Monday, June 29, 2015

Munnariyippu - முன்னறியிப்பு - மம்முட்டி என்னும் அற்புதம்

 
 
இந்தத் திரைப்படத்தை பார்த்து முடித்தவுடன் மம்மூக்காவின் (மம்முட்டி) மீதான பிரியம் இன்னமும் அதிகமாகி விட்டது. அத்தனை இயல்பான, திருப்தியான நடிப்பு. தமிழ்நாட்டு  சினிமாவின் வணிக கலாசார வெறியும் அதிரடி மசாலா பிம்பங்களும் மலையாளத் திரையுலகிலும் பரவி விட்டதை ஆதங்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த போது தமிழகம் போல கேரளம் அந்தச் சகதியில் மொத்தமாக மூழ்கிப் போய்விடவில்லை என்கிற ஆறுதலை இது போன்ற திரைப்படங்கள்தான் தருகின்றன.  மனிதர் இத்தனை உயரத்திற்குப் போயும் எத்தனை இயல்பாக, எந்தவொரு ஆரவாரமும் இன்றி நடித்திருக்கிறார், ஏன் நம்முடைய 'சூப்பர்' நடிகர்கள் மாத்திரம் தலையில் இரண்டு கொம்பு முளைத்தது போதாதென்று தமிழ்நாட்டையே தம்முடைய தோளில் தாங்கி நிற்பது போன்ற எரிச்சலூட்டும் பாவனையை தங்கள் திரைப்படங்களில் வெளிப்படுத்துகிறார்கள் என்றெழும் கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.
 
இவருடைய அறிமுகக் காட்சி ஒன்று மட்டுமே போதும், இந்தப் படத்தின் இயல்புத்தன்மையைப் பற்றி சொல்ல. ஜெயிலருக்கு தேநீர் கொண்டு வந்து வைக்கும் மிகச் சாதாரணமான யாரோ ஒரு துணை நடிகர் போல என்று நினைத்தால், அதுதான் படத்தின் பிரதான பாத்திரமான மம்முட்டி.  ஷூவை கேமிரா முன்பு நீட்டியும், காலில் இருந்து ஆரம்பித்து புட்டத்திற்கு காமிரா வருவதற்கே ஐந்து நிமிடங்கள் ஆகும்படியாகவும் கிராபிக்ஸ் அலப்பறை செய்யும் ஹீரோக்களின் சமகால தமிழ் திரைப்படங்களுக்கு மத்தியில் அண்டை மாநில திரைப்படத்தின் இப்படியொரு அறிமுகக் காட்சியே ஆச்சரியமாக இருக்கிறது. (மம்மூக்காவும் இப்படி அலப்பறையோடு எண்ட்ரி ஆகும் சில படங்களை தற்காலிகமாக மறந்து விடுவோம்).

***

முன்னறியிப்பு எதைப் பற்றியது? அதன் அவுட்லைனை சுருக்கமாக பார்த்து விடுவோம். அஞ்சலி (அபர்ணா கோபிநாத்) இதழியல் துறையில் சாதிக்க விரும்பும் ஓர் இளைஞி. காவல்துறை அதிகாரியாக பணிபுரியும் ஒரு ஜெயிலரின் (நெடுமுடி வேணு) சுயசரிதை நூலை, கோஸ்ட் ரைட்டராக எழுத அவளுக்கு ஒரு வாய்ப்பு மூத்த பத்திரிகையாளர்  (பிரதாப் போத்தன்) மூலமாக கிடைக்கிறது. ஆனால் அங்கு செல்லும் போது இதை விடவும் சுவாரசியமான கதாபாத்திரமான ராகவனின் (மம்முட்டி) அறிமுகம் நிகழ்கிறது. தன் மனைவியையும் இன்னொரு மார்வாடி பெண்ணையும் கொலை செய்ததற்காக தண்டனை பெற்றிருக்கும் அவர், தன் தண்டனைக் காலம் முடிந்தும் சிறையிலிருந்து வெளியேற விரும்பாமல் அங்கேயே எளிமையாக பணிபுரிகிறார். 'வெளிச்சத்தை உண்டாக்கும் விளக்கைப் போல இருளை உண்டாக்கும் சாதனம் உண்டா?' 'கண்ணாடியில் நாம் பார்க்கும் பிம்பம், நாம் சென்ற பிறகும் அங்கேயே இருக்குமா?" என்பது போன்ற தத்துவ விசாரங்களை தன் டைரியில் எழுதி வைத்திருக்கிறார். இந்த விஷயங்களெல்லாம் அஞ்சலியைக் கவர்கின்றன. அவரைப் பற்றி விசாரித்து ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதுகிறாள். அது பரலவான கவனத்தையும் வரவேற்பையும் பெறுகிறது. 


இதன் காரணமாக மும்பையிலிருக்கும் புத்தக நிறுவனம் ஒன்று அஞ்சலியைத் தொடர்பு கொண்டு ராகவனைப் பற்றி  மேலதிக தகவல்களைத் தொகுத்து நூலாக்குவதற்கான ஒப்பந்தத்தை முன்வைக்கிறது.  தன் வளர்ச்சிக்கான அடையாளமாக கருதும் அஞ்சலி இதை ஒப்புக் கொள்கிறாள். ராகவனை சிறையிலிருந்து வெளிவரச் செய்து ரகசியமாக  ஒரு அறையில் ஒளித்து வைத்து அவருடைய பழைய அனுபவங்களை எழுதச் சொல்கிறாள்.  போட்டி நிறுவனம் ஏதேனும் இந்த வாய்ப்பை தட்டிப் பறித்து விடக்கூடாது என்பதனால் இந்த ஏற்பாடு. ஆனால் ராகவனால் ஒரு எழுத்து கூட முடியவில்லை. அவ்வப்போது அறைக்குள் வரும் அஞ்சலி வெற்றுப் பக்கங்களை பார்த்து பார்த்து ஏமாறுகிறாள். டெட்லைன் அழுத்தத்தால் எரிச்சலுறுகிறாள். அவரை வேறு இடத்திற்கு மாற்றுகிறாள்.

ராகவன் தன் அனுபவங்களை எழுத்தின் மூலம் மீட்டுத்தந்தாரா? அஞ்சலியின் நோக்கம் நிறைவேறியதா? ஒரு சிறுகதையின் கச்சிதமான திருப்பத்தைப் போல பார்வையாளர்களுக்கு ஒரு திடுக்கிடும் அனுபவத்தை தருவதின் மூலம் படத்தை நிறைவுறச் செய்திருக்கிறார் இயக்குநர் வேணு. அடிப்படையில் இவர் ஓர் ஒளிப்பதிவாளர். ஜான் ஆப்ரஹாமின் 'அம்ம அறியான்' திரைப்படம் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் இயக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் இது. 

***

இறுதிக்காட்சியின் திடுக்கிடல் அனுபவம் ஒன்றைத் தவிர மற்ற பகுதிகளில் படம் முழுவதும் தென்றல் காற்றைப் போல் மெலிதாக, இதமாக, நிதானமாக நகர்ந்து கொண்டேயிருக்கிறது. ஒரு திட்டமிடப்பட்ட பிரதியுனுள் அவரவர்களின் எல்லைகளை மீறாமல் மிக இயல்பாக பாத்திரங்கள் இயங்குகின்றன. விடுதலை பெற்ற தண்டனைக் கைதியாக நடித்திருக்கும் மம்முட்டி 'ராகவன்' எனும் பாத்திரத்தை மட்டுமே பிரதிபலிக்கிறார். இடையில் வரும் ஒரு காட்சியில் குடிபோதையில் அவரது ஆழ்மனம் சிறிது கசியும் அந்தச் சிதறல்தான் இறுதிக்காட்சியின் முன்னோட்டம். மேற்பார்வைக்கு அமைதியாகத் தோற்றமளிக்கும் நடுக்கடலின் ஆழத்தில் எரிமலை உள்ளதைப் போல எந்தவொரு சலனத்தையும் முகத்தில் காட்டாமல் அஞ்சலியின் இழுப்பிற்கெல்லாம் இசைகிறார்.

அஞ்சலியாக நடித்திருக்கும் அபர்ணா கோபிநாத்தின் நடிப்பும் அற்புதம். சென்னை, கூத்துப்பட்டறையின் தயாரிப்பு இவர். எப்படியாவது மேலே வர நினைக்கும் ஓர் இளம் பத்திரிகையாளரின் ஆர்வம், இரண்டு தங்க வாய்ப்புகள் வரும் போது அதில் மதிப்பு வாய்ந்ததை தேர்ந்தெடுத்து விட்டு பிறகு தடுமாறும் தவிப்பு, டெட்லைனின் அழுத்தம் தாங்காமல் மம்முட்டியிடம் காட்டும் கண்டிப்பு, எரிச்சல் என்று அட்டகாசமான உடல்மொழியின் மூலம் தன் பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். இயக்குநரின் கதைக்கு உன்னி ஆர் அமைத்திருக்கும் இயல்பான திரைக்கதை அபாரம். பின்னணி இசை, சமயங்களில் அதிகம் ஒலித்தாலும் எல்லை மீறாதது ஆறுதல்.

***

மனைவியின் நகைகளை அடகுவைத்து இலக்கியப் பத்திரிகைகள் நடத்திய தியாகம் அடங்கிய காவிய காலங்கள் எல்லாம் மலையேறி விட்டன. உலகமயமாக்கலுக்குப் பிறகு எங்கும் எதிலும் 'வணிக வாய்ப்பை' மோப்பம் பிடிக்கும் கலாசாரம் தோன்றி விட்டது. இலக்கியமும் அதில் விதிவிலக்கல்ல. இதற்கான சந்தையைக் கைப்பற்றும் நோக்கமும் அதிலுள்ள போட்டியும் உள்ளுறையாக இந்தப்படத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. விளிம்புநிலை மக்களின் வாழ்வும் இவர்களுக்கு உகந்த கச்சாப் பொருளாக மாறி விட்டது. பெரிதும் இலக்கிய வாசிப்பில் ஈடுபடும் நடுத்தர வர்க்க சமூகத்திற்கு தங்களது அன்றாட சலிப்புகளை 'தாங்கள் அறியாத' சமூகத்தினரின் வாழ்வியலை அறிந்து கொள்வதன் மூலம் போக்கிக் கொள்ள நினைக்கிறார்கள். பாலியல் தொழிலாளிகள், பிச்சைக்காரர்கள், சிறைவாசிகள், மாற்றுப்பாலினத்தவர் என்று இவர்கள் தொடர்பான வாழ்க்கை வரலாறுகளும் "best selling'-ல் இடம்பிடிப்பதும் அதற்கான போட்டியும் என 'உருவாக்கப்படும்' இலக்கியங்கள், அதன் பின்னேயுள்ள வணிகச்சந்தையும் இலக்கியத்தின் நோக்கத்தையே பாழ்படுத்துகிறதோ என்று தோன்றுகிறது. 'திருடன் மணியன் பிள்ளை' எனும் நூலை தற்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதிலுள்ள சம்பவங்கள் ஒரு சில்லறைத் திருடனின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களாகத் தோன்றினாலும், சில இடங்களில் அதன் மொழி, விவரணைகள் ஆகியவை 'தேர்ந்த எழுத்துக்காரனின்' வெளிப்பாடாகப் பதிந்து வாசக அனுபவத்தில் பிசிறையும் விலகலையும் ஏற்படுத்துகிறது.

இறுதிக்காட்சியின் திருப்பம் அதுவரையான திரைப்படத்தின் இயங்குதலுக்கு எதிராக, பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வேண்டும் என்கிற நோக்கத்திற்காக வலிந்து திணித்ததாக ஒருவேளை தோன்றுவதில் ஆச்சரியமொன்றுமில்லை. தர்க்கரீதியாக அது முரண்தான். இயல்பற்ற தொன்றுதான்.  எனக்கும் கூட முதலில் அப்படித்தான் தோன்றியது. ஆனால் திரைக்கதையின் இலக்கணப்படி அந்த ஒரு புள்ளியை நோக்கியே படம் முழுவதும் பயணம் செய்து கொண்டிருப்பதை அதுவரையான காட்சிகளைக் கவனித்தால் உணர முடியும். 'கிரிமினாலஜி' படித்தவர்கள், அது தொடர்பான அனுபவங்களைக் கொண்டிருப்பவர்களால் இந்த இறுதிக் காட்சியை நெருக்கமாக உணர முடியும். சில அழுத்தமான குற்றவாளிகளை, அவர்களின் குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்வது அத்தனை எளிதான விஷயமல்ல. சமயங்களில் விசாரணை செய்பவருக்கே தாம் ஒரு நிரபராதியை துன்புறுத்திக் கொண்டிருக்கிறோமோ என்று உறுத்தல் வருமளவிற்கு திறமையாக நடிப்பவர்கள் இருக்கிறார்கள். BIG BAD WOLVES என்கிற திரைப்படத்தின் இறுதிக்காட்சியும் இதைப் போன்றதுதான். அதைப் பற்றிய பதிவு.

சுஜாதாவின் சிறுகதையொன்றும் நினைவுக்கு வருகிறது. (தலைப்பு நினைவில் இல்லை). ஒரு பள்ளியில் நீண்ட வருடங்களாக மிக நேர்மையாக பணியாற்றும் அதற்காக பரிசும் வாங்கும் ஒரு வாகன ஓட்டுநர், தன் பணிக்காலத்தின் இறுதிநாளில் கடைசியாக இறங்க வேண்டிய ஒரு மாணவியுடன் வேறு திசைக்கு பயணிப்பதாக அந்தச் சிறுகதை முடியும். மனித மனம் இயங்கும், பிறழும் சில அந்தரங்கமான ஆழங்களை அறிந்து கொள்வது அத்தனை எளிதல்ல எனும் செய்தியையே இத்திரைப்படம் பதிவு செய்திருக்கிறது. 'சுதந்திரம் என்பது என்ன? அதன் வரையறை, அதன் இடையூறுகளைக் களைதல்' ஆகியவற்றைப் பற்றின தத்துவரீதியான மனோபாவங்களைக் கொண்டிருக்கும் ராகவனை சிறையிலிருந்து வெளியே கொண்டு வந்து மீண்டும் வேறு சிறையில் அடைப்பது போல அவனை வேறு வேறு அறைகளில் அடைத்து வைப்பதும் அவன் மனமுவந்து எழுத முனையாத பணியை, தன் சுயலாபத்திற்காக கட்டாயப்படுத்தி எழுதச் செல்வதும், அதற்கான தண்டனையைப் பெறுவதும் என அஞ்சலியின் கதாபாத்திரம் பயணம் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் இறுதிக்காட்சியில் இரண்டு புகைப்படங்களின் (அவர்களைத்தான் ராகவன் கொலை செய்தார் என்பதுதான் வழக்கும் தண்டனையும்) மீதாக மூன்றாவது புகைப்படமாக அஞ்சலியின் படத்தை ராகவன் ஒட்டி வைக்கும் போதுதான் அதுவரை தன் மீது சுமத்தப்பட்ட கொலையை அவன் அதுவரை மறுத்து வந்த அபத்தமும் ராகவனின் விபரீதமான அகமனமும் வெளிப்படுகிறது. 

சிறையிலிருக்கும் போது மிக அட்டகாசமான தத்துவ சிந்தனைகளை எழுதி வந்த ராகவன், வெளியில் வந்ததும் அஞ்சலி கட்டாயப்படுத்தியும் பழைய நினைவுகளை எழுத முடியாமல் தவிக்கும் காட்சிகள் அற்புதம். கட்டாயத்தின் பேரில் ஒரு குதிரையை நீரருந்தச் செய்ய முடியாது. சிறையிலிருக்கும் சமயத்தில் தன்முனைப்புடன் அவன் ஒருவரியை எழுதக்கூட பல வருடங்களை எடுத்துக் கொண்டிருக்கலாம். அத்தனை ஆழமான விஷயங்கள் அவை. ஆனால் வணிக நோக்கத்திற்காக செய்யப்படும் கட்டாயத்தினால் அந்த தீ அணைந்து போகிறது. அந்தத் தீ உயிர்பெறும் போது மூட்டியவரையே எரித்து விடுவது ஒரு அவல நகைச்சுவை.

மம்முட்டியின் அட்டகாசமானதொரு திரைப்படம். காணத் தவறாதீர்கள்.

suresh kannan

No comments: