Sunday, December 30, 2012

கும்கி - கேமிரா வொர்க் சூப்பர்யா...


இரா.முருகனின் சிறுகதையில் வரும் ஒரு பகுதி (தோராயமாக) இன்னமும் என் நினைவிலிருக்கிறது. பதின்ம வயது இளைஞர்கள் 'அந்த மாதிரியான காட்சிகளை' எதிர்பார்த்து ஓர் ஆங்கிலப் படத்திற்குச் செல்வார்கள். ஆனால் படத்தில் அவ்வாறான 'காட்சிகள்' எதுவும் இருக்காது. படம் முடிந்து வரும் போது தங்களுடைய ஏமாற்றத்தை மறைக்கின்ற பாவனையுடன் இளைஞர்களில் ஒருவர் சொல்வார் "வக்காலி.. காட்டுக்குள்ள காமிராவை எப்படி எடுத்துருக்கான்ல?".

கும்கி திரைப்படம் பார்த்து விட்டு திரும்பும் பார்வையாளர்களின் கருத்தும் ஏறக்குறைய இவ்வாறுதான் இருக்கிறது.

கும்கியில் ஒளிப்பதிவு பாராட்டக்கூடிய அளவிற்கு இருக்கிறதென்றாலும் தொழில்நுட்பமும் காடசியின் அழகியலும் மட்டும்தானா சினிமா?. ஏன் இப்படி பெரும்பாலான தமிழ் சினிமா இயக்குநர்கள் காதலை மாத்திரம் பிரதானமாக வைத்துக் கொண்டு (அதையும் அரைகுறைப் புரிதலுடன்) மற்றவற்றை நுனிப்புல் மேய்ந்து ஒப்பேற்றி விட்டு 'நல்ல சினிமா' எடுத்திருக்கிறேன் என்று அலட்டிக் கொள்கிறார்கள்?.

'நல்ல நேரம்' 'அன்னை ஓர் ஆலயம்" ' சில இராமநாராயணன் திரைப்படங்கள்.. என இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களில் நாம் வெறும் சர்க்கஸ் யானைகளையும் விளையாட்டு சாகசங்களையும் மாத்திரமே பார்த்து வந்திருக்கிறோம். கும்கியில் ஒரு யானையும் பாகனும் பிரதான பாத்திரங்களாக அமைந்திருக்கின்றன. எத்தனை அருமையான வாய்ப்பு?. யானைகளைப் பற்றியும் அதற்கும் பாகனுக்குமான உறவைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கை பற்றியும் எத்தனை நுண்தகவல்களை திரைப்படததின் உள்ளீடாக சுவாரசியமாக சொல்லியிருக்கலாம்?. யானைப்பாகன் களிடமிருந்து தரவுகளை திரட்டியும், 'காடு' என்கிற அற்புதமான நாவலை எழுதின ஜெயமோகனைப் போன்றவர்களையும் துணைக்கு வைத்துக் கொண்டு காட்சிகளையும் திரைக்கதையையும் அமைத்திருந்தால் 'கும்கி' எத்தனை அற்புதமான படமாக அமைந்திருக்கும். இதெல்லாம் நிகழ்ந்திருந்தால் சாலையோரத்தில் கீரிக்கும் பாம்பிற்கும் சண்டை விடுகின்றவனைப் போன்ற வாய் ஜாலத்துடன் வெறும் சவடாலிலேயே கும்கி முடிய வேண்டியிருந்த அவலம் நேர்ந்திருக்காது.

யானைகளைப் பற்றின நுண்தகவல்களை தராமலிருப்பது ஒருபுறம் இருக்கட்டும். அதனை ஏதோ எம்.என்.நம்பியார், வீரப்பா மாதிரி கொடூர வில்லனாக சித்தரித்த பிழையை என்னவென்பது? விலங்களும் பறவைகளும் மனித குலத்திற்கு எதிரானது், பயங்கரமானது என்பது மாதிரியான எண்ணத்தை தோற்றுவிக்கும் வகையில்  'The Birds' படத்தில் ஆல்பிரெட் ஹிட்ச்காக்கும் 'The Jurassic Park' படத்தில் ஸ்பீல்பெர்க்கும் இதே போன்ற பிழையைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் சித்தரித்திருந்தது மிகுகற்பனை என்று விட்டாலும் கும்கியில் சித்தரித்திருப்பது இன்றும் நடைமுறையில் உள்ள விஷயம். 'ஊருக்குள் நுழைந்து காட்டு யானைகள் அட்டகாசம்.. யானைகளின் வெறிச்செயல்' என்றெல்லாம் வெகுஜன அச்சு ஊடகங்கள் கட்டமைத்துத் தரும் அதே பொய்ச் செய்தியை கும்கியும் மீண்டும் காட்சி வடிவில் சொல்கிறது. விலங்குளின் வாழ்விடங்களையும் நீராதாரங்களையும் தன்னுடைய பேராசையால் கைப்பற்றிக் கொண்டிருக்கும் மனித இனம், வாழ்விற்கான அவற்றின் போராட்டத்தை 'வெறிச்செயல், கொலைச்செயல்' என்றெல்லாம் பிரச்சாரம் செய்வது எத்தனை பெரிய அயோக்கியத்தனம்?. (இத்தனை முக்கியமான செய்தியை போகிற போக்கில் ஊர்த்தலைவர் ஒரு காட்சியில் சொல்வதோடு விட்டிருக்கிறார் இயக்குநர்).

யானைகளை மாத்திரமல்ல, பழங்குடி இன மக்களையும் அரைகுறைப் புரிதலாக சித்தரித்திருக்கிறார் இயக்குநர். கும்கி யானைக்கும் கோயில் யானைக்கும் வித்தியாசம் அறியாத அடிமுட்டாள்களாகவா அவர்கள் இருப்பார்கள்? மேலும் காலம் காலமாக காட்டைச் சுற்றி வாழும் அவர்களுக்கு விலங்குகளை எவ்வாறு எதிர்கொள்வது? காட்டில் அவற்றின் முக்கியத்துவம் என்ன? அவற்றிற்கு இடையூறாக இல்லாமல் புழங்குவது எப்படி என்பதெல்லாம் தெரியாமலா இருக்கும்? ஆனால் இந்தப்படம் முழுக்க அவர்கள் யானையைப் பற்றி எதிர்மறையாகவும் அச்சத்துடனும் பேசிக் கொண்டிருப்பதாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக விலங்குகள் இரை காரணமாக அன்றி மற்ற உயிரினங்களின் மீது தாக்குதல் நடத்துவதை விட தம்முடைய பாதுகாப்பையே முதலில் யோசிக்கும். கூடுமானவரை ஒதுங்கியே செல்லும். அது நிகழாத பட்சத்தில்தான் தற்காப்பிற்காக தாக்குதலைத் தொடுக்கும். ஆனால் இத்திரைப்படத்தின் முதல் காட்சியிலேயே கொம்பன் எனும் ஆண் யானை, அறுவடையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பெண்களை மிகக் கொடூரமாக குத்திக் கொல்வது போல சித்தரிக்கப்படுகிறது. இப்படம் சித்தரிக்கும்படியே வைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு அறுவடைக்காலத்திலும் யானைகளால் பாதிக்கப்படும் மக்கள் அதற்குரிய முன்னெச்சரிக்கையும் பாதுகாப்பும் இல்லாமலா அறுவடை செய்வார்கள்? யானைகளின் தடத்தில் மனிதர்கள் குறுக்கிடும் போது - அதுவும் யானைக்கூட்டங்களால் அல்ல, ஒற்றை யானை எனும போதுதான் - ஆபத்து நேரிடலாம். (இந்தப் பதிவையும் வாசித்துப் பாருங்கள்).

படத்தில் பாத்திரங்களின் வார்ப்பில், காட்சிகளின் சித்தரிப்புகளில் நிறைய தர்க்கப்பிழைகளும் உள்ளன.

இதில் பொம்மனாக வரும் யானைப் பாகனும், மாணி்க்கம் என்கிற யானையும் சிறுவயது முதலே பழகுவதாகவும் இருவரும் பாசத்தில் பிணைந்திருப்பதாக சித்தரிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட பாகன், யானை ஒருமுறை சிறுகுற்றம் புரிந்த காரணத்தினால் நடு்ச்சாலையிலேயே யானையுடன் கோபித்துக் கொண்டு பேருந்து நிலையத்திற்கு வந்து விடுகிறான். யானையும் பின்னாலேயே வருகிறது. பேருந்து நிலையத்திலுள்ள மக்கள் பீதியுடன் அடித்து பிடித்துக் கொண்டு ஓடுகிறார்கள். பாகனோ இது எதையும் கவனிக்காமல் அமர்ந்திருக்கிறான். வனக்காவலர்கள் யானையை பிடித்துச் செல்கிறார்கள். ஒரு நல்ல பாகன், யானையின் மீது உண்மையான அக்கறையுடையவன், இந்த சூழ்நிலைகளை தவிர்ப்பானா, மாட்டானா? அது மாத்திரமல்ல, தான் காதலிக்கும் பெண் இருக்கும் ஊரிலேயே தங்குவதற்கான சந்தர்ப்பத்திற்காக (படத்தில் சித்தரிப்பதுபடியான) ஒரு முரட்டு யானையுடன் தன் யானையை மோதவிடும் ஆபத்தைச் செய்வானா? அவன் அந்த ஊரில் தங்குவதுதான் பிரதான நோக்கம் என்றால் அதற்கான வழியா இல்லை?

படம் நெடுக கொம்பன் யானையைப் பற்றிய பிம்பம் கட்டமைத்துக் கொண்டேயிருக்கப்படுகிறது. (அந்த ஊரிலேயே ஒரே ஒரு யானைதான் இருக்கிறது போல). படத்தில் இரு வனக்காவலர்கள் வருகிறார்கள். கொம்பன் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் போல.. 'கொம்பன் வந்தான்னா தெரியும் சேதி' என்று மிரட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். காமெடியாக இருக்கிறது. ஊரே அந்த யானையைப் பார்த்து பயப்படுகிறது. ஆனால் பாகனுடன் வந்திருக்கும் தம்பி ராமையாவிடம் 'அந்த யானையை ஒரே ஆளா நீங்க அடிச்சு கொன்னுடுவீங்க இல்ல' என்று அந்த ஊரைச் சேர்ந்தவர்களே சொல்கிறார்கள். காமெடியாம். பொம்மன், அல்லியை கவர்வதற்கு முன்பாகவே யானை மாணிக்கம் அவளை காப்பாற்றி முன்னதாகவே கரெக்ட் செய்து விடுகிறது.

வின்னர் படத்தில் வடிவேலு நடித்த 'கைப்புள்ள' பாத்திரம் தமிழ் சினிமாவில் இன்னுமும் சாஸ்வதமாக தொடர்ந்து உலவிக் கொண்டிருப்பது தம்பி ராமையாவின் பாத்திரத்தின் மூலம் நிருபணமாகியிருக்கிறது. மனிதர் மாடுலேஷனில் பின்னியிருந்தாலும் அவரது மைண்ட் வாய்ஸில் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருப்பது சலிப்பைத் தந்தாலும், அவர் இல்லாத 'கும்கி'யை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இன்னமும் சொதப்பலாகியிருக்கும். வடிவேலுவால் தொடர்ந்து நடிக்கப்பட்டு நைந்து போனதுதான் என்றாலும், தம்பி ராமையாவின் பாத்திரத்தில் வடிவேலு நடித்திருந்தால் இன்னமும் சுவாரசியம் கூடியிருக்கலாம் என நம்புகிறேன். 'பருத்தி வீரன்' கார்த்தியை நினைவுப்படுத்தினாலும் விக்ரம்பிரபு தன்னால் ஆன அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார். தூக்கத்தைக் கெடுக்குமளவிற்கு அழகாக இருக்கிறார் லக்ஷ்மி மேனன். பழங்குடி இன மக்களுக்கான ஒப்பனையை விட சேலையில் கூடுதல் அழகு. படத்திற்கு முன்னதாக சிறப்பான அனுபவத்தை தந்த பாடல்களுக்கு ஏற்ப காட்சிகள் சிறப்பாக அல்லாமல் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது.

யானை என்றாலே டிரம்ப்பெட் மாதிரி ஒரே மாதிரி பிளிறல் ஒலியை உபயோகித்துக் கொண்டிருந்த வழக்கத்திற்கு மாறாக யானை எழுப்பும் சன்னமான ஒலிகள் பயன்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு. கோயில் யானையான மாணிக்கம், முரட்டு காட்டு யானையை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்கிற பார்வையாளனின் அவநம்பிக்கையை, அந்தச் சண்டைக்கு முன்னால் அதற்கு மதம் பிடித்திருப்பதாக சித்தரித்திருப்பதின் மூலம் நம்பகத்தன்மையை ஏற்படுத்தியிருப்பது சிறப்பு. யதார்த்தத்தை உணர்ந்து காதலை இருவரும் தியாகம் செய்வது மெலோடிராமாவாக தெரிந்தாலும் அந்த முதிர்ச்சிக்காக பாராட்டு.

வித்தியாசமான படம் என்கிற பாவனையில், தமிழ் சினிமாவில் தொடர்ந்து அபத்தமாக சொல்லிக் கொண்டிருக்கப்படும் காதலைத்தான் கும்கியும் சொல்கிறது. வேறான்றுமில்லை.

இப்போது பதிவின் தலைப்பை ஒரு முறை வாசிக்கவும்.


suresh kannan

Wednesday, December 26, 2012

நீதானே என் பொன் வசந்தம் - An Ego Trip


'காதலைக் கடந்து வந்தவர்களால்தான் இந்தப் படத்தை ஆழமாக உணர முடியும்' என்கிற மாதிரியான சில அபிப்ராயங்களை இத்திரைப்படம் குறித்து வாசித்த போது மெலிதாக கோபம் கூட எழுந்தது. காதல் என்பது எல்லா உயிரினங்களுக்குமான ஓர் அடிப்படையான, இயற்கையான உணர்வு. அதைக் கடந்து வந்தால்தான் உணர முடியும் என்பது 'பாலுறவைக் கடந்து வந்தால்தான் சுயஇன்பத்தை உணர முடியும்' (?!)  என்பது மாதிரி அபத்தமான அறிவிக்கையாக இருக்கிறதே என்று தோன்றியது. ஆனால் இந்தத் திரைப்படத்தை பார்த்த பின்பு மேற்குறிப்பிட்ட அபிப்ராயங்களோடு உடன்படுவதைத் தவிர வேறு வழியில்லை என்று தோன்றுகிறது. மூப்பிலோ, விபத்திலோ மரணத்தை சந்தித்து விட்டு திரும்பியவர்களின் உணர்வுகளை அது போன்ற அனுபவத்தை அடைந்தவர்களால்தான் முழுமையாக உணர முடியும். என்னதான் விளக்கிச் சொன்னாலும் அந்த அகரீதியான அனுபவத்தை மற்றவர்களுக்கு கடத்தி விட முடியாது. 'படத்தில் கதை என்கிற வஸ்து இல்லை, மெதுவாகச் செல்கிறது, போரடிக்கிறது, மொக்கையாக இருக்கிறது' எனும் அகாதல்வாதிகளின் புறக்கணிக்கப்பட வேண்டிய குறிப்புகள், அவர்கள் காதல் என்னும் உன்னதத்தை சந்திக்காத அபாக்கியவான்கள் என்பதை அடிக்கோடிட்டுச் சொல்கிறது.

'வருண் மற்றும் நித்யாவின் காதல் கதையின் தருணங்கள்' என்று படத்தின் துவக்கத்திலும் போஸ்டர்களிலும் இயக்குநர் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார். இருந்தும் இதில் தமிழ் சினிமாவை வழக்கமான சம்பிரதாயங்களை எதிர்பார்ப்பது நாம் இன்னமும் சினிமா பார்க்கக் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது. ஏய்... என்று கத்திக் கொண்டு ஒரு வில்லன், 'எண்ற புள்ளையையாடா காதலிக்கிற.. பசுபதி பூட்றா வண்டியை' என்று கத்தும் பெண்ணின் தகப்பன், உன்னை எப்படில்லாம் வளர்த்தம்மா' என்று கண்ணீர் விடும் அம்மா, இந்தச் சமூகத்தை திருத்தறதுதான் முக்கியம், நீ-லாம் அப்புறம்" என்று வெட்டி பஞ்ச் டயலாக் பேசும் நாயகன், போன்றவற்றை கட்டாயம் எதிர்பார்க்கும் தமிழ் சினிமா பார்வையாளர்களுக்கு இத்திரைப்படம் ஏமாற்றத்தைத் தான் தரும்.

இந்தப்படத்தில் வரும் காதலுக்கு எதிரிகள், இந்தப் படத்தின் காதலர்களே. அதாவது அவர்களின் ஈகோ. ஆண் x பெண் என்கிற எதிர்துருவ உறவு எப்போதுமே பரஸ்பர ஈர்ப்பு இருக்கிற அளவிற்கான சிக்கல்களையும் கொண்டது. எத்தனை வயதைக் கடந்தாலும் இந்தச் சிக்கல்களிலிருந்து விடுபட முடியாது. அத்தகைய தருணங்களின் தொகுப்பாகத்தான் இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த அனுபவத்தில் ஈடுபட்ட /பட்டுக் கொண்டிருக்கிற எவருமே எந்தவொரு இடத்திலாவது மிக நெருக்கமாக இந்த தருணங்களோடு உடன்பட, ஒப்பிட்டுக் கொள்ள முடியும். அந்தளவிற்கு காதல் குறித்து  யோக்கியமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது நீஎபொவ. 

அதற்காக காதலிப்பவர்கள் தங்களின் ஈகோக்களை, சுயஅடையாளங்களைத் துறந்து 'ஒண்ணு மண்ணாக பழகணும்' என்பதுதான் இந்தப் படத்தின் செய்தி என்று புரிந்து கொண்டால் அதை விட சிறுபிள்ளைத்தனம் இருக்க முடியாது. அந்தந்த பருவங்களை அதற்கேயுரிய சிக்கல்களுடன் மகிழ்ச்சியுடனும்தான் கடக்க முடியும்.

பெரும்பாலும் அடித்தட்டு வாக்க இளைஞனாகவே தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த ஜீவா அதிலிருந்து இப்படத்தின் மூலம் தன்னை மீட்டுக் கொண்டிருக்கிறார் எனலாம். ஒரு மத்தியதர வர்க்க இளைஞனின் அபிலாஷைகளை, குழப்பங்களை, பொருளாதார அவஸ்தைகளை, ஒப்பிடல்களை மிக கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். காதலர்கள் தங்களின் உறவு குறித்தான சிக்கல்களை விவாதிக்கும் பகுதிகள், கெளதம் மேனனின் படங்களில் தொடர்ந்து சிறப்பாக காட்சிப்படுத்தப்படுகிறது. இதிலும் அவ்வாறே. இது தொடர்பான  காட்சிகளில் சமந்தா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக மிக நீளமாக வரும் மொட்டை மாடிக் காட்சியிலும் இறுதிக் காட்சிகளிலும்.  படம் நிறைவடைவதிற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, தன் அகங்காரங்களை துறந்து வருணிடம் முழுமையாக தன்னை ஒப்படைத்துக் கொள்வதின் அடையாளமாக 'I love you' என்று அவர் வெடிக்கும் போது எனக்கு  தன்னிச்சையாக கண்ணீர் பொங்கியது. (என்றாலும் அம்மணி டைஃபாய்டு காய்ச்சலில் இருந்து மீண்டு மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆனது போலவே பெரும்பாலான காட்சிகளில் தோற்றமளித்தது சற்று அசெளகரியமாக இருந்தது. 'நான் ஈ'யில் கூட நன்றாக இருந்தாரே).

ஆக்ஷன் திரைப்படங்கள் உட்பட கெளதமின் எல்லா படங்களிலுமே காதல் தொடர்பான காட்சிகள் மிகச் சிறப்பாக மிக வலுவானதொரு இழையாக படம் முழுதும் படர்ந்திருக்கும். நீஎபொவ -வைக் கூட 'விண்ணைத் தாண்டி வருவாயின்' இன்னொரு பரிமாணமாக,நீட்சியாக கொள்ளலாம். அது இயக்குநரின் பிரத்யேகமான முத்திரைகள் என்றாலும் கெளதமின் கிளிஷேக்களாக சிலவற்றை சொல்லலாம். மூத்தவயது காதலி, அப்பாவை (பெரும்பாலும் கிருஷ்ணன்) மிக நெருக்கமாக உணரும் நாயகன், கேரளப் பயணம், மேல்தட்டு வர்க்க காதல், போன்றவற்றை சலிக்குமளவிற்கு உபயோகிப்பதை தவிர்ப்பது நல்லது.

என் மனதிற்கு மிக நெருக்கமான இளையராஜாவை, கெளதமின் திரைப்படங்களின் முன்அனுபவத் தடைகளினாலோ என்னவோ - இத்திரைப்படத்தில் மிக அந்நியமாக உணர்ந்தேன். பெரும்பாலும் அவரது பாடல்களோ, பின்னணி இசையோ (சற்று முன்பு... போன்ற அபூர்வ தருணங்களைத் தவிர்த்து) படத்தில் ஒட்டவேயில்லை. கெளதம் மறுபடியும் ஹாரிஸிற்கு திரும்புவது நல்லது. படத்தின் இன்னும் சில பின்னடைவுகள், வருண்-நித்யா தொடர்பான சிறுவயது, பள்ளிக்கூட காட்சிகள். அவைகள் இல்லாமலேயே படத்தை இன்னமும் அழுத்தமாகச் சொல்லியிருக்க முடியும். சந்தானம் தொடர்பான காட்சிகளும். தீவிரமாக நகரும் காட்சிகளிலிருந்து பார்வையாளன் சற்றே இளைப்பாறுவதற்காக திணிக்கப்பட்ட் காட்சிகள் எரிச்சலைத் தருகின்றன. குறிப்பாக விதாவ -வை spoof செய்திருப்பது அபத்தமானதொன்று.

ஆண்டனியின் வேகமான தாளகதியிலான படத்தொகுப்பு பிரசித்தி பெற்றது. ஆனால் இதில் மிக சாவகாசமாக காட்சிகள் நகர்கின்றன. குறிப்பாக அந்த மொட்டை மாடிக் காட்சி. எதிர்மாடி பார்வையாளனைப் போல நம்மை உணரச் செய்யும் அந்தக் காட்சிகள் டாப் ஆங்கிள் கோணத்திலிருந்து தவழந்து கீழே வந்து மறுபடியும் உயரே செல்கிறது, அவர்களது உரையாடல்களைப் போலவே. (இங்கு விதாவில் சிம்புவும் த்ரிஷாவும் நள்ளிரவில் அவர்களது வீட்டிற்கு வெளியே உரையாடும் காட்சியை நினைவு கூரலாம்).

மொத்தத்தில் நீதானே என் பொன் வசந்தம், காதலின் வலியில், துயரத்தில், மகிழ்ச்சியில், வாதையில், சிக்கலில் நனைந்தவர்களுக்கானது. மற்றவர்களுக்கு இருக்கவே இருக்கிறது, 'காதல் -ன்றது ஒரு முறைதான் பூக்கும்' - என்பது போன்ற பாசாங்குகளின் அடையாளமாகத் திகழும் விக்ரமன் டைப் படங்கள். 

தொடர்புள்ள பதிவு:


suresh kannan

Tuesday, December 25, 2012

நடுவுல கொஞ்சம் .....................காணோம்


டிஜிட்டல் புரட்சியால் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வந்திருக்கும் நல்ல முயற்சி நகொபகா. வழக்கமான சம்பிரதாயங்களைத் தவிர்த்து ஒரே ஒரு லைனை வைத்துக் கொண்டு எங்கும் திசை மாறாமல் திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு. இந்தப் படத்தில் மிக முக்கியமாக நான் கருதுவது, படம் ஒரு சிக்கலான பிரச்சினையில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்க பார்வையாளர்களாகிய நாம் சிரித்துக் கொண்டே இருப்பதுதான். இப்படியொரு சீரியஸான காமெடி படம் தமிழில் வந்ததாக எனக்கு 'நினைவில்லை'. ஞாபகக் குறைபாடு என்னும் விஷயத்தை வைத்துக் கொண்டு 'மூன்றாம் பிறை' இயங்கிய மெலோடிராமாவிற்கு எதிர் திசையில் இயங்குகிறது இத்திரைப்படம். 
 
இந்தப் படத்தின் இன்னொரு முக்கியமான விஷயம் casting. தமிழ்த் திரைக்கு அறிமுகமேயில்லாத நடிகர்கள். ஆனால் அந்தப் பாத்திரத்திற்கு மிகச் சிறப்பாக பொருந்தியிருக்கிறார்கள். படம் துவங்கின சில நிமிஷங்களிலேயே நமக்கு நெருக்கமான நபர்களாக ஆகி விடுகிறார்கள். ஒவ்வொரு பாத்திரமும் அதன் வார்ப்பில் தனித்தன்மையுடன் இயங்குகிறது. சீரியஸாக பொறுப்போடு ஒருவன், முன்கோபத்துடனும் ஈகோவுடனும் ஒருவன், மனதில் பட்டதை உடனே உளறிக் கொண்டு அசட்டுத்தனமாக விழிக்கும் ஒருவன், மெலிதாக அவர்களுக்குள் இயங்கும் ஈகோ (நீ சொன்னா மாத்திரம் எப்பிடிடா கேட்கறான் - அதற்கு மொக்கையான ஒரு ப்ளாஷ்பேக்)..எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் மருத்துவ விஷயங்களை உதிர்ப்பது...என்று படம் பார்க்கும அனைவருமே தங்களின் நண்பர்கள் குழுவை நினைவுகூர்வார்கள். குறிப்பாக சரஸாக நடித்திருக்கும் விக்னேஷ்வரனின் நடிப்பு அற்புதம். படம் முழுக்க சீரியஸாக நடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு. சிறப்பாக செய்திருக்கிறார். ஒரே மாதிரியான வசனத்தை படம் முழுக்க சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் விஜய் சேதுபதிக்கு. வேறு வேறு மாடுலஷன்களில் சுவாரசியப்படுத்தியிருக்கிறார்.

முதலில் நமக்குத் தோன்றும் நெருடல் 'இப்படியெல்லாம் நடக்குமா?' என்பது. ஆனால் படத்தின் ஒளிப்பதிவாளரின் வாழ்வில் நிகழ்ந்த உண்மைச் சம்பவம்தான் இது எனும் போது அதை நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது. இன்னொன்று பிரதான பாத்திரத்திற்கு ஏற்படும் விபத்தையொட்டி மீண்டும் மீண்டும் வரும் அதே சம்பவங்கள்.. வசனங்கள். ஆனால் இதை சுவாரசியமான கதைச் சொல்லாடலின் மூலம் பெரும்பாலும் வெற்றிகரமாக தாண்டி வந்திருக்கிறார். குறிப்பாக கல்யாண ரிசப்ஷன் காட்சிகளின் நீளம், கிளைமாக்ஸ் போன்றவற்றில் யதார்த்தமில்லையென்று தோன்றினாலும் அதை சுவாரசிய நகைச்சுவையின் மூலம் மறக்கடித்திருக்கிறார். பாடல்களை பெருமளவு தவிர்த்திருப்பது, படத்தின் காட்சிகளை குறைத்திருப்பது போன்றவை புத்திசாலித்தனம்.

தமிழ்த் திரையின் நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சிகளுள் முக்கியமானதொன்றாக நகொபகா -வைச் சொல்லலாம். இயக்குநர் பாலாஜி தரணீதரனுக்கு மகிழ்ச்சியுடன் கூடிய பாராட்டு.

suresh kannan

Tuesday, December 18, 2012

Amour / French / வயோதிக காதலும் துயரமும்



தீயணைப்பு வீரர்கள் அந்த வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். துர்நாற்றம். படுக்கையறையில் ஒரு கிழவியின் பிணம். மலர்களால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

Flashback -ல் படம் பயணிக்கிறது. Georges மற்றும் Anne வயதான தம்பதிகள். தனியாக வாழ்கிறார்கள். திருமணமாகி வேறு இடத்தில் வசிக்கும் மகளும் இவர்களுக்கு உண்டு. தம்பதிகள் பரஸ்பர அன்புடன் வாழ்கிறார்கள். அதிலும் Georges, Anne மீது இன்னமும் தீவிரமான காதலுடன் இருக்கிறார் என்பது அவருடைய கண்களிலும் உடல் மொழியிலும் தெரிகிறது. ஒருநாள் கிழவி, இவருடைய கேள்விக்கு பதிலளிக்காமல் சில நிமிடங்கள் உறைந்து அமர்கிறார். 'என்ன விளையாடி பயமுறுத்துகிறாய்?" என்று கோபப்படுகிறார் கிழவர். பிறகு நிகழும் மருத்துவ ஆய்வில் மூளை நரம்புகளில் ரத்தம் உறைந்திருப்பது தெரிகிறது. மருத்துவ சிகிச்சைக்குப் பின் ரொம்பவும் பயந்து விடுகிறார் கிழவி. "இனிமேல் என்னை மருத்துவமனைக்கு செல்ல கட்டயாப்படுத்தாதே" என்று வேண்டிக் கொள்கிறாள். அறுவைச் சிகிச்சை கோளாறாகி முடக்குவாதம் ஏற்பட்டு சக்கர நாற்காலியில் முடங்குகிறாள் கிழவி. ஒரு குழந்தையைப் போல அவளின் அனைத்து தேவைகளையும் வீட்டிலேயே அன்புடன் பூர்த்தி செய்கிறார் கிழவர். 'மருத்துவனைக்கு கொண்டு செல்லாமல் என்ன பைத்தியக்காரத்தனம் இது?" என்று கோபிக்கிறாள் மகள்.

தானே ஒரு வயதானவராய் இருந்தாலும் கிழவியை மிக பொறுமையாக கவனித்துக் கொள்ளும் கிழவரின் பொறுமைக்கு சோதனை ஏற்படுகிறது. அவர் எடுக்கும் விபரீதமான முடிவு என்ன என்பதை திரையில் காணுங்கள்.

பெரும்பாலும் அனைத்துக் காட்சிகளும் ஒரு வீட்டிற்குள்ளேயே நிகழ்கின்றன. அதிலும் ஒரு கிழவர் மற்றும் கிழவியின் நடமாட்டங்கள் மாத்திரமே. அவுட்டோர் காட்சிகளே கிடையாது. மறுபடியும் மறுபடியும் ஒரே பின்னணியையும் நபர்களையும் காட்ட வேண்டிய நிர்ப்பந்தம், இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் சவாலை முன்வைக்கும் வேலை. அவர்கள் திறமையாக சமாளித்திருந்தாலும் சில காட்சிகள் எடிட் செய்யப்பட்டிருக்கலாமோ என்னுமளவிற்கு மிக மிக நிதானமாக, சாவகாசமாக காட்சிகள் நகர்கின்றன. 

ஆனால் அந்த அதிர்ச்சியான உச்சத்தை நோக்கி இயக்குநர் நம்மை மெல்ல மெல்ல நகர்த்திச் செல்வதால்தான் அந்தக் காட்சி பளீரென்று நமக்குள் உறைக்கிறது. என்னால் அந்த உச்சக்காட்சியை முன்பே யூகிக்க முடிந்தாலும், எந்த மாதிரியானதொரு காட்சிக் கோர்வையில் அதை இயக்குநர் நிகழ்த்த விரும்புகிறார் என்பதில்தான் அவருடைய மேதமை நமக்கு விளங்குகிறது. ஒரு காட்சியில் நீரருந்த மறுத்து அடம் பிடிக்கும் கிழவியை எதிர்பாராத தருணத்தில் அறைகிறார் கிழவர். நமக்கு வலிக்கிறது.

எந்த இடத்திலும் நாம் ஒரு திரைப்படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்கிற உணர்வே ஏற்படாது. அந்தளவிற்கு மிக யதார்த்தமாக, இயல்பாக அந்த தம்பதிகளின் நெருக்கமும் அன்பும் அன்னியோன்மும் வெளிப்படுகிறது. இரண்டு பேருமே அற்புதமாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக நோய்வாய்ப்பட்டு மரணத்தை நோக்கி பயணிக்கும் கிழவியின் ஒப்பனை அந்த நோயின் வளர்ச்சி நிலைக்கேற்றவாறு மாறுவது அற்புதமாக இருக்கிறது. படம் மிக நிதானமாக நகர்வதால் சாவகாசமான மனநிலையில்தான் பார்க்க வேண்டும்.

கிழவி மிக மோசமாக நோய்வாய்ப்பட்டிருப்பதாக காட்டப்படும் அடுத்த காட்சியில் ஆரோக்கியமான கிழவி, பியானோ வாசிப்பதாக காட்டப்படுகிறது. கிழவி சுகமாகி விட்டாளோ என்று கூட தோன்றியது. ஆனால் சற்று தூரத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கும் கிழவரின் அகம் தொடர்பான காட்சிப்பிழை என்பது பிறகு புலனாகிறது. இறுதிக் காட்சியின் முன்னோட்டமாக இதைக் கொள்ளலாம். ஜன்னலில் வந்து அமரும் புறாவை முதலில் துரத்தும் கிழவர், பிறிதொரு காட்சியில் பிடிக்க முயல்வதும் கிழவருடைய மனநிலையின் அடையாளங்களே. அனைத்தையும் ஒரு குறிப்பாக கிழவர் எழுதிக் கொண்டிருக்கிறார் என்பது பின்னர் புலனாகிறது.

பூட்டப்பட்ட அறையில் கிழவியின் பிணம்.. கிழவர் என்ன ஆனார்? ...

யாருக்குத் தெரியும்...?
கான் திரைப்பட விழா உள்ளிட்ட பல திரைவிழாக்களில் விருது பெற்ற திரைப்படமிது. 10வது சென்னை சர்வதேச விழாவில் துவக்க திரைப்படமாக திரையிடப்பட்டது. The Piano Teacher, The White Ribbon  உள்ளிட்ட பல சிறந்த திரைப்படங்களின் இயக்குநரான Michael Haneke இதை இயக்கியுள்ளார்.
suresh kannan

Friday, December 14, 2012

10வது சென்னை சர்வதேச திரைப்பட விழா - 2012


மாலை 7.15 மணிக்கு திரையிடப்படுவதாக இருந்த பிரெஞ்சு திரைப்படம், துவக்க விழா சம்பிரதாயங்களின் காரணமாயும் 'அவர்களே, இவர்களே' காரணமாயும் சுமார் 08.30 மணிக்குத்தான் துவங்கியது. யாராவது குத்து விளக்கை இரண்டு நொடியில் ஏற்றி வைத்து விட்டு 'படம் போடப் போறாங்கப்பா' என்று சொல்லி விலகினால் தேவலை. இரவு நேர கடைசி ரயிலை பிடித்து அகாலத்தில் வீடு திரும்ப நேரும் என்னைப் போன்றவர்களுக்கு கடுப்பாய்த்தானிருக்கும். என்றாலும் முதல் நாள் என்பதாலும் துவக்க நாள் திரைப்படமான Amour -ஐ பார்த்தேயாக வேண்டும் என்று தோன்றி விட்டதாலும் இவற்றை சகித்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

என்றாலும் துவக்க நாள் நிகழ்ச்சியின் முக்கியமான நிகழ்ச்சியாக ஏ ஆர் ரகுமானின்  K M Music Conservatory மாணவர்கள் நடத்திய இசை நிகழ்ச்சியை சொல்ல வேண்டும். அசத்தி விட்டார்கள். கவாலி பாடகர்கள் போல் உடையணிந்திருந்த சுமார் 20 மாணவர்கள், மங்கள் பாண்டேயில் வரும் Al Maddath Maula பாடலை அற்புதமாகப் பாடினார்கள். சுஃபி பாணியில் அமைந்திருக்கும் இந்த கவாலிப் பாடலை ஏகாந்தமான நேரத்தில் கேட்டால் உத்தரவாதமாக கண்ணீர் பெருகும். 'ராசாத்தி என் உசுரு என்னுதில்ல (திருடா திருடா) 'ஊர்வசி ஊர்வசி' (காதலன்) பாடல்களை unplugged வெர்சனில் சேர்ந்திசையில் வெவ்வேறு தாளகதிகளில் சில மாணவர்கள் நின்று பாடியது அருமை. ரகுமானி்ன் 'ரோஜா' தருணங்கள் மனதில் நிரம்பி ஒரு நெகிழ்ச்சியை உருவாக்கியது. இன்னும் ஒரு ஹைலைட்டாக ரகுமானின் மகன் சிறிது நேரம் பியானோ வாசித்து காண்பித்தான். ருஷ்ய பியானோ பள்ளியைச் சேர்ந்த இரு மாணவர்கள் வாசித்த இசையும் அருமையாக இருந்தது. 



தமிழ்த் திரை இயக்குநர்கள் சங்கத்தின் பொருளாளர்,இயக்குநர் ஜனநாதன் பேசும் போது 'திரையிடப்படும் படங்களின் அட்டவணையில் தமிழ் படங்களை சேர்க்க வேண்டும்' என்று வைத்த வேண்டுகோளை சுஹாசினி ஏற்றுக் கொண்டதாக தெரிவித்தார். 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' என்கிற காவியங்களை உள்ளிட்ட அந்தப் பட வரிசையை பார்த்தால் சினிமா ஆர்வலர்களுக்கு நிச்சயம் கண்ணீர் வரும். அது சரி. சட்டியில் இருந்தால்தானே எடுப்பதற்கு?.

அமீர் பேசும் போது ஒரு சுவாரசியமான டிராமாவை அரங்கேற்றினார். 'நான் பல உலகப்படவிழாக்களுக்கு போயிருக்கிறேன். அங்கெல்லாம் அந்தப் பிரதேசத்தின் கலாச்சார அடையாளங்களையே வெளிப்படுத்துகிறார்கள். இங்குதான் நிகழ்ச்சி முழுக்க ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து' கூட பாடப்படவில்லை' என்று கைத்தட்டலுக்கான கல்லா கட்ட, சரத்குமார் பேசும் போது இடையில் திடீரென்று தமி்ழ்த்தாய் வாழத்தை பாடி அனைவரையும் எழுந்து நிற்க வைத்து விட்டார்.

"அய்யா, தமி்ழ்க்காவலர்களே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது ஒரு புறம இருக்கட்டும், இது போன்ற சர்வதேச திரைவிழாக்களில் திரையிடும் தரத்திற்கான தமிழ் சினிமாவை முதலில் உருவாக்குங்கள்' என்று கூவ வேண்டும் போலிருந்தது.

'அடுத்த வருடத்திற்கான திரைவிழாவை ஒரே இடத்தில் அமையும் படியான நவீன கலையரங்கை அரசு கட்ட வேண்டும்' என்ற வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அமைச்சர் தன் உரையில் தெரிவித்தார். (இவர் பேச ஆரம்பித்த போது அதுவரை இருந்த சூழல் மாறி மயிலை மாங்கொல்லையில் அமர்ந்திருந்த உணர்வு வந்தது.) கலைவாணர் அரங்கம் அமைந்திருந்த இடத்தில் இந்த நவீன அரங்கம் அடுத்த ஆண்டுக்குள் கட்டப்பட்டு விடுமாம். பார்க்கலாம்.

Amour திரைப்படம் பற்றி அடுத்த பதிவில். 

suresh kannan

Wednesday, December 12, 2012

Rust and Bone - French - சென்னை சர்வதேச திரைப்பட விழா -2012 - 1



13.12.2012 அன்று துவங்கவிருக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கும் திரைப்படங்களில் ஒன்று Rust and Bone. பிரெஞ்சுத் திரைப்படம். குத்துச் சண்டை போட்டியாளன் ஒருவனுக்கும் கால்களை இழந்திருக்கும் ஒரு்ததிக்கும் உள்ள காதலை பிரதானமாகக் கொண்டது.

திடகாத்திரமான உடம்பைக் கொண்ட அலி. தன் ஐந்து வயது மகனுடன் தெற்கு பிரான்சிற்கு வேலை தேடி வருகிறான். அவனுடைய சகோதரி அன்னாவுடன் ஒண்டிக் கொள்கிறான். கிளப்பில் பவுன்சர் வேலை. அங்கு ஸ்டீபன் என்கிற பெண் காயப்பட அவளுடன் அறிமுகம் ஏற்படுகிறது. அவள் திமிங்கலங்களுக்கு பயிற்சியளித்து வேடிக்கை காட்டும் பணியில் இருக்கிறாள். அங்கு ஏற்படும் விபத்தில் தன் இரு கால்களையும் இழக்கிறாள். அலி, தான் முன்னர் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிக் பாக்சிங்கை பணம் சம்பாதிப்பதற்காக பயன்படுத்துகிறான்.

ஸ்டீபன், அலியை ஒரு நாள் அழைக்கிறாள். கால்கள் இல்லாத அவளுக்கு ஆதரவாக இருக்கிறான் அலி. இருவருக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. அலி தன்னுடைய மகனை ஓர் ஆபத்திலிருந்து காப்பாற்றும் முயற்சியில் கைவிரல்களை இழக்கிறான். இறுதியில் அவன் ஒரு சிறந்த கிக் பாக்சராக இருப்பதோடு படம் நிறைவுறுகிறது.

படத்தின் பிரதான விஷயம் அலிக்கும் ஸ்டீபனுக்கும் இடையே உள்ள காதலும் காமமும். முதல் சந்திப்பில் அவளது உடையைப் பார்த்து 'நீ ஒரு பாலியல் தொழிலாளியா?" என்று கேட்கிறான் அலி. பின்புதான் அவள் திமிங்கலங்களுக்கு பயிற்சி அளிப்பவள் என்று தெரியவருகிறது. கால்களை இழந்து தனிமையில் துன்புறும் அவளை வெளியே அழைத்து வந்து கடலில் குளிக்க வைக்கிறான். பின்பு 'தனிமையிலிருக்கும் உனக்கு பாலுணர்வு தோன்றவில்லையா?" என்கிறான். "ஆம். தோன்றுகிறது" என்கிறாள் ஸ்டீபன். தன்னைக் கவரும் பெண்களிடமெல்லாம் பாலுறவு கொள்ளும் அலி, இவளிடமும் அவளின் தேவையை தீர்க்கும் நோக்கத்தில் உறவு கொள்கிறான். தேவைப்படும் போதெல்லாம் தான் "ஆயுத்தமாக' இருக்கும் சமயங்களில் அழை' என்கிறான்.

ஸ்டீபனுக்கு இவனுடைய காமம் முதலில் பிடித்திருந்தாலும் எவ்வித அன்புமில்லாமல் மிருகம் போல் உறவு கொள்கிறானே என்று எரிச்சலாக இருக்கிறது. அவனிடமிருந்து பிரிய நினைக்கிறாள். இதுபற்றி அவனிடம் உரையாடும் போது அவன் எவ்வித உறவுச் சிக்கலிலும் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை போல் தோன்கிறது. 


படத்தில் வரும் ஒரு சிறந்த காட்சி: அலியும் ஸ்டீபனும் கிளப்பிற்கு செல்கிறார்கள். அங்கு நடனமாடும் ஒரு பெண்ணால் கவரப்பட்டு அலி அவள் பின்னால் போய் விடுகிறான். ஸ்டீபன் வெறுப்பில் அமர்ந்திருக்கிறாள். அப்போது அங்கு வரும் ஒருவன் ஸ்டீபனுக்கு மது வாங்கித் தருகிறான். காம நோக்கோடு அழைப்பு விடுக்கிறான். ஸ்டீபன் 'எனக்கு இப்போது அந்த உணர்வு இல்லை' என்று விலகுகிறாள். அப்போதுதான் அவளுடைய செயற்கைக் கால்களை பார்க்கும் அவன் "மன்னிக்கவும், தெரியாமல் உன்னை அழைத்து விட்டேன்" என்கிறான். ஸ்டீபன் பயங்கர ஆத்திரத்துடன் அவனைத் தாக்குகிறாள். மாற்றுத் திறனாளிகளை வெற்று அனுதாபத்துடனும் அயல்கிரக ஜீவிகளைப் போலவும் அணுகும் பொதுப்புத்தியை இந்தக் காட்சி விமர்சிக்கிறது.

அலியின் நண்பரொருவர், ஷாப்பிங் மால் முதலாளிகளின் ஆணைப்படி ஊழியர்களை ரகசியமாக கண்காணிக்க கேமராக்களை பொருத்துகிறார். அவருடன் பணிபுரிய நேரும் அலி,  'இது சட்ட விரோதமில்லையா?," என்று கேட்கிறான். 'சட்டம் என்பதன் அர்த்தமென்ன? என்று கேட்கிறார் நண்பர். இந்தக் கேமராவினாலேயே அலியின் சகோதரிக்கு வேலை பறி போவது ஒரு நகைமுரண்.

கிக் பாக்சிங் சண்டைக்காட்சியில் அலியின் ஒரு பல் மாத்திரம் குருதியோடு தெறித்து விழும் ஒரு குளோசப் காட்சி ஆயிரம் வன்முறைக் காட்சிகளுக்கு ஈடாக இருக்கிறது. குத்துச் சண்டையில் வெறியோடு சக போட்டியாளர்களை அடித்து வீழ்த்தும் அலியின் திறமை, அலியின் மகன் பனிக்கட்டியின் கீழ் மாட்டிக் கொண்டு உயிருக்குப் போராடும் போது பனிக்கட்டிகளை கைகளினால் உடைத்து அவனை மீட்பதற்கும் பயன்படுகிறது. ஒரு பர்த்திரத்தின் பிரதான திறமையை அல்லது பணியை சிக்கலான சூழ்நிலைக்குப் பொருந்துமாறு திரைக்கதை அமைப்பதின் நுட்பமிது.

தன் மகன் உயிராபத்திலிருந்து மீளும் அந்த தருணத்தில்தான் ஸ்டீபன் மீதுள்ள காமத்தைத் தாண்டிய காதலை அலியால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஸ்டீபனாக Marion Cotillard மிகச் சிறப்பாக நடித்திருக்கிறாள். இவரின் துண்டிக்கப்பட்ட கால்கள் தொடர்பான காட்சிகள் நம்பவே முடியாத அளவிற்கு சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. கால்களை மடித்து வைத்திருக்கும் அதே உத்திதான் என்றாலும் கணினி நுட்பம் மூலமாக உண்மையாகவே கால்களை இழந்த தோற்றத்தினை மிகச் சிறப்பாக கொண்டு வந்திருக்கின்றனர். படத்தைப் பார்க்கும் போது நீங்களே அதை உணர்வீர்கள். அலியாக நடித்திருக்கும் Matthias Schoenaerts-ம் சிறப்பாக நடித்திருக்கிறார். இவரது மகனாக வரும் சாமும், சினிமா சிறுவனைப் போல் அல்லாமல் இயல்பான ஒரு சிறுவனைப் போலவே உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறான்.

 Craig Davidson-ன் சிறுகதை தொகுதியை அடிப்படையாகக் கொண்டு இயக்கியிருக்கிறார் Jacques Audiard. 2009-ல் சிறந்த படமாக பேசப்பட்டA Prophet -ன் இயக்குநர் இவர். கான் திரைப்பட விருதில் நாமினேஷன் பட்டியலில் இருந்தது.

இந்த வருட சர்வதேச திரைவிழாவில் தவற விடக்கூடாத திரைப்படங்களில் இது ஒன்றாக இருக்கும்.
 
suresh kannan

Tuesday, December 11, 2012

உலக சினிமா பேருரைகள் - எஸ்.ரா மற்றும் உயிர்மைக்கு நன்றி



ஏழு நாட்கள். உலக சினிமாவின் ஏழு சிறந்த கலையாளுமைகள். தினமும் சுமார் இரண்டரை மணி நேர உரை. அரங்கு நிறைந்த பார்வையாளர்கள், ஆர்வமுள்ள சினிமா ஆர்வலர்கள்.பெரும்பாலும் இளைஞர்கள். முதியவர்கள். ஒன்றிரண்டு பெண்கள். உயிர்மை பதிப்பகம் ஒழுங்கு செய்திருந்த உலக சினிமா பேருரையில் கலந்து கொண்ட அனைவரும் உரை நிறையும் வரையில் அமைதியாகவும் ஆர்வமாகவும் ரசித்தார்கள். (அரங்கு நிறைந்து நின்று கொண்டே நிகழ்வை கேட்டவர்களும் இதில் அடக்கம்).

சினிமா ரசனை என்பதை கல்வித்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று இயக்குநர் பாலுமகேந்திரா இடைவிடாது தனியாளாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு சமூகத்தில் அரசியல்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என்பது யதார்த்த உண்மை என்றால் நம் சமூகத்தில் அரசியல் தலைவர்களை சினிமாதான் தீர்மானிக்கிறது என்பது கசப்பான உண்மை. நம்மை ஆள்பவர்களை சினிமாவிலிருந்து தேர்ந்தெடுக்கும் அளவிற்கு சினிமா இங்கு வலிமையான ஊடகமாக திகழ்கிறது. அத்தகையான வலிமையான ஊடகம் எத்தனை மோசமாக அழுகிக் கிடக்கிறது என்பதை சினிமா ஆர்வலர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இருந்தும் வெகுஜன ரசனை இன்னமும் துப்பாக்கி, மாற்றான் போன்ற அரைவேக்காட்டு குப்பைகளிலேயே மூழ்கிக் கிடக்கிறது. இந்த ரசனை மாறினால் சமூக மாற்றத்தில் சினிமாவும் பங்கும் மகத்தானதாக இருக்கும்.

பாலுமகேந்திரா குறிப்பிடுவது பள்ளி மாணவப்பருவத்திலேயே சினிமா ரசனையை உயர்த்துவதற்கான ஆலோசனை. ஆனால் வளர்ந்தவர்களுக்கு?...

சினிமா இயக்கங்களும், அமைப்புகளும், சினிமா மீது ஆர்வம் கொண்ட தனிநபர் முயற்சிகளும், நல்ல சினிமாவைப் பற்றி தொடர்ந்து பேசும், எழுதும் படைப்பாளிகளின் பங்குதான் இங்கு முக்கியமானதாகிறது. எஸ்.ராவின் பேருரையும் அத்தகைய முயற்சிகளில் ஒன்றாகத்தான் பார்க்கிறேன்.

நான் முந்தைய ஒரு பதிவில் குறிப்பிட்டபடி ஓர் இயக்குநரைப் பற்றிய அறிமுகத்தை, அவரின் சிறந்த படங்களை, மிகச் சிறந்த காட்சிக் கோணங்களை தன் வாழ்வின் பல மணி நேரங்களை செலவழித்து அவதானித்ததை ரசனையோடு இரண்டரை நேரத்தில் நம்மோடு பகிர்வதென்பது சிறப்பான விஷயம். ஏற்கெனவே நமக்கு அறிமுகமான விஷயங்கள் என்றாலும் அதை ஒரு விமர்சகரின் பார்வையில் கேட்டு நம்முடைய அனுபவத்தோடு ஒப்பிட்டு அது ஒத்திருந்தால் நம்மை நாமே பாராட்டிக் கொண்டு அல்லது விமர்சகரின் கோணத்தில் காட்சியின் புதிய பரிமாணங்களை அறிவதென்பது போன்று பல விஷயங்கள் நிகழ்கின்றன.

குறிப்பாக சத்யஜித்ரே -வின் ஜல்சாகர் (The Music Room) படத்தினைப் பற்றி எஸ்.ரா. விவரித்த விதம் அத்தனை அருமை. நொடித்துப் போன நிலையிலும் தன்னுடைய வறட்டுக் கெளரவத்தை, கம்பீரத்தை இழக்க விரும்பாத ஒரு ஜமீந்தாரைப் பற்றின திரைப்படம். சில வருடங்களுக்கு முன்பு பார்த்ததை மீண்டும் பார்க்க விரும்பும் ஓர் ஆவலை ஏற்படுத்தினது எஸ்.ராவின் விவரிப்பு. இவ்வாறு பல திரைப்படங்கள்.

பணிப்பளு காரணமாக என்னால் பெர்கமன், பெலினி, சாப்ளின் போன்றவர்களை தவற விட நேர்ந்தது ஒரு சோகம்.

துவக்க விழாவின் போது பாலுமகேந்திரா குறிப்பிட்டதைப் போல சமகால உலக சினிமா இயக்குநர்களைப் பற்றியும் இவ்வாறான அறிமுகங்களும் ரசனை பரிமாற்றல்களும் நிகழ வேண்டியது அவசியம்.

சுவாரசியமான மற்றும் உபயோகமான அனுபவத்தை அளித்த எஸ்.ராவிற்கும் உயிர்மைக்கும் நன்றி.

suresh kannan

Saturday, December 08, 2012

உலக சினிமா பேருரை - பிரான்சுவா த்ருபோ

துவக்க நாளின் சம்பிரதாயங்கள் அல்லாமல் நிகழ்ச்சி நேரடியாக  துவங்கியது. பார்வையாளர்களுடனான கலந்துரையாடல் குறித்த வேண்டுகோள்  சாத்தியப்படாது என்பதால் இந்த நிகழ்வு குறித்து பார்வையாளர்களுக்கு எழும் கேள்விகளை அவரது மின்னஞ்சலுக்கு (writerramki@gmail.com)  அனுப்பி கேட்கலாம் என்றார் எஸ்.ரா.

"ஏன் இந்த திரைப்படங்களை விட்டு விட்டீர்கள், இந்த விஷயத்தை விட்டு விட்டீர்கள்' என்று பார்வையாளர்களிடமிருந்து பல கேள்விகள் வருகின்றன. இது உலக சினிமா மற்றும் இயக்குநர்கள் குறித்தான அறிமுகத்தை ஏற்படுத்துவதற்கான நிகழ்வு என்பதால் ஒரு பருந்துப் பார்வையில்தான் எனது உரை இருக்கும். மற்றபடி ஒவ்வொரு திரைப்படத்தையும் பற்றியுமே இரண்டு மணி நேரத்திற்கு உரையாடுமளவிற்கான விஷயங்கள் இருக்கின்றன. அதற்கான கால அவகாசமில்லை"


பின்பு பிரெஞ்சு சினிமாவின் முக்கியமான திரையாளுமையான பிரான்சுவா த்ருபோ பற்றிய உரை.

இரண்டாம் உலகப் போருக்கு பின்பு இத்தாலியில் தோன்றிய 'நியோ ரியலிசத்தின்' பாதிப்பில் பிரான்சிலும் 'புதிய அலை' இயக்கம் தோன்றியது. த்ருபோ அதன் முன்னோடிகளில் ஒருவர். தொழில்முறை சாராத நடிகர்கள், அரங்குகளைத் தவிர்த்து தெருக்களில் காட்சிகளை பதிவு செய்வது, நாடகத்தனத்தை விலக்கி சாதாரண மக்களைப் பற்றின 'மக்களுக்கான சினிமா'வை உருவாக்குவது போன்றவை இதன் பாணி.

ஒருவனின் பால்ய வயதுகளில் நிகழும் அனுபவங்களே அவனது பிற்கால ஆளுமையை வடிவமைக்கிறது என்பது உளவியல் உண்மை.

த்ருபோவின் தந்தை யாரென்றே அவருக்குத் தெரியாது. (பின்பு துப்பறியும் நிறுவனம் ஒன்றின் மூலம் இதைக் கண்டுபிடித்தார்). தாயும் அவரை சரியாக வளர்க்காமல் போக தாதிகளிடமும் பாட்டியிடமும் வளர்ந்தார். இந்தத் தனிமையும் அன்பிற்கான ஏக்கமும் த்ருபோவின் பெரும்பாலான படங்களில் பிரதிபலித்தன. பள்ளிக் கூடத்தில் கல்வியை வெறுத்து பல முறை வீட்டை விட்டு ஓடிப் போக முயற்சித்து பிடிபட்டார். வீட்டைச் சுற்றி அமைந்திருந்த திரையரங்குகள்தான் த்ருபோவிற்கு பெரும் ஆறுதலாக இருந்தன. ஒரு முறை வீட்டில் டைப்ரைட்டரை திருட, அவரின் வளர்ப்புத் தந்தை காவல்துறையிடம் புகார் செய்ய ஒரு நாள் லாக்கப்பில் இருக்க நேர்ந்தது. பின்பு சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

(இந்த ஒரு நாள் சிறை அனுபவம் ஹிட்ச்காக்கிற்கும் நேர்ந்தது. குறும்புச் சிறுவனாக இருந்த காரணத்தினால் ஹிட்ச்காக்கின் தந்தை அவரை ஒரு நாள் போலீஸ் லாக்கப்பில் இருக்கச் செய்தார். இந்த ஆழ்மன அனுபவம் பின்னாளில் ஹிட்ச்காக்கின் திரைப்படங்களில் எதிரொலித்தது. காவல்துறை என்றாலே பதட்டம் கொள்ளும் சாதாரணன் ஒருவன் செய்யாத தவறுக்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் சம்பவங்கள் பல படங்களில் வரும்).

வீட்டை விட்டு ஓடிப் போகும் சிறுவர்களைப் பற்றி பேசும் போது எஸ்.ரா தன்னுடைய சுயஅனுபவத்தையும் நகைச்சுவை பொங்க விவரித்தார். ஓடிப்போவதில் உள்ள முன்னோடியாக அவனின் நண்பனொருவன் 'எம்.ஜி.ஆரை' பார்க்க சென்னைக்கு போகும் நோக்கத்தில் தவறுதலாக நாகர்கோவில் ரயிலில் ஏறி பின்னர் பிடிபடுகிறான். பின்பு எஸ்.ராவையும் அந்த நண்பன் உசுப்பேற்ற இவரும் வீட்டை விட்டு ஓடிப் போகிறார். நண்பனைப் போலவே இவரும் தவறுதலாக நாகர்கோவில் சென்று விடுகிறார். (ஜெயமோகனை சந்திக்க வேண்டும் என்கிற ஆவல் அப்போதே ஏற்பட்டிருக்குமோ).

நானும் இது போல் இரண்டொருமுறை வீட்டை விட்டு ஓடிப் போயிருக்கிறேன். எஸ்.ரா -விற்கு இருந்தது போலவே எனக்கும் ஒரு முன்னோடி நண்பனொருவன் இருந்தான். ஓர் அதிகாலையில் கிளம்பி விட்டோம். இப்போது யோசிக்கையில் சில கிலோமீட்டர்களே நடந்த அந்த வரலாற்று பயணம் அப்போது நீண்ட தொலைவைக் கடந்து விட்ட உணர்வைத் தந்தது. மதியத்திற்குப் பிறகு கடுமையான பசி. வேறு வழியில்லாமல் வீட்டுக்குத் திரும்ப முடிவு செய்தோம். ஆனால் தொலைந்து போனதற்கு என்ன காரணம் சொல்வது? நண்பன் பேய் முழி முழிக்க, நான் ஒரு 'கதையை' உருவாக்கினேன்.

அதன் படி என்ன நிகழ்ந்தது என்றால்.. இருவரும் தெருவில் நின்று கொண்டிருந்தோம். ஒருவர் வந்து ஏதோ விலாசம் விசாரித்தார். நாங்கள் உதவப் போக அவர் எங்களை வண்டியில் ஏற்றி வைத்து வேகமாக ஓட்டிச் சென்றார். நெடுந்தொலைவு சென்ற பிறகு உணவகத்தில் சாப்பிட இறங்கினார். நாங்கள் 'சாமர்த்தியமாக' தப்பி' வந்துவிட்டோம்..

நான் இதை கச்சிதமாக சரியான முகபாவங்களோடு விவரிக்க வீட்டிலும் நம்பி விட்டார்கள். (ஆனால் நம்புவதாக பாவனை செய்தார்களோ என்று இப்போது தோன்றுகிறது). எனக்குள் ஒரு கதை சொல்லி இருக்கிறான் என்பதை கண்டு கொண்ட தருணமது. எஸ்.ரா மறுநாள் வீடு திரும்பும் போது அவர் தொலைந்து போனதைக் கூட யாரும் உணரவில்லை. ஆறு சகோதரர்கள் என்பதால் யார் எந்த நேரத்தில் வீட்டில் இருப்பார்கள் என தெரியாது. 'எங்கேடா போயிருந்தே' என்று சாதாரணமாக கேட்டு விட்டு விட்டார்கள். ஆனால் என்னுடைய அனுபவம் வேறாக இருந்தது. வீட்டில் யாருமே அன்று சாப்பிடவில்லை. சமைத்த உணவு அப்படியே இருந்தது. அன்று என்ன உணவு என்பது கூட இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் இருந்த காரணத்தால் ஏற்பட்ட தொண்டை வலியுடன் சிரமப்பட்டே சாப்பிட்டேன்.

த்ருபோவிற்கு திரும்புவோம்..

தினமும் மூன்று சினிமா, புத்தகங்கள் என்றிருந்த  த்ருபோவிற்கு மிகச் சிறந்த வழிகாட்டியாய் இருந்தவர் André Bazin. சினிமா தொடர்பாக பல கட்டுரைகளையும் காரசாரமான விமர்சனங்களையும் எழுதினார் த்ருபோ. அவரது ஆதர்சங்களில் ஒருவரான ஹிட்ச்காக்குடன் அவர் நிகழ்த்திய நீள்நேர்காணல் மிகவும் புகழ் பெற்றது. சில குறும்படங்களை உருவாக்கின பிறகு திரைப்படங்களை இயக்கத் துவங்கினார். அவரின் முதல் படமான The 400 Blows மிகவும் புகழ் பெற்றது. த்ருபோவின் பால்ய வயதின் கசப்பான அனுபவங்களையே பெரிதும் இதில் படமாக்கினார். தன்னுடைய ஆருயிர்த் தோழனான Robert Lachenay- உடன் செய்த குறும்புகளையும். 



The 400 Blows-ல் வரும் சிறுவனுடைய பாத்திரத்தின் பெயர் Antoine Doinel. இந்தப் பாத்திரத்தையே அதன் வெவ்வேறு வளர்ச்சி நிலைகளில் தனது அடுத்தடுத்த திரைப்படங்களில் (Antoine and Colette, Stolen Kisses, Bed and Board, Love on the Run) பாத்திரமாக உருவாக்கினார். இப்படி ஒரே பாத்திரத்தையே அடுத்தடுத்த திரைப்படங்களில் உருவாக்கியது புதிய முயற்சி. அதற்குப் பிறகும் இதுவரை அப்படி நடக்கவில்லை. இந்த திரைப்படங்களில் அனைத்திலும் தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த காதல்/மண வாழ்க்கை சம்பவங்களையே படமாக்கினார். இதுவே பின்னர் 'Antoine Doinel' பாணி என்று புகழ்பெற்றது. இத்தாலிய இயக்குநர்களின் பாதிப்பில் 'நியூ வேவ்' திரைப்பட இயக்கத்தை துவங்கிய த்ருபோ, தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களை பின்பற்றினார் எனலாம். அந்தளவிற்கு த்ருபோவிடம் வாழ்க்கையில் பல காதல்கள் இருந்தன.

த்ருபோவின் சமகால இயக்குநரும் நண்பருமான கோடார்ட் த்ருபோவின் படங்களை காரசாரமாக விமர்சிப்பார். த்ருபோவுடன் இணைந்து எழுதி கோடார்ட் இயக்கிய முதல் திரைப்படம் 'Breathless'. ஜம்ப் கட் உள்ளிட்ட பல உத்திகள் இதில் முதன் முதலில் உருவாகியது.

த்ருபோவின் இன்னொரு முக்கியமான திரைப்படம் Fahrenheit 451. இது த்ருபோவின் முதல் வண்ணத் திரைப்படம் மற்றும்  ஆங்கிலத்தில் இயக்கிய ஒரே திரைப்படம். அறிவியல் புனைவு போன்றது. நகரில் உள்ள அனைத்து புத்தகங்களும் அழிக்கப்படுகின்றன. புத்தகங்களை ஒளித்து வைத்திருப்பவர்களின் வீடுகளில் தேடி அழிக்கும் பணி தீயணைப்புத் துறையிடம் தரப்படுகிறது. அவ்வாறு ஒளித்து வைத்திருப்பவர்களுககு தண்டனையும் கிடைக்கிறது. Guy Montag என்கிற தீயணைப்பு அதிகாரி இவ்வாறு புத்தகம் அழிப்பதில் தீவிரமாக பணியாற்றி மேலதிகாரிகளிடம் பாராட்டுப் பெறுகிறான். இவ்வாறான தேடலி்ன் போது ஒரு பெண் வீடு முழுக்க புத்தகத்தை வைத்திருக்கிறாள். தீயணைப்பு அதிகாரிகள் புத்தகங்களை தீயிட்டு அழிக்கும் போது அந்தத் தீயில் விழுந்து உயிரை விடுகிறாள்.

Guy Montag -ன் பக்கத்து வீட்டிலிருக்கும் ஓர் ஆசிரிய பெண்மணி "நீ இத்தனை புத்தகங்களை அழிக்கிறாயே, ஒரு நாளாவது புத்தகத்தை வாசித்திருக்கிறாயா?" என்று கேட்கிறாள். அந்த தூண்டுதலில் சார்லஸ் டிக்கன்ஸின் நாவலை வாசிக்கிறார். அது மிகவும் பிடித்துப் போக, தான் புத்தகங்களை எரிக்க (வேட்டையாட) செல்லுமிடங்களில் எல்லாம் மிகச் சிறந்த புத்தகத்தை எடுத்து வந்து வாசிக்கிறார். இதுவே பழக்கமாகி மற்றவர்களைப் போலவே தானும் தன் வீட்டில் புத்தகங்களை மறைத்து வைக்கிறார். இதை அவரின் மனைவி காட்டிக் கொடுக்க அவர் வீட்டிலும் தேடுதல் துவங்குகிறது. தண்டனைக்குப் பயந்து நகரத்தை விட்டு விலகிப் போகிறார். அங்கு சில மனிதர்களைச் சந்திக்கிறார். அவர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொரு புத்தகத்தை மனப்பாடமாக பதிந்து வைத்திருக்கிறார்கள். அதாவது ஒவ்வொரு மனிதனுமே ஒவ்வொரு புத்தகமாக புதினமாக இருக்கிறார்கள்.

புத்தகங்களின் முக்கியத்துவத்தைப் பற்றியும் அதன் அழிவின்மை பற்றியும் Fahrenheit 451 மிக அழுத்தமாக விவரிக்கிறது.

இத்தாலிய நியோ ரியலிசம் பற்றி எஸ்.ரா பேசும் போது அந்த இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான ருசோலினி பற்றியும் அவரின் தீராக்காதல்கள் பற்றியும் உரையாடியது சுவாரசியம்.


suresh kannan

Wednesday, December 05, 2012

எஸ்.ராமகிருஷ்ணன் எனும் டிராகுலா



எந்தவொரு உலக சினிமாவைப் பற்றியும் யாராவது பரிந்துரைத்தால் உடனேயே கவனமாக குறித்துக் கொள்வேன். அதிலும் ஒத்த அலைவரிசையுள்ளவர்களின் பரிந்துரை என்றால் பொக்கிஷம்தான். ஏனெனில் ஒருவர் சராசரியாக ஐந்தாறு திரைப்படங்களைப் பார்த்து விட்டுதான் அதில் சிறந்ததொன்றாக கருதுவதை மற்றவருக்கு பரிந்துரைப்பார். எனில் நாம் நேரடியாக அந்த சிறந்தததை தேர்வு செய்து மற்ற படங்களை தவிர்ப்பதின் மூலம் நம் உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்தானே?. அந்த வகையில் எஸ்.ரா தனது கட்டுரைகளில் குறிப்பிடும் ஒவ்வொரு திரைப்படத்தையும் எப்படியாவது பார்த்துவிட முயல்வேன். பெரும்பாலும் அவரின் பரிந்துரைகள் என்னை ஏமாற்றியதில்லை. சுஜாதாவால் தூண்டப்பட்டு பின்பு ஒரு கட்டத்தில் எனக்குள் அணைந்து போயிருந்த உலகசினிமா பற்றின ஆர்வம்  மறுபடி ஏற்படுவதற்கு பிரதான காரணம் எஸ்.ரா. அவரின் கலை சார்ந்த தேடலும் அதற்கான உழைப்பும் வெளிப்பாடும் எப்போதும் நான் பிரமிக்கும் விஷயம்.

அப்படியானவர் உலக சினிமாவின் மகத்தான ஆளுமைகள் பற்றி ஆற்றப்போகும் உரைகளை நிச்சயம் தவறவிடக்கூடாதென முடிவு செய்தேன். ஏனெனில் அந்த ஆளுமை குறித்து தனது வாழ்நாள் முழுதும் தேடியடைந்த அனுபவங்களை தொகுத்து சாரமாக தரவிருக்கும் முக்கியமான தருணத்தை இழக்க விரும்பவில்லை. சினிமாவைப் பற்றின ஆங்கில நூற்களிலும் இணையத்திலும் இவ்விவரங்கள் கிடைக்கும்தான் என்றாலும் ஒரு தீவிர சினிமா ஆர்வலரின், விமர்சகரின் தனிமனித அனுபவத்தோடு இணைந்து கிடைப்பது முக்கியமானது. ஓர் உலக சினிமாவை தனியறையில் அமர்ந்து பார்ப்பதற்கும் அதே ரசனையுள்ளவர்கள் உள்ள அரங்கத்தில் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசமிது.

முதலில் பாலுமகேந்திரா பேசினார். 'சினிமா ரசனையை' பள்ளிக் கல்வித்திட்டத்தில் சோக்க வேண்டும் என்கிற அவரது வழக்கமான முறையீட்டை இங்கும் வெளிப்படுத்தினார். இது குறித்து சினிமாத் துறையிலிருந்து தொடர்ந்து ஒலிக்கிற ஒரே குரல் பாலுமகேந்திராவுடையது மாத்திரமே. தமிழ்ச் சமூகத்தில் சினிமா எத்தனை வலிமையான ஊடகம் என்ற முறையில் அவரது முறையீடு மிக முக்கியமானது. அரசியல்வாதிகள் யாரும் அவரது முறையீட்டை தீவிரமாக பரிசீலிக்கவில்லை என்கிற அவரது ஆதங்கம் நியாயமானது. உலக சினிமா குறுந்தகடுகளின் மூலம் நம்மை ரொம்பவும் நெருங்கி வந்து விட்டது என்பதை உணர்த்த ஷாப்பிங் மாலில் அவர் வாங்கியதை விளக்கிய 'கால் கிலோ தக்காளி, நூறு கிராம் பச்சை மிளகாய்' ஒரு Citizen Kane  டிவிடி' என்கிற படிமம் சுவாரசியமாக இருந்தது. எஸ்.ரா, சமகால உலக சினிமா இயக்குநர்களைப் பற்றியும் பேச வேண்டும் என்பதை ஒரு வேண்டுகோளாக வைத்தார்.

பின்பு பேசிய யூடிவி தனஞ்செயன், சினிமா,இலக்கியம், விழா,பயணம்.. என்று பல்வேறு துறைகளில் ஈடுபடுகிற எஸ்.ராவிற்கு எப்படி நேரம் கிடைக்கிறது என்று வியந்தார். இது குறித்து எனக்கும் பிரமிப்பு உண்டு. புத்தகக் காட்சியில் ஒரு முறை எஸ்.ராவை சந்தித்த போது இது குறித்து கேட்டேன். ஒரு நாளை, ஒரு மாதத்தை, ஓர் ஆண்டை எப்படி அவர் திட்டமிடுகிறார் என்று கேட்க ஆச்சரியமாக இருந்தது. (இடையில் ஷட்டில் காக்கும் விளையாடுகிறாராம்).

தனஞ்செயன் அத்தோடு மேடை இறங்கியிருந்தால் நல்லதாகப் போயிருக்கும். அரங்கின் வெளியில் உலக சினிமாக்களின் டிவிடிகள் ரூ.50·-விலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. "உயிர்மை நடத்தும் விழாவில் எப்படி இவ்வாறு Pirated டிவிடிக்களை அனுமதிக்கலாம்?..உயிர்மை பதிப்பக நூற்களை எவரேனும் நகல் செய்து விற்றால் எப்படியிருக்கும்?" என்று பொறிந்து தள்ளி விட்டார். அவர் மேடையிறங்கின பிறகு மனுஷ்யபுத்திரன் இதற்கு அமைதியாக ஆனால் சரியான பதிலடி தந்தார். "தமிழ்த் திரை இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தங்கள் படங்கள் எந்தெந்த உலக சினிமாக்களிலிருந்து நகல் செய்யப்பட்டிருக்கின்றன என்பதை தெரிவித்தால் நன்றாக இருக்கும். கோடிகளில் இயங்கும் தமிழ்த் திரை இந்த அறத்தை காப்பாற்றுவது முக்கியமானது." என்கிற ரீதியில் பேச அரங்கில் ஓரே ஆரவாரம்.

எஸ்.ராவும் தனது உரையில் இந்த விஷயத்தை தொட்டுச் சென்றார். "நானும் அப்படியாக குறைந்தவிலையில் டிவிடி பார்த்தவன்தான். துரதிர்ஷ்டவசமாக இங்கு உலக சினிமாவை அரங்கில் அனுமதிச் சீட்டு பெற்று பார்க்கும் சூழலே இல்லை. அதற்கான அரங்குகளும் இல்லை. உலக சினிமா குறுந்தகடுகளும் நியாயமான விலையில் கிடைக்கும்படியாகவும் இல்லை. இவையெல்லாம் முறைப்படுத்தப்பட்டால் கள்ள நகல்களின் அவசியமிருக்காது. அது தவறுதான், நியாயப்படுத்த முயலவில்லை."
.
மேலேயுள்ள படத்தில் என்னை சரியாக கண்டுபிடிப்பவர்களுக்கு ரஷோமான் டிவிடி அன்பளிப்பாக அனுப்பி வைக்கப்படும்.
எனக்கும் இவ்வாறான குறுந்தகடுகளை பயன்படுத்துவதில் ஓர் உறுத்தல் உண்டுதான் என்றாலும் வேறு வழியில்லை. ரேவின் படங்களின் மீது பைத்தியமாக அலைந்த காலத்தில் நான் நீண்ட ஆண்டுகளாக தேடிக் கொண்டிருந்த 'மகாநகரை' ஒரு வணிக அரங்கில் கண்டேன். விலை ரூ.600·- எனக்கு அப்போதைய மாதச் சம்பளமே ரூ.500/-தான். ஒரு கணம் அதை திருடி விடலாமா என்று கூட தோன்றியது. தைரியமில்லாத காரணத்தினால் வெளியே வந்து விட்டேன். எந்தவொரு உண்மையான கலைஞனும் வணிகக் காரணங்களைத் தாண்டி தமமுடைய படைப்புகள் உலகெங்கிலும் பரவலாக சென்று சேர வேண்டும் என்றுதான் விரும்புவான். ஹீப்ரு மொழியில் வெளியாகும் ஒரு திரைப்படத்தை அந்த இயக்குநர் கேள்வியே பட்டிராத வட சென்னையில் உள்ள நான் பார்ப்பது அறிந்தால் நிச்சயம் மகிழ்ச்சியும் ஆச்சரியமும்தான் கொள்வார். கள்ள நகல்களின் மூலமாகவாவது நம் சமூகத்தின் சினிமா ரசனை சிறிதாவது மாறினால் அது நம் சூழலுக்கு நல்லதே. அதிலுள்ள வணிக இழப்பு நிச்சயம் அதை விட குறைவே.

()

சுமார் இரண்டு மணி நேரம் எவ்வித தடங்கலும் இடையூறுகளுமின்றி எஸ்.ரா பேசினார். நூற்றுக்கணக்கான சிறந்த இயக்குநர்கள் இருந்தாலும் தான் பேச தேர்ந்தெடுத்தி்ருக்கும் ஏழு சினிமா கலை ஆளுமைகள் குறித்தான காரணத்துடன் துவக்கினார். இந்திய சினிமா நூறு ஆண்டுகளை கொண்டாடப் போகும் இந்தக்க கட்டத்தில், காலத்தை கடந்து நிற்கும், எப்போதும் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்களை பதிவு செய்திருக்கும் சினிமா பேராசான்களை தன்னுடைய ரசனை அடிப்படையில் தேர்ந்தெடுத்ததைப் பற்றி விளக்கினார்.

பின்பு ஆரம்பித்தது அகிராவுடனான பயணம்.

பூஞ்சையான சிறுவனான அகிராவின் இளமைப்பருவம், ஓவிய ஆர்வம், ஜப்பானிய சினிமாவின் தோற்றம், அகிரா சினிமாவில் நுழையும் போது இருந்த பிரபல ஜப்பானிய இயக்குநர்கள்..Yasujirō Ozu, Kenji Mizoguchi, அகிராவின் குருநாதர் Kajirō Yamamoto, தொடர்ந்து 17 படங்களுக்கு இவரிடம் உதவியாளராக இருந்து கற்ற பயணம், அகிரா சினிமா உத்திகள், படமெடுக்கும் விதம், முக்கியமான ஷாட்கள், அகிராவின் படங்களில் உள்ள தத்துவம், ரஷோமான், செவன் சாமுராய், மதோதயா போன்ற திரைப்படங்களில் உள்ள அடிப்படையான விஷயங்கள், அகிராவின் தோல்வி, தற்கொலை முயற்சி, ஹாலிவுட் இயக்குநர்களின் வரவேற்பில் மீண்டு வந்த கதை, அவர் எழுதிய சுயசரிதம் (இதைப் பற்றி இங்கு எழுதியிருக்கிறேன்) போன்றவற்றைப் பற்றி எஸ்.ரா ஆற்றிய உரை உன்னதமானது. அதைக் கேட்டுதான் அதன் முக்கியத்துவத்தை உணர முடியும்.

ஜப்பானிய சினிமாக்களும் அகிராவின் படங்களைப் பார்த்த நினைவுகளும் என் மூளையில் நிரம்பி வழிந்தன. எஸ்.ரா என்னும் டிராகுலா என்னைக் கடித்து வைத்ததின் பயன் உடனே தெரிந்தது. சுரம் வந்தவன் போல் திரும்பி வந்தேன். இதை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நள்ளிரவில் அகிரா படங்களின் சில காட்சிகளை தேர்ந்தெடுத்து பார்ப்பதின் மூலம்தான் ஒரளவிற்காவது அந்த சுரத்திலிருந்து வெளிவர முடியும். 
imagecourtesy: 
https://www.facebook.com/media/set/?set=a.562891600403422.147573.100000477613498&type=1

suresh kannan

Monday, December 03, 2012

நீர்ப்பறவை


இயக்குநர் சீனு ராமசாமியின் முந்தைய திரைப்படமான 'தென்மேற்கு பருவக்காற்றை' பார்த்திராத, இயக்குநரைப் பற்றின எவ்வித அறிமுகமுமில்லாத நிலையில் 'நீர்ப்பறவை'யை ஓர் வெற்றான மனநிலையில் பார்க்கச் சென்றிருந்தேன். ஒரு நல்ல புதினத்தை வாசித்த உணர்வை திரைப்படம் தந்திருந்தாலும் திரைக்கதையை இன்னமும் நவீனமான மொழியிலும் சுவாரசியத்திலும் சொல்லியிருந்தால் படம் இன்னமும் சிறப்பாக அமைந்திருக்கும். பார்வையாளர்களை படத்தில் தொடர்ந்து கவனம் செலுத்த வைக்கும் ஒரு வலுவான கொக்கியில்தான் படம் துவங்குகிறது.

'உயிரோடு இருக்கிறானா, அல்லவா' என்ற நிலைமை தெரியாத, கடலுக்குள் காணாமற் போன கணவனுக்காக பல வருடங்களாக கடற்கரையில் காத்திருக்கும் எஸ்தரோடு படம் துவங்குகிறது. (பதினாறு வயதினிலே 'மயிலு' இன்னும் சாகவில்லை). ஆனால் அந்தக் கணவன் இறந்து போய் அவனுடைய பிணம் வீட்டியிலேயே புதைக்கப்பட்டிருப்பதை எஸ்தரின் மகனே வெளிப்படுத்துகிறான். காவல்துறை எஸ்தரை கைது செய்து விசாரண செய்கிறது. "ஆம். என் கணவரை நான்தான் கொன்றேன்" என்கிறாள் எஸ்தர். பல வருடங்களாக கணவனுக்காக காத்திருந்த எஸ்தரே தன் கணவனை ஏன் கொன்றாள்?' எனும் சுவாரசியமான முரண். எத்தனை அருமையான துவக்கம்?..இதை அறிந்து கொள்ள படத்தின் இறுதி வரை சில சலிப்பூட்டும் காட்சிகளைத் தாண்டி காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அத்தனை எதிர்பார்ப்பும் உப்புச் சப்பற்ற முடிவால் மடிந்து போகிறது. இயக்குநர் இதில் கவனம் செலுத்தியிருக்கலாம்.

அருளப்ப சாமி மற்றும் எஸ்தரின் காதலுக்கு இடையில் தமிழக மீனவர் பிரச்சினையும் இடையிடையில் ஓரமாக (சமுத்திரக்கனியின் பாத்திரம் மூலமாக) சற்று காரமாக சொல்லப்பட்டாலும், தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கச்சாப் பொருளான காதலை தவிர்த்து ஓர் சமூகப் பிரச்சினையை ஊறுகாயாக பயன்படுத்திக் கொள்ளாமல் நம்மால் திரைப்படத்தை உருவாக்க முடியவில்லை என்பது துரதிர்ஷ்டவசமான சூழலே. அப்படியே படமெடுத்திருந்தாலும் 'துப்பாக்கி' போன்ற வணிக வழிப்பறிகளுக்கு தரும் வரவேற்பை இந்த மாதிரியான படங்களுக்கு நம் சுரணையற்ற சமூகம் தருமா என்பதையும் இணைத்தே யோசிக்க வேண்டியிருக்கிறது.

படத்தின் சுவாரஸ்யத்திற்கு பிரதான முதற் காரணம் சுனைன்யா.தமிழ் சினிமாவில் பிளாஸ்டிக் பொம்மைகளாகவும் லூசுத்தனமாகவும்  சித்தரிக்கப்படும் ஹீரோயின்களுக்கு இடையில் இதைப் போன்ற பாத்திரத்தைப் பார்த்து நீண்ட காலமாகிறது.  இவரின் தோற்றத்தை வடிவமைத்தவர்களை நிச்சயம் பாராட்டலாம். வழித்து வாரப்பட்ட கோண வகிடும், காதுகளின் அருகே சுருள் முடியும், சட்டை பாவாடையும்.. என ஒரு கிறித்துவப் பெண்ணாக சிறப்பாக நடித்திருக்கிறார். வசனங்கள் அதிகமில்லாத நிலையில் இவரது கண்களும் முகபாவங்களுமே பல இடங்களில் சிறப்பாக நடித்திருக்கின்றன. திறமையாக வேலை வாங்கியிருக்கும் இயக்குநர் பாராட்டுக்குரியவர்.

படத்தில் பல திறமையான நடிகர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக சரண்யா. தமிழ் சினிமாவின் 'அம்மா'வாக  மனோரமாவிற்கு இவரை மாற்று செய்யும் அபாயமிருந்தாலும் இவரின் முகபாவங்களும் வசன உச்சரிப்புகளும் சுவாரசியம். 'ஆணி வந்தா டாப்பா வருவான்' ஹேங்ஓவரில் இருந்து உடனே வெளிவருவது இவருக்கு நல்லது. 'பூ' படத்தில் பேனாக்காரராக நடித்த 'ராம்' சிறப்பாக நடித்திருக்கிறார். தன் மகனை ஒரு மீனவனாக ஆளாக்க முடியவில்லை என்று வருந்துமிடங்களும், குடிகார மகனை குணப்படுத்திய மருத்துவருக்கு நெகிழ்ச்சி்யுடன் மீன் பரிசளிப்பதும் தன்னுடைய பெயர் பொறித்த படகை தடவிப் பார்ப்பதும்.. என  நல்ல பங்களிப்பு. வடிவுக்கரசி போன்ற திறமைசாலிகளை இன்னமும் நம்மால் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. நந்திதா தாஸ் பாவம்.

படத்தின் சில இடங்களில் பாத்திரங்களின் மனநிலைக்குள் என்னால் உள்ளே செல்ல முடிந்தது. குறிப்பாக அருளப்பசாமி - எஸ்தர் காதல் தொடர்பான காட்சிகள். குடிகார இளைஞனாக இருக்கும் அருளப்பசாமிக்குள் எஸ்தர் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகிறாள். அவன் குடிநோயிலிருந்து வெளிவரும் போது நானும் மகிழ்ச்சியடைந்தேன். இவ்வகையான பரவச தருணங்கள் படத்தில் அபூவர்மாகவே நிகழ்கின்றன. மற்றபடி படம் சற்று சலிப்பாகவே நகர்கிறது.

வசனம் - ஜெயமோகன் மற்றும் சீனுராமசாமி. மீனவர் பிரச்சினை தொடர்பான பஞ்ச் டயலாக்குகளை இயக்குநர் எழுதியிருப்பார் என்று யூகிக்க முடிகிறது. மற்றபடி பாத்திரங்களின் யதார்த்த மொழியில் படம் நெடுக ஜெயமோகன் வெளிப்படுகிறார். அருளப்பசாமி காமம் தருகிற அவஸ்தையில் மனைவி எஸ்தரிடம் மல்லுக்கட்டுகிறான். அவளோ சம்பாதிக்க போகச் சொல்லி மல்லுக் கட்டுகிறாள். இந்தக் காட்சிக் கோர்வைகள் அருமையாக பதிவாகியிருக்கின்றன.

விலகிப் போகும் மனைவியிடம் "முதுகைப் பாரு... படமெடுக்கிற பாம்பு மாதிரி" என்கிறான். அருமையான படிமம். இலக்கியவாதிகள் சினிமாவில் நுழைவதில் இம்மாதிரியான சலுகையான ஆச்சரியங்கள் பார்வையாளனுக்கு கிடைக்கின்றன.

எந்த சாதிப்பின்புலமென்று தெரியாத, இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் தப்பிப் பிழைக்கும்  அகதியான அருளப்பசாமியின் வாழ்க்கையில் மூன்று மதங்கள் குறுக்கிடுகின்றன. கிறித்துவம் அவனை தத்தெடுத்துக் கொள்கிறது. இந்து மதம் (காஞ்சி சாமியார் படம்) அவனை நல்வழிப்படுத்துகிறது. இசுலாமியம் அவன் பொருளாதார ரீதியில் உயர உதவுகிறது. இப்படியாக 'சமய நல்லிணக்கத்தோடு' சிந்தித்திருக்கிறார் இயக்குநர். (?!)

நெய்தல் காட்சிப் பரப்புகள், சர்ச்சின் உட்புறம் போன்றவை சில தருணங்களில் அற்புதமாக பதிவாகியிருக்கின்றன. குறிப்பாக டாப் ஆங்கிள் காட்சிகள். தேவையில்லாத ஒரு சண்டைக்காட்சியில் அருளப்ப சாமியும் இன்னொருவனும் கடலில் ஓடிவரும் போது கேமரா மேலிருந்து நோக்குகிறது. நீல நிறப் பின்னணியில் இருவரும் துரத்தி வரும் தடயங்கள் உடனான காட்சி அற்புதம். எடிட்டரோ, அல்லது இயக்குநரோ சொற்ப கணத்திலேயே ஏனோ அதை வெட்டி விட்டிருக்கிறார்கள்.

முன்பே குறிப்பிட்டபடி வலுவான துவக்கத்துடனான திரைக்கதை, அதை தக்க வைத்துக் கொள்ளாமல் சாதாரணமாக முடிவது ஏமாற்றம். என்றாலும் வழக்கமான வணிக சினிமாவிற்கு இடையில் ஒரு புதினத்தை வாசித்த அனுபவத்தைத் தருகிற 'நீர்ப்பறவை'யை ஒரு முறையாவது காணலாம். தமிழ் சினிமாவில் நல்ல முயற்சிகள் நிகழ்வதில்லை என்று புகார் சொல்கிற சினிமா ஆர்வலர்கள் 'நீர்ப்பறவைக்கு ஆதரவளிக்க கடமைப்பட்டிருக்கிறார்கள். இல்லையெனில் நமக்கு 'துப்பாக்கிகளும் மாற்றான்களுமே' மிஞ்சும்.


suresh kannan

Monday, November 26, 2012

வெற்றுத் துப்பாக்கி




நம்மை நினைத்தால் பாவமாக இருக்கிறது. பொழுதுபோக்கு சினிமாதான் இங்கு பிரதானம் என்பது கூட பாவமில்லை என்றாலும் கூட ஒரு சுவாரசியமான, விறுவிறுப்பான, புத்திசாலித்தனமாக திரில்லர் படத்திற்கான வாய்ப்பு கூட இல்லாமல் எத்தனை காய்ந்து போயிருநதால், வெற்றுத் துப்பாக்கியை ஆஹா, ஓஹோ என்று புகழ்வோம்?.

நிற்க.. நான் ஏதோ உலகத் திரைப்படம், கலைப்படம், என்று பார்க்கிற ஹோதாவில், உயர்வுமனப்பான்மையில் ஒரு பாவனையாக இதைக் கூறவில்லை. எப்பேர்ப்பட்ட உயர்தர கலைஞனாய் இருந்தாலும் அவனுள் இருக்கும் பாமரன் சாகவே மாட்டான். சாவு மேளத்திலுள்ள கொண்டாட்டத்தை ரகசியமாகவேனும் ரசிக்கிற கர்நாடக சங்கீதக்காரன் இருப்பான். அதே போல் பாமரன் உள்ளிருக்கும் அறிவுஜீவியும்.

அந்த வகையில் எனக்கு ஆகசன் சினிமாக்கள் மிகப் பிடிக்கும். மன்னிக்கக்கூடிய சிறிய லாஜிக் பிழைகள் இருந்தாலும் கூட விறுவிறுப்பான திரைக்கதையாக இருந்தால் அதை ரசித்துப் பார்ப்பேன். இதே விஜய்யின் 'கில்லி' திரைப்படம் (தெலுங்கு மூலம்) சுவாரசியமான விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டது. ஆனால் துப்பாக்கி ஒரு ரெண்டுங்கெட்டான் தனமான ஆக்சன் படம். படங்களின் பாடல்களின் இடையூறு பற்றி நான் நீண்ட காலமாக புகார் கூறிக் கொண்டிருந்தாலும் இந்தளவு எரிச்சல் ஏற்படுத்தின பாடல் இடையூறுகளை சமீபத்தில் எந்த சினிமாவிலும் காண நேர்ந்ததில்லை. அசட்டுத்தனமான நகைச்சுவையுடன் கூடிய காதல் காட்சிகள். கஜினியில் இருந்த அந்த சுவாரசியம் கூட இல்லை. நல்ல நடிகர்களைக் கூட அபத்தமாக பயன்படுத்துவதில் தமிழ் சினிமாவிற்கு நிகரில்லை. ஜெயராம் இந்த மாதிரியான கண்றாவி பாத்திரங்களை ஏற்கிறார் என்று தெரியவில்லை.

இந்தத் திரைப்படத்தின் துணை தயாரிப்பு இந்திய ராணுவமோ என்கிற அளவிற்கு அட்டெஷனில் நின்று கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆனால் இந்திய ராணுவத்தின் முகம் 'விஜய்' என்கிற ஒற்றைப் பரிமாணத்தில் வழக்கம் போல் தமிழ் நாயக பிம்பத்திலேயே  இருப்பதுதான் சோகம். விடுமுறையிலும் வேலை பார்க்கும் தேச பக்தராக ஒற்றை ஆளாக நின்று இந்தியாவை காப்பாற்றுகிறார் விஜய். விஜயகாந்த், அர்ஜூன் போன்றவர்கள் நடித்த படங்களின் தேய்ந்து போன சிடியை நன்றாக துடைத்து புது தொழில்நுட்பத்தில் தோய்த்து தந்ததை தவிர இயக்குநரின் பணி வேறு ஒன்றுமில்லை.

இந்தப் படத்தில் இசுலாமியர்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்தாக பத்திரிகை செய்திகளில் வாசித்தேன். என்னைக் கேட்டால், உலகத்திலுள்ள எந்த பிரிவிலுள்ள தீவிரவாதிகளாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்கள் இணைந்து இந்தப் படத்தின் மீது மானநஷ்ட வழக்குத் தொடரலாம். அந்தளவிற்கு தீவிரவாத இயக்கங்களை அடி முட்டாள்களாகவும் பழைய எம்.என்.நம்பியார் தலைமையிலுள்ள கொள்ளைக் கூட்ட கும்பல் போலவும் சித்தரித்திருக்கிறார்கள். தீவிரவாதத்தின் ஊற்றுக் கண் எது என்கிற எவ்வித பிரக்ஞையில்லாமலும் தீவிரவாதம் குறித்த சமூகவியல் பார்வையில்லாமலும், நாயகன் தன்னுடைய தேசப்பற்றை வலுவாக காண்பித்து கைத்தட்டல் வாங்குவதற்கு ஏற்ற வகையிலான boxing punch bag போல உபயோகித்துக் கொள்கிறார்கள்

12 இடங்களில் வெடிகுண்டு வைப்பது போன்ற தீவிரமான 'ஆப்பரேஷனில்' ஏதாவது பிழையோ சந்தேகமோ வந்தால் அதை தள்ளிப் போடுவதுதான் புத்திசாலிகள் செய்வது. ஆனால் திட்டத்தில் தொடர்புடைய ஒரு நபர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்பு காணாமற் போன நிலையிலும் திட்டத்தைத் தொடர்வார்களா என்பது கேள்விக்குறி. தீவிரவாதிகளின் 'தலைவன்' நாயகனுடன் 'ஒண்டிக்கு ஒண்டி' மோதி தமிழ் சினிமா மரபைக் காப்பாற்றுகிறார். ஆர்த்தோபடிக் டாக்டர்கள் வருங்காலத்தில் தங்கள் பிழைப்பை எண்ணி வருத்தப்படுமளவிற்கு எலும்பு முறிந்த நாயகன் சுயசிகிச்சை எடுத்துக் கொள்ளும் காட்சி மயிர்க்கூச்சலை ஏற்படுத்துகிறது. தீவிரவாதிகள் டஜன் டஜனாக துப்பாக்கிகளை வைத்திருந்தாலும் சிக்கன நடவடிக்கை காரணமாக அதை ஓரமாக வைத்து விட்டு நாயகனுடன் கை,கால்களால் சண்டை போட்டு நாயகன் ஸ்டைலாக அடிப்பதற்கு தோதாக நின்று விழுகிறார்கள்.

புத்திசாலித்தனமோ விறுவிறுப்போ அல்லாத, தமிழ் சினிமாவின் இற்றுப் போய் சலித்துப் போன சம்பிரதாயங்களை எவ்விதங்களிலும் கைவிடாத, இம்மாதிரியான அரைகுறை வேக்காடான திரைப்படங்கள்தான் நம்முடைய பிரதான பொழுதுபோக்குத் திரைப்படங்கள் என்றால்...

நம்முடைய சமூகத்தின் ரசனை எத்தனை புரையோடிப் போயிருக்கிறது என்றுதான் நொந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

suresh kannan

Thursday, November 22, 2012

சசியின் இந்திய லட்டும் அமெரிக்க ஆங்கிலமும்


பெளதீக ரீதியாக காலனியாதிக்கம் நம்மை வி்ட்டு விலகிப் போயிருந்தாலும் அது ஏற்படுத்தி வைத்திருக்கும் வரலாற்றுக் கறைகள், தழும்புகள், உளவியில் ரீதியான அகச்சிக்கல்கள் போன்ற பலவற்றின் மூலமாக நம்மை  இன்னமும் அவற்றின் பிடியிலேயே வைத்திருக்கிறது. உலகமயமாக்கம் என்னும் தந்திர வலைப்பின்னல் காரணமாக இன்னமும் வளர்ந்த நாடுகளின் அடிமைகளாக இருக்கிறோம். சுயஅடையாளங்களை தொலைத்து விட்டு அவற்றின் கலாச்சாரத்தை தன்னிச்சையாக நகல் செய்து கொண்டு 'நாகரிகம்' என்கிற பெயரில் கோமாளிகளாக, கூலிகளாக திரிந்து கொண்டிருக்கிறோம். இந்த மோசமான சூழலை சரி செய்ய வேண்டிய கல்வித்துறை தம்முடைய 'மெக்காலே' தூக்கத்திலிருந்தும் அறியாமையிலிருந்தும் விழித்துக் கொள்ளாமல் இன்னமும் ஆழமாக நம்மை அந்தச் சகதியிலேயே புதைத்துக் கொண்டிருக்கிறது. 'ஆங்கிலம் என்பது அறிவு அல்ல, அது இன்னொரு மொழியே' என்பதை அழுத்தமாக இல்லாவிடினும் நீக்கு போக்காகவாவது சொல்லிச் செல்கிறது கவுரி ஷிண்டேவின் திரைப்படமான 'English Vinglish'.

இத் திரைப்படம் பிரதானமாக இரண்டு தளங்களில் இயங்குகிறது. ஒன்று, ஆங்கில மொழி அறியாததின் காரணமாக தம்முடைய குடும்பத்தாலும் சமூகத்தாலும் அவமானப்படுத்தப்படும் ஒரு பெண், குறைபாடு என்று கருதப்படும் அந்தப் பிரச்சினையிலிருந்து தன்னை மீட்டெடுப்பது, இன்னொன்று, பெரும்பாலான குடும்பத் தலைவிகள் எதி்ர்கொள்வது. Home Manager என்று கெளரவமாக பட்டம் சூட்டப்பட்ட ஊழியம் அல்லாத பணிப்பெண்ணாய் கணவனாலும் மற்ற குடும்ப உறுப்பினர்களாலும் மிக நுட்பமாக சீண்டல்களாலும் அவமரியாதைகளாலும் சுயஅடையாளத்தையும் மரியாதையையும் இழந்து நிற்கும் உலகளாவிய பிரச்சினை. முந்தைய பிரச்சினையையாவது சசியைப் போல சில மாத உழைப்பில் கடந்து வரலாம். ஆனால் பல காலமாகத் தொடரும் இரண்டாவது பிரச்சினை, ஆணாதிக்க மனோபாவம் மாறும் சூழல் மற்றும் அசலான பெண்ணுரிமை குறித்தான விழிப்புணர்வு ஆகிவற்றின் மூலம்தான் தீரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக கருதலாம்.

உயர் மத்திய தர வர்க்க குடும்பத் தலைவியான சசி, ஆங்கிலம் அறியாத காரணத்தினால் நுனிநாக்கு ஆங்கிலம் பேசும் தன்னுடைய கணவனாலும் ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் சுமார் 15 வயதுடைய மகளாலும் தொடர்ந்து சீண்டப்பட்டுக் கொண்டே இருக்கிறாள்.கள்ளங்கபடறியாத  இளைய மகன்தான் அவளுடைய ஒரே ஆறுதல். வீ்ட்டியிலேயே லட்டு தயாரித்து அதன் மூலம் பொருள் ஈட்டுவதுதான் அவளுக்கு சிறிய மகிழ்ச்சியையும் பொருளாதார சுதந்திரத்தையும் அளிக்கிறது.

தன்னுடைய சகோதரியின் மகள் திருமணத்திற்காக சசி அமெரிக்கா போக வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சில பல தயக்கங்களுடன் தனிமையில் செல்லும் அவளை அந்த தேசம் பயமுறுத்துகிறது. ஆங்கில மொழி அறியாத தன்னுடைய பலவீனத்தை அந்த மொழியை கற்றுக் கொள்வதின் மூலம் வெற்றிகரமாக கடந்து வருவதாக மீதமுள்ள கதை சற்று நகைச்சுவையுடன் பயணிக்கிறது.

எவ்வித சுய அடையாளமும் பெருமையும் இல்லாத அவளுக்கு முதன் முதலாக தன்னம்பிக்கையை அளிக்கும் வார்த்தை 'entrepreneur' அமெரிக்க ஆங்கில வகுப்பில் முதல் நாளில் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது வீட்டில் லட்டு செய்து விற்பனை செய்யும் வழக்கத்தைப் பற்றிக்கூறுகிறாள். எனில் அவள் ஒரு 'தொழில் முனைவோர்' என்கிறார் ஆசிரியர். மிகுந்த பெருமையுடன் அவள் இதைப் பற்றி கணவனிடம் தொலைபேசியில் கூறும் போது அவன் வழக்கமான கேலியோடு அதை புறந்தள்ளிப் போகிறான்.

சசியாக ஸ்ரீதேவி. மிகச் சிறந்த மீள்வரவு. சில பல ஆண்டுகளுக்குப் பின் அவரின் குரலை கேட்கும் போது பதின்மங்களில் கேட்டுப் பழகி நியூரான்களில் பதிந்துள்ள அந்தக் குரல் உயிர் பெற்று சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது. சிறப்பாகவும் நடித்திருக்கிறார். என்றாலும் படத்திலேயே மிகச் சிறப்பாக நடித்திருப்பவராக பிரெஞ்சு நடிகர், Mehdi Nebbou -அவர்களைச் சொல்ல வேண்டும். சசியுடன் ஆங்கில வகுப்பில் படிக்கும் சக மாணவர். சசியை மெளனக் காதல் செய்கிறார். சில காட்சிகளில் மாத்திரம் வந்தாலும் இவரின் உடல்மொழியும் நடிப்பும் மிகச் சிறந்ததாக இருக்கிறது.

இவரும் சசியும் தனிமையில் நெருக்கமாக உணரும் ஒரு சூழ்நிலை படத்தில் வருகிறது. ஐரோப்பிய,அமெரிக்கத் திரைப்படங்களாக இருந்தால் உடலுறவுக் காட்சி அல்லது குறைந்தபட்சம் ஒரு முத்தக் காட்சியாவது இடம் பெற்றிருக்கும். கலாச்சார காவலர்கள் பொங்கி விடுவார்கள் என்பதால் கவுரி ஷிண்டே இதை மென்மையாக தவிர்த்திருக்கிறார் என்று கருதுகிறேன். 

நடிகர் அஜித் (இந்தியில் அமிதாப்) சில காட்சியில் தோன்றுகிறார். விமானப்பயணத்தில் தடுமாறும் சசிக்கு உதவி அவளுக்கு தன்னம்பி்க்கை ஊட்டுபவராக வருகிறார். இதற்கு அஜித்தை தேர்ந்தெடுத்தது கச்சிதமாக பொருந்துகிறது. சூப்பர் ஸ்டார் இமேஜ் உள்ள அஜித் படத்திற்காக ஒப்பனை ஏதும் செய்து கொள்ளாமல் தன்னுடைய அன்றாட தோற்றத்திலேயே நரைமுடியுடன் நடித்திருக்கிறார். பொது வாழ்க்கையிலும் இரவல் முடியை மாட்டிக் கொண்டு இமேஜை மெயின்டெயின் செய்யும் நடிகர்களுக்கு இடையில் இவரது தன்னம்பிக்கை காட்சிக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது. (இந்தப் பாத்திரத்திற்கு முன்னர் ரஜினியை அணுகி அவரால் நடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது).

சசி அமெரிக்காவில் ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் தடுமாறி அங்குள்ள விற்பனையாளரால் அவமானத்துக்குள்ளாகிறாள். அவளை அவமானப்படுத்துபவர் ஓர் ஆப்ரிக்க அமெரிக்கன் பெண்மணி. நிறவெறி காரணமாக வெள்ளையர்களால் அவமரியாதைக்குள்ளாகும் ஒரு இனத்திலிருந்து வருபவர், மொழிக் குறைபாடு காரணமாக இன்னொரு நபரை அவமானப்படுத்தும் நுட்பமான உளவியல் வெளிப்பட்டிருக்கிறது. ஓர் அடிமை சற்று உயர்ந்தாலும் மிதிப்பதற்கென்று அவருக்கு ஓர் அடிமை தேவைப்படுகிறது. யூத இனம் ஒரு கால கட்டத்தில் உலகெங்கிலும் துரத்தி துரத்தி கொன்று அழிக்கப்பட்டது. ஆனால் அதே யூத இனமே இன்று பாலஸ்தீனியர்களை கொன்றுக் குவிக்கிறது வரலாற்று முரண்.

'English Vinglish'.  - சுவாரசியமான காட்சிகளைக் கொண்ட  திரைப்படமென்றாலும் சில பல கிளிஷே காட்சிகள் சலிப்பூட்டுகின்றன. உதாரணமாக ஆங்கிலத்தில் தடுமாறி பின்பு அதைக் கற்றுக் கொள்கிற சசி, கிளைமாக்சில் அதை நிரூபிப்பது போல் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் பேசுவாள் என்கிற பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை இயக்குநர் ஏமாற்றாமல் பூர்த்தி செய்கிறார். முன்பே குறிப்பிட்ட படி ஆங்கிலம் ஒரு மொழிதான், அதுவே அறிவு அல்ல என்கிற செய்தியை இயக்குநர் அழுத்தமாக சொல்லத் தவறியிருக்கிறார். தன்னை அவமானம் கொள்ளச் செய்கிற ஆங்கிலத்தை ஏன் சசி கற்றுக் கொள்ளாமலேயே நிராகரித்து திரும்பக் கூடாது?. 'தொழில்முனைவோர்' என்கிற தன்னம்பிக்கையும் சுயஅடையாளமுமே அவளுக்குப் போதுதானது என்று ஏன் சசி கருதக்கூடாது?.

உண்மையில் இந்த தொனியிலும் சில காட்சிகளில் படம் சற்று பயணிக்கிறது. அக்கா பெண்ணின் திருமணத்திற்காக சசியே பிரத்யேகமாக உருவாக்கின லட்டுக்கள் எல்லாமே பாழாகிறது. ஆனால் விடாப்பிடியாக மறுபடியும் அதை உருவாக்க முடிவு செய்கிறாள். ஆனால் அன்றுதான் அவளுடைய ஆங்கில வகுப்பின் இறுதி தேர்வு நாள். ஆனால் வகுப்பை புறக்கணித்து லட்டு செய்ய முடிவெடுக்கிறாள். அக்கா பெண் இதைச் சுட்டிக் காட்டும் போது சசி இப்படியாக பதில் சொல்கிறாள்: "எனக்குத் தெரியாத ஆங்கிலத்தில் நான் தேர்வு பெறுவேனா இல்லையா என்று தெரியாது. நான் எனக்கு மிகவும் தெரிந்த விஷயத்தில் நான் தோற்றுப் போக விரும்பவில்லை".

இந்த தொனியையே உச்சக்கட்ட காட்சியாக வைத்திருந்தால் 'English Vinglish' ஒரு மாற்று சினிமாவாக உருவாகியிருக்கும்.

suresh kannan

Tuesday, October 30, 2012

தாண்டவம் - தமிழ் சினிமா - தொடரும் அவநம்பிக்கைகள்...

சமீபத்தில் இயக்குநர் விஜய் இயக்கிய 'தாண்டவம்' பார்த்துத் தொலைத்தேன். ஓசியில்தான். அதற்கே எனக்கு கடுப்பாக இருந்தது. அம்புலிமாமா என்றொரு சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் நீதிக்கதை இதழ் ஒன்று முன்பு வந்து கொண்டிருந்தது. இப்போது வருகிறதா என்று தெரியவில்லை. குழந்தைகளுக்காக எழுதப்படும் அந்தக் கதைகளில் கூட ஒரு தர்க்க ஒழுங்கு இருக்கும். சுவாரசியம் இருக்கும். ஆனால் நம் தமிழ்ப்பட இயக்குநர்கள் தங்களின் பார்வையாளர்களை குழந்தைகளுக்கும் கீழான அறிவுள்ளவர்களாக, விபரமறியாதவர்களாக நடத்தி அவர்களை தொடர்ந்து அவமானப்படுத்திக் கொண்டிருக்கும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை என்று மாறுமோ என்று தெரியவில்லை.

சர்வதே தரத்தையெல்லாம் கூட விட்டுத்தள்ளி விடுவோம். திரைமொழி, கலை, நுட்பம், தர்க்க ஒழுங்கு, கலையமைதி  போன்ற புண்ணாக்குகளெல்லாம் நமக்கு வேண்டாம். தமிழ் சினிமாவை ஒரு வணிகமாகவே அணுகுவோம். ஐந்து ரூபாய்க்கு விற்கப்படும் சிப்ஸ் பாக்கெட்டை சந்தைப்படுத்தவே எத்தனை முயற்சிகள்? சுவாரசியமான காப்பி ரைட்டிங், கவனத்தை ஈர்க்கும் கேப்ஷன்கள், எளிதில் ஞாபகப்படுத்திக் கொள்ள சுருக்கமான, வாயில் எளிதில் நுழையும் பிராண்ட் பெயர்கள், லேஅவுட்கள்... என்று எத்தனை யத்தனங்கள்.. ஒரு பிராண்ட் நன்றாக இல்லையெனில் அதை தூக்கிப் போட்டு விட்டு இன்னொரு பிராண்டை நோக்கி போகக் கூடிய அளவிற்கான வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறது நுகர்வுக் கலாச்சாரம்.

ஆனால் கோடிகளைப்  போட்டு இன்னும் பல கோடிகளை வாரிக் குவிக்க நினைக்கும் தமிழ்த் திரையுலக தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும், இதைச் சார்ந்தவர்களும் கேவலமான குப்பைகளை தயார் செய்து விட்டு எத்தனை அலட்சியமாக இருக்கிறார்கள்? கதை, திரைக்கதை என்கிற பெயரில் அழுகிய குப்பைகளை 'நாயக பிம்பம், தொழில்நுட்பம் போன்ற வண்ணக் காகிதங்களில் சுற்றி தந்து விட்டால் பார்வையாளர்களிடம் சாமர்த்தியாக காசு பிடுங்கி விடலாம் என்கிற தன்னம்பிக்கையை என்னவென்பது? இதில் 'இது ரொம்ப டிஃப்ரண்டான சப்ஜெக்ட்' என்று பிரமோக்களில் திரும்பத் திரும்ப அலட்டிக் கொள்ளும் ஜம்பம் வேறு. எத்தனை நாட்களுக்கு பார்வையாளனை இப்படி தொடர்ந்து ஏமாற்றி விட முடியும்?. (அப்படியும் தமிழ்த் திரையுலகின் பார்வையாளர்களின் பெரும்பான்மையான சதவீதத்தினர் தொடர்ந்து அப்பாவி்த்தனமாகவோ அல்லது சொரணயற்றோ கிடக்கிறார்கள் என்பது வேறு விஷயம்).

ஏற்கெனவே குறிப்பிட்டபடி சர்வேதேச அளவில் அல்லாமல் தமிழ்ச் சினிமா எனும் எல்லைக்குள் வைத்துப் பார்த்தால் ஒரு காலகட்டத்தில், கதை சொல்லும் முறையில், நுட்பத்தில் மணிரத்னம் ஒரு குறிப்பிட்ட அளவு பாதிப்பை ஏற்படுத்தினார். குறிப்பான அடையாளம் 'நாயகன்'. அவ்வகையில் சில வருடங்களுக்குப் பிறகு குறிப்பிட்டுச் சொல்பவராக பாலா தோன்றினார். அவரைத் தொடர்ந்து செல்வராகவன், அமீர், சேரன், வெற்றிமாறன், ராம், மிஷ்கின் என்று குறிப்பிட்ட சிலர் தங்களின் மனச்சாட்சியும் பட்ஜெட்டும் அனுமதித்த எல்லைக்குள் சில பல நல்ல முயற்சிகளைத் தந்தார்கள். ஆனால் ஒருவரிடமும் தொடர்ந்து நல்ல படங்களைத் தருவதற்கான consistency இல்லை. இதனாலேயே தங்களின் முதல் படத்தில் திறமையையெல்லாம் கொட்டிவிட்டு பின்வரும் படங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் விருதுப்பட டிவிடிகளையும் நம்பி வருகிறார்களோ என்று சந்தேகமாக இருக்கிறது.

பருத்தி வீரனை பார்த்து பிரமித்துப் போய் அமீரையெல்லாம் நான் ஒரு கட்டத்தில் பாலுமகேந்திரா, மகேந்திரனுக்குப் பிறகு வரக்கூடிய ஒரு நல்ல அடையாளமாக குறித்து வைத்திருந்தேன். ஆனால் அவரோ யோகி எனும் குப்பையில் பங்கேற்கிறார். 'கன்னீத் தீவு பொண்ணா' என்று ஐட்டம் டான்ஸ் ஆடுகிறார். அவரின் அடுத்த படமான 'ஆதி பகவன் படம் குறித்தான முன்னோட்டங்கள் அத்தனை சிலாக்கியமாக இல்லை. 'வெண்ணிலா கபடிக்குழு' என்று குறி்ப்பிடத்தக்க படத்தை உருவாக்கிய சுசீந்தரன் 'அழகர்சாமியின் குதிரையில்' ஒரளவிற்கு தேறினாலும் 'ராஜபாட்டை' எனும் வணிகச் சகதியில் வழுக்கி விழுந்தார். மிஷ்கினின் முகமூடியைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. சேரன் இன்று என்னவானார் என்கிற தகவலே இல்லை. வெற்றிமாறன் தன்னுடைய முந்தைய படத்தின் சரக்கையே இன்னொரு வடிவில் ஆடுகளமாக்குகிறார்.

மேற்குறிப்பிட்ட இயக்குநர்களாவது ஒரு குறிப்பிட்ட அளவிற்காவது தம்முடைய உருவாக்கங்களில் இயன்ற அளவிற்கான தரத்தை பேணுகிறார்கள். ஆனால் இயக்குநர் விஜய் எப்போதும் பெரிதும் நம்பிக் கொண்டிருப்பது வெளிநாட்டு டிவிடிக்களை. 'டைட்டானிக்'கை மென்று தின்று துப்பி..'மதராசபட்டினமாக' உருவாக்கினார். 'ஐயம் சாமை' கொத்து பரோட்டா போட்டு தெய்வத் திருமகளாக்கினார். 'தாண்டவம்' எதிலிருந்து உருவப்பட்டது என்று தெரியாவிட்டாலும் (Dare Devil என்று சொல்கிறார்கள்) ஒரு மோசமான திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் லண்டனில் நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழ் டிஸ்கவரி சானலை பார்த்துக் கொண்டிருப்பது போலவே ஓர் உணர்வு. டாக்சி டிரைவர் சந்தானம் தமிழ் பேசுகிறார். காவல்துறை அதிகாரி நாசரும் (இலங்கை) தமிழ் பேசுகிறார். போதாக்குறைக்கு நாயகியும் தமிழருக்குப் பிறந்தவர் (தாய் பிரிட்டிஷ்) என்பதால் தமிழ் பேசுகிறார். விக்ரம் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை. தூக்கத்தில் நடக்கும் வியாதியுள்ளவர் போல் படம் பூராவும் உலாவுகிறார். கேட்டால் echolocation என்று ஆங்கிலத்தில் மிரட்டுகிறார்கள். கணவர் என்ன பணிபுரிகிறார் என்பது கூட கண் மருத்துவராக உள்ள மனைவிக்கு தெரியவில்லை. தமிழ் சினிமா நாயகிகள் இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு லூசுகளாகவே உலவப் போகிறார்கள் என்று தெரியவில்லை. கேட்டால் காமெடியாம். நம்பிக்கைக்கு உரியவராக வருகிற நண்பர்தான் வில்லனாம். இதுதான் சஸ்பென்ஸாம். இதை எல்கேஜி படிக்கிற குழந்தை கூட முதலிலேயே சொல்லிவிடும். இப்படியாக புளித்து அழுகிப் போன மாவிலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா. இவர்கள்தான் உலகின் பல பெயர் தெரியாத நாடுகளில் என்னென்ன விருதோ வாங்கி வந்து மீடியாக்களில் அலட்டுகிறார்கள்.

இந்தப்படத்தின் கதை தொடர்பாக நிகழ்ந்த வழக்குகளும் சர்ச்சைகளும் இன்னொரு காமெடி. இல்லாத ஒரு விஷயத்திற்கு அடித்துக் கொண்டதற்காக நீதிமன்றமே முன்வந்து இவர்கள் மீது வழக்கு தொடரலாம்.

வெளிநாட்டுத் திரைப்படங்களிலிருந்து முழுப்படத்தையோ, அல்லது பல டிவிடிகளிக்களில் இருந்து காட்சிகளை உருவும் பிரச்சினைக்கு வருவோம். ஒருவகையில் இதைக்கூட சகித்துக் கொள்ளலாம். அப்படியாவது தமிழிற்கு சில நல்ல படங்கள் வரட்டுமே என்று. ஆனால் அது உருவப்பட்டதில் இருந்து இன்னும் மேம்பட்டதாக, சிறப்பானதாக, தரத்தின் அடிப்படையில் அசல் படைப்பை தாண்டுவதாக இருக்க வேண்டும். ராஜ்மவுலி இயக்கிய 'நான் ஈ', காக்ரோச் என்கிற குறும்படத்தின் ஐடியா என்று கூறப்படுகிறது. பரவாயில்லை. ராஜ்மவுலி அந்த ஐடியாவை வைத்துக் கொண்டு நுட்ப உதவியோடு பல மடங்கு தாண்டியிருக்கிறார். இரண்டு மணி நேரத்திற்கு ஈயும் பார்வையாளனும் ஒன்றோடு ஒருவராக பின்னிக் கொள்கிறார்கள். அந்த அளவிற்கு அதை ஒரு சுவாரசியமான அனுபவமாக்கியிருக்கிறார்.

ஆனால் கதை, காட்சிகள் திருடும் பெரும்பாலான இயக்குநர்கள் என்ன செய்கிறார்கள்? அசல் படைப்பிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அடிப்படை விஷயங்களை, காட்சிகளை எடுத்துக் கொள்கிறார்கள். பின்பு காலம் காலமாக தமிழ் சினிமாவிற்கென்று இருக்கும் சில வணிக மசாலாக்களை அதில் சோக்கிறார்கள். இயக்குநருக்கு ஸ்பாட்டில் தோன்றிய ஐடியாக்கள்..தயாரிப்பாளர்களின் மச்சான்கள் சொல்லும் பரிந்துரைகள், ஹீரோயின்களின் ஜலதோஷம் காரணமாக மாற்றப்பட்ட காட்சிகள், ஹீரோக்கள் தங்களின் புஜபலபராக்கிரமத்தை நிருபிப்பதற்காக திணிக்கப்பட்ட ஆக்சன் காட்சிகள், பஞ்ச் டயலாக்குகள்.. என்று எல்லாம் சேர்ந்து கொத்து பரோட்டா போட்டு 'தமிழ் மூளைக்கு' இது போதும் அல்லது இதுதான் வேண்டும் என்கிற முன்தீர்மானத்தோடு ஜரிகைப் பேப்பரில் சுற்றி சூடு ஆறுவதற்குள் முதல் நாளிலேயே கூவி கூவி விற்று விடுகிறார்கள்.

இவர்களையே குற்றஞ் சொல்லிக் கொண்டிருப்பதிலும் உபயோகமில்லை. தமிழ் சினிமா பார்வையாளன் எனும் ஆடு மந்தையிலிருந்து விலகும் வரைக்கும் இம்மாதிரியான கசாப்புக் கடைக்காரர்களின் வணிகம் சிறப்புற தொடர்ந்து கொண்டுதானிருக்கும்.
suresh kannan

Wednesday, October 17, 2012

http://www.imdb.com/title/tt1922689/



Plan C  - நெதர்லாந்து திரைப்படம்.

சிறிய மிக கச்சிதமான, நேரான திரைக்கதை. எளிமையாகச் சொன்னாலும் அசத்தியிருக்கிறார்கள். கதையைப் பற்றி சொன்னால்தான் ஆர்வம் ஏற்படும் என்பதால் சற்று சுருக்கமாக...

ரொனால்டு காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ஓர் ஊழியன். ஒரு நடுத்தர வர்க்க பொறுப்பில்லா மனிதனுக்கு உள்ள அனைத்து பிரச்சினைகளும் இவனுக்கு. Poker எனும் விளையாட்டில் பெருமளவு பணத்தை இழப்பதால் ஊரைச் சுற்றி கடன். கடன் கொடுத்த மாஃபியா கும்பலொன்று பணத்தை வட்டியுடன் திரும்பத் தரச் சொல்லி இவனின் சிறுவயது மகனை மிரட்டுகிறது. இவனது முன்னாள் மனைவியும் இந்தப் பிரச்சினையை தீர்க்காவிடில் காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாக நெருக்கடி தருகிறாள்.

ஆக.. ரொனால்டுக்கு உடனடியாக பத்தாயிரம் டாலர் பணம் உடனடியாகத் தேவை. வேறு வழியில்லாமல் ஒரு திட்டம் தீட்டுகிறான். சுலபத் தவணை மாதிரி எளிமையான திட்டம்.

இவன் சீட்டு விளையாடுமிடத்தில் புதன் கிழமை அன்று பெருமளவு பணம் புழங்கும். விளையாட்டு அரங்கின் பின்புறமுள்ள அறையில்தான் இரண்டு அப்பிராணிகள் பணத்தை எண்ணிக் கொண்டிருப்பார்கள். எவ்வித காவலும் கிடையாது.

திட்டம் என்னவெனில்... ரொனால்டின் கூட்டாளி, இருட்டியவுடன் பணமிருக்கும் அறைக்குச் சென்று அங்கிருக்கும் அப்பிராணிகளை மிரட்டி எல்லா பணத்தையும் பிடுங்கிக் கொள்வது.. மறுநாள் பணத்தை பங்கிட்டுக் கொள்வது. கள்ளத்தனமாக நடைபெறும் சூதாட்டம் என்பதால் அவர்கள் காவல்துறைக்கும் செல்ல முடியாது.

சிம்பிள். ரொனால்டின் நிதிப் பிரச்சினையோடு குடும்பப் பிரச்சினையும் தீர்ந்து விடும்.

ஆனால் அது எத்தனை எளிதாக இல்லை.

ரொனால்டு கூட்டாளித் தேவைக்காக ஒரு கோயிஞ்சாமியிடம் இந்தத் திட்டத்தை பற்றி சொல்கிறான். அவன் மறுநாள் எம்.என்.நம்பியார் கூட்டத்தைச் சோந்த கபாலியை அழைத்து வருகிறான்.

"ஏண்டா.. நம்ம ரெண்டு பேர் திட்டத்துல இன்னொருத்தனை கூட்டிட்டு வந்தே?"

"இல்ல வாத்யாரே... அவன் நம்மள மாதிரி இல்ல...கொஞ்சம் விவரமானவன்.. சாமான்லாம் சோக்கா யூஸ் பண்ணுவான். நம்மளுக்கும் சேஃப்டி தல"

சரி ஒழிந்து போகிறது என்று கபாலிக்கும் தன் திட்டத்தை விளக்குகிறான். கூடவே முக்கியமான ஒரு நிபந்தனையை சொல்கிறான். இந்த அறுவைச் சிகிச்சையில் .. அதான்.. ஆப்பரேஷனில் யாரும் ரத்தம் சிந்தக்கூடாது. அதாவது வன்முறை என்பது கூடவே கூடாது. வெறுமனே மிரட்ட வேண்டும். அவ்வளவுதான். காந்திக்குப் பிறகு ரொனால்டிடம்தான் அகிம்சை முறையைப் பற்றி கோயிஞ்சாமியும் கபாலியும் கேட்டிருப்பார்கள்.

ஆச்சா...

புதன்கிழமை. தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ரொனால்டும் சூதாட்ட அரங்கிற்கு சென்று விளையாடுகிறான். அவ்வப்போது பரபரப்பாக கடிகாரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறான்.

கோயிஞ்சாமியும் கபாலியும் வழியில் மிக சாவகாசமாக KFC சிக்கனாக தேடி... தேடி... உப்பு உறைப்பு எல்லாம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டு வருகிறார்கள். ரொனால்டு அவர்களுக்கு ரகசியமாக போன் செய்து.. "பேமானிங்களா... என்னடா பண்றீங்க?" என்று கேட்க "இதோ வந்துகினே இருக்கோம் வாத்யாரே" என்கிறார்கள்.

அதற்குப் பிறகு  ரெனால்டிற்கு ஓர் இனிய அதிர்ச்சி ஏற்படுகிறது. சூதாட்டத்தில் எப்போமே அவனுக்கு தோல்விதான் ஏற்படும்  இருக்கும் பணத்தையெல்லாம் இழந்து பஸ் டிக்கெட்டிற்கு கடன் வாங்கிப் போகும் ரொனால்டு, எந்நாளும் இல்லாத திருநாளாக... இன்று பார்த்து கெலித்துக் கொண்டே போகிறான். கூட இருக்கும் விளையாட்டாளர்களும்... என்னடா இது Poker-க்கு வந்த சோதனை? என்று மூக்கின் மேல் விரல் வைத்து அவனை ஆச்சரியமாய்ப் பார்க்கிறார்கள்....

இப்படியே தொடர்ந்து கிட்டத்தட்ட 15000 டாலர் வரை கெலித்து விடுகிறான். வியப்பில் அவனுக்கே வியர்த்துப் போகிறது. அதாவது கொள்ளையடித்து பிற்பாடு வரப் போகிற பங்கை விட அதிக பணம். அவசரம் அவசரமாக கூட்டாளிகளுக்கு தொலைபேசி... 'பாருங்க. கண்ணுங்களா.. பிளான்லாம் ஃபணால்..நீங்க ஒண்ணியும் கிளிக்க வேணாம்...உங்க ரெண்டு பேருக்கும் ஒரு கட்டிங்கும் சிக்கன் லெக்பீஸ் பிரியாணியும் வாங்கித் தந்து தொலைக்கிறேன். அப்படியே திரும்பி ஓடிப் போயிடுங்கோ" என்கிறான்.

அவர்களோ சமர்த்தாக திரும்பிச் சென்று பரங்கி மலை ஜோதியில் படம் ஏதும் பார்க்கப் போகாமல் "பாரு வாத்யாரே.. ராகுகாலம் கழிச்சு நல்ல நேரம் பார்த்து பூஜையெல்லாம் போட்டுட்டு கிளம்பியிருக்கோம். அதெல்லாம் அப்படியே போட்டுட்டு மின்னே வெச்ச காலை பின்னே வெக்கற பழக்கம் எங்க வம்சத்துலயே கிடையாது" என்கிறார்கள் கறாராக.

()

பிறகு என்ன ஆச்சு?

ரொனால்டிற்கு அவர் ஜெயித்த பணம் கிடைத்தா? அல்லது பணம் கொள்ளையடிக்கப்பட்டதா? பாகப் பிரிவினை ஒழுங்காக நடந்தா...? அகிம்சை திட்டம் என்னவாயிற்று?

என்பதையெல்லாம் அறிய திரைப்படத்தைப் பாருங்கள்...

இத்திரைப்படத்தின் இயக்குநர் quentin tarantino வின் மஹா ரசிகர் போலிருக்கிறது. மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் காட்சிக் கோர்வைகளின் அடியாழத்தில் நகைச்சுவை கொப்பளித்துக் கொண்டு போகிறது. உதாரணத்திற்கு: ரொனால்டு தன்னுடைய கூட்டாளி கோயிஞ்சாமியை ஒரு இடத்திற்கு வரச் சொல்கிறான். கோயிஞ்சாமி வரத் தாமதமாகிறது. ரொனால்டு எரிச்சலுடன் காத்திருந்த நேரத்தில் என்னவெல்லாம் செய்தேன் என்று பட்டியலிடுகிறான். அது போல் கோயிஞ்சாமியும் கபாலியும் KFC சிக்கனைப் பற்றி விவாதிப்பது.

ரொனால்டாக Ruben van der Meer நடித்திருக்கிறார். அண்டர் பிளேவாக நடிப்பதென்றால் எப்படி, என்பதை இந்தப் பாத்திரத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். மனிதர் அப்படி நடித்திருக்கிறார். இவரது வழுக்கைத் தலையைப் பற்றி யாராவது சொன்னால் ரோஷம் பொத்துக் கொண்டு வருகிறது. ஏற்கெனவே இன்னொரு ரொனால்டு இருப்பதினால் சூதாட்ட அரங்கில் இவரது பெயரை ஒரு அடையாளத்திற்காக 'வழுக்கை ரொனால்டு' என்று குறித்து வைத்திருக்கிறார்கள். . 'ஏன் மீசை ரொனால்டு' என்று போடக்கூடாதா என்று ஆவேசமாக கேட்கிறார்.

ஏற்கெனவே குறிப்பிட்டபடி எளிமையான கதையென்றாலும் நேர்மையான திரைக்கதையின் மூலம் படத்தை சுவாரசியப்படுத்தியிருக்கிறார்கள். நம்மாட்கள் இதை படமாக எடுத்தால் சூதாட்ட அரங்கில் நிச்சயம் ஒரு ஐட்டம் பாடலைச் செருகியிருப்பார்கள். என்ன செய்ய, நாம் வாங்கி வந்த வரம் அப்படி...

suresh kannan

Monday, October 15, 2012

மாற்றான் - திரைக்கதையில் தோற்றான்


இப்போது உள்ளதா என தெரியவில்லை. முன்பெல்லாம் பொருட்காட்சிகளில் தலை பெண்ணாகவும் உடல் முழுக்க மீனாகவும் உள்ள ஒரு ஸ்டால் இருக்கும். ‘கடல் கன்னி’ என்ற பெயரில் மக்களை ஏமாற்றி கல்லா கட்டி விடுவார்கள். இதை அப்பாவித்தனமாக உண்மை என்று இன்றும் நம்புபவர்கள் உண்டு. இது பொய் என்று தெரிந்தும் கிளர்ச்சியால் எழும் ஆர்வத்தில் காசு செலுத்தி விட்டு பார்த்து விட்டு வருபவர்களும் உண்டு.

சமீபகாலமாக நம் தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் மக்களிடமிருந்து காசைப் பிடுங்குவதற்காக இந்த உத்தியை திறம்பட பயன்படுத்துகிறார்களோ என்று தோன்றுகிறது. வலுவானதொரு கதையில் அதற்கு மிகப் பொருத்தமாக உடற்குறையுள்ள பாத்திரம் இருப்பது என்பது வேறு. ஆனால் இம்மாதிரியான பாத்திரத்தை பிரதானமாக வைத்து விட்டு பின்பு அதற்கேற்றவாறு  கதையை யோசிப்பது என்பது வேறு.  இதில் அந்த பாத்திரம் பார்வையாளர்களின் ‘வேடிக்கைப் பொருளாகி’ விடும் அபாயமும் அபத்தமும் மாத்திரமே நிகழும். இயக்குநர்கள் முன்வைக்கும் வணிகத் தந்திரமும் அதுதான். இரட்டைத் தலை மனிதன்,  நான்கு தலை பாம்பு,  மூன்று மார்பகங்கள் உள்ள பெண் என்ற ஏதாவதொன்றை வேடிக்கை காட்டி காசு பிடுங்கும் தந்திரம்.

தமிழ்த் திரையில் இதை பிரதானமாக துவக்கி வைத்தவர் என கமலைச் சொல்லலாம். ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா,  கல்யாண்குமார் கூனனாக நடித்த ஒரு திரைப்படம் (பெயர் நினைவில் இல்லை) பாகப் பிரிவினை 'சிவாஜி' என்று சில நல்ல முன் உதாரணங்கள் இருந்தாலும்,  இதை ஒரு கிம்மிக்ஸ் ஆக ‘வித்தியாசமாக காட்டுகிறேன் பார்’ என்ற பாவனையில் உருவாக்குபவராக ஒரு பாணியாக்கினவர் கமல். ராஜபார்வை,  அபூர்வ சகோதரர்கள், குணா,  அன்பே சிவம், என்று உடற்குறையுள்ளவர்களை வெற்றிகரமான வணிகப் பொருட்களாக்க முடியும் என்ற தந்திரத்தை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்று சொல்லலாம். இதில் சற்று உருப்படியான முயற்சிகளும் உண்டு என்பதை மறுக்கவில்லை. ஆனால் இந்த நோய்க்கூறு மனோநிலையின் உச்சமாக ‘தசாவதாரத்தை’ சொல்லலாம்.

 ‘வடை திருடின காகம்  vs ஏமாற்றிய நரி’ என்கிற நீதிக்கதையை கமல் திரைப்படமாக உருவாக்கினால் அதில் காகம், நரி, வடைசுடும் பாட்டி என அனைத்து வேடங்களையும்  ஏற்க கமல் விரும்புவார். ஏன் அந்த வடையாகக் கூட கமலே நடித்தால் கூட நாம் ஆச்சரியப்படக்கூடாது. கதையைப் பின்னுக்குத் தள்ளி விட்டு தன்னையும் தன் ‘வித்தியாசங்களையும்’ முன்னிலைப்படுத்திக் கொள்வதாலேயே அவரின் படங்கள் சில நல்ல விஷயங்களை உள்ளடக்கியிருந்தாலும் சர்வதேச திரைப்படங்களின் அருகில் வைத்து ஒப்பிடக் கூடிய தகுதியை இழக்கும் அபத்தத்திற்கு உள்ளாகிறது.

இம்மாதிரியான வித்தியாசமான வேடங்களை ஏற்பதில் கமலுக்கு வாரிசாக விக்ரமைச் சொல்லலாம். உடல் எடையை பெருமளவிற்கு குறைத்து ‘சேது’வில் காட்டின வித்தியாசம் நிச்சயம் நல்ல விஷயம்தான். கதையின் சூழலுக்கு முற்றிலும் பொருத்தமானது. ஒரு இயக்குநராக பாலா பிரகாசித்த விஷயமும் கூட. (ஆனால் இதே பாலாவே ‘அவன் இவனில்’ விஷாலைப் படுத்தி எடுத்து வேலை வாங்கி ஆனால் மோசமான கதை மற்றும் திரைக்கதையினால் அந்தப் பாத்திரத்தை கேலிக்கூத்தாக்கியது வேதனையான விஷயம்.) ஆனால் விக்ரமிற்கு ‘சேதுவின்’ வெற்றியும் முன்உதாரண கமலும் இணைந்து அவரை பைத்தியக்காரனாக்கி விட்டது போலும். சமீபத்திய 'தாண்டவம்' சிறந்த உதாரணம்.

இப்போதெல்லாம் நடிகர்களுக்கு ‘சூப்பர் ஸ்டார்’ இமேஜூக்கு பொருந்துவதான ஆக்-ஷன் திரைப்படங்களைக் காட்டிலும் அதனோடு இணைந்து இந்த மாதிரியான 'வித்தியாச தோற்ற' விஷயங்களையும் இணைத்துக் கொள்வது உத்தரவாதமாக கால்ஷீட் வாங்குவதற்கு உபயோகமாகும் போலிருக்கிறது. ‘சார்,  இந்தப் படத்துல உங்களுக்கு வித்தியாசமான ரோல் சார். எல்லாருக்கும் மூக்குல ரெண்டு ஓட்டை இருக்குமில்லையா? உங்களுக்கு ஒரு ஓட்டைதான் இருக்கும். அதை வெச்சுதான் கிளைமாக்ஸ்ல ஒரு ட்விஸ்ட் வெச்சிருக்கோம்’. இன்னும் இரட்டை குறிகள், நான்கு புட்டங்கள், ஐந்து கிட்னிகள் உள்ள தமிழ் நாயகர்களையெல்லாம் பார்க்கப் போகிறோமோ என்கிற கற்பனையே திகிலாக இருக்கிறது.

இப்போது 'மாற்றானுக்கு' வருவோம்.

கமல், விக்ரமின் தொடர்ச்சியாக 'வித்தியாசமான' பாத்திரத்தை 'பேரழகனில்' ஏற்கெனவே சாதித்துக் காட்டியவர் சூர்யா. அதுவும் போதாமல் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாக 'மாற்றானில்' தோன்றியிருக்கிறார். இயக்குநர் கேவி ஆனந்த் எடுத்துக் கொண்ட கதைக்கு 'இரட்டையர்கள்' பாத்திரம் எந்த அளவிற்கு அவசியமானது? ஒன்றுமேயில்லை. பாதி படம் முடிந்த பிறகு இரட்டையர்களும் பிரிந்து விடுகிறார்கள். ஒரு மசாலா பட நாயகன் செய்யும் அதே வேலையைத்தான் இந்தப் பட நாயகனும் செய்கிறான். பின் எதற்கு இரட்டைப் பாத்திர கிம்மிக்ஸ்? ஏற்கெனவே குறிப்பிட்டிருந்த படி எதையோ வித்தியாசமாக காட்டி பார்வையாளனமிடமிருந்து பணம் பறிக்கும் அதே தந்திரம்தான் இரட்டைப் பாத்திரத்தின் நோக்கம்.

கதையை விடுத்து கே.வி.ஆனந்தின் இத்திரைப்படத்தை ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு பிரதியாகக் கூட அணுக முடியவில்லை. அவரின் முந்தைய படங்களில் (கனா கண்டேன், அயன், கோ) உள்ள அடிப்படையான சுவாரசியம் கூட 'மாற்றானில்' இல்லை. துவங்கும் போது மிகச்சிறப்பாகவே துவங்குகிறது. இரட்டைக் குழந்தைகளில் வளர்ந்து பெரியவர்களாவது வழக்கம் போல ஒரு பாடலின் பின்னணியில் சொல்லப்படுகிறது. பல சின்ன சின்ன சுவாரசியங்கள் இதில் வெளிப்படுகின்றன. இதற்காக உழைத்திருப்பதற்கு நிச்சயம் பாராட்ட வேண்டும். வளர்ந்த சூர்யாக்களும் வெவ்வேறு குணாதியங்களுடன் இருப்பதுவும் கூட சுவாரசியம்தான். ஆனால் இரட்டைப் பிறவிகளின் வேலை இங்கேயே முடிந்து விடுகிறது. கதையின் அவர்களுக்கான தேவை இல்லவே இல்லை. இடைவேளை வரை சற்றாவது சுவாரசியமாகச் செலகிற திரைப்படம் அதன் பிறகு ஒரு காட்டமான மசாலா நெடியுடனும் பல தர்க்கப் பிழைகளுடன் நொண்டியத்து எரிச்சலூட்டுகிறது. பில்லா - 2 திரைப்படத்தைத் தான் மறுபடியும் பார்த்துக் கொண்டிருக்கிறோமா என்று ரஷ்ய நில்ப்பின்னணியில் தனிமனிதன் ஒரு நாட்டின் ராணுவத்தையே நாயகன் சண்டையிட்டு முறியடிக்கும் அதிசாகச காமெடிகள் நிறைந்த பின்னணியில் பயணிக்கிறது. இதற்கு நடுவிலும் ஒரு கிளுகிளுப்பு பாட்டு வேண்டும்? என்ன செய்யலாம்? தான் தேடி வந்த ரஷ்ய பெண் பாலே டான்சராக இருப்பதாக காட்டலாம். அப்போதுதான் கொலைவெறிக்கு நடுவிலும் கிளுகிளுப்பாக நாயகன் 'கால் முளைத்த பூவே' என்று நடனமாட முடியும்.

ஒரு கச்சிதமான திரைக்கதையை அதன் இயல்பிற்கு நேர்மையாக பயணிக்க விடாமல் வணிகச் சினிமாவின் சூத்திரங்களை இடையில் இட்டு நிரப்பினால் எத்தனை ஆண்டுகளானாலும் தமிழ்ச் சினிமா இதே ஆபாச சகதியினுள்தான் சிக்கிக் கொண்டிருக்கும்.

சிதறுண்ட நாடுகளும் பின் தங்கிய நாடுகளும் தங்களின் சுற்றுலாத்தளங்களை பிரபலப்படுத்திக் கொள்ள இந்தியத் திரைப்படங்களை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் போலிருக்கிறது. படப்பிடிப்பிற்கான இடத்தை இலவசமாகவும் வெண்ணையால் செய்த 'திமுசுக்கட்டைகளை' சலுகை விலையில் வழங்குகிறார்கள் போலும். எனவேதான் கிராமத் வறட்டி தட்டும் நாயகன் தன்னுடைய டூயட்டை வெளிநாட்டு பின்னணியில் பாடுகிறான்.

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை வைத்துக் கொண்டு எத்தனை அழகான டிராமாவை உருவாக்கியிருக்கலாம்? இரண்டு பேரும் ஒரே பெண்ணை காதலித்தால்?.... இதற்கான சந்தர்ப்பமும் ஆனந்தின் திரைக்கதையில் இருந்தது. ஆனால் அதில் ஆழமாக போகாமல் சில நொடிக் காட்சிகளிலேயே விட்டு விட்டார் இயக்குநர். இதில் இவர்களின் தகப்பன்தான் வில்லனாக வருகிறார். ஒருவன் அப்பனை எதிர்ப்பனாகவும் இன்னொருவன் அவரை காப்பாற்றுவனாகவும் ஒருவரின் முயற்சியை மற்றொருவர் முறியடித்துக் கெர்ண்டே வந்தால் எத்தனை அற்புதமான திரைக்கதையாகியிருக்கும். (இங்கு மகாதேவன் வாசனை வருவதாக நானே உணர்வதால் நிறுத்தி்க் கொள்கிறேன்).

எஸஜே சூர்யா இயக்கிய 'வாலி' நினைவுக்கு வருகிறது. இதே போல் இரட்டையர்கள்தான். ஒரே பெண்ணை அடைய விரும்புகிறார்கள். இந்த புள்ளியை வைத்துக் கொண்டு எத்தனை சிறப்பான திரைக்கதையை உருவாக்கியிருந்தார் அவர்? பாவம். ப்ளேபாய், செக்ஸ் காமெடி என்கிற சகதியில் அவரை அமிழ்த்தி அழித்து விட்டார்கள். அவரும் அதற்கு உடந்தையாய் இருந்து மறைந்து போனார்.

இருவேறு குணாதிசய பாத்திரங்களை அற்புதமாக வெளிப்படுத்திய சூர்யாவின் உழைப்பும், இரண்டு பாத்திரங்களை கச்சிதமான ஒளியில் பொருத்திக் காட்டிய ஒளிப்பதிவாளர் மற்றும் கணினி நுட்பக் குழுவின் உழைப்பும் எடிட்டர் ஆன்டனியின் உழைப்பும் (பாவம் சட்டியில் இருந்தால்தானே அவரும் அகப்பையில் கொண்டு வர முடியும். 'கோ'வில் வரும் 'அக நக' பாட்டையும் மாற்றானில் வரும் 'தீயே தீயே' பாடலையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.) கே.வி.ஆனந்த் என்கிற இயக்குநரின் வணிக நோக்கத்தினாலும் மோசமான திரைக்கதையினாலும்  பாழானதுதான் மிச்சம். 'இரட்டையர்களான' சுபா அடுத்த திரைப்படத்திலாவது 'கெமிக்கல்' வாசனையில்லாத ஒரு கதையை முயற்சித்துப் பார்க்கலாம்.
suresh kannan

Thursday, October 11, 2012

டைம்பாஸ் - விகடனின் 'ஆல்டர் ஈகோ'



சமீபத்தில் விகடன் குழுமத்திலிருந்து புதிதாய் வெளிவந்திருக்கும் 'டைம்பாஸ்' வார இதழை 'முதல் இதழ்' என்பதால் சோதனை முயற்சிக்காக வாங்கிப் பார்த்தேன். 'அச்சு விபச்சாரம்' என்று பேஸ்புக்கில் பத்திரிகையாளர் ஞாநி குறிப்பிட்டிருப்பதில் மிகையேதும் இல்லையோ என்று தோன்றுகிறது.

தமிழ் வெகுஜன இதழ்களில் விகடனுக்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு. கேலிச்சித்திர அட்டைகள், மதனின் சிரிப்புத் திருடன் சிங்காரவேலு வகையறா நகைச்சுவை, முத்திரை எழுத்தாளர்களின் சிறுகதைகள் (ஜெயகாந்தன்), மதிப்பெண் சினிமா விமர்சனங்கள், ஆபாசமில்லாத, உறுத்தாத நகைச்சுவைக் கட்டுரைகள்..என்று விகடனுக்கென்று ஒரு நல்ல முகமும் அடையாளமும் இருந்தது. பிரகாஷ்ராஜ், சேரன், வடிவேலு போன்றவர்களின் கட்டுரைத் தொடர்கள் வந்து கொண்டிருந்த சமயத்தில் பல வருடங்களாக விகடனை வாங்கிக் கொண்டிருந்தேன். ஆசிரியர் குழு மாற்றமடைந்து விகடன் அதன் புற வடிவத்தில் மாறி நடிகைகளின் பளபள இடுப்புப் பிரதேசத்தில் தஞ்சம் புகுந்தவுடன் வாங்குவதை நிறுத்தி விட்டேன். பின்பு சமீபத்தில் இரண்டொரு இதழ்கள் வாங்கி (அசோகமித்திரன் பேட்டி காரணமாக) சரிப்படாமல் விட்டு விட்டேன்.

உலகமயமாக்க காலகட்டத்தில் பெரும்பான்மையாக எல்லாமே வணிக நோக்குச் சிந்தனைகளாகி 'லட்சியவாதம்' என்பதே செல்லாக்காசாகி விட்டதால், கடுமையான சந்தைப் போட்டியை எதிர்கொள்ள விகடன் தொடர்ந்து செய்து வரும் சமரசங்களைக் கூட ஒரளவிற்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அந்தக் குழுமத்திலிருந்து வெளிவந்திருக்கும் 'டைம்பாஸ்' முன்வைக்கும் ஆபாசத்தை இதழியலின் மோசமான அடையாளம் எனக் கூறலாம்.

எல்லா புனிதமான பாவனைகளுக்கு மறுபுறம் இன்னொரு மோசமான, குரூரமான, வக்கிரமான முகமிருக்கும். பெரும்பாலும் எல்லா மனிதர்களுக்கும் இது பொருந்தும். விகடன், எஞ்சியிருக்கும் தன்னுடைய பாரம்பரியப் பெருமையைக் காப்பாற்றிக் கொள்ள தன்னுடைய ஆல்டர் ஈகோ'வாக இந்த இதழைத் துவங்கியிருக்கிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

'மக்களால் அங்கீகரிக்கப்பட்ட xx போர்னோ பத்திரிகை' என்ற அடையாளத்தை பன்னெடுங்காலமாக 'குமுதம்' என்கிற வார இதழ் காப்பாற்றிக் கொண்டு வருகிறது. ஆனால் அந்தப் பத்திரிகையே வெட்கப்படுமளவிற்கான ஆபாசமும் வக்கிரமும் 'டைம்பாஸில்' நிறைந்திருக்கிறது. நடிகைகளின் அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கும் கிசுகிசுக்கள், வம்புச் செய்திகள், மாடல்களின் முக்கால்நிர்வாண புகைப்படங்கள் என்று பக்கத்திற்கு பக்கம் தனிமனிதனின் வக்கிரங்களுக்கு தீனி போட்டிருக்கும் பணியைச் சிறப்பாக செய்திருக்கிறது டைம்பாஸ். இவைதான் நடுத்தரக் குடும்பங்களின் வரவேற்பறைகளில் கிடக்கப் போகும், பாலியல் பற்றி முறையான அறிமுகமில்லாத இளைய தலைமுறையினர்களின் கண்களில் படப்போகும் பத்திரிகை என்பதால் திகிலாக இருக்கிறது.

இந்தப் புகாரை ஒரு கலாச்சார காவலனாக, ஆபாசப் பத்திரிகைகளை, காணொளிகளை பார்க்காதிருப்பதாக பாவனை செய்யும் பாசாங்குக்காரனாக சொல்லவில்லை. முன்பு மருதம், திரைச்சித்ரா (?1) போன்ற மென்பாலியல் இதழ்கள் செய்து கொண்டிருந்த சேவையை (இப்போது சினிக்கூத்து என்றொன்று இருக்கிறது என்றறிகிறேன்) பாரம்பரியப் பெருமையை இன்னும் வைத்திருக்கும் விகடனும் செய்ய வேண்டுமா என்று அதன் முன்னாள் வாசகனாக எனக்குச் சங்கடமாக இருக்கிறது.

காந்தியை நினைவுப்படுத்தும் பொக்கை வாய்ச்சிரிப்புடனும் தலையில் கொம்புடனும் இருக்கும் விகடன் தாத்தாவின் உருவத்தை ரசிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஆனால் கேலிச்சித்திரங்களில் உருவம் சிறிது சிறிதாக மாறி விபரீதமான அர்த்தத்தை தருவதைப் போன்று தாத்தாவின் தலையிருக்கும் கொம்பு நீண்டு 'டைம்பாஸ்' வடிவில் ஒரு சாத்தான் உருவமாகிக் கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

ஏற்கெனவே சீர்கெட்டுப் போயிருக்கும் தமிழ்ச் சூழலின் தரத்தை மாற்றுவதற்காக பாடுபடக்கூட வேண்டாம். அதை இன்னும் கீழிறக்கும் பணியில் ஈடுபடாமலிருந்தாலாவது புண்ணியமாய்ப் போகும். தமிழ் வாசகனுக்கு வேண்டுமானால் டைம் 'பாஸ்' ஆகலாம். ஆனால் வருங்கால தமிழ்ச் சமுதாயம் இன்னமும் மோசமாகி 'ஃபெயிலாகி'ப் போகும்.

suresh kannan

Tuesday, October 09, 2012

சட்டம் எனும் விலங்கு - Présumé coupable



Présumé coupable  ஒரு பிரெஞ்சுத் திரைப்படம்.

அப்பாவியான ஒரு மனிதன் சட்டத்தின் கருணையில்லாத கண்களில் சிக்கி சின்னா பின்னாமாகிறான். பார்வையாளர்களில் நம்மில் எவருக்கும் இது நேரலாம் என்கிற திகிலான செய்தியை மிக ஆழமாக வாழைப்பழ ஊசியாக உள்ளிறக்குகிறது திரைப்படம். ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.



Alain Marécaux  ஒரு நள்ளிரவில் காவல் துறையினரால் முரட்டுத்தனமாக கைது செய்யப்படுகிறார். கூடவே அவரது மனைவியும். அவர்கள் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுதான் கொடுமையானது. குழந்தைகள் மீதான வன்புணர்ச்சி. Alain சினமுறுகிறார், கத்துகிறார், கதறுகிறார், கண்ணீர் விடுகிறார். எந்தவொரு பயனுமில்லை. அடிப்படையான ஆதாரம் ஏதுமில்லாத பல யூகமான ஆதாரங்களை, குற்றச்சாட்டுக்களை காவல்துறை வைக்கிறது. "அப்பா என்னிடம் 'என்னமோ' செய்தார்' என்று அவருடைய சொந்த மகனையே சொல்ல வைக்கிறது. எந்தவொரு தகப்பனுக்கும் ஏற்படக்கூடாத நிலை. 'வேலை வேலை' என்று குழந்தைகள் மீது போதுமான அளவு அன்பு செலுத்தாமலிருக்கிறோமோ என்று ஏற்கெனவே குற்றவுணர்வில் இருக்கும் அவருக்கு இந்தக் குற்றச்சாட்டு தலையில் இடியை இறக்குகிறது. பல முறை தற்கொலைக்கு முயல்கிறார். கடுமையாயிருக்கும் இளம் நீதிபதி மனிதாபிமானம் சற்றுமில்லாமல் சட்டத்தின் விதிகளை இறுகப்பிடித்து தொங்குகிறார். இறுதியில் என்னவாயிற்று என்பதை படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Alain Marécaux ஆக Philippe Torreton உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார். மிகையாகச் சொல்லவில்லை. உண்மையாகவே. இதற்காக சுமார் 50 பவுண்டு எடையை இழந்திருக்கிறார். படத்தைப் பாருங்கள். உங்களுக்கே மிக அதிர்ச்சியாயிருக்கும். நமது சிக்ஸ் பேக் நாயகர்கள் செய்யும் கிம்மிக்ஸ் இல்லை.

படம் முழுக்க முழுக்க Alain பின்னாலேயே அலைகிறது. காவல்துறை மிரட்டல்கள், விசாணைக்கான அலைக்கழித்தல்கள், சிறைத்தனிமை, தற்கொலை முயற்சிகள், செய்யாத குற்றத்திற்காக தண்டனை அனுபவிக்கும் சுயபச்சாதாபம், என்றாவது விடுதலை ஆகி விடுவோம் என்கிற சிறு நம்பிக்கை... இவைதான் படம் முழுக்கவே. பெரும்பான்மையாக வேறு எந்தக் காட்சிகளும் இல்லை. ஒரு கணத்தில் நாமே Alain ஆக உணர்கிறோம். அவர் தற்கொலைக்கு தொடர்ந்து முயலும் போது ஒரு கணத்தில் அது சரிதான் என்று நமக்குத் தோன்றி விடுகிறது.

மனிதர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவைதான் சட்டங்கள். ஆனால் அவை பூமராங் போல கண்மூடித்தனமாக ஒரு தனிமனிதனை குரூரமாக தாக்கும் போது, தவறு சட்டங்களின் மீதா அல்லது அவற்றை முறையாக கையாளத் தெரியாத அமைப்புகள், மனிதர்கள் மீதா என்கிற ஆதாரமான சந்தேகக் கேள்வியை அழுத்தமாக ஏற்படுத்துகிறது திரைப்படம். நிச்சயம் காணத் தவற விடக் கூடாதது.


suresh kannan

பக்கிராம் ஸ்பீக்கிங்.....


மேற்கண்ட வசனத்தை கேட்டவுடன் உங்கள் மூளைக்குள் உடனே மணியடித்தால் உங்களின் நினைவுத் திறன் நன்றாக இருக்கிறதென்று பொருள். :)

இயக்குநர் ஃபாசில் இயக்கிய 'அரங்கேற்ற வேளை' திரைப்படத்தில்தான் இந்த வசனம் வரும். ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங் என்கிற மலையாளத் திரைப்படத்தின் மறுஉருவாக்கமிது. மலையாளத்தில் சித்திக்-லால் இயக்கம். கதையை அப்படியே வைத்துக் கொண்டு பாத்திரங்களை மாற்றி வைத்து தமிழில் உருவாக்கியிருந்தார் ஃபாசில்.

இந்தப்படம் வெளியான புதிதில் (1990) ஏனென்று சொல்ல முடியாத காரணத்திற்காக, அந்த சந்தோஷத்திற்காக, நான்கைந்து முறை பார்த்தேன். திரையரங்கமே உருண்டு புரண்டு சிரித்து சற்று கலங்கி நிறைவடையும் ஃபீல் குட் திரைப்படம். தமிழில் அதுவரை பெரும்பாலும் முயற்சி செய்யப்படாத மென் நகைச்சுவையை முதன் முதலில் இத்திரைப்படத்தில் கண்டிருந்ததால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றியதோ என்று இப்போது தோன்றுகிறது. 
 
பிறகு பல முறை இத்திரைப்படத்தை நினைத்துக் கொள்வேன். ஆனால் பார்க்க வாய்க்கவில்லை. இணையத்திலும் டிவிடி கடைகளிலும் பல வருடங்களாக இத்திரைப்படத்தை தேடிக் கொண்டேயிருந்தேன். சமீபத்தில் மின்னணு சாதனங்களின் மெக்காவான, அண்ணாசாலை ரிச்சி தெருவிற்கு சென்றிருந்த போது இதன் குறுந்தகடைக் கண்டேன். 'கண்டேன் சீதையை' என்கிற பரவசத்தோடு நெருங்கினால் கூடவே சிறிய நெருடலும் இருந்தது. இதன் கூடவே 'தாலாட்டு கேட்குதம்மா, என் தங்கச்சி படிச்சவ' போன்ற மொக்கைகளும் ஒட்டிக் கொண்டிருந்தன. தனிப்படமாக கிடைக்கவில்லை. இவ்வாறான காம்பினேஷன் தகடுகளில் வீடியோ கம்ப்ரஸ்ஸன் காரணமாக படத்தின் தரம் குறைவாகவே இருக்கும். வேறு வழியில்லை.

மூன்று வெவ்வேறு நபர்கள். அவர்களின் தனித்தனியான அறிமுகம். நகைச்சுவையான ஆரம்பம். செல்லச் சண்டைகள். அவர்களின் இன்னொரு சோகமான பக்கம். நிதித் தேவைகள். சிக்கல்களாக விரிகிறது. போன் மாறாட்டக் குழப்பம் காரணமாக பணத் தேவைகள் பூர்த்தியாககக்கூடிய சந்தர்ப்பம். தொடரும் நகைச்சுவையான சாகசங்கள், குழப்பம், மீண்டும் சிக்கல். பிறகு வழக்கம் போல் சுபம். ஒரு வணிகத் திரைப்படத்திற்கு தேவையான கச்சிதமான திரைக்கதை. ஃபாசில் இதை மிகச் சிறப்பாக கையாண்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக ஃபாசிலின் படங்களில் அகம் சார்ந்த உணர்வுகள் சிறப்பாக கையாளப்பட்டிருக்கும். அவரின் 'பொம்முக்குட்டி அம்மாவிற்கு' எனக்கு பிடித்த ஒன்று. மலையாளத்தில் முகேஷின் பாத்திரத்தை தமிழில் ரேவதிக்கு பொருத்தமாக மாற்றியமைத்ததில் அவரின் திரைக்கதை மேதமை பளிச்சிடுகிறது.

பிரபுவிற்கு மிகப் பொருத்தமான பாத்திரம். அப்பாவியான ஆனால் செயற்கையான வீராப்பை காட்டும் 'சிவராக கிருஷ்ணணை' நன்றாக வெளிப்படுத்தியிருந்தார். ரேவதிக்கு இம்மாதிரியான குறும்புத்தனமான பாத்திரமெல்லாம் 'மெளனராகம்' சமயத்திலிருந்தே அத்துப்படியென்பதால் அனாயசமாக நடித்திரு்நதார். 
 
தமிழ் நகைச்சுவையின் மீது ஜெ வைத்திருக்கும் புகாருக்கு சிறந்த உதாரணம் விகே ராமசாமி. எதையும் வாயை நன்றாக திறந்து உரத்த குரலி்ல் உரத்த சிரிப்பில் நடிப்பது இவரது பாணி. சமயங்களில் முகஞ்சுளிக்கும் ஆபாசங்களை நகைச்சுவையில் ஒளித்துக் காட்டுவதும். 'இன்று என் மனைவியுடன் சந்தோஷமாக இருந்தேன்' என்பதைக் கூட நாலு தெருவிற்கு கேட்கும்படிதான் இவர்களால் வசனம் பேச முடியும்.  நாடகத்திலிருந்து திரைக்கு வந்தவர்கள் பெரும்பாலும் இவ்வகையான புகாரிலிருந்து தப்பிக்க முடியாது. கவுண்டமணி, சந்தானம் போன்றவர்கள் விகே ராசாமியின் ஒரு வகையான நீட்சி எனலாம். தமிழ் ரசிகர்களுக்கு இவ்வாறான உரத்த நகைச்சுவை பழக்கப்பட்டு விட்டதால் இதிலிருந்து மீள்வது கடினம். 
 
என்றாலும் ஒரு காட்சியில் விகே ராமசாமியின் சிறந்த நடிப்பைக் கண்டேன். போன் மாறாட்டக் குழப்பங்கள், சண்டைகளெல்லாம் முடிந்து பிரபுவும் ராமசாமியும் வீட்டிற்கு வருவார்கள். ராமசாமி இன்னும் அதே பயத்தோடே இருப்பார். 'நம்பினார், இனி பயமில்லை.பணம் கைக்கு வந்தாச்சு. நாம லட்சாதிபதிகளாயிட்டோம்' என்று பிரபு சந்தோஷமாக சொல்லும் போது கூட அதை முழுவதும் ஏற்றுக் கொள்ள முடியாத பயத்தோடேயே அசட்டுத்தனமாக சிரிப்பார். ஜெய்கணேஷின் மகளாக நடித்திருப்பவர் முன்னர் பேபி அஞ்சு'வாக இருந்தவர் என்பதை சில பல முறைக்குப் பிறகுதான் கண்டுகொள்ள முடிந்தது.

படத்தின் இசை இளையராஜா. 'ஆகாய வெண்ணிலாவே' என்கிற பாடல் எப்போதுமே எனக்குப் பிடித்தமானது. இந்தப்பாடலில் இறுதியாக வரும் பல்லவியில் பிரபுவின் நடன உடலசைவு விநோதமாகவும் பிடித்தமானதாகவும் இருக்கும். 'தாயறியாத தாமரையோ' என்கிற இன்னொரு பாடலும் சிறப்பானது. ராஜாவின் சோதனை முயற்சியின் அடையாளங்களுள் ஒன்று. இதைப் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். மனோவின் குரலில் ஆரம்பிக்கும் 'மெலடியான' பல்லவிக்கு முரணாக சரணம் வேகமான தாள அசைவில் இருக்கும். பல்லவியும் சரணங்களும் வேறு வேறு பாணியில் இருக்கும் பிரத்யேகமான பாடலிது. ஃபாசில் இந்தப் பாடலை சூழலுக்கேற்றவாறு சிறப்பாக பயன்படுத்தியிருப்பார்.

சில பல வருடங்கள் கழித்து இத்திரைப்படத்தை சமீபத்தில் காணும் போதும் ஏறத்தாழ பதின்மங்களில் அடைந்த அதே மனஉற்சாகத்தை அடைந்தேன்.

suresh kannan