Tuesday, December 03, 2019

பைஜூ என்கிற வயதான 'சிறுவன்'



மலையாளச் சினிமாவின் நகைச்சுவைக்கென்று ஒரு பிரத்யேகமான ருசியுண்டு. ரெட் ஒயினின் ருசி. மெல்ல மெல்ல சுவைத்தால் அபாரமாக இருக்கும்.

உலகின் சிறந்த நகைச்சுவை திரைப்படங்களைக் கவனித்தால் அவற்றில் சித்தரிக்கப்படும் நகைச்சுவைத் தன்மை பூடகமானதாக, நுட்பமானதாக, இயல்பானதாக இருப்பதைக் கவனிக்கலாம். அவை பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்தையும் நுண்ணுணர்வையும் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கும். ‘இதுதான் அந்த நகைச்சுவை’ என்று அபத்தமாக உடைத்து திறந்து காட்டாது.

நம்முடைய அன்றாட வாழ்வில் நிகழும் எத்தனையோ இயல்பான நகைச்சுவைகளையே அவை பிரதிபலிக்கும். நம்மை நாமே கவனிக்கத் தவறிய அவல நகைச்சுவைத் தருணங்களை அவை சுட்டிக் காட்டும். மலையாளத்தில் உருவாகும் சில நகைச்சுவைத் திரைப்படங்களை இந்த வரிசையில் இணைக்க முடியும்.

அப்படியொரு மலையாள நகைச்சுவைத் திரைப்படம்தான் ‘Rakshadhikari Baiju Oppu’

**

பிஜூ மேனன் அபாரமாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் அவரை நாயகன் என்று சொல்ல முடியாது. ஏனெனில் இதில் எவ்வித நாயகத்தனத்தையும் அவர் செய்வதில்லை. நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த ஒரு ஆசாமி. ஆனால் சராசரி இல்லை. திருமணமாகி நாற்பது வயதைக் கடந்தும் தெருவில் கிரிக்கெட் ஆடுவதை விடாமல் எவரையாவது நாம் இயல்பானவர்கள் என்று ஒப்புக் கொள்வோமா? மாட்டோம். எனவே இவரையும் சுற்றியுள்ளவர்கள் ‘கிறுக்குப்பய’ என்பது மாதிரிதான் பார்க்கிறார்கள்.

ஆனால் இந்த கிறுக்குத்தனம் கொண்டவனுக்குப்  பின்னால் உள்ள மனிதநேயத்தையும் வாழ்க்கையை அதிக சிக்கலின்றி எளிமையாக கடக்க நினைக்கும் அவரது ஞானத்தையும் புரிந்து கொள்கிறவர்கள் சிலர் மட்டுமே. மற்றவர்கள் தாமதமாக உணர்கிறார்கள்.

எப்படி இந்த திரைப்படத்தில் நாயகன் என்று எவருமில்லையோ, அதைப் போலவே இதுதான் கதை என்றும் இத்திரைப்படத்தில் எதையும் குறிப்பாகச் சொல்ல முடியாது. நம்முடைய வாழ்க்கையின் நாட்கள் கண்ணுக்குத் தெரியாமல் தினசரி நகர்வதைப் போலவே இதில் வரும் காட்சிகளும் இயல்பாக நகர்கின்றன.

விதம் விதமான கதாபாத்திரங்கள். விதம் விதமான நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்கள்; கிளைக்கதைகள். அத்தனையையும் இணைக்கும் ஒரு மையப்புள்ளியாக பைஜூ (பிஜூ மேனன்) இருக்கிறார். கூடவே ஒரு விளையாட்டு மைதானமும்.

**
பைஜூ நாற்பதுகளில் உள்ள ஓர் ஆசாமி. வயதான பெற்றோர், மனைவி மகள் ஆகியோரைக் கொண்ட நடுத்தரவர்க்க குடும்பம். எனவே அதற்கேற்ற பணத் தேவைகள் உண்டு. பைஜூ ஒரு அரசு ஊழியர். அதற்கேற்ற மெத்தனமும் சோம்பேறித்தனமும் உண்டு. தன் வாழ்க்கையின் மீது அவருக்கு எவ்வித பெரிய எதிர்பார்ப்பும் புகார்களும் இல்லை.

அவருடைய நண்பர்கள் அயல்நாடுகளில் இடம் பெயர்ந்து பெரிய பதவிகளில் சம்பாதிப்பது குறித்து இவருக்கு சந்தோஷமே. பொறாமை ஏதுமில்லை. அமெரிக்காவில் இருந்து வரும் நண்பர்தான் இன்னமும்  கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் தன் நண்பனைக் கண்டு பொறாமைப்படுகிறார். எத்தனை பணம் சம்பாதித்தாலும் பழைய சந்தோஷங்களையும் இழந்து விட்டோமோ என்று வருந்துகிறார்.

‘கும்பளம் பிரதர்ஸ்’ – இதுதான் அந்தக் கிரிக்கெட் குழுவின் பெயர். பைஜூ சிறுவயது நண்பர்களுடன் இணைத்து உருவாக்கிய பட்டாளம். வெவ்வேறு காரணங்களால் சக வயது நண்பர்கள் விலகி விட்டாலும் அடுத்தடுத்த தலைமுறை இளைஞர்களோடு இணைந்து கிரிக்கெட்டையும் குழுவையும் தொடர்ந்து உயிர்ப்போடு வைத்திருக்கும் பைஜூ, இதற்காக தாம் எதிர்கொள்ளும் கேலிகளை பொருட்படுத்துவதில்லை.

தம் குழுவில் உள்ள இளைஞர்களின் விளையாட்டு சார்ந்த வளர்ச்சிக்கு உதவுவதற்காக ஒரு நடுத்தர வர்க்க ஆசாமி செய்ய முடியாத எல்லைக்கு கூட பைஜூ செல்வார். எந்த அளவிற்கு?

பல நாட்களாக கம்மல் கேட்டு நச்சரிக்கும் தன் செல்ல மகளின் கோரிக்கையை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு நன்றாக கிரிக்கெட் விளையாடும் ஓர் இளைஞனுக்காக kit வாங்க நாற்பதாயிரம் ரூபாய் வரை செலவு செய்கிறார். வீட்டுக்குத் தெரியாமல் செய்த இந்த குட்டு வெளிப்படும் சமயத்தில் சுற்றத்தாரிடமிருந்து சங்கடத்தை எதிர்கொள்வது மட்டுமல்ல, உதவி செய்யப்பட்ட இளைஞனின் தந்தை பொழியும் வசைகளையும் வாங்கிக் கொள்கிறார். “என் மகனின் படிப்பை பாழாக்கப் பார்க்கறியா?”

தம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவருக்கும் விதம்விதமான உதவிகளை தம்முடைய பணத்திலிருந்து செலவு செய்து அதில் மனதிருப்தி கொள்ளும் வித்தியாசமான ஆன்மா பைஜூ. நாற்பதைத் தாண்டியும் இன்னமும் பதின்மத்தின் குணாதிசயங்களை விடாதவர். கிரிக்கெட்டில் பல முறை அவுட் ஆனாலும் ஒப்புக் கொள்ளாத அழுகிணித்தனம் உண்டு என்றாலும் இவருடைய நல்ல குணத்திற்காகவே சுற்றியுள்ள இளைஞர் கூட்டம் அதிகம்.

**

ச.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘கருப்பசாமியின் அய்யா’ என்றொரு சிறுகதை நினைவிற்கு வருகிறது. மனைவி, மகன் என்று குடும்பத்தலைவரின் அந்தஸ்து வந்தாலும் அது குறித்தான எவ்வித அடையாளங்களும் இல்லாதவர் கருப்பசாமியின் தகப்பன். ‘இளவட்டக்கல்லை அநாயசமாக தூக்குவது, வியாபாரம் செய்யப் போகும் இடத்தில் இரக்கத்தோடு பொருட்களை தந்து விட்டு வந்து விடுவது. எவராவது உசுப்பேற்றினால் கடினமான வேலையைக் கூட இலவசமாக செய்து விட்டு வருவது’ போன்றவை இசக்கிமுத்துவின் பிரத்யேகமான குணாதிசயங்கள்.

பெரிய மனிதருக்கான’ பொறுப்பில்லாமல் இருக்கும் கருப்பசாமியை அவரது குடும்பமும் மிக குறிப்பாக அவரது மனைவியும் திட்டிக் கொண்டேதான் இருப்பார்கள். ஆனால் மனிதருக்கு அதைப் பற்றியெல்லாம் பெரிதாக ஒன்றும் கவலையில்லை. திருமணத்திற்கு முன்பே அப்படியிருந்தவர்தான். மனைவியின் வசவுகளுக்குப் பிறகு கோபித்துக் கொண்டு ஓடிப் போய் சில வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தவர். ‘ஏதாவது சம்பாத்தியம்’ கொண்டு வந்திருப்பாரோ என்று கறியும் சோறுமாய் ஆக்கிப் போட்ட மனைவி ஆவலாக கேட்ட போது வெறுங்கையை காட்டுபவர்.

தன் தகப்பனின் ‘சாகசங்கள்’ குறித்து ஊராரிடம் கதை கதையாகக் கேட்கும் கருப்பசாமிக்கு ‘அய்யா’வின் மீது பிரியம் ஏற்படுகிறது. ஆனால் ஏன் தன் தாய் அவரைத் திட்டிக் கொண்டேயிருக்கிறார் என்பது கருப்பசாமிக்குப் புரிவதில்லை.

கருப்பசாமிக்கு மட்டுமல்ல, அவனது தகப்பனான இசக்கிமுத்துவிற்கே கூட ஏன் தன் மனைவி அழுது கொண்டேயிருக்கிறாள் என்பது புரிவதில்லை. மனைவிக்காக தன் சிறுபிள்ளைத் தனங்களை கட்டுப்படுத்திக் கொள்ள முடிவு செய்கிறார். என்றாலும் முழுமையாக அது கைகூடுவதில்லை என்கிற குறிப்புடன் அந்தச் சிறுகதை முடிகிறது.

‘கருப்பசாமியின் அய்யா’ சிறுகதையில் வரும் இசக்கிமுத்து ஏறத்தாழ அப்படியே பைஜூதான். ஆனால் பைஜூ தன் பதின்மங்களின் குணாதிசயத்தை தக்க வைத்துக் கொள்வதோடு மற்றவர்களுக்கும் உதவி செய்கிறான் என்பது போன்ற சில நுண்ணிய வித்தியாசங்கள் இருக்கின்றன.

**

இத்திரைப்படத்தில் பல சுவாரசியமான கதாபாத்திரங்களும் சம்பவங்களும் உண்டு.

தான் விரும்பும் பெண்ணுடன் ஓரிரு வார்த்தைகள் பேசும் சாக்கிற்காகவே அந்தப் பக்கம் சென்று விழும் பந்தைப் பொறுக்க ஆவலுடன் செல்லும் இளைஞன், கிரிக்கெட் குழுவின் பக்கத்திலேயே விடாப்பிடியாக கால்பந்து விளையாடும் சிறுவர்கள், மைதானத்தில் மாட்டை கட்டி வைத்து சிறுவர்களை விரட்டிக் கொண்டேயிருக்கும் ஒரு பெரியவர், வீட்டின் பணிப்பெண் அவலட்சணமானவள் என்கிற காரணத்தினால் அவளின் காதலை நிராகரிக்கும் இன்னொரு இளைஞன், திருமண வயதைத் தாண்டியும் அதற்கான முதிர்ச்சியில்லாமல் விளையாட்டுத்தனமாக இருக்கும் இன்னொரு ஜூனியர் பைஜூ..

என்று விதம்விதமான பாத்திரங்கள், கும்பளம் என்கிற அமைதியான அந்த பிரதேசத்தில் உலாவருகின்றன. இந்தப் பாத்திரங்களுக்கு உருவாகும் பிரச்சினைகள் எல்லாம் எவ்வாறு தன்னியல்பாக கரைகின்றன அல்லது மறைகின்றன, சிலவற்றிற்கு பைஜூ எப்படி காரணமாக இருக்கிறார்கள் என்பது தொடர்பான காட்சிகள் எல்லாமே கவிதையான கணங்கள்.

கால்பந்து குழுவில் இருக்கும் வயதில் மூத்த சிறுவன், கிரிக்கெட் குழுவில் இடம்பெறத் துடிக்கிறான். ஆனால் கிரிக்கெட் அண்ணன்மார்கள் அவனை கேலியுடன் நிராகரித்து துரத்துகிறார்கள். அவனுடைய தாய் இறந்து போன செய்தியை பைஜூதான் அவனிடம் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த துயரச் சம்பவத்திற்குப் பிறகு சிறுவனின் விளையாட்டுக்குணம் அடங்கி வீட்டிற்குள் ஒடுங்கி விடுகிறான்.

பைஜூ சிறுபிள்ளைகளை சேர்த்துக் கொண்டு ஊக்குவிப்பதை வெறுக்கும் ‘பெரியவர்களின்’ உலகைச் சேர்ந்தவர் சிறுவனின் தந்தை. ஆனால் அவரே பைஜூவை அழைத்து சிறுவனை துயரத்திலிருந்து வெளிக்கொணரும் உதவியைக் கோருகிறார். அவனை அழைத்துச் செல்லும் பைஜூ கிரிக்கெட் குழுவில் இணைத்து விடுகிறார். பைஜூவின் ‘சிறுபிள்ளைத் தனத்திற்கு’ இதுவோர் உதாரணம். இப்படி படம் பூராவும் பைஜூவின் திருவிளையாடல்கள் இயல்பாக நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன.

**

‘சீனியர்’ என்கிற பந்தாவுடன் பைஜூ செய்யும் அதிகப்பிரசங்கித்தனத்தால் அவரது அணி போட்டியில் தோற்றுப் போகிறது. அவரை கிண்டலடிக்கும் இளைஞர்கள் தோற்ற வெறுப்பில் திரும்பிக் கொண்டிருக்கும் போது பைஜூ அவர்களை இடைமறிக்கிறார். ‘நாச்சியப்பன் பாத்திரக்கடையில்’ காசு கொடுத்து வாங்கிய பெரிய கோப்பையை கையில் வைத்திருக்கிறார். மாலையை வாங்கி தன் கழுத்தில் போட்டுக் கொண்டு ‘பைஜூ’ அணி கோப்பையுடன் கோலாகலமாக ஊருக்குள் நுழையும் ரகளையான காட்சியுடன் படம் துவங்குகிறது. பைஜூவின் பாத்திரத்தை துவக்கத்திலேயே அழுத்தமாக நிறுவும் காட்சியிது.

இப்படி படம் முழுவதும் வரும் காட்சிக் கோர்வைகள் நம்மை புன்னகைக்கவும் நெகிழ வைக்கவும் செய்கின்றன.

பைஜூ குடும்பத்தைக் கவனிக்காமல் புறக்கணிப்பவரும் அல்ல. தன் மனைவி, மகளின் மீது அன்பாக இருப்பவர். அவர்களின் கிண்டல்களை இயல்பாக ஏற்றுக் கொள்பவர். மற்றவர்களுக்கு செய்யும் உதவிகள், அதனால் குடும்பத்திற்குள் உண்டாகும் சங்கடங்கள் ஆகியவற்றின் இடையிலான தத்தளிப்பை திறமையாகச் சமாளிப்பவர்.

மகளுக்கு கம்மல் வாங்கித் தராமல் வேறு ஒரு இளைஞனுக்கு கைமீறிய செலவோடு கிரிக்கெட் கிட் வாங்கித் தந்தற்காக பைஜூ மீது குடும்பமே மெல்லிய வருத்தத்தோடு இருக்கிறது. ஆனால் அந்த இளைஞன் ரஞ்சி டிராஃபியில் தேர்வு பெற்று பிறகு ஐபிஎல்-லிலும் தேர்வு பெறுகிறான். தங்களின் சிற்றூரில் பிறகு நிகழும் பாராட்டுக்கூட்டத்தில் பைஜூவின் உதவியை நெகிழ்ச்சியுடன் நினைவுகூறுகிறான். அப்போதுதான் பைஜூவின் பெருமையை குடும்பம் உணர்கிறது. மிக அற்புதமான காட்சியிது.

நகரமயமாக்கல் மனிதர்களை தனிமைப்படுத்தி அன்னியப்படுத்துகிறது. ஆனால் அந்த வாசனை இன்னமும் படாத அமைதியான சிற்றூர்களில், கிராமங்களில் மனிதர்கள் கூடிவாழும் தன்மையில் உள்ள பலன்களை இன்னமும் அடைந்து கொண்டிருக்கிறார்கள். எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அடிநாதமாக இருக்கும் சில விஷயங்கள் அவர்களை ஒன்றிணைக்கிறது. பைஜூவின் கும்பளம் பிரதேசமும் அதையே நிரூபிக்கிறது. இந்த மனிதர்களை ஒன்றிணைக்கும் மையப்புள்ளியாக விளையாட்டு மைதானம் இருக்கிறது.

அந்த மைதானத்தை இழக்கும் சோகமான சூழல் ஒன்று உருவாகிறது. அங்கொரு நவீன மருத்துவமனை வரவிருக்கிறது. மைதானத்தின் மீது உயிரையே வைத்திருக்கும் பைஜூ, அவரின் கூட்டாளிகளான இளைஞர்கள், கால்பந்து விளையாடும் சிறுவர்கள், மாடு கட்டிய பெரியவர் என்று எல்லோருமே துயரமடைகிறார்கள். தமிழ்ப்படங்களை பார்த்த பழக்கத்தில் நாயகன் ஆவேசமாக இது குறித்து செயல்பட்டு மைதானத்தைக் கைப்பற்றும் காட்சி வரப்போகிறது என்று எதிர்பார்த்தேன்.

ம்ஹூம்… அப்படியெந்த சாகசக் காட்சியும் இல்லை. மைதானத்தை இழக்கும் துயரத்தோடு அந்த சிற்றூருக்கு மருத்துவமனை தேவையாக இருக்கும் நிசர்சனத்தையும் பைஜூ புரிந்து கொள்கிறார். எனவே அந்தச் சோகத்தை இயல்பாக ஏற்றுக் கொள்கிறார். மற்றவர்களையும் ஏற்றுக் கொள்ளச் செய்கிறார். இதற்கு அவருக்கான தனியனுபவமும் காரணமாகிறது.

ஆனால் விளையாட்டு மைதானங்கள் இருந்தால் வலிமையான இளைய தலைமுறை உருவாவதின் மூலம் மருத்துவமனைகளின் அவசியம் அதிகம் தேவையிருக்காது என்கிற விஷயத்தை மாநிலத்தின் முதல்வருக்கு பைஜூ கடிதமாக எழுதும் காட்சியோடு படம் நிறைகிறது.

சிறார்களுக்கான விளையாட்டுகளும் வெளிகளும் மெல்ல மறைந்து கொண்டு வரும் அவலமான சூழலும் மருத்துவம் வணிகமயமாகிக் கொண்டு வரும் பன்னாட்டு நிறுவனங்களின் தந்திரங்களையும் உறுத்தாத நீதியோடு படம் முன்வைக்கிறது.

பைஜூவின் கடந்த கால காதல், அமெரிக்காவில் தொழில் செய்யும் பழைய நண்பன், ஒரு தமிழனை திருமணம் செய்து கொண்டதால் ஒதுக்கி வைக்கப்பட்ட தங்கையுடன் மீண்டும் இணையும் தருணம். காலை 04.00 மணிக்கு சென்று பார்க்கும் ‘தல’ அஜித்தின் திரைப்படம், போலீஸ் வாகனம் என்று நினைத்து பயந்து கிணற்றுக்குள் விழும் அவல நகைச்சுவை, இடையில் வரும் ஒரு தமிழ்ப்பாட்டு, நாடகக்காட்சிகள், அவற்றின் இயல்பான நகைச்சுவை என்று இத்திரைப்படத்தின் பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இதற்கு முன்பு திரைக்கதையாசிரியராக பல மலையாளத் திரைப்படங்களில் பணியாற்றிய Ranjan Pramod-ன் இயக்குநராக உருவாக்கிய மூன்றாவது திரைப்படம் இது. சமூகத்தின் கூடிவாழும் தன்மையின் அவசியத்தை இயல்பாக வலியுறுத்தும் ஒரு அற்புதமான ஃபீல்குட் திரைப்படம் இது. பிஜூ மேனனின் அபாரமான நடிப்பு இந்தப் படத்தின் சுவாரசியத்தைக் கூட்டுகிறது. 


 (அம்ருதா SEPTEMBER 2017 இதழில் பிரசுரமானது) 


suresh kannan

No comments: