'தமிழ்த் திரையுலகில் இருக்கிற அளவிற்கு அதிகமாக மற்ற மாநிலங்களில் நகைச்சுவை நடிகர்கள் இல்லை' என்று ஒரு முறை குறிப்பிட்டார் இயக்குநர் மகேந்திரன். உண்மைதான். சம்பிரதாயமாக என்.எஸ்.கிருஷ்ணன் முதற்கொண்டு இப்போதைய சந்தானம் வரை பட்டியலிட்டால் அது ஒர் நீளமான பட்டியலாக இருக்கும். தமிழர்களிடம் உள்ள ஆழமான பிரத்யேக நகைச்சுவை உணர்ச்சியே இதற்கு காரணம். (என்ன, அவர்களின் புனித பிம்பங்களின் அருகே மாத்திரம் போகக்கூடாது) தொலைக்காட்சி ஊடகங்கள் 24 மணி நேரமும் வாரியிறைத்துக் கொண்டிருக்கும் நகைச்சுவைக் காட்சிகளே இதற்கு சாட்சி.
அப்படியான நகைச்சுவை நடிகர்களி்ல் என்னை பிரதானமாக கவர்ந்தவர் நாகேஷ். நகைச்சுவை நடிப்பிற்கு மிகவும் அவசியமான 'டைமிங்'கில் அதிகில்லாடி. 'நாய்க்கு பேரு வெச்சியே, சோறு வெச்சியா' என்ற வசனம் இன்றளவும் பிரபலம். 'மிமிக்ரி' நடிகர்கள் அதிகம் உபயோகிக்காதது இவர் குரலாகத்தான் இருக்கும். அந்தளவிற்கு நகல் செய்ய முடியாத சாதாரண ஒரு குரலை வைத்துக் கொண்டு இவர் திரையில் புரிந்திருக்கும் வர்ண ஜாலங்கள் இன்றைக்கும் பிரமிப்பை ஏற்படுத்துபவை.
தந்திரமும் நகைச்சுவையும் கலந்ததொரு பாத்திரமான 'வைத்தி'யை (தில்லானா மோகனாம்பாள்) நாகேஷைத் தவிர வேறு யாராவது இவ்வளவு திறமையாக நடித்திருக்க முடியாது என்றே நான் தீர்மானமாக நம்புகிறேன். slapstick நகைச்சுவையிலும் திறமையான இவருடன் ஒப்பிடக்கூடியவர் சந்திரபாபு மட்டுமே. பிரபல பிரிட்டிஷ் நகைச்சுவை நடிகரான norman wisdom-மின் பாதிப்பு நாகேஷீக்கு பெருமளவில் இருந்தது.
பின்புறத்தில் எட்டி உதைப்பது, வசவு வார்த்தைகளில் அர்ச்சிப்பது, இரட்டை அர்த்தங்களில் பேசுவது போன்ற எந்தவித கோணங்கித்தனங்களுமில்லாமல் தரமான நகைச்சுவையை வழங்கியவர்களில் நாகேஷ் பிரதானமானவர். நகைச்சுவையைத் தாண்டி குணச்சித்திர பாத்திரங்களில் இவரை பாலச்சந்தர் ஏற்கெனவே பயன்படுத்தியிருந்தாலும் கமலின் 'நம்மவர்' திரைப்படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு அசாத்தியமானது. 'கல்கி' வாரஇதழில் தொடராக வந்த இவர் சுயசரிதையை வாசித்திருக்கிறேன். ஒரு காலகட்டத்தில் 24 மணி நேரமும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு உடல்நலம் பாதிக்கும் அளவிற்கு பணியாற்றியிருக்கிறார். தங்களுக்கென பிரத்யேக ரசிகர்களை வைத்திருந்தாலும் எம்.ஜி.ஆரும்,சிவாஜியும் கூட இவரை தவிர்க்க இயலவில்லை.
நாகேஷின் மறைவு உண்மையாகவே வருத்தத்தை ஏற்படுத்தியது. அவருக்கு என் மரியாதை கலந்த அஞ்சலி.
suresh kannan