Sunday, June 28, 2020

Ali and Nino (2016) - ‘வரலாற்றுக் காதல்'




வரலாற்றுப் பின்னணியுடன் ஒரு அபாரமான காதல் கதை இது. தேசம், மொழி, கலாசாரம், அந்தஸ்து என்று பல தடைகளைத் தாண்டி ஒன்று சேர்ந்த ஒரு காதலுக்கு முன்னால் அரசியல் வில்லனாக நிற்கிறது. ஒரு தேசம் உருவாவதற்கு பின்னால் எத்தனையோ தனிநபர்களின் கனவுகளும் காதல்களும் இழக்கப்பட்டிருக்கின்றன என்பதை நெகிழ்வாக சொல்லியிருக்கிற திரைப்படம் இது. காதலும் வீரமும் பொங்கி வழிகிற இந்த பிரிட்டிஷ் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும் திறமையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

**

வருடம் 1914. காக்கசஸ் பிரதேசத்தில் உள்ள  அசர்பைசான் நாட்டின் தலைநகரம் பக்கூ. கிழக்கும் மேற்கும் சந்திக்கும் இடம். எண்ணைய் வளம் மிகுந்த பகுதி. எண்ணைய் என்றாலே உடனே மூக்கில் வியர்க்கும் வல்லரசு நாடுகள் இதை விட்டு வைத்திருக்குமா என்ன? எனவே பல ஆண்டுகளாக ரஷ்யாவின் வசத்தில் இருக்கிறது.

அலி என்கிற இஸ்லாமியன். நினோ என்கிற கிறிஸ்துவள். இருவருக்கும் காதலிக்கும் வயதுதான். எனவே திகட்டத் திகட்ட காதலிக்கிறார்கள். மதமோ அந்தஸ்தோ அவர்களுக்குள் தடையாக இல்லை. ஆனால் பெற்றோர்களுக்கு இருக்குமே? இருக்கிறது. பெண் கேட்கச் சென்ற அலியிடம் மென்று முழுங்கி 'என்ன அவசரம், போர் வரப்போவதாக சொல்கிறார்கள். அப்புறம் பார்க்கலாமே' என்கிறார் பெண்ணின் தந்தை. தன்னுடைய ஆர்மீனிய நண்பனிடம் பொங்கி வெடிக்கிறான் அலி. "பார்த்தாயா, பல வருடங்களுக்கு முன்னால் எங்கள் குடும்பம்தான் இங்கு ஆண்டு வந்தது. அதிகாரம் போனவுடன் கிள்ளுக் கீரையாகி விட்டோம். எண்ணைய் வியாபாரத்திற்காக வந்திருக்கிறவன், என்னிடமே சாக்கு சொல்கிறான்"

"கவலையை விடு மச்சி. அந்த அப்பன்காரன் கிட்ட நான் பேசிப் பார்க்கிறேன்" என்று ஆறுதல் சொல்கிறான் அவன். நண்பன் என்றால் சமயங்களில் துரோகமும் செய்வார்கள் அல்லவா? அவன் செய்கிறான். நினோவின் அழகில் மயங்குகிற அவன் திடீரென்று தீர்மானித்து அவளைக் கடத்திச் செல்கிறான். விஷயத்தைக் கேள்விப்பட்ட அலி கொதித்துப் போய் துரத்துகிறான். இருவருக்கும் கடுமையான சண்டை. தன்னைக் தற்காத்துக் கொள்வதற்காக துரோகியைக் கொல்கிறான் அலி.

காட்சிகள் மாறுவதால் விஷயங்களும் தலைகீழாகின்றன. கலாட்டாவில் சம்பந்தப்பட்ட பெண் என்பதால் நினோ -வை எவரும் திருமணம் செய்ய மாட்டார்கள். எனவே பெண்ணின் தந்தை வந்து கெஞ்சுகிறார். முதலில் ஒப்புக் கொண்ட அலியின் தந்தை இப்போது மறுக்கிறார். அதற்கு காரணம் இருக்கிறது. செத்துப் போனவனும் செல்வாக்குடைய குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் அலியின் உயிருக்கு விலை வைக்கிறார்கள்.. எனவே அவன் எங்காவது மறைந்திருக்கத்தான் வேண்டும்.

அலியைக் காணாமல் நினோ துடித்துப் போகிறாள். வீட்டிலிருந்து ரகசியமாக புறப்பட்டு அலி மறைந்திருக்கும் இடத்திற்கே செல்கிறாள். திருமணம் நிகழ்கிறது. சந்தோஷமான வாழ்க்கை. காதலர்கள் சந்தோஷமாக இருந்தால் இந்த விதி என்கிற ஆசாமிக்குத்தான் பிடிக்காதே? போர் சூழல் வருகிறது. தன் தேசத்தின் கனவிற்காக அலி போராட வேண்டும். ஊர் திரும்புகிறான். நண்பர்கள் கட்டியணைத்துக் கொள்கிறார்கள். 'சரியான நேரத்துக்கு வந்தேடா".

எதிரிகளுடன் கடுமையான போர். ஆனால் அவர்களின் கை ஓங்குகிறது. சமாளிக்க முடியவில்லை. கருவுற்றிருக்கும் நினோவை தனது தந்தையுடன் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கிறான் அலி. மேற்கத்திய பாணியில் வாழ்ந்த நினோவிற்கு அங்குள்ள கலாசார சூழல் பிடிப்பதில்லை. 'எப்போடா கிளம்புவோம்' எரிச்சலுடன் காத்திருக்கிறாள்.

ஒருவழியாக அலியின் தேசம் சுதந்திரம் பெறுகிறது. தன்னுடைய பெண் குழந்தையைப் பார்க்க துள்ளலுடன் திரும்பி வருகிறான் அலி. அவர்களின் வாழ்வில் மறுபடியும் வசந்தம் திரும்புகிறது. சுதந்திர தேசத்தில் திருப்தியான வாழ்க்கை. ஆனால் நமது நண்பர் விதிக்குத்தான் இது பிடிக்காதே. மறுபடியும் போர் பதட்டம். ரஷ்யர்கள் மறுபடியும் வருகிறார்கள். எண்ணைய் வளத்தை ருசி பார்த்திருந்தவர்கள் சும்மா விடுவார்களா?

நினோவை பிறந்த வீட்டிற்கு அனுப்பி விட்டு எதிரிகளை சந்திக்க ஆயுத்தமாகிறான் அலி. 'மீண்டும் சந்திப்போம்' என்று பிரியாவிடையுடன் பிரிந்தாலும் அதுதான் அவர்களின் கடைசி சந்திப்பு என்பது இருவருக்குமே உள்ளூற தெரிந்திருக்கிறது. ஆம். தன் தேசத்திற்கான விடுதலைப் போரில் பரிதாபமாக உயிரை இழக்கிறான் அலி.


***

படத்தின் தலைப்பின் பெயரால் ஏற்கெனவே எழுதப்பட்டிருந்த நாவலையொட்டி இந்த திரைப்படத்தை அபாரமாக உருவாக்கியிருக்கிறார் Asif Kapadia. படத்தில் பெரிதும் கவர்வது ஒளிப்பதிவு. பெரும்பாலான காட்சிகள் ஓவியம் போலிருக்கின்றன. அப்போதைய காலக்கட்டம் சிறப்பாக உருவாக்கப்பட்டு திறமையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அலியாக Adam Bakri -ம் நினோவாக María Valverde-ம் அற்புதமாக நடித்திருக்கிறார்கள். பின்னணி இசை அபாரமானதாக இருக்கிறது.


காதலைப் பிரிக்க எத்தனையோ வில்லன்கள். அதில் ஒன்று அதிகார அரசியல்.

(குமுதம் சினிமா தொடரில் பிரசுரமானது)

suresh kannan

No comments: