Wednesday, July 15, 2020

Get Out (2017) - ‘வெள்ளை பூதம்'





இதுவொரு அட்டகாசமான திகில் படம். எளிய காட்சிகளை வைத்துக் கொண்டு பயங்கரமாக மிரட்டியிருக்கிறார்கள். திகில் படம்தான் என்றாலும் நீண்ட காலமாக வெள்ளையர்களின் நிறவெறியை எதிர்கொள்ளும் கருப்பின மக்களின் உளவியல் சார்ந்த அச்சத்தை அடிநாதமாக கொண்டிருக்கிறது.

**

கருப்பின இளைஞன் ஒருவன் கடத்தப்படுவதோடு துவங்குகிறது திரைப்படம். கிறிஸ் ஒரு புகைப்படக் கலைஞன்.. அவனுடைய காதலி ரோஸ். வெள்ளை இனப்பெண். கிறிஸ்ஸின் மீது  அன்பை பொழிகிறாள் ரோஸ். நான்கு மாதத்திற்குள்ளாகவே இவர்களின் காதல் டாப் கியரில் பறக்கிறது. விடுமுறைக் காலத்தில் தன்னுடைய வீட்டிற்கு கிறிஸ்ஸை அழைத்து செல்கிறாள் ரோஸ்.

'கருப்பினத்தைச் சேர்ந்த என்னை உன்னுடைய பெற்றோர்  ஒப்புக் கொள்வார்களா?' என கேட்கிறான் கிறிஸ். 'எங்கள் குடும்பம் முற்போக்கானது. என் வீட்டை வந்து பார். உனக்கே புரியும்" என்கிறாள். உற்சாகமாக கிளம்புகிறார்கள். கிறிஸ்ஸின் நண்பன் "மச்சான், எதுக்குடா இந்த வம்பெல்லாம்?" என்று தொலைபேசியில் மெலிதாக எச்சரிக்கிறான்.

அவர்கள் செல்லும் வாகனத்தின் மீது ஒரு மான் வந்து விழுந்து செத்துப் போகிறது. காரை ஓட்டியது ரோஸ். என்றாலும் காவலர் கிறிஸ்ஸை சந்தேகத்துடன் விசாரிக்கிறார். அவர் வெள்ளையினத்தைச் சேர்ந்தவர் என்பதை சொல்லத் தேவையில்லை. "எதற்கு தேவையில்லாமல் அவரை கேள்வி கேட்கிறீர்கள்?" என்று காவலரிடம் கோபப்படுகிறாள் ரோஸ். அவள் தன் மீது கொண்டிருக்கும் அன்பை நினைத்து நெகிழ்ந்து போகிறான் கிறிஸ்..

ரோஸின் வீட்டுக்குள் கார் நுழைகிறது. பிறகு துவங்குகிறது அந்த விபரீதம்.


விநோதமாக நடந்து கொள்ளும் அந்த வீட்டின் நபர்களின் செய்கைகளால் கிறிஸ் அசெளகரியமாக உணர்கிறான். அங்கு பணிபுரியும் இரண்டு கருப்பின நபர்கள் இவனை பூடகமாக வெறித்துப் பார்க்கிறார்கள். ரோஸின் பெற்றோர் இயல்பாகப் பேசினாலும் அடியில் ஏதோவொரு குழப்பம் இருப்பதை உணர்கிறான் கிறிஸ். ரோஸின் சகோதரன் "ஏய்.. சண்டைக்கு வரியா?" என்கிறான். அது விளையாட்டா, வினையா என்பது கூட புரிவதில்லை. பாதுகாப்பற்ற உணர்வை அடைந்தாலும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறான் கிறிஸ்.

அன்றிரவு கிறிஸ்ஸூக்கு பயங்கரமான கனவு வருகிறது. ரோஸின் தாயார் உளவியல் மருத்துவர். அவரின் மூலம் தான் மனோவசியப்படுத்தப்பட்டதாகவும் எங்கோ பாதாளத்தின் ஆழத்தில் சிறைப்படுவதாகவுமான கனவு. அலறியடித்துக் கொண்டு எழுகிறான். ஆனால் கனவு அல்ல, உண்மை என்பது போலவும் தோன்றுகிறது. தன்னுடைய குழப்பங்களை ரோஸிடம் சொல்கிறான்.

அந்த வீட்டில் தாத்தாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நிகழ்கிறது. ரோஸின் உறவினர்கள் வருகிறார்கள். வெள்ளைக்காரர்கள். அவர்கள் தம்மிடம் நடந்து கொள்ளும் விசித்திரமான முறையால் மேலும் குழம்புகிறான் கிறிஸ். அந்தக் கூட்டத்தில் ஒரு வெள்ளைக்கார பெண்மணி, கருப்பின இளைஞனை திருமணம் செய்திருக்கிறாள். அறிமுகமேயில்லாத அவனை எங்கோ பார்த்த நினைவு வருகிறது. தற்செயலாக அவனைப் புகைப்படம் எடுக்கும் போது அவன் திடீரென்று கிறிஸ்ஸின் மீது பாய்ந்து தாக்க முயல்கிறான். ரோஸின் தாய் அவனை நிதானப்படுத்துகிறாள்.

இந்த வீட்டில் நிகழும் விபரீதமான சம்பவங்களையெல்லாம் தம் நண்பனிடம் சொல்கிறான் கிறிஸ். 'மச்சான். அப்பவே சொன்னேன்ல. எனக்கென்னமோ சரியாப்படல. நீ அங்க இருக்காதே. உடனே கிளம்பு" என எச்சரிக்கிறான்.

குழப்பத்தின் உச்சிக்கே செல்லும் கிறிஸ் கிளம்ப முடிவு செய்கிறான். ரோஸின் பெட்டியினுள் உள்ள ஒரு விஷயத்தைப் பார்க்கும் போது அதிர்ச்சி கூடுகிறது. ரோஸ் கருப்பின இளைஞர்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வரிசையாக இருக்கின்றன.

இனியும் இங்கு இருக்கக்கூடாது என அவசரமாக கிளம்பும் கிறிஸ்ஸை, ரோஸின் குடும்பம் தாக்கி மயங்க வைக்கிறது. ஓர் அறையில் கட்டி வைக்கப்படுகிறான். ரோஸின் தாய் மனோவசியம் மூலம் அவனைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கிறாள். கிறிஸ் கண்விழிக்கும் போதெல்லாம் எதிரேயுள்ள தொலைக்காட்சியில் விபரீதமான செய்திகள் சொல்லப்படுகின்றன.

கருப்பின இளைஞர்களை ரோஸ் மூலம் கடத்தி வந்து அவர்களின் உடல் உறுப்புகளை அறுவைச் சிகிச்சையின் மூலம் பொருத்திக் கொள்வதை அந்தக் கூட்டம் பல வருடமாக செய்கிறது. அதற்காகவே தான் சிறைப்பட்டிருக்கிறோம் என்பது கிறிஸ்ஸூக்கு புரிகிறது.

அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள். தனக்கு வாய்ப்பு கிடைக்கும் சந்தர்ப்பத்தில் ரோஸின் சகோதரனைத் தாக்குகிறான் கிறிஸ். இப்படி அந்தக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் தாக்குகிறான். இறுதியில் ரோஸ். அவளிடமிருந்து தப்புவதற்குள் இன்னமும் விபரீதமான சம்பவங்கள் நடக்கின்றன.

இறுதியில் தன் நண்பனிடம் மூலம் காப்பாற்றப்படுகிறான் கிறிஸ்.



***


கிறிஸ் ஆக நடித்த Daniel Kaluuya -ன் நடிப்பு அற்புதம். மனோவசியம் செய்யப்படும் காட்சிகளில், தன்னுடைய தாயின் மரணத்தை நினைவுகூர்ந்து கதறி அழுவதும் எங்கோ ஆழத்தில் விழுவதுமான காட்சிகள் அபாரம். அடுப்பில் வைக்கப்பட்ட நீர் போல இதன் திரைக்கதை மெல்ல மெல்ல சூடேறிக் கொண்டே சென்று இறுதியில் வெடிக்கிறது. நாமும் கிறிஸ்ஸின் பதட்டத்தை முழுவதுமாக அடைகிறோம் என்பதே இதன் வெற்றி.

தான் இயக்கிய முதல் திரைப்படத்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குநர் Jordan Peele. கருப்பின இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. நாகரிக வளர்ச்சி எத்தனை முன்னேறினாலும் நிறவெறியின் ஆதிக்கமும் அச்சமும் அந்தந்த தரப்பு மனிதர்களின் ஆழ்மனதில் உறைந்திருக்கிறது என்கிற செய்தியை அற்புதமாக பதிவு செய்கிறது இந்த திரைப்படம்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)


suresh kannan

No comments: