Thursday, June 04, 2020

The Book Thief (2013) - ‘நூல்களின் காதலி'





கலை, இலக்கியம் போன்ற உன்னதமான விஷயங்கள் மக்களின் துன்பமான சமயங்களில்  எத்தனை அருமையான மருந்தாகப் பயன்படுகின்றன என்பதை நெகிழ்வாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கும் திரைப்படம் இது. யூதர்களுக்கு நாஜிக்களுக்கு  இழைத்த வரலாற்றுக் கொடுமைகளின் பின்னணியில் ஓர் அழகான மெல்லிய கோடு  போல இத்திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

***


வருடம் 1938. சிறுமி லீஸல் தன் தாயை விட்டுப் பிரிந்து தன் வளர்ப்பு பெற்றோாரிடம் சென்று சேர்வதற்காக பயணித்துக் கொண்டிருக்கிறாள். வழியில் அவளது தம்பி இறந்து போகிறான். புதைக்கும் இடத்தில் கல்லறை ஊழியர் விட்டுச் செல்லும் புத்தகம் ஒன்றை தன்னோடு லீஸல் எடுத்துச் செல்கிறாள். ஆனால் அவளுக்கு வாசிக்கத் தெரியாது.

புதிய இடத்தில் வளர்ப்பு தாய் கடுகடுவென நடந்து கொள்கிறாள். ஆனால் தந்தையான ஹான்ஸ் பிரியமுடன் லீஸலை கவனித்துக் கொள்கிறார். அவளுக்கு எழுதத் தெரியாததைக் கண்டு பள்ளியில் பிள்ளைகள் சிரிக்கின்றனர். லீஸல் வைத்திருக்கும் புத்தகத்தின் மூலம் புதிய தந்தை வாசிப்பை கற்றுத் தருகிறார். பக்கத்து வீட்டில் வசிக்கும் ரூடி என்கிற துறுதுறு சிறுவன் லீஸலுக்கு நண்பனாகிறான். "உங்க அம்மா கம்னியூஸ்டாமே, நெஜம்மாவா?"

தன்னிடமிருக்கும் புத்தகத்தின் மூலம் வாசிக்கவும் எழுதவும் லீஸல் கற்றுக் கொள்கிறாள். அவளுக்கு புத்தகங்களின் மீதான விருப்பம் பெருகுகிறது. தங்களின் அரசியல் கொள்கைகளுக்கு விரோதமான நூல்களை நாஜிக்கள் தீயில் இட்டு எரிக்கிறார்கள். லீஸலையும் அவ்வாறாக  புத்தகத்தை எரிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறான் ஒரு சிறுவன். வேறு வழியில்லாமல் அதைச் செய்கிறாள். அனைவரும் சென்றதும் தீயிலிருந்து எரியாமல் தப்பித்த ஒரு புத்தகத்தை எடுத்து வருகிறாள். அந்த ஊர் மேயரின் மனைவி இதைப் பார்த்து விடுகிறாள்.

***

லீஸல் தங்கியிருக்கும் வீட்டில் மேக்ஸ் என்கிற இளைஞன் விருந்தாளியாக வருகிறான்.  யூத இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் நாஜிக்களிடமிருந்து தப்பிக்க அடைக்கலம் தேடி வந்திருக்கிறான். இளைஞனின் தந்தை ஒரு காலத்தில் லீஸலின் தந்தைக்கு உதவியிருக்கிறார். இப்போது பதில் உதவி செய்ய வேண்டிய நிலைமை. ஆனால் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் நாஜிக்கள் லீஸலின் குடும்பத்தையே காலி செய்து விடுவார்கள். 'எவரிடமும் இந்த விஷயத்தைப் பற்றி மூச்சு விடக்கூடாது' என்று லீஸலிடம் சொல்கிறார்கள்.

புதிய விருந்தாளியான மேக்ஸூம் லீஸலும் நட்பாகிறார்கள். இருவருமே ஒருவகையில் நாஜிக்களால் பாதிப்புக்குள்ளானவர்கள் என்பதால் அவர்களின்  நட்பு இறுகுகிறது. துவைத்த துணிகளை தருவதற்காக மேயரின் வீட்டிற்கு செல்கிறாள் லீஸல். மேயரின் மனைவியைப் பார்த்து திகைக்கிறாள். ஆனால் அவரோ லீஸலை தன்னுடைய நூலகத்திற்கு அன்புடன் அழைத்துச் செல்கிறார். "நீ விரும்பும் போதெல்லாம் இங்கு வந்து படிக்கலாம்"

மேக்ஸ் லீஸலுக்கு பல விஷயங்களைச்  சொல்லித் தருகிறான். அவன் தலைமறைவாக இருப்பதால் வெளியுலகம் எப்படியிருக்கிறது என்பதை பதிலுக்கு லீஸல் சொல்கிறாள். மேக்ஸ்ஸின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அவன் நோயில் வீழ்ந்திருக்கும் சமயத்தில் தான் எடுத்து வரும் புத்தகங்களையெல்லாம் வாசித்துக் காண்பிக்கிறாள் லீஸல். அதிர்ஷ்டவசமாக மேக்ஸ்  பிழைத்துக் கொள்கிறான். "நான் வாசித்ததையெல்லாம் நீீ கேட்டாயா?" என்கிறாள் லீஸல். "ஆமாம். அதனால்தான் நான் உயிர் பிழைத்தேன்"

***

புத்தகங்களை வாசிக்கும் போது மேயரால் கண்டுபிடிக்கப்பட்டு துரத்தப்படுகிறாள் லீஸல். என்றாலும் எவருக்கும் தெரியாமல் மேயரின் வீட்டின் பின்புறமாக நுழைந்து புத்தகங்களை எடுத்து வந்து வாசிக்கிறாள். யூதர்கள் எவராவது பதுங்கியிருக்கிறார்களா என நாஜிக்கள் ஒவ்வொரு வீடாக சோதனையிடுகிறார்கள். சாமர்த்தியமாக மேக்ஸை தப்பிக்க வைக்கிறாள் லீஸல். 'தான் இனியும் இங்கிருந்தால் எல்லோருக்கும் பிரச்சினை' என்றபடி மேக்ஸ் அங்கிருந்து சென்று விடுகிறான். லீஸல் உட்பட அவளுடைய குடும்பமே கண் கலங்குகிறது.

இரண்டாம் உலகப் போர் துவங்குகிறது. போர் விமானங்கள் மூலமாக குண்டு மழை பொழிகிறது. மக்கள் பதுங்கு குழியில் அச்சத்துடன் உட்கார்ந்திருக்கின்றனர். லீஸலின் தந்தை ஹார்மோனியத்தின் மூலம் அழகான இசையை வாசிக்கிறார். அவர்களுக்கு சற்று ஆசுவாசம் ஏற்படுகிறது. ராணுவத்தில் பணிபுரிவதற்காக அவரை அழைத்துச் சென்று விடுகிறார்கள். மீண்டும் அதே போல பதுங்கு குழியில் இருக்க நேரும் போது தானே உருவாக்கிய ஒரு கதையை லீஸல் அனைவருக்கும் சொல்கிறாள். போர்ச்சூழலின் பயத்தை தற்காலிகமாக மறந்து மக்கள் கதையைக் கேட்கிறார்கள்.


போர்த் தாக்குதல் தீவிரமடைகிறது. குண்டு விழுந்து பல வீடுகள்  சேதமாகின்றன. பல உயிர்கள் பலியாகின்றன. லீஸலின் வளர்ப்பு தாயும் தந்தையும் கூட இறந்து போகிறார்கள். பக்கத்து வீட்டு சிறுவன் ரூடியும் இறக்கிறான். லீஸல் உயிர்தப்புகிறாள். மேயரின் மனைவி அவளைக் கண்டுபிடித்து அழைத்துச் செல்கிறாள்.

பல வருடங்கள் கழித்து லீஸல் ஓர் அற்புதமான எழுத்தாளராகியிருக்கும் தகவலோடு படம் நிறைகிறது.


***

சிறுமி லீஸலாக அற்புதமாக நடித்திருக்கும் Sophie Nélisse -ன் பார்வையில் பெரும்பாலான காட்சிகள் நகர்கின்றன. வன்முறையை நேரடியாக காட்டாமல் நாஜிக்களின் கொடுமையை அழுத்தமாக பதிவு செய்திருப்பது திரைக்கதையின் சிறப்பு. ஜான் வில்லியம்ஸின் பின்னணி மென்மையான பின்னணி இசை படத்திற்கு அழகைக் கூட்டியிருக்கிறது. பல விருதுகள் பெற்ற இத்திரைப்படத்தை இயக்கியிருப்பவர் Brian Percival.


(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: