Sunday, May 08, 2016

முகநூல் குறிப்புகள் - 2

ஒரு திரையிசைப் பாடலில் பிரமித்து விட்டால் தேனில் விழுந்த ஈ மாதிரி அதிலேயே மூழ்கி சிக்கி கிடப்பது என் வழக்கம். வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த பைத்திய நிலை தெரியும் என்பதால் அவ்வளவாக கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற தேவையில்லாத நெருடல் உள்ளுக்குள் ஓடும். தேய்ந்த ரிகார்டரில் பாடலின் ஒரு வரி திரும்பத் திரும்ப ஓடினால் அது நுட்பக் கோளாறின் விளைவு. ஆனால் ஓரு பாடலே திரும்பத் திரும்ப ஓடினால் என்ன கோளாறு?

இன்று காலைல அப்படியொரு தேன் குடத்தில் விழுந்தேன்

.. 'மன்னவன் வந்தானடி' கே.வி.மகாதேவன் சுசிலா கூட்டணியில் உருவான இந்தப் பாடலை ஒரு தேசிய சாதனை என்று தயங்காமல் அறிவித்து விடலாம். இதுவரையான இந்திய திரையிசைப்பாடல்களில் ஆகச்சிறந்த நூறை தேர்வு செய்தால் அதில் இந்தப் பாடல் நிச்சயம் இடம் பெறும். பெறாவிட்டால் தேர்வாளரை வீடு தேடிப் போய் உதைக்கலாம்.

மகாதேவனின் ரகளையான கம்போஷிஷனை நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறது. எத்தனை வாத்தியங்கள்? ... எத்தனை அற்புதமான மெட்டு, அதில் எத்தனை வேறுபாடுகள்?.. அத்தனையையும் ஒரு நேர்க்கோட்டு கலவையில் இணைத்து நிறுத்துவதற்கு எத்தனை கலை மேதமை இருக்க வேண்டும்?

ஆனால் அதை விடவும் என்னை பிரமிக்க வைத்தது சுசிலா.. அவர் பாடியுள்ள தெளிவையும் அதிலுள்ள ஏற்ற இறக்கங்களையும் அதன் நுண்மைகளையும் வேறுபாடுகளையும் கவனித்துப் பாருங்கள். ஒரே வார்த்தைதான்.. பிரமிப்பு.

எனக்கு முறையான இசை ஞானமெல்லாம் கிடையாது.. அப்படியே கேட்டு கேட்டு என்னளவில் உள்ளுணர்வின் உந்துதலில் அதன் ரசனையில் உணர்வதுதான். பொதுவாகவே சுசிலாவின் பாடல்களை ரசிப்பதற்கு நான் ஒரு குறுக்கு வழி கண்டுபிடித்துள்ளேன். அது..

சுசிலாவின் குரலை ஒரு வாகனமாக கற்பனை செய்து கொள்ள வேண்டும். கண்களை இறுக்க மூடிக் கொண்டு அந்த வாகனத்தில் ஏறி அமர்ந்து கொள்ள வேண்டியதுதான். இப்போது மனக்காதால் அந்த வாகனத்தின் ஒவ்வோரு அசைவையும் அலட்சியமாக கடக்காமல் முழுக்கவனத்துடன் அதில் பயணம் செய்யுங்கள். . ஜாக்கிரதை... வாகனத்தின் அபாரமான ஏற்ற இறக்கத்தில் தவறி எங்கேனும் விழுந்து விட வாய்ப்புண்டு. இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள். அந்த வாகனத்தை மனதால் முழு கவனக்குவிப்புடன் தொடர்ந்து சென்று கொண்டேயிருங்கள்..

இப்போது அந்த வகையில் இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள். ஒரு ரோலர் கோஸ்டர் இயந்திரத்தில் ஏறி அமர்ந்த சாகச விளையாட்டின் படபடப்பும் கிளுகிளுப்பும் உற்சாகமும் உங்களுக்கு ஏற்படும். குறிப்பாக இந்தப் பாடலில் ஓர் இசை ரகளையையே நிகழ்த்தி விடுகிறார் சுசிலா..

ஒருபுறம் வேகமாக மோதும் தென்றல் காற்று போல அவர் முழங்கிக் கொண்டிருக்க இன்னொரு புறம் இடி முழக்கம் போல் ஜதி சொல்பவர் எதிரொலிக்க, வாத்தியங்கள் அதன் ஒத்திசைவோடு மாயாஜாலம் செய்ய..

இந்த அனுபவத்தை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. சற்று நினைத்துப் பாருங்கள். இப்போது போல இடையில் சற்று மூச்சு வாங்கிக் கொண்டு பின்பு டிராக்கில் நுட்பத்தின் மூலம் ஒப்பேற்றும் பம்மாத்து வேலையெல்லாம் அப்போது கிடையாது. லைவ் ரிகார்டிங்கில் எந்தப் பிசிறும் இல்லாமல் எல்லோரும் ஒரே விசையின் எதிரொலி போல ஒத்துழைக்க வேண்டும்.

ஏறத்தாழ இருபத்தைந்தாவது தடவையில் பாடல் முடிந்த போது சுசீலாவிடம் செல்லமான பிரியத்துடன் இப்படித்தான் கேட்கத் தோன்றியது.

"சண்டாளி. எப்படிடி பாடினே?"




***

"முன்பெல்லாம் நகைச்சுவைப் படங்கள் என்ற லேபிளில் வரும் so called காமெடிப் படங்களிடம்.. "டேய் .. கோபம் வர்ற மாதிரி காமெடி பண்ணாதீங்க. சிரிக்க வெக்க முடியலைன்னா விட்டுடுங்கடா" என்று கெஞ்ச வேண்டி வரும்.

இப்போதைய டிரெண்டின் படி வரும் பேய் படங்களில் "டேய் சிரிக்க வெக்காதீங்கடா.. சீக்கிரமா பயமுறுத்தி தொலைங்கடா.. டயமாவுது.. கிளம்பணும். சந்தைக்குப் போணும்.. ஆத்தா வையும்.." என்று பயங்கரமாக கெஞ்ச வேண்டியிருக்கிறது."

***

'ரஷோமான்' 'செவன் சாமுராய்'' என்று அகிரா குரசேவாவின் சில குறிப்பிட்ட திரைப்படங்களே தமிழ் சூழலில் அதிகம் உரையாடப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் அவருடைய சிறந்த திரைப்படங்களுள் ஒன்றான ' Stray Dog' பற்றிய என்னுடைய கட்டுரை, உயிர்மை மே 2016 இதழில் வெளியாகியுள்ளது.

நண்பர்களின் கவனத்திற்கு.

***
எழுத்தாளர் அமுதவன் எழுதிய 'என்றென்றும் சுஜாதா' என்ற நூலை சமீபததில் வாசித்தேன். சற்று பழைய நூல்தான். இருந்தாலு்ம் ஏன் இந்த நூல் இத்தனை நாட்களாக என் கண்ணில் படவில்லை என்று என்னையே நொந்து கொள்ளுமளவிற்கு சுஜாதாவைப் பற்றிய அத்தனை சுவாரசியமான தகவல்கள்.

சுஜாதாவின் பெங்களூரு வாசத்தின் போது அமுதவன் நீண்ட வருடங்களாக அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர். தன்னை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு சுஜாதாவுடனான முதற் சந்திப்பு, தேசலான எண்ணிக்கையுடன் அமைந்த முதல் இலக்கியக் கூட்டம் என்று தன்னுடைய பிரத்யேகமான பல அனுபவங்களை இந்த நூலில் விவரித்துள்ளார்.

பல சம்பவங்கள் வருடங்கள் கடந்தவை என்றாலும் அதை நினைவிலிருந்து மிக நுட்பமாக விவரித்துச் செல்லும் அமுதவனின் நினைவாற்றல் பிரமிக்க வைக்கிறது. சுஜாதா ஒரு திரைப்படத்தில் நடிக்க நேர்ந்த சம்பவம், ஒரு திரைப்படத்தை இயக்க சுஜாதாவிற்கு வந்த வலுக்கட்டாயமான வாய்ப்பு, குமுதம் தொடர்கதைக்கு வந்த வன்முறை மிரட்டல், எழுத்தாளர் இரவிச்சந்திரன் ஏற்படுத்திய நெருடல் உள்ளிட்ட பல சுவாரசியமான சம்பவங்கள். அமுதவனின் மேல் பொறாமையே ஏற்படுகிறது. சுஜாதாவுடன் அத்தனை நெருக்கமாக இருந்துள்ளார்.

இவ்வாறான நூல் ஒன்றை ஏறத்தாழ அது போன்ற அனுபவங்களைப் பெற்றிருக்கக்கூடிய நண்பர் தேசிகன் எழுத வேண்டும் என்பது என் கோரிக்கை.


***




டெல்லி கணேஷ் எனக்கு பிடித்தமான நடிகர்களில் ஒருவர். நகைச்சுவை நாடக பின்னணியிலிருந்து வந்ததால் அது குறித்த கோணங்கித்தனங்கள், செயற்கைத்தனங்கள் சமயங்களில் இருந்தாலும் சரியான உபயோகித்தால் பிரகாசிக்கக்கூடிய நடிகர். சிந்து பைரவி, மைக்கேல் மதன காமராஜன் என்று நிறைய உதாரணங்களை சொல்லலாம்.

அவர் தற்போது தம்முடைய மகனை வைத்து ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார். 'என்னுள் ஆயிரம்' என்பது அதன் தலைப்பு. எவராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இதற்காக சுமார் மூன்று கோடி செலவு செய்ததாகவும் வெறுமனே மூன்று லட்சம் மட்டுமே திரும்பி வந்ததாகவும் அவர் வருத்தப்பட்டு சொல்லியதாக ஒரு செய்தி கூட வாசித்தேன். திரையிட தியேட்டர்களே கிடைக்காத விஷயத்தையும் அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் கூட சொல்லியிருந்தார். அப்பாவியான தான் ஏமாந்து போனேன் என்கிற புலம்பலும் அதில் இருந்தது.

திரைப்படத் துறையில் இத்தனை ஆண்டுகள் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதரால் ஒரு திரைப்படத்தை உருவாக்கி வெளியிடுவதில் உள்ள சிக்கல்களைப் பற்றி அவர் அறியவேயில்லையா என்று ஆச்சரியமாக இருந்தது. மேலும் சொந்தமாக திரைப்படம் எடுத்து சீரழிந்த பல முன்னோடி நடிகர்களைப் பற்றிய தகவல்களை வைத்தாவது அவர் எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டுமே எனவும் தோன்றியது.

இதெல்லாம் சினிமாவிற்கு வெளியில் உள்ள புறத்தகவல்கள்.

()

இப்போது சினிமாவிற்குள் வருவோம். 'என்னுள் ஆயிரம்' என்கிற அந்த திரைப்படத்தைப் பார்த்தேன். எது அழகு என்கிற தத்துவத்திற்குள்ளும் அரசியல்சரிநிலைக்குள்ளும் செல்லத் தேவையில்லை எனும் பட்சத்தில். மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய முகவெட்டு இருப்பவர்தான் ஒரு பிரதான நடிகராக வெற்றிகரமாக தொடர முடியும் என்பது ஒரு நடைமுறை விதி.

'பார்க்க பார்கத்தான் பிடிக்கும்'' என்கிற தத்துவார்த்தப்படி டெல்லி கணேஷ் யோசித்தாரா, அல்லது பல திரைப்படங்களை செலவு செய்து விஜய் முகத்தை தொடர்ந்து காட்டி அவரை தமிழக மக்கள் வலுக்கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வைத்த எஸ்.ஏ.சந்திரசேகரை தன்னுடைய முன்னோடியாக டெல்லி கணேஷ் நினைத்துக் கொண்டாரா என்று தெரியவில்லை.

நாயகன் மகா, சுமாராகத்தான் இருக்கிறார்.

நடுத்தரவர்க்க தகப்பன் ஒருவன் பல சிரமங்களுக்கு இடையில் தம் மகனுக்கு ஒரு பைக் வாங்கித் தருவது மாதிரி தம் மகனை வைத்து ஒரு திரைப்படத்திற்காக மூன்று கோடி செலவு செய்ய முன்வந்தது கூட பிரச்சினையில்லை. ஒருவாறு சகித்துக் கொண்டு விடலாம் என்று வைத்துக் கொள்ளுங்களேன். அது அவர் பிரச்சினையும் கூட.

()

ஆனால் இந்த திரைப்படம் ஓடவில்லையே என்று வருந்துவதற்கு ஒரு சுக்கு காரணம் கூட இல்லை. அந்தளவிற்கு பிச்சைக்காரன் வாந்தியெடுத்தது போல குழப்பமான திரைக்கதை..மிக மந்தமானதும் கூட. எரிச்சலூட்டும் வகையில் பாடல்களின் தருணங்கள்.

பார்வையாளர்களை கணக்கிலேயே கொள்ளாமல் 'நான் எடுத்துதான் படம்' என்று திரைக்கதை அது பாட்டிற்கு இஷ்டத்திற்கு எங்கெங்கோ சுற்றுகிறது. ஒரு நல்ல திரைக்கதை என்பது பார்வையாளனின் உணர்வுடன் முதலிலேயே இறுக்கமாக பொருந்தி விட வேண்டும். பிரதான பாத்திரங்களின் உணர்வுகளை பார்வையாளனும் பிரதிபலிக்க வேண்டும். 'செத்தவன் கையில் வெத்தலை பாக்கு தந்தது மாதிரி' மொண்ணையான ஒரு திரைக்கதையை உருவாக்கி விட்டு..

இறுதிப் பிரதியை இயக்குநர் உள்ளிட்ட மற்றவர்களாவது பார்த்தார்களா என சநதேகமாக இருக்கிறது.

ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில், அறிமுக நாயகன் என்பதற்காக ஓவர் பில்டப் எல்லாம் தரவில்லை. கூடுதலாக நாயகத்தன்மை அழிக்கப்பட்டு அந்த இளைஞன் வயது முதிர்ந்த இல்லத்தரசி ஒருவருடன் அசந்தர்ப்பமான சூழலில் பாலுறுவு கொள்கிறான் என்பதையெல்லாம் கூட சித்தரிக்கத் துணிந்ததற்காக சபாஷ் சொல்லலாம். இளைஞனின் காதலியும் இந்தப் பெண்ணும் ஒரே இடத்தில் இருக்கும் ஏற்படும் சிக்கல்களையாவது சுவாரசியமாக நீட்டித்திருக்க வேண்டாமா? அவரையும் மறுகாட்சியிலேயே சாகடித்தாகி விட்டது. பின்பு எப்படி திரைக்கதை உயிரோடு இருக்கும்?

மூன்று கோடியை செலவு செ்யத தயாரிப்பாளர் டெல்லி கணேஷ், திறமையான எத்தனையோ இளம் இயக்குநர்களையும் திரைக்கதையையும் நடிகர்களையும் நம்பியிருக்கலாம். ஆற்றில் கொட்டுவது பாசத்தில் கண்ணை மூடி பணத்தை இறைத்து விட்டு பின்பு வருந்துவதில் என்ன பலன் இருக்கிறது?


***


எங்கள் பகுதியின் பாஜக வேட்பாளர் காவி நிறம் கமழ, அடல்பிகாரி வாஜ்பாய், உத்தமத் தலைவன் மோடி போன்ற வாசகங்கள் இறைபட வாக்கு கேட்டுச் சென்றார். கூடவே பத்து பதினைந்து வாடகை இளைஞர்கள், பைக்குடன். நாளைக்கு ரூ.300, பெட்ரோல் 50, பிரியாணியாம்.

பாஜக என்பதால் வெஜிடபிள் பிரியாணிதான் தருவார்கள் என நினைக்கிறேன்.


***

கபாலி டீஸர் பற்றி எழுதிய கட்டுரை - குமுதம்.



***


குமுதத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் உலக சினிமா தொடர் பற்றிய அறிவிப்பு.



***


அவசரக் குடுக்கையாக பல வருடங்களுக்கு முன்பே ஒரு முன்னோடியான திரைப்படத்தை எடுத்து விடுவது கமலின் கெட்ட வழக்கங்களில் ஒன்று. அப்படியொரு திரைப்படம் ராஜபார்வை. அதிபராக்கிரம புஜபலசாலிகளே நாயகர்களாக கர்ஜித்துக் கொண்டிருந்த போது (அதில் கமலும் ஒருவர் என்பது முரண்நகை) கண்ணு தெரியாத ஒருத்தன்தான் ஹீரொன்னா யார் சார் ஒத்துக்குவாங்க? அதான் தமிழ்நாட்டு ஜனங்க விவரமா படத்தை தோற்கடிச்சாங்க. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

சரி. நான் சொல்ல வந்தது ஒரு குறிப்பிட்ட பாடலைப் பற்றி. அந்திமழை பொழிகிறது.

இதை விடவும் அதிகம் பிடித்தது பரவலாக கவனிக்கப்படாத 'விழியோரத்துக் கனவும் வந்து' பாடல். அதிலுள்ள காவிய சோகம் தமிழ் திரையிசையின் மகத்தான பதிவுகளில் ஒன்று.

அந்திமழைக்கு வருவோம். சில பாடல்களை அதன் வீடியோவோடு தைரியமாக பார்க்கலாம். அப்படியொன்று இது. இந்தப் பாடலுக்கு முன்னால் ஒரு பகுதி வரும். பார்வையற்றோர் பள்ளியில் அந்த மாணவர்களுடன் இணைந்து கமலும் நின்று கொண்டு பாடும் பாட்டு.

நான் இளம் வயதில் முதன்முறையாக அந்தப் பகுதியை பார்க்கும் போது அப்படி நெகிழ்ந்து போனேன். அதில் கவனியுங்கள். ஹீரோவை தனியாக சித்தரிக்காமல் அந்தக் கூட்டத்தில் ஒருவராய் காட்டுவார்கள். அதுவரை குருட்டு கதாபாத்திரம் என்றால் கூலிங்கிளாஸ் போட்டு மழுப்பி தள்ளாடி நடந்து சொதப்பி பரிதாபத்தை சேகரித்துக் கொண்டு என்கிற பிஸினெஸ் எல்லாம் இல்லாமல் கண்ணாடியணியாமலேயே ஒரு கண்பார்வையற்றவரின் உடல்மொழியை கச்சிதமாக முயன்ற கமலுக்கு ஒரு கைத்தட்டலை தருவோம் நண்பர்களே...

எனவே இந்தப் பாடலை அதன் தொடக்கத்தோடுதான் கவனிக்க வேண்டும். பார்வையற்ற பிள்ளைகளோடு தன் காதலனும் பாடும் பாட்டை நெகிழ்ச்சியுடன் கவனித்துக் கொண்டிருக்கும் நாயகியிடமிருந்து காமிரா tilt up ஆகி உயிரைப் பிசைந்து தொலைக்கும் ராஜாவின் அற்புதமான ஹம்மிங்கோடு மரங்களின் இடையில் பயணிக்கும்.

மாண்டேஜ் வகை பாடல்களை அதுவரை பாலுமகேந்திராவே அற்புதமாக தமிழிற்கு அறிமுகப்படுத்தியிருக்க, அந்த வகையில் இதுவொரு அற்புதமான மாண்டேஜ். அது வழக்கமான டூயட்டாக இருந்தாலும் அதை சுவாரசியப்படுத்த தன்னால் என்ன முடியுமோ அதையெல்லாம் செய்வார் கமல். இதிலும் கவனியுங்கள்.

ஒரு நிலையான சித்திரம் மெல்ல மெல்ல தெளிவாகி பின்பு சலனக் காட்சிக்கு நகரும் அந்த அற்புதத்தை நுட்பம் வளர்ந்த பிறகான படத்தில் கூட பார்த்திருக்கிறீர்களா?

கண்பார்வையற்ற பாவனையில் மாதவி நடந்து செல்ல கமல் தடுமாறி அவரை அழைத்துச் செல்லும் அந்தக் காட்சியிலுள்ள பரிகாசத்தை என்ன என்பீர்கள்?

இந்த ஒரேயொரு பாடலுக்காகவே இந்தப் படம் பிய்த்துக் கொண்டு ஓடியிருக்க வேண்டுமே? தோற்கடித்து விட்டீர்களே ஐயா..

இளையராஜா + வைரமுத்துவின் பிரிவிற்கு அவரவர்களின் தனிப்பட்ட காரணங்கள் இருந்தாலும் அதற்கான உரிமையும் நியாயமும் இருந்தாலும் அந்தப் பிரிவு பிறகான திரையிசையை பாலைவனமாக்கியிருக்கிறதே, அது வரலாற்றுத் துரோகம் இல்லையா கலைஞர்களே... காலம் உங்களை மன்னிக்குமா என்ன?



***
 
சக்தி செளந்தர்ராஜன் இயக்கிய 'மிருதன்' திரைப்படம் பார்த்தேன். 'நாணயம்' 'நாய்கள் ஜாக்கிரதை' என்று அவரது முந்தைய திரைப்படங்களின் வரிசையைப் பார்க்கும் போது அவர் திரில்லர் ஜானர்களில் படமெடுக்கும் ஆர்வமுடையவர் என்று தெரிகிறது. அந்த ஆர்வம் மிருதனில் சற்று முன்னேறி சுவாரசியமாகியிருக்கிறது எனலாம். வாழ்த்துகள் அவருக்கு.

தமிழ் திரைப்படங்களை அந்த சூழலில் மற்ற தமிழ் திரைப்படங்களுடன் மட்டுமே ஒப்பிட முடியும் என்கிற ஆதாரமான நோக்கில் மிருதன் சமீபத்திய திரைப்படங்களோடு பார்க்கும் போது எவ்வளவோ தேவலை. பரபரப்பான காட்சிகளின் இடையே தமிழ் சினிமா மரபு படி கட் செய்து ஜெயம் ரவிக்கும் லட்சுமி மேனனுக்கும் ஒரு டூயட்டை செருகி எரிச்சலடைய வைப்பாரோ என்று பயந்து கொண்டே இருந்தேன். அப்படி செய்யவில்லை. படத்திலுள்ள நம்பகத்தன்மை, தர்க்கப்பிழைகள் உள்ளிட்ட பலவற்றைத் தாண்டியும் ஹாலிவுட் பாணியில் அந்த பரபரப்பை இடையறாமல் தொடரச் செய்வதில் இயக்குநரின் ரசனையைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் அந்த தீவிரத்தை மட்டுப்படுத்தும் அசட்டுத்தனமான நகைச்சுவைகள் தமிழ் பார்வையாளர்களை மனதில் வைத்து உருவாக்கியவை போல. போலவே சிறுமியை வைத்தான சென்ட்டிமென்ட் காட்சிகளும்.

Zombie களுக்கும் ஒரு விநோதமான ஆபத்தான வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டு உருவாகும் மூர்க்கர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதை எப்படி zombie திரைப்படமென்று விளம்பரித்தார்கள் என்று தெரியவில்லை.

தமிழில் இப்படியொரு ஜானரில் படம் திட்டமிட்டு வெளியாகி அது ஏறத்தாழ சுவாரசியத்துடன் இருக்கிறது என்பதே ஆரோக்கியமான போக்காக இருக்கிறது. இந்த வகையில் சென்றால் ஒரு நீட்டான ஹாலிவுட் திரைக்கதையமைப்பில் தமிழிலும் கூட ஒரு திரைப்படம் உருவாகக்கூடும் என்கிற நம்பிக்கை பிறக்கிறது. (ஹாலிவுட்தான் அளவுகோலா என்று கேட்காதீீர்கள்,, ஏறத்தாழ ஆம்).

இமானின் இசையில் வரும் அந்த 'முன்னாள் காதலி்' ராக் பாணியில் ஓர் அட்டகாசமான பாடல். தொண்டைய கிழியும் டெஸிபலில் பாடிய விஷால் தத்லானி அசத்தியிருக்கிறார்.

அரசியல் கூட்டத்திற்கு ஆள் பிடிப்பது போல் இதில் கூட்டம் கூட்டமாக வந்து ஜெயம் ரவியின் துப்பாக்கியினால் சுடப்பட்டு சுடப்பட்டு வீழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். பெரிய பட்ஜெட்படம் போல. இவர்களுக்கும் வெத்தலைபாக்கு போட்ட வாய் மாதிரியான ஒப்பனைக்கே நிறைய செலவாகியிருக்கும். அத்தனை நபர்கள்.

தண்ணீர் பட்டால் இவர்களுக்கு அலர்ஜி என்பது (இந்த வைரஸ் நாயிடமிருந்து பரவுகிறது) ஒரு நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு கோயில் வாசலில் சுண்டலுக்கு நிற்கும் பக்தாஸ் போல என்ன காரணத்தினாலோ மருத்துவமனை வாசலில் திரண்டு நிற்கும் வைரஸ் கனவான்களை தண்ணீர் கொண்டு சமாளிக்கிறார் ஹீரோ. தண்ணீரும் தீர்ந்து போய் விடுகிறது.

"அவர்கள் மேலே எச்சில் துப்பினால் விலகிப் போகும் சாத்தியம் உண்டே" என்றேன் சீரியஸ் கிண்டலாக. "ஆமாப்பா.. எனக்கும் தோணுச்சு. சொல்ல தயக்கமா இருந்தது" என்றாள் மகள்.

என் வீட்டிற்குள்ளேயே ஒரு சஹஹிருதயர் இருக்கிறார் என்பதைக் கண்டு கொண்ட தருணம் அது.


***


வடிவேலு ஊத்தப்பத்திற்காக மெனக்கெட்டு அதன் ரெசிப்பியை கால் மணி நேரத்திற்கு இழுத்து இழுத்து சொல்லியது போல மற்ற கட்சிகள் பிட் அடித்து காப்பி அடித்து கொஞ்சம் சொந்தமாய் யோசித்து வியர்த்து ஒழுக தோ்தல் அறிக்கை தயாரித்து வெளியிட,

அம்மாவோ ஒரே வார்த்தையில் 'மாஸ்டர் ஒரு ஊத்தப்பம்' என்று ஜோலியை சுலபமாய் முடித்து விட்டார்கள்.

"அம்மா .. ன்னு கூப்பிட்டவுடனே சமையற்கட்டிலிருந்து வியர்வையை துடைச்சிக்கிட்டே 'என்னடா கண்ணு வேணும்" னு ஒரு பரிதாபமான உருவம் வருமே.. அந்த அம்மா -ன்னு நெனச்சீங்களா....

அம்மா.... டா.... மகிழ்ச்சிடா...



***


ஒரு போலியான சாதி மறுப்பாளரை கண்டுபிடிப்பதற்கான ஒரு வழி, அவர் பிறந்த சாதி உங்களுக்கு தற்செயலாக தெரிந்திருந்தால் பேச்சின் இடையே அது தொடர்பான கிண்டலையோ, பழமொழியையோ சொல்லி விளையாட்டாக சீண்டிப் பாருங்கள். ஆசாமிக்கு சுர்ரென்று கோபம் வந்து அதை மறைக்க முயன்றோ அல்லது கிண்டலுக்கு ஆவேசமாக எதிர்த்தோ எதிர்வினை புரிந்தால் பூனைக்குட்டி வெற்றிகரமாக வெளியே வந்து விட்டது என்று அர்த்தம்.

நான் பிறக்க நேர்ந்த(கவனிக்கவும்: நேர்ந்த) சாதி அல்லது மதத்தைப் பற்றி எவர் கிண்டலடித்தாலும் அவமதித்தாலும் அது ஒரு துளி கூட என்னைப் பாதிக்காது என்பதை துணிவுடன் என்னால் சொல்ல முடியும். ஏனெனில் மனதளவில் அது சார்ந்த விருப்போ வெறுப்போ எதுவுமில்லாத ஏகாந்த நிலைதான்.

ஒரு பண்பாட்டு அமைப்பு என்கிற அளவில் சாதியின் வரலாற்றுத் தரவுகளை, பின்னணிகளை ஆய்வு நோக்கில் அறிய முயல்வேனே தவிர உணர்வுபூர்வமாக அதனுடன் எனக்கு எவ்வித பிணைப்பும் கிடையாது.

***

தேசிய விருதை மறுத்த இளையராஜாவின் நிலைப்பாடு குறித்து கங்கை அமரன் முன்வைக்கும் ஆவேசமான கருத்துக்களை - ராஜாவின் ரசிகர்களும் - சற்று நிதானமாக யோசித்துப் பார்க்கலாம்.

ராஜாவின் இசை மேதமை குறித்து பொதுவாக எவரும் கேள்வி கேட்கவில்லை. அது நிரூபிக்கப்பட்ட ஒன்று. அவரது கலை சார்ந்த திமிரை கூட யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை. அதை வித்யா கர்வம் என்று கூட சகித்துக் கொண்டு விடலாம்.

ஆனால் அந்த மனோபாவத்தை அவர் 'நாயினும் கடையேன்' என்கிற அடக்க தொனியின், ஆன்மிக குரலின் உள்ளாகவே வெளிப்படுத்துகிறார் அல்லவா, அந்த இரட்டை மனநிலையின் போலித்தனத்தைத்தான் ஆரம்பத்திலிருந்து சொல்லி வருகிறாம்; விமர்சித்து வருகிறோம். அதையேதான் கங்கை அமரனும் சொல்கிறார். இதை தாம் சகோதரராக அல்ல, ரசிகனாக சொல்கிறேன் என்று அவர் அழுத்தமாக சொல்வதில் உண்மையும் நேர்மையும் இருக்கிறது.

பாடலுக்காக ஒரு விருதையும் பின்னணி இசைக்காக ஒரு விருதையும் தரும் உலக நடைமுறையை இந்திய தேசிய விருதுக் கமிட்டியும் பின்பற்றுவதில் என்ன தவறு? முழு இசைக்கே தான்தான் அத்தாரிட்டி என்று ராஜா ஏன் நினைத்துக் கொள்ள வேண்டும்? அல்லது அந்த முறை தவறே என்றாலும் கூட ஒரு பெருந்தன்மையொடு, இன்னொரு இசையமைப்பாளருக்கு கிடைக்கும் அங்கீகாரத்திற்காக இந்த விஷயத்தை ஒரு மூத்தவராக சகித்துக் கொண்டு போக முடியாதா?

கங்கை அமரனின் ஆவேசத்தை நிதானமாக கேட்டுப் பாருங்கள்.





***


நண்பர் சொன்னது.:

பின்னணி இசைக்கு விருது தருகிறார்கள் என்றால் பாடல்களுக்கான இசை சரியில்லையா என்ன? என்பது போல் ராஜா புரிந்து கொள்வது விநோதமானது.

திரைப்படங்களில் செயற்கையாக திணிக்கப்படும் பாடல்கள் தேவையா என்கிற விவாதம் நெடுங்காலமாக பேசப் பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் சினிமாவைப் புரிந்த இசையமை்ப்பாளர் அதை பெருமையாகவே கருத மாட்டார். ஆனால் ராஜா இரண்டையும் ஒட்டுமொத்தமாக இணைத்து குழப்பி, குழம்பி 'இது சரின்னா.. அது சரியில்லையா.. கொடுத்தா மொத்தமா குடு' என்று சொல்வது முறையில்லை.

ராஜா ஒரு சில படங்களில் இசையமைப்பாளராக தோன்றியுள்ளார். "ஏன் என் நடிப்பு சரியில்லையா? என்று அந்தப் படங்களின் சிறந்த நடிகருக்கான விருதையும் தாமே கேட்டு அடம் பிடிக்காமலிருப்பது வரை மகிழ்ச்சி.


***


இந்தியத் திரைப்படங்களில் பாடல்கள் தேவையா என்பதே அரதப்பழசான விவாதமாகி விட்ட சூழலில் இன்னமும் நாம் அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டியதே துரதிர்ஷ்டமானது.

கடந்த நிலைத்தகவல் ஒன்றில் நண்பர் சிஎஸ்கே -விற்காக அளித்த பதில் இது.
 
()

பாடல்கள் இந்திய திரைப்படக் கலாசாரத்தின் பிரத்யேகமான ஒரு விஷயம், ஏன் அதை இழக்க வேண்டும் அல்லது தூற்ற வேண்டும் என்பது ஒரு காலக்கட்டம் வரையில் அதுவும் ஒரு நிலையில் வரை சரி. ஏனெனில் முந்தைய காலத்தில் ஒரு திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் காரணியாய் பாடல்களும் இருந்தன. நிறையப் பாடல்கள் இருந்ததை ரசிகர்களும் வரவேற்றார்கள். ஏனெனில் அதுவரையான கூத்து, நாடக வடிவம் அப்படியே திரையில் பெயர்ந்துதான் காரணம். திரைக்கென இருக்கும் பிரத்யேகமான இலக்கணத்தைப் பற்றி எவரும் கவலைப்படவில்லை.

ஆனால் இன்று நிலைமை வேறு. எல்லாக்கதைகளும் சொல்லப்பட்டு விட்ட நிலையில் திரைக்கதையை எப்படி சுவாரசியமாக உருவாக்க வேண்டும் என்பதுதான் இயக்குநர்களின் முன் உள்ள கடுமையான சவால். அதற்காக மண்டையைப் பிய்த்துக் கொள்கிறார்கள். உலக சினிமா மற்றும் ஹாலிவுட் சினிமாக்களின் பரவலான பரிச்சயம் ரசிகர்களின் மனோபாவத்தையும் எதிர்பார்ப்பையும் கூட மாற்றி விட்டது.

பாடல்கள் திரைப்படத்தின் சுவாரசியத்திற்கான தடைக்கற்களாக இருப்பதை இயக்குநர்களும் ரசிகர்களும் பரவலாக உணரும் சூழலில் யாருக்காக அந்த சம்பிதாயத்தை விடாப்பிடியாக தொடர்கிறார்கள் என்பதே புரியவில்லை. சமீீபத்தில் பார்த்த என்னுள் ஆயிரம் திரைக்கதையை இன்னமும் மேம்படுத்தி பல சிக்கல்களை இணைத்திருந்தால் நல்ல வடிவமாக வந்திருக்கக்கூடும். ஆனால் மோசமான, குழப்பமான திரைக்கதையுடன் கூடுதல் சுமையாக பாடல்களும் சலிப்பை அதிகமாக்கின.

ஒரு திரைக்கதையில் நிச்சயம் பாடல் வைக்க வேண்டி இருந்தாலும் திரைக்கதையும் அதை வலுக்கட்டாயமாக கோரினால், அதற்கேற்ற அதன் பின்னணியும் இருந்தால் பாடல் இடம்பெறுவதில் பிரச்சினையில்லை. ஆனால் இந்தியச் சினிமாவில் கிளிஷேவாக ஒரு வலுக்கட்டாயத்துடன் பாடல்கள் இடம் பெற்று வெறுப்பேற்றுகின்றன என்பதை நாம் அனைவருமே உணர்ந்திருக்கிறோம். பிறகு யாரை ஏமாற்றிக் கொள்ள இந்த நாடகம்?

நமக்கு அந்தளவிற்கு இசைப் பற்று இருக்குமேனில் தனி இசை ஆல்பங்களை ஆதரித்து அந்தக் கலாசாரத்தை வளர்க்கலாம்.


***


இணையததின் மூலமாக மட்டுமே அறியப்பட்டஒரு நபரை நேரில் சந்திப்பது என்பது ஒரு விநோதமான அனுபவம். என்னதான் புகைப்படங்களில் பார்த்திருந்தாலும் அதுவரை விர்ச்சுவலாக மட்டுமே வார்த்தைகளால் உணர்வுகளால் அறிந்திருந்த ஆசாமி நேர்சந்திப்பில் எப்படி இருப்பாரோ எப்படி பேசுவாரோ என்கிற ஆவலும் நெருடலும் ஏற்படுவது இயல்பே.

ஆனால் நேர்சந்திப்பில் முதன்முறையாக ஒருவரை சந்திக்கச் செல்வதற்கும் இதற்கும் நிறைய வித்தியாசமுள்ளது. ஒரு நபரை அப்போதுதான் முதன்முறையாக சந்திக்கச் செல்கிறீர்கள் என்றால் அவரது விருப்பு, வெறுப்புகளை அறிய சில நாட்களாவது ஆகும்; மேலும் சில சந்திப்புகள் தேவைப்படும். ஆனால் இணைய நட்பு அப்படியல்ல. அவரது உணர்வுகளை ஆசாபாசாங்களை இணையப் பரிமாற்றங்களின் நீங்கள் ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள் என்பதால், ஆசாமி நேரில் எப்படியிருப்பார் என்று உருவம் சார்ந்து நீங்கள் கற்பனை செய்திருந்த ஒற்றுமை, வேற்றுமைகளைத் தவிர, அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே நீங்கள் அவருடன் சற்று நெருக்கமாகவே பேச முடியும்.

நண்பர் தெஷிணாமூர்த்தி காமாஷிசுந்தர் என்னை நேரில் சந்திக்க பிரியப்பட்டிருந்தார். இரண்டொரு முறை கேட்டிருந்தார். பணிச்சுமை காரணமாக என்னால் செல்ல இயலவில்லை. (உண்மையாகவே) அவருக்கு சற்று வருத்தம் ஏற்பட்டது. எனக்கும். எனவே இந்த முறை நேரம் தேதி எல்லாம் கச்சிதமாக குறித்து வைத்துக் கொண்டு சந்தித்தோம்.

ஏன் நம்மை நேரில் சந்திக்க நினைக்கிறார், ஒருவேளை இளையராஜாவின் பரம ரசிகராக இருந்து, 'இவனை ஒரு சாத்து சாத்தினால் என்ன? என்று நினைத்துக் கொண்டு நேரில் சென்றவுடன் 'டேய் ராமானுஜம்... இவனைக் கவனிடா' என்பாரோ. (கபாலிதான் பிரமோஷன் ஆகி விட்டாரே) நாம் அந்தளவிற்கெல்லாம் ஒர்த்தே கிடையாதே என்கிற விபரீத கற்பனையெல்லாம் தோன்றியது.

அவருடைய ஃபுரொபைலுக்குச் சென்று பார்த்தேன். கட்டின பசு மாதிரி என்னை விட சாந்தமாக இருந்தார். ஹ என்று சற்று தைரியம் வந்தது.

மட்டுமல்ல என்னுடைய பதிவுகளுக்கெல்லாம் ஏறத்தாழ முதல் லைக்கும் பின்னூட்டமும் போடுபவர். சமயங்களில் இவரைப் போன்றவர்களை எங்கே காணோம் என்று கூட தேட வைத்து விடுவார்கள். என்னுடைய பதிவுகளை இத்தனை விரும்பி வாசித்து, நேரில் வேறு சந்திக்க விரும்புபவர் எப்பேர்ப்பட்ட தியாகவுள்ளம் கொண்டவராக இருக்க வேண்டு்ம், சரி நேரில் சென்று பார்த்து விடுவோம் என்று தோன்றியது.

சந்தித்தோம்.

**

என் உள்ளுணர்வு பொய்யாகவில்லை. ;வாழ்க்கைல ஒழுக்கம்தான் முக்கியம்டா.. பொய் சொல்லக் கூடாது' என்றெல்லாம் சமூக விழுமியங்களை தங்களின் வாழ்க்கையில் கறாராக பின்பற்றிக் கொண்டிருப்பார்கள் அல்லவா. இவர் அப்படிப்பட்ட ஆசாமி. சுஜாதா மொழியில் சொன்னால் ' இந்த மாதிரி மாடல்லாம் இப்ப வர்றதில்லைங்க'

ஐம்பதுகளைக் கடந்தவராக இருந்தாலும் புகைப்படத்தில் காணப்படுவதை விடவும் இளமையான தோற்றம்.

சந்தித்த இரண்டாவது நிமிடத்திலேயே தன் வாழ்க்கைச் சுருக்கத்தை தெரிவித்தார். முன்னரே சொல்லிருந்தேன் அல்லவா, இணையத்து நட்பில் உடனடியாக கனெக்ஷன் ஏற்பட்டு விடுமேன.

தொழில் நுட்பம் சார்ந்த உத்யோகம் என்பதால் ஸ்பானர்களை சற்று மறக்க முயன்று எழுத்தின் பக்கமும் எழுத்தாளர்களின் பக்கமும் திரும்பியிருக்கிறார். எழுதுவதிலும் ஆர்வம் இருநந்திருக்கிறது. இளமையில் சாத்தியப்படாததால் நெருப்பு சற்று அணைந்து விட்டது. மீண்டும் அதை உசுப்பச் சொல்லி வேண்டினேன். தம்மைக் கவர்ந்த எழுத்தாளர்களை நேரில் சென்று சந்திப்பதை ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார். (கவனிக்க, அந்த வகையில் எனக்கும் எழுத்தாளன் என்கிற ஓர் அங்கீகாரம் கிடைத்தது)

என் இளமைப்பருவத்தின் அடித்தட்டு வாழ்க்கையில் உள்ள துயரங்கள் குறித்து நான் எழுதுவதையெல்லாம் கவனித்து தனக்கும் அது போன்ற அனுபவங்கள் இருந்த காரணத்தினாலேயே சஹஹிருதயராகி சந்திக்க விரும்பியிருக்கிறார்.

பூரியுடனும் இட்லியுடனும் இணைந்து சில பல எழுத்தாளர்களின் பெயர்களும் அரைபட்டன.

வேண்டாமென்று மறுத்தும் தன்னுடைய வண்டியில் வீடுவரை வந்து இறக்கி விட்ட நல்ல மனிதர். 'இனி பரஸ்பரம் அடிக்கடி சந்திப்போம்' என்கிற உறுதிமொழியுடன் பிரிந்தோம்.

அடுத்த முறை இனி வேறு எவராவது சந்திக்க விரும்பினால் 'உங்கள் பெயர் தெஷிணாமூர்த்தியா,?; என்று உறுதிப்படுத்திக் கொண்டு சந்திக்க உத்தேசம். அந்த அளவிற்கு இந்தப் பெயர் கொண்ட பண்பாளர் ஒருவரோடு நிகழ்ந்த சந்திப்பு அத்தனை இனிமையானதாக இருந்தது.


***


1956 முதல் 2016 வரையான அசோகமித்திரன் சிறுகதைகள் அனைத்தும் ஒட்டுமொத்த தொகுப்பாக வரவிருக்கும் அறிவிப்பை காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் முன்பு கண்ட போது ஓர் இன்ப அதிர்ச்சி வந்து தாக்கியது. என்றாலும் ஒரு வழக்கமான மிடில்கிளாஸ் கோயிஞ்சாமியின் மனவுணர்வுடன் அதன் விலை சற்று பயமுறுத்தியது. முன்வெளியீட்டுத் திட்டத்தில் இன்னமும் சகாயவிலை என்றாலும் என் பட்ஜெட்டிற்கு மீறியது. 'சொக்கா.. ஆயிரம் பொன்னாச்சே...ஆயிரம் பொன்னாச்சே.. என்று மனதிற்குள் புலம்பினேன்.

'என் இடது கையை வெட்டி விற்றாவது இந்த நூலை வாங்க விருப்பம். ஆனால்..' என்று இந்தப் புலம்பலை ஒரு நிலைத்தகவலாக வெளியிட்டிருந்தேன். நண்பர் Arulkumar Sivasamy -ன் காதில் இந்தப் புலம்பல் விழுந்து இந்த நூலை நான் உங்களுக்கு பரிசளிக்க விரும்புகிறேன் என்று முன்வந்தார்.

வெறுமனே ஆறுதல் வார்த்தையாக அல்லாமல், உடனேயே வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி அதற்கான ஆவண நகல்களை அனுப்பியிருந்தார். புத்தக கண்காட்சி தாமதமானதால் நூலும் வெளிவரத் தாதமாகியது என்று நினைக்கிறேன். ரஜினிபட ரசிகன் கபாலிக்காக காத்திருப்பது போல இதற்காக காத்திருந்தேன். கண்காட்சியில்தான் வெளியாகும் என நினைத்திருந்தேன்.

ஆனால் ஆச்சரியகரமாக நேற்றிரவு வீடு திரும்பிய போது கொரியர் வந்திருந்தது. திறந்திடு சீசே. உலகத்தின் சோகத்தையெல்லாம் முகத்தில் தாங்கிய தலைவரின் (?!) அற்புதமான கோட்டோவியத்துடன் அட்டைப்படம். நற்றிணைப் பதிப்பகத்தின் பிரத்யேக பாணியை நினைவுப்படுத்தும் வகையில் அதன் வடிவமைப்பு இருந்தது.

நவீன தமிழ் படைப்பாளிகளின் வரிசையில் இது நிச்சயம் ஒரு முக்கியமான, அசாதரணமான தொகுப்பு என்று கருதுவதால் கெட்டி அட்டையில் பைண்ட் செய்திருக்கலாமோ என்று தோன்றியது.

ஒரு பெரும் பொக்கிஷமே என் வாழ்வில் வந்து இணைந்ததைப் போன்ற மகிழ்ச்சியும் திகைப்பும் ஏற்பட்டது. புத்தக அடுக்கின் முதன்மையில் இந்த நூலை வைத்து சற்று நேரம் வெறித்து பார்த்து அந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன்.

இதை சாத்தியப்படுத்திய நண்பர் அருள்குமார் சிவசாமிக்கு மீண்டும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றி.


***


இந்த விஷயத்தை ஏற்கெனவே சில முறை சொல்லியிருந்தாலும் மீண்டும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

விஜய் டிவியில் மெட்ராஸ்.

சற்று நேரம் பார்த்து விட்டு நகரலாம் என்று நினைத்தால் சானலை மாற்றவே முடியவில்லை. குறுக்கிடும் விளம்பரங்கள்தான் எரிச்சலூட்டுகின்றன.

எத்தனையோ முறை பார்த்த திரைப்படம். ஆனால் சலிக்கவேயில்லை. ரஞ்சித்தின் திரைமொழியும் பாத்திரங்களை கையாளும் விதமும் அத்தனை இயல்பாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது. விஷூவல் மீடியாவின் இலக்கணத்தை உணர்ந்தவர் என்று நன்றாகத் தெரிகிறது. ஆனால் வெகுசன சினிமாவின் சில சம்பிரதாயங்கள் அவர் கையை கட்டிப் போட்டிருப்பதாக யூகிக்கிறேன்.

சுவர் பிரச்சினை சற்று தீவிரமானவுடன் அன்பு, காளி, விஜி ஆகியோரின் நாட்களின் தருணங்கள் மெல்ல நகர்வதை வசனங்கள் அல்லாமல் காட்சிகளின் வழியாகவே உணர்த்தும் அந்தப் பகுதியை மிகவும் ரசித்தேன்.

சம்பவம் நடந்தவுடன் 'எனக்கு ரொம்ப பயமாயிருக்குடா' என்று அழுகிற இயல்பான ஹீரோ (?!) தமிழ் சினிமாவின் உருவாக்கத்தில் மிக அரிதான சித்தரிப்பு.

சந்தோஷ் நாராயணனின் அபாரமான பின்னணி இசை இந்தப் படத்தின் ஒரு முக்கியமான பலம்.

என்னிடம் மட்டும் ஒரு ஐந்து கோடி ரூ இருந்தால் ரஞ்சித்திடம் தந்து அவர் முழுமையாக விரும்பும்படியான ஒரு திரைப்படத்தை உருவாக்கச் சொல்லி வேண்டுவேன். சர்வதேச அளவில், தரத்தில் புகழப்படக்கூடிய ஒரு தமிழ் திரைப்படத்தை ரஞ்சித்தால் உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கையும் விருப்பமும் என்னுள் இருக்கிறது.


***


உடலைப் பேணிக்காத்தல் என்பது தொடர்பாக பேச்சு வந்ததால் அது தொடர்பாக மகளி்டம் சொல்லிக் கொண்டிருந்தேன்.

"நம் உடல் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட ஓர் இயந்திரம். தன் சிக்கல்களை தானே தீர்த்துக் கொள்ளும் வகையில் அதன் இயங்குமுறைகள் அபாரமாக உள்ளன. ஆனால் நாம் அதை உணராமல் பல்வேறு வழிகளில் அதை தண்டித்துக் கொண்டே இருக்கிறோம். கூடுமான வரை அந்த தண்டனைகளைப் பொறுத்துக் கொள்ளும் உடல் அது தாங்காத நிலையில் அதற்கான சிக்கல்களுக்கு உள்ளாகிறது. அப்போதும் கூட அதற்கான சமிக்ஞைகளை முதலிலேயே நமக்கு தருகிறது.

தன் தேவைகளை அதுவாகவே நமக்கு நினைவுப்படுத்துகிறது. உதாரணமாக வெயில் காலத்தில் உடலின் நீர்ச்சத்து குறைந்தால் அதற்கான சுரப்பிகளின் மூலம் தாகம் எனும் உணர்வை ஏற்படுத்துகிறது. நாம் நீர் அருந்துகிறோம்."

இவ்வாறாக சீரியஸாக பேசிக் கொண்டிருந்ததின் இடையில் மகள் புகுந்தாள்.

"நீங்க கூட வெண்டைக்காய் பொறியல் ரொம்ப விரும்பிச் சாப்பிடுவங்கள்ல. மூளை நல்லா வேலை செய்யறதுக்கு வெண்டைக்காய் உதவும் -னு சொல்லுவாங்க.. அப்ப அது நல்லா வேலை செய்யணும்-னு அப்பப்ப அது உங்களுக்கு நினைவுப்படுத்துதா?"

()

வீட்டுக்குள்ளேயே வில்லர்களை வைத்து சோறு போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறோமே என்று ஒரு கணம் என் மீதே கடுமையான கோபம் வந்தது.

suresh kannan

No comments: