Friday, July 14, 2006

தீவிரவாதி ஜிடேன்

ஒரு வழியாக உலக கோப்பை கால்பந்து போட்டி முடிவடைந்து விட்டது. விளையாட்டுக்களின் ராஜா என்று இந்த விளையாட்டைச் சொல்வேன். 90 நிமிடங்கள், 22 கால்கள், ஒரு பந்து என்கிற அளவில், எந்த நிமிடத்திலும் ஆட்டத்தின் முடிவு மாறக்கூடிய அளவில் பார்வையாளனை பரபரப்பாகவும், சுவாரசியமாகவும் வைத்திருக்கக்கூடிய இந்த விளையாட்டு, ஏறத்தாழ 110 கோடி பேர் உள்ள இந்தியாவில் பெரும்பான்மையாக கவனிக்கப்படாமல் புறக்கணிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானதாகும். இதோடு இந்த விளையாட்டு பிரதானமாக கவனிக்கப்படுவது அடுத்த உலக கோப்பையின் போதுதான். கிரிக்கெட் என்கிற ராட்சசம், கபடி, கில்லி, பம்பரம், காற்றாடி போன்ற உள்ளுர் பிரத்யேக விளையாட்டுக்கள் எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது. முன்பு ESPN சானல் தடையில்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த போது நிறைய கிளப் போட்டிகளை தவறாமல் பார்த்துவிடுவேன். எந்த கிளப், எந்த ஆட்டக்காரர் அல்லது நாட்டுக்காரர் என்பதெல்லாம் எனக்கு அவ்வளவாக முக்கியமில்லை. வெள்ளை கலர், நீல கலரில் எது சிறப்பாக ஆடுகிறது என்பதை ஒரு ஐந்து நிமிடம் கவனிப்பேன். சிறப்பாக ஆடக்கூடிய அணியின் சார்பான பார்வையாளனாக தன்னிச்சையாக மாறிவிடுவேன். "எனது" அணி வெற்றிபெற வேண்டும் என்கிற சுவாரசியத்துடன் ஆட்டத்தை கவனிப்பதற்கு இந்த உத்தி உதவியாக இருந்தது.

சமீபத்திய உலக கோப்பை போட்டிகளில் என்னைப் பொறுத்த வரை கால் இறுதிப்போட்டி தொடரில் பிரேசிலும் பிரான்சும் மோதியதிலிருந்துதான் பரபரப்பின் உச்சத்தை தொட்டது. இதில் பிரேசில் தோற்றுவிடும் என்று அப்போது யாராவது சொல்லியிருந்தால் எங்கள் எதிர்வீட்டு நாய் கூட அதை நம்பியிருக்காது. அந்த ஆட்டத்தில் முதலிலிருந்தே பிரான்ஸ் ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக அதன் தடுப்பாட்டக்காரர்கள் vierra போன்றவர்கள் தங்கள் பங்கை சிறப்பாக ஆற்றினார்கள். "சரியாக ஆடவில்லை" என்று ரொனால்டினோவைப் பற்றின குற்றச்சாட்டுக்கள் அதீதமானது என்றுதான் கூறுவேன். மத்தியகள ஆட்டக்காரக்காரராக அவர் பந்தை சிறப்பாக கையாண்டார்... மன்னிக்கவும்.. காலாண்டார். எதிர் அணிக்காரர்கள் பந்தை அவரிடமிருந்து பறிக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. அவர் அளித்த பல பாஸ்களை சக ஆட்டக்காரர்கள் (குறிப்பாக ரொனால்டோ) வீணாக்கினார்கள்.

பிரான்சின் Zidane எப்போதுமே எனது பிரியமான ஆட்டக்காரர். 1998 உலக கோப்பை போட்டிகளில் அவர் அடித்த வெற்றிக் கோல்கள் இப்போதுமே என் எண்ணங்களில் எதிரொலித்துக் கொண்டிருந்தது. பிரேசிலுடனான போட்டியில் அவரின் ஆட்டம் பார்வையாளர்களை திருப்திப் படுத்தும் வகையில் இருந்தது. ஹென்றிக்கு அவர் அடித்த அற்புதமான pass-ஆல் அன்றைய போட்டியில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றவுடன் பிரான்ஸ்தான் கோப்பையை வெல்லும் என்று உறுதியாக நம்பினேன். சர்வதேச விளையாட்டிலிருந்து விடைபெறப் போகிற அவர் கோப்பையை கைப்பற்றி சாதனை புரியப் போகிறார் என்று நானும்
பெரும்பான்மையோரைப் போல தீவிரமாக நம்பினேன். அதற்கேற்றாற் போல் தனக்கு கிடைத்த பெனால்டி கிக்கை சாமர்த்தியமாக பயன்படுத்தி ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஒரு கோல் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்தினார். பதிலுக்கு இத்தாலியும் ஒரு கோல் சமனாக்கியது.

எக்ஸ்ட்ரா டைமில் வந்ததுதான் வினை. அப்பாவின் சட்டையின் பின்னாலிருந்து இழுக்கும் குறும்புக்கார மகன் போல, இத்தாலிய வீரர் மாட்டரஸி ஜிடேனின் சட்டையை இழுத்துக் கொண்டே போக எரிச்சலைடந்த ஜிடேன் "சட்டை வேண்டுமா? ஆட்டம் முடிந்ததும் தருகிறேன்" என்பதாக பத்திரிகைச் செய்தி. பதிலுக்கு மாட்டரஸி ஜிடேனை "தீவிரவாதி" என்றாரா? "உன் மனைவியின் சட்டையை தா" என்றாரா? அவருடைய உறவினர்களை ஆபாசமாக திட்டினாரா? .. ஒன்றும் தெரியவில்லை. கோபமடைந்த ஜிடேன், கையால் அடித்தால் நடுவர் பவுல் கொடுத்து விடுவாரோ என்னவோ என்று நினைத்து மஞ்சுவிரட்டு காளை போல தலையால் வேகமாக மாட்டரஸியின் தலையில் முட்டியதை தொலைக்காட்சியில் லைவ்வாக பார்த்த போது அந்த நடுராத்திரியில் கொஞ்சமிருந்து தூக்கக் கலக்கமெல்லாம் விலகிப் போனது.

பெனால்டி கிக்கில் பிரசித்தமான ஜிடேன் அந்த ஆட்டத்தில் நீடித்திருந்தால் பிரான்ஸ் கோப்பையை வென்றிருக்கக்கூடும் என்பதுதான் பெரும்பாலான விளையாட்டு ஆர்வலர்களின் கணிப்பு. ஒரு அணிக்கு தலைவனாக பொறுப்பான நிலையில் இருந்தவர், அந்த தருணத்தை முதிர்ச்சியுடன் அணுகியிருக்கலாம். எதிரணியினர் ஆத்திரமூட்டும் வகையில் பேசி கவனம் சிதைப்பதுதான் வாடிக்கையான விஷயம்தான். கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்தும் ஒரு பேட்டியில் "பாகிஸ்தான் அணியினர் தாம் பேட் செய்கையில் ஆபாசமாக வெறுப்பேற்றும் வகையில் பேசி அவுட் ஆக்க முனைவது வாடிக்கையானது" என்று குறிப்பிட்டிருக்கிறார். ஜிடேன் இந்த விஷயத்தை பின்னால் fifa-விடம் புகார் தெரிவித்திருந்து மாட்டரஸி மீது நடவடிக்கை எடுக்க வைத்திருக்கலாம். இவரது அவசரமான முன்கோபத்தால் சக அணியினரின் அத்தனை வருட தயாரிப்பும் உழைப்பும் வீணாகிவிட்டதுதான் சோகம்.

பீலே, மாரடோனா போன்ற கால்பந்து ஜாம்பவான்களின் வரிசையில் வைத்துப் போற்றத்தக்கவர் ஜிடேன் என்பதில் சந்தேகமேயில்லை. ஆஸ்திரேலியா கடைசி தருணத்தில் பெனால்டியை ஏற்படுத்தி போட்டியிலிருந்து விலகிப் போன பரிதாபத்தைப் போல், பிரான்சும் ஜிடேனின் இந்த தவறால் கோப்பையை இழந்தது வருத்தமானது. இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடமும் உள்ளதாக எனக்குத் தோன்றுகிறது.

()

தீவிரவாதம் என்கிற வார்த்தை ஆங்காங்கே குண்டு வெடிக்கும் இன்றைய சூழ்நிலையில் எதிர்மறையானதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது. ஒரு கொள்கையில், சித்தாந்தத்தில், கருத்தில், செய்கையில் தீவிரமாக இயங்குபவர் அனைவரும் தீவிரவாதிகள்தான். கால்பந்து என்னும் விளையாட்டில் தீவிரமாகவும் ஆத்மார்த்தமாகவும் இயங்கிய ஜிடேனை அந்தத் துறையில் தீவிரவாதி என்றழைப்பதில் தவறில்லைதானே?

(கோக்குமாக்காக ஒரு தலைப்பை வைத்து விட்டு எப்படியெல்லாம் நியாயப்படுத்தி எழுத வேண்டியிருக்கிறது)

1 comment:

enRenRum-anbudan.BALA said...

கால் பந்தாட்ட சூப்பர் ஸ்டார் ஜிதானை "தீவிரவாதி" என்று அபாண்டமாகக் கூறியதற்கு என் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் ;-)

அகில உலக ஜிதான் ரசிகர் மன்றத் தலைவர் பாலா