Saturday, February 04, 2017

'கானகன்' - புலியாடும் வேட்டை




நவீன தமிழ் இலக்கியத்தில் சூழலியல் சார்ந்த படைப்புகள் மிக சொற்பம். சங்க இலக்கியத்தில் இயற்கை பற்றிய விவரணைகள், நுண்தகவல்கள் இருந்தன. இதன் தொடர்ச்சி இடையில் அறுபட்டு விட்டது.

மேலைநாடுகளில் தொன்னூறுகளில் Eco Criticism பற்றிய விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டது. தமிழில் ச.கந்தசாமி எழுதிய சாயாவனம், சூழலியல் சார்ந்த துவக்க கால படைப்பு. ஜெயமோகனின் ‘ரப்பர், பாவண்ணனின் ‘பாய்மரக்கப்பல்’ போன்ற நாவல்கள் பிறகு உருவாகின.

இன்று சூழலியலுக்கான பிரத்யேகமான பருவ இதழ்கள் கூட வெளிவருவது மாதிரியான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சமகால இலக்கியத்திலும் இதன் பிரதிபலிப்புகள் வெளிப்படத் துவங்கியுள்ளன.

லஷ்மி சரவணகுமார் எழுதிய ‘கானகன்’ அவ்வாறானதொரு முயற்சி. இயற்கை வளங்களை பெருவணிகம் கொள்ளையடிப்பதும் சூறையாடுவதும் காலங்காலமாக நிகழ்ந்து வரும் ஓர் அராஜகம். மனித குலத்தால் இயற்கையின் மீது தொடுக்கப்படும் இந்தப் போரினால் பாதிக்கப்படுவது இயற்கையின் சமநிலை மட்டுமல்ல, இயற்கையைச் சார்ந்திருக்கும் காட்டுயிர்களும் பழங்குடிகளுமே.

அதிகார வர்க்கமும் வணிக முதலாளிகளும் இணைந்த ஒரு வலிமையான வலைப்பின்னலின் பேராசை காரணமாக தங்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்து துரத்தப்படும் அவலத்திற்கு ஆளாகின்றனர்.

கானகன் இந்தப் பின்னணியில் இயங்குகிறது.

**

தங்கப்பன் திறமையான வேட்டைக்காரன். காட்டின் அசைவுகளைப் பற்றி நுணுக்கமான அறிய முடிந்த அவனால் அதன் ஆன்மாவை உணர முடியவில்லை. அவனுடைய வளர்ப்பு மகன், வாசி. பழங்குடி நம்பிக்கைகளின் நுட்பமான தொடர்ச்சியான அவனுக்கு காட்டுயிர்கள் தொடர்ந்து அநியாயமான முறையில் வேட்டையாடப்படுவது குறித்த மெளனமான கோபம் இருக்கிறது.

தங்கப்பன் மற்றும் வாசியின் முரணியக்க இயங்குதலின் மீது நாவலின் மையச்சரடு பின்னப்பட்டிருக்கிறது. எண்பதுகளில், தமிழக மலைப் பகுதியில் நிகழ்வதாக களம் அமைக்கப்பட்டிருக்கிறது. பழங்குடிகளின் வாழ்வியல், இயற்கையை ஆராதிக்கும் அவர்களின் மனோபாவம், காட்டுயிர்கள், அவற்றின் மீது நவீன உலகம் நிகழ்த்தும் கொடூரமான வேட்டை போன்ற சம்பவங்கள், அதன் நுண்விவரங்கள் நாவலில் சிறப்பாகவே பதிவாகியுள்ளன.

நாவலை உருவாக்குவதில் நூலாசிரியரின் உழைப்பும் அக்கறையும் தெரிகிறது. என்றாலும் ஒட்டுமொத்த நோக்கில் இதுவொரு முதிராத முயற்சியாக சலிப்பூட்டுகிறது. காடும் பழங்குடிகளும், மிகையான அளவில், புனிதப்படுத்தப்பட்டுள்ளார்களோ என்று தோன்றுகிறது. ஆசிரியரின் குரலும் நாவலின் இடையில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருப்பதால் இதன் இயல்புத்தன்மையும் கலையமைதியும் வெகுவாக பாழாகியுள்ளது. செயற்கையான சம்பவங்களுடன் கூடிய அபத்தங்கள் நிறைந்துள்ளன. திணிக்கப்பட்ட பாலியல் நிகழ்வுகளும்.

இயற்கையைப் பற்றிய நுட்பமான விவரணைகளுடனும் நிதானமான நடையுடனும் இதை செறிவுப்படுத்தி உருவாக்கியிருந்தால் தமிழின் ஒரு முக்கியமான படைப்பாக ‘கானகன்’ அமைந்திருக்கும். என்றாலும் சூழலியல் பற்றிய தமிழ் படைப்புகள் சொற்பமே என்கிற அளவில், ‘கானகன்’ கவனத்தில் கொள்ளக்கூடிய முயற்சியே.

***

கானகன் (நாவல்) - லஷ்மி சரவணகுமார்
மலைச்சொல் பதிப்பகம்
பக்கம் 264 - விலை ரூ.99 (மக்கள் பதிப்பு)

(அலமாரி இதழில் பிரசுரமானது)


suresh kannan