Showing posts with label பகடி. Show all posts
Showing posts with label பகடி. Show all posts

Saturday, January 23, 2010

(ஆயி)ரத்தில் ஒருவன்

அய்யோ! ஆ.ஒ. குறித்து இன்னொரு பதிவா என்று டென்ஷன் ஆகாமல் பொறுமையாக வாசிக்குமாறு வேண்டுகிறேன்.

நவீன தமிழ் இலக்கியத்தின் துவக்கியப் புள்ளியாக பாரதியை பெரும்பாலான விமர்சகர்கள் குறிப்பிடுவது போல நவீன தமிழ் சினிமாவின் துவக்கப் புள்ளியாக மணிரத்னத்தை குறிப்பிடலாம் என்பது என் அனுமானம். கதை சொல்லும் முறையிலும் காட்சிப்படுத்தும் முறையிலும் புதுமைப்பித்தனின் தவளைப் பாய்ச்சல் நடையை அவர் திரையில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். மணிரத்னத்தின் முந்தைய உருவாக்கங்களைத் தவிர்த்து 'நாயகனை' நவீன தமிழ் சினிமாவின் முதல் அடையாளம்' என்று கூட சுட்டிக் காட்டலாம். (இது காட்பாதரை தழுவி எடுக்கப்பட்டது என்னும் புகாரில் உண்மையிருக்கிறது என்றாலும் இதையே எஸ்.பி. முத்துராமன், ராஜசேகர் போன்ற வணிகநோக்குப்பட இயக்குநர்கள் கையாண்டிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்பதையும் சினிமா ஆர்வலர்கள் யோசித்துப் பார்க்கலாம்). மணிரத்னம் என்னும் நவீனப் புள்ளியின் தொடர் கண்ணிகளாக விளங்கும் தமிழ் சினிமா இயக்குநர்கள் யார் யார் என்று பார்த்தால் பாலா (சேது), அமீர் (பருத்திவீரன்), கெளதம் மேனன் (காக்க காக்க), மிஷ்கின் (அஞ்சாதே) என்று ஒரு சில பெயர்களே காணக் கிடைக்கின்றன.



இந்த வரிசையில் செல்வராகனையும் நிச்சயம் இணைத்துக் கொள்ளலாம். அவரது முந்தைய உருவாக்கங்களில் துள்ளுவதோ இளமை, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆகிய திரைப்படங்களை சில குறிப்பிட்ட முன்மாதிரியான அம்சங்களுக்காக மாத்திரம்  பாராட்டலாமே ஒழிய அவற்றை முழுமையான திரைப்படங்களாக என்னால் கருத இயலவில்லை. ஆனால் 'காதல் கொண்டேன்' திரைப்படத்தை ஒரு முழுமையான கலைஉணர்வு சார்ந்த படைப்பாக என்னால் சுட்டிக் காட்ட இயலும். விளிம்பு நிலையிலிருந்து மைய நீரோட்டத்தில் கலக்க வரும் ஒருவன் எதிர் கொள்ள வேண்டிய சிக்கல்களையும் பால்விழைவு சார்ந்த மனப்போராட்டத்தையும் அதன்காரணமாக ஏற்படும் உளச்சிதைவையும் அத்திரைப்படம் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கும். இந்நிலையில் செல்வராகவனின் 'ஆயிரத்தில் ஒருவன்' ஆரம்பத்திலிருந்தே மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் ஆவலையும் பார்வையாளர்களிடையே கொண்டிருந்தது. ஒருவகையில் அதிக எதிர்பார்ப்பே படத்தின் வெற்றிக்கும் முன்தீர்மானத்தோடு அணுகும் ரசிகமனோநிலைக்கும் ஆபத்தாய் அமைந்துவிடும். எனவேதான் மணிரத்னம், ஷங்கர் போன்றவர்கள் தங்களின் உருவாக்கங்களைப் பற்றின எந்தவொரு விஷயத்தையும் கசியவிடாதவாறு பார்த்துக் கொண்டனர். அதையும் மீறி கசியும் அல்லது தயாரிப்பாளர்கள் வேண்டுமென்றே கசிய விடும் செய்திகளைக் கொண்டு பார்வையாளர்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொள்ளும் முன்தீர்மான பிம்பங்கள் திரையில் நொறுங்குவதைக் காணும் போது அந்த ஏமாற்றத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.

இது ஒருபுறமிருக்க தமிழ்ச்சினிமாவை பாதிப்பிற்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கும் இன்னொரு நோய்க் குறியீடு 'பிரம்மாண்டம்' என்னும் கருத்தாக்கம். சந்திரலேகா, ராஜராஜசோழன் போன்ற புராதன உருவாக்கங்களை தவிர்த்து இதையும் நவீன சினிமாவில் இருந்து துவங்க வேண்டுமென்றால் அதன் புள்ளியாக கே.டி.குஞ்சுமோன் + பவித்ரன் கூட்டணியைச் சொல்லலாம் என்று கருதுகிறேன். ஒரே ஒரு கதைத் துளியை வைத்துக் கொண்டோ சமயங்களில் அதுவுமில்லாமலோ, அதை பிரம்மாண்டமான வெற்றுச் சாகசங்களால் நிரப்ப முயல்வது. ஜீப்களை அந்தரத்தில் பறப்பது, பாடலில் நூற்றுக் கணக்கானவர்கள் பாடல் காட்சிகளின் பின்னணியில் ஆடுவது போன்ற அபத்தங்களால் இத்திரைப்படங்கள் நிரம்பியிருக்கும். பவித்ரனிடம் உதவி இயக்குநராக இருந்த ஷங்கர் இந்த முறையை ஒரு வணிக வெற்றியின் அடையாளமாகவே மாற்றிவிட்டிருக்கிறார். அர்த்தமில்லாத சடங்காகவே நீடிக்கும் இத்திரைப்படங்களின் செலவுத் தொகைகள் வணிக நோக்கத்திற்காக பெரும்பாலும் ஏற்றியே சொல்லப்படுகிறது. பார்வையாளனுக்குச் சம்பந்தமேயில்லையெனினும் அவனும் கூட 'எத்தனை கோடிகளில் உருவாக்கப்பட்டது; எத்தனை கோடிகளில் வியாபாரமானது' என்கிற விவாதத்தை தம்முடைய அரட்டையில் இணைத்துக் கொள்கிறான். 'ஆயிரத்தில் ஒருவனும்' இதே போன்தொரு நோக்கிலதான் பார்க்கப்படுகிறது. ஏறத்தாழ முப்படி கோடி ரூபாய்க்கும் மேலாக செலவு, மூன்று வருடங்களுக்கும் மேலான படப்பிடிப்பு, இயக்குநரின் நேர்காணலில் தெரியும் அலட்டல்கள்.. பார்வையாளனிடம் அதிக எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டிருக்கிறது.

இணையத்திலும் பத்திரிகைகளிலும் 'ஆயிரத்தில் ஒருவனுக்கு' எழுதப்பட்ட விமர்சனங்களில் பொதுவாக இருவகைகளைக் காண முடிந்தது. ஒன்று, தமிழ்ச்சினிமாவில் புதிய களம், முயற்சி, அற்புதம், ஆகா, ஒகோ என்று கண்மூடித்தனமாக பாராட்டப்பட்ட வகை. இன்னொன்று, திரைக்கதை குழப்பம், சில ஆங்கிலப்படங்களின் பாதிப்பு, தேவையில்லாத கவர்ச்சி, வரலாற்றுத் தரவுகளின் பிழை.. என்று இயக்குநரை போட்டுச் சாத்தியிருந்த வகை. இரண்டு வகைகளின் நடுவில்தான் உண்மை ஒளிந்து கொண்டிருந்ததாக எனக்குத் தோன்றியது. சினிமா குறித்தான அடிப்படை ஆர்வமும் அறிவும் கொண்ட என்னுடைய நண்பரொருவர் இத்திரைப்படத்தைப் பார்த்துவிட்டு முழுமையாக திரும்பியிருந்தார். அவரிடம்  இத்திரைப்படம் குறித்து கேட்ட போது ... Shit.. என்று ஒரே வார்த்தையில் புறக்கணித்தார். (இடுகையின் தலைப்பை கவனிக்கவும்). நல்ல வேளையாக fucking shit .. என்று சொல்லவில்லை.

இந்தப் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு 'ஆயிரத்தில் ஒருவனை' அணுக முயல்வோம்.

()

பொதுவாக தமிழ்ச் சினிமாவின் தரம் குறித்து சலிக்காமல் நாம் தொடர்ந்து புகார் செய்து கொண்டேயிருக்கிறோம். என்னுடைய வலைப்பூவே அதற்கொரு சிறந்த உதாரணம். ஆனால் வழக்கமான வார்ப்புகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு ஒரு புதிய முயற்சி படைக்கப்படும் போது அதிலுள்ள குறைகளை சற்று ஒதுக்கி வைத்து விட்டு அதற்கான அடிப்படை பாராட்டை நாம் வழங்குகின்றோமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. நம்முடைய மேதமைகளைக் காட்ட இதுதான் சமயமென்று சிறிய பிழைகளைக் கூட பூதாகரமாக சுட்டிக் காட்டி மொத்த படைப்பையுமே நிராகரிக்கிறோம். இது ஒரு தவறான போக்காக எனக்குப் படுகிறது. ஆ.ஒ.வின் இயக்குநர் அப்படி என்னதான் தவறிழைத்துவிட்டார் என்று பார்க்கலாம்.

இது ஒரு புனைவு சார்ந்த திரைப்படமென்று ஆரம்பத்திலேயே பார்வையாளர்களுக்கு தெளிவாக்கப்பட்டு விடுகிறது. புனைவு என்று வரும்போது ஒரு படைப்பாளி அதிகபட்ச சுதந்திரத்தை எடுத்துக் கொள்ள இயலும். அவனே ஒரு மாய உலகத்தை அத்தனை நுணுக்கங்களுடன் சிருஷ்டிக்க முடியும். ஒரு கலைஞன் கடவுளுக்கு இணையாக அமரும் தருணமது. விஞ்ஞானிகள் கூட இயற்கையில் ஒளிந்திருக்கும் உண்மைகளின் மீது வெளிச்சம் பாய்வதைத் தான் செய்ய முடிகிறது. ஆனால் கலைஞன் விஞ்ஞானிகளுக்கும் ஒருபடி மேலே சென்று இயற்கையையே படைக்கிறான். 'அவதார்' ஒரு சிறந்த சமீபத்திய உதாரணம். செல்வராகவன் அதைத்தான் செய்ய முயற்சித்திருக்கிறார். ஏழு தடைகளுக்குப் பின்பாக இறுதிக் கட்டத்தை அடைவது போன்ற திரைக்கதையிலுள்ள தடயங்கள் நம்முடைய புராதன கதை மரபை நினைவுப்படுத்துகின்றன. 

இத்திரைப்பட உருவாக்கத்தின் ஆரம்பக் கட்டத்தில்  இயக்குநரும் தயாரிப்பாளரும் யதார்தத்தில் நிகழ்த்தியிருக்கக்கூடிய விவாதங்களை யூகிக்க முயல்வோம். 'வரலாற்றுத் தொடர்ச்சியுடன் கூடிய முன்னோர்களின் பகையை சமகாலத்தின் பின்னணியில் சொல்கிறோம்' என்று இயக்குநர் தம்முடைய விவரிப்பைத் தொடங்கிய கணமே கேட்டிருப்பவர்கள் தங்களின் பின்புறத்தால் சிரித்திருக்கக்கூடும். ஏனெனில், காதலை அல்லது வன்முறையை அடிப்படையாகக் கொண்ட படம் வெற்றி பெற்றால் உடனேயே அதே போன்று புற்றீசல்கள் போல் வெளிவந்துக் கொண்டிருக்கும் தமிழ்ச்சினிமா சூழலில் இப்படியான அதீத கற்பனைக்கு உடனேயே அங்கீகாரம் கிடைத்திருக்காது; மாறாக அது சாத்திமற்ற ஒன்றாகவோ நகைச்சுவையாகவோத்தான் அணுகப்பட்டிருக்கும். ஒரு புதுமுக இயக்குநரால் இவ்வாறான ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கவே முடியாது என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். செல்வராகன் முந்தைய படைப்புகளால் தம்மை ஒரளவு நிருபித்துக் கொண்டிருப்பவர் என்பதால் பெரு முயற்சிக்குப் பின் இதற்கான ஒப்புதலைப் பெற்றிருப்பார். 'எதையாவது செய்து' பொருளீட்டிவிடும் வணிகமதிப்புக் கனவுகளில் மிதக்கும் தயாரிப்பாளர்கள் அரைமனதுடன் இதற்கு சம்மதித்திருப்பார்கள். ஆக.. இப்படியொரு தமிழ்ச்சினிமாவில் இப்படியொரு புனைவை யோசிப்பதே பெரிய விஷயம் எனும் போது அதை படைப்பாகவும் சாதித்துக் காட்டிய செல்வராகவனை நிச்சயம் நாம் முதலில் பாராட்டியாக வேண்டும்.

தமிழ்சினிமா இப்போதும் கூட தவழும் நிலையில்தான் உள்ளது என்று முன்னொரு பதிவில் கூறியிருக்கிறேன். இவ்வாறான முயற்சிகளின் மூலம்தான் அது எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறது என்று கூறலாம். எனவே தத்தித் தத்தி வரும் ஒரு குழந்தையை "ஏன் உன் நடை கோணலாக இருக்கிறது,  ஏன் வாயில் ஜொள் வடிகிறது, ஏன் தலைமுடி கலைந்திருக்கிறது' என்று விமர்சகர்கள் கேட்பதெல்லாம் சற்று அராஜகமாகவே தோன்றுகிறது.

()

புராதன வரலாற்றையும் சமகாலத்தையும் இணைக்கும் படியான இவ்வாறான கதையமைப்பு தமிழ்த் திரையுலகிற்கு புதியதா என்றால் இல்லை. சட்டென்று நினைவுக்கு வரும் முன்உதாரணத்தை சுட்டிக் காட்டலாம். நாசர் இயக்கத்தில் வெளிவந்த தேவதை. அதுவரைக்கும் வரலாற்று மன்னர்களின் தோற்றம் குறித்து பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட பிம்பங்களை உடைத்துவிட்டு 'இப்படித்தான் அவர்கள் இருந்திருப்பார்களாக இருக்கும்' என்கிற உணர்வை ஏற்படுத்துமளவிற்கு அதில் சித்தரிக்கப்பட்டிருந்த மன்னரும் சூழலும்  இயல்பாக அமைந்திருக்கும். இதன் பின்னணியில் டிராஸ்ட்கி மருதுவின் பங்களிப்பு இருந்தது என்பதாக ஞாபகம். ஆனால் தேவதை திரைப்படம் முற்பாதியில் வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையிலும் பிற்பாதியில் சமகாலத்தில் அதன் தொடர்ச்சி நிகழ்வதைப் போலவும் இருபிரிவாக பிரிந்திருக்கும். ஆனால் ஆ.ஒ. இரண்டுமே சமகாலத்தில் ஒரே சமயத்தில் நிகழ்வதைப் போல கற்பனை செய்திருப்பதுதான் புதுமை.

பொதுவாக இவ்வாறான வரலாற்றுப் புனைவு ரீதியான திரைப்படங்களை, பார்வையாளன் இயக்குநரிடம் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்வதின் மூலம்தான் படைப்பை முழுமையாக ரசிக்க முடியும். மறுபடியும் அவதாரையே உதாரணமாக சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அவ்வாறின்றி இது ஏன், அது எப்படி என்கிற கேள்விகளுடன் அமர்ந்திருந்தால் அதிருப்தியோடுதான் அரங்கிலிருந்து வெளியேற வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கு கதை சொல்லும் போது அவர்கள் தொணதொணத்துக் கொண்டிருந்தால் 'கதைக்கு கை கால் கிடையாது. அதனால சொல்றதக் கேளு' என்று அவர்களின் வாயை அடைக்கிற நம்முடைய நடைமுறை அனுபவத்தையே இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். எனவே இவ்வாறான புனைவு ரீதியான திரைப்படங்களில் தர்க்க ரீதியான சமாச்சாரங்களை அதிகம் எதிர்பார்க்க முடியாது; கூடாது. எனவே பார்வையாளன் சோழ, பாண்டியர் தொடர்பான வரலாற்றுப் பிழைகளை காண விழையாமல் இயக்குநர் காண்பித்த படியே இத்திரைப்படத்தை அணுகுவது இடையூறில்லாத காண்பனுபவத்திற்கு உதவி செய்யும்.

திரைக்கதை ஏன் சோழ, பாண்டிய பின்னணியில் சொல்லப்பட்டிருக்கிறது, அதை முழுமையானதொரு கற்பனை தேசமாக, மனிதர்களாக வடிவமைத்திருக்கலாமே என்ற கேள்வியை சில விமர்சனங்களில் வாசித்தேன். ஏற்கெனவே சொல்லியபடி இதையும் இயக்குநரின் சுதந்திரத்திற்காக அங்கீகாரமான நோக்கில் பார்க்க வேண்டும். முழுக்க முழுக்க கற்பனை தேசம் எனும் போது தமிழ் சினிமா பார்வையாளன் அதை அந்நியமாக உணர்ந்து காண்பனுபவத்திலிருந்து விலகிச் செல்ல நேரிடலாம். எனவே அதற்கான நம்பகத்தன்மையைத் தர, புனைவில் உண்மையான வரலாற்றின் தடங்களை இயக்குநர் பிணைக்க முயற்சித்திருக்கலாம்.

அய்யோ! கார்த்தி வீணடிக்கப்பட்டு விட்டாரே! இதற்காகவா அவரின் இத்தனை வருட உழைப்பு பயன்பட்டது! இந்த நேரத்தை இரண்டு மூன்று படங்களுக்கு அவர் உபயோகித்திருப்பாரே என்றொரு அங்கலாய்ப்பை ஆங்கில தேசிய நாளிதழ் விமர்சனமொன்றில் கண்டேன். ஒரு  படைப்பின் பாத்திரத்தை நாயக பிம்பமாகவே பார்க்கும் வழக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அபாயமிது. பொதுவாக மிகைப்படுத்தப்படும் நாயக பிம்பங்கள் மீது நமக்கொரு அசூயை இருக்கிறது. அதிலிருந்து நடிகர்கள் வெளிவர வேண்டும் என்று சொல்லி வருகிறோம். இவ்வாறான அங்கலாய்ப்புகள் மீண்டும் நடிகர்களை வழக்கமான சுழற்சிக்கே இட்டுச் செல்கின்றன.

தனுஷ் ஒரு நேர்காணலில்,  இத்திரைப்படத்தின் உருவாக்கத்தை ஆரம்பத்திலிருந்தே கவனித்துக் கொண்டிருப்பதாகவும், பங்கெடுத்திருப்பதாகவும், பார்த்திபனின் பாத்திரத்தில் தாம் நடிக்க விரும்பிதாகவும் கூறிய ஞாபகம். சோழ மன்னனாக உருவகிக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் தனுஷை கற்பனை செய்து பா¡க்கவே விபரீதமாயிருக்கிறது. ஒருவேளை சோழ மன்னர்களில் எவராவது தனுஷைப் போலவே கூட இருந்திருக்கலாம். ஆனால் வரலாற்று ஆய்வாளர்கள் மாத்திரமல்ல, வெகுஜன மக்களே அந்த உருவத்தை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். இம்சை அரசனாகிப் போயிருக்கும். ஏனேனில் நமக்கு 'வரலாறு முக்கியம் அமைச்சரே' என்ற வசனத்தில் உள்ள உண்மை தெரியும்.

()

இப்போது இந்தப்படத்தின் எதிர்மறையான விமர்சனங்களில் உள்ள அம்சங்களைக் கவனிப்போம்.

முழுக்க முழுக்க புனைவுச் சார்ந்த திரைப்படங்களில் பார்வையாளன் இயக்குநரிடம் தம்மை ஒப்படைத்து விட வேண்டும் என்று கூறியிருந்தேன் அல்லவா? ஆனால் செல்வராகவன் அதற்கான முழு நியாயத்தைச் செய்யவில்லை என்பதை நிச்சயம் ஒப்புக் கொள்ள வேண்டும். திரைக்கதையில் பல தொடர்ச்சியான பிழைகள் உள்ளன. என்னதான் புனைவு என்றாலும் புனைவிற்கான பிரத்யேக தர்க்கங்களின் அமைப்போடு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இதில் அவ்வாறில்லை. தொல் பொருள் ஆராய்ச்சியில் ஏன் ஒரு அமைச்சருக்கு ஆர்வம், அதற்கான தனியார் படைக்கும் ஆயுதங்களுக்கும் எவ்வாறு அரசு அனுமதிக்கும், பழங்குடிகளைக் கொல்ல யார் அவர்களுக்கு அதிகாரம் தந்தது?, எப்படி அந்த பழங்குடிக்குழு செயற்கைக்கோள்களின் பார்வையிலிருந்து தப்பியது.. போன்ற அடிப்படையான பார்வையாளனின் இயல்பான சந்தேகங்களுக்கு போதுமான விளக்கம் படத்தில் சொல்லப்படவோ சித்தரிக்கப்படவோ இல்லை. பல விமர்சனங்களில் இவ்வாறான குறைகளை அலசி ஆராய்ந்து விட்டதால் மற்றவற்றைத் தவிர்க்கிறேன். சாதாரண திரைப்படங்களுக்கே முழுத் திரைக்கதையும் தெளிவாக திட்டமிடப்பட வேண்டும் எனும் போது இது போன்று fantasy திரைப்படங்களில் bounded script இல்லாமல் இறங்கவே கூடாது. எவ்வளவு தலையில் அடித்துக் கொண்டாலும் தமிழ்சினிமா இயக்குநர்களுக்கு இது புரிவதில்லை.

தயாரிப்பாளர் கட்டாயப்படுத்துகிறாரா,  சரி ஒரு ஐட்டம் பாட்டை சொருகு..

திடீரென்று ஆண்ட்ரியாவும் ரீமாசென்னும் ஒருவரையொருவர் fucking. chick..fucking என்று திட்டிக் கொள்ளும் காட்சி படு செயற்கை. செல்வராகவன் தம்முடைய திரைப்படத்தில் Quentin Tarantino படத்தைப் போன்று எப்படியாவது ஒரு காட்சியை வைத்துவிட வேண்டும் என்று விரும்பியதின் விளைவாக இது நிகழ்ந்திருக்கலாம். கார்த்தி அந்த இரண்டு பெண்களுடன் அடிக்கும் லூட்டி, இன்றைக்கு திரையரங்கிற்கு பெரும்பான்மையாக வரும் இளைஞர்களைத் திருப்திப்படுத்தும் நோக்கிலேயே அமைக்கப்பட்டிருப்பதால் படத்தின் போக்கிற்கு இடையூறாக இருப்பது மட்டுமின்றி எரிச்சலையும் ஏற்படுத்துகின்றது. அதே போல் பாடல் காட்சிகள்... தமிழ் சினிமா திருந்தவே திருந்தாத இன்னொரு சமாச்சாரம். உயிர் போகக்கூடிய திகிலான சூழ்நிலையிலும் 'உன் மேல ஆசைதான்...' என்று எம்டிவி காட்சிப்பின்னணியில் பாடுவது தமிழ் சினிமாவில்தான் சாத்தியம். இந்த மாதிரியான புள்ளிகளிலிருந்து ஆங்கிலத் திரைப்படங்கள் விலகி நிற்பதால்தான் அவற்றின் நம்பகத்தன்மை அதிகமாக இருக்கிறது.

நான் சுருக்கமாகச் சொல்வது என்னவென்றால் (?!) தமிழ்ச்சினிமாவின் புத்தம் புதியதான முயற்சிகளை பார்வையாளர்கள் வரவேற்பதான மனநிலையை வளர்த்துக் கொள்வதோடு திறந்த மனத்தோடு அவற்றை அணுகும் வழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவைதான் தமிழ் சினிமாவை அடுத்தக் கட்ட தரத்திற்கு நகர்த்திச் செல்லும் என்று நான் தீர்மானமாகவே நம்புகிறேன்.

()

இப்போது இந்த இடுகையின் மிக முக்கியமான பகுதிக்கு வருகிறேன்.

ஒரு திரைப்படத்தைப் பார்க்காமலேயே அதன் மீதான விமர்சனங்களை மாத்திரம் வாசித்து அந்தத் திரைப்படத்தைப் பற்றி எழுத முடியுமா (அதாவது ஜல்லியடிக்க முடியுமா) என்றொரு விபரீதமான யோசனை எழுந்தது. அதன் விளைவே இந்தப் பதிவு. இனிமேல்தான் இந்தத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். எனவே இதற்கான உண்மையான விமர்சனக் கட்டுரைக்காக காத்திருப்பதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.:-)

இன்னொரு உப காரணமும் உண்டு. வலையுலகில் நான் விரும்பி வாசிக்கும் ஒரு பதிவரை 'இந்தப் படத்திற்கான விமர்சனத்தை எழுதுங்கள்' என்று வற்புறுத்தினேன். அவரோ
'உங்கள் சினிமா விமர்சனங்களில் என்னை தாக்கிய உணர்வின் வெளிப்பாடுகளுக்கான வார்த்தைகளை பார்க்கிறேன். ஒரே வார்த்தைகளை இருவர் பயன்படுத்தினால் அந்த வார்த்தைகளுக்கு ஏது மதிப்பு'
என்று நழுவி விட்டார். எனவே அவரை பழிவாங்குவதற்கான நடவடிக்கையாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். :-)

செல்வராகவனைப் போன்று என்னுடைய இந்தமாதிரியான 'புதிய' முயற்சிகளுக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பீர்கள் என்கிற நம்பிக்கையோடு இப்போதைக்கு விடைபெறுகிறேன்.

suresh kannan

Thursday, September 25, 2008

ரஜினி vs ஷகிலா - ஓர் ஆளுமை ஒப்பீடு

இரவு உணவு முடித்து நண்பருடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது உரையாடல் இயல்பாக சினிமா பக்கம் திரும்பியது. இரண்டு தமிழர்கள் பேசினால் அதில் பிரதான விஷயம் சினிமாவைப் பற்றியதாகத்தான் இருக்கும் என்பதை யூகிக்க பில்கேட்ஸ் அளவிற்கு மூளை தேவையில்லை. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினியைப் பற்றியும் அவருக்கு இருக்கும் வணிகமதிப்பைப் பற்றியும் நண்பர் விஸ்தாரமாக பேசினார். பேச்சின் நடுவில் அவர் சொன்ன விஷயம் என்னை திடுக்கிட வைத்தது. "வணிக நோக்கில் பார்த்தீர்கள் என்றால் ரஜினியையும் "மலையாளப் பட புகழ்" ஷகிலாவையும் ஒரே அளவுகோலினால் அளந்துவிட முடியும்" என்றார் நண்பர். "என்ன சொல்கிறீர்கள்.. இதை வெளியே சொன்னால் உங்கள் வீட்டுக்கு ஆட்டோ வரும் வாய்ப்பு இருக்கிறது, தெரியுமா" என்றேன். "அதனால்தான் யோசிக்கிறேன். இருவருக்குமான சில ஒற்றுமையைப் பட்டியலிடுகிறேன். அப்புறம் நீங்கள் சொல்லுங்கள், நான் சொன்னது சரியா, தவறா என்று".

எனக்கும் சுவாரசியம் தட்டியது. "சரி சொல்லுங்கள்" என்றேன்.அவர் சொன்னதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள கொஞ்சம் சென்சாருடன் இங்கே பட்டியிலிட்டிருக்கிறேன்.

Photobucket

(1) ரஜினி படங்களில் "கதை" என்கிற சமாச்சாரத்திற்கு அவ்வளவு முக்கியம் கிடையாது. ரஜினி இருக்கிறார் என்பதே முக்கியம். படம் வியாபாரமாகி விடும். ரசிகர்களும் தியேட்டருக்கு வருவார்கள். ஷகிலாவிற்கும் அப்படியே. அவர் பட வெளியீடுகளின் போது பரங்கிமலை பக்கம் டிராபிக் ஜாம் ஆகிவிடுவதை போக்குவரத்து காவலர்களே உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

(2) ரஜினி படங்களில் மிக முக்கியமானது, சண்டைக்காட்சிகள், அவர் பஞ்ச் வசனம் சொல்லும் காட்சிகள், போன்றவை. இது இல்லாவிட்டால் ரசிகர்கள் திருப்தியடைய மாட்டார்கள். படமும் ஓடாது. ஷகிலாவின் படங்களுக்கும் அப்படியே. ரசிகர்கள்
முக்கியமாக எதிர்பார்த்து வருவது "அந்த மாதிரியான" சண்டைக் காட்சிகளை. அது இல்லாவிட்டால் பெஞ்சுகளை உடைத்து தங்கள் எதிர்ப்பை கண்ணியமாக வெளிப்படுத்துவார்கள்.

(3) ஒரு வெற்றிகரமான படத்திற்கு 'ரஜினி' என்கிற ஒற்றைச் சொல்லே போதும். சக நடிகர்கள் யார், இயக்குநர் யார், என்பது பற்றியெல்லாம் ரசிகர்களுக்கு கவலையில்லை. அவர்களை தியேட்டருக்க வரவழைக்க அவர் பெயரே போதும். அம்மணியின் படங்களுக்கும் அப்படியே. "கூட நடிக்கும்" ஆண்களைப் பற்றியெல்லாம் அம்மணியின் ரசிகர்களுக்கு கவலையில்லை. தங்கள் தலைவியின் "முக தரிசனம்" (?) கிடைத்தால் போதும் என்ற அளவில் திருப்தியடைவார்கள்.

(4) பொதுவாக ரஜினி படங்கள் நிச்சய வெற்றி என்பதால் பட பூஜை அன்றே எல்லா ஏரியாவும் விற்பனையாகிவிடும். விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிவிடுவார்கள். செல்வி ஷகிலாவின் படங்களும் அப்படியே. தென்னிந்தியாவைத் தவிர
வட இந்தியாவிலும் அம்மணியின் படங்களுக்கு மிகுந்த கிராக்கியுண்டு. விநியோகஸ்தர்கள் போட்டி போட்டு வாங்குவார்கள்.

(5) ரஜினி படங்கள் வெளியாகிறது என்றால் அதனுடன் போட்டி போட அஞ்சி தங்கள் பட வெளியீட்டை தள்ளி வைத்த தயாரிப்பாளர்கள் அதிகம். ஷகிலாவின் படங்களும் அப்படியே. ஒரு சமயத்தில் கேரளத்தில் மம்முட்டி, மோகன்லால் போன்றவர்களின் பட வசூலை விட ஷகிலாவின் பட வசூல் அதிகமாகிப் போக, பீதியடைந்து சேட்டன்கள் ஒன்று சேர்ந்து ஷகிலாவை தமிழ்நாட்டிற்கே துரத்தி விட்டனர்.

(6) ஆரம்பக் காலங்களில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள ரஜினி மிகவும் சிரமப்பட்டிருக்கிறார். சின்ன சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார். தன் தனித்தன்மையை வெளிப்படுத்த சிகரெட்டை தூக்கிப்போட்டு வாயில் கவ்வுவது, தலைமுடியை ஒதுக்கிக் கொள்வது போன்ற சேஷ்டைகளை செய்திருக்கிறார். ஷகிலாவும் அப்படியே. தன்னுடைய "திறமையை" ரசிகர்களுக்கு வெளிப்படுத்த மேலாடை இல்லாமல் கூட நடித்திருக்கிறார். பிற்பாடு அம்மணி இதை நிறுத்திக் கொண்டாலும் ரஜினி இன்னும் நிறுத்தவில்லை என்பது ஒரு சிறு வேற்றுமை.

(7) விநியோகஸ்தர்களின் வட்டாரத்தில் ரஜினியை 'தங்க முட்டையிடும் வாத்து' என்றே கருதுகிறார்கள். பட வெளியீட்டின் போது மட்டுமல்லாமல் படம் வெளியாகி நீண்ட நாட்கள் ஆன பின்னரும், தொலைக்காட்சிகளில் அடிக்கடி போட்டு தேய்த்த பின்னரும் கூட, மறுவெளியீடுகளின் போது ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து ஆதரவு தர மறப்பதில்லை. பொதுவாக மற்ற நடிகர்களுக்கு இந்த வணிக மதிப்பு இல்லை. புதுப்படங்களை வாங்கி வெளியிட வசதியில்லாத சில திரைப்பட உரிமையாளர்கள் இவ்வாறான மறுவெளியீடுகளிலேயே தங்கள் பிழைப்பை நடத்துகின்றனர். ஷகிலாவின் படங்களும் இவ்வாறான அதே வணிக மதிப்பை கொண்டதுதான். ஷகிலா தன்னுடைய திறமையை "அதிகமாக" வெளிப்படுத்துவதை நிறுத்திய பின்னரும் அவரின் பழைய படங்களுக்கு கூட்டம் அலைமோதுகிறது.

(8) ரஜினி படங்கள் மொழி, இன, பிராந்திய, கலாச்சார எல்லைகளைக் கடந்தது. தமிழ்ப்படமென்றாலும் கூட அது ஆந்திரா, கர்நாடகா,கேரளா என்று தென்னிந்தியாவிலும் சில வட மாநிலங்களிலும், சர்வதேச நாடுகளில் குறிப்பாக ஜப்பானிலும் புகழ்பெற்றது. மொழி புரியாவிட்டாலும் கூட ரஜினியின் தோற்றத்திற்காகவும் ஸ்டைலுக்காகவும் சர்வதேச ரசிகர்கள் பார்த்து மகிழ்கின்றனர். ஷகிலாவின் படங்களும் அப்படியே. சர்வதேச அளவில் ரசிகர்கள் உண்டு. பின்னணயில் ஒலிக்கும் மொழி பற்றி அவரின் ரசிகர்களுக்கு கவலையில்லை. தங்களுடைய தலைவியின் "ஆக்ஷன் காட்சிகளை" ரசிக்க மொழி அவர்களுக்கு ஓர் தடையாய் இருப்பதில்லை.

(9) ரஜினி பட விளம்பரங்களில் (பத்திரிகைகளிலும், போஸ்டர்களிலும்) ரஜினிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். அது 25 சதவீதம் நடிக்கும் குசேலனாயிருந்தாலும் சரி அவர்தான் பிரதானமாய் தெரிவார். ரசிகர்களின் "வாங்கும் சக்தியை" இந்த பிம்பமே தீர்மானிக்கிறது. எனவே வணிக நோக்கில் இது தவறில்லை. அன்னார் ஷகிலா படங்களுக்கும் அவ்வாறே. பிரதான காட்சிகளில் அவரின் சக நடிகர்களான மரியா, ரேஷ்மா போன்றவர்கள் இருந்தால் கூட விளம்பரங்களில் இவருக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அவர் "ஆக்ஷன் படங்களில்" நடிப்பதை நிறுத்திய இன்றும் கூட பத்திரிகை விளம்பரங்களில் அவர் புகைப்படங்களே பெரிதாக அமைக்கப்படுகிறது. (அவர் படத்தை சிறிதாக வடிமைக்க முடியாது என்பது வேறு விஷயம்).

(10) ரஜினி பட ரசிகர்களின் வயதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் பதின்ம வயது இளைஞர்களிலிருந்து அறுபது வயதான கிழவர்கள் வரை காணலாம். ரஜினி படங்களைக் காண விரும்பாதவர்கள் போல் பாவனை செய்பவர்கள் கூட உள்ளூர பார்க்கவே விரும்புவர். செல்வியின் படங்களும் அவ்வாறே. பரங்கிமலை தியேட்டர்களில் இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஈடாக முதியவர்களின் எண்ணிக்கையையும் பார்க்க முடியும்.

()

இன்னும் கூட நண்பர் சொல்லிக் கொண்டே போனார். சில பகுதிகள் மிகுந்த ஆட்சேபகரமானது என்பதால் அவற்றை வெளியிடாமல் தவிர்க்கிறேன்.

அவர் சொன்னவற்றை கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது கணக்கு சரியாகவே வந்தது. (நன்றி: அண்ணாமலை) இவற்றை என்னுடைய வலைப்பதிவில் வெளியிடலாமா என்று அவரின் அனுமதியைக் கேட்டேன். முதலில் தயங்கியவர் " இந்தத் தலைப்பில்யாராவது பிஎச்டி ஆராய்ச்சி செய்ய முனைந்தால் அவர்களுக்கு இந்தக் குறிப்புகள் உதவிகரமாக இருக்கக்கூடுமே" என்று நான் கன்வினஸ் செய்தவுடன் 'என் பெயரை வெளியிடக்கூடாது' என்ற நிபந்தனையுடன் ஒத்துக் கொண்டார்.

"நான் சொன்னது சொற்பமே. இணையத்தில் வெளியிட்டவுடன் மற்றவர்கள் இதற்கும் மேலாக பல ஆதாரபூர்வமான, சுவாரஸ்யமான குறிப்புகளை வழங்க முடியும் பார்" என்றும் பின்குறிப்பாக சொன்னார்.

suresh kannan

Saturday, June 21, 2008

அங்கதம் நுரைக்கும் கதைகள்

இரவாகி விடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை
(சிறுகதை தொகுப்பு)
- ஆதவன் தீட்சண்யா,
சந்தியா பதிப்பகம், 160 பக்கங்கள், ரூ.75/-

Photobucket


ஆதவன் தீட்சண்யாவை தலித் படைப்பாளி என்ற முறையிலேதான் நான் அறிந்திருந்தேன். அதிகம் கவிதை எழுதுபவர் என்பதாக அறிந்திருந்ததனாலும் உலகிலேயே எனக்குப் பிடிக்காதவைகளின் பட்டியலில் கவிதை என்கிற சமாச்சாரம் பிரதான இடத்தில் இருப்பதாலும் இவர் எழுதியவைகளை நான் அதிகம் படித்திருக்கவில்லை. "எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசிப்பக்கங்கள்" என்றொரு சிறுகதைத் தொகுதியை படித்தவுடனே என்னுடைய பிடித்தமான எழுத்தாளர்களின் பட்டியலில் இடம்பெற்றுவிட்டார் ஆதவன். தலித் எழுத்தாளர்களின் பொதுமைக் குரலை வெளிப்படுத்தும் கதைகள் அவை. இந்தத் தொகுப்பையும் அவ்வாறான நினைப்புடனேயே வாசிக்க எடுத்து வந்திருந்தேன். ஆனால் எந்தவொரு கதையையும் புன்னகைக்காமல் வாசிக்க இயலவில்லை. அங்கதம் புதைந்திருக்கும் படைப்புகளின் ஊடாக ஒடுக்கப்பட்டவர்களின் வலி அதனுடைய முனகலின் தடயமே இல்லாமல் வெளிப்பட்டிருப்பதே இத்தொகுப்பின் சிறப்பு எனலாம். ஆதவன் தீட்சண்யாவின் புனைவு மொழி கற்பனைகளைக் கடந்து பின்நவீனத்துவ பாதையில் புழுதி பறக்க பாய்ந்திருக்கிறது.

"ஆறுவதற்குள் காபியைக்குடி" என்றொரு விநோதமான தலைப்புடன் இருக்கும் (அநேகமாக எல்லாத் தலைப்புகளுமே விநோதம்தான்) கதை புதுவீடு கட்டிக்கொண்டு போகிற அதிர்ஷ்டசாலிகளை ஆதங்கத்துடன் நோக்கும் ஒருவனை நகைச்சுவையுடன் சித்தரிக்கிறது. கிரகப்பிரவேசங்களின் வீட்டு உரிமையாளர் நடந்து கொள்கிறதைப் பற்றியும் 'இன்னும் ஒரு வீடு கட்டத் துப்பில்லையே என்று மனைவி இடித்துரைப்பதையும் விவரிக்கிறது இக்கதை.

.... நாங்கள் பார்த்த அளவில் தங்கள் வீட்டை சுற்றிக் காட்டும் ஒவ்வொருவரும் டபுள் பெட்ரூம் - பாத்ரூம் அட்டாச்டு என்பதைச் சொல்லும் போது அவர்களின் முகத்தில் முக்தியடைந்த தேஜஸ் வந்துவிடுகிறது. படுக்கையிலிருந்து எழுந்ததும் நேராக குளிக்கப்போவதில்லை யாரும். அப்புறமெதற்கு அட்டாச்டு பாத்ரூம்... ஒன்றுக்கு மேற்பட்ட கக்கூசுகள் தங்கள் வீட்டிலிருப்பதைத்தான் இப்படிச் சொல்லி பெருமையடைகிறார்கள்.....'

காலத்தை தைப்பவனின் கிழிசல்' என்ற சிறுகதை மனோகர் ராவ் என்பவரின் வாழ்க்கை சரிதத்தை எழுத வேண்டியதற்காக முன்தயாரிப்பு குறிப்புகளுடனான பாவனையில் இயங்குகிறது. மனோகர் ராவின் மூதாதையர் முதற்கொண்டு தற்கால வாழ்க்கைவரை தையற்கலைஞராக அவனுடைய வாழ்க்கையைப் பற்றின கட்டுரைத் தொனி.

'மார்க்ஸை மருட்டிய ரயில்'... ரயில் என்கிற விஷயம் கதைசொல்லிக்கு பிடிக்காமல் போகிறதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு .... எவனோ எரித்த இரண்டு பெட்டிகளுக்காக மூவாயிரம் அப்பாவிகளைக் கொன்ற நாடு இது. இனி என்னாலும் எதற்கு சேதாரம்.. என்று நிகழ்கால அரசியலுக்குள் சடாரென பாய்கிறது.

'லிபரல் பாளையத்து கட்டப்பஞ்சாயத்தார்க்கு காவானோபா வழங்கிய தீர்ப்பு' என்கிற இன்னொரு விநோதமான தலைப்பைக் கொண்ட சிறுகதை தொடர்ந்து செல்போன் பேசுவோர்களை பகடிசெய்கிற ஒரு வருங்கால கற்பனையை நிகழ்த்தி, இந்த அதிநவீனத்திலிருந்து விலகி ஓடுகிற ஒருவரை குற்றவாளியாக பார்க்கிற அமைப்பை சுட்டிக் காட்டுகிறது.

.... போன் வைத்திருப்பவர்கள், அதிலேயே எஸ்.டி.டி. வைத்திருப்பவர்கள், அதற்கும் மேல் ஐ.எஸ்.டி.டி. வைத்திருப்பவர்கள் என்று ஏராளமான பிரிவுகளும் படிநிலைகளும் உருவாகி ஒருவர் மேல் ஒருவர் உசத்தியானவர் என்று கருத்து படியத் தொடங்கியது. தம்மை தாழ்ந்தவர்களாக காட்டிக் கொள்ள விரும்பாதவர்கள் கஞ்சிக்கு சிங்கியடித்தாலும் பரவாயில்லையென்று வீட்டுக்கு ஒரு போன் வாங்கி மேல்நிலையாக்கம் பெறத் துடித்தனர்.....

'கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்' என்ற சிறுகதையை இந்தத் தொகுப்பின் உச்சபட்ச சுவாரசியமான கற்பனை எனலாம். கக்கா நாடு என்றொரு கற்பனை பிரதேசத்தை உருவாக்கி, கிருந்ததியர்கள் என்றொரு கழிவை சுத்தம் செய்பவர்களின் சமூகம் ஜனாபதியை விட அதிகம் சம்பளமும் செல்வாக்கும் பெற்றிருப்பதாகவும், இது கண்டு வயிற்றெரிச்சல் கொள்கிற ஆதிக்கசாதியும் மற்றவரும் பொருளையும் செல்வாக்கையும் பெற வேண்டி தங்களையும் தாழ்த்திக் கொள்ள துணிந்து கழிவை சுத்தம் செய்யும் பணிக்கு போட்டியிடுவதாகவும், மிகப் பகடியான மொழியில் பதிவாகியிருக்கிறது இச்சிறுகதை. இதற்கான ஆதாரங்களை நிறுவும் பொருட்டு பிரசுரமாகியிருக்கும் புகைப்படங்கள் இன்னும் வாசிப்பவனுவத்தை சுவாரசியமாக்குகிறது. இந்தக் கற்பனை நிஜமானால் எப்படியிருக்கும் என்கிற சுவாரசியத்தையும் தருகிறது.

... சாதிவாரியாக ஸ்கேவஞ்சர் பதவி நிரப்பப்படுமானால் பணியின் தரம் குறைந்துவிடும் என்று கிருந்ததியர் வாதாடுகின்றனர். எமக்கும் மலத்துக்கும் எந்தத் தொடர்புமேயில்லையா? தினமும் குறைந்தது மூன்று வேளையாவது எங்களைது இடக்கை மலத்தைத் தொடத்தானே செய்கிறது? எங்களுடையது மட்டுமின்றி எமது குழந்தைகள், படுத்தப்படுக்கையாகிவிடும் எம் வீட்டு கிழடுகள் ஆகியோரின் மலஜலத்தையும் சுத்தம் செய்த அனுபவம் எங்களுக்குமிருப்பதை யாராவது மறுக்க முடியுமா, முண்ணியத்தில் ஒருவன் வாயில் திணிக்க நாங்கள் கையால் மலத்தை எடுக்கவில்லையா?.................

புத்தகத்தின் தலைப்பை கொண்ட சிறுகதை பகத்சிங்கின் வாழ்க்கையிலிருந்து வெளிவராத ஒரு நிகழ்வை முன்வைக்கிறது.

()

முன்னரே குறிப்பிட்டது போல் அங்கதமான வெளிப்படுகிற ஆதவனின் எழுத்துக்குள் ஒடுக்கப்பட்டவர்களின் வலியும் புதைந்திருப்பதை உணர முடிகிறது. தலித் எழுத்தாளர்களின் படைப்புகளின் போக்கில் இன்னொரு போக்கை ஒரு பாய்ச்சலுடன் நிகழ்த்தியிருக்கிறது இந்தப் புத்தகம். தீவிர வாசிப்பாளர்களுக்கு இந்தப் புத்தகத்தை கட்டாய பரிந்துரை செய்கிறேன்.


suresh kannan

Friday, July 14, 2006

தீவிரவாதி ஜிடேன்

ஒரு வழியாக உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவடைந்து விட்டது. விளையாட்டுக்களின் ராஜா என்று இந்த விளையாட்டைச் சொல்வேன். 90 நிமிடங்கள், 22 கால்கள், ஒரு பந்து என்கிற அளவில், எந்த நிமிடத்திலும் ஆட்டத்தின் முடிவு மாறக்கூடிய அளவில் பார்வையாளனை பரபரப்பாகவும், சுவாரசியமாகவும் வைத்திருக்கக்கூடிய இந்த விளையாட்டு, ஏறத்தாழ 110 கோடி பேர் உள்ள இந்தியாவில் பெரும்பான்மையாக கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானதாகும். இதோடு இந்த விளையாட்டு பிரதானமாக கவனிக்கப்படுவது அடுத்த உலக கோப்பையின் போதுதான். கிரிக்கெட் என்கிற ராட்சசம், கபடி, கில்லி, பம்பரம், காற்றாடி போன்ற உள்ளுர் பிரத்யேக விளையாட்டுக்கள் எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது. முன்பு ESPN சானல் தடையில்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது நிறைய கிளப் போட்டிகளை தவறாமல் பார்த்துவிடுவேன். எந்த கிளப், எந்த ஆட்டக்காரர் அல்லது நாட்டுக்காரர் என்பதெல்லாம் எனக்கு அவ்வளவாக முக்கியமில்லை. வெள்ளை கலர், நீல கலரில் எது சிறப்பாக ஆடுகிறது என்பதை ஒரு ஐந்து நிமிடம் கவனிப்பேன். சிறப்பாக ஆடக்கூடிய அணியின் சார்பான பார்வையாளனாக தன்னிச்சையாக மாறிவிடுவேன். "எனது" அணி வெற்றிபெற வேண்டும் என்கிற சுவாரசியத்துடன் ஆட்டத்தை கவனிப்பதற்கு இந்த உத்தி உதவியாக இருந்தது.

சமீபத்திய உலக கோப்பை போட்டிகளில் என்னைப் பொறுத்த வரை கால் இறுதிப்போட்டி தொடரில் பிரேசிலும் பிரான்சும் மோதியதிலிருந்துதான் பரபரப்பின் உச்சத்தை தொட்டது. இதில் பிரேசில் தோற்றுவிடும் என்று அப்போது யாராவது சொல்லியிருந்தால் எங்கள் எதிர்வீட்டு நாய் கூட அதை நம்பியிருக்காது. அந்த ஆட்டத்தில் முதலிலிருந்தே பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக அதன் தடுப்பாட்டக்காரர்கள் vierra போன்றவர்கள் தங்கள் பங்கை சிறப்பாக ஆற்றினார்கள். "சரியாக ஆடவில்லை" என்று ரொனால்டினோவைப் பற்றின குற்றச்சாட்டுக்கள் அதீதமானது என்றுதான் கூறுவேன். மத்தியகள ஆட்டக்காரக்காரராக அவர் பந்தை சிறப்பாக கையாண்டார்... மன்னிக்கவும்.. காலாண்டார். எதிர் அணிக்காரர்கள் பந்தை அவரிடமிருந்து பறிக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. அவர் அளித்த பல பாஸ்களை சக ஆட்டக்காரர்கள் (குறிப்பாக ரொனால்டோ) வீணாக்கினார்கள்.

பிரான்சின் Zidane எப்போதுமே எனது பிரியமான ஆட்டக்காரர். 1998 உலக கோப்பை போட்டிகளில் அவர் அடித்த வெற்றிக் கோல்கள் இப்போதுமே என் எண்ணங்களில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. பிரேசிலுடனான போட்டியில் அவரின் ஆட்டம் பார்வையாளர்களை திருப்திப் படுத்தும் வகையில் இருந்தது. ஹென்றிக்கு அவர் அடித்த அற்புதமான pass-ஆல் அன்றைய போட்டியில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றவுடன் பிரான்ஸ்தான் கோப்பையை வெல்லும் என்று உறுதியாக நம்பினேன். சர்வதேச விளையாட்டிலிருந்து விடைபெறப் போகிற அவர் கோப்பையை கைப்பற்றி சாதனை புரியப் போகிறார் என்று நானும்
பெரும்பான்மையோரைப் போல தீவிரமாக நம்பினேன். அதற்கேற்றாற் போல் தனக்கு கிடைத்த பெனால்டி கிக்கை சாமர்த்தியமாக பயன்படுத்தி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கோல் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்தினார். பதிலுக்கு இத்தாலியும் ஒரு கோல் சமனாக்கியது.

எக்ஸ்ட்ரா டைமில் வந்ததுதான் வினை. அப்பாவின் சட்டையின் பின்னாலிருந்து இழுக்கும் குறும்புக்கார மகன் போல, இத்தாலிய வீரர் மாட்டரஸி ஜிடேனின் சட்டையை இழுத்துக் கொண்டே போக எரிச்சலைடந்த ஜிடேன் "சட்டை வேண்டுமா? ஆட்டம் முடிந்ததும் தருகிறேன்" என்பதாக பத்திரிகைச் செய்தி. பதிலுக்கு மாட்டரஸி ஜிடேனை "தீவிரவாதி" என்றாரா? "உன் மனைவியின் சட்டையை தா" என்றாரா? அவருடைய உறவினர்களை ஆபாசமாக திட்டினாரா? .. ஒன்றும் தெரியவில்லை. கோபமடைந்த ஜிடேன், கையால் அடித்தால் நடுவர் பவுல் கொடுத்து விடுவாரோ என்னவோ என்று நினைத்து மஞ்சுவிரட்டு காளை போல தலையால் வேகமாக மாட்டரஸியின் தலையில் முட்டியதை தொலைக்காட்சியில் லைவ்வாக பார்த்த போது அந்த நடுராத்திரியில் கொஞ்சமிருந்து தூக்கக் கலக்கமெல்லாம் விலகிப் போனது.

பெனால்டி கிக்கில் பிரசித்தமான ஜிடேன் அந்த ஆட்டத்தில் நீடித்திருந்தால் பிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கக்கூடும் என்பதுதான் பெரும்பாலான விளையாட்டு ஆர்வலர்களின் கணிப்பு. ஒரு அணிக்கு தலைவனாக பொறுப்பான நிலையில் இருந்தவர், அந்த தருணத்தை முதிர்ச்சியுடன் அணுகியிருக்கலாம். எதிரணியினர் ஆத்திரமூட்டும் வகையில் பேசி கவனம் சிதைப்பதுதான் வாடிக்கையான விஷயம்தான். கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தும் ஒரு பேட்டியில் "பாகிஸ்தான் அணியினர் தாம் பேட் செய்கையில் ஆபாசமாக வெறுப்பேற்றும் வகையில் பேசி அவுட் ஆக்க முனைவது வாடிக்கையானது" என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜிடேன் இந்த விஷயத்தை பின்னால் fifa-விடம் புகார் தெரிவித்திருந்து மாட்டரஸி மீது நடவடிக்கை எடுக்க வைத்திருக்கலாம். இவரது அவசரமான முன்கோபத்தால் சக அணியினரின் அத்தனை வருட தயாரிப்பும் உழைப்பும் வீணாகிவிட்டதுதான் சோகம்.

பீலே, மாரடோனா போன்ற கால்பந்து ஜாம்பவான்களின் வரிசையில் வைத்துப் போற்றத்தக்கவர் ஜிடேன் என்பதில் சந்தேகமேயில்லை. ஆஸ்திரேலியா கடைசி தருணத்தில் பெனால்டியை ஏற்படுத்தி போட்டியிலிருந்து விலகிப் போன பரிதாபத்தைப் போல், பிரான்சும் ஜிடேனின் இந்த தவறால் கோப்பையை இழந்தது வருத்தமானது. இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடமும் உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது.

()

தீவிரவாதம் என்கிற வார்த்தை ஆங்காங்கே குண்டு வெடிக்கும் இன்றைய சூழ்நிலையில் எதிர்மறையானதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. ஒரு கொள்கையில், சித்தாந்தத்தில், கருத்தில், செய்கையில் தீவிரமாக இயங்குபவர் அனைவரும் தீவிரவாதிகள்தான். கால்பந்து என்னும் விளையாட்டில் தீவிரமாகவும் ஆத்மார்த்தமாகவும் இயங்கிய ஜிடேனை அந்தத் துறையில் தீவிரவாதி என்றழைப்பதில் தவறில்லைதானே?

(கோக்குமாக்காக ஒரு தலைப்பை வைத்து விட்டு எப்படியெல்லாம் நியாயப்படுத்தி எழுத வேண்டியிருக்கிறது)

Friday, June 09, 2006

உள்ளேன் ஐயா!

எனது இருப்பு குறித்து சில நண்பர்களுக்கு வில்லங்கமான சந்தேகங்கள் வந்திருப்பதை அறிய நேர்ந்ததால் இந்நாள் முதல்வரின் கடந்த வருடங்கள் பாணியில் வருகைப்பதிவில் ஒரு கையெழுத்து போட்டுவிட்டு உடனே ஓடிப்போய் விடலாமென்று உத்தேசம்.

Wednesday, April 05, 2006

மன்னிச்சிடுங்க!

ஐந்தாண்டுக்கொருமுறை அரசியல்வாதிகள் முதல் பாக்கிச் சில்லறை தராமலிருக்கும் பேருந்து நடத்துனர் வரை அனைவரிடமும் ஏமாந்து ஏமாந்து... ஒரு மாறுதலுக்காக நான் யாரையாவது ஏமாற்றிப் பார்க்கலாம் என்று யோசித்ததின் விளைவுதான் முன்னர் எழுதிய தொலைக்காட்சியில் நடிப்பதாக போடப்பட்ட பதிவு.

மிகவும் உஷாரான நம் மக்கள், ஏப்ரல் 1 அன்று இதை வெளியிட்டால் நிச்சயம் கண்டுபிடித்துவிடுவார்கள் என்கிற யூகத்தினால் இரண்டு நாட்கள் கழித்து வெளியிட்டால் என்ன என்று தோன்றியது. பொதுவாகவே என்னிடம் ரகசியத்தை காப்பாற்றுவதிலோ, நம்பகத்தன்மையுடன் பொய் சொல்வதிலோ திறமை கிடையாது. வேடிக்கைக்காக பொய்யை காப்பாற்ற சொன்னால் கூட சிரித்தே காண்பித்து கொடுத்துவிடுவேன். கலர் டி.வி கொடுப்பதாக எந்த அரசியல் கட்சியாவது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தால் கூட "கூடவே ரிமோட்டும் கொடுப்பீங்கதானே" என்று கேட்குமளவிற்கு ஏமாறுபவன் நான். எனவே என்னாலும் திறமையாக நம்பும்படி பொய் சொல்ல முடிகிறதா என்று என்னையே சோதித்துப் பார்ப்பதற்காக இந்தப் பதிவு.

எனவேதான் கற்பனையுடன் நிஜத்தையும் கொஞ்சம் பிசைந்து எழுதினேன். எழுதி விட்டேனே தவிர, மனப்பூர்வமான வாழ்த்துக்களுடன் வரும் பின்னூட்டங்களை பார்க்கும் போது, இத்தனை நல்ல உள்ளங்களை ஏமாற்றி விட்டோமே என்கிற குற்ற உணர்வு எழுந்தது நிஜம்.

()

இந்த மாதிரி ஏப்ரல் 1ல் மற்றவர்களை முட்டாள்களாக்குவதில் அப்படியொன்றும் நான் சமர்த்தனில்லை. என்றாலும் இவ்வாறு மற்றவர்கள் முட்டாளாக்கப்படுவதை பார்த்து ரசிக்கப்பிடிக்கும். எனவேதான் Pogo சானலில் just for laughs:Gags என்கிற நிகழ்ச்சியை இயன்ற போதெல்லாம் பார்த்து ரசிப்பது வழக்கம். அம்மாதிரி ஏதாவது செய்யலாம் என்கிற யோசனையிலிருக்கும் போது யதேச்சையாக தோன்றியதுதான் இந்த சமாச்சாரம்.

உண்மையில் நான் மிகவும் வெறுக்கும் பட்டியலில் தொலைக்காட்சி தொடர்களுக்கு பிரதான பங்குண்டு. சிறுவயதுகளில் என்னை மனரீதியாக பாதித்ததற்கு தூர்தர்ஷனின் செவ்வாயக்கிழமை நாடகங்களுக்கு பெரிய பங்குண்டு. ஏதாவது ஒரு தொடரை விரும்பிப் பார்த்தேனென்றால் அது நாகாவின் "மர்மதேசம்"தான். Split personality என்கிற விஷயத்தை சந்திரமுகியின் தாத்தா காலத்திலேயே மிகத் திறமையாக கையாண்டிருப்பார் நாகா. மேலும் விஷீவல் மீடியம் என்பதன் சரியான அர்த்தத்தைப் புரிந்து கொண்டு தன் தொடரில் மிகச் சரியாக உபயோகித்தவர் அவர்.

ஏமாற்றுகிறேன் பேர்வழி என்று இத்தனை பேரை தெரிந்தோ தெரியாமலோ அந்த தொலைக்காட்சி தொடரை பார்த்து தண்டனை அடைவதற்கு ஒரு காரணமாகி விட்டோமே என்று நானும் 9.00 மணிக்கு அந்த தொடரை பார்க்க முடிவு செய்தேன். மைகாட்! செத்துத் தொலைப்பதற்கு முன் பக்கம் பக்கமாக வசனம் பேசும் அப்பா கேரக்டரும், அவர் சாவதற்கு முன்னாலேயே சங்கு, தப்பட்டையுடன் சுடுகாட்டு எபக்டை தன் கத்தல்களினால் கொண்டு வந்த நளினியாகட்டும்... எப்படி இந்த தொடர்களை ஜனங்கள் சகித்துக் கொள்கிறார்கள் என்று மகா ஆச்சரியமாக இருந்தது. என்னை மாதிரியே தொடர்களில் வெறுப்பு கொண்டிருப்பவர்களையும், நட்பு ரீதியான வேண்டுகோளின் மூலம் பார்க்க வைத்து அவர்களின் நேரத்தை வீணடித்து, வயிற்றெரிச்சலை கிளப்பி விட்டோமே என்று குறுகுறுவென்றிருந்தது. தேவையில்லாமல் இந்த எரிச்சலூட்டும் தொடருக்கு வேறு விளம்பரம் தேடிக் கொடுத்தோமே என்கிற குற்ற உணர்ச்சி வேறு. எதையோ செய்யப் போய் ஒரு அபத்த நாடகத்தை நிகழ்த்தியவன் போல் உணர்ந்தேன்.

()

ஆகவே மக்களே...

வெள்ளந்தி மனசுடன் மனப்பூர்வமான வாழ்த்து சொன்னவர்களுக்கும், "இந்த மூஞ்சில்லாம் நடிக்கப் போவுதாமா, இன்னிக்கு வீட்டுக்குப் போனவுடனே டிவியை ஒடைச்சுட்டுதான் மறுவேலை" என்று கறுவிக் கொண்டிருந்தவர்களுக்கும், ஏதாவது ஏமாற்றுச் சமாச்சாரமாகத்தானிருக்கும் என்று சரியாக யூகித்து நமட்டுச் சிரிப்புடன் அமைதி காத்தவர்களுக்கும், வேறு யாரையோ பார்த்து நான் என்று தவறாக நினைத்துக் கொண்டு வாழ்த்தியவர்களுக்கும், உங்களின் விலைமதிப்பில்லாத நேரத்தை
வீணடித்ததிற்கும்...

மன்னிச்சுடுங்க.

Tuesday, April 04, 2006

தொலைக்காட்சி சீரியலில் நான்

"சன்" தொலைக்காட்சியில் இரவு 9.00 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் "கோலங்கள்" தொடரில் நான் நடிக்கும் சில காட்சிகள் இன்று ஒளிபரப்பாகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். எப்படி வந்தது இந்த வாய்ப்பு. கொஞ்சம் பிளாஷ்பேக்.

ஆனந்த் ராகவ்வின் 'சுருதி பேதம்' நாடகத்தை காண நாரத கான சபாவிற்கு சென்ற போது பா.ராகவனின் மூலம் எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் அறிமுகம் கிடைத்தது. அவர் ஆனந்த விகடனில் எழுதிய பழைய கட்டுரைகளான 'பஸ்ரூட்' முதற்கொண்டு அவரின் பல சிறுகதைகளை நினைவுகூர்ந்தேன். இதனால் மகிழ்ந்த அவர் எனக்கு மிகவும் நெருக்கமாகிப் போனார். மின்னஞ்சல் மூலம் தொடர்ந்த இந்த நட்பு பின்னர் தொலைபேசியின் மூலமாகவும், நேரிலுமாக தொடர்ந்தது. இதன் நடுவில் சினிமா மீதான என் ஆர்வத்தையும் அவ்வப்போது அவரிடம் புலம்பிக் கொண்டிருந்தேன். அவர் பணிபுரிந்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புத் தளத்திலும் சந்திப்புகள் நீடித்த ஒரு கணத்தில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் வரவேண்டிய நடிகர் வராத காரணத்தினால் (அது ஒரு சின்ன காட்சிதான்) இயக்குநர் திருச்செல்வத்திடம் என்னைப் பற்றி கூறி அந்தக் காட்சியில் நடிக்கச் சொன்னார்.

எனக்கு சினிமாவில் பின்புலத்தில்தான் பணிபுரிய ஆர்வம் இருந்ததே ஒழிய, திரைக்கு முன்னால் தோன்றும் ஆர்வம் இருந்ததே இல்லை. இதனால் முடியவே முடியாதென்று மறுத்துவிட்டேன். சினிமாவில் சந்தர்ப்பம் எப்படி கதவை தட்டும் என்பது தெரியாது என்றும் வந்த சந்தர்ப்பத்தை விட்டு விடாதீர்கள் என்றும் சொன்ன பாஸ்கர் சக்தி, இயக்குநர் ஆர்வம் கொண்டு சினிமாவில் நுழைந்து சிறந்த நடிகர்களாகிப் போனவர்களின் பட்டியலையும் சொல்லி எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டார்.

அதன்படி நான் நடித்த சிறு காட்சி இன்று ஒளிபரப்பாகிற பகுதியில் வெளியாகிறது. ஒளிபரப்பாகிற வரை யாருக்கும் தெரிய வேண்டாமென்கிற வேண்டுகோளும் வைக்கப்பட்டதால் யாருக்கும் சொல்லவும் இயலவில்லை. நண்பர்கள் பார்த்து என்னுடைய பங்களிப்பைப் பற்றின கருத்துகளை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன். (அடையாளம் கண்டுபிடிக்க என்னுடைய புகைப்படத்தை reference-ஆக வைத்துக் கொள்ளலாம்) :-)