Showing posts with label : உயிர்மை கட்டுரைகள். Show all posts
Showing posts with label : உயிர்மை கட்டுரைகள். Show all posts

Friday, November 15, 2019

அசோகமித்திரன்: சராசரிகளின் எழுத்தாளன்



அசோகமித்திரன் மறைந்து விட்டார். நவீன தமிழ் இலக்கியத்தின் பரப்பில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வெற்றிடம் என்றுதான் இதற்குப் பொருள். அவருடைய எழுத்தின் தன்மையை பொதுமைப்படுத்தி  ஒருவரியில் சொல்ல வேண்டுமானால்  ' நகர்ப்புறம் சார்ந்த கீழ்நடுத்தர வர்க்கத்தின் அத்தனை துயரக் கசப்புகளையும் உருட்டித் திரட்டி செய்த நகைச்சுவை மாத்திரை' என்று வரையறை செய்ய முயலலாம். ஆனால் இது அவரது படைப்புலகின் ஒரு பக்க பரிமாணம் மட்டுமே. அவருடைய படைப்புகளில் பெரும்பாலும் வெற்றியாளர்களோ சாதனையாளர்களோ இல்லை. மாறாக  தங்களுடை வாழ்வின் மிக அடிப்படையான விஷயத்திற்கு கூட அல்லறுரும் சாதாரண மனிதர்களே இருந்தார்கள்; எளிய சமூகத்தின் வாழ்க்கைச் சம்பவங்களே இருந்தன.

சைக்கிள செயின் எப்போது கழன்று விடுமோ என்கிற பதட்டத்துடன் பாலத்தின் மீது சைக்கிளை செலுத்திச் செல்பவர்கள், அதைச் சரிசெய்ய முயன்ற மசிக்கறையுடன் உள்ளவர்கள், குழந்தையின் சுரம் காரணமாக மருத்துவத்திற்கு  நண்பனிடம் இரண்டு ரூபாய் கடன் வாங்கச் சென்று கேட்கத் துணிவில்லாமல் கூசி மழுப்பலாக இலக்கியம் பேசி விட்டு தயங்கி வெறும் கையைப் பிசைந்து  திரும்பி வரும் கையாலாகாதவர்கள், ரேசன் சர்க்கரைக்காக வரிசையில் நின்று 'இல்லை' என்று திருப்பியனுப்பப்பட்டவுடன் உள்ளுக்குள் முனகிக் கொண்டே வரும் கோழைகள் ஆகியோர்களே இருந்தார்கள். அவர்கள் வேறு யாருமல்ல. நம்முடைய சித்திரங்கள்தான் அவை.

ஆனால் இவை அனைத்தையும் அசோகமித்திரன் புகார்களாகவோ புலம்பல்களாகவே சொல்லவேயில்லை. மாறாக தன்னையே பார்த்து புன்னகைத்துக் கொள்ளும் சுயஎள்ளல்களுடன்தான் இந்தக் கசப்புகளை தன் படைப்புகளில் பதிவு செய்கிறார். ஞானத்தின் ஒருவகையான எளிமை என்றுதான் இதைச் சொல்ல முடியும். 'மனிதர்களுக்கு இத்தனை துயரங்களைத் தரும் கடவுள் நிச்சயம் ஒரு குரூரமான ஆசாமியாகத்தான் இருக்க முடியும்' என்று சிலர் ஆத்திரத்தில் புலம்புவதுண்டு. அது உண்மையென்று ஒரு வாதத்திற்கு ஒப்புக் கொண்டால் கூட அப்படிப்பட்ட கடவுளே ஒருவேளை அசோகமித்திரனின் எழுத்தை வாசிக்க நேர்ந்தால், தன் எள்ளல்களால் அந்த துயரங்களை ஒன்றுமில்லாமல் கசக்கிப் போடும் அசோகமித்திரனின் எளிமையான திமிரையும் சிரிப்பையும் கண்டு திகைத்து மனம் கூசி நிற்கக்கூடும்.

உலகின் எந்தவொரு சிறந்த எழுத்தாளருக்கும் இணையாக வைத்துப் போற்றக்கூடிய எழுத்தாளுமை அசோகமித்திரன். ஆனால் தம்முடைய எழுத்து குறித்து அவருக்கு எந்தவித அகங்காரமும் தற்பெருமையும் இருந்ததாகத் தெரியவில்லை. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் எழுதுவதின் சவால் குறித்து  அவரிடம் கேட்கப் பட்ட போது 'எழுதறதுல என்ன சவால் இருக்கு, செல்லாத ஆயிரம் ரூபாயை மாத்தறதும் ஆதார் கார்டு வாங்கறதும்தான் உண்மையான சவால்' என்பது போல அவரது பாணியில்  பதில் சொல்கிறார். மேற்பார்வைக்கு அது ஏதோவொரு எளிய புலம்பல் போல் தோன்றினாலும் அதனுள் பொதிந்துள்ள அரசியல் அங்கதம் மிகக்கூர்மையானது. நினைத்து நினைத்து சிரிக்கவும் அதற்குப் பிறகு கசப்படையவும் வைப்பது.

ஓர் இலக்கியக்கூட்டம். உயிர்மை சார்பில் நடத்தப்பட்டது என்பதாகத்தான் நினைவு. தம்முடைய கணையாழி கால அனுபவங்களைப் பற்றி மெல்லிய குரலில் தனக்கேயுரித்தான அவல நகைச்சுவையுடன்  விவரித்துக் கொண்டிருந்தார் அசோகமித்திரன். 'அங்க பார்த்தீங்கன்னா...இந்த புஸ்தகங்களை கயிறு போட்டு பார்சல் கட்டறதுதான் எனக்கு பெரிய சவால். இறுக்கமா கட்டவே எனக்கு வராது. எப்படித்தான் சிலர் அதை திறமையா கட்டறாங்கன்னே தெரியல. அவங்களுக்கு .இதுக்காக ஏதாவது விருது குடுத்தா கூட தகும்' என்பது மாதிரியாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அதற்கு கூட்டம்  விழுந்து விழுந்து சிரிக்கிறது. அசோகமித்திரனை தொடர்ந்து வாசிக்கிறவர்களுக்குத்தான், அவருடைய ஆளுமையை அறிந்தவர்களுக்குத்தான் அவர் சொல்லுவதில் உள்ள எளிமையான தன்மையை மீறி அதனுள் இருக்கும் ஆழமான அவல நகையை புரிந்து கொண்டு ரசிக்கவும் கசப்படையவும் முடியும். மாறாக அவருடைய எழுத்தைப் பற்றி எந்தவோரு அறிமுகமும் இல்லாமல் அந்தக் கூட்டத்திற்கு ஒருவர் ஒருவேளை வந்திருந்தால். ... ' என்னய்யா.. இது அந்தப் பெரிசு .. ஏதோ சாதாரண விஷயத்தை சொல்றாரு. இந்த பைத்தியக்காரக் கூட்டம் இப்படிச் சிரிக்குதே'.. என்று புரியாமல் திகைத்து அமர்ந்திருக்கக்கூடும்.


இதைப் போலவே அசோகமித்திரனின் படைப்புகளை பற்றிய முறையான அறிமுகம் இல்லாமல் ஆனால் அவருடைய ஆளுமையைப் பற்றிய புகழுரையை மட்டும் எங்காவது கேள்விப்பட்டு அவரது சிறுகதைக்குள் நுழையும் எந்தவொரு துவக்க நிலை வாசகனும் 'இந்தச் சாதாரணக் கதையையா இப்படிப் புகழ்ந்தார்கள்' என்று திகைக்கவோ தனக்குள் புன்னகைக்கவோ கூடும். பாராட்டப்பட வேண்டியவை என்றால் அது அதிக பிரமிப்பை ஏற்படுத்துவதாகவும் சிக்கலானதாகவும் இருக்க வேண்டும் என்கிற மயக்கம் நம்மிடம் இருக்கிறது. 'உலகத்தின் எல்லாச் சிக்கலான விஷயங்களும் அடிப்படையில் எளிமையானவை' என்றொரு கருத்து இருக்கிறது. அசோகமித்திரனின் எழுத்தும் இவ்வகையான எளிமையையே கொண்டிருக்கிறது.

***

லெளகீக வாழ்வின்  ஓர் எளிய சிக்கலுக்காக கூட பேனாவை தூக்கிப் போட்டு விட்டு சுயசெளகரியங்களுக்கு முன்னுரிமை கொடுப்பவர்கள் முதற்கொண்டு எழுத்தை தம்முடைய பிழைப்புவாதத்திற்காக மலினமாக கையாள்பவர்கள் வரை பலர் இருக்கிறவர்களின் மத்தியில்  தம்முடைய எளிய வாழ்வின் பல்வேறு விதமான துயரங்களுக்கிடையேயும் எவ்வித முணுமுணுப்பும் புகாரும் இல்லாமல், மிக குறிப்பாக அதற்கான அங்கீகாரத்தையும் பொருளியல் மதிப்பையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து எழுதி வந்தவர்களுள் மிக முக்கியமானவர் அசோகமித்திரன்.  சினிமாவுலகில் எப்படியாவது புகுந்து விட முடியாதா என்கிற தவிப்புடன் முட்டி மோதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் இடையில், அந்தத் துறையில் நீீண்ட காலம் பணிபுரிந்திருந்தாலும், அத்துறை சார்ந்த அறிவு கொண்டிருந்தாலும், ஒரு நிலையில் எழுத்தாளனுக்கேயுரிய சுயமரியாதையுடன் வெளியேறியவர். கணையாழி போன்ற பொருளியல் ஆதாயம் அதிகம் கிட்டாத பத்திரிகைகளில் பல காலமாக உழைத்திருக்கிறார். ஒருவகையில் வாழ்க்கையின் சிக்கல் சார்ந்த துயரங்களுக்கு விரும்பியே தம்மை ஒப்புக் கொடுத்து விட்டாரோ என்று தோன்றுகிறது. அதே சமயத்தில் உயரமான திண்ணையில் அமர்ந்து காலாட்டிக் கொண்டே தெருவை வேடிக்கை பார்க்கும் சிறுவனின் எளிமையையும் அவரது ஆளுமை கொண்டிருக்கிறது.

ஏழு நாவல்கள், நான்கு குறுநாவல்கள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு நுால்கள், தொகுத்த நூல்கள் என ஏராளமானவற்றை தமிழின் சொத்துக்களாக விட்டுச் சென்றிருக்கிறார். இந்தியாவின் முக்கியமான ஆங்கில தேசியப் பத்திரிகைகளில் இவருடைய கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்துள்ளன. ஆங்கிலத்திலேயே தொடர்ந்து முழுவதுமாக எழுதியிருந்தால் இன்னமும் அதிக உயரத்திற்கு சென்றிருப்பாரோ, என்னவோ. தமிழக சூழலும் குழு அரசியல்  உள்ளிட்ட இன்ன பிற அரசியல்களும் அவரை குரூரமாக உதாசீனப்படுத்தியது. பாரதி, புதுமைப்பித்தன், கோபிகிருஷ்ணன் என்று இந்த வரிசை என்று ஓயுமோ என்று தெரியவில்லை.

தாம் பணிபுரிந்த ஜெமினி ஸ்டுடியோ அனுபவங்களைக் கொண்டு எழுதிய 'Fourteen years with boss' உள்ளிட்ட நூல் முதற்கொண்டு அசோகமித்திரன் ஆங்கிலத்தில் எழுதிய பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. தொகுக்கப்படாத கட்டுரைகள் இன்னமும் கூட இருப்பதாக ஒரு நேர்காணலில் கூறுகிறார். ஆங்கில உரைநடையில் மானசீக குருக்களில் முக்கியமானவராக,  'பிலிம் இண்டியா' பத்திரிகை ஆசிரியரான பாபுராவ் படேலை ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

அசோகமித்திரன் இதுவரை எழுதிய அனைத்துச் சிறுகதைகளும் ஒரு முழு தொகுப்பாக சமீபத்தில் வெளிவந்துள்ளது. (காலச்சுவடு பதிப்பகம்). மொத்தம் 274 சிறுகதைகள். பொதுவாக எந்தவொரு எழுத்தாளரின்  சிறுகதை தொகுப்பையும் கால வரிசையில் கவனித்தால் எழுத்தின் நடையிலும் தன்மையிலும் இன்ன பிற வகைகளிலும் மாற்றத்தை உணர முடியும். ஆனால் அசோகமித்திரனின் சிறுகதைகள் துவக்கம் முதலே ஓர் ஒழுங்கையும் கலை அமைதியையும் சாதாரணத்துவத்தையும் கொண்டிருக்கிறது. எந்தவொரு பக்கத்தையும் பிரித்து இது இந்தக் குறிப்பிட்ட காலத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று யூகிக்கவே முடியாது. இதை அவர் பிரக்ஞையுடன் நிகழ்த்தினாரா அல்லது அவரே எழுத்து இயல்பே அவ்வாறுதானா என்பது ஆய்வுக்குரியது. கலாசார எல்லைகளைத் தாண்டி உலகத்தின் எந்தவொரு எளிய மனிதரும், நுட்பமான வாசகரும் அசோகமித்திரனின் எழுத்தோடு தம்மை நெருக்கமாக உணர்வார்கள்.

இதைப் போலவே அவருடைய பெரும்பாலான சிறுகதைகள் எந்தவொரு இதர மொழியிலும் மொழிபெயர்ப்பு செய்வதற்கு தகுதியானது. காலம், இடம், கலாசாரம் போன்ற கற்பித எல்லைகளைத் தாண்டி நிற்கிற உன்னதத்தன்மையை அசோகமித்திரனின் எழுத்து கொண்டுள்ளது. 'கதைகளிலிருந்து 'கதையை' வெளியேற்றுவதே தாம் எழுதும் கதைகள்' என்று சா.கந்தசாமி சொல்வதை அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கும் கச்சிதமாக பொருத்திப் பார்க்கலாம். பலராலும் குறிப்பிடப்படும் 'புலிக்கலைஞன்' 'பிரயாணம்' 'காந்தி' போன்றவை  இவருடைய அபாரமான சிறுகதைகள். 'இன்ஸ்பெக்டர் செண்பகராமன்' போன்ற சிறந்த குறுநாவல்கள்.


அவரது சிறுகதைகளுள் பொதுவாக அதிகம் மேற்கோள் காட்டப்படாததும், என்னளவில் மிகச் சிறந்தவைகளில் ஒன்றாக கருதுவதுமான 'குருவிக்கூடு' எனக்கு அதிகம் பிடித்த சிறுகதை. வழக்கம் போல் எளிமையானதுதான். குருவிக்கூடு ஒன்றைப் பாதுகாக்க ஒரு சிறுவன் தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்வான். ஆனால் அது தோற்றுப் போகும். சிறுவன் வருத்தப்படுவான். அதன் பிறகு குருவிக்கும் சிறுவனுக்கு நிகழும் உரையாடல்தான் அந்தக் கதையின் அற்புதமே.  இன்ன பிற உயிரனங்களின் மீது மானுட குலம் கொண்டிருக்கும் கருணையின் மீதான போலித்தனத்தை இரக்கமேயில்லாமல் குரூரமாக பரிகாசம் செய்வார் அசோகமித்திரன். பொதுவாக 'மென்மையான எழுத்து' என்று அறியப்பட்டும் நம்பப்பட்டும் கொண்டிருக்கிற அசோகமித்திரனது படைப்புகள் பல சமயங்களில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் நெருப்பு போல மூர்க்கமான வேறு பக்கத்தையும் சித்தரிக்கும். நுட்பமான வாசிப்பின் வழியாக அறிய முடிவது இது.

***

சினிமாவைப் பற்றிய தகவல்கள், அபிப்பிராயங்கள் நிரம்பிய அசோகமித்திரனின் எழுத்தை மட்டும் தொகுத்தாலே பெரிய தொகுதியாக வந்து விடும். அந்த அளவிற்கு இந்திய மொழிகளில் வெளியான சினிமாக்களைப் பற்றிய பல்வேறு கட்டுரைகளை தனது பாணியில் எழுதிக் குவித்துள்ளார். பெரும்பாலானவற்றில் அவருக்கேயுரிய அங்கதமும் தனித்துவமும் இருந்தது. 'உதிரிப்பூக்கள்' திரைப்படம் பற்றி அவர் எழுதிய கட்டுரையொன்றை என்னால் மறக்கவே முடியாது. அந்த திரைப்படத்தில் வரும் விஜயன் பாத்திரத்தை வெறுக்காதவர்களே இருக்க முடியாது. ஆனால் அசோகமித்திரன் இதற்கு முற்றிலும் வேறு பரிமாணத்தையும் பார்வையையும் முன்வைக்கிறார். 'அந்தச் சூழலில் அந்தப் பாத்திரம் ஆற்றும் எதிர்வினைகள் இயல்பானவைதானே' என்று அ.மி. முன்வைக்கும் நியாயங்களின் மூலம் 'அதோனே' என்று ஒருகணம் நமக்கும் தோன்றி விடுகிறது.

சினிமாவின் பல்வேறு விதமான பளபளப்புகளுக்குப்  பின்னே மறைந்திருக்கும் இருள் உலகத்தைப் பற்றிய அற்புதமான நாவல் 'கரைந்த நிழல்கள்'. துணை நடிகைகளின் உடைகளில் வீசும் வியர்வை நாற்றம் முதற்கொண்டு துல்லியமான விவரணைகளுடனும் அற்புதமான கட்டுமானத்துடனும் அமைந்த நாவல் அது. நீர் அரசியலும் அது சார்ந்த ஊழல்களும் பற்றாக்குறையும் உக்கிரமாக மேலெழுந்து வந்து கொண்டிருக்கும் சமகால சூழலில் 'தண்ணீர்' நாவலின் மையம் இன்னமும் அர்த்தபூர்வமானதாகிறது.


அவரது படைப்புகளின் உன்னதங்களைப் பற்றி இன்னமும் எவ்வளேவோ உரையாடிக் கொண்டேயிருக்கலாம். தம்முடைய சீரான, தொடர்ச்சியான இயக்கத்தின் மூலம் பல்வேறு விதமான ஆக்கங்களை நமக்காக விட்டுச் சென்றிருக்கிறார் அசோகமித்திரன். சர்வதேச அளவில் நோபல் பரிசு பெறுவதற்கு கூட  தகுதி பெற்ற எழுத்தாளருக்கு, இந்தியாவின்  ஞானபீட பரிசு கூட வழங்கப்படாமலிருப்பதின் பின்னுள்ள அரசியல் வருத்தப்பட வைக்கிறது. ஆனால் இதற்காகவெல்லாம் அவர் வருந்தியவர் அல்ல. இயற்கையைப் போல எவ்வித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தவர் இயற்கையுடன் சென்று கலந்து விட்டார். விருதுகள்தான் அவர் முன்னால் வந்து நிற்பதற்கு கூச வேண்டும்.

மகத்தான அந்தக்  கலைஞனுக்கு இந்த எளிய வாசகனின் ஆத்மார்த்தமான அஞ்சலி. 

(உயிர்மை இதழில் பிரசுரமானது) 

suresh kannan

Monday, June 24, 2019

பிக் பாஸ்: கடவுள் அமைத்து வைத்த மேடை



ஜூராசிக் பார்க் திரைப்படத்தின் தமிழ் டப்பிங் வசனம் போல 'எல்லோரும் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுங்க.. அது நம்மளை நோக்கித்தான் வந்துட்டிருக்கு' என்று 'பிக் பாஸ்' விளையாட்டு பற்றி அறிந்த சொற்பமான நபர்கள், அது தமிழகத்தில் நுழைவதற்கு முன்பே எச்சரித்துக் கொண்டிருந்தார்கள். 'பிக் பாஸா, அப்படின்னா என்ன?' என்று அப்போது அப்பாவித்தனமாக கேட்டுக் கொண்டிருந்தவர்கள் கூட, அதன் வருகைக்குப் பிறகு அதைப் பற்றி தினமும்  ஓயாமல் விவாதிக்கும் அளவிற்கு  அந்த விளையாட்டு இன்று தமிழகத்தின்  மிகப் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியாகி  விட்டது.

ஆம், ஒவ்வொரு வீட்டின் வரவேற்பறைக்குள்ளும் நுழைந்த டைனோசர்  கம்பீரமாக ஆக்ரமித்து  சம்மணமிட்டு அமர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியைப் பற்றிய பல்வேறு விதமான உரையாடல்கள், அலசல்கள், ஆவேசங்கள், உணர்ச்சிகள் ஓயாமல் சமூக வலைத்தளங்களில் பெருகிக் கொண்டிருக்கின்றன. முன்பு இந்தியில் பிரம்மாண்டமாக  வெற்றி பெற்ற இந்த நிகழ்ச்சி, தென்னிந்திய மொழிகளில் நுழைந்து, கன்னடத்தில் வெற்றி பெற்று, சமீபத்தில் தமிழ், தெலுங்கு என வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

'Voyeurism எனும் மனிதனின் சிறுமைக் குணங்களில் ஒன்றை பயன்படுத்திக் கொண்டு வணிக ஆதாயத்தை அடையும்  நிகழ்ச்சியிது, கலாசார நசிவை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டது என்பது போன்ற, விதம் விதமான எதிர்விமர்சனங்கள் சமூக ஆர்வலர்கள், கலாசாரக் காவலர்கள் போன்றவர்களிடமிருந்து ஒருபுறம் குவிந்து கொண்டிருக்கின்றன.

'ஒரு சமூகத்தின் கலாசார அழிவிற்கு எத்தனையோ காரணங்கள் இருக்க, இந்த நிகழ்ச்சியினால் மட்டுமா அது அழிந்து விடப் போகிறது?, இதுவொரு வணிக நோக்கு நிகழ்ச்சியாக இருந்தாலும் சிக்கலான சூழலில் மனித மனங்கள் எவ்வாறெல்லாம் செயல்படுகின்றன, எதிர்வினையாற்றுகின்றன என்கிற மனித நடத்தையைப் பற்றி ஆய்வாகவும், பார்வையாளர்களின் சுயபரிசீலனைக்கான தூண்டுதலாகவும் எடுத்துக் கொள்ள முடியும்' என்று இந்த நிகழ்ச்சியின் பார்வையாளர்களில் சில சதவீதம் கருதுகிறார்கள்.

இவைகள் ஏதுமின்றி, ஒரு வழக்கமான ரியாலிட்டி ஷோவைப் போலவே இதையும் அந்தக் கணத்தில் மிட்டாய் போல் சுவைத்து மறக்கும் சதவீதமும் ஒருபுறம் பெரும்பான்மையாக இயங்குகிறது.

சமகால தமிழ் சூழலில் அதிகமும் கவனிக்கப்படுகிற நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல் அதிகமாக விவாதிக்கப்படும் பேசு பொருளாகவும் மாறி விட்ட 'பிக் பாஸின்' சாதக, பாதகங்களைப் பற்றி, இந்த விளையாட்டின் அடிப்படைத்தன்மைகளைப் பற்றிய என்னளவிலான கருத்துக்களை இந்தக் கட்டுரையில் பதிவு செய்ய முயல்கிறேன்.


***


நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த, பல்வேறு விதமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தயாரிக்கும்  நிறுவனமான 'Endemol', வடிவமைத்த நிகழ்ச்சிகளில் ஒன்று 'Bigg Brother'. ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய '1984' என்கிற நாவலின் சாரமே, இந்த நிகழ்ச்சியை வடிவமைப்பதற்கான தூண்டுதலை ஏற்படுத்தியது என்கிறார்கள். கடுமையான கண்காணிப்பு சமூகத்திற்குள் வாழும் குடிமக்கள், எவ்வாறு மனஉளைச்சலும் இறுக்கமும் நிறைந்த இயந்திரமாக மாறுகிறார்கள் என்பதை அரசியல் பின்னணியுடன் நுட்பமாக விளக்கும் நாவல் அது.

இந்த நிகழ்ச்சிக்கென்று சில அடிப்படையான, கறாரான விதிகளும் நிபந்தனைகளும் உண்டு. பல்வேறு காலக்கட்டங்களில் இதன் வடிவமைப்பு மெல்ல மெல்ல மாறிக் கொண்டே வந்திருந்தாலும் அடிப்படை ஒன்றுதான்.

சகல அடிப்படையான வசதிகளும் உள்ள ஒரு வீீட்டில், வெவ்வேறு துறையைச் சேர்ந்த 14 பிரபலங்கள், நூறு நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்கிற கட்டாயத்துடன் உள்ளே நுழைவார்கள். அவர்களை 24 மணி நேரமும்  பல காமிராக்கள் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கும். தொலைபேசி, இணையம், பத்திரிகை போன்ற வசதிகள் இருக்காது. வெளியுலகத்தைப் பற்றிய எவ்வித தகவலையும் அவர்கள் அறிய முடியாது. தங்களுக்கான உணவை தாங்களே தயாரித்துக் கொள்ள வேண்டும். இயந்திரக் குரல்களின் கட்டளைகளுக்கு அவர்கள் அடிபணிந்தாக வேண்டும்.

அகம் மற்றும் புறம் சார்ந்த நெருக்கடிகளை, அகங்கார உரசல்களை, கருத்து வேறுபாடுகளைத் தாண்டி எவர் அதிக நாட்கள் தாக்குப் பிடித்து இறுதி வரை அந்த வீட்டிற்குள் நீடிக்கிறாரோ அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். கணிசமான பணம் பரிசாக கிடைக்கும்.

ஒரு பிரபலமான நபர், இந்த நிகழ்வுகளின் தொகுப்பாளராகவும் வழிகாட்டியாகவும் இருப்பார். 'யார் வெளியேற்றப் பட வேண்டும்' என்று விளையாட்டின் போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் பரஸ்பரம் பரிந்துரை செய்யலாம். இது தவிர பார்வையாளர்கள் அளிக்கும் வாக்கு, போட்டியாளர்களின் இருப்பை நிர்ணயிக்கும் காரணங்களில் ஒன்றாக இருக்கும்.

உலகமெங்கிலும், நாற்பதிற்கும் மேலான நாடுகளில் பரவலான வெற்றியைப் பெற்ற இந்த ரியாலிட்டி ஷோ, இந்தியாவில் 'Bigg Boss' என்கிற அடையாளத்துடன் 2007-ல் நுழைந்தது. இந்தியில் இதுவரை பத்து பகுதிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றிருக்கின்றன. அமிதாப் பச்சன், சல்மான் கான் முதற்கொண்டு பல கோலிவுட் பிரபலங்கள், இந்த நிழச்சியின் தொகுப்பாளர்களாக இருந்திருக்கிறார்கள். கன்னடத்தில் நடிகர் சுதீப் வழிநடத்தினார். இப்போது இந்த நிகழ்ச்சி தமிழிலும் நுழைந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக இருக்கிறார்.


***

இதர மனிதர்களைப் பற்றி சுவாரஸ்யமாக வம்பு பேசுவது, அவற்றை ஆவலுடன் கவனிப்பது, பிறருடைய அந்தரங்கமான தருணங்களை, விஷயங்களை எட்டிப் பார்க்க விருப்பம் காட்டுவது போன்றவை மனித குணத்தின் மிக ஆதாரமான அம்சங்களில் ஒன்று. இது எல்லை தாண்டிப் போகிற போது வக்கிரத்தன்மையாகிறது. கற்காலத்திலிருந்தே இருக்கும் சாத்தியத்தைக் கொண்டிருக்கக்கூடிய இந்தக் குணாதிசயம் வெவ்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு பரிணாமங்களை அடைந்துள்ளது.

''அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட / மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான்' என்கிறது திருக்குறள். (கயவர், தாம் கேட்டறிந்த மறைபொருளைப் பிறர்க்கு வலியக்கொண்டுபோய்ச் சொல்லுவதால், அறையப்படும் பறை போன்றவர். -மு.வரதராசன் உரை). புறம் பேசுதலின் தொன்மைக்கும், அது கீழ்மைகளில் ஒன்றாக கருதப்பட்டதற்கும் உதாரணமாக இந்தக் குறளைக் கொள்ளலாம்.

கூட்டுக்குடும்ப முறை பெரிதும் சிதறாதிருந்த காலக்கட்டங்களில் மனிதர்கள் வம்பு பேசுவதற்கு போதுமான வெளிகளும் காரணங்களும் இருந்தன. ஒவ்வோரு புது மருமகளும் 'புகுந்த' வீட்டிற்குள்' நுழையும் போது, அந்நியமான சூழல், மனிதர்கள் என்று பிக் பாஸ் விளையாட்டின் அதே உணர்வுகளை, உளைச்சல்களை உணர்வார். மிக அற்பமான காரணங்கள் கூட வம்புகளுக்கு காரணமாக இருந்திருக்கும். பேசிப் பேசி மாய்வார்கள். ஒரு தரப்பிற்கு மனஉளைச்சல்களை ஏற்படுத்தும் இந்த வம்புகள், இன்னொரு தரப்பிற்கு மகிழ்ச்சியையும் ஆசுவாசத்தையும் அளிக்கும் முரணான தன்மையையும் கொண்டிருக்கும்.

கூட்டுக்குடும்பங்கள் சிதறி தனிக்குடும்பங்கள் பெருகிய பிறகு வம்பு பேசும் பொதுவெளிகள் குறையத் துவங்கின. மனிதர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் கலாச்சாரம் பெருகியது. குறிப்பாக பெருநகரங்களில், பக்கத்து வீடுகளில் உள்ளவர்களைப் பற்றிய தகவல் கூட அறியாத அல்லது அறிந்து கொள்ள விரும்பாத போக்கு வளர்ந்தது. பெண்களும் பணியிடங்களுக்குச் செல்லும் போக்கு வளர்ந்ததால் வம்பு பேசுவதற்கான நேரங்கள் குறைந்தன. பரபரப்பான வாழ்வியல் தன்மை, இது சார்ந்த விஷயங்களுக்கான போதுமான நேரத்தை அனுமதிக்கவில்லை. அலுவலக கூடங்கள் வம்பு பேசுவதற்கான சாத்தியத்தை அளித்தாலும் அவையும் போதுமானதாக அமையவில்லை.

இந்த வெற்றிடத்தை தொலைக்காட்சி தொடர்கள் மிக வெற்றிகரமாக கைப்பற்றின. ஆண்களை விடவும் பெண்களே அதிகம் வம்பு பேசுவர்களாக கருதப்படுகிறார்கள். இதற்கான உளவியல் காரணங்களும் இருக்கலாம். நிறைவேறாத விருப்பங்கள், அவை சார்ந்த ஏக்கங்களை அவர்கள் வேறு சில ஆசுவாசங்களின் மூலம்தான் கடக்க முடிவது ஒரு காரணமாக இருக்கலாம். தொலைக்காட்சி தொடர்களின் வெற்றிக்கு பெண்கள் ஆதாரமாக இருக்கிறார்கள். எனவே அவர்களைக் குறிவைத்தே பெரும்பாலான தொடர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன.

பெண் பாத்திரங்களை பிரதானமாகக் கொண்டு பெண்மையப் படைப்புகளாக இவை இருந்தாலும் பெரும்பாலும் அசட்டுக் களஞ்சியமாகவே உருவாகின்றன. இவைகளில் பெண்கள் மிதமிஞ்சிய அதிகாரம் உள்ளவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஆண்களை அடிமைப்படுத்துவது, அடிப்பது, போன்ற காட்சிகள் நிறைந்த மிகையுணர்ச்சியுடன் நாடகங்களே அதிகம். அன்றாட வாழ்வில் தங்களின் அதிகாரத்தை பெரிதும் செயல்படுத்த முடியாத நிலையில் உள்ள  பெண்களுக்கு இந்த தொடர்கள் மிகுந்த மனஆசுவாசத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றன. ஆண்களை பழிவாங்குவதுதான் பெண்ணியச் செயற்பாடு என்கிற அரைவேக்காட்டுத்தனத்தை இது போன்ற தொடர்கள் ஊக்கப்படுத்துகின்றன.

இந்த வம்பு பேசும்/கவனிக்கும் மனநிலையை வணிகமாக்கும் நவீனமான வடிவம்தான் 'பிக் பாஸ்' போன்ற ரியாலிட்டி ஷோக்கள்.


***

பெண்களையே அதிக பார்வையாளர்களாகக் கொண்டிருந்த தொலைக்காட்சி தொடர்களுக்கும் 'பிக் பாஸிற்கும்' இடையே ஒரு பெரிய வித்தியாசம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதுவரை நெடுந்தொடர்களை எரிச்சலாகவும் கிண்டலாகவும் பார்த்துக் கொண்டிருந்த ஆண்கள், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் கணிசமான பார்வையாளர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்களைப் பற்றி பெண்கள் விவாதித்துக் கொண்டிருந்த அதே ஆர்வத்துடன், ஆண்களும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி இன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கான காரணமாக எது இருக்கும்? திரைப்படங்களும் சரி, தொலைக்காட்சி தொடர்களும் சரி, ஒரு கதையாடலாக திட்டமிட்டு உருவாக்கப்பட்டு அதற்கேற்ப நடிகர்கள் நடிக்கிறார்கள் என்பதால் 'இது செயற்கையானது' என்பது  பார்வையாளர்களின், குறிப்பாக ஆண்களின் ஆழ்மனதில் பதிந்திருக்கலாம். மட்டுமல்லாமல் இது போன்ற தொடர்களில் பெண்களுக்கே முக்கியத்துவம் தரப்படுவதால் ஆண்கள் அது சார்ந்த மனவிலகலோடும் எள்ளலோடும் அவைகளை புறக்கணிக்கிறார்கள்.

ஆனால் 'பிக் பாஸ்' விளையாட்டு, மனிதர்களின் 'அசலான சம்பவங்கள்' என்கிற பாவனையுடன் உருவாகிறது. இதனால் இந்த நிகழ்ச்சியின் நம்பகத்தன்மை கூடுகிறது. 'பிளாஸ்டிக்'தனமான மனிதர்கள், சம்பவங்களை விடவும்,பொதுவிடங்களில் நிகழும் உண்மையான வாய்ச்சண்டைகளைப் போல இதன் நிகழ்வுகள் உண்மைத்தனத்துடன் வெளியாகின்றன. அதிலும் இவை பிரபலங்கள் தொடர்பான சண்டை என்பதால் சராசரிகளின் ஆவல் பல மடங்கு கூடுகிறது.

'பிக் பாஸ்' போட்டியாளர்களின் அசைவுகளை காமிராக்கள் 24 மணி நேரமும்  தொடர்ந்து பதிவு செய்து கொண்டிருந்தாலும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது ஒரு மணி நேரத்திற்கானது என்பதால் 'தேர்ந்தெடுக்கப்பட்ட' தருணங்கள் மட்டுமே  தொகுக்கப்பட்டு ஒளிபரப்பாகின்றன. அந்த தருணங்கள் பெரும்பாலும் சர்ச்சைகளை ஏற்படுத்தக்கூடிய வம்புகளாக, அகங்கார மோதல்களாக இருக்கும். இவையும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் நமக்கு காட்டக்கூடிய வடிவில்தான் இருக்கும்.

உண்மை என்பதே பல பரிமாணங்களைக் கொண்டதாக, எளிதில் கண்டுபிடிக்க முடியாத, புரிந்து கொள்ள முடியாத அருவமாக இருக்கும் போது இதில் காட்டப்படும் காட்சிகளை மட்டும் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் நல்லவர்கள், கெட்டவர்கள் என்கிற கறுப்பு - வெள்ளைத்தனமான முடிவிற்கு பார்வையாளர்கள் வருவது அறியாமையே. சினிமாக்களில் சித்தரிக்கப்படும் நாயகர்களையும் வில்லன்களையும் நிஜமென்று நினைத்துக் கொண்டு முறையே புகழ்வதும், திட்டுவதும் எத்தனை அபத்தமோ, அத்தனை அபத்தமே இந்த நிகழ்ச்சியையும் அது போன்று அணுகுவது.


***

இந்த நிகழ்ச்சி 'நாடகத்தன்மையுடையது',  'சம்பவங்கள் முன்பே தீர்மானிக்கப்பட்டு உறுப்பினர்கள்  நடிக்க வைக்கப்படுகிறார்கள்' என்பது போன்ற அபத்தமான அவதானிப்புகளை நிறைய வெளிப்படுகின்றன. எனில் நெடுந்தொடர்களுக்கும் இதற்குமான வித்தியாசம்தான் என்ன?

ஒரு கற்பனையான பரிசோதனையைப் பார்ப்போம். அடைக்கப்பட்ட ஒரு கூண்டிற்குள் சில எலிகளை விடுவோம். அவைகளுக்கு போதுமான உணவு அளிக்காமல் இருப்பது, கோபமூட்டும் வகையில் சீண்டிக் கொண்டே இருப்பது, எரிச்சலூட்டும் வகையில் சிறிய தண்டனைகளைக் கொடுத்துக் கொண்டே இருப்பது போன்வற்றை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால், அந்தக் கூண்டிலிருந்து தப்பிப்பதையே முதன்மையாக குறிக்கோளாக அவை கொண்டிருக்கும். அது சாத்தியமில்லை என்கிற சூழலில் பிற எலிகளின் மீது கோபம் திரும்பும். ஒன்றையொன்று பிறாண்டிக் கொண்டு, குதறிக் கொண்டிருக்கும். ஒன்றன் பின் ஒன்றாக அவை இறந்து போகலாம். அனைத்தும் ஒடுங்கிய அச்சத்தில் ஏறத்தாழ செத்துப் போன நிலையை அடைந்து கொண்டிருக்கலாம்.

'பிக் பாஸ்' விளையாட்டில் நிகழ்வதும் ஏறத்தாழ இதுவே. போட்டியாளர்களுக்கு அடிப்படையான வசதிகள் அளிக்கப்பட்டிருந்தாலும் குறுகிய வெளி, வெளியேறும் தண்டனை, அது சார்ந்த அச்சம், பதட்டம் உள்ளிட்ட பல காரணங்கள் அவர்களுக்கு மெல்ல மெல்ல உளைச்சலையும் மோதல்களையும் உருவாக்குகிறது. இந்தச் சூழல் மிக கவனமாக திட்டமிட்டு, உருவாக்கப்பட்டு அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. அப்படியான எதிர்வினைகள்தான் உற்பத்தியாகும் என்பது இந்த விளையாட்டை வடிவமைத்தவர்களுக்கு உறுதியாகத் தெரியும்.

சுருக்கமாகச் சொன்னால், மோதல்கள் உருவாவதற்காக கச்சிதமான ஏற்பாடுகள் செய்யப்பட்ட வெளி உறுப்பினர்களுக்கு அளிக்கப்படுகிறது. எதிர்பார்த்தபடியே அவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்கிறார்கள்.

சமூகத்தின் பல்வேறு படிநிலைகளில் இருப்பவர்கள் இதில் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்படுவது தற்செயலானதல்ல. கவனமாக திட்டமிடப்படுவது. அவர்கள் பெரும்பாலும் பிரபலங்களாக, திரைத்துறையைச் சேர்ந்தவர்களாக, அழகானவர்களாக இருப்பது  பார்வையாளர்களின் சுவாரசியத்தை தக்க வைத்துக் கொள்ளும் உத்தியே. எனவே இவர்களுக்குள்ளான உயர்வு மனப்பான்மை, தாழ்வுமனப்பான்மைக்கான அகங்கார மோதல்கள் நிச்சயம் உருவாகும். முன்கூட்டியே திட்டமிட்ட நாடகங்களாக இவை இருக்க முடியாது. அப்படி இருந்தால் இந்த விளையாட்டின் அடிப்படையான சுவாரசியமே கலைந்து விடும்.

'போட்டியாளர்கள் நடிக்கிறார்கள்' என்று எழுகிற அதிபுத்திசாலித்தனமான புகார்களும் அபத்தமானவையே. இவர்கள் நடிக்கிறார்கள் என்பது உண்மையானால் உலகப் புகழ் பெற்ற நடிகர்களை விடவும் இவர்களே சிறந்த கலைஞர்களாக இருக்க முடியும். ஆனால் இதில் கலந்து கொள்கிறவர்கள் பெரும்பாலும் திரைத்துறையின் புகழில் இருந்து மங்கலாகிக் கொண்டிருக்கிறவர்களே.

ஒரு பாத்திரத்தின் அதியதார்த்தமான அசைவை உருவாக்குவது, நடிகர்களை வெளிப்படுத்த செய்வது எத்தனை சவாலான காரியம் என்பது சினிமா இயக்குநர்களுக்குத் தெரியும். அவர்கள் அதற்காக மிகவும் மெனக்கெடுவார்கள். கச்சிதமான உடல்மொழி வரும் வரையில் திரும்பத் திரும்ப பல டேக்குகள் எடுக்கப்படும் என்பதை நாம் அறிவோம்.

நடைமுறை உதாரணம் ஒன்றைப் பார்ப்போம். நிஜ வாழ்வில், நீங்கள் அமர்ந்து எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லது வேறு எந்தப் பணியிலோ தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீீர்கள் என வைத்துக் கொள்வோம். பின்னாலிருந்து ஒருவர் திடீரென்று உங்களைப் பயமுறுத்துகிறார். அப்போது உங்களின் உடல்மொழியிலும் முகபாவங்களிலும் அது சார்ந்த அதிர்ச்சியும் திடுக்கிடலும் தன்னிச்சையாக ஏற்படும். நீங்கள் அறியாமல் இந்தக் காட்சி பதிவு செய்யப்படுகிறது என வைத்துக் கொள்வோம்.

இந்த தன்னிச்சையான உடல்மொழியின் வெளிப்பாட்டை, அதே போன்று அச்சு அசலாக உலகத்தின் எத்தனை சிறந்த நடிப்புக் கலைஞனாலும் தந்து விட முடியாது. அவனுடைய ஆழ்மனதில் 'நாம் நடிக்கப் போகிறோம்' என்று எழுகிற உணர்வை அழிக்கவே முடியாது. எத்தனை திறமையான நடிகனாக இருந்தாலும் இது சார்ந்த செயற்கைத்தன்மை சிறிய சதவீதமாவது நிச்சயம் வெளிப்பட்டு விடும். மேற்குறிப்பிட்ட அசலான காட்சியையும், நடிகர் நடித்த காட்சியையும் ஒப்பிட்டால் நுட்பமான கவனிப்பின் மூலம் இரண்டிற்குமான வித்தியாசத்தை எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.

'பிக் பாஸ்' விளையாட்டில் வெளிப்படும் உடல்மொழிகளும் அசைவுகளும் அசலானவையே. அவை தொகுக்கப்பட்ட விதத்தில் அல்லது விளையாட்டு, போட்டி போன்றவைகளில் வேண்டுமானால் முன்கூட்டியே திட்டமிட்ட சில விஷயங்கள் இருக்கக்கூடும்.


***

மனிதனின் வம்பு பேசும், கவனிக்கும் அடிப்படையான குணத்தை, மற்றவர்களின் அந்தரங்கங்களை ஒளிந்திருந்து பார்க்கும் வக்கிரத்தை இது போன்ற நிகழ்ச்சிகள் ஊக்கப்படுத்துகின்றன, இது சார்ந்த உணர்வுச்சுரண்டலை வணிகமாக்குகின்றன என்கிற புகார்களில் பெரும்பாலும் உண்மையில்லாமல் இல்லை.

கமல்ஹாசன் பற்றிய தனிப்பட்ட செய்திகள் ஊடகங்களில் வம்புகளாக உருமாறும் போது 'எனது பெட்ரூமில் எட்டிப் பார்க்கும் உரிமை எவருக்கும் கிடையாது' என்று தனிநபரின் சுதந்திரத்தைப் பற்றி பேசிய அவரே, தூங்கும் நேரத்தையும் விடாமல் பதிவு செய்யும் இது போன்ற நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக ஆனது நகைமுரணா அல்லது காலத்தின் கட்டாயமா என தெரியவில்லை.

நிகழ்ச்சியை தொகுத்தளிக்கும் போது 'இதுவொரு சமூகப் பரிசோதனை' என்றார் கமல். ஒருவகையில் அது உண்மைதான். தீயவைகளில் இருந்து தன்னிச்சையாக உருவாகும் நன்மை போல, இந்த நிகழ்ச்சி வணிக நோக்குடையது என்றாலும் கூட இதிலும் சில நன்மைகள் இருக்கின்றன என்று எடுத்துக் கொள்ளலாம்.

இந்த வீட்டின் உறுப்பினர்களின் அகங்கார மோதல்கள், சண்டைகள், கோரமான முகபாவங்கள், புண்படுத்தும் குரூரங்கள், புண்படும் பரிதாபங்கள் போன்றவற்றைக் காணும் போது, நம்மை 'வெளியே' நிறுத்திக் கொண்டு அவர்களைப் பற்றி விமர்சிக்கிறோம். சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் நம்முடைய கீழ்மைகளின் பிம்பங்களே அவை என்பதை உணர முடியும். நம்முடைய அன்றாட வாழ்வில் அது போன்ற சம்பவங்ககள் நிறைய நடக்கின்றன. புண்படுத்துகிறவர்களாகவும், புண்படுகிறவர்களாகவும் நாமே இருக்கிறோம். ஆனால் அவைகளைப் பதிவு செய்யும் காமிராக்கள் இல்லை. எனவே அந்தக் கணங்களில் நாம் என்னவாக இருக்கிறோம் என்பதை நாமே அறிய முடிவதில்லை. அது சார்ந்த ஒரு வாய்ப்பை இந்தக் காணொளிகள் நமக்குத் தருகின்றன.

ஒரு போட்டியாளர் மிக மோசமாக நடந்து கொள்ளும் காட்சியைப் பார்த்து பார்வையாளர் திடுக்கிடும் போது அல்லது அவரை கடுமையாக வெறுக்கும் போது, அவரும் அது போன்றே அவருடைய வாழ்வில் பலமுறை நடந்து கொண்டதை மனச்சாட்சி நினைவுப்படுத்துகிறது. அது குறித்து குற்றவுணர்வும் வெட்கமும் அடைய வைக்கிறது. இனியாவது அப்படி நடந்து கொள்ள வேண்டாம் என்கிற நல்லுணர்வு தூண்டப்படுகிறது.

இது சார்ந்த சுயபரிசீலனைகளை உருவாக்குவது இந்த நிகழ்ச்சியின் தன்னிச்சையான ஒரு நல்விளைவு எனலாம். இது போன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்துதான் நல்லியல்புகளுக்கு திரும்ப வேண்டுமா, அறங்களை, மதிப்பீடுகளை வலியுறுத்தும் நல்ல இலக்கியங்களின் மூலம் அடையலாமே' என்கிற கேள்வி எழக்கூடும். அது அபத்தமான வழியிலாக இருந்தாலும் அறிவுக்கண் திறந்து கொள்ளும் நல்விளைவு எங்கே உருவாகினாலும் அது நல்லதுதானே? போதிமரம் எங்கே, எப்போது எதிர்ப்படும் என்பதை நம்மால் யூகிக்க முடியாது.


இந்த விளையாட்டின் தமிழ் வடிவத்தில், நடிகை ஓவியாவின் செயற்பாடுகள் பெரும்பான்மையோரைக் கவர்ந்திருக்கின்றன. சமூக வலைத்தளங்களில் இவருக்கு புகழ் மாலைகள் குவிகின்றன. இவருடன் சண்டை போடுபவர்கள் கடுமையாக வெறுக்கப்படுகிறார்கள்.

அப்படியென்ன செய்கிறார் ஓவியா? பெரும்பாலும் எவரைப் பற்றியும் புறம் பேசுவதில்லை. சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாகவே உரையாடுகிறார். சர்ச்சைகள் உருவாகும் சூழலில் இருந்து உடனே விலகுகிறார்.  புண்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார். தம்முடைய தவறு சுட்டிக்காட்டப்பட்டால் உடனே மன்னிப்பு கேட்கிறார். மிக குறிப்பாக தனது ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்கிறார்.

இவரிடமும் குறைகள் இல்லாமல் இல்லை. தமக்கு தரப்பட்ட பணிகளை செய்யாமல் ஒதுங்குவது, கூடி விவாதித்து எடுக்கப்பட்ட முடிவுகளை மீறுவது போன்ற குறைகள். இவற்றையும் மீறி இவர் பார்வையாளர்களால் கொண்டாடப்படுவதற்கு மற்றவர்களின் அதிகமான கீழ்மைகளே காரணம். ஓவியாவின் நல்லியல்புகள், ஒரு நாகரிக மனிதர் பின்பற்ற வேண்டிய அடிப்படையான சாதாரணத்துவத்தைக் கொண்டிருந்தாலும் பிறரின் மோசமான செயல்களோடு ஒப்பிடப்படும் போது பிரம்மாண்டமாக தெரிகிறது. இருளில் ஒளிரும் அகல் விளக்கின் பிரகாசம் போல.

***

'கடவுள் இரண்டு பொம்மைகள் செய்தான், தான் விளையாட. அவை இரண்டும் சேர்ந்து பொம்மைகள் செய்தன, தாம் விளையாட' என்பது ஒரு பிரபலமான திரையிசைப்பாடல். ஒருவகையில் இந்த உலகமே 'பிக் பாஸ்' விளையாட்டு மைதானம்தான். மனச்சாட்சி எனும் ஒளிப்பதிவுக்கருவி நம்முடைய கீழ்மைகளை தொடர்ந்து பதிவு செய்து அவசியமான சமயங்களில் நமக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.  நாம்தான் அவற்றை பெரும்பாலும் கவனிப்பதில்லை.

மனிதன் என்பவன் கூடிவாழும் சமூக விலங்கு என்பது ஒருபுறம் உண்மை. இன்னொரு புறம் தனிமையை, அந்தரங்க வெளியை விரும்புபவனாகவும் இருக்கிறான். இரண்டிற்குமான முரணியக்க விளையாட்டே 'பிக் பாஸ்'.

- உயிர்மை - ஆகஸ்ட் 2017-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

 
suresh kannan

Monday, May 23, 2016

அகிராவின் ‘தெரு நாய்’





ஜப்பானிய திரைப்பட மேதையான ‘அகிரா குரசேவா’ மொத்தம் 30 திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் அவற்றில் பொதுவாக சில திரைப்படங்களைப் பற்றிய உரையாடல்  மட்டுமே தமிழ் சூழலில் திரும்பத் திரும்ப நிகழ்கின்றன.  உதாரணமாக ரஷோமான் (1950), செவன் சாமுராய் (1954) போன்ற படைப்புகள். இன்னும் சற்று உள்ளே நகர்ந்தால் தஸ்தாயேவ்ஸ்கியின் நாவலையொட்டி உருவான தி இடியட் (1951), மற்றும் இகிரு (1952) போன்ற திரைப்படங்கள். அகிராவின் அதிகம் உரையாடப்படாத உன்னதமான திரைப்படங்கள் மேலும் பல இருக்கின்றன. அவற்றில் ஒன்று, Stray Dog. 1949-ல் வெளியானது. இது அவருடைய ஒன்பதாவது திரைப்படம்.

அகிராவின் அதுவரையிலான திரைப்படங்களோடு ஒப்பிடும் போது இயக்கத்தின் நுட்பமும் காட்சிப்படுத்துதலின் செய்நேர்த்தியும் சிறப்பாக அமைந்த திரைப்படம் இது. அவருடைய முதல் மாஸ்டர்பீஸாக இத்திரைப்படத்தை விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். இதில் அவர் காட்சிகளைக் கையாண்டிருக்கும் விதம், அவற்றின் உருவாக்க முறைகள், காமிராவின் கோணங்கள் ஆகியவற்றைப் பார்த்தால் இன்றும் கூட பிரமிப்பும் வியப்பும் ஏற்படுத்துபவைகளாக அமைகின்றன. ஆனால் ‘இது எனக்கு திருப்தியை ஏற்படுத்தாத திரைப்படம்’ என்கிறார் அகிரா. கலைநுட்பத்தின் முழுமையைத் தேட முயலும் கலைஞர்களுக்கு தம்முடைய படைப்புகளில் அந்தரங்கமான திருப்தி என்பது ஏற்படவே ஏற்படாது என்றே அதைக் கருத வேண்டும்.

இந்த திரைப்படம் வெளியான அடுத்த வருடத்தில் அதாவது 1950-ல் அவர் உருவாக்கிய ‘ரஷோமான்’ திரைப்படம் மூலமாகவே அவர் சர்வதேச அரங்குகளில் பிரத்யேகமாக கவனிக்கப்பட்டார். ஜப்பானிய திரைப்படங்களைப் பற்றிய கவனமும் சர்வதேச திரைப்பார்வையாளர்களுக்கிடையே எழுந்தது.


போருக்குப் பிந்தைய ஜப்பான். டோக்கியோவின் ஒரு கோடைக்காலம். இளநிலை காவல்துறையாக பணிபுரியும் முரகாமி (தோஷிரோ மிஃபுனே) ஒரு பேருந்து பயணத்தின் போது தன்னுடைய துப்பாக்கியை தொலைத்து விடுகிறார். பேருந்தில் இருந்து இறங்கி ஓடும் திருடனை கண்டு கொள்ளும் அவர் பதற்றத்துடன் அவனை சந்து பொந்துகளில் துரத்திச் சென்றாலும் பிடிக்க முடிவதில்லை. குற்றவுணர்வுடன் தன்னுடைய தவறை ஒப்புக் கொள்ளும் அவர் தன் பணியை ராஜினாமா செய்ய முன்வருகிறார். மிகவும் நல்லவரான அவருடைய மேலதிகாரி துப்பாக்கியைத் திரும்பப் பெறுவதற்கான கனிவான யோசனையைச் சொல்கிறார்.

முரகாமி தொலைந்து போன தன்னுடைய துப்பாக்கியைத் தேடிச் செல்லும் சம்பவங்கள் மூலம் டோக்கியோவின் அப்போதைய காலக்கட்டத்தின் சமூக பின்னணிக் காட்சிகள் மிக நுட்பமாக விரிகின்றன. பாலியல் தொழிலாளிகள், உதிரிக் குற்றவாளிகள், சில்லறை ரவுடிகள், கிளப்பில் ஆடும் நடன மங்கைகள், ராணுவத்திலிருந்து திரும்பி வேலையற்று தெருவில் உலவும் இளைஞர்கள் என்று பல மனிதர்கள் இதன் பின்னணயில் உலவுகிறார்கள்.

இத்திரைப்படத்தில் கோடையின் வெப்பம் இத்தனை உக்கிரமாக சித்தரிக்கப்பட்டிருப்பதைப் போன்று வேறு எந்த திரைப்படத்திலும் நான் கண்டதில்லை. இந்தியா போன்ற ஆசிய நாடுகளின் வெப்பநிலையை உணர்ந்தவர்கள் இந்தப் புழுக்கமான காட்சிகளை நெருக்கமாக உணர்வார்கள். அந்தளவிற்கு படம் முழுவதிலும் மனிதர்கள் வியர்வையைத் துடைத்துக் கொண்டும் விசிறிக் கொண்டும் புழுக்கத்தின் சலிப்போடு ஒருவரையொருவர் எரிச்சலோடும் கோபத்தோடும் அணுகுகிறார்கள்.

ஒரு நடனவிடுதியில் கவர்ச்சியாக நடனமாடும் இளம் மங்கைகள் தம்முடைய பணி முடிந்ததும் மேல் தளத்திலுள்ள தங்களின்  இருப்பிடத்திற்குச் சென்று வெட்டிச் சாய்க்கப்பட்ட மரங்கள் போல் ஒருவர் ஒருவராக அப்படியே தரையில் சாய்ந்து இளைப்பாறுகிறார்கள். அவர்களின் முகங்களிலும் உடலிலும் படிந்திருக்கும் வியர்வைத் துளிகள் அண்மைக் கோணத்தில் காட்டப்படுகின்றன. சில நிமிடங்களில் கடந்து போகும் இந்தக் காட்சியின் மூலம் நடனமாடும் அந்தப் பெண்களின் மீதான கவர்ச்சி சார்ந்த பிம்பத்தை அழித்து அவர்களின் உடல் சார்ந்த வலியையும் துயரத்தையும் பார்வையாளர்களுக்கு அபாரமாக கடத்தி விடுகிறார் அகிரா. கோடைக்காலப் பின்னணி என்பது ஒரு முக்கியமான பாத்திரமாகவே இத்திரைப்படத்தில் பதிவாகியிருக்கிறது.

**
தொலைந்து போன தன்னுடைய துப்பாக்கியை எவ்வாறு கண்டெடுப்பது என்கிற  குழப்பத்துடன் குற்றவுணர்வுடனும் பரபரப்பாகவும் தவிக்கும் முரகாமிக்கு அவனுடைய உயர் காவல் அதிகாரியான சட்டோ (டகாஷி ஷிமுரா) கனிவுடன் உதவுகிறார். காவல் பணியில் அதிக வருட அனுபவம் உள்ளவர் என்பதால் அவருக்கு குற்றவாளிகளின் உலகைப் பற்றி நன்கு அறிமுகமுள்ளது. ஒவ்வொரு குற்றவாளியின் தனிப்பட்ட தகவல்களை அறிந்தவராக இருக்கிறார். குற்றவாளிகளை அவர்களுடைய போக்கிலேயே விட்டு தகவல்களை சேகரிக்கும் காட்சிகள் அற்புதமாக இருக்கின்றன.

இந்த தேடலின் இடையில் ஒரு நாள் சட்டோ, முரகாமியை எதிர்பாராத ஆச்சரியமாக தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். அவருடைய மனைவியும் குழந்தைகளும் முரகாமியை அன்புடன் வரவேற்கிறார்கள். இருவரும் அமர்ந்து தங்களின் தொழில் சார்ந்த பிரச்சினைகளை மதுவருந்திக் கொண்டே உரையாடுகிறார்கள். முரகாமி கிளம்பும் போது குழந்தைகள் உறங்கி விடுகிறார்கள். பொம்மைகளின் இடையே குழந்தைகள் உறங்கும் காட்சியும் அதை பெற்றோரும் முரகாமியும் நின்று பார்க்கும் காட்சியும் காமிராவின் கோணமும் நெகிழ்வை ஏற்படுத்துபவையாக இருக்கிறது. ஒரு வீட்டின் குடும்பத்தலைவன் இரவில் வீட்டுக்கு வந்து உறங்கிக் கொண்டிருக்கும் தன் குழந்தையை ரசித்துக் கொண்டே அன்றைய நாளின் பணியின் களைப்பையும் சலிப்பையும் கடக்க முயலும் உணர்வை நினைவூட்டுபவையாக பதிவாகியிருக்கிறது அந்தக் காட்சி.

**

முரகாமியின் இந்தப் பயணத்தில் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறான். அவனுடைய தொலைந்து போன துப்பாக்கியின் மூலம் இதர சில குற்றங்களுக்கான விடைகள் கிடைக்கின்றன. தன்னிடமிருந்து துப்பாக்கியைத் திருடிச் சென்றவன் பற்றிய தகவலைப் பெறுவதற்காக ஜேப்படி பெண்ணொருத்தியை பின்தொடர்ந்து செல்கிறான். அவளோ இவனுக்கு பல வழிகளில் போக்கு காட்டினாலும் தப்பிக்க இயலவில்லை. அவள் தரும் தகவலின் படி கள்ள மார்க்கெட்டில் துப்பாக்கியைத் தேடிப் போகிறான். மிக நீண்ட இந்தக் காட்சிக்கோர்வையில் உதிரிக்குற்றவாளிகள் உட்பட பல மனிதர்கள் தென்படுகிறார்கள். இதற்கிடையில் அவனுடைய துப்பாக்கியைப் பயன்படுத்தி குற்றமொன்று நடைபெறுவதால் மிகுந்த பதட்டமடைகிறான் முரகாமி.

ஒவ்வொரு கண்ணியாக பின்தொடர்வதில் குற்றவாளியின் காதலியை கண்டுபிடிக்க நேர்கிறது. அவளோ தன் காதலனைப் பற்றிய எந்தவொரு தகவலையும் தர மறுக்கிறாள். முரகாமியின் உயர்நிலை அதிகாரியான சட்டோவை துப்பாக்கியில் சுட்டு விட்டு குற்றவாளி ஓடிவிடுகிறான். அவனுடைய காதலி மனம் மாறி முரகாமிக்கு குற்றவாளியிடம் இருப்பிடம் பற்றி சொல்ல சிலபல துரத்தலுக்குப் பிறகு அவனைப் பிடித்து விடுகிறான்.

குற்றவாளியும் முரகாமியைப் போலவே ராணுவத்தில் பணிபுரிந்து விட்டு ஊர்திரும்பியவன். போருக்குப் பின்னான வறுமை காரணமாக குற்றத் தொழிலில் ஈடுபடுகிறான். தன்னுடைய காதலி விரும்பிக் கேட்ட அதிக விலையுடைய ஆடையை வாங்குவதற்காகவே அவன் முரகாமியின் துப்பாக்கியைத் திருடி விற்று விடுகிறான். அவன் குற்றவாளியாக இருந்தாலும் அவனுடைய அன்பிற்காகவே முதலில் அவனுடைய காதலி காட்டித் தராமல் இருக்கிறாள்.  குற்றவாளியைப் போலவே முரகாமியும் ராணுவத்திலிருந்து திரும்பியவன்தான். அந்தச் சூழலே அவனை காவல்துறையில் இணைய வைக்கிறது. போருக்குப் பின்னதான சூழல் இருவேறு மனிதர்களை எதிரெதிர் திசையில் பயணம் செய்ய வைக்கிற முரணை மிக நுட்பமாக சுட்டிக் காட்டுகிறார் அகிரா குரசேவா.

**

படத்தின் துவக்கத்தில் பதட்டமுடனும் அச்சத்துடனும் காணப்படும் ஒரு நாயின் முகம் பரபரப்பான இசையின் பின்னணியில் நெருக்கமான அண்மைக் கோணத்தில் காட்டப்படுகிறது. முரகாமி துப்பாக்கியைத் தேடி கோடைக்காலத்தில் தெரு தெருவாக அலைந்து திரிவதின் ஒரு படிமமாகவே அந்த நாய் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.

பொதுவாக காவல்துறை அதிகாரி என்றாலே எளிய மக்களை அதட்டி ஒடுக்குபவராகவும் வன்முறையைச் செலுத்துபவராகவும் சித்தரிக்கப்படும் சூழ்நிலையில்  அவர்களும் பதட்டப்படும், அச்சப்படும் சாதாரண, எளிய நபர்களே என்கிற யதார்த்தத்தை பதிவு செய்கிறார் அகிரா. முரகாமிக்கு தன்னுடைய பணியை இழப்பதை விட துப்பாக்கியை அலட்சியமாக தொலைத்து விட்டோமே என்கிற குற்றவுணர்வுதான் அதிகம் அலைக்கழிக்கிறது. படம் பூராவும் பரபரப்பும் படபடப்புமாகவே அலைகிறார்.

தோஷிரோ மிஃபுனே இந்தப் பாத்திரத்தை மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார். வேட்டைக்கு கிளம்பும் பசித்த விலங்கின் ஆர்வமும் குரூரமும் படபடப்பும் அவருடைய கண்களில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அவரது பிரத்யேகமான உடல்மொழியும் வேகமான அசைவுகளும் கூர்மையான பார்வையும் எப்போதும் போலவே சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தன்னுடைய பெரும்பாலான படங்களில் தோஷிரோ மிஃபுனே-வை அகிரா பயன்படுத்தியிருப்பதில் இருந்தே இந்தக் கூட்டணிக்குள்ள புரிந்துணர்வையும் நெருக்கத்தையும் அறிய முடியும்.

இதைப் போலவே முரகாமியின் உயர்நிலை காவல் அதிகாரியாக வரும் டகாஷி ஷிமுராவும் அற்புதமாக நடித்திருக்கிறார். குற்றவாளிகளின் வாழ்வியலும் அவர்களைப் பற்றிய உளவியலும் நன்கு அறிந்த அனுபவமுள்ள காவல்துறை பணியாளராக இருக்கும் அவர், முரகாமியைப் போல அல்லாமல் எவ்வித பதட்டமும் அல்லாமல் சமயோசிதமாக குற்றவாளிகளைக் கனிவுடன் கையாண்டு தகவல்களைப் பெறுகிறார்.

இன்னொன்று, இதில் சித்தரிக்கப்படுபவர்கள் உதிரிக்குற்றவாளிகளாக இருந்தாலும் காவல்துறையின் விசாரணைக்கு அவர்கள் அஞ்சி நடுங்குவதில்லை. தாங்கள் விரும்பாவிட்டால் சில கேள்விகளுக்கு பதில் அளிக்கத் தேவையில்லை என்கிற மனித உரிமையின் அடிப்படை சார்ந்த அறிவையும் பிரக்ஞையையும் கொண்டிருக்கிறார்கள். ஜேப்படி பெண், கள்ளத் துப்பாக்கி விற்கும் பெண், குற்றவாளியின் காதலி  என்று அனைவருமே விசாரணைக்கு அஞ்சாமல் தாங்களே விரும்பும் பட்சத்தில்தான் தகவல்களை அளிக்க முன்வருகிறார்கள்.

**

படத்தின் துவக்கக் காட்சியில் முரகாமி குற்றவாளியை துரத்திக் கொண்டு வரும் காட்சிகள், ஜேப்படி பெண்ணை துரத்தும் காட்சிகள், உதிரிக்குற்றவாளிகள் நிறைந்திருக்கும் கள்ளச் சந்தையில் முரகாமி சுற்றும் காட்சிகள், விளையாட்டு நடைபெறும் வெளிப்புறக் காட்சிகளையும் அரங்கக் காட்சிகளையும் இணைத்திருக்கும் கச்சிதம் போன்றவை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநருக்கான மேதமையைக் காட்டுகின்றன.

அதிகாரத்தை வைத்திருப்பவர்கள், அதிகாரத்திற்கு உட்படுபவர்கள், அதை மீறும் குற்றவாளிகள் என்று ஏறத்தாழ பெரும்பாலோனோர் சூழ்நிலையின் கைதிகளாக இயங்க நேரும் அவலத்தின் மீதான தத்துவார்த்தமான உணர்வைத் தருகிறது  இத்திரைப்படம். இறுதிக் காட்சியில் முரகாமி குற்றவாளியைப் பிடித்து தன்னுடைய தேடலை நிறைவு செய்தாலும் ஏதோவொரு குழப்பமும் நிறைவின்மையும் அவனுக்குள் நெருடிக் கொண்டேயிருக்கிறது. அவனுடைய உயர்அதிகாரிதான் அவனுடைய முதல் வழக்கை அவன் திறமையாக கையாண்டதற்காக அவனைப் பாராட்டி ஆற்றுப்படுத்துகிறார்.

போருக்குப் பின்னதான ஒரு பிரதேசத்தில் நிகழும் மாற்றங்களையும் தனிமனிதர்களின் துயரங்களையும் வெறுமையையும் அகிராவின் பல திரைப்படங்கள் நுட்பமாக சித்தரித்துள்ளன. அவற்றில் சிறப்பானததொன்றாக இந்த ‘தெரு நாயை’ குறிப்பிட முடியும்.

- உயிர்மை - மே 2016-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan

Saturday, March 05, 2016

பீஃப் பாடல் சர்ச்சை: பாசாங்கு எதிர்ப்பின் உளவியல்



 

மனம் ஒரு குரங்கு என்பதற்கான உதாரணம் எதற்குப் பொருந்துமோ இல்லையோ, இணையத்தின் சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும். அந்தந்த கணத்தின் பரபரப்பான நிகழ்வுகளை, சர்ச்சைகளை ஒரு சுவிங்கம் போல் மென்று அதன் சுவை கரைவதற்குள்  துப்பி விட்டு அடுத்த சுவிங்கத்தை நோக்கி ஓடும் செய்தி ஊடகங்களின் பரபரப்பான பாணியை இணைய வம்பாளர்களும் அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். ஆனால்  விசையை முடுக்கினாற் போல் அதிலொரு மாற்றம் சமீபத்தில்  நிகழ்ந்தது.   தமிழகத்தின் நான்கைந்து மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது பொழுதுபோக்கு உரையாடல்களும் வம்புகளும் சட்னெ்று நின்று போய் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவும் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் பணிகளும் உதவி கோருதலும் பெறுதலுமாக சூழல் பரபரப்பாக மாறிற்று. இது ஆக்கப்பூர்வமான பரபரப்பு. இணைய மொண்ணைகள் என்று பொதுவான எள்ளலில் குறிப்பிடப்படும் இவர்களால்தான் பெரும்பாலான பாதிக்கப்பட்ட நபர்கள் தக்க நேரத்தில் உதவி பெற்றார்கள், காப்பாற்றப்பட்டார்கள் என்பது கவனிக்கத்தக்க ஒரு சமூக  நிகழ்வு.

நான்கைந்து நாட்கள் நீடித்த இந்த நல்ல மாற்றத்தை மீண்டும் தலைகீழாக்கியது ஒரு பாடல் மீீதான சர்ச்சை. தமிழகம் இயல்பு நிலைக்கு மாறியதோ இல்லையோ, இணைய உலகம் அதன் 'இயல்பு நிலைக்கு' சட்டென்று திரும்பி விட்டது. வெள்ள சேதம் ஏற்பட்டதற்கான அரசியல் காரணங்களும் அது சார்ந்த கோபங்கள், உரையாடல்கள் அனைத்தும் சர்ச்சைப் பாடலின் மீதான வம்பு வெள்ளத்தில் மூழ்கியது. இந்தப் போக்கு நம் கலாசார பலவீனங்களில் ஒன்று எனத் தோன்றுகிறது.

இந்த சர்ச்சை தொடர்பான விவரங்கள் என்னவென்று தெரியாதவர்களுக்காக (அப்படி எவரேனும் உள்ளாார்களா என்ன?) அதைப் பற்றிப் பார்ப்போம். தமிழகத்தின் மாவட்டங்கள் வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்டு அதனிடமிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டிருக்கும் போது இணையத்தில் ஒரு பாடல் வெளியாகிறது. பாடியவர் நடிகர் சிம்பு எனவும் இசையமைப்பாளர் அனிருத் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.. பாடலின் முதல் வரியிலேயே பெண்களின் அந்தரங்க உறுப்பைச் சுட்டும் கொச்சையான வார்த்தை ஒன்று உபயோகப்படுத்தப்பட்டு நடுவில் உள்ள ஓர் எழுத்து மாத்திரம் பீஃப் ஒலியால் மூடப்பட்டிருந்தது. என்றாலும் அது என்ன வார்த்தை என்று கேட்கும் பெரும்பாலோனோர்க்கு எளிதாகவே புரியும். அதுதான் அதன் நோக்கமும் கூட என்று தெரிகிறது.

பொதுவாக இணையத்தில் உரையாடப்படும் சர்ச்சைகள் இணைய அளவிலேயே உயர்ந்தெழுந்து அடங்கி ஓய்ந்து விடும். ஆனால் இந்த சர்ச்சையின் மீதான எதிர்ப்பு இணையத்தையும் தாண்டி சமூக வெளியிலும் கடுமையாக பிரதிபலித்தது.  மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய இயக்கம் போன்றவர்கள் எதிர்ப்பு போராட்டங்கள் நிகழ்த்துமளவிற்கு சென்றது. காணொளி ஊடகங்களில் செய்தியாளர்களும் கனவான்களும் கொதிப்புடன் இதைப் பேசி பேசி மாய்ந்தார்கள். சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களையும் தூக்கில் போட வேண்டும், தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பது போன்ற ஆவேசமான குரல்கள எழுந்தன. இது தொடர்பான பல வழக்குகள் ஒருபுறம் தொடுக்கப்பட மற்றொரு புறம் காவல்துறை விசாரணயும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சர்ச்சையையொட்டி பொதுச் சமூகத்தின் இந்த அதீதமான எதிர்ப்பு பாசாங்கிற்குப் பின்னால் உள்ள உளவியலையும் இது போன்ற ஆணாதிக்கச் செயற்பாடுகளின் பின்னே உறைந்திருக்கும் சமூகவியல் காரணங்களையும், அறிவுசார் சமூகம் இது போன்ற சர்ச்சைகளை கையாள வேண்டிய நிதானத்தைப் பற்றியும் என்னளவில் சொல்ல முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம். தவறிழைப்பவர்களை காப்பாற்றுவதோ அல்லது இது போன்ற கீழ்மைகளை ஊக்குவிப்பதோ அல்ல. இது போன்ற ஆணாதிக்கத் திமிரினால் எழும் செயற்பாடுகள் பெண்களின் மீது செலுத்தப்படும் மனம்/உடல் சார்ந்த வன்முறைகளுக்கும் பாலியல் சீண்டல்களுக்கும் மேலதிக காரணமாகி நிற்கின்றன என்கிற பிரக்ஞை இல்லாமல் இல்லை. என்றாலும் ஒரு Devil's advocate-ன் குரலை மனச்சாய்வற்ற நீதியொன்று கவனிப்பதைப் போல இந்தச் சர்ச்சையின் மீதான மறுபக்க நியாங்களையும் பற்றி நாம் நிதானமாக கவனிக்க வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். ஒருவகையில் இந்தச் சர்ச்சை மீது எழுந்த ஒட்டுமொத்த சமூகத்தின் அதீதமான எதிர்ப்பும் அதிலுள்ள போலித்தனங்களும் பாசாங்களுமே இதை எழுதத் தூண்டியது. இந்த அதிகமான எதிர்ப்பே இந்தப் பாடலின் மீதான அதிக கவனத்தைக் குவித்து விட்டதோ என்பதையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

***

திரைப்படப் பாடல்களில் உள்ள ஆபாச வரிகளால், வார்த்தைகளால் அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து அடங்குவது நமக்குப் புதிதான விஷயமல்ல. ஆனால் இந்த குறிப்பிட்ட சர்ச்சையில் ஏறக்குறைய சமூகத்தின் அனைத்து தரப்பும் இந்த எதிர்ப்பில் ஒன்றிணைந்து  மிக கடுமையான அளவிற்கு பரபரப்பு எழுவது இதுவே முதன்முறை என நினைக்கிறேன். இது போன்ற சர்ச்சைகளில் பொதுப்புத்தி சார்ந்தவர்களின் நிதானமற்ற உடனடி ஆவேசம் எவ்வாறிருக்கும் என்பது புதிதானதல்ல. 'திருடன் பராபஸை விடுதலை செய், இயேசுவை சிலுவையில் ஏற்று' என்கிற கூக்குரலிட்ட வேதாகம காலத்திலிருந்து பொதுமக்களின் நிதானமற்ற எதிர்வினைகளுக்கான வரலாற்று உதாரணங்கள் நிறைய உள்ளன. பொதுப்புத்தியின் நிதானமற்ற, உடனடியான கண்மூடித்தனமான எதிர்ப்பு காலங்காலமாக எவ்வாறு இருக்கிறது என்பதற்காக இந்த உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். ஆனால் இது போன்ற நெருக்கடியான சூழல்களை நிதானத்துடன் அணுக வேண்டிய அறிவுசார் சமூகமும் இந்தச் சர்ச்சையையொட்டி பொதுப்புத்தியுடன் இணைந்து கொண்டது ஆபத்தான போக்கு. இவர்களின் நோகக்கில் சமநிலை தவறிய சிலபல எதிர்வினைகளை கவனிக்க நேர்ந்தது. மற்ற சமயங்களில் நிதானத்துடன் அவற்றின் பல்வேறு பரிமாணங்கள் சார்ந்து சிந்திக்கும் இந்த அறிவுஜீவிகள் இந்தச் சர்ச்சையை ஏன் மிகையுணர்ச்சியுடன் எதிர்கொண்டார்கள் என்று எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

நடிகர் மற்றும் இசையமைப்பாளரின் வீட்டுப் பெண் கலைஞர்கள் நடனமாடினால் இந்தப் பாடலுக்கு குறிப்பாக அந்த சர்ச்சையான வார்த்தைக்கு எவ்வாறு அபிநயம் பிடிப்பார்கள் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுடன் ஓர் ஆவேசமான கட்டுரையை எழுதினார் ஒரு பெண்ணிய எழுத்தாளர். இணையத்தில் ஒருபக்கம் அதற்குப் பலத்த வரவேற்பும் மறுபுறம் கண்டனங்களும் இருந்தது. அந்தப் பெண்களும் ஆணாதிக்கப் போக்கினால் பாதிக்கப்படுவர்களாக (Victim) இருக்கலாம், அதனாலேயே அவர்களின் எதிர்வினைகள் மெளனமாகி அல்லது அடங்கிப்  போயிருக்கலாம் என்கிற யூகத்தின் மீதான சந்தேகத்தின் பலனைக் கூட தராமல் குற்றஞ்சாட்டிருக்கப்பட்டவர்களின் உறவினர்களை முன்முடிவுடன் கடுமையாக விமர்சித்த போக்கை என்னவென்பது? இன்னொரு பெண்ணிய எழுத்தாளர் - அவர் உளவியலாளரும் கூட - பாடலின் முதல் வார்த்தை தொடர்பான விமர்சனத்தை வைத்து விட்டு, இது  போன்ற கயவர்களை புறக்கணித்து விட்டு  நம் வேலையைப் பார்ப்போம் என்று முகநூலில் எழுதுகிறார். கயவர்களும் சமூகத்திலிருந்து உருவாகிறவர்கள்தான். அதன் ஒரு பகுதியாக இருப்பவர்கள்தான். ஒரு மனிதன் கயவனாவதற்கு பின்னணியிலுள்ள உளவியல் மற்றும் சமூகவியல் காரணங்களைப் பற்றி அந்த உளவியலாளருக்கு தெரியாதா? அவரும் இந்த தருணத்தில் பொதுப் புத்தியைச் சார்ந்த எதிர்வினையையே ஏன் செய்கிறார்? இந்த மனோபாவத்தில் அமையும் இவருடைய முன்முடிவுகள் சிகிச்சையாளர்களைப் பாதிக்காதா?

இது போன்று மேலும் சில உதாரணங்களை மேற்கோள் காட்ட முடியும். எந்த வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியதோ அதையே தனது சமீபத்திய புதினத்தில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதுவது போல் விதம்விதமாக பட்டியல் போன்று எழுதிச் சென்ற ஒரு 'பின்நவீனத்துவ' எழுத்தாளர் கூட இந்த எதிர்ப்புக் கூட்டத்தின் முன்னணியில் நின்று ஆவேசமாக உரையாடியது ஒரு சுவாரசியமான முரண்நகை. இவரே அளித்துக் கொண்ட தன்னிலை விளக்கத்தில் 'நான் கூட இது போன்ற வார்த்தைகளை என் நாவலில் எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றை குழந்தைகள் வாசிக்க வாய்ப்பில்லை' என்கிறார். புத்தகங்களுக்கு சென்சாரை எப்போது கொண்டு வந்தார்கள் என தெரியவில்லை. முன்பு சில பெண்ணிய எழுத்தாளர்கள் தங்களின் அந்தரங்க உடல் உறுப்புகளையே பிரதானமாகக் கொண்டு கவிதைகள் எழுதினார்கள். உடலரசியல் சார்ந்த  கோபம் அதில் இருந்தது. 'ஆணாதிக்க மனோபாவத்தை நோக்கி.. இந்த உறுப்புகளை வைத்துத்தானே எங்களைச் சீண்டுகிறீர்கள். கிண்டலடிக்கிறீர்கள்... இதோ நாங்களே எங்கள் படைப்புகளில் முன்வைக்கிறோம்.." என்பது போன்ற கலகமும் அறச்சீற்றமும் அவற்றில் இருந்தன. ஆனால் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவும் கவன ஈர்ப்பிற்காகவும் காமம் சார்ந்த கிளர்ச்சியை மட்டும் தூண்டும் பின்நவீனத்துவப் போலிகளும்  இந்தச் சர்ச்சை எதிர்ப்பில் கலந்து கொண்டதுதான் நகைச்சுவை.

***

இணையத்தில் வெளிவந்த அல்லது கசியவிடப்பட்ட அந்தப் பாடல், அதிகாரபூர்வமாக வெளியிடப்பட் ஒரு சினிமாப்பட பாடலோ அல்லது தனியார் ஆல்பத்தின் பாடலோ அல்ல. அது டம்மியாக உருவாக்கப்பட்ட பாடல் என்கிறார்கள். அதனுடன் தொடர்புள்ளதாக சிம்பு மற்றும் அனிருத் ஆகியோர்களின் பெயர்கள் இருந்தாலும்  அனிருத் இதற்கு தான் இசையமைக்கவில்லை என்று மறுத்து அல்லது ஒதுங்கி விட்ட நிலையில் சிம்பு இதை தான் பாடியதாக ஒப்புக் கொள்கிறார். ஆனால் தன்னுடைய அந்தரங்கமான சேமிப்பிலிருந்த பல பாடல்களில் ஒன்றான இதை எவரோ திருடி இணையத்தில் வெளியிட்டு விட்டார்கள் என்று விளக்கமளித்துள்ளார். அனிருத் மற்றும் சிம்பு ஆகியோர் இருவர் மீதும் இது போன்ற சர்ச்சைகளின் மீதான குற்றச்சாட்டுகள்ஏற்கெனவே இருந்தாலும் இந்தக் குறிப்பிட்ட சர்ச்சையில் அது சிம்பு தரப்பால்தான் இணையத்தில் வெளியிடப்பட்டது என்பது நிரூபிக்கப்படாத சூழலில் சந்தேகத்தின் பலனை அவருக்கு அளித்துதான் ஆக வேண்டும். அது நிரூபிக்கப்படுவதற்குள் சமூகமே இணைந்து தர்மஅடி போடுவது தர்மமே ஆகாது. அத்தனை பெரிய அரசு இயந்திரத்தை கையில் வைத்திருக்கும் சமகால ஆளுங்கட்சியே தம்மை  விமர்சித்த 'நட்ராஜ்' என்பவர் எவர் என்பதை சரியாக ஆராயமலேயே நடவடிக்கை எடுத்த கேலிக்கூத்துகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது நிதானமான விசாரணைகளின் மீது உருவாகும் நீதிதான் ஏறத்தாழ சரியானதாக இருக்கும்.

இந்தப் பாடலை நடிகர் தரப்பே வெளியிட்டு விட்டு பின்பு இத்தனை கடுமையான எதிர்ப்பை எதிர்பார்க்காததால் மறுக்க விரும்புகிறார்களோ என்கிற ஐயம் எழுந்தாலும் கூட 'தாங்கள் நிரபராதிகள்' என்கிற அவர்களின் முறையீட்டை நிதானமாக பரிசீலிப்பதே முறையானது. தமிழகமே வெள்ள சேதத்தினால் தத்தளிக்கும் சமயத்தில் இந்தப் பாடலை வெளியிட எத்தனை திமிர் இருக்க வேண்டும் என்கிற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. ஒருவேளை இது நடிகர் தரப்பினால் விளம்பர நோக்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது என்று வைத்துக் கொண்டாலும் கூட இந்த அசந்தர்ப்பமான சமயத்தில் வெளியிட்டால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் தமது வணிக நடவடிக்கைகளை பாதிக்கும் என்பது கூடவா அவர்களுக்குத் தெரிந்திருக்காது?. 'எனக்கு இழுக்கு தேடித்தரவே எவரோ இதை திருடி வெளியிட்டுள்ளனர்' எனறு நடிகர் கூறும் விளக்கமும், இந்தப் பாடல் அசந்தர்ப்பமான சமயத்தில் வெளியிடப்பட்டதை வைத்துப் பார்க்கும் போது சரிதானோ என்று தோன்றுகிறதா இல்லையா? மழை வெள்ள அபாயத்தை சரியாக நிர்வகிக்காத ஆளுங்கட்சிக்கு எதிராக  மக்களுக்கு இயல்பாக எழுந்த கோபத்தை திசை திருப்புவதற்காகவே இந்தப் பாடல் வெளியிடப்பட்டது என்றெழுகிற இன்னொரு யூகத்திற்கான சாத்தியக்கூறு இருந்தாலும் அது தொடர்பான குற்றவாளியைத்தானே தேட வேண்டும்?  எந்தவொரு குற்றச்சாட்டையும் 'இது எதிர்க்கட்சிகளின் சதி' என்று மறுக்கிற அரசியல்வாதிகளின் நகைச்சுவைப் போக்கையும் இதனுடன் சேர்த்து பார்க்க வேண்டியிருக்கிறது.

தன்னுடைய அந்தரங்கச் சேமிப்பிற்காக என்றாலும் சிம்பு ஏன்  இது போன்ற பாடலைத் தயாரிக்க வேண்டும்? தனி மனித சுதந்திரப்படி இதைக் கேட்க யாருக்குமே உரிமை கிடையாது. பொதுச் சமூகத்திற்கு முகமூடியணிந்த நல்ல முகத்தைக் காட்டும் நம்முடைய அந்தரங்கத்தில் சமூகத்தால் கீழ்மைகளாக கருதப்படுபவைகள் சிலவற்றின் மீது இச்சையுள்ளது. ஏற்கெனவே பாலியல் வறட்சியால் குமையும் இது போன்ற சமூகத்தில் வேறு எவருக்கும் துன்பம் தராமல் அந்தரங்கத்தில் நிறைவேற்றிக் கொள்ளும் செயல்களின் மூலமாக அது சார்ந்த மன அழுத்தங்கள் குறைவதற்கு வாய்ப்புண்டு என்பதே உளவியல் ரீதியிலான கருத்து. சமூகத்தின் பாலியல் குற்றங்கள் குறையும் நோக்கில் இதற்கான அவசியமும் உள்ளது. மேலும் இந்தப் பாடலின் துவக்கத்திலுள்ள சர்ச்சையான வார்த்தையைத் தாண்டிச் சென்றால், இதரப் பகுதிகள் கொச்சையான வார்த்தைகளில் அமைந்திருந்தாலும் காதல் தோல்வி அடைந்த இளைஞனை நோக்கி 'பெண்களை திட்டாதே.. உன்னையே திட்டிக் கொள்.. உனக்கேற்ற துணை வரும் வரை காத்திரு' என்பது போன்ற உபத்திரவமல்லாத உபதேசங்களே உள்ளன. '.இதற்குத்தானா பாபு?' என்கிறாள் மோகமுள் புதினத்தில் வரும் யமுனா. அதையேதான் வேறு வடிவில் கொச்சையான வார்த்தையில் கேட்கிறது இந்தப் பாடல்.

ஆனால் இந்த துவக்க வார்த்தையை மாத்திரம் வைத்து, அதிலும் இத்தனை பிரம்மாண்டமான சர்ச்சை எழுவதில் எத்தனை அபத்தமுள்ளது என்பதை சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் புரியும். நாம் எதனை பிரதானமாக அழுத்தம் தந்து கவனிக்கிறோம் என்பதும். 'காதலின் புதினத்தை வைத்து love anthem என்கிற தனிப்பாடலைக் கூடமுன்பு நான் உருவாக்கினேன், அதைப் பற்றி யாருமே பேசவில்லையே என்று சிம்பு தரப்பில் கேட்கப்படும் கேள்வியில் குறைந்த பட்ச நியாயம் உள்ளதுதானே? அனிருத் போல இதிலிருந்து விலகி ஓடி விடாமல், பொது மனோநிலையின் எதிர்ப்பை திருப்திப் படுத்தும் விதத்தில் ஒரு போலிக் கும்பிடு போட்டு விட்டு இந்தச்  சர்ச்சையை தாண்டி விட முயற்சிக்காமல் தன்னுடைய தரப்பு நியாயங்களுடன் எதிர்கொள்ளும் அவரின் அந்த துணிச்சலைப் பாராட்டியேயாக வேண்டும். 'இதை நான்  இணையத்தில் வெளியிடாத போது, யாரோ செய்த தவறினால், என்னுடைய அந்தரங்கச் செயல் ஒன்றை எட்டிப் பார்த்து விட்டு ஏன் இப்படி குற்றஞ்சாட்டுகிறீர்கள், உங்களின் அந்தரங்கத்தை எவராவது வெளிப்படுத்தி விட்டு உங்களையே கண்டித்தால் ஒப்புக் கொள்வீர்களா?' என்று தனிமனித உரிமை நோக்கில் அவர் முன்வைக்கும் கேள்விகளில் நியாயம் உள்ளதா  இல்லையா என்பதை நிதானமாக யோசித்துப் பார்க்கலாம்.

சிம்புவின் பிம்பம் என்பது இன்றைய நவீன சராசரி இளைஞனின் குறியீடு. சிம்பு  உண்மையான வாழ்விலும் சரி, திரையிலும் சரி, ஒரு காதலில் விழுவார். புலம்புவார். அது சார்ந்த வன்மத்தை எதிரொலிக்கும் பாடல்களை உருவாக்குவார். பிறகு இன்னொரு காதலில் விழுவார். அதிலும் மறுபடியும் தோல்வி..புலம்பல்.. எரிச்சல். இந்தக் குணாதிசயம் பெரும்பாலும் சமகால சராசரி இளைஞனுக்குப் பொருந்துபவை.  அவர்களில் பலர்  என்ன செய்கிறார்கள் என்பதை கவனியுங்கள். தாங்கள் காதலித்த பெண்ணை பிரச்சினை ஏற்படும் போது  ஆதாரங்களைக் காட்டி மிரட்டுகிறார்கள், பெண் சமூகத்தையே ஒட்டுமொத்தமாக திட்டிப் புலம்புகிறார்கள், இன்னும் சில குதர்க்க குணமுள்ள இளைஞர்கள் ஆசிட் ஊற்றுவதாக மிரட்டுகிறார்கள், சிலர் செய்தே விடுகிறார்கள். இன்று பொருளாதார ரீதியாக பெண்கள் சுதந்திரம் பெற்று மெல்ல வெளியே வருவதை நவீன ஆண் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. தன்னைச் சார்ந்து நின்ற உடமை தன்னுடைய பாதுகாப்பில் இருந்து வெளியேறி சுயசிந்தனைகளுடன் விலகுவதைக் கண்டு பதட்டமடைகிறது. சாலையில் ஸ்கூட்டியில் தன்னைக் கடந்து செல்லும் இளம் பெண்ணைக் கண்டு தன்னியல்பாக எரிச்சலைடந்து அந்தப் பெண்ணின் மீது மோதுவது போல் செய்வதோ அல்லது அவளைத் தாண்டிச் செல்ல முயல்வதோதான் இன்றைய நவீன இளைஞனின் அடையாளம். இவற்றையேதான் சமகால இளைய நடிகர்களின் திரைப்படங்களிலும் 'வெட்டுடா அவளை, குத்துடா அவளை' என்பது போன்று எதிரொலிப்பதைக் காண முடிகிறது.

இப்படியாக சமூகத்திலும் உள்ள ஆயிரம் சிம்புகளை நாம் எப்போது கண்டிக்கப் போகிறோம்? சினிமா என்பது இருமுனை கத்தி. அது சமூகத்தையும் பிரதிபலிக்கிறது; சமூகமும் சினிமாவின் கூறுகளை தன்னிச்சையாக பின்பற்றுகிறது. இதில் சமூகம் மாத்திரம் தன்னை மறைத்துக் கொண்டு  இன்னொரு முனையை மட்டும் எத்தனை காலத்திற்கு குற்றம் சொல்லப்  போகிறோம்? ஒரு நடிகரின் இன்னமும் நிரூபிக்கப்படாத தவறை வைத்து அவரை பொது எதிரியாக நிறுத்தி ஒன்று சேர்ந்து கடுமையாக கண்டிப்பதின் மூலம் ஆணாதிக்க உலகின் வக்கிரங்களையும் தவறுகளையும் மழுப்பிக் கொள்ளப் போகிறோமா?

திரிஷா அல்லது நயனதாரா என்றொரு திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. முழுக்க முழுக்க ஆணாதிக்க வசனங்களாலும் வக்கிரமான காட்சிகளாலும் அது நிறைந்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அத்திரைப்படம் வணிகரீதியாக வெற்றியடைந்தது. இன்றைய தமிழ் சினிமாவின் உடனடி பார்வையாளர்கள் இளைஞர்களே. அவற்றின் துவக்க வெற்றியை அவர்களே தீர்மானிக்கிறார்கள். எனில் ஆணாதிக்க மனோபாவமுடைய இளைஞர்கள் நிறைந்துள்ள சமூகத்தில் பிரபலமாக இருப்பதின் காரணத்தினாலேயே ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்து கூடிக் கண்டித்தால் தீர்வு கண்டுவிட முடியுமா? இதில் என்ன வேடிக்கையென்றால் பாடலில் உள்ள சர்ச்சையான வார்த்தையை வழக்கமாக பொதுவெளியிலும் இணைய எழுத்திலும் கூசாமல் சொல்லும், எழுதும் இளைஞர்கள் கூட இந்த எதிர்ப்புக்  கூட்டத்தில் சேர்ந்து கொண்டு பாடலில் உள்ள ஆபாச வார்த்தையை விட மேலதிக வார்த்தைகளை அறச்சீற்றத்துடன் எதிர்ப்பு என்ற பெயரில் இறைத்ததுதான். நேற்றைய இளைஞர்கள்தான் இன்றைய பெற்றோர்கள். அவர்கள் இளைஞர்களாக இருந்த காலத்திலும் அந்த வயதுக்குரிய இது போன்ற  ஆணாதிக்க நோக்கிலான ஆபாசங்களை, தடுமாற்றங்களை செய்தவர்களாக இருப்பார்கள். பெரியவர்களாகிய பிறகும் தங்களின்  குடும்பங்களில் ஆணாதிக்க செயற்பாடுகளை இன்னமும் செய்பவர்களாக இருப்பார்கள். இப்படியாக சமூகச் சுழற்சியிலேயே ஆணாதிக்கம் சார்ந்த வன்முறையும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக நீடித்துக் கொண்டிருக்கும் போது இது போன்ற ஒற்றை அடையாள எதிர்ப்பை பாசாங்குடன் செயற்படுத்துவதின் மூலம் அதைப் போக்க முடியுமா? இந்த நோய்க்கூறு மனநிலையின் ஆணிவேருக்கல்லவா சிகிச்சையைத் தேட வேண்டும்?

***

பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த ஒரு சில்லறைத் திருடன் பிடிபட்டு விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். என்ன ஆகிறது? அந்தப் பேருந்தில் உள்ள பெரும்பாலோனோர் வரவழைத்துக் கொண்ட கோபத்துடன் அவரை தர்மஅடி போடுகிறோம். காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறோம். தர்மத்தை நிலைநாட்டிய திருப்தியுடன் கலைந்து செல்கிறோம். ஆனால் அந்தப்  பேருந்தின் உள்ளேயே சில்லறை பாக்கியை ஒழுங்காக திருப்பித் தராத நடத்துநர் இருக்கலாம். இயன்ற அளவில் வருமானவரி ஏய்ப்பு செய்யும் ஆசாமி இருக்கலாம். லஞ்சம் வாங்கும் ஓர் அரசு ஊழியர் இருக்கலாம். தன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் சிறுவியாபாரி இருக்கலாம். ஆக.. ஓர் அமைப்பிற்குள்ளே இத்தனை தவறான ஆசாமிகள் இருக்கும் போது ஒரு சில்லறைத் திருடனை ஒன்று சேர்ந்து தண்டிப்பதின் மூலம் தவறுகளை ஒழித்து விட்டதாக கருதிக் கொள்ளுதல் எத்தனை அறியாமை? சில்லறைத் திருடன் உருவாவதற்கான சமூகவியல் காரணத்தையும் உளவியல் காரணத்தையும் பற்றி ஆய்வதுதானே அறிவு சார்ந்த செயற்பாடாக இருக்க முடியும்?

சினிமாப் பாடல்களில், வசனங்களில், உடல்அசைவுகளில், நகைச்சுவைகளில் ஆபாசம் இருப்பதென்பது ஏதோ சமீபத்திய போக்கு அல்ல. அதிலுள்ள வணிக வாய்ப்பையும் அதிகமான லாபத்தையும் கண்டுகொண்டவுடனேயே அது பெருமளவு அதிகரித்து விட்டது.. 'நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே, அந்தக் கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே.. என்று காமத்தை மிக கண்ணியமாகச் சொன்ன கண்ணதாசன்தான் 'கைக்கு அடக்கமா எடுத்துத் தின்ன வாட்டமா'" என்று 'எலந்தபயம்' பாடலையும்  எழுத நேர்ந்தது. "என்னம்மா..  நான் இத்தனை வருடங்களாக பாடலெழுதி வருகிறேன்.. அதில் எனக்கு கிடைக்காத புகழையெல்லாம்  நீ ஒரே பாடலில் பெற்று விட்டாயே.." என்று எல்.ஆர்.ஈஸ்வரியிடம் அவர் கேட்குமளவிற்கு அந்தப் பாடல் பொதுச்சமூகத்திடம் அபாரமான வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது. இப்படி தமிழ் சினிமாவில் இதுவரை நிகழ்ந்த ஆபாச பாடல்வரிகள், காட்சிகளையெல்லாம் பட்டியலிட்டால் இன்னொரு பெரிய தனிக்கட்டுரையாக எழுத வேண்டி வரும். சமூகத்தின் நேரடியான, மறைமுகமான ஆதரவு இல்லாமல் அவை  எல்லாம் எவ்வாறு இத்தனை காலமாக வெற்றி பெற முடியும்? இது போன்ற பாடல்களை எழுதுவதில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்த வாலியை வலிக்காமல் அவ்வப்போது கண்டித்தாலும் 'வாலிபக் கவிஞர்' என்றுதானே இச்சமூகம் கொண்டாடியது? இந்தச் சர்ச்சையை திரைப்படப் பாடலாசிரியர்களின் கூட்டறிக்கை ஒன்று கண்டித்ததை எப்படிப் புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை.

மேற்கத்திய சமூகங்களைப் போல அந்தந்த வயதுக்குரியவர்களுக்கான தனித்தனி திரைப்படங்கள் எடுக்கும் வழக்கம் இங்கில்லை. எல்லாமே கூட்டுஅவியல்தான். சம்பிரதாயத்திற்காக A சான்றிதழ் வழங்கப்பட்டாலும் அவற்றை எல்லோரும் பார்க்கக்கூடிய நடைமுறைதான் இங்குள்ளது.  குழந்தைகள் படமென்றாலும் சாமிப்படங்கள் என்றாலும் கூட அதில் சாமர்த்தியமாக ஒரு ஆபாசப்பாடலை, காட்சிகளை வணிக நோக்கத்திற்காக செருகி விடும் திரைக்கதை வல்லுநர்கள் பலர் இங்குண்டு. மற்ற படங்களிலாவது அதை ஒழுங்காக காட்டித் தொலைக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை சலித்துக் கொண்டபடி ஓர் ஆணின் முகமும் பெண்ணின் முகமும் அண்மைக்காட்சியில் நெருங்கி வருகிறது என்றால் உடனே இடையில் எங்கிருந்தோ ஒரு பூ வந்து ஆடி மறைத்துக் கொள்கிறது. நேரடியாக காட்டப்படும் கவர்ச்சியை விட தணிக்கைத் துறையை ஏமாற்றுவதற்காக இப்படி சாமர்த்தியமாக மழுப்பப்படும் காட்சிகள் அதிக ஆபத்தானது. அவரவர்களின் வக்கிரம் சார்ந்த கற்பனைகளைத் தூண்டும் மோசமான செயலையே இவை செய்கின்றன. பாலியல் சார்ந்த மனப்புழுக்கங்களை அதிகரிக்கின்றன.  நாகரிக உலகின் கட்டுப்பாடுகளின் படி அடக்கி வைக்கிற இந்த அழுத்தங்கள் பாலியல் வன்முறைகளாகவும் குற்றங்களாகவும் வெடிக்கின்றன.

ஒருவகையில் இந்தப்  பாடலில் ஒலிக்கும் பீஃப் ஒலியை ஊடகத் தணிக்கையின் மீதான எள்ளலான விமர்சனமாகவும் கொள்ளலாம். சினிமா வசனங்களில் ஒலிக்கும் ஆபாசமான, வார்த்தைகளை தணிக்கை செய்கிறேன் பேர்வழி என்று ஒலியை மாத்திரம் மழுப்பி அனுமதிக்கிறார்கள். ஆனால் திரையரங்குளில் இந்த மெளன இடைவெளிகளை மிகச் சரியாகப் புரிந்து கொள்ளும் இளம் பார்வையாளர்கள் கூக்குரலிட்டு தங்களின் அங்கீகாரத்தை அதற்கு  வழங்குகிறார்கள். இந்த நோக்கில் பார்த்தால் தணிக்கைத் துறையின் அந்தச் செயலைப் போலவே சுயதணிக்கையுடன் வெளியான இந்தப்பாடலை இத்தனை கடுமையாக எதிர்ப்பதற்கான காரணம் என்ன? நாம் எதிர்க்க வேண்டியது தணிக்கைத் துறையின் அரைகுறையான இந்தப் போக்கையா அல்லது அதன் சிறு பங்கான இந்தப் பாடலையா? இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒருவேளை இவையெல்லாம் குதர்க்கமான வாதங்களாகத் தோன்றினாலும் நம் சமூகத்தின் பெரும்பான்மையான பகுதியே புரையோடிப் போயிருக்கும் போது ஒற்றை எதிர்ப்பின் மூலம் நாம் திருப்தி கொள்ளும் போக்கில் உள்ள அவல நகைச்சுவையைப் பற்றி  நிதானமாக யோசித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

***

இந்த ஆணாதிக்க எதிர்ப்புகளில் சார்புநிலை நோக்கில் அவரவர்களுக்குச் சாதகமான விதிகளும் உள்ளன. தன்னார்வலர்களால் நிகழ்த்தப்பட்ட வெள்ள  நிவாரண உதவிகளின் மீது சமகால ஆளுங்கட்சி தன்னுடைய தலைவரின் புகைப்படத்தை ஒட்டிக் கொள்வது தொடர்பாக கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்தன. இந்த அசந்தர்ப்பமான சூழலில் செய்யப்பட்ட அராஜகமான சமூக அநீதி  அது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால் இது சார்ந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக பெண் முதல்வரின் புகைப்படம் உள்ளாடையில் ஒட்டப்பட்டிருந்த ஒரு கேலிச்சித்திரம் இணையத்தில் உலா வந்தது. இதை அரசியல் சார்ந்த கோபம் என்று நியாயப்படுத்தி விடவே முடியாது. அரசியல் சார்ந்த எதிர்ப்புகளை, கோபங்களை ஜனநாயகம் அனுமதித்திருக்கும் விதங்களில் வெளிப்படுத்துவதுதான் முறையானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் பிரதிநிதியை கொச்சையாக சித்தரிப்பதென்பதும் ஆணாதிக்க செயற்பாட்டின் எதிரொலிதான். உலகெங்கிலுமுள்ள பெண் அரசியல் தலைவர்கள், அவர்கள் பெண் என்னும் காரணத்தினாலேயே அவர்கள் மீது அந்தக் கோணத்தில் எழும் ஆபாசமான கேலிச்சித்திரங்களையும் வம்புகளையும் நாம் காண்கிறோம். ஒரு பெண் அரசியல்வாதியின் மீது சித்தரிக்கப்பட்ட இந்த ஆபாசச் செயலை எந்தப் பெண்ணியவாதியோ, சமூக ஆர்வலர்களோ, பொதுச்சமூக நபர்களோ கண்டித்ததாக தெரியவில்லை. ஆணாதிக்கப் போக்கின் எதிர்ப்பின் நியாயம் அந்தந்த கோணங்களில் மாறுமா என்ன?

சரி. இவற்றிற்கெல்லாம் என்னதான் தீர்வு? இங்கு ஆண் சமூகத்திற்கும் பெண்  சமூகத்திற்கும் இடையில் ஒரு பிரம்மாண்டமான தடுப்புச் சுவர் உள்ளது. தாய்வழிச் சமூகம் தந்தை வழிச்சமூகமாக உருமாறிய ஆதிக்காலத்திலிருந்து இன்னமும் கரையாமல் அழுத்தமாக நிற்கும் சுவர் இது. எனவேதான் சுவற்றிற்கு மறுபக்கம் பார்க்கும் ஆவலும் அது சார்ந்த குற்றங்களும் வன்முறைகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. பெண்ணின் உடல் சார்ந்த வேதனைகளும் அவற்றின் பிரத்யேகமான பிரச்சினைகளும் வலிகளும்  ஆணுக்கு முறையாக அறிமுகப்படுத்தப்படவேயில்லை. எனவேதான் பெண் என்னும் சகஜீவியை அப்படியல்லாமல் உடல் சார்ந்த கிளர்ச்சிப் பண்டமாக மட்டுமே அவன் பார்த்துக் கொண்டேயிருக்கிறான். ஊடகங்களும் திரைப்படங்களும் இது சார்ந்த கிளர்ச்சியை வளர்த்து தங்களின் வணிகத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. ஆண், பெண் சார்ந்த பாகுபாடுகள், உயர்வு தாழ்வு அணுகுமுறைகள், தடைகள் சிறுவயதிலிருந்தே அவர்களுக்குள் திணிக்கப்படுகின்றன.

ஆண்கள் உயர்வு மனப்பான்மையுடனும் பெண்கள் அப்படிப் பிறந்த காரணத்தினலாயே தாழ்வுணர்வுடனும் தன் மீது நிகழ்த்தப்படும்  கொடுமைகளை சகித்துக் கொள்ளவும் மறுக்கப்படும் விஷயங்களை மெளனமாக கடந்து போகவும் கற்றுத்தரப்படுகிறார்கள். இந்தச் செயல்களை அறியாமை மற்றும் ஆழ்மன திணிப்பு காரணமாக பெண்களே செய்கிறார்கள் என்பதுதான் கொடுமை.ஆணுக்கும் பெண்ணுக்குமான தோழமை என்பது முழுக்க தவிர்க்கப்பட்டு அவர்களின் அருகாமை பாலியல் நோக்கில் மட்டுமே பார்க்கப்பட்டு அது சார்ந்த தடைகளும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் பரஸ்பர புரிதல் ஏதுமில்லாமல் தனித்தனி கூண்டுகளில் வளர்க்கப்படும் விலங்குகளைப் போன்று இரு தரப்பினரும் வளரும் அவலமான சூழல் நிகழ்கிறது. பெண் என்பவள் எவ்வித பிரத்யேக உணர்வும் அற்ற ஆணின் உடமையல்ல, தன்னைப் போலவே எல்லா உணர்வுகளும் கொண்ட சகஜீவி என்பது ஆண்களுக்கு மிக அழுத்தமாக கற்றுத்தரப்பட வேண்டும். பெற்றோர், சமூகம், ஊடகங்கள், கலை, இலக்கியம் என்று சமூகத்தின் எல்லாத் துறையும் பொறுப்புடன் இணைந்து ஒன்றுகூடி இழுக்க  வேண்டிய தேர் இது.

இதன் மீது அமைந்த உரையாடல்களும் விவாதங்களும் படைப்புகளும் போன்றவை தொடர்ந்து உருவாகிக் கொண்டிருப்பதினால்தான் இந்த மாற்றத்தை நோக்கி மெல்ல மெல்ல சென்று நிலையான தீர்விற்கு நகர முடியுமே ஒழிய இன்னமும் நிருபணமாகாத ஒரு  வழக்கில் தொடர்புள்ள சில்லறைத் திருடனைப் பிடித்து ஊர்கூடி தர்மஅடி போட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணுவது அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நோய் ஒன்றிற்கு குண்டூசியால் சொறிந்து கொண்டு சரியாகி விட்டது என்று கற்பனை செய்வது போலத்தான்.இருக்கும். தனிநபர் மீதான எதிர்ப்புகளால்அல்ல, ஒட்டுமொத்த சமூகமே தன்னை நோக்கி திரும்பி இந்தச் சர்ச்சையின் மீதாக தன்னை முழுவதும் பரிசீலனை செய்து கொள்ள வேண்டியதுதான் இந்தச் சூழலில் மிக மிக அவசியம்.

- உயிர்மை - பிப்ரவரி 2016-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan

Thursday, August 13, 2015

எம்.எஸ்.வி: மெல்லிசை நாயகன்




ஒரு சராசரியான தனிநபரின் கலை சார்ந்த ரசனை என்பது அப்போதைய சமகால கலை ஆளுமைகளின் மூலமே உருவாகிறது. தன்னிச்சையான கண்டுபிடிப்புகள் அல்லது முறையான அறிமுகங்களின் மூலம் அந்த ரசனை தேங்கிப் போவதோ அல்லது மேலதிகமாக பல்கிப் பெருகுவதோ என்பது நிகழ்கிறது. இசை ரசனை என்பதும் அவ்வாறே. இசை என்றாலே பொதுவாக திரையிசையையே குறிக்கும் தமிழக சூழலும் இதற்கு விதிவிலக்கல்ல. பாபநாசம் சிவனின் தூய செவ்வியல் இசையை ரசித்த காலத்தைச் சேர்ந்தவர்கள் கே.வி.மகாதேவனின் கர்நாடக சங்கீகத்தை அடிப்படையாகக் கொண்ட பாடல்களை விலகலான மனநிலையோடு கவனித்திருக்கலாம். மகாதேவனைக் கொண்டாடியவர்கள் பாரம்பரிய இசையை எளிமைப்படுத்தி மேற்கத்திய பின்னணியை அவற்றில் கலந்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஜோடியை முகச்சுளிப்புடன் அணுகியிருக்கலாம். இளையராஜாவின் வருகையின் போது அவர் அழுத்தமாக பயன்படுத்திய நாட்டார் இசை துவக்கத்தில் கிண்டலடிக்கப்பட்டது. பிறகு ஒரு காலக்கட்டம் வரை அதுவே தமிழ் சினிமாவின் இசை முகமாக ஆனது வரலாறு. நவீன இசையொலியை, பாணியை தமிழிற்கு கொண்டு வந்து அதற்காக பிறகு சர்வதேச அளவில் புகழ்பெற்ற ரஹ்மானின் மீதும் துவக்கத்தில் 'அவர் இசையமைப்பாளர் அல்ல, நுட்பத்தை திறம்பட கையாள்பவர், அவ்வளவே' என்பது போன்ற புகார்கள் அள்ளி வீசப்பட்டன.

விசுவாசமான ரசிக மனோபாவத்தினால் ஏற்படும் இந்த பரஸ்பர வெறுப்பும் விலகலும் தற்போது இணையத்தில் நிகழும் ராஜா x ரஹ்மான் விவாதம் வரை காலந்தோறும் நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது. இப்போதைய முதிரா இளைஞர்களிடம் அவர்கள் விரும்பி ரசிக்கும் அனிருத்தின் இசையை குறைகூறி விடவே முடியாது. பொதுவாக கலை சார்ந்த ரசனையில் தமிழர்கள் கிணற்றுத் தவளைகளாக இருப்பதற்கு இந்த ஒரு அசட்டு மனோபாவமும் காரணம். தன்னுடைய சமகால இசைதான் சிறந்தது அதை உருவாக்குபவர்கள்தான் சிற்நத கலைஞர்கள் என்று அவரவர்களின் சிறிய கிணறுகளில் பிடிவாதமாக உட்கார்ந்து கொண்டிருந்தால் இழப்பு அவர்களுக்கே. காலம் முன்னகர்ந்து கொண்டேயிருக்கும் போது ஏற்படும் ரசனை மாற்றத்தினால் அதற்கேற்ப புதிய பாணி இசைக்கலைக் கலைஞர்கள் தொடர்ந்து உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள். கிணற்றிலிருந்து வெளியே வந்து உலகமெங்கும் உருவாகும் பல்வேறு இசையை பாணியை மனச்சாய்வின்றி அடிப்படையான பயிற்சியோடு கவனிக்கும் போதுதான் இசை என்பது எத்தனை பெருங்கடலான விஷயம் என்பதை சிறிதாவது உணரக்கூடும். சிறந்த இசையானது மொழி, தேசம் போன்ற கற்பித எல்லைகளைத் தாண்டி ஒவ்வொரு நபரின் ஆன்மாவுடன் அந்தரங்கமாக உரையாடும் ஒரு மொழி. தமது நுண்ணுணர்வினால் அதை அணுக முயன்றால் அதிலுள்ள பல்வேறு உன்னதங்களை நாம் கண்டுகொள்ள முடியும். இசை கேட்கும் அனுபவம் என்பது மிக அந்தரங்கமானது. அந்த உணர்வை உரையாடியோ, விவாதித்தோ வெளிப்படுத்தி விடவே முடியாது. எனில் இசை என்ற பெயரில் உருவாக்கப்படும் ஒழுங்குப்படுத்தப்பட்ட சப்தங்கள் எல்லாமே சிறந்தவைதானா என்ன? காலம் கருணையற்று நிராகரிக்கும் போது உன்னதமான, அர்ப்பணிப்புடன் இயங்கிய கலைஞர்கள் மட்டும் வடிகட்டப்பட்டு எஞ்சி மேலதிகமாக பிரகாசிப்பார்கள். அப்படியொரு உன்னத கலைஞர்தான், மெல்லிசை மன்னர் என்று  கொண்டாடப்பட்ட எம்.எஸ்.விஸ்வநாதன்.

***

தமிழ் சினிமாவில் செயற்கையாகத் திணிக்கப்படும் பாடல்கள் தேவையா அல்லவா என்பது நெடுங்காலமாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பது தனியான விஷயம் என்றாலும் சாஸ்திரிய இசைக் கலைஞர்களும் ரசிகர்களும் சினிமா இசையை  நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து போல அசூயையாக அணுகின காலம் ஒன்றுண்டு என்றாலும் தமிழ் திரையிசைக்கு என்று ஒரு செழுமையான மரபும் தொடர்ச்சியும் உண்டு.  தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா போன்ற அந்நாளைய நட்சத்திரங்களின் திரைப்படங்களுக்கு தொடர்ச்சியாக இசையமைத்த பாபநாசம் சிவன் முதற்கொண்டு ஜி.ராமநாதன், சி.ஆர்.சுப்புராமன், சி.எஸ்.ஜெயராமன், எஸ்.வி. வெங்கட்ராமன், எஸ்.எம்.சுப்பைய்யா நாயுடு, டி.ஆர்.பாப்பா, டி.ஜி.லிங்கப்பா, கே.வி.மகாதேவன் என்று நீண்ட பட்டியலே உள்ளது. ஒரு திரைப்படத்தில் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட பாடல்களை சர்வசாதாரணமாகக் கொண்ட அந்தக் காலக்கட்டத்தில்  பொதுவாக பெரும்பாலும் கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட பாடல்களே உருவாக்கப்பட்டன. திரையிசைப்பாடல்களின் வருகைக்கு முன்பு செவ்வியல் இசையை பண்டிதர்கள் மட்டுமன்றி  பாமரர்களும் ரசிக்கும் காலக்கட்டம் ஒன்றிருந்தது. நிலச்சுவான்தாரர்களின் ஏற்பாட்டில் கர்நாடக இசைக்கலைஞர்கள் ஊர் ஊராக சென்று கச்சேரி செய்யும் போது குடியானவர்களும் மிக விருப்பத்துடன் நீண்ட தூரம் பயணம் செய்தாவது அந்த இசையை ரசித்துக் கேட்டனர். ராகங்களை துல்லியமாக அடையாளம் கண்டுபிடிக்குமளவிற்கு ரசனையில் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால் இந்தக் கண்ணி எப்போது, எதனால் அறுபட்டது என்று தெரியவில்லை.

செவ்வியல் இசையை பெரும்பாலும் அடிப்படையாக் கொண்டு ஒலித்த அதுவரையான திரையிசையில் ஐம்பதுகளின் காலக்கட்டத்தில் ஒரு குறிப்பிடத்தகுந்த மாற்றம் நிகழ்ந்தது. அந்த மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்கிற இரட்டை இசையமைப்பாளர்கள் கூட்டணி. கர்நாடக இசையை எளிமைப்படுத்தி மேற்கத்திய பாணியையும் இசைக் கருவிகளையும் இணைத்து சிறப்பான கலவையுடன் உருவாக்கிய பாடல்களை மக்கள் கொண்டாட்டத்துடன் ஏற்றுக் கொண்டனர். இசைக்கும் பாமரர்களுக்குமான அந்தக் கண்ணியை மீண்டும் இணைத்த பெருமை இந்த ஜோடியையே சாரும். இந்தப் பாடல்கள் எந்த அளவிற்கு எளிமையான தோற்றத்துடன் மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது என்றால் இன்றும் கூட தினமும் புறநகர் ரயிலில் வந்து செல்லும் தொழிலாள தோழர்கள் இணைந்து குழுவாகவும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கூட்டத்திடம் இரந்து பிழைப்பதற்காகவும் பாடுவது பெரும்பாலும் இந்தப் பாடல்களாகத்தான் இருக்கும். மேஜையில் போடும் ஒற்றைத் தாளத்தைக் கொண்டே இந்தப் பாடல்களின் சுவாரசியத்தைக் கொண்டு வந்து முடியும் என்பதுதான் இவைகளின் சிறப்பே. ஆனால் மேற்பார்வைக்கு எளிமையாகத் தோன்றும் இவைகளை அதே நுணுக்கங்களுடனும் சங்கதிகளுடன் பயிற்சியின்றி பாடுவது அத்தனை எளிமையானதல்ல என்பதுதான் இந்த இசையமைப்பின் விசேஷமே.

இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமனின் மறைவிற்குப் பின்னர் அவரிடம் ஹார்மோனியம் வாசிப்பவராக பணியாற்றிக் கொண்டிருந்த விஸ்வநாதனும் வயலின் வாசித்துக் கொண்டிருந்த ராமமூர்த்தியும் இணைந்து என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கிய பணம் (1952) என்கிற திரைப்படம் முதல் ஆயிரத்தில் ஒருவன் (1965) வரை நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு இசையமைத்தனர். இது போன்று இரண்டு இசையமைப்பாளர்கள் இணைந்து இயங்கும் மரபானது இந்தி சினிமாவில் அதிகமாக உள்ளது. சங்கர்-ஜெய்கிஷண், லக்ஷ்மிகாந்த்-பியாரிலால், கல்யாண்ஜி-ஆனந்ஜி, நதீம்-ஸ்ரவண், ஆனந்த்-மிலிந்த், ஜதின்-லலித், நிகில்-வினய் போன்ற பல ஜோடிகளை சொல்ல முடியும். இங்கு சங்கர்-கணேஷ், மனோஜ்-கியான் என்று குறைவான இரட்டையர்களே உள்ளனர். இந்த வரிசையில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இயங்கிய காலக்கட்டத்தை தமிழ் சினிமா இசையின் மறுமலர்ச்சி காலம் என்றே சொல்ல முடியும். தமிழ் சினிமாவிற்கான மெல்லிசை என்கிற பாதையை உருவாக்கிக் கொடுத்த முன்னோடிகள் இவர்கள்தான். எனவேதான் பிற்கால இசையமைப்பாளர்களான இளையராஜாவும் ரஹ்மானும் 'தாங்கள் உருவாக்கும் இசைக்கு ஆதாரம் எம்.எஸ்.வி-ராமமூர்த்தி செப்பனிட்டு தந்த உன்னதமான வழிதான்' என்று உருகுவதில் தன்னடக்கம் மாத்திரமல்ல, பெரும் உண்மையும் இருக்கிறது. 1965-ல் இந்த ஜோடி பிரிந்தது. இதற்குப் பின்னால் ராமமூர்த்தியால் 20-க்கும் குறைவான திரைப்படங்களுக்கு மட்டுமே தனியாக இசையமைக்க முடிந்தது. ஆனால் அதே சமயத்தில் இந்தப் பிரிவு விஸ்வநாதனின் தொடர்ச்சியான வெற்றியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இதற்குப் பிறகும் மேலதிகமாக பலநூறு திரைப்படங்களுக்கு அவர் தொடர்ந்து வெற்றிகரமாக  இசையமத்தார் என்பதில் விஸ்வநாதனின் தனித்துவமான மேதைமையை அறிய முடிகிறது.

***

கண்ணதாசனை தவிர்த்து விட்டு விஸ்வநாதனின் இசைப் பயணத்தைப் பற்றி தனியாக உரையாடவே முடியாது. அந்த அளவிற்கு கண்ணதாசனின் எழுத்தும் விஸ்வநாதனின் இசையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்தன. வயதில் மூத்தவரான கண்ணதாசனின் மீது சகோரத்துவ பக்தியும் மரியாதையும் கொண்டிருந்தார் விஸ்வநாதன். 'இசையைத் தவிர்த்தால் விசுவிற்கு உலக நடப்பு எதுவுமே தெரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம், இசை, இசை, இசை மட்டுமே' என்பதுதான் கண்ணதாசனின் கிண்டல் கலந்த  கருத்தாக இருந்தது. இருவரும் இணைந்து பாடல்களை உருவாக்கிய சம்பவங்களை வாசித்தால் அது ஏதோ நண்பர்களுக்கிடையான விளையாட்டு என்பது போலவே தோன்றும். இது தொடர்பாக பல சுவையான சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன.

உதாரணத்திற்கு, திருலோகசந்தர் இயக்கி சிவாஜி நடித்திருந்த 'அவன்தான் மனிதன்' திரைப்படத்திற்காக ஒரு டூயட் பாட்டை உருவாக்க வேண்டியிருந்தது. மே மாதத்திற்குள் படப்பிடிப்பு துவங்கப்பட வேண்டும் என்று இயக்குநர் குறிப்பிட்டு விட்டதால் நழுவிக் கொண்டேயிருந்த கண்ணதாசனிடம் தொடர்ந்து நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தார் விஸ்வநாதன். நச்சரிப்பு தாங்காத கண்ணதாசன் "என்னய்யா .. மே.. மே.. ன்னு தொல்லை பண்றே..இந்தா பிடி.. என்று எழுதித்தந்த பாடல்.. 'அன்பு நடமாடும் கலைக்கூடமே.. ஆசை மழை மேகமே.. கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே ...கன்னித் தமிழ் வண்ணமே... என்று பாடல் வரிகள் பெரும்பாலும்  மே என்று முடியும்படி எழுதியிருக்கிறார். பாடல் சூழ்நிலையை இயக்குநர் விளக்கிய அடுத்த கணமே அதற்கான மெட்டையும் பாடலையும் உடனே உருவாக்கி விடுவதில் இருவருமே ஒருவருக்கொருவர் சளைக்காத பிறவி மேதைகளாக இருந்ததிதனால்தான் அதிக எண்ணிக்கையிலான பாடல்களை உருவாக்க முடிந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அதிலும் ஒரு பாடலை தனித் தனிக் கூறுகளாக உருவாக்கி இணைத்துக் கொள்ளும்  இன்றைய தொழில் நுட்ப வசதிகள் அல்லாத,  பாடகர்களும் இசைக்கலைஞர்களும்  எவ்வித தவறுமின்றி ஒரே தருணத்தில் இணைந்து இயங்குவதை பதிவு செய்ய வேண்டிய சிக்கலான காலக்கட்டத்தில், இத்தனை பாடல்களை, அதிலும் பெரும்பான்மையாக வெற்றிகரமான பாடல்களை உருவாக்கியிருப்பது ஆச்சரியத்தை தருகிறது. காதல், சோகம், வீரம், தத்துவம், நகைச்சுவை, துள்ளல், அழுகை, கிண்டல் என்று நவரசங்களிலும் உருவாக்கப்பட்ட பாடல்கள் தமிழ் சமூகத்தின் ஒரு காலக்கட்டத்திய உணர்ச்சி வடிகால்களாகவும் பண்பாட்டுப் பதிவுகளாகவும் அமைந்தன. அவற்றில் புதுமையான, பரிசோதனைப் பாடல்களும் இருந்தன.  எம்.ஜி.ஆரின் அரசியல் வளர்ச்சிக்கும் சிவாஜியின் நடிப்பார்வத்திற்கும் ஏற்ற வகையில் பல பாடல்களை உருவாக்கியதை விஸ்வநாதனின் சாதனை என்றே சொல்ல வேண்டும். கண்ணதாசன் மட்டுமின்றி வாலியுடன் இணைந்து விஸ்வநாதன் பல அருமையான பாடல்களை உருவாக்கியிருக்கிறார்.

கண்ணதாசன்,விஸ்வநாதன், டி.எம்.செளந்தரராஜன்,பி.சுசிலா என்றமைந்த கூட்டணியை இயற்கையால் நிகழ்ந்த அற்புதம் என்று சொல்லலாம். அதிலும் இந்திக்கு ஒரு லதா மங்கேஷ்கர் போல தமிழிற்கு ஒரு சுசிலா கிடைத்தது தமிழர்களுக்கு அடித்த லாட்டரிப் பரிசு என்றுதான் சொல்ல வேண்டும். சுசிலாவின் அசாத்தியமான திறமை பல பாடல்களில் வெளிப்படுமாறு உபயோகித்துக் கொண்டார் விஸ்வநாதன்.. இந்தக் கூட்டணியில் கண்ணதாசன் தவிர்த்து மற்றவர்கள் தமிழை தாய்மொழியாக கொள்ளாதவர்கள் என்பதைக்  கவனியுங்கள். இது மட்டுமல்ல, தமிழ் திரையிசைக்கு பங்களித்த பல பாடகர்கள், கலைஞர்கள் தமிழை தாய் மொழியாகக் கொள்ளாத வேற்று மாநிலத்தைச் சார்ந்தவர்களே. திறமை எங்கிருந்தாலும் அதை அரவணைக்கத் தவறாதது தமிழ் சமூகம் என்பதே இதன் மூலம் தெளிவாகிறது. இசை என்பது தன்னளவிலேயே ஒரு முழுமையான கலை என்றாலும் பாடலுக்கு ஏற்ப இசை அமைப்பதே மரபு. ஆனால் நாளடைவில் பாடல் வரிகளுக்கேற்ப மெட்டமைக்க சிரமப்பட்ட இசையமைப்பாளர்கள், மெட்டுகளுக்கேற்ப பாடல் வரிகளை ஒடித்து மடித்து போட்டு மொழியைச் சித்திரவதை செய்வது பெருகிக் கொண்டே போகிறது. ஆனால் 'பாட்டுக்குத்தான் மெட்டு' என்கிற கருத்தில் தீ்ர்மானமாக இருந்தவர் விஸ்வநாதன்.

1952-ம் ஆண்டு முதல் ராமமூர்த்தியுடனும் 1965 முதல் தனி இசையமைப்பாளராகவும் தொடர்ந்து வெற்றிகரமாக தமிழ் திரையிசையை ஆட்சி செய்த விஸ்வநாதனின் இசை, 1976-ல் அன்னக்கிளியின் மூலம் புயலென புகுந்த இளையராஜாவின் வருகைக்குப் பிறகு மெல்ல மெல்ல குறையத் துவங்கியது காலத்தினால் தவிர்க்க முடியாத மாற்றம். நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருந்த இளையராஜாவின் ஆகிருதியின் பிரகாசத்திற்கு முன்னால் விஸ்வநாதனின் புகழ் மங்கிப் போனது வரலாற்று உண்மை. தவிர்க்க முடியாத இதே ரசனை மாற்றத்தை காலம் பின்னர் ரஹ்மானின் மூலம் உருவாக்கியது.விஸ்வநாதனின் நீட்சியாக அவர் செப்பனிட்ட வைத்திருந்த பாதையில் நாட்டார் இசையை இணைத்து வெற்றி கண்டது இளையராஜாவின் தனித்துவமான சாதனை.என்றாலும் இளையராஜா மெல்ல மெல்ல பிரம்மாண்டமாகிக் கொண்டிருந்த துவக்க காலத்தின் இடையேயும் விஸ்வநாதன் சில சிறந்த பாடல்களின் மூலம் தன் இருப்பை ரசிகர்களுக்கு நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தார். எம்.ஜி.ஆர். சிவாஜி காலக்கட்டத்தை தாண்டிய நவீன சூழலின் முன்னாலும் தன்னால் தாக்குப்பிடிக்க முடியும் என்ற கலைஞனின் அடிப்படையான பிடிவாதம் அது. உதாரணமாக பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த 'நினைத்தாலே இனிக்கும்' திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் ஓர் இசைக் கொண்டாட்டமாக திருவிழா அனுபவத்தை ஏற்படுத்தியது. முந்தைய காலக் கட்டத்தில் இயக்குநர் ஸ்ரீதர் போன்றவர்களும் பிந்தைய காலக்கட்டத்தில் பாலச்ந்தர் போன்றவர்களும் விஸ்வநாதனுக்கு சவாலான பாடல் சூழ்நிலைகளை உருவாக்கி சிறப்பான படைப்புகள் வெளிவர பிரதான காரணமாயிருந்தார்கள்.

***

பொதுவாகவே இசைக்கும் ஆன்மீகத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. உள்ளுணர்விற்கேற்ப ஆன்மாவைத் தேடும் அந்தரங்கமான தேடல் என்கிற வகையில் இரண்டுமே ஒரு திசையில் பயணிக்கின்றன. உன்னதமான இசைக்கலைஞர்கள் பெரும்பாலும் ஆன்மீக நாட்டம் உடையவர்களாக இருப்பதைக் கவனிக்கலாம். விஸ்வநாதனும் இதில் விதிவிலக்கல்ல. தன்னுடைய இசையின் வெற்றி குறித்த தலைக்கனம் ஏதுமில்லாதவராக அவர் இருந்தார். மற்ற  இசைக்கருவிகளைப் போலவே இசையை வெளிப்படுத்துவதற்கு தானும் ஒரு கருவியே என்பதை தீர்மானமாக நம்பினார். இந்த அடக்கத்தை இறுதி வரையிலும் பின்பற்றிய மேதையாக இருந்தார் விஸ்வநாதன். பிற கலைஞர்களை மனந்திறந்து பாராட்டுவதும் அவரது பண்புகளில் ஒன்றாக இருந்தன. உதாரணமாக டி.ராஜேந்தர் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவர். ஆனால் நாளடைவில் அவர் 'டண்டணக்கா' பாட்டை உருவாக்கியவராகவே மட்டுமே அறியப்படுவது துரதிர்ஷ்டம். 'உயிருள்ளவரை உஷா' திரைப்படத்திற்காக டி.ஆர். இசையமைத்த 'வைகைக் கரை காற்றே நில்லு' என்கிற மெல்லிசைப் பாடலின் எளிமையும் சிறப்பையும் கவனித்த விஸ்வநாதன், டி.ராஜேந்தரிடம் தம்முடைய பாராட்டையும் அன்பையும் தெரிவித்ததாக ஒரு தகவல் உண்டு. அது மட்டுமல்லாமல் அடுத்த தலைமுறைக் கலைஞர்களான இளையராஜா, ரஹ்மான், யுவன்சங்கர் ராஜா போன்றவர்களிடம் இணைந்து பணியாற்றவும் அவர் எவ்வித தயக்கமும் கொண்டிருந்ததில்லை.

சிறுவயதிலிருந்தே தன்னிச்சையாக இசை மீது ஆர்வம் கொண்டிருந்தாலும் ஒரு காலத்தில் நடிப்பின் மீதுதான் விஸ்வநாதனுக்கு அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. இதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது ஜூபிடர் பிக்சர்ஸ் உருவாக்கிய 'கண்ணகி' திரைப்படத்தில் இளம் வயது கோவலனாக  நடிக்கும் ஒரு வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஆனால் கண்ணகியாக நடித்த பெண்ணை விட தோற்றத்தில் இவர் இளையவராக இருந்ததால் அந்த வாய்ப்பு தொடரவில்லை. என்றாலும் பிற்காலத்தில் சிலரின் வற்புறுத்தலின் பேரில் காதல் மன்னன், காதலா காதலா போன்ற திரைப்படங்களில் நடித்தார். இசைத் துறையோடு மட்டும் அவர் தீர்மானமாக நின்றிருக்கலாம் என்பதற்கான உதாரணங்களாக அவை இருந்தன.

இளம் வயதிலேயே தந்தையை இழந்து, மிகுந்த வறுமையான சூழலில் இருந்தாலும் ஆர்வத்துடன் இசை கற்று, வேற்று மொழி மாநிலத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் தமிழகத்தின் ஒரு காலக்கட்டத்திய திரையிசையையே ஆட்சி புரிந்த விஸ்வநாதனின் அற்புதமான இசைக் கோலங்கள்  ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாது காற்றிலும் அப்படியே உறைந்திருக்கும். இது போன்ற ஆளுமைகள் அவர்களின் அஞ்சலிக் கட்டுரைகளில் மட்டும் நினைவுகூரப்படும் அவலம் தொடராமல், வாழும் போதும் மறைந்த பின்பும் அவர்களது படைப்புகள் பற்றிய உரையாடல்களும், மறுகண்டுபிடிப்புகளும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். 

- உயிர்மை - ஆகஸ்ட் 2015-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan