Wednesday, May 05, 2021

அதற்கான நேரம் இதுவல்ல


 
 
 
அன்புள்ள சமூகவலைத்தள நண்பர்கள், அரசியல் ஆர்வமுடையவர்கள், கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள், அரசியல் இணைய பொறுப்பாளர்கள், பொதுச்சமூகத்தினர் என்று அனைத்துத் தரப்பினருக்கும் பணிவன்புடன் என்னுடைய வேண்டுகோள்.

*

தேர்தல் முடிந்து விட்டது. விடைகளை அறிந்து கொண்டு விட்டோம். அந்தந்த புதிய ஆட்சிகள் பொறுப்பில் அமரவிருக்கின்றன.

இனியாவது தற்காலிகத்திற்கு அரசியல் வம்புகளை ஒதுக்கி வைப்போம். திமுகவின் ஐடி விங் தங்களது கட்சியின் மீது அவதூறுகளைப் பரப்புவர்களின் மீது தொடர்ச்சியாக நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளது. அவர்களின் நோக்கில் இதிலுள்ள முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் ஒரு முக்கியமான விஷயம். இப்போது நம் முன் நிற்கும்  மிகப் பெரிய சவால் ‘கொரானோ’. அதிலும் இரண்டாம் அலை அதன் உச்சத்திற்கு பயணித்துக் கொண்டிருக்கும் சூழலில் நம் கண் முன்னே ஏராளமான மரணங்கள் நிகழ்ந்தவாறு உள்ளன. மிக மிக நெருக்கடியான காலக்கட்டத்தின் நடுவில் நின்று கொண்டிருக்கிறோம்.

எனவே இப்போதைக்கு நாம் நம்முடைய முழு கவனத்தையும் செலுத்த வேண்டியது இந்த விஷயத்தில் மட்டுமே. நம்முடைய ஒட்டுமொத்த மனித சக்தி அனைத்தையும் இந்தப் பெருந்தொற்றில் எதிர்ப்பதற்கு செலவழிப்போம்.

அரசியல் கணக்குகள் பேச, பழைய பகைகளை தீர்த்துக் கொள்ள, அது தொடர்பான வம்புகளைப் பேச நேரம் இதுவல்ல. கட்சிப் பாகுபாடின்றி அனைத்து கட்சிகளில் உள்ள பொறுப்பாளர்களையும் நண்பர்களையும் கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன்.

உங்களிடம் உள்ள மனிதசக்தியை, தொடர்புகளை, கட்டமைப்பை ‘கொரானோ எதிர்ப்பு’ என்னும் ஆக்கபூர்வமான விஷயத்தில் செலவழியுங்கள். இந்த நேரத்தில் அதுதான் முக்கியம்.

அரசியல் சாராத இதர நண்பர்களுக்கும் கூட இதையே சொல்வேன். நாம் விளையாட்டாக, பொழுதுபோக்காக இடும் ஏதாவது ஒரு அரசியல் வம்போ, தவறான தகவலோ, அவதூறோ கூட அநாவசியமான எதிர்வினைகளை எங்காவது ஏற்படுத்தி விடலாம். இந்தச் சமயத்தில் இவற்றை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.

*

மாறாக நம்மிடமுள்ள சக்தியை வைத்துக் கொண்டு மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு, எளிய சமூகத்தினருக்கு இயன்ற வகைகளில்  எல்லாம் உதவலாம். உங்களிடமுள்ள ஒரு நம்பகத்தன்மையுடைய தகவலை தேவையான இடத்தில் பரப்புவது கூட இந்தச் சமயத்தில் முக்கியமான விஷயம். எனவே அது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தலாம்.

இந்தச் சமயத்தில் பிறருக்கு நாம் செய்யும் ஒவ்வொரு சிறு உதவியும் முக்கியமானது. நம்மை கவனமாக பாதுகாத்துக் கொள்வதோடு, அடுத்தவரின் நலனையும் முக்கியமாக யோசியுங்கள்.

அநாவசியமாக வீட்டை விட்டுச் செல்லாதீர்கள்’ என்று அரசும் மருத்துவத் துறையும் தொடர்ந்து மல்லுக் கட்டிக் கொண்டிருந்தாலும் பலரும் கேட்டபாடில்லை. வாழ்வாதாரக் காரணங்களுக்காக வேறு வழியின்றி வெளியில் பாதுகாப்பாக செல்வது வேறு. ஆனால் அற்பமான காரணங்களை உற்பத்தி செய்து கொண்டு வெளியில் அநாவசியமாக செல்வது வேறு.

இதன் மூலம் நீங்களும் ஆபத்தில் விழுவதோடு உங்களைச் சார்ந்தவர்களையும் அப்பாவிகளையும் கூட ஆபத்தில் விழச்செய்யும் சாத்தியக்கூறுகள் அதிகம்  உள்ளன என்பதை மனதில் அழுத்தமாக பதிவு செய்து கொள்ளுங்கள். மருத்துவர்கள் சொல்லும் ஆதாரமான விதிகளை கடைப்பிடியுங்கள்.

*

இது போன்ற நெருடலான காலத்தில் பாசிட்டிவ் மனப்பான்மைதான் மிக முக்கியம். உங்களால் முடிந்த எளிய உதவியைச் செய்யுங்கள். யாரையாவது புன்னகைக்க வையுங்கள். சிரிக்க வையுங்கள். நல்ல விஷயங்களை பரப்புங்கள்.

‘இதோ. எங்கள் வீட்டில் இத்தனை வயதுள்ள முதியவர்.. கொரானோ தொற்றில் விழுந்து.. தக்க சிகிச்சையுடன் மீண்டு விட்டார்’ என்பது போன்ற நல்ல விஷயங்களைப் பரப்புங்கள். எதிர்மறையான விஷயங்களை ஆர்வத்துடன் பரப்பாதீர்கள்.

அதற்காக கொரானோ பற்றியே பேசிக் கொண்டிருப்பதும் மனஉளைச்சலைத் தரக்கூடிய விஷயம்தான். எனவே இதர நேரங்களில் நேர்மறையான விஷயங்களைப் பேசுங்கள்.

இந்த நெருக்கடியான நிலையிலும் அநாவசியமான வம்புகள், அவதூறுகள், அற்பமான சண்டைகள் போன்றவற்றை முற்றிலுமாக கைவிடுங்கள்.

ஏனெனில் இதன் பின்னுள்ள காரணம் மிக எளிமையானது. ‘மரணம் நமது இடது கையின் அருகிலேயே இருக்கிறது’ என்பதுதான் அது.

நமக்கு எவ்வித ஆபத்தும் நேராது என்கிற மிதமிஞ்சிய தன்னம்பிக்கையுடன் இருக்காதீர்கள். செல்வந்தன், ஏழை என்று எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் கொரானோ வேட்டையாடிக் கொண்டிருப்பதை கவனித்திருப்பீர்கள். எனவே யார் வேண்டுமானலும் இதற்கு இலக்காகலாம்.

ஊடகங்கள் கொரானோ பற்றி தொடர்ந்து பேசுவது அவர்களின் வணிகம் தொடர்பானது. எனவே அவற்றிற்கு தேவையான அளவிற்கு மேல் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள். ஊடகங்கள் வணிக நோக்கம் கொண்டவை. ஆனால் பொதுச்சமூகம் என்பது அப்படியல்ல. எனவே நாமும் ஊடகங்களைப் போலவே மாற வேண்டாம்.

நான் இவற்றை ஏதோ அறிவுரை போலவே ஆலோசனை போலவோ சொல்லவில்லை. ஒருவிதமான மனத்தாங்கலில், ஆதங்கத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

எனவே சமூகவலைத்தளங்களில் ஈடுபடும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவரும் இதை சிறிதாவது பின்பற்றுங்கள் என்பதை தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நம் முன் இப்போது நின்று கொண்டிருக்கும் மிகப் பெரிய எதிரி கொரானோதான். எனவே ஒருமுகப்படுத்தப்பட்ட நேர்மறை உணர்வுகளுடனும் செயல்பாடுகளுடனும் அதை எதிர்கொண்டு கடந்து வருவோம். இப்போதைக்கு மானுட சமூகம் நடைபோட வேண்டிய பாதை இது மட்டுமே.

suresh kannan

No comments: