் தைக்கவும் கூடியது. அது கைப்பிடியளவு விதை, காட்டின் ஆகச்சிறிய வடிவம்' என்று தனது குறுநாவல்கள் தொகுப்பின் முன்னுரையில் சொல்கிறார் ஜெயமோகன்.

தமிழிலும் பல உன்னதமான குறுநாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. சட்டென்று நினைவிற்கு வருவது அசோகமித்திரனின் 'இன்ஸ்பெக்டர் செண்பகராமன்'. தமிழில் எழுதப்பட்ட அபாரமான குறுநாவல்களுள் ஒன்று. தி.ஜா.வின் நினைவாக,கணையாழி இதழ் ஆண்டு தோறும் குறுநாவல்களுக்கென ஒரு போட்டி நடத்தியது. இன்றைக்கு முன்னணி எழுத்தாளர்களாக விளங்கும் பலர் தங்களின் துவக்க கால கணக்குகளை இதில்தான் துவங்கினார்கள். குறுநாவல்களுக்கு ஓர் இலக்கிய அந்தஸ்தை உருவாக்கித் தந்தது கணையாழி.

***

எழுபதுகளில் எழுதத் துவங்கியவர் இரா.முருகன். துவக்க கால எழுத்தில் இருந்த தேசலான வாசனை காரணமாக சுஜாதாவின் நீட்சி என்று பரவலாக மதிப்பிடப்பட்டார். கவிதை, சிறுகதை, நாவல், பத்தி எழுத்து, கமல், கணினிவியல், சினிமா வசனம் என்று இருவரின் கலைப்பாதையில் உள்ள தற்செயல் ஒற்றுமைகள் காரணமாக அப்படி கருதப்பட்டாலும் சட்டென்று வேறு திசையில் திரும்பியது இரா.முருகனின் எழுத்து.

இரா.முருகன்  இதுவரை எழுதிய குறுநாவல்கள் அனைத்தும் ஒரு தொகுப்பாக கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது. ஏழு படைப்புகள் இதில் உள்ளன. ஒவ்வொன்றின் துவக்கத்திலும்  நூல் ஆசிரியரின் முன்குறிப்புகள் உள்ளன. எந்த ஆண்டில், இதழில், எந்தச் சூழலில் எழுதப்பட்டது என்பது போன்ற அத்தியாவசியமான குறிப்புகள். ஏழு படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு  விதமான ருசியிலான வாசிப்பனுபவத்தை தருகின்றன.  திண்ணை இதழில் வெளியான 'வாயு', அவல நகைச்சுவையில் அமைந்த, தமிழில் எழுதப்பட்ட அபாரமான குறுநாவல்களில் ஒன்று. இந்தத் தொகுப்பில் அது சேர்க்கப்படாத காரணத்தை முருகன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தாலும் அவர் தற்காலிகமாவாவது 'கறாரான இலக்கியவாதி'யாக' இருந்து அதை பிடிவாதமாக இந்த தொகுப்பில் இணைத்திருக்கலாம். தனிப்பட்ட அளவில் எனக்கு மிகவும் பிடித்த குறுநாவல் அது.

லத்தீன் அமெரிக்க இலக்கிய வகைமையான மாய யதார்த்த பாணி என்பது தமிழிற்கு இன்னமும் கூட பிடிபடாத நிலையில் அதன் துவக்க காலத்திலேயே சில பரிசோதனைகளை முயன்று பார்த்த முன்னோடிகளுள் ஒருவர் இரா.முருகன். வாசகனுக்கு புரிந்து விடவே கூடாது என்று திட்டமிடப்பட்டு செய்த சதி போல இந்த முயற்சிகளுள் சில பல போலிகளும் உற்சாக வீழ்ச்சிகளும் கலந்திருந்த சூழலில் அந்நிய பின்புலத்தை அப்படியே அபத்தமாக நகலெடுக்காமல் தமிழ் மரபுடன்  இணைத்து அந்த வகையை முயன்று பார்த்த வகையில் இரா.முருகனின் எழுத்து தனித்துவத்தைக் கொண்டிருக்கிறது எனலாம். இன்னொன்று முருகனின் மொழியில் இருக்கும் வசீகரம். கடப்பாரையை முழுங்கும் சிரமம் ஏதுமில்லாமல் மிக இயல்பாக வழிந்தோடும் சுவாரசியம் காரணமாக ஏறத்தாழ ஒரே மூச்சில் படித்து விடலாம்.

கலைடாஸ் கோப் வழியாக காணும் மாயக்காட்சிகள் போல முருகனின் உரைநடை கண்ணெதிரேயே சட்சட்டென்று மாறுகின்றன. ஆனால் இந்த பாணி வாசகனை ஈர்க்கும் வெற்று சுவாரசியமாக சுருங்கி விடாமல் இலக்கியமாகவும் உருமாறுவதே முருகனின் வெற்றி. ஒவ்வொன்றிலும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. இரண்டாம் பக்கத்தில் சித்தரிக்கப்படும் ஒரு காட்சியின் கீற்று, ஐந்து பக்கங்கள் தாண்டி வேறொரு கண்ணியில் இணைக்கப்படுவதில் முருகனின் எழுத்து திறனையும் திட்டமிடலின் பிரக்ஞையையும் பிரமிக்க முடிகிறது.


***

முதல் குறுநாவலான 'விஷம்' 1991-ல் எழுதப்பட்டது. கணையாழி குறுநாவல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரசுரமானது. முதல் குறுநாவல் என்பதால் போகிற போக்கில் எழுதியதாக முருகன் தெரிவித்தாலும் அந்த அலட்சியம் மிக கவனமாகவும் திறமையாகவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. தன் காதலி பற்றிய சுவாரசியமான கனவுடனும் மூத்திரம் முட்டும் அவஸ்தையுடனும் உறங்கிக் கொண்டிருக்கும் கதைசொல்லியை கலைத்து எழுப்புகிறது வாசலில் ஒலிக்கும் அழைப்பு மணி. சக பணியாளனான போத்தி விஷம் குடித்திருக்கிறான். அவசர உதவி தேவை. அரும்பும் மீசையுடன் போத்தியின் மகன் வாசலில் நின்று கொண்டிருக்கிறான். இப்படி துவங்கும் இந்தக் குறுநாவல் சுவாரசியமான விவரணைகளைத் தாண்டி சில பக்கங்கள் தாண்டி சட்டென்று ஓர் எதிர்பாராத தருணத்தில் போத்தியின் கதையாக மாறுகிறது. பிறகு அங்கிருந்து தாவி சேகரனின் கதைக்கு. பிறகு இந்த வட்டம் முடிந்து போத்தி அருந்தியது விஷமும் இல்லை மண்ணுமில்லை என்கிற அவல நகைச்சுவையுடன் முடிகிறது.

இது போன்ற நான்-லீனியர் கதை கூறல் இன்னமும் கூட நமக்குப் பழக்கமாகவில்லை. உலக சினிமாக்கள் மெல்ல பரிச்சயமாகிக் கொண்டிருக்கும் சமகாலத்தில்தான் திரையில்தான் இந்த பாணி சற்றாவது பிடிபடுகிறது. ஆனால் தொன்னூறுகளின் எழுத்திலேயே இதை பிரமாதமாக முயன்ற காரணத்திற்காக முருகனை வியக்கலாம்.

அடுத்த குறுநாவலான 'மனை' மலையாள தேசத்தில் உலவுகிறது. 'புதிய பார்வை' குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது. சமூக படிநிலையின் உச்சத்தில் இருந்த நம்பூதிரிகளின் வாழ்க்கை முறை பற்றி கடந்த நூற்றாண்டின் பின்னணியில் சித்தரிக்கிறது. ஒரு நம்பூதிரி குடும்பத்தில் மூத்தவர் மட்டும் திருமணம் செய்யலாம். முதல் மனைவி அலுக்கத் துவங்குவதற்கு முன்பே இன்னொரு இளம் பெண்ணைத் தேடி கூடுதல் திருமணங்கள் செய்யலாம். இளையவர்களுக்கு அந்த  வாய்ப்பில்லை. சொத்துரிமை பாதுகாப்பிற்கான ஏற்பாடு அது. இளைய நம்பூதிரிகள் எத்தனை நாயர் சமூகப் பெண்களுடன் கூடிக் கொள்ளலாம். கேள்வி கேட்பாரில்லை. நாயர்களுக்கும் இப்படியொரு சம்பந்தம் கிடைப்பது பெருமையே. பிராமணர்கள் எதிரே வந்தால் தாழ்த்தப்பட்ட குடியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை விலக்கிக் கொண்டு நிற்க வேண்டியிருந்த அவலமான காலக்கட்டம்.

இந்த பிற்போக்கு சூழலில் இருந்து தப்பிப் பிறந்தவன் சீதரன். நம்பூதிரி குலத்தின் வழக்கத்திலேயே இல்லாதபடி இளையவனாக இருந்தாலும் தன் ஒரே காதல் துணையை கண்டடைந்து மணம் புரிந்தவன். அவனுடைய துணைவியான பகவதியும் இவனைப் போலவே முற்போக்காக சிந்திப்பவள். மூத்த நம்பூதிரியின்  எச்சில் இலையில் முதலில் சாப்பிட்டு தன் உரிமையை நிலைநாட்டிக் கொள்ள அடித்துக் கொள்ளும் மனைவிகளின் போராட்டத்தைக் கண்டு மனம் கூசுபவள். யட்சியுடன் அந்தரங்கமாக உரையாடுபவள். மற்றொரு இளைய நம்பூதிரியான நீலகண்டனின் காம விளையாட்டால் கைவிடப்பட்டு அபலையாக வீட்டு வாசலில் வந்து நிற்கும் கார்த்தியாயினிக்கும் அவளது சின்னஞ்சிறிய மகளுக்கும்  எதிர்ப்பையும் மீறி ஆதரவளிக்கிறாள். மூத்த நம்பூதிரி ஆத்திரத்தில் எகிறிக் குதிக்கிறார். பகவதியின் புரட்சிக்கு சீதரனும் ஆதரவாக துணை நிற்க, கார்த்தியாயினியின் பிணத்திற்கு அவனே எரியூட்டுகிறான். அவளது மகளுடன் இவர்கள் ஊரைவிட்டு கிளம்பும் காட்சியுடன் இந்தக் குறும் புதினம் நிறைகிறது.

முருகனின் துல்லியமான விவரணைகளால் கடந்த கால சமூகம் நம் கண் முன் அசலாக வந்து நிற்கிறது. உரத்த குரலில் அல்லாமல் ஆண்களின் மேலாதிக்க சமூக இழிவுகளும் சாதியக் கட்டுமான அட்டூழியங்களும் இயல்பாக ஆனால் அழுத்தமாக சொல்லப்படுகின்றன. நூற்றாண்டு கழிந்தாலும் இன்னமும் கூட பேசப்பட்டுக் கொண்டிருக்கும் தாத்ரிக் குட்டியின் மீதான ஸ்மார்த்த விசாரம் பற்றிய குறிப்பு இந்தக் குறுநாவலின் இடையில் வருகிறது. கேரளப் பண்பாட்டு சூழலில் ஏற்பட்ட மறுமலர்ச்சிக்கான குறியீட்டுடன் இந்தப் படைப்பு நிறைவது சிறப்பு.

***

மூன்றாவது படைப்பான 'முத்தம்மா டீச்சர் பார்த்து முடிக்காத தமிழ்ப்படம்', இந்த தொகுப்பின் சிறந்த அடையாளம் எனலாம். இந்தக் குறுநாவலின் மூலம், மாய யதார்த்த கதையாடல் நோக்கி தன்னுடைய முதலடி அமைந்ததாக முருகனின் குறிப்பு சொல்கிறது. திருமணம் கைகூடாத ஒரு பேரிளம் பெண்ணின் பெருமூச்சுகளும் தகிப்புகளும் பாலியல் விழைவுகளும் அது சார்ந்த கற்பனைகளும் இந்தப் புதினத்தின் வரிகள் முழுவதிலும் பொங்கி வழிகின்றன. சட்சட்டென மாறும் காட்சிகள். முன்னும் பின்னுமாக நகரும் காலம். புகைப்படத்திலிருந்து உரையாடும் பெற்றோர். முத்தம்மா டீச்சரின் உடமையைக் கைப்பற்ற ஆவேசமாக செயல்படும் தம்பியும் அவனது மனைவியும். உரிமையாக கைபோடும் மாப்பிள்ளையும் கதிரேசன் சாரும்.

முந்தைய புதினத்தில் திருமணம் ஆகாமல் தனிமையறையில் தன் உடல் சார்ந்த கொதிப்புகளை  காலம் பூராவும் அடக்கிக் கொண்டு கனவுகளில் அதை நிறைவேற்றிக் கொண்டு வாழ வேண்டியிருந்த நம்பூதிரிப் பெண்களின் துயரம் ஏறத்தாழ முத்தம்மா டீச்சரின் மீதும் அப்படியே படிந்திருக்கிறது. சமூகத்தின் நிறைவேறாத காமத்தின் வடிகாலாக சினிமாக் காட்சிகளும் பாடல்களும் எவ்வாறு விளங்குகின்றன என்பது தொடர்பான விவரணைகள் இதில் நிறைந்திருக்கின்றன. மூத்த பிராயத்திலும் டூயட்களை கைவிடாத தமிழ் சினிமா நாயகர்கள் நுட்பமாக கிண்டலடிக்கப்படுகிறார்கள். அபாரமான குறுநாவல்.


நான்காவது குறும்புதினம் -  'பகல் பத்து ராப்பத்து' - தனித்தனியாக நிகழும்  வெவ்வேறு துணைக் கதைகள் மாறி மாறி  பயணிக்கும் நான்-லீனியர் கதையாடல் முறை. ஒரு நல்ல குறும்படமாக இது ஆகக்கூடும் என்கிற எண்ணத்தை உற்பத்தி செய்கிறது. வைணவ சமூகத்தில் பெருமாளைக் கொண்டாட பத்து நாட்கள் நிகழும் உற்சவமான 'பகல் பத்து ராப்பத்து' நிகழ்வை தலைப்பு நினைவுப்படுத்தினாலும் மும்பையின் நவீன பின்னணியில் காலை பத்து முதல் இரவு பத்து வரும் நிகழ்ச்சிகளின் கோர்வை இது.

புளியோதரை அஜீர்ணத்தோடும் கோயில் கும்பாபிஷேக கலெக்ஷன் கவலையோடு மும்பையின் லோக்கல் டிரெயின் கூட்ட இம்சையில் பயணிக்கும் ராம்பத்ரன் அய்யங்கார். சாலையோரத்தில் கோலக் குழல் விற்கும் சாந்தாபாய். கூடியிருக்கும் காமாந்தகாரர்களின் பார்வையிலிருந்து தன் கற்பையும், உடல் ஊனமுற்று வீட்டில் முடங்கியிருக்கும் கணவனையும், குடும்பத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறாள். மும்பையில் ஒரு பிளாட்டை வாங்குவதற்காக சோரம் போகவும் தயக்கத்துடன் தயாராக இருக்கும் மாடலிங் பெண் ப்ரீதி. இந்த மூன்று நபர்களின் ஒருதின வாழ்வில் நிகழும் சம்பவங்கள், வெவ்வேறு கவலைகள்.

அவல நகைச்சுவையுடன் நிறையும் ப்ரீதியின் பகுதி. கணவனின் துரோகத்துடன் முடியும் சாந்தாபாயின் பகுதி. நடுத்தர வாழ்வின் சலிப்புடன் நிறையும் ராமபத்ரனின் பகுதி. ஆர்வமும் கலையுணர்வும் உள்ள எந்த குறும்பட இளைஞனாவது இதை டிஜிட்டல் வடிவமாக சாத்தியப்படுத்தலாம்.


***

'ராத்திரி வண்டி' - கணையாழி குறுநாவல் போட்டியில் தேர்வானது. காலம் ஒரு தூலமான பரிணாமாகக் கதையில் முன்னும் பின்னும் சதா இயங்கிக் கொண்டே இருக்கும் இந்த எழுத்து நடைதான் பின்னர் நிகழ்ந்த அரசூர் வம்சத்திற்கு அடித்தளமாக அமைந்தது என்கிறார் முருகன். நகுலனால் பாராட்டப்பட்ட படைப்பு. ரயிலை தவறுதலாகவோ திட்டமிட்டோ அலட்சியமாகவோ தவற விட்டு இறங்கி விடும் ஓவியன். இளைஞன்.  நிர்வாணமான உடல்களை வரைவதில் ஆர்வமுள்ளவன். 'ச்சீ  என்ன கருமம்' என்று இகழும் சுற்றியுள்ள கூட்டம் அதே சமயம் ரகசியமான கண்களால் ஓவியத்தை தடவுவும் தவறுவதில்லை. தன் சகோதரனின் ஜாடையில் இருப்பதால் இவனை அழைத்து வந்து உபசரிக்கும் ஸ்டேஷன் மாஸ்டர். இருவரின் நினைவுகளின் மூலமாக இந்தப் புதினம் மாறி மாறிப் பயணிக்கிறது. விநோதமான, சுவாரசியமான வாசிப்பவனுத்தை தரும் படைப்பு.

அடுத்தது 'விஷ்ணுபுரம்' என்று தலைப்பிடப்பட்டு கணையாழியில் வெளியானது. ஜே.டி.சாலிங்கரின் 'The Catcher in the Rye' போல 'Coming-of-age' வகைமைப் புதினங்கள் தமிழில் அரிதானது. விடலையில் இருந்து இளைஞர்களின் உலகத்தில் குதிக்கும் அந்த மாற்றம் எப்போது நிகழ்கிறது என்பதை யூகிக்கவே முடியாத அந்த தன்மையின் வசீகரப் பின்னணியில் தமிழில் வெளியாகியிருப்பவை எவை என்று யோசித்துப் பார்த்தால் அசோகமித்திரனின் '18வது அட்சக்கோடு' சுஜாதாவின் 'நிலா நிழல்' போன்றவை உடனே நினைவுக்கு வருகின்றன. இதே கணையாழி குறுநாவல் வரிசையில் வெளியான, 'கர்னல் தோட்டக் கணக்கு'. இந்த வகைமையில் எழுதப்பட்ட மிகச் சிறந்த குறுநாவல் எனலாம். நமது பள்ளிக்கூட காலத்தின், விடலை மனங்களின் அறியாமைகளை, குறும்புகளை மிக அழுத்தமான நினைவுகூர வைக்கும் படைப்பு.

இதே வகைமையில் இரா.முருகன் முயன்ற குறும்புதினம்தான் 'விஷ்ணுபுரம் தேர்தல்'. ஏதோவொரு கடந்த காலத்தில் சிற்றூர் ஒன்றில் நிகழும் உள்ளூர் தேர்தல். அந்த ஊரின் விடலைகளின் பார்வையில், சம்பவங்களின் கோர்வையில் இந்தப் புதினம் நகர்கிறது. இந்தச் சிறுவன்களில் ஒருவன் பலகாலம் கழித்து இதே ஊருக்குத் திரும்பி வருகிறான். அப்போது நிகழும் ஒரு தேர்தல் பற்றி ரிப்போர்ட்டிங் செய்வதற்காக. புறவயமாக நிறைய மாற்றம் நிகழ்ந்தாலும் அகவயமாக காலம் அப்படியொன்றும் மாறி விடவில்லை. தேர்தல் கலாட்டாக்களும் குளறுபடிகளுமாக அப்படியே உறைந்திருக்கிறது.

வெளிநாட்டுத் தூதகரங்களுக்கு கடிதம் எழுதி புரியாத மொழியில் இருந்தாலும் பளபள காகிதத்தில் வண்ணப்புகைப்படங்களுடன் வரும் புத்தகங்களைக் கண்டு குதூகலிக்கும் சிறுவர்களின் குறும்பு துவங்கி பல்வேறு சுவாரசியமானன சம்பவங்கள், விவரணைகள் இந்த நாவலின் வாசிப்பை சுவாரசியப்படுத்துகின்றன.

இந்த தொகுப்பின் இறுதியான படைப்பு 'தகவல்காரர்'. 'முத்தம்மா டீச்சர்' போல இன்னொரு மாய யதார்த்த பாணி படைப்பு. அரசூர் வம்ச முத்தொகுதியின் முன்னோடி விதை. அபாரமாக எழுதப்பட்ட ஒரு கவிதையுடன் துவங்குகிறது. சுருங்கிப் போகும் சமூகங்களுக்காக ஜாதி, இனப் பத்திரிகை நடத்துவதால் ஜீவிக்கும் ஒரு முதியவர். அதுவும் சுருங்கி எழுபது குடும்பங்களின் சாவுச் செய்திகளை பரப்பும் அலுப்பான பணி. வழியில் இடர்ப்படும் ஒரு சாமியாரின் மூலம் அவர் எதிர்கொள்ளும் மாயவிநோத சம்பவங்கள். சாவுக்களையும் அது சார்ந்த தத்துவமும்  பரிபூர்ணமாக படிந்த படைப்பு. இதுவே இதற்கு ஒரு பிரத்யேகமான ருசியை அளிக்கிறது.

இரா.முருகனின் இந்த ஏழு குறுநாவல்களும் வெவ்வேறு விதமான வாசிப்பு அனுபவத்தை தருகின்றன. இவரது எழுத்திலுள்ள சுவாரசியத்தின் தன்மையால் இந்தப் பரிசோதனை முயற்சிகளில் விதவிதமான அலைச்சல்களும் நிறைந்திருந்தாலும் ஒருகணம் கூட அலுப்பு தட்டுவதில்லை. இளைய தலைமுறை வாசகர்களுக்கு ஓர் உறுதியான, உபயோகமான பரிந்துரையை முன்வைக்க விரும்புகிறேன். முருகனை அவசியம் வாசியுங்கள்.

***

இரா.முருகன் குறுநாவல்கள்
கிழக்கு பதிப்பகம்
300 பக்கங்கள் - விலை ரூ.250/-


(உயிர்மை இதழில் பிரசுரமானது) 

suresh kannan

Sunday, April 14, 2019

ஊழல், உளவு, அரசியல்






சங்கர் எழுதிய ‘ஊழல் – உளவு – அரசியல்’ நூலை வாசித்து முடித்தேன். ஒரு துப்பறியும் நாவலை வாசிப்பது போன்ற சுவாரசியத்துடன் ஏறத்தாழ ஒரே மூச்சில் வாசிக்க முடிந்தது. ஆனால் இது புனைவு அல்ல. மூர்க்கமான அரசு இயந்திரத்துடன் மோதி ஜெயித்த ஒரு சாமானியன் எதிர்கொண்ட திகிலும் பயங்கரமும் கொண்ட அனுபவங்களின் தொகுப்பு. அரசு இயந்திரத்தின் ஒரு உதிரியே அந்த இயந்திரத்தின் மோசடியை வெளிப்படுத்தத் துணிந்த துணிச்சலும் நேர்மையும் இந்த நூலின் பக்கங்களில் பதிவாகியுள்ளன.

தந்தையின் மறைவு காரணமாக 16 வயதிலேயே அரசுப் பணியில் இணையும் சங்கர், ஒரு விடலை இளைஞனின் அப்பாவித்தனமான பார்வையில் விரியும் அலுவலக அனுபவங்களை யதார்த்தமாக விவரித்துள்ளார். மெல்ல மெல்ல தன்னை முன்னேற்றிக் கொள்ளும் விவரங்கள் நம்பகத்தன்மையுடன் பதிவாகியுள்ளன. அங்கு நிகழும் அநீதிகளை, ஊழல்களை, மோசடிகளை நடைமுறை விவரங்களுடன் விவரித்துள்ளார். அரசுத்துறையில் பணியாற்றிக் கொண்டே இவற்றை நேரடியாக எதிர்க்க முடியாத சூழலில் மறைமுகமானதொரு யுத்தத்தைத் துவங்குகிறார். கோபமும் குதர்க்கமும் கொண்ட ஒரு பலமான குத்துச்சண்டை வீரனை எதிர்த்து ஐந்து வயது சிறுவன் சண்டைக்கு இறங்குவதற்கு நிகரான காரியம் இது.

எனவே இதன் எதிர்விளைவுகளையும் இவர் பிறகு எதிர்கொள்ள நேர்கிறது. காவல்துறை இழைத்த சித்திரவதைகளை இவர் இயல்பாக விவரிக்கும் போது மனம் கலங்கிப் போகிறது. சராசரி நபராக இருக்கும் ஒவ்வொருவரும் தாமே அங்கு மாட்டிக் கொண்டிருக்கும் உணர்வை ஏற்படுத்துகிறார். இவரது சிறை அனுபவங்கள் பல திரைப்படங்களை நினைவுப்படுத்துகின்றன. ஆனால் அதையும் தாண்டிய நடைமுறை நுண்விவரங்கள். பார்ப்பதற்கு பயங்கரமாகத் தோற்றமளிக்கும் ஒருவர் எவ்வாறு வெள்ளந்தியாக உதவுகிறார் என்கிற விஷயம் சுவாரசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிறகு தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் வழக்கை சங்கர் எதிர்கொள்கிறார். நீதித்துறையும் காவல்துறையும் அதிகார வர்க்கமும் எத்தனை மெத்தனத்தையும் அலட்சியத்தையும் சார்புகளையும் சுயநலத்தையும் கொண்டு இயங்குகிறது என்பதற்கான சாட்சியங்கள் இந்தப் பக்கங்களில் விரிகின்றன.

தான் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து விவரிக்கும் போது அவை வாசகர்களிடம் எவ்வித இரக்கத்தையும் கோரிவிடக்கூடாது என்பதில் சங்கர் கவனமாக இருக்கிறார். கழிவிரக்கத்தின் தடயங்கள் இல்லை. அதே சமயத்தில் தான் ஒரு ஹீரோ என்கிற சாகச பெருமிதமும்  அவரிடமும் இல்லை. ஒரு சாமானியனாக தான் எதிர்கொண்ட வயிற்றைப் பிசையும் முந்தைய அனுபவங்களை விலகி நிற்கும் எள்ளலோடு எழுத்தில் விவரிக்கிறார். ஆனால் அதையும் மீறி உண்மை நிலவரத்தை கற்பனை செய்து பார்க்கவே நமக்குத்தான் அத்தனை பயமாக இருக்கிறது.

ஒரு சமூகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்குமே மனச்சாட்சி, நேர்மை போன்ற நல்லியல்புகள் அடிப்படையாக இயற்கையில் பொருத்தப்பட்டிருக்கின்றன. இந்தக் குரல் எழுப்பும் எச்சரிக்கையை பலர் காது கொடுத்துக் கேட்டு தங்களின் கீழ்மைகளைக் கட்டுப்படுத்திக் கொள்கிறார்கள். 

ஆனால் சிலர் இவற்றையெல்லாம் கழற்றி ஓரமாகப் போட்டு விட்டு சுயநலம், பேராசை, தன் வளர்ச்சியை பாதிப்பவற்றின் மீதான அச்சம், எனவே அவற்றுடன் இயைந்து போதல், அதற்காக எந்தவொரு அப்பாவியையும் பலி கொடுக்கத் தயாராக இருக்கும் கருணையற்ற தன்மை போன்றவற்றுடன் இயங்குகிறார்கள். அவர்களைப் பற்றிய விவரங்கள் இந்த நூலில் பதிவாகியிருக்கின்றன. ஒட்டு மொத்த அரசுத்துறையே இப்படித்தான் இயங்குகிறது.  குறிப்பாக காவல்துறை இயங்கும் விதம் அவர்களின் இயந்திரத்தனமான மிருகத்தனத்தை உறுதி செய்கிறது.

அரசியல்வாதிகளை விடவும் அதிகார வர்க்கம் எத்தனை பலம் வாய்ந்தது என்கிற நடைமுறை இந்த நூலில் நுண்விவரங்களுடன் பதிவாகியிருக்கிறது. அதே சமயத்தில் அப்போதைய ஆளுங்கட்சியின் நோக்கத்தை திருப்தி செய்வதற்காக எந்த வித சர்க்கஸ் வித்தைகளையும் செய்ய இவர்கள் தயாராகவும் இருக்கிறார்கள் என்கிற முரணும் பதிவாகியுள்ளது. ஆட்சி மாறியவுடன் உடனே பச்சோந்திகளாக மாறவும் இவர்கள் தயங்குவதில்லை.

இவர்கள் கற்ற கல்வி, பெற்ற அனுபவம் எல்லாம் குற்றங்களையும் அதிகார துஷ்பிரயோகங்களையும் எப்படி மூடி மறைத்து திறமையாக செய்யலாம் என்பதற்கே பயன்படுகிறது. அரசியல்வாதிகளையாவது ஐந்து வருடத்தில் துரத்தி விடலாம். ஆனால் ஓய்வு பெறும் வரை இவர்களின் அதிகார துஷ்பிரயோகங்களையும் சுயஆதாயங்களுக்காக செய்யும் அநீதிகளையும் கட்டுப்படுத்துவது கடினமானதாக இருக்கிறது. 

() () () 


ஆனால் இருளே நிறைந்திருக்கும் பிரதேசத்தில் நம்பிக்கையின் வெளிச்சம் இல்லாமல் போகாது. நூலாசிரியர் முதற்கொண்டு அவரது அலுவலகத்தில் பணிபுரியும் சில நல்ல மனிதர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், நண்பர்கள் போன்றோரின் துணையுடன்தான் தன் மீது சுமத்தப்பட்டிருந்த முள்கீரிடத்தை ஒருவாறாக இவர் கழற்ற முடிகிறது. ஆனால் அது எத்தனை எளிதான பாதையாக இல்லை. சங்கரின் குடும்பமே வழக்கு விசாரணையால் அலைக்கழிக்கப்படுகிறது. உதவி செய்த நண்பர்கள் மிரட்டலுக்கும் நெருக்கடிக்கும் ஆளாகிறார்கள்.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ரமணா திரைப்படத்தில் ஒரு விஷயம் வரும். ஊழலும் மோசடியும் நிறைந்திருக்கும் ஒரு அரசு அலுவலகத்தில் நேர்மையாகவும் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டும் இயங்கும் ஒன்றிரண்டு நபர்களாவது இல்லாமல் போக மாட்டார்கள். அப்படியொரு மனிதராகவே சங்கர் காட்சி தருகிறார். அவருக்கு உதவி செய்யும் நண்பர்களும் தெரிகிறார்கள். அரிய விதிவிலக்குகள்.

இத்தனை கசப்பான அனுபவங்களுக்கு ஆளாகி மீண்ட சங்கர் செய்த குற்றம்தான் என்ன? அரசு இயந்திரத்தில் நிகழும் அநீதிகளின் முக்கியமானதொரு  துளியை மட்டும் வெளிப்படுத்த முயற்சிக்கிறார். ஆனால் ஒட்டு மொத்த இயந்திரமே இவர் மீது மூர்க்கமாக பாய்ந்து இவருடைய வாயை அடைக்க, சாம, தான, பேத, தண்டம் என்று அனைத்து வழிகளையும் முயல்கிறது. ஏனெனில் அது பெரிய அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் தொடர்பான ஒரு கண்ணியாக இருக்கிறது.

சங்கர் எதிர்கொண்ட அனுபவங்களை வாசிக்கும் போது ஒரு சராசரி நபராக எனக்குள் அச்சமே பரவியது. சமூகக் கோபத்தில் ஃபேஸ்புக்கில் எதையாவது எழுதி வைத்திருப்பேனோ என்பது போன்ற திகிலான எண்ணங்கள் உருவாகின. ஆனால் அதே சமயத்தில் சமூக அநீதிகளை எதிர்ப்பதற்கான ஒரு துளி செயலையாவது செய்ய வேண்டும் என்கிற உத்வேகத்தையும் தருகிறது.

காவல் துறை அதிகாரிகளுடன் பணிபுரிந்த காரணத்தினால் அது சார்ந்த நடைமுறை அனுபவங்கள், சட்டவிதிகளின் அடிப்படைகள் போன்வற்றின் சிலவற்றையாவது சங்கர் அறிந்துள்ளார். எனவே அவற்றின் துணை கொண்டு எதிர்கொள்ள சங்கரால் இயன்றிருக்கிறது. ஆனால் இவை எதுவுமே இல்லாத ஒரு சாமானியன் என்ன செய்வான்? எளிய குற்றங்களைச் செய்து விட்டு வறுமையின் காரணமாக பல வருடங்களாக விசாரணை கைதிகளாகவே பலர் சிறையில் இருக்கும் அவலத்தையும் சங்கர் பதிவு செய்துள்ளார்.

சிறை என்பது ஒரு தனிப்பட்ட அரசாங்கமாகவே இயங்குகிறது. லஞ்சம்தான் அதன் ஆதார இயங்குசக்தி. பல வருடங்களாகவே நீடிக்கும் இந்த நிலைமை அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் நீதித்துறைக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் அரிதான சில விதிவிலக்குகளைத் தவிர இவற்றை கறாராக மாற்றியமைக்க ஏன் எவருமே நடவடிக்கையும் முயற்சியும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பல்வேறு விதமான ஒழுங்கீனங்களுடன் இயங்குவதுதான் ‘சிஸ்டம்’ என்பதை பலரும் அப்படியே ஏற்றுக் கொண்டு விட்டார்களா?

() () () 



இந்த நூலை நிச்சயம் வாசிக்க வேண்டுமென்று அனைவருக்கும் பரிந்துரைப்பேன். ஒட்டுமொத்த அரசுத் துறையே ஊழலிலும் மோசடியிலும் அதிகாரதுஷ்பிரயோகத்திலும் புரையோடிப் போயிருக்கும் அவலத்தின் ஒரு துளி சித்தரித்தை இந்த நூல் துணிச்சலாக வெளிப்படுத்தியிருக்கிறது. சம்பந்தப்பட்ட பெயர்கள் அப்படியே வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒளிவும் மறைவும் இல்லை. குறிப்பாக அரசியல் கட்சித் தலைவர்களை தங்களின் ஆதர்சங்களாக கருதிக் கொண்டிருக்கும் அப்பாவி தொண்டர்கள், விசுவாசிகள் படித்த புத்திசாலிகள் போன்றோர் இந்த நூலை அவசியம் வாசிக்க வேண்டும். அவர்கள் அறிந்திருக்கும் ஆளுமைகளின் நேர்மறையான வெளிச்சத்திற்குப் பின்னால் இருளும் கொடூரமும் நிறைந்திருக்கும் உலகு நிறைந்திருக்கிறது என்பதை நிச்சயம் அறிய வேண்டும்.

ஒருவர் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் தன் மீதும் தன்னைச் சார்ந்தவர்களின் மீதும் உள்ளவர்களின் குற்ற வழக்குகளையும் விசாரணைகளும் குழி தோண்டிப் புதைப்பதற்கான காரியங்களை விரைவாக நிறைவேற்றுகிறார். அதே சமயத்தில் தனது எதிரிகளின் மீதான வழக்கு முகாந்திரங்கள், அவற்றிற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவதல் போன்றவற்றி முழு மூச்சாக ஈடுபடுகிறார். அரசு இயந்திரம் பெரும்பாலும் இதற்கு துணை போக வேண்டியிருக்கிறது. எதிர் தரப்பில் இருந்தவர் ஆட்சிக்கு வந்ததும் அவரும் இதையே செய்கிறார். இப்படியொரு விஷச்சுழற்சியில் தேசம் பிடிபட்டிருக்கிறது. இதை எதிர்ப்பவர்கள் ஈவு இரக்கமின்றி ஒடுக்கப்படுகிறார்கள். சங்கரின் அனுபவங்களும் இதைத்தான் பிரதிபலிக்கின்றன.

சங்கரின் துணிச்சலுக்காகவும் நேர்மைக்கும் அவருக்குள் இயங்கும் ஆதாரமான அறவுணர்விற்காகவும் அவரைப் பாராட்ட விரும்புகிறேன். சராசரி நபர்களின் பிரதிநிதியாக அவரை மகிழ்ச்சியுடன் அரவணைக்க விரும்புகிறேன். “சங்கர் யார் தெரியுமா, அவருடைய பின்னணி, நோக்கம் தெரியுமா?” என்பது போல் சிலர் ஐயம் எழுப்பக்கூடும். ஆனால் இந்த நூலில் விவரிக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகள் சமூக நடப்புகளையே பிரதிபலிக்கின்றன. கற்பனையாக எதுவும் எழுதப்படவில்லை. அந்த ஆதார உணர்வும் அறமும் இருப்பதை உணர முடிகிறது.  







suresh kannan

Tuesday, January 29, 2019

அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்' - ஒரு மீள் வாசிப்பு





ஒரு சினிமா நிறுவனத்தில் நெடுங்காலம் பணி புரிந்ததின் மூலம் அசோகமித்திரனுக்கு எந்த அளவிற்கான லெளகீகத் தேவைகள் பூர்த்தியடைந்தன என்பது பற்றி நாம் அறியவில்லையென்றாலும் அந்த உள்வட்ட அனுபவத்தின் மூலம் நவீன தமிழ் இலக்கியத்திற்கு அற்புதமான சில படைப்புகள் கிடைத்திருப்பது  குறித்து மகிழலாம். அசோகமித்திரன் எழுதிய சிறுகதைகளில், நாவல்களில், சினிமா தொடர்பான சில  கட்டுரைகளில் திரையுலகத்தின் பிரத்யேகமான சில அந்தரங்கமான தருணங்கள், பகுதிகள், நபர்களைப் பற்றிய  சித்திரங்கள் மிக நுட்பமாக புனைவு மொழியில் பதிவாகியுள்ளன.

தன் முதலாளியான ஜெமினி வாசனிடம் பணி புரிந்த அனுபவங்களையொட்டி 'My Years with Boss' என்றொரு ஆங்கில நூலை எழுதினார் அசோகமித்திரன். 'மானசரோவர்' நாவலில் ஒரு முன்னணி நடிகனுக்கும் சினிமா உதிரி தொழிலாளிக்கும் உள்ள விசித்திரமான நட்பு பதிவாகியுள்ளது. இந்த நோக்கில் அசோகமித்திரன் திரைத்துறையின் ஓர் அங்கமாக பணிபுரிய நேர்ந்தது தமிழ் இலக்கியத்திற்கு லாபமே. இதன் உச்ச மதிப்பு என 'கரைந்த நிழல்கள்' நாவலைச் சொல்ல முடியும். தமிழில் எழுதப்பட்ட அபாரமான புதினங்களுள் முக்கியமான படைப்பு இது. சமகால மீள்வாசிப்பிலும் கூட தனது புத்துணர்ச்சியையும் புதுமையையும் இது இழக்கவில்லை என்பதே இதன் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டுகிறது.

'கரைந்த நிழல்கள்' 1967-ம் ஆண்டில் 'தீபம்' இதழில் தொடராக வந்தது. பல பதிப்புகளைக் கடந்துள்ள இந்த நூல் ஆங்கிலம் உள்ளிட்ட இதர மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 2005-ல் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட சிறப்பு பதிப்பில் 'இந்த நாவல் எழுதப்பட்டு நாற்பதாண்டுகள் ஆகியும் இதற்கு இன்னமும் தேவையிருக்கும் என்ற அவர்கள் நம்பிக்கை எனக்கு மிகுந்த உற்சாகம் அளிக்கிறது' என்று அதன் முன்னுரையில் எழுதுகிறார் அசோகமித்திரன்.

நாவல் வெளியான சமயத்தில் கிடைத்த வரவேற்பையும் எதிர்மறையான விமர்சனத்தையும் ஒரு குழந்தையின் கண்களின் வழியாக சமநிலையுடன் ஒரே மாதிரியாக  வியக்கிறார் அசோகமித்திரன். '.. நான் எழுதியது இவ்வளவு தீவிரமான பாதிப்பு ஏற்படுத்தியதைக் கண்டு எனக்கு வியப்பாக இருக்கிறது'. நடேச மேஸ்திரி என்னும் பாத்திரத்தை நடேச சாஸ்திரி என்று தவறாக எடுத்துக் கொண்டு எழுந்த எதிர்ப்புகளையும் தனக்கேயுரிய புன்னகையுடன் கடக்கிறார்.

***


'இலக்கிய உத்திகளைக் கையாள்வதில் தமிழர், உலகத்தில் எந்த எழுத்தாளருக்கும் குறைந்தவரில்லை என்று நிரூபிப்பது எனக்கு ஒரு நோக்கமாக இருந்தது' என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் அசோகமித்திரன். அவரது நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறியது என்பதை இந்தப் புதினத்தை வாசிக்கும் எந்தவொரு நுட்பமான வாசகனும் உணர முடியும். நான்-லீனியர் எனும் உத்தியைக் கொண்டு 1967-ம் ஆண்டிலேயே ஒரு தமிழ் நாவல் எழுதப்பட்டிருக்கிறது என்பதே எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அந்த பாணியில் எழுதப்பட்ட முதல் தமிழ் படைப்பாக கூட இது இருக்கலாம்.

இந்த நூலில் பத்து அத்தியாயங்கள் உள்ளன. ஒரு தமிழ் திரைப்படத்தின் கடைசிக்கட்ட உருவாக்க ஏற்பாடுகளோடு துவங்கும் இந்த நாவல் அத்திரைப்படத்தின் வீழ்ச்சியையும் அதனோடு இணைந்து சரியும், உயரும் தொடர்புள்ள நபர்களைப் பற்றியும் வெவ்வேறு கோணங்களில் தருணங்களில் விவரித்துக் கொண்டு பயணிக்கிறது. ஒன்றுக்கொன்று நேரடியாக தொடர்பில்லாத, கால வரிசையில் நகரும் அத்தியாயங்கள். ஆனால் எல்லாமே ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புள்ளதாகவும் உள்ளன. காலத்தின் படியில் நின்று கொண்டு இந்த அவல நகைச்சுவையின் பயணத்தை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் அனுபவம் இந்தப் புதினத்தின் மூலமாக கிடைக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமாக வந்து கொண்டிருக்கும் சமயத்தில் வாசித்தவர்களுக்கு ஒருவேளை குழப்பம் ஏற்பட்டிருந்தால் அது வியப்பில்லை. ஒட்டுமொத்தமாக படிக்கும் போதுதான் இந்த நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதத்தையும் அதற்குப்  பின்னால் உள்ள திட்டமிடல் குறித்தும்  நமக்கு வியப்பும் பிரமிப்பும் உண்டாகின்றன.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் சம்பவமொன்று அதனோடு தொடர்புடைய நபர்களின் வெவ்வேறு பார்வைக் கோண்ங்களில் தனித்தனியாக விரியும் கதையாடல் உத்தி சமீபமாகத்தான் நமக்கு அறிமுகமாகியிருக்கிறது. Non-linear narrative  எனப்படும் இந்தப் பாணியில் திரைப்படங்களின் மூலமாக உதாரணம் சொல்ல வேண்டுமானால் அகிரா குரசேவாவின் 'ரஷோமானை' சொல்லலாம். இதே பாதிப்பில் தமிழில் வெளிவந்தது மணிரத்னத்தின் 'ஆய்த எழுத்து'.

'கரைந்த நிழல்கள்' நாவலிலும் இந்த உத்தி பல ஆண்டுகளுக்கு முன்பே  பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஸ்டூடியோவில் பணிபுரியும் சம்பத் என்கிற ஆசாமி உணவு வாங்குவதற்காக வண்டியில் புறப்படுகிறான். இது சார்ந்த நுண்விவரங்களை திறமையாக விவரிக்கிறார் அசோகமித்திரன். ஒரு கட்டத்தில் அவன் ஸ்டூடியோவை விட்டு வெளியே செல்லும் போது  படநிறுவனத்தின் முதலாளியின் கார் உள்ளே வருகிறது. ஆனால் தன்னுடைய சொந்த விவகாரம் ஒன்றின் காரணமாக பரபரப்புடன் செல்லும் சம்பத், ஒரு கணம் திகைத்து நின்று விட்டு தன் வேலையைப் பார்க்க அவசரமாக விரைந்து விடுகிறான்.

சில பக்கங்கள் தாண்டியுடன் இதே காட்சி மீண்டும் வருகிறது. இம்முறை அது படமுதலாளியான ரெட்டியாரின் பார்வை  நோக்கில் விரிகிறது. திரைப்படத்தின் நாயகி படப்பிடிப்பிற்கு வராமல் முரண்டு பிடிப்பதால் அது சார்ந்த மன நெருக்கடியிலும் நிதிச்சிக்கல்களிலும் இருக்கிறார் ரெட்டியார். ஸ்டூடியோவிற்குள் கார் நுழையும் போது  தன்னுடைய ஊழியனான சம்பத் எதற்கோ ஒளிந்து கொள்ள முயற்சிப்பவனைப் போல அவருக்குத் தோன்றுகிறது.

இப்படி உதவியாளனாக நமக்கு அறிமுகமாகும் சம்பத், நாவலின் இறுதிப்பகுதியில் பட முதலாளியாக உயர்ந்திருக்கிறான். அதே சமயம் நாவலின் துவக்கத்தில் நமக்கு அறிமுகமாகும் நடராஜன் என்கிற திறமையான தயாரிப்பு நிர்வாகி, இறுதியில் சாலையோரத்தில் பிச்சை எடுப்பவனாக வீழ்ந்து விடுகிறான். இந்த தகவல் கூட நேரடியாக அல்லாமல் சம்பத்தின் உரையாடல் மூலமாகத்தான் நமக்குத் தெரிய வருகிறது.  கனவுகளை பிரம்மாண்டமாக உருவாக்கும் திரையுலகத்தின் பரமபத ஆட்டத்தில் அது தொடர்பான பலரின் தனிப்பட்ட கனவுகள் நசுங்கி சாவது ஒரு முரண்நகை.

***

சில துண்டு காட்சிகள் மட்டுமே எடுக்கப்படவிருக்கிற ஒரு வெளிப்புற படப்பிடிப்பிற்கான ஏற்பாடுகளை திறமையாக கையாள்கிறான் நடராஜன். கொசுக்கள் நிறைந்திருக்கும் ஒண்டுக்குடித்தன வீட்டிலிருந்து அதிகாலையில் அவன் புறப்படுவதான சித்தரிப்புகளோடுதான் இந்த நாவல் துவங்குகிறது. தனது திறமையான ஆனால் ஆரவாரமில்லாத உரைநடையின் மூலம் ஒவ்வொரு சூழலையும் பாத்திரங்களின் அப்போதைய மனநிலையையும் அபாரமாக பதிவாக்கிச் செல்கிறார் அசோகமித்திரன். ஒவ்வொரு காட்சியுமே அதன் நுண்விவரங்களால் நிறைந்திருக்கின்றன. உதாரணத்திற்கு நாவலின் துவக்க வரியை பார்ப்போம்.

'அந்தக் குறுகலான சந்தில் அதிகம் ஓசைப்படாமலேயே வந்த கார் நிற்கும் போது மட்டும் ஒருமுறை சீறியது'.

ஏறத்தாழ சுஜாதாவின் உரைநடையை நினைவுப்படுத்தும் எழுத்து பாணி. மிகச்சுருக்கமான வாக்கியங்களில் ஒட்டுமொத்த சூழலையும் வாசகனின் மனதிற்கு கடத்தி விடும் திறமை அசோகமித்திரனுக்கு வாய்த்திருக்கிறது. ஆனால் சுஜாதாவின் உரைநடையில் இருக்கும் ஆரவாரமும் அதிகப்பிரசங்கித்தனங்களும் அசோகமித்திரனின் எழுத்தில் இல்லை. வாசகனுக்கு இடையூறு செய்யாத கலையமைதியுடன் கூடிய எழுத்தில் அனைத்தையும் உணர்த்தி விடுகிறார்.

ஒரு திரைப்படம் மெல்ல மெல்ல உருவாகும் தயாரிப்பு தொடர்பான நடைமுறை விஷயங்களில் திறமைசாலியாக இருக்கும் நடராஜனை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் கூட பாராட்டுகிறார்கள். ஆனால் முடிவடையாமலேயே வீழும் அந்த திரைப்படம், நடராஜனை மட்டுமல்ல அதன் தயாரிப்பாளரான ரெட்டியாரையும் காணமாற் போகச் செய்கிறது.

இதைப் போலவே இதற்குப் பிறகான அத்தியாயத்தில் வரும் ராஜகோபாலும். இவனுடைய அறிமுகம் துவக்க அத்தியாயத்திலேயே சிறுகுறிப்பாக நமக்கு கிடைத்து விடுகிறது. நடராஜனைப் போலவே இவனும் வறுமை பிடுங்கித் தின்னும் ஒட்டுக்குடித்தன வீட்டிலிருந்து புறப்படுகிறான். திருமண வயதைத் தாண்டியும் அதற்கான வாய்ப்பு அமையாமல் அண்ணனின் சம்பாத்தியத்தில் ஒண்டிக் கொள்ளும் வேதனை. திரையுலகின் நிலையில்லாத சம்பாத்தியத்தால் அவதிப்படும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவன். உதவி இயக்குநராக இருப்பவன்.

சந்திரா கிரியேஷன்ஸ் -ஸின் வெளிவராத திரைப்படம் இவனுடைய வாழ்க்கையையும் வீழ்ச்சியடைய வைக்கிறது. அடிக்கடி பஞ்சராகும் சைக்கிளில் செல்கிறான். ரிப்பேராகும் சைக்கிள்,  கீழ் நடுத்தர சமூகத்தின் குறியீடாகவே அசோகமித்திரனின் பல படைப்புகளில் வருகிறது. தனது அடுத்த பட வாய்ப்புக்காக பசியோடு  ஸ்டூடியோக்களில் அலைகிறான். உதவியாளனாக இருந்த சம்பத், தயாரிப்பு நிர்வாகியாக மாறி விட்ட விஷயம் தெரியாமல் அவனிடம் 'தண்ணி எடுத்துட்டு வா' என்று சொல்ல அவன் நாசூக்காக இவனை தவிர்த்து விட்டுச் செல்லும் பகுதி அபாரமானது. போதையின் பின்னணியில் தன்னுடைய அத்தனை துயரத்தையும் நண்பர்களிடம் கசப்பாக ராஜகோபால் வாந்தியெடுக்கும் உரையாடலும் அதை அவல நகைச்சுவையோடு விவரித்திருக்கும் அசோகமித்திரனின் எழுத்து திறனும் வியப்பளிக்கிறது. நடராஜனைப் போலவே இவனுடைய வீழ்ச்சியும் போகிற போக்கில் சம்பத் தரும் தகவலின் மூலம் தெரியவருகிறது.


நாவலின் கடைசிப்பகுதி சினிமாவை நம்பி இயங்கும் இன்னொரு அங்கமான மாணிக்ராஜ் என்பவனின் மூலமாக விரிகிறது. இவனும் நாவலின் இடைப்பகுதியில் நமக்கு அறிமுகமானவன்தான். வெளிநாட்டு திரைப்பட பிலிம்களின் துண்டுகளை வைத்து பிழைப்பு நடத்துபவன். அதைத் தவிர வேறு சில தொழில்களும் செய்கிறான் என்பது பூடகமாக வெளிப்படுகிறது. இந்த கடைசிப் பகுதி அதுவரையிலான தன்மையிலிருந்து மாறி இந்தப் பாத்திரத்தின் மூலமாக ஒருமை தன்னிலையில் விவரிக்கப்படுகிறது. சினிமாவுலகிற்கு தேவையான பிரத்யேகமான திறமைகளோடும் நெளிவு சுளிவுகளோடும் இருப்பவர்கள் மட்டும் எஞ்சி பிழைத்துக் கொள்கிறார்கள்.

தொழிலாளர்கள் முதலாளிகள் மீது கொண்டிருக்கும் மெல்லிய அச்சத்தையும் பதட்டத்தையும் நாவலின் பல பகுதிகளில் நுட்பமாக உணர்த்துகிறார் அசோகமித்திரன். தொழிலாளர்களின் ஆதாரமான மனஅமைப்பை, அடிமைத்துவ மனோபாவத்தை பல அபாரமான வரிகள் மிக நுட்பமாக வெளிப்படுத்துகின்றன. நாவலின் துவக்கத்திலேயே இது சார்ந்த பகுதி வருகிறது. நடராஜன் எத்தனை முடியுமோ அத்தனை முயன்று அதிகாலையிலேயே ஸ்டூடியோவிற்கு சென்றிருந்தாலும் முதலாளி அதற்குள் போன் செய்து விசாரித்திருக்கிறார். அந்த தகவல் நடராஜனை பதட்டத்துக்குள்ளாக்குகிறது. அன்றைய நாளின் ஏற்பாடுகளை முதலாளியிடம் விவரித்து விட்டு பிறகு தகவல் சொன்னவனிடம்   "ஏம்ப்பா முதலாளி அரை மணி நேரமாவா போன் செஞ்சிட்டிருந்தாரு' என்று விசாரிக்கிறான்.


***


சினிமாவுலகின் உதிரிமனிதர்களின் சித்தரிப்புகளைப் போலவே இதில் வரும் இரண்டு தயாரிப்பாளர்களின் சிக்கல்களும் நுண்விவரங்களால் வரையப்பட்டிருக்கின்றன. இது பணக்காரர்களுக்கான பிரத்யேகமான பிரச்சினைகள். சந்திரா கிரியேஷன்ஸ் அதனுடைய வீழ்ச்சியில் இருக்கிறது. அதன் முதலாளியான ரெட்டியார் நிதிச் சிக்கல்களில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார். அப்போதைய படத்தை விரைவில் முடிப்பது அவசியம். ஆனால் நாயகியான ஜயசந்திரிகா படப்பிடிப்பிற்கு வராமல் முரண்டு பிடிக்கிறாள். தானே அவளுடைய வீட்டிற்குச் செல்கிறார். முதலாளி தோரணையில் பேசினாலும் தன் மகளைப் போன்ற அவளைத் துன்புறுத்துகிறோமே என்று  உள்ளூற அவருக்கு வேதனையாகவும் இருக்கிறது. 'இந்த அழகும் இளமையும் இருக்கிற வரைதான் உனக்கு மதிப்பு. அதை கெடுத்துக்காதே' என்று உபதேசிக்கிறார். 'உங்க அம்மாவை எனக்கு பல வருடமா தெரியும். ஏன்.. நீயே என் மகளாக கூட இருக்கலாம்" என்கிறார். (எம்.ஆர்.ராதா தொடர்பான ஒரு நகைச்சுவைத் துணுக்கு நினைவிற்கு வருகிறது)

ஒரு கதாபாத்திரத்தையும் அதன் தொடர்பான சம்பவங்களையும் நிஜம் என்று வாசகன் மயங்குமளவிற்கு இத்தனை திறமையாக வடிவமைக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. வீட்டின் வாசலில் ஜயசந்திரிகா மயங்கி விழுவதோடு சந்திரா கிரியேஷன்ஸின் அஸ்தமன அத்தியாயமும் எழுதப்பட்டு விடுகிறது. இத்தனை நுண்விவரங்களோடு விவரிக்கப்படுகிற இந்த திரைப்படத்தைப் பற்றிய தலைவிதி நாவலின் இறுதிப் பகுதியில் ஒரு உதிரித் தகவலாக மட்டுமே வெளிப்படுகிறது.


இன்னொரு தயாரிப்பாளர், ராம ஐயங்கார். சில சறுக்கல்கள் நேர்ந்திருந்தாலும் வெற்றிகரமான தயாரிப்பாளர். தேசத்தையே பைத்தியமாக அடித்த இரண்டு வெற்றிப்படங்கள் உட்பட பல திரைப்படங்களை தயாரித்தவர். நின்று போன ரெட்டியாரின் திரைப்படத்தை வாங்கி எதையாவது இணைத்து ஒப்பேற்ற முடியுமா என்று பார்க்கிறார். அதே சமயத்தில் இவர் ஆரவாரமாக ஏற்பாடு செய்து கொண்டிருக்கும் இந்தி திரைப்படம், இன அரசியலின் காரணமாக வடக்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்படுகிறது. இது சார்ந்த துயரத்தோடு தன் மகனை தேடிச் செல்கிறார் ஐயங்கார். தந்தையின் புகழின் வெளிச்சத்தில் வெறுப்புற்று எங்கோ இருளில் பதுங்கியிருக்கிறான் அவன்.

ராம ஐயங்கார் தன்னுடைய மகனுடன் உரையாடும் இந்தப்  பகுதி அற்புதமானது. அதுவரை எளிமையாக சென்று கொண்டிருந்த அசோகமித்திரனின் உரைநடை, சற்று அலங்காரமாக, நாடகத்தனமாக ஆவது இந்தப் பகுதியில்தான். இரண்டு நபர்களுக்கு இடையான அகங்கார மோதல் எனலாம். முதலாளித்துவத்தின் மீது வெறுப்புற்று விலகி நிற்கிற மகனின் மனவோட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவன் வெற்று தத்துவம் பேசும் சோம்பேறியாகவும் தந்தையின் சம்பாத்தியத்தை அண்டியிருக்கிற ஊதாரியாகவும் இருக்கிறான்.

இந்தப் புதினத்தில் வெளிப்படும் கதாபாத்திரங்களில் அசலான நபர்களின் அடையாளங்களும் நாம் குத்துமதிப்பாக யூகிக்கும் அளவிற்கு வெளிப்பட்டிருக்கின்றன. ராம ஐயங்காரின் பாத்திரம் எஸ்.எஸ்.வாசனை நினைவுப்படுத்துகிறது. இயக்குநர் ஜகந்நாத் ராவ், நிமாய் கோஷ்ஷின் சாயலில் படைக்கப்பட்டுள்ளார். எவ்வித உள்ளீடும் இல்லாமல் தற்பெருமையுடன் பேசும் தமிழ் மரபின் மேடையலங்கார பாணி ஓரிடத்தில் கிண்டலடிக்கப்டுகிறது. போலவே தமிழ் சினிமாவில் மிகையாக பிழியப்படும் சோகத்தை ஒரு வெளிநாட்டவரின் அபிப்ராயம் வழியாக அசோகமித்திரன் கிண்டலடிக்கிறார்.

***

நவீன தமிழ் இலக்கியத்தில் தமிழ் திரையுலகம் சார்ந்து எழுதப்பட்ட படைப்புகள் குறைவுதான். வெளியிலிருந்து எழுதப்படுபவைகளை விட அந்தத் துறையின் உள்விவகாரங்களை அறிந்தவர்களால் எழுதப்படும் படைப்புகள் நம்பகத்தன்மையுடன் அமைகின்றன. சுஜாதாவின் 'கனவுத் தொழிற்சாலை' உள்ளி்ட்ட சில படைப்புகள் நினைவிற்கு வருகின்றன. ஆனால் இந்த வகைமையில் எழுதப்பட்ட, மிக நுட்பமான அழகியல் சார்ந்த உச்சப் படைப்பு  என்று 'கரைந்த நிழல்களை' சொல்ல முடியும்.

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சினிமாவின் பிரகாசம் மட்டுமே தெரிகிறது. ஆனால் அந்த வெளிச்சத்தின் அருள் கிடைப்பது சிலருக்கு மட்டுமே. ஆனால் பல்லாயிரக்கணக்கானவர்கள் அந்த பளபளப்பின் பின்னுள்ள இருட்டில் நிறைவேறாத எதிர்காலக் கனவுகளுடன் உழன்று மடிகிறார்கள். காலத்தின் சுழற்சியில் பலர் பரிதாபமாக காணாமற் போகிறார்கள். சிலர் மட்டும் கீழிருந்து நிரந்தரம் அல்லாத உச்சிக்கு நகர்கிறார்கள்.

நடராஜனின் நிலைமையைப் பரிதாபத்துடன் நினைவுகூரும் சம்பத் பிறகு  உடைந்த குரலில் சொல்கிறான். "சினிமான்னா என்னாங்க, காரு சோறு இது இரண்டும்தானேங்களே! புரொடக்ஷன் நடக்கிற வரைக்கும் அஞ்சு ரூபா சாப்பாடு, பத்து ரூபா சாப்பாட்டுக்கு குறைஞ்சு வேலைக்காரன் கூட சாப்பிட மாட்டான். பத்துப் பைசா பீடா வாங்க ஆறு மைல் எட்டு மைல் செளகார்பேட்டைக்கு இரண்டு கார் போகும்"

இந்தப் பரமபத ஆட்டமே சினிமாவுலகின் அஸ்திவாரம். ஏறத்தாழ சூதாட்டம். இந்தவுலகின் நிலையின்மையைப் பற்றி, அதன் உதிரி மனிதர்களின் வழியாக கச்சிதமாக சித்தரித்த அபாரமான படைப்பு என 'கரைந்த நிழல்கள்' புதினத்தைச் சொல்லலாம். 

(உயிர்மை ஜூன் 2017 இதழில் பிரசுரமானது)

suresh kannan

Tuesday, January 23, 2018

2018 புத்தக கண்காட்சி - நூல்களின் பட்டியல் (2)

22.01.2018 அன்று, அதாவது புத்தகக் காட்சியின் கடைசி நாளில் மூன்றாக முறையாக  சென்ற போது வாங்கிய நூல்களின் பட்டியல் இது. கண்டதையும் படித்தால் பண்டிதனாகி விடலாம் என்கிற கனவெல்லாம் இல்லாமல், பறக்காவெட்டி போல் கண்டதிற்கும் அலைமோதாமல் வழக்கத்திற்கு மாறாக  என்ன வாங்க வேண்டும் என்பதை கறாராக தீர்மானித்துக் கொண்டு சென்றேன். அப்படியும் தற்செயல் தேர்வில் சிலதை வாங்குவதை தவிர்க்கவே முடியவில்லை. 

ஆனால் வாங்க விரும்பும் நூல்களின் பட்டியல் இன்னமும் முடியவில்லை. தமிழ்ப்பிரபாவின் பேட்டை, தமிழ்நதியின் ‘பார்த்தீனியம்’, ஜீ.முருகன் சிறுகதைகள், ஞானக்கூத்தனின் ‘கவனம்’ இதழ் தொகுப்பு (விருட்சம்), ‘என் தந்தை பாலைய்யா’ உள்ளிட்ட பல நூல்களை பட்ஜெட் காரணமாக வாங்க முடியவில்லை. பிரான்சிஸ் கிருபாவின் 'கன்னி' அந்தரங்கமாக என்னை மிகவும் பாதித்த புதினம். நூலகத்தில் வாசித்தது. என் தனிப்பட்ட சேகரத்தில் இது நிச்சயம் இருக்க வேண்டும் என்று நினைத்து விட்டேன். ஆனால் அந்தச் சமயத்தில் நினைவிற்கு வரவில்லை. ஜமாலனின் 'கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்' (கடந்த முறையே தவறவிட்டது), மற்றும் மௌனியின் இலக்கியாண்மை ஆகிய நூல்களையும் வாங்க இயலவில்லை.

ஆனால் இவற்றையெல்லாம் வருங்காலத்தில் எப்படியாவது பிடித்து விடுவேன்.

புத்தகங்களின் மீதான தீராத தாகம் ஒருபுறம் இருந்தாலும், ‘ஏற்கெனவே வாங்கி அடுக்கியிருப்பதையும், இப்போது வாங்கியிருப்பதையும் முதலில் வாசித்து முடி’ என்கிற குரல் இன்னொருபுறம் கேட்டுக் கொண்டிருக்கிறது.  அந்த குரலைக் கவனமாக கேட்டு வாசித்த புத்தகங்களைப் பற்றி இந்த வலைப்பதிவில் தொடர்ந்து எழுத உத்தேசித்திருக்கிறேன். அதுதான் இந்த நூல் வாங்க உதவியவர்களுக்கான பதில் நன்றியாக இருக்க முடியும் என்று நம்புகிறேன்.

புத்தக காட்சியில் சந்தித்த நண்பர்கள், எழுத்தாளர்கள், அனுபவங்கள் போன்றவற்றை ஆகியவற்றைப் பற்றி குறிப்புகளாக எழுதும் உத்தேசம் உள்ளது. எழுதுவேன். தம்பட்டத்திற்காக அல்லாமல் எவருக்காவது உதவியாகவோ அல்லது தூண்டுதலாகவோ இருக்கும் என்கிற நம்பிக்கையில்தான் இது போன்ற புத்தக பட்டியலை பொதுவில் இடுவது.

இனி (இரண்டாம்) பட்டியல்.

1)    பிராமண போஜனமும் சட்டிச் சோறும் – ஆ.சிவசுப்பிரமணியன் - NCBH
2)    உப்பிட்டவரை - ஆ.சிவசுப்பிரமணியன் – காலச்சுவடு
3)    தமிழ்க் கிறிஸ்துவம் - ஆ.சிவசுப்பிரமணியன் – காலச்சுவடு
4)    மந்திரமும் சடங்குகளும் - ஆ.சிவசுப்பிரமணியன் – காலச்சுவடு
5)   ஆஷ்கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும் - ஆ.சிவசுப்பிரமணியன் –      காலச்சுவடு
6)    ஆதிரை – சயந்தன் - தமிழினி
7)    சுந்தர ராமசாமி நேர்காணல்கள் – காலச்சுவடு
8)    நா.பார்த்தசாரதி – நினைவோடை – காலச்சுவடு
9)    காகங்களின் கதை – அ.கா.பெருமாள் – காலச்சுவடு
10)  பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை – பெருமாள்முருகன் –                 காலச்சுவடு
11)    புனைவு என்னும் புதிர் – விமலாதித்த மாமல்லன் – காலச்சுவடு
12)    சங்கர் முதல் ஷங்கர் வரை – தமிழ்மகன் – உயிர்மை
13)    இடைவெளி – சம்பத் – பரிசல்
14)    சுவடுகள் – வெங்கடேஷ் சக்ரவர்த்தி - பிரக்ஞை
suresh kannan

Monday, May 29, 2017

வனநாயகன் - காங்கிரீட் வனத்தில் ஒரு யுத்தம்

தொழிற்சங்கம் உருவாக முடியாத, பணிப்பாதுகாப்பில்லாத தொழிலாளா்களைக் கொண்டது ஐ.டி எனப்படும் தகவல் நுட்பம் சார்ந்த துறை. இதர துறைகளோடு ஒப்பிடும் போது இதில் வருமானம் சற்று கூடுதல்தான் என்றாலும் வழங்கப்படும் ஊதியத்திற்கு மேலாக ஊழியர்களை சக்கையாக பிழிந்து விடும்  தன்மையைக் கொண்டது என்கிறார்கள். நேரம், காலம் பார்க்காமல் உழைத்தாலும் எப்போது வேண்டுமானாலும் பணியிலிருந்து வெளியேற்றப்படலாம் என்கிற அபாயக்கத்தி இருக்கையின் கீீழே பதுங்கியிருக்கும். சுருங்கச் சொன்னால் திரசங்கு சொர்க்கம் அல்லது டை கட்டிய அடிமைத்தனம்.

இப்படி நிர்வாகத்தால் மனச்சாட்சியின்றி திடீரென்று வெளியேற்றப்படுவதைப் பற்றி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சில ஐ.டி. பணியாளர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் சொன்னது திகிலாகவும் மட்டுமல்ல, வேதனையாகவும் இருந்தது. எவ்வித முன்அறிவிப்பும் இல்லாமல்  அவர் திடீரென்று  பணிநீக்கம் செய்யப்படுகிறார். அன்றைய நாள் பணிக்கு வரும் போதுதான் அவருக்கே அந்த விஷயம் தெரியும். இதை அறிந்து மேலதிகாரியின் அறைக்குச் சென்று வாக்குவாதம் கூட செய்ய அனுமதிக்கப்படாமல் வெளியேற்றப்படுகிறார். வேதனையுடன் அவர் தன் இருக்கைக்கு திரும்பும் போது வழியிலுள்ள ஒரு கதவைத் திறப்பதற்காக தனக்கு தரப்பட்டிருந்த ஸ்வைப்பிங் கார்டை உபயோகிக்கிறார். ஆனால் அது வேலை செய்யவில்லை. அதற்குள்ளாகவே நிர்வாகம் அதை செயலிழக்க வைத்திருக்கிறது. 'இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக எத்தனை உழைத்திருப்பேன், எப்பேர்ப்பட்ட அவமானம் இது" என்று கண்ணீர் வடிய பேசிக் கொண்டிருந்தார் அவர்.

***

ஆருர் பாஸ்கர் எழுதிய 'வனநாயகன் - மலேசிய நாட்கள்' எனும் புதினம்,  தமது பணியிலிருந்து திடீரென்று வெளியேற்றப்படும் ஒரு  ஐ.டி. பணியாளரைப் பற்றிய அதிர்ச்சியில் இருந்து துவங்குகிறது. ஆனால் இது ஐ.டி. ஊழியர்களின் துயரங்களைப் பற்றி பேசும் பரிதாபங்களின் தொகுப்பல்ல. மலேசியாவின் பின்னணியில் இயங்கும் இந்தப் புதினம், ஒரு திரில்லருக்கான வேகத்துடன் பணி நீக்கத்திற்கு பின்னால் உள்ள பிரம்மாண்டமான வணிக சதியை பரபரப்பான பக்கங்களில் விவரிக்கிறது. 

நூலாசிரியர் ஆருர் பாஸ்கரின் முதல் புதினமான 'பங்களா கொட்டா' கிராமப்பின்னணியில் உருவான எளிய நாவல். வனநாயகன் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மலேசிய நாட்டின் பிரம்மாண்ட பளபளப்பு பின்னணியில் இயங்குகிறது. பணிக்காக தமிழ்நாட்டிலிருந்து கிளம்பிச் செல்லும் இளைஞனான சுதா என்கிற சுதாங்கன், அந்நிய பிரதேச காங்கிரீட் வனத்தில் எதிரி எவரென்றே தெரியாத புதிருடன், காற்றில் கத்தி வீசுவது போல தன் பிரச்சினைக்காக தன்னந்தனியாக போராடுகிறான். 

இது தொடர்பான பரபரப்பை தக்க வைத்துக் கொள்ளும் இந்தப் புதினம், அதே சமயத்தில் ' இருளின் பின்னாலிருந்து உதித்த அந்த மர்ம உருவம் கத்தியுடன் பாய்ந்தது, .தொடரும்' என்கிற ரீதியில்  மலினமான திரில்லர் நாவலாகவும் கீழிறங்கவில்லை. உடல் சார்ந்த சாகசங்களின் மிகையான அசட்டுத்தனங்கள் இல்லை. புத்திக்கூர்மையுடன் நாயகன் போடும் திட்டங்கள் எதிர் தரப்பை கச்சிதமாக வளைத்து அவனுக்கு சாதகமாகும் தற்செயல் அபத்தங்களும் இல்லை. நடுத்தர வர்க்க மனநிலையில் குழம்பித் தவிக்கும் ஓர் இளைஞன், தனக்கெதிரான அநீதியை நோக்கி  அதன் சாத்தியங்களுடன் என்னவெல்லாம் செய்ய இயலுமோ அதை மட்டுமே நாயகன் செய்கிறான். இந்த தன்மையே இந்தப் புதினத்திற்கு ஒரு நம்பகத்தன்மையையும் இயல்பையும்  அளிக்கிறது. 

***

மலேசியாவில் இயங்கும் வங்கிகளில் ஒரு பெரிய வங்கி, நஷ்டமடைந்து கொண்டிருக்கும் இன்னொரு சிறிய வங்கியை தன்னுடன் இணைத்துக் கொள்கிறது. இரு வங்கிகளின் இணைப்பு தொடர்பான தகவல் நுட்பங்களை கையாளும் குழுவின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிருப்பன் சுதா. அவனுக்கும் மேலே பல பெரிய தலைகள். பல மாதங்கள் நீடிக்கும் இந்த அசுரத் தனமான உழைப்பு நிறைவேறப்  போகும் இறுதி நாளில் சுதாவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு. அந்த அழைப்புதான் அவனது பணி பறிபோக காரணமாக இருக்கிறது. ஆனால் அது அவனை வெளியேற்றுவதற்கான ஒரு தந்திரமான வழி மட்டுமே. சுதாங்கன் இப்படி பழிவாங்கப் படுவதற்கு பின்னால் தனிநபர்களின் அற்பக் காரணங்கள் முதல் நாட்டின் பொருளாதாரத்தையே சிதைக்கும் பெரிய காரணங்கள் வரை பல உள்ளன. அவைகளைத் தேடி நாயகன் அலைவதே 'வனநாயகன்' எனும் இந்தப் புதினம். 

புலம்பெயர் இலக்கியத்தின் வகைமையில் இணையும் இந்தப் புதினம் ஒருவகையில் பயண இலக்கியமாகவும் அமைந்திருக்கிறது. மலேசிய நாட்டைப் பற்றிய கலாசாரக்கூறுகளின் பல்வேறு நுண் விவரங்கள், சுற்றுச்சூழலில் ஏற்படுத்தப்படும் பாதிப்புகள், நிதி மோசடிகள், இன அரசியல், பிரஜைகளின் படிநிலை அந்தஸ்து, அந்தப் பிரதேசத்தின் முக்கியமான இடங்களைப் பற்றிய விவரணைகள், சட்டவிரோதக் காரியங்கள், குழுக்கள் போன்ற தகவல்களால் நிறைந்திருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் 'இதைப் பற்றி சொல்கிறேன் பார்' என்று புதினத்தில் இருந்து தனியாக துண்டித்து விலகித் தெரியாமல் அதன் போக்கிலேயே உறுத்தாமல் விவரிக்கப்பட்டிருப்பது நூலாசிரியரின் எழுத்து திறனிற்கு சான்று. சம்பவங்களின் காலம் தோராயமாக இரண்டாயிரம் ஆண்டில் நிகழ்வதால் அது தொடர்பான சம்பவங்கள், அடையாளங்கள் மிகப் பொருத்தமாக இணைக்கப்பட்டிருக்கின்றன.


***

வங்கி இணைப்பு பணியின் இறுதி நாளன்று நிகழும் விநோதமான, மர்மச் சம்பவத்தில் இருந்து துவங்கும் இந்தப் புதினம், பிறகு முன்னும் பின்னுமாக பயணிக்கும் அதே சமயத்தில்  வாசிப்பவர்களுக்கு எவ்வித குழப்பத்தையும் ஏற்படுத்தாமல் சுவாரசியமான அத்தியாயங்களுடன் விரிகிறது. புதினம் முழுக்க சுதாங்கனின் நோக்கில் தன்னிலை ஒருமையில் விவரிக்கப்படுவதால் நாமே அவனுடைய அனுபவத்திற்குள் விழுந்து விட்ட நெருக்கமான வாசிப்பனுபவத்தை தருகிறது. 

சுதாவின் நெருங்கிய நண்பனான ரவி, எரிச்சலூட்டும் சகவாசி ஜேகே, வாகன ஓட்டுநர் சிங், புலனாய்வு இதழ் நிருபர் சாரா, முகம் பார்க்காமல் இணைய உறவில் மட்டும் நீடித்து பிறகு அதிர்ச்சி தரும் ஓவியா,  மெல்லிய காதலோடு காணாமற் போகும் சுஜா, வெவ்வேறு முகங்கள் காட்டும் தந்திரக்கார அதிகாரிகள் சம்பத், லட்சு என்று ஒவ்வொரு பாத்திரத்தின் வடிவமைப்பும் அதன் தனித்தன்மையோடு துல்லியமாக உருவாகியிருக்கிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பிரத்யேக அடையாளங்களில் ஒன்றான உராங்குட்டான் குரங்கு இனம் அழிவின் விளிம்பில் இருப்பதையும் மனிதர்களின் லாபங்களுக்காகவும்  வக்கிரங்களுக்காகவும் அவை துன்புறுத்தப்படுவதையும் பற்றிய கவலைக் குறிப்புகளும் புதினத்தில் இடையில் பதிவாகியுள்ளன. 

நாயகனின் பணிநீக்கத்திற்கான காரணத்தை தேடி அலைவதான பரபரப்பின் பாவனையில் இந்தப் புதினம் இயங்கினாலும் இதன் ஊடாக இயற்கை வளங்களின் சுரண்டல், புதையலைத் தேடி ஓடிக் கொண்டேயிருக்கும் மனிதர்களின் பேராசை, அதற்காக அவர்கள் செய்யும் கீழ்மைகள், நல்லவனற்றிற்கும் தீயவனவற்றிற்கும் இடையே நிகழும் ஒயாத  போர், தனிநபர்களின் நிறைவேறாத  ஆதாரமான விருப்பங்கள், அவற்றிற்கான தேடல்கள், உளைச்சல்கள் என பல்வேறு விஷயங்கள் விழுந்து கொண்டேயிருக்கின்றன. 

ஐ.டி பணியின் சூழல், அத்துறை பணியாளர்களின் பிரத்யேகமான மனோபாவங்கள், அவைகளில் உள்ள பிளாஸ்டிக் தன்மை தொடர்பான குறிப்புகளும் அபாரமாக பதிவாகியுள்ளன. புலம் பெயர்ந்து நீண்ட காலமாகி அங்கேயே உறைந்து விட்ட எழுத்தாளர்களின் பாணி வேறு. தமிழகத்திலிருந்து சென்று தற்காலிகமான விலகலில் ஒரு குழந்தையின் கண்களுடன் புதிய உலகை விழி விரிய நோக்கி, எப்போது வேண்டுமானாலும் தாயகத்திற்கு திரும்பி விடும் நோக்கில் அமையும் படைப்புகள் வேறு. இரண்டாவது பாணியில்,  இந்தப் புதினம் சிறப்புற உருவாகியுள்ளது. 


வன நாயகன், அதன் தலைப்பிற்கேற்ப பல்வேறு மிருகங்களின் குணாதிசயங்கள் அடங்கிய நபர்களின்  இடையில் போராடி விடைகாண்பவனைப் பற்றிய பயண அனுபவமாக சுவாரசியத்துடன் உருவாகியிருக்கிறது. 




**

வனநாயகன் - மலேசியா நாட்கள்
ஆரூர் பாஸ்கர்,
கிழக்கு பதிப்பகம்,  முதல் பதிப்பு டிசம்பர் 2016
பக்கங்கள் 304, விலை ரூ.275

(அம்ருதா இதழில் வெளியானது)

suresh kannan

Sunday, May 21, 2017

மரணத் தொழிற்சாலை - ஹிட்லரின் வதைமுகாம்கள்




உலக வரலாற்றில் இதுவரை நிகழ்ந்த பெரும்இனப்படுகொலைகளைப் பட்டியலிட்டால்  முதலில் வந்து நிற்பது ஹிட்லர் தலைமையில் நாஜிக்கள் செய்த அநீதியே. அநீதி என்று குறிப்பிடுவது  கூட குறைந்த பட்ச சொல் மட்டுமே. மானுட அறத்தையும் நாகரிகத்தையும் குழி தோண்டிப் போட்ட படுபயங்கர காட்டுமிராண்டித்தனம் என்றுதான் சொல்ல வேண்டும். நாகரிகம் மெல்ல வளர்ந்து வந்து கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த இனப் பேரழிவின் அட்டுழியங்கள் மெல்ல மெல்ல அம்பலமான போது உலகமே அதிர்ச்சியடைந்தது. சுமார் ஆறு மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் விதம்விதமாக கொல்லப்பட்டார்கள்; கடும் சித்திரவதைக்கு உள்ளானார்கள். யூதர்கள் தவிர இடதுசாரிகள், ஜிப்ஸிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று இந்த வரிசையில் கொல்லப்பட்டவர்களின் கணக்கு தனி. சொத்துக்களை இழந்து உயிர்தப்பி  அகதிகளாகவும் காணாமற் போனவர்கள் பட்டியல் வேறு.


இந்தப் பேரழிவு குறித்து காற்றில் உலவுவது போல பொதுவெளியில் நெடுங்காலமாகவே  பல கேள்விகள் இருக்கின்றன.

ஏன் ஹிட்லர் இந்த இன அழித்தொழிப்பை மனச்சாட்சியின் துளியும் இன்றி செய்தார்? அதற்கான பின்னணியும் காரணமும் என்ன? என்னதான் ஒரு சர்வாதிகாரி குரூர மனோபாவத்துடனும்  முட்டாள்தனமாகவும் ஆணையிட்டு விட்டாலும் நாஜிகள் லட்சக்கணக்கான யூதர்களை  ஈவுஇரக்கமேயின்றி கண்மூடித்தனமாக கொன்று குவிப்பார்களா என்ன? அவர்களுக்கு மனச்சாட்சி வேலையே செய்திருக்காதா? நாஜிப் படையில் இருந்த அத்தனை பேரையும் வசியப்படுத்தியா இந்தப் படுகொலைகளை ஹிட்லர் செய்திருக்க முடியும்?

தமக்கு முன் பின் தெரியாத ஓர் அப்பாவியை, பெண்ணை, குழந்தையை, முதியவரை அவர்கள்  யூதராகப் பிறந்த ஒரே காரணத்தினாலேயே சுட்டுக் கொல்வதும் பல்வேறு குரூரமான வழிகளில் சித்திரவதைக்குள்ளாக்கி சாகடிப்பதும் என்பது எத்தனை பெரிய கண்மூடித்தனம்?  அப்பட்டமான இனவெறுப்பு உள்ளே ஊறிப் போயிருந்தால்தான் இந்த அரக்கத்தனத்தை செய்ய முடியும்.

இதையொட்டி எழும் பல கேள்விகளைப் போலவே நிறைய பதில்களும் உலவுகின்றன.

இயேசுவின் மரணத்திற்கு யூதர்கள் காரணமாக இருந்தார்கள், எனவே யூதர்களின் மீதான பகை தோன்றியது என்பது ஒரு பதில்.  ஹிட்லருடைய தாயின் மரணத்திற்கு ஒரு யூத மருத்துவர் காரணமாக இருந்தார் என்கிறது இன்னொரு தகவல். ஆரிய இனமே உயர்ந்தது என்கிற உயர்வு மனப்பான்மையுடன் இன சுத்திகரிப்பிற்காக ஹிட்லர் செய்தது என்பது சொல்லப்பட்ட காரணங்களில் மற்றொன்று. எது உண்மை, எது பொய் என்றே கண்டுபிடிக்க முடியாத பதில்கள் அவை.  இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி வீழ்ந்து ஹிட்லரின் தற்கொலை நிகழ்வதற்கு முன்னால் பல்வேறு அரசு ஆவணங்கள் அவசரம் அவசரமாக அழிக்கப்பட்டன என்பதால் எஞ்சியிருக்கும் பதிவுகளையும் முகாமில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களையும் வைத்து மட்டுமே இந்தப் பின்னணியை அறிந்து கொள்ள முடியும்.

ஆனால்  யூத வெறுப்பிற்கு இதுதான் காரணம் என்று எதையும் திட்டவட்டமாக சொல்லி விட முடியாது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். வரலாற்றில் ஏராளமாக இறைந்திருக்கும் தரவுகளை ஆய்ந்து அவற்றின் தொடர்ச்சியோடும் சிக்கலான கண்ணிகளை இணைத்தும் தோராயமாகத்தான் புரிந்து கொள்ள முடியும். ஏனெனில் ஹிட்லருக்கு முன்னாலும் யூத வெறுப்பு இருந்தது;  பின்னாலும்  இருக்கிறது. வித்தியாசம் என்னவென்றால் ஹிட்லரின் காலக்கட்டத்தில் இந்த இனவெறுப்பு ஒரு கச்சிதமான திட்டமிட்ட பிரச்சாரமாக முன்வைக்கப்பட்டு கொலைகளும் சித்திரவதைகளும் வெளிப்படையாகவே நடந்தேறின.

**

இந்த இனஅழிப்பைப் பற்றியும் ஹிட்லரைப் பற்றியும் பல்வேறு கோணங்களில் ஆராயும் நூல்கள், ஆய்வுகள், திரைப்படங்கள் போன்றவை ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளில் ஏராளமாக உள்ளன. ஹிட்லரின் உளவியல், அவரது தனிப்பட்ட ஆளுமையை ஆராய்வது முதற்கொண்டு யூதர்கள் செய்யப்பட்ட வதைகளைப் பற்றி துல்லியமாக ஆராய்வது வரை பல்வேறு பதிவுகள் உள்ளன. ஆனால் தமிழில்  இரண்டாம் உலகப் போரின் பின்னணியோடு ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றை மேலோட்டமாக விவரிக்கும் நூல்கள் உள்ளனவே தவிர யூதர்களின் மீது நிகழ்த்தப்பட்ட இந்தக் கொடுமைகளை பிரத்யேகமாக பதிவு செய்யும் நூல் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் மருதன் எழுதி  கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள  'ஹிட்லரின் வதைமுகாம்கள்' எனும் நூல், தமிழ் சூழலில் அந்த இருண்ட பக்கத்தின் மீதான வெளிச்சத்தைப் பாய்ச்ச முயல்கிறது. அந்த வகையில் இதுவே தமிழில் வெளிவந்துள்ள முதன்மையான நூல் எனலாம். யுத்தம் முடிந்த பிறகு ரஷ்ய படையால் வதை முகாம்களில் இருந்து தப்பிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், இதைப் பற்றி செய்யப்பட்ட ஆய்வுகள் என்று பல்வேறு நூல்களின் தரவுகளைக் கொண்டு கச்சிதமான கோர்வையாக இந்த நூலை உருவாக்கியுள்ளார் மருதன்.

மருதனின் அசாதாரணமான உழைப்பில் உருவாகியுள்ள இந்த நூல் நம்மைக் கவரும் அதே வேளையில் கலங்கடிக்கவும் வைக்கிறது. ஒவ்வொரு பக்கமும் மரணத்தின் ஓலங்கள், வலிகளின் கதறல்கள், விடுதலையின் ஏக்கங்கள் போன்றவற்றினால் குருதியும் கண்ணீரும் வழியும் ஈரங்களோடு பதிவாகியுள்ளது. ஆனால் இதில் பதிவாகியிருக்கும் துயரம் என்பது பனிப்பாறையின் மீதான நுனி மட்டுமே  நம்மால் கற்பனையில் கூட யூகிக்க முடியாத படியான கொடுமைகள் அரங்கேறியுள்ளன. முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒரு யூதர் சொல்கிறார் 'அங்கு நடந்ததை நான் சொன்னால் அது கடற்கரை மணலில் ஒரு துளியாக மட்டுமே எஞ்சும். அனைத்தையும் விவரிப்பது சாத்தியமல்ல. நாங்கள் அங்கு சந்தித்தவற்றை சொல்வது கடினம். அதையெல்லாம் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. எங்களுக்குள் அந்த அனுபவங்கள் புதைந்து போயிருக்கின்றன.'

நூலின் பெரும்பாலான பக்கங்களில் யூதர்கள் உள்ளிட்டவர்களின் நிகழ்த்தப்பட்ட வன்முறைச் சம்பவங்கள், அதற்கான திட்டங்கள், முகாம்களை நோக்கிச் செல்லும் ரயில் பயணங்களின் அவஸ்தைகள், அவர்களின் மரணத்திற்காக யூதர்களாலேயே செய்ய வைக்கப்பட்ட முகாம் பணிகள், மரணக்குழிகள், கொத்துக் கொத்தாக மனிதர்களை எவ்வாறு எளிதில் அழிப்பது என்று செய்யப்பட்ட ஆலோசனைகள், மனித உடல்களை வைத்து செய்யப்பட்ட ஆய்வுகள் என்று பல்வேறு தகவல்கள் பதிவாகியிருக்கின்றன.

யூதர்களை கொத்துக் கொத்தாக ரயில்களில்  மூச்சு முட்ட அடைத்து செல்வதற்காக எஸ்.எஸ். ரயில்வே துறைக்கு பணம் செலுத்த வேண்டும். இதற்காக சரக்கு ரயில்களை நாஜிகள் பயன்படுத்தினார்கள்.  உயிருள்ள மனிதர்களை சரக்குகள் என்றே தங்களின் ஆவணங்களில் குறிப்பிட்டார்கள். தேவையற்ற சரக்குகளை அழிப்பதற்காக வேறிடத்திற்கு கொண்டு செல்கிறோம் என்று குறிப்பு எழுதினார்கள். முகாம்களில் அடைக்கப்பட்ட நபர்களின் தனி அடையாளங்கள் உடனே அழிக்கப்பட்டன. அவர்கள் எண்களால் குறிக்கப்பட்டார்கள். உடல் வலு இல்லாதவர்கள், குழந்தைகளை விஷவாயு அறையில் இட்டுக் கொன்றார்கள். இதர நபர்கள் முகாம்களில் கடுமையான பணிகளுக்காக கட்டாயப்படுத்தப்பட்டார்கள். முகாமில் இருந்த ஒவ்வொருக்குமே தங்களின் விடுதலையோ மரணமோ எப்போது நிகழும் என்கிற விஷயம் அறியப்படாமல் பதட்டத்திலேயே தொடர்ந்து வைக்கப்பட்டார்கள்.

ஒரு துளி உணவிற்காகவும் இன்னபிற விஷயங்களுக்காகவும் யூதர்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள். மற்றவர்களின் பொருட்களை திருடத் தயாராக இருந்தார்கள். மிக அடிப்படையான விஷயங்களை பறித்துக் கொண்டால் மனிதர்கள் எவ்வாறு விலங்குகளுக்கு நிகரானவர்களாக மாறும் கொடுமையை நாஜிப்படை திட்டமிட்டு செய்தது. இறந்து போனவர்களே அதிர்ஷ்டம் செய்தவர்கள் என்று தோன்றுமளவிற்கு முகாமில் இருந்து பின்னர் விடுவிக்கப்பட்டவர்களின் உளவியல் நிலைமை பரிதாபகரமாக அமைந்தது. இயல்பான வாழ்க்கைக்குள் நுழைய முடியாமல் நிறைய பேர் முகாமின் கசப்பான நினைவுகளில் இருந்து வெளியேற முடியாமல் தடுமாறினார்கள்.

ஆனால் இந்த நூல் வதைகளைப் பற்றிய விவரணைகளோடும் அவற்றைப் பற்றிய பரிதாபங்களோடும்  தொடரும் விசாரணைகளோடும் முடிந்து விடவில்லை. இனவெறுப்பின் பின்னால் உள்ள சித்தாந்தக் காரணங்கள், உளவியல் பின்னணிகள் ஆகியவற்றின் தொடர்பான தரவுகளையும் பதிவு செய்கிறது.

தமிழில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் மிக முக்கியான நூல்களில் ஒன்றாக இதை  தயக்கமின்றி சொல்ல முடியும்.

**

ஹிட்லரின் வதைமுகாம்கள்
மருதன்
கிழக்கு பதிப்பகம், சென்னை
விலை ரூ.200
பக்கங்கள் - 232

(அலமாரி இதழில் பிரசுரமானது)




suresh kannan