Tuesday, May 31, 2016

என்னது... ஃபேஸ்புக்ல அக்கவுண்ட் இல்லையா?





ஆடையில்லா மனிதன் அரை மனிதன் என்பதெல்லாம் எக்ஸ்பையர் ஆன பழமொழி. இன்றைய தேதியில் உங்களிடம் ரேஷன் கார்டு இருக்கிறதா அல்லது ஆதார் கார்டு இருக்கிறதா என்பதெல்லாம்  கூட அத்தனை முக்கியமில்லை. சோஷியல் நெட்வொர்க்கிங்கில் அக்கவுண்ட் இருக்கிறதா என்பதுதான் முக்கியமான மேட்டர். குறைந்தபட்சம் இமெயில் அக்கவுண்ட் கூட இல்லையென்றால் உங்களை வேற்றுக்கிரகத்து ஆசாமி போல அல்லது ஷாப்பிங் மாலில் மஞ்சப்பையுடன் நுழைந்து விட்ட கிராமப்புறத்து நபர் போல விநோதமாக பார்க்கும் நிலைமையாகி விட்டது.

சந்தித்து இரண்டு நிமிடங்களாகும் எந்தவொரு நண்பரும் 'உங்க வாட்ஸ்அப் நம்பர்' தாங்க என்கிறார். "என்னது வாட்சு ரிப்பேரா?" என்று அந்த நுட்பம் தெரியாமல் கோயிஞ்சாமி மாதிரி கேட்டு விட்டால் உங்கள் மானமே போய் விடும். நாட்டிலுள்ள கழிப்பறைகளின் எண்ணிக்கையை விட மொபைல் போன் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிற அடிப்படையான செய்தியை நினைவில் கொள்க.

நீங்கள் கற்காலத்திலிருந்து விடுபட்டு நவீன ஆசாமியாக ஆக வேண்டுமென்கிற விருப்பம் இருந்தால் உடனே எந்தவொரு சமூக வலைத்தளங்களிலாவது உறுப்பினர் ஆகி மொக்கையோ கடலையோ போடுவதில்தான் உங்கள் சமூக அந்தஸ்து உயர்கிறது என்கிற அடிப்படைய செய்தியையாவது அறிந்து உடனே அப்டேட் ஆகவும்.

***

நம்பகமான தகவலா என்று தெரியாது. எங்கேயோ படித்ததுதான். அந்தந்த பிரதேசத்து மக்களின் மனோபாவம் அங்கு வாழும் காக்கைகளுக்கும் படிந்து விடுமாம். உதாரணமாக மைலாப்பூர் காக்கா என்றால் அங்கு தயிர்சாதம் சாப்பிட்ட பழக்கத்தில் எவராவது ஒருவர் அருகில் வந்தாலே பயந்து பறந்தோடி விடுமாம். இதே காசிமேட்டில் கருவாடு தின்ற காக்கா என்றால் நீங்கள் குளோசப்பில் சென்றாலும்... "த்தோடா.... இன்னா'ன்ற மாதிரி கெத்தான திமிருடன் அசையாமல் பார்க்குமாம். உண்மையா என்று சோதித்துப் பார்க்கவில்லை.


இதைப் போலவே இண்டர்நெட்டிலும் ஃபேஸ்புக், டிவிட்டர், கூகுள் ப்ளஸ், இன்ஸ்டாகிராம் என்று நிறைய வலைத்தளங்களில் புழங்கும் மக்களும் அந்தந்த தன்மையோடு ஆன டிராகுலாக்களாக மாறி விடுகிறார்களோ என்றொரு சந்தேகம் எனக்கு நெடுங்காலமாக உண்டு. உதாரணமாக அதிகம் குழாயடிச்சண்டைகள் நடக்குமிடம் என்று பார்த்தால் டிவிட்டர்தான். ஒபாமா முதல் ஓமக்குச்சி நரசிம்மன் வரை பல பிரபலங்களுக்கு டிவிட்டரில் அக்கவுண்ட் உண்டு. அந்த தருணத்தில் தாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்கிற அதிமுக்கியமாத தகவலை உலகத்திற்கு தெரிவித்து வைப்பது அதன் அடிப்படையான நோக்கம். கூடுதல் காரணம் அதன் எளிமையான வடிவம்.. 140 வார்த்தைகள்தான் அதன் சுருக்கமான எல்லை. 'நான் சாப்பிட்டேன் மசால்தோசை. அது நன்றாகயிருந்திருக்கலாம் என்பதென் ஆசை' என்று கவிதை மாதிரி எந்தவொரு கண்ணராவி செய்தியையும் எப்படி வேண்டுமானாலும் உளறி வைக்கலாம். ஆனால் 140 வார்த்தைகளுக்குள்.

சமந்தா முதல் சன்னிலியோனி வரை யாரை வேண்டுமானாலும்  அங்கு வம்புக்கு இழுக்கலாம். பாராட்டலாம், வசைபாடலாம். அவர்கள் கவனிப்பார்களா என்று தெரியாது. நிறைய பிரபலங்களின் அக்கவுண்ட்டுகளை அவர்களால் நியமிக்கப்பட்டவர்களே இயக்குகிறார்கள். ஆங்கிலத்தில் உள்ள நிறுத்தற்குறிகளையும் அடையாளக் குறிகளையும் கண்டபடிக்கு இறைத்து எஸ்எம்எஸ் மொழியில் எழுதுவதே அதன் ஆதாரமான அடையாளம். புதிதாக நுழைபவர்கள் அதை தேவநாகரி மொழி என்று கூட குழம்ப வாய்ப்புண்டு. பழக இரண்டு நாட்களாவது ஆகும். பழகி  விட்டால் நீங்களும் கூட "hi folks am @phoenix  mall. awesum exp." என்று கம்பு சுழற்றலாம்.

கூகுள் ப்ளஸ் என்றொரு இடம்.  நான் கவனித்த வரை அங்கே விக்ரமன் படத்தின் பாடல்கள் மாதிரி 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' என்று கண்கசிய, நெஞ்சொழுக எப்போதும்  'லாலாலா' பாடிக் கொண்டிருக்கிறார்கள். பிறந்த நாள் வாழ்த்து, பிரியாணி செய்ததற்கு சாப்பிட்டதற்கு வாழ்த்து, குழந்தை முதன்முதலாக சுச்சா போனதற்கு வாழ்த்து என்று எல்லாவற்றிற்குமே பரஸ்பரம் நெகிழ்ந்து வாழ்த்து சொல்லி கொண்டிடாடிக் கொண்டிருக்கிறார்கள். சண்டை என்பது அங்கே மருந்திற்கும் இல்லை. அப்படியே சண்டை நடப்பது போல ஒரு சூழல் வந்து பலர் ஆவலாக துண்டு போட்டு வந்து அமர்ந்தாலும் எவராவது ஒருவர் 'பசுபதி எட்ரா வண்டிய' என்று கிளம்பி நாட்டாமைத்தனம் செய்து தீயை ஆரம்பத்திலேயே அணைத்து விடுகிறார். பின்பு எப்படி விளங்கும்?

***

ஆக.. இணையத்தின் 'ரத்தபூமி' என்று  .ஃபேஸ்புக்கை சொல்லலாம். எந்தவொரு காண்டவர்ஷியலான விஷயத்தையும் எழுதிய அடுத்த நொடியிலேயே கற்பூரம் போல கப்பென்று பற்றிக் கொள்கிறது. வாதப் பிரதிவாதங்கள், வசைகள், சமாதானங்கள் ...அடிங்.. யாரைடா... என்று உடனே பிக்கப் ஆகி அனல் பறக்கிறது.

எனவே இந்தக் கட்டுரையில் ஃபேஸ்புக் எனும் இணைய வஸ்துவில் எப்படி துவங்குவது, அதன் பிரத்யேக குணாதியசங்கள் சிலவற்றை சுருக்கமாக பார்க்கப் போகிறோம்.

'எனக்கு இதில் ஏதும் எழுதத் தெரியாதே, நான் எதற்கு இதில் சேர வேண்டும், சேர்ந்துதான் என்ன செய்வது?' என்று எல்கேஜிக்கு முதல் நாள் கிளம்பும்  பள்ளிப் பிள்ளை போல் முதலில் குழப்பமும் பயமும் அழுகையும் வருவது சகஜம்தான்.. ஆனால் பொதுவாழ்க்கைக்குள் நுழைய வேண்டுமென்றால் சில அடிப்படை தயக்கங்களை கைவிடத்தானே வேண்டும்? உங்களுக்கு ஒன்றுமே எழுதத் தெரிய வேண்டாம் என்பதுதான் இதன் அடிப்படை தகுதியே.

துவக்கத்தில் பிள்ளையார் சுழி போடுவது போல, துவக்க பயன்பாட்டாளர்கள் ஜோதியில் உடனே ஐக்கியமாக எளிய வழி இருக்கிறது. இணையத்தில் தேடி ஒரு நல்ல பூ படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். பிறகு ஒரு பொன்மொழி. அது சேக்ஸ்பியர் சொல்லியதோ அல்லது ஷகிலா சொல்லியதோ அதெல்லாம் முக்கியமில்லை. அதன் நதிமூலத்தையெல்லாம் யாரும் ஆராயப் போவதில்லை. சந்தடி சாக்கில் நீங்களே கூட ஒன்றை அடித்து விடலாம். தேவை ஒரு பொன்மொழி. உருக்கமான உபதேசத்துடன்  நச்சென்று இருக்க வேண்டும். ஆச்சா?

இப்போது இரண்டையும் இணைத்து முதல் ஸ்டேட்டஸ்ஸை மங்கலகரமாக ஆரம்பியுங்கள். கூடவே காலை வணக்கம் என்கிற செய்தியையும் அழுத்தமாக தெரிவித்து விடுவது நல்லது. முதல் இரண்டு மணி நேரங்களுக்கு சற்று மயான அமைதியாக இருக்கலாம். உடனே அதற்காக மனம் தளரக்கூடாது. பொறுமை.. பொறுமை... பிறகு மெல்ல துவங்கும். நீங்கள் ஆண் நபராக இருந்தால் 'அற்புதம் ப்ரோ.. குட்மார்னிங்' என்றோ பெண்ணாக இருந்தால், 'உண்மைதான் தோழி' என்றோ மெல்ல கமெண்ட்ஸூம் லைக்கும் வர ஆரம்பிக்கும்.

நம் பதிவிற்கு எவராவது தானே வந்து லைக் போடுவார்கள் என்று திமிராகவும் மெத்தனமாகவும் அமர்ந்து விட்டால் நீங்கள் ஃபேஸ்புக்கிற்கு லாயக்கில்லை என்று அர்த்தம். பின்பு என்ன செய்வதாம்? நம் பழைய மரபை சற்று நினைத்துப் பாருங்கள். ஒரு திருமணத்திற்கு நீங்கள் ரூ.100 மொய் வைத்தால் உங்கள் வீட்டு நிகழ்ச்சிக்கு அதே நூறு பதில் மொய்யாக திரும்ப வரும். இதற்காக  பதிவு  செய்யப்பட்ட ஆவணங்களை பரணிலிருந்து இறக்கி மொய் எழுதுவதற்கு முன் அதை தீர ஆராய்வது நம் வழக்கம் இல்லையா? ஆக அந்த மரபுப்படி  நாம் மொய் வைத்தால் பதில் மொய் வரும், வரவேண்டும் என்பதே தீர்மானிக்கப்பட்ட விதி. எனவே சும்மாயிருக்கும் நேரத்தில் ஃபேஸ்புக்கில் இருக்கும் சஹஹிருதயர்களுக்கு பிரெண்ட் ரிக்வெஸ்ட் தருவது, அவர்களது எந்தவொரு மொக்கை ஸ்டேட்டஸ்ஸிற்கும் முகமலர்ச்சியோடு லைக்களை அள்ளித்தருவது 'கலக்கிட்டிங்க ப்ரோ' 'செம போஸ்ட் தல'  என்று கமெண்ட்ஸ் போடுவது என்று சுறுசுறுப்பாக இயங்க வேண்டும்.

'யாரடா இவன், ராஜதந்திரத்தில் நம்மை மிஞ்சி விடுவான் போலிருக்கிறதே?' என்கிற ஆச்சரியத்துடன் அவர்களும் உங்கள் ஏரியாவிற்கு வருவார்கள்.  காலை வணக்கம் முடிந்ததா? இப்போது மதிய வணக்கம்.... இன்னொரு பூ, பொன்மொழி, .. இப்போதுதானே காலை வணக்கம் முடித்தோம், மதிய வணக்கத்திற்கு போய் எவராவது லைக் போடுவார்களா என்றெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக யோசிக்கக்கூடாது. நீங்கள் மொய் வைக்கும் வேகத்திற்கு ஏற்ப, உங்களையே அசரடிக்கும் வகையில் பதில் மொய் வந்து விழுந்து கொண்டேயிருக்கும். பொன் வைத்த இடத்தில் பூ வைப்பது போல பொன்மொழி கிடைக்கவில்லையெனில் வெறும் பூ படத்தை மட்டும் கூட போடலாம். வரவேற்பு குறையாது.  பிறகு இரவு வணக்கம். இதை மாலை ஏழு மணிக்கே ஆரம்பித்து விட வேண்டும். அப்போதுதான் உங்களுக்கு வந்து விழும் லைக்குகளின் எண்ணிக்கையை நினைத்து உல்லாசமாக, நிம்மதியாக தூங்க முடியும்.

பிறகென்ன, அப்படியே கியரை  மாற்றி வண்டியை பிக்கப் செய்து போய்க் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான். பிறகு பாருங்கள். சொறி, சிரங்கு பிடித்தவன் கை சும்மாவே இருக்காது என்பது போல  நிமிடத்திற்கு ஒரு  முறை 'லைக் விழுகிறதா' உங்கள் டைம்லைனை  மொபைலில் சோதித்துப் பார்த்துக் கொண்டேயிருந்து கொண்டு நீங்களும் ஃபேஸ்புக்கும் நீங்களும் நகமும் சதையுமாக ஆகி விடுவீர்கள்.

சொல்ல மறந்து விட்டேன். நீங்கள் அதிகம் மெனக்கெடாமலேயே அதிகம் லைக் விழுவதற்கும் ஒரு வழியிருக்கிறது. அதற்கான அடிப்படை தகுதி பெண் ஃபுரொபைலாக இருக்க வேண்டும். இளம்பெண்ணோ, நடுத்தர வயதோ என்பதெல்லாம் கூட முக்கியமில்லை. பெண் ஃபுரொபைல் அது முக்கியம். பிறகு பாருங்கள். 'காலையில் வாக்கிங் போனேன்.. என்ன அழகான வெதர்' என்று நீங்கள் போடும் ஒற்றைவரி மொக்கை செய்திகளுக்கெல்லாம் கோயில் வாசலில் பொங்கலுக்காக அலை மோதுகிறவர்கள் மாதிரி கூட்டம் கூட்டமாக வந்து லைக் போடுவார்கள். நீங்களே பிரமித்துப் போய் விடுவீர்கள். அந்தளவிற்கான பாலியல் வறட்சியைக் கொண்டது நம் சமூகம். இதைப் போலவே அரை மணி நேரத்திற்கொரு முறை புகைப்படத்தை மாற்றிக் கொண்டே இருப்பது. 'தலை வாருவதற்கு முன் ஒரு போட்டோ.. பிறகு பேன் குத்தும் போது ஒன்று.. தலையை வாரிக் கொண்ட பின் ஒன்று.' இப்படி ஃபோட்டோக்களை போட்டுக் கொண்டே இருங்கள். இந்த பொங்கல் வரிசையாளர்கள் சளைக்காமல் லைக் போட்டுக் கொண்டேயிருப்பார்கள். 'awesome தோழி' 'செமயா இருக்கீங்க' என்று தொடர்ச்சியாக 'ஜொள்ளிக் கொண்டேயிருப்பார்கள்.

'சார்.. நான் ஆம்பளயா பொறந்துட்டனே... அது என் தப்பா.. நான் என்ன செய்யறது. லைக்கே விழ மாட்டேங்குதே' என்று புலம்பும் ஆசாமியா நீங்கள். கவலையை விடுங்கள். ஃபேக் ஐடியில் ஒரு பெண் ஃபுரொபைலை கிரியேட் செய்து கொள்ளுங்கள்.  என்னது ஃபேக் ஐடியா. அது தப்பாச்சே.. என்று அறச்சிந்தனையுடன் யோசித்தால் நீங்கள் இண்டர்நெட்டிற்கு லாயக்கில்லை. உங்களை ஒரிஜனல் ஐடியை நீங்களே மறைமுகமாக புகழ்ந்து போணி செய்வதற்கும் எவரையாவது திட்ட வேண்டுமென்று தோன்றினால்  அந்த உத்தம காரணத்திற்கும் உங்களுக்கு ஒரு அநாமதேய அடையாளம் நிச்சயம் இருந்தே ஆக வேண்டும்.

வீட்டில் செய்த கறிக்குழம்பை குளோசப்பில் புகைப்படம் எடுத்து மற்றவர்களை கதற வைப்பது, சமூக அநீதிகளுக்காக 24 மணி நேரமும்அறச்சீற்றத்துடன்  சீமான் மாதிரி முஷ்டியை ஆவேசமாக உயர்த்திக் கொண்டே பேசுவது, அனைத்தும் தெரிந்த அர்னால்ட் மாதிரி அரசியல் கருத்துக்களை பொழிந்து கொண்டே இருப்பது, மொக்கை ஜோக்குகளை சற்று டிங்கரிங் பார்த்து தன்னுடையதாக போட்டுக் கொள்வது, கார்ப்பரேஷன் கழிவறைக்கு சென்றாலும் அங்கிருந்து ஒரு ஷெல்பி எடுத்து அப்டேட் செய்து கொண்டேயிருப்பது... என்று இந்தப் புண்ணிய தளத்தில் பல தரப்பட்ட குரூப்கள் தாறுமாறாக இயங்கிக் கொண்டேயிருக்கின்றன. அவற்றையெல்லாம் நிதானமாக இன்னொரு சமயத்தில் பார்க்கலாம்.

வீட்டில் உள்ளவர்களுக்கு குட்மார்னிங் சொல்வது கூட முக்கியமில்லை, காலைக்கடன் முடிப்பதற்கு முன்னாலேயே கலிபோர்னியாவிலுள்ள ஃபேஸ்புக் நண்பனுக்கு 'hi bro' என்று வாழ்த்து சொல்வது சமூக வலைத்தளங்களின் ஆதாரமான விஷயம். ரயில்களில், பேருந்துகளில் சக பயணிகளை கவனித்துப் பாருங்கள். ஏறத்தாழ அனைவருமே தலை குனிந்து தங்களளின் மொபைல்  உலகங்களில் ஆழ்ந்திருப்பார்கள். 'கடவுளை மற, மனிதனை நினை' என்றார் பெரியார். 'மனிதனை மற; விர்ச்சுவல் நட்பை நினை' என்பது இணைய விதிகளில் முக்கியமானது.

போகிற சமயத்தில் இந்தப் பதிவுக்கும் அப்படியே லைக் போட்டுச் செல்ல மறக்காதீர்கள். மொய் மேட்டர் நினைவிருக்கட்டும்.

(குமுதம் - ஃபேஸ்புக் சிறப்பு இணைப்பிதழில் வெளியான கட்டுரையின் முழு வடிவம்)
 
suresh kannan

Monday, May 30, 2016

உலக சினிமா - சில திரைப்பட அறிமுகங்கள் - நூல் முன்னுரை





உலக சினிமா - சில திரைப்பட அறிமுகங்கள் என்கிற நூலிற்காக எழுதிய முன்னுரை இது. 

***

 
நண்பர்களே...

மானுட குலத்தின் மகத்தான விஞ்ஞான கண்டுபிடிப்புகளில் முக்கியமானது சினிமா. படித்தவர் முதல் பாமரர் வரை அனைத்துத் தரப்பினரையும் தன்னகத்தே ஈர்க்கும் முன்னணி ஊடகமாக உலகெங்கிலும் அது வளர்ந்திருக்கிறது. தமிழ்ச் சமூகத்தில் இந்த வலிமையான ஊடகம் ஏற்படுத்தியிருக்கும்  தாக்கம் அளப்பரியது. இச்சமூகத்தின் நனவிலி மனங்களில் நட்சத்திரங்களின் பிம்பங்கள் அழுத்தமாகவும் பிரம்மாண்டமாகவும் பதிந்திருக்கின்றன. புனைவிற்கும் யதார்த்தத்திற்கும் உள்ள மிகப் பெரிய இடைவெளியை உணர முடியாதவாறு சினிமாவின் தாக்கம் இங்கே ஆழமாக படிந்திருக்கிறது. திரையின் நிழலில்  ஊதிப்பெருக்கப்படும் நட்சத்திரங்களின் நல்லியல்புகளையும் அவதார சாகசங்களையும் உண்மையென நம்பி தங்களை ஆளும் அதிகாரத்தையே அவர்களிடம் ஒப்படைக்கத் துணியும் அளவிற்கு சினிமாவை அப்பாவித்தனமான ஆவேசத்துடன் நம்பி பின்பற்றுகிறது தமிழ்ச் சமூகம்.

ஒரு சினிமாவை எப்படி அணுகுவது என்பது பற்றிய பயிற்சியும் அது சார்ந்த ரசனையும் பெருமளவு அற்ற சூழல் நம்முடையது. உலக அளவில் சினிமாவை அதிகமாக உற்பத்தி செய்யும் ஒரு பிரதேசத்திலிருந்து,  நூறு ஆண்டுகளை கடக்கப் போகும் தமிழ் சினிமாவிலிருந்து சர்வதேச அளவில் ஒப்பிடுமளவிற்கு - சில அரிதான முயற்சிகளைத் தவிர்த்து - ஒரு நல்ல படைப்பு கூட இல்லை என்பது ஒரு முரண்நகை. இதற்கு படைப்பாளர்களை மட்டுமே குறைகூறுவது முறையல்ல. சினிமா என்பது அதன் உருவாக்கத்திற்கு பெரும் நிதியைக் கோரி நிற்கும் கலை என்பதால் அது சார்ந்த வணிகக் கட்டுப்பாடுகள்,  தடைகள் சில நல்ல படைப்பாளர்களையும் முடக்கி வைத்திருக்கின்றன. எனவே ஒட்டுமொத்த சமூகத்தில் இதற்கான மாற்றம் ஏற்பட வேண்டியிருக்கிறது;  பார்வையாளர்கள் தங்களின் ரசனையை மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு காலக் கட்டத்தில் சினிமா சங்கங்கள் மூலம் ஒரு குறுகிய அறிவுஜீவி வட்டத்தால் மட்டுமே அணுகப்பட்டுக் கொண்டிருந்த உலக சினிமாவானது நுட்ப புரட்சியால் இன்று இணையத்தின் மூலமும் குறுந்தகடுகளின் மூலமும் வீட்டின் வாசலிலேயே எளிதில் அணுகக்கூடிய ஒரு சாதனமாகி விட்டது. இவற்றைக்  காணும் தமிழ் சினிமாவின் சராசரியான பார்வையாளர் கூட தான் காணும் உள்ளுர் வெகுசன சினிமாவோடு தன்னிச்சையாக இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து  அவற்றிக் காணக்கூடிய  மலைக்கும் மடுவிற்குமான வேறுபாடுகளை அதிருப்தியோடு ஒப்பிடும் சூழல் நேர்ந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் படைப்பாளர்களும் இந்த நெருக்கடியை இப்போது மெல்ல உணரத் துவங்கியிருக்கிறார்கள். சமீபத்தில் புதிய அலை இளம் இயக்குநர்களிடமிருந்து வெளிவரத் துவங்கியிருக்கும் குறிப்பிடத்தகுந்த முயற்சிகள் அந்த மாற்றத்தை நமக்கு உணர்த்துகின்றன. எனவே சினிமா குறித்த ரசனை அதிகமாகப் பரவும் போது அது ஒட்டுமொத்த சூழலிலும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிற நடைமுறை உண்மையையே இதன் மூலம் காண்கிறோம்.


***

இந்த நூலில் நீங்கள் வாசிக்கவிருக்கும் உலக சினிமா குறித்தான இந்தக் கட்டுரைகள், என்னுடைய வலைப்பதிவில் [http://pitchaipathiram.blogspot.in] பல்வேறு காலக்கட்டங்களில் எழுதப்பட்டவை. எழுத்தாளர் சுஜாதாவை இந்தத் தருணத்தில் அன்புடனும் நன்றியுடனும் நினைவு கூர்கிறேன். பல வருடங்களுக்கு முன்பு கணையாழில் அவர் எழுதிய பத்திக் கட்டுரையொன்றில்  'பதேர் பாஞ்சாலி' எனும் அற்புதமான திரைப்படத்தையும் சத்யஜித்ரே எனும் உன்னதமான கலைஞனையும் எனக்கு அறிமுகப்படுத்தினார். ஒரு சராசரி பார்வையாளனாக தமிழ் சினிமா எனும் அபத்தக் களஞ்சியத்தில் அதுவரை உழன்று கொண்டிருந்த என்னை  பல்வேறு நாட்டுத் திரைப்படங்களை காணும் உத்வேகத்தையும் ஆவலையும் அந்த ஒரு நுனி அறிமுகமே நகர்த்திச் சென்றது. தவிரவும் பிறகு உலக சினிமா குறித்து தொடர்ந்து கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த எஸ்.ராமகிருஷ்ணன், செழியன் ஆகியோரின எழுத்துக்களும் எனக்கு நல்ல சினிமாக்களை அறிமுகப்படுத்தின.

அவை தந்த மனவெழுச்சியில் உலகத் திரைப்படங்களைக் காணத் துவங்கி அந்த அனுபவங்களை மற்றவர்களுக்கும் எப்படியாவது கடத்தி விட வேண்டும் என்கிற ஆவலில் எழுதப்பட்டவைகளே இந்தக் கட்டுரைகள். அதற்கான துள்ளலான மனவுணர்வையும் கிளர்ச்சியையும் இந்தக் கட்டுரைகளில் நீங்கள் காண முடியும். விமர்சனம் எனும் சொல்லில் உள்ள கனத்தை நான் அறிவேன். எனவே இவை விமர்சனக் கட்டுரைகளோ அல்லது ஆய்வுக்கட்டுரைகளோ அல்ல. சிறந்த உலக சினிமாக்களை உங்களுக்கு சுவாரசியமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே இக்கட்டுரைகளின் பிரதான நோக்கம். அதை இந்த நூலின் வழியாக நிறைவேற்றியிருக்கிறேன் என நம்புகிறேன்.

இந்தப் பதிவுகள் இணையத்தில் வெளியாகும் போது அவற்றை ஆவலுடன் வாசித்தும் பின்னூட்டமிட்டும் ஊக்குவித்த சக இணைய நண்பர்களின் அன்பை நெகிழ்ச்சியுடன் இந்தச் சமயத்தில் நினைவுகூர்கிறேன். சினிமா விமர்சனங்கள் குறித்து எழுதப்படும் வலைப்பதிவுகளுள் முக்கியமானவைகளுள் ஒன்றாக என்னுடைய வலைப்பதிவை எழுத்தாளர் ஜெயமோகன் தன் இணையத் தளத்தில் ஒரு முறை குறிப்பிட்டதை ஒரு மூத்த படைப்பாளியின்  ஆசியாகவே கருதுகிறேன்.

உலக சினிமா குறித்த ரசனை பொதுப் பார்வையாளர்களிடம் மேலதிமாக பரவுவதின் மூலம் அது தமிழ் சினிமாவின் உருவாக்கத்திலும் எதிரொலிக்கும் என்பதே என் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும். அந்தச் சூழல் சாத்தியமாக இந்த நூலின் பங்கு ஒரு துளியேனும் இருக்குமானால் அது எனக்கு மகிழ்ச்சியே.  இந்த நூலை பதிப்பிக்க முன்வந்த கிழக்கு பதிப்பகத்தினருக்கும், குறிப்பாக இந்த முயற்சியை முன்னெடுத்த நண்பர் ஹரன் பிரசன்னாவிற்கும் என் மனப்பூர்வமான நன்றி.


அன்புடன்

சுரேஷ் கண்ணன்

***

நூல் தொடர்பான கிழக்கு பதிப்பகத்தின் இணையச்சுட்டி. ஆர்டர் செய்து ஆன்லைனிலும் பெறலாம். 



 'இந்திய சினிமா - வணிகப் படங்கள் முதல் கலைப் படங்கள் வரை' என்கிற இன்னொரு  நூலுக்காக எழுதப்பட்ட முன்னுரை.


suresh kannan

Sunday, May 29, 2016

இது நம்ம ஆளு & உறியடி - திரைப்பார்வை





'இது நம்ம ஆளு' - சில குறிப்புகள்.

* இத்திரைப்படத்தைப் பற்றி சில வாக்கியங்களில் சொல்ல வேண்டுமென்றால் அழகன் திரைப்படத்தில் 'மம்முட்டியும் பானுப்பிரியாவும்' தொலைபேசியிலேயே நீண்ட நேரம் பேசி காதல் செய்வதை ஒரு பாடலிலேயே அற்புதமாக சித்தரித்து முடித்து விடுவார் பாலச்சந்தர். ஆனால் பாண்டிராஜ் இதை ஒரு முழு நீள திரைப்படமாக இழுத்து.......எடுத்து விட்டார். பொதுவாகவே பாண்டிராஜின் திரைப்படங்களில் செல்போன் என்பது ஒரு அற்புதமான படிமமாக, நவீன நுட்பங்களின் மீதான ஒரு எள்ளலாக இருக்கும். அதற்காக சிம்கார்டு கருகி வெடிக்குமளவிற்கா இழுப்பது?

* 'தள்ளிப் போகாதே' சிங்கிள் பாடலை ஏன் முன்னமே வெளியிட்டோம் என்று ரஹ்மான் நொந்தே போயிருப்பார். அந்த அளவிற்கு இதில் அது சிம்புவின் செல்போன் டோனாக தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. அந்தப் பாடலே வெறுத்து விடும் போல. அப்படத்தின் ப்ரோமாவாக இந்த திரைப்படத்தை உபயோகித்திருப்பது ஓர் அநியாயம்.

* சூரி என்கிற ஒரு நபர் மட்டும் இல்லாமலிருந்தால் இந்தப் படத்தை ஆண்டவன் கூட காப்பாற்றியிருக்க முடியாது. அந்தளவிற்கு அவர் தரும் கவுண்ட்டர் வசனங்கள்தான் இம்சையிலிருந்து நம்மைக் காப்பாற்றி சற்றாவது புன்னகைக்க வைக்கின்றன. நாயகனின் அசலான சில குணாதிசயங்களை அப்படியே திரைப்படத்திலும் வைத்து கிண்டலடித்திருப்பதும் அதை சிம்பு ஜாலியாக அனுமதித்திருப்பதும் சுவாரசியம்.

* இந்தப் படத்தின் நடிகர் - இயக்குநர் - இசையமைப்பாளர் தொடர்பான ஈகோ மோதல்கள், நடிகரின் அலப்பறைகள் குறித்து மீடியாவில் பல வருடங்களாக தொடர்ந்து செய்தி வந்து கொண்டேயிருந்தன. அதன் எதிரொலி படத்தில் தெளிவாகத் தெரிகிறது. அந்தளவிற்கு காதல் கோட்டை திரைப்படம் மாதிரி 'நாயகன் - நாயகி' யின் காம்பினேஷன் ஷாட்களே பெரும்பாலும் அல்லாமல் ஒப்பேற்றியிருக்கிறார்கள். காந்தி - கஸ்தூரிபா இருவர் இருக்கும் சில அரிதான வீடியோ புட்டேஜை வைத்துக் கொண்டு 'ஏக் துஜே கே லியே' மாதிரி ஒரு காதல் காவியம் எடுக்க முயன்றதற்கு நிகரான சாதனை இது.

* பாண்டிராஜிற்கு பொதுவாகவே இன்றைய காதலர்களின் பாடி லாங்க்வேஜ், அவர்களின் பிரத்யேக மயக்கங்கள் ஆகியவை நன்றாக தெரிந்திருக்கிறது. 'குட்டிம்மா' 'அம்மு' போன்ற மிக அந்நியோன்யமான வசனங்களை இதில்உபயோகித்திருக்கிறார். வசனங்களின் மூலம் உணர்த்தப்படும் இப்படியொரு இன்டிமெசியான நெருக்கத்தை வேறெந்த தமிழ் திரைப்படத்திலும் நான் பார்த்ததில்லை. போலவே காதலர்களுக்குள் ஏற்படும் சின்ன சின்ன மோதல்களையும் சமாதானங்களையும் கூட சரியான தொனியில் காட்சிப்படுத்தியிருக்கிறாார். சமகால காதலர்கள் இதை நிச்சயம் ரசிப்பார்கள். அவர்களின் மனோபாவங்கள், பிரச்சினைகள் சிறப்பாக மையப்படுத்தப்பட்டுள்ளன.

* நயனதாரா ஓர் அழகான ஆச்சரியம். ஒரு நடிகை இத்தனை வருடம் ஃபீல்டில் இருப்பதே ஒரு சாதனை. அதிலும் மார்க்கெட்டில் எந்தவொரு தொய்வும் இன்றி. இத்தனை காண்ட்ரவர்சிகளையும் தாண்டி. இதில் அப்படி ரசிக்க வைக்கிறார். என்னவொன்று ஒப்பனை, அல்லது காமிராக் கோணம் சரியாக அமையாத நேரத்தில் காந்திமதியின் சாயல் வந்திருப்பதை கவனிக்க வேண்டும். (இதை நான் எழுத நேர்ந்தது ஒரு சோகம், மன்னித்து விடுங்கள் நயன்.)

* திரைக்கதை அது பாட்டிற்கு இஷ்டத்திற்கு அலைந்து கொண்டேயிருக்கிறது. காதல் கோட்டை +அழகம்பெருமாளின் டும்டும்டும் போன்வற்றின் மோசமான கலவை போல. சந்தானம், ஜெய், ஆண்ட்ரியா என்று நிறைய கெஸ்ட் ரோல்கள். படத்தில் எல்லோருமெ கெஸ்ட் ரோல் வந்தது போல்தான் இருக்கிறது.

* ஆயிரம் புகார்களையும் தாண் சிம்பு அடிப்படையில் ஒரு நல்ல நடிகர். சமயங்களில் effortless ஆக நடிக்கக்கூடிய திறமையுள்ளவர். ஆனால் ஏன் தலையில் தானே பெட்ரோல் ஊற்றிக் கொள்கிறாா் என்று தெரியவில்லை. சிறந்த இயக்குநர்களாக தேடி அவர்களிடம் தம்மை முழுக்க ஒப்படைத்து விடுவது மட்டுமே அவர் கேரியருக்கு நல்லது. எப்படி நடித்தாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்கிற மாயக்கோட்டையின் உள் அமர்ந்திருந்தால் அடுத்த பிரசாந்த் ஆகி விடும் ஆபத்திருக்கிறது. நாம் தமிழர் சீமான் போன்ற அதீத நம்பிக்கை உடம்பிற்கு ஆகாது.

*பாண்டிராஜின் பசங்க திரைப்படம் எனக்கு அத்தனை பிடிக்கும். சினிமாவுக்குரிய மிகை இருந்தாலும் சிறார்களின் உலகத்தை அத்தனை கச்சிதமாக சித்தரித்த திரைப்படம். பாண்டிராஜ் இனியாவது இப்படிப்பட்ட விபத்துக்களில் சிக்கிக் கொள்ளாமலிருக்கும் ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.



உறியடி - சமீபத்தில் வந்திருக்கும் கவனத்துக்குரிய திரைப்படம். ஒருவகையில் இது சாதிய அரசியலின் பின்புலத்தை வெளிப்படையாக முன்வைக்கிறது. இன்னொரு வகையில் ஆபத்தான உள்ளடக்கத்தையும் கொண்டிருக்கிறது.

ஒரு பிரதேசத்தில் இருக்கும் சின்ன அளவிலான சாதியக் கட்சி எப்படி மெல்ல அரசியல் கட்சியாக உருமாறுகிறது, அதிகாரத்தின் ருசியோடு நகர்கிறது என்பதை துணிச்சலாகவும் வெளிப்படையாகவும் சித்தரித்திருக்கும் இயக்குநருக்கு பாராட்டு. குறுகிய வித்தியாச எண்ணிக்கையில் அமையும் வாக்குகள் ஒரு பிரதேச வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் ஜனநாயக கேலிக்கூத்தின் இடைவெளியை எப்படி இந்த உப்புமா கட்சிகள் தங்களுக்கு சாதமாக்கிக் கொள்கின்றன என்பதையும் இந்த அதிகாரப் போட்டியில் நிகழும் யுத்தத்தில் நிகழும் வன்முறையையும் இதன் திரைக்கதை அபாரமான நுண்ணுணர்வுடன் பதிவாக்கியிருக்கிறது.

மது விற்பனை தனி சாராய முதலாளிகளின் கையில் இருந்த காலம், பொதிகை டிவி செய்தி போன்றவற்றின் மூலம் இதன் காலத்தை உணர வைக்க விரும்புகிறார் இயக்குநர். இந்த நோக்கில் ஒரு சாதியக் கட்சியாக துவங்கி ஓர் அரசியல் கட்சியாக இன்று வளர்ந்திருக்கும் மாற்றத்தின் முன்னேற்றத்தை இயக்குநர் சுட்டிக் காட்ட விரும்புகிறார் என்று கொள்ளலாம். கடந்த கால தலைவர்களின் மொள்ளமாரித்தனங்கள் மழுப்பப்பட்டு அவர்கள் திருவுருக்களாக்கப்பட்டு அந்த அடையாளங்களின் பெருமிதங்களை உபயோகித்துக் கொண்டு சமகால சாதிய அமைப்புகள் அரசியல் தளத்தில் முன்னர்வதும் சொல்லப்பட்டிருக்கிறது.

குறிப்பாக சாதிய தலைவர்களுக்கு வைக்கப்படும் சிலைகள் எவ்வாறு வன்முறையின் அடையாளங்களாக விளங்குகிறது என்பதையும். சக்கர நாற்காலியில் நகரும் தலைவர், தன் வளர்ச்சிக்கு அவரை இடையூறாக நினைக்கும் உறவுக்கார அரசியல்வாதி என்று சிலவற்றை சமகால அரசியலுக்கும் பொருத்திப்பார்க்கும் விளையாட்டை சுவாரசியமாக முன்வைத்திருக்கிறார் இயக்குநர்.

இந்த நோக்கில் இத்திரைப்படத்தைப் பாராட்டலாம் என்றாலும் இன்னொரு பக்கம் கல்லூரி மாணவர்களை தொழில்முறை கூலிப்படையினரைப் போல சித்தரிக்கும் போக்கும் அச்சுறுத்துகிறது. அவர்கள் கற்கும் கல்வி அவர்களின் வன்முறைக்குப் பயன்படும் மோசமான முன்உதாரணத்தை எவ்வித சமூகப் பொறுப்புமில்லாமல் பதிவாக்குகிறார் இயக்குநர்.

கல்வி மீது அக்கறையில்லாமல் தொடர்ச்சியான மதுப்பழக்கத்தாலும் வீண் சண்டைகளாலும் சீரழியும் பெரும்பான்மையான மாணவர்களின் போக்கை சரியாகவே பதிவு செய்கிறார். ஆனால் அவர்கள் எவ்வித பின்புலமுமில்லாமல் பழிவாங்குவதற்காக கையில் எடுக்கும் வன்முறையும் அது சார்ந்த குரூரமான சித்தரிப்புகளும் இளைய தலைமுறையினரிடையே எதிர்மனோபாவத்தை விதைக்கும் ஆபத்தும் இருக்கிறது. சாதிய அரசியலும் இளையதலைமுறையும் இணையும் புள்ளியும் சரியாக சொல்லப்படுகிறது. சாதியச் சங்கங்களின் உதவியின் மூலம் படிக்கும் மாணவர்களிடம் சாதிய வெறி என்பது எவ்வாறு விஷம் போல் ஏற்றப்படுகிறது என்பதையும்.

இன்று இணையத்திலும் தங்களின் சமூகப் பெருமிதங்களை அச்சுறுத்தும் வகையில் வெளிப்படுத்தும் இளைஞர்கள் இதை கவனிப்பது நல்லது.

இரண்டு மூன்று பேர்கள் தவிர இதர நடிகர்கள் அனைவரும் ஏறத்தாழ புதுமுகங்கள் என்றாலும் ஓவ்வொரு நடிகரையும் இயல்பாகவும் சிறப்பாகவும் பயன்படுத்தியிருக்கும் இயக்குநரின் திறமை பாராட்டுக்குரியது. பட்ஜெட் காரணமாகவோ என்னமோ இதன் மேக்கிங் சாதாரணமாக இருப்பதும், படத்தின் தொடர்ச்சி ஆங்காங்கே தடுமாறுவது போன்ற குறைகள் இருந்தாலும் படத்தின் ஆதார உணர்வை பார்வையாளர்களிடம் பதிய வைப்பதில் இயக்குநர் வெற்றியடைந்திருக்கிறார்.

படத்தின் ஒரு பகுதியை மாத்திரம் கணக்கில் எடுத்துக் கொண்டு சாதிய சக்திகளிடம் இளைய தலைமுறையும் வாக்களிக்கும் கனவான்களும் பலியாகாமல் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான செய்தியை இத்திரைப்படம் கவனப்படுத்துகிறது.

***


உறியடி முன் வைக்கும் வைக்கும் வன்முறை அரசியலை விட மணிரத்னத்தின் 'ஆய்த எழுத்து' வைக்கும் அதிகாரத்தை நோக்கி நகரும் மாணவ அரசியல் நூறு மடங்கு உயர்ந்தது என்பேன். நிற்க, மணிரத்னம் என்ற பெயருக்காகவே முகஞ்சுளிக்க வேண்டாம்.

அரசியல்வாதிகளின் ஊழலும் வன்முறையும் அராஜகமும் 'அதிகாரம்' என்னும் அடிப்படையின் மீது நின்றுகொண்டுதான் ஆட்டம் போடுகின்றன. அவர்கள் வீழ வேண்டுமெனில் அவர்களின் அதிகாரம் எனும் நாற்காலியைப் பறிக்க வேண்டும். அதற்கு அவர்களுடன் நடைமுறை அரசியல் தளத்தில் மோத வேண்டும். இரண்டொரு அரசியல்வாதிகளைக் கொன்று போடுவதால் பிரச்சினை தீராது. அந்த இடத்தில் அமர மேலதிக ரவுடிகள் ஆசையுடன் காத்திருப்பார்கள்.

இன்றைய இளையதலைமுறை அரசியல் குறித்து பாராமுகமாகவும் அல்லது அது குறித்து புலம்பிக் கொண்டிருக்காமலும் ஆக்கப்பூர்வமான அரசியல் களத்தில் இறங்க வேண்டும். இதற்கான  மனநிலையை இளமையில் இருந்து உருவாக்குமாறு கல்வித்திட்டங்கள் அமைய வேண்டும். அரசியல்வாதிகளின் சதி அரசியலுக்கு மாணவ சக்தி இரையாகி விடாத விழிப்புணர்வு வேண்டும். பொதுச்சமூகத்தின் பங்கும் இதில் முக்கியம். தங்கள் தொகுதியின் வேட்பாளர் இது போன்ற நேர்மையும் செயல்திறனும் இருந்தால் அந்த இளைய அடையாளங்களை 'சின்ன பையன்தானே' என்று அலட்சியப்படுத்தாமல் அவர்களுக்கு வாய்ப்பு தர முன் வரவேண்டும்.

தமிழருவி மணியன் அரசியலை விட்டு விலகும் முடிவு குறித்து வருத்தப்பட்டு நான் எழுதிய போது அவர் மீது நிறைய குற்றச்சாட்டுகளும் அவதூறுகளும் சொல்லப்பட்டன. அதில் எத்தனை உண்மை? அதில் ஒரு பகுதி உண்மையே என்று வைத்துக் கொண்டாலும் இதை விடவும் பிரம்மாண்ட அளவில் ஊழலையும்  அரசு தரகுகளையும் நிகழத்திக் கொண்டிருக்கும் சக்திகளுக்குத்தானே நாமே மீண்டும் வாய்ப்பளிக்கிறோம்? அது குறித்த எவ்வித வெட்கமும் குற்றவுணர்வும் நம்மிடமில்லையே? எம்.எஸ். உதயமூர்த்தி, டிராபிக் ராமசாமி, சரத்பாபு என்று பொது தளத்தில் நேர்மையாளர்களாக அறியப்படுபவர்கள் அரசியல் களத்தில் நுழையும் போது அவர்களை தொடர்ந்து நாம் வீழ்த்திக் கொண்டுதானே இருக்கிறோம்? கிண்டலடித்துக் கொண்டுதானே இருக்கீறோம்?  இருக்கிற கீழ்மைகளில் குறைந்த பட்ச கீழ்மையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புதான் உள்ள சூழலில் இந்த முயற்சியைக் கூட நாம் ஆதரிப்பதில்லையே?

உறியடி திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சிகளின் இயல்பை சிலாகிப்பது ஒருபுறமிருக்கட்டும். ஆனால் யதார்த்ததில் அவை எந்த அளவிற்கு உண்மை? தொழில்முறை ரவுடிகளை மாணவர்கள் அடித்து வீழ்த்துவது நிஜத்தில் சாத்தியமா? ஏன் இந்த பகற்கனவை தமிழ் சினிமா தொடர்ந்து விதைக்கிறது? ராம்கோபால் வர்மா இயக்கிய 'உதயம்' திரைப்படத்திலிருந்து இதுதான் கதை. மாணவன் வன்முறை அரசியலுக்குள் சென்று அரசியல்வாதிகளை கொன்று அவனும் ஒரு 'நல்ல' வன்முறையாளனாகிறான். இதுதான் தீர்வா?

இளைய சக்தி  அரசியல் தளத்தில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்கும் போக்கு  அதிகரிப்பதுதான் பழைய பெருச்சாளிகளின் கொட்டம் மட்டுப்படுவதற்கு ஒரே வழி. அதற்காக கதவுகளைத் திறக்கும் முயற்சியில் ஈடுபடுவோம். தமிழ் சினிமாவும் அதற்கு துணை நிற்கட்டும். 

suresh kannan

Monday, May 23, 2016

அகிராவின் ‘தெரு நாய்’





ஜப்பானிய திரைப்பட மேதையான ‘அகிரா குரசேவா’ மொத்தம் 30 திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் அவற்றில் பொதுவாக சில திரைப்படங்களைப் பற்றிய உரையாடல்  மட்டுமே தமிழ் சூழலில் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன.  உதாரணமாக ரஷோமான் (1950), செவன் சாமுராய் (1954) போன்ற படைப்புகள். இன்னும் சற்று உள்ளே நகர்ந்தால் தஸ்தாயேவ்ஸ்கியின் நாவலையொட்டி உருவான தி இடியட் (1951), மற்றும் இகிரு (1952) போன்ற திரைப்படங்கள். அகிராவின் அதிகம் உரையாடப்படாத உன்னதமான திரைப்படங்கள் மேலும் பல இருக்கின்றன. அவற்றில் ஒன்று, Stray Dog. 1949-ல் வெளியானது. இது அவருடைய ஒன்பதாவது திரைப்படம்.

அகிராவின் அதுவரையிலான திரைப்படங்களோடு ஒப்பிடும் போது இயக்கத்தின் நுட்பமும் காட்சிப்படுத்துதலின் செய்நேர்த்தியும் சிறப்பாக அமைந்த திரைப்படம் இது. அவருடைய முதல் மாஸ்டர்பீஸாக இத்திரைப்படத்தை விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். இதில் அவர் காட்சிகளைக் கையாண்டிருக்கும் விதம், அவற்றின் உருவாக்க முறைகள், காமிராவின் கோணங்கள் ஆகியவற்றைப் பார்த்தால் இன்றும் கூட பிரமிப்பும் வியப்பும் ஏற்படுத்துபவைகளாக அமைகின்றன. ஆனால் ‘இது எனக்கு திருப்தியை ஏற்படுத்தாத திரைப்படம்’ என்கிறார் அகிரா. கலைநுட்பத்தின் முழுமையைத் தேட முயலும் கலைஞர்களுக்கு தம்முடைய படைப்புகளில் அந்தரங்கமான திருப்தி என்பது ஏற்படவே ஏற்படாது என்றே அதைக் கருத வேண்டும்.

இந்த திரைப்படம் வெளியான அடுத்த வருடத்தில் அதாவது 1950-ல் அவர் உருவாக்கிய ‘ரஷோமான்’ திரைப்படம் மூலமாகவே அவர் சர்வதேச அரங்குகளில் பிரத்யேகமாக கவனிக்கப்பட்டார். ஜப்பானிய திரைப்படங்களைப் பற்றிய கவனமும் சர்வதேச திரைப்பார்வையாளர்களுக்கிடையே எழுந்தது.


போருக்குப் பிந்தைய ஜப்பான். டோக்கியோவின் ஒரு கோடைக்காலம். இளநிலை காவல்துறையாக பணிபுரியும் முரகாமி (தோஷிரோ மிஃபுனே) ஒரு பேருந்து பயணத்தின் போது தன்னுடைய துப்பாக்கியை தொலைத்து விடுகிறார். பேருந்தில் இருந்து இறங்கி ஓடும் திருடனை கண்டு கொள்ளும் அவர் பதற்றத்துடன் அவனை சந்து பொந்துகளில் துரத்திச் சென்றாலும் பிடிக்க முடிவதில்லை. குற்றவுணர்வுடன் தன்னுடைய தவறை ஒப்புக் கொள்ளும் அவர் தன் பணியை ராஜினாமா செய்ய முன்வருகிறார். மிகவும் நல்லவரான அவருடைய மேலதிகாரி துப்பாக்கியைத் திரும்பப் பெறுவதற்கான கனிவான யோசனையைச் சொல்கிறார்.

முரகாமி தொலைந்து போன தன்னுடைய துப்பாக்கியைத் தேடிச் செல்லும் சம்பவங்கள் மூலம் டோக்கியோவின் அப்போதைய காலக்கட்டத்தின் சமூக பின்னணிக் காட்சிகள் மிக நுட்பமாக விரிகின்றன. பாலியல் தொழிலாளிகள், உதிரிக் குற்றவாளிகள், சில்லறை ரவுடிகள், கிளப்பில் ஆடும் நடன மங்கைகள், ராணுவத்திலிருந்து திரும்பி வேலையற்று தெருவில் உலவும் இளைஞர்கள் என்று பல மனிதர்கள் இதன் பின்னணயில் உலவுகிறார்கள்.

இத்திரைப்படத்தில் கோடையின் வெப்பம் இத்தனை உக்கிரமாக சித்தரிக்கப்பட்டிருப்பதைப் போன்று வேறு எந்த திரைப்படத்திலும் நான் கண்டதில்லை. இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் வெப்பநிலையை உணர்ந்தவர்கள் இந்தப் புழுக்கமான காட்சிகளை நெருக்கமாக உணர்வார்கள். அந்தளவிற்கு படம் முழுவதிலும் மனிதர்கள் வியர்வையைத் துடைத்துக் கொண்டும் விசிறிக் கொண்டும் புழுக்கத்தின் சலிப்போடு ஒருவரையொருவர் எரிச்சலோடும் கோபத்தோடும் அணுகுகிறார்கள்.

ஒரு நடனவிடுதியில் கவர்ச்சியாக நடனமாடும் இளம் மங்கைகள் தம்முடைய பணி முடிந்ததும் மேல் தளத்திலுள்ள தங்களின்  இருப்பிடத்திற்குச் சென்று வெட்டிச் சாய்க்கப்பட்ட மரங்கள் போல் ஒருவர் ஒருவராக அப்படியே தரையில் சாய்ந்து இளைப்பாறுகிறார்கள். அவர்களின் முகங்களிலும் உடலிலும் படிந்திருக்கும் வியர்வைத் துளிகள் அண்மைக் கோணத்தில் காட்டப்படுகின்றன. சில நிமிடங்களில் கடந்து போகும் இந்தக் காட்சியின் மூலம் நடனமாடும் அந்தப் பெண்களின் மீதான கவர்ச்சி சார்ந்த பிம்பத்தை அழித்து அவர்களின் உடல் சார்ந்த வலியையும் துயரத்தையும் பார்வையாளர்களுக்கு அபாரமாக கடத்தி விடுகிறார் அகிரா. கோடைக்காலப் பின்னணி என்பது ஒரு முக்கியமான பாத்திரமாகவே இத்திரைப்படத்தில் பதிவாகியிருக்கிறது.

**
தொலைந்து போன தன்னுடைய துப்பாக்கியை எவ்வாறு கண்டெடுப்பது என்கிற  குழப்பத்துடன் குற்றவுணர்வுடனும் பரபரப்பாகவும் தவிக்கும் முரகாமிக்கு அவனுடைய உயர் காவல் அதிகாரியான சட்டோ (டகாஷி ஷிமுரா) கனிவுடன் உதவுகிறார். காவல் பணியில் அதிக வருட அனுபவம் உள்ளவர் என்பதால் அவருக்கு குற்றவாளிகளின் உலகைப் பற்றி நன்கு அறிமுகமுள்ளது. ஒவ்வொரு குற்றவாளியின் தனிப்பட்ட தகவல்களை அறிந்தவராக இருக்கிறார். குற்றவாளிகளை அவர்களுடைய போக்கிலேயே விட்டு தகவல்களை சேகரிக்கும் காட்சிகள் அற்புதமாக இருக்கின்றன.

இந்த தேடலின் இடையில் ஒரு நாள் சட்டோ, முரகாமியை எதிர்பாராத ஆச்சரியமாக தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அவருடைய மனைவியும் குழந்தைகளும் முரகாமியை அன்புடன் வரவேற்கிறார்கள். இருவரும் அமர்ந்து தங்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகளை மதுவருந்திக் கொண்டே உரையாடுகிறார்கள். முரகாமி கிளம்பும் போது குழந்தைகள் உறங்கி விடுகிறார்கள். பொம்மைகளின் இடையே குழந்தைகள் உறங்கும் காட்சியும் அதை பெற்றோரும் முரகாமியும் நின்று பார்க்கும் காட்சியும் காமிராவின் கோணமும் நெகிழ்வை ஏற்படுத்துபவையாக இருக்கிறது. ஒரு வீட்டின் குடும்பத்தலைவன் இரவில் வீட்டுக்கு வந்து உறங்கிக் கொண்டிருக்கும் தன் குழந்தையை ரசித்துக் கொண்டே அன்றைய நாளின் பணியின் களைப்பையும் சலிப்பையும் கடக்க முயலும் உணர்வை நினைவூட்டுபவையாக பதிவாகியிருக்கிறது அந்தக் காட்சி.

**

முரகாமியின் இந்தப் பயணத்தில் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறான். அவனுடைய தொலைந்து போன துப்பாக்கியின் மூலம் இதர சில குற்றங்களுக்கான விடைகள் கிடைக்கின்றன. தன்னிடமிருந்து துப்பாக்கியைத் திருடிச் சென்றவன் பற்றிய தகவலைப் பெறுவதற்காக ஜேப்படி பெண்ணொருத்தியை பின்தொடர்ந்து செல்கிறான். அவளோ இவனுக்கு பல வழிகளில் போக்கு காட்டினாலும் தப்பிக்க இயலவில்லை. அவள் தரும் தகவலின் படி கள்ள மார்க்கெட்டில் துப்பாக்கியைத் தேடிப் போகிறான். மிக நீண்ட இந்தக் காட்சிக்கோர்வையில் உதிரிக்குற்றவாளிகள் உட்பட பல மனிதர்கள் தென்படுகிறார்கள். இதற்கிடையில் அவனுடைய துப்பாக்கியைப் பயன்படுத்தி குற்றமொன்று நடைபெறுவதால் மிகுந்த பதட்டமடைகிறான் முரகாமி.

ஒவ்வொரு கண்ணியாக பின்தொடர்வதில் குற்றவாளியின் காதலியை கண்டுபிடிக்க நேர்கிறது. அவளோ தன் காதலனைப் பற்றிய எந்தவொரு தகவலையும் தர மறுக்கிறாள். முரகாமியின் உயர்நிலை அதிகாரியான சட்டோவை துப்பாக்கியில் சுட்டு விட்டு குற்றவாளி ஓடிவிடுகிறான். அவனுடைய காதலி மனம் மாறி முரகாமிக்கு குற்றவாளியிடம் இருப்பிடம் பற்றி சொல்ல சிலபல துரத்தலுக்குப் பிறகு அவனைப் பிடித்து விடுகிறான்.

குற்றவாளியும் முரகாமியைப் போலவே ராணுவத்தில் பணிபுரிந்து விட்டு ஊர்திரும்பியவன். போருக்குப் பின்னான வறுமை காரணமாக குற்றத் தொழிலில் ஈடுபடுகிறான். தன்னுடைய காதலி விரும்பிக் கேட்ட அதிக விலையுடைய ஆடையை வாங்குவதற்காகவே அவன் முரகாமியின் துப்பாக்கியைத் திருடி விற்று விடுகிறான். அவன் குற்றவாளியாக இருந்தாலும் அவனுடைய அன்பிற்காகவே முதலில் அவனுடைய காதலி காட்டித் தராமல் இருக்கிறாள்.  குற்றவாளியைப் போலவே முரகாமியும் ராணுவத்திலிருந்து திரும்பியவன்தான். அந்தச் சூழலே அவனை காவல்துறையில் இணைய வைக்கிறது. போருக்குப் பின்னதான சூழல் இருவேறு மனிதர்களை எதிரெதிர் திசையில் பயணம் செய்ய வைக்கிற முரணை மிக நுட்பமாக சுட்டிக் காட்டுகிறார் அகிரா குரசேவா.

**

படத்தின் துவக்கத்தில் பதட்டமுடனும் அச்சத்துடனும் காணப்படும் ஒரு நாயின் முகம் பரபரப்பான இசையின் பின்னணியில் நெருக்கமான அண்மைக் கோணத்தில் காட்டப்படுகிறது. முரகாமி துப்பாக்கியைத் தேடி கோடைக்காலத்தில் தெரு தெருவாக அலைந்து திரிவதின் ஒரு படிமமாகவே அந்த நாய் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

பொதுவாக காவல்துறை அதிகாரி என்றாலே எளிய மக்களை அதட்டி ஒடுக்குபவராகவும் வன்முறையைச் செலுத்துபவராகவும் சித்தரிக்கப்படும் சூழ்நிலையில்  அவர்களும் பதட்டப்படும், அச்சப்படும் சாதாரண, எளிய நபர்களே என்கிற யதார்த்தத்தை பதிவு செய்கிறார் அகிரா. முரகாமிக்கு தன்னுடைய பணியை இழப்பதை விட துப்பாக்கியை அலட்சியமாக தொலைத்து விட்டோமே என்கிற குற்றவுணர்வுதான் அதிகம் அலைக்கழிக்கிறது. படம் பூராவும் பரபரப்பும் படபடப்புமாகவே அலைகிறார்.

தோஷிரோ மிஃபுனே இந்தப் பாத்திரத்தை மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார். வேட்டைக்கு கிளம்பும் பசித்த விலங்கின் ஆர்வமும் குரூரமும் படபடப்பும் அவருடைய கண்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவரது பிரத்யேகமான உடல்மொழியும் வேகமான அசைவுகளும் கூர்மையான பார்வையும் எப்போதும் போலவே சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தன்னுடைய பெரும்பாலான படங்களில் தோஷிரோ மிஃபுனே-வை அகிரா பயன்படுத்தியிருப்பதில் இருந்தே இந்தக் கூட்டணிக்குள்ள புரிந்துணர்வையும் நெருக்கத்தையும் அறிய முடியும்.

இதைப் போலவே முரகாமியின் உயர்நிலை காவல் அதிகாரியாக வரும் டகாஷி ஷிமுராவும் அற்புதமாக நடித்திருக்கிறார். குற்றவாளிகளின் வாழ்வியலும் அவர்களைப் பற்றிய உளவியலும் நன்கு அறிந்த அனுபவமுள்ள காவல்துறை பணியாளராக இருக்கும் அவர், முரகாமியைப் போல அல்லாமல் எவ்வித பதட்டமும் அல்லாமல் சமயோசிதமாக குற்றவாளிகளைக் கனிவுடன் கையாண்டு தகவல்களைப் பெறுகிறார்.

இன்னொன்று, இதில் சித்தரிக்கப்படுபவர்கள் உதிரிக்குற்றவாளிகளாக இருந்தாலும் காவல்துறையின் விசாரணைக்கு அவர்கள் அஞ்சி நடுங்குவதில்லை. தாங்கள் விரும்பாவிட்டால் சில கேள்விகளுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை என்கிற மனித உரிமையின் அடிப்படை சார்ந்த அறிவையும் பிரக்ஞையையும் கொண்டிருக்கிறார்கள். ஜேப்படி பெண், கள்ளத் துப்பாக்கி விற்கும் பெண், குற்றவாளியின் காதலி  என்று அனைவருமே விசாரணைக்கு அஞ்சாமல் தாங்களே விரும்பும் பட்சத்தில்தான் தகவல்களை அளிக்க முன்வருகிறார்கள்.

**

படத்தின் துவக்கக் காட்சியில் முரகாமி குற்றவாளியை துரத்திக் கொண்டு வரும் காட்சிகள், ஜேப்படி பெண்ணை துரத்தும் காட்சிகள், உதிரிக்குற்றவாளிகள் நிறைந்திருக்கும் கள்ளச் சந்தையில் முரகாமி சுற்றும் காட்சிகள், விளையாட்டு நடைபெறும் வெளிப்புறக் காட்சிகளையும் அரங்கக் காட்சிகளையும் இணைத்திருக்கும் கச்சிதம் போன்றவை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருக்கான மேதமையைக் காட்டுகின்றன.

அதிகாரத்தை வைத்திருப்பவர்கள், அதிகாரத்திற்கு உட்படுபவர்கள், அதை மீறும் குற்றவாளிகள் என்று ஏறத்தாழ பெரும்பாலோனோர் சூழ்நிலையின் கைதிகளாக இயங்க நேரும் அவலத்தின் மீதான தத்துவார்த்தமான உணர்வைத் தருகிறது  இத்திரைப்படம். இறுதிக் காட்சியில் முரகாமி குற்றவாளியைப் பிடித்து தன்னுடைய தேடலை நிறைவு செய்தாலும் ஏதோவொரு குழப்பமும் நிறைவின்மையும் அவனுக்குள் நெருடிக் கொண்டேயிருக்கிறது. அவனுடைய உயர்அதிகாரிதான் அவனுடைய முதல் வழக்கை அவன் திறமையாக கையாண்டதற்காக அவனைப் பாராட்டி ஆற்றுப்படுத்துகிறார்.

போருக்குப் பின்னதான ஒரு பிரதேசத்தில் நிகழும் மாற்றங்களையும் தனிமனிதர்களின் துயரங்களையும் வெறுமையையும் அகிராவின் பல திரைப்படங்கள் நுட்பமாக சித்தரித்துள்ளன. அவற்றில் சிறப்பானததொன்றாக இந்த ‘தெரு நாயை’ குறிப்பிட முடியும்.

- உயிர்மை - மே 2016-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan

Sunday, May 22, 2016

ஈராக்கில் உலவும் தமிழர்


ஒருவர் தமது எழுத்தை மற்றவர்கள் பரவலாக அறியச் செய்தவற்கு நாளிதழ், மாத இதழ் போன்ற அச்சு ஊடகங்கள் மட்டுமே வழி என்றிருந்த காலம்  ஒன்றிருந்தது. சுமாராக எழுதுபவர்கள் அதில் பங்கு பெற முடியாத படி கூர்மையாகவும்  கோர்வையாகவும் சுவாரசியமாகவும எழுதுபவர்கள் மட்டுமே அதில் பங்குபெறக்கூடிய பொதுவான சவால்கள் இருந்தன. ஆனால் இணையம்  என்கிற ஊடகம் இங்கு புழக்கத்தி்ல் வந்த பிறகு இந்தச் சுவரெல்லாம் உடைந்தது. உங்கள் பெயரில் வலைத்தளம் துவங்கி எண்ணங்களை எழுதி அதை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தால் ஒரு சிற்றிதழின் வாசகர் எண்ணிக்கைக்கு நிகரான நபர்கள் அதைக் காணக்கூடிய சாத்தியம்  உண்டாயிற்று. ஒரு சராசரியான நபர் கூட தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவதற்கான வெளியை இணையம் உருவாக்கியது.  இணையத்தின் இந்த அபாரமான வளர்ச்சி காரணமாக அச்சு ஊடகத்தில் மட்டுமே எழுதி வந்த எழுத்தாளர்கள் கூட இணையத்தின் பக்கம் நகர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கட்டற்ற சுதந்திரம் கொண்ட தன்மையே ஒருவகையில் இணையத்தின் பலமாக இருந்தாலும் இன்னொரு வகையில் பலவீனமாகவும் உள்ளது.

இணையம் தந்திருக்கும் இந்த தங்க வாய்ப்பை பலரும் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று பார்த்தால் பொதுவாக பெரிதும் ஏமாற்றமே. பொழுதுபோக்காக திண்ணைகளில் அமர்ந்து வெற்று உரையாடல்களை நிகழ்த்தும் முந்தைய காலத்தைப் போலவேதான் இணையத்தை பயன்படுத்துபவர்களும் அரசியல், சினிமா போன்றவற்றைச் சார்ந்த வம்புகளால் இணையத்தை நிறைக்கிறார்கள். மிக அரிதாகவே ஆக்கப்பூர்வமான நல்ல எழுத்தை காண முடிகிறது. பல்வேறு காரணங்களால் வெளி நாடுகளில் புலம் பெயர்ந்திருக்கும் தமிழர்களும் பொதுவாக இந்த வம்பாளர்களின வரிசையில் இருக்கிறார்கள். எங்கெங்கோ பல்வேறு கலாசார பின்னணிகளில்  வாழ்ந்தாலும் அவர்களின் கவனம் முழுக்க தமிழக அரசியல், சினிமா குறித்த இன்னபிறவற்றின் மீதிலேதான் குவிந்திருக்கிறது. தங்களின் மண்ணை விட்டுப் புரிந்த ஏக்கத்தை இவ்வாறான உரையாடல்களின் மூலமாக தீர்த்துக் கொள்கிறார்களோ என்று தோன்றினாலும் ஏன் அவர்கள் தாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் அயல் பிரதேசத்தின் கலாசாரம், சமூகம், வரலாறு, அரசியல், பண்பாட்டு அடையாளங்கள், உள்ளுர் விஷயங்கள் போன்றவற்றைப் பற்றி அதிகம் எழுதாமல் இருக்கிறார்கள் என்கிற மனக்குறை என்னிடம் நீண்ட காலமாக உண்டு.

ஓர் அயல் பிரதேசத்தின் சுற்றுலாத்தளங்களை சில மணி நேரங்கள் மட்டுமே  கண்டு விட்டாலே அந்தப் பிரதேசத்தின் கலாசாரத்தைப் பற்றி அறிந்து விட முடியாது. நூல்கள் மற்றும் இணையத்தளங்களின் மூலம்  கூட அது சாத்தியமாகாது. அந்தப் பிரதேசத்தின் உட்பகுதிகளில் சில காலம் வாழ்ந்து அந்த மக்களோடு இணைந்து பழகி வாழ்ந்து பார்ப்பதன் மூலமே அந்தக் கலாசாரத்தின் ஆன்மாவை நாம் சிறிதாவது உணர முடியும். சொந்த மண்ணை விட்டுப் பிரிந்திருப்பது துயரமான விஷயம்தான் என்றாலும் இந்த வாய்ப்பு அமைந்திருக்கும் புலம் பெயர் தமிழர்கள் இந்த வகையில் அதிகம் எழுதுவது அவசியமானது என்று கருதுகிறேன்.

***

தற்போது ஈராக்கில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன் இந்த நோக்கில் அபாரமாக செயல்படுகிறார். மதுரை, கல்லுப்பட்டியைச் சேர்ந்த இவர்  2002-ம் ஆண்டு முதல் மஸ்கட், கத்தார், குவைத், அபுதாபி போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தாலும் 2012 முதல் ஈராக்கில் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இந்த வாய்ப்பின் மூலம் கிடைத்த அந்த தேசத்தினுடான தம்முடைய நேரடி நடைமுறை அனுபவங்களை இணையத்தில் தொடர்ந்து  எழுதி வந்தார்.

அந்த அனுபவங்களின் மேம்படுத்தப்பட்ட பதிவுகள் ஒரு தனி நூலாக 'ஈராக் - நேற்றும் இன்றும்' என்கிற தலைப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ளது. ஓர் அயல் தேசத்தைப் பற்றிய ஒரு தமிழரின்  நேரடி அனுபவங்களின் தொகுப்பு என்கிற வகையில்  இதுவொரு முன்னோடியான முயற்சி எனலாம்.

***

சுமேரியா நாகரிகத்தின் பிறப்பிடமான ஈராக் தேசத்தின் பழமையான பின்னணி, அதன் பூர்வகுடிகள், அந்நிய படையெடுப்பு, பிரிட்டிஷ் காலனியாதிக்கம் போன்ற ஆதாரமான  விவரங்களோடு துவங்கும் நூல், பிறகு ஈராக் 1932-ல் சுதந்திரம் பெற்றாலும் மன்னராட்சியின் கீழ் தொடர்ந்து பல்வேறு ஆட்சியாளர்களின் சிக்கி சதாம் ஹூசைனிடமிருந்து விடுபட்டு தற்போது மெல்ல நகர்ந்து வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் ஆக்ரமிப்பு வரை விரிவான தகவல்களுடன் உரையாடுகிறது. போர் மேகங்கள் நிலையாக சூழ்ந்திருக்கும் அபாயமும் அதன் மூலம் சமூகத்தில் நிலவும் அச்சமும் இருப்பின் நிச்சயமின்மையும் உறுத்தாமல் இயல்பாக விவரிக்கப்பட்டிருக்கின்றன.

இன்றைய ஈராக் 'ரிபப்ளிக் ஆஃப் ஈராக்' என அறியப்பட்டாலும் மூன்று துண்டுகளாக பிரிந்துள்ளது. ஒன்று மெயின்லேண்ட் ஈராக் எனப்படும் அதிகாரபூர்வ பகுதி, தனி நாட்டு கோரிக்கையுடன் பல ஆண்டுகளாக போராடி வரும் குர்திஸ்தான் பகுதி, இவை தவிர பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் ஆக்ரமிப்பில் உள்ள பகுதிகள். மக்கள் தொகையில் அதிக எண்ணிக்கையைக் கொண்ட ஷியா பிரிவினருக்கும் ஸன்னி பிரிவினருக்கும் ஓயாத மோதலும் துப்பாக்கிச் சூடும் என்று அன்றாட வன்முறையை மிக சகஜமான கொண்ட வாழ்க்கை. எண்ணெய் வளம் மிக்க தேசமாக இருந்தாலும் உள்நாட்டு குழப்பங்களாலும் தொடர்ச்சியான போராலும் முதலாளித்துவ நாடுகளின் சுயநல தலையீடுகளாலும் ஏழ்மையான மக்களே அதிகம். செல்வந்தர்களின் சதவீதம் குறைவு.

ஈராக்கின் கலாசாரம், உணவுப்பழக்கம், மின்சாரம் உள்ளிட்ட அன்றாட வசதிகளின் பற்றாக்குறை, மக்களின் அணுகுமுறை, பொருளாதாரம், எண்ணைய் அரசியல், உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான பாபிலோன் போன்ற சுற்றுலா தளங்கள்.. என்று அந்த நிலவியலின் நேரடிக் காட்சிகளை மிக சுவாரசியமான விவரணைகளுடன் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். ஆந்திர தொழிலாளர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் நடமாட்டம் குறைவாகவே உள்ளது என்றாலும் இந்தியர்கள் என்றாலே ஈராக்கியர்களுக்கு அன்பும் மதிப்பும் இருப்பதை பல அனுபவங்களின் வாயிலாக விவரிக்கிறார்  ஜெயக்குமார். மீன் வளம் அதிகமுள்ள ஈராக்கில் அசைவ உணவுக்காரர்களுக்கான உணவுகளே அதிகம் கிடைக்கும் போது சைவப்பழக்கம் உள்ள நூலாசிரியரின் அவதியும் மொழிப்பிரச்சினையும் சங்கடத்தை மறைத்துக் கொண்ட சுவாரசியத்துடன் விரிகின்றன. ஈராக்கில் நுழைந்த முதல் நாள் அன்று ஒரு காஃபிக்காக அவர் நடத்திய போராட்டத்தை வாசிக்கும் போது வாய் விட்டு சிரிக்கத் தோன்றுகிறது.

இத்தனை சங்கடங்கள் இருந்தாலும் ஒருமுறை கூட ஏன் இங்கு வந்து மாட்டிக் கொண்டோம் என்று தோன்றவேயில்லை என்கிற அவரின் கூற்றிலிருந்து புதிய உலகங்களை ஆராய விரும்பும் துணிச்சல் மிக்க ஆர்வமும் பாதுகாப்பின்மைகளுக்கு இடையே உணரும் பாதுகாப்பின் முரணையும் நாம் அறிய முடிகிறது. வழக்கமான 'உலக செய்திகளிலும்' இணையத் தளங்களிலும் ஈராக் பற்றி நாம் மேலோட்டமாக அறிந்திருக்கும் விவரங்களை கலைத்துப் போடுகிறது இந்த நூல். நூலாசிரியரின் நேரடி அனுபவங்கள் என்கிற காரணத்தினாலேயே அதற்குரிய முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது.


****

ஈராக் - நேற்றும் இன்றும்
ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்
தடம் பதிப்பகம்
முதல் பதிப்பு: 2016
விலை: ரூ.150·-
மின்னஞ்சல்: thadampathippagam@gmail.com

அம்ருதா - ஏப்ரல் 2016-ல் வெளியான கட்டுரை (நன்றி: அம்ருதா)


suresh kannan

Monday, May 16, 2016

முகநூல் குறிப்புகள் - 3

நண்பர் அபிலாஷ் கடந்த பல மாதங்களாக அச்சு ஊடகங்களில் எழுதும் கட்டுரைகளை தொடர்ந்து வாசிக்கிறேன். பல்வேறு இதழ்களில் தொடர்ச்சியாக அவர் எழுதுவற்கு பின்னுள்ள உழைப்பு குறித்து பிரமிப்பாக இருக்கிறது. மேலும் அவரது எழுத்தின் மூலம் வெளிப்படுகிற அவரின் பரந்து பட்ட வாசிப்பு குறித்தும் ஆச்சரியமாக இருக்கிறது.

என்னளவில் வார, மாத இதழ்களுக்கு அந்தந்த டெட்லைன்களுக்குள் எழுதுவதென்பது நிச்சயம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் விஷயம். சமீபமாக அந்த அழுத்தத்தை என்னால் நன்கு உணர முடிகிறது. அது குறித்த அலாரம் மனதில் ஒரு சுமையாக அப்படியே உறைந்து மிரட்டிக் கொண்டேயிருக்கும் சமயங்களில் நடுஇரவில் கூட அது சார்ந்த அலாரம் உள்ளே பலமாக அடித்து பதறியடித்து எழுந்து உட்கார்நது எழுதியிருக்கிறேன்.

எப்போது பறக்கத் தோன்றுகிறதோ அப்போது சுதந்திரமாக பறக்கும் பறவையைப் போல் எழுத்தாளன் இயல்பாக இயங்க வேண்டியவன். ஆனால் இம்மாதிரியான நடைமுறை அழுத்தத்தையும் அதனால் படைப்புகளில் எதிரொலிக்கக்கூடிய கோர்வையின்மையையும் அவன் எதிர்கொள்ள வேண்டியிருப்பது சிக்கலான விஷயம்தான்.

ஆனால் சிலர் இம்மாதிரியான டெட்லைன்கள் இருந்தால்தான் அது சார்ந்த அழுத்தம் காரணமாக எழுதி முடிப்பார்கள். எழுதுவதற்கான ஊக்கத்தையே அத்தகைய அழுத்தங்கள்தான் தரும். பத்திரிகைகளின் துரத்துதல்களின் காரணமாகத்தான் பல படைப்புகளை எழுதியிருப்பதாக சொல்லியிருக்கிறார் சுஜாதா.

'எழுத்து எனக்கு சுவாசம் போல' என்று சிலர் சொல்வதெல்லாம் நிச்சயம் உட்டாலக்கடி என்பதாக எனக்குத் தோன்றுகிறது. பறவையை உதாரணம் சொன்னேன் அல்லவா? பறத்தல் என்பது ஒரு பறவைக்கு தன்னியல்பாக படிவது போல எழுதுவதென்பது அப்படியாக அமைந்தவர்கள் மட்டுமே அப்படிச் சொல்ல முடியும்.

என்னைப் பொறுத்த வரை அச்சு ஊடகத்திற்கு எழுதுவது என்பது ஒரு வாதை. எழுதுவது குறித்த திட்டவட்டமான கருத்துக்களும் வடிவமும் மனதில் ஏற்கெனவே தோன்றியிருந்தாலும் அவற்றை சொற்களின் வடிவத்தில் வலுக்கட்டாயமாக பிடுங்கி கோர்வையாக அமைப்பது என்பது சள்ளை பிடித்த வேலை. எவ்வளவு தூரம் ஒத்திப் போட முடியுமோ அத்தனை தூரம் ஒத்திப் போடத் தோன்றும்.

இணையத்தில் எழுதும் போது அது நம்முடைய ஏரியா என்பதால் எவ்விதப் பிழைகளையும் பற்றி கவலைப்படாமல் இயல்பாக எழுதி விட முடிகிறது. ஆனால் அச்சு ஊடகம் எனும் போது அது இன்னொருவரின் பொறுப்பில் இருக்கும் பிரதி என்பதால் தன்னிச்சையாகவே ஒரு பதட்டமும் ஒழுங்குணர்வும் உள்ளே வந்து விடுகிறது.

மட்டுமல்லாமல் எழுத்து மேஜையின் பின்னிருந்து ஒரு கற்பனையான வாசகன் நான் எழுதுவதையெல்லாம் கிண்டலடித்துக் கொண்டே இருக்கிறான், அதன் பிசிறுகளை, தவறுகளை திருத்தச் சொல்லி எச்சரித்துக் கொண்டே இருக்கிறான். அவனைச் சமாளிப்பது பெரும்பாடாக இருக்கிறது. திருத்தி திருத்தி எழுத வேண்டியதாக இருக்கிறது.

ஒரு திரைப்படக் கட்டுரைக்காக நான் என்னால் முடிந்த அத்தனை உழைப்பையும் தருகிறேன். ஒரு குறிப்பிட்ட திரைப்டத்தைப் பற்றி எழுத வேண்டும் என்றால் அதை குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறை பார்க்கிறேன். அதன் தகவல்களை தேடித் தேடி சரி பார்த்துக் கொள்கிறேன். அப்படியும் சில பிசிறுகள் அமைந்து விடுகின்றன. ஆனால் மிகுந்த உழைப்பைச் செலுத்தி எழுதப்படும் எழுத்து பரலவாக கவனத்திற்கு உள்ளாகாத போது அது சார்ந்த சோர்வும் ஏற்படுகிறது. என்றாலும் கூட எழுத வேண்டும் என்கிற ஊக்கம் குறையாததால் அடுத்ததற்கு நகர முடிகிறது.

()

இம்மாதிரியான சிக்கல்களை அபிலாஷ் எப்படி எதிர்கொள்கிறார் என்பதை பொதுவில் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.

மே 2016 குமுதம் தீராநதி இதழில் 'நவீன புனைவுகளில் ஊனத்தை குறியீடாக்குவதின் சிக்கல்' என்கிற அவரது கட்டுரை முக்கியமானது மட்டுமல்ல சுவாரசியமானதும் கூட. நவீன தமிழ் இலக்கியத்தின் புனைவுப் பிரதிகளில் ஊனம் எனும் கருத்தாக்கம் நேரடியாகவும் மறைமுகமாகவும் எப்படியெல்லாம் கையாளப்படுகிறது என்பதை சில உதாரணங்கள் கொண்டு ஆராய முயல்கிறார் அபிலாஷ். அக ஊனங்களே அதிகம் கையாளப்பட வேண்டிய இலக்கிய வடிவத்தில் புற ஊனங்கள் வாயிலாக நிகழும் அகச்சிக்கல்கள் பற்றிய குறிப்புகளை ஒரு தேர்ந்த ஆய்வு நடையில் பதிவாக்குகிறார்.

அபீலாஷின் புனைவு எழுத்தை நான் அதிகம் வாசித்தது இல்லை. ஆனால் அபுனைவு எழுத்துக்களில் நான் உணரும் ஒரு நெருடலை அவருக்கு கவனப்படுத்த விரும்புகிறேன். இதை அவர் சரியான தொனியில் எடுத்துக் கொள்வார் என்கிற நம்பிக்கையுண்டு.

தான் அறிந்த எல்லாவற்றையும் உணர்ந்த அனைத்தையும் தன்னுடைய வாசகனுக்கு கடத்திவிட வேண்டும் என்கிற வேகமும் தத்தளிப்பும் அது சார்ந்த குணாதிசயமும் இளம் எழுத்தாளர்களின் எழுத்தில் அமைவது அவ்வகை எழுத்தில் உள்ள சிக்கல்களில் ஒன்று. இதன் காரணமாக அந்தப் படைப்பின் கலையமைதி சிதைவுறுவதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

அபிலாஷின் அபுனைவு எழுத்திலும் இந்த நெருடலை உணர்கிறேன். அவர் தன்னுடைய மனம் நெய்யும் வார்த்தைப் பிரயோகங்களை அப்படியே தொடர்ச்சியாக பதிவு செய்து கொண்டே போகிறார். இதற்கு எப்படி உதாரணம் சொல்லலாம் என்றால், எவ்வித குறிப்புகளும் அல்லாமல் பேச முயலும் ஓர் அனுபவமற்ற பேச்சாளர், தம் மனதில் உருவாகும் கருத்துக்களையெல்லாம் பார்வையாளர்களுக்கு கடத்தும் வேகத்தில் கோர்வையற்று துண்டு துண்டாக பல விஷயங்களை சொல்லிச் செல்வதுடன் ஒப்பிடலாம். அவர் பேசியதில் பல ஆழமான நல்ல கருத்துக்கள் இருந்திருக்கும். ஆனால் மனம் இயங்கும் வேகத்தில் பேச்சும் இயங்க முயல்வதால் ஏற்படும் சிக்கல் காரணமாக கோர்வையற்று கச்சிதமற்று இருக்கும்

பின்பு எவராது அந்தப் பேச்சின் தேவையற்ற பகுதிகளை எடுத்து திருத்தி கோர்வையாக்கி ஒரு நல்ல கட்டுரையாக மாற்ற முடியும்.

கோர்வையாகவும் அதே சமயம் ஆழமாகவும் பேசுவதற்கு மிகுந்த உழைப்பும் பயிற்சியும் தேவைப்படுகிறது.

தமிழ் எழுத்து சூழலில் எடிட்டர் எனும் பிரத்யேகமான பணியின் அவசியம் பல காலமாக உரையாடப்பட்டுக் கொண்டு வந்தாலும் நடைமுறையில் அது பரவலாக சாத்தியப்படாதது துரதிர்ஷ்டமே. அபிலாஷின் எழுத்திற்கு தேவை அம்மாதிரியான ஒரு எடிட்டர். எழுத்தாளனே தன் எழுத்தை சீர்திருத்துவதென்பது மனஉளைச்சலை தரக்கூடிய வேலை.

ஒருவகையில் அபிலாஷிற்கு கூறுவதை எனக்கே கூறிக் கொள்வதாகவும் பார்க்கிறேன்.

***


விஜய்காந்த் NDTV -க்கு அளித்த நேர்காணலை தொடர்ந்து பார்க்க முடியாமல் நிறுத்தி விட்டேன். அதையொரு நகைச்சுவைப் பிரதியாகவும் காணலாம் என்பது ஒருபக்கம் இருக்கட்டும், எனக்கோ திகில் படம் பார்ப்பது போல் இருந்தது.

எவராவது மேடையில் பேசும் போது தாம் சொல்ல வந்த கருத்தை சுற்றி சுற்றி திக்கி சொல்ல முயலும் போது அந்த தவிப்பு கவனிக்கிறவனுக்கும் வந்து விடும். பேசுபவனை தலையில் தட்டி, இதுதானே சொல்ல வந்தே?" என்று பாயுமளவிற்கு ஓர் உணர்வு ஏற்படும், தலைமுடியை பப்பரப்பே என்று விரித்துப் போட்டிருப்பவனை இழுத்து வந்து முடிவெட்டி விட வேண்டும் என்று தோன்றுகிற உணர்வைப் போல.

நிற்க, ஆங்கில மொழிதான் உயர்வானதா என்பது போல இதை மொழியரசியல் நோக்கில் புரிந்து கொள்ள வேண்டாம். விஜய்காந்த் இயல்பாகவே தமிழில் பேசியிருக்கலாம். பாவம் பிரணாய் ராய், எத்தனையோ அரசியல்வாதிகளை ஆங்கிலத்தில் மடக்கி மடக்கி கேட்ட வயிற்றெரிச்சல்களும் பாவங்களும் விஜயகாந்த் அலுவலகத்தில் வந்து விடிந்திருக்கிறது. படிக்காதவன் திரைப்படத்தில் ரஜினிகாந்த்தின் தம்பி அவரை ஆங்கிலத்தில் திட்டுவது புரியாமல் 'எஸ் ..எஸ்..' என்பாரே, அப்படி பலியாடு போல தலையாட்டிக் கொண்டிருந்ததைப் பார்க்க பாவமாக இருந்தது.

பிரணாய் ராய்க்கு ஒருவேளை தமிழ் நன்றாக தெரிந்திருந்தாலும் கூட விஜய்காந்த் பேசியதை புரிந்து கொள்ள முடிந்திருக்காது என்பதுதான் இதிலுள்ள கூடுதல் நகைச்சுவை.

ஒருவேளை செய்தியாளர்கள் விஜயகாந்த்தை வைத்து காமெடி கீமெடி செய்து கொண்டிருக்கிறார்களோ? அல்லது vice versa வா?


***



 
கோபுர வாசலிலே வரும் 'காதல் கவிதைகள் படித்திடும் நேரம்' என்பது இளையராஜாவின் ரகளையான கம்போஷிஸனில் அமைந்த பாட்டு. இளையராஜாவின் நூறு சிறந்த தமிழ் திரையிசைப் பாடல்களை எவராவது கறாராக தொகுத்தால் அது நிச்சயம் இடம்பெறக்கூடிய தகுதி கொண்டது என்பது என் அனுமானம். அத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகளைக் கொண்டது இந்தப் பாடல்.

என் வாழ்வில் இந்தப் பாடலை குறைந்தது ஆயிரம் முறைக்கு குறையாமல் கேட்டிருப்பேன். இதன் துவக்கத்தில் வரும் 'எஸ். ஐ லவ் திஸ் இடியட்' என்கிற குரல் மட்டுமே இந்தப் பாடலுக்கு ஒரு திருஷ்டிப் பொட்டு. அபஸ்வரமும் கூட. அது பின்னணிக் குரல் தருபவரது என்று நினைக்கிறேன். அதைக் கேட்கும் போதெல்லாம் எரிச்சல் வரும். சில நொடிகள்தான் என்றாலும் எப்போது அது கடந்து தொலைக்கும் என்று எரிச்சலோடு காத்திருப்பேன்.

தொடர்ந்து வரும் அற்புதமான இசையும் பாலுவின் குரலும்தான் அதை மட்டுப்படுத்தும்.

நான் இதை எழுத வந்தது வேறு ஒரு காரணத்திற்காக.

இதன் கடைசி பல்லவியை கவனியுங்கள்.

இதயம் இடம் மாறும்.. என்று சித்ரா பாடியவுடன் (4:46) பாலு மெலிதாக ம்.. சொல்லுவார்..

அமுதும் வழிந்தோடும் .. என்று பாலு பாடும் போது (4:52) அந்த ம்.. மின் முறை சித்ராவுடையது.

இந்த இரண்டு 'ம்'கள்தான் இந்தப் பாடலை எங்கோ ஒரு உயரத்திற்கு கொண்டு செல்கின்றன என்பது என் தாழ்மையான கருத்து. என் பிரச்சினை என்னவென்றால் இந்த 'ம்களை கவனமில்லாமல் முதல், இரண்டாவது பல்லவியில் தேடிக் கொண்டிருப்பேன். அது வராமல் ஏமாற்றமாகி விடும் அப்புறம்தான் அது கடைசி பல்லவியில் வருவது நினைவிற்கு வரும். சமயங்களில் நானே அந்த 'ம்'களை என் குரலில் இட்டு நிரப்பும் அராஜகத்தை செய்வேன்.

அந்த அளவிற்கு இந்த 'ம்'களுக்கு நான் அடிமை.

என்னைப் போன்ற சஹஹிருதயர் எவரேனும் உண்டா?

***


இசைக்கலைஞர் எம்.எஸ். பற்றி டி.எம். கிருஷ்ணா, கேரவன் இதழில் ஆங்கிலத்தில் எழுதியுள்ள நீளமான கட்டுரையொன்று மே 2016 காலச்சுவடு இதழில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பிரசுரமாகியுள்ளது. சமீபத்தில் வாசித்த சிறந்த, தரமானதொரு கட்டுரையாக இதைக் குறிப்பிடுவேன். மொழியாக்கமும் சிறப்பு. அநாமிகா என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் இது சுகுமாரனின் மொழிபெயர்ப்பாக இருக்கலாம் என்பதென் தேவையில்லாத யூகம்.

எம்.எஸ்.என்கிற ஆளுமைக்கு பொதுவாக இரண்டு பரிமாணங்கள் உண்டு. ஒன்று பொது தளத்தில் ஓர் இசையாளுமையாக, ஆன்மிக அடையாளமாக, இசைப் பேரரசியாக அறியப்பட்டிருக்கும் விருதுகள் பல பெற்றிருக்கும் ஒரு வடிவம். இன்னொன்று, எம்.எஸ்.ஸின் வாழ்க்கை பின்னணி, அதிலுள்ள சர்ச்சைகள், புகைமூட்டங்கள், அவற்றிலிருந்து துடைத்தெறிந்து அவரை ஒரு புனிதப்பசுவாக வடிவமைத்த அவரது கணவர் சதாசிவத்தின் பங்கு, அவரது கட்டுப்பாடுகளால் ஒருவேளை இழந்து போன எம்.எஸ்.ஸின் சுதந்திரமும் கலையாற்றலும் ..

என பல்வேறு தளங்களில் சமநிலையுடன்கூடிய நிதானத்துடன் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. ஒரு கச்சிதமான ஆலாபனையைப் போலவே இந்தக் கட்டுரையை உணர்கிறேன். நண்பர்கள் இந்தக் கட்டுரையை தவறாமல் வாசிக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

முன்னொரு சமயத்தில் ஜெயமோகன் எழுதிய கட்டுரையையும் இதனுடன் இணைத்து வாசிக்கலாம்.

எம்.எஸ். வாழ்க்கை வரலாறு பற்றி டி.ஜே.எஸ். ஜாாஜ் எழுதிய (MS – ‘A Life in Music’ ,T.J.S George) என்கிற நூலை வாசித்தே தீர வேண்டுமென்கிற ஆவலை, இந்தக் கட்டுரைகள் உண்டாக்குகின்றன.

நண்பர்கள் எவரிடமாவது இந்த நூல் இருக்கிறதா என அறிய ஆவல்.


***



நண்பர் Lalitharam Ramachandran ஆசியோடு இன்று ரசித்த ஒரு பாடலைப் பற்றிய சில பாமர குறிப்புகள்.


சுசி கணேசன் இயக்கத்தில் வந்த ஃபைவ்ஸ்டார் எனக்கு பிடித்தமான திரைப்படங்களில் ஒன்று. அதைப் பற்றி எவ்வித அறிமுகமும் இல்லாமல் திரையரங்கில் முதன்முறை பார்த்த போது 'ச்சே.. ஸ்கிரிப்ட்ல கலக்கியிருக்காண்டா' என்று இயக்குநரை நினைத்து பரவசப்பட்டேன். அந்த சுசிகணேசன் பிறகு வெகுசன மசாலாவில் மூழ்கி காணாமற் போய் விட்டார் என்பதற்கு நாமும் ஒருவகையில் காரணம்.

அத்திரைப்படத்தில் வரும் எல்லாப் பாடல்களுமே எனக்குப் பிடித்தமானது.

குறிப்பாக இந்தப் பாடல் கூடுதலாக பிடிப்பதற்கு காரணம். இனிப்பும் உப்பும் இணைந்த 50-50 பிஸ்கட் போல மகிழ்ச்சியும் துயரமும் இணைந்த ஒரு விநோதமான கலவையில் உருவானது என்பதற்காக இருக்கலாம்,. உப்புச்சுவை சற்று தூக்கல் என்றாலும்.

ஒரு வடஇந்திய திருமணத்தின் உற்சாகமான மகிழ்ச்சியின் குரல்களுக்கு இடையில் ஒலிக்கிறது.

தாலி கட்டிய அடுத்த கணமே காணமாற் போய் விட்ட தன் கணவனைக் குறித்து அந்த துயரத்துடன் ஒரு தென்னிந்திய கிராமத்து இளம் பெண் பாடும் பாடல்.

தாண்டியா நடனத்தின் துள்ளலிசை பாணியில் அட்டகாசமாக துவங்கும் பாடல் பிறகு மெல்ல அடங்கி 'எங்கிருந்து வந்தாயடா' என்கிற துயரத்தில் கஜல் இசையை நினைவுப்படுத்தும் பாணியோடு இயல்பாக வந்து இணைந்து கொள்கிறது. எவ்வித உறுத்தலும் இல்லை.

திருமணத்தில் வழக்கமாக மணமக்களை கிண்டலடிக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான சூழலில் அதற்கு எதிர்திசை முரணாக, தன் கணவனின் பிரிவைப் பற்றி பாடும் அந்த காண்ட்ராஸ்ட் சூழலை யோசித்ததற்காகவே இயக்குநரைப் பாராட்ட வேண்டும். இரண்டு மனநிலைகளையுமே இப்பாடல் மாறி மாறி எதிரொலிக்கிறது.

'ஒருவர் வாழும் உலகில், மௌனம்தானே பேச்சு' என்று இந்த அடங்கிய துயரத்தின் சுவையை சொற்களில் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் Kavignar Thamarai

சந்தனா பாலா இந்தப் பாடலின் தன்மையை உணர்ந்து அருமையாக பாடியிருக்கிறார். ஓரிடத்தில் துக்கம் தாங்காமல் அழுகையின் உச்சத்தில் கேவல் ஒலி போல் தடுமாறி பின்பு தன்னை மெல்ல சமாளித்துக் கொண்டு பாடலில் இணையும் அந்த பாவம் அபாரம்.

அனுராதா Sriராம்.மற்றும் அவரது கணவன் பரசுராம் ஆகியோர் இணைந்து இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். அத்தனை அருமையான பாடல்களை உருவாக்கிய இவர்கள் பின்பு வேறு எந்த படத்திலும் பணியாற்றியதாக தெரியவில்லை.

ஏன்?


***

இயக்குநர் பார்த்திபனின் 'புதிய பாதை' எனக்குப் பிடித்த தமிழ் திரைக்கதைகளுள் ஒன்று. வெகுசன வார்ப்பிற்குள் ஒரு நல்ல திரைக்கதைக்காக அதை மேற்கோள் காட்டுவேன்.

அதில் ஒரு காட்சி. அந்த தொகுதியின் அரசியல்வாதியான நாசர் முன்பு பாாத்திபன் கால் மேல் கால் போட்டு ஆட்டிக் கொண்டே அமர்ந்திருப்பார். அருகிலிருக்கும் விகே ராமசாமி, அவருக்கேயுரிய பிரத்யேகமான டபுள் மீனிங் மாடுலேஷனில் 'தொகுதி வயசுல சின்னவர்தான். அவரு முன்னாடி நானே ஆட்னதில்ல - காலை. நீ இப்படி ஆட்டறியே" என்பார்.

அதற்கு பார்த்திபன் தரும் பதிலை இன்னமும் மறக்காமல் இருக்கிறேன்.

"அவருக்கு நான் சம்பாரிச்சுக் கொடுக்கத்தான் வந்திருக்கேன். மரியாதை தர இல்லை"

()

தனியார் லிமிடெட் கம்பெனிகளில் கூட கார்ப்பரேட் கலாசாரத்தின் சாயல்கள் மெல்ல படிந்து கொண்டிருக்கும் சூழலில், இன்னமும் கூட சில நிறுவனங்கள் அந்தக் கால மளிகைக் கடை 'மொல்லாளி' பாணியிலேயே இயங்குகின்றன. எங்களுடைய வாடிக்கையாளர் நிறுவனம் ஒன்று, கோடிகளில் லாபம் காட்டுகிற சுக்கிர திசையில் இயங்குகிற பெரிய நிறுவனம் என்றாலும் அதன் அனைத்து முக்கியமான முடிவுகளையும் அந்த நிறுவனத் தலைவரே எடுப்பார். விசிட்டிங் கார்ட் பிரிண்ட் செய்வதாக இருந்தாலும் அவர்தான் முடிவு. அதிகாரப் பகிர்வு என்பதே கிடையாது. எதைக் கேட்டாலும் அங்குள்ள ஊழியர்கள் 'சாரைக் கேட்கணும்' என்பார்கள். சார் நிறுவனத்திற்கு வருகிறார் என்கிற செய்தி கிடைத்தவுடன் ஏறத்தாழ அப்போதே பரபரப்பாகி அட்டென்ஷனில் நின்று கொண்டிருப்பார்கள்.

இன்னும் சில முதலாளிகள். ஊழியர்கள் தங்களைக் கண்டவுடன் அந்தக் கால எஸ்.வி.சுப்பைய்யா.. போல இடுப்பில் துண்டை இறுக்க கட்டிக் கொண்டு 'மொதலாளி' என்று கண்கசிய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது போன்ற நாடகங்களை கச்சிதமாக நிகழ்த்துபவர்களுக்குத்தான் ஊதிய உயர்வும் அங்கீகாரமும் தருகிறார்கள் இவை நாடகம் என்று 'மொல்லாளிகளுக்கு' தெரியும் .என்றாலும் அவர்களால் கிடைக்கும் போலிப் பெருமிதங்களுக்காகவே அவர்களை போற்றி வளர்க்கிறார்கள்.

ஓர் ஊழியரின் செயற்பாடுகள் எந்த அளவிற்கு அர்ப்பணிப்புடனும் சரியானதாகவும் இருக்கிறது? அவரால் நிறுவனத்திற்கு கிடைக்கும் ஆதாயத்தின் சதவீதம் என்ன? என்பதை வைத்து ஒருவரை மதிப்பிடுவது நல்ல முதலாளிக்கு அழகு. இன்றைய தேதியில் hard work என்பதை விட smart work-க்கிற்குதான் மரியாதை.

அவ்வாறானவர்களின் உழைப்பை கண்டும் காணாமலும் இருந்து விட்டு அவர்கள் தங்களுக்கு எப்போதும் மரியாதை தரவில்லை என்கிற அற்ப காரணத்திற்காகவே பல்வேறு வகையில் பழிவாங்கும் முதலாளிகள், அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை அவர்களே புதைகுழியில் தள்ளுகிறார்கள் என்பதை அறிவதில்லை. அறிந்தாலும் அவர்களின் ஈகோ அவற்றை ஏற்றுக் கொள்ள தடுக்கிறது.

இந்த விஷயத்தில், பணி தொடர்பான விஷயத்தை சிகரெட் புகைத்துக் கொண்டே தன் முதலாளியுடன் விவாதிக்க முடியும் என்கிற மேலை நாட்டுக் கலாச்சாரம் எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது, அங்கும் அடிமைக் கலாசாரம் இன்ன பிற வழிகளில் கசிந்து கொண்டிருக்கும் என்றாலும்.

'Job is done' என்கிற பதிலை விட 'வணக்கம் மொல்லாளி' என்கிற குரலில்தான் ஒரு முதலாளி மகிழ்வார் என்றால் அவர் முதலாளியாக இருக்கவே தகுதியில்லாதவர்.


***


தமிழ் திரையிசை தொடர்பான ஒரு பதிவு செய்யப்பட்ட இசைக் கச்சேரியை வீடியோவில் நண்பருடன் சேர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு பாடகர், திரையிலும் அவரே பாடின ஒரு பாடலை சற்று விஸ்தரித்து ஆலாபனை செய்து பாடினார். சட்டென்று அது அசல் போல தெரியவில்லை. வேறு பாணியில் இருந்தது. கவனித்த நண்பர் முகம் சுருங்கி 'என்னத்த பாடுறான்' என்று சலித்துக் கொண்டார். அவருக்குப் புரியவில்லை. அவருடைய ரசனை இன்னமும் வளர வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

என்றாலும் எதனால் அவருக்கு ஏமாற்றம் வந்தது என்று யோசித்துப் பார்த்தேன். அந்த நிகழ்வில் முன்னர் பாடப்படட்ட சில பாடல்களை பாடகரின் கூடவே அவரும் கள்ளக்குரலில் பாடி அதில் தன்னை மறைத்துக் கொண்டு - தன்னையும் ஒரு பாடகராக நினைத்து மகிழந்து கொண்டிருந்தார். இந்தப் பாடல் வேறு நோட்டில் பாடப்படவே, நம் நண்பரால் அதைப் புரிந்து கொள்ள முடியாததால் ஏற்பட்ட ஏமாற்றமும் சலிப்பும் அது என்று யூகிக்க முடிந்தது.

ஆல்பத்தில் ஒலிக்கும் அதே ஒழுங்கில்தான் கச்சேரியிலும் பாடகர் பாட வேண்டுமென்று நாம் எதிர்பார்ப்பது அறியாமையினாலேயே. அதற்கு வீட்டிலேயே சி.டியில் கேட்டு விடலாம்.

அதே இனிப்பை வேறு வேறு சமயங்களில் சாப்பிட்டிருந்தாலும் அந்தந்த சூழல், மனநிலை ஆகியவற்றைப் பொறுத்து அந்த இனிப்பின் சுவை நிச்சயம் மாறுபட்டிருக்கும். இசையும் அவ்வாறே. ஸ்டுடியோவில் பாடிய போது பாடகர், இசையமைப்பாளர் உருவாக்கித் தந்த கட்டுப்பாட்டில் பாடியிருக்கலாம். அதையே கச்சேரியில் பாடும் போது தன்னியல்பாக இன்னும் சற்று விஸ்தரித்து அந்த இசையை விரிக்க முயல்கிறார். நாம் அந்த புது அனுபவத்தை அந்தப் பின்னணியில் புரிந்து கொண்டு ரசிக்க நம்மை தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இசைக்கு சில அடிப்படை இலக்கணங்கள் வகுக்கப்பட்டிருந்தாலும் அதை ஆதாரமாகக் கொண்டு ஒரு பறவையைப் போல வானில் சுதந்திரமாக பறத்தல், கீழே இறங்கி வருதல், தரையில் சற்று உலாத்துதல், பின்பு எதையோ மறந்ததை எடுக்க விரைவதைப் போல சட்டென்று மேலே ஏறி பறத்தல் என்று பறவை அதன் சுதந்திரத்தில் இயங்குவதைப் போல ஒரு பாடகனும் அப்போதைய மனநிலையின் படி, மனோதர்மத்தின் படி தன் இசையை விஸ்தரித்து பாடுவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

செவ்வியல் இசைகளில் நிகழ்வது இதுவே. கர்நாடக இசையை விட ஹிந்துஸ்தானியில் ஒரே ஒரு வரியை, வார்த்தையை வைத்துக் கொண்டு சுமார் இரண்டு மணி நேரம் கூட விதவிதமான அலங்காரத்துடன் ஆலாபனை செய்வார்கள். அந்த நுட்பம்தான் அதன் அழகியலே. செவ்வியல் பயிற்சியுள்ள பாடகர்கள் திரையிசையிலும் இயன்ற எல்லைக்குள் தங்கள் சுதந்திரத்தைப் பயன்படுத்த முயல்வார்கள். இதை அனுமதிக்கும் அல்லது கட்டுப்படுத்தும் இயக்குநர்கள் உண்டு.

இது மேடைகளில் நிகழும் போது நம்முடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப பாடகர் பாட வேண்டும் என்கிற சிறுபிள்ளைத்தனமான எதிர்பார்ப்பை கழற்றி பாடகரின் கூடவே பறப்பதற்கு முயல வேண்டும் அல்லது அதை குறைந்தபட்சம் புரிந்து கொள்ளவாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.

இதையெல்லாம் அந்த நண்பரிடம் சொல்ல முடியவில்லை. சொலலியிருந்தால் அவர் நண்பராக தொடர்ந்திருப்பாரா என்பது சந்தேகமே.


***



சமகாலத்தில் இயங்கும் தமிழ் திரை இசையமைப்பாளர்களில் ராஜாவிற்கு இணையாக நிறுத்தக்கூடிய கலையுணர்வும் படைப்பூக்கமும் கொண்ட ஆளுமையாக ரஹ்மானை மட்டுமே சொல்ல முடியும்.

சமீபமாக ரஹ்மானின் சில தேர்ந்தெடுத்த பாடல்களை மிக நுணுக்கமாக பல முறை கேட்ட அனுபவத்தில் சொல்கிறேன்.

வெகுசன மனம் தன்னியல்பான திட்டமிடாத கூட்டுணர்ச்சியுடன் ஒரு கலைஞரை பரவலாக ஏற்றுக் கொள்வதிலும் கொண்டாடுவதிலும் பொருள் இல்லாமல் இல்லை என்பதை உணர்ந்தேன்.

இந்த வகையில் ரஹ்மானை கொண்டாட இந்தப் பாடல் ஒரு கச்சிதமான உதாரணம். சற்று நிதானமாக கேட்டுப் பாருங்கள். உள்ளுக்குள் எத்தனை ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கிறார்? உன்னி கிருஷ்ணனும் ஹரிணியும் அபாரம்.


***




காதலுணர்வு சார்ந்து மற்றவர்கள் எடுக்கும் திரைப்படங்களுக்கும் கெளதம் வாசுதேவ மேனன், செல்வராகவன் போன்றவர்களுக்கும் நிறைய வித்தியாசமுண்டு. பின்னவர்களின் படங்களில் அது வெற்று, அசட்டு ரொமாண்டிசமாக அல்லாமல் காதலின் மென்மையும் வலியும் அவைகளில் ரத்தமும் சதையுமாக பதிவாகியிருக்கும்.

கெளதமின் காதல் திரைப்படங்களின் வரிசையில், மின்னலே, விண்ணைத் தாண்டி வருவாயா, நீதானே பொன் வசந்தம் ஆகியவற்றில் கடைசியாக குறிப்பிட்டது என்னுடைய மகா ஃபேவரைட். என்னை பெருமளவில் பாதித்த திரைப்படம் அது. அந்தப் பிரதியுடன் குதூகலித்திருக்கிறேன், அழுதிருக்கிறேன், பரவசமடைந்திருக்கிறேன். அப்படியொரு கொண்டாட்டத்தை என்னுள் உணர்த்திய படம் அது.

கெளதம் ஓர் உண்மையான நல்ல காதலர். காதலின் அத்தனை உணர்வுகளையும் அவர் தனிப்பபட்ட வாழ்வில் உண்மையாக ஆழ்ந்து விழுந்து பிரண்டு எழுந்திருக்கிறார். காக்க காக்க, வேட்டையாடு விளையாடு என்று ஆக்ஷன் திரைப்படங்களிலும் கூட லவ் டிராக் அத்தனை உயிர்ப்புடன் இருக்கும்.

'நீஎபொவ' -வில் இந்தப் பாடலை கவனியுங்கள்.

காதல் துணையுடன் ஏதோ ஒரு சச்சரவில் (அதற்கான காரணம் அற்பமானதாக கூட இருக்கலாம்) அது சார்ந்த மிகையான உணர்வில் அமைந்த சண்டையில், அது ஏற்படுத்திய கசப்பில், மனஉளைச்சலில் நீங்கள் எப்படி எதிர்வினையாற்றுவீர்கள்,?

அந்தவுணர்வு இதில்அபாரமாக பதிவாகியிருக்கிறது. 'பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா?' எடுத்த எடுப்பிலேயே உயர் ஸ்தாயியில் துவங்கும் பாடல் இந்தவுணர்வின் உளைச்சலை, மிகையை சரியாக உணர்த்துகிறது.

இதில் ஜீவாவின் உடல்மொழியை கவனியுங்கள்...தோழி தன்னை நிராகரித்த திகைப்பும், ஏமாற்றமும் அது சார்ந்த சினமும் அவரது அசைவுகளில் நன்றாக வெளிப்படும்.

கடற்கரை மணலை காலால் ஆத்திரத்துடன் உதைத்து விட்டு பிறகு ஒருவேளை தோழியின் மனம் திரும்புமா என்கிற நப்பாசையுடன் மீண்டும் சென்று ஏக்கத்துடன் பார்க்கிறார். விதியின் கரங்கள் வலிமையானவை. இவா் திரும்பிச் சென்ற சமயத்தில்தான் தோழியும் திரும்பிப் பார்க்கிறார்.

கடற்கரை ஒருவகையில் மரணத்தின் குறியீடு. அங்கு விரக்தியுடன் செல்லும் இவரின் கை முஷ்டிகள் இறுகும் ஒரு குளோசப் காட்சி அவரது மனதின் உளைச்சலை பதிவாக்குகிறது.

ஊருக்குத் திரும்பும் முடிவுடன் நடக்கத் துவங்குகிறார். அங்கிருந்து வெளியேற பேருந்து மட்டுமே வழி. ஆனால் அதை நிராகரித்து நடக்கிறார். கடந்து செல்லும் பேருந்தின் மீது ஆத்திரத்துடன் குத்த நினைத்து கடைசி நொடியில் அதை கைவிடுகிறார். உணர்வை அறிவு நிலை கடந்து செல்லும் துளியின் தருணம் அது.

அந்த தூரத்தை சாலையில் நடப்பதின் மூலம் கடந்து செல்கிறார். அந்த துயரத்தை, உளைச்சலை தன்னைத் தானே தண்டித்துக் கொள்வதின் மூலம்தான் அவர் கடந்து வர முடியும், தற்காலிகமாக.

படம் பூராவும் ஆக்ரமித்திருந்த, என்னை அந்தரங்கமான நெருக்கத்துடன் உணரச் செய்த சமந்தாவை, இந்த ஒரு பாடலில் மட்டும் ஓவர்டேக் செய்திருந்த ஜீவாவை பிடித்திருந்தது.

ஓர் அசலான காதலனால்தான் இப்படிப்பட்ட நுட்பங்களை காட்சிகளில் படிய வைக்க முடியும். கெளதம் அப்படிப்பட்ட ஓர் ஆசாமி என்பது நன்கு புலனாகிறது..

ஓர் ஆணின் பார்வையில் இந்தக் காட்சிகளை ரசித்திருக்கிறேன் என்பது வெளிப்படை. இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு.


***



தோழி சமந்தா 2010 முதல் 'பாணா காத்தாடி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் போலிருக்கிறது. நான் கவனித்ததில்லை. 'நான் ஈ''யில் கூட 'அட அழகாக இருக்கிறாரே' என்று வழக்கமான நடிகையைப் பார்ப்பது போல அவரைக் கடந்து விட்டேன்.

ஆனால் நீதானே என் பொன் வசந்தத்திற்குப் பின்னால் பிடித்தது சனி. 'நித்யா வாசுதேவன்' என்கிற மறக்க முடியாத பாத்திரத்தின் மூலம் எனக்குள் அழுத்தமாகப் பதிந்து விட்டார். ஒரு நடிகை தன் அழகின் மூலமாக மட்டுமல்லாது தன் கலைத் திறமையின் மூலமாக இத்தனை கவர முடியும் என்கிற பிரமிப்பை ஏற்படுத்திய படம் அது. முழுதாக பதினைந்து முறைக்கும் மேல் பார்த்திருப்பேன் என்றாலும் நினைக்கும் போதெல்லாம் துண்டு துண்டாக காட்சிகளை பார்த்தது பல முறை. குறிப்பாக அந்த கடற்கரை காட்சி, மொட்டை மாடி விவாத காட்சி.

இதற்குப் பிறகு சமந்தா எனதின் ஒரு பகுதியாகி விட்டார். அவரை ஒரு வேற்று நபர் என்பதை கூட என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. இவருக்காகவே மொழி புரியாத பல தெலுங்கு மசாலாக்களை, அதிலும் இவரை மட்டுமே 'ஆ'வென்று பார்த்துக் கொண்டிருப்பேன்.

ஒரு நடிகையின் மீதான எதிர்பாலின கிளர்ச்சி சார்ந்த மனோபாவம் என்று இதை மற்றவர்கள் மலினமாக புரிந்து கொள்வதை வெறுக்கிறேன். அதையும் தாண்டியதொன்று. அவர் என்னை தன் சிறந்த நண்பனாக ஏற்றுக் கொள்வது உள்ளிட்ட பல பகற்கனவுகளில் மூழ்கியிருக்கிறேன்.

பாவனையாக அல்லாமல் உண்மையாகவே சமூக சேவைகளுக்காக உதவும் நல்லியல்பு,

ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண்ணாக போட்டி நிறைந்த சூழலில் பல சிரமங்களுக்கு இடையே தன்னையொரு வெற்றிகரமான நடிகையாக நிலைநிறுத்திக் கொண்டிருந்தாலும் அதைப் பற்றி கவலைப்படாமல் சட்டென்று ஒரு பிரேக் அடித்து 'என்னுடைய குடும்பத்தினருடன் செலவு செய்வதற்காக சில மாதங்கள் நடிக்கப் போவதில்லை' என்கிற சமீபத்திய அறிவிப்பின் துணிச்சல்

உள்ளிட்ட பல காரணங்களுக்காக அவரை அப்படிப் பிடித்திருக்கிறது.

எனக்குப் பிடித்தமானதொரு நபரின் சாயலில் அவர் இருப்பது இன்னொரு கூடுதல் காரணம்.

சுருக்கமாகவும் தெளிவாகவும் கூற வேண்டுமெனில்..

உயிரும் உடலும் தலைவிக்கே..


***


இரண்டு விளக்கங்கள்:

1) என்ன சார்.. நீங்க பாட்டுக்கு சமந்தாவை ஜொள்றதையெல்லாம் பப்ளிக்கா சொல்றீங்க.. இன்னொரு பக்கம் சினிமா சீரழிவு -ன்னு தீவிரமா எழுதறீங்க.. ஏதாவது ஒண்ணுல நில்லுங்க. இமேஜ் என்ன ஆகும் -னு கவலைப்பட்டு உபதேசம் செய்யற மெசேஜ் ஒண்ணு.

இது என் டைம்லைன். தனிநபர் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளையும் கூடுமானவரை பாசாங்குகளைக் களைந்து, என்னுடைய அனைத்துப் பக்கங்களையும் வெளிப்படையாக்குவதே என் விருப்பமும், நோக்கமும். ஒளித்து வைக்க ஏதுமில்லை. பாசாங்கு நான் வெறுக்கும் விஷயங்களில் முக்கியமானது. பெண்களின் புரொஃபைல்களுக்கு லைக் அட்டெண்டென்ஸ் போடும் நபர்களை விட இது தேவலை என்றே நினைக்கிறேன்.

2) உங்களுக்கு வேறெந்த பிரச்சினையும் இல்லையா? எப்பவும் சினிமாதானா?

ஒரு சராசரி நபருக்கு உண்டான அத்தனை லெளகீகப் பிரச்சினைகளும் சிக்கல்களும் எனக்கு சற்று அதிகமாகவே உண்டு. சமயங்களில் அதிலிருந்து தப்பிக்கவும், இளைப்பாறவுமே இங்கே எழுதுகிறேன். இங்கயும் வந்து டென்ஷன் பண்ணாதீங்க.


***


இது விதண்டாவாதம் என்று நினைக்காமல் இதனுள் உள்ள ஒரு பக்க அல்லது ஒரு பகுதி நியாயத்தை சரியான தொனியில் நண்பர்கள் அணுக வேண்டும் என வேண்டுகிறேன்.

'வாக்களிக்க பணம் பெற வேண்டாம்' என்று தேர்தல் ஆணையம் தொடர் பிரச்சாரம் செய்து வருகிறது. அறம் சார்ந்து இது சரிதான். இது எல்லோருக்கும் தெரிந்த நடைமுறை நாடகமும் கூட.நிஜத்தில் என்ன நடைபெறுகிறது என்பது நாம் அறிந்ததுதான்.

வாக்களிப்பவர்கள் பணம் வாங்கினால் அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்ய கூடுதல் துணிவு வந்து விடும் என்றும் ஒரு கருத்து சொல்லப்படுகிறது.

ஒரு பேச்சுக்கு இந்த தேர்தலில் வாக்காளர்கள் எவருமே ஒருவர் கூட ஒரு ரூ பணம் வாங்கவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது ஊழல்களே நடைபெறாது என்கிற உத்தரவாதம் ஏதேனும் உள்ளதா?

கோடிக்கணக்கில் வருமான வரி பாக்கி வைத்திருக்கிற பிரபலங்களின் பெயரை வெளிப்படையாக அறிவிக்காமல் அது குறித்து சம்சா தின்று கொண்டே சம்பிரதாயத்திற்கு அது குறித்து பொதுவாக பாராளுமன்றத்தில் விவாதித்து விட்டு,

மாதச்சம்பளம் வாங்கும் மிடில் கிளாஸ் கோயிஞ்சாமிகளை 'வரி கட்டுங்கள்,.வரி கட்டுங்கள்' என்று வருமானவரித் துறை கழுத்தை நெறிப்பதைப் போல,

ஊழல் செய்யாதீர்கள், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் என்று அரசியல்வாதிகளுக்கு உபதேசம் செய்யாத தேர்தல் ஆணையமும் இன்னபிற அமைப்புகளும் அடித்தட்டு மக்களிடம் போய் 'வாக்களிக்க பணம் வாங்காதீர்கள்' என்று மேட்டிமைத்தனத்துடன் உபதேசிப்பது எவ்வகையான அறம்?


***

கருணாநிதி அராஜகமாக கைது செய்யப்பட்ட செய்தி அறிந்த அந்த விடியற்காலை நேரத்தில் திமுக காரர்களுக்கு நிகராக ஏன் அதற்கு அதிகமாகவும் கூட கொதித்துப் போனவன் நான். தன்னிச்சையாக என் வாயில் இருந்து ஆபாச சொற்கள் வந்து விழுந்தன.

ஆனால் அந்த வீடியோ இந்த தேர்தல் சமயம் பார்த்து சுற்றுக்கு வருவதில் உள்ள அபத்தமும் அனுதாபக் கோரலும் குமட்ட வைக்கிறது. அப்படியே எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவையும் பதிலுக்கு சுற்றுக்கு விட்டால் பதிலுக்கு சமனாகி விடும்.

நல்லா பண்றீங்கய்யா அரசியல்.

***


'டைம்டேபிள் கணக்கா லஞ்ச் ஒரே மாதிரியே இருக்கே. ஏதாவது மாத்தம் செய்யக்கூடாதா?' -ன்னு வீட்டம்மணி கிட்ட கொஞ்ச நாளா புலம்பிட்டு இருந்தேன்.

இன்னிக்கு மாத்தம் தெளிவா இருந்தது.

லஞ்ச் டப்பா அடியில், ஒருவேளை சாம்பார், குழம்பு கசிஞ்சு கொட்டினா கறையாகம இருக்கிறதுக்காக ஒரு கறுப்பு கவர் இருக்கும். ரொம்ப நாளா இருந்தது.

இன்னிக்கு அந்த கவர் பிங்க் கலர்ல மாறியிருந்தது.

மாற்றம் - முன்னேற்றம் - கவுண்டமணி..


***


ஜெயமோகன் எழுதிய இந்தப் பதிவின் மையக்கருத்து மிக முக்கியமானது. குறிப்பாக இலக்கிய, சினிமாக் கனவுடன் தங்களின் சொந்தக்கால்களை நழுவ விட்டுக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு.

என் இளம் வயதில் ஒரு பத்திரிகையாளனாக அல்லது சினிமா இயக்குநராக அல்லது அதில் பணிபுரிவனாக இருக்கும் பெரும் கனவு இருந்தது. அந்தக் கனவுகளை அடைவதில் உள்ள நடைமுறைச்சிக்கல்கள் குறித்த யூகமும் கூடவே இருந்தது. எனவே வீட்டின் வறுமை காரணமாக கிடைத்த பணியில் சேர்ந்தேன். லாட்டரிச் சீட்டு விற்பவனாக, பை தைக்கும் கடையில் கத்தரிக்கோலால் மண்டையில் அடி வாங்கிய உதவியாளனாக , பைண்டிங் கடை, மருந்துக் கடை என்று உதிரி மனிதர்களின் அத்தனை பணிகளையும் செய்திருக்கிறேன்.

சமயங்களில் அந்தக் கனவுகளின் வெம்மை என்னை சுட்டெரித்துக் கொண்டே இருக்கும். கருகி கருகி சாவேன். ஆனால் அப்போது எடுத்த யதார்த்தமான முடிவு எத்தனை சரியானது என்று ஒரு கட்டத்தில் உணர்ந்தேன். பிறகு அந்த அதிருப்தி மெல்ல சரியாற்று.

கடந்த வருடத்தில் கூட ஒரு பெரிய இயக்குநருக்கு உதவி இயக்குநராகவும் வாய்ப்பு தேடி வந்தது. சினிமா ஆர்வமுள்ள இளைஞர்கள் கனவு காணும் இடம் அது. ஆனால் நான் உறுதியாக மறுத்து விட்டேன். அதற்குப் பின்னால் இருக்கும் நிலையின்மையை என்னால் துல்லியமாக யூகிக்க முடிந்தது. ஒருவேளை என் குடும்ப பின்னணி சற்று வளமாக இருந்திருந்தால் கூட என் கனவுகளைத் தேடி பறந்திருப்பேன். அவ்வாறு இல்லை.

என்றாலும் இப்போது அது குறித்து பெரிதாக எந்த வருத்தமும் இல்லை. ஆனால் மெல்லிய ஏக்கமும் அது சார்ந்த துக்கமும் உள்ளுக்குள் அலையடிக்கும். அடுத்த மாதத்திற்கான செலவு குறித்து யோசித்தால் அலை திரும்பிப் போகும்.

'பிளாட்பாரத்துல படுத்து தூங்கியிருக்கேன்' என்று வெற்றியடைந்தவர்களின் நேர்காணலில் உள்ள பெருமிதங்களைப் பார்த்து பிளாட்பாரத்தில் தூங்க பல இளைஞர்கள் துணிவுடன் கிளம்புகிறார்கள். பிறகு லாட்டரி அடித்து விடும் என்கிற கற்பனையுடன்.

ஆனால் வெற்றியடைந்தவர்களின் சதவீதம் எத்தனை என்பதையும எண்ணிப் பார்க்க வேண்டும். பல வருடங்களாகியும் பிளாட்பாரத்திலேயே தூங்குபவர்கள்தான் அதிக எண்ணிக்கை.

லெளகீக தளத்தில் ஒரு காலை அழுத்தமாக ஊன்றி நின்றபடிதான் உங்கள் கனவுகளுக்காக அடுத்த காலை எடுத்து வைக்கலாம். பறவையின் சிறகுகள் போல.

ஒற்றை சிறகின் மூலம் மட்டுமே உங்கள் கனவுகளை நோக்கி பறக்க முடியும் என்பது ஒருவகையான துயரம்தான் என்றாலும் அதுதான் யதார்த்தமும் கூட.

இந்த அற்புதமான விஷயத்தை இந்த ஒற்றைப் பதிவின் மூலம், கவிஞர் விக்ரமாதித்யன் மூலம் பதிவாக்கியிருக்கிறார் ஜெயமோகன்.


***


பென்சில் - பார்த்துக் கொண்டிருக்கும் போதே கொரியப் படங்களின் வாசனை அடிக்கிறதே என்று யோசித்தேன். நினைத்தது சரி. 4th period mystery படத்தின் ரீமேக் என்கிறது விக்கி.

இயக்கியவர் கெளதம் வாசுதேவனிடம் உதவி இயக்குநராக இருந்தவராம். என்ன சொல்ல?

கொஞ்சம் சகித்துக் கொண்டாலும் முதல் பாதி ஓரளவிற்கு சுவாரசியமாகவே இருக்கிறது. அந்த புத்திசாலித்தனத்தை அப்படியே மெயின்டெயிண் செய்திருந்தாலாவது சற்று தேறியிருக்கும்.

சஸ்பென்ஸ் படங்களின் மிக அடிப்படையான வடிவம். ஒரு கொலை. அதற்கான பல யூகங்களை பார்வையாளர்களிடம் விதைக்கிறார்கள்.இறுதியில் நம் சந்தேக வட்டத்தில் இல்லாத ஒருவர் என்கிற தேய்வழக்கு முடிவு.

நான் கூட ஹீரோவே அந்தக் கொலையை செய்து விட்டு பார்வையாளர்களை குழப்புவதற்காக அவரே துப்பறிவது போல் நடிக்கிறாரோ என்று கூட யோசித்து வைத்திருந்தேன். ம்ஹூம். தமிழ் சினிமா அப்படியெல்லாம் வளரக்கூடாது என்று அடம் பிடிக்கிறார்கள்.

இரண்டாம் பகுதி மகா அபத்தம். 10000 மாணவர்கள் படிக்கிற இண்டர்நேஷனல் ஸ்கூல், ஏதோ பூத் பங்களா மாதிரி காலியாக இருக்கிறது.

தர அடிப்படையில் தம்மை தகுதியானதாக காட்டிக் கொள்வதற்காக 'இங்லீஷ்' ஸ்கூல்கள் செய்யும் தகிடுததங்களை ஒரு நீதியாக சொல்லி படத்தை முடிக்கிறார்கள். அப்பாடா என்றிருக்கிறது.

படத்தின் தலைப்பு பென்சில். அது சீவுவதற்காக உபயோகப்படும் பொருளை தலைப்பாக வைத்திருக்கலாம்.

அது என்னமோ ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் படங்களை பார்க்கும் போதெல்லாம், தலையிலேயே தட்டி 'வீட்ல பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா' என்று சொல்ல வேண்டும் போலவே தோன்றுகிறது.


suresh kannan

Saturday, May 14, 2016

கெட்ட பய சார் இந்த கபாலி!




மே 1  அன்று என்ன ஸ்பெஷல்?  என்று தமிழக இளைஞர்களிடம் பொதுவாக  கேட்டுப் பாருங்கள். 'உழைப்பாளர் தினம்' என்பது கூட அவர்களுக்கு மறந்திருக்கும். 'தலயோட பர்த்டே' என்பார்கள் கோரஸாக.  சமூக வலைத்தளங்களில் அந்த நாளில் 'தலைக்கு் வாழ்த்துகள் பறக்கும். மற்ற ரசிகர்கள் கூட சற்று பம்மி அமர வேண்டிய நாள் அது. ஆனால் இந்த வருடம் அந்த நாளில் இணையத்தில் ஒரு கணிசமான மாற்றம் தெரிந்தது. ரஜினி ரசிகர்கள் அந்த இடத்தை ஆக்ரமித்துக் கொண்டார்கள்.

ஆம். ரஜினிகாந்த் நடித்துக் கொண்டு வரும் 'கபாலி' திரைப்படத்தின் டீஸர் அன்றுதான் வெளியானது. முன்பெல்லாம் ரசிகர்கள் தங்களின் அபிமான நடிகர்களின் பட ரிலீஸ் அன்று பிலிம் சுருள் பெட்டிகளை ஊர்வலமாக எடுத்து வந்து பூஜையெல்லாம் செய்வார்கள். அந்த பரவசம் இன்று அப்படியே இணையத்திற்கு மாறியிருக்கிறது. டீஸர் வெளிவருவதற்கு முன்பேயே அது குறித்த பரபரப்பு உற்சாக தீயாக பரவியது. படிக்கும் காலத்தில் பரிட்சைக்கு எழுந்து படித்திராதவர்கள் கூட ஞாயிறு அன்று காலையிலேயே கணினியிலும் வாட்ச்அப்பிலும்  மொத்தமாக குழுமி விட்டார்கள்.

டீஸர் வெளியான பத்து மணி நேரத்தில் சுமார் 26 லட்சம் பேர் இந்த டீஸரை  பார்த்ததாக ஒரு தகவல் சொல்கிறது. வேறு எந்த இந்திய நடிகருக்கும் இல்லாத வரவேற்பு இது.

 #KabaliTeaser என்ற ஹேஷ் டாக் உடன் இந்த விஷயம் டிவிட்டர் தளத்தில் உடனே டிரைண்டிங் ஆனது.


***

கடந்த சில வருடங்களாக ரஜினிகாந்த்தின் திரை அந்தஸ்து சற்று இறங்குமுகத்தில் சென்று கொண்டிருந்தது. 'கோச்சடையான்' 'லிங்கா' ஆகிய திரைப்படங்களின் சுவாரசியமின்மைதான் காரணம். ரஜினி திரைப்படங்களின் தோல்வியை முன்பு வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாத  அவரது ரசிகர்கள் கூட அந்தச் சமயத்தில்  சோர்வடைந்தார்கள். ஏறத்தாழ 'பாபா' காலத்து நிலைமை. முன்பெல்லாம் ரஜினியைப் பற்றி இணையத்தில் எவரேனும் ஒரு துளி கிண்டலடித்தால் கூட பொறி பறக்கும். ஆனால் அந்த வரிசையில் அவரது ஒருசில ரசிகர்களே கூட இணைந்து கொண்ட அளவிற்கு நிலைமை மோசமாகிப் போயிருந்தது.

ஆனால் அத்தனை சோர்வையும்  அவப்பெயரையும் ஒரு நிமிடத்திற்கும் சற்று கூடுதலாக மட்டுமே ஓடும் இந்த டீஸர் ஒட்டுமொத்தமாக  துடைத்தெறிந்திருக்கிறது. பியர் பாட்டில் பொங்கி வழிவது போல  'தலைவா.. தெறி மாஸ்' 'Emperor is back' என்கிற ரசிகர்களின் உற்சாக கூக்குரல்கள் இணையமெங்கும் பொங்கி வழிகின்றன.

***

அப்படி என்ன இருக்கிறது இந்த டீஸரில்?

நரைத்த தாடியுடன் வயதான கெட்டப்பில் இருந்தாலும் கம்பீரம் எந்த வகையிலும் குறையாத வகையில் கோட், சூட், கூலிங்கிளாஸ் அணிந்த விறுவிறுப்பான ரஜினியைக் காண முடிகிறது. ஹீரோவின் கால்களை அறிமுகப்படுத்தும் வழக்கமான தமிழ் சினிமா பாணியையும் தவறவிடவில்லை.  'நெருப்புடா' என்கிற பாடல் வரியுடன் தெறிக்க வைக்கும் சந்தோஷ் நாராயணின் ரகளையான இசையுடன் ரஜினியின் எண்ட்ரி. காது கிழிய விசிலடிக்கப் போகும் ரசிகர்களின் உற்சாகம் இப்போதே கற்பனையில் கேட்கத் துவங்கி விட்டது. 'நீங்க ஏன் கேங்ஸ்டர் ஆனீங்க?" என்று கூட்டத்தில் எவரோ ஒருவர் கேட்கும் போது தனது டிரேட் மார்க் சிரிப்பை வழங்கும் போது  உற்சாகம் கொப்பளிக்கிறது.

டீஸரின் கடைசி நொடிகளில், எழுபதுகளின் தோற்றத்தில் இருந்த ரஜினியின் கெட்டப்பில், டிசைனர் சட்டையுடனும் கூலிங்கிளாஸூடனும் வழிகிற தலைமுடியை இடது கையால் தள்ளி விட்டுக் கொண்டே இளமையான ரஜினி  வேகமாக கடந்து செல்லும் காட்சியில் ஒவ்வொரு ரசிகனும் உற்சாகத்தின் எல்லைக்கே சென்று விடுகிறான் என்பது உறுதி. 'என்னய்யா. இந்த ஆளு?' என்று நமக்கே சற்று திகைப்பாகி விடுகிறது. அத்தனை அபாரமான Screen Presence.

'வருவேன்.. ஆனால் வரமாட்டேன்' என்று நெடுங்காலமாக காமெடி கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த காரணத்திற்காக ரஜினியின் அரசியல் பிம்பம் முற்றிலும் நகைச்சுவையாகி விட்டாலும் அவரது திரை பிம்பம் இன்னமும் கூட பெரிதும் சேதாரம் ஆகாமல் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை தெளிவாக நிரூபிக்கிறது இந்த டீஸர்.

***

தனது வழமையான பாணியை கைவிட்டு அமிதாப் பச்சன் போன்று தனது வயதுக்கேற்ற பாத்திரங்களில் இளம் இயக்குநர்களின் உருவாக்கத்தில் ரஜினி ஏன் நடிக்கக்கூடாது என்கிற கேள்வி அவரது ரசிகர்கள் உட்பட பலரின் மனதில் பல ஆண்டுகளாக உலவிக் கொண்டிருந்தது. அதை பிரதிபலிக்கும் வகையில் 'அட்டகத்தி' 'மெட்ராஸ்' ஆகிய படங்களை உருவாக்கிய இளம் இயக்குநரான ரஞ்சித் உடன் ரஜினியின் கூட்டணி அமைந்த போது பெரும்பாலோனோர் வரவேற்று மகிழ்ந்தார்கள்.

ரஞ்சித்தின் முதல் இரண்டு திரைப்படங்களிலும் தலித் அரசியல் தொடர்பாக குறியீடுகள் லேசுபாசாக இருந்ததாக பேசப்பட்டதால்  'கபாலி' திரைப்படத்திலும் அப்படிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றனவா என்று ஆர்வக்கோளாறுடன் ஒரு குழு இந்த டீஸரில் தேடிக் கொண்டிருக்கிறது. 'ஓரிடத்தில் அம்பேத்கர் படம் மாட்டியிருந்ததே, கவனித்தீர்களா?' என்று பயங்கர ஆர்வத்துடன் ஒரு புலனாய்வுக் கேள்வியை கேட்டார் நண்பரொருவர்.

வெகுசன திரைப்படத்தின் வடிவத்திற்குள் தலித் அரசியலை உறுத்தாத அளவில் கலந்து தருவது ரஞ்சித்தின் பாணியாக சொல்லப்படுகிறது. எனவே அது குறித்தான ஆர்வமும் இந்த திரைப்படத்தின் மீதான தேடலில் அடங்கியுள்ளது.

பொதுவாக மிகச் சுருக்கமான காட்சிகளோடு உருவாக்கப்படுவதே டீஸர்களின் பாணி. அதில் நீளமான வசனங்கள் இடம்பெறாது. கண்ணிமைப்பதற்குள் காட்சிகள் மாறிக் கொண்டே பார்வையாளனுக்குள் பரபரப்பையும் ஆர்வத்தையும் கொட்ட வேண்டும் என்பதே டீஸர்களின் பொதுவான விதி.. ஆனால் அதை உடைக்கும் வகையாக ரஜினி பேசும் ஒரு நீண்ட வசனம் இதில் இடம் பெற்றிருக்கிறது. மற்றவர்களின் திரைப்படங்களாக இருந்தால் ஒருவேளை சுவாரசியமற்றதாக போயிருக்க வேண்டிய விஷயத்தை ஹைலைட்டாக மாற்றியிருப்பது ரஜனிக்கேயுரிய 'கரிஸ்மா'வின் விளைவு.

"பழைய நம்பியார் படங்கள்ல அவர் கையைக் கசக்கிக்கிட்டே 'டேய் கபாலி' ன்னு கூப்பிட்டவுடனே 'சொல்லுங்க எஜமான்..'ன்னு வருவானே.. அந்த கபாலி -ன்னு நெனச்சியா.. கபாலி.... டா... என்று ரஜினி தனக்கேயுரிய மேனரிஸத்துடன் சொல்வது அள்ளுகிறது. தமிழ் திரை மட்டுமல்லாமல் பொதுவாகவே  கபாலி என்பது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு ரவுடியின் அடையாளத்துடனேயே அதுவரை உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. அந்த பழமையான மரபை இத்திரைப்படம் உடைக்கும், அதற்கான அரசியல் அடையாளம்தான் அந்த வசனம் என்கிறார்கள்.

இறுதி நொடியில் ரஜினி சொல்லும் 'மகிழ்ச்சி' என்கிற சொல் உடனே இணையத்தில் டிரெண்ட் ஆகி விட்டது. 'எங்க பெரியப்பா செத்து போயிட்டாருங்க' என்று ஒருவர்  வருத்தமான ஸ்டேட்டஸ் போட்டாலும் கூட அதை சரியாக கவனிக்காமல் 'மகிழ்ச்சி' என்று கமெண்ட் போடுகிற ரீதியில் ரசிகர்கள் தாறுமாறான கொலைவெறி உற்சாகத்துடன் குதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 டீஸரில் வரும் காட்சிகள் புகைப்படங்களாகவும் துண்டு காட்சிகளாகவும் மாற்றப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.

'இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், ஒரு காட்சியில் வரும் ராதிகா ஆப்தே என்ன அழகு பார்த்தீங்களா" என்று ஓரு கூட்டம் தனியாக 'ஜொள்ளிக்' கொண்டிருக்கிறது.


இது வழக்கமான ரஜினி படமா, அல்லது அதுவும் கலந்த ரஞ்சித் தின் பிரத்யேக பாணியில் உருவாகும் அரசியல் படமா என்பது வெளிவந்தவுடன் தெரிந்து விடும்.

எது எப்படியோ,  நழுவிப் போய்க் கொண்டிருந்த ரஜினியின் சூப்பர் ஸ்டார் கிரீடமானது இந்த அபாரமான வரவேற்பின் மூலம் அவர் தலையிலேயே மறுபடியும் அழுத்தமாக பொருத்தப்பட்டு விட்டது என்பதுதான் இந்த டீஸரின் உற்சாக எதிர்வினைகளின் மூலம் உணரப்படும் நீதி. பல திரையுலக பிரமுகர்களும் இந்த டீஸரை 'மகிழ்ச்சி'யுடன் வரவேற்றிருக்கிறார்கள்.


***

இந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாக ஒரு செய்தியைப் பார்த்தேன்.

 'இந்த டீஸரை இணையத்தில் பார்த்து அதன் எண்ணிக்கை சாதனையைக் கூட்ட வேண்டாம். எனவே இதை பார்க்காதீர்கள். அது நம்முடைய நடிகரின் சாதனையை மீறிப் போய் விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று இன்னொரு நடிகரின் ரசிகர்கள் தங்களுக்குள் ரகசியமாக செய்தி பரப்பிக் கொள்கிறார்களாம். ஒரு தமிழ்  திரைப்படத்தின் நகைச்சுவைக் காட்சியில் வடிவேலு 'டுபாக்கூர் வாக்கி டாக்கி'  ஒன்றின் மூலம் ஓவர் ஓவர் என்று தனது  தேறாத அல்லக்கை ஆட்களிடம் சதித்திட்டங்களைப் பற்றி பேசுவதுதான் நினைவிற்கு வருகிறது.

இருந்தாலும்  டீஸரின் பார்வையாளர்கள் எண்ணிக்கை இந்த நொடி வரை கூடிக் கொண்டே போவதுதான் மேட்டர்.

யார் கிட்ட... கபாலிடா..! மகிழ்ச்சிடா!

(08.05.2016 தேதியிட்ட குமுதம் வார இதழில் வெளியானது: நன்றி குமுதம்)

suresh kannan

Sunday, May 08, 2016

முகநூல் குறிப்புகள் - 2

ஒரு திரையிசைப் பாடலில் பிரமித்து விட்டால் தேனில் விழுந்த ஈ மாதிரி அதிலேயே மூழ்கி சிக்கி கிடப்பது என் வழக்கம். வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த பைத்திய நிலை தெரியும் என்பதால் அவ்வளவாக கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற தேவையில்லாத நெருடல் உள்ளுக்குள் ஓடும். தேய்ந்த ரிகார்டரில் பாடலின் ஒரு வரி திரும்பத் திரும்ப ஓடினால் அது நுட்பக் கோளாறின் விளைவு. ஆனால் ஓரு பாடலே திரும்பத் திரும்ப ஓடினால் என்ன கோளாறு?

இன்று காலைல அப்படியொரு தேன் குடத்தில் விழுந்தேன்

.. 'மன்னவன் வந்தானடி' கே.வி.மகாதேவன் சுசிலா கூட்டணியில் உருவான இந்தப் பாடலை ஒரு தேசிய சாதனை என்று தயங்காமல் அறிவித்து விடலாம். இதுவரையான இந்திய திரையிசைப்பாடல்களில் ஆகச்சிறந்த நூறை தேர்வு செய்தால் அதில் இந்தப் பாடல் நிச்சயம் இடம் பெறும். பெறாவிட்டால் தேர்வாளரை வீடு தேடிப் போய் உதைக்கலாம்.

மகாதேவனின் ரகளையான கம்போஷிஷனை நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது. எத்தனை வாத்தியங்கள்? ... எத்தனை அற்புதமான மெட்டு, அதில் எத்தனை வேறுபாடுகள்?.. அத்தனையையும் ஒரு நேர்க்கோட்டு கலவையில் இணைத்து நிறுத்துவதற்கு எத்தனை கலை மேதமை இருக்க வேண்டும்?

ஆனால் அதை விடவும் என்னை பிரமிக்க வைத்தது சுசிலா.. அவர் பாடியுள்ள தெளிவையும் அதிலுள்ள ஏற்ற இறக்கங்களையும் அதன் நுண்மைகளையும் வேறுபாடுகளையும் கவனித்துப் பாருங்கள். ஒரே வார்த்தைதான்.. பிரமிப்பு.

எனக்கு முறையான இசை ஞானமெல்லாம் கிடையாது.. அப்படியே கேட்டு கேட்டு என்னளவில் உள்ளுணர்வின் உந்துதலில் அதன் ரசனையில் உணர்வதுதான். பொதுவாகவே சுசிலாவின் பாடல்களை ரசிப்பதற்கு நான் ஒரு குறுக்கு வழி கண்டுபிடித்துள்ளேன். அது..

சுசிலாவின் குரலை ஒரு வாகனமாக கற்பனை செய்து கொள்ள வேண்டும். கண்களை இறுக்க மூடிக் கொண்டு அந்த வாகனத்தில் ஏறி அமர்ந்து கொள்ள வேண்டியதுதான். இப்போது மனக்காதால் அந்த வாகனத்தின் ஒவ்வோரு அசைவையும் அலட்சியமாக கடக்காமல் முழுக்கவனத்துடன் அதில் பயணம் செய்யுங்கள். . ஜாக்கிரதை... வாகனத்தின் அபாரமான ஏற்ற இறக்கத்தில் தவறி எங்கேனும் விழுந்து விட வாய்ப்புண்டு. இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள். அந்த வாகனத்தை மனதால் முழு கவனக்குவிப்புடன் தொடர்ந்து சென்று கொண்டேயிருங்கள்..

இப்போது அந்த வகையில் இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள். ஒரு ரோலர் கோஸ்டர் இயந்திரத்தில் ஏறி அமர்ந்த சாகச விளையாட்டின் படபடப்பும் கிளுகிளுப்பும் உற்சாகமும் உங்களுக்கு ஏற்படும். குறிப்பாக இந்தப் பாடலில் ஓர் இசை ரகளையையே நிகழ்த்தி விடுகிறார் சுசிலா..

ஒருபுறம் வேகமாக மோதும் தென்றல் காற்று போல அவர் முழங்கிக் கொண்டிருக்க இன்னொரு புறம் இடி முழக்கம் போல் ஜதி சொல்பவர் எதிரொலிக்க, வாத்தியங்கள் அதன் ஒத்திசைவோடு மாயாஜாலம் செய்ய..

இந்த அனுபவத்தை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. சற்று நினைத்துப் பாருங்கள். இப்போது போல இடையில் சற்று மூச்சு வாங்கிக் கொண்டு பின்பு டிராக்கில் நுட்பத்தின் மூலம் ஒப்பேற்றும் பம்மாத்து வேலையெல்லாம் அப்போது கிடையாது. லைவ் ரிகார்டிங்கில் எந்தப் பிசிறும் இல்லாமல் எல்லோரும் ஒரே விசையின் எதிரொலி போல ஒத்துழைக்க வேண்டும்.

ஏறத்தாழ இருபத்தைந்தாவது தடவையில் பாடல் முடிந்த போது சுசீலாவிடம் செல்லமான பிரியத்துடன் இப்படித்தான் கேட்கத் தோன்றியது.

"சண்டாளி. எப்படிடி பாடினே?"




***

"முன்பெல்லாம் நகைச்சுவைப் படங்கள் என்ற லேபிளில் வரும் so called காமெடிப் படங்களிடம்.. "டேய் .. கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க. சிரிக்க வெக்க முடியலைன்னா விட்டுடுங்கடா" என்று கெஞ்ச வேண்டி வரும்.

இப்போதைய டிரெண்டின் படி வரும் பேய் படங்களில் "டேய் சிரிக்க வெக்காதீங்கடா.. சீக்கிரமா பயமுறுத்தி தொலைங்கடா.. டயமாவுது.. கிளம்பணும். சந்தைக்குப் போணும்.. ஆத்தா வையும்.." என்று பயங்கரமாக கெஞ்ச வேண்டியிருக்கிறது."

***

'ரஷோமான்' 'செவன் சாமுராய்'' என்று அகிரா குரசேவாவின் சில குறிப்பிட்ட திரைப்படங்களே தமிழ் சூழலில் அதிகம் உரையாடப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் அவருடைய சிறந்த திரைப்படங்களுள் ஒன்றான ' Stray Dog' பற்றிய என்னுடைய கட்டுரை, உயிர்மை மே 2016 இதழில் வெளியாகியுள்ளது.

நண்பர்களின் கவனத்திற்கு.

***
எழுத்தாளர் அமுதவன் எழுதிய 'என்றென்றும் சுஜாதா' என்ற நூலை சமீபததில் வாசித்தேன். சற்று பழைய நூல்தான். இருந்தாலு்ம் ஏன் இந்த நூல் இத்தனை நாட்களாக என் கண்ணில் படவில்லை என்று என்னையே நொந்து கொள்ளுமளவிற்கு சுஜாதாவைப் பற்றிய அத்தனை சுவாரசியமான தகவல்கள்.

சுஜாதாவின் பெங்களூரு வாசத்தின் போது அமுதவன் நீண்ட வருடங்களாக அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர். தன்னை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு சுஜாதாவுடனான முதற் சந்திப்பு, தேசலான எண்ணிக்கையுடன் அமைந்த முதல் இலக்கியக் கூட்டம் என்று தன்னுடைய பிரத்யேகமான பல அனுபவங்களை இந்த நூலில் விவரித்துள்ளார்.

பல சம்பவங்கள் வருடங்கள் கடந்தவை என்றாலும் அதை நினைவிலிருந்து மிக நுட்பமாக விவரித்துச் செல்லும் அமுதவனின் நினைவாற்றல் பிரமிக்க வைக்கிறது. சுஜாதா ஒரு திரைப்படத்தில் நடிக்க நேர்ந்த சம்பவம், ஒரு திரைப்படத்தை இயக்க சுஜாதாவிற்கு வந்த வலுக்கட்டாயமான வாய்ப்பு, குமுதம் தொடர்கதைக்கு வந்த வன்முறை மிரட்டல், எழுத்தாளர் இரவிச்சந்திரன் ஏற்படுத்திய நெருடல் உள்ளிட்ட பல சுவாரசியமான சம்பவங்கள். அமுதவனின் மேல் பொறாமையே ஏற்படுகிறது. சுஜாதாவுடன் அத்தனை நெருக்கமாக இருந்துள்ளார்.

இவ்வாறான நூல் ஒன்றை ஏறத்தாழ அது போன்ற அனுபவங்களைப் பெற்றிருக்கக்கூடிய நண்பர் தேசிகன் எழுத வேண்டும் என்பது என் கோரிக்கை.


***




டெல்லி கணேஷ் எனக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவர். நகைச்சுவை நாடக பின்னணியிலிருந்து வந்ததால் அது குறித்த கோணங்கித்தனங்கள், செயற்கைத்தனங்கள் சமயங்களில் இருந்தாலும் சரியான உபயோகித்தால் பிரகாசிக்கக்கூடிய நடிகர். சிந்து பைரவி, மைக்கேல் மதன காமராஜன் என்று நிறைய உதாரணங்களை சொல்லலாம்.

அவர் தற்போது தம்முடைய மகனை வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'என்னுள் ஆயிரம்' என்பது அதன் தலைப்பு. எவராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இதற்காக சுமார் மூன்று கோடி செலவு செய்ததாகவும் வெறுமனே மூன்று லட்சம் மட்டுமே திரும்பி வந்ததாகவும் அவர் வருத்தப்பட்டு சொல்லியதாக ஒரு செய்தி கூட வாசித்தேன். திரையிட தியேட்டர்களே கிடைக்காத விஷயத்தையும் அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் கூட சொல்லியிருந்தார். அப்பாவியான தான் ஏமாந்து போனேன் என்கிற புலம்பலும் அதில் இருந்தது.

திரைப்படத் துறையில் இத்தனை ஆண்டுகள் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதரால் ஒரு திரைப்படத்தை உருவாக்கி வெளியிடுவதில் உள்ள சிக்கல்களைப் பற்றி அவர் அறியவேயில்லையா என்று ஆச்சரியமாக இருந்தது. மேலும் சொந்தமாக திரைப்படம் எடுத்து சீரழிந்த பல முன்னோடி நடிகர்களைப் பற்றிய தகவல்களை வைத்தாவது அவர் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டுமே எனவும் தோன்றியது.

இதெல்லாம் சினிமாவிற்கு வெளியில் உள்ள புறத்தகவல்கள்.

()

இப்போது சினிமாவிற்குள் வருவோம். 'என்னுள் ஆயிரம்' என்கிற அந்த திரைப்படத்தைப் பார்த்தேன். எது அழகு என்கிற தத்துவத்திற்குள்ளும் அரசியல்சரிநிலைக்குள்ளும் செல்லத் தேவையில்லை எனும் பட்சத்தில். மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய முகவெட்டு இருப்பவர்தான் ஒரு பிரதான நடிகராக வெற்றிகரமாக தொடர முடியும் என்பது ஒரு நடைமுறை விதி.

'பார்க்க பார்கத்தான் பிடிக்கும்'' என்கிற தத்துவார்த்தப்படி டெல்லி கணேஷ் யோசித்தாரா, அல்லது பல திரைப்படங்களை செலவு செய்து விஜய் முகத்தை தொடர்ந்து காட்டி அவரை தமிழக மக்கள் வலுக்கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வைத்த எஸ்.ஏ.சந்திரசேகரை தன்னுடைய முன்னோடியாக டெல்லி கணேஷ் நினைத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை.

நாயகன் மகா, சுமாராகத்தான் இருக்கிறார்.

நடுத்தரவர்க்க தகப்பன் ஒருவன் பல சிரமங்களுக்கு இடையில் தம் மகனுக்கு ஒரு பைக் வாங்கித் தருவது மாதிரி தம் மகனை வைத்து ஒரு திரைப்படத்திற்காக மூன்று கோடி செலவு செய்ய முன்வந்தது கூட பிரச்சினையில்லை. ஒருவாறு சகித்துக் கொண்டு விடலாம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அது அவர் பிரச்சினையும் கூட.

()

ஆனால் இந்த திரைப்படம் ஓடவில்லையே என்று வருந்துவதற்கு ஒரு சுக்கு காரணம் கூட இல்லை. அந்தளவிற்கு பிச்சைக்காரன் வாந்தியெடுத்தது போல குழப்பமான திரைக்கதை..மிக மந்தமானதும் கூட. எரிச்சலூட்டும் வகையில் பாடல்களின் தருணங்கள்.

பார்வையாளர்களை கணக்கிலேயே கொள்ளாமல் 'நான் எடுத்துதான் படம்' என்று திரைக்கதை அது பாட்டிற்கு இஷ்டத்திற்கு எங்கெங்கோ சுற்றுகிறது. ஒரு நல்ல திரைக்கதை என்பது பார்வையாளனின் உணர்வுடன் முதலிலேயே இறுக்கமாக பொருந்தி விட வேண்டும். பிரதான பாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளனும் பிரதிபலிக்க வேண்டும். 'செத்தவன் கையில் வெத்தலை பாக்கு தந்தது மாதிரி' மொண்ணையான ஒரு திரைக்கதையை உருவாக்கி விட்டு..

இறுதிப் பிரதியை இயக்குநர் உள்ளிட்ட மற்றவர்களாவது பார்த்தார்களா என சநதேகமாக இருக்கிறது.

ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில், அறிமுக நாயகன் என்பதற்காக ஓவர் பில்டப் எல்லாம் தரவில்லை. கூடுதலாக நாயகத்தன்மை அழிக்கப்பட்டு அந்த இளைஞன் வயது முதிர்ந்த இல்லத்தரசி ஒருவருடன் அசந்தர்ப்பமான சூழலில் பாலுறுவு கொள்கிறான் என்பதையெல்லாம் கூட சித்தரிக்கத் துணிந்ததற்காக சபாஷ் சொல்லலாம். இளைஞனின் காதலியும் இந்தப் பெண்ணும் ஒரே இடத்தில் இருக்கும் ஏற்படும் சிக்கல்களையாவது சுவாரசியமாக நீட்டித்திருக்க வேண்டாமா? அவரையும் மறுகாட்சியிலேயே சாகடித்தாகி விட்டது. பின்பு எப்படி திரைக்கதை உயிரோடு இருக்கும்?

மூன்று கோடியை செலவு செ்யத தயாரிப்பாளர் டெல்லி கணேஷ், திறமையான எத்தனையோ இளம் இயக்குநர்களையும் திரைக்கதையையும் நடிகர்களையும் நம்பியிருக்கலாம். ஆற்றில் கொட்டுவது பாசத்தில் கண்ணை மூடி பணத்தை இறைத்து விட்டு பின்பு வருந்துவதில் என்ன பலன் இருக்கிறது?


***


எங்கள் பகுதியின் பாஜக வேட்பாளர் காவி நிறம் கமழ, அடல்பிகாரி வாஜ்பாய், உத்தமத் தலைவன் மோடி போன்ற வாசகங்கள் இறைபட வாக்கு கேட்டுச் சென்றார். கூடவே பத்து பதினைந்து வாடகை இளைஞர்கள், பைக்குடன். நாளைக்கு ரூ.300, பெட்ரோல் 50, பிரியாணியாம்.

பாஜக என்பதால் வெஜிடபிள் பிரியாணிதான் தருவார்கள் என நினைக்கிறேன்.


***

கபாலி டீஸர் பற்றி எழுதிய கட்டுரை - குமுதம்.



***


குமுதத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் உலக சினிமா தொடர் பற்றிய அறிவிப்பு.



***


அவசரக் குடுக்கையாக பல வருடங்களுக்கு முன்பே ஒரு முன்னோடியான திரைப்படத்தை எடுத்து விடுவது கமலின் கெட்ட வழக்கங்களில் ஒன்று. அப்படியொரு திரைப்படம் ராஜபார்வை. அதிபராக்கிரம புஜபலசாலிகளே நாயகர்களாக கர்ஜித்துக் கொண்டிருந்த போது (அதில் கமலும் ஒருவர் என்பது முரண்நகை) கண்ணு தெரியாத ஒருத்தன்தான் ஹீரொன்னா யார் சார் ஒத்துக்குவாங்க? அதான் தமிழ்நாட்டு ஜனங்க விவரமா படத்தை தோற்கடிச்சாங்க. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

சரி. நான் சொல்ல வந்தது ஒரு குறிப்பிட்ட பாடலைப் பற்றி. அந்திமழை பொழிகிறது.

இதை விடவும் அதிகம் பிடித்தது பரவலாக கவனிக்கப்படாத 'விழியோரத்துக் கனவும் வந்து' பாடல். அதிலுள்ள காவிய சோகம் தமிழ் திரையிசையின் மகத்தான பதிவுகளில் ஒன்று.

அந்திமழைக்கு வருவோம். சில பாடல்களை அதன் வீடியோவோடு தைரியமாக பார்க்கலாம். அப்படியொன்று இது. இந்தப் பாடலுக்கு முன்னால் ஒரு பகுதி வரும். பார்வையற்றோர் பள்ளியில் அந்த மாணவர்களுடன் இணைந்து கமலும் நின்று கொண்டு பாடும் பாட்டு.

நான் இளம் வயதில் முதன்முறையாக அந்தப் பகுதியை பார்க்கும் போது அப்படி நெகிழ்ந்து போனேன். அதில் கவனியுங்கள். ஹீரோவை தனியாக சித்தரிக்காமல் அந்தக் கூட்டத்தில் ஒருவராய் காட்டுவார்கள். அதுவரை குருட்டு கதாபாத்திரம் என்றால் கூலிங்கிளாஸ் போட்டு மழுப்பி தள்ளாடி நடந்து சொதப்பி பரிதாபத்தை சேகரித்துக் கொண்டு என்கிற பிஸினெஸ் எல்லாம் இல்லாமல் கண்ணாடியணியாமலேயே ஒரு கண்பார்வையற்றவரின் உடல்மொழியை கச்சிதமாக முயன்ற கமலுக்கு ஒரு கைத்தட்டலை தருவோம் நண்பர்களே...

எனவே இந்தப் பாடலை அதன் தொடக்கத்தோடுதான் கவனிக்க வேண்டும். பார்வையற்ற பிள்ளைகளோடு தன் காதலனும் பாடும் பாட்டை நெகிழ்ச்சியுடன் கவனித்துக் கொண்டிருக்கும் நாயகியிடமிருந்து காமிரா tilt up ஆகி உயிரைப் பிசைந்து தொலைக்கும் ராஜாவின் அற்புதமான ஹம்மிங்கோடு மரங்களின் இடையில் பயணிக்கும்.

மாண்டேஜ் வகை பாடல்களை அதுவரை பாலுமகேந்திராவே அற்புதமாக தமிழிற்கு அறிமுகப்படுத்தியிருக்க, அந்த வகையில் இதுவொரு அற்புதமான மாண்டேஜ். அது வழக்கமான டூயட்டாக இருந்தாலும் அதை சுவாரசியப்படுத்த தன்னால் என்ன முடியுமோ அதையெல்லாம் செய்வார் கமல். இதிலும் கவனியுங்கள்.

ஒரு நிலையான சித்திரம் மெல்ல மெல்ல தெளிவாகி பின்பு சலனக் காட்சிக்கு நகரும் அந்த அற்புதத்தை நுட்பம் வளர்ந்த பிறகான படத்தில் கூட பார்த்திருக்கிறீர்களா?

கண்பார்வையற்ற பாவனையில் மாதவி நடந்து செல்ல கமல் தடுமாறி அவரை அழைத்துச் செல்லும் அந்தக் காட்சியிலுள்ள பரிகாசத்தை என்ன என்பீர்கள்?

இந்த ஒரேயொரு பாடலுக்காகவே இந்தப் படம் பிய்த்துக் கொண்டு ஓடியிருக்க வேண்டுமே? தோற்கடித்து விட்டீர்களே ஐயா..

இளையராஜா + வைரமுத்துவின் பிரிவிற்கு அவரவர்களின் தனிப்பட்ட காரணங்கள் இருந்தாலும் அதற்கான உரிமையும் நியாயமும் இருந்தாலும் அந்தப் பிரிவு பிறகான திரையிசையை பாலைவனமாக்கியிருக்கிறதே, அது வரலாற்றுத் துரோகம் இல்லையா கலைஞர்களே... காலம் உங்களை மன்னிக்குமா என்ன?



***
 
சக்தி செளந்தர்ராஜன் இயக்கிய 'மிருதன்' திரைப்படம் பார்த்தேன். 'நாணயம்' 'நாய்கள் ஜாக்கிரதை' என்று அவரது முந்தைய திரைப்படங்களின் வரிசையைப் பார்க்கும் போது அவர் திரில்லர் ஜானர்களில் படமெடுக்கும் ஆர்வமுடையவர் என்று தெரிகிறது. அந்த ஆர்வம் மிருதனில் சற்று முன்னேறி சுவாரசியமாகியிருக்கிறது எனலாம். வாழ்த்துகள் அவருக்கு.

தமிழ் திரைப்படங்களை அந்த சூழலில் மற்ற தமிழ் திரைப்படங்களுடன் மட்டுமே ஒப்பிட முடியும் என்கிற ஆதாரமான நோக்கில் மிருதன் சமீபத்திய திரைப்படங்களோடு பார்க்கும் போது எவ்வளவோ தேவலை. பரபரப்பான காட்சிகளின் இடையே தமிழ் சினிமா மரபு படி கட் செய்து ஜெயம் ரவிக்கும் லட்சுமி மேனனுக்கும் ஒரு டூயட்டை செருகி எரிச்சலடைய வைப்பாரோ என்று பயந்து கொண்டே இருந்தேன். அப்படி செய்யவில்லை. படத்திலுள்ள நம்பகத்தன்மை, தர்க்கப்பிழைகள் உள்ளிட்ட பலவற்றைத் தாண்டியும் ஹாலிவுட் பாணியில் அந்த பரபரப்பை இடையறாமல் தொடரச் செய்வதில் இயக்குநரின் ரசனையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் அந்த தீவிரத்தை மட்டுப்படுத்தும் அசட்டுத்தனமான நகைச்சுவைகள் தமிழ் பார்வையாளர்களை மனதில் வைத்து உருவாக்கியவை போல. போலவே சிறுமியை வைத்தான சென்ட்டிமென்ட் காட்சிகளும்.

Zombie களுக்கும் ஒரு விநோதமான ஆபத்தான வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டு உருவாகும் மூர்க்கர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதை எப்படி zombie திரைப்படமென்று விளம்பரித்தார்கள் என்று தெரியவில்லை.

தமிழில் இப்படியொரு ஜானரில் படம் திட்டமிட்டு வெளியாகி அது ஏறத்தாழ சுவாரசியத்துடன் இருக்கிறது என்பதே ஆரோக்கியமான போக்காக இருக்கிறது. இந்த வகையில் சென்றால் ஒரு நீட்டான ஹாலிவுட் திரைக்கதையமைப்பில் தமிழிலும் கூட ஒரு திரைப்படம் உருவாகக்கூடும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது. (ஹாலிவுட்தான் அளவுகோலா என்று கேட்காதீீர்கள்,, ஏறத்தாழ ஆம்).

இமானின் இசையில் வரும் அந்த 'முன்னாள் காதலி்' ராக் பாணியில் ஓர் அட்டகாசமான பாடல். தொண்டைய கிழியும் டெஸிபலில் பாடிய விஷால் தத்லானி அசத்தியிருக்கிறார்.

அரசியல் கூட்டத்திற்கு ஆள் பிடிப்பது போல் இதில் கூட்டம் கூட்டமாக வந்து ஜெயம் ரவியின் துப்பாக்கியினால் சுடப்பட்டு சுடப்பட்டு வீழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். பெரிய பட்ஜெட்படம் போல. இவர்களுக்கும் வெத்தலைபாக்கு போட்ட வாய் மாதிரியான ஒப்பனைக்கே நிறைய செலவாகியிருக்கும். அத்தனை நபர்கள்.

தண்ணீர் பட்டால் இவர்களுக்கு அலர்ஜி என்பது (இந்த வைரஸ் நாயிடமிருந்து பரவுகிறது) ஒரு நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு கோயில் வாசலில் சுண்டலுக்கு நிற்கும் பக்தாஸ் போல என்ன காரணத்தினாலோ மருத்துவமனை வாசலில் திரண்டு நிற்கும் வைரஸ் கனவான்களை தண்ணீர் கொண்டு சமாளிக்கிறார் ஹீரோ. தண்ணீரும் தீர்ந்து போய் விடுகிறது.

"அவர்கள் மேலே எச்சில் துப்பினால் விலகிப் போகும் சாத்தியம் உண்டே" என்றேன் சீரியஸ் கிண்டலாக. "ஆமாப்பா.. எனக்கும் தோணுச்சு. சொல்ல தயக்கமா இருந்தது" என்றாள் மகள்.

என் வீட்டிற்குள்ளேயே ஒரு சஹஹிருதயர் இருக்கிறார் என்பதைக் கண்டு கொண்ட தருணம் அது.


***


வடிவேலு ஊத்தப்பத்திற்காக மெனக்கெட்டு அதன் ரெசிப்பியை கால் மணி நேரத்திற்கு இழுத்து இழுத்து சொல்லியது போல மற்ற கட்சிகள் பிட் அடித்து காப்பி அடித்து கொஞ்சம் சொந்தமாய் யோசித்து வியர்த்து ஒழுக தோ்தல் அறிக்கை தயாரித்து வெளியிட,

அம்மாவோ ஒரே வார்த்தையில் 'மாஸ்டர் ஒரு ஊத்தப்பம்' என்று ஜோலியை சுலபமாய் முடித்து விட்டார்கள்.

"அம்மா .. ன்னு கூப்பிட்டவுடனே சமையற்கட்டிலிருந்து வியர்வையை துடைச்சிக்கிட்டே 'என்னடா கண்ணு வேணும்" னு ஒரு பரிதாபமான உருவம் வருமே.. அந்த அம்மா -ன்னு நெனச்சீங்களா....

அம்மா.... டா.... மகிழ்ச்சிடா...



***


ஒரு போலியான சாதி மறுப்பாளரை கண்டுபிடிப்பதற்கான ஒரு வழி, அவர் பிறந்த சாதி உங்களுக்கு தற்செயலாக தெரிந்திருந்தால் பேச்சின் இடையே அது தொடர்பான கிண்டலையோ, பழமொழியையோ சொல்லி விளையாட்டாக சீண்டிப் பாருங்கள். ஆசாமிக்கு சுர்ரென்று கோபம் வந்து அதை மறைக்க முயன்றோ அல்லது கிண்டலுக்கு ஆவேசமாக எதிர்த்தோ எதிர்வினை புரிந்தால் பூனைக்குட்டி வெற்றிகரமாக வெளியே வந்து விட்டது என்று அர்த்தம்.

நான் பிறக்க நேர்ந்த(கவனிக்கவும்: நேர்ந்த) சாதி அல்லது மதத்தைப் பற்றி எவர் கிண்டலடித்தாலும் அவமதித்தாலும் அது ஒரு துளி கூட என்னைப் பாதிக்காது என்பதை துணிவுடன் என்னால் சொல்ல முடியும். ஏனெனில் மனதளவில் அது சார்ந்த விருப்போ வெறுப்போ எதுவுமில்லாத ஏகாந்த நிலைதான்.

ஒரு பண்பாட்டு அமைப்பு என்கிற அளவில் சாதியின் வரலாற்றுத் தரவுகளை, பின்னணிகளை ஆய்வு நோக்கில் அறிய முயல்வேனே தவிர உணர்வுபூர்வமாக அதனுடன் எனக்கு எவ்வித பிணைப்பும் கிடையாது.

***

தேசிய விருதை மறுத்த இளையராஜாவின் நிலைப்பாடு குறித்து கங்கை அமரன் முன்வைக்கும் ஆவேசமான கருத்துக்களை - ராஜாவின் ரசிகர்களும் - சற்று நிதானமாக யோசித்துப் பார்க்கலாம்.

ராஜாவின் இசை மேதமை குறித்து பொதுவாக எவரும் கேள்வி கேட்கவில்லை. அது நிரூபிக்கப்பட்ட ஒன்று. அவரது கலை சார்ந்த திமிரை கூட யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. அதை வித்யா கர்வம் என்று கூட சகித்துக் கொண்டு விடலாம்.

ஆனால் அந்த மனோபாவத்தை அவர் 'நாயினும் கடையேன்' என்கிற அடக்க தொனியின், ஆன்மிக குரலின் உள்ளாகவே வெளிப்படுத்துகிறார் அல்லவா, அந்த இரட்டை மனநிலையின் போலித்தனத்தைத்தான் ஆரம்பத்திலிருந்து சொல்லி வருகிறாம்; விமர்சித்து வருகிறோம். அதையேதான் கங்கை அமரனும் சொல்கிறார். இதை தாம் சகோதரராக அல்ல, ரசிகனாக சொல்கிறேன் என்று அவர் அழுத்தமாக சொல்வதில் உண்மையும் நேர்மையும் இருக்கிறது.

பாடலுக்காக ஒரு விருதையும் பின்னணி இசைக்காக ஒரு விருதையும் தரும் உலக நடைமுறையை இந்திய தேசிய விருதுக் கமிட்டியும் பின்பற்றுவதில் என்ன தவறு? முழு இசைக்கே தான்தான் அத்தாரிட்டி என்று ராஜா ஏன் நினைத்துக் கொள்ள வேண்டும்? அல்லது அந்த முறை தவறே என்றாலும் கூட ஒரு பெருந்தன்மையொடு, இன்னொரு இசையமைப்பாளருக்கு கிடைக்கும் அங்கீகாரத்திற்காக இந்த விஷயத்தை ஒரு மூத்தவராக சகித்துக் கொண்டு போக முடியாதா?

கங்கை அமரனின் ஆவேசத்தை நிதானமாக கேட்டுப் பாருங்கள்.





***


நண்பர் சொன்னது.:

பின்னணி இசைக்கு விருது தருகிறார்கள் என்றால் பாடல்களுக்கான இசை சரியில்லையா என்ன? என்பது போல் ராஜா புரிந்து கொள்வது விநோதமானது.

திரைப்படங்களில் செயற்கையாக திணிக்கப்படும் பாடல்கள் தேவையா என்கிற விவாதம் நெடுங்காலமாக பேசப் பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் சினிமாவைப் புரிந்த இசையமை்ப்பாளர் அதை பெருமையாகவே கருத மாட்டார். ஆனால் ராஜா இரண்டையும் ஒட்டுமொத்தமாக இணைத்து குழப்பி, குழம்பி 'இது சரின்னா.. அது சரியில்லையா.. கொடுத்தா மொத்தமா குடு' என்று சொல்வது முறையில்லை.

ராஜா ஒரு சில படங்களில் இசையமைப்பாளராக தோன்றியுள்ளார். "ஏன் என் நடிப்பு சரியில்லையா? என்று அந்தப் படங்களின் சிறந்த நடிகருக்கான விருதையும் தாமே கேட்டு அடம் பிடிக்காமலிருப்பது வரை மகிழ்ச்சி.


***


இந்தியத் திரைப்படங்களில் பாடல்கள் தேவையா என்பதே அரதப்பழசான விவாதமாகி விட்ட சூழலில் இன்னமும் நாம் அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டியதே துரதிர்ஷ்டமானது.

கடந்த நிலைத்தகவல் ஒன்றில் நண்பர் சிஎஸ்கே -விற்காக அளித்த பதில் இது.
 
()

பாடல்கள் இந்திய திரைப்படக் கலாசாரத்தின் பிரத்யேகமான ஒரு விஷயம், ஏன் அதை இழக்க வேண்டும் அல்லது தூற்ற வேண்டும் என்பது ஒரு காலக்கட்டம் வரையில் அதுவும் ஒரு நிலையில் வரை சரி. ஏனெனில் முந்தைய காலத்தில் ஒரு திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் காரணியாய் பாடல்களும் இருந்தன. நிறையப் பாடல்கள் இருந்ததை ரசிகர்களும் வரவேற்றார்கள். ஏனெனில் அதுவரையான கூத்து, நாடக வடிவம் அப்படியே திரையில் பெயர்ந்துதான் காரணம். திரைக்கென இருக்கும் பிரத்யேகமான இலக்கணத்தைப் பற்றி எவரும் கவலைப்படவில்லை.

ஆனால் இன்று நிலைமை வேறு. எல்லாக்கதைகளும் சொல்லப்பட்டு விட்ட நிலையில் திரைக்கதையை எப்படி சுவாரசியமாக உருவாக்க வேண்டும் என்பதுதான் இயக்குநர்களின் முன் உள்ள கடுமையான சவால். அதற்காக மண்டையைப் பிய்த்துக் கொள்கிறார்கள். உலக சினிமா மற்றும் ஹாலிவுட் சினிமாக்களின் பரவலான பரிச்சயம் ரசிகர்களின் மனோபாவத்தையும் எதிர்பார்ப்பையும் கூட மாற்றி விட்டது.

பாடல்கள் திரைப்படத்தின் சுவாரசியத்திற்கான தடைக்கற்களாக இருப்பதை இயக்குநர்களும் ரசிகர்களும் பரவலாக உணரும் சூழலில் யாருக்காக அந்த சம்பிதாயத்தை விடாப்பிடியாக தொடர்கிறார்கள் என்பதே புரியவில்லை. சமீீபத்தில் பார்த்த என்னுள் ஆயிரம் திரைக்கதையை இன்னமும் மேம்படுத்தி பல சிக்கல்களை இணைத்திருந்தால் நல்ல வடிவமாக வந்திருக்கக்கூடும். ஆனால் மோசமான, குழப்பமான திரைக்கதையுடன் கூடுதல் சுமையாக பாடல்களும் சலிப்பை அதிகமாக்கின.

ஒரு திரைக்கதையில் நிச்சயம் பாடல் வைக்க வேண்டி இருந்தாலும் திரைக்கதையும் அதை வலுக்கட்டாயமாக கோரினால், அதற்கேற்ற அதன் பின்னணியும் இருந்தால் பாடல் இடம்பெறுவதில் பிரச்சினையில்லை. ஆனால் இந்தியச் சினிமாவில் கிளிஷேவாக ஒரு வலுக்கட்டாயத்துடன் பாடல்கள் இடம் பெற்று வெறுப்பேற்றுகின்றன என்பதை நாம் அனைவருமே உணர்ந்திருக்கிறோம். பிறகு யாரை ஏமாற்றிக் கொள்ள இந்த நாடகம்?

நமக்கு அந்தளவிற்கு இசைப் பற்று இருக்குமேனில் தனி இசை ஆல்பங்களை ஆதரித்து அந்தக் கலாசாரத்தை வளர்க்கலாம்.


***


இணையததின் மூலமாக மட்டுமே அறியப்பட்டஒரு நபரை நேரில் சந்திப்பது என்பது ஒரு விநோதமான அனுபவம். என்னதான் புகைப்படங்களில் பார்த்திருந்தாலும் அதுவரை விர்ச்சுவலாக மட்டுமே வார்த்தைகளால் உணர்வுகளால் அறிந்திருந்த ஆசாமி நேர்சந்திப்பில் எப்படி இருப்பாரோ எப்படி பேசுவாரோ என்கிற ஆவலும் நெருடலும் ஏற்படுவது இயல்பே.

ஆனால் நேர்சந்திப்பில் முதன்முறையாக ஒருவரை சந்திக்கச் செல்வதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசமுள்ளது. ஒரு நபரை அப்போதுதான் முதன்முறையாக சந்திக்கச் செல்கிறீர்கள் என்றால் அவரது விருப்பு, வெறுப்புகளை அறிய சில நாட்களாவது ஆகும்; மேலும் சில சந்திப்புகள் தேவைப்படும். ஆனால் இணைய நட்பு அப்படியல்ல. அவரது உணர்வுகளை ஆசாபாசாங்களை இணையப் பரிமாற்றங்களின் நீங்கள் ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள் என்பதால், ஆசாமி நேரில் எப்படியிருப்பார் என்று உருவம் சார்ந்து நீங்கள் கற்பனை செய்திருந்த ஒற்றுமை, வேற்றுமைகளைத் தவிர, அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே நீங்கள் அவருடன் சற்று நெருக்கமாகவே பேச முடியும்.

நண்பர் தெஷிணாமூர்த்தி காமாஷிசுந்தர் என்னை நேரில் சந்திக்க பிரியப்பட்டிருந்தார். இரண்டொரு முறை கேட்டிருந்தார். பணிச்சுமை காரணமாக என்னால் செல்ல இயலவில்லை. (உண்மையாகவே) அவருக்கு சற்று வருத்தம் ஏற்பட்டது. எனக்கும். எனவே இந்த முறை நேரம் தேதி எல்லாம் கச்சிதமாக குறித்து வைத்துக் கொண்டு சந்தித்தோம்.

ஏன் நம்மை நேரில் சந்திக்க நினைக்கிறார், ஒருவேளை இளையராஜாவின் பரம ரசிகராக இருந்து, 'இவனை ஒரு சாத்து சாத்தினால் என்ன? என்று நினைத்துக் கொண்டு நேரில் சென்றவுடன் 'டேய் ராமானுஜம்... இவனைக் கவனிடா' என்பாரோ. (கபாலிதான் பிரமோஷன் ஆகி விட்டாரே) நாம் அந்தளவிற்கெல்லாம் ஒர்த்தே கிடையாதே என்கிற விபரீத கற்பனையெல்லாம் தோன்றியது.

அவருடைய ஃபுரொபைலுக்குச் சென்று பார்த்தேன். கட்டின பசு மாதிரி என்னை விட சாந்தமாக இருந்தார். ஹ என்று சற்று தைரியம் வந்தது.

மட்டுமல்ல என்னுடைய பதிவுகளுக்கெல்லாம் ஏறத்தாழ முதல் லைக்கும் பின்னூட்டமும் போடுபவர். சமயங்களில் இவரைப் போன்றவர்களை எங்கே காணோம் என்று கூட தேட வைத்து விடுவார்கள். என்னுடைய பதிவுகளை இத்தனை விரும்பி வாசித்து, நேரில் வேறு சந்திக்க விரும்புபவர் எப்பேர்ப்பட்ட தியாகவுள்ளம் கொண்டவராக இருக்க வேண்டு்ம், சரி நேரில் சென்று பார்த்து விடுவோம் என்று தோன்றியது.

சந்தித்தோம்.

**

என் உள்ளுணர்வு பொய்யாகவில்லை. ;வாழ்க்கைல ஒழுக்கம்தான் முக்கியம்டா.. பொய் சொல்லக் கூடாது' என்றெல்லாம் சமூக விழுமியங்களை தங்களின் வாழ்க்கையில் கறாராக பின்பற்றிக் கொண்டிருப்பார்கள் அல்லவா. இவர் அப்படிப்பட்ட ஆசாமி. சுஜாதா மொழியில் சொன்னால் ' இந்த மாதிரி மாடல்லாம் இப்ப வர்றதில்லைங்க'

ஐம்பதுகளைக் கடந்தவராக இருந்தாலும் புகைப்படத்தில் காணப்படுவதை விடவும் இளமையான தோற்றம்.

சந்தித்த இரண்டாவது நிமிடத்திலேயே தன் வாழ்க்கைச் சுருக்கத்தை தெரிவித்தார். முன்னரே சொல்லிருந்தேன் அல்லவா, இணையத்து நட்பில் உடனடியாக கனெக்ஷன் ஏற்பட்டு விடுமேன.

தொழில் நுட்பம் சார்ந்த உத்யோகம் என்பதால் ஸ்பானர்களை சற்று மறக்க முயன்று எழுத்தின் பக்கமும் எழுத்தாளர்களின் பக்கமும் திரும்பியிருக்கிறார். எழுதுவதிலும் ஆர்வம் இருநந்திருக்கிறது. இளமையில் சாத்தியப்படாததால் நெருப்பு சற்று அணைந்து விட்டது. மீண்டும் அதை உசுப்பச் சொல்லி வேண்டினேன். தம்மைக் கவர்ந்த எழுத்தாளர்களை நேரில் சென்று சந்திப்பதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார். (கவனிக்க, அந்த வகையில் எனக்கும் எழுத்தாளன் என்கிற ஓர் அங்கீகாரம் கிடைத்தது)

என் இளமைப்பருவத்தின் அடித்தட்டு வாழ்க்கையில் உள்ள துயரங்கள் குறித்து நான் எழுதுவதையெல்லாம் கவனித்து தனக்கும் அது போன்ற அனுபவங்கள் இருந்த காரணத்தினாலேயே சஹஹிருதயராகி சந்திக்க விரும்பியிருக்கிறார்.

பூரியுடனும் இட்லியுடனும் இணைந்து சில பல எழுத்தாளர்களின் பெயர்களும் அரைபட்டன.

வேண்டாமென்று மறுத்தும் தன்னுடைய வண்டியில் வீடுவரை வந்து இறக்கி விட்ட நல்ல மனிதர். 'இனி பரஸ்பரம் அடிக்கடி சந்திப்போம்' என்கிற உறுதிமொழியுடன் பிரிந்தோம்.

அடுத்த முறை இனி வேறு எவராவது சந்திக்க விரும்பினால் 'உங்கள் பெயர் தெஷிணாமூர்த்தியா,?; என்று உறுதிப்படுத்திக் கொண்டு சந்திக்க உத்தேசம். அந்த அளவிற்கு இந்தப் பெயர் கொண்ட பண்பாளர் ஒருவரோடு நிகழ்ந்த சந்திப்பு அத்தனை இனிமையானதாக இருந்தது.


***


1956 முதல் 2016 வரையான அசோகமித்திரன் சிறுகதைகள் அனைத்தும் ஒட்டுமொத்த தொகுப்பாக வரவிருக்கும் அறிவிப்பை காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் முன்பு கண்ட போது ஓர் இன்ப அதிர்ச்சி வந்து தாக்கியது. என்றாலும் ஒரு வழக்கமான மிடில்கிளாஸ் கோயிஞ்சாமியின் மனவுணர்வுடன் அதன் விலை சற்று பயமுறுத்தியது. முன்வெளியீட்டுத் திட்டத்தில் இன்னமும் சகாயவிலை என்றாலும் என் பட்ஜெட்டிற்கு மீறியது. 'சொக்கா.. ஆயிரம் பொன்னாச்சே...ஆயிரம் பொன்னாச்சே.. என்று மனதிற்குள் புலம்பினேன்.

'என் இடது கையை வெட்டி விற்றாவது இந்த நூலை வாங்க விருப்பம். ஆனால்..' என்று இந்தப் புலம்பலை ஒரு நிலைத்தகவலாக வெளியிட்டிருந்தேன். நண்பர் Arulkumar Sivasamy -ன் காதில் இந்தப் புலம்பல் விழுந்து இந்த நூலை நான் உங்களுக்கு பரிசளிக்க விரும்புகிறேன் என்று முன்வந்தார்.

வெறுமனே ஆறுதல் வார்த்தையாக அல்லாமல், உடனேயே வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி அதற்கான ஆவண நகல்களை அனுப்பியிருந்தார். புத்தக கண்காட்சி தாமதமானதால் நூலும் வெளிவரத் தாதமாகியது என்று நினைக்கிறேன். ரஜினிபட ரசிகன் கபாலிக்காக காத்திருப்பது போல இதற்காக காத்திருந்தேன். கண்காட்சியில்தான் வெளியாகும் என நினைத்திருந்தேன்.

ஆனால் ஆச்சரியகரமாக நேற்றிரவு வீடு திரும்பிய போது கொரியர் வந்திருந்தது. திறந்திடு சீசே. உலகத்தின் சோகத்தையெல்லாம் முகத்தில் தாங்கிய தலைவரின் (?!) அற்புதமான கோட்டோவியத்துடன் அட்டைப்படம். நற்றிணைப் பதிப்பகத்தின் பிரத்யேக பாணியை நினைவுப்படுத்தும் வகையில் அதன் வடிவமைப்பு இருந்தது.

நவீன தமிழ் படைப்பாளிகளின் வரிசையில் இது நிச்சயம் ஒரு முக்கியமான, அசாதரணமான தொகுப்பு என்று கருதுவதால் கெட்டி அட்டையில் பைண்ட் செய்திருக்கலாமோ என்று தோன்றியது.

ஒரு பெரும் பொக்கிஷமே என் வாழ்வில் வந்து இணைந்ததைப் போன்ற மகிழ்ச்சியும் திகைப்பும் ஏற்பட்டது. புத்தக அடுக்கின் முதன்மையில் இந்த நூலை வைத்து சற்று நேரம் வெறித்து பார்த்து அந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

இதை சாத்தியப்படுத்திய நண்பர் அருள்குமார் சிவசாமிக்கு மீண்டும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றி.


***


இந்த விஷயத்தை ஏற்கெனவே சில முறை சொல்லியிருந்தாலும் மீண்டும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

விஜய் டிவியில் மெட்ராஸ்.

சற்று நேரம் பார்த்து விட்டு நகரலாம் என்று நினைத்தால் சானலை மாற்றவே முடியவில்லை. குறுக்கிடும் விளம்பரங்கள்தான் எரிச்சலூட்டுகின்றன.

எத்தனையோ முறை பார்த்த திரைப்படம். ஆனால் சலிக்கவேயில்லை. ரஞ்சித்தின் திரைமொழியும் பாத்திரங்களை கையாளும் விதமும் அத்தனை இயல்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது. விஷூவல் மீடியாவின் இலக்கணத்தை உணர்ந்தவர் என்று நன்றாகத் தெரிகிறது. ஆனால் வெகுசன சினிமாவின் சில சம்பிரதாயங்கள் அவர் கையை கட்டிப் போட்டிருப்பதாக யூகிக்கிறேன்.

சுவர் பிரச்சினை சற்று தீவிரமானவுடன் அன்பு, காளி, விஜி ஆகியோரின் நாட்களின் தருணங்கள் மெல்ல நகர்வதை வசனங்கள் அல்லாமல் காட்சிகளின் வழியாகவே உணர்த்தும் அந்தப் பகுதியை மிகவும் ரசித்தேன்.

சம்பவம் நடந்தவுடன் 'எனக்கு ரொம்ப பயமாயிருக்குடா' என்று அழுகிற இயல்பான ஹீரோ (?!) தமிழ் சினிமாவின் உருவாக்கத்தில் மிக அரிதான சித்தரிப்பு.

சந்தோஷ் நாராயணனின் அபாரமான பின்னணி இசை இந்தப் படத்தின் ஒரு முக்கியமான பலம்.

என்னிடம் மட்டும் ஒரு ஐந்து கோடி ரூ இருந்தால் ரஞ்சித்திடம் தந்து அவர் முழுமையாக விரும்பும்படியான ஒரு திரைப்படத்தை உருவாக்கச் சொல்லி வேண்டுவேன். சர்வதேச அளவில், தரத்தில் புகழப்படக்கூடிய ஒரு தமிழ் திரைப்படத்தை ரஞ்சித்தால் உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கையும் விருப்பமும் என்னுள் இருக்கிறது.


***


உடலைப் பேணிக்காத்தல் என்பது தொடர்பாக பேச்சு வந்ததால் அது தொடர்பாக மகளி்டம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

"நம் உடல் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட ஓர் இயந்திரம். தன் சிக்கல்களை தானே தீர்த்துக் கொள்ளும் வகையில் அதன் இயங்குமுறைகள் அபாரமாக உள்ளன. ஆனால் நாம் அதை உணராமல் பல்வேறு வழிகளில் அதை தண்டித்துக் கொண்டே இருக்கிறோம். கூடுமான வரை அந்த தண்டனைகளைப் பொறுத்துக் கொள்ளும் உடல் அது தாங்காத நிலையில் அதற்கான சிக்கல்களுக்கு உள்ளாகிறது. அப்போதும் கூட அதற்கான சமிக்ஞைகளை முதலிலேயே நமக்கு தருகிறது.

தன் தேவைகளை அதுவாகவே நமக்கு நினைவுப்படுத்துகிறது. உதாரணமாக வெயில் காலத்தில் உடலின் நீர்ச்சத்து குறைந்தால் அதற்கான சுரப்பிகளின் மூலம் தாகம் எனும் உணர்வை ஏற்படுத்துகிறது. நாம் நீர் அருந்துகிறோம்."

இவ்வாறாக சீரியஸாக பேசிக் கொண்டிருந்ததின் இடையில் மகள் புகுந்தாள்.

"நீங்க கூட வெண்டைக்காய் பொறியல் ரொம்ப விரும்பிச் சாப்பிடுவங்கள்ல. மூளை நல்லா வேலை செய்யறதுக்கு வெண்டைக்காய் உதவும் -னு சொல்லுவாங்க.. அப்ப அது நல்லா வேலை செய்யணும்-னு அப்பப்ப அது உங்களுக்கு நினைவுப்படுத்துதா?"

()

வீட்டுக்குள்ளேயே வில்லர்களை வைத்து சோறு போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறோமே என்று ஒரு கணம் என் மீதே கடுமையான கோபம் வந்தது.

suresh kannan