Wednesday, July 29, 2020

After the Storm (2017) - ‘புயலுக்குப் பின்னால்'




மெதுவாக நகரும் நீரில் மிதந்து செல்லும் பூவைப் போன்ற சாவகாசமான, இயல்பான திரைக்கதையைக் கொண்டது இந்த ஜப்பானிய திரைப்படம். குடும்பம் என்கிற அமைப்பு எத்தனை அழகானது, அவசியமானது என்பதை அழுத்தமாக உணர்த்தும் பாடம். குரூப் போட்டோவிற்கு நின்று சிரிக்கும் தமிழ் சினிமா போல நாடகத்தனமாக அல்லாமல் யதார்த்தமாக நிறையும் கிளைமாக்ஸ்தான் இதன் முக்கியமான வித்தியாசமே.

**

Ryota ஒரு தனியார் துப்பறிவாளன். அவனுக்கு இன்னொரு முகமும் உண்டு. விருது பெற்ற நாவல் ஒன்றை படைத்த எழுத்தாளன். ஆனால் அதெல்லாம் பழைய கதை. இப்போது அவன் காலி பெருங்காய டப்பா. எழுதுவதற்கான உத்வேகம் இல்லாமல் சூதாட்டத்தில் பணத்தைக் கரைப்பவன். இதனாலேயே இவனது மனைவி விவாகரத்து பெற்று விட்டாள். புதிதாக இன்னொருவனை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறாள்.

மாதத்திற்கொரு முறை தன் மகனை சந்திக்கும் தருணத்திற்காக ஆவலாக காத்திருக்கிறான் Ryota, தன் மனைவிக்கு இன்னொரு திருமணம் ஆகி விட்டால் நிரந்தரமாகவே தன் மகனைப் பிரிய வேண்டுமே என்று அஞ்சுகிறான். அவர்களை ரகசியமாக பின்தொடர்ந்து ஏக்கத்துடன் கண்காணிக்கிறான். இவன் ஊதாரி என்பதால் மனைவி வெறுக்கிறாள். “பராமரிப்புச் செலவு பணத்தைக் கொண்டு வரவில்லையா, உனக்கெல்லாம் குடும்பம் எதுக்கு?” என்று திட்டுகிறாள். அதுவும் நியாயம்தான்.

துப்பறியும் தொழிலில் தன் முதலாளிக்குத் தெரியாமல் சம்பாதிக்கும் பணத்தையெல்லாம் சூதாட்டத்தில் தொலைக்கிறான் Ryota. அவனுக்கு ஒரு வயதான தாயார். தனக்கு வரும் பென்ஷனை வைத்துக் கொண்டு தனியாக ஒரு ஃபிளாட்டில் வசிக்கிறார். வசதியான வீட்டிற்கு குடிபெயர்வது என்பது கிழவியின் நீண்ட கால கனவு. ஏன், வாழ்நாள் லட்சியம் என்று கூட சொல்லலாம். மகன் மற்றும் மகளுடன் இணைந்து வாழ வேண்டும் என்று ஆசை.

ஆனால் ஊதாரி மகனின் மூலமாக அது இயலாது என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அதற்காக தன் மகனை அவர் வெறுப்பதில்லை. மறைந்து போன தன் கணவனைப் போலவே, மகனும் ஊதாரியாக கடன் வாங்கிக் கொண்டு சுற்றுகிறானே என்கிற வருத்தம் மட்டும் உண்டு. “பணம் ஏதும் வேண்டுமா?” என்று பாசமாக தாய் விசாரிப்பார். “இல்லையே.. என்னிடம் இருக்கிறது. இப்போதுதான் போனஸ் வாங்கினேன்” என்று ஜம்பமாக சொல்லுவான் மகன். ‘ராஸ்கல், உன்னைப் பற்றி தெரியாதா, எனக்கு?” என்று கிண்டல் செய்வாள் தாய். இப்படியொரு உறவு.

Ryota தன் தாயைத் தேடி வருவதற்கு இன்னொரு ரகசியமான காரணமும் உண்டு. அவனுடைய தந்தை வைத்திருந்த தொன்மையான பொருள் இன்று ஏலத்தில் நல்ல விலை போகும். அதை நோண்டி எடுப்பதற்காக வருகிறான். தாயிடம் சூசகமாக அதைப் பற்றி விசாரிக்கிறான். ‘அந்தாளைக் கட்டிக்கிட்டு என்ன சுகத்தைக் கண்டேன். அவர் சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டேன்” என்கிறாள் கிழவி. ஆனால் கணவனின் சட்டை முதற்கொண்டு பல பொருட்களை அவர் அப்படியே வைத்திருப்பது பின்னால் ஒரு காட்சியில் வருகிறது. உள்ளூற ஒளிந்திருக்கும் அன்பு.

தனிமையில் வசிக்கும் தாயின் வீட்டிற்கு டிடெக்டிவ்வின் சகோதரியும் அவ்வப்போது வந்து செல்வாள். தாயின் பென்ஷன் பணத்தை அவள் பிடுங்கிச் செல்கிறாளோ என்கிற சந்தேகம் இவனுக்கு. சகோதரிக்கும் அதே சந்தேகம். எனவே ஜாடை மாடையாக இருவரும் ஒருவரையொருவர் சீண்டிக் கொள்கிறார்கள்.

Ryota தன் மகனைச் சந்திக்கும் நாள். அவனை அழைத்துக் கொண்டு எங்கெங்கோ சுற்றுகிறான். தன்னிடமுள்ள சொற்ப பணத்தை வைத்துக் கொண்டு மலிவான பொருட்களை வாங்கித் தந்து சமாளிக்கிறான். பிறகு தன் தாயின் வீட்டிற்கு செல்கிறான். பேரனைப் பார்த்ததும் கிழவிக்கு சந்தோஷம். அன்பாக உபசரிக்கிறார்.

‘தன் மகன் இன்னும் திரும்ப வரவில்லையே’ என்று Ryota-வின் முன்னாள் மனைவியும் அங்கு வருகிறாள். கிழவிக்கு சந்தோஷம் இரட்டிப்பாகிறது. அன்றிரவு அவர்களை தங்க வைக்க முயற்சிக்கிறாள். முதலில் மறுக்கும் மருமகள், புயல் அறிவிப்பு காரணமாக அங்கு தங்க சம்மதிக்கிறாள். மகனும் மருமகளும் ஒரே அறையில் தங்குவதற்கான சூழலை ஏற்படுத்துகிறார் கிழவி. அப்படியாவது அவர்களுக்குள் ஒற்றுமை வராதா என்கிற ஏக்கம்.

முன்னாள் மனைவியிடம் பாசமாக பேசி பிரிந்து போன உறவை மீட்க முயற்சிக்கிறான் Ryota. ‘உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா” என்று விலகிச் செல்கிறாள் அவள். அன்றிரவு புயல் மழையில் வேடிக்கை பார்க்க தன் மகனை அழைத்துச் செல்கிறான் Ryota. இவர்களைக் காணாமல் மனைவியும் பின்னால் வந்து சேர்கிறாள். அந்த சிறிய குடும்பம் அன்னியோன்யமான தருணங்களைப் பகிர்ந்து கொள்கிறது. அவர்களுக்கிடையேயான உறவு மறுபடியும் புதிதாக மலர்ந்து விடக்கூடாதா என்று நமக்கே தவிப்பாக இருக்கிறது.

ஆனால் – மறுநாள் விடிந்தவுடன் அவரவர்களின் வாழ்க்கைக்குத் திரும்புவதோடு படம் நிறைவடைகிறது. இதில் வரும் தாய்க்கிழவியை பார்த்து நெகி்ழாதவர்கள் இருக்கவே முடியாது. அப்படியொரு இயல்பான நடிப்பு. ‘இந்த ஆம்பளைங்கள்லாம் இருக்கறத விட்டுட்டு பறக்கறத பிடிக்கப் போவாங்க. அதுவும் முடியாம திரும்ப வர்றப்ப எதுவும் இருக்காது” என்று தன் வாழ்க்கையையும் இணைத்து தன் மகனுக்கு கிழவி உபதேசம் செய்யும் காட்சி அற்புதமானது. பேரனும் மருமகளும் ஒருநாளாவது தன் வீட்டில் தங்க மாட்டார்களா என்கிற கிழவியின் துடிப்பை ஒவ்வொரு தாயிடமும் நாம் பார்த்திருப்போம். தந்தை தன் மீது வைத்திருந்த அன்பை Ryota இறுதிக்காட்சியில் அறிந்து கொள்ளும் இடம் நெகிழ்வானது.

இத்திரைப்படம் இன்னொரு வகையில் சமகால ஜப்பானிய வாழ்வியலையும் நுட்பமாக பதிவு செய்திருக்கிறது. பிள்ளைகளின் பராமரிப்பின்றி நொந்து மடியும் முதியோர்களின் தனிமை, அற்பமான காரணங்களுக்கு கூட விவாகரத்து பெறும் இளைய தலைமுறை, பெற்றோர்களின் பிரிவால் குழம்பித் தவிக்கும் பிள்ளைகள் என்று இத்திரைப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் நெருக்கமாக உணர முடிகிறது.

ஆசியக் குடும்பங்கள் என்றல்ல உலகம் முழுக்கவே குடும்பம் என்கிற அமைப்பின் உள்ளே நிகழும் உறவுச்சிக்கல்கள், பிரிவின் தவிப்புகள் ஆகியவற்றை இத்திரைப்படம் வலிமையாக சுட்டிக் காட்டுகிறது. இதில் வரும் தம்பதியினர் இணையாமல் போனாலும், அவ்வாறானதொரு நிலைமையை நாம் அடையவிடக்கூடாது என்கிற படிப்பினையையும் பெற முடிகிறது.

Like Father, Like Son போன்ற பல அற்புதமான திரைப்படங்களைத் தந்திருக்கும் இயக்குநர் Hirokazu Kore-eda-ன் இன்னொரு அபாரமான படைப்பு இது.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: