Showing posts with label தேசிய விருதுகள். Show all posts
Showing posts with label தேசிய விருதுகள். Show all posts

Wednesday, September 09, 2009

பெரியார் திரைப்படத்திற்கு விருதா?.. அநியாயம்


2007 திரைப்படங்களுக்கான 55வது தேசியவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுப்பட்டியலின் கூடவே சர்ச்சைகளும் இருப்பது இயல்பான மரபு. தேசிய அளவில் சிறந்த நடிகருக்கான போட்டியில் ஷாரூக்கான் (chakde), அமீர்கான் (Taare zameen par), பிரகாஷ்ராஜ் (Kanchivaram) ஆகியோர் இறுதிக் கட்டத் தேர்வில் இருந்தார்கள் என்று கேள்விப்பட்டேன். இதில் ஷாரூக்கானுக்கும் பிரகாஷ்ராஜூக்கும் இடையில் போட்டி கடுமையாக இருந்ததாக தெரிகிறது. பிரகாஷ் சிறந்த நடிகர் விருதிற்கு முழுமையான தகுதியுடையவர் என்பதில் யாருக்கும் குறிப்பாக தென்னியந்தியர்கள் பெரும்பான்மையோருக்கு மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்திவாலாக்கள் இந்த முடிவு குறித்து என்ன நினைக்கிறார்கள் என்று அறிய விரும்புகிறேன். இந்த முறை அதிர்ஷ்டக்காற்று பெரும்பான்மையான தென்னிந்தியப் படங்களின் மீது வீசிற்று.

ஆனால் சிறந்த நடிகருக்கான தேர்வை வாக்களிக்கும் சந்தர்ப்பம் எனக்கு அளிக்கப்பட்டிருந்தால் (அடங்குடா!) மிகுந்த தயக்கத்திற்குப் பிறகு நான் நிச்சயம் ஷாருக்கையே தேர்ந்தெடுத்திருப்பேன். ஏனெனில் 'சக்தே'வில் அவருடைய நடிப்பு மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. என்னைப் பொருத்த வரை இயல்பான நடிப்பு என்பது தம்முடைய வயதிற்கு,உடலிற்கு மாறாக ஒப்பனையை அணிந்து குலுங்கி குலுங்கி அழுவதல்ல. பாத்திரத்திற்கு ஏற்ப எந்த கோணங்கித்தனமுமில்லாத இயல்பான ஒப்பனையுடன் யதார்த்தமாக எதிர்வினையாற்றுவது. அது வங்கி அதிகாரியோ அல்லது சாராயம் காய்ச்சுபவனோ, அந்தப் பாத்திரம் ஏற்றிருந்தால் பார்வையாளன் அவரின் பாத்திரத்தை நிஜமென்று நம்புமளவிற்கு அவரின் உடல்மொழியும் நடிப்பும் இருக்க வேண்டும். ரிக்ஷாக்காரன் பாத்திரத்திற்கு கான்வாஸ் ஷ¥ போட்டு நடிப்பதல்ல. அவ்வாறு இயல்பாக நடிப்பவர்களில் உதாரணம் சொல்ல யோசிக்கும் போது சட்டென்று ஒருவர் நினைவுக்கு வருகிறார். மம்முட்டி. தன்னுடைய மதம் காரணமாக மக்களால் புறக்கணிக்கப்பட்ட வலியும் அதைக் கடந்துவர வேண்டுமென்கிற முயற்சிகளின் வெறியும் ஷாரூக்கானின் யதார்த்தமான தோற்றத்தில், நடிப்பில் (சக்தே) மிக அற்புதமாக வெளிப்பட்டிருக்கும். எனவேதான் பிரகாஷ்ராஜை விட சில சொற்ப புள்ளிகளில் ஷாரூக் வெல்கிறார் என்பது என் தனிப்பட்ட அனுமானம். ஆனால் சக்தே சிறந்த பொழுதுபோக்குப் பட பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. கொடுமை. சிறந்த திரைப்படமாக 'காஞ்சிவரம்' தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிதது எனக்கு மகிழ்ச்சியே.

அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு (நாலு பெண்கள்) சிறந்த இயக்குநர் விருது கிடைத்தது குறித்து அறிய மகிழ்ச்சி. படம் வந்த சமயத்தில் இணையத்தில் வெளிவந்த ஆரோக்கியமான பதிவுகள் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டின. ஆனால் இதை இன்னும் பார்க்கவில்லை என்பதால் இந்தத் தேர்வு குறித்து தீர்மானமாக எதையும் சொல்ல இயலில்லை. சிறந்த நடிகை விருது பெற்ற உமாஸ்ரீயின் 'குலாபி டாக்கிஸ¥ம்' (கன்னடம்) அவ்வாறே. சிறந்த பெண் துணை நடிகருக்கான விருது shefali shah-க்கு (The last lear) கிடைத்திருப்பது மிகப் பொருத்தமே. நடிகரான தன் கணவனுக்கு பணிவிடை செய்ய வேண்டிய சலிப்பும் கணவரின் கூட நடிக்கும் நடிகையான ப்ரீத்தி ஜிந்தாவிடம் தம்முடைய கோபத்தை வெளிப்படுத்த இயலாமல் பணிப்பெண்ணிடம் காண்பிக்கும் இயல்பானதொரு இந்திய குடும்பத் தலைவியாக நன்றாக நடித்திருந்தார். (இவர் கஸ்தூரிபாயாக Gandhi my father-படத்திலும் நடித்திருந்தார்).

சிறந்த திரைக்கதை விருது, சிறப்பு நடுவர் விருது, சிறந்த துணை நடிகர் விருது போன்றவைகளைக் குவித்த Gandhi my father-ம் முக்கியமான திரைப்படம். பெரும்பாலும் அறியப்படாத ஹரிலால் காந்தியின் வாழ்க்கையை சிறப்பாக வெளிக்கொணர்ந்தது அந்தத் திரைப்படம். இதில் காந்தியாக சிறப்பாக நடித்த darshan zariwala-க்கு சிறந்த துணை நடிகர் கிடைத்தும் பொருத்தமே.
()

மாநில மொழிப் பிரிவில் சிறந்த படமாக 'பெரியார்' தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு பின்னால் அரசியற் காரணங்கள் ஏதேனும் உள்ளனவா என்று அறியேன். ஏனெனில் தமிழ் மக்களிடையே மட்டுமல்லாது இந்தியா முழுக்க திரைப்படத்தின் மூலமாக சிறப்பாக அறிமுகப்படுத்தியிருக்க வேண்டிய பெரியார் என்னும் முக்கியமான ஆளுமையை மோசமானதொரு திரைப்பட உருவாக்கத்தின் மூலம் அதன் அடிப்படை நோக்கத்தை பாழ்படுத்தியதுதான் இந்தப் படத்தின் சாதனை. ஞானராஜசேகரனின் முதல் படமான 'மோகமுள்' (தி.ஜாவின் நாவல்) ஒரு சுமாரான முயற்சி. நாசர் நடிப்பில் அடுத்த படமான 'முகம்' சிறப்பானதாக இல்லை. 'பாரதி' மட்டுமே சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. அது போலவே 'பெரியாரும்' ஒரு திறமையான புதுமுகத்தையோ அல்லது தமிழர்களுக்கு அறிமுகமில்லாத சிறந்த நடிகரையோ வைத்து உருவாக்கப்பட்டிருந்தால் சிறப்பாக வந்திருக்கும் என நினைக்கிறேன். சத்யராஜ் என்னும் போது சற்று நம்பிக்கையாகத்தான் இருந்தது. ஆனால் கூடவே குஷ்பு போன்றோரெல்லாம் நடிக்கிறார் என்று செய்திவரும் போது அதுவும் அடிபட்டுப் போனது. நினைத்தது போலவே மிக மோசமான திரைக்கதையுடன் நர்சரி ஸ்கூலின் பேன்சி டிரஸ் போட்டி போல் ஆகிப் போனது அந்தப் படம். திரைப்படம் என்கிற வகையில் வரிவிலக்கெல்லாம் அளித்தும் கூட்டம் சேராத இந்த மோசமான உருவாக்கத்திற்கு 'சிறந்த திரைப்படவிருது' அளித்திருப்பது மோசமான முன்னுதாரணம். பதிலாக 'கற்றது தமிழ்' போன்ற சமகால சமூகப் பிரச்சினையைப் பற்றி பேசின உண்மையிலேயே தரமான படத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம். இடையில் "ஒன்பது ரூபாய் நோட்டு' படத்திற்காக சத்யராஜிற்குத்தான் சிறந்த நடிகர் விருது கிடைத்திருக்க வேண்டும் என்று காமெடி செய்திருக்கிறார் தங்கர் பச்சான்.


சிறந்த மலையாள திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 'ஒரே கடல்' மிகச் சிறப்பானதொரு தேர்வு. சில மாதங்களுக்கு முன் லோக் சபா சானலில் இதைப் பார்க்க நேர்ந்த போது திகைத்துப் போய் அமர்ந்திருந்தேன். இப்படியான matured ஆன திரைப்படங்கள் தமிழில் வருவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்குமோ?

தொடர்புடைய பதிவு:

காஞ்சிவரம்: உருப்படியாக ஒரு தமிழ் சினிமா

suresh kannan