Tuesday, January 20, 2015

உள்ளங்கையில் உலக சினிமா - வரமா சாபமா?





 80-களின் காலக்கட்டத்தில் அயல் சினிமாக்களைப் பார்ப்பதற்காக  சிறிய அளவில் இயங்கும் சினிமா சங்கங்கள் ஆங்காங்கே இருந்தன. பயங்கரவாத தலைமறைவு இயக்கங்கள் போலவே அவை ரகசியமாக இயங்கின. கிரந்த எழுத்துக்கள் தாராளமாய் புழங்கும் 'கீவ்ஸ்லோஸ்கி, தார்க்கோவ்ஸ்கி' போன்ற அந்நிய பெயர்கள் அந்த வட்டங்களின் உரையாடல்களில் இருந்து உதிர்ந்து கொண்டேயிருந்தன. குறுந்தாடி (பிரான்சு), முரட்டுக் கதர் ஜிப்பா, தடித்த பிரேம் கண்ணாடி ஆகியவை  அந்த அறிவுஜீவிகளை எளிதில் கண்டு கொள்ளும்படியாக  பொதுவான  புற அடையாளங்களாக இருந்தன. ..misconception of the plot is highly... என்று அவர்கள் தீவிரமாக உரையாடிக் கொண்டிருக்கும் போது இடையில் புகுந்தால் சிகரெட் புகையின் இடையில் தீவிரமாய் முறைக்கப்படும் போது . 'நான் கடைசியா பார்த்த இங்கிலிஷ் படம் ஷோலேங்க' என்று சொல்லி விட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடி வர வேண்டியிருக்கும். மனிதனின் காலில் இருந்து தலை ஆரம்பிக்கும் விநோதமான ஓவியங்கள் அட்டைப்படங்களாக இருக்கும் தேசலான புத்தகங்களில்....  பிரதிக்குள் பிரதி இயங்கும் அநேர்க்கோட்டு வடிவத்தின் மெட்டா சினிமாவான... என்பது போன்ற வாக்கியங்கள் முற்றுப்புள்ளி இல்லாமல் ஓடும் போது மொட்டையாக கூட நமக்கு ஏதும் புரியாது. தமிழ் சினிமாக்களை ஓரமாய் ஒதுக்கி நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து போலவே இவர்கள் அணுகுவார்கள்.. இந்த மாதிரியான திரைப்படங்களில் ஏதாவது 'மேட்டர்' தேறாதா என்று வேறு வகையான தேடல்களில் இருந்தவர்களும் இந்த ஜோதியில் கலந்திருந்தார்கள்.


-  உலக சினிமாக் குழுக்களைப் பற்றியும் அது சார்ந்து இயங்கியவர்களைப் பற்றியுமான என் அப்போதைய  மனப்பதிவு இப்படித்தான் இருந்தது.

ஓர் உலக சினிமாவைப் பார்ப்பதற்கே அல்லாடின காலம் போய் உலகமயமாக்கம்  எல்லாக் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து விட்டதில் நுட்ப வளர்ச்சிகளின் எதிரொலியாக டிவிடிகளாகவும் கணினி வழியாகவும் உலக சினிமாக்கள் இன்று வீட்டு வாசலில் வந்து கொட்டும் காலத்தில் இருக்கிறோம். இந்தியாவின் பெருநகரங்கள் எங்கும் திரைப்பட விழாக்கள் கார்ப்பரேட் அடையாளங்களுடன் கோலாகலமாய் கொண்டாடப்படுகின்றன. யானை பேண்ட் போட்டு டான்ஸ் ஆடும் இராமநாராயணன் படங்கள் பார்த்து வளர்ந்த இளைஞர்கள் .. அந்த மிட் ஷாட்ல காமிரா அப்படியே டிராவல் ஆகி.. என்று உரையாடுமளவிற்கு நுட்பங்கள் காலில் மிதிபட்டபடி இறைகின்றன. சினிமா உருவாக்கப்படும் நுட்பங்களை ஒளித்து வைத்த காலமெலலாம் மலையேறி விட்டது. behind the screen, making of the shots.. என்று டிவிடிகளின் இணைப்புகளில் காணப்படும் காட்சித் துண்டுகளின் மூலம் எல்லாமே வெட்ட வெளிச்சம். நல்லதுதான்.

என்றாலும் முதல்பாராவில் குறிப்பிடப்பட்ட குறுந்தாடி அறிவுஜீவிகளின் காலக்கட்டத்தில் சினிமா தேடலில் இருந்த அர்ப்பணிப்பும் உண்மையான ஆர்வமும் மாறி உலக சினிமா என்பது பாப்கார்ன் மாதிரி கொறிக்கும் விஷயமாக ஆகி விட்ட சமகாலத்தில் இருக்கிறோமா என்று யோசிக்க வேண்டியிருக்கிறது.

()


ஒவ்வொரு டிசம்பர் மாதமும் நிகழும் சென்னை சர்வதேச திரைப்பட விழா இந்த வருடமும் தொடர்ந்து 12வது ஆண்டாக  நடைபெற்றது. பல்வேறு நாடுகளின்  171 திரைப்படங்கள் இதில் திரையிடப்பட்டன. இந்த திரைவிழாவில், கண்களில் சினிமாக்கனவுகள் மின்ன பல இளைஞர்கள் தென்பட்டார்கள். பல லட்சம் முதலீடு செய்து பெற்ற இன்ஜினியரிங் கல்வியைக் கூட தூக்கிப் போட்டு இயக்குநராக வரத்துடிக்குமளவிற்கு சினிமாவின் மீதான மோகம் தலைவிரித்து ஆடுகிறது. அது கலைச்சேவை செய்வதின் உண்மையான தீவிர அடையாளம் என்று புரிந்து கொள்வதா அல்லது ஒரு ஜாக்பாட் அடித்தால் குறுகிய காலத்திலேயே புகழும் பணமும் கிடைக்கிற குறுக்கு வழியின் மீதான விருப்பம் என்று புரிந்து கொள்வதா என்று தெரியவில்லை.

உலக சினிமாக்கள் குறித்த ஆர்வமும் பரவலான விழிப்புணர்வும் தேடலுமான, எளிதில் கிடைக்கக்கூடியதுமான இந்த தற்போதைய நிலை, தமிழ் சினிமாவிற்கு சாதகமானதா என்று பார்த்தால் சில விஷயங்கள் சாதகமாகத்தான் இருக்கின்றன. கூடவே பாதகங்களும்.

ஒரு திரைப்படத்தை அணுகுவதில் பார்வையாளர்களிடமும் உருவாக்குவதில் இளம் இயக்குநர்களிடமும்  மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறன. தமிழ் சினிமாவின் தேய்வழக்கு காட்சிகள் இன்று பார்வையாளர்களிடம் நகைப்பை ஏற்படுத்துகின்றன.  இணையங்களில் கதறக் கதற கிண்டலடிக்கிறார்கள். உள்ளூர் சினிமாக்களை உலக சினிமாக்களோடு ஒப்பிட்டு அதிருப்தி அடைகிறார்கள்.  இந்த ரசனை மாற்றத்தை புரிந்து கொண்ட சில இயக்குநர்கள் கதை சொல்லும் உத்திகளிலும் காட்சிப்படுத்துதல்களிலும் இயன்ற அளவிற்கான வித்தியாசங்களை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் இந்த மாற்றங்கள்  குறுகிய அளவில் சொற்ப எண்ணிக்கையிலான இயக்குநர்களின் மூலமாகவே மட்டும் சாத்தியமாகின்றன. இவையும் தமிழ் சினிமாவின் வழக்கமான எல்லைக்குள்தான் பயணிக்கின்றன. உள்ளடக்கங்களில் பெரிதாக ஏதும் மாற்றமில்லை. அதற்கான சூழலும் மலரவில்லை.

எந்தவொரு காட்சியோ அல்லது கதையோ அயல் சினிமாக்களில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நகலெடுக்கப்பட்டால், முன்பு போல் குறுகிய வட்டத்தில் மட்டும் அறியப்படுவது என்றில்லாமல், இன்று உடனடியாக  அதைக் கண்டுபிடித்து இணையப்  பெருவெளியில் அம்பலப்படுத்தி விடுகிறார்கள். ஒரு படைப்பிற்காக புகழப்படும் எந்தவொரு இயக்குநரின் நிலையும் அது கண்டுபிடிக்கப்படும் வரை சாஸ்வதமாக இல்லை. இன்னொரு அபத்தமும் நிகழ்கிறது. தூண்டுதலுக்கும் நகலெடுப்பிற்கும் உள்ள வித்தியாசம் அறியாமல் தேசலான ஒற்றுமைகளைக் கொண்டே அது நகலெடுக்கப்பட்டது என்று உரக்க கூவி தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள முயலும் சில ஆர்வக்கோளாறான ஆசாமிகளும் ஒரு புறம் இருக்கத்தான் இருக்கிறார்கள்.

உலக சினிமா என்கிற பாவனையில் சில போலியான படைப்புகள் அயல்நாடுகளில் வெளிவருவதைப் போலவே தமிழ் சினிமாவில் நிகழும் இம்மாதிரியான சமகால முயற்சிகளிலும் போலிகளும் அசட்டுத்தனமான நகலெடுப்புகளும் நிகழ்கின்றன. 80-களில் பாலுமகேந்திரா, மகேந்திரன், ருத்ரய்யா போன்றவர்கள் ஐரோப்பிய பாணியிலான திரைப்படங்களின் பாதிப்பிலும்  பாணியிலும் தம்முடைய திரைப்படங்களை உருவாக்கினாலும் அவை அந்த படைப்புகளால் தூண்டப்பட்டு செரிக்கப்பட்டு உள்வாங்கி உள்ளுர் கலாசார பிரதிபலிப்புகளுடன் வெளியாகின. ஆனால் உலக சினிமாக்கள் பரவலாக காணக் கிடைக்கிற இன்றைய சூழலில் சில இளம் இயக்குநர்கள் அதிலிருந்து கதைகளை, காட்சிகளை அப்படியே நகலெடுத்து இணைக்கிறார்கள். எனவே இவை நம்முடைய கலாசார அடையாளங்களின் தொடர்பின்றி துருத்திக் கொண்டு நிற்கின்றன.

I Am Sam என்கிற ஆங்கிலப்படத்தின் கதை முதற்கொண்டு பிரதான பாத்திரத்தின் சிகையலங்காரம் வரை மோசமாக நகலெடுக்கப்பட்டு தமிழில் 'தெய்வ திருமகளாக' உருவானது. ஆங்கில திரைப்படத்தில் சாமும் அவனது நண்பர்களும் பலூன் வாங்கச் செல்லும் காட்சி, தமிழில் முன்பின் தொடர்ச்சி ஏதுமின்றி எவ்விதப் புரிதலும் இல்லாமல் அப்படியே தமிழில் நகலெடுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தில் ஓர் ஆசாமி டைட்டானிக் திரைப்படம் பின்னணியில் ஓட அத்திரைப்பட நாயகன் படமுள்ள மூகமுடியை அணிந்து கொண்டு நாயகியின் மூகமூடியணிந்த ஒரு பெண்ணுடன் சல்லாபம் செய்து கொண்டிருப்பான். இது Mask Fetishism எனும் மேற்கத்திய கலாசாரத்தின் அடிப்படையில் அமைந்த பாலியல் நுகர்விற்கான ஒரு விநோதமான தேர்வு. இது அதிகம் போனால் இந்திய காஸ்மோபாலிட்டன்  நகரங்களின் மேல்தட்டு மக்களிடம் இருக்கலாம். ஆனால் தமிழகத்தின் ஒரு சிறுநகரத்தில் உள்ள ரவுடியிடம் இது உள்ளதாக சித்தரிக்கப்படுவது கலாசார முரணாக, பொருத்தமற்றதாக உள்ளது. அயல்சினிமா டிவிடி சினிமாக்களில் பார்த்த காட்சிகளால் தூண்டப்பட்டதை அப்படியே பொருத்தமில்லாமல் பயன்படுத்துவதால் நேரும் அவல விபத்து இது.

()


இந்த சர்வதேச திரைவிழா, சிறிய அளவில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு சினிமா சங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு சினிமா ஆர்வலர்களின், நடிகர்களின், தனியார் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் இன்று பெரிய அளவில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சாத்தியத்தை வந்தடைந்திருக்கிறது. உலக சினிமாக்களை பொதுவெளியில் பரவலாக்கும் இந்த முயற்சியும் அதன் பின்னணியில் இருக்கும் நபர்களின் உழைப்பும் ஆர்வமும் பாராட்டப்பட வேண்டியது.

தமிழக அரசு இதற்கான மானியத்தை அளித்து ஒதுங்கிக் கொள்ளாமல் இந்த முழு விழாவையும் தானே ஏற்று தகுதியான நபர்களின் ஒத்துழைப்புடனும் வழிகாட்டுதல்களுடனும் திறம்பட நடத்த வேண்டும். சினிமாவை ஒரு பொழுதுபோக்கு அம்சமாக மாத்திரமே அணுகும் ஒரு மனப்பான்மை இங்கு உள்ளது. நல்ல சினிமாக்களை தொடர்ந்து பரப்புவதின் மூலம் அதை பொதுச் சமூகத்திடம் கொண்டு செல்வதின் மூலம் அறம் சார்ந்த விழுமியங்களை, அது தொடர்பான சிந்தனைகளை, செயலாக்கங்களை அந்த சமூகத்து மனிதர்களிடம் மெல்ல மெல்ல தூண்ட முடியும்.

பல்வேறு தனிநபர்களின் கூட்டு உழைப்புகளுக்குப் பிறகுதான் இது போன்ற திரைவிழாக்கள் சாத்தியமாகின்றன என்றாலும் இந்த ஏற்பாடுகளில் உள்ள சில நடைமுறை குறைகளை மாத்திரம் பணிவாக சொல்ல விரும்புகிறேன்.

உலக சினிமா என்கிற அடையாளத்துடன் வெளிவருகிற போலியான திரைப்படங்களை இனங்கண்டு அதை நிச்சயம் ஒதுக்கி விட வேண்டும். இத்தனை எண்ணிக்கையிலான திரைப்படங்கள் திரையிடப்படவிருக்கின்றன என்பதில் சாதனையோ பெருமையோ ஏதுமில்லை. மாறாக சிறந்த திரைப்படங்களையே எல்லா அரங்குகளிலும் வெவ்வேறு இடைவெளிகளில் திரையிடுவதின் மூலம் இந்த இடைவெளியை நிரப்ப முடியும். பெரும்பாலான பார்வையாளர்கள் இந்த சிறந்த திரைப்படங்களை தவற விடாமல் பார்ப்பதற்கு இந்த ஏற்பாடு உதவியாக இருக்கும். எது சிறந்த திரைப்படம், அதற்கான அளவுகோல் என்ன, யார் அதை தீர்மானிப்பது என்பதும் புறந்தள்ளி விட முடியாத கேள்விகள்தான் என்றாலும் உலக அளவில் பெரும்பான்மையாக ரசிக்கப்பட்டவை, விருதுகள் வாங்கியவை எனும் அளவுகோலை பின்பற்றலாம். உதாரணமாக ROSEVILLE  என்கிற பல்கேரிய திரைப்படம் மூன்றாந்தர ஹாரர் படம் போலவே இருந்தது என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். இது திரையிடப்படுவதற்கு முன் வேறு ஒரு திரைப்படம் தவறுதலாக திரையிடப்பட்டு  அது ஏறத்தாழ பதினைந்து நிமிடங்கள் ஓடின பிறகே படம் மாற்றப்பட்டது.

நம்மூர் அரங்குகளின் தரமே சற்று முன்னும் பின்னுமாக இருக்கும் போது அதில் திரையிடப்படவிருக்கும் பிரிண்ட்டுகளின் தரத்தையும் பார்க்க வேண்டும். கேஸினோவில் திரையிடப்பட்ட 'Now or Never' என்கிற பிரெஞ்சு திரைப்படம், சினிமா கண்டுபிடிக்கப்பட்ட போது உருவாகின திரைப்படம் போல மங்கலாக இருந்தது.

நான்கைந்து அரங்குகள் அமைந்திருக்கும் ஒரே கட்டிடத்தில் இந்த திரைவிழா நிகழ்த்தப்பட்டால், இன்னொரு அரங்கிற்கு குறுகிய நேரத்திற்குள் அடித்து பிடித்து ஓட வேண்டிய தேவையின்றி அடுத்த திரைப்படத்திற்கு சற்று சாவகாசமாக செல்ல முடியும்.

'திரைப்படம் துவங்கிய பத்து நிமிடங்களுக்குப் பிறகு அரங்கத்தின் கதவுகள் மூடப்படும்' என்று அட்டவணையில் பெயரளவில் உள்ள நிபந்தனையை கறாராக நடைமுறையாக்கலாம்.

()

இந்த திரை விழாவிற்கு வரும் பல ஆர்வமுள்ள இளைஞர்களை கவனிக்கிறேன். அவர்களின் தேடலும் ஆர்வமும் திரைப்படத்தை அணுகும் விதமும் சற்று பிரமிப்பை ஏற்படுத்தும் விதமாகத்தான் உள்ளன. ஆனால் ஒரு திரைப்படத்தை காட்சிக் கோணங்களை சிலாகிக்கும் வழியாக மாத்திரமே அணுகும் அபாரமான  ஞானமுள்ளவர்களையும் பார்க்கிறேன். திரைப்படம் என்பது வெறும் நுட்பம் மட்டுமா? அவை தரும் அனுபவங்களும் அவை நம் மனதினுள் படிய வைக்கும் சிந்தனைகளும் அவற்றின் மையங்களும்தானே பிரதானமாக அணுகப்பட வேண்டியது?

இதன் ஊடே 'ஏதாவது சீன் உள்ள படமா?' என்று இன்னொரு விதமான தேடலில் ஈடுபட்டிருக்கும் நபர்களையும் பார்க்கிறேன். 'அந்த படத்துல செம சூடாம்' என்று பரபரப்புடன் அதைப் பார்க்க முட்டி மோதுகிறார்கள். சுஜாதாவின் 'பிலிமோத்ஸவ்' என்கிற அற்புதமான சிறுகதை நினைவிற்கு வருகிறது. பாலியல் வறட்சி கொண்டிருக்கும் ஆனால் அதை பாசாங்குகளால் மூடி மறைக்கும் இச்சமூகத்தில் அதன் வடிகாலாலுக்கான சில விஷயங்களை பெரிய குற்றமாக கருத முடியாதுதான்.  ஆனால் மூன்றாந்தர மலையாளப் படங்களே அரைகுறையான  பாலியல் காட்சிகளை பார்ப்பதற்கான ஒரே வழி என்று இருந்திருந்த காலக்கட்டத்தில் வேண்டுமானாலும், சென்சார் செய்யப்படாத படங்களின் காட்சிகளைப் பார்க்க அலைமோதுவதற்கு ஒரு நியாயமான காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் பளிங்கு போன்ற பார்ன் வீடியோக்கள் இன்று சல்லிசான விலையில் கிடைக்கும் காலக்கட்டத்திலும் அந்த மாதிரியான காட்சிகளுக்காக அயல் திரைப்படங்களை நாடுவதும் பின்பு அதிருப்தியோடு எழுந்து சென்று சக பார்வையாளர்களை இடையுறு செய்வதும் நிச்சயம் முறையானதல்ல. பாலியல் காட்சிகளைப் பார்ப்பதற்காக ஒருவன் இது போன்ற திரைவிழாக்களை நாடுவான் எனில் அது போன்ற அபத்தமானதொன்று இருக்கவே முடியாது. திரைக்கதையின் அடிப்படையில் பாலியல் காட்சிகள் கொண்ட ஒரு சிறந்த திரைப்படத்தைக் கூட 'பிட்டு படமாக' பார்க்கும் குறுகலான, முதிர்ச்சியற்ற மனப்பான்மைக்கே அந்த மனோபாவம் இட்டுச் செல்லும்.

()


இந்த திரைவிழாவில் நான் முக்கியமாக அறிந்து கொண்ட நடைமுறை அனுபவம், அரங்கத்தின் கதவு அமைந்திருக்கும் அருகிலுள்ள இருக்கைகளில் அமரக்கூடாது என்பது. கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி தமிழ் என்றெல்லாம் அதன் தொன்மத்தை சிலாகிக்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் நாகரிகம் உருவாகி விட்ட வரலாற்றுக் கதைகளை பெருமையுடன் வாசிக்கிறோம். 'வரலாறு முக்கியம் அமைச்சரே' என்கிற பாணியில் உருவான புனைவுகளா அவை என்று எண்ணத் தோன்றுகிறது. அது உண்மையெனில் அதன் தொடர்ச்சி எங்கே, எதனால் அறுந்து போனது? இன்னமும் கூட பொதுவெளியில் புழங்கத் தெரியாத, மற்றவர்களுக்கு இடையூறு செய்யத் தெரியாத, நாகரிகம் பழகாத, நுண்ணுணர்வுகள் மழுங்கிப் போன சமுதாயமாக நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோமா என்று கவலையாக இருக்கிறது. அதன் உதாரணங்களை இது போன்ற பொது நிகழ்வுகளில் பார்க்கிறேன்.

ஒரு திரைப்படம் எத்தனை மணிக்கு துவங்கும் என்பது திரைவிழா பார்வையாளர்களுக்கு முன்பே அச்சிடப்பட்ட அட்டையின் மூலம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏறக்குறைய எல்லோருமே அதை வைத்திருக்கிறார்கள். ஆனால் படம் துவங்கி அரைமணி நேரம் வரை சிறிது சிறிதாக ஏறத்தாழ நூறு நபர்களாவது கதவைத் திறந்து உள்ளே நுழைந்து கொண்டேயிருக்கிறார்கள். சிலர் வெளியேறிக் கொண்டேயிருக்கிறார்கள். படம் பார்க்கும் மற்றவர்களுக்கு இடையூறு செய்கிறோமே என்கிற உணர்வு சிறிது கூட இருப்பதாக தெரியவில்லை. கைபேசியில் 'எங்க இருக்கே.. அங்க சீட் இருக்கா?" என்று ஏதோ சொந்த வீட்டில் நுழைவது போல உரத்த குரலில் பேசிக் கொண்டே நுழைகிறார்கள். போக்குவரத்து உள்ளிட்ட இன்ன பிற நடைமுறைக் காரணங்களுக்காக வேறு வழியில்லாமல் தாமதமாக நுழைபவர்களை கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வெளியே தேநீர்க்கடைகளில் அரட்டை அடித்து விட்டு தாமதமாக நுழைவதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கும் நபர்கள்தான் இப்படி எரிச்சலூட்டுகிறார்கள். ஒரு கலையை இத்தனை அலட்சியமாக அணுகுகிற  அந்த மனோபாவம்தான் கவலையை அளிக்கிறது. இன்னும் சிலர் படத்தின் இடையிலேயே மற்றவர்களைப் பற்றி ஒரு கவலையுமின்றி உரத்த குரலில் உரையாடுகிறார்கள். நம்முடைய ஆட்பேசத்தை தெரிவித்தால் முறைத்து விட்டு உரையாடலைத் தொடர்கிறார்கள்.

நன்றாக கவனியுங்கள். நான் குறை சொல்லிப் புலம்புவது ஏதோ ரஜினி திரைப்படத்தின் முதல் நாள் வெளியீட்டில் 'ஒரே கூச்சலாக இருக்கிறதே' என்று கூட அல்ல. அந்த அளவிற்கெல்லாம் கூட நான் எதிர்பார்க்கவில்லை. நல்ல கலைப்படைப்புகளை தேடி வருகிறவர்களுக்கு சில பொது குணாதிசயங்களும் மனோபாவமும் ரசனையும் உருவாகி இருக்கும். அதில் நுகர்வதில் ஏற்படும் இடையூறுகள் ஒருவருக்கு எந்த அளவிற்கான மனத் தொந்தரவுகளை அளிக்கும் என்பதை உணர்ந்திருப்பார்கள். ஆனால் அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டு இப்படி அநாகரிகமாக நடந்து கொள்வது எப்படி என்பதுதான் புரியவில்லை. ஒரு நிகழ்ச்சிக்கு தாமதமாக வருவதுதான் பெருமை என்பது எப்படியோ நமக்குள் படிந்திருக்கிறது.  நம்முடைய குடிமையுணர்விலும் கலாசார வழக்கங்களிலும் எத்தனை பலவீனமாக இருக்கிறோம் என்பதையே இவையெல்லாம் சுட்டிக் காட்டுகின்றன. ஐரோப்பிய நாகரிகங்களை நாமும் பின்பற்ற வேண்டுமா? அவைதான் உயர்வானதா என்று விவாதித்து தங்களின் தவறுகளை நியாயப்படுத்த சிலர் முயலலாம். நல்ல பண்புகள் எந்தவொரு சமூகத்தில் இருந்தாலும் அதை நாமும் நகலெடுப்பதில் பின்பற்றுவதில் தவறில்லை. அதனால் எல்லாம் நம்முடைய அடையாளங்களை இழந்து விடுவோம் என்கிற தாழ்வுணர்வுகள் தேவையில்லை. அவை நம் சமூகம் இன்னமும் மேன்மையை அடையவே உதவும்.

உலக சினிமாக்களை பார்த்து விட்டோம் என்று அசட்டுத்தனமாக வெற்றுப் பெருமையுணர்வு கொள்வதில் ஏதும் உபயோகமில்லை. அவை நம் அகத்தில் ஏற்படுத்தும் அனுபவங்களும் மாற்றங்களும்தான் முக்கியமானவை. ஒருவகையில் இது போன்ற சினிமாக்கள் உருவாக்கப்படும் நோக்கமும் இதுதான்.

காட்சிப்பிழை, ஜனவரி 2015 இதழில் பிரசுரமானது - நன்றி காட்சிப்பிழை

suresh kannan

No comments: