Showing posts with label சர்வதேச திரைவிழா. Show all posts
Showing posts with label சர்வதேச திரைவிழா. Show all posts

Thursday, December 12, 2019

சென்னை திரைப்பட திருவிழா 2016







13-வது வருட  சென்னை சர்வதேச திரைவிழா, கடந்த ஜனவரி 6 முதல் 13 ந் தேதி வரை நடைபெற்றது. இதில் சுமார் 180 திரைப்படங்கள் திரையிடப்பட்டன.

உலக சினிமா வரிசையில் 120 திரைப்படங்கள், 50 வெவ்வேறு தேசங்களின் பங்களிப்புகள், வெனின்சுலா மற்றும் சைனா வின் மீதான 'Country Focus' திரைப்படங்கள், ஜெர்மனி இயக்குநர் Fassbinder மற்றும் டென்மார்க் இயக்குநர் Nils Malmros ஆகியோர்களின் Retrospective, சார்லி சாப்ளின்-க்கு இணையாக கொண்டாடப்பட வேண்டிய பஸ்டர் கீட்டனின் 120வது வருடத்தை நினைவு கூரும் வகையில் 6 திரைப்படங்கள், இயக்குநர் பாலச்சந்தர் மற்றும் ஆச்சி மனோரமா ஆகியோர்களின் நினைவாக 8 திரைப்படங்கள். இது தவிர இந்தியன் பனோரமா வரிசையில் 10 மற்றும் தமிழ் திரைப்படங்களின் போட்டி வரிசையில் 12 திரைப்படங்களும் இடம் பெற்றன.

பல்வேறு தேசங்களிலிருந்து 'ஆஸ்கருக்காக'  நாமினேட் ஆன திரைப்படங்கள், பெர்லின் மற்றும் கான் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட மற்றும் விருது வாங்கிய திரைப்படங்கள் இந்த வரிசையில் அடங்கும். உலக சினிமா ஆர்வலர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இந்த விழா ஒரு கொண்டாட்டமாகவே விளங்கியது.

இந்த விழாவில் என்னால் காண இயன்ற திரைப்படங்களில் முக்கியமான மற்றும் சுவாரசியமான திரைப்படங்களைப் பற்றி சுருக்கமான அறிமுகமாக இந்தக் கட்டுரைகளில் பகிரப் போகிறேன். ஒவ்வொரு திரைப்படமுமே அதனதன் அளவில் முக்கியமானது; மிக விரிவாக அறிமுகம் செய்யப்பட வேண்டியது.




Taxi  | 2015 | Iran | Dir: Jafar Panahi

இந்த விழாவில் ஏறத்தாழ அனைத்து திரை ரசிகர்களினாலும் மிக ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாக இதுவே இருக்க முடியும். இதற்கான பிரத்யேக காரணங்கள் உள்ளன. ஈரான் போன்ற தேசங்களில் கருத்துரிமை சார்ந்த கடுமையான கட்டுப்பாடுகளும் தணிக்கைகளும் இருப்பது நமக்குத் தெரியும். ஜாபர் பனாஹியின் திரைப்படங்கள் அந்நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் அதன் மதம் சார்ந்த கொள்கைகளின் மீது எதிர்பரப்புரை செய்யும் வகையில் அமைந்திருப்பதாகவும் கருதி அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. பல்வேறு சமயங்களில் அவர் கைது செய்யப்பட்டு பின்பு சக படைப்பாளிகளின் மூலமாான பல போராட்டங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் திரைப்படங்கள் உருவாக்குவதின் மீது 20 வருட தடை ஏற்படுத்தப்பட்டு 2010-ல் அவர் வீட்டுச் சிறையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இது தளர்த்தப்பட்டு ஈரானை விட்டு வெளியேறக் கூடாது என்கிற நிலையுள்ளது. அவருடைய திரைப்படங்கள் சர்வதேச விழாக்களில் பங்கேற்கப்பட்டு விருதுகள் வாங்கினாலும்  ஈரானில் திரையிடப்படாத நிலைமையே இன்னமும் உள்ளது.

என்றாலும் தடையுத்தரவுக் காலங்களிலும் அவர் திரைப்படங்களை உருவாக்கும் உத்வேகத்தை எவராலும் தடுக்க முடியவீல்லை. தன் மீதான தடையுத்தரவு அனுபவங்களை வைத்து வீட்டின் உள்ளேயே அவர் 2011-ல் உருவாக்கிய  This Is Not a Film என்கிற ஆவணப்படம் மிக ரகசியமாக ஒரு கேக்கினுள் மறைத்து வைக்கப்பட்டு கான் திரைப்பட விழாவில் பிரத்யேகமான அனுமதியுடன் திரையிடப்பட்டது.

கடுமையான அடக்குமுறைகளைத் தாண்டியும்  பனாஹியின் திரைப்படங்கள் உருவாகிக் கொண்டுதான் இருக்கின்றன. '’நான் திரைப்படங்கள் உருவாக்குவதை எவராலும் தடுக்க இயலாது; என்னை முடக்குவதற்கான ஒவ்வொரு முயற்சியின் போதும், திரைப்படங்களை உருவாக்கும் வெறி அதிகமாக எனக்குள் கிளர்ந்தெழுகிறது’ என்பது அவருடைய சமீபத்திய அறிக்கையின் ஒரு பகுதி.

இந்தச் சூழலில் 2015-ல் அவர் உருவாக்கியிருக்கும் docufiction பாணியிலான அவருடைய படைப்பே Taxi. பெர்லின் திரைப்பட விழாவில் பங்கேற்று விருது பெற்றதோடு  FIPRESC விருதையும் பெற்றுள்ளது.

இயக்குநர் பனாஹி ஓட்டும் ஒரு காரில் டெஹ்ரானின் பல்வேறு தரப்பிலான மக்கள் பயணம் செய்கின்றனர். அவர்களின் உரையாடல்களின் மூலமும் காட்சிகளின் மூலமும் அந்த  தேசத்து மக்களின் வாழ்வியல் அனுபவங்களும் அரசியல் அடக்குமுறைகளும் மதம் சார்ந்த எண்ணங்களும் வெளிப்படுகின்றன. காரின் உள்ளேயே அமைக்கப்பட்டிருக்கும் கேமராக்களின் மூலம் முழு திரைப்படமும் உருவாகியுள்ளது. மக்களின் மீதான கண்காணிப்பு அரசியலைப் பற்றியே இத்திரைப்படம் பல்வேறு குறியீட்டுக்காட்சிகளின் மூலமாக உரையாடுகிறது.

ஒரேயொரு உதாரணக் காட்சியை சொல்ல வேண்டுமென்றால், பனாஹி,  தன்னுடைய உறவினரான ஒரு பள்ளிச் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். ஒரு சிறிய ஆவணப்படத்தை எடுக்க வேண்டுமென்பது அவளுடைய ஆசிரியை தந்திருக்கும் குறிப்பு. அதை உருவாக்குவதற்கான விதிகளையும் நிபந்தனைகளையும் பனாஹிக்கு வாசித்துக் காட்டுகிறாள் சிறுமி. அது சார்ந்து அவளுக்கு பல குழப்பங்கள் உள்ளன. இந்த உரையாடலின் மூலம் படைப்பாளிகளின் மீது அந்த தேசம் வைக்கும் கருத்துரிமை சார்ந்த தடைகளில் உள்ள அபத்தங்களை இயக்குநர் மறைமுகமாக உணர்த்தி அந்த உரையாடலை அற்புதமானதொரு பகடியாக்குகிறார். உலக சினிமா தொடர்பான திருட்டு டிவிடிகளை விற்கும் ஒருவரும் பனாஹியின் வாகனத்தில் பயணிக்கிறார். இவ்வாறு பல சுவாரசியமான அனுபவங்கள் இத்திரைப்படத்தில் பதிவாகியுள்ளன. இவைகளின் ஊடே அடக்குமுறையின் அரசியலின் வலியும் மிக அழுத்தமாக வெளிப்படுகிறது.



Rams  | 2015 |  Iceland | Dir: Grímur Hákonarson

பொருளாதாரக் காரணங்களையும் தாண்டி விலங்கின் மீது மனிதன் கொள்ளும் நேசத்தை நெகிழ்வான காட்சிகளுடன் உரையாடும் திரைப்படம் இது. பகைவர்களாக இருந்தாலும் நெருக்கடியான சமயத்தில் சக மனிதனின் மீதான நேசமும் அக்கறையும் பட்டுப் போகாது என்கிற செய்தியும் இணைக்கோடாக பயணிக்கிறது.

குடும்பத் தகராறு காரணமாக சுமார் 40 வருடங்களாக ஒருவரோடு ஒருவர் பேசாமல் அருகருகேயான வீட்டில் வாழ்பவர்கள் ராம்ஸ் சகோதரர்கள். ஆடு வளர்ப்பு அவர்களின் பரம்பரைத் தொழில். இதற்கான விருதுகளை மாறி மாறி வாங்குகிறார்கள். இது தொடர்பாக அவர்களுக்குள் போட்டியும் பகையும் கசப்பும் உண்டு. அண்ணனின் ஆடு ஒன்று இறந்து கிடப்பதைக் காணும் இளையவருக்கு அது அரியவகை தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்குமோ என்கிற சந்தேகம் வருகிறது. பல வருடங்களுக்கு முன்பு இருந்த அந்த நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாக  அரசு கருதிக் கொண்டிருக்கிறது.

அது உண்மையானால் இழப்பு அவருக்கும்தான். ஏனெனில் அந்த நோய் மேலும் பரவாமல் இருக்க அந்தப் பகுதியில் உள்ள அனைத்து ஆடுகளையும் அரசு அழித்து விடும். இதை அறிந்தும் இளையவர் தொடர்புள்ள துறைக்கு தகவல் தெரிவித்து விடுகிறார். இவர்தான் தகவல் தெரிவித்திருப்பார் என்று யூகிக்கும் மூத்தவர் இவரைக் கொல்ல துப்பாக்கியுடன் வர களேபரமாகிறது. சோதனையின் முடிவில் அந்த நோய் பரவியிருப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த இரண்டு சகோதரர்கள் உட்பட அனைத்து ஆடு வளர்ப்பாளர்களும் சோகமாகின்றனர். அனைத்து ஆடுகளும் வலுக்கட்டாயமாக கைப்பற்றப்பட்டு அது  தொடர்பான அனைத்து சாதனங்களும் அழிக்கப்படுகின்றன. பொருளாதார நஷ்டத்தால் இந்த தொழிலையே விட்டு பலர் விலகி விடுகின்றனர்.

ஆனால் இளைய சகோதரர் யாருக்கும் தெரியாமல் தன்னுடைய வீட்டின் அடித்தளத்தில் சில ஆடுகளை ஒளித்து வைத்து ரகசியமாக வளர்க்கிறார். அவற்றை வைத்து  இனப்பெருக்கம் செய்ய திட்டமிடுகிறார். இந்த ரகசியம் ஒரு சமயத்தில் அவரது நிரந்தரப் பகையாளரான அண்ணனுக்கு தெரிய வருகிறது. பிறகு என்ன ஆகிறது என்பதை பதட்டமும் நெகிழ்வுமான காட்சிகளுடன் படம் விவரிக்கிறது. உயிர் போகும் அபாயத்தில் இரண்டு சகோதரர்களும்  பரஸ்பரம் இணைவது  ஒரு கவிதையான காட்சி. மிக  சுவாரசியமான திரைப்படம்.





Embrace of the Serpent  | 2015 | Colombia | Dir: Ciro Guerra



இத்திரைப்படம் ஓர் அற்புதமான அனுபவம். கொலம்பியா நாட்டுத் திரைப்படம். ஆஸ்கர் விருதிற்காக அந்த நாட்டின் சார்பில் அனுப்பப்பட்டு இறுதிச் சுற்றிலும் இடம் பிடித்திருக்கிறது.

சமகாலத்திலிருந்து உங்களை முற்றிலும் துண்டித்து பழகிய அனுபவங்களிலிருந்து விலக்கி முற்றிலும் ஒரு புதிய உலகத்தையும் மனிதர்களையும் காட்சிகளையும் அறிமுகப்படுத்துவரை சிறந்த 'படைப்பாளர்' எனலாம். அந்த வகையில் இத்திரைப்படத்தின் இயக்குநர் Ciro Guerra -வை சிறந்த படைப்பாளி எனலாம். இரண்டு மணி நேரத்தில் அமேசான் காட்டினுள் பழங்குடியுடன் உலவிய நல்ல அனுபவம்.

அமேசான் வனத்தின் பழங்குடிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் ஜெர்மனிய ஆய்வாளரான தியோடரின் உடல்நிலை குன்றுகிறது. ஓர் இனக்குழுவில் மிஞ்சியிருக்கும் ஒரே நபரான Karamakate வை அணுகுகிறார்கள். அவனுடைய உதவியுடன் yakruna என்கிற அரிய தாவரத்தைக் கண்டுபிடித்தால் ஆய்வாளரைக் குணப்படுத்தி விட முடியும்.

மேற்குறிப்பிட்ட தியோடரின் ஆய்வுகளைப் படித்த அமெரிக்க ஆய்வாளரான ரிச்சாட் இவான்ஸ் ஏறத்தாழ முப்பத்தோரு ஆண்டுகள் கழித்து அந்த தாவரத்தை தேடி வருகிறார். வயதான Karamakate வை அணுகுகிறார். அவர் தேடி வந்தது தாவரத்தைத்தானா?

1909, 1940 என்று இந்த இரண்டுக் காலக்கட்டத்தின் அனுபவங்களும் துண்டு துண்டாக அடுத்தடுத்து சொல்லப்படும் திரைக்கதையின் மூலம் பழங்குடிகளின் துயரம் விரிகிறது. காலனியாதிக்க நாடுகள் இயற்கை வளங்களைச் சுரண்டும் நோக்கில் வனங்களில் புகுந்து பழங்குடிகள் மீது செலுத்தும் வன்முறை, மனிதர்கள் புக சிரமமான இடங்களில் கூட கிறிஸ்துவ மிஷினரிகள் செய்யும் மத ஆதிக்கம், வணிகம், சிறுவர்களின்உழைப்புச் சுரண்டல், நாகரிக உலகின் ஆதிக்கத்தை தார்மீக கோபத்தோடும் பகடியோடும் அணுகும் Karamakate -ன் சிறப்பான வசனங்கள் என்று இரண்டு காலக் கட்டங்களும் அபாரமான நோக்கில் விரிகின்றன.

ரப்பர் மரம் இயற்கையமைப்பின் மீது செலுத்தப்படும் வன்முறை என்பது பழங்குடிக்கு தெரிகிறது. ஆனால் பணத்தாசை பிடித்த முதலாளித்துவ உலகத்திற்கு அது தெரிவதில்லை. இயற்கையை விட்டு விலகவே விரும்பாத அதன் ஒவ்வொரு செயற்பாடுகளிலும் பொருள் பொதிந்த அர்த்தம் உள்ளது என்று மனமார நம்புகிற பழங்குடிகளின் மனநிலை இத்திரைப்படத்தில் சிறப்பாகப் பதிவாகியுள்ளது.

அமேசான் காட்டின் பின்னணி என்பதால் அற்புதமான இயற்கையை வண்ணத்தில் பதிவு செய்யும் அபத்தத்தை படம் செய்வதில்லை. மாறாக காலத்தின் குறியீட்டு அர்த்தமாக கருப்பு -வெள்ளையிலேயே முழுத் திரைப்படமும் பதிவாகியிருக்கிறது. ஆய்வாளர்களின் குறிப்புகளின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.





Heneral Luna  | 2015 | Philippines | Dir: Jerrold Tarog

பிலிப்பைன்ஸ் நாட்டு  தயாரிப்பு. சமகால வரலாற்றால் புரிந்து கொள்ளப்படாத, ஏற்றுக் கொள்ளப்படாத, பாடப்படாத ஒரு நாயகனின் சரிதம்.

ஸ்பெயினிடம் காலனி நாடாக இருக்கும் பிலிப்பைன்ஸ் அமெரிக்காவின் வருகையால் கைமாறப்போகும் தருணம். வருடம் 1898. நாட்டின் தலைவரும் அரசியல் பெருச்சாளிகளும் ஊழல் வியாபாரிகளும் தங்களின் சுயநலம் காரணமாக அமெரிக்காவிடம் சரணடைந்து உயிரையும் தொழிலையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று விவாதிக்கும் போது ராணுவ ஜெனரல் லூனா மாத்திரம் 'அடிமையாக இருப்பதை விட போரிட்டு உயிரை விடுவோம்' என்று ஆவேசப்படுகிறார். அவர் நாட்டுக்கு விசுவாசமானவராக இருந்தாலும் முரட்டுத்தனமானவராகவும் பிடிவாதக்காரராகவும் இருப்பதால் ஊழல்வாதிகளால் வெறுக்கப்படுகிறார்.

உயிரைப் பணயம் வைத்து இருக்கும் சொற்ப வீரர்களையும் உற்சாகப்படுத்தி அமெரிக்கப் படைகளிடம் ஆவேசமாகப் போரிடும் லூனாவிற்கு உள்நாட்டு அரசியல் காரணமாகவே தன் சொந்த நாட்டின் மூலமாகவே தடைகளும் எதிர்ப்புகளும் ஏற்படுகின்றன. சில பிரிவினர் அவருடன் ஒத்துழைக்க மறுக்கின்றனர். அவ்வாறானவர்களை தம்முடைய அதிகாரத்தின் மூலம் பணிய வைக்கிறார் லூனா. அமெரிக்கா என்கிற பொது எதிரியை ஒழிக்க இணைந்து பணிபுரிய வேண்டும் என்கிற அவருடைய நேர்மையான ஆவேசம் யாருக்கும் புரிவதில்லை. இறுதியில் தம்முடைய நாட்டு துரோகிகளாலேயே முதுகில் குத்தப்பட்டு இறக்கிறாார் லூனா. (இந்தக் காட்சி அபாரமாக பதிவாகியுள்ளது).

Antonio Luna என்கிற பிலிப்பைன்ஸின் புரட்சிப்படை தளபதியின் சுயசரிதத்தை ஒட்டியும் உண்மையான வரலாற்றுத் தகவல்களின் மீதும் இதன் திரைக்கதை (சற்று கற்பனை கலந்து) அமைக்கப்பட்டுள்ளது. லூனாவாக John Arcilla அபாரமாக நடித்துள்ளார். ஆவேசமும் பிடிவாதமும் கடினமான தருணங்களில் நகைச்சுவையுமாக அமைந்த இவரின் நடிப்பு அற்புதம். மேக்கிங் சற்று சுமார்தான் என்றாலும் பிலிப்பைன்ஸ் திரைவரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் உருவான படம் என்கிறார்கள். அதற்கேற்ப வசூலையும் பெற்றுள்ளது.


Enclave   | 2015 | Germany -Serbia | Dir: Goran Radovanović

செர்பியன் திரைப்படம். Enclave. போர் மற்றும் மதப்பகை காரணமாக பெரும்பான்மையினரின் இடையே வாழநேரும் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் அன்றாட வாழ்வின் சிக்கல்கள் ஒரு குடும்பத்தின் மூலமாக குறிப்பாக சிறுவர்களின் மூலமாக சொல்லப்படுகிறது. அந்தப் பகை இளநெஞ்சங்களிடமும் எப்படியொரு வன்மமாக பரவி பிறகு எப்படி தெளிகிறது என்பதை நெகிழ வைக்கும் காட்சிகளால் சொல்லியிருக்கிறார்கள்.

போருக்குப் பிறகான செர்பியாவின்  ஒரு சர்சைக்குள்ள பகுதிப் பிரதேசம். அல்பேனியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வசிக்கும் ஓரிரு செர்பியக் குடும்பங்கள். சிறுவன் Nenad மூடப்பட்ட பீரங்கியின் உள்ளே அமர்ந்துதான் பள்ளிக்கு செல்ல வேண்டியிருக்கிறது.அல்பேனிய சிறுவர்கள் பீரங்கியின் மீது கல்லெறிவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். தாயை  இழந்த Nenad கண்டிப்பான தந்தையிடம் வளர்கிறான். நோய்வாய்ப்பட்டிருக்கும் தாத்தாதான் அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

அங்குள்ள சில அலபேனிய சிறுவர்கள் இவனிடம் பழகத் துவங்குகிறார்கள். அவர்களில் ஒருவனுக்கு  Nenad-ன் மீது உள்ளுக்குள் பகைமையும் கசப்பும் ஊறிக்  கிடக்கிறது. அவனுடைய தந்தையின் சாவிற்கு Nenad-ன் தந்தைதான் காரணம் என நம்புகிறான். இவர்கள் விளையாடும் போது ஒரு சமயத்தில் Nenad தன்னிடம் மன்னிப்பு கேட்க வலியுறுத்துகிறான். Nenad அதற்கு மறுத்து விட ஒரு பிரம்மாண்டமான தேவாலய மணியின் உள்ளே Nenad சிக்கிக் கொள்வதை யாருக்கும் சொல்லாமல் மறைத்து விடுகிறான். Nenad-ன் தாத்தா இறந்து விட இவனைத் தேடும் அவனது தந்தை  இவனைக் காணாமல் அங்குள்ள பகைமையை சகிக்க முடியாமல் ஊரை விட்டு விலகுகிறார். பிறகு நிகழ்கிற காட்சிகளை பதைபதைப்பும் நெகிழ்வுமாக மீதிப்படம் விவரிக்கிறது.

மதம் சார்ந்தோ இனம் சார்ந்தோ எத்தனை வரலாற்றுப் பகை இருந்தாலும் சக மனிதனின் மீதான அன்பை அதுவெல்ல முடியாது என்பதை சிறுவர்களின் பார்வையில் அற்புதமான பதிவாக்கியிருக்கிறார் இயக்குநர்.




Death of the Fish  | 2015 |  Iran| Dir: Rouhollah Hejazi

ஒரு குடும்பத்தின் தாயார் இறந்து போகிறார். அவருடன் பணிப்பெண் மாத்திரம் இருந்திருக்கிறார்.

'நான் இறந்து போனால் என்னுடைய சடலத்தை மூன்று நாட்கள் வீட்டில் வைத்திருந்து பிறகுதான் புதைக்க வேண்டும். அதுவரை உறவினர்களுக்கும் சொல்லக்கூடாது. என்பது இறந்தவரின் கடைசி விருப்பம். பணிப்பெண் சொல்லித்தான் குடும்ப உறுப்பினர்களுக்கு இது தெரிகிறது. மரபிற்கு எதிரான இந்த விருப்பம் அவர்களுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. சர்ச்சையும் விவாதமும் வெடிக்கின்றன. பணிப்பெண் மீது ஐயப்படுகிறார்கள்.

ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதமான பிரச்சினைகளிலும் உறவுச் சிக்கல்களிலும் இருப்பது மெல்ல மெல்ல புலனாகிறது. வீட்டின் தரைத்தளத்தில் சடலத்தை வைக்கிறார்கள். இதற்கிடையில் ஊருக்குச் செல்லும் பணிப்பெண் திரும்ப வருவதில்லை. இறந்து போனவர் பாதி சொத்தை பணிப்பெண்ணின் பெயரில் எழுதி வைத்திருக்கிறார். மீண்டும் குழப்பம், சர்ச்சை. விவாதம்.

தாய் இறக்கும் போது இத்தனை அழுது துயரப்படும் அவர்கள் உயிருடன் இருந்த போதுஅவரை மிக அரிதாகத்தான் வந்து பார்த்திருக்கிறார்கள் என்பதும் பணிப்பெண்தான் இறந்தவரின் உறுதுணையாக இருந்திருக்கிறார் என்பதும் மெல்ல புலனாகிறது.

கடைசி மூன்று நாட்களாகாவது குடும்ப உறுப்பினர்கள் தாயின் நினைவிலும் அவரின் அருகாமையிலும் இருக்க வேண்டுமென்பதற்காகத்தான் இறந்தவர் அப்படியொரு கடைசி விருப்பத்தை தெரிவித்திருக்கலாம் என யூகிக்க முடிகிறது.படம் சாவகாசமாக நகர்ந்தாலும் இறுதி வரைக்கும் பார்க்க வைக்கும் சிறிய கொக்கியை இயக்குநர் நுட்பமாக செருகி வைத்திருந்தார்.

பொதுவாக இரானிய திரைப்படங்கள் குடும்ப உறவுச்சிக்கல்களை, குடும்ப வன்முறைகளை மிக நுட்பமாகவும் நிதானமான அழகியலுடனும் காட்சிப்படுத்துகின்றன. இத்திரைப்படமும் அதிலொன்று.



***

இங்கு அறிமுகப்படுத்திருக்கும் திரைப்படங்கள் இந்த விழாவின் ஒரு துளி அறிமுகமே. இதைத் தவிரவும் பல உன்னதமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன. பல்வேறு தேசங்களின் கலாச்சாரத்தையும் அவற்றின் சமீபத்திய சிறந்த திரைப்படங்களின் உள்ளடக்கத்தையும் உருவாக்கத்தையும் அறிந்து கொள்ள இந்த திரைவிழா பெரிதும் உதவியது. நம்முடைய கலை சார்ந்த ரசனையையும் கலாசார மேம்பாட்டையும் உயர்த்திக் கொள்ள இது போன்ற திரைப்படங்கள் உதவுகின்றன. கடுமையான தணிக்கையும் அடக்குமுறையும் கொண்ட ஈரான் போன்ற தேசங்களில் இருந்து கூட எளிமையான ஆனால் அழுத்தமான அரசியல் விமர்சன திரைப்படங்கள் வெளியாகும் துணிவு பிரமிக்க வைக்கிறது.

இங்குள்ள திரையுலக சூழலோடு  ஒப்பிடும் போது நாம் கடக்க வேண்டிய தூரம் பிரம்மாண்டமாக இருக்கிறது என்பதையே இந்தப் படைப்புகள் உணர்த்துகின்றன.


(அம்ருதா இதழில் பிரசுரமானது) 

 

suresh kannan

Wednesday, December 20, 2017

A Man of Integrity - ஈரான் - சென்னை சர்வதேச திரைவிழா 2017


சென்னை சர்வதேச திரைவிழாவில் 19.12.2017 அன்று  மாலை பார்த்த ஈரானிய திரைப்படம் இது. 'இந்த சமூகத்தில் வாழ இரண்டு தேர்வுகள்தான் உள்ளன. ஒன்று ஒடுக்கப்பட்டவனாக இருக்க முடியும் அல்லது ஒடுக்குகிறவனாக. - என்பதுதான் இத்திரைப்படத்தின் மையம். 'அறத்திற்கும் கீழ்மைக்கும் இடையில் தத்தளிக்கும் ஒரு மனிதனைப் பற்றிய சித்திரம் இது. 

**

ஓர் ஈரானிய கிராமம். ரேஸா சிறிய அளவிலான மீன்பண்ணை தொழில் செய்கிறான். அவனுடைய மனைவி பள்ளியில் தலைமை ஆசிரியை. ரேஸா அடிப்படையில் நேர்மைக்குணம் படைத்தவன். 'கொஞ்சம் பணம் செலவு செஞ்சா உன் கடனை லேட்டா கட்ற மாதிரி மாத்தி தர்றேன்' என்று வங்கி அதிகாரி லஞ்சம் கேட்கும் போது முதலில் சற்று சஞ்சலப்பட்டு பிறகு உறுதியுடன் அதிக வட்டி செலுத்தினாலும் பரவாயில்லை என்று ஒழுங்கான வழியில் செல்கிறான்.

அவனுடைய நிலத்தை அபகரிப்பதற்காக அருகில் உள்ள தொழிற்சாலை நிறுவனம் ஒன்று பல்வேறு வழிகளில் இடைஞ்சல் செய்கிறது. ரேஸா நேர்மையாளனாக இருந்தாலும் அடிப்படையில் கோபக்காரன். தொழிற்சாலை ஊழியர் ஒருவருடன் நிகழும் கைகலப்பில் சிறைக்குச் செல்கிறான். பலமுள்ள எதிர் தரப்பு நிறைய பொய் சாட்சியங்களை வைத்திருக்கிறது. லஞ்சம் தர விரும்பாத ரேஸா நெருக்கடிகளை சந்திக்கிறான்.

அவனுடைய மனைவி உலக நடைமுறைகளை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டுள்ளவள். எனவே தன் சகோதரனின் உதவியால் கணவனை வெளியே அழைத்து வருகிறாள். புற அழுத்தங்கள் வீட்டின் உள்ளேயும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. குடும்ப உறவில் சில சிக்கல்களும்.

தொழிற்சாலை மறைமுகமாக தன் மீது நிகழ்த்தும் அநீதிகளை சட்டத்தின் வழியாக எதிர்கொள்ள எல்லா வழிகளையும் முயல்கிறான் ரேஸா. ஆனால் ஊழலும் லஞ்சமும் நிறைந்திருக்கிற அமைப்பின் கதவுகள் ரேஸாவிற்கு திறக்க மறுக்கின்றன. ஒரு கட்டத்தில் எதிராளியைப் பழிவாங்கும்  எண்ணம் இவனுக்குள் பெருகிக் கொண்டே போக, அறத்திற்குப் புறம்பான செய்கையில் ஈடுபடுகிறான். இவனுக்கு வெற்றி கிடைப்பது மட்டுமல்லாமல் அங்கீகாரமும் தேடி வருகிறது. ஆனால் அதை சுவைக்க முடியாமல் குற்றவுணர்வுடன் ரேஸா அழுவதுடன் படம் நிறைகிறது. 


**

படம் முழுவதும், இறுக்கமும் கோபமும் பொங்கி வழியும் முகமாக நடித்திருக்கும் Reza Akhlaghirad-ன் பங்களிப்பு அபாரமானது. இவரது மனைவியாக நடித்திருக்கும் Soudabeh Beizaee-ன் நடிப்பும் அற்புதம். ரேஜஸாவின் மனைவியும் நேர்மையானவர்தான். ஆனால் சூழல் அவரையும் தீமையின் பக்கம் நகரச் செய்கிறது. தன்னுடைய தலைமையாசிரியை பதவியைப் பயன்படுத்தி, கணவனின் எதிராளி மகளை அழைத்து மறைமுகமாக மிரட்டுகிறாள். அப்போது அவர் சொல்லும் வசனம் ஒன்று அபாரமானது. "ஆண்கள் தங்களின் பெருமிதம் காரணமாக நிகழ்த்தும் சச்சரவுகளையெல்லாம் பெண்கள்தான் தங்களின் நுண்ணறிவு கொண்டு போக்க முயல வேண்டும்"

பிடிவாத  நேர்மையுடன் இருக்கும் ரேஸா, மனம் மாறும் கட்டமும் நுட்பமானது. ஆட்சிக்கு எதிராக செயல்படும் அவனுடைய நண்பன் சில வருடங்களாக சிறையில் இருக்கிறான். அவனுடைய மனைவி சாலையில் உணவுப் பொருட்கள் விற்கும் பரிதாப நிலையைப் பார்க்கிறான் ரேஸா. 'என் கனவுகள் முழுவதும் கலைந்து விட்டன' என்று அழுகிறாள் அவள். ஆனால் தன் கணவனின் தியாகம் குறித்தான பெருமையும் அவளிடம் இருக்கிறது. 

கான் திரைப்பட விழாவில் சிறப்பு விருது பெற்றிருக்கும் இத்திரைப்படம் மிக நிதானமாக ஆனால் அழுத்தத்துடன் தன்னுடைய மையத்தை நோக்கி நகர்கிறது. நேராக சித்தரிக்காமல் குறிப்பால் உணர்த்தும் பல நுட்பமான காட்சிகள் நிறைந்துள்ளன. எந்தப் பக்கம் திரும்பினாலும் லஞ்சத்தின் பக்கம் முட்டிக் கொள்ளுமளவிற்கு சமூக அமைப்பு கெட்டிருப்பது உலகளாவிய பிரச்சினைதான் போல.  இயக்கம்: Mohammad Rasoulof.

suresh kannan

Monday, December 18, 2017

Daybreak (அல்பேனியா) – சென்னை சர்வதேச திரைவிழா 2017


சில பல காரணங்களால் இவ்வருட விழாவிற்கு செல்ல வேண்டாம் என்று முன்பே முடிவெடுத்தேன். எனவே அது தொடர்பான செய்திகளை பார்ப்பதை கூடுமானவரை தவிர்த்தேன். என்றாலும் மனதின் ஒரு பகுதி தன்னிச்சையாக அதன் பக்கம் குவிந்து கிடந்தது. அலுவலகத்திலும் சற்று புலம்பிக் கொண்டேயிருந்தேன்.

ஒரு விஷயத்தின் மீது உங்களுக்கு ஆத்மார்த்தமான ஈடுபாடு இருந்தால் அதுவாக உங்களைத் தேடி வரும் என்றொரு விதியும் பழமொழியும் இருக்கிறது. விழா துவங்கி நாலைந்து நாள் கழித்து நண்பர் கே.என்..சிவராமன் அழைத்தார். “ஏன் இவ்வருடம் செல்லவில்லையா? முன்பே சொல்லியிருக்கலாமே” என்று உரிமையாக கடிந்து கொண்டு அதற்குரிய ஏற்பாட்டைச் செய்து தந்தார்.

அதுவரை சோம்பியிருந்த மனமும் உடலும் மினஇணைப்பு தரப்பட்ட இயந்திரம் போல ‘விர்ரென்றாகியது. அலுவலகப் பணிகளை விரைவிரைவாக செய்து முடித்தேன். அதற்கு இடையில், மாலையில் திரையிடப்படவிருக்கிற படங்களைப் பற்றிய விவரங்களை தேடினேன். அவசரத்திற்கு IMDB-ஐ நம்பலாம்.

‘KATHIE SAYS GOODBYE’ என்கிற அமெரிக்கத் திரைப்படம் முன்னணியில் நின்றது. அதன் பிறகு ‘DAYBREAK’ என்கிற அல்பேனிய திரைப்படம். கதைச் சுருக்கங்களை வாசித்துப் பார்த்தேன்.  அல்பேனியா மெல்லுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ‘அழுகாச்சி’ டிராமாவாக இருக்குமோ என்று தோன்றியது. எனவே அமெரிக்காவை தேர்ந்தெடுத்தென்.

அலுவலகத்தில் உள்ளவர்களை நச்சரித்து சில வேலைகளை மற்றவர்களின் தலையில் தள்ளி விட்டு பாய்ந்து வெளியே வந்தேன். நேரம் சுருக்கமாக இருந்தது. அமெரிக்காவிற்கு சற்று சாவகாசமாகவும் அல்பேனியாவிற்கு உடனடியாகவும். முதல் நொடியிலிருந்து ஒரு திரைப்படத்தை பார்க்காவிட்டால் எனக்கு ‘என்னவோ’ போலிருக்கும்.

எனவே தீர்மானித்ததையொட்டி அமெரிக்காவை நோக்கி நகர்ந்தேன். ஆனால் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சரியான போக்குவரத்து நெரிசல். ‘அமெரிக்காவா, அல்பேனியாவா’ என்று இரண்டிற்கும் இடையில் மனம் ஊசலாடிக் கொண்டேயிருந்தது. அனைத்து வாகனங்களும் உறைந்தது போல அப்படியே நிற்க, என் மனம் மட்டும் முன்னே விரைந்து கொண்டிருந்தது. பதட்டம் சற்று அதிகமாக “இது தேவையா’ என்றெழுந்த கேள்வியை புறந்தள்ளினேன்.

திடீரென ஓர் அசட்டு தர்க்கம். அமெரிக்கத் திரைப்படம் என்றால் இணையத்தில், டிவிடியில் என்ற பிற்பாடு எப்படியாவது பிடித்து விடலாம். அல்பேனியா என்றால் கிடைப்பது சிரமமாகி விடும் என்று தோன்ற சட்டென்று கட்சி மாறினேன். மனம் ஒரு monkey என்பது மற்றொருமுறை நிரூபணமாயிற்று. ஆனால் இந்த சங்கடமெல்லாம் முன்னே நின்றிருந்த கிங்கரர்களுக்கு தெரியவில்லை. கல்லுளி மங்கன்களாக நின்றிருந்தார்கள்.

ஏதோ ஒர் அதிர்ஷ்ட கணத்தில் மூக்கடைப்பு விலகியது போல நெரிசல் சற்று குறைந்து பேருந்து விரைந்த போதுதான் எனக்கும் மூச்சு வந்தது. திட்டமிட்ட படி சரியான நேரத்திற்கு முன்னதாகவே காஸினோ திரையரங்கத்திற்கு வந்து சேர்ந்தேன். வாசலில் அனுமதிச்சீட்டை எவரும் கோரவில்லை என்பது ஏமாற்றமாகவே இருந்தது.

சரி, இன்று பார்த்த அல்பேனிய தேசத்து திரைப்படத்திற்கு வருவோம்.

**

DAYBREAK – இதுவொரு துயரச்சுவை கொண்ட நாடகம். Leta  என்கிற நடுத்தரவயதுப் பெண். கையில் சுமார் இரண்டு வயதுள்ள ஆண் குழந்தை. வீட்டு வாடகை தர முடியாமல் சிரமப்படுகிறாள். அவளது பொருளியல் துயரம் நிதானமாக, ஆனால் அழுத்தமாக சொல்லப்பட்டு விடுகிறது. செவிலியர் பணியில் இருந்தவள். ஆதரிக்க உற்றார்கள் இல்லாத சூழல்.

நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் கிடக்கும் ஒரு கிழவியைப் பார்த்துக் கொள்ளும் சலிப்பான பணி. என்றாலும் மிக பொறுப்பாய் அனைத்து பணிகளையும் கவனித்துக் கொள்கிறாள். சில சொந்த காரணங்களுக்காக கிழவியின் மகள், இவளிடம் சற்று பணம் தந்து விட்டு பிரான்ஸ் கிளம்பி விடுகிறாள்.

வீட்டின் உரிமையாளர் துரத்தியதும். வேறு வழியின்றி தன்னுடைய பணியிடத்திலேயே குழந்தையுடன் தங்கிக் கொள்கிறாள்.  கிழவிக்கு ஒவ்வொரு மாதமும் பென்ஷன் வருகிறது. எடுத்து வரும் தபால்காரன் 'அவள் உயிரோடு இருக்கிறாளா' என்று சோதித்து விட்டு பணத்தைத் தருகிறான். அதை வைத்துதான் செலவுகளை சமாளிக்க வேண்டிய நிலைமை.

ஊருக்குச் சென்ற மகள் திரும்பத் தாமதம் ஆக, இவளுக்கு நெருக்கடி அதிகமாகிறது. ஒரு கட்டத்தில் கிழவியின் மகளும் மருமகனும் விபத்தில் இறந்து விட்டதாக தகவல் வர இடிந்து போகிறாள். தங்க இடமும் இல்லாமல், செலவிற்கு பணமும் இல்லாத நிலையில் பென்ஷன் பணம் மட்டுமே அவளுடைய ஆதாரம்.

ஒரு கட்டத்தில் தன்னுடைய இருப்பிற்காக அவள் எத்தனை கடினமானதொரு முடிவை எடுக்கிறாள் என்பதை பரபரப்பான இறுதிக்கட்ட காட்சிகள்  விவரிக்கின்றன. Survival Instinct-ம் வறுமையும் ஒருவரை எத்தனை நெருக்கடியை நோக்கி தள்ளிச் செல்லும் என்கிற ஆதாரமான செய்தி உறுத்தாமல் மிக மிக நிதானமாக சொல்லப்படுகிறது.

உதிரிப்பூக்கள் ‘அஸ்வினி’யை நினைவுப்படுத்துவது போல சோகம் ததும்பும் முகம் Ornela Kapetani –க்கு.  முழு திரைப்படத்திலும் இவளது முகம் ஒரேயொரு முறைதான் புன்னகைக்கிறது. பென்ஷன் பணம் எடுத்து வரும் தபால்காரனை வழிக்கு கொண்டு வருவதற்காக.

மிக நிதானமாக நகரும் திரைப்படத்தில் ஒரு மெல்லிய நகைச்சுவை வெளிப்பட்டாலும் மிகையாக சிரித்து வைப்பது ‘பிலிம் பெஸ்டிவல்’ மரபு. இன்றும் அப்படியே ஆயிற்று. படுக்கை கிழவியாக நடித்திருந்தவரின் பங்களிப்பு அபாரம். வெளியே சென்று விட்டு கதவைத் திறந்து வருபவள், படுக்கையில் கிழவியைக் காணவில்லை என்பதும் பதறி விடுகிறாள். நமக்கும் அந்தப் பதட்டம் தொற்றுகிறது. ஆனால் கிழவி, இவளுடைய குழந்தையை வைத்துக் கொண்டு ஜம்மென்று உட்கார்ந்திருக்கிறாள்.

நிலவு நட்சத்திரங்களைப் பற்றி கிழவி பேசுவதும், ‘என்னைப் பற்றி ஒருமுறை கூட விசாரிக்கவில்லையா?” என்று தொலைபேசியில் மகள் விசாரிப்பதும் என படத்திற்குள் சில நுட்பமான விஷயங்கள் ஒளிந்துள்ளன.

அகாதமி விருதிற்காக அல்பேனியா தேசத்தின் சார்பில் தேர்வாகி அனுப்பப்பட்டிருக்கிற திரைப்படம்.  டிராமா பிரியர்கள் நிச்சயம் பார்க்கலாம்.

**

மிச்சமிருக்கிற நாட்களில் நேரத்தை பிழிந்து எப்படியாவது சில திரைப்படங்களை பார்க்கலாம் என உத்தேசம். இந்த முறை அண்ணாசாலையில், அருகருகிலேயே அரங்கங்கள் அமைந்திருப்பது ஒரு நல்ல விஷயம். ஆனால் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கென்று கட்டப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த கலைவாணர் அரங்கம் தயாராகியும் அது ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தெரியவில்லை. என்ன அரசியலோ?

suresh kannan

Friday, January 10, 2014

உலக சினிமா எனும கற்பிதம்


தமிழ் சினிமா தொடர்பாக சமீபத்தில் சென்னையில் நிகழ்ந்த கருத்தரங்கம் ஒன்றில் சினிமா ஆய்வாளரான எம்.எஸ்.எஸ். பாண்டியன், 'இந்திய சினிமா என்கிற ஒன்று இருக்கிறதா?' என்கிற முக்கியமான கேள்வியை முன்வைத்தார். பல்வேறு பிரதேசங்களால், கலாசாரங்களால், மொழிகளால் பிரிந்திருந்தாலும் ஜனநாயகம் என்கிற கயிற்றினால் கட்டப்பட்டிருக்கும் இந்தியாவில் 'இந்திய சினிமா' என்கிற பதமே ஒரு மாயை என்கிற வகையில் பாண்டியனின் கருத்தை புரிந்து கொள்ளலாம். அந்தந்த பிரதேசத்து மக்களுக்காகவே அந்தந்த பிரதேசங்களின் சினிமாக்கள் உருவாகின்றன. ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தின் கலாசாரத்தை, மொழியை அறியாமல் அந்த சினிமாவை முழுவதுமாக நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியாது. இப்படி தடையாக, இது உள்ளிட்ட பல காரணிகள் இருக்கும் போது இந்திய சினிமா என எப்படி அழைக்க முடியும் என்பதும் அதன் நூற்றாண்டை கொண்டாட முடியும் என்பதும் புறந்தள்ள முடியாத கேள்வி. மேலும் இங்கு இந்திய சினிமா என்பதே ஹிந்தி சினிமா என்பதாக முன்வைக்கப்படும் அபத்தத்தையும் நாம் கவனிக்க வேண்டும்.

பாண்டியன் மேலும் உரையாடும் போது இன்னமும் நுட்பமாக சென்று  'தமிழ் சினிமா அல்லது தமிழர் சினிமா என்ற ஒன்றும் இருக்கிறதா?' என்கிற கேள்வியை முன்வைக்கிறார். 'இந்து புராணப் படங்களை இசுலாமியர்கள் பார்ப்பதில்லை. தேவர் மகன் திரைப்படத்தை ஒரு தலித் எப்படி கவனிப்பார், விஸ்வரூபம் திரைப்படத்தை ஒரு இசுலாமியர் எவ்வாறு புரிந்து கொள்வார்' என்பது போன்ற கேள்விகளின் இதைப் புரிந்து கொள்ள முடியும். 'இந்திய சினிமா என்பது தேசியக் கட்டமைப்பை அமைக்க முயன்று தோற்றுப் போனதொரு முயற்சி' என்பதாக அவர் சிறப்புரையின் நிறைவுப்பகுதி அமைந்திருந்தது.

இந்தக் கருத்தாக்கத்தின் மீது சிந்திக்கும் போது உலக சினிமா என்பதும் ஒரு கற்பிதம் எனும் முடிவிற்கு வரவேண்டியிருக்கிறது. மேலும் வணிக சினிமாக்களினால் மூழ்கடிக்கப்பட்ட பொதுப்புத்தி சார்ந்த மனங்கள் 'உலக சினிமா' எனும் சொல்லை எப்போதுமே எள்ளி நகையாடக்கூடிய ஒரு விஷயமாகவே பார்க்கின்றன. தமிழ்நாடு என்கிற பிரதேசம் உலகப்பந்திற்குள் இருக்கும் போது அதில் உருவாக்கப்படும் திரைப்படங்கள் 'உலக சினிமா' எனும் வகைமையில் வராதா என்பது இவர்கள் சாமாத்தியமாக  கேட்பதாக நினைத்து கேட்கும் பாமரத்தனமான கேள்விகளுள் ஒன்று.

எனில் உலக சினிமா என்பது ஒரு கற்பிதந்தானா? அந்தந்த பிரதேசங்களின் தனித்தன்மைகளைத் தாண்டி கலை ரசனை என்கிற நோக்கில் பிரதானப்படுத்தி பார்த்தால் அப்படியொரு வகைமை இருப்பதைப் பாாக்கலாம். உலகத்தின் மிகச் சிறந்த திரைப்படங்கள் என்று விமர்சகர்களாலும் திரை ஆர்வலர்களாலும் கொண்டாடப்படும் நூறு திரைப்படங்களை எடுத்துப் பார்த்தால் மொழி,கலாசாரம் இன்னபிற தடைகளைத்தாண்டி அதன் உள்ளடக்கம், அரசியல், திரைமொழி, காட்சிகளின் உருவாக்கம், நகர்வு ஆகிய பலவற்றில் ஒரு பொதுத்தன்மை இருப்பதைக் கவனிக்கலாம். மானுடத்தின் ஆதாரமான சில பிரச்சினைகள், அகச்சிக்கல்கள், அதன் மீதான அக்கறை மற்றும் பரிவு, கரிசனம் ஆகிய உலகமெங்கிலும் எளிய மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் பிரச்சினைகளைப் பற்றி உரையாடுவதைக் காணலாம். உலகமெங்கிலும் சிலாகிக்கப்பட்ட இத்தாலிய திரைப்படமான டிசிகாவின் 'பைசைக்கிள் தீவ்ஸ்'ஸை தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ளவனாலும் புரிந்து கொள்ள முடியும். அதைப் புரிந்து கொள்ள அப்போதைய இத்தாலியின் அரசியல் பின்புலத்தை அறிந்திருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. அது போலவே இத்தாலியில் உள்ள திரைப்பட பார்வையாளனாலும்  சத்யஜித்ராயின் 'பதேர் பாஞ்சாலி'யை புரிந்து கொள்ள முடியும். வறுமைக்கு இடையிலும் மானுடத்தை பிணைத்து வைத்திருக்கும் அன்பை, பாசத்தை அதன் நெகிழ்வு என்கிற இழை இரு பிரதேசத்து மனிதர்களையும் முனைகளையும் இணைக்க முடியும்.


ஒரு காலத்தில் திரைப்படச் சங்கங்களினாலும் ஆர்வலர்களினாலுமே சாத்தியப்பட்ட உலக சினிமாக்களின் பரிச்சயம் நுட்பத்தின் சாத்தியத்தால் இன்று இணையத்தினாலும் குறுந்தகடுகளினாலும் எளிதில் கிடைக்கக்கூடிய விஷயமாக மாறி விட்டது. கள்ளத்தனமான, தார்மீக ரீதியற்ற நுகர்வு என்பது இதிலுள்ள பிரதான குறைகளுள் ஒன்று. விளம்பரத் தொல்லைகளையும் கலாசாரக் காரணங்களுக்காக துண்டிக்கப்படும் காட்சிகள் போன்றவற்றை சகித்துக் கொண்டால் சில தொலைக்காட்சிகளும் உலக சினிமாக்களை இன்று ஒளிபரப்புகின்றன. இந்திய அரசு முன்னின்று நிகழ்த்தும் சர்வதேச திரைவிழாவைத் தவிர சில மாநிலங்களில் அரசினாலும் சில மாநிலங்களில் அங்குள்ள தன்னார்வலர்களினாலும் திரைவிழாக்கள் சாத்தியப்படுகின்றன.

அவ்வகையில் சென்னையில் 11வது சர்வதேச திரைப்படவிழா சமீபத்தில் நிகழ்ந்து முடிந்தது.  'அரசியல் காரணமாக சில திரைப்படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன' என்பது உள்ளிட்ட சில புகார்களுடனும் 'மற்ற திரைவிழாக்களில் திரையிடப்பட்ட சிறந்த படைப்புகள் என கருதப்பட்டவை ஏன் இதில் விடுபட்டுள்ளன' எ்ன்கிற கேள்விகளையும் தாண்டி  இந்த நிகழ்வில் இந்த வருடத்தில் உருவாக்கப்பட்ட சர்வதேச விருதுகளை வாங்கின அதற்கான பரிந்துரைகளில் உள்ள பல நல்ல திரைப்படங்கள் திரையிடப்பட்டன. அவற்றில் சிலவற்றைப் பற்றிய சிறிய அறிமுகமே இந்தக் கட்டுரையின் தொடர்ச்சி.


LIFE FEELS GOOD - போலந்து - இயக்குநர் - Maciej Pieprzyca

பொதுவாக மாற்றுத் திறனாளிகள் குறித்த திரைப்படமென்றால் அது பார்வையாளர்களிடமிருந்து அனுதாபத்தை வலுக்கட்டாயமாக பிடுங்கி விடுகின்ற விபத்தை பெரும்பாலும் தவிர்த்திருக்கிறது இத்திரைப்படம்.

பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிற Mateusz என்கிற இளைஞன், 'தான் ஒரு தாவரம் அல்ல' என்கிற செய்தியை உலகத்திற்கு தெரிவித்து விடுவதற்காக செய்யும் மெளன போராட்டத்தை மையமாகக் கொண்டது. தமிழில் உருவாகியிருந்தால் தெய்வ திருமகள் போல் ஓர் அழுகாச்சி காவியமாக உருவாகியிருக்கக்கூடிய இது பெரும்பாலும் அதற்கு நேர்எதிராக துள்ளலான நகைச்சுவையுடன் நகர்கிறது. படத்தின் பின்னணி இசையும் செலோவும் ஷெனாயும் வயலினும் கொண்டு அழுகையைக் கூட்டாமல் விசில் போன்ற கலாட்டாவான இசையின் மூலம் இந்த நகைச்சுவைக்கு துணை போகிறது.

கைகளும் கால்களும் செயல்படாமல் தன் உடலால் மாத்திரமே நகர முடிகிற நிலையில் உள்ள Mateusz-ன் காமத்திற்கான தேடலையும இயல்பாக முன்வைக்கிறது. மனிதனின் தன்னகங்காரம் பொதுவாக எதிர்மறையான குணாதிசயமாக சுட்டப்படுகிறது. ஆனால் ஒருவரின் தன்னங்காரம்தான் அவனுடைய வாழ்வை துடிப்புடன் தொடர்வதற்கான உந்து விசையாக இருக்கிறது. Mateusz ஒரு ஜடம் என்பதை சமூகம் வேறு வேறு வார்த்தைகளில் அவனுக்குச் சொல்ல அவனுடைய பெற்றோர்கள்தான் அவனுக்கு  மிக ஆதரவாக இருக்கின்றனர். குறிப்பாக அவனுடைய தந்தை அவனுடைய அகங்காரத்தை தட்டியெழுப்பிய படியே இருக்கிறார். எனவேதான் அவர் இறப்பிற்குப் பின்னும் அவருடைய சொல்லை மந்திரமாகக் கொண்டு மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு தன் இருப்பை வெற்றிகரமாக உலகிற்கு தெரிவிக்கிறான் Mateusz. உலகமே அவனைப் புறக்கணித்தாலும் அதனையே வகுப்பறையாகக் கொண்டு தன் கல்வியை அமைத்துக் கொள்கிறான்.

Dawid Ogrodnik என்பவர் Mateusz ஆக அற்புதமாக நடித்திருக்கிறார். எத்தனை அற்புதம் என்றால் இவர்தான் அந்த மாற்றுத் திறனாளியோ என்கிற எண்ணத்தை பார்வையாளர்களிடம் அழுத்தமாக ஏற்படுத்தும் அளவிற்கு அற்புதம். படத்தின் எண்ட் கார்ட் போடும் போது படத்தின் நிஜக்கதாநாயகனையும்  டேவிட்டின் இயல்பான தோற்றத்தையும் காணும் போதுதான் அவரின் அசுரத்தனமான உழைப்பும் நடிப்பும் நமக்கு பிடிபடுகிறது. கமல்,விக்ரம் வகையறாக்கள் கண்களில் இத்திரைப்படம் பட்டு விடக்கூடாதே என்பதுதான் எனது இப்போதைய பிரார்த்தனை.

BLUE IS THE WARMEST COLOUR - பிரெஞ்சு - இயக்குநர் - Abdellatif Kechiche.

இத்திரைவிழாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தின திரைப்படம் இது, பல சர்வதேச விருதுகளைப் பெற்றிருக்கிறது. பாலின அடையாளச் சிக்கலையும் அது குறித்த தேடலையும் கண்டடைதலையும் அடிப்படையாகக் கொண்டது. LGBT சமூகம் குறித்து பொதுப்புத்தி கொண்டிருக்கும் பல தவறான முன்முடிவுகளை சிதறடிக்கிறது இத்திரைப்படம். ஒருபாலின உறவுக்காரர்கள், முறையற்ற பாலுறவின் இச்சைக்காகவே  அந்த தற்காலிக உறவை அமைத்துக் கொண்டிருக்கிறவர்கள், ஒழுக்கம் கெட்டவர்கள், இயற்கைக்கு முரணான உறவைக் கொண்டிருப்பவர்கள், குடும்பம் என்கிற நிறுவனத்தின் சிதைவிற்குக் காரணமானவர்கள் என்கிற பொதுச்சமூகத்தின் பல தவறான எண்ணங்களை மாற்றியமைக்கிறது இத்திரைப்படம்.

மூன்று மணி நேரத்திற்கு நீளும் இத்திரைப்படம், அட்லி மற்றும் லியா ஆகிய இரண்டு பெண்களுக்குள்ள பாலின உறவையும் அதைத் தொடரும் அகச்சிக்கல்களையும் விரிவாகவே முன்வைக்கிறது. பொதுச் சமூகத்தில் குடும்பம் என்று அறியப்படும் அமைப்பைப் போலவே ஒருபாலின உறவிலும் குடும்ப உறவில் ஏற்படும் அதே பாசமும் பிணைப்பும் பிரிவின் போது ஏற்படும் துயரமும் வலியும் கற்பும் தன் துணையை மீண்டும் அடைவதற்கான தேடலும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அட்லி என்கிற இளைஞியின் வாழ்க்கையின் ஒரு துண்டை ரத்தமும் சதையுமாக பார்த்த உணர்வைத் தருகிறது. சர்வதேச திரைப்படங்களுக்கான சந்தையை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டதோ என்கிற ஐயத்தை ஏற்படுத்துமளவிற்கு உடனுக்குடன் நிகழும் நீளமான பாலுறவுக்காட்சிகள் உள்ளன. ஒருபாலின உறவு குறித்த சர்ச்சைகளும் சட்டமுடிவுகளும் நிகழ்ந்து கொண்டிருக்கும் தருணத்தில் அதற்கு மாற்றான வெளிச்சத்தையும் புரிதலையும் இத்திரைப்படம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

YOUNG AND BEAUTIFUL - பிரெஞ்சு - இயக்குநர் -  François Ozon

தன்னடையாளத்தையும் பதின்ம வயதின் சிக்கலையும் பற்றி உரையாடும் திரைப்படம். 17 வயதான பள்ளி மாணவியான இசபெல்லா, அது தரும் சாகச உணர்விற்காக பாலியல் தொழிலை மேற்கொள்கிறாள். சக வயது இளைஞனுடன் முதலில் உறவு கொள்ளும் இவள் அதன் மூலம் அடையும் வெற்றிட உணர்வை நிரப்ப, நடுத்தர வயது மனிதர்களாகத் தேடி உறவு கொள்கிறாள். இவளின ஒரு வாடிக்கையாளர் மாரடைப்பில் இறந்து போக அதன் பிறகே இந்த விபரீதம் இவளது குடும்பத்திற்கு தெரியவருகிறது. உளவியல் நிபுணருடனான உரையாடலின் போதும் இவளுடைய பிரச்சினையின் வேர் கண்டுபிடிக்க முடிவதில்லை. 'உங்களுடைய கட்டணம் இத்தனை குறைச்சலாதனா?" என்று புன்னகைக்கிறாள். இவளுடைய மறுபுறம் அறிந்த பிறகு குடும்பத்தில் நிகழும் குழப்பங்களை மெலிதான நகைச்சுவையுடன் மீதப்பகுதிகள் சொல்கிறது. இளம் வயதிலேயே இவளின் தந்தையின் பிரி்ந்து விடும் காரணத்தின் உளவியல் பின்னணியில் இவள் நடுத்தர மனிதர்களை நாடுவதை புரிந்து கொள்வதின் மூலம் இத்திரைப்படத்தை அணுகலாம் என தோன்றுகிறது.

A TOUCH OF SIN - சீனா - இயக்குநர் -    Jia Zhangke

சமகால சீனாவின் முகம்.நவீன பொருளாதார உலகம் சீனாவின் நகர, கிராம தனிநபர்களின் வாழ்வில் எத்தகைய மாற்றத்தையும் வன்முறையையும் நிகழ்த்துகிறது என்பதை விவரிக்கும் திரைப்படம். சாதாரண தனிநபர்களின் குற்றங்களுக்கும் வன்முறைகளுக்குமான ஊற்றுக்கண் எங்கிருந்து பிறக்கிறது என்கிற விசாரணையின் மீதாகவும்  இத்திரைப்படத்தை அணுகலாம்.

பொதுச் சொத்தில் ஊழல் செய்யும் கிராம மேயரையும் அதற்கு துணை போகிறவர்களையும் சுட்டுக் கொல்லும் ஒருவர், குடுமபத்திற்கு தெரியாமல் அதன் பராமரிப்பிற்காக வழிப்பறியில் ஈடுபட்டு அதன் பொருட்டு கொலைகளையும் செய்யத் தயங்காத ஒரு மனிதன், ஏற்கெனவே திருமணமானவரை காதலித்து அது நிறைவேறாத தோல்வியில் இடம்மாறி அங்கு பாலியல் தொல்லை செய்பவர்களை கொல்லும் ஒரு பெண், வேலைவாய்ப்பிற்காக நகரத்திற்கு இடம்பெயர்ந்து அங்கு சந்திக்கும் பாலியல் தொழிலாளியின் மீது காதல் கொண்டு அது நிறைவேறாமல் மீண்டும் கிராமத்திற்கு திரும்பி வறுமையை எதிர்கொள்ளவியலாத மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொள்ளும் ஓர் இளைஞன். இந்த நான்கு நபர்களின் மீதான தனித்தனி இழைகளில் இத்திரைப்படம் விரிகிறது.

எந்தவொரு வன்முறைக்கும் குற்றத்திற்கும் பின்னணியை ஆராய்ந்தால் அது ஒரே நாளில் நிகழ்வதாக அல்லாமல் அதற்குப் பின்னால் சிறுக சிறுக சேரும் பல அழுத்தங்களும் சூழல்களும் ஒரு கணத்தில் சடாரென வெடிப்பதான குற்றம் சார்ந்த உளவியல் ஆராய்ச்சியையும் இத்திரைப்படம் நிகழ்த்துவதாகப் படுகிறது.

OMAR - பாலஸ்தீனம் - இயக்குநர் -      Hany Abu-Assad

Paradise Now என்கிற புகழ்பெற்ற திரைப்படத்தை உருவாக்கிய இந்த இயக்குநரின் திரைப்படங்களை பாலஸ்தீனிய அரசியல் பிரச்சினையின் மீதாக புரிந்து கொள்ள முடியும். அரசியல் பிரச்சினைகளும் அதைச் சார்ந்து இயங்கும் வன்முறையும் அமைப்புகளும் தனிநபர்களின் வாழ்வில் எத்தனை தூரத்திற்கு இடையூறு செய்கிறது என்பதை இத்திரைப்படம் உரையாடுகிறது. ஒரு வணிக சினிமாவிற்குரிய திரைக்கதையின் சுவாரசியத்தையும் சாகசத்தையும் இத்திரைப்படம் கொண்டிருந்தாலும் படத்தின் மையம் மிகுந்த துயரத்தை ஏற்படுத்துவது. ஓமர் என்கிற இளைஞனின் காதலிலும் இளவயது முதலே நண்பர்களாக இருப்பவர்களுக்குள்ளும் மத அரசியல் காரணமாக நிகழும் பகைமையும் அரசியலும் அந்த தனிநபர்களின் வாழ்வில் குறுக்கிட்டு அவர்களின் இயல்பான உணர்வுகளையும் அபிலாஷைகளையும் வெளியேற்றி தங்களுக்கான பகடைக்காய்களாக மாற்றும் அபத்தமான துயரங்கள் இத்திரைப்படத்தில் விரிகின்றன. 

- உயிர்மை - ஜனவரி 2014-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)     

suresh kannan

Sunday, December 29, 2013

சென்னை சர்வதேச திரைவிழா - சில குறிப்புகள்



11வது சென்னை சர்வதேச திரைவிழா சமீபத்தில் நடந்து முடிந்தது. இதற்குப் பின் நின்று இயங்கிய உழைத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்வது கடமை. இது போன்ற எந்தவொரு பெரிய நிகழ்ச்சியிலும் அது குறித்த புகார்களோ, முணுமுணுப்புகளோ, அரசியலோ அல்லாமல் போகாது. ஏன் இந்த புகார்களை அடுக்குகிறவர்கள் ஒருங்கிணைத்து உருப்படியான ஏதாவது ஒரு நிகழ்வை முயற்சி செய்தால் கூட அதிலும் குறைகாண வேறு சில குழுக்களின் நபர்கள் காத்திருப்பார்கள். தமிழர்களின் பிரத்யேக குணமிது. இப்படியாக சென்னை சர்வதேச திரைவிழாவிலும் அப்படி சில குறைகள் இருந்திருக்கலாம்.

மற்ற மாநில திரைவிழாக்களில் திரையிடப்பட்ட சில முக்கியமான திரைப்படங்கள் இங்கு விடுபட்டிருப்பதையும் அதன் பின்னால் ஒருவேளை இருந்திருக்கக்கூடிய அரசியல் காரணங்களையும் திரைஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். (கடந்த ஆண்டு லீனா மணிமேகலையின் 'செங்கடல்' முதலில் திரையிட தேர்வு செய்யப்படாதது, பின்னர் சம்பந்தப்பட்ட படைப்பின் குழுவினரின் போராட்டத்திற்குப் பிறகே தேர்ந்தெடுக்கப்பட்டது, இந்த ஆண்டு Fanry போன்ற தலித் அரசியலை உரையாடும் திரைப்படங்கள் தற்செயலாகவோ திட்டமிட்டோ புறக்கணிக்கப்பட்டது) ஆனால் இதன் பின்னால் ஒருவேளை இருந்திருக்கக்கூடிய நியாயமான நடைமுறை பிரச்சினைகளை மனதில் கொண்டு அனைத்தையும் மீறி இந்த விழாவை தொடர்ந்து சாதித்துக் காட்டிக் கொண்டிருக்கிற ICAF ஐயும் அதன் பின்னால் நிற்கக்கூடியவர்களையும் அனைத்து மனத்தடைகளையும் மீறி பாராட்டுவதுதான் பண்பாக இருக்க முடியும்.

(விழா அமைப்பாளர்களின் மீது ஒரு வார இதழ் வைத்த ஆதாரமல்லாத குற்றச்சாட்டிற்கும் படங்களை தேர்வு செய்வதில் உள்ள செலவுகளையும் சிக்கல்களையும் பற்றி அமைப்பாளர்களின் பதில்)

உண்மையில் இதுபோன்ற சா்வதேச திரைவிழாக்களை மற்ற மாநிலங்களைப் போன்று தமிழக அரசே ஏற்று எவ்வித மனச்சாய்வுகளும் அற்ற குழுவை ஏற்படுத்தி அதன் மூலம் நடத்த வேண்டும். இந்தியாவிலேயே அதிக திரைப்படங்களை உருவாக்கும் மாநிலங்களுள் ஒன்றான, கேளிக்கை வரி நீக்கம் என்கிற அபத்தமான அரசியல்களைத் தாண்டி திரைத்துறையின் மூலம் கணிசமான வருவாயைப் பெறும் தமிழ்நாட்டிற்கு இது அவசியமான கடமைகளுள் ஒன்று. ஆனால் அரசோ அதற்கு மாறாக சில லட்சங்களை மாத்திரம் தந்து விட்டு அதற்குப் பதிலாக தன்னை முன்னிறுத்திக் கொண்டு அதற்கான மைலேஜைப் பெறுவதில்தான் குறியாக இருப்பது போல் தோன்றுகிறது. இவ்வாறு அரசின் நிதியைப் பெறுவதால் நிகழ்ச்சயில் ஏற்படும் பின்னடைவுகளுள் ஒன்று, அரசியல் காரணங்களுக்காக சில திரைப்படங்கள் தேர்வு செய்யப்படாமலிருப்பது. எனில் கார்ப்பரேட் நிறுவனங்களின் துணை கொண்டு இதனை சாதிக்க முயலலாம். ஆனால் அவற்றிற்கான அரசியலையும் தவிர்க்கவே முடியாது.


என்னுடைய தனிப்பட்ட பார்வையில் இந்த விழாவில் உணர்ந்த சில குறைகளை, நெருடல்களை பதிவு செய்து வைக்கிறேன். அடுத்த வருடங்களில் இவை நிவர்த்தி செய்யப்படலாம் எனவும் நம்புகிறேன்.

1) படங்கள் திரையிடப்படும் இடங்கள் ஒவ்வொன்றும் வேறு வேறு தூரத்தில் இருக்கின்றன. குறிப்பாக இந்த வருடத்தில் இணைக்கப்பட்ட அபிராமி திரையரங்கம், மற்ற இடங்களை ஒப்பிடும் போது தூரமானது. ராயப்பேட்டையில் ஒரு திரைப்படத்தைப் பார்த்து விட்டு குறைந்த இடைவெளி நேரத்திற்குள் அடுத்த இடத்திற்கு விரைவது சங்கடத்தையும் மனஉளைச்சலையும் தருவது. சுயவாகனவசதியற்ற, பொதுவாகன சேவையை நம்பியிருக்கும் என்னைப் போன்றவர்களின் நிலைமை இன்னமும் சிரமமானது. மதிய உணவிற்கான நேரம் கூட இல்லாமல் வெறும் தேநீரை குடித்து விட்டு சில படங்களுக்கு விரைந்திருக்கிறேன். ஐநாக்ஸ் போன்ற மேட்டிமைத்தனமான குறைந்த இருக்கைகள் கொண்ட அரங்கில் அது நிரம்பியவுடன் மனச்சாட்சியே இல்லாமல் கதவைச் சாத்தி விடுவார்கள் என்பதால் அங்கு போகவே தோன்றவில்லை.

இது போன்ற நடைமுறைப் பிரச்சினையைத் தவிர்க்க நாலைந்து திரையரங்கங்களை ஒரே வளாகத்தில் கொண்ட இடத்தை ஏற்பாடு செய்தால் இப்படி அலைந்து திரிகிற வேலை மிச்சமாவதோடு அடுத்த திரைப்படத்திற்கு சாவகாசமான மனநிலையில் மாறிக் கொள்ளலாம். கடந்த வருடத்தில் அமைச்சர் பேசும் போது கலைவாணர் அரங்கம் இருந்த இடத்தில் இதற்காக ஒரு கலையரங்கம் கட்டப்படும் என்று உறுதியளித்திருந்தார். பிறகு அது பற்றிய பேச்சில்லை. இப்போது அது விரைவில் கட்டி முடிக்கப்படும் என்பதாக ஒரு செய்தி வந்துள்ளது மகிழ்ச்சி. அரசியல் மாற்றங்களைத் தாண்டி, அரசியல்வாதிகள் கைப்பற்றி விடாமல் இந்தக் கட்டிடம், அது உருவாக்கப்பட்ட நோக்கத்திலிருந்து மாறாமல் வருடம் பூராவும் கலை நிகழ்வுகள் அமைவதற்கான சாத்தியங்கள் ஏற்பட வேண்டும். வருடம் பூராவும் இங்கு உலக சினிமாக்கள் திரையிடப்பட்டால் அது பயனுள்ளதாக இருக்கும்.

2) அபிராமி திரையரங்கத்தில் பழக்க தோஷத்திலோ என்னமோ, வெளிநாட்டுத் திரைப்படங்களைக் கூட  நடுவில் நிறுத்தி இடைவேளை எனும் அபத்தமான, அராஜகமான விஷயத்தைச் செய்கிறார்கள். வெளிநாட்டு இயக்குநர்கள் இதைப் பார்த்தால் நொந்து விடுவார்கள். தொழில்நுட்பம் முன்னேறாத காலகட்டத்தில் முடிந்து போன ரீலை மாற்றி அடுத்த ரீலை ஏற்ற கட்டாயமாக ஏற்க நேர்ந்த இடைவெளி இது.  வணிகர்களும் நொறுக்குத்தீனிகளை விற்க இந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்டார்கள். நுட்பம் வளர்ந்து இதற்கான தேவை இல்லாவிடினும் கூட இந்தச் சம்பிரதாயம் மாறவேயில்லை. இந்த அபத்தம் எதுவரை வளர்ந்திருக்கிறது என்றால், நமது இயக்குநர்கள் இடைவேளை என்பதை மனதில் வைத்துக் கொண்டு அதற்கான செயற்கையான திருப்பங்களை தங்களின் திரைக்கதையில் உருவாக்குவது வரை வளர்ந்திருக்கிறது. இந்த அபததம் குறித்து திரைப்பட ஆய்வாளர் தியோடர் பாஸகரன் 'இடைவேளை எனும் குறுக்கீடு' என்று தனிக் கட்டுரையே எழுதியிருக்கிறார். ICAF இதில் தலையிட்டு சம்பந்தப்பட்ட ராமநாதன்களுக்கு உபதேசிக்க வேண்டும்.

3) ஒவ்வொரு திரைப்பட ரசிகருமே எந்த திரைப்படத்தைப் பார்ப்பது என்பதை சில மணி நேரங்கள் செலவழித்து தேர்வு செய்து அதற்காக திட்டமி்ட்டு வருகிறார்கள். ஆனால் எதிர்பாராத காரணங்களினால் அது திரையிடப்படாமல் போகும் போது ஏமாற்றமும் நேரவிரயமும் ஏற்படுகிறது. அபிராமி திரையரங்களில் மதியம் 02.00 மணிக்கு திரையிடப்பட வேண்டியதற்காக காத்திருந்தேன். அது முடிந்தவுடன் மீண்டும் நான் ராயப்பேட்டைக்கு விரைய வேண்டும். எனவே படத்தின் நீளத்தையும் அடுத்த படத்திற்கான துவக்க நேரத்தையும் போக்குவரத்திற்கான நேரத்தையும் கணக்கிட்டு உட்கார்ந்திருந்தால் 45 நிமிடங்கள் வரை தொடர்புள்ள படம் திரையிடப்படவேயில்லை. அரங்கத்தில் இருந்த தன்னார்வ மாணவர்களைக் கேட்டால் தொழில்நுட்ப குறை என்பதாக கூறுகிறாாகள். அவர்களை அதிகம் கோபிக்கவும் இயலவில்லை. வேறு நல்ல திரைப்படத்தையாவது திரையிடலாமே என்றாலும் கூட அதற்கான உத்தரவு இல்லை என்கிறார்கள். இது போன்ற சிக்கலான நேரங்களில் என்ன செய்வது என்கிற மாற்று வழிமுறைகளையும் முன்னமே திட்டமிட்டு செயல்படுத்துவது நல்லது.

4) இது நமது குடிமை உணர்வு பற்றியது. இந்த விஷயத்தில் நாம் எந்தளவிற்கு பின்தங்கியிருக்கிறோம் என்பது நாமே அறிந்ததுதான். இதை சுட்டிக்காட்டினால் குற்றவுணர்வோ வெட்கமோ அடையாமல் அதற்காக கோபம் கொள்ளும் அபத்தமும் நம்முடையதுதான். இந்த முறை திரைப்படங்களின் இடையில் கைபேசியில் பேசி தொந்தரவு தரும் நபர்களை அதிகம் காணாதது நான் செய்த பாக்கியம். மாறாக நான் உணர்ந்த அசெளகரியம், திரைப்படங்களுக்கு இடையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே இருப்பது, படம் துவங்கின பத்திருபது நிமிடங்களுக்கு பிறகும் கதவைத் திறந்து திரையில் வெளிச்சத்தைப் பாய்ச்சி உள்ளே நுழைந்து இருக்கையைத் தேடிக் கொண்டேயிருப்பது. இது மற்றவர்களுக்கு எத்தனை இடையூறைத் தரும் என்கிற நுண்ணுணர்வு நம்மிடம் குறைவானதாக இருக்கிறது. ஒவ்வொரு திரைப்படமும் எத்தனை மணிக்கு திரையிடப்படுகிறது என்பதை பல நாட்களுக்கு முன்பே அறிந்திருந்தும் கூட சில நிமிடங்களுக்கு முன்பு வரவேண்டும் என்கிற திட்டமிடல் கூட இல்லாமல் இருப்பது நம் சமூகத்தின் அலட்சியமான மனோபாவத்தையே சுட்டுகிறது. வெளியிலிருந்து வருகிறவர்கள் கூட பரவாயில்லை, திரையரங்கத்தின் வாசலின் தேநீர்க்கடைகளில் உரையாடிக் கொண்டிருப்பவர்கள் கூட கடைசி நிமிடத்தில்தான் நுழைகிறார்கள்.

5) திரைப்படங்களின் synopsis  புத்தகத்தை துவக்கத்திலேயே தராமல் சில நாட்கள் கழி்நத பின் தருவது ஏன் என தெரியவில்லை. போலவே படத்தின் ஷெட்யூல் பிரதிகளையும் முதலில் வநதவர்களுக்கெல்லாம் இறைத்து வாரி விட்டு பின்னால் வந்தவர்களுக்கு அது இல்லை என்று சொல்லாமல் ஒரு நபருக்கு ஒன்று என்று கட்டாயமாக அமல்படுத்தினால் நன்றாக இருக்கும். ஷெட்யூல் காப்பி இல்லாமல் நான் இணையத்திலிருந்து அச்சிட்டு எடுத்துச் சென்றேன்.


()


குறுந்தகடுகளிலும் இணையத்திலும் தரவிறக்கம் செய்து உலக சினிமாவை பார்த்து விடும் ரசிகர்களுக்கு இது போன்ற திரைவிழாக்களில் கலந்து கொள்ளும் அற்புதமான அனுபவம் பற்றி தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் நானும் அப்படித்தான் இருந்தேன். இதற்கு சமீபத்தில் நான் எழுதிய கட்டுரையின் துவக்க வரிதான் இதற்கு சரியான எதிர்வினையாக இருக்கும்.
ஒரு திரைப்படம் குறித்த நினைவுகள் பார்வையாளர்களுக்குள் தங்குவது பிரத்யேகமாக அத்திரைப்படம் குறித்து மாத்திரமல்ல. மாறாக அத்திரைப்படத்தைக் காண்பதற்கு முன்னும் பின்னும் நி்கழ்ந்த சம்பவங்கள் தொடர்பான மனப்பதிவுகளையும் இணைத்துத்தான்....

வாய்ப்பிருப்பவர்கள இது போன்ற திரைவிழாக்களில் கலந்து கொள்வதை தவற விடாதீர்கள். இந்தக் கடடுரையில் விடுபட்டிருக்கும் ஆலோசனைகளை, பரிந்துரைகளை நண்பர்களும் இணைத்து இந்த அனுபவத்தை செழுமையடைய உதவலாம்.

suresh kannan