Thursday, December 28, 2017

மாற்றுத் திறனாளிகளுக்கு அனுதாபம் காட்டாதீர்கள் - The Intouchables




நீங்கள் ஒரு நெரிசலான பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு நிறுத்தத்தில் மாற்றுத் திறனாளி ஒருவர் அதில் ஏறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் உடனே என்ன செய்வீர்கள்? வரவழைக்கப்பட்ட பதட்டத்துடன் எழுந்து மற்றவர்களை ஒதுக்கி அவரை கூவி அழைத்து உங்கள் இருக்கையில் அமரச் செய்வீர்கள் இல்லையா?

இதன் மூலம் 'நான் ஒரு நல்லவன்;  மனிதாபிமானி' என்கிற எண்ணம் உங்கள் மனதினுள் பரவும். அந்த இன்பத்தை நன்கு அனுபவிப்பீர்கள், இல்லையா?

ஒருவகையில் நீங்கள் செய்தது சரியென்றாலும் இன்னொரு வகையில் அது முறையற்ற காரியம் என்பதை அறிவீர்களா? அது ஏன் என்பதை அறிய நீங்கள் The Intouchables என்கிற 2011-ல் வெளிவந்த பிரெஞ்சு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும்.

ஒரு கூட்டத்தில்  மாற்றுத்திறனாளிக்கு அனுதாபம் காட்டுவதின் மூலம் அவரை நீங்கள் தனிமைப்படுத்துகிறீர்கள், அவர் ஒரு மாற்றுத்திறனாளி என்பதை அவருக்கும் மற்றவர்களுக்கும் மீண்டுமொருமுறை நினைவுப்படுத்துகிறீர்கள், சுட்டிக் காட்டுகிறீர்கள். அத்தகைய 'மனிதாபிமானத்தை' பொதுவாக மாற்றுத் திறனாளிகள் விரும்புவதில்லை. தங்கள் மீது காட்டப்படும்  இப்படிப்பட்ட இரக்கத்தை அவர்கள் உள்ளுற வெறுக்கிறார்கள். அந்தக் கருணையுணர்வு அவர்களின் உடற்குறையை நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறது என்பதால்.

மாறாக தான் ஒரு மாற்றுத் திறனாளி என்கிற நினைவையே எழச்செய்யாத, அது குறித்த எந்தவொரு சிறப்புக் கவனமும்  செலுத்தாத போலியான அனுதாபத்தைக் காட்டாமல்  இயல்பான தோழமையுடன் பழகும் நண்பர்களையே அவர்கள் விரும்புகிறார்கள். அந்தச்  செய்தி இத்திரைப்படத்தில் மிக அழுத்தமாக பதிவாகியுள்ளது.

***

உயர்ந்த ரக கார் ஒன்று அதிவேகமாக சாலையில் செல்கிறது. கருப்பின இளைஞன் ஒருவன் காரை ஓட்டிக் கொண்டிருக்கிறான். பக்கத்தில் அமர்ந்திருப்பவர், 'இந்தப் போட்டியில் நீ தோற்று விடுவாய் என நினைக்கிறேன்' என்கிறார். அவன் உடனே காரை இன்னமும் வேகமாக செலுத்துகிறான். காவல்துறையினர் துரத்துகிறார்கள். இன்னமும் வேகம். ஒரு கட்டத்தில் மடக்கி அவன் கழுத்தின் மீது ஒன்று போட்டு விசாரிக்கிறார்கள். அச்சமயத்தில் அந்த இன்னொரு நபர் வலிப்பு நோய் வந்தவர் போல் நடிக்கிறார்.

'முட்டாள்களே, உங்களுக்குப் புரியவில்லையா? அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லத்தான் இத்தனை வேகம். சரி. எனக்கென்ன?' என்று ஒதுங்கி நிற்கிறான் இளைஞன். சற்று பதறும் காவல்துறை, கார் செல்ல அனுமதி தருகிறது. கூடுதலாக மருத்துவனை வரை பாதுகாப்பாக வருகிறது. இளைஞன் வெற்றிகரமாக சிரிக்கிறான். அது அவன் பந்தயத்தில் 200 யூரோக்கள் ஜெயித்து விட்டதற்கான அடையாளம்.

இந்த 'பிளாஷ்பேக்' உடன் படம் துவங்குகிறது. இவர்கள் யார் என்பதை அறிந்து கொள்ள ஆவல் ஏற்படுகிறது அல்லவா?

***

நடுத்தர வயதுள்ள பிலிப் ஒரு பணக்காரர். எந்த அளவிற்கு பணக்காரர் என்றால் தான் ரசிக்கும் ஓர் ஓவியத்தை நாற்பதாயிரம் யூரோக்கள் அசால்ட்டாக தந்து வாங்குமளவிற்கு.

இவர் முன்னர் ஒரு சாகச விளையாட்டில் ஈடுபடும் போது ஏற்படுகிற விபத்தில் பாதிக்கப்பட்டு  கழுத்திற்கு கீழே உள்ள உறுப்புகளில் எந்தவொரு உணர்வும் அல்லாதவராாகி விடுகிறார்.  மற்றவர்களின் உதவி அல்லாமல் அவர்கள் எதையும் செய்ய முடியாது.  மருத்துவ மொழியில் இதை  quadriplegia என்கிறார்கள். இவருக்கு ஓர் ஆண் உதவியாளர் தேவை என்பதால் அதற்கான இண்டர்வியூ நடக்கிறது. அதற்கு வருகிறான் டிரிஸ்  என்கிற இளைஞன்.

அவனுடைய நோக்கம் பணியில் சேர்வதல்ல.  மேற்கத்திய நாடுகளில் பணியில் இல்லாத இளைஞர்களுக்கு அரசு உதவித் தொகை தரும். அதைப் பெற வேண்டுமானால் பணிகளுக்கு விண்ணப்பித்தும் வேலை கிடைக்காத நிலை இருந்தால்தான் முடியும். எனவே திரிஸ், சும்மா லுல்லுவாயாக ..இம்மாதிரியான இண்டர்வியூகளுக்கு வருவான், அங்கு பணி மறுக்கப்பட்டதற்கான சான்றிதழை சந்தோஷமாக பெற்றுக் கொண்டு அரசின் உதவித் தொகையை பெற்றுக் கொண்டு உல்லாசமாக இருப்பான். எனவே அந்த நோக்கத்துடன்தான் இந்த இண்டர்வியூவிற்கும் வருகிறான்.

டிரிஸ் ஓர் உற்சாகப் பேர்வழி. அவனுடைய குறும்புகள் காரணமாக அவன் இருக்கும் இடமெல்லாம் துள்ளலான மூடுக்கு மாறி விடும். இறுக்கமான மனோபாவமுடைய பிலிப்பேவிற்கு இவனுடைய குறும்பு உள்ளுற பிடிக்கிறது. எனவே இவனை தற்காலிகமாக பணிக்கு அமர்த்துகிறார்.

அதுவரை பிலிப்பை கையாண்டவர்கள் எல்லாம்  அவருடைய உடற்குறை காரணமாகவே அவரை ஒரு கண்ணாடிப் பாத்திரம் போல பத்திரமாக கையாள்கிறார்கள். அதன் மூலம் அவரது குறையை அவர்கள் நினைவூட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர் செல்வந்தர் என்கிற காரணமாகவே அவரை போலியான மரியாதையுடன் நடத்துகிறார்கள்.

ஆனால் உற்சாகப் பேர்வழியான டிரிஸ், அவரை ஒரு  மாற்றுத்திறனாளியாகவே கருதுவதில்லை. அவருக்கு கழுத்தின் கீழே உண்மையிலேயே உணர்ச்சியில்லையா என்பதை அறிய அவர் கவனிக்காத சமயத்தில் அவருடைய காலின் மீது கொதிக்கும் நீரை ஊற்றி விளையாட்டாக சோதித்துப் பார்க்கிறான். அவருக்கு போன் வந்தால் வேறு ஏதோ நினைவில் 'உங்களுக்கு போன்' என்று ரீசிவரை தூரத்திலிருந்து நீட்டுகிறான். அவரை ஓரு சாதாரண நபரைப் போலவே கையாள்கிறான். இந்த மாற்று அணுகுமுறையே பிலிப்பிற்கு  மிகவும் பிடித்துப் போகிறது. அவனுடைய அதிக உற்சாகத்தின் மூலம் சுதந்திரக்காற்றை சுவாசிப்பது போல இருக்கிறது அவருக்கு.

இருவரின் ரசனையுமே வேறு வேறாக இருக்கிறது. பிலிப் ஓபரா நாடகத்தை ரசித்துப் பார்க்கிறார் என்றால் டிரிஸ், "தூ.. இந்தக் கருமத்திற்காக நூறு டாலர்?" என்று பரிகசித்து சிரிக்கிறான். இவர் உயர்ரசனையுடனான மேற்கத்திய சங்கீதத்தை ரசிக்கிறார் என்றால் டிரிஸ்ஸோ அதிரடியான, நடனமாட வைக்கும் இசையை விரும்புகிறான். ஆனால் இந்த எதிரெதிர் துருவங்களே ஒன்றையொன்று ஈர்த்து நெருங்குகின்றன. பிலிப், இலக்கியத்தரமான எழுத்துக்களின் வடிவில் கடிதம் மூலம் மட்டுமே தொடர்பு வைத்திருக்கும் ஒரு பெண்ணிடம், டிரிஸ் அதிரடியாக தொலைபேசியில் அழைத்து அவரிடம் பேச வைக்கிறான். அவன்  செய்யும் எல்லாமே பிலிப்பிற்கு பிடித்துப் போகிறது. மிக முக்கியமாக, அவர் ஒரு வீல்சேர் ஆசாமி என்கிற உணர்வையே மறக்குமளவிற்கு டிரிஸ்ஸின் உற்சாக வெள்ளம் அமைகிறது.

இருவருமே தங்களின் அந்தரங்கமான சோகங்களைப் பரிமாறி இன்னமும் நெருக்கமாகின்றனர். ஆனால் இடையில் டிரிஸ் பணியிலிருந்து விலக நேர்கிறது. அவனுடைய குடும்பத்தில் ஏற்படும் சில சிக்கல்களைக் களைய அவன் சென்றுதான் ஆக வேண்டும். உற்சாகப் புயல் போல் அங்கிருந்து விலகுகிறான் டிரிஸ். அந்தப் பிரிவு பிலிப்பை உலுக்கி விடுகிறது. வேறு எந்த பணியாளரின் சேவையையும் அவர் விரும்புவதில்லை. அவர்களை கத்தி துரத்தி விடுகிறார். காதல் சோகம் போல தாடி வேறு வளர்க்கத் துவங்கி விடுகிறார். இந்தக் கொடுமையை சகிக்காத பிலிப்பின் பெண் செயலாளர், திரிஸ்ஸிற்கு இதை தெரிவித்து அவனை வரச் சொல்கிறார்.

"என்ன தலைவா,.  இது.. ஏன் இந்தக் கோலம்?" என்று கிண்டலடிக்கும் டிரிஸ், சாகச விளையாட்டில் ஈடுபாடுள்ள அவரை காரில் வேகமாக அழைத்துச் செல்கிறான். அதுதான் படத்தின் துவக்கக் காட்சி. ஒரு மதிய விருந்தில் பிலிப் கடிதம் மூலம் மட்டுமே நெடுங்காலமாக தொடர்பு கொண்டிருக்கும் பெண் நண்பியை அவருக்கு இன்ப அதிர்ச்சியாக நேரில் அறிமுகம் செய்து விட்டு தூரத்திலிருந்து டிரிஸ் குறும்பாக கையசைப்பதுடன் படம் நிறைகிறது. உற்சாக இளைஞன் டிரிஸ்ஸாக, Omar Sy ரகளையாக நடித்திருக்கிறார். ஆனால் பிலிப்பாக நடித்திருக்கும் François Cluzet உண்மையான சவாலை வெற்றிகரமாக தாண்டியிருக்கிறார். மற்ற உடல் உறுப்புகளை துளியும் அசைக்காமல் கழுத்தை மட்டுமே உபயோகித்து படம் முழுவதும் நடிக்க வேண்டும். திரிஸ்ஸின் குறும்புகளைப் பார்த்து இவர் ரசித்து கண் மூடி சிரிக்கும் காட்சிகள் ரசனையாக உள்ளன. Olivier Nakache  மற்றும் Éric Toledano என்கிற இரட்டை இயக்குநர்கள் இத்திரைப்படத்தை அற்புதமாக இயக்கியிருக்கின்றன. பிரான்ஸ் திரைப்பட வரலாற்றில் வசூல் சாதனையைப் புரிந்த திரைப்படங்களில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்த திரைப்படம்.

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. படத்தின் இறுதியில் உண்மையான பிலிப்பேவையும் திரிஸ்ஸையும் காண்பிக்கிறார்கள்.

***

எழுத்தாளர்கள் சாருநிவேதிதாவும் மனுஷ்யபுத்திரனும் ஒரு சமயத்தில் ஆரோக்கியம் தொடர்பாக எதையோ உரையாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த சமயத்தில் வீல்சேரில் அமர்ந்திருக்கும் மனுஷ்யபுத்திரனிடம் சாரு தன்னிச்சையாக சொல்லும் பரிந்துரை இது. "நீங்கள் ஏன் வாக்கிங் போகக்கூடாது?"

ஒருவரின்  உடற்குறையை மனதிலிருந்து சுத்தமாக துடைத்து விட்டுஅவரை  தன்னைப் போலவே ஒரு சகஜீவியாக இயல்பாக கருதுபவர்களால்தான் இப்படி கேட்க முடியும்.

அதனால்தான் சொல்கிறேன்; மாற்றுத்திறனாளிகளிடம் அனுதாபம் காட்டாதீர்கள். அது சார்ந்த போலி உணர்வுகளை தூக்கியெறிந்து விட்டு அவரை இயல்பானதொரு நபராக மதியுங்கள்; அவரையும் அவ்வாறே உணரச் செய்யுங்கள்.

அது சரி. இத்திரைப்படத்தின் கதையைக் கேட்டவுடன், சமீபத்தில் இதை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று தோன்றுகிறதா? ஆம். தமிழில் இது, நாகார்ஜூனா, கார்த்தி நடித்து 'தோழா' என்கிற பெயரில் வெளியாகியிருக்கிறது. 

suresh kannan

No comments: