Friday, April 30, 2021

அஞ்சலி: கே.வி.ஆனந்த்


 
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான கே.வி,ஆனந்த் மாரடைப்பால் இறந்து விட்டதாக அறிகிறேன். நமக்குப் பிடித்தமான பிரபலங்களின் மரணங்களை அறிய நேர்கிற அந்தக் கணங்களில் நாமும் உள்ளே ஒரு துளி இறந்து போகிறோம் என்று தோன்றுகிறது. சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

தொன்னூறுகளில் வெளிவந்த க்ரைம் நாவல்களை வாசிக்கும் பழக்கம் கொண்டிருந்தவர்களுக்கு கே.வி. ஆனந்த் என்பவர் முன்பே பரிச்சயம் ஆனவர். ஆம். ராஜேஷ்குமார், சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர்கள் எழுதும் கிரைம் நாவல்களின் அட்டைப்படங்களுக்காக பிரத்யேகமான புகைப்படங்களை எடுத்தவர் ஆனந்த்.

முன்பெல்லாம் கிரைம் நாவல் என்றால் காமா சோமாவென்று ஏதோ ஒரு புகைப்படத்தை முகப்பில் அச்சிடுவதே வழக்கம். ஆனால் நாவலின் உள்ளடகத்திற்கென்று பிரத்யேக புகைப்படங்களை எடுத்து அச்சிடுவது என்பது ஆனந்தின் வருகைக்கு பிறகுதான் என்று நினைக்கிறேன். இதற்காக நிஜ மாடல்களை உபயோகித்து அவர்களின் முதுகில் கத்திக்குத்து இருப்பது போல் ஒப்பனை செய்து.. அதை வசீகரமான கோணத்தில் புகைப்படம் எடுத்து.. இதற்காக நிறைய மெனக்கெடுவார் ஆனந்த். இவரது அட்டைப்படங்களுக்காகவே நாவல்களை வாங்கியவர்கள் அதிகம். சம்பந்தப்பட்ட எழுத்தாளர்களும் ஆனந்த்தை விதம் விதமாக உற்சாகப்படுத்துவார்கள்.

இது தவிர முன்னணி வார இதழ்களிலும் பிரபலமான புகைப்படக்கலைஞராக ஆனந்த் இருந்தார்.

*

புகைப்படமும் சினிமாவிற்கான ஒளிப்பதிவும் மிக நெருக்கமான தொடர்புடையது. ஒளியின் ரகசியத்தை அறிந்து கொண்டால் போதும். எனவே சிறந்த புகைப்படக்காரராக இருந்த ஆனந்திற்கு சினிமாவிற்கான ஒளிப்பதிவாளராக முன்னகர்வது என்பது எளிதாகவே இருந்திருக்கும்.

இந்தியாவின் மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர்களில் முக்கியமானவரான பி. சி. ஸ்ரீராமிடம் உதவியாளராகச் சேர்ந்த ஆனந்த், அங்கு மிகச்சிறந்த மாணாக்கனாக விளங்கினார். அதற்கு முன்பு ஜீவாவிடமும் சிறிது காலம் உதவியாளராக இருந்திருக்கிறார். தான் பிஸியாக இருந்த காரணத்தினால் தனக்கு வந்த வாய்ப்பை தனது முதன்மைச் சீடனுக்கு அளித்து மகிழ்ந்தார், பி. சி. ஸ்ரீராம்

ஆம். 1994-ல் வெளியான ‘தென்மாவின் கொம்பத்து’ என்கிற மலையாளத் திரைப்படம்தான் ஆனந்த் ஒளிப்பதிவு செய்த முதல் திரைப்படம்.

பின்னர் முதல்வன், பாய்ஸ் போன்ற திரைப்படங்களில் பணிபுரிந்து மிகச்சிறந்த ஒளிப்பதிவாளர் என்கிற தகுதியை அடைந்து விட்டாலும் அங்கேயே தேங்கி விடாமல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தார்.

*

கே.வி.ஆனந்த் முதலில் இயக்கிய திரைப்படமான ‘கனா கண்டேன்’ 2005-ல் வெளியாகியது. இன்றைக்குப் பார்த்தாலும் வசீகரிக்கக்கூடிய புத்திசாலித்தனமான திரைக்கதை. இன்றைக்கு மலையாளத்தில் பிரபல நாயகனாக இருக்கக்கூடிய பிருத்விராஜை ஒரு சுவாரசியமான வில்லனாக ‘கனா கண்டேனில்’ உபயோகித்திருப்பார்.

பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ‘காப்பான்’ தவிர, கே.வி. ஆனந்தின் அனைத்துத் திரைப்படங்களும் சுபா என்கிற எழுத்தாளர்களோடு கூட்டணி சேர்ந்திருந்தது. சுபாவின் எழுத்தும் ஆனந்தின் இயக்கமும் இணைந்து ஒரு வசீகரமான கலவையாக அமைந்தது. போலவே இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், எடிட்டர் ஆன்டனி போன்ற திறமைசாலிகளோடு தொடர்ந்து கூட்டணி அமைத்துக் கொண்டார்.

கே.வி.ஆனந்தின் அனைத்துத் திரைப்படங்களுமே வெகுசனத் திரைப்படங்கள்தான். ஆனால் வழக்கமான மசாலாவில் மாட்டிக் கொள்ளாமல் தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் பல புதிய விஷயங்களை தொடர்ந்து முயன்று கொண்டேயிருப்பார். ‘அநேகன்’ இதற்கொரு நல்ல உதாரணம்.

ஆனந்த் தனது திரைப்படங்களுக்கு தலைப்பைத் தேர்ந்தெடுப்பதே அத்தனை அழகாக இருக்கும். ‘அயன்’, ‘கோ’ ‘மாற்றான்’ என்று புழக்கத்தில் இல்லாத தமிழ்ப்பெயர்களை சூட்டுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

தானே சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்தும் தான் இயக்கிய திரைப்படங்களுக்கு இதர ஒளிப்பதிவாளர்களை அமர்த்தி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

தமிழ் சினிமாவின் சிறந்த வெகுசன இயக்குநர்களில் ஒருவராக இருந்த கே.வி.ஆனந்தின் மறைவிற்கு என் மனமார்ந்த அஞ்சலி.

suresh kannan

No comments: