Saturday, December 17, 2005

கால்கள் இல்லாத கஸ்தூரி மான்

எப்பவோ பார்த்த படத்திற்கு மிக தாமதமாய் விமர்சனம். பரவாயில்லை, இந்தப் படத்தை நீங்கள் பார்க்காமலிருப்பதனால் ஒன்றையும் இழந்து விடவில்லை. வித்தியாசமான கதை மற்றும் களம் என்று எந்த எழவுமில்லை. நாயகனுக்காக தன்னையே மெழுகுவர்த்தி போல் (மன்னிக்கவும், நவீன உவமை எதுவும் கிடைக்கவில்லை) தியாகம் செய்யும் நாயகியின் கதை.

இந்தப் படத்தின் இயக்குநர் லோகிதாஸ் மலையாளத்தில் பிரபல திரைப்பட இயக்குநராக இருந்தாலும், நான் இதுவரை பார்த்திருக்கிற பெரும்பாலான மலையாளப் படங்கள் எல்லாம் குறிப்பிட்ட சில "ஐந்து நிமிட" காட்சிகளுக்காக மட்டும் என்பதால் இவரைப் பற்றி அறிந்திருக்கவிலலை. என்றாலும் இவரைப் பற்றி நான் சமீபத்தில் பத்திரிகைகள் மூலம் அறிய நேர்ந்தது "மீரா ஜாஸ்மீனுடன் கசமுசா" என்பது போன்ற மலிவான செய்தியின் மூலமாக என்பதால் அத்தனை சிலாக்கியமாக இல்லை. 'நம்மூர் பாலச்சந்தர் போல்' என்று ஒரு பேட்டியில் இந்தப்படத்தின் நாயகன் பிரசன்னா சொன்னார். இந்தப்படத்தை பார்க்க என்னை தூண்டியது, இவர் தமிழ்த்திரைக்கு முதன்முதலாக வந்தது என்கிற செய்தி என்றாலும், உபரி காரணங்கள், ஜெயமோகன் வசனம் எழுதுகிறார் என்பதும், 'செம டாப்பா இருக்கு' என்கிற பத்திரிகைகளின் அதிசயமான அதீதமான விமர்சனங்களும்தான்.

()

ஒரு காலத்தில் வெற்றி பெற்ற சினிமாப்பட தயாரிப்பாளராக இருந்து இப்போது நொடித்துப் போய் தன்னுடைய செல்வ வாழ்க்கையின் அந்திமக்காலத்தில் இருக்கும் சரத்பாபுவின் மகன் பிரசன்னா பொறுப்பான நல்ல பிள்ளை; படிப்பில் தீவிர கவனம் செலுத்துபவன்; தன் சம்பாத்தியத்தின் மூலம் குடும்பத்தின் இழந்து போன பெருமையை மீட்க நினைப்பவன். இவன் படிக்கும் கல்லூரியிலேயே படிக்கும் மீராஜாஸ்மின் ஒரு பயங்கர கலாட்டா பேர்வழி. இருவருக்கும் அடிக்கடி மோதல். கதையின் சிறு திருப்பமாக, பின்னர்தான் பிரசன்னாவிற்கு தெரியவருகிறது, மீரா ஜாஸ்மினுக்கு பின்னால் உள்ள சோகம். அவர் ஓர் ஏழை என்பதும், குடும்பச் செலவுகளை சமாளிக்க நோயாளிகளை கவனித்துக் கொள்ளும் பகுதி நேர நர்சாக வேலை பார்த்துக் கொண்டே கல்லூரியில் படிக்கிறார் என்பது. மேலும் அவருடைய அக்கா கணவரின் பாலியல் நோக்கத்துடனான அத்துமீறல்கள் வேறு.

வறுமை காரணமாக படிப்பைத் தொடர சிரமப்படும் பிரசன்னாவிற்கு, மீரா ஜாஸ்மின் தன்னுடைய சிரமங்கங்களுக்கிடையில் உதவி படிப்பை தொடர உதவுகிறார். இதன் காரணமாக இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. தன் படிப்பு முடிந்ததும் மீராவை திருமணம் செய்து கொள்வதாக உறுதி கூறுகிறான் பிரசன்னா. அதன் படியே இருவரும் இணைந்தார்களா என்பதை கொஞ்சம் ரத்தம் சிந்தும் கிளைமாக்சுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

()

மோகன், முரளி போன்ற மென்மையான நாயகர்களின் காலியிடத்தை கச்சிதமாக இட்டு நிரப்புதற்கேற்றவாறு இருக்கிறார் பிரசன்னா. திறமையான இயக்குநர்களிடம் மாட்டினால் சிறப்பாக தன் பணியை வெளிப்படுத்துவது போல் எந்த வித இமேஜீம் இல்லாமல் புத்தம்புது களிமண்ணாக, Blank-ஆக இருக்கிறார். (இயக்குநர் சுசி கணேசன் தனது 'பைவ் ஸ்டார்' படத்திற்காக புதுமுகங்களை தேடி விஜய் டி.வி யில் நேர்முகத் தேர்வு நடத்திய போது அதில் கலந்து கொண்ட பிரசன்னாவை பார்த்த போதே "இந்தப் பையன் நிச்சயம் தேர்வு செய்யப்படுவான்" என்று எனக்கு தோன்றியது).

பொதுவான கதாநாயகிகளின் வாட்டசாட்ட தோற்றத்திலிருந்து விலகி, சோளக்கொல்லை பொம்மை போலிருக்கும் மீரா ஜாஸ்மின் தனது நடிப்புத் திறமையால் பல இடங்களில் நம்மை வியக்கவும் திகைக்கவும் வைக்கிறார், குறிப்பாக அந்த கிளைமாக்ஸ் காட்சியில். நூல்நிலையத்தில் பிரசன்னாவை கலாட்டா செய்யும் போதும், "நம் பண்பாட்டிற்கேற்றவாறு உடையணிந்து வாயேன்" என்று கண்டிக்கும் கல்லூரி முதல்வரின் உத்தரவையேற்று, கொசுவம் வைத்து கட்டிய கண்டாங்கி சேலையும், தலை நிறைய பூவும், வாய் நிறைய வெற்றிலையுமாய் வந்து நக்கல் செய்யும் போதும் நம்மை குதூகலிக்க வைக்கிறார்.

என்றாலும் இதில் சிறப்பான, யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர்களாக இருவரை மட்டுமே சொல்வேன். ஒருவர், மீரா ஜாஸ்மினின் சகோதரியின் கணவரின் தாயாராக வரும் ஒரு கிழவி. சற்றே அருவருப்பான தோற்றத்துடன் அதை விட அருவருப்பான பாஷையும் பாவனையுமென ஏதாவது ஒரு சேரியில் நாம் நிச்சயம் சந்திக்க சாத்தியக்கூறுகள் அதிகமிருக்கிற ஒரு கிழவியை பிரதிபலித்திருக்கிறார். (ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவலின் ஆரம்பக்கட்டத்தில் அறிமுகமாகும் ஒரு கதாபாத்திரத்தையே இந்தக் கிழவி பாத்திரம் நினைவுபடுத்தியது). இன்னொன்று கிரைம் பிராஞ்ச் கான்ஸ்டபிளாக 'நடையடி நாகராஜன்' என்கிற பட்டப் பெயருடன் வரும், மேற்சொன்ன கிழவியின் மகன். (இவர் மலையாள நடிகர் திலகனின் மகனாமே!) மலையாள நடிகர் என்றாலும் அதற்குரிய உடலசைவுகளோ, பாஷை உச்சரிப்போ இல்லாமல், வழக்கமாக மலையாள நடிகர்கள் தமிழிற்கு வரும் போது வெளிப்படும் அசெளகரியங்களை இவரிடம் பார்க்க முடியாத அளவிற்கு அற்புதமான நடிப்பை தந்திருக்கிறார்.

()

இளையராஜா இந்தப் படத்திற்கு தன்னுடைய இடது கையினால் இசையமைத்திருப்பார் போலிருக்கிறது அல்லது இந்தப் படத்திற்கு இவ்வளவு போதும் என்று கூட நினைத்திருக்கலாம். பாடல்களும் பின்னணி இசையையும் எங்கோ கேட்ட மாதிரியே இருந்தது. ஒரு படத்தின் வசனகர்த்தா எந்த இடத்திலும் தன் தலையை தூக்கி எட்டிப்பார்க்காமல் கதாபாத்திரங்களை இயல்பாக பேசவிடுவது நல்லது. ஜெயமோகன் இதை சரியாக புரிந்து கொண்டு செயல்பட்டிருந்தாலும் "ஐஸ்கட்டி மேல சாயம் பூச டிரை பண்ணாத தம்பி" "வாழைத்தண்டும் யானைத்தந்தமும் பாக்க ஒரேமாதிரிதான் இருக்கும்" போன்ற இடங்களில் சற்று சறுக்கியிருக்கிறார்.

படங்களின் முக்கியமான குறை காட்சிகளின் மற்றும் குணாசியங்களின் நம்பகத்தன்மையின்மை. ஒரு முட்டை வாங்கக் கூட வசதியில்லாமற் காட்டப்படும் பிரசன்னாவின் குடும்பத்தின் வீட்டின் உள்அமைப்பு ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சற்றும் குறைவில்லாமல் காட்டப்படுகிறது. புதிது, புதிதான சட்டை அணிந்து வரும் பிரசன்னா ஊசிப்போன சாப்பாட்டை மதியத்திற்கு எடுத்துவருவதாக சொல்லப்படும் போது சிரிக்கத்தான் தோன்றுகிறது. இப்படியானப்பட்ட இவர்கள் ஏதோ ஒரு கிராமத்து ஓட்டு வீட்டில் தங்கியிருக்கும் மீரா ஜாஸ்மின் நர்சாக வேலை செய்து தரும் பணத்தை படிப்பு செலவிற்கு வாங்கிக் கொள்வார்களாம். இந்த மாதிரியான யதார்த்தமின்மையாக சித்தரிக்கப்படும் காட்சிகளால் நம்மால் படத்துடன் ஒன்றிப் பார்க்க இயலவில்லை.

()

மலையாள இயக்குநர்கள் தமிழில் படம் செய்யும் போது அவர்களையும் அறியாமல் மலையாள நேட்டிவிட்டி, காட்சிகளிலும் மொழி உச்சரிப்புகளிலும் காட்சி நடைபெறும் களங்களிலும் வந்துவிடும். பாசில், பிரியதர்ஷன், சித்திக், வினயன் என்று ஒரு பட்டியலே உண்டு. லோகிதாஸீம் இதற்கு விதிவிலக்கில்லாமல் இது தமிழ்ப்படமா அல்லது மலையாள படமா என்கிற குழப்பத்தை ஏற்படுகிறார். நவநாகரிமாக காட்டப்படும் கல்லூரி இருக்கும் இடமும் கிராமத்தை நினைவுபடுத்தும் மீராவின் வீடும் முரணாக இருக்கிறது. ஆனால் ஒன்று... நம் தமிழ்ப்பட இயக்குநர்க¨ளைப் போலவே கல்லூரி காட்சிகளை வகுப்பறையில் காண்பிக்காமலிருந்து அவர்களுடன் ஒத்துப் போகிறார்.

சிறப்பாக துள்ளியிருக்க வேண்டிய இந்த கஸ்தூரி மான் இவ்வாறான குறைகளினால் சுகந்தமே இல்லாமல் ஓட முடியாமல் முலையில் அமர்ந்து பரிதாபமாய் விழிக்கிறது.

2 comments:

Anonymous said...

̨Ȩ§ ÍðÊì ¸¡ðÊ þÕì¸¢È ¿£í¸û ¿¢¨È¸¨ÇÔõ ¾¡Ã¡ÇÁ¡¸ À¡Ã¡ðÊ¢Õì¸Ä¡§Á?

= À¡Ä¡ƒ¢

பிச்சைப்பாத்திரம் said...

test comment.