Saturday, January 28, 2006

பாலாவும் என்னுடைய சுயசரிதத்தின் ஒரு பகுதியும்

வாழ்வின் ஊடான பயணங்களின் பதிவுகள் - 3

புத்தக கண்காட்சியில் வாங்கி வந்திருந்த புத்தகங்களில் சுந்தரராமசாமியின் பிரமிளைப் பற்றின நினைவோடை நூலையும், எஸ்.ராமகிருஷ்ணனின் 'உறுபசி' நாவலையும், இயக்குநர் பாலாவின் ஆ.வி. தொடர் அடங்கின புத்தகத்தையும் வாசித்து முடித்துவிட்டேன். முந்தைய இரு நூல்களைப் பற்றி பிற்பாடு சாவகாசமாக எழுத உத்தேசம். பாலாவின் தொடரை ஏற்கெனவே ஆ.வி.யில் வாசித்திருந்தாலும் இப்போது படிக்கும் போதும் என்னால் புன்னகையையும், உணர்ச்சிவசப்படுதலையும், உள்ளுக்குள் பொங்கும் அழுகையையும் கட்டுப்படுத்த இயலவில்லை. இந்தத் தொடரை படித்தவர்களுக்கு நான் சொல்வது விளங்கும். பல சமயங்களில் என்னையே நான் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போலிருந்தது. வாழ்க்கையில் சிரமப்பட்டு ஜெயித்த ஒவ்வொருவரும் தன்னுடைய அனுபவங்களை இவ்வாறு பதிவு செய்து வைப்பது நல்லது.

கல்லூரி படிக்கும் போது என்னுடைய வருங்கால லட்சியம் மற்றும் கனவு, ஒன்று பத்திரிகையாளனாக ஆவது, இல்லையென்றால் சினிமாவில் சேருவது. (behind the screen). (உருப்படாத பயல்கள் எல்லாம் சினிமாவில் சேருவதையே லட்சியமாக ஏன் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை) ஆனால் எல்லாம் வல்ல காலம் என்னை புரட்டிப் போட்டு சுழற்றி அடித்ததில் இரண்டுமே நிறைவேறாமல் போனதில் எனக்கு சற்று வருத்தம்தான். இப்போது பூவாவுக்கு பிரச்சினை இல்லாத வாழ்க்கை முறை என்றாலும் கூட இன்னமும் அடிமனதில் மேற்குறிப்பிட்ட துறைகளில் நுழைய முடியாமற் போன ஆதங்கம் கனன்று கொண்டுதான் இருக்கிறது.

அதற்கும் முன்னதாக என்னிடமிருந்த இன்னொரு லட்சியம் எழுத்தாளனாக ஆவது. இதற்கான ஆசையையும், சாத்தியப்படலாம் என்கிற நம்பிக்கையையும் என்னுள் தோற்றுவித்தவர் சாட்சாத் பெருமதிப்பிற்குரிய சுஜாதா பெருமகனார் அவர்கள்தான். சமையலறைக்குள்ளேயும், வரதட்சணை, சமுதாயப் பிரச்சினைகள் போன்றவற்றிற்குள்ளும், இல்லையென்றால் சேகர்-மாலா காதலைச் சுற்றியும் உழன்று கொண்டிருந்த சிறுகதை வடிவத்தை வெளியே கொண்டு வந்து சிறுகதை வாசிப்பு என்கிற அனுபவத்தை இலகுவாகவும், சுவாரசியமானதாகவும் ஆக்கினவர். சிறுகதை என்கிற வடிவத்தைப் பற்றின ஒரு outline அவரிடமிருந்துதான் எனக்குக் கிடைத்தது. அந்த வடிவத்தில் பல பரிசோதனைகளை முயன்று பார்த்திருக்கிறார். ஆனால் அவை முழுவதுமே வெகுஜன வாசகர்களை மனதில் வைத்துக் கொண்டே - அவர்களுக்குப் புரிய வேண்டும் - நிகழ்த்தியதால் தரம் என்கிற விஷயத்தில் நிறைய சமரசம் செய்து கொண்டிருக்கிறார். இதனாலேயே சிற்றிதழ் வட்டத்தில் அவர் பெயர் சற்று தயக்கத்துடனே உச்சரிக்கப்படுகிறது. என்றாலும் இன்று எனக்கு அறிமுகமாகியிருக்கும் பல இலக்கிய ஆளுமைகள் சாத்தியமானது அவரின் மூலமாகத்தான் என்பதுதான் விநோதம்.

அவர் தந்த மானசீக உற்சாகத்திலும், பாதிப்பிலும் நானும் சிறுகதை எழுதுவது என்று முடிவு செய்வது என்று உள்ளே புகுந்தேன். இப்போது பரிச்சயமாகியிருக்கும் வேறுவிதமான இலக்கியப் படைப்புகள் அப்போது அறிமுகமாகியில்லாததால் என்னுடைய முன்மாதிரியாக வெகுஜன பத்திரிகைகளில் வந்திருந்த சிறுகதைகளே முன்நின்றன. அதற்கும் முன்னால், அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் நண்பனின் வேண்டுகோளின் பேரில் சென்னை வானொலியில் 'இளையபாரதம்' என்கிற நிகழ்ச்சிக்காக ஒரு நகைச்சுவை நாடகத்தை எழுதிக்கொடுத்தேன். மிக்சியில் தேங்காய் அரைப்பது போலவும் கூட்ஸ் ரயில் ஓடுவது போலவும் வந்த சப்தங்களுக்கு நடுவில் அந்த நாடகத்தை ஒரு மாலை நேரத்தில் கேட்டு மகிழ்ந்தோம். அது போலி டாக்டர் ஒருவரைப் பற்றின நாடகம். "இந்த ஞாபகமறதி நோய் எத்தனை வருஷமா இருக்குது?" "ஞாபகமில்லீங்களே" என்கிற மாதிரியான அசட்டுத்தனமான நகைச்சுவை துணுக்குகள் அடங்கினது. நாடகத்தின் முடிவில் இதை ஆக்கினவரின் பேராக நண்பனின் பெயர் ஒலித்த போது என் புன்னகை மறந்து போனது. அடுத்த வருடமும் அதே மாதிரி இன்னொரு நாடகம் எழுதி (நியூமராலஜியில் அசட்டுத்தனமாக நம்பிக்கை வைத்து அவஸ்தைப் படுகின்ற ஒருவனைப் பற்றியது) அது படு கேவலமாக மேடையில் நிகழ்த்தப்படுவதை நேரிலேயே காணக்கிடைத்தது இன்னொரு நகைச்சுவையான அனுபவம்.

சரி. சிறுகதை எழுத முடிவு செய்தாயிற்று. எப்படி எழுதுவது? எல்லாப் பத்திரிகையையும் உன்னிப்பாக அவதானித்து அந்தப் பத்திரிகையின் பாணியில் அதற்கேற்றாற் போல் எழுத வேண்டும் என்கிற உபதேசத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. (அம்புலிமாமாவிற்கு எழுத வேண்டுமென்றால் கட்டை விரலை சப்பிக் கொண்டே எழுத வேண்டுமா?) என்றாலும் பல சிறுகதைகளை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பி வந்தேன். பல பத்திரிகைகள் என்னை உதாசீனப்படுத்தினாலும் என் எழுத்துலகத்தின் வாசலை திறந்து வைத்தது 'சாவி'. சாவகாசமாக புரட்டிக் கொண்டிருந்த ஒரு வாரத்தில் சட்டென்று யாரோ என்னை நெற்றிப்பொட்டில் தாக்கினாற் போல் என் சிறுகதையையும் என் பெயரையும் பார்த்து திடுக்கிட்டுப் போனேன். அந்த விசித்திரமான உணர்வு இன்னமும் கூட என் நியூரான்களில் பதிந்திருக்கிறது. ஒருவன் தன் வாழ்க்கையின் அன்றாட தினங்களில் காத்திருக்க நேருகிற கணங்களைப் பற்றின கதை. மிக்க சந்தோஷம். சுஜாதா பாணியில் சொன்னால் 'நகரமே அலம்பி விட்டாற் போலிருந்தது'. சந்தோஷத்துடன் இந்தச் செய்தியை சுற்றத்திடமும் நட்பிடமும் பகிர்ந்து கொண்ட போது கிடைத்த எதிர்வினைகள் அவ்வளவு சிலாக்கியமாக இல்லை.

ஆனால் இதில் அதிக சந்தோஷமடைந்தவள் என் அம்மாதான். தயிர்க்காரி முதற்கொண்டு அனைவரிடமும் நான் ஏதோ இமாலய சாதனையைப் படைத்து விட்டதாக புளகாங்கிதமடைந்தார். என் அடுத்தடுத்த சிறுகதைகளும் அந்த பத்திரிகையிலேயே வெளியாயிற்று. இதற்கிடையில் முதல் கதை வெளியானதற்காக 25 ரூபாய்க்கான காசோலை ஒன்று வந்து சேர, என்னவோ ஏதோ என்று பரபரப்பில் கவரை பதட்டத்துடன் கிழித்ததில் காசோலை இரண்டாக கிழிந்து போனது. (நான் எழுதிக் கிழித்ததற்கு கிழிந்து போன காசோலை). ஏதோ இந்திய-சீன ஒப்பந்தத்தின் நகல் கிழிந்து போனது போல் என் அம்மா பதட்டப்பட, அதை வங்கியில் எடுத்துப் போன போது அங்கிருந்தவர் என்னை சந்தேகத்துடன் பார்த்ததை நான் ரசித்துச் சிரித்தேன். பின்னர் பிரசுரமான கதைகளுக்கு ஏன் பணம் அனுப்பவில்லை என்று ஏதோ 3 கோடி ரூபாய் முதல் போட்டவன் பங்குதாரருக்கு அனுப்பும் நோட்டீஸ் போல அதிகாரமாக ஒரு கடிதம் அனுப்பினேன். "எழுத்தாளர்கள் மணி மணியாக எழுத வேண்டுமேயன்றி 'மணி'க்காக எழுதக் கூடாது என்று பின்னாளில் அவர் ஏதோ ஒரு கேள்வி-பதிலில் எழுதியது என்னைக் குறித்துத்தானா என்று தெரியாது.

இவ்வாறாக வருமான வரி கட்டும் அளவிற்கு எழுதிக் குவித்து பெரிய எழுத்தாளனாக ஆகியிருக்க வேண்டிய எனக்கு வாழ்க்கை தன் குரூர முகத்தை ஒரு பெண் வடிவில் காட்டியது. 'அமிலங்களின் கோஷம் பசி' என்கிற புதுக்கவிதையைப் போல 'ஹார்மோன்களின் கோஷம் காதல்' என்கிற உணராத அப்பாவியாய் பேனாவைத் தூக்கிப் போட்டு விட்டு உடலின் கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவதில் மும்முரமானேன். பின்னர் தாடியும் பீருமாக 'பெண் என்கிற மாயப்பிசாசு' என்கிற சித்தர் பாடல்கள் தேனாக ஒலித்ததில் என்ன ஆகியிருக்கும் என்று அதிகம் விளக்க வேண்டாம். அனுபவஸ்தர்கள் அதிகமிங்கே. இதிலிருந்து பெண்களை குரூரமான நகைச்சுவையுடனும், ஆபாசமான வார்த்தைகளுமாக எதிர்கொள்ளத் துவங்கினேன். பெண்கள் சீட்டில் அமர்ந்து எழுந்திருக்காமல் கலாய்ப்பது, அவர்களது அங்கங்கள் குறித்து காட்டமான என் அபிப்பராயங்களை தெரிவிப்பது என நன்றாகவே அவர்களது வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டேன்.

ஆனால் இம்மாதிரியான துர்எண்ணங்கள் என்னிடமிருந்து விலகிப் போகத் துவங்கினது பாலகுமாரனைப் படிக்கத் துவங்கியதும்தான். பெண் என்கிற சக வாழ்க்கைப் பயணியின் ஆதார உணர்ச்சிகள், அவர்களின் உடல் மன ரீதியான பிரச்சினைகள், சிக்கல்கள், ஆணாதிக்க சமூகம் அவர்களை அரக்கத்தனமாக அழுத்திக் கொண்டிருக்கும் அவலம், குடும்பம் என்கிற ஆதார அமைப்பின் முதுகெலும்பான பெண்ணின் அத்தியாவசியம் என்று பெண்களை குறித்தான என் பார்வையை முற்றிலும் மாற்றியமைத்தது பாலகுமாரனின் படைப்புகள்.

மேற்சொன்ன இரு எழுத்தாளர்களிடமிருந்தும் விலகி சிறிது தூரம் நான் வந்துவிட்டேனென்றாலும் என்னை திசை திருப்பியவர்கள் என்கிற முறையில் இருவருக்கும் நன்றி.

Thursday, January 19, 2006

தமிழவன், மாலன்..............................

வாழ்வின் ஊடான பயணங்களின் பதிவுகள் - 2

"எழுத்திலும் வாழ்விலும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவைகளை மறுபரிசீலிப்பதும், நிராகரித்துக் கொண்டே இருப்பதும், பின்பெஞ்சுகளில் அமர்வதும் பிடித்த காரியங்கள்" (அட நம்ம ஆளு!) என்று தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்ளும் தமிழவனைப் பற்றி ஏற்கெனவே 'லேசுபாசாக' அறிந்து வைத்திருந்தாலும், இலக்கியக் கோட்பாடுகள் பற்றின அவரது பல்லை உடைக்கும் கட்டுரைகளை மட்டும்தான் இதுவரை படித்திருக்கிறேன். அவரின் புனைவு இலக்கியங்களை இதுவரை முயன்றதில்லை. ஒரு கலகவாதியாக என்னுள் படிந்திருக்கும் அவரின் பிம்பம் காரணமாக அவரின் புனைவெழுத்தை படிக்க மிக்க ஆவலோடு இருந்தேன். அண்மையில் அவர் எழுதிய நாவலான 'ஜி.கே எழுதிய மர்மநாவல்' என்கிற புதினத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு ஆரம்ப கால சரித்திர புனைவு எழுத்தாளனால் எழுதப்பட்ட நாவலைப் போலிருந்த அந்தப் படைப்பு எனக்குள் ஏமாற்றத்தையும் சோர்வையும் அளித்தது. அத்தியாயங்களின் நடுவே ஆசிரியரால் எழுதப்பட்ட குறிப்புகள் போல் சிலதை எழுதி, இது ஒரு மரபு மீறிய நாவல் என்கிற மாதிரியான ஒரு மாயத் தோற்றத்தை ஆசிரியர் எழுப்ப முனைந்திருக்கிறார்.

சில குறிப்புகளில் சக எழுத்தாளனை மறைமுகமாக கிண்டல் செய்யும் தொனியும் காணப்படுகிறது. ('நாகர்கோயிலில் ஜங்ஸனில் இருந்து புளியமரத்தின் அடியில் ஒரு கடைவைத்து நடத்துகிறார் என்று அறிந்து ஒரு அபூர்வமான கேரள சரித்திரம் கிடைக்குமென்று இ.எம்.எஸ்.நம்பூதரி பாட் சொல்லி அனுப்பப் போயிருந்தேன். போனபிறகுதான் தெரிந்தது அப்படி ஒரு கடை புளியமரத்தின் கீழ் இருக்கவில்லை என்று.' பிரமித்து நின்ற எனனைப் பார்த்து கண்ணைச் சிமிட்டி 'ஜிப்பாவை தொட்டுக்கொண்டே சொன்னார் போத்தி. "கேளுங்கள் கவனமாக, கோலப்ப பிள்ளை என்று ஒருத்தர் இருக்கவில்லை. இலக்கிய அபிமானி கோலப்ப பிள்ளை ஒரு கற்பனைப் பாத்திரம்".)

இவரின் மற்ற படைப்புகள் குறித்தான வாசக அனுபவம் குறித்து நண்பர்கள் பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்.

()

அருவி என்கிற அமைப்பு சார்பாக ஆய்வு நூல்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி பற்றி சமீபத்தில் எழுதியிருந்தேன். சரணம் ஐயப்பாவிற்கு வருகிற பின்னூட்டங்கள் கூட அதற்கு இல்லாமல் ஈயடித்தது குறித்து எனக்கு வருத்தம்தான். இதனாலேயே அதன் தொடர்ச்சியை எழுத எண்ணம் வரவில்லை. பரவாயில்லை. அந்த நிகழ்ச்சியில் மாலன் பேசின சில பகுதிகள் குறித்து எனக்கு சில கேள்விகள் இருக்கிறது.

பரிசு வாங்கின ஆய்வாளர்களை வாழ்த்தி பேசும் போது மாலன் கூறியதாவது: "புதுமைப்பித்தன் படைப்புகளில், அவரது சமகாலத்திய எந்தவொரு அரசியல் மற்றும் சமூக பிரச்சினைப் பற்றின எதிரொலி மறைமுகமாகக்கூட இல்லை. புதுமைப்பித்தன் மட்டுமல்ல எந்தவொரு மணிக்கொடி எழுத்தாளர்களின் படைப்புகளிலும் இது இல்லை." (நினைவிலிருந்து எழுதுவதால் சரியான வார்தைப் பிரயோகங்களை எழுத முடியவில்லை. ஆனால் அவர் சொல்லிய கருத்து இதுதான்) இந்தியா டுடே இலக்கிய மலர் 2000-ல் பதிவாகியிருக்கிற கலந்துரையாடலின் படி சாருநிவேதிதாவும் இதே மாதிரியான கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இந்த இடத்தில்தான் எனக்கொரு சந்தேகம் எழுகிறது. மாலன் மற்றும் சாரு கூறினபடி, அந்தந்த கால பிரச்சினைகளின் எதிரொலி படைப்புகளில் இருந்தால்தான் நல்ல இலக்கியமா? இல்லையென்றால் அந்த எழுத்து இலக்கியமாதா?

இலக்கியம் பற்றிய என்னுடைய புரிதல் என்னவெனில் ஒரு படைப்பு காலத்தை, இனத்தை, மொழியை தாண்டி, உலகமயமானதாகவும், எந்தக் காலத்திற்கும் ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதாகும். எந்தவித சமூக பிரச்சினைகளும் அந்தந்த பிராந்தியத்தை தாண்டி எல்லா மனிதருக்கும் பொதுவானதாகத்தானிருக்கும். பிரச்சினைகளின் பெயர்களும், ஆழமும், தீவிரமும் வேண்டுமானால் வேறுபடலாம். ஆனால் சமூக பிரச்சினைகளை தொடாமல் எழுதப்படும் எழுத்தினால் பொழுதுபோவதை தவிர ஒரு உபயோகமுமில்லை. மேலும் அது காலத்தினால் நிலைப்பதுமில்லை.

இது குறித்து உங்கள் சிந்தனைகளை வரவேற்கிறேன்.

Wednesday, January 18, 2006

வாழ்வின் ஊடான பயணங்களின் பதிவுகள்

இது ஒரு தொடர் பதிவாக இருக்கும். நீண்ட நாட்களாகவே யோசனையிலேயே இருந்து இப்போதுதான் சாத்தியமாகியிருக்கிறது. தலைப்பு இவ்வளவு இலக்கியத்தனமாக இருந்தால்தான் ஒரு 'கெத்தாக' இருக்கும் என்கிற திட்டத்தில் உள்நோக்கத்துடன் வைக்கப்பட்டது. உள்ளடக்கமும் அதே போல் இருக்கும் என்று எண்ணி யாரும் ஏமாற வேண்டாம். என் இயந்திர வாழ்வில் அபூர்வமாக கடக்கக்கூடிய நிகழ்வுகளைப் பற்றியும், என்னை பாதிக்கின்ற சமூக நிகழ்வுகளைப் பற்றிய என் எண்ணங்களைப் பற்றியும், நான் படித்த நூல்களைப் பற்றியுமாக எல்லாவற்றையும் இந்தத் தொடர் உள்ளடக்கியிருக்கும். இதற்கு முன்னோடியாக நான் கருதுவது ஆ.வியில் க.பெ.எழுதுபவர் என்றாலும் சமீபத்தில் என் பழைய டைரிகளை புரட்டிப் படித்துக் கொண்டிருந்த போது அது மிகுந்த சுவாரசியமானதாக இருந்ததும் இதற்கு காரணமாக இருக்கலாம் என யூகிக்கிறேன். அப்போதே தொலைக்காட்சியிலும், விழாக்களிலும் பார்த்த நிறைய விருது பெற்ற படங்களைப் பற்றின குறிப்புகளை என் டைரிக்களில் எழுதியிருக்கிறேன். நிறைய fiction வகையறாக்களை படித்திருக்கிறேன். (ஜெயமோகனின் 'ரப்பர்' நாவலை சிலாகித்து எழுதியிருக்கிறேன்). நிறைய பியர் குடித்து அதற்கு கணக்கும் எழுதி வைத்திருக்கிறேன். காமம் என்கிற உணர்வினால் நிறைய அலைக்கழிக்கப்பட்டிருக்கிறேன். (எந்தெந்த நாள் masturbate செய்தேன் என்கிற குறிப்பை கூட எழுதியிருப்பது விநோதம்தான்). இன்னும் பல அந்தரங்கமான (எல்லோருக்கும் தனித்தனியாக இது அந்தரங்கமாக இருந்தாலும் ஒரு சாதாரண மனிதனுக்கு நிகழக்கூடிய பொதுவான அனுபவங்கள்தாம்) குறிப்புகள்........

இப்போது அதை மீண்டும் படிக்கும் போது நிறைய அனுபவங்கள் எதுவுமே ஞாபகம் இல்லாமல் ஆச்சரியமாக உணர்வது ஏனென்று புரியவில்லை. மூளையில் உள்ள நியூரான்களுக்கு வயதாகிவிட்டதா அல்லது பெரும்பாலானவை துக்ககரமான கனவுகளில் கழுவித் துடைக்கப்பட்டதா என்றும் தெரியவில்லை. எப்படியோ அந்த கணங்களில் கொஞ்சம் மீண்டும் வாழ்ந்தது புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அதையே சற்று நாகரிமாக இணையத்தில் தொடரலாமா என்கிற யோசனையைத்தான் நீண்ட தயக்கத்திற்கு பிறகு இப்போது சாத்திமாக்கியிருக்கிறேன். மீண்டும் பேனா பிடித்து டைரி எழுதுவது சாத்தியமில்லை என்கிற முடிவினால் இப்படியொரு யோசனை.

ஆகவே நண்பர்களே, இந்தத் தொடர் உங்களை விட எனக்கு நானே எழுதிக் கொள்வதுதான் பிரதானமாக இருக்கப் போகிறது. இதில் உங்களுக்கும் பயனுள்ளதான செய்தி எங்காவது ஒளிந்து கொண்டிருக்கலாம். கண்டுபிடித்து பயன்பெறுங்கள். :-)

()

சுஜாதாவின் க.பெ.தான் இதற்கு தூண்டுதல் என்பதால் அவரையே திட்டி ஆரம்பிப்பதுதான் முறையாக இருக்கும்.

ஆனந்த விகடனின் தளத்தை நிறைய உருப்படியான விஸயங்களுக்கு பயன்படுத்தினாலும் அவ்வப்போது தன் சுயதம்பட்டங்களுக்காகவும், உபயோகத்திற்காகவும் பயன்படுத்திக் கொண்டு வருவதை நாம் அறிந்திருக்கிறோம். ஆழமாக எழுத வேண்டிய விஸயத்தை மேலோட்டமாக எழுதிவிட்டு (வெகுஜன வாசகர்களிடம் தன் அறிவுஜீவி பிம்பத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சி இது) சம்பந்தப்பட்ட விஸயத்தில் அதிகம் அறிந்தவர்கள் கேள்வி எழுப்பினால், "நான் எத எழுதினாலும் தப்பு கண்டுபிடிக்கறதிலேயே சில பேர் இருக்காங்க" என்று அலுத்துக் கொள்வதும் அவர் வழக்கம்.

சமீபத்தில் நடந்த பிராமண மாநில மாநாட்டில் அவர் பெற்ற விருதை குறிப்பிட்டு 'தன்யனானேன்' என்று எழுதியவர் தொடர்ந்து இதுவரை அடக்கப்பட்ட அவர்களின் பொறுமையையும் அது விளிம்பிற்கு வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டு அவர்களின் ஆதிமூலங்களை ஆராய்ந்து யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்று சரித்திர ஆராய்ச்சி செய்து ....... வளர்த்துவானேன். தன்னை ஒரு வைணவர் என்று பல சமயங்களிலும் படைப்புகளிலும் எப்போதும் நிறுவிக் கொண்டிருந்தவர், சற்றே பரிணாம வளர்ச்சி பெற்று பிராமணியத்திற்கு வந்திருக்கிறார். இதையே சொல்லிக் கொண்டிருந்தால் வாசகர்கள் தவறாக நினைத்து விடப் போகிறார்களே என்று நினைத்தோ என்னவோ, அந்த தீட்டு போக தலித்களின் பிரச்சினையையும் போகிற போக்கில் லேசாக கவலைப்பட்டிருக்கிறார்.

ஒரு தனிமனிதனாக அவர் தன் சுய ஜாதி குறித்து பெருமைப்பட்டுக் கொள்ளட்டும்; அதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. ஆனால் ஒரு பொறுப்புள்ள எழுத்தாளனாக, பல்வேறு இனத்தவர்களை தன் வாசகர்களாக கொண்டிருக்கும் சுஜாதா, தன் இனம் குறித்த சிந்தனைகளை பொதுமேடையில் எந்தவித கூச்சமுமின்றி வைப்பாராயின் அவர் இது வரை கற்ற கல்வி எதற்கு பயன்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை யோசிக்க வேண்டியதாயிருக்கிறது. கொஞ்சமாக யோசிக்கத் தெரிகிற எனக்கே, ஜாதி என்கிற அடையாளமும், அமைப்பும் எவ்வாறு மனிதனை சீரழித்துக் கொண்டிருக்கின்றன என்றும் அதைக் கடந்து வருவதுதான் முற்போக்காக சிந்திக்க, செயல்படுகிற ஒருவனின் கடமையாக இருக்கும் என்றும் என்னை யாராவது ஜாதியுடன் சம்பந்தப்படுத்தி பேசும் போது மலக்கிடங்களில் விழுந்தது போன்று அருவருப்பாக தோன்றும் போது, மெத்தப்படித்த சுஜாதா இதைப் பற்றி அலட்டிக் கொள்ளாததுதான் ஆச்சரியமாக இருக்கிறது.

()

சண்டக்கோழி என்கிறதொரு படம் வந்திருப்பதே 'குட்டி ரேவதி' விவகாரத்திற்கு பிறகுதான் பல அறிவுஜீவிகளுக்கு தெரிந்திருக்கும் எனும்படி சிற்றிதழ் சார்ந்த சூழலில் இது பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறது. ஒரு படத்தின் வசனத்திற்கு சம்பந்தப்பட்ட இயக்குநர்தான் தார்மீக பொறுப்பு என்றாலும், எஸ்.ரா வசனம் எழுத கிடைத்த வாய்ப்பை தன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த பயன்படுத்தியிருப்பது துரதிர்ஸ்டவசமானதுதான். அதை பொது மேடையில் மறுத்திருப்பது இன்னும் மோசமான சூழ்நிலை. இப்படியான அவர் குட்டிரேவதியை பழிவாங்க என்ன முகாந்திரம் என்று இதற்கு பின்னணியில் உள்ள அரசியலை தீவிரமாக அறிந்திருக்கிற இலக்கிய 'பெரிசுகள்' இதைப் பற்றி வரும் சிற்றிதழ்களில் குமுறப் போகிறார்கள்.

தவமாய் தவமிருந்து படத்தில் சேரன் இதே போல் குஸ்பு என்கிற பெயரை வெளிப்படையாய் பயன்படுத்தி கிண்லடித்ததை ஏனோ எந்த பெண்ணுரிமை இயக்கங்களோ, அமைப்புகளோ எதிர்க்காதது ஆச்சரியம்தான். (சம்பந்தப்பட்ட குஸ்பு சாதாரண நேரமாக இருந்தால் எதிர்த்திருப்பார். அவரே தப்பிப் பிழைத்தது தம்பிரான் புண்ணியம் என்கிற நிலையில் இருக்கிறார்.)

இது தவிர சேரனின் இந்த சென்டிமென்ட் குப்பைப் படத்தை சிற்றிதழ்களில் முறையே உயிர்மையில் ஜெயமோகனும் காலச்சுவடில் தேவிபாரதியும் புகழ்ந்து தள்ளியிருப்பது ஆச்சரியம்தான். வழக்கமாக இந்த மாதிரியான காமெடியை அ.ராமசாமிதான் செய்வார். (அது ஒரு கனாக்கலாத்தையும், கஸ்தூரி மானையும் குமுதம் தீராநதியில் பாராட்டியிருக்கிறார்). காட்டமான விமர்சனங்களை சேரன் எதிர்கொள்கிற தொட்டாற்சுணுங்கித்தனமான அணுகுமுறை என்னை நகைக்க வைக்கிறது. மட்டமான சூழலில் இவர் எடுத்திருப்பது புனிதப்படமாம். அதை யாரும் விமர்சிக்கக்கூடாதாம். ஜனவரி 2006 தீம்தரிகிடவில் ப்ரியா தம்பி என்கிறவர் இந்தப்படத்தை மிகுந்த யதார்த்த நோக்குடன் எழுதியிருப்பதை சேரன் முதலில் படிக்கட்டும்.

()

ஆங்கிலம் என்கிற மொழி எப்போதுமே எனக்கு பிடித்தமானதாகவும், பிரமிப்பூட்டுவதாகவும் இருந்திருக்கிறது. அது என்னை நிரம்பவும் அலட்சியப்படுத்தினாலும் அதன் மீதான பிரேமை எனக்கு குறைந்தபாடில்லை. I will be taken leave என்றெல்லாம் எடுத்த விடுமுறைக்கு லீவ்லெட்டர் எழுதி மற்றவர்களால் நகைக்கப்பட்டு அவமானமாய் உணர்ந்தாலும் அந்த மொழியை தீவிரமாக ஸ்பரிசிக்க மனம் விழைகிறது. இப்படியான கல்வி கற்ற நாட்களில் பட்ட அவஸ்தையை என்னுடைய மகள் மூலமாக மீண்டும் பட வேண்டியிருக்கிறது. வீட்டிலும் ஆங்கிலத்தில் பெற்றோர்கள் பேசினால்தான் ஆங்கில அறிவு வளரும் என்கிற ஆசிரியையின் உத்தரவு காரணமாக "Talk Englishப்பா" என்று மகள் நச்சரிக்க மறுபடியும் ரெபிடெக்ஸை எடுக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருந்த போது தொலைக்காட்சியின் மூலமாகவே இதற்கொரு விடிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஒரு மாலை வேளையில் தொலைக்காட்சியை surf-ப்பிக் கொண்டிருக்கும் போது ஆவேசமும் அழுத்தமாய் ஒரு குரல் ஆங்கிலத்தில் ஒலிக்க, அதற்கு சற்றும் சளைக்காமல் மற்றொரு குரல் ஆவேசத்துடன் அதே வாக்கியத்தை தமிழில் உச்சரித்துக் கொண்டிருந்தது. அடடா அடித்தது ஜாக்பாட்! இத்தனை நாள் இதைக் கவனிக்காமல் போய்விட்டோமே என்று தோன்றி அவர்கள் பாட்டிற்கு பரிசுத்த ஆவியை பிடித்துக் கொண்டிருக்கட்டும், நாம் பாட்டிற்கு இதை உபயோகித்து ஆங்கில உரையாடல் அறிவை வளர்த்துக் கொள்வோம் என்று தோன்றிற்று. இதைத்தான் கிராமப்புறங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்."......... வேண்டாம். நாகரிக மனிதர்களுக்கு அது அசெளகரியத்தை ஏற்படுத்தும் என்பதால் தவிர்க்கிறேன்.

()

பயணம் தொடரும்.........

Tuesday, January 17, 2006

இலக்கிய தினவும் சொறிந்து கொள்ள சில புத்தகங்களும்

நடிகர், நடிகைகள் மட்டுமே உலகம் என்பதாய் அவர்கள் ஒண்ணுக்கு போவதைக் வைத்துக் கூட நிகழ்ச்சி அமைப்பதை பண்டிகைக் கால சிறப்பு நிகழ்ச்சிகளாக அமைத்து அபத்தமாக இயங்கிக் கொண்டிருந்த தொலைக்காட்சியிலிருந்து விலகியிருக்க சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன். வழக்கமாக கண்காட்சி தொடக்கத்திலேயே சென்று விடும் நான் இந்த வருடம் தாமதமானதிற்கு சமீபத்தில் சபரிமலைக்கு சென்றிருந்ததுதான் காரணம். (இதுபற்றி என் பதிவில் பின்பு விரிவாய் எழுதுகிறேன்).

வழக்கமான அதே காயிதே மில்லத் கல்லூரி. வெள்ள நிவாரண உதவியை இங்கே வழங்குவதாக யாராவது புரளியை கிளப்பி விட்டுவிட்டார்களோ என்று எண்ணும்படி ஒரே கூட்டம். மதிய நேரம் சென்றால் கூட்டத்தை தவிர்த்து விடலாம் என்று நான் முன்யோசனையாக செயல்பட்டதெல்லாம் வீணாகிவிட்டது. கண்காட்சியின் உள்ளே இருக்க வேண்டிய கூட்டத்தில் பாதி, வெளியே நடைபாதைக் கடைகளில் Pirated Books-களையும் நூல்நிலையத்திலிருந்து திருடி வைத்திருந்த நூல்களையும் சீப்பான விலையில் வாங்க போட்டி போட்டது.

போன வருட கண்காட்சியில் வாங்கின புத்தகங்களையே இன்னும் படிக்காத நிலையில் இந்த வருடமும் புத்தகம் வாங்க ஏன் வந்தேன் என்று சற்று யோசித்துப் பார்த்தேன். இத்தனைக்கும் நான் கலந்து கொள்கிற இலக்கிய கூட்டங்களில் வெளியே போடப்படும் புத்தகங்களையும் வாங்குகிறேன். இரண்டு, மூன்று நூல்நிலையங்களிலும் உறுப்பினராகவும் இருக்கிறேன். அப்புறமும் ஏன்? கொழுப்புதான் என்று தோன்றுகிறது. நண்பர்களிடேயே நடைபெறும் விவாதங்களில் தனிமைப்பட்டு போய்விடக்கூடாது என்பதும் 'இதெல்லாம் படித்திருக்கிறேன் பார்' என்று பீற்றிக் கொள்வதற்காகவும்தான் இதெல்லாமுமோ? சக மனிதனை விட ஒரு அடி அதிக உயரம் நிற்கும் ஆசைதான் இவ்வாறு செய்யத் தூண்டுகிறதோ என்று தோன்றுகிறது. அடுத்த வேளை உணவிற்கு உத்தரவில்லாமல் நடைபாதையில் ஒருவன் துடித்துக் கொண்டிருக்கும் போது ஐந்நூறு கொடுத்தெல்லாம் புத்தகம் வாங்குவது குற்ற உணர்வைத் தூண்டுகிறது என்றால் அது உங்களுக்கு நாடகத்தனமாகக்கூட தோன்றலாம். :-) சரி. இதை அப்புறம் பார்ப்போம். நான் தவறாகவும் இருக்கலாம்.

()

உள்ளே நுழைந்தவுடன் போண்டா கடைகளும் நடிகர்களையும் மிஞ்சும் கவிஞர்களின் பிரம்மாண்ட flex-களும் வரவேற்றன. அரிமா சங்கம் சார்பில் ஒரு பெரிய வேன் வைக்கப்பட்டு ரத்ததானம் பெறப்பட்டுக் கொண்டிருப்பதும் அதன் முன்னால் சில புண்ணியாத்மாக்கள் க்யூவில் நின்று கொண்டிருந்ததும் வரவேற்கத்தக்க அம்சங்கள். நுழைவுச் சீட்டு வாங்கும் இடத்திலேயே தன் விளம்பரத்தை கிழக்கு பதிப்பகம் அமைத்திருந்தது புத்திசாலித்தனமான காரியமாகப் பட்டது. பாய்ஸ் படத்தில் அந்த இளைஞர்கள் கூட்டமான இடங்களில் மாமிகளை உரச குறிப்பிடும் இடங்களில் இனி புத்தக கண்காட்சியையும் சேர்த்துக் கொள்ளலாம் எனும்படி உரசலான நெரிசல். ராட்டினனும் பஞ்சுமிட்டாயும் இல்லாத குறையாக திருவிழா கூட்டம். பல கடைகளில் உள்ளே நுழையத் தயங்கும்படியான நெரிசல். அமைப்பாளர்கள் இன்னும் சற்று அதிக இடத்தை ஒவ்வொரு கடைக்கும் ஒதுக்கியிருக்கலாம் என்று தோன்றியது. பெரும்பாலான கடைகளில் கல்லாவில் அமர்ந்திருப்பவர்கள் மகிழ்ச்சியோடு சில்லறையை எண்ணிக் கொண்டிருக்க, சில கடைகளில் மட்டும் சுடுகாட்டில் பிரியாணி கடை வைத்தவர்கள் மாதிரி ஈயடித்துக் கொண்டு சோகமான அமர்ந்திருந்தனர்.

கிழக்குப் பதிப்பகத்தில் நண்பர்கள் பா.ராகவன் (இவரை இனி (பா)ன்பராக் ராகவன் என்று அழைக்கலாம்), பத்ரி, முத்துராமன், சத்யா, கிருபா, கனடா வெங்கட்ரமணன், வெங்கடேஸ், ஆகியோர்களையும் anyindian.com-ல் பிரசன்னாவையும் சந்தித்து உரையாடியது சற்று ஆறுதலான விடயம். உயிர்மையில் பிரசன்னா புண்ணியத்தில் மனுஸ்யபுத்திரனை சந்தித்து போது என்னுடைய வலைப்பதிவை படிப்பதாக கூறி ஆச்சரியப்படுத்தினார்.

()

நான் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்:

புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம் (ஏற்கெனவே இவரைப் பற்றி அறிந்திருந்தாலும் சாருநிவேதிதாவின் உசுப்பலில் ஆர்வம் அதிகமாகி நீண்ட நாட்கள் தேடிக் கொண்டிருந்த புத்தகம்)

நினைவோடை - பிரமிள் - சுந்தரராமசாமி

இல்லாத ஒன்று - சு.ரா சிறுகதைகள் (50சதவீத கழிவு என்பதால் வாங்கியது)

நவீனத்துவத்தின் முகங்கள் - ஜெயமோகன்

உறுபசி - எஸ்.ரா (நாவல்) (எந்த கதாபாத்திரமாவது யாரையாவது திட்டுகிறதா என்று கவனித்துப்படிக்க வேண்டும்)

இவன்தான் பாலா - ஆ.வி. தொடர்

கண்டதைச் சொல்லுகிறேன் - ஞாநி

கேள்வி பதில்கள் - ஞாநி

சிற்றிதழ்கள்:

திரை, கவிதா சரண், ரசனை, தீம்தரிகிட, புது எழுத்து, தொனி (பழையது) பன்முகம்.

()

இதைத் தவிர வெளியே நடைபாதையில் முதுகெலும்பு ஒடிய தேடி அதிசயமாக கிடைத்த புத்தகங்கள்:

வேடந்தாங்கல் - ம.வெ.சிவக்குமார்
அக்கா - அ.முத்துலிங்கம்
கிணறு - ஆர்.சூடாமணி
படைப்பியல் - சி.சு. செல்லப்பா.

()

இதையும் தவிர எனக்குக் கிடைத்த விலைப்பட்டியல்களின் படி, என்னுடைய ரசனையின் அடிப்படையிலும் சிறப்பாக இருக்கக்கூடும் என்கிற ஊகத்தின் அடிப்படையிலும் நான் வாங்க விழையும் மற்றவர்களுக்கு சிபாரிசு செய்யும் நூல்கள்:

உயிர்மை:

சிலப்பதிகாரம் ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா
சுந்தரராமசாமி - நினைவின் நதியில் - ஜெயமோகன்
நதிமூலம் - மணா (கட்டுரைகள்)
சாம்பல் நிற தேவதை - ஜீ.முருகன் (சிறுகதைகள்)

காவ்யா:

இலக்கிய விசாரங்கள் - க.நா.சு கட்டுரைகள் 1, 2
தமிழ் இலக்கிய வரலாறு - தெ.பொ.மீ

தமிழினி:

கொற்றவை - ஜெயமோகன்
ஆழி சூழ் உலகு - ஜோ.டி.குரூஸ்
நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை - நாஞ்சில் நாடன் (கட்டுரைகள்)ஏவாளின் இரண்டாவது முடிவு - பாவண்ணன்

வ.உ.சி. நூலகம்:

மகாத்மா காந்தி வரலாறு - வின்சென்ட் ஹீன்
சேகுவேராவின் கொரில்லா யுத்தம் - ரெஜி டெப்ரே
உலகம் மாற வேண்டும் - எம்.என்.ராய்

கிழக்கு பதிப்பகம்:

கண்ணீரும் புன்னகையும் - நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை
ஜப்பான் : ஒரு ·பீனிக்ஸின் கதை
துப்பாக்கி மொழி - தீவிரவாத இயக்கங்களைப் பற்றின நூல்
ஆதவன் கதைகள் - மொத்த தொகுப்பு (இலக்கிய ரசிகர்கள் தவற விடக்கூடாத நூல்)
சொல்லில் இருந்து மெளனத்திற்கு - அய்யனார் (நேர்காணல்களின் தொகுப்பு)

காலச்சுவடு:

பசித்த மானிடம் - கரிச்சான் குஞ்சு (மறுபதிப்பு)
தமிழகத்தில் அடிமை முறை - ஆய்வு நூல்
எனது இந்தியா - ஜிம் கார்ப்பெட் (தமிழல் யுவன் சந்திரசேகர்)
நிழல்முற்றம் - பெருமாள் முருகன் (நாவல்)
பொய்த்தேவு - க.நா.சு (மறுபதிப்பு)
ஒற்றன் - அ.மி. (மறுபதிப்பு)
ஒரு தந்தையின் நினைவுக்குறிப்புகள் - டி.வி.ஈச்சுவாரியார்

அடையாளம்:

·பிராய்ட் - அந்தோனி ஸ்டோர் - தமிழில் சி. மணி
உலகமயமாக்கல் - மான்·பிரட் பி.ஸ்டெகர் - தமிழில் க.பூர்ணச்சந்திரன்பின்நவீனத்துவம் - கிறிஸ்தோபர் பட்லர் - தமிழில் பிரேம்பயங்கரவாதம் - சார்லஸ் டிவுன்சென்ட் - தமிழில் ஞாநி

Monday, January 16, 2006

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

சுவாமியே சரணம் ஐயப்பா

?

Monday, January 02, 2006

அருவியின் ஆய்வு நூல்களுக்கான பரிசுகள்

'அருவி' ஆய்வு மையம் மற்றும் பதிப்பகம், சில ஆய்வு நூல்களை தேர்வு செய்து பரிசுகளை வழங்கியது. அதற்கான விழா 27.12.2005 அன்று சென்னை, தேவநேயப் பாவாணர் நூல்நிலைய அரங்கில் நடைபெற்றது. பரிசு பெற்ற நூல்ளையும் அதன் ஆசிரியர்களின் பட்டியலையும் மற்றும் விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்களின் பட்டியலையும் பார்க்க.:

()

என்னுடைய சுமார் பதினைந்து ஆண்டு கால வாசிப்பனுபவத்தில் புனைவு அல்லாத படைப்புகளின் வாசிப்பு சமீப காலமாக அதாவது ஐந்தாண்டுகள் முன்புதான் ஆரம்பித்தது. அதுவரை கதாபாத்திரங்களின் உணர்வுச் சிக்கல்களுக்கு இடையே ஊடாடிக் கொண்டிருந்த எனக்கு, நிஜமான, யதார்த்தமாக சமூகம் சார்ந்த உருவாக்கங்களைப் படிக்க ஆரம்பிக்கும் போது எவ்வளவு வருடங்களை வீணடித்திருக்கிறோம் என்கிற வருத்தமேற்பட்டது. நூல் நிலையங்களுக்குச் செல்கிற போதெல்லாம் கண்ணில் படுகிற எல்லா நூல்களின் தலைப்புகளையும் பார்ப்பது என் வழக்கம். அவ்வாறு என் கண்ணில் இடறிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய பல நூல்களின் தலைப்புகள், படிக்கும் ஆர்வத்தைத் தூண்டவில்லை அல்லது அவ்வாறு படிக்கத் தூண்டிய நூட்களை முயன்று பார்க்கும் போது அதனுடைய கடுமையான மற்றும் வறட்சியான மொழியின் காரணமான நூலின் உட்புக முடியாமல் சோர்ந்து போய், ஆய்வுக் கட்டுரை என்றாலே முகம் திருப்பிக் கொள்கிற ஒவ்வாமைக்கு ஆளானேன். 'பண்டிதர்களுக்காக பண்டிதர் மொழியில் எழுதப்படும் ஆவணங்கள்' என்பதே ஆய்வுக்கட்டுரை நூல்களின் வரையறை என்பதான ஒரு பொத்தாம் பொதுவான தீர்மானத்திற்கு வந்தேன்.

என்றாலும் பிற்பாடு சில ஆய்வு நூல்கள், உதாரணமாக வேங்கடாசலபதியின் 'அந்தக் காலத்தில் காப்பி இல்லை' போன்ற புத்தகங்கள் சுவாரசியமான மற்றும் தகவல்பூர்வமான உள்ளடக்கத்துடன் எழுதப்பட்டு படிக்கும் ஆர்வத்தை தூண்டுபவையாக இருந்தன என்பதையும் மறுக்கவியலாது. இவ்வாறிருக்க, வழக்கமான நாவல், சிறுகதை போன்றவற்றிற்கு பரிசு என்பது அல்லாமல் ஆய்வு நூல்களின் பரிசளிப்பு விழாவிற்கு சென்றது இதுவே முதன் முறை. இந்த விழாவில் கலந்து கொண்டதின் மூலம் பல களங்களில், பல தளங்களில் எழுதப்படும் புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமாகியுள்ளது.

()

(வழக்கமான Disclaimer: நினைவில் தங்கின பகுதிகளை எழுதுவதால் தகவல் பிழைகளோ, கருத்துப் பிழைகளோ இருக்கக்கூடும்)

5.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய விழா, 6.30 மணிக்கு ஆரம்பித்ததை குறை என்று சொல்லலாம் என்றாலும், நிகழ்ச்சியின் ஆக்கப்பூர்வமான நோக்கத்தை பார்க்கும் போது இதை பொருட்படுத்தத் தேவையில்லை என்று தோன்றியது. 'அருவி' அமைப்பை அறிமுகப்படுத்தி பேச ஆரம்பித்த பேராசிரியர் ச.மாடசாமி,

"'அருவி' அமைப்பானது இப்போது தளிர்நடை போட்டு ஆரம்பமாகியிருக்கிறது. அறிவொளி இயக்கத்திற்காக கிராமப்புறங்களில் பயணம் செய்கிற போது அங்குள்ள மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் பல்வேறு திறமைகள் இருப்பதை கண்டு பிரமிக்க நேர்ந்தது. அவர்களின் 'சொலவடை'களும் போடும் விடுகதைகளும் (ஆத்தா நெஞ்சில முட்டி பால் குடிச்ச மகன் செத்துப் போனான் - விடை: தீப்பெட்டி) மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவ்வாறு அடையாளம் காணப்படாமலிருக்கிற பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் முகமாகத்தான் அருவி என்கிற இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக குறிப்பிட்ட ஆண்டில் எழுதப்பட்டிருந்த ஆய்வு நூல்களை பரிசீலித்து சிறந்த நூல்களைப் பாராட்டி பரிசு கொடுக்கவாரம்பித்திருக்கிறோம். இனிவரும் வருடங்களிலும் இது தொடரும்" என்று முடித்தார்.

பேராசிரியர் வே. வசந்தி தேவி தலைமை உரையாற்றும் போது (இன்றைய கல்வி முறை குறித்து வெளிப்பட்டிருக்கிற இவரது சிந்தனைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவருடன் சுந்தரராமசாமி நிகழ்த்திய கல்வி குறித்த உரையாடல்கள் 'காலச்சுவடு' வெளியீடாக வந்திருப்பதை அறிந்திருப்பீர்கள்)

"இங்கு பரிசு வழங்கப்படப்போகிற நூல்களைப் பற்றி ஏதும் பேச முடியாத நிலையிருக்கிறேன். காரணம், சம்பந்தப்பட்ட எந்த புத்தகங்களும் என் கைக்கு வந்து சேரவில்லை. சர்வதேச தரத்துடன் ஒப்பிடும் போது பொதுவாக தமிழில் ஆய்வு நூல்களின் தரம் உயர்ந்ததாக இல்லை. மேற்கத்திய நாடுகளில் ஒருவர் ஒரு தலைப்பைப் பற்றி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற வேண்டுமானால் குறைந்தது ஏழு ஆண்டுகளாவது ஆகும். அவர் ஆய்வுக்கு எடுத்திருக்கிற தலைப்பைப் பற்றி இதுவரை எழுதப்பட்டிருக்கிற அனைத்து நூல்களையும் படித்து முடித்தால்தான் அவர் பட்டம் பெறும் வாசலுக்கே நுழைய முடியும். ஆனால் இந்தியாவிலோ 'Fast Food culture' போல் அரையும் குறையுமாக இரண்டு ஆண்டுகளிலேயே பி.எச்டி வாங்கிவிட முடிகிறது. இந்நிலை மாற வேண்டும். இதைப் பற்றி என் சக ஆசிரியர்களிடம் கூறும் போது அவர்கள் கூட இதை ஏற்க மறுப்பது வேதனை தருவது. மேலும் விமர்சனக்கலை என்பதும் தமிழில் வளர வேண்டும்" என்று கூறி முடித்துக் கொண்டார்.

()

அடுத்ததாக பரிசு பெற்ற நூல்களை அறிமுகப்படுத்தும் விதமாக படைப்பாளி ச.தமிழ்ச்செல்வன் பேசினார். (இவரும் அறிவொளி இயக்கப் பணிக்காக கிராமப் புறங்களில் களப் பணி செய்தவர் என்பதை அறிந்திருப்பீர்கள். 'இருட்டு எனக்குப்பிடிக்கும்' 'ஆண்களுக்கான சமையல் குறிப்புகள்' போன்ற சிறு சிறு கட்டுரைத் தொகுதிகள் எழுதியிருக்கிறார். இவரது சிறுகதைகள் மொத்த தொகுதிகளாகவும் வந்திருக்கின்றன. பொதுவாக நான் அவதானித்ததில் களப்பணி செய்கிறவர்களின் பேச்சு மிக இயல்பானதாகவும், சுவாரசியமானதாகவும் தாங்கள் சொல்ல வந்தததை சொல்கிறார்கள்). பரிசு பெற்ற புத்தகங்களில ஐந்து புத்தகங்களை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு புத்தகத்தின், கட்டுரையின் சிறப்பமசங்களை சுவையாக கூறினார். (குறிப்பிட்ட கால அளவிற்கு மேல் இவரது பேச்சு நீண்டுக் கொண்டே போக ஒருங்கிணைப்பாளர் பாரதி பாலன் அனுப்பிய துண்டுச் சீட்டு கூட இவரைக் கட்டுப்படுத்த இயலவில்லை.)

இவர் முதலில் எடுத்துக் கொண்ட புத்தகம்: கரசூர் பத்மவாதி எழுதிய 'நரிக்குறவர் இனவரைவியல்'. நமது சமூகத்தால் அதிகம் கவனிக்கப்படாத, புறக்கணிக்கப்படுகிற, அருவருக்கிற, முறையாக ஆவணப்படுத்தப் படாத நரிக்குறவர்களின் வாழ்வியலைப் பற்றின நூல். தமிழ்ச் செல்வன் இதுகுறித்து பேசியதில் இருந்து பொதுவாக:

"அநாகரிகமான மனிதர்கள் என்று நாம் அவர்களை குறிப்பிடுகிறோம். அவர்களிடத்திலேதான் வரதட்சணைக் கொடுமையோ, கணவனை இழந்த பெண்ணை விதவையாக்கி கொடுமைப்படுத்துவதோ போன்ற நம்முடைய உள்ள தீய பழக்கங்கள் இல்லை. ஆனால் நாம், இயற்கையோடு இயைந்து வாழ்கிற அவர்களை அநாகரிகமானவர்கள் என்கிறோம். இது போன்ற பல முன்தீர்மானிக்கப்பட்ட விஷயங்களை மறுபரீசீலனைக்கு உள்ளாக்க வேண்டியிருக்கிறது. பத்மாவதி இந்த நூலை கவனத்தோடும், மிகுந்த உழைப்போடும் ஆவணப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. என்றாலும் சில இடங்களில் தன்னையறியுமால் பழக்கப்பட்ட சமூக உணர்வில் 'நாகரிகமில்லாத அவர்கள்....' என்று குறிப்பிட்டுருந்ததை தவிர்த்திருக்கலாம்."

இந்த நூலைப் பற்றின வெங்கட்டின் பதிவு.

(to be continued)