Tuesday, May 19, 2020

Enclave (2015) - 'ஆலய மணியும் ஒரு மணிப்பயலும்'






இனம், மதம் போன்ற காரணங்களால் பெரியவர்களுக்குள் உற்பத்தியாகும் பகைமையும் வன்மமும் சிறுவர்களின் உலகை எவ்வாறு பாதிக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக விவரித்திருக்கும் செர்பிய திரைப்படம் இது.

**

Nenad பத்து வயது சிறுவன். அவன் வசிக்கும் கிராமத்தைச் சுற்றிலும்  அல்பேனியர்கள்தான் இருக்கிறார்கள். அங்கிருந்து இடம் பெயராமல் பிடிவாதமாக இருக்கும் ஒரே செர்பிய குடும்பம் இவனுடையது மட்டுமே. அல்பேனியர்களுக்கும் செர்பியர்களுக்கும் ஆகாது. கடுமையான வரலாற்றுப் பகை. தீயின் நடுவில் மாட்டிய கற்பூரத் துண்டு போன்ற நிலைமை இவனுடைய குடும்பத்திற்கு.

சிறுவனுக்கு விளையாட்டுத் தோழர்கள் எவருமில்லை. கண்டிப்பான தகப்பனும் நோய்வாய்ப்பட்டிருக்கும் தாத்தாவும் மட்டுமே. பாதுகாப்பிற்காக நிற்கும் ராணுவத்தின் பீரங்கிக்குள் ஒடுங்கி அமர்ந்து பள்ளிக்கு போய் விட்டு வருவான். வழியில் அல்பேனியச் சிறுவர்கள் பீரங்கியின் மீது உற்சாகமாக கல்லெறிவார்கள். தன் கூட வரும் பாதிரியாரிடம் விளையாடிக் கொண்டு வருவது மட்டுமே இவனுக்கு ஆறுதல்.

இவன் ஒருவனுக்காக நடத்தப்படும் பள்ளியில், ஆசிரியருக்கு வேறு இடத்தில் பணி கிடைத்துவிட கல்வி கற்கும் வாய்ப்பையும் இழக்கிறான். வீட்டிற்குள் ஆறுதலாக இருந்த தாத்தாவும் ஒரு நாள் மரணடைந்து விடுகிறார்.

**

“நீ போய் பாதிரியாரை கூட்டிக் கொண்டு வா” என்று சிறுவனை அனுப்புகிறார் தந்தை. பாதிரியாரைக் கண்டுபிடிக்க முடியாமல் அவன் திகைத்து நிற்கும் போது அல்பேனிய சிறுவர்கள் வழிமறிக்கிறார்கள். விளையாட வரச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.

அதில் ஒரு சிறுவனிடம் துப்பாக்கி இருக்கிறது. அவனிற்கு செர்பியர்களைக் கண்டாலே பிடிக்காது. அவனுடைய தந்தையின் மரணத்திற்கு செர்பியர்கள்தான் காரணம் என நம்புகிறான். Nenad பீரங்கிக்குள் பள்ளி சென்று வரும் போதெல்லாம் எரிச்சலுடன் பார்ப்பது இவனுடைய வழக்கம்.

விளையாடிக் கொண்டிருக்கும் சமயத்தில் இவர்களுக்குள் தகராறு வந்து விடுகிறது. துப்பாக்கி வைத்திருக்கும் சிறுவன், Nenad-ஐ அதிகாரத்துடன் மன்னிப்பு கேட்கச் சொல்கிறான். துப்பாக்கியைக் காட்டி மிரட்டுகிறான்.

**

இவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் இடத்தின் அருகே ஒரு பெரிய ஆலய மணி இருக்கிறது. செர்பிய பாதிரியார் அதை வரவழைத்திருக்கிறார். இன்னமும் சரியாக பொருத்தப்படாமல் இருக்கும் மணி அது.

துப்பாக்கிச் சிறுவன், Nenad-ஐ அந்த மணிக்குள் ஒளிந்து கொண்டு மீண்டும் விளையாட்டை துவங்கச் சொல்லி வற்புறுத்துகிறான். அவனோ ‘தந்தை தேடுவார், வீட்டிற்குப் போக வேண்டும்’ என்கிறான். ஆலய மணியின் மீது கோபத்துடன் சுடுகிறான் துப்பாக்கிப் பையன். கூட இருப்பவர்கள் பயந்து ஓடி விடுகிறார்கள்.

நாலைந்து முறை சுடுவதில், கட்டப்பட்டிருக்கும் கயிறு அவிழ்ந்து மணி கீழே விழுந்து Nenad-ஐ அப்படியே மூடிக் கொள்கிறது. உள்ளே மாட்டிக் கொள்கிறான் அவன். மணியின் மீது பட்டுத் தெறிக்கும் தோட்டாவென்று துப்பாக்கி சிறுவனின் காலில் பட்டு காயத்தை ஏற்படுத்துகிறது.

**

காலில் காயத்துடன் சாலையில் விழுந்திருக்கும் துப்பாக்கி சிறுவனை பாதிரியார் தூக்கிச் சென்று வீட்டில் ஒப்படைக்கிறார். ‘யார் உன்னைச் சுட்டது?” என்று குடும்பத்தார் ஆத்திரத்துடன் கேட்கிறார்கள். தயங்கும் சிறுவன், “ஒரு செர்பியன்” என்று கூறி விடுகிறான். மணிக்குள் மாட்டிக் கொண்ட Nenad பற்றி அவன் மூச்சு கூட விடுவதில்லை.

கோபத்துடன் கிளம்பும் அவர்கள், செர்பியர்களின் கல்லறைகளை அடித்து நாசம் செய்கிறார்கள். மணியைச் சுற்றி இருக்கும் மரச்சட்டங்களில் தீயை வைத்து விடுகிறார்கள். எரியும் தீயின் நடுவில் ஆலய மணிக்குள் அப்படியே கிடக்கிறான் Nenad.

வீட்டில் ஆயுதம் வைத்திருந்த காரணத்திற்காக Nenad-ன் தந்தையை காவல்துறை கைது செய்து கொண்டு போய் விடுகிறது. ஊரிலிருந்து வந்திருக்கும் அவனுடைய சகோதரிதான் கிழவரின் பிணத்தை அடக்கம் செய்கிறாள். எனவே Nenad காணாமல் போயிருக்கும் விஷயம் எவருக்கும் தெரிவதில்லை. பீரங்கி வண்டியின் இடுக்கிற்குள் வெளியுலகத்தைப் பார்ப்பது போலவே, மணியின் சிறிய இடைவெளியில் தெரியும் வெளிச்சத்தைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறான் Nenad.

**

மறுநாள் பொழுது விடிகிறது.

காவல்துறையினரிடமிருந்து விடுபட்ட சிறுவனின் தந்தை, ஊருக்குள் வந்தவுடன் அவனை எங்கெல்லாமோ தேடுகிறார். அவருடைய கூப்பாடு துப்பாக்கிச் சிறுவனுக்கு கேட்கிறது. மனதிற்குள் சங்கடமடைகிறான் அவன்.

மகனைக் காணாமல் தவிக்கும் தந்தையை ராணுவ பீரங்கி வழிமறிக்கிறது. ‘இதற்கு மேலும் இங்கு இருப்பது பாதுகாப்பானது அல்ல’ என்று வலுக்கட்டாயமாக அவரை அழைத்துச் சென்று விடுகிறார்கள்.

பீரங்கி வண்டி மெல்ல மறைவதை துப்பாக்கி சிறுவன் பார்த்துக் கொண்டேயிருக்கிறான்.

**

அத்தனை பெரிய மணிக்குள் இரவெல்லாம் சிக்கித் தவிக்கும் Nenad என்னவானான்? பிழைத்துக் கொண்டானா?

ஆம். இதை முன்பின்னான காட்சிகளில் காட்டுகிறார் இயக்குநர். தாத்தாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் Nenad, பிறகு செர்பிய தலைநகரான பெல்கிரேடிற்கு இடம் பெயர்கிறான். புதிய பள்ளி, புதிய நண்பர்கள்.

‘அங்கிருக்கும் மாணவர்கள் எப்படி வேண்டுமானாலும் பழகலாம். பார்த்து நடந்து கொள்’ என்று அறிவுறுத்துகிறார் தந்தை. புதிய மாணவனைப் பற்றி ஆசிரியர் விசாரிக்கிறார். தான் முன்னர் இருந்த ஊரின் பெயரைச் சொல்கிறான் Nenad. அவனை அல்பேனியன் என்று நினைத்துக் கொண்டு ஏளனமாக சிரிக்கிறார்கள்.

**

‘உன்னுடைய சிறந்த நண்பன் யார்?’ என்கிற தலைப்பில் பாடம் நடத்துகிறார் ஆசிரியர். தன்னைக் காப்பாற்றிய துப்பாக்கி சிறுவனை நினைத்துக் கொள்கிறான் Nenad. மணிக்குள் இருந்து அவன் விடுபடும் நெகிழ்வான காட்சிகள் காட்டப்படுகின்றன.

அல்பேனியர்களின் கிராமத்தில் ‘செர்பிய’ அடையாளத்துடன் தவித்த Nenad, இடம்பெயர்ந்த போது அல்பேனியன் என்கிற தவறான அடையாளத்துடன் ஏளனப்படுத்தப்படும் போது அதை அமைதியாக ஏற்றுக் கொள்கிறான்.

மத, இன அடையாளம் முக்கியமல்ல, மனிதர்களும் நட்பும்தான் முக்கியம் என்கிற செய்தியை Nenad=ன் அமைதியான முகம் வெளிப்படுத்துகிறது.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: