Saturday, March 05, 2016

பீஃப் பாடல் சர்ச்சை: பாசாங்கு எதிர்ப்பின் உளவியல்



 

மனம் ஒரு குரங்கு என்பதற்கான உதாரணம் எதற்குப் பொருந்துமோ இல்லையோ, இணையத்தின் சமூக வலைத்தளங்களில் நிகழும் உரையாடல்களுக்கு கச்சிதமாகப் பொருந்தும். அந்தந்த கணத்தின் பரபரப்பான நிகழ்வுகளை, சர்ச்சைகளை ஒரு சுவிங்கம் போல் மென்று அதன் சுவை கரைவதற்குள்  துப்பி விட்டு அடுத்த சுவிங்கத்தை நோக்கி ஓடும் செய்தி ஊடகங்களின் பரபரப்பான பாணியை இணைய வம்பாளர்களும் அப்படியே கடைப்பிடிக்கிறார்கள். ஆனால்  விசையை முடுக்கினாற் போல் அதிலொரு மாற்றம் சமீபத்தில்  நிகழ்ந்தது.   தமிழகத்தின் நான்கைந்து மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது பொழுதுபோக்கு உரையாடல்களும் வம்புகளும் சட்னெ்று நின்று போய் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவும் தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் பணிகளும் உதவி கோருதலும் பெறுதலுமாக சூழல் பரபரப்பாக மாறிற்று. இது ஆக்கப்பூர்வமான பரபரப்பு. இணைய மொண்ணைகள் என்று பொதுவான எள்ளலில் குறிப்பிடப்படும் இவர்களால்தான் பெரும்பாலான பாதிக்கப்பட்ட நபர்கள் தக்க நேரத்தில் உதவி பெற்றார்கள், காப்பாற்றப்பட்டார்கள் என்பது கவனிக்கத்தக்க ஒரு சமூக  நிகழ்வு.

நான்கைந்து நாட்கள் நீடித்த இந்த நல்ல மாற்றத்தை மீண்டும் தலைகீழாக்கியது ஒரு பாடல் மீீதான சர்ச்சை. தமிழகம் இயல்பு நிலைக்கு மாறியதோ இல்லையோ, இணைய உலகம் அதன் 'இயல்பு நிலைக்கு' சட்டென்று திரும்பி விட்டது. வெள்ள சேதம் ஏற்பட்டதற்கான அரசியல் காரணங்களும் அது சார்ந்த கோபங்கள், உரையாடல்கள் அனைத்தும் சர்ச்சைப் பாடலின் மீதான வம்பு வெள்ளத்தில் மூழ்கியது. இந்தப் போக்கு நம் கலாசார பலவீனங்களில் ஒன்று எனத் தோன்றுகிறது.

இந்த சர்ச்சை தொடர்பான விவரங்கள் என்னவென்று தெரியாதவர்களுக்காக (அப்படி எவரேனும் உள்ளாார்களா என்ன?) அதைப் பற்றிப் பார்ப்போம். தமிழகத்தின் மாவட்டங்கள் வெள்ள சேதத்தினால் பாதிக்கப்பட்டு அதனிடமிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டிருக்கும் போது இணையத்தில் ஒரு பாடல் வெளியாகிறது. பாடியவர் நடிகர் சிம்பு எனவும் இசையமைப்பாளர் அனிருத் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.. பாடலின் முதல் வரியிலேயே பெண்களின் அந்தரங்க உறுப்பைச் சுட்டும் கொச்சையான வார்த்தை ஒன்று உபயோகப்படுத்தப்பட்டு நடுவில் உள்ள ஓர் எழுத்து மாத்திரம் பீஃப் ஒலியால் மூடப்பட்டிருந்தது. என்றாலும் அது என்ன வார்த்தை என்று கேட்கும் பெரும்பாலோனோர்க்கு எளிதாகவே புரியும். அதுதான் அதன் நோக்கமும் கூட என்று தெரிகிறது.

பொதுவாக இணையத்தில் உரையாடப்படும் சர்ச்சைகள் இணைய அளவிலேயே உயர்ந்தெழுந்து அடங்கி ஓய்ந்து விடும். ஆனால் இந்த சர்ச்சையின் மீதான எதிர்ப்பு இணையத்தையும் தாண்டி சமூக வெளியிலும் கடுமையாக பிரதிபலித்தது.  மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பெண்ணிய இயக்கம் போன்றவர்கள் எதிர்ப்பு போராட்டங்கள் நிகழ்த்துமளவிற்கு சென்றது. காணொளி ஊடகங்களில் செய்தியாளர்களும் கனவான்களும் கொதிப்புடன் இதைப் பேசி பேசி மாய்ந்தார்கள். சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களையும் தூக்கில் போட வேண்டும், தேசியபாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பது போன்ற ஆவேசமான குரல்கள எழுந்தன. இது தொடர்பான பல வழக்குகள் ஒருபுறம் தொடுக்கப்பட மற்றொரு புறம் காவல்துறை விசாரணயும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்தச் சர்ச்சையையொட்டி பொதுச் சமூகத்தின் இந்த அதீதமான எதிர்ப்பு பாசாங்கிற்குப் பின்னால் உள்ள உளவியலையும் இது போன்ற ஆணாதிக்கச் செயற்பாடுகளின் பின்னே உறைந்திருக்கும் சமூகவியல் காரணங்களையும், அறிவுசார் சமூகம் இது போன்ற சர்ச்சைகளை கையாள வேண்டிய நிதானத்தைப் பற்றியும் என்னளவில் சொல்ல முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம். தவறிழைப்பவர்களை காப்பாற்றுவதோ அல்லது இது போன்ற கீழ்மைகளை ஊக்குவிப்பதோ அல்ல. இது போன்ற ஆணாதிக்கத் திமிரினால் எழும் செயற்பாடுகள் பெண்களின் மீது செலுத்தப்படும் மனம்/உடல் சார்ந்த வன்முறைகளுக்கும் பாலியல் சீண்டல்களுக்கும் மேலதிக காரணமாகி நிற்கின்றன என்கிற பிரக்ஞை இல்லாமல் இல்லை. என்றாலும் ஒரு Devil's advocate-ன் குரலை மனச்சாய்வற்ற நீதியொன்று கவனிப்பதைப் போல இந்தச் சர்ச்சையின் மீதான மறுபக்க நியாங்களையும் பற்றி நாம் நிதானமாக கவனிக்க வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம். ஒருவகையில் இந்தச் சர்ச்சை மீது எழுந்த ஒட்டுமொத்த சமூகத்தின் அதீதமான எதிர்ப்பும் அதிலுள்ள போலித்தனங்களும் பாசாங்களுமே இதை எழுதத் தூண்டியது. இந்த அதிகமான எதிர்ப்பே இந்தப் பாடலின் மீதான அதிக கவனத்தைக் குவித்து விட்டதோ என்பதையும் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

***

திரைப்படப் பாடல்களில் உள்ள ஆபாச வரிகளால், வார்த்தைகளால் அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து அடங்குவது நமக்குப் புதிதான விஷயமல்ல. ஆனால் இந்த குறிப்பிட்ட சர்ச்சையில் ஏறக்குறைய சமூகத்தின் அனைத்து தரப்பும் இந்த எதிர்ப்பில் ஒன்றிணைந்து  மிக கடுமையான அளவிற்கு பரபரப்பு எழுவது இதுவே முதன்முறை என நினைக்கிறேன். இது போன்ற சர்ச்சைகளில் பொதுப்புத்தி சார்ந்தவர்களின் நிதானமற்ற உடனடி ஆவேசம் எவ்வாறிருக்கும் என்பது புதிதானதல்ல. 'திருடன் பராபஸை விடுதலை செய், இயேசுவை சிலுவையில் ஏற்று' என்கிற கூக்குரலிட்ட வேதாகம காலத்திலிருந்து பொதுமக்களின் நிதானமற்ற எதிர்வினைகளுக்கான வரலாற்று உதாரணங்கள் நிறைய உள்ளன. பொதுப்புத்தியின் நிதானமற்ற, உடனடியான கண்மூடித்தனமான எதிர்ப்பு காலங்காலமாக எவ்வாறு இருக்கிறது என்பதற்காக இந்த உதாரணத்தைக் குறிப்பிடுகிறேன். ஆனால் இது போன்ற நெருக்கடியான சூழல்களை நிதானத்துடன் அணுக வேண்டிய அறிவுசார் சமூகமும் இந்தச் சர்ச்சையையொட்டி பொதுப்புத்தியுடன் இணைந்து கொண்டது ஆபத்தான போக்கு. இவர்களின் நோகக்கில் சமநிலை தவறிய சிலபல எதிர்வினைகளை கவனிக்க நேர்ந்தது. மற்ற சமயங்களில் நிதானத்துடன் அவற்றின் பல்வேறு பரிமாணங்கள் சார்ந்து சிந்திக்கும் இந்த அறிவுஜீவிகள் இந்தச் சர்ச்சையை ஏன் மிகையுணர்ச்சியுடன் எதிர்கொண்டார்கள் என்று எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.

நடிகர் மற்றும் இசையமைப்பாளரின் வீட்டுப் பெண் கலைஞர்கள் நடனமாடினால் இந்தப் பாடலுக்கு குறிப்பாக அந்த சர்ச்சையான வார்த்தைக்கு எவ்வாறு அபிநயம் பிடிப்பார்கள் என்பது உள்ளிட்ட பல கேள்விகளுடன் ஓர் ஆவேசமான கட்டுரையை எழுதினார் ஒரு பெண்ணிய எழுத்தாளர். இணையத்தில் ஒருபக்கம் அதற்குப் பலத்த வரவேற்பும் மறுபுறம் கண்டனங்களும் இருந்தது. அந்தப் பெண்களும் ஆணாதிக்கப் போக்கினால் பாதிக்கப்படுவர்களாக (Victim) இருக்கலாம், அதனாலேயே அவர்களின் எதிர்வினைகள் மெளனமாகி அல்லது அடங்கிப்  போயிருக்கலாம் என்கிற யூகத்தின் மீதான சந்தேகத்தின் பலனைக் கூட தராமல் குற்றஞ்சாட்டிருக்கப்பட்டவர்களின் உறவினர்களை முன்முடிவுடன் கடுமையாக விமர்சித்த போக்கை என்னவென்பது? இன்னொரு பெண்ணிய எழுத்தாளர் - அவர் உளவியலாளரும் கூட - பாடலின் முதல் வார்த்தை தொடர்பான விமர்சனத்தை வைத்து விட்டு, இது  போன்ற கயவர்களை புறக்கணித்து விட்டு  நம் வேலையைப் பார்ப்போம் என்று முகநூலில் எழுதுகிறார். கயவர்களும் சமூகத்திலிருந்து உருவாகிறவர்கள்தான். அதன் ஒரு பகுதியாக இருப்பவர்கள்தான். ஒரு மனிதன் கயவனாவதற்கு பின்னணியிலுள்ள உளவியல் மற்றும் சமூகவியல் காரணங்களைப் பற்றி அந்த உளவியலாளருக்கு தெரியாதா? அவரும் இந்த தருணத்தில் பொதுப் புத்தியைச் சார்ந்த எதிர்வினையையே ஏன் செய்கிறார்? இந்த மனோபாவத்தில் அமையும் இவருடைய முன்முடிவுகள் சிகிச்சையாளர்களைப் பாதிக்காதா?

இது போன்று மேலும் சில உதாரணங்களை மேற்கோள் காட்ட முடியும். எந்த வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியதோ அதையே தனது சமீபத்திய புதினத்தில் பள்ளிக்கூடப் பிள்ளைகள் வீட்டுப்பாடம் எழுதுவது போல் விதம்விதமாக பட்டியல் போன்று எழுதிச் சென்ற ஒரு 'பின்நவீனத்துவ' எழுத்தாளர் கூட இந்த எதிர்ப்புக் கூட்டத்தின் முன்னணியில் நின்று ஆவேசமாக உரையாடியது ஒரு சுவாரசியமான முரண்நகை. இவரே அளித்துக் கொண்ட தன்னிலை விளக்கத்தில் 'நான் கூட இது போன்ற வார்த்தைகளை என் நாவலில் எழுதியிருக்கிறேன். ஆனால் அவற்றை குழந்தைகள் வாசிக்க வாய்ப்பில்லை' என்கிறார். புத்தகங்களுக்கு சென்சாரை எப்போது கொண்டு வந்தார்கள் என தெரியவில்லை. முன்பு சில பெண்ணிய எழுத்தாளர்கள் தங்களின் அந்தரங்க உடல் உறுப்புகளையே பிரதானமாகக் கொண்டு கவிதைகள் எழுதினார்கள். உடலரசியல் சார்ந்த  கோபம் அதில் இருந்தது. 'ஆணாதிக்க மனோபாவத்தை நோக்கி.. இந்த உறுப்புகளை வைத்துத்தானே எங்களைச் சீண்டுகிறீர்கள். கிண்டலடிக்கிறீர்கள்... இதோ நாங்களே எங்கள் படைப்புகளில் முன்வைக்கிறோம்.." என்பது போன்ற கலகமும் அறச்சீற்றமும் அவற்றில் இருந்தன. ஆனால் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவும் கவன ஈர்ப்பிற்காகவும் காமம் சார்ந்த கிளர்ச்சியை மட்டும் தூண்டும் பின்நவீனத்துவப் போலிகளும்  இந்தச் சர்ச்சை எதிர்ப்பில் கலந்து கொண்டதுதான் நகைச்சுவை.

***

இணையத்தில் வெளிவந்த அல்லது கசியவிடப்பட்ட அந்தப் பாடல், அதிகாரபூர்வமாக வெளியிடப்பட் ஒரு சினிமாப்பட பாடலோ அல்லது தனியார் ஆல்பத்தின் பாடலோ அல்ல. அது டம்மியாக உருவாக்கப்பட்ட பாடல் என்கிறார்கள். அதனுடன் தொடர்புள்ளதாக சிம்பு மற்றும் அனிருத் ஆகியோர்களின் பெயர்கள் இருந்தாலும்  அனிருத் இதற்கு தான் இசையமைக்கவில்லை என்று மறுத்து அல்லது ஒதுங்கி விட்ட நிலையில் சிம்பு இதை தான் பாடியதாக ஒப்புக் கொள்கிறார். ஆனால் தன்னுடைய அந்தரங்கமான சேமிப்பிலிருந்த பல பாடல்களில் ஒன்றான இதை எவரோ திருடி இணையத்தில் வெளியிட்டு விட்டார்கள் என்று விளக்கமளித்துள்ளார். அனிருத் மற்றும் சிம்பு ஆகியோர் இருவர் மீதும் இது போன்ற சர்ச்சைகளின் மீதான குற்றச்சாட்டுகள்ஏற்கெனவே இருந்தாலும் இந்தக் குறிப்பிட்ட சர்ச்சையில் அது சிம்பு தரப்பால்தான் இணையத்தில் வெளியிடப்பட்டது என்பது நிரூபிக்கப்படாத சூழலில் சந்தேகத்தின் பலனை அவருக்கு அளித்துதான் ஆக வேண்டும். அது நிரூபிக்கப்படுவதற்குள் சமூகமே இணைந்து தர்மஅடி போடுவது தர்மமே ஆகாது. அத்தனை பெரிய அரசு இயந்திரத்தை கையில் வைத்திருக்கும் சமகால ஆளுங்கட்சியே தம்மை  விமர்சித்த 'நட்ராஜ்' என்பவர் எவர் என்பதை சரியாக ஆராயமலேயே நடவடிக்கை எடுத்த கேலிக்கூத்துகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது நிதானமான விசாரணைகளின் மீது உருவாகும் நீதிதான் ஏறத்தாழ சரியானதாக இருக்கும்.

இந்தப் பாடலை நடிகர் தரப்பே வெளியிட்டு விட்டு பின்பு இத்தனை கடுமையான எதிர்ப்பை எதிர்பார்க்காததால் மறுக்க விரும்புகிறார்களோ என்கிற ஐயம் எழுந்தாலும் கூட 'தாங்கள் நிரபராதிகள்' என்கிற அவர்களின் முறையீட்டை நிதானமாக பரிசீலிப்பதே முறையானது. தமிழகமே வெள்ள சேதத்தினால் தத்தளிக்கும் சமயத்தில் இந்தப் பாடலை வெளியிட எத்தனை திமிர் இருக்க வேண்டும் என்கிற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. ஒருவேளை இது நடிகர் தரப்பினால் விளம்பர நோக்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது என்று வைத்துக் கொண்டாலும் கூட இந்த அசந்தர்ப்பமான சமயத்தில் வெளியிட்டால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் தமது வணிக நடவடிக்கைகளை பாதிக்கும் என்பது கூடவா அவர்களுக்குத் தெரிந்திருக்காது?. 'எனக்கு இழுக்கு தேடித்தரவே எவரோ இதை திருடி வெளியிட்டுள்ளனர்' எனறு நடிகர் கூறும் விளக்கமும், இந்தப் பாடல் அசந்தர்ப்பமான சமயத்தில் வெளியிடப்பட்டதை வைத்துப் பார்க்கும் போது சரிதானோ என்று தோன்றுகிறதா இல்லையா? மழை வெள்ள அபாயத்தை சரியாக நிர்வகிக்காத ஆளுங்கட்சிக்கு எதிராக  மக்களுக்கு இயல்பாக எழுந்த கோபத்தை திசை திருப்புவதற்காகவே இந்தப் பாடல் வெளியிடப்பட்டது என்றெழுகிற இன்னொரு யூகத்திற்கான சாத்தியக்கூறு இருந்தாலும் அது தொடர்பான குற்றவாளியைத்தானே தேட வேண்டும்?  எந்தவொரு குற்றச்சாட்டையும் 'இது எதிர்க்கட்சிகளின் சதி' என்று மறுக்கிற அரசியல்வாதிகளின் நகைச்சுவைப் போக்கையும் இதனுடன் சேர்த்து பார்க்க வேண்டியிருக்கிறது.

தன்னுடைய அந்தரங்கச் சேமிப்பிற்காக என்றாலும் சிம்பு ஏன்  இது போன்ற பாடலைத் தயாரிக்க வேண்டும்? தனி மனித சுதந்திரப்படி இதைக் கேட்க யாருக்குமே உரிமை கிடையாது. பொதுச் சமூகத்திற்கு முகமூடியணிந்த நல்ல முகத்தைக் காட்டும் நம்முடைய அந்தரங்கத்தில் சமூகத்தால் கீழ்மைகளாக கருதப்படுபவைகள் சிலவற்றின் மீது இச்சையுள்ளது. ஏற்கெனவே பாலியல் வறட்சியால் குமையும் இது போன்ற சமூகத்தில் வேறு எவருக்கும் துன்பம் தராமல் அந்தரங்கத்தில் நிறைவேற்றிக் கொள்ளும் செயல்களின் மூலமாக அது சார்ந்த மன அழுத்தங்கள் குறைவதற்கு வாய்ப்புண்டு என்பதே உளவியல் ரீதியிலான கருத்து. சமூகத்தின் பாலியல் குற்றங்கள் குறையும் நோக்கில் இதற்கான அவசியமும் உள்ளது. மேலும் இந்தப் பாடலின் துவக்கத்திலுள்ள சர்ச்சையான வார்த்தையைத் தாண்டிச் சென்றால், இதரப் பகுதிகள் கொச்சையான வார்த்தைகளில் அமைந்திருந்தாலும் காதல் தோல்வி அடைந்த இளைஞனை நோக்கி 'பெண்களை திட்டாதே.. உன்னையே திட்டிக் கொள்.. உனக்கேற்ற துணை வரும் வரை காத்திரு' என்பது போன்ற உபத்திரவமல்லாத உபதேசங்களே உள்ளன. '.இதற்குத்தானா பாபு?' என்கிறாள் மோகமுள் புதினத்தில் வரும் யமுனா. அதையேதான் வேறு வடிவில் கொச்சையான வார்த்தையில் கேட்கிறது இந்தப் பாடல்.

ஆனால் இந்த துவக்க வார்த்தையை மாத்திரம் வைத்து, அதிலும் இத்தனை பிரம்மாண்டமான சர்ச்சை எழுவதில் எத்தனை அபத்தமுள்ளது என்பதை சற்று நிதானமாக யோசித்துப் பார்த்தால் புரியும். நாம் எதனை பிரதானமாக அழுத்தம் தந்து கவனிக்கிறோம் என்பதும். 'காதலின் புதினத்தை வைத்து love anthem என்கிற தனிப்பாடலைக் கூடமுன்பு நான் உருவாக்கினேன், அதைப் பற்றி யாருமே பேசவில்லையே என்று சிம்பு தரப்பில் கேட்கப்படும் கேள்வியில் குறைந்த பட்ச நியாயம் உள்ளதுதானே? அனிருத் போல இதிலிருந்து விலகி ஓடி விடாமல், பொது மனோநிலையின் எதிர்ப்பை திருப்திப் படுத்தும் விதத்தில் ஒரு போலிக் கும்பிடு போட்டு விட்டு இந்தச்  சர்ச்சையை தாண்டி விட முயற்சிக்காமல் தன்னுடைய தரப்பு நியாயங்களுடன் எதிர்கொள்ளும் அவரின் அந்த துணிச்சலைப் பாராட்டியேயாக வேண்டும். 'இதை நான்  இணையத்தில் வெளியிடாத போது, யாரோ செய்த தவறினால், என்னுடைய அந்தரங்கச் செயல் ஒன்றை எட்டிப் பார்த்து விட்டு ஏன் இப்படி குற்றஞ்சாட்டுகிறீர்கள், உங்களின் அந்தரங்கத்தை எவராவது வெளிப்படுத்தி விட்டு உங்களையே கண்டித்தால் ஒப்புக் கொள்வீர்களா?' என்று தனிமனித உரிமை நோக்கில் அவர் முன்வைக்கும் கேள்விகளில் நியாயம் உள்ளதா  இல்லையா என்பதை நிதானமாக யோசித்துப் பார்க்கலாம்.

சிம்புவின் பிம்பம் என்பது இன்றைய நவீன சராசரி இளைஞனின் குறியீடு. சிம்பு  உண்மையான வாழ்விலும் சரி, திரையிலும் சரி, ஒரு காதலில் விழுவார். புலம்புவார். அது சார்ந்த வன்மத்தை எதிரொலிக்கும் பாடல்களை உருவாக்குவார். பிறகு இன்னொரு காதலில் விழுவார். அதிலும் மறுபடியும் தோல்வி..புலம்பல்.. எரிச்சல். இந்தக் குணாதிசயம் பெரும்பாலும் சமகால சராசரி இளைஞனுக்குப் பொருந்துபவை.  அவர்களில் பலர்  என்ன செய்கிறார்கள் என்பதை கவனியுங்கள். தாங்கள் காதலித்த பெண்ணை பிரச்சினை ஏற்படும் போது  ஆதாரங்களைக் காட்டி மிரட்டுகிறார்கள், பெண் சமூகத்தையே ஒட்டுமொத்தமாக திட்டிப் புலம்புகிறார்கள், இன்னும் சில குதர்க்க குணமுள்ள இளைஞர்கள் ஆசிட் ஊற்றுவதாக மிரட்டுகிறார்கள், சிலர் செய்தே விடுகிறார்கள். இன்று பொருளாதார ரீதியாக பெண்கள் சுதந்திரம் பெற்று மெல்ல வெளியே வருவதை நவீன ஆண் மனம் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. தன்னைச் சார்ந்து நின்ற உடமை தன்னுடைய பாதுகாப்பில் இருந்து வெளியேறி சுயசிந்தனைகளுடன் விலகுவதைக் கண்டு பதட்டமடைகிறது. சாலையில் ஸ்கூட்டியில் தன்னைக் கடந்து செல்லும் இளம் பெண்ணைக் கண்டு தன்னியல்பாக எரிச்சலைடந்து அந்தப் பெண்ணின் மீது மோதுவது போல் செய்வதோ அல்லது அவளைத் தாண்டிச் செல்ல முயல்வதோதான் இன்றைய நவீன இளைஞனின் அடையாளம். இவற்றையேதான் சமகால இளைய நடிகர்களின் திரைப்படங்களிலும் 'வெட்டுடா அவளை, குத்துடா அவளை' என்பது போன்று எதிரொலிப்பதைக் காண முடிகிறது.

இப்படியாக சமூகத்திலும் உள்ள ஆயிரம் சிம்புகளை நாம் எப்போது கண்டிக்கப் போகிறோம்? சினிமா என்பது இருமுனை கத்தி. அது சமூகத்தையும் பிரதிபலிக்கிறது; சமூகமும் சினிமாவின் கூறுகளை தன்னிச்சையாக பின்பற்றுகிறது. இதில் சமூகம் மாத்திரம் தன்னை மறைத்துக் கொண்டு  இன்னொரு முனையை மட்டும் எத்தனை காலத்திற்கு குற்றம் சொல்லப்  போகிறோம்? ஒரு நடிகரின் இன்னமும் நிரூபிக்கப்படாத தவறை வைத்து அவரை பொது எதிரியாக நிறுத்தி ஒன்று சேர்ந்து கடுமையாக கண்டிப்பதின் மூலம் ஆணாதிக்க உலகின் வக்கிரங்களையும் தவறுகளையும் மழுப்பிக் கொள்ளப் போகிறோமா?

திரிஷா அல்லது நயனதாரா என்றொரு திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. முழுக்க முழுக்க ஆணாதிக்க வசனங்களாலும் வக்கிரமான காட்சிகளாலும் அது நிறைந்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அத்திரைப்படம் வணிகரீதியாக வெற்றியடைந்தது. இன்றைய தமிழ் சினிமாவின் உடனடி பார்வையாளர்கள் இளைஞர்களே. அவற்றின் துவக்க வெற்றியை அவர்களே தீர்மானிக்கிறார்கள். எனில் ஆணாதிக்க மனோபாவமுடைய இளைஞர்கள் நிறைந்துள்ள சமூகத்தில் பிரபலமாக இருப்பதின் காரணத்தினாலேயே ஒருவரை மட்டும் தேர்ந்தெடுத்து கூடிக் கண்டித்தால் தீர்வு கண்டுவிட முடியுமா? இதில் என்ன வேடிக்கையென்றால் பாடலில் உள்ள சர்ச்சையான வார்த்தையை வழக்கமாக பொதுவெளியிலும் இணைய எழுத்திலும் கூசாமல் சொல்லும், எழுதும் இளைஞர்கள் கூட இந்த எதிர்ப்புக்  கூட்டத்தில் சேர்ந்து கொண்டு பாடலில் உள்ள ஆபாச வார்த்தையை விட மேலதிக வார்த்தைகளை அறச்சீற்றத்துடன் எதிர்ப்பு என்ற பெயரில் இறைத்ததுதான். நேற்றைய இளைஞர்கள்தான் இன்றைய பெற்றோர்கள். அவர்கள் இளைஞர்களாக இருந்த காலத்திலும் அந்த வயதுக்குரிய இது போன்ற  ஆணாதிக்க நோக்கிலான ஆபாசங்களை, தடுமாற்றங்களை செய்தவர்களாக இருப்பார்கள். பெரியவர்களாகிய பிறகும் தங்களின்  குடும்பங்களில் ஆணாதிக்க செயற்பாடுகளை இன்னமும் செய்பவர்களாக இருப்பார்கள். இப்படியாக சமூகச் சுழற்சியிலேயே ஆணாதிக்கம் சார்ந்த வன்முறையும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக நீடித்துக் கொண்டிருக்கும் போது இது போன்ற ஒற்றை அடையாள எதிர்ப்பை பாசாங்குடன் செயற்படுத்துவதின் மூலம் அதைப் போக்க முடியுமா? இந்த நோய்க்கூறு மனநிலையின் ஆணிவேருக்கல்லவா சிகிச்சையைத் தேட வேண்டும்?

***

பேருந்தில் பிக்பாக்கெட் அடித்த ஒரு சில்லறைத் திருடன் பிடிபட்டு விடுகிறான் என்று வைத்துக் கொள்வோம். என்ன ஆகிறது? அந்தப் பேருந்தில் உள்ள பெரும்பாலோனோர் வரவழைத்துக் கொண்ட கோபத்துடன் அவரை தர்மஅடி போடுகிறோம். காவல் நிலையத்தில் ஒப்படைக்கிறோம். தர்மத்தை நிலைநாட்டிய திருப்தியுடன் கலைந்து செல்கிறோம். ஆனால் அந்தப்  பேருந்தின் உள்ளேயே சில்லறை பாக்கியை ஒழுங்காக திருப்பித் தராத நடத்துநர் இருக்கலாம். இயன்ற அளவில் வருமானவரி ஏய்ப்பு செய்யும் ஆசாமி இருக்கலாம். லஞ்சம் வாங்கும் ஓர் அரசு ஊழியர் இருக்கலாம். தன் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் சிறுவியாபாரி இருக்கலாம். ஆக.. ஓர் அமைப்பிற்குள்ளே இத்தனை தவறான ஆசாமிகள் இருக்கும் போது ஒரு சில்லறைத் திருடனை ஒன்று சேர்ந்து தண்டிப்பதின் மூலம் தவறுகளை ஒழித்து விட்டதாக கருதிக் கொள்ளுதல் எத்தனை அறியாமை? சில்லறைத் திருடன் உருவாவதற்கான சமூகவியல் காரணத்தையும் உளவியல் காரணத்தையும் பற்றி ஆய்வதுதானே அறிவு சார்ந்த செயற்பாடாக இருக்க முடியும்?

சினிமாப் பாடல்களில், வசனங்களில், உடல்அசைவுகளில், நகைச்சுவைகளில் ஆபாசம் இருப்பதென்பது ஏதோ சமீபத்திய போக்கு அல்ல. அதிலுள்ள வணிக வாய்ப்பையும் அதிகமான லாபத்தையும் கண்டுகொண்டவுடனேயே அது பெருமளவு அதிகரித்து விட்டது.. 'நான் காதலெனும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே, அந்தக் கவிதைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே.. என்று காமத்தை மிக கண்ணியமாகச் சொன்ன கண்ணதாசன்தான் 'கைக்கு அடக்கமா எடுத்துத் தின்ன வாட்டமா'" என்று 'எலந்தபயம்' பாடலையும்  எழுத நேர்ந்தது. "என்னம்மா..  நான் இத்தனை வருடங்களாக பாடலெழுதி வருகிறேன்.. அதில் எனக்கு கிடைக்காத புகழையெல்லாம்  நீ ஒரே பாடலில் பெற்று விட்டாயே.." என்று எல்.ஆர்.ஈஸ்வரியிடம் அவர் கேட்குமளவிற்கு அந்தப் பாடல் பொதுச்சமூகத்திடம் அபாரமான வெற்றியையும் வரவேற்பையும் பெற்றது. இப்படி தமிழ் சினிமாவில் இதுவரை நிகழ்ந்த ஆபாச பாடல்வரிகள், காட்சிகளையெல்லாம் பட்டியலிட்டால் இன்னொரு பெரிய தனிக்கட்டுரையாக எழுத வேண்டி வரும். சமூகத்தின் நேரடியான, மறைமுகமான ஆதரவு இல்லாமல் அவை  எல்லாம் எவ்வாறு இத்தனை காலமாக வெற்றி பெற முடியும்? இது போன்ற பாடல்களை எழுதுவதில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்த வாலியை வலிக்காமல் அவ்வப்போது கண்டித்தாலும் 'வாலிபக் கவிஞர்' என்றுதானே இச்சமூகம் கொண்டாடியது? இந்தச் சர்ச்சையை திரைப்படப் பாடலாசிரியர்களின் கூட்டறிக்கை ஒன்று கண்டித்ததை எப்படிப் புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை.

மேற்கத்திய சமூகங்களைப் போல அந்தந்த வயதுக்குரியவர்களுக்கான தனித்தனி திரைப்படங்கள் எடுக்கும் வழக்கம் இங்கில்லை. எல்லாமே கூட்டுஅவியல்தான். சம்பிரதாயத்திற்காக A சான்றிதழ் வழங்கப்பட்டாலும் அவற்றை எல்லோரும் பார்க்கக்கூடிய நடைமுறைதான் இங்குள்ளது.  குழந்தைகள் படமென்றாலும் சாமிப்படங்கள் என்றாலும் கூட அதில் சாமர்த்தியமாக ஒரு ஆபாசப்பாடலை, காட்சிகளை வணிக நோக்கத்திற்காக செருகி விடும் திரைக்கதை வல்லுநர்கள் பலர் இங்குண்டு. மற்ற படங்களிலாவது அதை ஒழுங்காக காட்டித் தொலைக்கிறார்களா என்றால் அதுவுமில்லை. எழுத்தாளர் சுஜாதா ஒருமுறை சலித்துக் கொண்டபடி ஓர் ஆணின் முகமும் பெண்ணின் முகமும் அண்மைக்காட்சியில் நெருங்கி வருகிறது என்றால் உடனே இடையில் எங்கிருந்தோ ஒரு பூ வந்து ஆடி மறைத்துக் கொள்கிறது. நேரடியாக காட்டப்படும் கவர்ச்சியை விட தணிக்கைத் துறையை ஏமாற்றுவதற்காக இப்படி சாமர்த்தியமாக மழுப்பப்படும் காட்சிகள் அதிக ஆபத்தானது. அவரவர்களின் வக்கிரம் சார்ந்த கற்பனைகளைத் தூண்டும் மோசமான செயலையே இவை செய்கின்றன. பாலியல் சார்ந்த மனப்புழுக்கங்களை அதிகரிக்கின்றன.  நாகரிக உலகின் கட்டுப்பாடுகளின் படி அடக்கி வைக்கிற இந்த அழுத்தங்கள் பாலியல் வன்முறைகளாகவும் குற்றங்களாகவும் வெடிக்கின்றன.

ஒருவகையில் இந்தப்  பாடலில் ஒலிக்கும் பீஃப் ஒலியை ஊடகத் தணிக்கையின் மீதான எள்ளலான விமர்சனமாகவும் கொள்ளலாம். சினிமா வசனங்களில் ஒலிக்கும் ஆபாசமான, வார்த்தைகளை தணிக்கை செய்கிறேன் பேர்வழி என்று ஒலியை மாத்திரம் மழுப்பி அனுமதிக்கிறார்கள். ஆனால் திரையரங்குளில் இந்த மெளன இடைவெளிகளை மிகச் சரியாகப் புரிந்து கொள்ளும் இளம் பார்வையாளர்கள் கூக்குரலிட்டு தங்களின் அங்கீகாரத்தை அதற்கு  வழங்குகிறார்கள். இந்த நோக்கில் பார்த்தால் தணிக்கைத் துறையின் அந்தச் செயலைப் போலவே சுயதணிக்கையுடன் வெளியான இந்தப்பாடலை இத்தனை கடுமையாக எதிர்ப்பதற்கான காரணம் என்ன? நாம் எதிர்க்க வேண்டியது தணிக்கைத் துறையின் அரைகுறையான இந்தப் போக்கையா அல்லது அதன் சிறு பங்கான இந்தப் பாடலையா? இந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒருவேளை இவையெல்லாம் குதர்க்கமான வாதங்களாகத் தோன்றினாலும் நம் சமூகத்தின் பெரும்பான்மையான பகுதியே புரையோடிப் போயிருக்கும் போது ஒற்றை எதிர்ப்பின் மூலம் நாம் திருப்தி கொள்ளும் போக்கில் உள்ள அவல நகைச்சுவையைப் பற்றி  நிதானமாக யோசித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

***

இந்த ஆணாதிக்க எதிர்ப்புகளில் சார்புநிலை நோக்கில் அவரவர்களுக்குச் சாதகமான விதிகளும் உள்ளன. தன்னார்வலர்களால் நிகழ்த்தப்பட்ட வெள்ள  நிவாரண உதவிகளின் மீது சமகால ஆளுங்கட்சி தன்னுடைய தலைவரின் புகைப்படத்தை ஒட்டிக் கொள்வது தொடர்பாக கடுமையான எதிர்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்தன. இந்த அசந்தர்ப்பமான சூழலில் செய்யப்பட்ட அராஜகமான சமூக அநீதி  அது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால் இது சார்ந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக பெண் முதல்வரின் புகைப்படம் உள்ளாடையில் ஒட்டப்பட்டிருந்த ஒரு கேலிச்சித்திரம் இணையத்தில் உலா வந்தது. இதை அரசியல் சார்ந்த கோபம் என்று நியாயப்படுத்தி விடவே முடியாது. அரசியல் சார்ந்த எதிர்ப்புகளை, கோபங்களை ஜனநாயகம் அனுமதித்திருக்கும் விதங்களில் வெளிப்படுத்துவதுதான் முறையானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பெண் பிரதிநிதியை கொச்சையாக சித்தரிப்பதென்பதும் ஆணாதிக்க செயற்பாட்டின் எதிரொலிதான். உலகெங்கிலுமுள்ள பெண் அரசியல் தலைவர்கள், அவர்கள் பெண் என்னும் காரணத்தினாலேயே அவர்கள் மீது அந்தக் கோணத்தில் எழும் ஆபாசமான கேலிச்சித்திரங்களையும் வம்புகளையும் நாம் காண்கிறோம். ஒரு பெண் அரசியல்வாதியின் மீது சித்தரிக்கப்பட்ட இந்த ஆபாசச் செயலை எந்தப் பெண்ணியவாதியோ, சமூக ஆர்வலர்களோ, பொதுச்சமூக நபர்களோ கண்டித்ததாக தெரியவில்லை. ஆணாதிக்கப் போக்கின் எதிர்ப்பின் நியாயம் அந்தந்த கோணங்களில் மாறுமா என்ன?

சரி. இவற்றிற்கெல்லாம் என்னதான் தீர்வு? இங்கு ஆண் சமூகத்திற்கும் பெண்  சமூகத்திற்கும் இடையில் ஒரு பிரம்மாண்டமான தடுப்புச் சுவர் உள்ளது. தாய்வழிச் சமூகம் தந்தை வழிச்சமூகமாக உருமாறிய ஆதிக்காலத்திலிருந்து இன்னமும் கரையாமல் அழுத்தமாக நிற்கும் சுவர் இது. எனவேதான் சுவற்றிற்கு மறுபக்கம் பார்க்கும் ஆவலும் அது சார்ந்த குற்றங்களும் வன்முறைகளும் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன. பெண்ணின் உடல் சார்ந்த வேதனைகளும் அவற்றின் பிரத்யேகமான பிரச்சினைகளும் வலிகளும்  ஆணுக்கு முறையாக அறிமுகப்படுத்தப்படவேயில்லை. எனவேதான் பெண் என்னும் சகஜீவியை அப்படியல்லாமல் உடல் சார்ந்த கிளர்ச்சிப் பண்டமாக மட்டுமே அவன் பார்த்துக் கொண்டேயிருக்கிறான். ஊடகங்களும் திரைப்படங்களும் இது சார்ந்த கிளர்ச்சியை வளர்த்து தங்களின் வணிகத்தைப் பெருக்கிக் கொள்கின்றன. ஆண், பெண் சார்ந்த பாகுபாடுகள், உயர்வு தாழ்வு அணுகுமுறைகள், தடைகள் சிறுவயதிலிருந்தே அவர்களுக்குள் திணிக்கப்படுகின்றன.

ஆண்கள் உயர்வு மனப்பான்மையுடனும் பெண்கள் அப்படிப் பிறந்த காரணத்தினலாயே தாழ்வுணர்வுடனும் தன் மீது நிகழ்த்தப்படும்  கொடுமைகளை சகித்துக் கொள்ளவும் மறுக்கப்படும் விஷயங்களை மெளனமாக கடந்து போகவும் கற்றுத்தரப்படுகிறார்கள். இந்தச் செயல்களை அறியாமை மற்றும் ஆழ்மன திணிப்பு காரணமாக பெண்களே செய்கிறார்கள் என்பதுதான் கொடுமை.ஆணுக்கும் பெண்ணுக்குமான தோழமை என்பது முழுக்க தவிர்க்கப்பட்டு அவர்களின் அருகாமை பாலியல் நோக்கில் மட்டுமே பார்க்கப்பட்டு அது சார்ந்த தடைகளும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் பரஸ்பர புரிதல் ஏதுமில்லாமல் தனித்தனி கூண்டுகளில் வளர்க்கப்படும் விலங்குகளைப் போன்று இரு தரப்பினரும் வளரும் அவலமான சூழல் நிகழ்கிறது. பெண் என்பவள் எவ்வித பிரத்யேக உணர்வும் அற்ற ஆணின் உடமையல்ல, தன்னைப் போலவே எல்லா உணர்வுகளும் கொண்ட சகஜீவி என்பது ஆண்களுக்கு மிக அழுத்தமாக கற்றுத்தரப்பட வேண்டும். பெற்றோர், சமூகம், ஊடகங்கள், கலை, இலக்கியம் என்று சமூகத்தின் எல்லாத் துறையும் பொறுப்புடன் இணைந்து ஒன்றுகூடி இழுக்க  வேண்டிய தேர் இது.

இதன் மீது அமைந்த உரையாடல்களும் விவாதங்களும் படைப்புகளும் போன்றவை தொடர்ந்து உருவாகிக் கொண்டிருப்பதினால்தான் இந்த மாற்றத்தை நோக்கி மெல்ல மெல்ல சென்று நிலையான தீர்விற்கு நகர முடியுமே ஒழிய இன்னமும் நிருபணமாகாத ஒரு  வழக்கில் தொடர்புள்ள சில்லறைத் திருடனைப் பிடித்து ஊர்கூடி தர்மஅடி போட்டு விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று எண்ணுவது அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நோய் ஒன்றிற்கு குண்டூசியால் சொறிந்து கொண்டு சரியாகி விட்டது என்று கற்பனை செய்வது போலத்தான்.இருக்கும். தனிநபர் மீதான எதிர்ப்புகளால்அல்ல, ஒட்டுமொத்த சமூகமே தன்னை நோக்கி திரும்பி இந்தச் சர்ச்சையின் மீதாக தன்னை முழுவதும் பரிசீலனை செய்து கொள்ள வேண்டியதுதான் இந்தச் சூழலில் மிக மிக அவசியம்.

- உயிர்மை - பிப்ரவரி 2016-ல் வெளியான கட்டுரை. (நன்றி: உயிர்மை)

suresh kannan

No comments: