Thursday, January 30, 2014

கோலி சோடா




இதன் திரைக்கதையிலேயே  தமிழ் சினிமாவிற்கான ஒரு செய்தியும் அடங்கியிருக்கிறது.

இத் திரைப்படத்தின் உள்ளடக்கத்தின் படி, பதின்ம வயது இளைஞர்கள் நான்கு பேர் இணைந்து ஒரு மிகப் பெரிய வில்லனை தோற்கடித்து தங்களுக்கான அடையாளத்தை மீட்கின்றனர்.

தமிழ் சினிமாவில் நிலவும் ஹீரோயிசம் என்கிற அபத்த பிரம்மாண்டத்தை சிறுமுதலீட்டுத் திரைப்படங்கள் தோற்கடிப்பதற்கான சூழலின் புதிய வெளிச்சத்தை அதன் சமகால வாய்ப்பை இத்திரைப்படம் பிரதிபலிக்கிறது எனலாம்.  இது தொடர வேண்டும். சிறுவர்களா, இளைஞர்களா என்று கூட குறிப்பிட முடியாத நான்கு நபர்களை பிரதான பாத்திரங்களாக வைத்து திரைப்படம் எடுக்க முடிவு செய்த அந்த துணிச்சலுக்காகவே  பிரத்யேகமான பாராட்டு.

'பசங்க' திரைப்படத்தின் வெற்றி இந்த முயற்சிக்கு உத்வேகமாக அமைந்திருக்கலாம் என யூகிக்கிறேன். அதில் சிறுவர்களாக கண்டவர்களையே இதில் சற்று வளர்ந்தவர்களாக காண முடிவது மகிழ்ச்சியையும் வியப்பையும் அளித்தாலும் அத்திரைப்படத்தில் இருந்த துள்ளலும் குறும்பத்தன்மையும் அப்பாவித்தனமும் இதில் காணாமற் போவது சோகம்.

சினிமாத்தனமானதாக இருந்தாலும் வசனங்கள் சில இடங்களில் பாராட்ட வைக்கிறது. (பாண்டிராஜ்).  பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும்படியாகவே திரைக்கதையும் சற்று விறுவிறுப்பாகவே அமைகிறது. சாதாரணமாகத் துவங்கும் திரைக்கதை சம்பவங்களில் ஏற்படும் சிக்கல்கள் காரணமாக அதன் வேகத்தை இயல்பாகவே கைப்பற்றுகிறது. சிறுவர்கள் உட்பட ஏறக்குறைய அனைத்து நடிகர்களுமே மிக இயல்பாகவே நடித்துள்ளனர். (குறிப்பாக பெரிய வில்லனும் மயில் என்கிற பாத்திரத்தில் நடித்துள்ளவரும்).

ஆனால் இந்த திரைப்படத்தின் மிகப் பெரிய பின்னடைவு இதன் நம்பகத்தன்மை. சிறுவர்கள் அவர்களுக்கு முன்நிற்கும் சிக்கலை அவர்களால் சமாளிக்கக்கூடிய அளவிற்கான புதிய யுக்திகளால் திரைக்கதையை அமைத்திருந்தால் படத்தின் சிறப்பு பல மடங்கு கூடியிருக்கும். மாறாக அவை சினிமானத்தனமாகவே உள்ளதால் நெருடிக் கொண்டேயிருந்தது. காட்சிகளில் ஒன்ற முடியாதபடி பின்னணி இசை தொந்தரவு செய்து கொண்டேயிருந்தது. பாடல்கள் கொடூரம். காதல் என்கிற வஸ்து  இல்லாமல் தமிழ் சினிமா இல்லை என்பது பலமுறை நிரூபணமாகியிருந்தாலும் அதை அளவாக பயன்படுத்தியிருப்பது சிறப்பு.

இயக்குநர் விஜய் மில்டனின் நல்ல முயற்சி. 

suresh kannan

4 comments:

rajasundararajan said...

நான்கு சிறுவர்கள் நாற்பது ரவுடிகளைப் பந்தாடிய காட்சியில், 'அடடா இதைத்தான் பார்க்கணும் என்றால், "வீரம்" அல்லது "ஜில்லா"வுக்கு டிக்கெட் வாங்கி இருக்கலாமே,' என்று நினைத்து வருந்தினேன்.

Fewinfo said...

தமிழில் ஒரு புதிய வலைத்திரட்டி ஆரம்பிக்கப்பட்டுள்ளது, உங்கள் தளத்தை மேலும் பிரபலபடுத்த எங்களுடைய வலைத்திரட்டியில் உறுப்பினராக சேர்ந்து புக்மார்க் செய்யுங்கள்.

எங்களின் இணையதள முகவரி : FromTamil

Anonymous said...

இந்த யதார்த்த மொக்கைகளை ஊதி ஊதி பெருசாக்குன பங்கு உங்களை போன்ற விமர்சகர்களையே சாரும்.இந்த மொக்கைகளுக்கு பெரிய ஹீரோ போடும் மசாலா மொக்கையே எவ்வளவோ மேல்.பசங்க வந்துச்சு.உடனே நூறு படங்கள் கோவணம் கட்டுன சிறுவர் ஹீரோவா போட்டு நூறு படம்.,பருத்தி வீரன் சூபரமணிபுரம் வந்தது..ஆயிரம் படம் சேவிங் பண்ணாத கொரங்குகள் தாவணி போட்ட அழகிகளை ரூட் விடுவதாக வந்துச்சு.முடியலப்பா!!!பேசாம விமர்சகர்களுக்கு மட்டும் தனி ஷோ போட்டு காட்டிட்டு பட பொட்டியை பரணையில் போட்டுடுங்க

கார்த்திகேயன் said...

// நான்கு சிறுவர்கள் நாற்பது ரவுடிகளைப் பந்தாடிய காட்சியில், 'அடடா இதைத்தான் பார்க்கணும் என்றால், "வீரம்" அல்லது "ஜில்லா"வுக்கு டிக்கெட் வாங்கி இருக்கலாமே,' என்று நினைத்து வருந்தினேன்.//

எனக்கும் அந்தக் காட்சி நெருடலாகத்தான் இருந்தது...