Tuesday, December 28, 2010

மன்மதன் அம்பு - அடி சறுக்கிய யானைகள்


கமல் திரைப்படங்களிலேயே ஆகச்சிறந்த மொக்கை - ம.அ.. என்ற ரீதியில் விமர்சனம் வைக்கப்பட்ட போது கூட நான் முழு நம்பிக்கையையும் இழக்காமலிருந்தேன். ஹேராம், விருமாண்டி போன்ற படங்களில் அபாரமான திரைக்கதையை எழுதியிருந்த கமல் இதற்கும் திரைக்கதை எழுதியிருந்ததுதான் அதற்குக் காரணம். சரி, ஒருவேளை கமலே கோக்குமாக்காக நடந்தால் கூட, மசாலாவை சிறப்பாகத் தடவி எப்படி காசைப் பிடுங்குவது என்கிற சூட்சுமத்தை சிறப்பாக தெரிந்து வைத்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் இதில் இருந்ததால் அவர் ஸ்டியரங்கை சரியாக பிடித்து திருப்பி  படத்தை குறைந்தது அடிப்படை சுவாரசியமாகவாவது உருவாக்கியிருப்பார் என்றும் நம்பினேன். (இந்த ப்ராக்ஜக்டில் கேஎஸ்ஆர் இருக்கிறாரா என்கிற சந்தேகமே இப்போது வந்து விட்டது.)

இந்தப் படத்தை உருவாக்கின திரை ஜாம்பவான்களின் மீது அடிப்படையான நம்பிக்கையை வைத்து துணிந்து படத்திற்குச் சென்றிருந்தால், சொல்லி வைத்தது மாதிரி அத்தனை பேருமே நிர்வாண பின்புறங்களை அசைத்து 'வெவ்வெ' காட்டியிருக்கிறார்கள். இந்தப் படம் 'படுமொக்கை' என்று எழுதினால் கூட அது மிகப்பெரிய under statement ஆக இருக்கும். இதைப் பற்றி எழுதுவது கூட நேர விரயம் என்றாலும் கூட என்னைப் போலவே கொஞ்ச நஞ்ச நம்பிக்கையோடு படத்திற்குச் செல்ல யோசித்திருக்கும் அப்பாவிகளை தடுத்து நிறுத்துவதே இந்தப் பதிவின் நோக்கம்.

நிர்வாணமாகத் திரியும் ஊரில் கோவணம் கட்டிய பைத்தியக்காரனாக, அபத்தமான தமிழ்ச்சினிமாவில் பல தரமான முன்னுதாரணங்களை உருவாக்கின கமல் நிச்சயம் கொம்பன்தான். மறுக்கவில்லை. ஆனால் இந்தக் கொம்பனே பாத்ரூம் பாசியில் வழுக்கி மல்லாக்க விழுந்திருக்கும் பரிதாபம்தான் சகிக்கவில்லை. (ஹேராம் மாதிரி வணிகரீதியான தோல்வியில் சறுக்கி விழுந்த போது கூட அந்த வழுக்கலை பொருட்படுத்தத் தேவையிருந்திருக்காத ஒரு கம்பீரம் இருந்தது). உள்ளடக்கம் சுவாரசியம் இல்லையெனில் ரஜினி படத்தையே தூக்கியெறியக் கூடிய புத்திசாலியான ரசிகர்கள் இருக்கும் சமகால சூழலில் கமல் இத்தனை அசமஞ்சமாகவா இருப்பது?

எவ்வித வணிக குதர்க்கங்களுமில்லாமல் இதை ஒரு மென்மையான டிராமாவாக ஆக்கியிருந்தால் கூட இந்த முயற்சியை பாராட்டியிருக்கலாம். அதற்கான சொற்ப தடயங்கள் இதில் இருந்தன. ஆனால் ஸ்காட்லாண்ட் காவல்துறையினராலேயே கண்டுபிடிக்க முடியாத தீவிரவாதிகளை விஜய்காந்த் துரத்தி துரத்தி உதைக்கும் அபத்தம் போல் சண்டைக்காட்சியோடு துவங்கி. படம் முடிவதற்கு முன்னால் யாரோ 'இது காமெடிப் படமாயிற்றே' என்று நினைவுப்படுத்தினாற் போல் அபத்தக் காட்சிகளால் நிரப்பி... போங்கப்பா.

மாதவன் அடுத்த முறை கமல் கூப்பிட்டவுடனே கண்ணீர் மல்க வந்து நிற்காமல், என்னவிதமான பாத்திரம் என்பதை கறாராக பேசிக் கொள்வது நல்லது. இல்லையெனில் இதில் அதிக எரிச்சலையூட்டிய அந்த மலையாளி (குரூப்) துணைநடிக பாத்திரத்தை அடுத்த படத்தில் கமல் அவருக்கு தந்துவிடுவார். ஜாக்கிரதை. சங்கீதா இன்னொரு மகா எரிச்சல். ஊர்வசி மாத்திரம் அதிகுண்டாக இல்லாமலிரு்நதால் அவர்தான் இந்த துடுக்கான பாத்திரத்தில் நடித்து வழக்கம் போலவே எரிச்சலூட்டியிருப்பார்.

இந்த மகா அபத்தத்தை ரெட்ஒன்னில் எடுத்தாலென்ன, செல்போனில் எடுத்தாலென்ன, பாவம் மனுஷ் நந்தன். இப்படி பல பேர்களின் உழைப்பு வியர்த்தமாகியிருக்கிறது. இந்தப் படத்தின் இன்னொரு மகா எரிச்சல் ஒலிப்பதிவு. என்ன உரையாடப்படுகிறது என்பதே பல இடங்களில் கேட்கவில்லை. லைவ் சவுண்ட் என்கிற நுட்பத்தின் மீது குறை சொல்ல முடியாது .விருமாண்டியில் கூட இந்த நுட்பம்தான் பயன்படுத்தப்பட்டது. ஏசி போட்டு பாப்கார்னுக்கு துட்டு பிடுங்கும் நம் அரங்கங்கள் இதற்கான அதிநவீன நுட்ப வசதிகளுக்கு ஈடு கொடுக்கவில்லையா, இந்தப்படத்தின் ஒலிப்பதிவு மோசமா என்பது தெரியவில்லை.

கமல் மாதிரி இன்னும் சிலர் அதிபயங்கரமாக திட்டமிட்டு இது போல் பத்திருபது அம்புகளை தயாரித்தால் தற்போது தமிழ்த்திரையை ஆக்ரமித்திருக்கும் கழகவாரிசுகளை சுலபமாக விரட்டிவிடலாம். அந்தவகையில்  இந்தப்படம் தந்திருக்கும் ஒரே ஆறுதல் அது மட்டுமே. 

suresh kannan

34 comments:

குடுகுடுப்பை said...

கமல் மாதிரி இன்னும் சிலர் அதிபயங்கரமாக திட்டமிட்டு இது போல் பத்திருபது அம்புகளை தயாரித்தால் தற்போது தமிழ்த்திரையை ஆக்ரமித்திருக்கும் கழகவாரிசுகளை சுலபமாக விரட்டிவிடலாம். அந்தவகையில் இந்தப்படம் தந்திருக்கும் ஒரே ஆறுதல் அது மட்டுமே.
//
:))
உமது விமர்சனத்தை மிகவும் மதிப்பதால் இந்தப்படம் பார்ப்பதாக இல்லை.

Anonymous said...

everybody says its a inspiration of

http://en.wikipedia.org/wiki/Romance_on_the_High_Seas

உண்மைத்தமிழன் said...

[[[இதைப் பற்றி எழுதுவதுகூட நேர விரயம் என்றாலும்கூட என்னைப் போலவே கொஞ்ச நஞ்ச நம்பிக்கையோடு படத்திற்குச் செல்ல யோசித்திருக்கும் அப்பாவிகளை தடுத்து நிறுத்துவதே இந்தப் பதிவின் நோக்கம்.]]]

இது ரொம்பவே ஓவர்.. பார்க்கவே கூடாத படமில்லை.. ஒரு முறை பார்க்கலாம்..!

நம் விமர்சனப் பாராட்டுக்காக மட்டுமே படங்களை பட்டியலிடுவது பொழுது போக்கைத் தேடி தியேட்டருக்கு வரும் ரசிகனுக்கு நாம் செய்கிற துரோகம்..!

Anonymous said...

//கமல் மாதிரி இன்னும் சிலர் அதிபயங்கரமாக திட்டமிட்டு இது போல் பத்திருபது அம்புகளை தயாரித்தால் தற்போது தமிழ்த்திரையை ஆக்ரமித்திருக்கும் கழகவாரிசுகளை சுலபமாக விரட்டிவிடலாம். அந்தவகையில் இந்தப்படம் தந்திருக்கும் ஒரே ஆறுதல் அது மட்டுமே.//

:)

Kaarthik said...

கடைசியில் அருமையான பன்ச் :-)

Thekkikattan|தெகா said...

நான் பார்த்தேன். படம் எனக்கு வெளங்கினிச்சே!

நான் பார்த்த இடத்தில ஒலி/ஒளிப்பதிவிற்கு எந்த வித குறைச்சலுமில்லாம இருந்தது. சொல்லப் போன படம் பளிச்சின்னு இருந்திச்சு.

படத்தின் கருத்து அதுவும் மாதவன் மூலமாக முன் வைக்கப்பட்ட ’நமது அம்மாவின் பிள்ளை’ நன்கு விளங்கிக் கொள்ளப்பட்டது.

என்ன ஒண்ணு குத்துப்பாட்டு, சம்பந்தமில்லாத சண்டைக் காட்சிகள், நகைச்சுவை என்ற பெயரில் அடுத்தவனை பிராண்ட வைத்து சிரிக்க வைக்கும் காட்சிகள் இல்லாததால் குறையாக தெரிந்திருக்குமோ என்னவோ. இது ஓரு சிட்காம் ஸ்டைல் படம்... அந்த ரீதியில் நன்றாகவே வந்திருக்கிறது என்று எனக்குப் படுகிறது.

sultangulam@blogspot.com said...

//இது போல் பத்திருபது அம்புகளை தயாரித்தால் தற்போது தமிழ்த்திரையை ஆக்ரமித்திருக்கும் கழகவாரிசுகளை சுலபமாக விரட்டிவிடலாம்//
இந்த வரிகள் எனக்கு நிரம்ப பிடித்திருக்கிறது.

கமலுக்காக பார்க்க வேண்டும் என நினைத்தேன். இனி இப்போதைக்கு செலவு பண்ண விருப்பமில்லை. நன்றி.

Sundar Padmanaban said...

சுரேஷ்

//கமல் திரைப்படங்களிலேயே ஆகச்சிறந்த மொக்கை - ம.அ.. என்ற ரீதியில் விமர்சனம் வைக்கப்பட்ட போது//

படம் வெளியான ஓரிரண்டு நாட்களில் பொது ஊடகங்களில் வெளிவந்த விமர்சனங்கள் எதுவும் எதிர்மறையாக இல்லை. நீங்கள் எந்த விமர்சனத்தைக் குறிப்பிடுகிறீர்கள்?

எனிவே, படம் இன்னும் பார்க்கவில்லை. நீங்கள் குறிப்பிட்ட அளவு படுமோசமாக இருக்கிறது என்று நம்ப முடியவில்லை. பார்த்துவிட்டுச் சொல்கிறேன்.

நன்றி.

Unknown said...

ஆக மொத்தம் இது "மன்மதன் அம்பு" அல்ல மன்னரின் வாரிசுக்கு ஒரு "ஆப்பு" - இது நல்லா இருக்கே

Anonymous said...

//கமல் மாதிரி இன்னும் சிலர் அதிபயங்கரமாக திட்டமிட்டு இது போல் பத்திருபது அம்புகளை தயாரித்தால் தற்போது தமிழ்த்திரையை ஆக்ரமித்திருக்கும் கழகவாரிசுகளை சுலபமாக விரட்டிவிடலாம்

கழக வாரிசு ரொம்ப உஷாருங்கோ..படம் பேத்தல்னு புரிஞ்சு கைமாத்தி விட்டதாதான் ஞாபகம்.

sasibanuu said...

Attagasam... Correct review

ராம்ஜி_யாஹூ said...

மும்பை எக்ஸ்பிரஸ் உயரிய மொக்கையா அல்லது மன்மதன் அம்பு உயரிய மொக்கையா என்று விவாதித்தால் தீர்ப்பு கூறுவது கடினமே.
உங்கள் தீர்ப்பு எந்தப் பக்கம் இவ்விரு படங்களில்.

உங்கள் வாசகன் said...

//நிர்வாண பின்புறங்களை//

அப்பாடா... மீண்டும் உங்களை நீங்களாகவே சந்தித்ததில் மகிழ்ச்சி சார். ஆனால் இந்தமுறை அட்வைஸ் கொஞ்சம் குறைச்சலோ?

Ashok D said...

என்ன இப்படி சொல்லிபுட்டீங்க...

விமர்சனம் கமல் மாதிரி இளமை துள்ளுதுங்க... ;)

Gopi said...

I'am too a Kamal Fan. But I agree with you 100%.

Ram said...

சற்றும் எதிர்பார்க்காத ஒன்று.!!! இந்த அளவுக்கு ஒரு படத்தை கேவல படுத்த வேண்டுமா.??

// ரஜினி படத்தையே தூக்கி//

மன்னிகனும் ரஜினியை போலவே தமிழகத்தில் கமலுக்கும் ரசிகர்கள் அதிகம்.. ஒலிப்பதிவு நன்றாக தான் இருந்தது.. சில இடங்களில் த்ரிஷாவின் குரலில் ஏதோ கீச்மூச்..!!! ஒரு சிறந்த என்று சொல்லமுடியாவிடிலும், ஒரு நல்ல எண்டர்டெயின்மெண்ட் படம்னு சொல்லலாம்.. அதுக்குன்னு எல்லாத்தையும் குறையாகவே சொல்லி மனச கஷ்டபடுத்தாதீங்க..

Anonymous said...

mokkai yana review, cinema pathi theriyuma ummakku

Anonymous said...

//கமல் திரைப்படங்களிலேயே ஆகச்சிறந்த மொக்கை - ம.அ.. என்ற ரீதியில் விமர்சனம் வைக்கப்பட்ட போது//
//படம் வெளியான ஓரிரண்டு நாட்களில் பொது ஊடகங்களில் வெளிவந்த விமர்சனங்கள் எதுவும் எதிர்மறையாக இல்லை. நீங்கள் எந்த விமர்சனத்தைக் குறிப்பிடுகிறீர்கள்?//

http://hawkeyeview.blogspot.com/
ஒரு வேளை இதையோ? அல்லது சாரு நிவேதிதாவின் பதிப்பையோ?

sivan.

Bala said...

நண்பரே... உங்கள் பதிவு ஒரு விமர்சனம் போல தெரியவில்லை... இந்த படத்தை பற்றி குறை சொல்ல மட்டுமே எழுதின மாதிரி இருக்கிறது... மிக சிறந்த படம் என்று சொல்ல முடியாவிட்டாலும்... ஒரு நல்ல படம் என்று சொல்லக் கூடிய படம் தான்...

ஹே ராம், விருமாண்டி போன்ற படங்களின் திரைக்கதையையும், மன்மதன் அம்பு படத்தின் திரைக்கதையையும் compare பண்றதுல இருந்து உங்க அறியாமை நன்கு புரிகிறது... ஒளிப்பதிவு மிகவும் நன்றாகவே இருந்தது... ஒலிப்பதிவும் நீங்கள் குறை சொல்லும் அளவிற்கு இல்லை... இந்த வகை ஒலிப்பதிவு, சில காட்சிகளை மிகவும் lively - ஆக காமித்திருக்கிறது...

படத்தின் ஓட்டம் புரியவில்லை என்று நீங்கள் கூறியிருக்கலாம்... அதை விட்டுட்டு விஜயகாந்த் படம் மாதிரி opening , காமெடி சரியில்லை என்று சொல்லியிருக்க வேண்டாம்... crazy மோகன் அளவு காமெடி இல்லாவிட்டாலும், ரசிக்கமுடியாத அளவு காமெடி இல்லை...

ஒரு நல்ல படத்தை பாராட்ட மனமில்லை என்றாலும், தயவு செய்து அதை அசிங்கப் படுத்த முயற்சிக்காதீர்கள்.. குத்து பாட்டு, பஞ்ச் டயலாக், அடி வாங்கும் காமெடி, இரட்டை அர்த்தம் என்று வந்து கொண்டிருக்கும் தமிழ் திரைப்படங்களுக்கு நடுவில், நேர்மையாக, எந்த வித அபத்தமும் இல்லாமல், சந்தர்பங்களை hero - heroine -ஆகா வைத்து, அழகான ஒரு romance கலந்த நகைச்சுவையான படத்தை இப்படி ஒரு மொக்கையான பதிவின் மூலம் குறை சொல்லி உங்கள் ரசனையை நீங்களே குறைதுக்கொள்ளதீர்கள்..

Anonymous said...

இது ரொம்பவே ஓவர்.. பார்க்கவே கூடாத படமில்லை.. ஒரு முறை பார்க்கலாம்

மொக்கை விமர்சனம்

சசி ராஜா said...

படம் நன்றாய்த்தான் இருக்கின்றது, ஏதோ 'கடுப்பில்' எழுதியது போல் இருக்கின்றது. பார்க்க என் விமர்சனம்:

http://alonealike.blogspot.com/2010/12/good-to-see.html

நண்பர் பாலாவின் கருத்துக்கு உடன்படுகிறேன்!

ஒரு நல்ல படத்தை பாராட்ட மனமில்லை என்றாலும், தயவு செய்து அதை அசிங்கப் படுத்த முயற்சிக்காதீர்கள்.. குத்து பாட்டு, பஞ்ச் டயலாக், அடி வாங்கும் காமெடி, இரட்டை அர்த்தம் என்று வந்து கொண்டிருக்கும் தமிழ் திரைப்படங்களுக்கு நடுவில், நேர்மையாக, எந்த வித அபத்தமும் இல்லாமல், சந்தர்பங்களை hero - heroine -ஆகா வைத்து, அழகான ஒரு romance கலந்த நகைச்சுவையான படத்தை இப்படி ஒரு மொக்கையான பதிவின் மூலம் குறை சொல்லி உங்கள் ரசனையை நீங்களே குறைதுக்கொள்ளதீர்கள்.."

Mohan said...

இந்தப்படம் மிகவும் நல்ல படம் கிடையாது என்பது உண்மைதான்.அதற்காக உங்களின் விமர்சனத்தில் உள்ளதுபோல் படம் மிகவும் மொக்கையான படம் கிடையாது.அதோடு,கமலின் படங்களிலேயே இதுதான் மிகவும் மோசமான படமென்பதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியாகத் தெரிகிறது.

Mahesh said...

நவம்பர் 1972 - சுஜாதா "கணையாழி" பத்திரிக்கைக்கு எழுதியது.
-----------------

பொதுவாகவே இந்த விமரிசகர்கள், விமரிசனம் செய்யப்படும் புத்தகத்தையோ அல்லது திரைப்படத்தையோ பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கெல்லாம் முக்கியம் தத்தம் சொந்த அறிவுகளின் விஸ்தாரத்தைக் காண்பிப்பதே. விமரிசனம் எதற்கு தேவைப்படுகிறது? பார்ப்பவர்களின் அல்லது படிப்பவர்களின் ரசனையை உயர்த்துவதற்காக என்று கொள்ளலாமா ?

பார்ப்பவர்கள் அல்லது படிப்பவர்கள் யார்? இந்த விமரிசகர்களின் இருபது முப்பது நண்பர்களைத் தவிர மற்றவர்கள் "ராணி" அல்லது "ஆனந்த விகடன்" தொடர் கதை வாரந் தவறாமல் படித்து விட்டு "விமலாவின் தியாகம் என் கண்களில் நீர் வரவழைத்து விட்டது" என்று ஆசிரியருக்கு கடிதம் எழுதும் ஜாதி. அல்லது கே. பாலசந்தர் உலகிலேயே தலை சிறந்த டைரக்டர், சிவாஜி உலகப் பெரும் நடிகர் என்று "தலை சிறந்தவர்களை" சேவிக்கும் ஜாதி. சங்கராச்சாரியார் அல்லது சோவின் நாடகம் அல்லது ராசியின் புதிய சில்க் புட்டா, டிசம்பர் மாதத்து சீசன் கச்சேரி, அச்சாணி போன்ற நாடகங்கள்.. இப்படி எத்தனை பெண்கள், பாட்டிகள் , ஆபீஸ் அவசரக்காரர்கள், அல்லது "நான் தமிழ் படிப்பதில்லை" என்று பெருமைப்படும் தலை கலைந்த பம்பாய் பக்கம் மூக்கை நீட்டிக் கொன்டிருக்கும் மாணவர்கள் மாணவிகள். இவர்கள் தான் மிகப் பெரும்பாலானவர்கள். இவர்களை இந்த விமர்சகர்கள் எப்படி அடையப் போகிறார்கள்?

எல்லா விமர்சனங்களும் கால விரயம், பேப்பர் விரயம் என்று படித்தது ஞாபகம் வருகிறது. சாதாரணமாக ஜனங்கள் விமர்சனத்தால் பாதிக்க பட்டு, ஒரு புத்தகத்தையோ அல்லது சினிமாவையோ தவிர்ப்பது தவிர்க்காமல் இருப்பது இல்லை என்று நினைக்கிறேன். அவர்கள் முன்னால் தீர்மானித்து விடுகிறார்கள். அவர்கள் சினிமா பார்ப்பதும் படிப்பதும் ஏதோ கலை உணர்ச்சியைப் பொருத்து நிகழ்வதில்லை என்று நினைக்கிறார்கள். அவர்கள் கையில் இருக்கும் பணம், கடன் வாங்கும் திறமை, அவர்கள் நேர நிலைமை இவைகளைப் பொருத்தது தான். சினிமா கதைகள் எல்லாம் பொழுது போக்கு மட்டும் அல்ல, ஒரு கலை வடிவம் என்று அவர்களுக்குக் காட்டுவதற்கு நம்மிடம் உதாரணங்களும் இல்லை. இது தான் இதில் சோகம்.

எனவே இவர்களின் பழக்கத்தை விமர்சனங்களால் மாற்ற முடியாது. அதுவும் இந்த விமர்சகர்களால் நிச்சயம் முடியாது. இவர்கள் தெரியப்படுத்துவதெல்லாம் தத்தம் மேதவித்தனங்களையே. படிக்காமல் கேட்காமல் பார்க்காமல் எழுதுவது இவர்களுக்கு கைவந்த கலை. ஸ்டீபன் பாட்டரின் "review manship" வழிகளை இயல்பாகக் கடைப்பிடிப்பவர்கள். இவர்களை ஒதுக்கி விடுவது நல்லது. மற்றொரு வகை ஹிந்துவின் ஞாயிற்றுக்கிழமை வகை "This book is vellum bound in calf leather, contain 384pp"

இந்த இரண்டு வகை விமரிசகர்களுக்கு நடுவே சில விமரிசகர்கள் நமக்கு இன்னும் தேவை.



As a Sujatha Fan, you would agree to this i guess.Please find where your are.

பட‌த்தின் குறைகளை தாராளமாக சொல்லுங்கள் தவறில்லை.அதில் ஒரு நல்ல படைப்புக்கான அவதானிப்பு இருக்க வேண்டும், வெறுப்பு இருக்க கூடாது.

நெல்லை கபே said...

ஒரு படம் பார்க்க தகுதி உள்ளதா இல்லையா என்பதையும் விமர்சகர் சொல்லவேண்டும்.அது அவர் அபிப்ராயம் என்றாலும் கூட..உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்.

Anonymous said...

நான் என்ன எடுக்கிறேனோ அதுதான் படம்; நீ என்ன நடிக்கிறியோ அதுதான் நடிப்பு. இதை ஜனங்க பார்த்தே தீரணும்; அது அவங்க தலையெழுத்து!"// ஹா...ஹா....ஹா..100 percent agree with u

Anonymous said...

A biased review, its done with the intention to get attention. Grow up my friend.

Anonymous said...

ஆமாங்க... 100% உங்களோடு ஒத்துப் போகிறேன்... கமலுக்குக் கூட மூக்கு கொஞ்சம் கோணிக்கிட்டு இருந்தது... ஒரு சீன்ல மாதவன் சட்டைல ஒட்டடை இருந்தது... அதையும் கொஞ்சம் விமர்சனத்துல சேர்த்து இருந்தா நிறைவா இருந்திருக்கும்...

Anonymous said...

////நண்பர் பாலாவின் கருத்துக்கு உடன்படுகிறேன்!

ஒரு நல்ல படத்தை பாராட்ட மனமில்லை என்றாலும், தயவு செய்து அதை அசிங்கப் படுத்த முயற்சிக்காதீர்கள்.. குத்து பாட்டு, பஞ்ச் டயலாக், அடி வாங்கும் காமெடி, இரட்டை அர்த்தம் என்று வந்து கொண்டிருக்கும் தமிழ் திரைப்படங்களுக்கு நடுவில், நேர்மையாக, எந்த வித அபத்தமும் இல்லாமல், சந்தர்பங்களை hero - heroine -ஆகா வைத்து, அழகான ஒரு romance கலந்த நகைச்சுவையான படத்தை இப்படி ஒரு மொக்கையான பதிவின் மூலம் குறை சொல்லி உங்கள் ரசனையை நீங்களே குறைதுக்கொள்ளதீர்கள்.."////

100% சரி. கமல், ரஜினி இருவர் எப்படி படம் எடுத்தாலும் திட்ட காத்திருக்கும் கூட்டம் ஒருபுறம், மசாலா படங்களை திட்டும் உலக சினிமா ஜீவிகள் ஒருபுறம்... //நிர்வாண பின்புறங்களை அசைத்து 'வெவ்வெ' காட்டியிருக்கிறார்கள்.// என்ன வார்த்தை பிரயோகமோ???

ஒருவேளை கற்பழிப்பு, அருவா வெட்டு படங்களை தந்து கொண்டிருக்கும் புதுயுக இயக்குனர்கள் உங்களை கவரலாம். அந்த கேவலங்களை ஒதுக்கி படம் எடுத்த கமலுக்கு இது தேவைதான். அவரும் மதுரை பக்கம் அருவாளை தூக்கி இருக்கலாம். //அப்பாவிகளை தடுத்து நிறுத்துவதே இந்தப் பதிவின் நோக்கம்.// கமலை புரிந்து கொண்ட ரசிகனை எவராலும் தடுக்க இயலாது..//

கமல் மாதிரி இன்னும் சிலர் அதிபயங்கரமாக திட்டமிட்டு இது போல் பத்திருபது அம்புகளை தயாரித்தால் தற்போது தமிழ்த்திரையை ஆக்ரமித்திருக்கும் கழகவாரிசுகளை சுலபமாக விரட்டிவிடலாம். // முற்றிலும் சரி... கமல் நீங்கள் ஒரு முட்டாள். வ குவார்ட்டர் கட்டிங், சிங்கம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடித்து இருக்கலாம். நீங்கள் முத்தம் குடுத்தாலும் ஏசுவார்கள். பலவேடம் தரித்தாலும் ஏசுவார்கள். அது இன்றி மன்மதன் அம்பு எடுத்தாலும் ஏசுவார்கள். அன்பே சிவம் ஓடாதபோதே தெரிந்துவிட்டது இவர்களின் ரசனை.....

crazyidiot said...

///கமல் மாதிரி இன்னும் சிலர் அதிபயங்கரமாக திட்டமிட்டு இது போல் பத்திருபது அம்புகளை தயாரித்தால் தற்போது தமிழ்த்திரையை ஆக்ரமித்திருக்கும் கழகவாரிசுகளை சுலபமாக விரட்டிவிடலாம். அந்தவகையில் இந்தப்படம் தந்திருக்கும் ஒரே ஆறுதல் அது மட்டுமே.////

இந்த வரிகள் மிக அருமை...

நீங்கள் கொஞ்சம் முன்னாடியே விமர்சனம் எழுதி இருந்தால் நான் பிழைத்திருப்பேன்...

இசைப்பிரியன் said...

உன்னைபோல் ஒருவனில் இருந்தே நான் திருந்திட்டேன் - பார்க்க கீழே

…http://itsmeariv.blogspot.com/2009/10/blog-post_09.html

Unknown said...

மொக்கையான படம்
மொக்கையான படம்
மொக்கையான படம்

என்பதில் சந்தேஹம் வேண்டாம்...!

நாஞ்சில் பிரதாப் said...

//நம் விமர்சனப் பாராட்டுக்காக மட்டுமே படங்களை பட்டியலிடுவது பொழுது போக்கைத் தேடி தியேட்டருக்கு வரும் ரசிகனுக்கு நாம் செய்கிற துரோகம்//

உண்மைத்மிழண்ணே...பொழுதுபோக்கிற்காக சினிமா செல்லும் காலம் மலையேறிப்போச்சு...இப்போ வீட்டுல உக்காந்தே கரண்ட் இல்லன்னாலும் கூட பொழுதுபோக்கலாம்.... தரமான சினிமாக்கள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் கமலிடம் இருந்து ஏமாற்றமே மிஞ்சியது.

நிகழ்தல் said...

படத்தின் வசனங்கள் நன்றாக தான் இருந்தது... உதாரணமாக வீரத்தின் உச்சகட்டம் அஹிம்சை, எதற்கு என்றே தெரியாமல் பாகிஸ்தான் காரனை கொலை பண்ணிய என்னை நான் மன்னித்து கொள்ளும் பொது, தெரியாமல் தவறு செய்த உங்களை நான் மன்னிக்க மாட்டேனா?..
கதையின் சாரம் நன்றாக எடுத்துக்காட்டபடவில்லை. இடையில் communism மற்றும் coldplay scientist இல் இருந்து சுடப்பட்ட நீலவானம் பாடல் காட்சி அருமை.கடைசி 20 நிமிடங்கள் படத்தின் சொதப்பல்.
தங்களின் விமர்சனம் one sided ஆகா இருக்கிறது. நந்தலாலாவில் கண்ட நேர்மையான விமர்சனம் இங்கு இல்லை. திட்ட வேண்டும் என்பதர்க்காகவே எழுத பட்டது போல் இருக்கிறது.. மன்னிக்கவும்..

Essex Siva said...

சுரேஷ்,
உங்களுடன் முழுமையாக ஒத்துப்போகிறேன்!
உங்கள் பதிவை சற்று முன்னே பார்த்திருந்தால், கொஞ்சம் pounds, நேரம் எல்லாம் மிச்சம் ஆகியிருக்கும்!
Too late!

Essex சிவா