Friday, June 17, 2016

நூல் வாசிக்க ஓர் ஆலோசனை





 உண்மையாகவே புத்தக வாசிப்பை சாத்தியமாக்க விரும்புபவர்களுக்காக ஓர் உபாயத்தை சொல்ல விரும்புகிறேன். விரும்புவர்கள் பின்பற்றி பார்க்கலாம்.

புத்தகங்களை வாங்கி அடுக்கிவிட்டு பெருமையடைவதோடு பலரின்  கடமை முடிந்து விடுகிறது. இது நிலவுடமை சிந்தனையின் மீதான ஒரு போக்கு. ஒருவரின் பரிந்துரையாலோ அல்லது பலரும் பாராட்டுகிறார்கள் என்பதாலோ அது சார்ந்த கவர்ச்சியும் வசீகரமும் ஒரு நூலின் மீது நமக்கு ஏற்படுகிறது. அந்த நூல் உண்மையிலேயே முக்கியமானதா, அதன் உள்ளடக்கம் என்ன? அது நம்முடைய சிந்தனைப் போக்கிற்கு இணக்கமானதா, ஆக்கப்பூர்வமானதா. வாசித்து முடிக்கக்கூடியதா என்கிற ஆராய்ச்சியில் பலரும் ஈடுபடுவதில்லை.

உலக மயமாக்க காலக்கட்டத்திற்கு பிறகு விலை கொடுத்து வாங்கும் வசதியும் (அதிலும் இணைய விற்பனை வந்து விட்ட பிறகு இன்னமும் எளிது) அச்சு நுட்பமும் பரவலாக வந்து விட்ட பிறகு மிக எளிதில் நூலை ஆர்டர் தந்து வாங்கி புத்கக அடுக்கில் வைத்து அழகு மட்டும் பார்க்கும் ஒரு பழக்கம் படிந்து விடுகிறது. (லெண்டிங் லைப்பரிகள் பெருமளவில் குறைந்தது இதனால்தான்).

அந்த நூலை அடைந்து விட்ட பிறகு அதன் மீதான கவர்ச்சி குறைந்து விடுகிறது., திருமணத்தைப் போல (vice versa) பிறகு அடுத்த நூலின் மீதான கவனம். இப்படி சேர்த்து வைத்த புத்தகங்களை 'என்றாவது ஒரு நாள்' வாசித்து விடுவோம் என்று  பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறானவர்களுக்கு 'அந்த நாள்' பெரும்பாலும் வரவே வராது. தினமும் கட்டாயமாக சில பக்கங்கள் என்று வாசிக்காதவரை அது சாத்தியப்படவே படாது.

இன்னும் பலர் இணையம் சார்ந்த பொது உரையாடல்களில், அல்லது வரவேற்பறை உரையாடல்களில் 'இந்த நூலை வாங்கி வைத்திருக்கிறேன்' என்று பெருமை பேசுவதற்காகவே நூல் வாங்குபவர்கள். அந்த உரையாடலில் தனிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவும், அறிவுஜீவி வாசனையைப் பூசிக் கொள்வதற்காகவும் நூல் வாங்குபவர்கள்.

இவ்வாறான பாவனையில் தவறில்லை. என் வாசிப்பு பழக்கமும், திரைப்படம் தொடர்பான தேடுதலும் உயர்ந்ததற்கு அதுவும் ஒரு காரணமாக இருந்தது. இந்த பாவனை ஒரு நல்ல நூலை, சிந்தனையை நோக்கி அழைத்துச் செல்லும் வாசல்களில் ஒன்றாக இருக்க முடியும். ஆனால் அந்தப் பாதை நீளாமல் அது வெறும் பாவனையாகவே பலருக்கு  நின்று விடுவதுதான் சிக்கல். பலர் இந்த அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்டு அங்கேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.

'எங்கே சார் நேரம் இருக்கு' என்கிற சலிப்பின் மூலம் நூல் வாசிக்காமலிருப்பதின் நியாயங்களை வளர்த்துக் கொள்ள முயல்கிறார்கள். ஆனால் ஒரு நாளின் எத்தனை மணி நேரத்தை நாம் வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை சற்று நிதானமாக சுய விசாரணையுடன் கறாராக பரிசீலித்துப் பார்த்தாலே தெரியும். பயணத்தில், வங்கியில் என்று எங்கெல்லாம் காத்திருக்கும் நேரமிருக்கிறதோ அதையெல்லாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்கிற ஆலோசனை பல்லாண்டுகளாக சொல்லப்பபட்டுக் கொண்டு வருகிறது. ஆனால் பின்பற்றப்படுவதில்லை. அதிலும் இந்த ஸ்மார்ட் போன் கலாச்சாரம் வந்த பிறகு எதிரேயுள்ள மனிதனின் முகத்தை நிமர்ந்து கூட பார்க்காமலிருக்கும் அவல நிலையை நோக்கி  நாகரிகம் என்ற பெயரில் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

()

இதிலிருந்து விடுபட என்னளவில் நான் உத்தேசிக்கும் உபாயம் ஒன்றுள்ளது. அது நூலகத்தில் உறுப்பினராவது. அரசு நூலகமான தேவ நேய பாவாணர் நூலகம் முதல் சென்னை கன்னிமரா நூலகம் வரை பல நூலகங்கள் உள்ளன. இது தவிர லெண்டிங் லைப்பரிகளும். அரசு சார்ந்த நூலக இயக்கத்தில் சில பல குறைகள் இருந்தாலும் ஒவ்வொரு ஊரிலும்  நாம் அணுகுவதற்கான நூலகம் இருக்கிறது.

அதில் உறுப்பினராகி விடுங்கள்.

இவ்வாறான நூலகத்தில் உறுப்பினராவதின் மூலம் அந்த நூல்களை ஒரு சில நாட்களுக்குள் திருப்பித் தந்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படும்.  இல்லையெனில் அபராதம் கட்ட வேண்டியிருக்கும். அந்தக் கட்டாயம் நமக்கு அந்த நூலை வாசித்தாக வேண்டும் என்கிற நினைவூட்டலையும் உத்வேகத்தையும், நெருக்கடியையும் தந்தபடியே இருக்கும். சொந்தமாக வாங்கிய நூல்களை 'எப்போது வேண்டுமானலும் வாசித்துக் கொள்ளலாம். என்ன இப்போ?'' என்று ஏற்படுகிற அலட்சியம் இதில் ஏற்பட வாய்ப்பு குறைவு.

மட்டுமல்லாமல் நூலகத்திற்கு செல்லப் போகிறோம் என்கிற உணர்வு, அங்குள்ள பல நூறு புத்தகங்களை ஒரே இடத்தில் பார்ப்பதில் ஏற்படும் பரவசம், நிறைய பேர் நூல்ளை வாசித்துக் கொண்டிருப்பதை பார்ப்பதால் கிடைக்கும் அதிர்வு போன்றவை நூல் வாசிப்பு தொடர்பான உணர்வை புதுப்பித்துக் கொண்டேயிருக்கும்.

'இதுக்கெல்லாம் எங்க சார் நேரம்?' என்று மறுபடியும் ஆரம்பிக்காதீர்கள். நல்ல விஷயத்திற்காக செலவு செய்யப்படும் ஒவ்வொரு மணித்துளியும் வீணல்ல.

என்னிடம் வாசித்து முடிக்காமலிருக்கும் நூல்கள் இருந்தாலும் கூட வலுக்கட்டாயமாக நூலகத்திற்கு செல்லும் வழக்கத்தை விடாமலிருப்பது இந்தக் காரணங்களினால்தான். சமயங்களில் அபராத தொகையைத் தவிர்ப்பதற்காகவே நூல்களை விரைவில் வாசித்து முடித்து விடுவேன்.

இன்னொரு முக்கிய காரணம், தனிநபர் ஒருவரிடம் அதிக நூல்கள் குவிந்து அவை அவருக்கும் பயனின்றி, மற்றவர்களுக்கு பயனின்றி வீணே மக்கி அழிவது ஒரு மோசமான கலாசாரம். இத்தனை நூல்களை சேர்த்து வைத்திருக்கிறேன் என்கிற பெருமைக்காகவே நூல்கள் பாதுகாக்கப்படுவது ஒரு மோசமான போக்கு. சுற்றுச்சூழலில் பாதிப்பை உண்டாக்கி உருவாக்கப்படும் புத்தகங்கள் அவை உருவாக்ப்பட்ட நோக்கத்தை கூட பூர்த்தி செய்யாமல் வீணே வைக்கப்பட்டிருப்பது முறையல்ல. நூலக வாசிப்பின் மூலம் மேலதிக புத்தகங்கள் சேராமலிருக்கும் ஆதாயத்தையும் கவனித்துப் பார்க்கலாம். 


suresh kannan

Sunday, June 05, 2016

இறைவி - முதல் பார்வை




இறைவி -

படம் ஆஹா ஓஹோ அல்லது மிக சுமார் என்னும் இருதுருவ எதிர்வினைகளை இது குறித்து காண்கிறேன். பத்து நிமிடத்திலேயே கணித்து விடும் மேதாவிகள் முதற்கொண்டு இடது கையால் புறக்கணித்துச் செல்லும் பாவனைகளின் அபத்தங்கள் வரை பலதரப்பட்ட கருத்துகள். என்னதான் ஒரு திரைப்படம் விமர்சனம் அபாரமாக எழுதப்பட்டிருந்தாலும் அது ஒரு தனிநபரின் கண்ணோட்டம் மட்டுமே. சமூகத்தின் மனவோட்டத்தை துல்லியமாக பிரதிபலிப்பதாகாது. தேர்தல் முடிவுகளை கவனித்திருப்பீர்கள்தானே?

குழம்பித் தவிக்கும் நண்பர்களுக்காக என் பங்கு உப்பையும் அள்ளிப் போடுகிறேன்.

ஒரு திரில்லர் திரைப்படம், ஓர் அவல நகைச்சுவை திரைப்படம் என்கிற முந்திய வகைமைகளிலிருந்து முற்றிலும் எதிர்திசையிலான ஒரு முயற்சியை செய்ததற்காகவே கார்த்திக் சுப்புராஜை பாராட்ட வேண்டும். தனது முன்னோடிகளிடமிருந்து இன்னும் சற்று உயர்ந்து ஓர் அடுத்தக் கட்ட பாய்ச்சலை இயக்குநர் நிகழ்த்தியிருக்கிறார். தமிழ் சினிமாவின் இப்போதைய சூழலில் இதைத்தான் செய்ய முடியும். தேவர் மகன் சிவாஜி சொல்வது மாதிரி ' அவன் மெதுவாத்தேன் வருவான்'.

இதையும் கூட செய்யாமல் பாதுகாப்பான பாதையிலேயே வண்டியை செலுத்திக் கொண்டிருக்கும் இயக்குநர்களைக் கூட கொண்டாடத் தயாராகும் இருக்கும் நாம், மந்தையிலிருந்து சற்று விலக நேரும் ஓர் இளம் ஆட்டை உடனடியாக பிரியாணி போட முயல்வது அநியாயமா இல்லையா நண்பர்களே?

முக்காடு போட்டுக் கொண்டே ரிகார்டு டான்ஸ் பார்த்து விட்டு திரும்பிய பெரிசுகள் மாதிரி.. "ஆக்சுவலி.. இது பெண்ணியம் படம் பத்தின படம் கிடையாது' என்று மழுப்பலாக மறைத்துக் கொண்டு பேசுகிறவர்களைக் கண்டால் நகைச்சுவையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆணின் அகங்கார உலகையும் சற்று அசைத்துப் பார்ப்பதில் படம் வெற்றி பெற்றிருக்கிறது. பார்வையாளர்களுக்கு ஸ்பூன் பீடிங் செய்யும் சில எரிச்சல்களைத் தவிர்த்து கூடுமானவரை இதை பிரச்சார தொனியின்றி சொல்ல முயன்ற இயக்குநருக்குப் பாராட்டு.

படத்தின் திரைக்கதையில் ஒரு கோர்வையின்மை தெரிகிறது. படத்தின் உண்மையான ஆட்டம் இரண்டாம் பகுதியிலிருந்துதான் ஆரம்பிக்கிறது. .இந்த சமநிலையின்மையை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். முதல் பாதியில் லக்ஸரியாக செலவழிக்கப்பட்டிருந்த அபத்தங்களை துண்டித்து கச்சிதமாக்கியிருக்கலாம். இதனாலேயே நிறையப் பேர் இதை வெறுக்கிறார்கள் என யூகிக்கிறேன்.

படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பை பலரும் ஆஹா ஓஹோவென்பது எனக்கு ஆச்சரியம். ஒருவேளை திருந்தி விட்ட பையனை சற்று மிகையாகவே தட்டிக் கொடுத்து பாராட்டுவார்களே அப்படியா என தெரியவில்லை. ஓர் ஆசாமி நடிக்கிறார் என்பது வெளியே தெரியாமல் நடிப்பதுதான் அசலான பங்களிப்பு. அந்த வகையில் அஞ்சலி, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, ராதாரவி என்கிற உத்தேசமான ஆர்டரில் இவர்களின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக பாபி சிம்ஹாவின் பாத்திரம் மிகச்சிக்கலானதொன்று. அதை சரியாக வடிவமைக்க முயன்ற இயக்குநரையும் வெளிப்படுத்த முயன்ற நடிகரையும் வியக்கிறேன்.

மனம் திருந்தி மீண்டும் வாழ முயலும் ஒரு தம்பதியினரைக் காட்டும் கேமரா நகர்ந்து சென்று குழந்தை உறங்கிக் கொண்டிருக்கும் தூளியின் இடையில் நின்று அவர்களைக் காண்பிக்கிறது. இந்த நிலையில் காமிராவின் நகர்வுகள் தற்செயலானதாக அல்லாமல் பிரக்ஞைபூர்வமானதாக திட்டமிட்ட புத்திசாலித்தனத்துடன் இயங்குகிறது.

தமிழ் சினிமாவில் அபூர்வமாக நிகழும் அடுத்தக் கட்ட நகர்வுகளை ஆதரியுங்கள் நண்பர்களே.. கருவிலேயெ கொன்று போடாதீர்கள்.

தயங்கித் தவிக்கும் நண்பர்கள் நிச்சயம் இதை திரையரங்கில் சென்று காணுங்கள். படத்தின் சில தருணங்கள் உங்களுக்கு நல்ல அனுபவத்தை தரும். அதற்கு நான் உத்தரவாதம்.

விரிவான பதிவு வெளிவரக்கூடும்.





suresh kannan

Friday, June 03, 2016

விகடன் - தடம் - ஒரு பார்வை



நவீன இலக்கிய தமிழ் சிற்றிதழ்களின் வரலாறு சி.சு.செல்லப்பாவின் 'எழுத்து' இதழிலிருந்து துவங்குகிறது. அதற்கு முன்பாகவே இங்கு சிற்றிதழ் மரபை உருவாக்கிய மணிக்கொடி ஓர் இயக்கமாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்தாலும் அது சிற்றிதழ்களின் தீவிரமான கூறுகளை அல்லாமல் சுதந்திரப் போராட்டத்தின் விஷயங்களையும் தினஇதழின் தன்மையையும் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

பொதுவாகவே சிற்றிதழ்கள் என்பது தனிநபர்களின் தியாகத்தினாலும் அவர்களின் சுயாதீன முயற்சியாலும் இலக்கிய ஆர்வத்தினாலுமே துவங்கி இயக்கப்பட்டன. தொடர்ந்து இயங்குவதற்கான நிதிச்சுமையை தாங்க முடியாமல் பல சிற்றிதழ்கள் அற்பாயுளில் மறைந்தன. இலக்கிய ரசனை பெரிதும் அற்ற சூழல் காரணமாக இவைகளின் மறைவு ஒருவகையில் நம் கலாசார பலவீனத்தை சுட்டுகிறது என்றாலும் இன்னொரு வகையில் சிற்றிதழ்களின் கம்பீரமான அடையாளங்களுள் இதுவும் ஒன்று எனலாம். ஏனெனில் நேர்மையான நோக்கத்துடன் துவங்கப்படும் ஓர் இலக்கிய இதழ் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமெனில் பல்வகையான சமரசங்களுக்கும் அரசியலுக்கும் இடங்கொடுத்து தம்மை ஒரு நிறுவனமாக மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வகையான சமரசங்களுக்கு இடம் தராத காரணத்தினாலேயே பல இதழ்கள் மறைந்து போயின.

வெகுசன இதழ்கள் முன்வைக்கும் மலினமான ரசனைக்கு எதிர்திசையில் இந்த சிற்றிதழ்கள் இயங்கின. இந்த இருவிதமான பத்திரிகைகளுக்கும் இடையே துல்லியமான வேறுபாடும் அடையாளமும் இருந்தது. இவை சமயங்களில் பரஸ்பரம் நேரடியாகவும் மறைமுகமாவும் கிண்டலடித்துக் கொண்டன. உலக அளவில் நிகழும் இலக்கியப் போக்குகள், சிறந்த எழுத்தாளர்கள், தமிழில் உருவாகும் நல்ல எழுத்துக்கள் ஆகியவற்றை இந்த சிற்றிதழ்கள் அடையாளப்படுத்தின. இவற்றினுள் குழு அரசியலும் குடுமிப்பிடி சண்டைகளும் இருந்தன. Polemics எனப்படும் இவ்வகையான இலக்கிய பூசல்கள் இலக்கியம் வளரவும் ஒருவகையில் காரணமாக இருந்தது. இவ்வகையான பூசல்களை வேடிக்கை பார்க்கும் ஆர்வத்துடன் உள்நுழையும் ஓர் இளம் வாசகன் மெல்ல நல்ல இலக்கியத்தின் பால் கவரப்படும் ஆரோக்கியமான விபத்தும் நிகழ்ந்தது.

()


தங்களின் வணிக சந்தையை விஸ்தரிப்பது உட்பட்ட பல காரணங்களுக்காக ஐரோப்பியர்கள் உலகமெங்கிலும் அதற்கான வாய்ப்புகளை தேடத் துவங்கியதைப் போல, இலக்கிய வாசகர்கள் எனும் குறுகிய சந்தையையும் ஏன் விட்டு வைப்பானேன் என்று இந்தப் பிரதேசத்தையும் கைப்பற்றும் முயற்சியில்தான் இடைநிலை இதழ்கள் துவங்கப்பட்டதோ என்னும் பொதுவான சந்தேகம் எனக்குண்டு. சில உண்மையான விதிவிலக்குகள்  இதில் சேர்த்தியில்லை. இந்தியா டுடே போல உயர்ரசனையுள்ள வாசகர்களை குறிவைத்து துவங்கப்பட்ட குமுதம் ஜங்ஷன் போன்ற முயற்சிகள் ஆதரவில்லாமல் துவக்கத்திலேயே மறைந்தன.

அனுராதா ரமணனைக் கொண்டு மகளிர் பத்திரிகையாக துவங்கப்பட்ட 'சுபமங்களா' பின்னர் கோமல் சுவாமிநாதனை ஆசியரராக கொண்டு இலக்கியப் பத்திரிகையாக மலர்ந்தது. இடைநிலை இதழ்களின் துல்லியமான முன்னோடி என்று சுபமங்களாவை சொல்லலாம். சுஜாதா உள்ளிட்ட பலரின் நீண்ட நேர்காணல்கள் அவர்களின் அழகான புகைப்படங்களுடன் இதில் இடம்பெற்றன. இலக்கிய ஆளுமைகளின் நேர்காணல்களின் வடிவம் மேம்பட்டது இதற்குப் பிறகுதான். 'கலைஞர் முதல் கலாப்ரியா வரை' என்று இந்த நேர்காணல்களின் தொகுப்பு நூலாக வெளிவந்தது. சுவாமிநாதனின் மறைவிற்குப் பிறகு இதழ் நின்று போனது. இதைப் போலவே பாவை சந்திரனை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'புதிய பார்வையும் ஒரு நல்ல இடைநிலை இதழாக அறியப்பட்டது. பல இதழ்களுக்குப் பிறகு அதன் முதலாளியே ஆசிரியராக ஆன அவலம் நிகழ்ந்த பின்னால் பத்திரிகையின் உள்ளடக்கம் சீரழிந்தது. இதைப் போலவே பல வருடங்களாக வந்து கொண்டிருந்த கணையாழியும் இந்த இடைநிலை இதழ்களின் வரிசையில் அதன் பாரம்பரிய அடையாளத்தை விட்டு மெல்ல மெல்ல நகர்ந்து சென்று விட்டது.

()

உலகமயமாக்கலின் விளைவு இலக்கிய இதழ்களின் வரலாற்றிலும் எதிரொலித்தது. இலக்கிய எழுத்தாளர்களுக்கும் வெகுசன இதழ்களுக்கும் இடையே நின்றிருந்த  சுவர் மெல்ல கரையத் துவங்கியது. அதுவரை தீபாவளி மலர்களில் மட்டுமே இடம் பெற்றுக் கொண்டிருந்த இலக்கிய எழுத்தாளர்கள், வெகுசன இதழ்களிலும் பத்தி எழுத்து உள்ளிட்ட பலவற்றை எழுதத் துவங்கினார்கள். நுட்ப வசதிகள் இன்னமும் எளிமையானதால் பல இடைநிலை இதழ்கள் புதிதாக தோன்றின. ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருந்த காலச்சுவடு இதழோடு உயிர்மை. உயிர்எழுத்து உள்ளிட்ட பல இதழ்கள் உருவாகின. இணையத்தில் தமிழ் சற்று பரவலான பயன்பாட்டை அடைந்தவுடன் இணைய இதழ்களும் வெளிவரத் துவங்கின


()


இந்த நிலையில் விகடன் குழுமத்திலிருந்து 'தடம்' என்கிற பிரத்யேகமான இலக்கிய இதழ் உருவாகியுள்ளது. முதல் இதழை வைத்தே இதன் போக்கை இப்போதே தீர்மானிக்க முடியாது என்றாலும் இதை இடைநிலை இதழ் என்று இப்போதைக்கு வகைப்படுத்திக் கொள்ளலாம். சற்று மேம்பட்ட வடிவத்தில் உள்ள இடைநிலை இதழ்.

அருமையான வடிவமைப்பு, ஒவியங்களுக்காக தாராளமாக இடம் செலவழிக்கப்பட்ட நேர்த்தியுடன் உருவாகியுள்ளது. ஜெயமோகன் போன்ற படைப்பாளி முதற்கொண்டு அதிஷா போன்ற இளம் எழுத்தாளர்கள் வரையான பங்களிப்பு இதன் ஜனநாயகத்தன்மையை உணர்த்த முயல்கிறது.

வாசித்த வரையில் தமிழ் சிறுகதையின் வரலாறு குறித்து அதன் துவக்கத்திலிருந்து சமகால குறுங்கதைகள் வரை ஒரு பறவைப் பார்வையில் ஜெயமோகன் எழுதியிருக்கும் கட்டுரை அருமை. இளம் வாசகர்களுக்கு உதவிகரமாக இருக்கும். இதன் விடுபடல்கள் குறித்த சர்ச்சைகள் ஏற்படலாம். ஒரு நூலாக எழுதப்பட வேண்டிய விஷயத்தை சில பக்கங்களில் குறுக்க நேரும் போது ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க முடியாது. 'இந்தியாவில் சாதிகள்' எனும் அம்பேத்கரின் நூலின் சாரத்தை சுகுணா திவாகர் எழுதியிருக்கும் விதமும் அருமை.

சர்வதேச தரத்திலுள்ள திரைப் படைப்பாளிகள், சினிமாக்கள் ஆகியவற்றை மட்டுமெ உரையாடிக் கொண்டு தமிழ் சினிமாவை 'நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து போல' புறக்கணித்துக் கொண்டிருந்த அல்லது அதை அவல நகைச்சுவையாக அணுகிக் கொண்டிருந்த இலக்கிய இதழ்கள், வெகுசன ரசனையின் உளவியலை ஆராயும் பொருட்டு தமிழ் சினிமாக்களை பரவலாக உரையாடத் துவங்கியது இடைநிலை இதழ்களின் வருகைக்குப் பிறகுதான். அந்த வகையில் வடிவேலு எனும் நகைச்சுவை ஆளுமையைப் பற்றி சுபகுணராஜன் எழுதியிருக்கும் கட்டுரை கவனிக்கத்தக்கது.

()

இதன் வடிவமைப்பு நேர்த்தியாகத்  தோன்றும் அதே சமயத்தில் அசெளகரியமாகத் தோன்றும் முரணையும் சொல்ல வேண்டும். இது வெகுசன இதழின் முகாமலிருந்து வெளிவருவதால் அதன் வாசகர்களின் மனோபாவத்தை திருப்திப்படுத்த வேண்டிய விஷயங்களை, சமரசங்களை தன்னிச்சையாக இதிலும் கடத்தியிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. போதுமான இடைவெளிகளுடன் படங்களுடன் சுருக்கமாக எழுதப்பட்ட பதிவுகளைத்தான் வெகுசன வாசகர்கள் விரும்புவார்கள். படங்கள் அற்ற நீண்ட கட்டுரைகளுக்கு அங்கு இடமில்லை. அந்த வடிவமைப்பை இங்கும் செய்திருக்க வேண்டுமா? இலக்கிய விஷயங்களை நாடும் வாசகனுக்கு இது போன்ற ஜாலங்கள் தேவையில்லை. படைப்பின் உள்ளடக்கம் மட்டுமே போதுமானது. நுணுக்கி நுணுக்கி எழுதப்பட்ட அட்டையிலிருந்தே கட்டுரைகள் துவங்கும் சிற்றிதழ்களை வாசித்தவனுக்கு இந்த ஆடம்பரம் அசெளகரியமாகவும் நெருடலாகவும் தோன்றலாம், கவிஞர் விக்கிரமாதித்யனை ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பார்ப்பது போல. அவரை தெருவொர தேநீர்க்கடையிலோ அல்லது கள்ளுக்கடையின் பின்னணயிலோ பார்ப்பதுதானே அழகு?

இதைப் போலவே இதன் விலையும். ரூ.50/- என்பது சாமானியனை சற்று தயங்க வைக்கும் விலை. இதன் தேவையற்ற ஆடம்பரத்தைக் குறைத்துக் கொண்டு விலையை சற்று குறைத்தால் நல்லது. விகடன் போன்றே வெகுசன முகாமில் இருந்து பல வருடங்களாக வரும் 'குமுதம்' தீராநதி நல்ல உதாரணம். பொதுவாக இலக்கியம் என்பது அடுத்த வேளை சோற்றுக்கு குறைந்தபட்ச உத்தரவாதமுள்ள சமூகத்தால் எழுதப்பட்டு, வாசிக்கப்படுவது என்றாலும் அது சாமானியனை நோக்கி நகர வேண்டும் என்பதுதானே ஆக்கப்பூர்வமான சிந்தனையாக இருக்க முடியும்? விகடன் குழுமத்திலிருந்து இது வெளிவருவதால் அந்த அடையாளத்தினால் கவரப்பட்டு விகடன் வாசகர்களும் இலக்கியப் பரப்பை நோக்கி வரும் சாத்தியத்தையும் நம்பிக்கையையும் உருவாக்கியுள்ளது 'தடம்'


'தடம்' வெற்றிப் பயணத்தின் தடத்தில் பல வருடங்கள் கடந்து செல்ல வாழ்த்துகள்.


suresh kannan

Wednesday, June 01, 2016

முகநூல் குறிப்புகள் - 4

பள்ளித் தேர்வு முடிவுகள் வரும் நாளிற்கு ஒரு வாரத்திற்கு முன்பேயே 'மாணவச் செல்வங்களே, தற்கொலை செய்து கொள்ளாதீர்கள். தோல்வி என்பது வாழ்க்கையின் ஒரு பகுதிதான்' என்கிற அளவிற்கு சுயமுன்னேற்ற உபதேசிப்பவர்களின் பயமுறுத்தும் கட்டுரைகள் 'தொணதொணவென்று' அதிகம் வர ஆரம்பித்து விடுகின்றன.

யார் பதட்டமாக இருக்கிறார்கள் என்றே குழப்பமாக இருக்கிறது.

உண்மையில் இந்தக் கட்டுரைகள் மாணவர்களின் பெற்றோர்களை நோக்கி உரையாட வேண்டுபவை. நான் கவனித்த வரை 'தான் தேர்வில் தோற்று விட்டோமே' என்று தற்கொலையில் ஈடுபடும் மாணவர்கள் மிக குறைவு. அதிலிருந்து மீள முடியும் என்கிற இளம்மனதுக்குரிய நம்பிக்கையும் அலட்சியமும் அவர்களுக்கு இருக்கிறது.

அவர்களை தற்கொலையை நோக்கி செலுத்துவது அதிகம் எதுவென்றால் 'அடப்பாவி... இவ்ளோ பீஸை கட்டி படிக்க வெச்சேனே.. எனக்கு அப்பயே தெரீயும். படி படி-ன்னா சரி.. சரி..ன்னு ஏமாத்திட்டே இருந்தான்.ஐயோ.. ஒரு வருஷம் வீணாப் போயிடுமே.. மத்த பிள்ளைங்கள்லாம் காலேஜ் போகும் போது இவன் மாத்திரம் தடிமாடு மாதிரி வீட்ல இருப்பானே. கட்ன பணம்லாம் வீணா போச்சே.. பாவி ..பாவி..

என்கிற பெற்றோர்களின் புலம்பல்களையும் ஒப்பிடல்களையும் எதிர்கொள்ள இயலாத குற்றவுணர்வில்தான் மரணத்தை நாடுகிறார்கள், தேர்வில் தோற்றதால் அல்ல.


***


மெலடி பாடல்களை மட்டும்தான் ரசித்து பகிர வேண்டும் என்கிற கட்டாயம் ஏதுமில்லை. வேகமான தாளயிசையில் அதிர வைக்கும் பாடல்களையும் ரசிக்கலாம். அப்படி இன்று காலை நான் கேட்டு மிரண்ட பாட்டு இது.

மரகதமணி எனப்படும் கீரவாணி ஓர் அருமையான இசையமைப்பாளர். அழகன், நீ பாதி நான் பாதி (இதில் நிவேதா என்கிற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக் கொண்டு அவர் இசையமைத்திருக்கும் அபாரமான பாடலைக் கேளுங்கள்) என்று தமிழில் நல்ல திரையிசைப் பாடல்களை தந்திருந்தாலும் அதிகம் கவனிக்கப்படாதவர்; தெலுங்கு இசையமைப்பாளராகவே அறியப்படுபவர்.

ஓர் ஈயை கதாநாயகனாக வைத்துக் கொண்டு ஒரு ஃபேண்டசி படம் தர முடியும் என்று நினைப்பதற்கே ஒரு கெத்து வேண்டும். அருமையான திரைக்கதையையும் நுட்பத்தையும் வைத்து அதை சாதித்த ராஜமெளலியை எத்தனை பாராட்டினாலும் தகும்.

இந்தப் பாடலில் ஓர் ஈ ஒரு மனிதனை பழிவாங்கத் துடிக்கிறது. அதற்கான அழுத்தமான வெறியும் வன்மமும் கருணையின்மையும் இந்தப் பாடலில் குருதித் துளிகளாக தெறித்து விழுகிறது.

கிட்டத்தட்ட குழந்தைகளின் ரைம்ஸ் போல விளையாட்டாக துவங்கும் பாடல் மெல்ல மெல்ல அதன் பயங்கரத்திற்கு நகர்கிறது.

அபாரமாக எழுதப்பட்ட பாடல் வரிகளும்(மதன் கார்க்கி) இதன் பயங்கரத்திற்கு பொருத்தமாக துணை போகிறது.

நான் உடனடியா செஞ்சு முடிக்க
பத்து விடயம் கிடக்குது

One உன்ன கொல்லணும்
Two உன்ன கொல்லணும்

என்று பத்து வரை வில்லனை கொல்வது மட்டுமே முக்கியமான அஜெண்டா என்கிற வெறித்தனம் பாடல் வரிகளில் தெறிக்கிறது.

கதற கதற பதற பதற
சிதற சிதற சிதற சிதற
வெட்டி வெட்டி வெட்டி கொல்லணும்

என்பது அந்தப் பயங்கரத்தின் உச்சம். திரைக்கதையின் இணையாக பயணிப்பவர்கள் இந்தப் பழிவாங்கலின் முக்கியத்துவத்தை உணர்வதால் அவர்களும் இதனுடன் உற்சாகமாக இணைந்து கொள்வார்கள். அது இயக்குநரின் வெற்றி.

ஈ தன் சிறிய உருவத்தின் எல்லைக்குள் செய்யக்கூடிய சாத்தியங்களை வைத்துக் கொண்டு ஆனால் பெரிய அளவிலான பழிவாங்கும் உத்திகளை சுவாரசியமாக யோசித்து காட்சி வடிவில் சாத்தியமாக்கியிருக்கிறார் ராஜ்மெளலி.

அணு குண்டு போடும் வண்டு நானு
தொடங்கிடுச்சு போரு...

உன் கோட்டைக்குள்ள வாறேன்
உனை வேட்டையாடப் போறேன்
உன் கண்ணுக்குள்ள கைய விட்டு
ஆட்டிப்பாக்கப் போறேன்...

வாசிப்பதற்கு எளிய வரிகள் போல் தோன்றினாலும் மெட்டின் மீட்டருக்குள் ஆனால் அழுத்தமான, பொருத்தமான, தொடர்ச்சியான வரிகளை எழுத வேண்டும் என்கிற சவாலை வெற்றிகரமாக தாண்டியிருக்கிறார் மதன் கார்க்கி.

உச்சபட்ச டெஸிபலில் வைத்து இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள். திருப்பி அடிக்காத கோயிஞ்சாமி எவராது எதிரே மாட்டினால் அவர் கழுத்திலேயே பொளேர் என்று அடிக்கத் தூண்டும் எனர்ஜியும் வெறியும் இந்தப் பாட்டில் கலந்து சீறுகிறது.

முழு திரைப்படத்தையும் மீண்டுமொருமுறை பார்க்க வேண்டும் என்கிற ஆவலையும் ஏற்படுத்துகிறது. 



இதை ஏற்கெனவே சொல்லி விட்டேனா என்று தெரியவில்லை. என்றாலும் மறுபடியும் சொல்லலாம். தவறில்லை. எங்கள் வீட்டில் பொதுவாக விஜய் டிவிதான் பெரும்பான்மையாக ஓடும். எனவே மற்ற சானல்களின் ரியாலிட்டி ஷோக்களை நான் அவ்வளவாக கவனித்ததில்லை.

இதில் 'கனெக்ஷன்ஸ்' மற்றும் ' நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்' போன்ற அபத்தமான நிகழ்ச்சிகளை தடைசெய்ய எவராவது பொதுநலவழக்கு தொடருவாராயின் அதை ஆதரித்து என் பங்காக இப்போதே ரூ.101/ - தரத் தயார்.

என்னதான் பல்வேறு ரசனைக்குட்பட்ட பொதுதரப்பின் மனோபாவத்தை கணித்து அதற்கேற்ப நிகழ்ச்சிகளை வடிவமைப்பது கடினமானதுதான் என்றாலும் இத்தனை அபத்தமாக கூட நிகழ்ச்சி இருக்க முடியுமா என்று எண்ண வைத்தவை. தமிழை சாகடிக்க பல்வேறு வழிகளில் இதுவுமொன்று.

இன்னொரு கொடுமையையும் பார்த்தேன். ஆங்கில தொலைக்காட்சிகளில் வரும் சாகச நிகழ்ச்சிகளை அப்படியே நகல் செய்து 'regionalise' செய்கிறோம் என்கிற பெயரில் இங்குள்ள தொந்தி, தொப்பை நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் கயிற்றில் தலைகீழாக தொங்கி மூச்சு வாங்கி சில நொடிகளில் ப்பே... என்று அலறியடித்துக் கொண்டு வரும் கொடூரம் சகிக்கவேயில்லை.
:)


***

பொதுவாக காலையில் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. இன்று செய்திதாள் வர தாமதமானதால் வானிலை குறித்து அறிய தொலைக்காட்சியை இயக்கினேன். சன் டிவியில் இயக்குநர் மெளலியின் நேர்காணல் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

மெளலியின் நகைச்சுவை மிக மிக பிரத்யேகமானது; தனித்துவமானது. எளிதில் நகல் செய்ய முடியாதது. சில வசனங்களை அவர்தான் சொன்னால்தான் அதன் தாக்கம் வெளிப்படும். இவரை வழக்கமான மைலாப்பூர் அசட்டு நகைச்சுவை வரிசையில் இணைத்து விட முடியாது.

அந்த நேர்காணலில் மனிதர் அநியாயத்திற்கு அடக்கமாக பேசிக் கொண்டிருந்தார்.

எவரிடமும் உதவி இயக்குநராக அல்லாமல் நேரடியாக இயக்குநர் ஆனது, விளையாட்டை மையப்படுத்தி திரைப்படம் இந்தியாவில் அது வரை உருவாகியில்லாமலிருந்த நிலையில் அஸ்வினி நாச்சப்பாவை வைத்து ஒரு sports drama திரைப்படத்தை பல வருடங்களுக்கு முன்பே உருவாக்கியது. என்று பல விஷயங்களில் அவர்தான் முன்னோடி.

இது தொடர்பான விஷயங்களையும் தொலைக்காட்சி சீரியலில் நடிக்க வந்தது குறித்தும் அலட்டல் ஏதும் அல்லாமல் யாரையோ சொல்வது போல சொல்லிக் கொண்டிருந்தார்.

அவருடைய துவக்க கால திரைப்படங்களான 'மற்றவை நேரில்' 'இவர்கள் வித்தியாசமானவர்கள்' உள்ளிட்ட பல திரைப்படங்களின் பிரதிகள் இன்று காணக்கிடைக்கவில்லை என்பது சோகம்.


***


சுமார் வாரத்திற்கு ஒரு முறை தொலைபேசியில் அழைத்து என் அம்மாவை குசலம் விசாரிப்பது வழக்கம். சமயங்களில் ஒரு வாரம் என்பது இரண்டு வாரங்களாகி ஒரு மாதமாக கூட ஆகி விடுவதுண்டு.

ஒருபக்கம் அது பற்றிய நினைவும் குற்றவுணர்வும் இருந்தாலும் பணியழுத்தம் காரணமாக மனது அதில் செல்லாது. தள்ளிப் போட்டுக் கொண்டேயிருக்கும். சற்று தளர்வாக இருக்கும் சமயங்களில் போன் செய்யும் நினைவு வராமல் தொலையும்.

அவ்வாறு ஒரு மாதமாகி விட்ட சமயங்களில் சற்று தயக்கத்துடன்தான் போன் செய்வேன்.

"என்னம்மா.. எப்படி இருக்க.. உடம்பு எப்படி இருக்கு. இந்த மாசம் சுகர் டெஸ்ட் போனியா?"

எதிர்பார்த்தபடியே மறுபக்கத்திலிருந்து கண்ணகி கிளைமாக்ஸ் கண்ணாம்பா குரலில் ஆவேசக்குரல் பொங்கி வரும்.

"ஏண்டா.. நான் உயிரோட இருக்கறதாவது நினைப்பிருக்குதா? ஒரு போன் பண்ணா என்ன? போன் தேஞ்சு போயிடுமா? என்னா ஏது -ன்னு கூட விசாரிக்க மாட்டியா? ஏன் உன் வீட்டு மகராசி போன் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டாளா?"

என்று நம்முள் உள்ள குற்றவுணர்வை அதிகப்படுத்துவது போல் புலம்பல் சத்தம் அதிகம் வரும். உடனே டிபன்ஸிவ் டெக்னாலஜியாக நம் மனதிற்குள் ஒரு ரத்தக்கண்ணீர் எம்ஆர்ராதா உருவாகி விடுவார்.

'நாமதான் ஆயிரம் வேலைக்கு நடுவுல போன் செய்ய முடியாம பிஸியாக இருக்கோம். பொழுதன்னிக்கும் சீரியல் பார்த்து பொழுதக் கழிக்கிற அந்த கெழங்கட்டைங்கதான் போன் செஞ்சா என்ன? அது ஏன் நாமளே போன் பண்ணணும்-னு வெயிட் பண்றாங்க?"

ஆனால் அப்படியெல்லாம் கேட்டு விடமுடியுமா? நம் தமிழ் கலாசாரமும் பண்பாட்டு அடையாளங்களும் என்னாவது? நான் அந்தப் பின்புலத்திலிருந்து உருவாகி வந்த ஒரு வரலாற்றுக் கண்ணி அல்லவா?

எனவே எம்.ஆர்.ராதாவை பின்னுக்குத் தள்ளி விட்டு, நீண்ட வருடம் கழித்து தாயைப் பார்க்கும் எம்ஜிஆரின் நெகிழ்ச்சியை வரவழைத்துக் கொண்டு சிவாஜி மாடுலேஷனில் உரையாடலைத் தொடர்வேன்.

"மன்னிச்சிடும்மா.. என்னம்மா.. பண்றது.. வேலைஅதிகம். நீ எப்டிம்மா இருக்கே? வேளா வேளைக்கு மருந்து சாப்பிடறியா?"

இது பாவனை என்று தெரிந்தாலும் மறுபுறத்தின் குரலில் கணிசமான மாற்றமும் கனிவும் தெரியும்.

அதுதான் அம்மா!

:)


***


திருமண வீடுகளில் சிலருக்கு ஒரு கெட்ட வழக்கமுண்டு. 'சாப்பீட்டீர்களா?' என்று ரெண்டு மூணு முறை உறுதிப்படுத்திக் கொள்ள விசாரி்த்தால் போயிற்று. சந்தேகமா.... என்று அவர்களின் கையை கொண்டு வந்து நம் மூக்கின் மீது வைத்துக் காட்டுவார்கள்.

நல்லவேளை, எவருக்காவது வயிற்று உபாதையிருந்து பாத்ரூம் எந்தப் பக்கம் என்று அவர் விசாரித்து நாமும் வழிகாட்டி பின்பு "வேலை முடிந்ததா' என்று மெல்லிய மனித நேயத்துடன் விசாரித்தால் இம்மாதிரியான ஆசாமிகள் என்ன செய்வார்களோ என்று யோசிக்கவே திகிலாக இருக்கிறது.

வாக்களிப்பு முடிந்த நாள் அன்று இணையம் முழுக்க இது போல் கறை படிந்த பல விரல்கள். சாட்சியத்தை நிரூபிக்கிறார்களாமாம். அதில் பல விரல்களில் நகம் வெட்டாத குறை வேறு.

நண்பர் ஒருவரும் கூட அம்மாதிரியான விரல் ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். ஆனால் அன்று அவரால் வாக்களிக்க இயலவில்லை என்று எனக்கு நன்றாக தெரியும்.

"ஏன்யா.. அந்த மாதிரி செய்தீரு?' என்றேன்.

'எவன் விரலோட போட்டோவையோ எடுத்துப் போட்டேன். யாருக்குத் தெரியப் போகுது?" என்றார்.

அடப்பாவிகளா! கள்ள ஓட்டு போடுவார்கள். கேள்விப்பட்டிருக்கிறேன். கள்ள ஸ்டேட்டஸூமா?

வெளங்கிடும்.
:)


***


குடும்பத்தோடு 24 பார்த்து விட்டு இப்போதுதான் திரும்பினேன்.

டைம்மெஷனில் நான்கு நாட்களுக்கு முன் போய் அப்போது கவுண்ட்டரில் நாலு டிக்கெட்டுக்காக கட்டிய ரூ.480/-ஐ திருப்பி எடுக்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று இப்போது எண்ண வைத்து விட்டது அந்த திரைப்படம்.

தோழி சமந்தாவிற்காக இதைப் பொறுத்துக் கொள்கிறேன். என்ன க்யூட்னஸ் இல்ல?

:)

***


இந்த தேர்தல் நிலவர கலவரங்களில் ரணகளத்திலும் கிளுகிளுப்பான ஒரு செய்தி என்னவெனில் அது தேதிமுகவின் பின்னடைவு. விஜயகாந்த்தின் அதிகார கனவுகளின் அஸ்தமனம் இந்த தேர்தலின் கூடவே நிகழந்தால் அதிக மகிழ்ச்சி.

இந்த நோக்கில் தமிழக மக்களும் விஜயகாந்த் முன்பு சொன்னதையேதான் இப்போது எதிரொலிக்கிறார்கள்.

"தூக்கி அடிச்சிடுவேன்.. பார்த்துக்க.."

:)


***


தேர்தல் நிலவரங்கள் ஒருபக்கம் இருக்கட்டும். நாம் இந்தப் பாடலை கவனிப்போம். கடந்த ஒரு வாரமாக என்னை இன்பமாக தொந்தரவு செய்து கொண்டேயிருக்கும் பாடல்.

sid sriram -ன் குரல் ஏன் சிலருக்கு பிடிக்கவில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது. கர்நாடக சங்கீதமும் மேலை செவ்வியல் இசையும் அறிந்த ஒரு பாடகரின் கலைத்திறமை சந்திக்கும் புள்ளிகள் இவர் பாடும் பாடல்களில் சிதறி வழிகின்றன.

பழைய மரபும் சமகால நவீனமும் இணையும் அற்புதம்.. இந்தப் பாடலில்் ஒரு குறிப்பிட்ட வரியை வேறு வேறு ஆலாபனைகளில் இவர் கையாள்வது சிறப்பு.

பட்டுத்துணியை கூர்மையான கத்தரியால் துண்டித்து ஓர் உருவத்தை அழகு செய்வது போல இந்தப் பாடலை அப்படிப் பார்த்து பார்த்து அலங்கரித்திருக்கிறார் ரஹ்மான். பொதுவாக அவர் பாடகர்களை சுதந்திரமாக அனுமதிப்பார் என்பார்கள். இதிலும் அப்படிப்பட்ட சுதந்திரம் இருந்தாலும் அவை ஒரு கறாரான எல்லைக்குள் நின்று இயங்குவதை கவனிக்கலாம்.

பாடல் முழுக்க வரும் அந்த ரிதம்மும் பின் லேயரில் மெல்லிய குரலில் கசியும் பெண் குரலும் அத்தனை அழகாக இருக்கிறது. வழக்கம் போல் உள்ளுக்குள் பல ஆச்சரிய துண்டுகள்..

நான் பெரிதும் ரசித்தது இதில் வரும் பாடல் வரிகள். அதாவது துண்டு துண்டு மின்னல்கள். பொதுவாக இம்மாதிரி வரிகளை நாம் தவற விட்டு விடுவோம்.

நாயகிகளை மானே, தேனே, மயிலே, குயிலே என்றெல்லாம் திரைப்பாடல்களில் வர்ணித்தது போக மேலதிக அன்பில் அதுசார்ந்த சிறு கோபத்தில் அவரை திட்டுவதும் காதல்தான்.

'காதல் பிசாசே' என்று இதை துவங்கி வைத்தார் யுகபாரதி. 'அழகான ராட்சசியே' என்று பின்பு இணைந்தார் வைரமுத்து.

மதன் கார்க்கி இப்போது 'அரக்கியே' என்கிறார்.

கணினி நிரல்களை வைத்து மென்பொருளை உருவாக்க முடிவது போல பாடல்களை உருவாக்குவது குறித்த மென்பொருளை இவர் உருவாக்கிய போது பலர் கோபம் கொண்டார்கள். ஒருவகையில் மதன் செயல்படுத்தியது உண்மையே.

சுஜாதா ஒருமுறை கண்ணதாசனிடம் பேசிய போது கவிஞர் கூட இதை உறுதிப்படுத்தினார். எதுகை, மோனைகளை கவனமாக அமைத்துக் கொண்டால் அதற்கேற்ற பாடல் வரிகளை எளிதில் உருவாக்கி விடலாம். தொடர்ந்த பயிற்சியின் மூலம் வருவது இது.
சினிமா இசை ஏற்படுத்தி தரும் கறாரான எல்லையின் அவஸ்தை இது.

ஆனால் அந்தப் பயிற்சிக்குள்ளும் அந்த கவிஞனின் பிரத்யேகமான கவிமனம் இயங்குகிறதா என்பதில்தான் முக்கியமான வேறுபாடு இருக்கிறது.

மதனின் வரிகளில் பொதுவாக அதிக மொழி கலப்பு இருப்பது நெருடலை தந்தாலும் சமகால இளையமனதுகளை அவரும் பிரதிபலித்துதான் ஆக வேண்டியிருக்கிறது.

இதில் துண்டு துண்டாக வரும் பல அபாரமான வரிகளை கவனித்தேன்.

மெய் நிகரா மெல்லிடையே
பொய் நிகரா பூங்கொடியே

என்று ஆரம்பமே அசத்துகிறது.

புல்லாங்குழலே... வெள்ளை வயலே...
பட்டாம் புலியே...
கிட்டார் ஒலியே...
மிட்டாய் குயிலே...
ரெக்கை முயலே

இதில் ஒலிக்கும் நயத்தையும் ஒத்திசைவையும் அழகான படிமங்களையும் கவனியுங்கள். மிக குறிப்பாக மிட்டாய் குயிலே என்கிற சொல்லின் கற்பனை என்னை ரொம்பவும் கவர்ந்தது. அடிக்கடி சொல்லிப் பார்த்தேன். தித்தித்தது.

பட்டாம் புலியே என்பது பட்டாம்பூச்சி + புலியின் விநோத சேர்க்கையை உணர்த்தும் கற்பனை என யூகிக்கிறேன்.

இதையும் கவனியுங்கள்.

பேசும் பனி நீ.. ஆசை பிணி நீ..
விண்மீன் நுனி நீ.. என் மீன் இனி நீ..
இன்ப கனி நீ.. கம்பன் வீட்டு கணினி

இந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதமும் அத்தனை அழகாக இருந்தது. நடனம் வடிவமைக்கப்பட்ட விதமும் அழகு.

பழைய கற்பனைதான். காதலி பார்க்கும் இடம், நபர்கள் எல்லாமே காதலனின் முகமாகவே தெரிகிறது. 'காக்கைச் சிறகினிலே நந்தலாலா'தான்.

பாட்ஷா திரைப்படத்திலும் கூட இப்படியொரு கற்பனைப் பாடல் வருகிறது. 'நீ நடந்தால் நடையழகு' பாடலில் நாயகி பார்க்கும் எல்லோருமே ரஜினிகாந்த்தாக தோன்றுவார்கள்.

ஆனால் இத்திரைப்படத்தில் அப்படிப்பட்ட கற்பனையை நாயகன் நாயகியிடம் விதைக்கிறான், அவள் அதிலிருந்து தப்பித்து ஓட முயல்கிறாள் என்பது வேறுபாடு.

இத்திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் ஒரு பெண் குழந்தையைக் காட்டுவார்கள். அந்தக் குழந்தைதான் நாம் முன்னால் பார்த்த சமந்தா என்பது பார்வையாளர்களுக்கு புரியும்.

ஆனால் அந்தக் குழந்தையின் அதே உடையையே இந்தப் பாடலில் சமந்தாவிற்கு உபயோகித்திருக்கும் இயக்குநரின் நுண்ணுணர்வையும் வணிக திறமையையும் வியக்கிறேன்.

இந்தப் பாடல் தலைவி சமந்தாவால் கூடுதல் அழகு பெறுகிறது என்றால் அது மிகையில்லை.

சூர்யாவா, யார் அது?




முன்பெல்லாம் அதிமுக, திமுக ஆகிய இரண்டு பிரதான கட்சிகளில் மக்களுக்கு நன்கு அறிமுகமான இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்கள் இருந்தார்கள். தலைமையின் முக்கிய பிம்பம் தவிர இவர்களுக்கும் பிரத்யேகமான ஆதரவாளர்கள் கூட்டமும் வாக்கு வங்கியும் இருந்தது. ஒரு மரத்தின் விழுதுகள் போல மாநிலம் முழுக்க இவர்களின் பிரச்சாரமும் செல்வாக்கும் தலைமையை தாங்கிப் பிடித்தன. தலைமை சற்று பலவீனமடைந்தாலும் அதிக சேதாரம் ஆகாமல் இவர்கள் காப்பாற்றினாார்கள்.

திமுகவில் அன்பழகன், வைகோ, நாஞ்சில் மனோகரன் போன்றோர். அதிமுகவில் நெடுஞ்செழியன், காளிமுத்து, பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றோர்.

நினைவுகூர்ந்தால் ஒரு பட்டியலாக இவர்களின் பெயரை சொல்ல முடியும்.

ஆனால் இப்போது இரண்டு கட்சிகளிலுமே இது போன்ற இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்கள் என்று எவருமே இல்லாதது போன்ற தோற்றம்.

அப்படியே இருந்தாலும் அவர் தொடர்பான தொகுதியில் மட்டுமே சற்று பிரபலமாக இருக்கக்கூடும்.

அதீதமான தன்முனைப்பு, போட்டி அரசியல், வாரிசு அரசியல் உள்ளிட்ட பல காரணங்களால் ஒரு கட்சிக்கு ஒரு முகம் மாத்திரமே என்கிற நிலை தற்போது உள்ளது. எல்லாப் பெருமையும் தனக்கே வர வேண்டும், எவருக்கும் சென்று விடக்கூடாது என்பது போல.

ஜெயலலிதாவின் தலைமைக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சி ஜனநாயகம் அறவே அழிந்தது என்பது வெளிப்படை. அராஜகமும் ஆணவமும் அடிமைத்தனமும் நிறைந்த கட்சியாகி விட்டது. அதுதான் தனக்கு பாதுகாப்பானது என்று ஜெயலலிதா கருதுகிறார். ஆனால் அவருக்குப் பிறகு கட்சி என்னவாகும் என்பதைப் பற்றியும் அவர் யோசிக்க வேண்டும்.

ஆனால் இந்த உட்கட்சி ஜனநாயகம் முன்னர் இருந்ததாக கருதப்பட்ட திமுகவும் ஏறத்தாழ அதிமுகவின் பாதையில் செல்கிறது.

சமீபத்திய திமுகவின் மறுஎழுச்சிக்கு ஸ்டாலினின் நடைப்பயணமும் இணக்கமான அணுகுமுறையும் முக்கியமான காரணம்தான் என்றாலும் அவரையும் தாண்டி இன்னபிற தலைவர்களின் வளர்ச்சி தடுக்கப்படுவதும் பழைய திமுக போல் விசுவாசமான, உண்மையான அர்ப்பணிப்புடன் கூடிய தேர்தல் பங்களிப்பு குறைந்து போனதும் கூட திமுகவின் இந்த மெல்லிய இடைவெளி தோல்விக்கு ஒரு பகுதி காரணமாக இருக்கலாம் என நம்புகிறேன்.


***
 
திரையரங்கமும் தீனிப்பண்டாரங்களும்

பொதுவாகவே மல்டிபெக்ஸ் கலாசாரம் எனக்குப் பிடிக்காததொன்று. மிடில்கிளாஸ் கோயிஞ்சாமியாக அங்கு என்னை உணர்வேன். தண்ணீர், தின்பண்டங்கள் கொண்டுவரக்கூடாது என்பதும் உள்ளே நுழைவதற்கு முன் ஏறக்குறைய கோமணம் வரை தடவிப் பார்ப்பதும் என அங்குள்ள நிறைய கட்டுப்பாடுகள் எரிச்சலையே தரும்.நமக்கு உள்ளுர் திரையரங்கங்களே தோதானது.

24 திரைப்படத்தை நல்ல திரையரங்கில் காணவேண்டுமென்று பிள்ளைகள் கேட்ட போது அதற்காகும் செலவை சொல்லிப் பார்த்தேன். எப்பவாவது ஒருமுறைதானே என்கிற கெஞ்சலும் பின்பு அடமும் அதிகமானது.

வேறு வழியில்லாமல் சென்றால் கவுண்ட்டரில் இருந்த நங்கை ஏதோ இலவசமாய் தருவது போன்ற மிதப்புடன் ஸ்கீரினிற்கு அருகில் உள்ள இருக்கைதான் காலியாக உள்ளது என்றார். வேண்டாமென்று திரும்பினேன்.. உடனே பார்த்து என்ன சாதிக்கப் போகிறோம்?

கிரெடிட் கார்ட் சனியன்கள் எல்லாம் என்னிடம் கிடையாது. எனவே மறுவாரத்தில் மறுபடியும் நேரில் சென்று பின்னால் உள்ள இருக்கைகள்தானே என்று இருமுறை உறுதிப் படுத்திக் கொண்டு டிக்கெட் வாங்கினேன்.

()

வெளியே கீரைக்காரியிடம் "மூணு கட்டு பத்து ரூபான்னு கொடேன்" என்று கறாராக பேரம் பேசுகிற மிடில் கிளாஸ் மாமாக்கள் எல்லாம் மல்ட்டிபெக்ஸிற்குள் நுழைந்தவுடன் தங்களை உடனே அமெரிக்கன்களாக நினைத்துக் கொள்கிறார்களோ என்னவோ? அவர்களின் நடை, உடைகளில் உடனே மாற்றம் வந்து விடுகிறது. மூத்திரப் புரைக்கு கூட நுனி நாக்கு ஆங்கிலத்தில்தான் தப்புத் தப்பாக வழி கேட்கிறார்கள். கம்ப்யூட்டரில் பில் வந்தவுடன் எவ்வளவு என்று கூட சம்பிரதாயத்திற்கு கேட்காமல் உடனே கிரெடிட் கார்டை நீட்டுகிறார்கள் அல்லது சரசரவென்று புத்தம் புது ஐநூறு ருபாய் தாள்கள்.

நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா என்று ஒரு கணம் சந்தேகம் வந்து விடுகிறது.

இடைவேளையில் எதுவும் கேட்கக்கூடாது என்கிற குறிப்புடன்தான் பிள்ளைகளை அழைத்துச் சென்றேன். கஞ்சத்தனம் அல்ல. ஒன்றுக்கு பத்தாக விலைசொல்லி கொள்ளையடிக்கும் இடங்களை நாம் ஏன் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதும் ஏன் அப்படி ஏமாற வேண்டும் என்பதும் என் கொள்கை. மேலும் அப்படி செலவு செய்ய வசதியும் விருப்பமும் இல்லை என்பது வேறு விஷயம்.

என்றாலும் ஒரு பாப்கார்னுக்கான கோரிக்கை பிள்ளைகளிடமிருந்து வலுவாக வந்தது. சரி ஒன்றுதானே என்று வெளியே விலையைப் பார்த்தால்.. அம்மாடியோவ்.. நூறு ரூபாயாம்.

சரி ஒழிந்து போகிறது என்று வாங்கப் போனால் அதற்கும் பெரிய க்யூ..

மக்களே.. இதைச் சொல்வதற்காக என்னை தவறாக நினைக்காதீர்கள்... இரண்டரை மணி நேர படத்தின் இடைவேளையில் மக்களுக்கு அப்படி என்னதான் பசிக்குமோ என்று தெரியவில்லை. ஒவ்வொருத்தரும் பாப்கார்ன, பப்ஸ், கோக்.. இன்னமும் என்னென்னமோ விசித்திர வஸ்துகள்.. சரமாரியாக வாங்கிக் குவிக்கிறார்கள். அதை டிரேயில் அடுக்கி எடுத்துச் செல்லும் போது ஏதோ விருது வாங்கியது போலவே பெருமை.

ஒவ்வொன்றும் நாலைந்து மடங்கில் அநியாயமான கொள்ளை விலை. இப்படி தெரிந்தே ஏமாறுவதில் அப்படி என்ன பெருமை என்பதே எனக்குப் புரியவில்லை.

போர்க்காலங்களில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படும் போது எங்காவது உணவு கிடைத்தால் பணக்காரர்கள் ஆவேசமாக வாங்கிக் குவிப்பார்கள் அல்லவா?. இவர்கள் வாங்கும் ஆவேசமும் ஏறத்தாழ அதற்கு நிகராக இருந்தது. இன்னமும் ஒரு மணி நேரம் பொறுத்தால் வெளியில் சென்று இதை விடவும் மலிவு விலையில் வயிறார சாப்பிடலாமே?

இது தவிர அரங்கின் உள்ளேயே படத்திற்கு இடையே பண்டல் பண்டல்களாக ஆர்டர் செய்து சாப்பிடுபவர்கள் தனி குரூப்.

அவர்களின் உழைப்பு, அவர்களின் சம்பாத்தியம். எனவே இதை நான் பொறாமையில் சொல்லவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்படி கொள்ளையடிக்கும் மால்களில் தெரிந்தே ஏமாறுவதில் என்ன மேட்டிமைத்தனமான பெருமை இருக்கிறது? இதன் மூலம் சாமானியர்களும் அந்த விலையை எதிர்கொள்வதைப் பற்றி இவர்கள் சற்று கூட யோசிக்க மாட்டார்களா?

ஒரு கோப்பை பாப்கார்ன் .. அதுவும் ரூ.100 கொடுத்து வாங்குவதற்காக சுமார் 20 நிமிடம் நின்று கொண்டிருந்தேன். எத்தனை அபத்தம்? என் மேலேயே எனக்கு கோபமாக வந்தது. வாங்காமல் திரும்பி விடலாமா என்று கூட நினைத்தேன். பிள்ளைகளின் சுருங்கிய முகம் நினைவிற்கு வந்து தொலைத்ததால் காத்திருந்து வாங்கிச் சென்றதில் பத்து நிமிட திரைப்படத்தை இழந்தேன்.

படம் துவங்கும் நேரம் அனுமதிச் சீட்டில் தெளிவாக அச்சடிக்கப்பட்டிருந்தும் கூட படம் ஆரம்பித்த பிறகுதான் பலர் கூட்டம் கூட்டமாக உள்ளே நுழைகிறார்கள். மற்றவர்களுக்கு தொந்தரவு தருகிறோமே என்று துளி கூட வெட்கமும் கூச்சமும் இல்லாமல் சத்தமாக பேசி தங்களின் இருக்கைகளை தேடுகிறார்கள்.

இன்னமும் கூட அதிகம் சொல்ல முடியும். வேண்டாம். நிறைய பேரின் கோபத்திற்கு ஆளாக விரும்பவில்லை.

'படத்தை திரையரங்கில் வந்து பாருங்கள்' என்று எந்த பிரபலமாவது உபதேசிக்கும் போது இவையெல்லாம் உடனே நினைவிற்கு வந்து வயிற்றெரிச்சலைக் கிளப்புகின்றன.

இதைச் சொல்வதற்கு மன்னிக்கவும். திரைப்படம் என்பது ஒரு அனுபவம். இந்த தீனிப்பண்டாரங்கள் இந்த அனுபவத்தை தானும் அனுபவிக்காமல் மற்றவர்களையும் நிம்மதியாக அனுபவிக்க விடாமல் இடையூறாய் டார்ச்சர் செய்து தொலைக்கிறார்கள்.

மிடில்கிளாஸ் மென்ட்டாலிட்டியுடனும் அதற்கான தாழ்வுணர்வுடனும் நான் புலம்புகிறேன் என்று கூட நீங்கள் எவராவது நினைக்கக்கூடும். ஆனால் நான் சொல்வதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா என்பதை மாத்திரம் சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள்.


***


இன்று மாலை எழும்பூர் ரயில் நிலைய படிக்கட்டுகளில் இறங்கிச் சென்று கொண்டிருந்தேன். சிவப்பு நிற துண்டு அணிந்து கையில் ஒரு புத்தகத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தோழர் சி.மகேந்திரன் தனியாளாக படிகள் ஏறி சென்று கொண்டிருந்தார்.

தவ வாழ்க்கை வாழ்கிறோம் என்று திராவிட கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள், அமைப்புகள் புளுகினாலும் இன்னமும் கூட எளிமை என்பது நடைமுறையில் இடதுசாரிகளிடம் மட்டுமே காணக் கிடைக்கிறது.

இதுவே மற்ற ஒரு கட்சியின் அடிமட்டத்தலைவர் என்றிருந்தால் கூட அவருடன் பத்து பதினைந்து உதவிகளும் இரண்டு மூன்று டாட்டா சுமோக்களுமாக சூழலே பரபரப்பாக ஆகியிருக்கும்.

தமிழகத்தில் இடதுசாரி அரசியல் மீது இன்னமும் ஏன் நமக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்று ஆச்சரியமாக இருக்கிறது. நேர்மையாளர்களை ஒரு புறம் கை விட்டுக் கொண்டே அரசியல் ஊழல் மலிந்திருக்கிறது என்று புலம்பிக் கொண்டிருப்பதில் எவ்வித பயனுமில்லை.




suresh kannan