Thursday, December 16, 2010

காமராஜர் அரங்கமும் கவர்ச்சி இலக்கியமும்


கண்,மூக்கு வெவ்வேறு திசையிலிருக்கும் ஒழுங்கற்ற விநோதமான ஓவியங்களையும் தீவிரமான உள்ளடக்கங்களையும் இலக்கிய கோட்பாட்டு விளக்கக் கட்டுரைகளையும் கொண்டிருந்த சிற்றிதழ்களுக்கும் வணிகப் பத்திரிகைகளுக்கும் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு துல்லியமாக இருந்த இடைவெளியை நிரப்ப காலப்போக்கில் இடைநிலை இதழ்கள் உருவாகின. அவ்வாறான அடையாளங்களில் ஒன்று உயிர்மை.  பல்லை உடைக்கும் சிற்றிதழ்களின் மொழியை ஜீரணிக்கத் திணறும் வணிகப் பத்திரிகை வாசகர்கள் அதை தாவி அடைவதற்கான ஒரு படிக்கட்டுகளாக இந்த வகை இதழ்கள் திகழ்கின்றன.

உலகமயமாக்கலைத் தொடர்ந்து எழுந்துள்ள வணிகப் போட்டியில் பற்பசை முதல் ஆணுறை வரை அனைத்திற்கும் விளம்பரங்களும் சந்தைப்படுத்துதலின் உத்திகளும் அவசியமாகி விட்ட பிறகு இலக்கியமும் அதிலிருந்து தப்பி விட முடியுமா என்ன? 'எனது மேனியழகின் ரகசியத்திற்கு' எனச் சொல்லும் நடிகையர் இனி 'எனது சிந்தனையழகின் ரகசியத்திற்கு நான் பெரிதும் நம்புவது' ...என இவ்வாறான இதழ்களுக்கும் மாடலிங் செய்யும் நிலையை வருங்காலத்தில் காண நேரிடலாம்.

அதற்கான முன்னோட்டமோ என்று தோன்றுமளவிற்கு அமைந்திருந்தது 'உயிர்மை'யின் நூல் வெளியீட்டு விழா. சாருவின் ஏழு புத்தகங்கள். (ஏழு ஸ்வரங்கள் என்று இசையோடு தொடர்புப்படுத்தி சி(ரி)றப்பு விருந்தினர்களுள் ஒருவரான நடராஜன் இதை விழாவில் குறிப்பிட்டது புல்லரிப்பை ஏற்படுத்தியது).

உயிர்மையின் அழைப்பிதழை வைத்துக் கொண்டு அரைமணி நேரம் சிந்தித்துக் கொண்டிருந்தேன். தமிழின் நவீன இலக்கியத்திற்கும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களில் சிலருக்கும் என்ன தொடர்பிருக்க முடியும் என்கிற ரீதியில் அந்தச் சிந்தனை அமைந்திருந்தது. கனிமொழி இயல்பிலேயே கவிஞருக்கான மரபணுக்கூறுகளைக் கொண்டவர் என்பதே அடிப்படைத் தகுதியாக இருந்திருக்கும். சரி. தமிழச்சி தங்கபாண்டியனும் சில கவிதைகளை எழுதியிருக்கிறாராம். அதோடு பளபளப்பான அழகாய் இருக்கிறார் என்பது கூடுதல் தகுதி. சரி. நல்லி செட்டியார்? அவரும் கூட சில புத்தகங்களை எழுதி 'எழுத்தாளர்' அந்தஸ்தை அடைந்தவராம். (இதோடு ஓர் உள்பாவாடைக்கான வியாபாரம் வராவிட்டாலும் கூட  இலக்கிய இதழ்களின் பின்னட்டைகளை தன்னுடைய நிறுவன விளம்பரங்களை நிரப்புவதன் மூலம் அவற்றை பல வருடங்களாய் போஷித்து வருபவராம்). சரி. நடராஜன்? நல்லியின் நிழலாய் வருவதே பெரிய தகுதியாக இருந்தாலும் இலக்கிய சம்பந்தம் ஏதேனும் இருக்குமா? இருக்கலாம். வாரமலரில் அவரின் சிறுகதைகள் ஏதேனும் பிரசுரமாகியிருக்கலாம். போதாது? மிஷ்கின் நந்தலாலா எனும் காலத்தால் அழிக்க முடியாத 'அசலான' அற்புதத்தை படைத்த காரணத்தினாலேயே அடுத்த சில நாட்களுக்கு நகரின் எல்லா விழாக்களிலும் பங்கு கொள்ளும் தகுதியை இயல்பாகவே பெற்று விடுகிறார்.

சரி. குஷ்பு? 'நடிகை என்றால் கேவலமா?' என்ற பெண்ணியம் மற்றும் முற்போக்கு சாயத்தில் தோய்க்கப்பட்ட கேள்விகளை தயக்கத்தோடு தள்ளி விட்டு யோசித்துப் பார்க்கலாம். ஏதாவது கவிதை, கிவிதை எழுதித் தொலைத்திருப்பாரோ, அப்படியெதுவும் தெரியவில்லை. பெரியார் படத்தில் மணியம்மையாய் நடித்ததனால் இருக்குமோ? கோயில் கட்டியும் இட்லிக்கு நடிகையின் பெயரைச் சூட்டி மகிழ்ந்த தமிழனின் அடிப்படை உளவியலை துல்லியமாக புரிந்து கொண்டு கூட்டம் சேர்ப்பதற்காக இந்த உத்தியோ? சேச்சே. அப்படி இருக்காது. பின் எதுதான் காரணமாய் இருக்கும் என்று குழம்பிப் போனேன்.

வரவேற்புரையாற்றின மனுஷ்யபுத்திரன் எனது இந்த மண்டைக்குடைச்சலை தீர்த்து வைத்தார். 'பொதுப்பரப்பில் தான் முன் வைத்த ஒரு கருத்திற்காக உறுதியாய் நின்று போராடின ஒரு பெண்' என்கிற காரணத்திற்காகவே குஷ்பு அழைக்கப்பட்டிருக்கிறார் என்று. ஆம்- அதுதான் காரணமாயிருந்திருக்க வேண்டும். முற்போக்கு என்பதை எழுத்தில் மாத்திரம் காட்டாமல் செயலிலும் நிகழ்த்திக் காட்டும் 'உயிர்மை'யை வியக்காமலிருக்க முடியவில்லை. எனில் வருங்காலத்தில் இலக்கியக் கூட்டத்திற்க்கு சிறப்பு விருந்தினராக நடிகை ஷகீலா கூட அழைக்கப்படலாம். 'பிட்' படத்தில் ஆபாசமாக நடித்தார் என்று அவர் மீது போடப்பட்ட வழக்கிற்காக 'பர்தா' அணிந்து நீதிமன்றத்திற்கு வந்த அவரை, இசுலாமிய அமைப்புகள் அது குறித்து எதிர்ப்பு  தெரிவித்த போது அதை உறுதியாய் எதிர்த்த காரணத்தினால். ஆனால் இப்படி தன் கருத்தில் உறுதியாய் இருப்பவர்கள் நடிகைகளாகவும் அழகாயும் அதிகாரத்தின் நிழலில் இருப்பவர்களாகவும் அமைந்திருப்பது அவசியமா அல்லது பிரதமர் கையால் விருது பெற்ற மதுரையைச் சேர்ந்த சுயஉதவிக் குழு 'சின்னப்பிள்ளை' போல கிழவியாகவும் இருக்கலாமா என்பதை தெளிவுப்படுத்தி விட்டால் வருங்கால விழாக்களுக்கு வாசகர்கள் வருவதா வேண்டாமா என  திட்டமிட வசதியாயிருக்கும்.

'அற்புதமான ஒரு மாலைப்பொழுது' 'விழா இனிதே நிறைவடைந்தது' என்றெல்லாம் 'மானே தேனே போட்டு எழுதியிருக்கலாம்தான். மண்டைக்குள்ளிருக்கும் நண்டு பிராண்டுது என்ன செய்ய.

()

அரங்கத்தின் வாசலிலியே வணிகத் திரைப்படங்களின் நாயகன்களுக்கு நிகரான சாருவின் பிளெக்ஸ் பேனர். அரங்கின் உள்ளே எழுத்தாளரின் பெயரைச் சொன்ன போதெல்லாம் வாசகப் பெருமக்களின் கைத்தட்டும் விசிலும். சாருவின் படத்திற்கு முன்னதாக (மதிய நேரத்தில் - என்னவொரு டைமிங்)  பீர் அபிஷேகமும் நடந்ததாய் கேள்விப்பட்டேன். திரைப்படத்தின் வணிகக் கலாச்சாரத்தின் அபத்தங்களை விமர்சித்து காரசாரமாய் எழுதும் சாரு இன்று ஒரு brand image ஆகி அந்தக் கலாசாரத்தின் ஒருபகுதியாய் நிற்கும் பரிணாம வளர்ச்சியை எவ்வாறு வியப்பது என்றே தெரியவில்லை.

நூல் வெளியீட்டில் உரையாற்றிய பலரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறித்த பிரக்ஞையோடும் முக்கியத்துவத்தோடும் பேசியது ஆச்சரியமாய் இருந்தது.

அத்தனை பெரிய காமராஜர் அரங்கத்தின் கணிசமான இருக்கைகள் நிரம்பியிருந்தாலும் (ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு இத்தனை நபர்கள் வருவது நிச்சயம் ஒரு தமிழக சாதனைதான்) அதில் திருப்தியுறாத ம.பு. 'காலி இருக்கைகள், கலாசார வெறுமையின் குறியீடு' என்றார். என்ன இருந்தாலும் கவிஞரல்லவா? 'கவர்ச்சி நடிகை ரகசியாவின் நடனத்தை நடத்தியாவது கூட்டத்தை சேர்ககலாம் என்று நகைச்சுவை ஆலோசனை தந்தார் மதன். 'பொதுவாக இலக்கியக் கூட்டத்திற்கு வயதானவர்களே வரும் நிலையிலிருந்து விலகி இந்தக் கூட்டத்தில் இளைஞர்களை காண முடிவது மகிழ்ச்சியை அளிப்பதாக' தமிழச்சி கூறினார். (விசில், கைத்தட்டல்).

பார்வையாளர்களின் எண்ணிக்கைதான் ஒரு நூல் வெளியீட்டின் வெற்றிக்கு அடையாளம் என்று இந்த அறிஞர் பெருமக்கள் தீவிரமாக நம்புகிறார்களா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதுவும் விசிலடிக்கும் கூட்டம். அடக் கஷ்டமே. இது மாதிரியான கூட்டம்தானே  ஒரு வணிகத் திரைப்படத்தின் முதல் காட்சியிலும் அமர்ந்திருக்கிறது? சாருவின் எழுத்தில் தென்படும் கொஞ்சம் நஞ்சம் இலக்கியமும் வெகுஜன வாசகர்களிடம் சென்று சேர்ந்து விடக்கூடாது என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அந்தக் கொஞ்சம் நஞ்சம் இலக்கியத்தையும் உதறிவிட்டு கிளர்ச்சியடைந்த அனுபவமே போதும் என்பதாகவும்  நூல் வெளியீடு என்பது ஏதோ பெரிய அப்பளமும் பாப்கார்னும் சாப்பிட்டு ராட்டினத்தில் சுற்றித் திரும்பி அத்தோடு மறந்து விடும் தீவுத்திடல் கண்காட்சி போன்ற பொழுதுபோக்கு அடையாளங்களுள் ஒன்றாக ஆகி விடக்கூடாது என்கிற ஆதங்கத்தில்தான் இதை எழுதுகிறேன்.

சாருவின் கிளர்ச்சி தரும் பிம்பத்தைத் தாண்டி இதில் எத்தனை பேர் அசலான இலக்கிய தேடலும் வாசிப்பும் அல்லது அதற்கான முயற்சியும் கொண்டிருப்பவர்கள் என்பதை ஓர் ஆய்வு செய்தால் அது தரும் விடை நிச்சயம் மகிழ்ச்சியைத் தராது. இது போன்ற அடையாளங்களால்தான் ஒரு பதிப்பகம் தன் பெருமையைக் கட்டிக் காக்க முடியும் என்கிற சூழலே பீதீயைத் தருவதாக இருக்கிறது. தம்முடைய கூட்டத்திற்கு வரும் அத்தனை மக்களும் தமக்குச் சாதகமான ஓட்டுக்களாக மாறிவிடக்கூடும் என்று கனவு காணும் அரசியல் கட்சிகள் போலவே கலை சார்ந்த அமைப்புகளும் நினைக்க ஆரம்பித்து அதை செயல்படுத்தத் துவங்கி விட்டால் என்ன ஆகும் என்பதே கவலையைத் தருவதாக உள்ளது.

(உயிர்மையின் மற்ற நூல் வெளியீட்டுக் கூட்டத்தின் சிறப்பு விருந்தினர்களின் பட்டியல் கூட ஒரளவிற்கு ஆரோக்கியமாக இருக்க, சாருவின் கூட்டத்தின் நபர்கள் மாத்திரம் ஏன் இப்படி?. இதற்கான பொறுப்பு பதிப்பகத்தினுடையதா அல்லது எழுத்தாளருடையதா என்பது தெரியவில்லை. சாருவின் எழுத்து குறித்து இணக்கமாக பேச மீண்டும் மீண்டும் இந்த நபர்களைத் தவிர வேறு எவரும் கிடைக்கவில்லையா?)

இந்த உரோமமெல்லாம் தெரிந்தும் நீ ஏன் கூட்டத்திற்குப் போனாய் என்றொரு கேள்வி இதை வாசித்துக் கொண்டிருப்பவருக்கு தோன்றலாம். நல்லது. அதற்குக் காரணம் சாரு. அவரது "எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும்' புதினத்தை சுஜாதா அடையாளங்காட்டியதிலிருந்து  பல்வேறு முரண்களைத் தாண்டியும் சாருவை நான் வாசித்து வருகிறேன்.  பாசாங்குகளை கழற்றி வைத்த எழுத்தின் சுவாரசியம், அதிநவீனம், அங்கதம், அயல் இலக்கியம், இசை அறிமுகம் போன்றவற்றைத் தவிர மற்றவர்களின் எழுத்தில் காணவே முடியாத சில விஷயங்களுக்காகவும் சாருவின் பிரத்யேக ஆளுமையில் உள்ள ஈர்ப்பு காரணமாகவும் -சமயங்களில் ஏற்படும் எரிச்சலைத் தாண்டியும் - கூடுமானவரை அவர் எழுதும் அனைததையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

()

இனி நிகழ்ச்சியில் நடந்ததைப் பார்ப்போம்.(நினைவிலிருந்து எழுதுகிறேன்.கருத்துப் பிழைகள் இருக்கக்கூடும்).

நித்யானந்தர் நூல் குறித்து உரையாட வந்தார் ரவிக்குமார். (இந்த நூல் பற்றிப் பேச மற்ற எவரும் மறுத்து விட்டார்களாம்). 'சாருவின் எழுத்தில் புனைவிற்கும் யதார்த்தத்திற்கும் எந்த இடைவெளியும் இருக்காது. அவரிடம் பேசிக் கொண்டிருக்கும் உரையாடல் கூட அடுத்த படைப்பில் வெளிவந்துவிடலாம் என்றார். (புனைவு எது நிஜம் எது என்று அடையாளம் தெரியாதவாறு எழுதுவதுதானே சாரு எழுத்தின் மகிமை). சாரு முன்பு நித்யா குறித்து 'பரவசத்துடன்' எழுதின சம்பவங்களை வைத்து சாருவையே கிண்டலடித்தார். நித்யா போல சாருவும் ஒரு ஆன்மீக குருவாகலாம் என்ற 'பஞ்ச்' உடன் முடித்த ரவிக்குமார், அதிகாரம் x மதகுருமார்கள் என்ற தலைப்பிலும் சற்று தீவிரமாகவே பேசினார்.

(நீட்ஷே,சார்த்தர் எல்லாம் கரைத்துக் குடித்த ஓர் எழுத்தாளர் சாமியாரைத் தேடிப் போவாராம். அவரிடம் ஏமாந்த வெறுப்பில் பின்பு அவரையே திட்டியும் எழுதுவாராம். பரபரப்பு சாமாத்தியங்களுடன் வெகுஜன பத்திரிகை வெளியிட்ட இந்தக் கட்டுரைகளை இலக்கிய அடையாளமாகக் கொண்டிருக்கும் பதிப்பகமும் 'சரசம் சல்லாபம் சாமியார்' என்று இலக்கியத்தனமான தலைப்புடன் வெளியிடுமாம். இப்படி வெளிப்படையாய் எல்லாவற்றையும் எழுதுவதுதான் சாருவின் பலமாம். சாருவின் கட்டுரை எழுத்துக்களில் சிலவற்றைத் தவிர வம்புகளே அதிகம்,அவற்றைத் தவிர்க்கலாம் என்று ம.பு முன்னர் உட்லண்ட்ஸ ஓட்டலில் நிகழ்ந்த ஒரு நூல் வெளியீட்டுக்கூட்டத்தில் சொன்ன ஞாபகம்).

சார்த்தரும் சாருவும் என்ற உள்ளடக்கத்தில் தமிழச்சி பேசினார். (என்ன கொடுமை சாரு இது). எதுகை மோனையில் தமிழர்களுக்கு இருக்கும் ஈர்ப்பின் வயது இரண்டாயிரம் வருடங்களுக்கு மேல்தான் என்றாலும் சாரு பெயரின் முதல் எழுத்திற்காக சார்த்தரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டாம். சாக்ரடீஸ் பெயரும் அந்த எழுத்தில்தான் ஆரம்பிக்கிறது என்பதும் கிலியைத் தருகிறது. நோபல் பரிசை மறுத்த ஒருவரையும் அதற்காக  'எங்கே எங்கே' என்று  அலைமோதுகிற அதற்கான தகுதி கொண்ட எழுத்தை இதுவரை எழுதாத ஒருவரையும் ஒரு புள்ளியில் இணைப்பது முறையா?. சார்த்தரைப் போல இருத்தலியல்வாதிகளை விளிம்புநிலை மக்களில் கூட நிறைய பேரைக் காணலாம். சேகுவேரா'வின் ஒப்பனையில் அழகிரியை வைத்து பிளெக்ஸ் பேனரை தயார் செய்யும் அரசியல் கலாசாரத்தில் இதெல்லாம் சகஜம்தான் போலிருக்கிறது.

தமிழச்சி உரையாடின நூலான 'மழையா பெய்கிறது' என்ற கட்டுரை நூலின் தலைப்பே தனி சுவாரசியம். உலக அறிஞர்களின் வாழ்விலும் ஆன்மீக குருமார்களின் வாழ்விலும் நடந்த சுவையான சம்பவங்கள் (இவைகளில் பல கற்பனைகளாகவே இருக்கலாம்) எங்கோ பகிரப்பட்டு மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு பின்னர் அது வரலாற்று உண்மையாக ஆகிவிடுகிற நகைச்சுவை இருக்கிறதல்லவா? அதே போன்றதுதான் நூலின் தலைப்பும்.

சாரு மூன்று நாட்களாக இங்கும் அங்கும் எங்கும் நகராமல் எழுத்து தியானத்தை நிகழ்த்திக் கொண்டிருந்தாராம். மூன்று நாட்கள் கழித்து அவருக்குப் பேசின நண்பர் 'சென்னையே வெள்ளக்காடாக இருக்கிறதே,உங்களுக்குத் தெரியாதா" என்றாராம். சாரு அதற்கு 'மழையா பெய்கிறது?" என்கிற திருவாக்கியத்தை அருளினாராம். (என்னாங்கய்யா, எங்கள பாத்தா அவ்ளோ கேனைங்களாகவா தெரியுது).

சாருவிடம் தமக்கு ஏற்பட்ட பழைய அறிமுக நிகழ்வுகளை நூற்றி ஒன்றாவது முறையாக பகிர்ந்து கொண்டார் கனிமொழி. 'எழுத்தாளன் பொதுவெளியில் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்.' என்று அவர் பேசிய போது சமீபத்திய 'அரசியல் பேரம் வெளிப்பட்ட' நிகழ்வுகளும் உடனே நினைவுக்கு வந்து சிரிப்பாக வந்தது.

'இப்படி தமிழ் சினிமாவை தொடர்ந்து தாக்கி எழுதினால் உங்கள் கதாநாயக கனவு நிறைவேறாமலே போய்விடும்' என்று சாருவை நோக்கி சொன்ன மதன், பிறகு பேச்சை தமது பிரத்யேக விருப்பமான தலைப்பான 'உலக வரலாற்று' சம்பவங்களுக்குள்  இட்டுச் சென்றார். சாக்ரடீஸை கொன்றது சர்வாதிகாரம் அல்ல, ஜனநாயகம் என்றார். விமர்சனம் என்பது ஆரோக்கியமான படைப்புச் சூழலுக்கு எத்தனை முக்கியமானது என்பதும் அவர் பேச்சில் இணைந்தது. வெகுஜன ஊடகத்தில் பணியாற்றியதன் காரணமாகவே அந்த ஜாக்கிரதையுணர்ச்சியால் தம்மால் கடுமையாக எழுத முடியாமல் அதுவே இயல்பாகி விட்டது என்றவர், மிஷ்கின் நண்பர் என்பதற்காக விட்டிருக்காமல் நந்தலாலாவில் உள்ள குறைகளையும் சாரு எழுதியிருக்கலாம் என்று ஆலோசனை தந்தார்.

(இங்கே ஒரு  நகைச்சுவை சம்பவம். பேசி முடித்த பின்னர், நல்லி, நடராஜன், ரவிக்குமார், கனிமொழி, தமிழச்சி (பின்னர் திரும்பி வந்தார்) என்று அனைவரும் கிளம்பியிருக்க மதன் பேச எழுந்த போது மேடையில் ம.பு.வும் எஸ்.ராவும் மாத்திரமே அமர்ந்திருந்தனர். (மிஷ்கினும் சாருவும் எங்கோ சென்றிருந்தனர்)

'இங்கு மேடையில் அமர்ந்திருக்கும்'... என்று யாரைப் பார்த்து சொல்வது என்று மதன் பேச ஆரம்பித்த அந்தக் கணத்தில் ஒரே  சிரிப்பொலி. ஒரு நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புக் கொண்டு வருபவர்கள் அது முடியும் வரை அமர்ந்திருப்பதும் பேச்சாளரின் உரையாடலை கவனிப்பதுதானே அடிப்படை நாகரிகம்?. ("ஏண்டா இந்த நடிகனுங்க ஒவ்வொரு பொறந்த நாளைக்கும் போஸ்டர் அடிச்சு ஒட்டுறாங்க. நாட்ல இவங்க மட்டும்தான் பொறந்தாங்களா, நாமளலாம் அப்ப வேஸ்ட்டா பொறந்துட்டமா" என்று கவுண்டமணியின் திரைப்பட வசனம்தான் நினைவுக்கு வருகிறது.)



மிஷ்கின்.

'தேகம்' நூலைப் பற்றி இவர் உரையாட வேண்டும். 'சரோஜா தேவி' நாவல் என்று அதைப் பற்றி ஒரே வரியில் முடித்து விட்டு 'நந்தலாலா புலம்பல் புராணத்தை பாடக் கிளம்பி விட்டார். (ஆனால் இவருக்குப் பின்னால் இந்த நாவலைப் பற்றின பேசின எஸ்.ரா அதன் மையம் குறித்து   மிகச் சிறந்த உரையை ஆற்றினார்.)  இப்போது என்ன சந்தேகம் வருகிறது என்றால் 'ஆங்கிலப் புத்தகங்களை தன்னுடைய அலுவலகத்தில் அடுக்கி வைத்து இரவும் பகலும் அவற்றை படிப்பதாக நேர்காணல்களில் சொல்லிவரும் மிஷ்கின், உண்மையாகவே அவற்றையெல்லாம் வாசிக்கிறாரா, அப்படியே வாசித்தாலும் சாருவின் நாவலை புரிந்து கொள்வது போலவே அவற்றையும் தட்டையாக ஒரே வார்த்தையில் புரிந்து கொள்கிறாரா என்பது தெரியவில்லை.

(மிஷ்கின் நாவல் குறித்து உரையாடாத காரணத்திற்காக சாரு பிறகு எழுதின நண்பனின் துரோகம்' பதிவுகளை வாசித்தேன். இதற்கு முன்னர் சாரு நூல் வெளியீட்டில் கலந்து கொண்ட சினிமாக்காரர்கள் எவருமே (பார்த்திபன், அமீர், சசிகுமார்) சாருவின் நூலை வாசித்ததாக அவர்களின் பேச்சிலிருந்து உணர முடியவில்லை. பிறகு ஏன் சினிமாக்காரர்களை வரவழைத்து கூட்டம் கூட்டி பிறகு இதைப் புலம்ப வேண்டு்ம் என்பது புரியவில்லை. அல்லது இவையெல்லாமே நாடகத்தின் பல்வேறு காட்சிகளாக என்பதும்).

சரி. மிஷ்கினின் 'நந்தலாலா புலம்பல் புராணத்திற்கு வருவோம்.

நந்தலாலா படம் வெளிவருவதற்கு முன்னால் 'அது வரவில்லை' என்பதையே மேடைதோறும் புலம்பிக் கொண்டிருந்தவர் இப்போது படம் ஓடவில்லை என்பதற்காகவும் அதன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்காகவும் புலம்பித் தள்ளினார். (இந்தப்படம் பிளாப், உங்களுக்குத் தெரியுமா?) 'விமர்சகர்களால்தான் இந்தப் படம் தோற்றது' என்று அவர் சொன்ன போது சிரிப்புதான் வந்தது. விமர்சகர்களால் ஒரு படைப்பு தோற்றது என்பது மேற்கத்திய நாடுகளிலும் கேரளா போன்ற அண்டை மாநிலங்களிலும் வேண்டுமானால் நிகழலாமே ஒழிய தமிழகத்தில் அது சாத்தியமேயில்லை என்று மிஷ்கினுக்குத் தெரியவே தெரியாதா என்ன? வெகுஜன ஊடகங்கள் முதற்கொண்டு அவரின் நண்பரான சாருவின் கட்டுரை வரை அதைக் கண்மூடித்தனமாக புகழ்ந்து தள்ளிய பிறகும் 'படம் ஓடாததற்கு' விமர்சகர்களை குறை சொல்வது எப்படிப் பொருந்தும்?

'உங்கள் எடையைக் சரியாகக் காட்டும் இயந்திரத்தின் மீது கோபம் கொள்வீர்களா? - இது சாருவின் சினிமா பற்றிய நூலிலுள்ள ஒரு வரி. 'கறாரான விமர்சனங்களினால்தான் ஆரோக்கியமான படைப்புகள் தொடர்ந்து வர முடியும். - இது இதே மேடையில் பேசின 'மதனின்' உரையாடல்.

குற்றவுணாச்சியும் முரணும் மிஷ்கினுடைய பேச்சில் தெளிவாக வெளிப்பட்டன.

'கிக்குஜிரோவை காப்பியடிச்சுட்டேன் சொல்றாங்க. மனநிலை பாதிக்கப்பட்ட என்னுடைய சகோதரனுடைய சம்பவங்க அது.  ஜப்பானியப்படத்த தமிழ் மக்களுக்கு கொடுக்கணும்னு நெனச்சது தப்பா? இந்த சர்ச்சைக்கு அப்புறம்தானே நீங்க கிக்குஜிரோவை தேடிப் பாத்திருப்பீங்க? அதுக்கு நந்தலாலாதானே காரணம்? முதல் ஷாட்டே ரெண்டு நிமிஷம் வெச்சேன். யாராவது அதைப் பத்தி பேசினீங்களா? சுவத்தைத் தாண்டி குதிக்கிற காட்சியில் அப்படியே நிர்வாணமா நின்னேன். அஸிஸ்டெண்ஸ்லாம் கட்டிப் பிடிச்சு அழுதுட்டாங்க. யாராவது அந்த சீனை நோட் செஞ்சீங்களா? கூலிங் கிளாஸை போட்டுப் பாத்துட்டு 'அய்யோ ராத்திரியாடுச்சு'ன்னு திரும்பக் கொடுத்துடுவேன். அந்த வசனத்த யோசிக்க ரெண்டு நாளாச்சு. (என்ன கொடுமை மிஷ்கின் இது) யாராவது அதப் பாராட்டுனீங்களா? பாலியல் தொழிலாளி பேசற ஒரு லாங் டேக்கை மாத்திரம் அஞ்சு நாளைக்கு மேலே எடுத்தேன். யாராவது அதச் சொன்னீங்களா?

'காப்பியடிச்சுட்டேன்னே சொல்றீங்க. நாலே நாலு சீனை கிடானோவுக்கு டிரிப்யூட் செய்யறதுக்காக வெச்சேன்" அது தப்பா? நல்ல படம் கொடுக்கறதுக்காக எத்தனை கஷ்டப்பட்டேன்? படிச்சவங்க இதைச் செய்யலாமா?"

... இப்படியாக மிஷ்கினின் பேச்சு நந்தலாலா குறித்தே சுழன்றது.

குப்பையான திரைப்படங்களுக்கு மத்தியில் தரமான படமொன்றைத் தருவதற்காக உறுதியுடன் போராடுகிற அவருடைய கலை மனம் குறித்து நமக்குப் புரிகிறதென்றாலும் அதற்கு ஆதரவு அளிப்பதுதான் நம் கடமை என்றாலும் ஒரு கலைஞனுக்கு இருக்க வேண்டிய அடிப்படையான நேர்மையில்லா விட்டால் அதற்குரிய விமர்சனங்களை எதிர்கொண்டுதானே ஆக வேண்டும். இல்லையெனில் கமல் போல் கள்ள மெளனமாகவேனும் இதைத் தாண்டிச் செல்ல வேண்டும். ஷங்கரோ, மணிரத்னமோ என்றால் நிச்சயம் இதை ஒரு சம்பிரதாயப் புன்னகையுடன் தாண்டிச் செல்வார்கள். அப்படியல்லாமல் இது குறித்து தாமே முன் வந்து உரையாடின மிஷ்கினை இந்த வகையில் பாராட்டவே செய்ய வேண்டும்.

மிஷ்கின் சொன்ன இன்னொரு விஷயமும் முக்கியமானது எனக் கருதுகிறேன். தாம் உதவி இயக்குநராக இருந்த போது சம்பந்தப்பட்ட இயக்குநர்களிடம் (இதயம் கதிர்) சினிமா பற்றி எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றும் தம் உதவியாளர்களுக்கும் அதையே பரிந்துரைப்பதாகவும் கூறினார். அகிரா குரசோவாவும் டகேஷி கிடானோவும் தம்முடைய குருக்கள் என்றும் அவர்களின் படங்களை மாத்திரம் திரும்பத் திரும்ப பார்த்து சினிமா கற்றுக் கொண்டேன் என்றும் கூறினார்.

மிஷ்கின் உரையாடத்தவறின 'தேகம்' புதினம் குறித்து எஸ்.ராவின் உரையாடல் அந்த மாலையின் ஆகச் சிறந்ததாக இருந்தது. 'இந்த நாவல் மனிதர்களின் மீதான வதையைப் பற்றியது' என்றவர் மனித குலம் மீது வதை பிரயோகிக்கப்பட்ட வரலாற்றை உதாரணங்களுடன் பேசினார். ஜி.நாகராஜன் குறித்த சம்பவம் ஒன்றும் இடையில். மரணத்திற்கும் பாலுணர்விற்கும் இடையிலுள்ள நெருக்கத்தைப் பற்றியுமாக அவர் பேச்சு நீண்டது.

இறுதியாக சாரு.

தன்னுடைய ஒவ்வொரு நூல் வெளியீட்டு விழாவிலும் பேசுகிற அதே விஷயங்களை எப்படித்தான் அவரால் திரும்பத் திரும்ப சொல்ல முடிகிறதோ தெரியவில்லை. தான் உருவாக்கிய பொய்களை தானே நம்பிக் கொண்டு அதை சுவாரசியமாக பகிர்வதற்கும் ஒரு கொண்டாட்ட மனநிலை வேண்டும். கணையாழியில் மகாநதிக்கு எழுதின விமர்சனம், கமல்ஹாசன் மீதான எதிர்ப்பு, கனிமொழியின் நட்பு, நல்லியின் புரவலத்தன்மையின் புனிதம், ஆங்கில மொழி பத்திரிகைகளின் அங்கீகாரத்தின் பெருமை..என்று அதே பல்லவி. பேசாமல் இதை பதிவு செய்து வைத்துக் கொண்டு ஒவ்வெர்ரு நிகழ்சசியிலும் ஒலிபரப்பி விடலாம்.

பாலகுமாரன் குறித்து அவர் கூறியதில் ஒரு காமெடி நடந்தது.

மாலை 05.30 மணிக்கு வந்து நிகழ்ச்சி இறுதி வரையில் அமர்ந்திருந்த எழுத்தாளர் பாலகுமாரனை நன்றியோடு புகழ்ந்த சாரு, பா.கு.வின் கவிதை ஒன்றையும் பதில் மொய்யாக செலுத்தி விட்டு பிறகு கூறினார்.

'நான கோயிலுக்கு போறத பாத்துட்டு பாலகுமாரனுக்கு ஒரே ஆச்சரியம். "நீங்க ஆஸ்திகரா' ன்னு கேட்டார். "ஆமாம்'னேன். அப்புறம் நாஸ்திகம் பத்தி அவர் ஒரு விஷயம் சொன்னார். ரொம்ப அருமையான விஷயம் அது. 

ஆனா என்னன்னு மறந்து போச்சு."

(விசில் கைத்தட்டல்)

தாங்க முடியாமல் 'தேகம்' நாவலை மாத்திரம் வாங்கிக் கொண்டு கிளம்பி விட்டேன். நாவலை வாசித்து விட்டு தேவையிருந்தால் அதைப் பற்றி எழுதுகிறேன்.


(பின்குறிப்பு: இந்த நிகழ்ச்சியின் மிகப் பெரிய ஆறுதலான விஷயம் குஷ்பு வராமல் போனது. வந்திருந்தால் இன்னும் என்னென்ன காமெடிகள் நடந்திருக்குமோ. பேசாமல் தலைப்பை காமெடி இலக்கியம் என்று மாற்றியிருக்கலாம்.

IMAGE COURTESY: http://picasaweb.google.com/thamizhstudio/13122010#

தொடர்புடைய பதிவுகள்

சாருவின் நூல் வெளியீட்டு விழா - 12.12.09 - பகுதி 1

சாருவின் நூல் வெளியீட்டு விழா - 12.12.09 - பகுதி 2

சாருவும் நோபல் பரிசும்

suresh kannan

30 comments:

மணிஜி said...

விசில் நானும் அடித்தேன் சுரேஷ்..உங்களின் இந்த இடுகைக்கும் அடிக்கிறேன்..உய்ய்ய்ய்ய்ய் !!!

Anonymous said...

One and only, best and real review.

Congrats friend.

karthi said...

sir

waiting for this.as usual good take on him.

Baski.. said...

வழக்கமான வயித்தெரிச்சல் பதிவு...

Anonymous said...

மிக வலிமையாக , இலக்கிய அறங்கள் குறித்த கவலையுடன் ,

இலக்கியம் தனக்காக நவீன காலகட்டத்தில் பெறும் அங்கீகாரத்தை இலக்கிய வியாபாரிகளும் , பத்தி எழுத்தாளர்களும் பறித்துக் கொள்ள முற்படுவதை கவனப்படுத்தியிருக்கும் மிகச்சிறந்த பதிவு

Baski.. said...

நீங்கள் எதிர்பார்ப்பது என்ன நண்பரே? எழுத்தாளன் சோத்துக்கே சிங்கி அடிச்சி நல்ல இலக்கியம் குடுத்தா நீங்க என்ன பண்ணுவீங்க??? ஒரு பதிவு போடுவீங்களா. முடிஞ்சா ஒரு மெயில் அவ்ளோதான். இதுக்காக அவன் சாவுற வரை காத்திருக்கணும்(உதாரணம் - கோபி கிருஷ்ணன் - சாவுரதுக்கு முன்னாடியே அவர படிச்சீங்க தானே. என்ன பண்ணுனீங்க அவருக்கு) சாருவின் எழுத்தை விரும்பும் வாசகர்கள் பேனர் வைப்பதையோ விசில் அடிப்பதையோ அவருக்கு தாங்கள் செய்யும் மரியாதையாகவே நினைக்கிறோம். மற்றும் இது பொது ரசனை மேல் எறியப்படும் கல் எனவும் கொள்க. நல்லா ஓடறது நல்ல படம் இல்லன்ற மாதிரி இருக்கு உங்க பதிவு. முடிந்தால் உங்களுக்கு பிடித்த எழுத்தாளர்களை கொண்டாடுங்கள். எழுதி எழுதி சாவுற அவங்களுக்கு இந்த சின்ன சின்ன சந்தோஷத்தையாவது கொடுப்போம்.

butterfly Surya said...

அருமை. நன்றி.

விரைவில் கீ போர்ட் புளியாங்கொட்டை Part II வரலாம்.

ராம்ஜி_யாஹூ said...

தென் சென்னை மாவட்ட எழுத்தாளர் கோபி கிருஷ்ணனன், தலைமை ரசிகர்(வாசகர்) மன்றம் சார்பாக எங்களது நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நீங்கள் குஷ்பு குறித்து சொ ல்லியிருப்பதற்குமட்டும் :

இதே மாதிரி உங்களுடைய சினிமா விமர்சனங்களைக் குறித்து நான் யோசிக்கிறேன். இவர் ஏதாவது சினிமா தயாரித்திருக்கிறாரா, இல்லை, இயக்குனராகவோ, ஒளிப்பதிவாளராகவோ பணியாற்றி இருக்கிறாரா? குறைந்தபட்சம் ஒரு பிட் சீனிலாவது வந்திருக்கிறாரா என்று... ம்ஹும், எவ்வளவு யோசித்தும் இவர் ஏன் சினிமா விமர்சனம் எழுதுகிறார் என்ற காரணம் எனக்குத் தெரியவில்லை.

:)

ஐயா, ஒரு படத்தைப் பற்றிப் பேச, எழுத, சினிமா பார்ப்பவராயிருந்தாலே போதுமானது. அதே மாதிரிதான், ஒரு புத்தகத்தைப் பற்றிப் பேச வாசகராயிருந்தாலே போதும்.

ஸ்ரீமதன் said...

@ baski

எனது புரிதல் இந்த பதிவின் சாராம்சம் எதற்காக இப்படி ஒரு விழா ? என்பதே .புத்தக வெளியீட்டு விழாக்கள் , மிகப் பெரிய அளவில் நடக்கட்டும்.மிக்க மகிழ்ச்சி. ஆனால் வெளியிடப்படும் புத்தகங்களை பற்றிய அறிமுக உரைகளோ,விவாதங்களோ,கருத்துகளோ இல்லாமல் ,அந்த புத்தகத்தை எப்படி அணுகலாம்( தேகம் பற்றிய ராமகிருஷ்ணனின் உரை போல ) என வழி காட்டுதல் போலவோ இல்லாமல் ,புத்தகம்/எழுத்தாளர் பற்றியதாக இல்லாமல் சொந்த அனுபவம்,பொதுவான கருத்துக்கள் சொல்லும் விழாக்களின் பயன் என்ன என்பதே ?

பீர் அபிஷேகம் ,விசில் அடித்தல் மூலம் எழுத்தாளர்களை அங்கீகரித்து சந்தோஷம் கொள்ள செய்வதை விட வந்திருந்த அனைவரும் மிகுந்த அளவில் புத்தகம் வாங்கி சென்றிருந்தாலே போதுமே.அதுவே நல்ல அங்கீகாரம் என்பது என் கருத்து.ஆனால் அது எதிர்பார்த்த அளவு நடந்ததா?இல்லை என்பதே என் அவதானிப்பு.புத்தகங்களை புரட்டிச் சென்றவர் நிறைய.வாங்கியவர் சொற்பமே.

Anonymous said...

Hopefully, you got enough to criticize.

Anonymous said...

விசில் அடித்த ரசிகக் குஞ்சுகள் எத்தனை பேர் புத்தகம் வாங்கினீங்க ? 100 காப்பி கூட விக்கலையே ?

வந்தவர்கள் பெரும்பாலோர் தெருவிழாவுக்கு போகும் மனநிலையில் வந்தவர்கள்தான் .

தன் புத்தகத்திற்க்கு விமர்ச்சனம் எழுதியவர்களுக்கு லிங்க் குடுக்கிறார் சாரு , அத்தனை பேரும் ராஜேஷ் குமாரை தவிர எதுவும் படிக்காதவர்கள் ,

அப்புறம் ஏன் இலக்கிய பம்மாத்து ? நான் ராஜேந்திரகுமார் இடத்தை நிரப்பவந்தவன் என சொல்லிவிட்டு செய்யலாமே ?

Anonymous said...

அருமையான கட்டுரை சுரேஷ்..!

சாரு நிவேதிதா எந்த காலத்திலும் நேர்மையான எழுத்தும் அதை வெளியிட நேர்மையான, உண்மையான வழிமுறைகளையும் கடைபிடிக்கப்போவதில்லை. அநியாயத்துக்கு அண்டப்புளுகு புளுகியே எலக்கியம் வளர்க்கிறார். இதில் சென்னை மழை கூட கலைக்கமுடியாத இலக்கிய தவம் வேறா?

நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர் இது அநியாய கேள்வி சார்..

குஷ்பூ ஒரு வாசகரா? அப்படி இருந்தாலுமே வாசகர்கள் (மிக தனித்த பார்வை கொண்டிருந்தாலே ஒழிய!) மேடையேறி 'உரையாற்ற' முடியுமா என்ன? சினிமா புகழ் என்பது தான் தெரிகிறதே. எதற்கு சப்பைக்கட்டு?

நெல்லை கபே said...

அடுத்த வருஷ சீசனுக்கு ஒரு புக் ரெடி...மனுஷ்ய புத்திரன் இப்பவே அட்டையை பிரிண்ட் பண்ணி வச்சுக்கலாம்...'ஒரு நண்பனின் துரோகம்'

மணிகண்டன் said...

//ஐயா, ஒரு படத்தைப் பற்றிப் பேச, எழுத, சினிமா பார்ப்பவராயிருந்தாலே போதுமானது. அதே மாதிரிதான், ஒரு புத்தகத்தைப் பற்றிப் பேச வாசகராயிருந்தாலே போதும்//

கலக்கல். பிரமாதம். குஷ்பூ ஒரு சாதாரண சாரு வாசகராக கூப்பிடப்பட்டுள்ளார் என்று கூட தெரியாமல் சுரேஷ்கண்ணன் பதிவு எழுதியதையும் அதை தர்க்கரீதியாக சுந்தர் கிழித்து எரிந்திருப்பதையும் பார்த்தால் புல்லரிக்கிறது. இதோ போன்ற அருமையான விவாதங்களை படித்தால் ராம்ஜி யாஹூ மிகவும் சந்தோசப்படுவார்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இவையெல்லாமே நாடகத்தின் பல்வேறு காட்சிகளாக என்பதும்//

இவ்விழா பற்றிய பதிவுகளைப் படித்த போது; இச் சந்தேகம் எனக்கும் எழுந்தது. தங்கள் பார்வை மாறுபட்டது. ஆனால் எல்லோர் பார்வையும் எஸ்.ரா பற்றி ஒத்ததாகவும்,சிறப்பாகவும் இருந்தது.
யாராவது அவர் முழுப் பேச்சையும் பதிவாக்க மாட்டீர்களா?

என்ன? கொடுமை தமிழிச்சியின் அழகைப் பற்றி ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை நீங்கள்
போடாமல் விட்டுவிட்டீர்கள். பலர் பதிவில், பார்த்துக் கொண்டே இருக்கலாம் " என அதையும் குறிப்பிட்டிருந்தார்கள்.
தமிழிலக்கியம் படித்து; விமர்சிக்க அழகும் தேவையா?(மன்னிக்கவும் -அவர் அப்படி ஒன்றும் அழகில்லை-என்பது என் ரசனை)

Athisha said...

ஆரோக்கியமான பின்னூட்ட விவாதங்களை மட்டும் மின்னஞ்சலில் பெற...

நெல்லை கபே said...

'மழையா பெய்தது...'ஒ... இதுதான் ஒன்னுக்கு கூட போகாம நான் எழுதியது என்று சாரூ குறிப்பிட்டதா? அதிகமாக முட்டிக்கொண்டு வரும்போதே தோணியிருக்க வேண்டாம்...வெளியே மழை பெய்திருக்கும் என்று...

சென்ஷி said...

//குஷ்பூ ஒரு 'சாதாரண' சாரு வாசகராக கூப்பிடப்பட்டுள்ளார் //

சாரு வாசகர்களை 'சாதாரணமாகக்' குறிப்பிடும் மணிகண்டனின் மனநிலை வருத்தமடைய வைக்கிறது :((

குரங்குபெடல் said...

நல்லபதிவு . . . நன்றி . .

Sridhar Narayanan said...

//அவரது "எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும்' புதினத்தை சுஜாதா அடையாளங்காட்டியதிலிருந்து//

கிழிஞ்சது. இதை சொன்னதுக்காகவே கொலைவெறியோடு சுத்துவாங்களே :)

Denzil said...

எதுக்கோ ராஜன் கல்யாணத்துக்கு டோண்டு போன ஞாபகம் வருது.

Sunantha said...

நண்பரே,
மிகச்சிறந்த விமர்சனம்...சாரு வெறும் துதி பாடல்களையெல்லாம் அவர் சைட்டில் லின்க் கொடுக்கிறார்..இந்த விமர்சனத்திற்கு கொடுத்தாரேயானால் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர்..(I know that he won't..he's not that honest..everyone knows)..

உங்கள் வெகுநாள் வாசகன் என்ற முறையில் என் ஆதங்கம்..இவருக்கெல்லாம் விமர்சனம் எழுதுவதை விட நீங்கள் வெகு தாராளமாய் ஒரு நாவல் எழுதி இவருக்கு பதில் சொல்லலாமே..இவர் போன்றவர்களின் கொட்டம் அடங்கும்.

Muruga..! said...

@baski
dear friend don't blame and scold anybody for their comment. Just look it whether there is any reasonable points is there?
This is the place for discuss not for fight.

First, I think this is a wonderful review. There is no need to invite any political person to a book release. Even if they are a reader of that author. And also same to cine personalities. If they are a continuous readers means there is lot of seats in audience side, they can be there. Because Charu has lot of readers. But only small number of chairs in stage.

Next,
The fans cannot make feel happy of the author by fix a full size banner. But he can do it by buy his book and give intro about that author to his surroundings. So no need of this kind celebrations for a writer. It will break the tradition. Who know, J.K.RITHISH kooda book eluthi atha ithavida granda release pannuvaru. Ellam Chaaru potta route.

முகமூடி said...

வெளியீட்டு விழா (?!) விமர்சனம் லொல் (LOL). ஒரு சில பீன்னூட்ட குஞ்சுகளின் கூவல் லொல்லோ லொல்...

இயல்பாய் எழுந்த இரு கேள்விகள் (இ னாவுக்கு இ னா) -

1) ஏழுல ‘தேகம்’ மட்டும் வாங்கினதுக்கு எதாவது விசேஷ காரணம் உண்டா?
2) இலக்கியவாதி சாரு வணிகரீதியா அலப்பறை விடுறாருங்கிற மாதிரி ஒரு ஆதங்க தொனி (எனக்கு மட்டும்?) தெரியுதே. சாரு இலக்கியவாதின்னு உண்மையிலேயே இந்த உலகம்.. வேணாம் நீங்க நம்புறீங்களா?

Anonymous said...

முகமூடி ,

இது சாருவுக்காக அல்ல , உயிர்மைக்காக என நினைக்கிறேன் , டிசம்பர் ஸ்டண்ட் மாஸ்டரிடம் கேள்வி

ராம்ஜி_யாஹூ said...

சுனந்தாவின் பின்னூட்டத்தில் மற்ற்யும் டென்சிளின் பின்னூட்டத்தில் உள்ள சில கருத்துக்களோடு நானும் உடன் படுகிறேன்.

உங்கள் வெகுநாள் வாசகன் என்ற முறையில் என் ஆதங்கம்..இவருக்கெல்லாம் விமர்சனம் எழுதுவதை விட நீங்கள் வெகு தாராளமாய் வேறு ஏதும் எழுதலாம்/வாசிக்கலாம்.

பரஸ்பரம் தூற்றி எழுதும் எழுத்தாளர்களை மட்டுமே தொடர்ந்து அதிகம் படித்து வருவதால், சுரேஷ் கண்ணனுக்கும் எதிர் மறை என்ன வியாதி (negative attitude, fault finding, finding negatives 1st and unable to see positives in any occasions) பரவி விட்டதோ என்ற கவலை எனக்கு வந்து விட்டது.

Anonymous said...

yes....
வழக்கமான வயித்தெரிச்சல் பதிவு..


Tamilan
Qatar

Victor Suresh said...

மிஷ்கின் உரையாற்றும் போது சாரு என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை அறிய ஆர்வமாக உள்ளேன். மிஷ்கினைத் திட்டி இப்போது 10-15 பதிவுகள் போடுபவர், கனிமொழியையும், ரவிக்குமாரையும் ஊழல் அரசியல்வாதிகள் என்று இன்று எழுதுபவர் விழாவில் அவர்களையெல்லாம் எப்படி எதிர் கொண்டார்; அங்கேயே அவர்களை எதிர்த்தாரா என்பதைப் பற்றி எழுதுங்களேன்.

Thoufiq said...

you written about what all people spoke in that function.. but not what S.Ra. spoke....