Sunday, January 04, 2015

உயிர்மை - காலச்சுவடு நூல் வெளியீட்டு விழா - 03.01.2015


டிசம்பர்-ஜனவரி மாதங்கள் வந்தாலே சென்னைக்கு புதுநிறம் வந்து விடுகிறது. ஒருபுறம் கர்நாடக இசை விழா, இன்னொரு புறம் சர்வதேச திரை விழா, புத்தக கண்காட்சி, நூல் வெளியீட்டு விழாக்கள் என்று பல்வேறு கலாசார நிகழ்வுகள் காற்றில் மிதக்க ஆரம்பித்து விடுகின்றன. ஒரே சமயத்தில் இரண்டு விருப்பமான நிகழ்வுகள் நடைபெறும் போது எதற்குப் போக வேண்டும் என்று குழப்பம் வந்து விடுகிறது. பிலிம் பெஸ்டிவல் சமயத்தில் இவ்வாறு சற்று அல்லாடினேன். ஒரே சமயத்தில் நிகழும் இரண்டு நிகழ்ச்சிகளுமே முக்கியம் என நினைக்கும் போது பரத்தையிடம் ஜாலி செய்யப் போயிருக்கும் நண்பனை பொறாமையுடன் நினைத்துக் கொண்டே சாமியார் பிரசங்கத்தில் அவஸ்தையுடன் அமர்ந்திருப்பவன் கதை போல அல்லாடும் இரட்டை மனதுடன் அமர்ந்திருக்க வேண்டியிருக்கிறது. பதிப்பக அரசியல், எழுத்தாள அரசியல், குழு அரசியல் ஆகியவற்றில் நம்பிக்கையும் ஆதாயமும் உள்ளவர்களுக்கு இம்மாதிரியான எவ்வித குழப்பமும் இருப்பதாகத் தெரியவில்லை. தெளிவாகவும் தீர்மானமாகவும் இருக்கிறார்கள். இவ்வாறான அரசியல்களைத் தாண்டி  படைப்புகளின் மூலமாக மாத்திரமே ஓர் எழுத்தாளரை அணுகும் அப்பாவி இலக்கியத் தொண்டர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நூல் வெளியீட்டு விழாக்களைப் பற்றி இப்போதெல்லாம் புகைப்படங்கள் போடுவதோடு நிறுத்திக் கொள்கிறார்கள். அங்கு என்ன உரையாடப்பட்டது என்று பெரும்பாலும் பதிவு செய்யப்படுவதில்லை என்று எம்.டி.முத்துக்குமாரசாமி சமீபத்தில் முகநூலில் எழுதியிருந்தார். உண்மைதான். சமூகவலைத்தளங்களின் மூலம் மைக்ரோ பிளாக்கிங் வகையான சுருக் எழுத்துக்களைத் தாண்டி நீளமான பதிவுகளை வாசிக்க எவருக்கும் பொறுமையும் நேரமும் ஆர்வமும் இருப்பதில்லை. அப்படி வெட்டியாக பதியுமளவிற்கு நூல் வெளியீட்டு விழாக்களில்அப்படியொன்றும் உன்னதமாக யாரும் பேசி விடுவதில்லை என்பதும் இன்னொரு விஷயம். 'நான் இந்த நூலை இன்னமும் வாசிக்கவில்லை' என்கிற அசட்டுத்தனமான பெருமையுடன் கூடிய ஒப்புதல் வாக்குமூலத்துடன்தான் பொதுவாக துவங்குகிறார்கள். வெற்றுத்தனமான சம்பிரதாயங்களுடன்தான் இம்மாதிரியான நிகழ்வுகள் முடிகின்றன. அசலான இலக்கியத்தில் இன்னமும் நம்பிக்கை கொண்டிருக்கக்கூடிய நபர்களின் மூலம்தான் அற்புதமான, ஆத்மார்த்தமான பேச்சுகள் அபூர்வமாக நிகழ்கின்றன.

***

உயிர்மை பதிப்பகத்தின் பத்து நூல்களின் வெளியீட்டு விழா ஸ்பென்சர் பிளாசா எதிரில் உள்ள புக் பாயிண்ட் நூல் அரங்கில் நடைபெற்றது. உள்ளே நுழையும் போதே, நீண்ட நாட்களாக பாாக்க நினைத்திருந்த 'மெல்லிய கண்ணாடி அணிந்திருந்த பூனை' யான போகன் சங்கரை பார்க்க நேர்ந்தது நல்ல சகுனம். கூடவே டயட்டில் இருக்கும் இராமசாமி கண்ணன். 'பிசாசு படத்துல அப்படி என்னய்யா இருக்கு...சொல்லுங்க பார்க்கலாம்' என்கிற அதிரடியான கேள்வியுடன் வரவேற்றவரை 'வணக்கம் ஐயா' என்று கூறி விடைபெற்றேன். சிவராமன், விநாயக முருகன், அருண் (தமிழ் ஸ்டுடியோ), உமா மஹேஸ்வரன் என்று இன்னமும் சில நண்பர்களை சந்திக்க முடிந்தது. அதிஷாவை கூப்பிட்டு வெளியிடப்படவிருக்கும் அவரது நூலுக்காக வாழ்த்து சொன்னேன். அதிஷாவின் எழுத்தை அதன் துவக்கத்திலிருந்தே இணையத்தில் கவனித்துக் கொண்டிருக்கிறேன். எளிமையான ஆனால் நுட்பமான நகைச்சுவையும், அவதானிப்பும் அவற்றை இன்னமும் எளிமையான எழுத்தில் வெளிப்படுத்தும் லாகவமும் என ஓர் எழுத்தாளரின் திறமைளைக் கொண்டிருக்கிறார். இன்னமும் தீவிரமாக முயன்றால் அவரால் கவனத்துக்குரிய எழுத்தாளராக மலர முடியும் என்பது என் நம்பிக்கை.

மனுஷ்யபுத்திரனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி துவங்கியது. தியோடர் பாஸ்கரனின் நூலைப்பற்றி (சோலை எனும் வாழிடம்) முன்னாள் நீதியரசர் சந்துரு பேசினார்.

'பொதுவாக சினிமா விமர்சனம் எழுதுபவர்கள், தாம் பார்க்கும் சினிமாக்களில் உள்ள பலவீனங்களை பட்டியலிட்டு இயக்குநரை நோக்கின உரையாடலாகத்தான் தமது பதிவுகளை எழுதுகிறார்கள். மாறாக என்னுடைய பதிவுகள் ஒரு பார்வையாளனின் நோக்கில்தான் பெரும்பாலும் அமைந்திருக்கும்' என்று தன்னுடைய நூலைப் பற்றி (தமிழ் சினிமா: காட்டப்படுவதும் காண்பதுவும்) குறிப்பிட்டார் பேரா. அ.ராமசாமி.

அ.ராமசாமியின் நூலைப் பற்றி பேசிய தியோடர் பாஸ்கரன், 'சினிமாவைப் பற்றிய சிறந்த விமர்சன நூல்கள் தமிழில் குறைவாகத்தான் இருக்கின்றன. சினிமா நுட்பங்களைப் பற்றிய கலைச்சொற்கள் தமிழில் பெரிதும் உருவாகாமல் இருப்பதே இதற்கொரு காரணம். 'Casting' என்பதை தமிழில் எவ்வாறு குறிப்பிடுவீர்கள். சினிமா பற்றிய அ.ராமசாமியின் பார்வை நுட்பமானதாகவும் தனித்துவமானதாகவும் இருக்கிறது' என்றார்.

'தடித்த கண்ணாடி அணிந்த பூனை' என்கிற போகன் சங்கரின் கவிதை நூலைப் பற்றி பேசின எழுத்தாளர் சுகுமாரன், "சுமார் ஒரு மணிநேரத்திற்கொரு கவிஞர்கள் உருவாகி விடுகிற சமகால சூழலில் நான் கவனித்த வரை போகன் சங்கர் முக்கியமானதொரு கலையாளுமையாக தெரிகிறார்" என்று பாராட்டி சங்கரின் இரண்டு கவிதைகளை வாசித்தார்.

நான் மிக மதிக்கும் ரகசியமாக காதலிக்கும் படைப்பாளுமைகளுள் ஒருவர் சுகுமாரன். அவரிடமிருந்து வாழ்த்தும் பாராட்டும் பெறுவது மிக முக்கியமானது. போகன் சங்கர் மீது பொறாமையாகவும் பெருமிதமாகவும் இருந்தது. கவிதை என்கிற வடிவம் என் இளமைக்காலத்திலிருந்தே ஒவ்வாமையை அளிக்கும் விஷயமென்றாலும் இணையத்தில் அவ்வப்போது வெளியாகும் சங்கரின் சில கவிதைகளை வாசித்து வியந்ததுண்டு. இப்போது சுகுமாரனின் பாராட்டிற்குப் பிறகு அவரின் எல்லாக் கவிதைகளையும் நிதானமாக வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

பள்ளி மாணவி போல் தோற்றமளித்த மனுஷியின் கவிதை நூலைப் பற்றி அபிலாஷ் சந்திரன் பேசினார். 'அட்டையில் இவரது பெயரை எடுத்து விட்டால் இந்தக் கவிதைகள் ஓர் ஆணினால் எழுதப்பட்டதோ என்று நினைக்குமளவிற்கு, பொதுவாக பெண் எழுத்தாளர்களின் கவிதைகளில் உள்ள மென்மை, இளகும் தன்மை ஆகியவை இவைகளில் இல்லை' என்றார்.

செந்தில்குமாரின் சிறுகதைகளைப் பற்றி எழுத்தாளர் பாவண்ணன் பேச எழுந்தார்.


என்றாலும் பெருமாள் முருகனின் நாவல் தொடர்பாக சமீபத்தில் எழுந்த சர்ச்சை குறித்த எண்ணங்களே என்னுடைய மனதில் ஓடிக் கொண்டிருந்ததாலும் அருகில் அமைந்திருக்கும் இன்னொரு அரங்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் காலச்சுவடின் ஏழு புனைவு நூல் வெளியீட்டில் அவருடைய பங்களிப்பும் இருந்ததாலும் அதைக் கவனிக்கலாமே என்று எழுந்து சென்றேன். மெட்ரோ ரயில்காரர்களின் ஆக்ரமிப்பினால் போருக்குப் பிந்தைய காட்சிகள் போல் கொந்தப்பட்டிருக்கும் அண்ணாசாலையின்  சாலைகளை அபாயகரமாகக் கடந்து குறிப்பிட்ட அரங்கம் எங்கே இருக்கிறது என தேடினேன். நான் முன்னர் அதிகம் சென்றிராத, எனக்கு அவ்வளவாக பிடித்திராத சூழலைக் கொண்டிருந்த பழைய ஆனந்த் திரையரங்கு கட்டிடத்தை மனதில் கொண்டே தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் அது இடிக்கப்பட்டு பல்லடுக்கு அலங்கார மாளிகையாக உருமாறியிருந்ததை பிறகுதான் கண்டுகொண்டேன்.. பளபளப்பான லிஃப்ட்டில் ஏறி ஒரு கார்ப்பரேட் மீட்டிங் நடக்கக்கூடிய இடம் மாதிரியான நவீன தோற்றத்தில் இருளும் வெளிச்சமுமாக இருந்த 'உமாபதி கலையரங்கில்'  நுழையும் போது மிகச் சரியாக பெருமாள் முருகன் உரையாடிக் கொண்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட அரவிந்தனின் 'பயணம்' எனும் புதினத்தைப் பற்றியதாக பெருமாள் முருகனின் பேச்சு அமைந்திருந்தது. ஓர் ஆசிரமத்தில் நிகழும் முறைகேடுகளை, ஊழல்களைப் பற்றியதாக அரவிந்தனின் புதினம் இருக்கலாம் என்பது அந்தப் பேச்சிலிருந்து நான் கொண்ட யூகம்.

 'அரவிந்தன், தன்னுடைய நாவலில் கோவையில் உள்ள ஒரு ஆசிரமம் என்று பொதுவாக குறிப்பிடுகிறார். தவிரவும் சாதியைப் பற்றிய இடங்களைப் பற்றிய நேரடியான விவரங்களை தவிர்த்து விடுகிறார். இந்த ஒரு அம்சத்தை அவரிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது'  என்று சமீபத்தில் தமக்கேற்பட்டுக் கொண்டிருக்கும் அனுபவங்களின் எதிரொலியாக பெருமாள் முருகன் பேசிய போது அந்தக் கசப்பான நகைச்சுவையை அரங்கில் இருந்தவர்களும் ரசித்தார்கள். தவிரவும் தம்முடைய புதிய நாவலின் முன்னுரையில் எழுதியிருந்த ஒரு disclaimer -ஐ பெருமாள் முருகன் வாசித்துக் காட்டிய போது கைத்தட்டலால் அரங்கம் அதிர்ந்தது.

அவருடைய உரை நிறைந்த பிறகு எழுத்தாளர் சுகுமாரன் மேடைக்கு வந்து (ஆம் டூயல் ரோல்) சமீபத்திய சர்ச்சையால் பெருமாள் முருகன் தாம் எதிர்கொண்டிருக்கும் சங்கடமான அனுபவங்களைப் பகிர்வார்' என்று அறிவித்த பிறகு பெருமாள் முருகன் அதைப் பற்றி பேசத் துவங்கினார். (என் நினைவிலுள்ளதை வைத்து எழுதுகிறேன்).

'இந்தப் புதினம் குழந்தைப் பேறில்லாத ஒரு தம்பதியினரின் சிக்கல்களையும் அதற்குத் தீர்வாக நமது பண்பாட்டின் தொன்மையிலேயே காணக்கிடைக்கும் ஒரு வழக்கத்தையும் இணைத்து எழுதப்பட்டது. தியோடர் பாஸ்கரன், அ.கா.பெருமாள் போன்ற பண்பாட்டு ஆய்வாளர்கள் பண்டைய சமூகத்தில் நிலவும் இது போன்ற வழக்கங்களை பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் நாவல் வெளியாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு - பாஜக மைய அரசில் பொறுப்பேற்ற பிறகு - சில சாதிய அமைப்புகளும் பக்தி வழிபாட்டு சங்கத்தினரைச் சேர்ந்தவர்களும், பிஜேபி,ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்த நபர்களும் இந்தப் புத்தகத்தை எரித்தும் என்னுடைய புகைப்படத்தை செருப்பால் அடித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிலர் இரவு என்று கூட பாராமல் வீடுதேடி வந்து விளக்கம் கேட்டனர்.  புரிந்து கொள்ளக்கூடியவர்களுக்கு விளக்கம் சொல்லத் தயாராகவே இருக்கிறேன். ஆனால் புரிந்து கொள்ள விரும்பாமல் அரசியல் ஆதாயத்திற்காகவும் கவனஈர்ப்பிற்காகவும் செய்யப்படும் இது போன்ற சம்பவங்களால் மிகுந்த சங்கடத்திற்கும் மனஉளைச்சலுக்கும் ஆளாகிறேன்.

தமுஎச உடனே இது குறித்த தனது கண்டனத்தையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது. நண்பர்களிடமிருந்தும் அறிவுசார் சமூகத்திடமிருந்தும் அரசியல் கட்சிகளிடமிருந்தும். எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு ஆறுதலைத் தருகிறது. இதை கடந்து போகும் துணிச்சலையும் தருகிறது. இது போன்ற  ஆதரவுகளுக்குப் பின்னர் பிஜேபி,ஆர்எஸ்எஸ் நபர்கள் இந்தப் போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டனர். நாவலை தடை செய்ய வேண்டும், எழுத்தாளரை கைது செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை விலக்கிக் கொண்டனர். ஆனால் சில சாதிய அமைப்புகளும் வழிபாட்டு இயக்கங்களும் இந்தப் பிரச்சினையை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்க விரும்புகிறார்கள். அவர்களுடைய கோரிக்கை என்னவென்பதே தெளிவாக தெரியவில்லை. இந்த நாவலின் சில பக்கங்களை மாத்திரம் ஆயிரம் நகல்கள் எடுத்து கோயிலுக்கு வருபவர்களிடம் ஒரு துண்டறிக்கையுடன் விநியோகிப்பதாக அறிகிறேன். அந்தப் பக்கங்களை மாத்திரம் வாசித்தால் இந்த நாவல் சமகாலத்து பின்னணியில் எழுதப்பட்டது போன்ற தோற்றத்தை தரும். இதற்குப் பின்னர் பிஜேபி அரசியல் நபர்கள் மறைமுகமாக இருக்கிறார்களா என்பதும் தெரியவில்லை. இந்த சர்ச்சை துவங்கப்பட்டது முதல் சொந்த ஊரில் தங்க முடியாமல் தலைமுறைவாக ஆங்காங்கே சென்று கொண்டிருக்கிறேன்.

இது ஏதோ என்னுடைய தனிப்பட்ட பிரச்சினை என்பதாக அறிவுசார் சமூகம் கருதி விடக்கூடாது. இனி மேல் எந்தவொரு படைப்பிலும் எந்தவொரு சாதியைப் பற்றியோ அதன் வழக்கங்கள் பற்றியோ எழுத முடியாமல் போகும். கருத்துச் சுதந்திரத்தை எதிரான ஆபத்தை இட்டுச் செல்லக்கூடியது இது."

இவ்வாறாக அவரது உரை அமைந்திருந்தது.


***

பெருமாள் முருகன் மீதான எதிர்ப்பும் போராட்டமும் மிரட்டல்களும் ஏதோ உதிரி அமைப்புளைச் சார்ந்த நபர்களால் செய்யப்படுவது என்பதாக நாம் கருதி புறக்கணித்து விட முடியாது என்பதாக எனக்குத் தோன்றுகிறது. எழுத்தாளராகவும் ஒரு தனிநபராகவும் அவர் எதிர்கொள்ளும் மனஉளைச்சலையும் அது அவரது பிந்தைய படைப்பாற்றலை பாதிக்கக்கூடிய ஆபத்தையும் நம்மால் யூகிக்க முடியும். எனவே அறிவுலகம் சார்ந்து இயங்கும் அனைத்து படைப்பாளிகளும் பதிப்பாளர்களும் நபர்களும், தங்களின் அரசியல்களை, கருத்து வேறுபாடுகளை தற்காலிகமாவது ஒதுக்கி - ஓரணியாக நின்று எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு தங்களின் ஆதரவை தரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.


suresh kannan

No comments: